எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 22

Sathya theeba

New member
மீண்டும் அவனை சந்தித்தது தன்னை இவ்வளவு தூரம் பாதித்துவிடக் கூடும் என்று அவள் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்கவில்லை.

ஐந்து ஆண்டுகள்...

அவன் இல்லாமல் தன்னால் ஆயுள் முழுவதும் அவன் நினைவுகளோடு மட்டும் வாழ்ந்து விடக் கூடும் என்று எண்ணியிருந்த நீண்ட நாட்கள்...

அவளது அந்த சிந்தனை எல்லாவற்றையும் தகர்த்தெறிய அவனது வருகை மட்டும் போதுமானதாய்...

அதன் பிறகு அடிக்கடி அவனை சந்தித்தது மனதிற்கு பெரும் சந்தோஷத்தை யே அளித்தது. அவனைத் தன் கண்களால் உள்வாங்கி மனதினுள் பதித்து வைத்தாள்.

ஆனாலும் தான் செய்வது தவறு என்ற ஒரு குற்ற உணர்வும் அவளுக்குள் இருந்தது. அவன் இப்பொழுது இன்னொருத்திக்குச் சொந்தமானவன். அதைவிட அவன் ஒரு குழந்தைக்கும் தந்தையாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது தான் அவனையே நினைத்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு துரோகமான செயல். இது துரோகம் என்பது பாழாய்ப் போன மனதுக்குப் புரியவில்லையே.

நேற்று மயில்வாகனம் ஐயா வீட்டு விசேஷத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவளைச் சீண்டும் விதமாகப் பயமா என்று அவன் கேட்டான். அந்தக் கேள்வி அவளுள் கோபத்தை உண்டாக்க அவனைக் கோபமாக முறைத்துப் பார்க்க முயன்றாள். ஆனால் அவளால் அது இயலாததாகிப் போனது.

அவன் மீது கோபம் கொள்ள முடியாத தன் காதல் மீதே உண்டான கோபத்தில் அழுகையே அவளை ஆட்கொண்டது. அதற்கும் அவன் ஏதாவது சொல்லி விடுவானோ என்று பயந்து கட்டுப்படுத்தினாள்.

சற்று நேரத்திலேயே போதுமென்று எழுந்தவள் அங்கே நிற்கவே தயங்கினாள். தன் மகளை அழைத்துக் கொண்டு வீடு வந்து விட்டாள். ஆனாலும் இரவு முழுவதும் அவன் நினைவுகளே அவளை இம்சித்தன.

மறுநாள் காலை எழுந்தது முதல் அவனைக் காண வேண்டும் என அவள் கண்களும் மனமும் கெஞ்சின.

ஐயா வீட்டில் தானே இருப்பான். மாலையில் அவனைக் காணலாம் என்று தன் மனதைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

மாலையில் அங்கே சென்றவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமானது. அவனை எங்கும் காணவில்லை. அவனைப் பற்றி யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.

வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரமும் வந்தது. ஆனாலும், தனஞ்சயன் அதுவரை அவள் கண்களிலே படவேயில்லை

அவனைப் பற்றி யாரிடம் கேட்டுக் கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவ்வழியாக வந்த லதாவைக் கண்டவள் தயங்கித் தயங்கி அவளருகே சென்றாள்.

“என்ன டீச்சர் யோசனை பலமாக இருக்கின்றது. என்னிடம் ஏதாவது கேட்கணுமா?”

“ஒன்றுமில்லை அக்கா...”

“ஏதோ இருக்கு... கேட்க விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் டீச்சர்”

“அப்படி எதுவும் இல்லை அக்கா பசங்களுக்கு எக்ஸாம் தொடங்கிடுச்சு அல்லவா? நம்ம பசங்க கெட்டிக்காரர்கள் தான். ஆனாலும் நாங்களும் கவனிக்க வேண்டும் தானே அக்கா. கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். அதை சொல்லத்தான் வந்தேன்”

“சரி டீச்சர்”

அவளால் அவனைப் பற்றி எதுவும் கேட்க முடியவில்லை. கேட்டால் தப்பாக எடுத்து விடுவாரோ என்று பயந்தாள்.

“சரி வரேன் அக்கா” என்று கூறிவிட்டு சுபியையும் அழைத்துக் கொண்டு தயக்கத்துடன் மெல்ல அடி எடுத்து வைத்து வெளியே செல்ல முயன்றாள். அப்பொழுது அவ்வழியாக ஓடிவந்த தருணின் கையில் இருந்த அழகான ஒரு பேனையைக் கண்ட லதா,

“டேய் அதை ஏண்டா எடுத்தாய்” என்று கேட்டு அதனை பறிக்க முயன்றாள்.

“அம்மா எனக்கு இது வேணும்...” என்று சிணுங்கிய படி கூறினான் தருண்.

“இது தனஞ்சயன் தம்பியோடது அல்லவா, அவர் இதனை விட்டுப் போய்விட்டார். திரும்பி வந்தால் இதனை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றபடி பேனையை மகனிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.

தனஞ்சயன் சென்றுவிட்டானா? தன் காதுகள் கேட்ட செய்தியை மனம் நம்ப மறுத்தது. அச்செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள
“அக்கா உங்க விருந்தாளி ஊருக்கு புறப்பட்டாரா?” என்று இயல்பாகக் கேட்பது போல் கேட்டாள்.

“ஆமா டீச்சர்... அவரை வீட்டில் இருந்து அவசரமாகக் கூப்பிட்டார்கள். தம்பி இன்று காலையிலேயே புறப்பட்டு போயிடுச்சு. நல்லதம்பி... பழகுவதற்கு அவ்வளவு இனிமையான தம்பி” என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்தாள்.

மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தாள் நிசாந்தினி. நான் அவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவனுக்கு என் நினைவு ஒரு துளி கூட ஏற்படவில்லையே. போகும்போது ஒரு வார்த்தை சொல்லி விட்டு போகத் தோன்றவில்லையே. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அங்கே அப்படியே நின்றால் லதாவின் முன்னே அழுதுவிடுவோம் என்று எண்ணியவள் “வாறேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.

அந்தப் பிரதான சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது வெள்ளை நிற லம்போர்கினி கார். தனஞ்சயனின் கைகள் காரின் ஸ்டீயரிங்கில் அழுத்தமாகப் பதிந்திருந்தன. அவனது கண்களோ சாலையை வெறித்துப் பார்த்தபடி இருந்தன. அப்பொழுது அவன் அலைபேசி இனிமையான ஓசையை எழுப்பியது. திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும் அவன் கண்கள் சுருங்கியது. புதிய எண்ணாக இருக்கிறது, யாராக இருக்கும் என்று யோசனையுடன் காதுகளில் பொருத்தப்பட்டிருந்த ப்ளூடூத்தை இயக்கினான்.

“ஹலோ..”

“ஹலோ குட் மார்னிங் தனா..” எதிர்முனையில் இருந்து புதிய பெண் குரல் உரிமையுடன் அழைக்கவும் குழம்பிப் போனான்.

“என்ன தனா சைலன்ட் ஆயிட்டீங்க நான் யார் என்று தெரியவில்லையா?

”சாரி..நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை” மறுமுனையில் கீதமாக சிரிப்பொலி கேட்டது “நான் தர்ஷி... தர்ஷினி. சுபத்திரா அன்ரி சொல்லலியா?”

“ஓ... நீங்களா”

“நானே தான். உங்களை மீட் பண்ணனுமே.. நீங்க டைம், பிளேஸ் பிக்ஸ் பண்ணுங்க”

“சாரி த.. தர்ஷினி. எனக்கு இன்று அர்ஜென்ட் வேர்க் இருக்கு. சோ...”

“சோ.. நோ ப்ராப்ளம். நாளை மீட் பண்ணலாம்.”

“ஓகே நான் அப்புறம் சொல்லுறேன்” என்று விட்டு அலைபேசியை நிறுத்தினான்.

இந்த தர்ஷினி சுபத்ராவின் நண்பியின் மகள். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரே செல்லமகள். அவர்கள் கடந்த இரண்டு வருடமாக சுபத்ராவிடம் தனஞ்சயனைத் தங்கள் மகளுக்கு மணமுடித்து வைக்க கேட்டுக் கொண்டிருந்தனர். பிடிகொடுக்காமல் மகன் நடக்கவும் சுபத்திராவாலும் எந்தப் பதிலுமே சொல்ல முடியாமல் போனது.

கட்டாயம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய சுபத்திரா மகனிடம் ஒரு தடவையேனும் தர்சினியை நேரில் சந்தித்து பேசுமாறும் அவளை கட்டாயம் அவனுக்கும் பிடித்து போகும் என்றும் கூறியிருந்தார். அவளிடமும் கூறியிருக்கின்றனர் போலும். அதனால்தான் இன்று அவள் அழைப்பை எடுத்து இருக்கிறாள் என எண்ணியவன் எரிச்சலுடன் தனது அலுவலகத்திற்குள் காரைச் செலுத்தினான்.

நாள்கள் காற்றாய் பறந்துவிட்டதாகவே தனஞ்சயனுக்குத் தோன்றியது.

திருநெல்வேலியில் கல்லாரியின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருந்த போது சுபத்திராவிற்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்ததும் பதறிக் கொண்டு உடனடியாகச் சென்னைக்குப் புறப்பட்டு வந்தான். திருநெல்வேலி வேலைகள் சகலத்தையும் தன் உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு உடனேயே புறப்பட்டு வந்தவன் இரு நாட்கள் தாயை விட்டு அசையவேயில்லை. தனக்கு ஒன்றுமில்லை. சாதாரண நெஞ்சுவலி மட்டுமே என சுபத்திரா கூறிய போதும், அவரைக் கண்ணும் கருத்துமாகப் பக்கத்தில் இருந்தே கவனித்தான். இரண்டு மூன்று நாள்களில் அவர் தேறியதும் கட்டாயமாக அவனே சென்று பார்க்க வேண்டிய முக்கியமான வேலை விடயமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுவிட்டான். அங்கிருந்து திரும்பி வந்ததும் இங்கே சென்னையில் தேங்கியிருந்த வேலைகள் அவனைப் பிழிந்து எடுத்து விட்டன. இவ்வாறு நாட்கள் ஓடிவிட்டன.

இத்தனை நெருக்கடியான நேரத்திலும் அடிக்கடி நிஷாந்தினியின் நினைவுகள் அவனுள் எழுந்தன.

இறுதியாக மயில்வாகனம் ஐயாவின் வீட்டு விசேஷத்தின் போது பார்த்தது. மறுநாள் காலையே அவன் புறப்பட்டு வந்து விட்டதால் அவளை மீண்டும் சந்திக்க முடியவில்லை.

அவனது சிந்தனையை அன்றைய வேலைகள் மறக்கடித்தன. அவன் வேலையில் தீவிரமாக இருந்தபோது அவனது அலுவலகத்திற்கு வந்தான் விக்னேஸ்வரன்.

வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் சென்றவன்,

“நான் உங்கள் எம்டியைப் பார்க்கலாமா?” என்று கேட்டான்.

“உங்கள் நேம் சொல்லுங்கள். அப்பாயின்மென்ட் இருக்கா?”

“நான் விக்னேஸ்வரன். அப்பாயின்மென்ட் இல்லை.. ஆனால் முக்கியமான விசயமாக... பர்சனல் விசயமா பேசவேண்டும். அவரிடம் நிசாந்தினியின் அக்கா கணவர் என்று கூறுங்கள்”

“வன் மினிட்” என்று கூறிவிட்டு தனஞ்சயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
“சார் உங்களை பார்க்க விக்னேஸ்வரன் என்று ஒருவர் வந்திருக்கிறார்”

விக்னேஸ்வரன் யார் என்று மறுமுனையில் இருந்தவன் யோசித்தான்.

“சார் முக்கியமான விஷயமா பேசணுமாம். நிஷாந்தினியின் அக்கா கணவர் என்றார்”

“ஓகே வரச் சொல்லுங்கள்” என்று பதில் வரவும் விக்னேஸ்வரன் பக்கம் திரும்பியவள்

“சார் உங்களை உள்ளே வரச் சொல்கிறார். நேரே போய் லாஸ்ட் ரூம்” என்று அடையாளம் சொல்லி அனுப்பினாள்.

அவனது அறைக்கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும்

“எஸ் கமின்” என்று கூறியவன் உள்ளே வந்தவனை ஆழ்ந்து பார்த்தான். அவனைத் தன் எதிரே அமருமாறு பணித்தவன் “சொல்லுங்க.. என்ன விஷயம் பேசணும்” என்றான்.

“சார் நான் விக்னேஸ்வரன். நிசாந்தினி அக்கா கணவர்”

“தெரியும் சொல்லுங்க... என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?”

“நான் நிஷாந்தினியை பார்க்கணும்”

“அதற்கு ஏன் என்னிடம் வந்து வந்தீர்கள்?”

“அது... அது அவள் உங்களுடன்.. உங்களுடன் தானே இருக்கிறாள்”

“என்னது அவள் என்னுடன் இருக்கிறாளா? இது என்ன புதுக்கதை” என்று அவன் கேட்கவும் புரியாமல் மலங்க மலங்க விழித்தான் விக்னேஸ்வரன்.

அவனது அந்த நிலையை பார்த்து காரணம் புரியாமல் “நீங்கள்தானே அவளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்கள். அவள் கணவனுடன் தானே அவள் இருப்பாள்”

“இல்லையே.. உங்களுடன் தானே வந்தாள்”

“எப்போது...?”

“அது... அது கல்யாணம் வேண்டாம் என்று, அன்று இரவே வீட்டை விட்டு புறப்பட்டு உங்களிடம் வந்து விட்டாளே” என்றான்.

இவனுக்கு குழப்பமே மிஞ்சியது. இவன் என்ன சொல்கிறான்? என்னிடம் வந்தார்? எதுவும் புரியாமல் சில நொடிகள் தவித்தவன், மற்றவனிடம் முழு விவரமும் கேட்டார்.

கல்யாணத்தன்று காலையிலேயே அவள் வீட்டை விட்டுப் புறப்பட்ட தகவலைச் சொன்னான் அவன். அப்படி என்றால் அந்தக் குழந்தை என்று யோசனையோடு,

“அவளை அதன் பிறகு நீங்கள் தேடவில்லையா?” என்றான் தனஞ்சயன்.

“இல்லை... அம்மா உங்களிடம் போயிருப்பாள்.அதனால அவளைத் தேட வேண்டாம் என்றார். அதுதான்...”

இவனுக்குக் குழப்பமாக இருந்த போதும் ஒருவித எரிச்சலுடன் “இப்போது மட்டும் ஏன் அவளைத் தேடி வந்தீர்கள்?”

“என் குழந்தைக்காக”

“என்ன உங்கள் குழந்தையா? என்று அவன் புரியாத தன்மையில் வினவவும், அவள் புறப்படும்போது தன் அக்கா குழந்தையை எடுத்துச் சென்றதைக் கூறினான் விக்னேஸ்வரன்.

“நான் அப்புறம் கல்யாணம் செய்த போதும் இதுவரை எனக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை. நான் சுபாஷினிக்குச் செய்த அநியாயத்துக்கு தான் எனக்கு இந்தத் தண்டனை. அதுதான் என் குழந்தையை வாங்கி அவளை வளர்ப்பதன் மூலம் என் சுபாஷினிக்குச் செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள விரும்புகின்றேன்” என்றான்.

இவனுக்கு இப்போதே எல்லாம் புரிந்தது. நிஷாந்தினி கல்யாணமே பண்ணவில்லை. அவளுடன் இருக்கும் குழந்தை அவள் அக்கா மகள். நான்தான் அவளை தப்பாக நினைத்து விட்டேன். என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனது கையை எட்டிப் பற்றிய விக்னேஸ்வரன், “சொல்லுங்கள் சார்... அவள் எங்கே இருக்கிறாள்? என் குழந்தையை நான் உடனே பார்க்கவேண்டும். என்னை உங்கள் வீட்டுக்குக் கூட்டிப் போங்கள்” என்று பரிதாபமாக கேட்டான்.

நிஷாந்தினி தற்போது இருக்குமிடம் இவனுக்குத் தெரியும் தான். ஆனால், அவள் என்ன காரணத்திற்காகவோ இவர்கள் கண்ணில் படாமல் வாழ்கிறாள். அந்தக் காரணம் தெரியாமல் இவர்களை அங்கே அனுப்ப முடியாது என தீர்மானித்து அவள் தன்னிடம் வரவில்லை என்பதை தெளிவாக அவனிடம் கூறி விட்டு அறிந்தால் தகவல் தருவதாக கூறி அவனை அனுப்பி வைத்தான்.
 
Top