சீதள நிலவு
அத்தியாயம் - 01
1990 ம் ஆண்டு..
மேக மலை மீதிருக்கும் அந்த காளி கோவிலில் பெண்ணொருத்தி ஊண், உயிர் உருக ஒரு வேண்டுதல் செய்து கொண்டிருந்தாள். மூடியிருந்த நீள் இமை தாண்டி பெருகிய கண்ணீர் அவள் மார்பு சேலையை நனைத்தது. அணிந்திருந்த வெளுப்பு நிற கதர் புடவை அவள் கண்ணீரை புடம்போட, இரு கை கூப்பி இதழ் முணு முணுக்க வேண்டிக் கொண்டிருந்தாள் அடர் தேன் நிற தேகம் கொண்ட மாது. அவள் ஒன்றும் அத்தனை பெரிய அழகி அல்ல ஆனால் ஆணவம் கொண்ட ஒருவனின் மனதை மஞ்சத்தில் சிலகணங்கள் சிதைத்தவள்.
இடை தாண்டிய கூந்தலில் ஒரு இனுக்கு மல்லிகை பூவும், வகுடும், நெற்றியும் சுமந்திருக்கும் குங்குமமும், கழுத்தை தழுவிய மஞ்சள் கயிறும், இரு கைகளில் ஒரு ஜோடி கண்ணாடி வலையல்களும் அவளை திருமணம் ஆன ஏழை பெண் என கூறும். ஆனால் அவள் நான்கு வயது குழந்தைக்கு தாயென கூறாது ஏனென்றால் அப்படி ஒரு மெல்லிய உருவம் அவள் அருகே விரல் சூப்பி கொண்டிருந்த அந்த குட்டி கண்ணனை அவளோடு இணைத்து பார்த்தால் அவள் மகன் என்றும் கூற முடியாது. அவள் நிறத்திற்கும் பிள்ளையின் மஞ்சள் ஒளி வீசும் நிறத்திற்கும், அவன் முகம் சுமந்திருக்கும் ராஜகலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ஆனால் அவனே அவள் ஆத்மார்த்த பந்தத்தின் சாட்சி. அவன் அவள் ஈரைந்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகன் மட்டுமல்ல தன் கண்ணீருக்கு காரணமானவனின் காதல். அவள் பெயர் 'சந்திரிகை'.
ஓங்காரமாக வீற்றிருக்கும் உக்கிர காளியின் வீரம் நிறைந்த உருவமோ அல்லது உருவத்துக்குள் இருக்கும் அந்தத் தாயின் மென்மையான இதயமோ எதுவுமே இந்த ஐந்து வருடங்களாக அவள் கண்ணீரை இம்மியளவும் அசைக்கவில்லை. என்றெல்லாம் இறைவனடி சேர்கிறாளோ அன்றெல்லாம் ஊற்றாகப் பெருகும் கண்ணீர் அரக்கன் ஒருவனின் மீது அவள் கொண்ட நேசத்தை சொல்லும் ,காதலின் ஆழத்தை காட்டும், அவள் ஆன்மாவின் தேடலைக் கூட்டும்.
"குழந்தே! குழந்தே!"
அழைப்பில் சுயம் வந்தவள்.
"சாமி!" அவள் தயங்க.
"எத்தனை முறை சொல்லி இருக்கேன் குழந்தே, இந்த அன்னையோட சந்நிதியில் பிள்ளையை பக்கத்துல வச்சுண்டு அழாதேனு, பார் உன் பிள்ளையோட முகத்தை உன்னை வெறிச்சு வெறிச்சு பாத்துண்டு இருக்கான். தாயோட கண்ணீர் ஏன்னு தெரிஞ்சால் நீ எதுக்காக கண்ணீர் வடிக்கிறியோ அதையே உன் பிள்ளையாண்டா வெறுத்துருவான்"
என்று சற்று கடுமையாகவே கூறினார். அதில் அவசரமாக அவள் தன், இரு விழிகளையும் உள்ளங்கை கொண்டு துடைத்தாள். அந்த கோவிலின் சாஸ்திரிகள் நன்கு அறிவார் சந்திரிகையின் துன்பத்தையும், அவள் விழி நீர் துடைக்கும் மார்க்கத்தையும். நான்கு வருடங்களுக்கு முன் இந்த அன்னையின் காலடியில் அடைக்கலம் தேடி வந்தவளை தந்தையாக கரம் நீட்டி பாதுகாப்பு தந்தவராயிற்றே அவர்..
"இல்ல இல்ல நான் அழல சாமி. அப்படி சொல்லாதிங்க. அவ.. அவரை நினைக்காம இருந்தாலே என் இதயம் நின்னுரும், இது.. அவர் இரத்தமே அவரை வெறுத்தா என் ஆவி இந்த காத்துல கலந்து காணாம போய்ரும் சாமி. இந்த சந்திரிகையோட வானம் அவர்"
"அப்படி சொல்றவள் இப்படி அழுது வடிச்சா சரியோ?"
"நான் என்ன செய்றது சாமி இந்த தாயை பார்த்தா என்னால அழாம இருக்க மு..மு..டியலையே"
எனும் போதே அவள் குரல் உடைந்து கேவல் வெடித்தது.
"போரும், போரும்மா. சாயங்கால நேரத்துல விளக்கு வச்சாப்புறம் பொம்மனாட்டிகள் அழறது ஆம்படையானுக்கு நல்லது இல்ல புரியுதோ"
"அழுகலை சாமி. அவர் சௌக்கியமா இருந்தா போதும்"
என்றவளின் அன்புக்கு அவள் மன்னவன் தகுதியானவனா என்று அந்த வயதானவரின் மனம் ஊமையாக அழுததை அவள் அறியாள் இருந்தும்..
"குழந்தே இன்னும் உன் கண்ணீரை அந்த தாய் பார்த்துண்டு இருக்கான்னு நினைக்காதே. உன் வலியை அவள் வலியாக ஏத்துண்டு இருக்கானு நினை"
என்றதும் மரண வேதனையோடு அவள் விழிகள் ஒரு கணம் அந்த ஆளுயர் சிலையை வெறித்துப் பார்க்க, குருக்களோ..
"போரும் குழந்தே இருட்டிண்டு வருது பிள்ளையை கூட்டிண்டு நேரத்துக்கு ஆத்துக்கு போ"
அவளோ சிறு தலையசைப்போடு தன் மகனோடு இல்லம் நோக்கி புறப்பட்டாள். அப்படியே அந்தி சாய்ந்து உறங்கும் நேரமும் வந்தது. என்றும் போல் இன்றும் தாயின் கண்ணீர் அந்த குழந்தையை வாட்டியதோ எண்ணமோ அன்னையை நெருங்கி அவள் மடியில் அமர்ந்தவன்..
"ஏன் அம்மா எப்போ பார்த்தாலும் கோயிலில்ல அழுறீங்க?"
திடுக்கிட்டவள் மகன் முன் உணர்வுகளை வெளிப்படுத்திய அவள் மடமையை நொந்து கொண்டே..
"அதுல என்ன கண்ணா இருக்கு. நம்ம போல மனுஷங்களுக்கு கடவுள் தானே துணை. அவங்க முன்னுக்கு அழுறது ஒன்னும் தப்பில்லையே?"
"ஆனாலும் நீங்க அழாதீங்க எனக்கு பிடிக்கலை"
என்றபோது நெறிந்த பிள்ளையின் புருவங்கள் கலையாக ஓவியமாக அவள் மனதில் உள்ள ஒருவனின் நெறிந்த புருவத்தை படம் போட்டுக் காட்டியது..
"ஏனாம்? என் ரணதீரனுக்கு நான் அழ கூடாதாம்"
"ஏன்னா என் கூட படிக்கிற பிள்ளைங்க அம்மா எல்லாம் சிரிச்சிட்டே இருப்பாங்க"
என்ற குற்றச்சாட்டில் தகப்பனின் புத்தி கூர்மையை இடுக்கும் குறையாது வாங்கி பிறந்த அவன் வாரிசு என்ற நினைப்பே கர்வமாக ஒரு நிமிர்வைத் தந்தது.
மகனின் புத்தி கூர்மையில் அவளுக்கு என்றும் கர்வம் உண்டு. அது சாதாரண விஷயமா? கணவன் ஞானம் எத்தகைய ஆளுமையானது என்பதை அறிந்து அவனோடு சுகித்தவள் ஆயிற்றே, பழைய நினைவுகள் கிளற, கிளற அதை ஒதுக்கியவள்.
"கண்ணா மறுபடியும் சொல்றேன் அழுறது பிழையில்லையே.. நான் வேற யாருட்டையும் அழலை. சாமிட்ட தானே அழுந்துட்டு வந்தேன்"
தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தவன்..
"ஆனா அம்மா நீங்க சாமி முன்னுக்கும் அழக்கூடாது. நம்ம அப்பா வந்துட்டா உங்களை சாமி முன்னுக்கும் அழவிட மாட்டார்"
என்றதும் பெண் மனம் ஊமையாக கதறியது.
'அவர் வரமாட்டார். என்றைக்கும் என்னைத் தேடி வரவே மாட்டார். அதனால் தானே நான் அழுகிறேன்'
ஒரு பக்கம் இதயம் கதற, இதயத்தின் மூலையில் ஒரு குரல்.. 'வந்தால் உன் உணர்வுகளை கொன்று உன்னை குப்பையாக தூக்கி எறிந்தவரை ஏற்றுக் கொள்வாயா..?'
என்றது. அதே மறுமனமோ..
'இந்தச் சந்திரிகை நிலவானால் அவர் என் வானமில்லையா? வானமின்றி நிலவேது?' என்று கேள்வி எழுப்ப. அவள் இன்னொரு மனமோ..
'நீ நிலவு என்றால் அவர் உன்னை சுட்டெரிக்கும் சூரியன். நீ மென்மை என்றால் அந்த மென்மையை கீற்று, கீற்றாக கீறி சிதைக்கும் கடுமை அவர்.' என்று வாதிட மகன் மடியில் படுத்து உறங்கியது கூட தெரியாது வானத்தில் தோன்றிய அந்த முழு நிலவை பார்த்துக் கொண்டே..
அன்றொரு நாள் படர்ந்த வானில் தோன்றிய நிலவு!
இருண்ட வானில் ஒளியான நிலவு!
அடர்ந்த காட்டில் உக்கிர காளியின் முன் உறவாக்கி நிலவு விரிந்த புல்வெளியே உயிரான நிலவு!
என் வாழ்வின் சீதள நிலவு இல்லையோ?..
என வாய்விட்டே புலம்ப. அவள் சீதள நிலவாகி, மங்கையின் ஆதவனின் வெம்மையில் தடம் தெரியாது போனதே..
இங்கு சந்திரிகை நிலவோடு ஒரு வாழ்க்கை அவன் நினைவோடு வாழ, அவள் எண்ணங்களின் மன்னவனின் அரண்மனையின் அந்தப்புர வீட்டிலுள்ள மஞ்சத்தில் முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்து, கூடலுக்கு தயார் நிலையில் பெண்ணொருத்தி மஞ்சத்தில் கிடக்க..
சந்திரிகையின் அகம் கொண்டவனோ படர்ந்த முறுக்கேறிய புற முதுகை அவளுக்கு காட்டிய வண்ணம் சலசலத்து ஓடும் அந்த அகண்ட நீர் நிலைக்கு மேலே தோன்றிய வட்ட நிலவை குத்திட்டு கண்களால் விழியசையாது நோக்கிக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் தெறித்த அக்கினி நிலாவின் சீதளத்தை கொன்றதோ என்னவோ, அவன் விழிகள் கூறிய மொழி கேட்டு முழு நிலவும் வெளுத்தது என்பது உண்மை. அவன் உக்கிர தோற்றத்தின் கடை இதழோரம் மெல்லிய சுழிப்பு. அந்தப் அதர்ம புன்னகையின் தடம் என்னவோ, அவன் ஒருவனே அறிவான்..
சந்திரிகை அவளின் உள்ளத்தையும், உயிரின் ஆழத்தையும் கொள்ளை கொண்டவனின் மஞ்சத்தையும் நித்தமும் ஒரு பெண் நிரப்புகிறாள் என்று அறிந்தால், பெண்ணின் பித்து மனம் சிதைந்து போகும். சித்தம் கலங்கி போகும்.
அவன் நெஞ்சத்தில் அவள் இல்லை என்றால் பேதையின் நிலை என்னவோ? அந்த நிலவிடம் பதில் உண்டா?
குளிரும்.