எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜென்மம் கொண்டேன் உனக்காக 2

Sathya theeba

New member
தன் இயல்பான வேகத்துடன் சென்ற அப் புகையிரதம் மேடு பள்ளம், மலை, குகை என்ற பேதமின்றி எங்கும் புகுந்து வந்தது. தடதடக்கும் அந்த ரயிலின் ஓசைக்குச் சவால் விடும் அளவிற்கும் அதன் ஓசைக்குப் பின்னணி இசைபோலவும் ஒலித்த அவளது இதயத் துடிப்பின் ஓசை அவளுக்கே கேட்டது.

அந்தப் புகையிரதத்தின் ஜன்னலில் தலைசாய்த்திருந்தாள் அவள். மனதில் இருந்த பாரம் தலையை அழுத்துகின்றதோ எனும் அளவுக்கு தலை பாரமாக இருப்பதாக உணர்ந்தாள். கண்களில் வருவேனென அடம்பிடித்த கண்ணீரை சிரமத்துடன் உள்ளிழுத்துக் கொண்டு கனத்த இதயத்துடன் வெளியே தெரிந்த மரங்களையும் மலைகளையும் எந்தவித உணர்ச்சியுமின்றிப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஏறியதிலிருந்து சிறிது தூரம்வரை அவள் புது ஊர், புது மனிதர்கள், அப்பப்போ கேட்ட புது மொழி எல்லாவற்றையும் சுவாரஸ்யத்துடனேயே பார்த்து வந்தாள். நேரம் செல்லச் செல்ல அவை அவளுக்கு அலுத்தன. எனவே கண்களை மூடி சிறிது தூங்கினாள்.

மெலிதான ஒரு பெண்மணி அவளைப் பார்த்து கையை நீட்டி அழைக்கின்றாள். அவளும் அவர் அருகில் செல்கின்றாள். அவளது தலையில் கைவைத்தவர் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிகின்றது. அவர் கண்ணீரைத் துடைப்பதற்கென கைகளைத் தூக்கினாள். அவர் மெல்ல மெல்லக் காற்றாய் மறைந்து போனார். இவளோ அவரைப் போக வேண்டாம் என்று கதறுகின்றாள். ஆனால் அவள் குரல் அவள் காதுகளுக்கே எட்டவில்லை.

திடுக்கிட்டு எழும்பியவள் தடுமாறிப் போனாள். தான் அதுவரை கண்டது ஒரு கனவு என்பது அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. இக் கனவு தனக்கு ஏதாவது சொல்கின்றதோ என்று எண்ணியவளுக்கு தலைதான் வலித்தது. நகர்ந்து சென்ற புகையிரத்துடன் அவள் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.

தன் அடையாளம் வாழ்வு என எண்ணியிருந்ததைத் தொலைத்து விட்டு யாருமற்ற அநாதையாய் இன்று இந்தப் புகையிரதத்தில் பயணம் செய்கின்றாள். உயிரான அவள் தந்தையின்றி, அவள் வாழ்ந்த ஊரைவிட்டு, முகமறியாதவர்களைத் தேடிச் செல்கின்றாள்.

இப்போது அவளது வாழ்க்கை கோபுர உச்சியிலிருந்து குப்புற நிலத்தில் விழுந்தது போல ஆகிவிட்டது. இப்போது நடப்பது கனவா? அல்லது இதுநாள்வரை கண்டதுதான் கனவா? இந்த விதி தனக்கு மட்டும் இப்படி ஒரு தலைகீழ் வாழ்க்கையை எழுதியது ஏனோ எனத் தன் தலைவிதியைத் தானே நொந்து கொண்டாள். முந்திய நிகழ்வுகளின் தாக்கம் அவள் மனதை வெகுவாக அழுத்தியது.

சற்று நேரத்திலேயே ஒரு சிறிய நிலையத்தில் புகையிரதம் நின்றது. எதிரே அமர்ந்திருந்த பெரியவர் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானார். கொழும்பில் அவர் ஏறியதிலிருந்து இந்த நேரம்வரை ஜன்னல் வழியே வெறித்த பார்வையாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த அவளைக் கவனித்திருந்தார். இடையில் அவளிடம் பேச முற்பட்ட போதும் அதை அவள் கவனத்தில் எடுக்கவே இல்லை.

இப்போது இறங்கப் போகும் நேரம் அவர் மனதில் ஒரு நெருடல் தோன்றவும் அவளருகில் வந்தார். "பிள்ளை நீ இறங்கலையா?"என்று கேட்டார்.

திடுக்கிட்டுத் திரும்பி அவரைப் பார்த்தவள் என்ன பதில் சொல்வது என சற்றுத் தடுமாறினாள். பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு, "இல்லை ஐயா, இன்னும் இரண்டு ஸ்டேஷன் கழித்தே நான் இறங்கணும்" என்றாள்.

" இல்லையே பிள்ளை.. இன்னும் ஒரு ஸ்டேஷன்தான் இருக்கு. அதுதான் கடைசி ஸ்டேஷன். இதுதான் பிள்ளை பெரிய ஸ்டேஷன். அடுத்து கடைசி ஊர் என்பதால் சின்னதா ஒரு ஸ்டேஷன் இருக்கு. ட்ரெயின் அங்கேயே நின்றிடும்" என்றவர்,

"நீ எங்கம்மா போகணும்?" என்று கேட்டார்.

"ஓ.. ஓ.. ஐயா, நான் அடுத்த ஸ்டேஷனுக்குத் தான் போகணும் என்று நினைக்கிறன். மஸ்கெலியா என்ற இடத்துக்கு.. தான் போகணும்..." என்று தட்டுத்தடுமாறி பதிலளித்தாள்.

"ஓகோ.. அதே ஊர்தான்" என்றவருக்கு ஏதோ மனதுக்குள் தோன்றவும்,

"உன்னை அங்கே யாராவது அழைத்து போக வருவார்களாம்மா?" என்று கேள்வி கேட்டார்.

'என்னைத் தேடி யார் வரப்போகின்றார்கள். நான்தான் யாருமற்று அநாதையாய் அலைகிறேனே' என்று மனதுக்குள் அழுதவள் அதை வெளியில் காட்டாமல்,

"ஐயா அங்கே எனக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்னைக் கூட்டிப் போக வருவார்கள்" என்று கூறினாள்.

"சரி பிள்ளை.. நீ தனியாக வந்திருக்கின்றாயா? இப்போதே பத்து மணி ஆகிவிட்டது. அதுதான் யோசனையில் கேட்டேன். என்னைத் தேடி என் மகன் வந்திருப்பான். நான் கிளம்புறேன்மா" என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

மீண்டும் புகையிரதம் புறப்பட்டு விட்டது. இதோ இன்னும் சில நிமிடங்களில் அடுத்த நிலையம் வந்துவிடும். இந்தப் புகையிரதத்தின் பயணத்தில் கடைசி நிலையம் அதுதானாம். அத்துடன் இந்தப் பயணம் முடிந்துவிடும். அதன் பிறகு....? விடை தெரியாத பல கேள்விகள் அவள் முன் நின்று மருட்டியது.

நான் என்ன நம்பிக்கையில் அங்கே செல்கின்றேன்? நான் அங்கே செல்வது சரியா? எல்லாவற்றையும் விட அங்கே என்னை ஏற்றுக் கொள்வார்களா? எந்தக் கேள்விக்கும் அவளிடம் விடை இல்லை.

இவற்றிற்கு மட்டுமா விடை தெரியவில்லை. இப்போது அவள் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதானே.

ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் பயணம் செய்து இவ்வளவு தூரம் வந்துவிட்டேனே என்று மனதிற்குள் புலம்பினாள்.

அந்தப் புகையிரதத்தின் வேகம் மெல்ல மெல்லக் குறைவது தெரிந்தது. இதோ நின்றேவிட்டது. இறங்கும்போதே அவள் மனதில் சற்றே பரபரப்பும் தடுமாற்றமும் ஏற்பட்டது. தன் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படப் போகின்றது போன்ற உள்ளுணர்வின் பரிதவிப்பும் அவளுக்குள் ஏற்பட்டது. திருப்பம் ஒன்றைத் தேடித் தானே வந்திருக்கின்றாள். ஆனாலும் இப்போது தோன்றும் உணர்வு புதிதாக இருந்தது.

தன்னுடன் கூட எடுத்து வந்திருந்த தோள்பையை எடுத்துத் தோளில் மாட்டியவள் சிறிய பயணப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல உணர்ந்தாள்.

சூரியன் தனது வெளிச்சக் கதிர்களை மலைகளின் பின்னால் மறைத்து வெகு நேரம் ஆகிவிட்டது. நேரம் இரவு பத்து முப்பது. பகலில் பச்சைப் பசேலென காட்சி தரும் மலைகள் எல்லாம் இருட்டில் பெரும் பூதங்களாகி மிரட்டின. பகல் வேளையிலேயே நுவரேலியாவில் குளிர் உடலை ஊடுருவும். இப்போது குளிர் உடலை ஊசிபோலக் குத்தியது. அவளுக்கு இக்குளிரெல்லாம் சாதாரணம் தான். இதைவிட உறைபனியைக் கூடக் கண்டிருக்கின்றாள் தான். ஆனால் இப்போது அவளது மனம் சோர்வடைந்த காரணமோ என்னவோ இந்தக் குளிரையே தாங்க முடியாது கைகளை இறுகக் கட்டிக்கொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். கொழும்பில் இருந்ததைப் போல அந்த நிலையத்தில் அலையலையெனக் கூட்டம் இல்லை. புகையிரதத்தில் இருந்து இறங்கிய வெகு சிலர் தமக்கெனக் காத்திருந்த வாகனங்களிலும் அங்கு நின்றிருந்த ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்தியும் தத்தம் வீடு நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அந்த இடம் அதிகம் குப்பை தூசு இல்லாமல் சுத்தமாக இருந்தது. பகல் வேளையில் அவ்விடம் மிகவும் அழகாக இருக்கும். இருட்டிவிட்டதால் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் மிதமான அழகுடன் காணப்பட்டது. அவள் சுற்றுமுற்றும் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே எல்லோரும் சென்றுவிட்டனர். அங்கங்கே ஒருசிலர் மட்டுமே தென்பட்டனர். அப்போதுதான் நடப்புக்கு மீண்டும் வந்தவள் இந்த இருட்டு நேரத்தில் எங்கே செல்வது என்று திகைத்தாள். அவள் பயணம் செய்யத் தொடங்கிய இந்த இரண்டு நாட்களிலும் இரண்டு கப் டீயும் ஒரேயோரு சான்ட்விச்சும் மட்டுமே சாப்பிட்டிருந்தாள். பசியில் கால்கள் சற்றுத் தடுமாறின. அங்கேயிருந்த கதிரையில் சென்று அமர்ந்தாள். அந்த நிலையத்தில் பல கடைகள் மூடப்பட்டிருந்தன. சிறிய ஹோட்டல் ஒன்று மட்டுமே திறந்திருந்தது. அந்த நிலையத்திற்கு நாளை காலையே புகையிரத சேவை இடம்பெறும். அது ஒரு சிறிய நகரம் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட சேவையே இடம்பெறும். எனவே கடைகளைப் பூட்டிவிட்டார்கள். ஹோட்டலும் பூட்டுவதற்கு தயாராகியது. அங்கே சென்று சாப்பிட அவளுக்குத் தோணவில்லை.

தன்னுடன் கொண்டுவந்திருந்த அந்த தோள்பையைத் திறந்து அதனுள் வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். அதிலிருந்த முகவரியையும் சரிபார்த்தாள். இதே ஊர்தான். இந்தக் கடிதத்தை நம்பி இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. இந்த நேரத்தில் எப்படி இதில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்குச் செல்ல முடியும். நின்றிருந்த ஒன்றிரண்டு ஆட்டோக்களும் ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டன. கண்கள் இருட்டவும் கண்களை மூடித் தலையைச் சரித்துத் தன்னை ஆசுவாசப்படுத்தினாள். இதுவரை நேரமும் அவளிடம் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் நேரம் செல்லச் செல்ல அவளை விட்டுச் சென்று கொண்டிருந்தது.

தெரியாத இடத்தில் வந்து மாட்டிவிட்டேனோ என்று கலங்கினாள்.

இரண்டு வாரங்களின் முன்னர் அவள் வாழ்வையே புரட்டிப்போட்ட பல சம்பவங்கள் அவள் கண் முன் நிழலாடின. நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவு அடுக்குகளில் வலம் வந்தன.

கனடா நாட்டின் மிகப் பெரிய மாநிலமான ரொரண்டோவில் மிகவும் பிரசித்தமான ஹோட்டல் அது. 'சீ குயின்ஸ்' என்னும் பெயருக்கேற்றாற் போல கடல் ராணியாகவே, எப்போதுமே பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிகப் பிரமாண்டமானதாகவே இருக்கும். அக் ஹோட்டலின் அழகு இன்று இன்னும் பன்மடங்கு பிரமிப்பைக் கூட்டியது.

கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ண விளக்குகள், பலூன்கள் என அலங்காரம் அமர்க்களமாய் இருந்தது. ஹோட்டலின் உள்ளே இருந்த விழா மண்டபமும் மேடையும் அதிக அலங்காரத்தில் பளிச்சிட்டன. பணத்தை வாரியிறைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அம்மாநிலத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் இருந்து பெரிய பெரிய பதவிகளில் இருக்கும் பெரிய மனிதர்களும் பணக்காரர்களும் என தத்தம் சொகுசுக் கார்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அந்த ஹோட்டலின் பணியாளர்கள் அனைவரும் காலில் சக்கரம் கட்டாத குறையாக சுழன்று சுழன்று அவர்களுக்கெல்லாம் சேவையாற்றி கொண்டிருந்தனர்.

ஏஎஸ்பி என ரொரன்டோ வர்த்தக வட்டாரத்தில் அறியப்பட்டவர்தான் அன்பானந்தம் சூரியப்பிரகாஷ். புளூ வேல்ஸ் இம்போர்ட்ஸ் அன்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் பங்குதாரரும் சீகுயின்ஸ் எனும் ஏழு நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளருமான சூரியபிரகாஷின் ஒரே வாரிசு ஆதிரா. அவளுக்கு இன்று இருபத்து மூன்றாவது பிறந்ததினம். அது மட்டுமன்று அவரது தொழில்முறை பங்குதாரரான தர்மேந்திராவின் மகன் சர்வேஷிற்கும் ஆதிராவுக்கு திருமணம் செய்யப் பெரியோர்கள் முடிவெடுத்திருந்தனர். அதனை அறிவித்து நிச்சயம் பண்ணும் நிகழ்வும் அன்றே நடத்த ஏற்பாடாகியிருந்தது.

பெண்ணின் பிறந்தநாளையும் நிச்சயத்தையுமே இவ்வளவு பிரமாண்டமாகக் கொண்டாடும் ஏஎஸ்பி திருமணத்தை எவ்வாறு நடத்துவார் என்பதே வந்தவர்களின் பேச்சாயிருந்தது.

சற்று நேரத்திலேயே அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. படகு போன்ற காரில் அழகுக்கே இலக்கணமாக வந்து இறங்கினாள் ஆதிரா. அவளைக் கண்டதும் அந்த ஹோட்டலில் நின்ற அனைவருமே எழுந்து நின்று கைதட்டி அவளை வரவேற்றனர்.

நீலத்தில் வெள்ளை நிறக் கற்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட அந்த முழு நீளக் கவுணில் அவள் தேவதையாக ஜொலித்தாள். அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒப்பனையாளர்கள் அவளை அலங்கரித்து இருந்தனர். உயரே தூக்கி மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்ட கொண்டையில் வெள்ளை நிறக்கற்கள் பதிக்கப்பட்ட சிறிய கிரீடம் சூட்டப்பட்டிருந்தது.

கழுத்திலும் கையிலும் வைரங்களால் இழைக்கப்பட்ட நகைகள் ஜொலித்தன.

ஐந்தடிக்கும் சற்றுக் குறைவான உயரம். அளவாக செதுக்கப்பட்ட உடலமைப்பு. உப்பிய கன்னங்களும், பெரிய, நீண்ட கண்களும் பார்ப்போரை ஈர்த்துவிடும்.


காரிலிருந்து இறங்கியவளைக் கண்டதும் ஆனந்தத்தில் தந்தையின் கண்கள் கலங்கின.

அவளது கையைப் பிடித்து விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். மிக ஆரவாரமாக சகல வைபவங்களும் நடந்தன. சர்வேஷும் மேடைக்கு அழைக்கப்பட்டு இருவரின் திருமணச் செய்தியும் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தை நடத்தவும் திட்டமிட்டனர்.

அங்கே வந்திருந்தவர்களுள் மகிழ்ச்சியில் சிலரும் பொறாமையில் உள்ளம் கொதிக்க பலரும் கைதட்டி அச்செய்தியை ஆமோதித்தனர்.

ஆதிராவுக்கு சர்வேஷை சிறுவயது முதல் தெரியும் அவ்வளவே. குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகளில் அவனை அடிக்கடிக் கண்டிருக்கிறாள். ஓரிரு வார்த்தைகள் பேசியிருப்பாள். அதற்கு மேல் அவனைப் பற்றி அவள் தெரிந்திருக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துத் தந்தை கேட்டபோது, அவளுக்கு சற்றே தடுமாற்றமாகவே இருந்தது. தர்மேந்திராவின் வசிப்பிடம் இவர்களின் நகரிலிருந்து சற்றே தொலைவில் இருந்தது. அவருக்கும் சர்வேஷ் ஒரேயொரு மகன் என்பதால், அவர்களுடனேயே கூட வைத்திருப்பார். எனவே தான் திருமணம் முடித்து போனதும் தன் தந்தை தனித்து விடுவார் என்ற தவிப்பு அவளை வாட்டியது.

இதை நேரடியாக தந்தையிடமே கூறினாள். எப்போதும் தீர்க்கமான சிந்தனையும் தெளிவான பேச்சுமாக இருப்பவரான சூர்யபிரகாசே சற்று தடுமாற்றமாக உணர்ந்தார். அவரது உலகமே ஆதிராதான். அவரது காதல் மனைவி ஆதிராவின் இரண்டாவது வயதில் விட்டுப் போனபோது ஆற்றொண்ணாத் துயரில் தவித்துக் கிடந்தபோது அவர் மகளின் 'அப்பா' என்ற அழைப்பு மட்டுமே அவர் வாழ்வதற்கான அர்த்தத்தைக் கொடுத்தது. இன்றுவரை அவளுக்காகவே தன் வாழ்வை வடிவமைத்தவர். அவளது பிரிவு என்ற சொல்லே அவரை கலங்கடித்தது.

அவரையே பார்த்திருந்தவளுக்கு அவரது தவிப்பு புரிந்தது.

"டாட், நான் ஒரு நல்ல ஐடியா சொல்லவா?"

"என்னம்மா?"

"வந்து… நான் மரேஜ் பண்ணினால்தானே உங்களை தனியாக விட்டுப் போகணும். சோ, நான் யாரையும் மரேஜ் பண்ணாமல் கடைசி வரை உங்க கூடவே இருக்கிறேனே."

அவளது வார்த்தையைக் கேட்டதும் அவள் தன்மீது வைத்திருந்த அன்பு அவரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

"ஆதும்மா.., கல்யாணம் என்பது வாழ்க்கையில் ஓர் இனிமையான கட்டம். அதிலும் கிடைக்கிற துணை சூப்பரா அமைஞ்சிட்டா அதுவே ஓர் இனிய பயணம் ஆயிடும். எனக்கு உன் அம்மா கிடைத்தது போல, உனக்கும் ஓர் பார்ட்டனர் கிடைப்பார். அதுவும் நம்ம சர்வேஷ் உனக்கு நல்ல பார்ட்னராய் இருப்பான். அதைவிட நீ சர்வேஷை மரேஜ் பண்ணினால் எங்கே போகப் போகிறாய்? பக்கத்தில் இருக்கிற சிற்றியில் தானே தர்மாவின் வீடிருக்கு. நீ நினைச்சாலும் என்னை வந்து பார்க்கலாம். நானும் உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன். எனக்கும் நீ ஒரே பொண்ணும்மா. நான் சேர்த்த சொத்தெல்லாம் யாருக்கம்மா? அதை ஆளப் போகும் நீ இப்படி பேசலாமா? எனக்கு நீ இரண்டு, மூன்று குட்டீஸப் பெத்துத் தந்திட்டால் நான் அவங்களோடே சந்தோசமாய் காலத்தைப் போக்கிடுவேன். ஓகேம்மா.. எந்த கட்டாயமும் இல்லை. உனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நான் முடிவெடுப்பேன். நீ யோசித்து உனக்கு சரியென்று தோணினால் மட்டும் சொல்லு. பட் சர்வேஷை வேண்டாம் என்றால் இன்னுமொரு சுரேஷைப் பார்த்து கட்டி வைப்பேன்" என்றுகூறி சிரித்துவிட்டு, அவள் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றார்.

மேலும் மறுப்பதற்கு அவளுக்குக் காரணம் இருக்கவில்லை. மறுநாளே அவரிடம் சென்று அவர் என்ன முடிவெடுத்தாலும் தான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறினாள். அவரும் உடனேயே நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

சூரியபிரகாஷ் இந்தியாவின் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன்னரே இங்கே வந்தது.

அவர் தனது நிறுவனத்துக்கு ஏற்றுமதி தொடர்பான விடயமாகப் பேச இலங்கை வந்திருந்த போது மலர்விழியைக் கண்டு காதல் கொண்டு மணந்தார். தன்னுடனேயே கனடாவுக்கும் அழைத்து வந்துவிட்டார். மலர்விழி தனது குடும்பத்தை எதிர்த்துத் திருமணம் செய்ததால் யாரும் அவருடன் பேசுவதில்லை. தாயின் உறவுகள் யார்? எங்கிருக்கிறார்கள்? என்பது கூட ஆதிராவுக்குத் தெரியாது.

ஆதிராவுக்கு இரண்டு வயது இருக்கும் போது மலர்விழி நோயால் இறந்துவிட்டார். அவர் இறந்த செய்தியைக் கூட அவரது உறவினர்கள் சட்டை செய்யவில்லை என்று பின்னாளில் கேள்விப்பட்டிருக்கிறாள் ஆதிரா.

தந்தை வழியில் இவளுக்கு உறவென்று சூழ பலர் இருந்தாலும் எல்லோருமே பாசத்தை விடப் பணத்தையே அதிகம் தேடி ஓடினர். இவளை ஒதுக்கியே பழகினர். எனவே இவளும் தந்தையைத் தவிர வேறு யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கக் கற்றுக் கொண்டாள். சூரியப்பிரகாஷூம் அவளைப் பூவைப் போலவே பாதுகாத்து வளர்த்தார். அவளது உலகமே தந்தையைச் சுற்றி மட்டுமே இருந்தது.

நிச்சயம் செய்யப்பட்டு ஒருவாரம் கடந்திருந்தது. அன்று காலையில் எழும்போதே ஆதிராவின் மனதில் என்னவென்று தெரியாமல் ஒருவித பதற்றம் ஏற்பட்டது. மனது நிலைகொள்ளாமல் தவித்தது. தந்தையுடன் பேசினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று தோன்றவும் சூரியபிரகாஷைத் தேடி அவரது பகுதிக்குச் சென்றாள். அங்கே நின்ற அவரது மெய்க்காவலர், அவர் அதிகாலையிலேயே வெளியே போய்விட்டதாகவும் தங்கள் யாரையும் அவருடன் கூட வரவேண்டாம் என்று கூறிவிட்டுத் தனது கார் டிரைவரை மட்டும் அழைத்துச் சென்றதாகவும் கூறினர்.

எங்கே அப்பா அவ்வளவு அவசரமாகப் போயிருப்பார் என்று யோசித்தாள். அந்த டிரைவரும் இங்கே பல வருடங்கள் வேலை செய்வதால் அவரது பாதுகாப்புக் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று எண்ணினாள். எதற்கும் தந்தைக்கு அழைப்பை எடுத்துப் பார்ப்போம் என்று எண்ணமிட்டவள் தனது அலைபேசியிலிருந்து அழைப்பை மேற்கொண்டாள். ஆனால் அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. சற்று மனம் கவலையுற்றது.

சற்று நேரம் கழித்துப் பார்ப்போம் என்று எண்ணமிட்டவள் அப்படியே விட்டுவிட்டாள்.

அப்போது சர்வேஷ் அவளுக்கு அழைப்பை மேற்கொண்டான்.
"ஹாய் ஸ்வீட்டி, என்ன செய்கிறாய்?"

"டாட் ஆபிஸுக்கு இன்று வரச் சொன்னார். அதுதான் ரெடியாகிட்டு இருக்கேன்"

"ஹேய் இன்று என் பிரண்ட் ஜெலன்ஸ் பேர்த்டே. 'சங்கறிலா'வில் பார்ட்டி வைக்கிறான். கம் வித் மீ ஸ்வீட்டி"

"சாரி சர்வேஷ், இன்று கட்டாயம் ஒவ்பிஸ் வரச்சொல்லி டாட் கூறினார். முக்கியமான டொக்யுமென்டில் நான் சைன் பண்ணனும் என்றார். சோ, சாரி உன் கூட என்னால் ஜொயின்ட் பண்ண முடியாது."

"என் பிரண்ட்ஸை உனக்கு இன்ரடியூஸ் பண்ணி வைக்கலாம் என்று நினைத்தேன். இட்ஸ் ஓகே... ஃபாய்..." என்றுவிட்டு வைத்துவிட்டான்.

காலை ஒன்பது மணியாகிவிட்டது. வெளியில் சென்ற தந்தையைக் காணவில்லை. சூரியபிரகாஷ் என்றாலே நேரத்தில் மிகவும் கவனமானவர் என்பது ஊரறிந்தது. ஒன்பது மணிக்கு செல்ல வேண்டிய இடத்தில் எட்டு ஐம்பதுக்கே நிற்பார். ஆனால், இன்று ஒன்பது மணியாகிவிட்டது. ஓவ்பிஸ் செல்லும் நேரம் வந்துவிட்டதே. அவர் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என்று உள்ளூரக் கவலை கொண்டாள் ஆதிரா.

அவள் கடந்தகால வாழ்வின் நினைவுச்சங்கிலி பக்கத்தில் கேட்ட குரலால் திடீரென அறுபட்டது.

அருகில் நின்றிருந்த அந்தப் பெண்,
"அக்கா, ரொம்பப் பசிக்குது. சாப்பாடு ஏதும் இருந்தால் தாறிங்களா?" என்று பரிதாபமாகக் கேட்டாள்.

அவளிடம் உணவில்லாததால் தன்னிடமிருந்த பணத்தில் எடுத்து உணவை வாங்கி சாப்பிடுமாறு கூறினாள்.

சுற்றுமுற்றும் பார்த்தாள். இருட்டிவிட்டிருந்தது. அந்தப் பெண்ணும் கடகடவென அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டாள். அங்கே வேறு யாருமே இல்லை. இப்போது ஒரு ஆட்டோவைக் கூட அங்கே காணவில்லை. இப்போது என்ன செய்வது என்று திகைத்துப் போனாள். எப்போதும் அவள் துணிச்சல்காரிதான். எந்த நேரத்திலும் எந்தக் காரியத்திலும் தனித்து நின்று செயற்படக் கூடியவள். ஆனால் இப்போது அவள் மனம் உடைந்து போயுள்ளாள். அதனால் தைரியத்தை இழந்து நின்றாள்.

சற்றுத் தள்ளித் தெரிந்த கழிவறைக்குச் சென்றவள் அங்கிருந்த குழாயில் முகத்தைக் கழுவி விட்டு அங்கே பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்.

பயணம் செய்ததால் கலைந்திருந்த கேசமும் நலுங்கியிருந்த உடையும் அவள் அழகைக் குறைத்துக் காட்டவில்லை. எப்போதும் சிரிக்கும் கண்கள் அவளது. ஆனால் அந்தக் கண்களில் இப்போது கலக்கம் குடிகொண்டிருந்தது.

வெளியே வந்தவளுக்கு மிகவும் பசித்தது.அங்கே பூட்டியும் பூட்டாமலும் இருந்த அந்த ஹோட்டலை நோக்கி விறுவிறுவென ஓடினாள்.

அங்கே கடையைப் பூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த ஒரு பெரியவரைக் கண்டதும்,

"எக்ஸ்கியூஸ்மி சேர், எனக்கு ஒரு பிஸ்கட் பக்கற்றும், கோக் ஒன்றும் தர முடியுமா?" என்று கேட்டாள்.

அவர் எதுவும் கூறாது அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தார்.

அதற்கான பணத்தை கொடுத்தவள்,

தான் முதல் இருந்த இடத்திலேயே திரும்ப வந்து அமர்ந்தாள். பிஸ்கட்டையும் கோக்கையும் தன் பசியாற உபயோகித்தவள் அடுத்து என்ன செய்வதென யோசிக்கத் தொடங்கினாள். நிமிடங்கள் கரைந்தன. ஆனால் அதற்கான விடைதான் அவளுக்குக் கிடைக்கவில்லை.

எப்போது தூங்கிப் போனாள் என அவளுக்கே தெரியவில்லை. யோசித்து யோசித்து களைத்துப் போன மூளை தூக்கத்துக்கு கெஞ்சியது போலும் தன்னை மறந்து தான் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தலை சாய்த்து தூங்கி விட்டாள்.


ஆழ்ந்த நித்திரை இல்லாததாலோ என்னவோ அருகில் மனதுக்கு ஒவ்வாத வாசனை வீசவும் மனம் எச்சரிக்கை செய்தது. அந்த வாசனை அவளுக்கு பிடிக்காமல் போகவும் அருவருப்புடன் மூக்கை சுளித்தாள். அது அவள் நாசிக்கு மிக அருகில் வரவும் கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள். அவள் முகத்துக்கு மிக நெருக்கமாக ஒருத்தனின் முகம். அதிலும் அவன் நன்கு குடித்துவிட்டு வந்திருப்பதால் குடலைப் புரட்டி வாந்தி வரும் அளவுக்கு அவனிடமிருந்து நாற்றம் வீசியது. திடுக்கிட்டு அவனைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். அவள் தள்ளிய வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தவனை இன்னுமொருவன் தூக்கி விட்டான்.
 
Last edited:
Top