இதயவாசல் திறவாயோ முகிலினமே-2
பெரிய பெரிய பாரிய கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த மூன்றடுக்கு மாளிகை. ஏகபோக பணம் கொட்டி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மாளிகை அது என்பது அதன் வெளித்தோற்றமே கூறாமல் கூறியது.
மாளிகை உள்ளேயே லிப்ட் வசதிகள் வடிவமைக்கப்பட்டு இருக்க அங்கு இருக்கும் பொருட்கள் அனைத்தும் அத்தனை மதிப்பு வாய்ந்தவை.
பளிங்கு மார்பிள் சுவற்றில் ஒருபக்கம் விவேகானந்தர் தன் நேர்விழி பார்வையோடு பாதி சுவற்றை மறைத்தபடி கைகளை கட்டிக்கொண்டு காவி உடை அணிந்தபடி நின்று கொண்டிருந்தார்.
லிப்டின் தளம் திறந்து கொள்ள தன் இடக்கையில் கட்டியிருந்த வாட்சில் மணியை பார்த்தவாறு விரைந்து நடந்து வரவில்லை ஓடிக்கொண்டு வந்தார் நந்தகுமார வர்மன்.
அகவை ஐம்பத்தியேழை தொடப் போகிறது. ஆனாலும் மார்கண்டேய தோற்றம் காட்டும் உடலமைப்பு. முன்நெற்றி மட்டும் ஏற்றம் இல்லாது இருந்திருந்தால் அவரின் அகவை இவ்வளவு கூடுதல் என்று கண்டுபிடிப்பது எதிரில் நிற்கும் எவருக்கும் கடினமாகிப் போயிருக்கும்.
கோர்ட் சூட்டில் வந்தவர் டைனிங் டேபிளில் அமர்ந்தவாறு, சமையலறை பக்கம் பார்வையை படரவிட,
“இதோ வந்துட்டேன் நந்து”, என்றவாறு தான் அணிந்திருந்த ஏப்ரனை கழட்டியவாறு வந்தார் சிந்துஜா.
அகவை ஐம்பத்தி இரண்டு. இதுதான் என் வயது என்று வாய்மொழியாக அவர் கூறினாலும் அதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் இந்த வயதிலும் கூட அப்படி ஒரு வசீகரிக்கும் முகம். வசீகரித்திற்கு இன்னும் கொஞ்சம் அழகு சேர்ப்பது போல் எப்பொழுதும் ஒட்டிக்கொண்டே இருக்கும் அந்த புன்னகை அவரிடம் மிகவும் தனித்துவமானது.
“உங்களுக்கு புடிச்ச புட்ஸ் தான் செஞ்சிருக்கேன் சோ நல்லா வாய்க்கு ருசியா நீங்க சாப்டலாம்”, சிந்துஜா கூற, நந்தகுமார் மெல்ல சிரித்துக் கொண்டார்.
வசிப்பது ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் உணவுமுறை பழக்க வழக்கம் என்னவோ தொன்று தொட்டு இன்னும் இந்தியா தான். வெறும் தண்ணீரில் வெந்து நிற்கும் மல்லிப்பூ இட்லிக்கு இணையாக இந்த பிரபஞ்சத்தில் வேறு எந்த உணவும் உண்டா என்ன? அதுவும் சிந்துஜாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் இஞ்சி துவையலுக்கும், வரமிளகாய் சட்னிக்கும் காலம் முழுக்க அடிமையாக கிடக்க சொன்னாலும் நந்தகுமார் சரி என்பார்.
சாப்பாடு விடயத்தில் தந்தை, மகன் இருவரின் குணமும் ஒன்றே.
சிந்துஜா மிதுக்கம் பழம் போல் இருக்கும் இட்லியை தட்டில் எடுத்து வைத்து இஞ்சி துவையலை இட, அதை இரசித்து உண்ணத் துவங்கினார் நந்தகுமார்.
“எப்பவும் போல இப்பவும் உன்னோட கைபக்குவம் வேற லெவல் சிந்த். காலம் முழுக்க உன் கையால இப்டியே என்னை சாப்டுட்டு சாப்பாட்டு இராமனா இருக்க சொன்னாலும் நான் சரினு தான் சொல்வேன்”, டிஷூ பேப்பரில் தன் கரம் துடைத்தவர் எழுந்து நின்று கொண்டார்.
வாட்சை மீண்டும் திருப்பி பார்த்தவர், “சிந்த்... அப்புறமா டிரைவர் உன்னை கூட்டீட்டு ஆபிஸ் வருவான் அவனோட வந்துடு. நான் போயி இப்போ அரேஜ்மெண்ட்ஸ்க்கு தேவையானத பண்றேன்”,
“ஏங்க இப்போவே நேரம் கூட ஆகிட்ட மாதிரி இருக்குது இன்னும் யாழ் வரல”,
“யாழ் என்னதான் கண்ணாமூச்சி ஆடுனாலும் வரவேண்டிய நேரத்துக்கு ஷார்பா வந்து நிற்பான். நீ கிளம்பி வா நான் முன்ன போறேன். பாய் சிந்த்”, விரைந்து நடந்து வந்தவர் காரிடரில் நின்றும் விடைபெற்றுக் கொண்டார்.
காரின் உடல் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற சிந்துஜா தான் தயாராக ஆயத்தமாக உள்ளே சென்றார்.
“சார் இன்னிக்கு சாரோட பங்க்ஷன் பின்ன இவங்களோட எல்லாம் சார்க்கு மீட்டிங் இருக்கு. நிறையா டிஸ்கஷன்ஸ் கூட பேச வேண்டி இருக்கு. சின்ன பாஸ்க்கு ஓக்கேவா இல்ல இதெல்லாம் கேன்சல்”,
“நோ... நோ... நோ பாதவ். யாழ் எல்லாத்தையும் கரெக்ட்டா மேனேஜ் பண்ணிப்பான். நீங்க அரேஜ்மெண்ட்ஸ் மட்டும் சரியா இருக்கானு பார்த்தாப் போதும் “,
“ஓ... சரிங்க சார்”, நந்தகுமாரின் நம்பிக்கைக்கு பாத்தியப்பட்ட பலருள் பாதவும் ஒருவர்.
வழுக்கும் மெழுகு தரையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் பதினைந்து மாடிகளுடன் உயர்ந்து நின்ற, ஜிகினாதாள் போல் சூரிய ஒளியில் மிளிரும் செவ்வக வடிவத்தில் பல ஏக்கர் விழுங்கி ஏப்பம் விட்ட எம்என்சி கட்டிடத்தின் முன் நின்றது. அதன் முகப்பு புள்ளியில் பெரிய எழுத்துக்களாய் பளிச்சிட்டு ஓடியது எம்என்சி எனும் டிஜிட்டல் திரை.
பணியாளர் ஒருவர் ஓடிவந்து நந்தகுமாரின் கார் கதவை பவ்யமாய் குனிந்தபடி திறக்க, காரிலிருந்தும் இறங்கி வேகநடைகளோடு கம்பெனி உள்நோக்கி நடந்தார் நந்தகுமார்.
முகப்பு வாயில் தாண்டி உள்ளே சென்றவுடன் பல்வகையான வண்ண மலர் கொண்டு தரை, சுவரெல்லாம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தரையில் வட்டமிட்டிருந்த மலர்கள் சூழ் வண்ணக் கோலம் தான் அவரின் கவனத்தை அதன்புறம் ஈர்த்தது.
எட்டி நடைபோட்டு வரவேற்பு ஹால் நோக்கி வர, அங்கு ஹாலின் முன்னே ஒரு அகண்ட தாழி வைத்து அதில் பன்னீர்துளி சிந்தி சூரியனின் காதலி தாமரை தன் படரிலை விரித்து மிதந்து கொண்டிருந்தாள்.
ஹாலிலிருந்து கான்பிரன்ஸ் ஹால் வரை சிவப்புக் கம்பளம் விரித்து அதன் மேலும் பன்னீர் புஷ்பங்கள், ரோஜா இதழ்கள் இன்னும் மணம் சிந்தும் பல்வகை பூக்கள் கொட்டிக் கிடக்க, நந்தகுமாரின் வாயருகே ஒரு பொன்சிரிப்பு மலர்ந்தது.
அனைத்தையும் இரசித்துக் கொண்டே கான்பிரன்ஸ் ஹால் உள்ளே நுழைந்தார்.
சிவப்பு திரைசீலைகள் ஹாலின் ஜன்னல், வாயிலை அலங்காரம் செய்திருக்க, பூங்கொத்துகள் அடங்கிய பெரிய பூவாஸ் டேபிளின் முன்னே வெகு நேர்த்தியாய் சிரித்துக் கொண்டிருந்தது.
குளிரூட்டப்பட்ட ஏசியின் உள்ளே அலைபாய்ந்த அவரின் கண்கள் அவளை கண்டுகொண்டு அவளருகில் சென்று நின்றது.
“விர்ஷூமா”,
தூலிப் மலர்களை சுழற்றிப் பார்த்து இரசித்து சிரித்துக் கொண்டிருந்தவள், அவரின் அழைப்பு கேட்டு ஒரு முகமலர்ச்சியோடு எழுந்து நிற்க,
“உன்னை நம்பினா போதும்மா பொறுப்புக்களை யார்கிட்டவும் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. உன்னோட பணி அவ்ளோ நேர்த்தியா இருந்தது”,
“தேங்க் யூ சார்”,
“சடனா ப்ளான் பண்ணோமே எல்லாமே சரியா நடக்குமானு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ டெக்கரேசன் எல்லாம் பார்த்த பின்னே அவ்ளோ ஹேப்பி. கண்டிப்பா இது எல்லாம் யாழுக்கும் பிடிக்கும் பாரேன்”,
“ஓ சரிங்க சார்”,
“சார் எப்போ சார் வருவாங்க?”, அவசர துடுக்காய் விர்ஷாலி அருகில் நின்ற ஒருபெண் கேட்க,
“ஆன் தி வே மா. சீக்கிரம் வந்துருவான். நீங்க போயி மத்த அரேஜ்மெண்ட்ஸ் பாருங்க”,
“சரிங்க சார்”, நான்கு பேராய் நின்று கொண்டிருந்தவர்கள் மொத்தமாய் நகர,
“விர்ஷு”, என்றழைத்தார் நந்தகுமார்.
“ஆங்க் சார்”,
“நீ போயி யாழ் சைன் பண்ண போற இம்பார்டண்ட் பைல்ஸ் எல்லாம் என் கேபின்ல இருந்து அவனோட கேபினுக்கு மாத்திடு. அண்ட் அவனோட கேபின்லையும் டெக்கரேசன் கொஞ்சம் கூடுதலா பண்ணி வைமா”,
“ஓக்கே சார் அப்டியே பண்றேன்”, என்றவாறு அவள் விலகிச் செல்ல,
“கண்டிப்பா ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாத்தையும் பண்ணிருப்பா. ஒருவார்த்தை அவள வருத்திக்கிட்டத பத்தி சொல்லுறாளா பாரு பாதவ். இந்த சின்சியாரிட்டிதான் விர்ஷு கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது”.
அருகே வந்து தொட்டு பார்க்க சொல்லும் வானத்தின் வர்ண ஜாலத்தை இரசித்தவாறே, நவீன பறவையின் உள்ளே அமர்ந்தவாறு ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகி வந்து கொண்டிருந்தான் யாழேந்திரன்.
இன்னும் சிலமணித்துளிகளில் எம்என்சி கம்பெனியின் முழுபொறுப்பும் அவன் வசம். நினைத்து பார்த்த மாத்திரத்தில் ஒரு புன்சிரிப்பு அவனிதழில் சூரிய உதயம் போல் தோன்ற அநாசாயமாக தலைகோதிக் கொண்டான்.
வெண்ணிற நவீன புரவி அந்த ஓடுபாளத் தரையில் சறுக்கிக்கொண்டு வந்து நிற்க, வெகு கேசுவலாய் தன் டிராலியை தள்ளியவாறு நடந்து வந்தான் யாழேந்திரன்.
அவனுடைய பெர்சனல் செகரட்டரி அவன் பின்னே நடந்து வர, செக்இன் முடித்து வெளியே வந்தவன் தன்னுடைய சொகுசு காரில் ஏறி அமர்ந்தான்.
“சார்! வீட்டுக்கு போயிட்டு அப்புறம் ஆபிஸ் வரச்சொல்லி அப்பா சொன்னாங்க. உங்க வசதி...”,
தன் கைக்கடிகாரத்தில் மணியை திருப்பி பார்த்தவன், “வீட்டுக்கு எல்லாம் வேண்டாம் மோயூனா. நேரா ஆபிஸ்க்கு போ நான் அங்கேயே தயாராகிக்கிறேன். ஏன்னா இப்போவே டைம் ஆகிட்டு சொன்ன நேரத்துல அங்க இருக்கணும்”,
“சரிங்க சார்”,
“ஆன்... மோயூ கார பின்வாசல் வழி விடுங்க. நான் தயாரான பின்ன முன்னால வந்துக்கலாம். அண்ட் மகிழ்னன் நீங்க போயி அப்பாகூட இருங்க நான் டைம்க்கு வந்துடுவேனு அவர்கிட்ட சொல்லிடுங்க”, காரின் டிரைவரிடம் கூறிவிட்டு தன் பெர்சனல் செக்கரட்டரி மகிழ்னனிடம் கூறியவன் அங்கு என்னென்ன பேச வேண்டும் என்பதை தனக்குள் யோசித்துக் கொண்டான்.
கார் எம்என்சியின் பின்வாசலில் வந்து நிற்க, யாரின் கண்ணுக்கும் தென்படாதவாறு நடந்து சென்றவன், மாடிப்படிகளில் விரைந்து ஏறி தன்னறைக்கு சென்றான்.
அவனுக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த அறை. மெத்தை, ஷோபா இன்ன பிற இத்யாதிகள் கொண்டு அந்த அறை இருக்க ஜன்னலின் திரைசாளரம் விலக்கி நகரை பார்த்தான்.
பரபரப்பான மனித தலைகளின் ஓட்டம் முற்று பெறுவதாய் இல்லாமல் தெரிய, ‘காலம் எத்தனைதான் மாறினாலும் மனுஷங்க ஓட்டம் மட்டும் மாறவே மாறாது. ம்ஹூம்...’, ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டவன்,
‘ஊப்ஸ்... சீக்கிரம் கிளம்பணும். டாடும் மத்த ஸ்டாப்சும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க’, மனதுள் நினைத்துவிட்டு, கப்போர்டை திறந்து கோர்ட் சூட்டை எடுத்து டேபிள் மேல் பரத்திவிட்டு தயாராக செல்ல,
தன் கொலுசுமணி சிணுங்க மெல்ல நடையிட்டு வந்தாள் விர்ஷாலி.
“ப்ச்... எல்லா பைலும் சரியா இருக்கு. இந்த யெல்லோ கலர் பைல் மட்டும் எங்கதான் போச்சு”, தன் கழுத்தில் கிடந்த செயினை வாயில் வைத்து பற்களால் கடித்துக் கொண்டே அவள் பேசிக் கொண்டிருக்க, புடவையில் மனம் மயக்கிய தாரகை அவளை, நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் திரை பின்னே நின்று வைத்த விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் யாழேந்திரன்.
“இந்த ஷெல்பல இருக்குமோ?”, ஒரு சேரை இழுத்து போட்டு தன் கைகளை உள்ளே விட்டு தலை உயர்த்தி அவள் தேடிக் கொண்டிருக்க, புடவை வழி தெரிந்து கொண்டிருக்கும் அந்த செப்பு இடையில் சிக்கி தவித்ததோ ஆண்வண்டு.
பிரயத்தனப்பட்டு பார்வையை வேறுபுறம் திருப்பினாலும் அவள் இடைவளைவை சுற்றியே அவன் பார்வை செல்ல,
‘சோ ஹாட்... வந்த முதல்நாளே கம்பெனிக்கு சரியான ஆள் கிடைச்சுருச்சு. ட்ரை பண்ணி பார்ப்போமா?’,
மெல்ல நடையிட்டு வந்தவன் அவள் உள்ளங்காலில் தன் இருவிரல் கொண்டு சீண்ட, கத்திக் கொண்டே கால் வழுக்கி அவன் கைகளில் தஞ்சமாகியிருந்தாள் விர்ஷாலி.
ஆடவனின் கை ஆதிரையின் இடையை சுற்றியிருக்க, அவள் கை அவன் தோள் சுற்றி படர்ந்திருந்தது.
அவளின் தாமரை முகம் பார்த்து ஏங்கும் சூரியனாய் அவனிருக்க, தன் வேல்விழி தூக்கி அவனை தீயாய் முறைத்தாள் அவள்.
இருவரின் முகமும் வெகு அருகில் இருக்க, எதுவும் யோசியாமல் அவளின் பஞ்சன்ன கன்னத்தில் தன் மீசை ரோமம் கீற முத்தம் வைத்தவன், “ஹேய் முகில்! வில் யூ ஷேர் அ பெட் வித் மீ ஒன் நைட்?” (Will you share a bed with me one night?) அவள் காதோரம் கிசுகிசுத்து மொழிந்தவாறு அவன் கேட்க,
ஒற்றைக் கேள்வி! ஒற்றைக் கேள்வி கத்தியின்றி இரத்தமின்றி உயிரை ஊசலாட வைக்குமா? வைத்ததே அவனின் தகாத இந்த கேள்வி அவள் உடலின் குருதியை நீர்குமிழி போல் கொப்பளிக்க வைத்தது. உடலெல்லாம் நடுங்கி வேர்வையில் முக்குளித்துப் போனாள் விர்ஷாலி.
வாழ்வது ஆஸ்திரேலியாவில் என்றாலும் உடலில் ஓடுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய முகவரி அல்லவா? வெளிநாட்டில் வாழ ஒப்புக் கொண்டாலும் இம்மாதிரி இழிவான செயல்கள். ம்ஹூம்...
துள்ளி குதித்துக் கொண்டு அவன் கைகளில் இருந்து விடுபட்டவள் அவன் காது ஜவ்வு கிழிந்து போகும் வண்ணம் விட்டாள் ஒரு அறை பொளீர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று.
சூலாயுதம் மட்டும் தான் அவள் கரத்தில் இல்லை இருந்திருந்தால் அவன் குடலை உருவி மாலையாகக் கூட போட்டிருப்பாள்.
“ச்சீ... பொறுக்கி நாயே, இவ்ளோ மோசமான ஆளா நீ? நீயெல்லாம் அப்படி ஒரு மனுசனுக்கு எப்டித்தான் பையனா பொறந்தியோ? உன்னோட ஆம்பளத் திமிர வேற எங்கேயாவது காட்டு என்கிட்ட காட்டுன மூஞ்ச பேர்த்துடுவேன். பொண்ணுங்கனா படுக்கைக்கு நீ பகிர்ந்துக்கிற டிஷூ தாளா? இனி எந்த பொண்ணுகிட்டயும் போயி நீ இப்டி கேட்கணும்னு நினைச்சா இந்த அறை”, அவன் முன் சொடக்கிட்டவள், “இந்த அறை உனக்கு ஞாபகம் வரணும் டா. மைண்ட் யுவர் வோன் பிஸினஸ். ச்ச்சீ பொறுக்கி. த்தூ...”, கன்னத்தை பற்றிக்கொண்டு நின்றவனின் மற்றொரு கன்னத்தில் இன்னொரு அறை விட்டவள் வெளியே சென்றுவிட்டாள்.
விர்ஷாலி விட்ட அறையில் பொறி கலங்கிப் போய் நின்றான் யாழேந்திரன். அவளின் ஐவிரல் அச்சுரேகை அப்படியே அவன் கன்னத்தில் பதிந்திருந்தது.
“இங்க இதெல்லாம் சாதாரணமான வேர்ட்ஸ்தானே சே! யெஸ்? ஆர் நோ? சொன்னா முடிஞ்சு போச்சு எதுக்கு இவ்ளோ சீன் கிரியேட் பண்ணி பேசிட்டு போறா? நீ ஹார்ஷா பேசிருந்தாலும் சும்மா விட்டுருப்பேன்டி. ஆனா என்னைவே அடிச்சுட்ட இல்ல. என்னை தொட்ட உன்னை”, கன்னத்தை தடவியவன், “அவ்ளோ சீக்கிரம் சும்மா விடுவேனா முகில்? உன்னை கதற கதற காயப்படுத்தல நான் யாழேந்திர வர்மன் இல்லடி”, கன்னத்தை தடவிக் கொண்டவன், அடுத்த வேலை நோக்கி நகர்ந்தான்.
யாழேந்திரன் கேட்ட கேள்வி விர்ஷாலியின் பாஷை வழி கண்டிப்பாக தவறுதான். ஆனால் அவன் பழகி வாழ்ந்து வந்த இடங்களில் இது அத்தனையும் சர்வசாதாரணம்.
இதை மட்டுமே பெரிதாக நினைத்து தன்னை நிந்தித்து அவமானப்படுத்திவிட்டாளே என்ற கோபம் தான் அவனுக்கு.
ஆண் இனமே பிடிக்காதவளிடம் இப்படி ஒரு கேவலமான கேள்வியை கேட்டுவிட்டானே அவனை கொல்லாமல் விட்டுவிட்டோமே என்ற கோபம் அவளுக்கு.
இருவரின் கண்பார்வையில் இருவர் செய்ததுமே சரியென்றால் இங்கு தவறு யார்பக்கம்?...
இதயவாசல் தாழ் திறவும்...