எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இனம் புரியா தேடலில் நாம் - கதைத் திரி

Status
Not open for further replies.

NNK34

Moderator
1.இனம் புரியா தேடலில் நாம்!


தோய்ந்து, கிழிந்த நாராக படுத்துக் கிடந்த தன்னவளை காண்கையில் கண்களில் வழியும் நீர்த்திரை மறைக்க, அதை துடைத்துக் கொண்டவனுக்கே தனது கண்ணீர் ஆச்சரியத்தை கொடுத்தது என்றால் மிகையாகாது. நரம்பூசி செலுத்தப்பட்டிருக்கும் அவனவள் கரத்தை பிடித்து தடவிக் கொடுத்தபடி "நான் மட்டும் வரலைனா உ.. உனக்கு என்ன ஆகிருக்கும்? ஏன்டி என்ன தவிக்க வச்சுகிட்டு இருக்க?" என, கேட்கும் புலன் தற்காலிகமாக அணைக்கப்பட்டு மயக்கத்தில் இருந்தவளுடன் வாதமிட்டான்.

அணுவசைவையும் உன்னிப்பாக நோட்டமிடும் நண்பனின் செவிகள் மட்டுமன்றி ஐம்புலனும் செயலிழந்ததோ? என வியக்கும்படி, தான் வந்தது உணராது பிதற்றிக் கொண்டிருந்தவன் முன் வந்து அவனது கண்ணீரில் திடுக்கிட்டுப் போனான் வசீகரன். இதுநாள் வரை அஞ்சா நெஞ்சன், பயமறியாதவன், ஏன் கல்நெஞ்சன் எனவெல்லாம் பட்டம் பெற்ற நமது நண்பனா கலங்குவது?' என திடுக்கிட்ட வசி நண்பன் தோளில் கரம் வைத்து "அ.. ஆதி.." என்க கலங்கிய விழிகளுடன் "ம.. மச்சான்.. இவ எப்படா முழிப்பா?" எனக் கேட்டான் ஆதித்த கிருஷ்ணன். இல்லை இல்லை ஐ.பி.எஸ். ஆதித்த கிருஷ்ணன்.

"டேய்.. மதுவுக்கு ஒன்னுமில்லடா. நீ சரியான நேரத்துல கொண்டு வந்து சேத்துட்ட. நீ கொஞ்சம் தாமதம் பண்ணிருந்தாலும், நிலமை கவலையாகி இருக்கும். நவ் ஷி க்ராஸ்ட் தெ டேஞ்சர்" என வசீகரன் கூற கலக்கம் மாறாத முகத்துடன் "பித்து பிடிச்சவ போல போறாடா. நான் மட்டும் அங்க இல்லை.. நினைச்சு பார்க்கவே நடுங்குதுடா" என ஆதி கூறினான். நண்பனின் தோளை தட்டிக் கொடுத்த வசிக்கும் ஆதிக்கும் முந்தைய நாள் காலையின் நினைவுகள் வந்தன.

இரு நாளாக இனம் புரியாத பாரத்துடன் இருந்த ஆதியின் மனம் அன்று தாளம் தப்பித் துடித்துக் கொண்டிருந்தது. பெங்களூரு மாநகரத்தின் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் நின்றுக் கொண்டிருந்தது அந்த கருப்பு நிற இரும்புக் குதிரை. கரும் இருசக்கர வாகனம்! அதில் வெள்ளி நிறத்தில் 'ராயல் என்ட் ஃபீல்ட்' என பொறிக்கப்பட்டிருந்தது. அதில் ஒய்யாரமாக அமர்ந்து கருப்பு நிற குளிர் கண்ணாடியை அணிந்தபடி காக்கி உடைக்கே உரிய கம்பீரத்துடன் இருந்தான் ஆதித்த கிருஷ்ணன்.

காரணமற்று வாடியிருந்த முகத்துடன் இருந்தவன் தான் எனினும் முகத்தில் உள்ள கம்பீரத்துக்கும் பார்வையில் உள்ள கூர்மைக்கும் குறைவு இல்லை என தான் கூற வேண்டும். அப்படிபட்ட கூர்மையான விழிகளில், பச்சை குறி காட்டபட்டு நகரும் வேளை ஏதோ பித்து பிடித்தார் போல் எங்கோ வெறித்தபடியும் சாலை நெரிசலை உணராதபடியும் நடந்து வந்து கொண்டிருந்த அவனவள், மதுராந்தகி பட்டாள். ஆடவன் விழிகள் விரிந்து சுருங்கும் நொடிக்குள் அவள் வருகையை எதிர்பாராமல் வந்த டெம்போ அவளை இடித்திட, ஒரே சூழலற்சியில் அவனுக்கு சமீபமாக வந்து விழுந்தாள் ரத்த வெள்ளத்துடன்.

"மதுரா..!" என்றவனது கர்ஜனையில் அந்த மொத்த கூட்டமும் திகைத்து நின்றது என தான் கூற வேண்டும். சட்டென வண்டியை விட்டு இறங்கியவன் அவள் முகத்தை கையில் ஏந்த, ரத்தப் பிசுபிசுப்பு அவன் கையில் ஒட்டியது. "மதுரா.. மகி மா.." என அவள் கன்னம் தட்டியவன் சுற்றி முற்றி பார்க்க வேதனையிலும், உணர்வுகள் அற்று பொழுது போக்குக்கும் நின்றுக் கொண்டிருந்த பொது மக்களின் பார்வை கோபத்தை கிளப்பியது. ஒருவராவது அவசர எண்ணிற்கு அழைப்பரா என எதிர்பார்த்தவன் முன் போக்குவரத்து காவலர் ஓடி வந்தார்.

"நானு அவள மேலே குகிடே சார்.. ஆடரே உன்மடடண்டே நடேடலு. அவலன்னு நில்லிசுவு மொடலு எல்லவு சம்பவிசிட்டி. லெட்ஸ் டேக் ஹேர் டூ ஹாஸ்பிடல் (நான் இந்த பெண்ணிடம் கத்தினேன். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து வந்தாள். அவளை தடுக்கும் முன் அனைத்தும் நடந்துவிட்டன. இவளை உடனே மருத்துவமனை அழைத்துச் செல்வோம்)" என அந்த காவலர் கன்னடத்தில் கூறி துரிதப்படுத்த, அவளை தூக்கிக் கொண்டு ஒரு வண்டியை பிடித்து ஏறியவன், தன் வண்டி சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்து ஓரமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டான்.

'இவள் என்னவள் தானா?' என மீண்டும் மீண்டும் மனம் கேட்ட கேள்வியில் கண்கள் நம்பவேண்டிய உண்மையை 'ஆம்' என கண்ணீர் மூலம் கூறியது. தனது ஆருயிர் நண்பனான வசீகரனின் மருத்துவமனையில் வண்டி நிற்க அவளை கையில் தூக்கிக் கொண்டு "வசீ.." என்ற கர்ஜனையுடன் மருத்தவமனையை இடித்துத் தள்ளும் வேகத்துடன் வந்தான். நண்பனின் கோலம் கண்டு திடுக்கிட்ட வசி, அவன் கையில் கிடக்கும் மதுராந்தகியை கண்டு மேலும் அதிர, அவள் நிலை அவனை நிலைப்படுத்தியது. அவளுக்கான சிகிச்சைகளை துவங்கிய வசீகரன் "மச்சி.. நீ ஒன்னும் பயப்படாத மதுக்கு ஒன்னும் ஆகாது" என நம்பிக்கை கூறி சென்றான். இதோ இன்று சிகிச்சை நல்லபடி முடிந்து அவள் விழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

நெற்றியோரம் சற்று பலத்த அடி மற்றும் கை எலும்பு முறிந்ததால் (bone fracture) ஓஆர்ஐஎஃப் (ORFI) எனப்படும் உடைந்த எழும்பை சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. காலில் நரம்பு பிசகிய வீக்கமும், சில காயங்களும் என படுத்துக் கிடப்பவளை பார்க்க பார்க்க இருவருக்கும் பாவமாக இருந்தது. "மச்சி.. பழசெல்லாம் மறந்திருப்பாளா?" என பயத்துடன் கேட்ட ஆதியை பார்த்து "இல்ல மச்சி.. மறக்குறதுக்கு வாய்ப்பில்ல" என்றவன் "ஞாபகம் இருந்தா மட்டும் உன்ன அவளுக்கு தெரியவா போகுது?" என கேட்டான். அதில் நண்பனை முறைத்தவன் "அவளுக்கு என்ன பிரச்சனைனு தெரிய வேண்டாமா?" என கேட்க "டேய் கூல்டா.. சும்மா நீ இதுக்காவது சிரிப்பியானு சொன்னேன். பாரு, மதுவுக்கு ஒன்னும் இல்லை. நீ வீணா எதையும் யோசிக்காத. முதல்ல வீட்டுக்கு போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா" என வசி கூறினான்.

அவனவளை பிரிய மனமில்லாத போதும், நீரடியில் நின்று தன் வெப்பம் தீர்க்க ஆசை கொண்டவன் சிறு தலையசைப்புடன் புறப்பட்டான். பெங்களூரின் மிக பிரசித்தி பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வரும் ஆதித்யன் மற்றும் யசோதாவின் ஒற்றை வாரிசே நமது நாயகன் ஆதித்த கிருஷ்ணன். ஆதித்யன் மற்றும் யசோவின் தொழில் மற்றும் ஆதித்தியனின் சிறுவயது நண்பரான கதிர்வேலன் மற்றும் அவர் மனைவி கல்யாணியின், ஒன்று போல இருக்கும் இரட்டை பிள்ளைகளே வசீகரன் மற்றும் வம்சீகரன்.

தந்தையை போல் அடுத்த தலைமுறையினரும் அதே நட்பு கொண்டு வளர்கின்றனர். நட்புக்காக தங்களையும் இழக்காது, தங்கள் ஆசைக்காக நட்பையும் இழக்காத தோழர்கள் மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். ஆதித்தன் தனது பாதையை காவலனாக தொடர, வசி அறுவை சிகிச்சை நிபுனராகவும், வம்சி நுண்ணுயிரியலில் பட்டப் படிப்பாளனாகவும் தொடர்கின்றனர். மூவருமே இருபத்தி ஆறு வயதுடைய கட்டிளம் காளைகள். நமது நாயகியோ இருபது வயது பதுமைப் பெண்.

இங்கு வீடு வந்த மகனைக் கண்ட யசோதா "கண்ணா! என்ன ரெண்டு நாளா ஆளயே காணும்?" என கேட்க சிவந்த கண்களும் இறுகிய முகமுமாக நிமிர்ந்தான். "தம்பி! என்னாச்சுப்பா?" என தாயவள் பதற சமையலறையிலிருந்து ஆதித்யன் வந்தார். "யசோ.." என மனைவியை அழைத்தவர் பார்த்த பார்வை என்ன கூறியதோ? மகனிடம் திரும்பி "போய் குளிச்சுட்டு வாடா கண்ணா" என்றார். உள்ளே சென்றவன் நீருக்கடியில் மன உஷ்ணம் தீர்க்க வேண்டி கண்களை இறுக மூடி நிற்க, கண்ணுக்குள் வந்து சிரித்தாள் அவனவள்.

அங்கு யசோதா "ஏங்க என்னாச்சு? ஏன் இவன் ஒரு மாதிரி இருக்கான்" என கேட்க ஒரு பெருமூச்சு விட்டு "எ..ஏதோ கேஸ் விஷயம்" என்றவர் "மதுராந்தகிய உனக்கு ஞாபகம் இருக்கா யசோமா?" என கேட்டார். பளிச்சென்ற புன்னகையுடன் "ஏன் இல்ல? நல்ல துருதுருனு சுத்திட்டு இருப்பாளே! அவள மறப்பேனா?" என யசோ கூற "அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு யசோமா. நம்ம வசி ஹாஸ்பிடல்ல தான் சேத்திருக்கான். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. ஆனா மது இன்னும் கண்ணு முழிக்கலை" என ஈன ஸ்வரத்தில் கூறினார்.

அதில் திடுக்கிட்டு போனவர் "அச்சச்சோ! என்னங்க சொல்றீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கூறி "அதானே.. இந்த மூணு வானரங்களும் உங்க கிட்டயும் கதிரண்ணா கிட்டயும் மட்டும் எல்லாத்தயும் ஒப்பிப்பானுங்க. என்கிட்டயும் கல்யாணி கிட்டயும் ஒன்னும் சொல்றது இல்ல. சரி இப்போ அந்த பொண்ணுக்கு ஒன்னுமில்ல தானே?" என்க "ஒன்னுமில்ல தான்.. ஆனா இன்னும் கண்ணு முழிக்கலை" என மனைவி பொறிந்ததை எல்லாம் கேளாதவர் போல் கடைசியாக கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறினார்.
"சரிங்க.. கண்ணு முழிச்சா சொல்லுங்க, போய் பாத்துட்டு வருவோம்" என கூற "ம்ம் டா" என்றார்.


நீரே அவன் உஷ்ணம் தணிக்க முடியாமல் அலுத்துப் போன பின்பே குளியலறை விட்டு வந்தான். வேட்டியும் டி-ஷர்ட்டும் அணிந்துக் கொண்டு தலையை துவட்டியபடி வந்தவனுக்கு உணவுடன் வந்த யசோ "ஒன்னும் ஆகாதுடா கண்ணா. அதான் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதுல்ல? அந்த பொண்ணு சீக்கரம் கண்ணு திறந்திடும். உன் கேசும் நல்லபடியா முடியும். சாப்பிடு" என வெள்ளந்தியாக கூறினார். வருத்தம் மிகுந்த புன்னகை புரிந்தவன் அன்னைக்காக உணவை உன்ன "டேய் மச்சி!" என்றபடி வம்சி வந்தான்.

"வாங்க மைக்ரோபயாலஜிஸ்ட்.." என கையில் வெள்ளை அங்கி மற்றும் சில புத்தகங்களுடன் வந்தவன் கோலம் கண்டு அவனை அடையாளம் கண்டு கொண்ட ஆதித்யன் கூறினார். அவரை கண்டு திடுகிட்டவன் "ஆதிப்பா.. நீங்க எப்போ வந்தீங்க?" என கேட்க "நான் வந்து ரெண்டு நாள் ஆகுதுடா. உன்ன தான் ஆள காணும்" என கூறினார். ஆதித்யன் மற்றும் கதிர்வேலின் குடும்பம் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி வருகின்றனர். இப்போது இவர்கள் இருக்கும் வீடோ ஆடவர்கள் மூவரின் பணி நிமித்தம் வேண்டிய வசதிகள் கொண்டு மூவரும் அமைத்துக் கொண்ட வீடு. தாங்கள் இருக்கும் வீட்டிலேயே என்றால், பெற்றோருக்கு எதும் ஆபத்து வரும் வாய்ப்பும், வேலை விடயங்களில் தனிமை இல்லாத உணர்வும் இருக்கும் என உணர்ந்த மூவரும் தங்களுக்குள் தனிமை அவசியம் இல்லை என தங்கள் வீட்டிற்கு சற்றே தொலைவில் உள்ள இந்த வீட்டை அமைத்துக் கொண்டனர். சுருக்காக சொல்லப் போனால், பணிக்கென்று அமைத்துக் கொள்ளப்பட்ட வீடு.

ஆதித்யன் கூறியதில் புன்னகைத்துக் கொண்டவன் வாசம் பிடிப்பது போல் பாவனை செய்து "ஆஹா.. ஆதிப்பா, உங்க சமையலோ?" என கேட்க வாய்விட்டு சிரித்தவர் "இரு வரேன்" என செல்ல, அவனுக்கு நீர் கொண்டு வர யசோதாவும் சென்றார். அமைதியாக இவர்கள் சம்பாஷணைகளை பெயருக்கு காதில் வாங்கிக் கொண்டிருந்த ஆதித்தனின் அருகில் அமர்ந்த வம்சி கிசுகிசுப்பான குரலில் "மச்சி! வசி ஃபோன் பண்ணிருந்தான். உள்ள லேப்ல இருந்ததால எடுக்க முடியலை. இப்போ தான் பாத்து கூப்பிட்டேன், அ.. அவன் சொல்றதுலாம் உண்மையா? என்னாச்சு? எங்க ஆக்சிடென்ட்?" என கேட்டான். நண்பனை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையே 'ஆம்' என்பது போல் இருக்க விபத்து நடந்த இடத்தை கூறிவிட்டு மீண்டும் தலையை அவன் குனிந்துக் கொள்ளவும் பெற்றோர் இருவரும் வெளி வரவும் சரியாக இருந்தது.

'ஷப்பா.. உஷாரு தான்டா நீ' என எண்ணிய வம்சி ஆதித்யனிடமிருந்து உணவை வாங்க "சரிடா.. நாங்க கிளம்பறோம்" என ஆதித்யன் கூறினார். ஆடவர்கள் இருவரும் 'சரி' என்பதுபோல் தலையசைக்க "ஆதி! அந்த பொண்ணு கண்ணு முழிச்சா சொல்லுடா. அம்மா பாக்க வரேன்" என யசோதா கூறிச் சென்றார்.

இருவரும் சென்றதும் "மச்சி! என்னடா இது? நம்ம லாஸ்ட்டா மதுவ ஒருவாரம் முன்ன கூட பாத்தோமேடா? நல்லா துருதுருனு சந்தோஷமா தானே இருந்தா? சரி திவி எங்க? ரெண்டு நாளாச்சு, இன்னுமா திவி இவள தேடலை?" என வம்சி கேள்விகளை அடுக்க "எனக்கும் அதான் இன்னும் புரியலை மச்சி. நகமும் சதையுமா தானே ரெண்டும் சுத்துங்க? இவ அட்மிட் ஆகி ரெண்டு நாளாச்சு, ஆனா அவள ஆளயே காணும். என்னமோ நடந்திருக்கு. மதுரா கண்ணுமுழிச்சா தான் தெரியும்" என ஆதி கூறினான்.

ஒரு பெருமூச்சை விட்ட ஆதி "சரி உன் ரிசர்ச் (ஆய்வு) எப்டி போகுது? எப்போ சார் பட்டம் வாங்குவீங்க?" என கேட்க "ம்ம்.. முடிஞ்சது மச்சி. அந்த லேப் டீன் பிரசாத் சாரே என்ன பி.எச்.டி முடிச்சதும் அங்க ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டார்" என கூறினான். "சூப்பர்டா.. ஆனாலும் அவருக்கு உன் மேல தனி பிரியம் தான். முதல்ல கிடைக்கும் இடத்துல சேரு. அப்டியே பிக்கப் ஆகிக்கலாம்" என ஆதி கூற "நல்லா தின்னுங்கடா. ஒருத்தன் பசில இருப்பான் அவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வந்து சாப்பிடுவோம்னு கொஞ்சமாவது இரக்கம் இருக்கா? அதுசரி.. உங்க கிட்ட அதுலாம் எதிர்பாக்க முடியுமா? மிச்சம் மீதி எதும் இருக்கா இல்லையா?" என கேட்டபடி உள்ளே வந்தான், வசீகரன்.

அதில் சிரித்த இருவரில் "நீ ஒருத்தன் இருக்குறதையே மறந்துட்டோம்டா. மிச்சம் இருக்குனு தான் நினைக்கேன்" என்றபடி உள்ளே சென்ற வம்சி "டேய் உடன்பிறப்பு! இருக்குடா. நல்லவேலை வந்த, இல்ல மிச்சம் மீது எதுக்குனு நம்ம திவாக்கு போட்டிருப்போம்" என கத்தினான். அதில் அத்தனை நேரம் வெளியே படுத்திருந்த அவர்களின் திவா உள்ளே துள்ளிக் கொண்டு வர உடன்பிறந்தவனையும் நண்பனையும் முறைத்துக் கொண்டிருந்தவன் அந்த நன்றியுள்ள பிராணியும் இவர்களது வளர்ப்பு நாயுமான திவாவை பார்த்து "வாடா வா! ஏதோ மிச்சம் மீதி தான் இருக்காம். எனக்கு பசிக்குது சொல்லிட்டேன். பங்குக்கு வந்த மவனே கொண்டுபோய் ப்ளூ க்ராஸ்ல கொடுத்துட்டு வந்திடுவேன் உன்ன" என வசி கூறினான்.

அதில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட திவாகரன் (ஆதித்தன்லருந்து இரண்டாம் எழுத்து 'தி', வசியோட முதல் எழுத்து 'வ' , வம்சீகரனோட கடைசி எழுத்துக்களான 'கரன்' சேர்த்து மூணு பேரும் ஆசையாய் வளர்க்கும் நாய்) ஈன ஸ்வரத்தில் சத்தம் எழுப்ப, அந்த புசுபுசு பழுப்பு நிற (brown) நாயை தூக்கிக் கொண்ட ஆதி அதன் தலையை கோதியபடி "டேய் பாவம்டா" என கூறி "நீ வாடா செல்லம்.. இவன் கிடக்கான். மச்சி! இந்த நாய்க்கு சோறில்லைனாலும் பரவாயில்லை திவாக்கு எடுத்து வை" என கத்தினான். அதில் விரக்தியாக சிரிப்பது போல பாவனை செய்தவன் "உண்மையான மனுஷன நாய்னு சொல்லி தொறத்துரானுங்க, நாய்க்கு மனுஷன் பேர வச்சு மரியாதையா நடத்துறானுங்க. வர வர இந்த நாய்க்கு கிடைக்குற மரியாதை கூட நமக்கு இல்ல" என கூறிக் கொண்டதில் யாவரும் சிரித்தனர்.

பொழுது ஓடிட, மாலை நேரம் ஆடவர்கள் மூவரும் மருத்துவமனை வந்தனர். வசீகரனிடம் படபடப்புடன் வந்த செவிலி "டாக்டர், ரெண்டு நாள் முன்ன அட்மிட் பண்ண அந்த பொண்ணு கண்ணு முழிச்சு பயங்கரமா கத்திட்டு இருக்காங்க" என கூற "வாட்?" என்று மூவரும் பதறிக் கொண்டு வந்தனர். நால்வரும் உள்ளே நுழைய கட்டிலின் ஓரம் மிரண்டு சுருண்டு அமர்ந்திருந்த பெண் "ஆ.. ஆ.. வெ.. வேணாம்.." என கத்த உள்ளிருந்த செவிலியோ "ஒன்னுமில்லம்மா, இங்க பாரு" என அவளை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

"சிஸ்டர்! என்னாச்சு?" என வசி கேட்க "ட்ரிப்ஸ் மாத்த வந்தேன் டாக்டர். இவங்க கண்ணு முழிச்சாங்க. உடம்பு எப்டி இருக்குனு விசாரிச்சேன், பதறி போய் எல்லாதயும் தட்டிவிட்டு கத்த ஆரம்பிச்சுட்டாங்க" என கூறினார். "சரி சீக்ரம் **** இன்ஜெக்ஷன் எடுத்துட்டு வாங்க" என கூறியவன் மதுவை நெருங்கி "மது! காம் டவுன். ஒன்னுமில்லடா. நான் தான்டா வசீ அண்ணா.." என்றபடி கூற அவனை கண்டு மருண்டவள் "ஆ.. வேணாம்.. வராத.." என கத்தினாள்.

இனி சரிப்பட்டு வராது என உணர்ந்த வசி "வம்சி, ஆதி கொஞ்சம் இவள புடிங்கடா" என்க ஆதி சிலை போல நின்றிருந்தான். அதை கண்டவன் ஊசியுடன் வந்த செவிலியை ஒருபுறமும் வம்சியை ஒருபுறமுமாக பிடித்துக் கொள்ளும்படி கூறி அந்த மயக்க ஊசியை அவளுக்கு செலுத்த, கத்தி கதறியப் பெண் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கி ஓய்ந்தாள்.

-தேடல் தொடரும்..

உங்கள் பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் தங்கம்ஸ் 🥰👇
 
Last edited:

NNK34

Moderator
2. இனம் புரியா தேடலில் நாம்!


அமைதியாக உறங்கிக் கொண்டு தான் இருந்தாள், மதுராந்தகி. ஆனால் அவளது மனமோ அமைதியற்று தவிக்கும் நிலையில் இருக்கின்றது என அவளவனால் புரிந்துக் கொள்ளமுடிந்தது. 'ஏதோ ஒன்னு நடந்திருக்கு. இவ எதுக்கு இவ்வளவு பதறுரா? ஒ.. ஒருவேல இவள யாராதும்? ச்ச! அ.. அப்டிலாம் இருக்காது, இருக்கவும் கூடாது' என சிந்தனையில் அவளையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

இரவு முழுதும் உறக்கம் தொலைத்து காலை வேலையில் சென்று புத்துணர்வு பெற்று வந்த ஆதித்தனின் மனவோட்டமே இவை.. "டேய் நீ தூங்களையா?" என கேட்டபடி வசி வர, அவனை நிமிர்ந்து பார்த்தவனது சிவந்த கண்களே பதில் கூறியது.

பாவையிடம் மெல்லிய அசைவுகள் தென்பட, "தி‌ திவி‌ அ அவ‌ அ ஆ வேணாம் விடு" போன்ற வார்த்தைகளை உலறிக்கொண்டிருந்த பெண், கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து கண்விழிக்க, அவள் முன் ஆஜானுபாகுவாக இருவரும் இருந்தனர். அதில் மிரண்டுபோனப் பெண் பதறி எழ, முறிவேற்பட்ட கரம் சுல்லென்ற வலியை தந்தது. அதில் "ஆ!" என அவள் கத்த அவளிடம் வந்த வசீகரன் "மதுமா! கைய ஆட்டாத" என்க அவனை மருண்ட பார்வை பார்த்தாள்.

பெயருக்கேற்றார் போல் வசீகரனானவன் தனது வசீகரப் புன்னகையை வீசி, "ஒன்னுமில்லடா" என்க சுற்றி முற்றி பார்த்தாள். பயந்த குரலில் "நி நீங்க யாரு? நா இங்க எப்டி?" என அவள் கேட்க "நா வசிடா" என்றான். அவனை பாவமாக பார்த்தவளை பார்த்து சிரித்தவன் "ஒன்னுமில்லடா. உனக்கு என்ன ஞாபகம் இருக்க வாய்ப்பில்லைனு எனக்கு தெரியும். சரி இப்போ எப்டி இருக்கு?" என கேட்க பழய நினைவுகள் கண் முன் வந்து போயின.

அதில் பயந்து போனவள் கண்கள் கலங்கி உடல் நடுங்கத் துவங்கிட, "மது! மதுமா! ஒன்னுமில்ல குட்டிமா" என வசீகரன் கூற பெருங்குரலெடுத்து அழத் துவங்கிட்டாள். சட்டென அவள் தோள் பற்றிய ஆதி "மதுரா! இங்க பாருடி. ஒன்னுமில்ல" என கூற கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

இனம் புரியாத நம்பிக்கை அவளுள் எழுந்தது! இருப்பினும் கலங்கி வழியும் கண்ணீருடன் "எனக்கு வாழவே பிடிக்கலை. என்ன விடுங்க." என்றாள். "என்ன ஆச்சு மதுரா?" என தனிவான குரலில் ஆதி கேட்க, அதில் மேலும் வெடித்து அழுதாளே அன்றி எதுவும் பேசவில்லை. ஆதியின் தோள் தொட்ட வசி "இப்ப எதுவும் கேட்க வேண்டாம் மச்சி" என கூறி "மதுமா, ரிலாக்ஸ். ஒன்னுமில்லைடா. இங்க பாரு மது" என அவளை நிலைபடுத்த முயற்சித்தான்.

சிறுக சிறுக அவள் அழுகை நிற்க, அவளை ஆசுவாசப் படுத்திச் சென்றனர். "மச்சி! மது ஏதோ ஒரு விஷயத்தால பாதிக்கப் பட்டிருக்கா. அது என்னனு இப்ப நாம தெரிஞ்சுக்க முயலாம இருக்குறது தான் அவளுக்கு நல்லது. இப்ப தான் ஆபரேஷன் முடிஞ்சுருக்கு. இப்ப அவளை ரொம்ப குடைஞ்சா அப்றம் அது வேற விதத்துல பிரச்சனையா முடிஞ்சுடும்" என வசி கூற ஆதி 'சரி' என்பது போல் தலையசைத்தான்.
அப்படியே ஐந்து நாட்கள் ஓடியது. அவளது மருத்துவமனை வாசமும் முடிவுக்கு வந்திருந்தது.


காக்கி உடையில் மிடுக்காக வந்த ஆதித்தன் "வசி! மதுவ காணும்னு இப்ப வரை எந்த கம்ப்ளைண்ட்டும் வரலை. அவ திவி பத்தி எதும் சொன்னாலா?" என கேட்க "இல்ல ஆதி. அத பத்தி தான் பேச போறேன். நீயும் வா" என்றபடி வசி அவள் இருக்கும் அறை சென்றான்.

ஏதோ யோசனையில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்த பாவையின் உடல், கதவு திறக்கப் பட்ட சத்தத்தில் திடுக்கிட்டு உயிர் பெற்றது. இருவரையும் மருண்ட பார்வை பார்த்தவள் கண்கள் வசீகரனுக்கு பின்னே, காவலர் உடையில் வந்த ஆதியின் உடையில் நிலைத்து நின்றது.

அவள் பார்வையின் போக்கை உணர்ந்த ஆதிக்கு புன்னகை உதயமாக "என்ன மச்சி? உன் ஆளு உன்ன வெறிக்க வெறிக்க பாக்குறா?" என அவன் காதை வசி கடித்தான். அதில் நண்பனை கண்டு சிரித்தவன் கண்ணடிக்க "ம்ம்.. நடத்து நடத்து" என்றவன் "மது" என அழைத்தான்.

அதில் திடுக்கிட்டு தன் பார்வையை தாழ்த்திக் கொண்டவளுக்கு அவனை வெறித்து பார்த்தது வெட்கத்தை கிளப்பியது. "மது! நவ் யு ஆர் கம்ப்ளீட்லி ஆல்ரைட். கைல ஃப்ராக்சர் குணமாக ஒரு ஒரு மாசம் மேல ஆகும். அதனால இந்த கட்டு இருக்கட்டும். நான் எழுதி கொடுக்கும் மருந்துகல சரியான நேரத்துக்கு எடுத்துக்கோ. ஒரு ரெண்டு வாரம் கழிச்சு செக்கப் வா. இப்போ உன் வீட்டு நம்பர் சொல்லு" என வசீகரன் கூற கண்களில் குளம் கட்ட "ந.. நான் அநாதை. எ.. எனக்கு யாருமே இல்ல" என பாவம் போல் கூறினாள்.

கூறும்போது அவள் எவ்வளவு துடித்தாளோ? ஆனால் ஆடவன் அவளை விட ஆயிரம் மடங்கு துடித்துப் போனான். "உனக்கு அம்மா அப்பாலாம் கிடையாதுனு தெரியும்டா. திவி நம்பர் சொல்லு" என வசி கூற 'இவருக்கு நம்மை பற்றி அனைத்தும் தெரிந்துள்ளது, ஆனால் நமக்கு இவரை நினைவே இல்லையே. ஒருவேளை பழையவற்றை மறந்துவிட்டோமோ?' என தோன்றியது, அவளுக்கு.

"ந நா பழசெல்லாம் மறந்துட்டேனா?" என அவள் கேட்க சிரித்தபடி "இல்ல இல்லடா. உனக்கு எங்களை தெரியாது. ஆனா எங்களுக்.." என கூறவந்தவன் 'அது நண்பன் விளக்கிக் கொள்ளட்டும்' என எண்ணி "சரி அத விடு. திவி நம்பர் குடுடா, அவள வர சொல்ரோம்" என கூறினான். அதில் பாவை கண்கள் கண்ணீர் மழை பொழிய, தானே நம்பாத அந்த செய்தியை, நடந்த நிகழ்வின் பயத்தினால், தன் வாயாலேயே கூறினாள்.

"தி திவி" என வெடித்து அழுதவள் "திவி இல்ல" என கூற ஆடவர்கள் இருவரும் திடுக்கிட்டு போயினர். "இல்லைனா? என்னடி சொல்ற?" என ஆதித்தன் கேட்க மேலும் வெடித்து அலறியவள் "ஆ திவி செத்து போய்ட்டா.. போதுமா? என்ன விடுங்க. எனக்கு யாரும் இல்ல. நா ஒரு அநாதை" என கத்தினாள்.

ஆடவர்களால் அந்த அதிர்ச்சியிலிருந்து விலக முடியவில்லை. "மதுரா என்னடி சொல்ற? எப்போ? எங்க? என்ன ஆச்சு?" என ஆதி உரிமையுடன் அவள் தோள் பற்றி வினவ "ஆ.. என்ன எதுவும் கேக்காதீங்க. திவி செத்துட்டா செத்துட்டா செத்துட்டா!" என கத்திவிட்டு பாவை மயங்கி சரிந்தாள்.

ஆடவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொண்டனர். ஒன்றும் புரியாத நிலையில் தள்ளப்பட்ட போன்ற உணர்வு. "மச்சி திவி விஷயம்.." என வசி இழுக்க "இப்போதிக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம்" என ஆதித்தன் கூறினான். அப்படியே சில வினாடிகள் ஓட "மச்சி! இப்போ மதுவ என்ன பண்ண?" என வசி கேட்டான். சற்றும் யோசிக்காமல் "நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்" என ஆதி கூற, அதில் அதிர்ந்து போனவன் "நம்ம வீடுனா? எந்த வீட்ட சொல்ற?" என கேட்டான்.

"இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம். முதல்ல வா, வீட்டுக்கு போவோம்" என கூறிய ஆதி "எனக்கு வேலை இருக்கு மச்சி. இன்னிக்கி ஒரு நாள் மட்டும் மதுரா இங்க இருக்கட்டும். சாயிங்காலம் வீட்டுக்கு வா, பேசுவோம்" என கூறி சென்றான்.

தனது கருப்பு நிற இரும்புக் குதிரையை சீறிக் கிளப்பியவன் ஸ்டேஷன் சென்றான். அவன் வண்டியின் சத்தத்திலேயே இரண்டு நாளாக அவன் இல்லாத திமிரில் காவலர்களை வம்பிழுத்துக் கொண்டிருந்த கைதிகள் எல்லாம் பம்பி அமர்ந்தனர். வண்டியிலிருந்து இறங்கியவன் இரண்டே எட்டில் உள்ளே பாய்ந்து வந்தான்.

வந்தவன் "கோவிந்தண்ணா.." என கம்பீரமான தோரணையில் அழைக்க அங்கு பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த அந்த முன் ஐம்பது வயது காவலர் "தம்பி" என்றபடி அவன் முன் வந்தார். "அண்ணே.. நான் சொல்ற ஏரியாஸ்ல ஒரு, ஒரு வாரம் குள்ள நா சொல்ற பேர்ல உள்ள இருபது வயசு பொண்ணுக்கு ஆக்சிடென்ட் எதும் ஆகிருக்கானு சீக்கிரம் விசாரிச்சு சொல்லுங்க" என கூறியபடி சென்றவன் தான் இரண்டு நாளாக இல்லாதபோது விட்டுப்போன வேலைகளை கவனிக்கலானான்.

கமிஷ்னரிடம் ஒப்படைக்கவேண்டிய கோப்புகள் ஏதேனும் இருக்கின்றதா என பார்த்தவன் எதுவும் இல்லை என்பதை உருதிபடுத்திக் கொண்டான்.

ஆடவன் மனம் ஏதோ ஒரு பெரிய சிக்கலான வழக்கு தன் கை வரப்போவதை உணர்த்தியது. அதே எண்ணத்துடன் மாலை நேரம் ஆடவன் தன் வீட்டை அடைய அவன் எதிர்பார்ப்பை போல் அங்கு வசீகரன் மட்டுமே இருந்தான். நண்பனின் வியூகங்கள் ஓரளவு வசீகரன் கணித்து தான் இருந்தான்.

"மச்சி" என வசி அழைக்க "மச்சி மதுராவ இங்க தான் கூட்டிட்டு வரப் போறோம். அவ இங்க இருக்குறது நம்ம மூணு பேர தவிர யாருக்கும் தெரியக் கூடாது" என ஆதித்தன் கூறினான். "அதெப்படிடா? அப்பா அம்மாலாம் அடிக்கடி இங்க வராங்க. அவங்கள என்ன பண்ண?" என வசீ கேட்க "அத நான் பாத்துக்குறேன். எனக்கென்னமோ திவி விஷயத்துல ஏதோ பெரிய குழப்பம் இருக்கோனு தோணுது. மதுராக்கு ஏதோ ஆபத்து இருக்கோனு தோணுது. மதுரா நம்ம பாதுகாப்புல இருக்குறது தான் நல்லது" என ஆதித்தன் கூறினான்.

"டேய் அப்ப நீ அவள அந்த வீட்ல இருக்க வைக்குறது தானே பாதுகாப்பு? இங்க ஏற்கனவே உன் கேஸ் ஃபைல்ஸ், அவனோட ரெகார்ட்ஸ், என்னோட ஃபைல்ஸ்லாம் இருக்கு. இத எடுக்கனு யாரும் வந்தா மதுக்கு பாதுகாப்பில்லைலடா?" என வசி கேட்க "இப்படி தானே மதுராவுக்கு தொல்லை குடுக்குரவனும் நினைப்பான்" என ஆதித்தன் கூறினான்.

"மதுக்கு யாரோ தொல்லை குடுக்குறாங்கனு எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?" என வசி கேட்க "அது தெரியலை. ஆனா எனக்கு தோணுது" என்றான்.

அப்போதே அங்கு வம்சி வர, வசி ஆதியின் திட்டத்தினை கூறினான் (திவியின் இறப்பை தவிர). "டேய் லூசுகலா. திவி இவள எங்கலாம் தேடி அழையுறாளோ? அவளுக்கு சொல்றத விட்டுட்டு ஏன்டா இங்க கூட்டிட்டு வரத பத்தி பேசுறீங்க?" என வம்சி கேட்க "திவி ஊர்லயே இல்ல மச்சி. சிற்பி கூட இருக்கா" என வாய் கூசாமல் நம்பும் படியாக நண்பன் பொய்யுரைப்பதை கண்டு திகைக்காமல் இருக்க வசி வெகுவாக போராடினான்.

"ஓ!" என்ற நண்பனின் கண்களில் வந்து போன மின்னலை கண்ட இருவருக்கும் மனம் கணத்து போனது. 'அவன் காதலி இந்த உலகிலேயே இல்லை என்பதை அவனிடம் எப்படி கூறுவது? அது அவனை எந்தளவு பாதிக்குமோ? அதை அவன் எப்படி எடுப்பானோ? கடினபட்டு படித்து முடிக்கும் தருவாய்க்கு வந்து விட்டான்.

இதை கேட்டு மனமுடைந்து முடங்கி விட்டால்?' என வசிக்கும் ஆதிக்கும் மனதில் பல சிந்தனைகள்.

வசி, வம்சி இருவருக்குமே மருத்துவம் பயில வேண்டும் என தான் ஆசை. வசிக்கு மருத்துவம் பயில கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் வம்சிக்கு கிட்டவில்லை. பணம் கொடுத்து வாங்கியிருக்கலாம் தான். ஆனால் வம்சி அதை துளியும் விரும்பவில்லை. 'நன்கு படித்து நல்ல மதிப்பெண்ணுடனும் கனவுகளுடனும் வரும் ஏதோ ஒரு மாணவனின் இடத்தை பணத்தால் ஆக்கிரமிக்க விருப்பமில்லை' என கூறினான்.

ஆனால் விதைத்து வேரூன்றி வளர்ந்திருந்த அவனது மருத்துவக் கனவு அவனது உயிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. அப்போது தான் 'நுண்ணுயிரியல் (MICROBIOLOGY)' பற்றி வசீகரன் கூறினான்.

"டேய் எல்லாரும் வெளிப்படையா வேலை பார்க்கும் மருத்துவரை போற்றுறாங்க. அது நியாயம் தான். ஆனா அந்த மருத்துவர்களுக்கு அவங்க வேலைய தடையில்லாம பண்ண மருந்துகள் இருக்கணும் தானே? ஒரு காலத்துல சின்னம்மை எவ்வளவு கொடுமையான நோயா இருந்தது? ஆனா எட்வர்ட் ஜென்னர் அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போய் தானே இன்னிக்கி அதுலாம் நம்ம கட்டுக்குள்ள இருக்கு. ராபர்ட் கோச் இல்லைனா இன்னிக்கு ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு வகை உயிரிகள் (disease causing microbes) காரணம்னு தெரிஞ்சிருக்குமா? லூயிஸ் பாஸ்டியர் இல்லைனா வெறிநாயோட தாக்கத்தை கட்டுபடுத்த முடிஞ்சிருக்குமா? இல்ல தடுப்பூசினு ஒன்னு தான் இருந்திருக்குமா? மைக்ரோபயாலஜிஸ்ட்ஸ் அண்ட் பார்மசிஸ்ட்ஸ் (நுண்ணுயிரியலாளர் மற்றும் மருந்தாளர்) கண்டுபிடிக்கும் மருந்தால தான் மருத்துவர்களுக்கே வேலை. எங்க வேலையால எங்க உயிருக்கு பாதகம் இல்லை, ஆனா ஒரு நோயோட வேலை பார்த்து மருந்து கண்டுபிடிப்பது சும்மாவா? சேவை செய்ய பல வழி இருக்குடா. மருத்துவரா தான் செய்யணும்னு இல்லை" என வசி கூறியதால் தான் இன்று வம்சி இந்த துறையில் முழூ மூச்சாக இறங்கியுள்ளான்.

அதை மீண்டும் உடைக்க ஆடவர்கள் இருவரும் விரும்பவில்லை. தனக்கு பிடித்தவை எல்லாம் தன் கையைவிட்டு போகிறதே என அவன் விரக்தியடைந்திட கூடாது என இருவருக்கும் எண்ணம்.

"சரிடா.‌ மது இங்க இருக்க ஒத்துப்பாளா? என்ன தான் இருந்தாலும், ஒரு பொண்ணுக்கு மூணு பசங்க இருக்குற வீட்ல தனியா இருக்க தோணுமா? தெரிஞ்சவங்களா இருந்தாலே யோசிப்பாங்க. அவளுக்கு நம்மல தெரியவும் தெரியாது. அப்பறம் எப்படி ஒத்துப்பா?" என வம்சி கேட்க "அதுலாம் நான் பாத்துகுரேன்" என ஆதித்தன் கூறினான்.

அன்று இரவு ஆடவர்கள் மூவரும் மருத்துவமை வந்திருந்தனர். மூவரின் பெற்றோரும் வந்தனர். "ம்மா, ப்பா விபத்து நடந்த அதிர்ச்சில அவ ரொம்ப பயந்து போகிருக்கா. அதனால அவகிட்ட பழச எதுவும் பேச வேண்டாம்" என வசீகரன் கூறியதற்கு தலையை ஆட்டிவிட்டு யாவரும் உள்ளே சென்றனர்.

எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த பாவை, கதவை திறந்துக் கொண்டு வந்த கூட்டத்தை கண்டு திடுக்கிட்டு போனாள். பார்த்தவர்களுக்கு அவளது நிலை பாவமாக இருந்தது. "ய யாரு? எ என்ன வேணும் உங்களுக்கு?" என அவள் பதற, பரிவுடன் அவள் தலைகோதிய யசோதா "ஒன்னுமில்லடா" என கூறினார்.

தாய்வாசம் கண்டிடாத பெண்ணுக்கோ அவரின் பரிவு கண்களை கலங்கச் செய்தது. அது ஏதேதோ நினைவுகளையும் சேர்த்தே கொடுக்க அவள் உடல் மேலும் நடுங்கியது. அவளுக்கு மற்றய புறம் "மது உனக்கு ஒன்னுமில்லைடா. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு" என கல்யாணி அன்புடன் கூறினார்.

'யார் என்றே தெரியாதவர்கள் தன் மீது எதற்கு இத்தனை பாசம் காட்டுகின்றனர்? நமது கடந்த காலத்தில் எதும் பகுதிகளை மறந்துவிட்டோமா?' என அவள் மனம் குழம்ப "சின்ன புள்ளைல பாத்தது. அதான் பாவம் நம்மல பாத்து திருதிருனு முழிக்குறா" என அவள் மனக் குழப்பத்திற்கு பதில் கூறவது போல் கல்யாணி கூறினார். பின் ஆதித்யனும் கதிரும் அவள் உடல் நலன்களை விசாரித்து, அறிவுரைகள் கூறி தத்தமது மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

அவர்கள் புறப்பட, நமது நாயகன் ஒரு சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். அவனை புரியாமல் பார்த்த பெண்ணின் கண்களில் இன்னமும் அதே மருட்சி. "போலாமா?" என அவன் கேட்க "எ.. எங்க?" என கேட்டாள். "உனக்கு எங்க போகணும்?" என அவன் கேட்க கழிவிரக்கத்துடன் "ஒரேயடியா போகணும்" என பதில் கூறினாள்.

அதில் வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டவன் "அதை தவிர வேற எங்கனாலும் கேளு" என பல்லை கடிக்க, அவன் முகம் பிரதிபலித்த அடக்கபட்ட கோபத்தில் சற்று பயந்துபோனாள்.

சில நிமிடம் மௌனமாக இருந்தவள் "நீங்க போலீஸா?" என கேட்க அவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தவன் "ம்ம்.. ஆமா என்ன?" என்றான். பின் மீண்டும் சில நிமிடம் மௌனத்தின் பின் "என்ன உங்ககூட கூட்டிட்டு போறீங்களா?" என கேட்டாள். அதில் அவளை விழிகள் விரிய பார்த்தவன் "எ.. என்ன சொன்ன?" என கேட்க "உங்க கூட கூட்டிட்டு போறீங்களா? எனக்கு இப்ப வந்துட்டு போனவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு" என கூறினாள்.

"என்கூட தான் கூட்டிட்டு போக போறேன். ஆனா அங்க அவங்க இருக்க மாட்டாங்க. நான் உன் டாக்டர், அப்றம் இன்னொருத்தன் தான் இருப்போம்" என ஆடவன் கூற, பாவையின் மனமும் உடலும் பதறியது.

"எ.. எதுக்கு?" என அவள் கேட்க "உன்ன ஒன்னும் பண்ணிட மாட்டோம். உனக்கு வெளிய பாதுகாப்பு இல்லைனு எனக்கு தோணுது. இப்போதிக்கு நீ எதுவும் சொல்ல வேண்டாம். அங்க வந்தா போதும்" என கூறினான். அவள் மீண்டும் மௌனமாக "நம்பிக்கை இருந்தா வா" என்றான்.

நம்பிக்கை இல்லாமலா அவனையே கூட்டிக் கொண்டு செல்லும்படி கேட்டாள்? ஆனாலும் மனம் முழுதும் இருந்த பயம் அவளை மனம்விட்டு பேசமுடியாமல் தடுத்தது. "எனக்கு பயமா இருக்கு" என அவள் கூற பட்டென "எதுக்கு?" என கேட்டான். "நான் அங்க தனியா இருக்கணுமா?" என அவன் கேட்க "துணைக்கு ஒரு ஜீவன் அங்க இருக்கும்" என கூறினான்.

"உங்க வைஃபா?" என அவள் கேட்டதில் விழிகள் தெறிக்க அவளை பார்த்தவன், குரலை செருமி "எனக்கு இன்னும் கல்யாணம்லாம் ஆகலை" என கூறினான். பின் அவனையே பார்த்தவள் விழிகள் அலைபாய்ந்தது.

அவள் கண்கள் கொண்டே அவள் எண்ணம் படிக்கத் தெரிந்தவன் அல்லவா அவன். உள்ளுக்குள் ஆடவன் சிரித்துக் கொள்ள "சரி வரேன்" என்றாள்.

-தேடல் தொடரும்💝...

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவிடுங்கள் தங்கம்ஸ் 🥰👇

 
Last edited:

NNK34

Moderator
3.இனம் புரியா தேடலில் நாம்!

அந்த அழகிய வீட்டினுள் கார் நுழைந்தது. வீட்டை சுற்றி பெரிய மதில் சுவரே இருந்தது. உள்ளே வந்து கார் நிறுத்தும் இடத்தில் வண்டி நின்றது. அதிலிருந்து
இறங்கிய ஆதித்தன் கார் டிக்கியிலிருந்து மடித்து வைக்கப் பட்ட அந்த சக்கர நாற்காலியை எடுத்து விரித்தான். பின்கதவை ஆடவன் திறக்க, அந்த மெழுகு பொம்மை உறங்கிக் கொண்டிருந்தது.


அவளை சிறு புன்னகையுடன் கண்டவன் உள்ளிருந்து வந்த இரட்டையர்களை கண்டு "வம்சி இந்த சேர (நாற்காலி) உள்ள கொண்டு போ" என கூறி அவளை கையில் ஏந்தினான், அவள் உறக்கம் கலையாதவாறு. அவளை கையில் ஏந்தியபடி உள்ளே வந்தவன் "எந்த ரூம் ரெடி பண்ணிருக்க மச்சி?" என கேட்க "மேல லெஃப்ட்ல உள்ள ரூம்டா" என வம்சி கூறினான்.

அவன் கூறிய அறையை ஆடவன் அடைய அவனுக்கு பின்னிருந்த வசி கதவை திறந்துவிட்டு சென்றான். அதில் நண்பனை கண்டு புன்னகைத்துவிட்டு உள்ளே நுழைந்தவன் அவளை மெல்ல கட்டிலில் கிடத்தினான். காலில் வீக்கம் சரியாகும் வரை சக்கர நாற்காலியை பிரயோகிக்க வசி கூறியிருந்தான்.

அவளை படுக்க வைத்து போர்த்தியவன் மென்மையினும் மென்மையாக அவள் தலை கோதி "எதுவும் நினைக்காம தூங்குடி. நான் இருக்கேன் உனக்கு" என கூறி எழ முற்பட்டான். ஆனால் அவளது இடது கரம் அவனது சட்டையை இருக்கப் பற்றியிருந்தது. அதை கண்டு மெல்ல புன்னகைத்தவன் "நா(ன்) கண்ணியமானவன் தான். எனக்கு என் மேல நம்பிக்கை நிறையாவே இருக்கு. இருந்தாலும் இப்போ உன் கூட படுக்க எனக்கு மனமில்லைடி" என்றபடி மெல்ல அவள் கரத்தை எடுத்துவிட்டு சென்றான்.

கீழே வந்தவனது அலைப்பேசி ஒலிக்க, அழைப்பை ஏற்று "சொல்லுங்க (அ)ண்ணா" என்றான். "தம்பி நீங்க சொன்ன விவரங்கள்ல எந்த பொண்ணுக்கும் ஆக்சிடென்ட் ஆகலை. ஆக்சிடென்ட் இல்லைனா ஊருக்கு எங்கேயும் போகிருக்காங்களானு விசாரிக்க சொன்னீங்கள்ல? அதுவும் விசாரிச்சுட்டேன் தம்பி. அப்படி யாரும் இந்த ஒரு வாரத்தில் இங்கருந்து போகலை" என கோவிந்தன் கூற "ம்ம் சரி (அ)ண்ணா. தாங்க்ஸ்" என கூறி இணைப்பை துண்டித்தான்.

மனதில் இனம் புரியாத குழப்பம். ஏதோ ஒரு சூது நடந்துள்ளது என அவன் மனம் அடித்துக் கூறியது. உணவுடன் வந்த இரட்டையர்களில் "மச்சி சாப்பாடு வேண்டாம்ல?" என வம்சி கேட்க அவனை ஆதித் முறைத்தான். "ஏன்டா, சாப்பாடு வேண்டாம்னா கேப்பாங்க?" என வசி கூற "அதானே. உன் உடன்பிறப்புக்கு உன் அறிவு இல்லைடா" என கூறிய ஆதிக்கு மூக்கொடை கொடுக்கும்படி "ம்ம்.. சாப்பாடு இல்லை போய் படுனு சொல்லனும்" என வசி கூறினான். அதில் வாய்விட்டு சிரித்த இரட்டையர்கள் தங்கள் கைகளை தட்டிக் கொண்டு "ஹை-ஃபைடா" என கூறிக் கொள்ள இருவரையும் கொலைவெறியுடன் பார்த்தவன் அவர்கள் மீது பாய, தலையனையால் மாறி மாறி அடித்துக் கொண்டு துவந்த யுத்தமே புரிந்தனர்.

சண்டை சிரிப்பில் முடிய சிரிப்பு உண்ணுவதில் முடிய, உண்ணுதல் உறக்கத்தில் முடிந்தது.
மறுநாள் காலை, மஞ்சள் நிறக் கதிர்வீச்சு முகத்தில் கோலம் போட, மதுரா மெல்ல கண்திறந்தாள். உடல் அசதியாகவும் தலை சற்று பாரமாகவும் கை மரத்தும் இருக்க, முழிப்பு வந்த பிறகும் எழ மனமின்றி கிடந்தவள் கண்கள் அறையை ஆராயும்போதே தான் வந்த இடம் மூளைக்கு உரைத்தது.


மெல்ல எழுந்து அமர்ந்தவள் அருகில் இருந்த சக்கர நாற்காலியை பார்த்தாள். அதை அருகில் இழுத்தவள், 'இதில் எப்படி நகர்ந்து வந்து அமர?' என யோசித்துக் கொண்டிருக்க அவளவன் உள்ளே நுழைந்தான். "குட் மார்நிங்க" என அவன் கூற சட்டென எழுந்த அரவத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவன் முகம் கண்டு ஒரு பெருமூச்சு விட்டு "கு.. குட் மார்நிங்க" என்றாள்.

அவளுக்கு கொண்டு வந்த ஃபில்டர் காப்பியை அங்கிருந்த மேஜையில் வைத்தவன், "ஃபிரெஷ் ஆகிட்டு குடி. உன்னோட சோப் டவல் எல்லாம் கொண்டு வரேன்" என கூற "என்னோடதா?" என்றாள். "ம்ம்.. உனக்கு வாங்கினது உன்னோட டிரஸ்ஸா தானே இருக்கும்?" என அவன் கூற "யாரு வாங்கினது?" என கேட்டாள். அவளை ஏற இறங்க பார்த்தவன் "கேள்வியா கேளு நான் ஏதாவது கேட்டா மட்டும் பதில் பேசாத" என கூற தலையை குனிந்துக் கொண்டவள் "சாரி" என்றாள்.

அதில் மென்மையாக புன்னகைத்தவன் "சரி சரி உனக்கு புடிச்ச ஃபில்டர் காப்பி சூடு ஆருறதுக்குள்ள குடி" என கூறியவன் திரும்பி செல்ல 'இவரிடம் இதில் அமர உதவி கேட்கலாமா?' என சங்கடத்துடன் எண்ணினாள். சட்டென திரும்பியவன் "ஏ லூசு! நான் தான் சொல்றேன்னா நீயாவது கேட்க கூடாது?" என்றபடி அவளிடம் வந்தவன சட்டென அவளை தன் கைகளில் தூக்கிட பெண்ணவள் பதறிப் போனாள்.

அவளது விழிகள் வட்டமாக விரிய, அவன் கைபட்ட கூச்சத்தில் உடல் புல்லரித்தது. அவளை பாந்தமாக அந்த நாற்காலியில் அமர்த்தியவன், அதை தள்ளிக் கொண்டு குளியலறை சென்று, அவளுக்கு பல்துலக்கியில் பேஸ்ட் வைத்து கொடுக்க, பாவைக்கு சங்கடமாகிப் போனது. தலையை குனிந்தபடி இருப்பவள் கண்டவன் "மதுரா இந்தா" என அவளது கையில் அந்த துலக்கியை கொடுத்து "தேச்சிடுவியா?" என கேட்க 'ஆம்' என்பது போல் தலையசைத்தவள் பல் துலக்கினாள்.

பின் முகத்தை அலம்பியவள், சங்கடத்துடன் "நி நீங்க போங்க நான் பாத்துகுரேன்" என கூற அவளது விழிகளில் தெரிந்த பதட்டமே அவனுக்கு உணர்த்தியது. அவளை கையில் ஏந்தியவன் அவளை (மேலை நாட்டு வடிவம் கொண்ட கழிப்பறை - western toilet) கழிப்பறையில் அமர்த்திவிட்டு, கதவை சாத்திக் கொண்டு வெளியே நின்றான்.

அதில் மேலும் கூச்சமுற்ற மதுராந்தகி 'இங்கு வந்து தப்பு செய்துவிட்டோமோ? இவர்களுக்கு பாரமாகவும் தனக்கு சங்கடமாகவும் இருக்கும் இடத்தில் இருப்பது சரி தானா?' என எண்ணினாள். தனது காலைக் கடன்களை உடைந்த கை காலின் அவதியோடு முடித்துக் கொண்டவள் செவிற்றை பிடித்தெழுந்து நாற்காலியில் அமர முற்பட, ஆடவன் கதவை திறந்தான். அவளை முறைத்தபடி வந்தவன் அவளை சக்கர நாற்காலியில் அமர்த்தி வெளியே கூட்டிக் கொண்டு வந்தான்.

சங்கடத்துடன் தலை குனிந்தவளது சிந்தனை மேலும் வலுப்பெற கண்களைக் கரித்துக் கொண்டு கண்ணீர் வந்தது. அவள் உயரத்திற்கு ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவன் "எதுவும் யோசிக்காத மதுரா. உன்ன பாத்துக்க ஆள் ஏற்பாடு பண்றேன். அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்றவன் "சங்கடமா இருந்தா, உங்க அம்மா இருந்து உன்ன பாதுக்குறதா நினைச்சுக்கோ" என கூற சட்டென அவனை தலைநிமிர்ந்து பார்த்தாள்.

அவளது அகண்ட விழிகளில் நீர் தாமாக நிரம்பிக் கொள்ள 'ரொம்ப பண்ணாதடி.. உங்க அம்மா இருந்து இதுலாம் செய்ய மாட்டாங்களா? நானும் உனக்கு அப்டி தானே?' என அவளது உதிரக்கரை படிந்த போர்வைகளை துவைத்தபடி திவ்யா கேட்டது நினைவில் உதித்தது. அதில் எழுந்த நினைவுகளில் பாவை அழத் துவங்கிட, திவ்யாவின் நினைவில் அழுகின்றாள் என புரிந்தது.
அவள் தோளை தட்டிக் கொடுத்தவன், ஒருவாறு சமாதானம் செய்து காப்பியை குடிக்க வைத்துவிட்டு கீழே வந்தான்.


அங்கு அமர்ந்திருந்த வசியிடம் வந்தவன் "வம்சி கிளம்பிட்டானா?" என கேட்க "பக்கி நான் தான் வம்சி" என கூறினான். அவனை ஏற இறங்க பார்த்தவன் "இப்டி உங்க அம்மா அப்பா கிட்ட சொன்னா அவங்க கூட நம்புவாங்க ஆனா நான் நம்பமாட்டேன். கடுப்பேத்துர போல காமெடி பண்ணாம கேட்டதுக்கு பதில் சொல்லு" என ஆதி கூற அதில் நண்பனை மெச்சும் பார்வை பார்த்தவன் "அடேய்! எப்படிடா கண்டுபிடிக்குற?" என கேட்டான்.

அதில் தானும் புன்னகைத்தவன் "அதுலாம் அப்டிதான் மச்சி" என கூற "அதுசரி" என்றவன் "இப்போ தான் கிளம்பினான்" என கூறினான். "ம்ம் மச்சி. உனக்கு ரொம்ப நம்பிக்கையான நர்ஸ் யாராவது இருக்காங்களா சொல்லேன்" என ஆதி கேட்க "நம்பிக்கையான நர்ஸ்ஸா?" என்றான். "ம்ம்.. மதுராவ பாத்துக்க" என ஆதி கூற "ம்ம் நானே கேக்கணும் தான் நினைச்சேன்டா. என்ன இருந்தாலும் அவளுக்கே ஒரு மாதிரி இருக்கும் நம்ம கூட இருக்க" என கூறினான்.

"ம்ம் மச்சி. நா இன்னிக்கி ஒரு முக்கியமான வேலையா வெளிய போகணும். இவள எப்படி தனியா விட்டுட்டு போக?" என ஆதி கேட்க "எங்க போற? எவ்ளோ நேரம் ஆகும்?" என வசி கேட்டான். அதில் முதல் கேள்வியை காதில் வாங்காதவன் போல் "வர நைட் ஆகும்" என ஆதி கூற ஒரு பெருமூச்சு விட்டவன் "சரி நான் இன்னிக்கி லீவு எடுத்துக்குறேன்" என கூறினான்.

நண்பனை கட்டியவனத்தவன் "சரி மச்சி. நான் கிளம்பரேன். நான் போற வேலை நல்லபடியா முடிஞ்சதுனா, மதுராவ பாத்துக்க ஆள் வேணாம்" என கூறி தனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டவன் வெளியேறினான்.
தனது வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றவன் மூன்றரை மணி நேரப் பயணத்திற்கு பின் அந்த வண்டிக்கு ஓய்வு கொடுத்து நிறுத்தினான்.
அது ஒரு கல்லூரி.


ஆடவன் வெளியே நின்றுக் கொண்டிருக்க அவன் யாருக்காக காத்திருந்தானோ, அவள் வந்தாள். அலைப்பேசியில் யாருக்கோ அழைத்து அழைத்து ஓய்ந்தவள், "ச்ச!" என முகத்தை சுலித்துக் கொள்ள ஆதித்தன் அவளிடம் சென்றான். ஆஜானுபாகுவான உடல் கட்டுடன் தன்னிடம் ஒருவன் வருவதைக் கண்ட அவளுக்கு ஒரு நொடி தூக்கி வாரி போட தலையை கோதிக் கொண்டு நகர எத்தனித்தாள். "ஒரு நிமிஷம்" என அவன் கூற 'ஆத்தி.. யாரு இந்த ஜிம் பாடி?' என மனதில் திடுக்கிட்டவள் வெளியே விறைப்பாக காட்டிக் கொண்டு "யாரு?" என கேட்டாள்.

"சிற்பிகா தானே நீ?" என ஆடவன் உறுதி படுத்திக் கொள்ள "அ ஆமா" என்றாள். "எங்க போற?" என ஆடவன் கேட்க "நா ஏன் அத உங்க கிட்ட சொல்லனும்?" என கேட்டாள். "ம்ம்.. நீ பரவால தெளிவா தான் இருக்க" என அவன் கூற "ஹலோ சார். யார் நீங்க? என்ன வேணும்?" என கேட்டாள்.

அவளை ஏற இறங்க பார்த்து "ஆதி, ஆதித்த கிருஷ்ணன். ஐ.பி.எஸ் ஆஃபிசர்" என்றவன் "இப்ப பதில் சொல்லுவியா?" என கேட்க அகல விழி விரித்தவள் "ச சார். என்னாச்சு சார்? எ எதுக்கு என்கிட்ட?" என்றாள். "ஒன்னும் பதறாத சிற்பி" என்றவன் "எங்க போற?" என கேட்க "ஹ.. ஹாஸ்டல்க்கு தான் சார்" என்றாள்.

"பங்களூர் வர்ற ஐடியா இருக்கா?" என அவன் கேட்க "ச சார் திவி மதுக்கு எதும் பிரச்சனையா? அத பத்தி தான் பேச வந்தீங்களா? அவங்க ஃபோன் ஏன் ஒரு வாரமா எங்கேஜ்ட்டா இருக்கு? எதுவும் பிரச்சனையா?" என பதட்டமாக வினவினாள். பாவையின் கண்கள் கலங்கிவிட்டன! அதை கண்டவனுக்கு பாவமாக தான் இருந்தது. ஆனால் அது துளியும் முகத்தில் பிரதிபழிக்கவில்லை.

"பெங்களூர் வர்ற ஐடியா இருக்கா?" என அவன் மீண்டும் கேட்க "இ இப்போ எக்ஸாம் நடக்குது. முடிஞ்சதும் அடுத்த வாரம் வரலாம்னு இருந்தேன்" என்றாள். "சரி என் நம்பர் தரேன். கால் பண்ணு நானே உன்ன வந்து கூட்டிட்டு போறேன். எக்காரணம் கொண்டும் தனியா வராத" என ஆடவன் கூற "ஏன் சார்? எதும் பிரச்சனையா? சார் பிளீஸ் சார் சொல்லுங்க" என கேட்டாள். "எக்ஸாம்ஸ் நல்லா பண்ணு சிற்பி. நானே வந்து உன்ன கூட்டிட்டு போறேன்" என அவன் கூற "சார் அவங்க உங்க கூட இருக்கங்களா?" என கேட்டாள்.

அவளை பார்த்தவன் ஒரு பெருமூச்சு விட்டு "பத்திரமா தான் இருக்கா. நீ ஒன்னும் மனச போட்டு குழப்பிக்காம ஒழுங்கா படி" என கூறியவன் வண்டியில் ஏறி "சிற்பிமா வா நானே உன்ன விட்டுட்டு போறேன்" என கூறினான்.‌‌ சிற்பி "இ இல்ல சார். ஃப்ரெண்ட் வருவா. நா பாத்து போய்ப்பேன்" என்க "சரி பாத்து ஜாக்கிரதை" என்றவன் அவளிடம் தனது எண்ணை கொடுத்துவிட்டு புறப்பட்டான்.

செல்லும் அவனையே இமை கொட்டாமல் பார்த்தவளுக்கு ஆடவன் எங்கோ பார்த்த முகம் போல படுவதாக தற்போது தோன்றியது. அதற்குள் அவள் தோழி வந்துவிட அவளுடன் விடுதிக்கு சென்றாள்.

சொன்னது போல் ஆதித்தன் இரவு நேரம் வீடு திரும்பினான். உள்ளே செல்ல, கூடத்தில் யாருமில்லை. ஆடவன் மேலே செல்ல மதுவின் அறையில் தான் யாவரும் இருந்தனர். வசீ பாவைக்கு உணவூட்டிக் கொண்டிருக்க "அண்ணா பிளீஸ் எனக்கு போதும்" என கெஞ்சிக் கொண்டிருந்தாள். "குட்டிமா மாத்திர வேற போடணும். ஒழுங்கா சாப்பிடு" என வம்சி கூற "ம்ம்.. சாப்பிடு குட்டிமா" என்றபடி கரண்டியில் எடுத்த உணவை அவள் வாயில் வசி தினித்தான்.

இவர்கள் மூவரையும் காண ஆதிக்கு சிரிப்பாக இருந்தது. ஆடவன் குரலை செருமி தனது இருப்பைக் காட்ட மூவரும் அவனை திரும்பி பார்த்தனர். "வா மச்சி. இப்போ தான் வரியா?" என வம்சி கேட்க "ம்ம்.." என்றான். அதற்குள் மீதமிருந்த இரண்டு வாய் உணவையும் ஊட்டி முடித்த வசி "என்ன மச்சி போன காரியம் டன்னா?" என கேட்டான். "என்ன காரியம்?" என வம்சி கேட்க "எனக்கும் தெர்லடா. ஏதோ விஷயமா போகணும்னு சொன்னான் அதான் கேட்டேன்" என வசி கூறினான்.

இருவரும் அவனை பார்க்க "ம்ம்.. பாதி டன்" என கூறியவன் அவனவளை பார்த்தான். வம்சியோ "மச்சி.. மது வந்தன்னிக்கு என்ன பாக்கலைல? இன்னிக்கி வசி வந்து அவளுக்கு சாப்பாடு கொண்டு வந்து ஊட்டிட்டு கைய வாஷ் பண்ண உள்ள போய்ருக்கான், நா சாப்ட்டுடியானு கேட்டுட்டு உள்ள வரவும் பயந்துட்டாடா" என கூற "ஆமா டா. பாவம் பாப்பா பயந்துடுச்சு" என சிரிப்புடன் வசி கூறினான்.

அதில் இருவரயும் முறைத்தபடி பார்த்தவள் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள சிறு புன்னகையுடன் "சரி வாங்கடா சாப்பிடலாம்" என்றான். "ம்ம் மச்சி" என்ற வம்சி செல்ல "இந்த மாத்திரை.." என கூற வந்த வசி நண்பனின் பார்வையை உணர்ந்து "மச்சி நீ மதுக்கு இந்த மாத்திரைலாம் குடுத்துட்டு வா. நா சாப்பாடு எடுத்து வைக்குறேன்" என கூறி சென்றான்.

தலையசைப்புடன் அதை வாங்கிய ஆதி அவள் அருகே சென்று அமர்ந்தான். ஏனோ அவனை கண்டாலே அவளுள் ஒரு பாதுகாப்பான உணர்வு! 'யாரை கண்டாலும் மிரண்டு பயந்த நான் எப்படி இவர்கள் மூவரிடம் பயமில்லாமல் இருக்கின்றேன்?' என அவளுக்கே அவள் மேல் சந்தேகம்.

"நல்லா சாப்டியா?" என அவன் கேட்க "ம்.. ம்ம்.." என சிந்தனையிலிருந்து மீண்டு தலையசைத்தாள். "இப்ப எப்டிருக்கு?" என அவன் கேட்க பாவமாக தன் கையை பார்த்தவள் "மரத்து போன மாதிரி இருக்கு" என கூறினாள். "ஒரு ஒரு மாசம் பொறுத்துக்கோடா. சரியாகிடும்" என அவன் கூற "ம்ம்" என்றாள்.

"பாத்ரூம் போகனுமா?" என அவன் கேட்க 'இல்லை' என்பது போல் தலை குனிந்தபடி அசைத்தாள். "ஒரு ஒரு வாரம் மதுரா.. அப்றம் உன்ன பாத்துக்க ஒருதங்க வந்திடுவாங்க" என அவன் கூற 'ம்ம்' என்பது போல் தலையசைத்தாள். அவளுக்கு மருந்துகளை கொடுத்து படுக்க வைத்தவன் செல்ல பாவை மெல்ல மெல்ல உறக்கத்தை தழுவினாள்.

-தேடல் தொடரும் 💝...
 
Last edited:

NNK34

Moderator
4. இனம் புரியா தேடலில் நாம்!

மறுநாள் காலை ஆடவர்கள் மூவரும் தயாராகி வர, ஆதித்தன், குழம்பிக் குவளையுடன் அவனவள் அறை சென்றான். கண் முழித்த பாவையோ அருகிலிருந்த சக்கர நாற்காலியை பிடித்தே எழுந்து அதில் அமர்ந்து நகர்த்தியபடி சென்று பல்துலக்கி, முகம் கழுவ ஆடவன் உள்ளே வந்தான்.

மதுராவும் மெல்ல மெல்ல அந்த நாற்காலியை நகர்த்தியபடி வெளி வர முயற்சித்துக் கொண்டிருக்க, சுவிற்றில் சாய்ந்தபடி அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான், ஆதித்தன். அவனை எதிர்ப்பாராத பெண் திடுக்கிட்டு போக, பின் மெல்ல தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அவளோ வெளியே வரமுடியாமல் தவித்து தவித்து ஓய்ந்து அவனை பார்க்க "நான் வரும் குள்ள உனக்கு என்ன அவசரம்? இல்ல என்ன(னை) கூப்பிடவாவது செய்யலாமே? மறுபடியும் விழுந்து ஒடிஞ்ச கைய இன்னும் ஒடிச்சுக்கவா?" என கேட்டான்.

அதில் தலைகுனிந்த பெண் "அது உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு.." என இழுத்தாள். "ஆமா ஆமா.. மேடம் கூப்பிட்டு இங்க உயிர் போற வேலைய நான் விட்டுட்டு வரேன்" என்றவன் வந்து அவளை வெளியே கொண்டு வர, குனிந்த தலை நிமிராது இருந்தாள்.

அறுவை சிகிச்சை செய்திருப்பமையாள் முந்தைய நாள் வரை குளிக்க வேண்டாம் என வசி கூறியிருந்தான். தற்போது அவளுக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டும் என நினைத்தவனுக்கு அது நினைவில் வர, 'குளித்தாலும் ஒற்றை கை கொண்டு அவள் எப்படி உடை மாற்றிக் கொள்வாள்?' என தோன்றியது.

அவளை பார்த்தவன் "மதுரா! வசி ஆப்ரேஷன் பண்ணிருக்குறதால குளிக்க வேண்டாம்னு சொல்லிருந்தான். இன்னிக்கி குளிக்கலாம் ஆனா உன்னால டிரஸ் மாத்திக்க முடியுமா?" என பட்டென கேட்டிட பாவைக்கு தான் சங்கடமாகிப் போனது. ஆனால் அவன் கேட்பதும் நியாயமான கேள்வியாயிற்றே என யோசித்தவளால் நிச்சயம் உடைந்த கையையும் காலையும் வைத்துக் கொண்டு உடை மாற்ற முடியாது. சற்று யோசித்தவள் "அ அன்னிக்கு வந்தாங்கள்ல, உங்க அம்மா. அவங்க இல்லயா?" என தயங்கி தயங்கி கேட்க "இல்லயே" என்றான்.

மதுராந்தகியின் முகம் சுருங்கிட "அ அப்போ நான் குளிக்களை" என பாவம் போல் கூறினாள். "ஏ! உடம்பு அசதியா இருக்கும்" என அவன் கூற "என்னால டிரஸ்ஸ மாத்த முடியாது" என சற்று இயலாமை தந்த கடுப்புடன் கூறினாள்.

அவள் நிலையும் ஆடவனுக்கு பாவமாக தான் இருந்தது. இருப்பினும் அவள் சிக்கியிருக்கும் சிக்கல் ஏதென்று புரியாத நிலையில் யாரையும் நம்பி இந்த வீட்டினுள் பிரவேசிக்க அவனால் அனுமதிக்கவும் முடியவில்லை. அவன் மனமோ 'உன் பொண்டாட்டியா இருந்தா நீயே மாத்திவிட்டிருக்கலாம்' என கண்ட நேரத்தில் கவுண்டர் கொடுக்க, அதை புறம் தள்ளியவன் சென்று ஹீட்டரை இயக்கிவிட்டு, அவளுக்கு குழம்பியை கொடுத்துவிட்டு கீழே சென்றான்.

சில நிமிடங்களில் ஒரு இரவு உடையுடன் மேலே வந்தவன், "மதுரா! இத அப்டியே உக்காந்துட்டே உன்னால போட முடியுதானு பாரு" என கொடுக்க, அதை முக சுழிப்புடன் கண்டவள் "இதயா?" என கேட்டாள். ஏனோ அத்தனை பெரிய மாடர்ன் சிட்டியில் இருந்தாலும், இரவு உடை போடுவதில் அவளுக்கு பிடித்தம் சுத்தமாக கிடையாது.
நாகரீக உடைகள் பிடிக்காமல் எல்லாம் இல்லை. இது அவளுக்கு ஏதோ வாயாதனவர் தோற்றம் தரும் என சிறுவயதிலேயே பதிந்தது ஒரு காரணமாக இருந்தாலும், மூன்று ஆடவர்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் அதை போடுவது அவ்வளவு சரியாக அவளுக்கு படவில்லை.


'தனக்கு கழிப்பறை செல்ல வேண்டும் என்றாலும் இவர்கள் தான் உதவ வேண்டும் என்ற பட்சத்தில், தன்னை தூக்கும் போது ஒவ்வாமையாக உணர்வு எழும்' என எண்ணினாள். அவள் முகம் போன போக்கை கண்டவன் "என்ன?" என்க "அ அது இல்ல. இது எனக்கு வேண்டாம்" என கூறினாள். அவனுக்கா புரியாது அவள் எண்ணவோட்டம்? "மதுரா புரியுதுடி. ஐ ஆம் ரியல்லி சாரி. ஆனா உன்ன பாத்துக்க இப்ப யாரயும் நம்பி விட நான் தயாரா இல்ல." என்றவன் ஒரு பெருமூச்சுடன் "என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே?" என ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவன் அவள் கண்களை பார்த்து கேட்க, ஏனோ அவள் கண்கள் கலங்கியது.

நம்பிக்கை இல்லாமலா இவ்வளவு தூரம் வந்து ஒரு நாள் முழுதும் தங்கினாள்? 'இருக்கு' என்பது போல் அவள் தலையசைக்க சிறு புன்னகையுடன் "ம்ம்.. போட முடியுதானு பாரு" என கூறினான். சரியென தலையசைத்தவள் அதை தனது உடைக்கு மேலே போட முயற்சித்தாள். கிட்டதட்ட இருபது நிமிட போராட்டத்தின் பின் அப்படியும் இப்படியும் அசைந்துக் கொடுத்து போட்டு முடித்த பாவை ஒரு பெருமூச்சு விட சிரித்தபடி வந்தவன் அவளுக்கு சிரமம் இன்றி அதை அவிழ்த்து அவளுக்கு வேண்டியவை அத்தனையும் கொண்டு சென்று குளியலறையில் வைத்தான்.

அவன் என்னவோ இயல்பாக தான் அனைத்தும் செய்கின்றான். பாவைக்கு தான் நாணமும் கூச்சமும் வந்து படுத்தியது. அணைத்தயும் எடுத்து வைத்தவன் அவளை குளியளரையில் போடப்பட்ட இருக்கையில் அமர்த்திவிட்டு "நான் வெளிய தான் இருக்கேன். எது வேணும்னாலும் கூப்பிடு" என கூறி சென்றான்.

ஆடவன் கதவடைத்துக் கொண்டு சென்றதும் ஒரு பெருமூச்சு விட்டவள் மனம் 'இவர் யாருனே எனக்கு தெரியலை. ஆனா இவங்க மொத்த குடும்பத்துக்கும் நம்ம தெறிஞ்சுருக்கு. ஏதோ ஒரு தெரிஞ்ச பொண்ணுக்காக இவர் ஏன் இவ்வளவு செய்யனும்? எங்கயாவது ஆசரமத்துல கொண்டு போய் விட வேண்டியது தானே? அது என்ன எனக்கு புது இடமா? நமக்கு பிறப்பிடமே அது தானே?' என எண்ணியவள் கண்கள் திவ்யாவின் நினைவில் கண்ணீரை சிந்த, பின்வந்த நினைவுகளில் உடல் உதறல் எடுக்க துவங்கியது.

நீர் சத்தமே வராதமையால் ஆடவன் "மதுரா" என குரல் கொடுக்க தனது சிந்தனையிலிருந்து அந்த கதகதப்பான குரல் அவளை மீட்டெடுத்தது. "ம்ம்.. ம்ம்.." என்றவள் குளிக்க ஆயுத்தமானாள். வெதுவெதுப்பான நீர் சிகிச்சை முடிந்து ஓய்ந்த உடலுக்கு தேவையாகவே இருந்தது. வெளியே இருந்தவன் தான் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டு நெகத்தை கடித்துக் கொண்டிருந்தான். விழுந்து மீண்டும் மண்டையை உடைத்துக் கொண்டு விடுவாளோ என்ற பதட்டம் அவனுக்கு.

குளித்து உடை மாற்றவே அவளுக்கு ஒரு மணி நேரம் எடுத்தது. அணைத்தயும் முடித்துக் கொண்டவள் ஒரு முறைக்கு பலமுறை தனது உடையை சரி பார்த்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டாள். அந்த பெருமூச்சே அவனுக்கு செய்தி சொன்னது போலும்? "மதுரா" என்றான். "அ ஆங்.. முடிஞ்சுடுச்சு" என அவள் கூற ஆடவன் வந்தான். அவளை பாந்தமாக தூக்கிக் கொண்டு கட்டிலில் கிடத்தியவன் "ஆர் யு ஃபீலிங்க் பெட்டர்?" என கேட்க மென்மையான புன்னகையுடன் 'ஆம்' என்பது போல் தலையசைத்தாள்.

பின் என்ன நினைத்தாளோ? அவனை பார்த்து அன்று கேட்ட அதே கேள்வியை கேட்டாள். "நீங்க போலீஸா?" என அவள் கேட்க "ஏன் இதயே கேக்குற?" என கேட்டான். மெல்ல தலையை குனிந்துக் கொண்டவள் 'இல்லை' என்பது போல் தலையசைத்தாள். அவளது பார்வை மொழி புரியாதவனா அவன்? 'அவள் தன்னிடம் ஏதோ உதவி கேட்க நினைக்கின்றாள்.
ஆனால் ஏதோ ஒன்று தடுக்கின்றது. பயமா? தயக்கமா? கூச்சமா? எது அது?' என யோசித்தவன் எங்கே அவளிடமே கேட்டு அன்று மருத்துவமனையில் செய்தது போல் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்து தனது உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு விடுவாளோ என அமைதியாக விட்டுவிட்டான்.


பின் வம்சி கையில் உணவுடன் வர, அவனை கண்டு மலர்ந்து சிரித்தவள் "அண்ணா குட் மார்நிங்க" என கூறினாள். வம்சியும் அவளுக்கு பதில் வாழ்த்து கூறி உணவை ஊட்ட, அப்போதே ஆடவன் அதை கவனித்தான். 'வம்சி, வசி இருவரையும் 'அண்ணா' என தான் அழைக்கின்றாள். ஆனால் தன்னை அவ்வாறு அவள் அழைக்கவில்லையே? 'நீங்க', 'வாங்க', 'போங்க' என தானே கூறுகின்றாள்' என்ற சிந்தனை எழுந்ததில் ஆடவனின் காதல் மனம் குதூகளித்தது.

அவளுக்கு உணவூட்டி மருந்து கொடுத்துவிட்டு இருவரும் கீழே வர, வம்சி மற்றும் வசி புறப்பட்டனர். முன்னறையில் அமர்ந்திருந்தவன் அலைப்பேசி ஒலித்தது. ஆதித்தன் அழைப்பை எடுக்க "தம்பி நீங்க கேட்டது போல அந்த விபரத்துல இங்க எந்த ஹாஸ்பிடல்லயும் யாரும் அட்மிட் ஆகலை" என கோவிந்தன் கூறினார். "ம்ம்.. சரி அண்ணா. தாங்க்ஸ்" என கூறி இணைப்பை துண்டித்தவன் "அப்போ திவிய, யாரோ கடத்திடாங்களா? அப்படினா எதும் டிமாண்ட் பண்ணிருப்பாங்களே? ஒ..ஒரு வேலை எதும் கொலை? ஆனா யாரு? அப்பா அம்மா இல்லாத ஒரு பொண்ணு. இன்னும் படிச்சு கூட முடிக்கலை.." என கூறிக் கொண்டவனுக்கு "இவங்க வேலை பாக்குற இடம் அல்லது அவ படிப்பு சம்மந்தமா எதுவும் பிரச்சனையா?" என தோன்றியது.

அவள் அறைக்கு செல்ல படியேறியவன் "திவா.." என அழைக்க, அவன் அழைப்புக்காகவே காத்துக் கொண்டிருந்த அவர்களது வளர்ப்புப் பிராணி ஓடி வந்தது. ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவன் அதன் தலையை கோதி "வா.. உங்கண்ணிய உனக்கு இன்டர்டியூஸ் பண்ணி வைக்குறேன்" என கூறினான். அதுவும் சிறு முனகல் ஒலியுடன் தலையசைக்க, இருவரும் மேலே சென்றனர்.

"மதுரா" என்றபடி அவன் நுழைய, திடுக்கிட்டு திரும்பினாள். அவளிடம் வந்தவன் "மதுரா என்னாச்சு?" என கேட்க அவள் உடலில் மெல்ல நடுக்கம் பிறந்தது. அதை கண்டவன் மெல்ல அவள் தோளை தட்டிக் கொடுத்து "ஓகே! ஓகே! உனக்கு இங்க துணைக்கு ஒரு ஜீவன் இருக்குனு நான் சொன்னேன்ல?" என அவள் சிந்தனையை மாற்றினான்.

அந்த கதகதப்பான குரலே அவளின் பயத்திற்கு ஆதரவாய் அணைக்க, "அ.. ஆங்?" என்றாள். "அதான் இங்க உனக்கு துணைக்கு ஒரு ஆள் இருப்பாங்கனு நான் சொன்னேன்ல?" என ஆடவன் கேட்க யோசிப்பது போல் மேலே பார்த்தவள் "ம்ம்.. நான் கூட உங்க வொய்ஃபானு கேட்டேனே?" என்றாள். ஆதித்தனோ மனதிற்குள் 'ம்க்ம்!' என சலித்துக் கொண்டு "ஆமா ஆமா" என்றான்.

"ஆமா நானே கேட்கணும்னு நினைச்சேன். வசி அண்ணா, வம்சி அண்ணா தானா?" என‌ அவள் கேட்க "அவனுங்க தான் இப்போ கிளம்பிட்டாங்களே?" என்றான். "அப்போ நீங்களா?" என பாவை கேட்க "நானும் இப்ப கிளம்பிடுவேன்" என கூறினான். "அய்யயோ நா தனியா இருப்பேன்" என அவள் பதற "அதுக்கு தான் உனக்கு அவன இன்டர்டியூஸ் பண்ணி வைக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்" என ஆதி கூறினான்.

சற்று சுவாரசியமான குரலுடன்‌ மது "யாரு?" என கேட்க புன்னகையுடன் "திவா" என அழைத்தான். கதவை தள்ளிக் கொண்டு வேகமாக வந்த நாயை விழிவிரிய பார்த்தவளோ சட்டென ஆடவன் சட்டை காலரை பற்றி அவன் மாரில் முகம் புதைத்துக் கொண்டு "அய்யோ நாயி.. கடிச்சிடும்" என கத்தினாள். அதில் ஓடி வந்த திவா, சர்ரென்று ஒரு சடன் பிரேக் அடித்து நின்று இருவரயும் பார்க்க, புன்னகையாக அதைக் கண்டவன் 'நோ பொறாமை' என உதட்டை அசைத்து "மதுரா.. அவன் உன்ன ஒன்னும் பண்ண மாட்டான்" என தனிவாக கூறினான்.

அதில் சட்டென நிமிர்ந்தவள் "அ அது ந எனக்கு நாய் நாய்னா பயம்" என தத்தி தடுமாறி கூற தனது குறும்பு புன்னகையை மீசைக்குள் மறைத்தவன்,
"இல்ல மதுரா. இவன் உன்ன கடிக்க மாட்டான். ஹி இஸ் அ ஃப்ரெண்லி காய்" என்றான். திவாவின் தலையை கோதியவன் "திவா மதுராக்கு கை குடு" என கூற அதன் ஒரு முன்னங்காலை அவளை நோக்கி உயர்த்தி காட்டியது.

அதில் விழிகள் அகல விரித்தவள் "இது பேரு திவாவா?" என கேட்க "ம்ம்.. திவாகரன்" என கூறினான். "நா தொட்டு பாக்கலாமா?" என அவள் தயக்கத்துடன் கேட்க "தாராளமா" என்றவன் கையசைத்து அழைக்க, திவா மதுராவிடம் வந்தான். அதன் தலையை பயந்து பயந்து பாவை மெல்ல கோதிவிட, அமைதியாக அமர்ந்திருந்தது.

அதில் சிரித்த பெண் "அச்சோ க்யூட்" என கூற "உனக்கு என்ன வேணும்னாலும் திவா கிட்ட கேளு. நீ புதுசா நாய் பாஷைலாம் படிக்க வேண்டாம். நார்மலா பேசினாலே அவனுக்கு புரியும். எது வேணும்னு கேட்டாலும் எடுத்துட்டு வந்து தருவான். நான் இப்போ வெளிய போறேன். கொஞ்ச நேரம் தான், வந்திடுவேன். அதுவரைக்கும் திவா உனக்கு துணையா இருப்பான். இங்க ரிமோட் இருக்கு. வேணும்னா டி.வி பாரு" என கூறினான்.

பாவையும் "ம்ம்.." என கூற புறப்பட திரும்பியவன் "மதுரா.. நான் வர ஒரு ஒரு மணி நேரம் மேல ஆகும். பாத்ரூம் எதும் போகனுமா?" என கேட்க இப்படி லஜ்ஜயே இன்றி கேட்பவன் முகம் நோக்கவே கூச்சமுற்று 'இல்லை' என தலையசைத்தாள். சிறு புன்னகையுடன் 'பை' என கையசைத்தவன் செல்ல, செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

கூறிவிடு என ஒரு பக்க மனம் கூற மறுபக்க மனம் நினைவுகளை வாரி இறைத்து பயமுறுத்த, மூச்சே அடைப்பது போல் இருந்த உணர்விலிருந்து ஒரு பெருமூச்சுடன் வெளி வந்தாள்.
ஆதித் சென்றது அவளவனும் திவ்யாவும் பணி புரிந்த அந்த காப்பிக் கடைக்கு தான். பெரிய கெபே அது அத்தனை பிரம்மாண்டமாக அதன் வாயை திறந்துக் கொண்டு யாவரையும் வரவேற்க, மறவன் (ஆடவன்) உள்ளே சென்றான்.


உள்ளே சென்றவன் நேரே சென்றது அந்த கெபேவின் முதலாளியிடம் தான். அவரிடம் சென்றவன் "மிஸ்டர் ராஜ்" என கூற "எஸ் சார். நானு நின்நகே ஹேக சகாயம் மாடலி? (நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?)" என பணிவுடன் கேட்டார். "இ இப்பரு ஹுடுகியறு நிம்ம அங்காடியல்லி கேலேச மாடுட்டிட்டறு. சரி? (இந்த ரெண்டு பெண்களும் உங்க கடைல தானே வேலை செய்தாங்க?)" என ஆதித் இருவரின் புகைபடத்தை காட்டி கேட்க இருவரின் புகைபடத்தயும் காட்டி "இவங்கலா?" என கேட்டார்.

"ஓ! தமிழ்?" என ஆதித் கேட்க "தெரியும் சார. நீங்க தமிழா?" என கேட்டான், வேல்ராஜ். "ம்ம்.. ஆமா. இவங்க வேலைக்கு வந்து எத்தனை நாள் ஆகுது?" என ஆதித் கேட்க "நீங்க யாரு? இவங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?" என கேட்டார். "ம்ம்.. ஆமா. சொல்லுங்க" என ஆதித் கூற "ஒரு.. நாலு நாள் இருக்கும் சார். முதல் நாள் திவ்யா தலைவலினு கிளம்பினா. மது மட்டும் இருந்தா. அடுத்த நாள் மது மட்டும் வந்தா, கேட்ட எதுக்கும் பதில் சொல்லலை. முகமே சரியில்லாம, ஏதோ போல இருந்தா. அப்றம் அவளயும் ஆள காணும்" என கூறினார்.

"காணும்னா போலீஸ்ல இன்ஃபார்ம் பண்ண மாட்டீங்களா?" என ஆதித் கேட்க அதில் பதறி போன வேல் "அய்யோ சார் என்னாச்சு? எதும் பிரச்சனையா? மூணு நாள் தானே வரலை, உடம்பு எதும் சரியில்லயோனு இருந்தேன்" என உண்மையான கவலையுடன் கூறினார். அவரை தனது கூர் பார்வையால் கிழித்தவன் "மதுரா கடைசியா வந்த அன்னிக்கோட ஃபோட்டேஜ் எனக்கு வேணும்" என்று கூறி "ஒன்னும் பதற வேண்டாம். நான் மிஸ்டர் ஆதித்த கிருஷ்ணன் ஐ.பி.எஸ். ஒரு சின்ன என்குவைரி தான்" என கூற அவரும் தலையசைப்புடன் அதனை எடுத்து இயக்கினார்.

எதையோ பரிகுடுத்தார் போல் வந்தவள், ஏனோ தானோவென வேலைகளை செய்து கொண்டிருந்தாள். சில மணி நேரம் பின் அவள் அலைப்பேசி ஒளித்து அதை அவள் எடுத்து பேசியது தெரிந்தது. சில வினாடிகளில் அழைப்பை தூண்டித்த பெண், தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு வேங்கையென தனது பையை எடுத்துக் கொண்டு அவள் புறப்பட்டது தெரிந்தது. அவ்வளவே! "இது மதுரா கடைசியா வேலைக்கு வந்த அன்னிக்கோட ஃபோட்டேஜா?" என கேட்க "ஆமா சார்" என்றார்.

"திவி இல்லாம மதுரா எத்தன நாள் வேலைக்கு வந்தா?" என ஆதித் கேட்க "திவி பாதில கிளம்பி போன அன்னிக்கு அப்பறம் அடுத்த நாள். ரெண்டு நாள் சார்" என கூறினார். "இங்க இவங்க மேல யாருக்கும் மனஸ்தாபம் எதுவும் இருக்கா? எதும் பிரச்சனை?" என ஆதித் கேட்க "இல்லவே இல்லை சார். ரெண்டு பேரும் எல்லார்கூடவும் நல்ல ஃபிரண்ட்ஸா தான் இருப்பாங்க" என கூறினார். சற்றே யோசித்தவன் வேலிடம் "ஓகே! தாங்க் யு" என கூறி சென்றான்.

கோவிந்தனுக்கு அழைத்த ஆதித் "அண்ணா உங்களுக்கு ஒரு நம்பர் அனுப்பி வைக்குறேன். அந்த நம்பரோட பாஸ்ட் ஒன் வீக்கோட இன்கமிங் அண்ட் அவுட்கோயிங் விவரம் எனக்கு வேணும்" என கூற "அனுப்புங்க சார்" என கூறினார். அவருக்கு மதுராவின் எண்ணை அனுப்பி வைத்தவன் வீட்டுக்கு பயணமானன்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator

5.இனம் புரியா தேடலில் நாம்!


வீட்டுக்கு வந்து அவனவள் அறைக்கு சென்ற ஆதித் "மதுரா" என்றபடி உள்ளே நுழைய, நாயை கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். நாயை கண்டவுடன் பயந்து தன்னை கட்டிக் கொண்டவள், தற்போது நாயை கட்டிக் கொண்டு தூங்குகிற அழகை காணவே அவனுக்கு புன்னகை தானாக அரும்பியது.

அவளிடம் வந்தவன் முழித்திருந்த நாய் அவள் உறக்கம் கலைக்காமல் படுத்திருந்ததை கண்டான். அதை கண்டு புன்னகைத்தவன் அதன் தலையை கோதிவிட்டு 'குட் பாய்' என உதட்டை மட்டும் அசைத்து சத்தமின்றி கூறிக் கொண்டான். பின் நேரத்தை கண்டவன் மதியம் உணவு உண்ணும் நேரம் வந்தமையால், கீழே சென்று அவளுக்கு உணவை எடுத்து வந்து அவளை எழுப்பினான்.

மெல்ல அவள் முடி கற்றைகளை ஒதுக்கியவன், "மகி மா. ஓய் செல்லக்குட்டி" என எழுப்பினான். எல்லாம் தூக்கத்தில் அவள் காதில் பதியாது என்ற தைரியத்தில் தான். அவளும் சிறு சிணுங்களுடன் திரும்பி படுக்க "அடியே என்ன(னை) உருக்குற ஜீவன்னா அது நீ தான்டி" என கூறிக் கொண்டவன் ஒரு பெருமூச்சுடன் "மதுரா எழுந்திரிடி மணியாகுது. சாப்பிடனும்" என அவளை எழுப்பினான்.

பதறி எழுந்த பெண்ணின் முகம் சடுதியில் வியர்வையில் குளித்திட அதை கண்டவனுக்கு விசித்திரமாக பட்டது. ஆடவனை கண்டதும் அவள் முகத்தில் நிம்மதி பரவ, ஒரு பெருமூச்சு விட்டவள் "நி நீங்களா?" என கேட்டாள். "ம்ம்.. நான் தான். மணியாச்சு. சாப்பிடனும்ல? அதான் எழுப்பினேன்" என அவன் கூற "ம்.. ம்ம்.." என்றாள். சிறு புன்னகையை சிந்திவிட்டு உணவை எடுத்தவன் அவளுக்கு ஊட்ட சில நிமிடம் மௌனமாக உண்டாள்.

பின் "உங்கள்ல யாரு சமைப்பீங்க?" என மதுரா கேட்க "ஏன்? நல்லா இல்லையா?" என குறும்புடன் கேட்டான். அதில் பாவைக்கு புரையேறிவிட, இரும்பியவளை கண்டு புன்னகைத்தவன், அவளுக்கு நீர் எடுத்து கொடுத்து "என்ன சரியா சொல்லிட்டேனா?" என கேட்க "அய்யோ இல்ல. நல்லா இருக்கு. அதான் கேட்டேன்" என கூறினாள். "ம்ம்.." என்றவன் "யாருக்கு நேரம் இருக்கோ அவங்க சமைப்போம். எங்கள்ல வசி தான் நல்லா சமைப்பான். நீ வந்ததிலிருந்து அவன் தான் சமைக்குறான்" என கூற "ஓஓ.. நல்லா இருக்கு" என கூறினாள்.

அதில் புன்னகைத்தவன் மீதம் இருப்பதை ஊட்டி முடித்து கீழே சென்று தட்டை அலம்பி வைக்க, அவன் அலைபேசி ஒலித்தது. அழைப்பை ஏற்றவன் "ம்ம்.. சொல்லுங்க ண்ணா" என கூற "உங்களுக்கு அனுபிருக்கேன் சார்" என கூறினார். "ம்ம்.. தாங்க்ஸ் (அ)ண்ணா" என்றவன், இணைப்பை துண்டித்துவிட்டு அவளுக்கு கடைசியாக வந்த அந்த எண்ணை, தனது அலைப்பேசியில் அடித்து அழைத்தான்.

முதல் இருமுறை அழைப்பு துண்டிக்கப்படவும் ஆடவனுக்கு சந்தேகமானது. மூன்றாம் முறை 'ஸ்விட்ச் ஆஃப்' என வரவும் அவன் சந்தேகம் வழுவானது. 'நிச்சயம் அந்த குற்றவாளியாக இருக்க வேண்டும்' என எண்ணியவன் தனது அலைப்பேசியில் இருந்த செயலிகள் மூலம் அந்த எண்ணை டிராக் செய்ய, அது மைசூரில் ஏதோ ஒரு கல்லூரியை காட்டியது. அதில் புருவம் சுருக்கியவனுக்கு பின்பே புரிந்தது அது சிற்பியின் எண் என்பது.

ஒரு பெருமூச்சை விட்டவன், மற்ற எண்களை ஆராய, புதிதாக எந்த எண்ணும் இல்லாததை கண்டுகொண்டான். துப்பு ஏதுமின்றி நடந்திருக்கும் செயல் அவன் கருத்தையும் கவனத்தையும் குடைய, "எவனோ பயங்கரமா விளையாடிருக்கான் போலயே?" என எண்ணிக் கொண்டான். அப்படியே நேரம் செல்ல மாலை நேரம் வசீகரன் வந்தான். உள்ளே வந்தவனுக்கு சூடாக குளம்பியை தயாரித்துக் கொடுத்த ஆதித், "மச்சி" என்க "ம்ம்.. என்ன? எந்த க்ளூவும் கிடைக்களையா?" என வசி கேட்டான். அவனை பார்த்து 'ஆம்' என தலையசைத்தவனிடம் "ம்ம்.. நீ காபிலாம் போட்டு தரும்போதே தெரிஞ்சுது" என்ற வசி "என்ன நடந்தது இன்னிக்கி?" என கேட்டான்.

காலை முதல் நடந்ததை கூறிய ஆதித்தின் முகம் இறுகி இருந்தது. எந்த உணர்வையும் அதில் வசியால் கண்டெடுக்க முடியவில்லை. "என்ன பண்ண போற?" என வசி தீவிரமாக கேட்க ஒரு பெருமூச்சு விட்டு புன்னகைத்தவன் "நம்ம பாக்காத கேஸா? பாப்போம். சிக்காம எங்க போவான்?" என கூறினான். அதில் புன்னகைத்த வசி "இத்தன வருஷம் உன்கூட இருந்த எனக்கே உன்னோட உணர்வுகள ஒவ்வொரு நேரம் புரிஞ்சுக்க முடியலை, மது குட்டி பாவம்" என கூற ஆடவன் வாய்விட்டு சிரித்துக் கொண்டான்.

பின் வம்சியும் வந்திட, அவனைக் கண்ட வசிக்கு மனம் சங்கடமாக இருந்தது. 'சிறு வயது முதல் காதலிப்பவன். அந்த பெண் தற்போது இல்லை எனும்போது அது எத்தனை வலியை கொடுக்கும்? அதுவும் தன் உடனே பிறந்தவனின் வலியை காண எத்தனை கொடுமையாக இருக்கும்? அவன் மன நிம்மதி பாதிக்கப்பட்டால்?' என பலவாறு சென்றது வசியின் சிந்தனை.

வந்தவனோ ஆதித் கொடுத்த குழம்பியை பருகியபடி "மச்சி நான் நைட்டு லேப் போறேன்டா" என கூற "டேய்.. நைட்டுமாடா?" என வசி கேட்டான். "நைட்டு எமர்ஜென்ஸினு ஃபோன் வந்தா நீ ஓட மாட்டியா?" என வம்சி கேட்க வசியின் வாய் கப்பென மூடிக் கொண்டது. அதில் வாய்விட்டு சிரித்த ஆதித் "இதுக்கு தான் நான் இந்த மாதிரி விஷயதுக்குள்ள நுழையுறதே இல்ல" என கூற "போடாங்.." என்றபடி வசி எழுந்து சென்றான்.

இரவு உணவை தயாரித்த வம்சி "மச்சி குட்டிமாக்கு நானே ஊட்டிவிட்டுட்டு கிளம்புறேன்" என கூற "ம்ம்.. சரிடா" என ஆதித் கூறினான். (சிறுவயது முதலே 'மதுக்குட்டி மதுக்குட்டி!' என இரட்டையர்கள் தங்களுள் பேசிப் பலகியதால் குட்டிமா என்றோ மதுக்குட்டி என்றோ தான் அழைப்பர்).

சென்று அவளுக்கு உணவை ஊட்டிவிட்டு மருந்துகளை கொடுத்துவிட்டு வந்த வம்சி இருவருடன் வந்து உணவை உண்டான். "மச்சி இன்னுமாடா இந்த திவி அங்க இருக்கா? மதுக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலை?" என வம்சி கேட்க வசிக்கு வசமாக புரையேறியது. அதில் தன் தொண்டையை செருமிக் கொண்ட ஆதித்தின் முகத்தில் வழமை போல் எந்த உணர்வும் இல்லை.

உணவை உண்டபடி "மதுரா கிட்ட இப்ப அவ ஃபோனே இல்லயேடா" என கூற "அட ஆமாம்ல! டேய் அப்பனா ரெண்டுபேரும் பதற ஆரம்பிச்சுடுவாங்கடா. விஷயம் தெரியுமா தெரியாதா?" என கேட்டான். மீண்டும் பதில் கூற இடமில்லாமல் "ஆமா மதுவ கொல்ல முயற்சி பண்ணவன் யாருனு எதும் விபரம் தெரிஞ்சுதா?" என கேட்க, அது ஆதித்திற்கு வசதியாகி போகவும் முந்தைய கேள்வியை விடுத்து "ம்ம்.. இன்னிக்கி அது தான் பாத்தேன் மச்சி. எந்த க்ளூவும் கிடைக்கல" என கூறினான். "மதுவ கொல்லுமளவு யாருடா எதிரி?" என வம்சி புரியாமல் கேட்க "அதான் எனக்கும் புரியல" என ஆதித் கூறினான்.

தோல்களை குலுக்கி குழப்பங்களை புறம் தள்ளிய வம்சி "சரிடா நான் கிளம்புறேன்" என கூற வசியின் அலைப்பேசி ஒலித்தது. எடுத்து பேசிவிட்டு வைத்தவன் வம்சியை பார்த்து "என்ன வாய்டா உனக்கு? ஏதோ எமர்ஜென்ஸி கேஸாம். நான் கிளம்புறேன்" என கூற ஆடவர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

கிளம்ப எத்தனித்த வம்சி "திவா" என கத்த, மாடியிலிருந்து தனது உடற்சிகைகள் ஆட ஆட ஓடிவந்து அவனிடம் தாவியது திவாகரன். அதை அனைத்து தூக்கியவன் "திவா.. தங்கச்சிய இவன் கூட தனியா விட்டுடாதடா. பாத்துக்கோ" என கூற வசி வெடித்து சிரித்தான். வம்சியின் முதுகிலேயே ரெண்டு போட்ட ஆதித் "போடா டேய்.. உனக்கு பொறாமை" என கூற "இல்லடா. ஒரு அண்ணனா என் பொருப்பு" என கூறி சென்றான். அதில் புன்னகைத்துக் கொண்ட ஆதித், இருவரும் சென்றதும் தூக்கம் வராதமையால், தொலைகாட்சியில் மூழ்கி இருந்தான்.

மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருக்கவே, சற்று கண்கள் சொருகவும் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, மாடிக்கு சென்றான். தன் அறை நோக்கி திரும்பியவனின் கூர்மையான காதுகளில் அவ்வொலி கேட்டது! ஏதோ முனங்கும் சத்தம்! அதை உணர்ந்தவன் முடிச்சிட்ட புருவங்களுடன் மதுராவின் அறை நோக்கி சென்றான்.

மெல்ல அறைக்கதவை திறந்த ஆதி உள்ளே வர உடலை இருபுறமும் வெடுக் வெடுக்கென திருப்பியபடி ஏதோ முனங்கிக் கொண்டிருந்தாள். ஆடவன் அவள் அருகே வர அசைக்க முடியாது கழுத்தோடு கட்டபட்ட கையை மொத்தமாக ஆட்டி மற்றைய கரத்தால் ஏதோ தடுப்பது போல் செய்துக் கொண்டே "வெ.. வெ.. வேணாம்.. இ.. இல்ல.." என முனங்கினாள். முனகல் மெல்ல உரத்த குரலில் வெளிவர துவங்கியது.

"இ.. இல்ல.. நா.. நா.. சொல்லலை.. வேணாம்.. நா சொல்லலை.. தி.. திவி செத்துட்டா.. தி.. திவி செத்துட்டா.." என பிதற்றிய பாவையிடம் வந்தவன், மென்மையான குரலில் "மதுரா" என்க பாவையின் உடல் தூக்கி போட்டது. "இல்ல வேணாம். நா சொல்லமாட்டேன். திவி செத்துட்டா. அவ்ளோதான். வேணாம் விடு" என பாவை கத்த துவங்க பதறிப் போன ஆதித் "மதுரா" என்க "ஆஆ வேணாம்" என கத்தியபடி எழுந்தாள்.

"வேணாம். நா சொல்லலை" என இடது கையால் தன் முகம் மறைத்தபடி பாவை கதற அவள் தோள் பற்றி உழுக்கியவன் "மதுரா" என கத்தினான். அதில் திடுக்கிட்டு கண்திறந்த பெண்ணின் கண்கள் சிவக்க சிவக்க கண்ணீர் வடித்தது, ஏதோ தீப்பிளம்பு வழிவது போன்று இருந்தது. என்ன நினைத்தாளோ? அவன் காலரைப் பற்றிக் கொண்டு அவனை இறுக்கி அனைத்துக் கொண்டவள் "தி திவி திவி" என்க அவள் முதுகை தடவிக் கொடுத்தவன் "ஒன்னுமில்ல மகிமா" என கூறினான்.

கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் "அ அவன் என்ன(னை)" என கூறி வெடித்து அழ "மதுரா ஒன்னுமில்ல. என்ன பாரு. கனவு தான்" என கூறினான். அவனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த பெண், 'இல்லை' என்பதுபோல் தலையசைத்து "அ.. அவன் என்ன(னை)" என கூறி வெட்கித் தலைகுனிந்தாள். அவளின் உடல் விரைத்துக் கொண்டு வர "தி திவி திவி" என பிதற்றினாள்.

அவள் முகத்தை கையில் ஏந்தியவன் "மகிமா என்ன பாருடி" என கூற கண்ணீருடன் அவனை கண்டாள். "ஒன்னுமில்ல" என அவன் கூற 'இல்லை' என்பது போல் தலையசைத்தவள், அவனை மீண்டும் இறுக அனைத்துக் கொண்டு "என்ன விட்டுடாதிங்க. அவன் என்ன(னை). வெ வேணாம்" என கூறினாள். "உன்ன எங்கயும் விடமாட்டேன்டி பட்டு. பயப்படாதடி" என அவன் கூற "தி திவி அ அவ ச சாகலை. அவன் தான். அவன் என்ன(னை)" என்றவள் 'ஆ..' என கத்த அவள் கூறிய வார்த்தைகளில் ஸ்தம்பித்து போனான், ஆதித்.

'திவி சாகவில்லையா?' என அவன் மனம் அதிற, நல்ல செய்தி என்றாலும் முழுதாக சுகிக்க முடியாத நிலையாக இருந்தது. அந்த சிந்தனையில் இருந்த ஆதித் அடுத்து மதுரா கூறிய வார்த்தைகளில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

"அ அவன் என் மேல கக் கை வைக்குறான். எனக்கு பயமா இருக்கு. என்ன விட்டுடாதீங்க" என தத்தி பித்தி கண்ணீருடன் பாவை கூறியதில் அதிர்வும் ஆத்திரமும் ஒரு சேர பெற்றவன் "யாரு மகிமா?" என கேட்டான். நடங்கும் உடலுடன் அவனுடன் மேலும் ஒன்றியப் பெண் "தெர்ல. அவன், பயமா இருக்கு. என்ன அவன்.." என சொல்ல முடியாத தவிப்போடு தினரி "ஆ.. அவன் என்ன விட மாட்டான். என்ன ஏன் காப்பாதுனீங்க? எனக்கு பயமா இருக்கு" என கத்தியவளின் உடல் அருவருத்து விரைத்துப் போனது.

"மகிமா.. நான் இருக்கேன்டி. உன் ஆதித் இருக்கேன்டி. பயப்படாதடி பட்டு. உன்ன யாராலயும் ஒன்னும் பண்ணமுடியாது" என அவள் முகத்தை கையிலேந்தியபடி ஆடவன் கூற கண்களில் கண்ணீர் வழிய "என்ன விட்டுட மாட்டீங்கள்ல?" என கேட்டாள். "மாட்டேன்டி" என அவன் கூற "இந்த அ அனாதைக்கு உங்ககிட்ட கு குடுக்க ஒன்னுமில்லயே" என பாவமாக கூறினாள். "நீ எதுவும் தர வேணாம்டி பட்டு.

நான் இருக்கேன்டி உனக்கு" என ஆடவன் கூற, இன்னும் நில்லா கண்ணீருடன் அவனைப் பார்த்தாள். அவனை ஏக்கமாக பார்த்து "என்ன விட்டுடாதீங்க. அவன் என்ன என்ன" என கூறியவள் உடல் நடுங்க அவளை இறுக அனைத்துக் கொண்டு "நீ எனக்கு தான் பட்டு. உன்ன யாருக்கும் தரமாட்டேன்டி" என்றான். அதில் அவன் கழுத்தை அனைத்துக் கொண்டு மேலும் வெடித்து அழுதவள் கொஞ்சம் கொஞ்சமாக மூர்ச்சையாகி சரிந்தாள்.

தன்னிலை இழந்த தன்னவளை ஆடவன் மெல்ல படுக்க வைக்க, அவன் சட்டை காலரை இறுக்கப் பற்றியிருந்தாள். அன்று அவன் காலரை பற்றியிருந்த அவளது கரத்தை எடுத்துவிட்டவனுக்கு இன்று எடுக்க மனமில்லை. மயக்கநிலையிலும் இறுக்க பிடித்திருந்த பஞ்சு கையினை வருடியவன் அவளுடனே படுத்துக் கொண்டான்.

'தி.. திவி.. சாகலை..' என அவள் கூறிய வார்த்தை அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. 'அப்போ திவிய கொலை பண்ணலை? கடத்தி தான் வச்சிருக்காங்க. வெளிய சொல்லாம இருக்க மதுராவ கூப்பிட்டு மிரட்டிருக்காங்க. அந்த பயத்துல தான் அன்னிக்கி ஹாஸ்பிடல்ல அவ அப்படி நடந்திருக்கா. ஆனா யாரு திவிய கடத்தனும்? காசுக்காக இருக்க நிச்சயம் வாய்பில்லை. அப்போ எதுக்காக?' என யோசித்தவனுக்கு பலதும் தோன்றியது.

ஆனால் அதில் எதுவும் இருக்கக் கூடாது என தான் மனம் வேண்டியது. பாவையின் சீரான மூச்சு அவன் கழுத்தடியில் வந்து மோத, அவளை குனிந்து பார்த்தவன், சிறு குழந்தை போல் உறங்குபவள் நெற்றியில் விளையாடும் முடி கற்றைகளை ஒதுக்கிவிட்டு "உன்ன நான் எப்படிடி விடுவேன்? நீ என் உயிருடி. உன்ன நான் விடவே மாட்டேன்" என கூறிக் கொண்டான்.

அவன் அணைப்பில் துடிப்பது அவன் இதயம் அல்லவே! அதை விடுத்து ஆடவன் எங்கனம்‌ உயிர்வாழ இயலும்!

ஆடவனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. எப்போதடா விடியும் என்றாகிப் போனது. மனதுக்கினியவளின் அருகாமை இனிப்பாய் இனித்தும் சுகிக்கும் மனநிலை இல்லாதது வெறுப்பாக இருந்தது. அவள் கூறிய வாக்கியம் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்து முழு விபரம் அறியத் தூண்டியது. எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தவன் மனம், வெப்பம் தனிக்க ஒரு பெருமூச்சு விட்டு அவளை பார்த்தான்.

அழுத தடம் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அவன் அணைப்பில் பாந்தமாக பொருந்திக் கொண்டு படுத்துக் கிடந்தாள். அவளையே பார்த்தபடி இருந்தவன் இறுதியில் அசந்து உறங்கிப் போனான்.

-தேடல் தொடரும்💝
 
Last edited:

NNK34

Moderator
6. இனம் புரியா தேடலில் நாம்!

காலை வீடு வந்த வசீகரன், அமைதியாக இருக்கும் வீட்டை கண்டே 'இன்னும் ஆதி எழவில்லை' என புரிந்துக் கொண்டான். ஆனால் 'மதுராந்தாகி எழுந்துவிட்டாளா?' என பார்ப்பதற்காக அவள் அறை வந்தவன், இருவரும் படுத்திருப்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை.

'இதென்னடா?' என எண்ணிய வசி காரணமில்லாமல் நண்பன் இங்கு வந்திருக்க மாட்டான் என உணர்ந்து அவர்கள் உறக்கம் கலையாமல் கதவடைத்துக் கொண்டு சென்றான். சில மணி துளிகளில் பாவை துயில் களைய, அவளை அரவனைத்திருந்த கரங்களில் ஏதோ உரிமையும், கதகதப்பும் உணர்ந்தபடி கிடந்தாள்.

மெல்ல துயில் கலைந்து விழி திறந்தவளின் வெகு அருகில் ஆடவனின் முகம். அவனின் மூச்சுக் காற்று வந்து மோதவே, அகல விழி திறந்தாள். பாவையை பாந்தமாக அணைத்தபடி அவன் படுத்திருக்கவே, அதிர்ந்து போனவள் சட்டென எழ, முறிபட்ட கை கொடுத்த வலியில் "ஆ.." என்ற சிறு சத்தத்துடன் மீண்டும் கட்டிலில் பொத்தென சரியா வந்தவளை தன் வலிய கரங்களில் பற்றியிருந்தான்.

துடிதுடிக்கும் விழிகளில் அத்தனை பதட்டமும், சங்கடமும் நிரம்பி இருந்தது. அவளை ஆடவன் மெல்ல அமர்த்த, அவள் கண்ணிலிருந்து வலிந்த கண்ணீரை கண்டு பதறி "மதுரா கை வழிக்குதாடி? இரு நான் வசிக்கு ஃபோன் பண்றேன்" என பேசியவன் சங்கோஜத்துடன் தன் தோள்பட்டையில் இறங்கியிருக்கும் உடையை கண்ணீருடன் சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருந்தவளை கவனித்தான்.

பின்பே அவளின் மனவோட்டாம் அவனுக்கு பிடிபட்டது. அவளிடம் வந்தவன், அதனை சரிசெய்ய, சட்டென "ம்ஹூம்" என்றபடி பதறி நகர்ந்தாள். அவளிடம் தன்னை அவன் ஏதேனும் செய்துவிடுவானோ என்ற பயம் துளியும் இல்லை. தேவையில்லாத மனக்கசப்புகளை உருவாக்கி அவனை சங்கடப் படுத்தும் குற்ற உணர்வும், பெண்ணுக்கே உரிய கூச்சமும் தான். அது அவளவனுக்கா புரியாது?

ஒரு பெருமூச்சை விட்டு அவள் அருகே ஆடவன் அமர குனிந்த தலை நிமிறாது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளின் உடையினை சீர் செய்தவன், போர்வையை அவளின் மடிவரை போர்த்ததிவிட, அதை இறுகப் பற்றியவளுக்கு கண்ணீர் நில்லாமல் வழிந்தது.

'தான் செய்வது சரி தானா? இப்படி முன் பின் தெரியாதவர்கள் வீட்டில் அமர்ந்துக் கொண்டு இருவருக்கும் சங்கடத்தை விளைவித்துக் கொண்டு இருக்கின்றோமே' என முன்பே இருந்த எண்ணம் தற்போது, அவனை உரிமையுடன் கட்டியணைத்து, உடன் படுத்து என மேலும் மனசங்கடத்தை ஏற்படுத்திய குற்ற குறுகுறுப்பில் துடித்தது. பிறந்ததிலிருந்து தாய் தந்தை அறியாத பெண்ணிற்கு, அணைத்துமாக இருந்த தோழியும் தற்போது இல்லாத நிலையில், தாய் பாசத்தின் ஆசையை ஆடவனின் அருகாமை தூண்ட, அவனை விளக்கி நிறுத்தவும் மனம் ரணமாக துடித்தது.

தனது ஏக்கத்திற்கும், ஆடவனின் தனிபட்ட வாழ்விற்கும் இடையான போராட்டத்தில், தளர்ந்து போன பாவை கட்டுப்படுத்த முடியாமல் "ஆ.." என்ற கதறலுடன் அந்த போர்வையை இறுக்கப் பற்றிக் கொண்டு கதறத் துவங்கிட்டாள். அதை சிறு வேதனையுடன் கண்டவன் தன்னை சமண் செய்துக் கொண்டு மெல்ல அவளை அரவனைத்துக் கொள்ள, அப்போதே வீடு வந்த வம்சி, தன் அறை நோக்கி செல்லும் வேலை கேட்ட சத்தத்தில் பாவையின் அறைக் கதவினை பதறித் திறந்தான்.

அந்த அரவத்தில் ஆதி அவனை நிமிர்ந்து பார்க்க, ஆடவனின் அழுத்தமான பார்வையை கண்ட வம்சி, நண்பனின் வாய்மொழியின்றி அவனை புரிந்துக் கொண்டு கதவடைத்துச் சென்றான். பின் மெல்ல அவள் முதுகை ஆறுதலாய் தட்டிக் கொடுத்த ஆதித் "ஒன்னுமில்ல டா.." என கூற விம்மலும் விசும்பலுமாக "ந.. நா வேணாம். என்ன ஆசீராமத்துல கொண்டு போய் சேத்துடுங்க. இங்க இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் உங்களுக்கும் பாரமா எனக்கும் சங்கடமா இருக்குறேன். உ.. உங்க எல்லாரயும் ரொம்ப சங்கடப் படுத்துறேன்" என்றவளின் கரம் அவளையும் அறியாமல் உரிமையாக அவன் சட்டை காலரைப் பற்றிக் கொண்டதே அழகு!

அவள் ஆனாதை ஆசிரமத்தில் சேர்க்கும்படி கேட்டது ஆடவனுக்கு எத்தனை எத்தனை வேதனையை கொடுத்ததோ அத்தனை அத்தனை கோபத்தயும் கொடுத்தது. "மதுரா" என ஆதித் சற்று கடுமையாக அழைக்க, கண்ணீர் திரை மின்னும் கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் "வேணாம். எ என்ன எங்கயாச்சும் கொண்டு போய் விட்டுடுங்க. இங்க இருக்க எனக்கு மனசு கேக்களை. உங்க எல்லாருக்கும் பாரமா இருக்குற போல இருக்கு. நா நே நேத்து ஏதோ தெரியாம" என கூறமுடியாமல் கூறியவள் முகத்தில் அத்தனை சங்கோஜம்.

"என்ன மன்னிச்சுடுங்க. சாரி" என கூறி மேலும் வெடித்து அழுதாள். "ஏ! ஏன்டி இப்போ இப்டி அழற?" என ஆடவன் அவளை அதட்ட "என்ன மன்னிச்சுடுங்க" என்று கூறி மேலும் தேம்பி தேம்பி அழுதாள்.

அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன் "மதுரா" என ஆழ்ந்த குரலில் அழைக்க, கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். தன் கட்டைவிரல் கொண்டு அவள் கண்ணம் படிந்திருந்த விழிணீர் துடைத்தவன், "ஏதோ உன் மேல உள்ள கருணைக்காக தான் இதெல்லாம் பண்றேன்னு நினைச்சுட்டியாடி?" என வினவ, மலங்க மலங்க விழிக்கும் விழிகளின் கருமணிகளை உருட்டிப் பார்த்தாள்.

அதில் மெல்ல புன்னகைத்தவன், மென்மையான குரலில் "உன்ன எங்கயும் விடும் எண்ணத்தில் நான் இல்லை. அத முதல புரிஞ்சுக்கோ. உனக்கு நான் இருக்கேன். தேவையில்லாம கண்டதயும் நினைச்சு மனச போட்டு குழப்பிக்காம இரு" என்றான். அவன் அருகாமையில் சில நிமிடம் தன் கவலைகளையும் மறந்து போனாள் என தான் கூற வேண்டும்.

பின் மெல்ல அவள் முகம் பற்றி நிமிர்த்தியவன் "நான் இருக்கேன் மதுரா. திவிய கண்டிப்பா கண்டுபிடிப்பேன். கவலைப்படாத" என கூற அத்தனை நேரம் இருந்த தைரியம் யாவும் கரைந்து போனது. பாவையின் உடலில் மெல்ல நடுக்கம் உருவானது. மூச்சுக்கு தவிப்பவள் போல் மதுரா மூச்சை இழுத்து விட, "மதுரா ரிலாக்ஸ். ஒன்னுமில்ல என்ன பாருடா" என கூறி ஆசுவாசப் படுத்தினான். அவனை கலங்கிய கண்களுடன் பாவை நிமிர்ந்து பார்க்க, "மகிமா எதுக்குடா இந்த பயம்?" என கேட்க அவள் உடல் மேலும் நடுங்கியது.

"ஒன்னுமில்லடா. நான் இருக்கேன்டி" என்றவன் "மதுரா" என்க அவன் கண்களை நோக்கினாள். "என் மேல நம்பிக்கை இல்லயா?" என ஆதித் கேட்க அவனை விழிகள் விரிய கண்டாள்.
"சொல்லு.." என அவன் கூற "அப்டிலாம் இல்ல" என திக்கித் திணறிக் கூறினாள்.


"அப்போ சொல்லுடி. என்ன தான் ஆச்சு?" என ஆதித் கேட்க பயத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது, அவளுக்கு. "மகிமா நீ சொல்லுறத வச்சு தான் நான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும். நீ பயந்துகிட்டே இருந்தா அப்றம் நாம நம்ம திவிய இழக்க வேண்டியது தான்" என ஆடவன் கூற, அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தவள் விழியிலிருந்து விழுக்கென நீர் வடிந்தது. அவன் பார்வை கனிவாக அவளை நோக்க, மெல்ல மூச்சை இழுத்து விட்டாள்.

அவள் பட்டுக் கண்ணங்களை பற்றி அவள் கண்ணீரை துடைத்தவன் "சொல்லுடா" என கேட்க, படபடக்கும் இதயமும், துடிதுடிக்கும் அதரங்களும் கொண்டு பேசத் துவங்கினாள்.

சில நாட்களுக்கு முன்பு..

"ஏ பைதியம். மணி என்ன ஆகுது பாத்தியா? இன்னும் படுத்து உருண்டுகிட்டு கிடக்க.‌ எழுடி" என்ற வழக்கமான தோழியின் வார்த்தைகளோடு எழுந்தாள், மதுராந்தாகி. "செமெஸ்டெர் ஹொலிடே விட்டாலும் விட்டாங்க, நல்லா தூங்கி வழியுற. போ! போய் ரெடி ஆகு" என திவ்யாம்பிகை கூற "எங்க போறோம்?" என தூக்கக் கலக்கத்தில் குழைவாக கேட்டாள்.

"ம்ம்.. என் புருஷன் வீட்டுக்கு" என திவி கூற "பாரேன் சொல்லவே இல்ல. அங்க நான் எதுக்கு? நீயே போ. உன் புருஷன் நீனு நினைச்சு என்னய கட்டிபுடிச்சுட போராறு" என உலறிவிட்டு பாவை மீண்டும் படுக்க, தற்போது கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள், திவ்யா.

போர்வையை உருவியவள் "அடியே கடுப்பாக்கதடி. வேலைக்கு போகணும். எழு மது" என அதட்ட, சிணுங்கியபடி கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்தாள். "அய்யோ தூக்கமா வருது. அவசியம் அங்க போகனுமா?" என மது சிணுங்க "நான் அதாக போறேன், இத கிழிக்க போறேன்னு சொல்லிட்டு இருந்தா போதாது. அதுக்கு நல்ல காலேஜ்ல சேந்து நல்லா படிக்கணும். அதுக்கு காசு வேணும், காலேஜ்க்கு போட்டுட்டு போக டிரஸ் வேணும், மூணு வேலை சாப்பிட சாப்பாடு வேணும். இது எல்லாம் குடுக்கும் காசு வேணும்னா அதுக்கு ஒரு வேலை வேணும், அந்த வேலைக்கு தினமும் போக வேணும்" என பேசி முடித்த திவி திரும்ப கதவை 'டப்' என மூடிக் கொண்டு மது குளியளரைக்குள் சென்றிருந்தாள்.

அதில் களுக்கிச் சிரித்துக் கொண்ட திவி சென்று காலை உணவினை தயாரிக்க, குளித்து முடித்து பாவை வந்தாள். பின் இருவரும் அமர்ந்து உணவை முடித்துக் கொள்ள, தங்களது வண்டியை இயக்கிய திவியின் பின்னே மது அமர்ந்துக் கொண்டாள்.

சில நிமிட பயணத்தில் அந்த பெரிய கெபேவிற்குள் நுழைந்தனர். அதை நடத்தும் வேலிடம் வந்து "குட் மார்நிங்க அண்ணா" என இருவரும் கூற "குட் மார்நிங்கடா" என்றவர் "அடுத்து காலேஜ் எப்போடா? பீஸ் எதுவும் கட்டனுமா? பணம் வேணுமா?" என அக்கறையுடன் கேட்டார். சிறுவயதில் பள்ளி படிப்பை ஆசீராமத்தின் உதவியுடன் முடித்த பெண்கள், தங்களது பன்னிரண்டாம் வகுப்பின் பரிட்சை முடிந்த கையோடு இங்கு வேலைக்கு வந்து சேர்ந்திருந்தனர். கல்லூரி படிப்பிற்கு பணம் சேர்க்கவும் தங்களின் செலவுகளை பள்ளி படிப்பு முடிந்ததும் ஆசிரமம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கும் அப்போதிருந்த வேலைக்கு வந்திருந்தனர்.

இருவரும் வாழ்ந்த ஆசிரமத்தில் தமிழர்கள் இருக்கவே, தாய்மொழி விட்டுபோகாமல் இருந்தது. ஆனால் கன்னடமும் கற்றுத் தேர்ந்திருந்தனர். வேல்முருகனும் தமிழ்நாட்டவர் என்பதால் இருவரிடமும் ஒரு பிணைப்பு வந்தது. அதுவும் சிறு வயதில் யாருமற்று தவிக்கும் பெண்களை கண்டு மனம் இளகி தான் போனார். ஆனால் அந்த வயதிலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் தாங்கள் உழைத்து சம்பாதித்துக் கொள்வதாக வைராக்கியம் காத்த பெண்களின் மீது ஒரு மதிப்பும் வந்தது. அதனாலேயே இருவர் மீதும் ஒரு தனி பாசம்.

வேல்முருகன் கேட்ட கேள்விக்கு "அதுலாம் இருக்கு அண்ணா. பாப்பா எப்டி இருக்கா? ஜுரம் பரவாயில்லயா?" என திவி கேட்க "ம்ம்டா.. பரவாயில்ல" என கூறினார். "அட என்ன திவி நீ? பாப்பாவ விடு. இங்க அண்ணி இல்லாம நம்ம அண்ணன் தான் ஜுரம் வந்த மாதிரி இருக்காரு" என மது, பிரசாவத்திற்கு ஊர் சென்று சுகமாக பெண் பிள்ளை ஒன்றை பெற்றுக் கொண்ட வேல்முருகனின் மனைவி கௌசிகா பற்றி கூறி கேலி செய்ய "இந்தா உனக்கு இதுவே வேலை. போய் இருக்குற வேலைய பாரு" என வேல் செல்லமாக அதட்டினார்.

சிரித்துக் கொண்ட தோழிகள் வெளியே செல்ல, ஒரு முறை உள்ளே எட்டி பார்த்து "எங்கள போக சொல்லிட்டு வெக்க பட்டுக்குறீங்களா? ஓகே ஓகே" என கூறிவிட்டு ஓடினாள். பின் தங்கள் வேலையில் மூழ்கிய பெண்களை அந்த ஞாயிறு படுத்தி எடுத்தது என தான் கூற வேண்டும். அன்று சற்று கூட்டம் அள்ளி, வேலையை பரக்கடித்து திவ்யாம்பிகைக்கு தலைவலியையே கொடுத்திருந்தது.

தலைவலியுடன் வேலை செய்யும் தோழியை கண்ட மதுராந்தாகி "திவி நீ வீட்டுக்கு போடி. எவ்ளோ நேரம் இந்த தலவலியோட இருப்ப? போ" என கூற "ஒரு தலவலிக்காகவாடி வீட்டுக்கு போக?" என்றாள். "பின்ன இதுக்காக எங்கயும் போய் முட்டிகிட்டா பர்மிஷன் கேப்பாங்க?" என மதுரா கூற "அடியே அருக்காத. அல்ரெடி தலவலி பின்னுது" என்றாள்.

"அதான் வீட்டுக்கு போக சொல்றேன். போய் ஒரு மாத்திரைய போட்டு சமத்தா பாடு. நான் எப்பவும் போல ஈவினிங் வந்துடுறேன்" என மதுரா கூறி தோழியை சம்மதிக்கவும் வைத்திருந்தாள். "சரி நீ சாவிய வச்சுக்கோ. நான் டாக்ஸில போய்க்குறேன்" என கூறி சாவியை கொடுத்த திவி வீட்டுக்கு புறப்பட்டாள். பின் மீண்டும் தன் பணியை தொடர்ந்த மதுரா, மாலை பொழுது சாய்ந்து இருள துவங்கும் வேலை "அண்ணா நா கிளம்பவா?" என கேட்டாள்.
"ம்ம்.. போய்ட்டுவாடா. போய் அவள சாப்பிட வையு" என்று வேல் கூற "ம்ம்.. சரி அண்ணா" என கூறினாள்.


தங்கள் வண்டியை இயக்கிய பாவை நிமிடங்களில் வீட்டை அடைய, விளக்கு எதுவும் போடப் படாமல் இருள் மயமாக இருந்தது. "போகமாட்டேன் போகமாட்டேன்னு சொல்லிட்டு எப்டி தூங்குரா? இன்னும் லைட் கூட போடலை" என கூறியபடி வண்டியை நிறுத்திவிட்டு வாசல் விளக்கை போட்டுவிட்டு, வண்டி சாவியுடன் இருந்த வீட்டு சாவிக் கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்றாள்.

இருட்டாக இருந்த வீட்டை கண்டு "அம்மாடி.." என்றவள் விளக்கை உயிர்பிக்க வேண்டி நகர காலில் ஏதோ இடிபட்டது. ஒரு வகையான வித்தியாசமான நாற்றம் மூக்கை எட்ட, "என்ன ஸ்மெல் இது?" என்று இருளோடு குனிந்து பார்த்தாள். யாரோ படுத்திருப்பது போல் இருக்க, "திவி" என முணுமுணுத்த பாவை, விளக்கை உயிர்பிக்க, ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.

அதில் பதறிப் போன மதுரா, "ஏ! திவி!" என அவள் கண்ணம் தட்ட, எந்த அசைவும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த திவி‌, சென்று புத்துணர்வு பெற்று வரவே, மேஜையிலிருந்து கீழே விழுந்திருந்த வண்ண திரவம் கொண்ட அலங்காரப் பொருள் உடைந்து கிடந்ததில் கால் வைத்து வழுக்கி மல்லாக்க விழுந்திருந்தாள். அதில் தலையில் அடித்து ரத்தம் கசியவே வலி பொறுக்க மாட்டாது, எழ முடியாமல் தவித்தவள், மூர்ச்சையாகி போகியிருந்தாள்.

தனக்கென்று இருப்பவள் இருக்கும் நிலை கண்ட மதுராவின் கண்கள் கலங்கிவிட, "ஏ திவி திவி" என கண்ணீருடன் அவள் கன்னம் தட்டி கதறினாள். பின் நொடியும் தாமதியாமல், வெளியே வந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் அவளை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை அழைத்து சென்றாள்.

அங்கு அவளை அட்மிட் செய்தவள் அழுதுகொண்டே "டாக்டர் திவி, என் ஃப்ரெண்ட் கீழ விழுந்துட்டா. தலைல அடிபட்டு நிறைய பிளட் லாஸ் ஆகிருக்கு" என கன்னடத்தில் அழுகையுடன் கூற "அவங்களுக்கு என்ன பிளட் குரூப்?" என கன்னடத்தில் கேட்டார். "'ஓ' பொசிட்டிவ் தான் டாக்டர். என்னோடதும் அது தான். பிளட் வேணும்னா என்கிட்டருந்து கூட எடுத்துக்கங்க" என அவள் கூற "ஓகே பாணிக் ஆகதிங்க. உங்க ஃப்ரெண்ட்க்கு ஒன்னும் ஆகாது" என கூறினார்.

பின் வந்த செவிலி ஒருவர் "அவங்களுக்கு நீங்க என்ன வேணும்?" என கேட்க "நான் அவ ஃப்ரெண்ட்" என கூறினாள். "அவங்க வீட்டுக்கு தகவல் சொன்னீங்களா? பேரண்ட்ஸ வர சொல்லுங்க. சின்ன ஆபரேஷன் பண்ணனும். அதுக்கு கையெழுத்து போடணும்" என செவிலி கூற "அ அக்கா எதுவும் பெரிய பிரச்சனையா?" என கேட்டாள். "பிளட் லீக் ஆகி ரொம்ப நேரம் ஆனதுல பிளட் களோடாகிருக்கு. அதுக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும். பணமும் கட்டனும். அதான் சொல்றேன்.. யாரயும் வர சொல்லுங்க" என அவர் கூற மனதால் உடைந்து போன பெண் "அக்கா எங்களுக்கு யாரும் கிடையாது" என கூறினாள். கூறும்போதே அவள் குரல் உடைந்துபோக "எவ்ளோ கட்டணும்னு சொல்லுங்க. நா கொண்டுவறேன்" என கூறினாள்.

அந்த செவிழியாருக்கே ஒரு மாதிரி ஆகிப் போனது. "பயப்படாதடா. ஒன்னும் ஆகாது" என கூறி அவளிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு பணத்தொகையை சொல்லி கட்டும்படி கூறிச் சென்றார். அங்கு வந்த மருத்துவரிடம் "டாக்டர் திவிக்கு ஆபரேஷன ஸ்டார்ட் பண்ணிடுங்க. நான் கண்டிப்பா பணம் எடுத்து வந்திடுவேன்" என கூறி சென்றவள் தங்களின் சேமிப்பு, பிறந்ததிலிருந்து தன்னிடம் இருக்கும் ஒரே ஒரு தங்கச் சங்கிலி என அனைத்தும் கொண்டு ஓரளவு தொகையை திரட்டிக் கொண்டு சென்றாள்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
7. இனம் புரியா தேடலில் நாம்!


பணத்தை கட்டிய மதுராந்தகி, அந்த செவிலியிடம் சென்று கூற "ஒன்னும் பயப்பட வேண்டாம்டா. ஆபரேஷன் ஆரம்பிச்சுடாங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை" என கூறி ஆறுதல் படுத்தி சென்றார். சில மணி நேரங்களுக்கு பின் சிகிச்சை நல்லபடி முடிவடைய, "ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. ஆனா அவங்க கண்ணு முழிச்சா தான் எதுவும் சொல்லமுடியும்" என மருத்துவர் கூறிச் சென்றார்.

இருளடைந்த காலைப் பொழுது.. அங்கிருந்த செவிலியிடம் "அக்கா திவி எப்போ கண்ணு முழிப்பா?" என கேட்க " நீ வீட்டுக்கு போனும்னா போடா. உன் நம்பர் ஃபார்ம்ல இருக்குல? அந்த பொண்ணு முழிச்சா உனக்கு சொல்றேன்" என கூறினார். சரி என கூறிய பெண், தன் வீட்டிற்கு சென்றாள். வீட்டை அடைந்த பெண், வீட்டை சுத்தம் செய்துவிட்டு, தானும் குளித்து வந்தாள். அடுத்த வேலை செலவுக்குக் கூட காசு இல்லாத நிலையில், வேலைக்கு செல்லாமல் இருந்தால், மேலும் ஆகவேண்டிய மருந்து செலவுகளுக்கு பணம் இருக்காது என்பதை உணர்ந்த மதுரா, கண்களை இறுக மூடித் திறந்து வேலைக்கு ஆயுத்தமானாள்.

கெபேவிற்கு வந்தவள், வேல்முருகனை காணாமல் நேரே வேலை செய்யும் இடத்துக்கு சென்றிட்டால். சில மணி நேரத்திற்கு பின், வெளியே வந்த வேல், மதுராவை கண்டு "மது" என்றபடி அவளிடம் வந்தார். "மதுமா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? திவி எங்க? இன்னும் உடம்பு முடிலயா?" என வேல் கேட்க அவரை சோர்வான பார்வை பார்த்தவள் 'ஆம்' என மட்டும் தலையை ஆட்டி வைத்தாள்.

சிறு புன்னகையுடன் "இதுக்கா முகத்த இப்டி வச்சிருக்க? உன் ஃப்ரெண்ட் தான் ஊரயே விக்குற ஆளாச்சே. அவள இந்த தலவலிலாம் ஒன்னும் பண்ணிடாது. இதுக்கு போய் முகத்த உம்முன்னு வச்சுகிட்டு" என கூறி அவளை ஆறுதல் படுத்திவிட்டு செல்ல, பாவையின் அலைபேசி ஒலித்தது. அழைத்தது சிற்பிகா! அவள் பெயருடன் முகம் ஒளிர்வதை கண்ட பாவைக்கு, கண்கள் கலங்கி, கை நடுங்கியது. நடுங்கும் விரலுடன் இயக்கி காதில் வைக்க, "ஏ மது! என்ன திவி ஃபோன் எடுக்கலை? உனக்கும் மார்னிங் போட்டேன் எடுக்கலை. என்னடி பண்றீங்க?" என சிற்பி கேட்டாள்.

தடுமாறி நின்ற மதுராவின் மனமோ 'வேணாம் மது.. நம்ம திவிக்கு ஒன்னுமில்லை. சிற்பிக்கு வேற எக்ஸாம்ஸ் நடக்குது. இப்போ இத சொன்னா அவ கவனம் சிதறும். திவி கண்ணு முழிச்சதும் சொல்லிப்போம்' என எண்ணவே "அ அது தூங்கிட்டோம். ம்ம்.. தூங்கிட்டோம் சிற்பி" என கூறினாள். "அதுசரி எக்ஸாம் எழுதபோறேன். அதான் ஃபோன் பண்னேன்" என சிற்பி கூற, "ஒ ஆல் தெ பெஸ்ட் சிற்பி. நல்லா பண்ணு" என கூறினாள். "ம்ம் டி.. அந்த நாய் எங்க? அதுகிட்ட குடு" என சிற்பி கூறவே, பாவையின் இதயம் ஏகபோக வேகத்தில் துடித்தது.

"ஹலோ" என சிற்பி கூற "ஆங் சிற்பி. திவி வீட்ல இருக்கா. நான் இங்க கெபேல இருக்கேன்" என பாவை கூறினாள். "அப்டியா? என்னாச்சு?" என சிற்பி கேட்க "அவளுக்கு தலவலி. வேற ஒன்னுமில்ல. தூங்கிட்டு இருப்பா. அதான் உன் ஃபோன் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டா" என தத்தி பித்தி கூறினாள். "ஓ சரிசரிடி. எனக்கு நேரமாகுது. நா கிளம்புறேன். வந்து பேசுறேன்" என சிற்பி கூற "ம்ம் சிற்பி. நல்லா பண்ணு" என்றவள் இணைப்பை துண்டித்தாள். அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. 'ஒரு நாளில் ஒன்னும் ஆகிடாது' என்றவள் போனால் போகட்டும் என விடுப்பை போட்டுக் கொண்டு மருத்துவமனை வந்தாள்.

திவி இருக்கும் இடம் வந்தவள், சுற்றி முற்றி பார்க்க, யாருமில்லை. அந்த அறையின் கதவின் வழியே பார்த்தவள், "திவி இல்ல" என முணுமுணுத்தாள். அந்த வழி வந்த ஒரு செவிலியை "அக்கா அக்கா" என பாவை நிறுத்த " ஏனு? (என்னமா?)" என கேட்டார்.

(இருவரின் கன்னட சம்பாஷனைகள் தமிழில்)

"இங்க என் ஃப்ரெண்ட் திவ்யாம்பிகைய அட்மிட் பண்ணிருந்தேன். கீழ விழுந்துட்டானு அட்மிட் பண்ணிருந்தேன். அவ கண்ணு முழிச்சுட்டாளா?" என எதிர்பார்ப்புடன் பாவை கேட்க "திவ்யாம்பிக்கையா? அப்படி யாரமும் இங்க அட்மிட் ஆகலையே" என கூறினார்.

அதில் அதிர்ந்த பெண் "அக்கா! நான் தான் நேத்து அட்மிட் பண்னேன். பிளட் க்ளோட் ஆகிடுச்சுனு ஆபரேஷன் கூட பண்ணினாங்க. இங்க தான்" என அந்த அறையை சுட்டிக் காட்டி "இங்க ஒரு நர்ஸ் அக்கா கூட இருந்தாங்களே? என்ன வீட்டுக்கு போக சொல்லி, திவி கண்ணு மூழிசுட்டா சொல்றேன்னு கூட சொன்னாங்க" என கூறினாள்.

அவளை விசித்திரமாக பார்த்தவர் "என்னமா உலருர? இந்த ரூம்ல ரெண்டு நாளா ஒரு வயசானவர் தான் இருக்காரு. இப்போ வந்து உன் ஃப்ரெண்ட் இங்க தான் இருந்தானு சொல்ற? ஹாஸ்பிடல் எதுவும் மாறி வந்துடியா?" என கேட்க பாவைக்கு உலகமே சுற்றுவது போல் ஆனது. "அக்கா என்ன சொல்றீங்க? நான் இங்க தானே சேர்த்தேன்" என கண்ணீருடன் கூற "சரிவா. போய் ரிஜிஸ்டர்ல பாப்போம்" என கூறி அவளை அழைத்துச் சென்றார்.

முகப்பிலிருந்த பெண்ணிடம் வந்த செவிலி "மகா இந்த பொண்ணு ஏதோ நேத்து அவ ஃப்ரெண்ட கூட்டிட்டு வந்து இங்க அட்மிட் பண்னேன்னும், இப்போ காணும்னும் சொல்லுது. ஆனா அங்க ரெண்டு நாளா ஒரு வயசானவர் தான் முடியாம இருக்கார்" என சொல்ல "அப்டியா? ஏம்மா உன் ஃப்ரெண்ட் பேர் என்ன?" என கேட்டார். "திவ்யாம்பிக்கை க்கா. கொஞ்சம் நல்லா பாருங்க க்கா. நேத்து தான், சாயிங்காலம் சேர்த்தேன். கீழ விழுந்து தலைல பிளட் க்ளோட் ஆகிடுச்சுனு ஆபரேஷன் பண்ணாங்க" என பீதியுடன் மதுரா கூற "இதோ பாக்குறேன்.." என கூறி ஒரு புத்தகத்தை எடுத்து பிரட்டினார்.

அதை பிரட்டியவரோ "இல்லயே. அப்டி யாருமே இங்க அட்மிட் ஆகலையேமா" என கூற "அக்கா நல்லா பாருங்க. இங்க தான் சேர்த்தேன்" என கிட்டதட்ட கத்தியே விட்டாள். அதில் யாவரும் அவர்கள் புறம் திரும்ப அந்த செவிலி "ஏம்மா கத்தாத. இது ஹாஸ்பிடல் இப்டிலாம் கத்த கூடாது. நல்லா யோசிச்சு பாரு. வேற ஹாஸ்பிடல் ஏதும் இருக்க போகுது" என சொன்னார். "அக்கா நான் தான் இங்க சேர்த்தேன். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. கொஞ்சம் நல்லா பாருங்க. நார்மல் வார்ட் ஏதும் மாத்திருக்க போறாங்க" என அழுகையுடன் பாவை கதற, அதற்குள் அங்கு ஒரு மருத்துவர் வந்திட்டார்.

"என்ன பிரச்சனை?" என அவர் கேட்க, அந்த செவிலியும் அணைத்தயும் கூறினார். மதுவை கண்டவர் "நல்லா ஞாபகம் இருக்காமா?" என கேட்க அழுகையுடன் "இங்க தான் டாக்டர்" என கூறினாள். "சரிசரி வாங்க" என்றவர் சென்று, சில நிமிடங்களில் "நீங்க சொல்ற டீடெயில்ஸ்ல இங்க யாருமே அட்மிட் ஆகலையேமா. நீங்களே முதல இந்த ஹாஸ்பிடல் வரலை. நேத்து நீங்க சொன்ன நேரத்துல ஹாஸ்பிடல் சர்வைலென்ஸ் காமெரால செக் பண்ணிட்டேன்" என கூறினார்.

அதில் சர்வமும் நடுங்கப் பெற்றவள், உறைந்து நின்றது சில வினாடிகளே. "ஏய் ஒழுங்கா பாரு..
நான் இங்க தான் சேர்த்தேன். உங்களுக்குலாம் பைத்தியமா?" என கத்தவே நேற்று அவள் கண்ட மருத்துவரை கண்டாள். அவரிடம் பித்து பிடித்தவள் போல் சென்றவள் "டாக்டர்.. நீங்க தானே நேத்து திவிக்கு ட்ரீட்மெண்ட் பாத்தீங்க? அவ இங்க இல்லவே இல்லைனு சொல்றாங்க. அவ எங்கணு பாருங்க டாக்டர்" என அழுதபடி கெஞ்சினாள். அவளை விசித்திரமாக பார்த்தவரோ "யார்மா நீ?" என கேட்க அவரை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த பெண், ஆத்திரத்தில் அவர் வெள்ளை ஆங்கியை கொத்தாக பிடித்துக் கொண்டு "என்ன பாத்தா எப்டி தெரியுது? நேத்து இங்க தானே அவள சேர்த்தேன். இப்போ ஆளாளுக்கு இல்லை இல்லைனு சொல்றீங்க. உங்க எல்லாருக்கும் பைத்தியமா?" என கத்தினாள்.

"ஹலோ என்ன பண்றீங்க? ஏம்மா யாரு இந்த பொண்ணு? சரியான பைத்தியமா இருக்கும் போல" என அவர் கூற ஒரு செவிலி பாதுகாவளரை கூட்டி வந்திருந்தார். "ஏய் என் ஃப்ரெண்ட் எங்க? என் திவிய என்னடா பண்ணீங்க? அவ எங்கடா?" என கத்த, அந்த காவலர் அவளை, பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

"அண்ணா அண்ணா நீங்களாவது கேளுங்க ண்ணா. யாருமில்லாதவனா ஏமாத்துவாங்களா? அண்ணா நீங்களாவது எனக்காக கேளுங்க ண்ணா" என அந்த வாசற்காவளரைப் பார்த்து பாவை கேட்க "ஏம்மா, நேத்து நான் வேலைக்கே வரலை. நீ வந்திருந்தா ஒன்னு ரிஜிஸ்டர்ல இருந்திருக்கும், இல்ல காமராலயாவது இருக்கும். எதுலயுமே இல்லை. அப்றம் எதுக்கு ஆர்பாட்டம் பண்ற?" என கேட்டார். "அண்ணா ஏதோ ஃப்ராடுதனம் பண்ணுராங்க அண்ணா என் திவிய இங்க தான் அண்ணா அட்மிட் பண்னேன்" என பாவை கதறினாள்.

அவருக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தாலும், உதவி செய்யும் வசதியில் அவர் இல்லாததால் அமைதியாகவே இருந்தார். தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட பெண் வேல்முருகனை கூட்டி வரலாம் என முடிவெடுத்துக் கொண்டு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றாள்.

கடையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தவள் வண்டியை பின்னிலிருந்து வந்த ஒரு கார் இடித்திட, பாவை "ஆ.." என்ற அலறலுடன் கீழே விழுந்தாள். ஆள் அரவமற்ற தெருவதில் அந்த காலை நேரமும் கூட அமைதியாக தான் இருந்தது. பாவை சுதாரித்து எழுவாதற்குள் அந்த வண்டி அவளை விழுங்கிக் கொண்டு சென்றிட, ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து போனாள்.

மருண்ட விழிகளை பாவை சுழற்ற, முகத்தை கைக்குட்டை கொண்டு மறைத்துக் கொண்டு, நாளைந்து ஆஜானுபாகுவான ஆண்கள் இருந்தனர். அதில் அரண்டு போன பெண் "யார் நீங்க?" என நடுநடுங்கும் குரலுடன் வினவ "நாங்க சொல்லும்படி கேட்டா அண்ணன். இல்லைனா புருஷன். எப்டி வசதி?" என ஒருவன் கூறினான். "டேய் புருஷன்னு சொல்லாதடா. புருஷனுங்கனு சொல்லு" என மற்றொருவன் கூறி, மதுவை வக்கிரமான பார்வை பார்க்க, அதில் நடுக்கம் பெற்றவள் "என்ன என்னென்னமோ சொல்றீங்க?" என பயத்துடன் அப்பாவியாக வினவினாள்.

"டேய் குழந்தைக்கு புரியலை போலடா" என ஒருவன் கூற "அப்போ டெமோ காட்டவேண்டியது தான்" என கூறிய மற்றையவன் அவள் துப்பட்டவை உருவினான். அதில் அலறியப் பெண் "அண்ணா.. ஏன் இப்டி? வேணாம் விடுங்க" என கத்த, அவளை பின்னிலிருந்து ஒருவன் இருக்க அணைத்துப் பிடித்துக் கொள்ள, மற்றையவன் அவளை தொடக் கூடாத இடங்களில் எல்லாம் தொட்டு அருவருக்கச் செய்தான். அதில் அருவருத்தப் பெண், திமிரியபடி முடிந்தமட்டும் கத்த, "நீ என்ன கத்தினாலும் வெளிய கேக்காது" என கூறினான்.

"ஆ.. விடுங்க. அய்யோ வேணாம்" என பாவை கதற, அவள் இடை பற்றி தன்னை நோக்கி இழுத்துக் கொண்ட ஒருவன், "சொல்லு திவிக்கு என்னாச்சு?" என கேட்க கதறிக் கொண்டிருந்தவள் திகைத்துப் போனாள். "சொல்லு" என அவன் மிரட்ட "நி நீங்க? உங்களுக்கு திவி இருக்கும் இடம் தெரியுமா?" என கேட்டாள்.

அதில் வாய்விட்டு கேவலமாக சிரித்தவன் "தெரியும். ஆனா சொல்லமுடியாது" என சொல்ல "பிளீஸ்.. பிளீஸ் அண்ணா. அவ பாவம். உங்களுக்கு என்ன வேணும்னாலும் நான் தரேன். அவள விட்டுடுங்க. எனக்கிருக்குற ஒரே உயிர் அவ தான். பிளீஸ்" என கதறினாள்.

"ஏய் அவ தான் எங்களுக்கும் வேணும். வெளிய யார் கேட்டாலும் திவி செத்துட்டானு தான் சொல்லணும். என்ன சரியா?" என ஒருவன் கூற ரௌத்திரம் பெற்றவள் "முடியாது. அவ உயிரோட இருக்கும்போது நான் ஏன் அப்படி சொல்லணும்? சொல்ல முடியாது. நீங்க யாரு? ஏன் அவள கடத்தி வச்சிருக்கீங்க?" என கத்தினாள்.

"இப்போ தான சொன்னேன். எதுக்கு கத்துர? பண்ணதுலாம் பத்தலையா?" என்றவன், அவளை இறுக அனைத்து அவள் கழுத்தில் இதழ் பதிக்க, தீ பட்டது போல் துள்ளிக் கதறினாள். "ஆ.. வேணாம்" என அவள் கத்த, மாறி மாறி அங்குள்ளவர்கள் அவளை தங்கள் கைகளுக்கு மாற்றிக் கொண்டு, தொட்டுத் தடவி வதைத்தனர்.

வண்டியை ஒரு ஓரம் நிறுத்தியவர்கள் பிரம்மை பிடித்தார் போன்ற விழியுடன் நடுங்கிக் கொண்டிருந்தவளை பார்த்து "திவி செத்துட்டா. ஏதாவது வாய துறந்தனு தெரிஞ்சது அப்றம் தொட்டுகிட்டுலாம் இருக்க மாட்டோம். மொத்தமா முடிச்சுடுவோம்" என கூறி இறக்கிவிட்டுச் சென்றனர். அங்கிருந்து பித்துப் பிடித்தார் போல் சென்றவளை தான் ஆடவன் சாலையோரம் காண, அவன் சுதாரிக்கும் முன் வண்டியில் இடிபட்டுப் போனாள்.

நடந்தவற்றை கூறி முடித்த மதுராந்தகி உடல் நடுநடுங்க "அவன் எ என்ன. ஆஆ" என கதறினாள். அதில் ஆனானப்பட்ட ஆதித்தனுக்கே கண்ணீர் மழை பொழிய, அவளை இறுக அனைத்துக் கொண்டான். "எனக்கு பயமா இருக்கு. அவன் என்ன விடமாட்டான். என்ன எதுக்கு காப்பாத்துணீங்க? அப்படி சாகுறதுக்கு நான் வண்டில அடிபட்டே செத்திருப்பேன். என் உடம்புலாம் எரியுது. என் திவிய என்ன செஞ்சாங்களோ?" என அப்பாவியாக கதறித் துடிக்க "ஒன்னுமில்ல மகிமா. ஒன்னுமில்ல. நான் இருக்கேன்டி. உனக்கு நான் இருக்கேன். அவனுங்கள சும்மா விடமாட்டேன்டி பாப்பா" என கூறினான்.

ஆடவனை இறுக அனைத்துக் கொண்ட பாவை கதறித் கதறித் துவண்டு சரிய, "மதுரா! மகிமா!" என்றபடி அவளை உழுக்கினான். பின் அவளை மெல்ல கட்டிலில் படுக்க வைத்தவன் கீழே விரைந்து "மச்சி" என கத்த, வசியும் வம்சியும் சமையலரையிலிருந்து எட்டிப் பார்த்தனர். "மதுரா அழுது அழுது மயங்கிட்டாடா" என ஆதித் கூற, "நினைச்சேன்" என்றவன், நண்பனை முறைத்துவிட்டு விறுவிறுவென தனது அறை சென்று சில மருந்துகள் மற்றும் ஊசியுடன் பாவையின் அறை வந்தான்.

அவளுக்கு அந்த ஊசியை போட்டுவிட்டவன், திரும்பி "அவ ரெஸ்ட் எடுக்கட்டும்" என கூறி இருவரையும் கீழே அழைத்துச் சென்றான். கீழே வந்தவுடன் "டேய் அவகிட்ட பழச பத்தி ஏதும் கேட்டியா?" என கேட்க தன் முகத்தை திருப்பிக் கொண்டு தலையை அழுந்த கொதியபடி நின்றான். அதிலேயே தனது கணிப்பு சரி என்பதை உணர்ந்த வசி "லூசாடா நீ? நா தான் சொன்னேன்ல? இப்போ தான் தலைல வேற அடிப்பட்டிருக்கு. அவ ரொம்ப ஸ்ட்ரைன் பண்றது உடம்புக்கு நல்லதில்லைடா" என கூற "எல்லாம் எனக்கும் தெரியும்டா. என் நிலமை. கேட்கணும்னு அவசியம் வந்ததுனால தான் கேட்டேன்" என ஆதித் கத்தினான்.

"போனவளுக்காக இருக்குறவள ஏன்டா படுத்துர?" என உணர்ச்சிவசப் பட்டு வசி கத்திட "டேய் திவி சாகவே இல்ல. யாரோ அவள கடத்தி வச்சிருக்காங்க" என ஆதித்தும் கத்திவிட்டான்.

அதில் அதிர்ந்து போன வம்சி, 'திவி உயிரோட இருக்காளா?' என கேட்க வந்த வசியை முந்திக் கொண்டு "திவிய கடத்திருக்காங்களா? என்னடா சொல்ற?" என அதிர்ந்தான். பின்பே நண்பன் முன் உண்மையை உடைத்ததை உணர்ந்தவன் வசியை பார்க்க, அவனும் அதே அதிர்வில் தான் இவனை பார்த்துக் கொண்டிருந்தான்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
8.இனம் புரியா தேடலில் நாம்!



வசியும் ஆதித்தும் ஸ்தம்பித்து நிற்க, "டேய் உங்கள தானே கேக்குறேன்? சொல்லுங்கடா. திவிக்கு என்னாச்சு?" என வம்சி கேட்டான். ஒரு பெருமூச்சை விட்ட ஆதித் "ரெண்டு பேரும் உக்காருங்க. சொல்றேன்" என கூற இருவரும் சென்று அமர்ந்தனர். தானும் சென்று அமர்ந்தவன், மதுரா கூறியவை அனைத்தயும் கூறினான். சோகத்துடன் ஆரம்பித்தவன் முகம், சினத்திலும் கடுமையிலும் முடிவடைந்தது.

"என் மதுரா மேல கைய வச்சவன சும்மாவே விடமாட்டேன்டா. அ அவ சின்ன பொண்ணுடா. அப்படி பதருரா. திவிய யாரு கடத்திருப்பங்கனு வேற புரியலை. என்னால மதுராவ இப்டி பாக்கமுடிலடா. இன்னும் திவி எங்க என்ன கஷ்ட படு.." என பேச்சு வாக்கில் திவியை பற்றி கூற வந்தவன் வம்சியை நிமிர்ந்து பார்த்தான். வம்சியின் கலக்கமான முகம் காண ஆடவர்கள் இருவருக்கும் வேதனையாக இருந்தது.

"சாரி மச்சி. நீ பீல் பண்ணுவனு தான் சொல்லலை" என ஆதித் கூற "திவிக்கு ஒன்னும் ஆகாதுடா" என வம்சி கூறினான். அதில் ஆடவர்கள் இருவரும் அவனை புரியாமல் பார்க்க, " மச்சி திவி நம்ம உயிரில் ஒருத்தி. மது குட்டிய கஷ்ட படுத்துனதுக்கே அவனுக்கு சாவு உறுதி. இதுல திவியயும் கடத்திடானுங்க. எனக்கு உன் மேல நம்பிக்க இருக்கு மச்சி. நீ கண்டிப்பா நம்ம திவிய காப்பாத்துவ" என கூறி விட்டு எழுந்தவன் "காப்பாத்திடுடா" என இறைஞ்சும் படி கேட்க சட்டென நண்பனை இறுக அனைத்துக் கொண்டான். "எனக்கு உன் பீலிங்க்ஸ் புரியுதுடா. நா கண்டிப்பா திவிய காப்பாத்துவேன்" என ஆதித் கரகரத்த குரலில் கூறினான்.

பின் வம்சி தன் அறைக்கு சென்றிட, "மச்சி அவன நினைச்சு ரொம்ப பயந்தேன்டா. ஆனா பரவால. ஹி ஹாவ் அ ஹோப் (அவனுக்கு ஒரு நம்பிக்க இருக்கு)" என வசி கூறினான். 'ஆம்' என்பது போல் தலையாட்டிய ஆதியின் அலைப்பேசி ஒலி எழுப்ப, அதை இயக்கி தன் காதில் வைத்தான். "அண்ணா.." என்ற பெண்ணின் குரல் ஒலிக்க "சொல்லுமா" என்றான். ஆம், அழைத்தது சிற்பிகாவே. "அண்ணா சாரி உங்க நம்பர்னு தெரியலை. நீங்க கால் பண்ணப்போ சைலேன்ட்ல போட்டிருந்தேன். அப்றம் ஃபோன் சார்ஜ் இல்லாம டெட் ஆகிடுச்சு" என சிற்பிகா கூற, "இருக்கட்டும்டா" என்றான்.

சிறு இடைவெளி விட்டவள் "அண்ணா இன்னிக்கி கடைசி எக்ஸாம்" என தயங்கியபடி கூற "ஓ! ஓகேடா. நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன். எல்லாம் எடுத்துக்கோ" என ஆதித் கூறினான். "ம்ம் ஓகே ண்ணா" என கூறியவள் இணைப்பை துண்டிக்க போக "ஆல் தெ பெஸ்ட்டா. நல்லா பண்ணு" என கூறினான். "ம்ம் தாங்க்ஸ் அண்ணா" என்றவளிடம் "சரிடா நீ கிளம்பு. நான் வரேன்" என கூறியவன் இணைப்பை துண்டித்துக் கொண்டு தன் அறை சென்றான். தனது அறைக்கு சென்று தயாரானவன், சென்றது மதுராவின் அறைக்கே. அப்போதே முழித்திருந்த பாவை, சோர்வாக அமர்ந்திருக்க, "மார்நிங்க மகி" என்றான்.

அவனை திரும்பிப் பார்த்தவள் "மகியா?" என கேட்க தான் அவளை செல்லமாக அழைக்கும் பெயரில் கூப்பிடிட்டதை அவள் கண்டு கொண்டதை துளியும் சட்டை செய்யாமல் "ம்ம்.. ஆமா. சரி அதவிடு. ரொம்ப டயர்டா இருக்கியே, ஃபிரெஷ் ஆகு. வா!" என கூறினான். 'ம்ம்' என தலையசைத்தவளிடம் வந்தவன் "மதுரா கால்ல அடிலாம் கொஞ்சம் ரெகவர் ஆகுதுனு வசி சொன்னான்.

நான் புடிச்சுக்குரேன் நீயே நடக்க ட்ரை பண்ணு" என கூற சற்று பயமாக இருந்தாலும், மறுக்காமல் ஒப்புக் கொண்டாள். மெல்ல அவளை தூக்கி நிறுத்தியவன் அவளிடையை வளைத்து பிடித்துக் கொள்ள, அதில் பெண்களுக்கே உரித்தான கூச்ச உணர்வல் சட்டென விலகப் பார்த்து கட்டிலில் பொத்தென அமர்ந்திட்டாள். "ஏ!" என்றபடி அவளிடம் வந்தவன் "என்னமா?" என்க அதில் சங்கடமுற்றவள் "சாரி அ அது" என தன்னுணர்வை புரியவைக்க தெரியாமல் திணறினாள்.

அவள் பார்வை மொழி அறிந்தவனல்லவா நம் நாயகன்? "ஒன்னுமில்ல பயப்படாம வா" என்றவன், அவள் கைபிடித்து நிமிர்த்தி, அவளது தோளை சுற்றி பிடித்துக் கொண்டான். அதிலேயே அவன் தன்னை புரிந்துக் கொண்டதை அறிந்துக் கொண்ட நாயகிக்கு, மனதில் இனம் புரியா உணர்வு உண்டானது. மெல்ல அடியெடுத்தவளுக்கு காலில் முணுக் முணுக்கென உண்டான வலியில் "ஸ்.. ஸ்.." என சத்தமெழுப்பியபடி நடந்தாள்.

"ஆ வேணாம். வலிக்குது வலிக்குது" என ஒரு கட்டத்தில் வலியினால் கூறிய பெண்ணின் கரம் தனிச்சையாக அவன் சட்டை காலரை பிடித்துக் கொண்டது. "ஓகே ஓகே" என அவளை அமர்த்தியவன் அவளை ஆசுவாசப் படுத்தி "வாடா ரெஃப்ரெஷ் ஆகிட்டு உக்காந்துக்க" என கூறி மீண்டும் மெல்ல எழுப்பி கூட்டிச் சென்றான்.

சில நிமிடங்களில் புத்துணர்வு பெற்று வந்தவளை அமர்த்தி அவளுக்கு குளம்பி கொண்டு வந்து கொடுத்தான். பின் சில நிமிடங்களில் வெண்ணீர் தயாரானதும், அவளை குளிப்பதற்கு ஆயுத்தபடி வேண்டியதை செய்துக் கொடுத்து முடிக்க, பாவையும் பல போராட்டங்களுக்கு பின் குளித்து முடித்து வந்தாள். அவளை அமர்த்திவிட்டு "கவலை படாத. இனிமேல் என் தொல்லை உனக்கு இல்லை" என ஆதித் கூற விழுக்கென அவனை அதிர்ந்து நோக்கினாள்.

"ஏ பாப்பா. நான் அப்டி சொல்லலை. உன்னை பாத்துக்க உனக்கு புடிச்ச ஆள் வந்திடுவாங்க. அதுக்கு சொன்னேன்" என கூறினான். 'தன்னை எங்கேயும் கொண்டு விடப் போகின்றானோ?' என அஞ்சியவள், 'அப்படி இல்லை' என அவன் கூறியதில் ஏற்பட்ட நிம்மதியில், அவன் சொன்ன கூற்றை கவனியாமல் விட்டுவிட்டாள்.

பின் "சரி நான் வெளிய கிளம்புறேன். வசி உனக்கு சாப்பாடு குடுத்துடுவான். சாப்டு ரெஸ்ட் எடு" என கூறிச் சென்றான்.

தயாராகி கீழே வந்த ஆதித், "மச்சி வெளிய போறேன். வர நைட் ஆகும். பாப்பு சாப்பிடலை, சாப்பாடு குடுத்துடு. இனிமேல் இன்னும் ஒரு சாப்பாடு எக்ஸ்ட்ரா பண்ணு மச்சி. பசித்த வையிரு அதிகமாகுது" என குரும்புடன் கூறி "திவா" என கத்தினான். வாசலிலிருந்து ஓடி வந்த திவாவை தூக்கிக் கொண்டவன் "ஏதும் இம்பார்டண்ட் கேஸ்னு கிளம்பினீனா திவாகிட்ட சொல்லிட்டு போடா" என கூறினான்.

திவாவின் சிகையை தடவிக் கொடுத்த வசி "திவா இருக்க பயமேன்?" என கூறி சிரிக்க, அவர்களது செல்லப் பிராணியும் தன் பாஷையில் சிரித்துக் கொண்டது.

பின் ஆடவன் நான்கு சக்கர வாகணத்தினை சீரிக் கிளப்பிக் கொண்டு புறப்பட, வசி உணவுடன் பாவையின் அறைக்கு வந்தான். அவனை கண்டு புன்னகைத்தவள் "திவா எங்க?" என கேட்க பின்னோடேயே வந்த திவா, கட்டிலில் தாவி எரிக் கொண்டு அவள் அருகே அமர்ந்தது. அதில் புன்னகைத்த வசி "நாய்னாலே பயந்த?" என கேட்க "நம்ம திவா ரொம்ப ஸ்வீட் அண்ணா" என அதன் தலையை தடவியப் படி கூறினாள்.

"ம்ம்.. உன்ன மாதிரி ஆளுங்களுக்கு ஸ்வீட் தான்டா" என வசி கூற "அப்போ நம்ம திவாக்கு கோவம் கூட வருமா?" என கேட்டாள். அதில் வாய்விட்டு சிரித்தவன் "வேணாம்டா குட்டி.. அவன் கோவம் பத்திலாம் நீ தெறிஞ்சுக்காத" என்றுவிட்டு "உனக்கு புடிச்ச மசால் தோசைடா" என கூறி தட்டை காட்ட, "அண்ணா நடக்கக்கூட இல்லை. உங்க சாப்பாடு டேஸ்ட்டும் வேற என்னை எக்ஸ்ட்ரா சாப்பிட வைக்குது" என கூறினாள்.

மனம் விட்டு பேசியப் பிறகு பாவையின் முகத்தில் ஒரு தெளிவும் பேச்சில் ஒரு உற்சாகமும் காணபட்டதை வசி உணர்ந்தான். அவளுக்கு உணவை ஊட்டி மருந்துகளை கொடுத்தவன் "காலைலயே வாக்கிங் பிராக்டிஸ் நடந்ததுபோல?" என கேட்க "ம்ம்.. ஆமா ண்ணா. ஆனா ரொம்ப வலிக்குது" என பாவமாக கூறினாள். "மேல் காயம் எல்லாம் ஆரிடுச்சுடா. உள்வலி தான். அதுக்கும் மருந்து கொடுத்திருக்கேன். சரியாகிடும்" என கூற "ம்ம் அண்ணா" என்றாள்.

அப்படியே பொழுது ஓட, நம் ஆதித்த கிருஷ்ணன் சிற்பி பயிலும் கல்லூரி முன் வந்து நின்றான். சரியாக பரிட்சையை முடித்துக் கொண்டு அலைப்பேசியில் யாருக்கோ அழைத்து அழைத்து ஓய்ந்து போனவளாக வெளியே வந்த சிற்பி, ஆதித்தனை பார்த்து "அண்ணா" என்றபடி அவனிடம் சென்றாள்.

மென்மையாக புன்னகைத்தவன் "எக்ஸாம்ஸ்லாம் எப்டி பண்ணினடா?" என கேட்க "ம்ம்.. நல்லா பண்ணிருக்கேன் அண்ணா" என்றாள். "ம்ம்.." என்றவனிடம் "அண்ணா நீங்க டைரக்ட்டா இங்க வருவீங்கணு தெரியாது. பேக்ஸ்லாம் ரூம்ல இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்றீங்களா? நான் போய் எடுத்துட்டு வரேன்" என சிற்பி கேட்க "வண்டில ஏறுடா, ரூம்கு தான் போறோம்" என கூறினான்.

அவனுக்கு சிரமம் அளிப்பதில் தயங்கிய பெண்ணிடம் "சிற்பிமா வாடா" என்றான். பின் அவளும் வண்டியில் ஏற, அவள் தங்கும் விடுதிக்கு சென்றனர். "நான் போய் எடுத்துட்டு வரேன் அண்ணா" என சிற்பி கூற "சிற்பி நான் வெயிட் பண்றேன். ஃபிரெஷ் ஆகிட்டு வா" என கூறினான்.

சரியென மேலே சென்றவள் புத்துணர்வு பெற்று வந்து ஒருமுறை அவளவனுக்கு அழைத்தாள். அழைப்பு முழுதும் சென்றும், ஆடவன் எடுக்கவில்லை. 'ஏதும் வேலையா இருப்பாங்க..' என ஒருமனம் கூற 'இத்தன நாளுமா வேலை' என ஒருமனம் சலித்துக் கொண்டது.

பின் தனது பெட்டிகளை தூக்கிக் கொண்டு விடுதியில் வெளியேற்றம் செய்துக் கொண்டவள் கீழே வர, பெட்டிகளை வாங்கி வைத்தவன், பாவையை கூட்டிக் கொண்டு புறப்பட்டான்.

மௌனமான பயணத்தில், ஆதித் "எவ்ளோ நாள் லீவுடா?" என கேட்க "இனி ஜான்(jan) தான் அண்ணா.." என கூறினாள். "ம்ம்.. லாஸ்ட் டைம் நைன்டி பர்சென்டேஜ் தானே?" என ஆதித் கேட்க அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தவள் "உங்களுக்கு?" என புரியாமல் கேட்டாள். அதில் மெல்ல புன்னகைத்தவன் "தெரியும்" என கூறி மேலும் சில பல வார்த்தைகளை பேசினான்.

பின் மீண்டும் மௌனமே! பாவையின் அலைப்பேசி ஒலிக்க, அவசரமாக எண்ணை கூட பார்க்காமல் எடுத்து காதில் வைத்தவள் "ஹலோ" என்க "ஏ சிற்பி என்னடி அதுக்குள்ள கிளம்பிடியாம். யார்கூட போன?" என கேட்டாள். "ம்.. ம்ம்டி. அண்ணா கூட" என அவள் கூற "அண்ணாவா?" என தோழி கேட்டாள். "ம்ம் ஆமா. நான் அப்றம் பேசுறேன்டி" என கூறியவள் ஒரு பெருமூச்சுடன் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

பின் சில மணிநேரம் செல்லவே, ஆடவனின் வீடு வந்தது. அந்த மதில் சுவரை, அந்த இருட்டில் காணவே பீதியாக இருந்தது, பாவைக்கு. வண்டியை விட்டு இறங்கிய ஆதித்தன் "குட்டிமா வாடா" என கூற "ம்ம்.." என தயங்கியபடி கூறி இறங்கினாள்.

பெட்டியினை எடுத்துக் கொண்டவன் "வாடா" என கூற, தயக்கத்துடன் உள்ளே வந்தாள். வீட்டிற்குள் வந்த பாவை விழிகள் விரிந்துக் கொள்ள, அங்கு ஒற்றை புருவத்தை உயர்த்தி சிரிப்புடன் ஆதித்தை பார்த்தபடி நின்றிருந்தான், வசீகரன். நண்பனை கண்டு புன்னகைத்த ஆதி, "மச்சி சாப்பாடு.." என இழுக்க "காலைலயே புரிஞ்சுடுச்சு" என வசி கூறினான். இங்கு ஸ்தம்பித்து நின்றப் பெண் அவன் பேச்சில் சுயம் பெற்று, 'அப்போ அதான் ஃபோன் எடுக்கலையா?' என எண்ணிக் கொள்ள, "சிற்பி வாடா" என ஆதி கூறினான். அவனுடன் மேலே சென்றவள் "அண்ணா மது, திவி?" என்க "ம்ம்.. சாப்டுட்டு படுடா காலைல பேசிப்போம்" என்றான். சரியென்றவள் அவளுக்கான அறை சென்று புத்துணர்வு பெற்றுக் கொண்டு வந்து உணவுண்ண சென்றாள். உண்டு முடித்த பாவை, ஏதும் பேசாமல் அறைக்கு வந்து அசதியில் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை பொழுது புலர்ந்தது.. கார்த்திகையின் கடை நாட்களின் இரவில் பூத்த பனித்துளிகளின் மிச்சங்கள் இன்னமும் மரக்கிளையில் ஊசலாடிக் கொண்டிருக்க, பகலவன் மெல்ல மெல்ல எழுந்து அவற்றை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தான்.

அதிகாலை எழுந்து பழக்கப் பட்ட சிற்பிகாவிற்கே, அன்று சற்று தூக்கம் பிடித்துக் கொண்டது. கதிர்கள் மெல்ல கண்கூசவே முழித்தாள். மணியை பார்த்துவிட்டு சென்று பல்துளக்கி புத்துணர்வு பெற்று வந்தவள், தன் அறையை விட்டு வெளியே வந்தாள். கீழே ஆதித்தன் இருப்பான் என்ற நோக்குடன் அவனை காண படிகளை நோக்கி சென்றுக் கொண்டிருந்தவள் அதிவேகமாக ஓர் அறைக்குள் இழுபட்டுக் கொண்டாள்.

கண்ணிமைக்கும் பொழுதில், உள்ளிழுக்கப் பட்டப் பெண், கதவின் மீதே சாற்றப் பட்டு வாய் பொத்தப் பட, படபடத்துப் போனவள் விழிகள் முன் நின்றவனைக் கண்டு மெல்ல மெல்ல அமைதி கொண்டது. "நான் தான்" என மென்மையான குரலில் அவளவன் கூற மெல்ல ஒரு பெருமூச்சை விட்டாள்.

தன் கரத்தை அவள் அதரங்களிலிருந்து எடுத்தவன், அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனை நிமிர்ந்து பார்த்தப் பெண்ணோ பனியன் வேட்டி சகிதம் இருந்தவனின், படிக்கட்டு தேகத்தின் தின்னிய மார்பையும் திரண்டிருந்து பூஜங்களையும் கண்டு, அதில் சிக்கிக் கொள்ளப் போகும் தன்னை எண்ணி திணறித்தான் போனாள்.

"ரசிச்சாச்சா?" என ஆடவன் தன் வசீகர குரலில் வினவ, அதில் தன்னை எண்ணி வெட்கிப் போனப் பெண், மெல்ல சிரம் தாழ்த்தி "வி விடுங்க" என்றாள். "என்ன?" என ஆடவன் காது கேளாதாது போல் வினவ "விடுங்க" என சிரமபட்டுக் கூறினாள்.

அதில் சட்டென அவள் இடை பற்றி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன் "முடியாது" எனக் கூற, அதில் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

முதலும் கடைசியுமாக கிடைத்த அருகாமையில் பாவையின் மருண்ட விழிகளைக் கண்டவனுக்கு, 'கடைசி' என குறிபிட்ட வார்த்தையை பொய்க்கும் விதமாக உருவான இந்த அருகாமையில், அதே விழிகளில் காதலைக் கண்டான்.

அதை ரசனையுடன் கண்டவன், "அழகான கண்ணு" என கூற, அதில் சுயம் வந்தவள் நாணப் புன்னகையுடன் தலை குனிந்த அடுத்த நொடியே, கோபத்துடன் நிமிர்ந்து "ஏன் ஃபோனே எடுக்கலை?" என கேட்டாள். கேட்டமாத்திரமே விழிகளில் நீர் நிரம்பிக் கொண்டது. அதில் பதறிப் போனவன் "ஏ! எதுக்குடி அழுகை?" என்க "எனக்கு ஏற்கனவே மனசே சரியில்லை. அதுங்க ரெண்டும் ஃபோனே எடுக்லைனு கவலைல இருந்தேன். அப்போ தான் அண்ணா வந்து அவங்ககூட தான் இதுங்க இருக்குதுங்கனு சொன்னாங்க. இருந்தாலும் மனசே சரியில்லாத போல இருந்தது. ஆனா நீங்க போனே எடுக்கலை. மெசேஜூம் பண்ணலை" என கோபித்துக் கொண்டாள்.

முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிந்தாலும், கண்களின் கண்ணீர் அவள் வலியை உணர்த்தியது. அதை துடைத்து விட்டவன் "சிபிகுட்டி வேலைடி. நேரமில்லை. உன் மெசேஜ் பார்த்தும் ரிப்ளை பண்ணாததுக்கு காரணம், உன்ன ஆதி தான் கூட்டிட்டு வரப் போராண்ணு எனக்கு புரிஞ்சதால தான். சரி ஒரு குட்டி சர்ப்ரைஸ் குடுப்போம்னு தான்" என கூற "பயந்துட்டேன் தெரியுமா? அண்ணா யார்னு சத்தியமா ஞாபகமில்லை.. யாரோ கூப்பிட இப்டி போகுரோமேனு இருந்தது" என விசும்பளுடன் கூறினாள்.

"ஓகே ஓகேடா பாப்பா. சாரி தப்பு தான். அதுக்கு கோவமா சண்ட போடு. உன்ன ஈசியா சமாதானம் செஞ்சுடுவேன். இப்டி அழாதடி" என கூற அவன் கூறுவதன் அர்த்தம் புரிந்தவள் அவனை முறைப்பாக பார்த்தாள். அதில் அவளை மேலும் இருக்கிக் கொண்டவன் "ம்ம்.. இப்டி ரொமான்டிக்கா பாரு. நான் சமாதானம் செய்றேன்" என கூற அகல விரித்த விழிகளுடன் "எ.. ஏங்க என்ன பாண்றீங்க?" என்றாள்.

"ரொம்ப வருஷம் முன்ன உன்னை தனியா சந்திச்சது. ஆனா அன்னிக்கி உனக்கு நான் உறவற்றவன். அன்னிக்கி உன் கண்ணுல அவ்ளோ பயம். ஆனா இன்னிக்கி எல்லாமே மாறிடுச்சு! நினைக்கவே புல்லரிக்குதுடி" என ஆடவன் உணர்ந்து கூற அதில் மென்னகை புரிந்தவள், அதே புன்னகையுடன் 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தாள். இன்னும் காதலை வாய்மொழியாக கூறிக் கொள்ளவில்லை. ஆனால் உணர்வு ரீதியாக தினம் தினம் உணர்ந்னர், உணர்கின்றனர்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
9.இனம் புரியா தேடலில் நாம்!


இருவரும் ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வை உரசியபடியே மௌன பாஷை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நினைவு பெற்றவளாக சுயம் வந்தவள் "ஏங்க மது, திவி எங்க?" என கேட்க ஆடவனின் முகம் சட்டென மாறிப் போனது. அதில் சிறு பதற்றத்துடன் "ஏங்க? என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?" என கேட்க "சிபி பதறாத. ஒன்னுமில்லை" என கூறியவன் அவளை விட்டு கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தான். யாருமில்லை! பாவையின் கரம் பற்றிக் கொண்டு அவளை கூட்டிக் கொண்டு மதுராவின் அறைக்கு சென்றான். "எங்க கூட்டிட்டு போறீங்க?" என கிசுகிசுப்பாக கேட்டவளிடம் "உஷ்.." என்றவன் அவளுடன் மதுராவின் அறைக்குள் நுழைந்தான்.

கை, கால் மற்றும் நெற்றியில் கட்டுடன் படுத்துக் கிடக்கும் மதுராந்தாகியை கண்ட சிற்பியின் விழிகள் வியப்பில் விரிந்துக் கொள்ள, வியப்பு கொஞ்சம் கொஞ்சமாக கசந்து கண்ணீரை பொழிந்தது. சட்டென ஆடவனை திரும்பிப் பார்த்தவள் "எ.. என்ன ஆச்சு?" என காற்றாகி போன குரலில் கேட்க "ஆக்சிடென்ட்" என்றான், வேதனையுடன்.

"அ.. அப்போ தி.. தி..திவி..?" என பாவை கேட்க ஏதோ கூற வந்தவனை நெருங்கி "அ.. அவளுக்கு ஒன்னுமில்லைல? அ.. அவ எங்க? இ.. இ.. இல்லணு மட்டும் சொ.. சொல்லிடாதீங்க" என்றாள். அவள் தலையை பரிவுடன் கோதியவன் "அழாதடி" என கூற அவன் மாரில் முகம் புதைத்தவள், "ஏ.. ஏங்க.. ம.. ம.. மதுக்கு.. ஓ.. ஓ.. ஒண்ணும்.. அ.. அவ.. தி.. தி.. திவி.." என திக்க அவள் முகத்தை கையில் ஏந்தியவன் "பாப்பா பாப்பா வேணாம். காம் டவுன்" என்றான்.

மேலும் திக்கி திக்கி திவ்யா பற்றியும் மதுவின் நிலை குறித்தும் பாவை கேட்க முயற்சிக்க, அவளை இழுத்துக் கொண்டு மீண்டும் தன்னறைக்கு வந்திட்டான். "பாப்பா வேணாம் பிளீஸ். ரொம்ப திக்குற பாரு. ரிலாக்ஸ் நான் எல்லாம் சொல்லுறேன். முதல தண்ணி குடி" என அவளுக்கு நீர் கொடுத்தான். அதிகமாக உணர்ச்சிவசப் பட்டு அழுதால், சிற்பிகாவின் பேச்சு திக்கத் துவங்கிவிடும். சில வருடம் முன்பு தான் அதனை குணப் படுத்தியிருந்தாள். ஆனால் இவை நிரந்தரமாக குணமாகும் பிரச்சனைகள் அல்லவே. ஆனால் மதுரா, திவியை விடவும் சிற்பி சற்று பொறுப்பான பெண்ணே.

தண்ணீர் குடிக்க வைத்து அவளை ஆசுவாசப் படுத்தியவன், "பாப்பா மது இருக்குற நிலமைல நீ தான் அவளுக்கு துணையா இருக்கணும். நீயே இப்படி எமோஷனல் ஆனேனா எப்படி? இப்போ தான் இந்த திக்கல் பிரச்சனை குணமாகிட்டு வருது. மறுபடியும் இழுத்து விட்டுக்காதடி" என பொறுமையாக கூற அவன் தோளில் சாய்ந்தவள் "எ..என்ன ஆச்சு?" என கேட்டாள்.

ஒரு பெருமூச்சு விட்டவன் "சொல்றேன் ஆனா பிளீஸ் அழாத" என கூறி நடந்தவற்றை கூற, பாவையின் உடலில் மெல்லிய நடுக்கமே உருவெடுத்தது. அவளை ஆதரவாய் அனைத்துக் கொண்டவன் "கேக்கும்போதே உனக்கு நடுங்குதே மதுகுட்டிக்கு எப்படி இருந்திருக்கும்? நீ தானே அவளுக்கு ஆறுதலா இருக்கணும்?" என கூற அவனை இறுக அனைத்துக் கொண்டு அழுதுவிட்டாள்.

பாவையின் முதுகை ஆறுதளாக வருடிக் கொடுத்தவன் அவள் முகம் நிமிர்த்தி, கட்டைவிரலில் அவள் கண்ணீர் துடைத்து "எனக்கு புரியுதுடி. அவ உன் தங்கை! அவ காணும்னா உனக்கு கஷ்டமாதான் இருக்கும். ஆனா கண்டிப்பா கிடைச்சுடுவா. உனக்கு எங்க மேலலாம் நம்பிக்கை இருக்கு தானே?" என கேட்டான். கலங்கி சிவந்த விழிகளுடன் அவனை பார்த்தவள் "உங்க மேல உள்ள நம்பிக்கைல தான் இருக்கேன். தி.. திவிய கண்டுபிடிச்சுடுங்க" என கூறி அனைத்துக் கொண்டாள்.

சில நிமிடம் மௌனமாக களைய சட்டென அவனிலிருந்து பிரிந்தவள், எழுந்து "அ அது ஏதோ வந்து.." என அவனை அணைத்ததற்கு விளக்கமளிக்க வேண்டி திணற, அதில் வாய்விட்டு சிரித்தவன் "நீ இவ்ளோ திணரும்படி ஒண்ணும் பண்ணலை. வேணும்னா ஏதாவது பண்ணிட்டு திணறிக்கோ" என கூறி கண்ணடித்தான்.

அதில் ரோஜா இதழென சிவந்த கண்ணங்களை மறைக்க வேண்டி குனிந்தவள் "நான் கீழ போறேன்" என திரும்ப, அவளை பின்னிலிருந்து அனைத்து "யாரும் இருக்காங்களானு செக் பண்ணிட்டு போ. நானும் குளிச்சட்டு வரேன்" என கூறினான்.

சிறு தலையசைப்புடன் புன்னகைத்துவிட்டு பாவை, செல்ல தானும் புன்னகைத்துக் கொண்டு குளியலறை சென்றான். பாவை கீழே செல்லவே, யாருமில்லாது அமைதியாக இருந்தது. அப்படியே அங்குள்ள நீள்விருக்கையில் அமர்ந்திட, சில நிமிடங்களில் இரட்டையர்கள் இருவரும் கீழே வர, ஆதித்தனும் வீட்டிற்கு வந்தான்.

"எங்கடா போன?" என இரட்டையர்கள் இருவரும் ஒன்றுபோல கேட்க அவர்களை திரும்பிப் பார்த்த சிற்பி திகைத்து நின்றாள். அவளவன் இரட்டையன் என்பது அவள் அறிந்ததே. ஆனால் பல வருடம் கழித்து இருவரையும் ஒன்றாக காண்கின்றாள். அதனால் சற்று திடுக்கிட்டு விழிக்க, அவளை கண்ட இரட்டையர்கள் தங்களை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.

பின் மீண்டும் ஆதித்தன் புறம் திரும்ப "ஒரு வேலை விஷயமா போய்ருந்தேன்" என கூறி "சிற்பி மதுவ பாத்துட்டியா?" என எப்படியும் நண்பர்கள் கூட்டிச் சென்று காட்டி, கூறியிருப்பர் என அறிந்தவனாக கேட்டான். அதில் பாவையின் முகம் வாடிட அதிலேயே புரிந்துக் கொண்டவன் பரிவுடன் அவள் தலைக்கோதி "ஒன்னும் பயப்படாதடா. திவி கண்டிப்பா கிடைப்பா" என கூறினான்.

கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் "கிடைச்சுடுவால்ல ண்ணா" என கேட்டாள். "கண்டிப்பாடா" என அவன் கூற அதில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தலையசைத்தாள்.

"சரி நான் ஃபிரெஷ் ஆகிட்டு மதுராவ போய் எழுப்புறேன். நீ அவளுக்கு காஃப்பியோட வா. சர்ப்ரைஸ் பண்ணுவோம்" என கூறிய ஆதித் தான் கூறியது போல் புத்துணர்வு பெற்றுக் கொண்டு அவனவள் அறைக்கு சென்றாள்.

அப்போதே முழித்திருந்த மதுரா, மெல்ல எழுந்து சுவற்றை பிடித்தபடி நடக்க முயற்சிக்க முதல் அடியை வைக்க, ஆடவன் கதவை திறந்தான். அந்த சத்தத்தில் திடுக்கிட்ட பெண், சமநிலையிலிருந்து தடுமாறி விழப் போக, "ஏ!" என்றபடி வந்து அவளை பிடித்தான். காலில் கொடுத்த அழுத்தத்தில் வலி எடுக்கவே "ஆ.." என்றவளை மெல்ல அமர்த்தியவன் "என்னடி? நான் வருவேன்ல? உன்ன யாரு தனியா நடக்க பழக சொன்னது? மறுபடி விழுந்துட்டா என்ன ஆகும்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? ஏன் மதுரா இப்டி கேர்லெஸ்ஸா இருக்க?" என சற்று காட்டமாக திட்டிவிட, பாவையின் விழிகள் கலங்கி தழும்பி நின்றது.

அதை கண்டவனுக்கு என்னவோ போல் ஆகிவிட, கண்களை இறுக மூடி திறந்தவன் "மதுரா உன் நல்லதுக்கு தானே சொல்றேன்? விழுந்தா நீ தானே இன்னும் கஷ்டப் படுவ? நடக்க பழகு. வேணாம்னு சொல்லலை, யாரையாவது சப்போர்ட்கு வச்சுக்கிட்டு நட" என கூறினான். கண்ணீர் வழிய சிறுபிள்ளை போல் தலையாட்டியவள் "சாரி" என்க மென்மையாக புன்னகைத்தவன், "உன் நல்லதுக்கு தான் சொல்றேன்டி. சாரிலாம் வேணாம்" என அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். தான் எழுந்து நின்றவன், கையை நீட்டி "இப்போ வா" என நம்பிக்கை நிறைந்த வார்த்தையாக கூற, அவன் கைபிடித்து எழுந்து நின்றவளது தோளை பற்றிக் கொண்டு கூட்டிச் சென்றான்.

அவளது அன்றாட காலைப் பணி முடியவே, அவளை கட்டிலில் பதமாக அமர்த்தியவன் "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. நேத்தே உனக்கு புடிச்ச ஆள் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்ல?" என அவன் கூற, அவள் சுதாரிக்கும் முன் கதவை திறந்துக் கொண்டு குளம்பியுடன் வந்தாள் சிற்பிகா. அவளை கண்ட மதுராவின் விழிகள் வியப்பில் விரிய, கொஞ்சம் கொஞ்சமாக கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

மதுராவோ முகம் கசந்து தலை குனிய, அவளிடம் வந்த சிற்பி "ஏன் மது? நான் வந்தது புடிக்கலையா? இங்க வந்ததுலருந்து கூட என்ன பத்தி ஏதும் கேட்கவே இல்லை போல?" என கேட்டாள். உதட்டை அழுந்த கடித்துக் கொண்டு மேலும் தலை குனிந்த மதுராவின் உடல் மெல்ல அழுகையில் குழுங்கியது.

குளம்பியை மேஜையில் வைத்த சிற்பி, அவள் தோள் தொட்டு "மது" என்க, சிற்பியை இறுகக் கட்டிக் கொண்டு "சாரி சிற்பி" என அந்த அறையே அதிரும்படி கதறத் துவங்கி விட்டாள். இந்த அழுகையை அவளுடன் அமர்ந்திருந்த ஆதித், சிற்பி, ஏன் அறையினுள் வந்த இரட்டையர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. "மது எதுக்கு இந்த அழுகை? ஏன்டி?" என மதுவை அனைத்துக் கொண்டு சிற்பி பதற "சாரி சிற்பி. நா நம்ம திவிய தொலைச்சுட்டு நீக்குறேன். எனக்கு ஒன்னுமே புரியலை சிற்பி. அவனுங்க.. என்ன" எனும்போதே அவள் உடல் நடுங்கத் துவங்கிட, அவளை மேலும் இறுக அனைத்துக் கொண்ட சிற்பி "ஒன்னுமில்லை மது" என கண்கள் கலங்க கூறினாள்.

"இல்ல சிற்பி. நான் தான், நான் தான் நம்ம திவிய தொலைச்சுட்டேன். தப்பு என்னோடது தான். நான் தான் அவள பக்கத்திலிருந்து பாத்துகிட்டிருந்திருக்கணும். நா இ.. இப்போ அவள தொலைச்சுட்டேன்" என கூறி மீண்டும் கதற, பதறிக் கொண்டு வந்த வசி "மதுமா ரிலாக்ஸ்" என்றான்.

பின்பே அவளது உடல் நலம் யாவரின் கருத்திலும் பதிய, அவள் முதுகை தடவிக் கொடுத்து "மது ஒன்னுமில்லை. நம்ம திவி கண்டிப்பா கிடைப்பா. எனக்கு அதில் முழு நம்பிக்கை இருக்கு. நீ அதுக்கு உதவ வேண்டாமா? இப்டி அழுது அழுது உடம்ப கெடுத்துகிட்டா அப்றம் உன்னால எப்படி திவிய கண்டுபிடிக்க முடியும்?" என கிட்டதட்ட குழந்தையை சமன் செய்வது போல் மதுவை தேற்றிக் கொண்டிருந்தாள்.

மெல்ல மெல்ல தன் அழுகையை குறைத்துக் கொண்ட மது, சிற்பியை பரிதாபமாக பார்க்க "ஒன்னுமில்லடா. அவளுக்கு ஒன்னும் ஆகாது" என கூறினாள். பின் அவளை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்து தேற்றிவிட, வசி "சிற்பி சாப்பிட வாடா" என கூறினான். குரலை செருமிய வம்சி "ஏன் எங்களைலாம் கூப்பிட மாட்டீங்களோ?" என கேட்க சிரித்தபடி "வாடா" என கூறி சென்றான். இரட்டையர்கள் செல்ல, "நீ சாப்ட போடா நான் வரேன்" என சிற்பியை அனுப்பிய ஆதித், அவள் சென்றதும் "எதுக்கு மதுரா இவ்ளோ அழுகை?" என்றான்.

அவனை பாவமாக பார்த்தவளின் சிவந்த நுனி மூக்கை பிடித்து ஆட்டியவன் "அழுது அழுது உடம்ப கெடுத்துக்காத மதுரா. இப்டியே சொல்லிட்டு இருக்க மாட்டேன்? தேவையில்லாம இன்னொரு தடவை அழுத, பிச்சுடுவேன்" என கூற அதே பாவத்துடன் தலையை ஆட்டி வைத்தாள். "திவி கண்டிப்பா கிடைப்பா" என்றவன் அவள் கை பற்றி "உனக்கு நான் பிராமிஸ் பண்ணி தரேன். திவிய கண்டிப்பா உன்கிட்ட சேர்ப்பேன். அது என் பொருப்பு" என கூறினான்.

இத்தனை நாட்களில் இன்று தான் நாயகியின் மூளை வேலை செய்ய துவங்கியது. அதுவும் எந்த லட்சணத்தில் என்றால், 'திவிக்காக இவ்ளோ உருகி பேசுறார். இவர் பொருப்புனா? அப்போ திவி லவ் பண்றது இவரையா? அவ மூலமா தான் என்ன தெரியுமா? அதான் என்னை காப்பாத்தி இங்க வச்சிருக்காரா?' என்ற லட்சணத்தில். வெறும் யோசனை தான்! அப்படி தான் இருக்கும் எனவெல்லாம் அவள் மனம் அப்போது உறுதி கூறவில்லை. கூறவில்லையா? கூறவிடவில்லையா? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கீழே வசி சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்க, சிற்பி அவனுக்கு உதவி புரிந்துக் கொண்டிருந்தாள். வெளியே நீள்விருக்கையில் அமர்ந்திருந்த வம்சி, "அடேய் பசிக்குதுடா" என கத்த, "பசிக்குதுன்னா, சாப்பாடு வந்திடுமா?" என கூறினான். "வரணும்ல" என வம்சி கூற, உள்ளிருந்து எரியப்பட்டக் கரண்டி, தன்னை அடையும் கணப் பொழுதில் சாவகாசமாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து அதை பிடித்துக் கொண்டு "பசிக்கு, சாப்பாடு தரணும். கரண்டி இல்ல" என கூறினான்.

இவர்களின் சம்பாஷகனைகளை பார்த்துக் கொண்டு.. இல்லை இல்லை ரசித்துக் கொண்டிருந்த சிற்பி, தயாரான உணவை, உணவு மேஜையில் வைக்க, கீழே வந்த ஆதித் "நீ எதுக்கு குட்டி இதெல்லாம் பண்ற?" என கேட்டான். "அத தான்டா நானும் சொல்றேன்" என்றபடி வசி வர, "இதிலென்ன இருக்கு ண்ணா. சும்மாவே இருக்க எனக்கும் போரிங்கா இருக்கும்" என கூறினாள்.

புன்னகையாக வந்தவன், "மதுரா இப்ப சாப்பாடு வேணாம்னு சொல்றா. நம்ம சாப்பிட்ட பிறகு குடுப்போம்" என கூறி, யாவரும் உண்டனர். மதுராவிற்கு சிற்பியே உணவூட்டுவதாக கூறிட, சரியென விட்டனர். இங்கு ஆதித் "மச்சி வேலை விஷயமா போய்ட்டு வரேன்" எனக் கூறி பதிலுக்கு காத்திருக்காது புறப்பட, அவனது கரும் இரும்புக் குதிரை சீறிப் பாய்ந்தது.

சிலபல கிலோமீட்டரை கடந்தவனது வண்டி, அந்த ஆள் அரவமற்ற சாலையின் கடைக் கோடியில் நின்றது. அவன் வண்டியின் சத்தத்திலேயே அறிந்துக் கொண்ட கோவிந்தன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவரைக் கண்டு மென்மையான புன்னகையை வீசியவன் "எல்லாம் ஓகே தானே அண்ணா" என கேட்க "எல்லாம் சரியா இருக்கு தம்பி" என்றார்.

"சரி ண்ணா. நீங்க கிளம்புங்க நான் பாத்துக்குறேன்" என்றவன், அவரை அனுப்பிவிட்டு அந்த வீட்டினுள் நுழைந்தான்.

கட்டப்பட்டிருந்த கட்டிலிருந்து திமிரிக் கொண்டே கண்களில் நீர் வழிய, வழிய, இருந்தப் பெண், அவனைக் கண்டதும் "எ.. என்ன எதுக்கு கடத்தி வச்சிருக்கீங்க?" எனக் கேட்டாள்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
10. இனம் புரியா தேடலில் நாம்!


நாற்காலியோடு கட்டப் பட்ட பெண் "என்ன விடுங்க. யார் நீங்க?" என கதற, அவளை அழுத்தமாக பார்த்தபடி வந்தவன் அவள் முன் இருந்த இருக்கையில் சாவகாசமாக அமர்ந்தான். "என்ன எதுக்கு கடத்தி வச்சிருக்கீங்க? எங்க வீட்ல தேடுவாங்க" என அழுதபடி அந்த பெண் கதற 'ஓஓ..' என்ற பாவனையுடன் "யாருலாம் உன்ன தேடுவாங்க?" என்றான்.


அவனை ஒரு நிமிடம் மௌனமாக பார்த்தவள் "எங்கம்மா அப்பா" என புரியாத குரலில் கூற "ம்ம்.." என தலையசைத்தவன் தனது கால்சராயில் வைத்திருந்த பாக்கெட் நைஃபை எடுத்து அதை விரித்தபடி மெல்ல அவள் களுத்திடம் கொண்டு வந்து "உன்ன காணும்னா தேட ஆள் இருக்குனு தைரியத்துல தான் அப்போ இப்படிலாம் பண்ற? அப்டிதானே?" என்றான்.


அவனையும் கத்தியையும் பீதியுடன் பார்த்தவள் "என்ன சொல்றீங்க? நா என்ன பண்ணேன்?" என நடுநடுங்க கேட்க "ஓ.. ஒன்னு ரெண்டு இல்ல போல. அதான் ஞாபகம் இல்ல" என கூறவும் அவள் முகம் வெளிரிப் போனது. "அநாதை பிள்ளைங்க தானே, யார் கேட்க போறாங்கனு தைரியமோ?" என அவன் கேட்க அவள் திரு திருவென விழித்தாள். "என்ன இப்பவும் புரியலையா?" என்றவன் "திவ்யாம்பிகை ஞாபகம் இருக்கா?" என கேட்கவும் பாவையின் விழிகள் விரிந்துக் கொண்டது.


ஆம், அந்த பெண் திவ்யா சேர்ந்த மருத்துவமனையில் இருந்த முகப்புப் பெண். "அ.. அது.. ய.. யாரு.." என அவள் தடுமாற "ஓ.. அப்போ உனக்கு உண்மைலயே தெரியாது?" என்றான். சொன்னவனது கத்தி மெல்ல அவள் கழுத்தை நெருங்க "தெரியும்.. எனக்கு தெரியும்.. என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க" என அலறினாள். மெல்ல கத்தியை மூடி, பாக்கெட்டில் போட்டவன் "ஓகே சொல்லு" என்க "சார் சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல. நா ஏன்னு கேட்டேன். அவங்க தான் மிரட்டி.." என பேசிக் கொண்டே போனவளை கை நீட்டி தடுத்தான்.


"இங்க பார். உன் பக்க நியாயத்த கேக்க நா வரலை. நா கேட்டத மட்டும் சொல்லு" என ஆடவன் கூற மெல்ல தலைக்குனிந்தவள் "அன்னிக்கி அந்த பொண்ணுக்கு ட்ரீட்மெண்ட் பாத்த டாக்டர் என்ன கூப்பிட்டு அவங்க பேர ரிசப்ஷன் ரெகார்ட்ஸ்லருந்து ரிமூவ் பண்ண சொல்லி சொன்னாங்க. நா எதுக்கு சார்னு கேட்டதுக்கு உனக்கு சொல்ற வேலைய செய்ய முடிஞ்சா இங்க இருனு சொல்லி மிரட்டினார். நானும் சரினு செஞ்சேன். அன்னிக்கி இன்னொரு பொண்ணு வந்து இந்த பொண்ணு பேர் சொல்லி கேட்டுச்சு. நானும் இல்லைனு சொன்னேன். ஆனா அந்த பொண்ணு அந்த கத்து கத்தி ஆர்பாட்டம் பண்ணிச்சு.. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அன்னிக்கி கிளம்பும் முன்ன அந்த டாக்டர போய் பார்த்து ஏன் இப்படி பண்ணனும்னு இந்த பொண்ணு அழுதத பத்தி சொல்லி கேட்டேன். நாளைக்கே போலீஸோட வந்தா என்ன பண்ணுவீங்கனு கேட்டேன். அதுக்கு அப்டிலாம் வராது அந்த பொண்ணே அநாதைனு சொன்னார்" என கூறினாள்.


"அநாதைனா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா?" என ஆதித் கத்த அதில் திடுக்கிட்ட பெண் "நா கேட்டேன் சார். அதுக்கு இதுக்கு மேல பேசினா கேஸ உருவாக்கி நாங்களே உன் பக்கம் திருப்பி விட்டுடுவோம்னு பயம் காட்டினாங்க. எனக்கு பயமாகிடுச்சு. அதான் அமைதியாகிட்டேன்" என கூறினாள். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இருந்தவன் மூளைக்கு ஏதோ பொறி தட்ட "இதுக்கு முன்ன இது மாதிரி ஏதாவது நடந்திருக்கா?" என அந்த பெண்ணிடம் கேட்டான்.


அவனை பரிதாபமாக பார்த்தவள் "எனக்கு தெரிஞ்சு இல்லை சார்" என சொல்ல, சட்டென எழுந்தவன் தனது அலைப்பேசியை நோண்டிக் கொண்டே வெளியே சென்றான். கோவிந்தனக்கு அழைத்தவன் சில விவரம் சேகரிக்கும் படி கூறிவிட்டு மீண்டும் உள்ளே வந்தான். அழுது அழுது விசும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் வந்தவன் அவள் கட்டுகளை அவிழ்த்து விட்டு நீர் கொடுத்து "இப்படி தானா என் மதுராவும் துடிச்சிருப்பா" என கூற "நிஜமா எனக்கு இதுலாம் தெரியாது சார். சாரி" என்றாள்.


அவளை பத்திரமாக திருப்பி அனுப்பும் வேலைகளை முடித்தவன் சென்றது காவல் நிலையம் தான். கோவிந்தனிடம் சென்றவன் "அண்ணா.." என்க "தம்பி அப்படி எந்த கம்ப்ளைண்ட்ஸும் இல்ல ப்பா" என அவர் கூறினார். இது அவன் எதிர்பார்த்ததே. ஆடவன் கேட்டது வேறெதுமல்ல 'சமீபத்தில் அநாதை பிள்ளைகள் தொலைந்ததாக ஏதும் புகார்கள் உள்ளனவா' என்பது தான். இவ்வளவு பாதுகாப்பாக காய் நகர்த்தும் கூட்டம் நிச்சயம் அதை விட்டுவைக்க வாய்ப்பில்லை என புரிந்தும் முயற்சித்து பார்த்தான்.


அங்கு வீட்டில், மதுராவுடன் இருந்த சிற்பி தன் மடியில் படுத்திருப்பவள் தலை கோதி "நீ எதுவும் குழப்பிக்காத மது. முதல உடம்ப குணப்படுத்து. அப்போ தான் நம்ம திவிய தேட முடியும்" என கூற "சிற்பி இவங்கள உனக்கு முன்னமே தெரியுமா?" என கேட்டாள். 'சரியா போச்சு..' என எண்ணியவள் "தெரியாம தான் அப்போ இத்தனை நாள் இங்க இருந்தியா?" என கேட்க பாவமாக விழித்தாள். "பவிம்மா வீட்ல இருந்தப்போ பக்கத்து வீட்டில் இருந்தாங்கடி" என சிற்பி கூற "ஓ எனக்கு நியாபகமில்ல" என்றாள்.


"அடிக்கடி வந்துபோன உங்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும்" என சிற்பி கூற "அநாதைக்கு இடமில்லைனு சொன்ன பிறகும் அங்க எப்படி வந்து தங்க சொல்ற" என ஏதோ நினைவில் படக்கென மதுரா கேட்டிருந்தாள். அதில் சிற்பியின் முகம் கசங்கி போக சட்டென பதறி எழுந்த மது "ஏ சிற்பி! சாரி ந நா" என்க "இல்ல மது. நான் தான் சாரி சொல்லணும். தப்பு என்னோடது தானே" என சிற்பி கூறினாள். அதன் பின் இருவரினிடையே மௌனமே சில நிமிடம் நிலவியது.


கடந்த கால பக்கங்களை படித்துப் பார்த்து வந்தனர் போலும்.. முகம் கசந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த வசி "குட்டிமா" என்க இருவரும் அவசரமாக முகத்தை துடைத்துக் கொண்டனர். உள்ளே வந்தவன் "சாப்பிடலியா ரெண்டு பேரும்? சிற்பி சாப்பாடுலாம் ரெடினு சொல்லிட்டு தானே போனேன்? மதுக்கு மாத்திரைலாம் தரனும்ல?" என்க "அது பேசிட்டிருந்ததுல மறந்துட்டேன்" என்றபடி எழுந்து அவனுடன் சென்றாள்.


அப்படியே பொழுது ஓட, இரவு யாவரும் வீடு வந்தனர். கூடத்தில் ஆடவர்கள் மூவரும் அமர்ந்திருக்க, தன் தலையை தாங்கியபடி யோசனையில் ஆழ்ந்திருந்தான், ஆதித். மேலே சிற்பி மதுவின் அறைக்குள் செல்வதை உறுதி செய்துக் கொண்டு "மச்சி ஏதும் க்ளூ கிடைச்சுதா?" என வம்சி கேட்டான். இவர்களை சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்த திவாவுக்கு கூட அக்கேள்வி புரிந்தது போலும். அமைதியாக ஆதித்திடம் வந்து நிற்க, மெல்ல நிமிர்ந்தவன் இன்று நடந்தவற்றை கூறினான்.


"நேரா அந்த டாக்டர்கிட்டயே போய் கேட்டுடலாம், ஆனா அவன தொடுறது ரிஸ்க். இதுல எத்தனை பேர் கூட்டுனு தெரியலை. மித்தவனுங்க உஷாராகிட கூடாது" என கூற அவனருகே இருந்த திவா, திடீரென வேகமெடுத்து வாயிலுக்கு ஓடினான். ஆடவர்கள் மூவரும் புரியாமல் அது சென்ற திசை நோக்கி திரும்ப, வாயுலில் யாரோ நிற்பது போல் தெரிந்தது. திவா அவரை பார்த்து குரைக்க, மூவரும் வருவதற்குள் அவர் சென்று விட்டார்.


விரைவாக சென்ற ஆதி, கதவை திறந்துக் கொண்டு வெளியே தன் பார்வையால் அலச, அந்த நபர் இருந்த சுவடே காணாமல் இருந்தது. "மச்சி யாரோ நின்னது போல இருந்ததுல?" என வம்சி கூற இருவரும் 'ஆம்' என்பது போல் தலையசைத்தனர். தனதருகே நிற்கும் திவாவை பார்த்த ஆதித் "திவா வந்தவங்கல பார்த்ததும் ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ணான்?" என கேட்டு அதனிடம் மன்டியிட்டு அமர்ந்து "திவா வந்தவங்க உனக்கு தெரியுமா?" என்றான். அதுவோ ஒருவித சத்தத்துடன் அவன் முட்டியில் தன் தலைக்கொண்டு உரச, யோசனையான முகத்துடன் அதன் தலையை தடவிக் கொடுத்தான். திவாவை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவனிடம் "மச்சி அது யாருனு போய் பார்த்துட்டு வருவோமா?" என வம்சி கேட்டான். 'இல்லை' என்பதுபோல தலையசைத்தவன் "நோட்டம் விட வந்தவங்கனா நம்ம பார்க்கும்வரை நிக்க மாட்டாங்கடா. திவாவுக்கு தெறிஞ்சுருக்கு. அப்போ நம்ம இல்லாத நேரமும் இங்க வந்திருக்காங்க. நம்ம கிட்ட பேச ட்ரை பண்றாங்க போல" என கூறினான். "அப்றம் ஏன் பேசாம போகணும்?" என வசி கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் "அதான் தெரியலை" என கூறும்போதே சிற்பி வந்தாள்.


இவர்களின் தீவிரமான முகம் கண்ட பெண் "அண்ணா என்னாச்சு? ஏதும் பிரச்சனையா? திவி பத்தி ஏதும் தெரிஞ்சதா?" என கேட்க மூவரும் சுயம் வந்தனர். "ஏ சிற்பி! இல்லடா" என வசி கூற கலவரமான முகத்துடன் மூவரையும் கண்டாள். "இல்லடாமா நீ அதுலாம் எதுவும் நினைக்காத. திவி நிச்சையம் கிடைச்சிடுவா" என ஆதித் கூற கலக்கமாக தலையசைத்தாள். நால்வரும் இரவுணவை முடித்துவிட்டுப் போக, தத்தமது அறையில் சென்று அடங்கினர். பாவைகள் இருவரின் மனமும் தங்களது கடந்த காலத்தில் சிக்கி நின்றது.


சில வருடங்கள் முன் பயணித்த நினைவுகளை காற்றும் இதமாய் வீசி கூட்டிச் சென்றது. அழகிய பூந்தோட்டத்தில் பட்டாம் பூச்சிக்கு இணையாக சுற்றிக் கொண்டிருந்தனர், மூவரும். "மதூ....." என்று கேட்டக் குரலில் மதுராந்தாகி என்ற அந்த ஆறு வயது வாண்டு வேக வேகமாக ஓடி ஒழிந்துக் கொண்டது. அங்கு வந்த ஒரு மற்றயப் பெண் "எங்க அந்த அராத்து?" என கத்த "ஏ! யார ஆராத்துணு சொல்ற? அடிச்சுடுவேன் பாத்துக்கோ" என்றாள், ஏழு வயது சிறுமி திவ்யா.

"அவள ஆராத்துணு சொல்லாம என்ன சொல்ல? என் ரிப்பன பிச்சுட்டா பாரு" என அந்த சிறுமி அதை காட்ட, "தெரியாம பிச்சுறுப்பா" என சாவகாசமாக கூறினாள். "தெரியாம பிச்சாலும், அது என்னோடது" என சிடுசிடுப்புடன் கூறிய அப்பெண்ணை பார்த்த திவி, அவளுக்கினையான கோபத்துடன் தனது ரிப்பனை எடுத்துக் கொடுத்து "இந்தா, உனக்கு ரிப்பன் தானே வேணும். வச்சுக்கோ. அதுக்காக அவள திட்டுற வேலைலாம் வச்சுக்காத" என கத்திவிட்டு மறைந்து நின்றிருந்த மதுராவை இழுத்துக் கொண்டு செல்ல, இவர்கள் பாசத்தையும் அந்த பெண்ணையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள், ஒன்பது வயதுப் பெண் சிற்பி.


அந்த அறியாத வயதிலும் தன்னை யாரும் ஒரு வார்த்தை சொல்லாமல் தாய் போல் பார்த்துக் கொண்ட திவ்யாவிற்கு மதுரா எந்த வித இரத்த பினைப்பும் சொந்தமும் அற்றவள் என கூறினால் யாராலும் நம்பவே முடியாது என தான் கூறவேண்டும். ஆதரவற்ற இரு உள்ளங்கள் தத்தமது ஏக்கத்தை பாசத்தினை வெளிப்படுத்தி போக்கிக் கொண்டன…


இப்படியான சிந்தனையிலிருந்த மதுரா, கண்ணீரில் நனைந்த கண்ணத்தின் சுவடோடு தூங்கிப் போக, தூக்கமற்று தவித்துக் கொண்டிருந்தாள், சிற்பிகா. கனத்த மனதுடன் அருகில் குழந்தை முகம் மாறாது உறங்கும் மதுராவை கண்டவள், ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளி வந்தாள். மேல்தளத்தின் தாழ்வாரத்தில் கைப்பிடையை பிடித்தபடி இருளை வெறித்துக் கொண்டு இருளோடு இருளாக நின்றிருந்தாள். பாவையின் தோளில், அவளவனின் வலிய கரங்கள் பதியவே, திடுக்கிட்டு திரும்பினாள். இருளில் பலபலத்தவனது கண்களை கண்டவள் விழிக்க, அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு தங்களறை சென்றான்.


அவனறை பலகனிக்கு வந்தவன் அவளை செவிற்றில் சாய்த்து நிருத்தி "சொல்லு.. ஏன் ஒருமாதிரி இருக்க?" எனவும் அவள் கண்கள் நீர் பொழியத் துவங்கியது. அதை கண்டவன் "ஏ சிபிமா என்னாச்சு. ஏன்டா அழற?" என கேட்டவனை கண்டு "ஏன் இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் எப்பவுமே பிரச்சினையாவே இருக்கு" என கேட்டு குலுங்கி குலுங்கி அழுதாள். "என்னாச்சு சிற்பி?" என அவன் கேட்க "என்ன ஆகலை? மதுக்கும் திவிக்கும் வாழ்க்கை பிரச்சினையாவே தான் இருக்கு. பிறந்ததுலருந்து கஷ்டம் தான். அப்பா அம்மா இல்லாம அநாதையாக இருக்குற வலி எவ்வளவு கொடுமை தெரியுமா? உலகத்துல எத்தனையோ அநாதை குழந்தைகள் இருந்தும் குழந்தை இல்லைனா எல்லாரும் கோவில் கோவிலா தானே போறாங்க? ஏன் எங்கள மாதிரி குழந்தைகள தத்து எடுத்தா என்ன? யாருமில்லைனாலும் உனக்கு நான் எனக்கு நீனு ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க, இந்த கடவுளுக்கு அதுவும் பொறுக்கலை" என பொரிந்து தள்ளினாள்.


அவனை பாவமாக நிமிர்ந்து பார்த்தவள் "என் கூடவே இருந்த ரெண்டு பேருக்கும் கிடைக்காதது எல்லாம் எனக்கு எப்படியோ கிடைக்குது. அதை சந்தோஷமா ஏற்கவும் முடியாம மறுக்கவும் முடியாம, இதோ! இங்க வலிக்குதுங்க" என வலது புற மார்பை சுட்டிக் காட்டினாள்.


அவளை வேதனையாக பார்த்தவன் "ஏன்டா அப்படிலாம் நினைக்குற?" என்க "வேற எப்படிங்க நினைக்க? நா தான் அவங்களுக்கு எல்லாமா இருந்தேன்.. திடீர்னு பவிம்மாவும் சதீஷப்பாவும் என்ன மட்டும் கூட்டிட்டு போனா அவங்க மனசுக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் திவி என் தங்கை. அவளையும் கூட்டிக்க கூட அவங்களால முடியல. என்னால அந்த இடத்துல யாருக்குமே சப்போர்ட் பண்ண முடியலைங்க. இப்ப வரை நான் வருத்தப்படுறதே அந்த வயசுலயே எனக்கு ஏன் பக்குவம் வந்ததுனு தான். அதில்லாம இருந்திருந்தா சிறுபிள்ளையா இவங்க கூடவே இருக்குறேன்னு தைரியமா சொல்லிருப்பேன்" என்றாள்.


"நீ ஏன் சிபிம்மா அப்படி நினைக்குற? நீ ரெண்டு பக்கமும் நியாயம் செய்ய தானே முயற்சி பண்ணின?" என அவன் கூற "அதுதாங்க வருத்தமா இருக்கு. எனக்கு எல்லாமே சுலபமா கிடைச்சிடுது. ஆனா அவங்களுக்கு ஒரு பேனா வாங்க கூட கஷ்டம் தான். எனக்கு பயமா இருக்குங்க. எல்லாமே சுலபமா கிடைக்கும் எனக்கு உங்க காதலும் சுலபமா கிடைச்சிருச்சு. எல்லாம் எ.. என்ன விட்டு போகிடுமோனு பய.." என முடிக்கும் முன் அவள் இதழ்களை பூட்டியிருந்தான், தன் இதழ் கொண்டு. அத்தனை நேரம் அழுது கரைந்தவளுக்கு அவனது முதல் இதழ் முத்தம் ஆறுதலாக வருட, அதில் கட்டுண்டு போனாள்.


நிலவின் ஒளியுடன், இரவிற்கே உரித்தான குளிர் காற்று இருவரையும் மெல்ல தீண்டிச் செல்ல, அழகிய காதல் காட்சி ஒன்று அரங்கேறியது. காதல் இன்பத்தில் மூழ்கியவர்களில், முதலில் சுயம் உணர்ந்த பாவை, திடுக்கிட்டு பிரிய, பின்பே தேன் உண்ட வண்டாக கிரங்கிய ஆடவனும் தன் செயல் உணர்ந்தான். மூச்சு வாங்க தலைகுனிந்திருந்த பெண், நாணத்தில் பேச்சற்று இருக்க, 'தன்னவள் தன்மேல் வருத்தமுற்ற படி செய்துவிட்டோமோ' என் ஆடவன் வருந்தி போனான்.


அங்கு நிற்க இயலாத பெண் நகர எத்தனிக்க அவள் கை பற்றியவன் "சிற்பி ரியலி சாரிடி. நி.. நீ பேசுனது, சத்தியமா என்னால அதை பேச்சுக்கு கூட கேக்க முடியாதுடி. அதான்.." என நிறுத்த, சிறு வெட்கப் புன்னகையை மறைத்தபடி "ப.. பரவால" கூறிவிட்டு தன்‌ கையை உருவிக் கொண்டு சிட்டாய் பறந்திட்டாள். அவளது வார்த்தையில் இன்பமான அதிர்வுடன் ஆடவன் நிற்க, அறைக்குள் புகுந்தவள் அதே இன்பத்துடன் படுத்து, உறங்கிப் போனாள்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
11. இனம் புரியா தேடலில் நாம்!


இப்படியே நாட்கள் ஓடின. கிட்டதட்ட மதுராவிற்கு விபத்து நடந்ததிலிருந்து மூன்று வார காலம் ஆகிவிட்டது. ஆனால் ஆதித்தின் தேடலில் தான் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.. அதில் துவளாமல் இருந்தபோதும், புள்ளி மானாய் துள்ளித் திறந்த தன்னவளின் திடீர் அமைதியும் சோகமும் அவனை வண்டாய் குடைந்தது.


அவள் நிலையும் பரிதாபமானது தானே! பிறக்கும்போதே தாய் தந்தை என சொல்லிக் கொள்ள ஒரு உறவும் இல்லாமல் இருந்தவளுக்கு, நினைவு தெரிய துவங்கிய வயதிலிருந்து எல்லாமுமாக இருப்பவள் திவ்யாம்பிகை. அப்படியானவளை துளைத்துவிட்ட வலி, அவள் இயல்பை தொலைக்கச் செய்தது.


தன்னை முழு மனதாக நேசிக்கும் ஒருவன் தன் சோகத்தில் சோர்ந்து வருகின்றான் என்பதை அப்பேதைப் பெண் அறியவில்லை. பாவையின் கால் குணமாகி நடக்கும் நிலைக்கு அவள் வந்திருக்க, கையிலும் நெற்றியிலும் மட்டும் இன்னும் வலி இருந்து வந்தது. அன்று காலை எழுந்து தனது காலைப் பணிகளை முடித்துக் கொண்டு உணவுண்ண வந்தாள், மதுராந்தகி. திமிரத் திமிர குளிக்கவைத்த திவாவை தூக்கிக் கொண்டு வந்து, ஆதித் துவட்டிக் கொண்டிருக்க, வசியும்‌ சிற்பியும் சமையல் வேலையில் இருந்தனர். படிகளில் மெல்ல இறங்கி வந்துக் கொண்டிருப்பவள் அருகே வந்த வம்சி, " குட் மார்னிங் குட்டி" என்க‌ திடுக்கிட்டு திரும்பியவள், வம்சியை கண்டு ஒரு பெருமூச்சு விட்டு "குட் மார்னிங் அண்ணா" என சாந்தமான புன்னகையுடன் கூறினாள்.


இருவரும் கீழே வர, பாவையின் முகத்தை ஒரு நொடியில் ஆராய்ந்த ஆதித் "மதுரா ஆர் யூ ஓகே?" என கேட்க சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள், பின் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு "ம்ம்.. ஒன்னுமில்ல" எனக் கூறினாள். அவள் உதடுகள் மட்டுமே கூறும் ஒட்டவைத்த வார்த்தைகளே அவை. இருப்பினும் அவளை குடைய விரும்பாது, சிறு புன்னகையுடன் "ஹாப்பி மார்னிங்" என்றான்.


பாவையும் சிறு புன்னகையுடன் "ஹாப்பி மார்னிங்" என கூறவே அவள் அருகில் இருக்கும் நண்பனை கண்டு கண்ணடித்தான். அவளே அறியாது அவளவனை தன் மனதில் உறவுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நிறுத்திக் கொண்டிருக்கின்றாள். தற்போது வம்சியை அண்ணன்‌ என விளித்தவள் ஆதித்திடம்‌ எந்த உறவுகளும் இன்றி அழைப்பதே அதற்கு உதாரணம். அவனை எந்த உறவில் சேர்ப்பது என்ற அவளது சுய அலசலை உணர்ந்த‌ ஆதித்தின் குதூகல வெளிப்பாட்டை புரிந்துக் கொண்ட நண்பன் புன்னகையுடன் தலையாட்டி சிரித்துவிட்டு சென்றான்.


உணவு தயாரானதும் அவற்றை எடுத்துவைத்த வசி மற்றும் சிற்பி மூவரையும் உண்ண அழைக்க நால்வரும் சென்றனர். சிரித்தபடி முதலில் திவாவிற்கு உணவினை சிற்பி கொடுக்க‌ "அடேய் என்னடா எல்லாரையும் இம்பிரஸ் பண்ணி முதல் ஆளா சாப்பாடு வாங்கிடுற?" என வம்சி கூறியதில் மதுராவை தவிற யாவரும் சிரித்தனர். அதை ஆதியின் உள்ளம் குறித்துக் கொள்ள தவறவுமில்லை.


யாவரும் உண்ண அமரவே சிற்பியே வேண்டி பரிமாறுவதாகக்‌ கூறி பரிமாறினாள். உணவு உண்டு முடியவே, தானும் உண்டு வந்து மதுராவுடன் அமர்ந்துக் கொண்டாள். ஆதித்தனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதுராவின் மனதில் ஒரு போராட்டமே நடந்துக் கொண்டிருந்தது. வசியுடன் பேசிக் கொண்டிருந்தவன் காதோரம் குனிந்த வம்சி " யுவர் ஆள் இஸ் முழுங்கிங் யூ" என ஏதோ நாசா விஞ்ஞானிகள் கண்பிடிக்காததை கண்டுபிடித்தது போல் கூற "எல்லாம் தெரியுது. மூடிட்டு வேலைய பாரு" என்றான். அதில் மூக்கொடை பட்ட வம்சி, நங்கென்று அவன் காலை மிதித்துவிட்டு எழுந்து செல்ல, "ஸ்..ஆ.." என காலை தூக்கி அலறிய ஆதி, தலையணையை தூக்கி அவன் மீது வீசி "பக்கி" என்றான். அதில் வசி விழுந்து விழுந்து சிரிக்க மதுராவிற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.


மௌனமாக பாவை எழுந்து செல்ல, அவளை கண்ட சிற்பியும் பின்னே சென்றாள். சிற்பி உள்ளே நுழைய பால்கனியில் தெளிந்த வானை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள், மதுராந்தகி. அவள் பின்னே வந்த சிற்பி "மது!" என்க தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, திரும்பாமல் "ம்ம்.." என மட்டும் கூறினாள்.


அவள் அருகே வந்தவள் " என்னாச்சு மது? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்க மதுராவிற்கு சிற்பியிடம் கூட மனம்விட்டு பேச சங்கடமாக இருந்தது. அதுவும் பாவை கேட்ட கேள்வியில் உடைந்து போனது. "என்ன கூட தள்ளி நிருத்தியே வைக்குறல?" என சிற்பி கேட்டதும் அவளை சட்டென கண்ணீருடன் அனைத்துக் கொண்டவள் கை இடிபடவும் "ஸ்.." என விளகினாள். "ஏ பாத்து!" என்ற சிற்பி அவள் கன்னம் பற்றி "என்னாச்சுடா?" என்க "மனசே சரியில்லை சிற்பி. ஒரே நெருடலா இருக்கு" என குழந்தை போல் கூறி அழுதாள்.


"கண்டதையும் யோசிக்காத மது. நம்ம திவி கண்டிப்பா கிடைப்பா" என சிற்பி கூற "எந்த நம்பிக்கைல சொல்ற சிற்பி? இதுவரை எந்த துப்பும் கிடைக்கலை. நா தித்தன் சார் எந்த முயற்சியும் எடுக்கவில்லைனுலாம் சொல்லமாட்டேன். நானும் கண்ணால பார்க்கத் தான் செய்றேன். ஆனா எந்த தடையமும் கிடைக்காதது ஒவ்வொரு நாளும் என் மனசுக்குள்ள 'நான் தான் திவிய தொலைச்சுட்டேன்! நா தான் திவிய தொலைச்சுட்டேன்னு சொல்லுது. என் மேலயே கோவம் வருது. எல்லாருக்கும் கஷ்டமாவும் பாரமாவும் இருப்பதுபோல் இருக்கு" என சொல்லிக் கொண்டே போனவள் சிற்பி முகம் நோக்காது மறுபுறம் திரும்பி குறைவான தோனியில் "செத்துடலாம் போல இருக்கு" எனக் கூறினாள்.


"மது!" என அவளை திருப்பியவள் "என்ன பேசுற மது? ஏன் இப்படி நடந்துக்குற? திவி தொலைஞ்சதுக்கு நீ எப்படி காரணமாவ? அங்க நீ இல்லாம போனதால தான் திவி தொலைஞ்சான்னா, நான் கூட தான் இல்லை. அப்போ என்னால திவி தொலைஞ்சானு சொல்லலாமா?" என்றவளை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். "என்ன? ஒத்துக்கமாட்ட தானே? அப்போ நீ சொல்றதுல மட்டும் எங்க நியாயம் இருக்கு?" என சிற்பி கேட்க பாவம் போல் தலையை குனிந்துக் கொண்டாள்.


பரிவுடன் அவள் தலை கோதியவள் "நீ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கடா. அதான் என்னென்னமோ யோசிக்குற. எதையும் போட்டு மனச குழப்பிக்காத" எனக் கூற கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டாள். சிற்பியின் கண்களிலும் நீர்த் துளிகள். வருத்தம் யாருக்குத்தான் இல்லை!


பாவையின் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்தவள் கதவு தட்டப் படும் சத்தத்தில் திரும்பினாள். இருவரும் செல்ல கதவை திறந்த சிற்பியிடம் "ஆதி கூப்ட்டான்" என இறுக்கமாக கூறிச் சென்றான், வசி. "ம்ம்.." என்றவள் மதுவையும் கூட்டிக் கொண்டு கீழே சென்றாள்.


அங்கு இருந்த இருவருமே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் இருந்தனர். அதை கண்ட பெண்களோ 'இவ்வளோ நேரம் ஜாலியா சண்ட போட்டுட்டு இருந்தாங்க, இப்ப என்ன முகத்த திருப்பிகிட்டு இருக்காங்க' என எண்ணிக் கொண்டனர். தன்னவளிடம்‌ வந்த‌ ஆதித் அவளது நெற்றியில் இருந்த பிளாஸ்டரில் துவங்கி, கைகளில் ஆரிய நிலையில் இருந்த கீறல்கள், முறிவிற்கு போடப்பட்ட கட்டு என அனைத்தயும் வாஞ்சையுடன் ஒரு பார்வை பார்த்தான்.


யாருக்கும் விளக்கம் கொடுக்காமல் மதுவிடம் "வா" என‌ அவன் அழைக்க, சிற்பியை திரும்பி பார்த்தவள் அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் உடன்‌ சென்றாள். அவள் எதுவும் கேட்பாள் மறுத்து பேசி தங்கவைப்போம் என இருந்த இரட்டையர்கள் அவள் எந்தவொரு கேள்வியும் கேட்காததில் சற்று எரிச்சலுற்றனர். ஆனால் அவள் மனம், அவனிடம் கேள்வி கேட்க உந்தவில்லையே! இத்தனை நாள் எந்த நம்பிக்கையில் இங்கு இருந்தாளோ அதே நம்பிக்கையில் தான் எந்த கேள்வியும் கேட்காமல் செல்கிறாள்.


"ஆதி எனக்கிது சரியா பாடலை" என வசி பல்லைக் கடிக்க, அவனை திரும்பியும் பாராமல் "எனக்கு சரியாத்தான் படுது" என்றான். பெண்கள் இருவரும் புரியாமல் விழிக்க, மதுராவின் கையை உரிமையுடன் பற்றியவன், நண்பனை அழுத்தமாக பார்த்துவிட்டுச் செல்ல, கோவத்துடன் பூஜாடியை தூக்கி எறிந்துவிட்டு விறுவிறுவென படியேறினான், வம்சி.


சிற்பி திடுக்கிட்டு பார்க்க, வசியும் விறுவிறுவென சென்றான். அங்கு காரில் மௌனமே ஆட்சி புரிந்தது. பாவை அவனிடம் ஏதும் கேட்கவில்லை. வண்டி செல்ல செல்ல, அவளுக்கு பாதை பரிட்சையப்பட்டது போல் இருந்தது. பாவை அவனை சிறு அதிர்வுடன் திரும்பிப் பார்க்க, ஆடவன் இறுக்கமான முகத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். சில நிமிடங்களில் மதுராந்தகியின் வீடு வந்தது.


தான் இறங்கி அவளையும் அழைத்து வந்தவன், தன்னிடமிருந்த சாவிக் கொண்டு கதவை திறந்தான். மூன்று வாரம் பூட்டப்பட்டு கிடந்ததன் சாயல் அதில் தெரிந்தது. கதவு திறந்ததும் சூரிய வெளிச்சம் இருளை கிழிக்க, தூசித் துகள்கள் அதில் படர்ந்து பறந்தன. அன்று திவ்யா விழுந்த இடத்தை கண்ட மதுராவின் கண்கள் பனியாய் உருகின.


அவளிடம் திரும்பியவன் "மகி மா" என்க அவன் புறம் திரும்பினாள். தயக்கத்துடன் அவள் கை பற்றியவன் "என் மேல நம்பிக்கை இருக்கா?" என கேட்டவனுக்கே நம்பிக்கை இல்லை போலும். வார்த்தையில் அத்தனை தடுமாற்றம். ஆனால் கண்களில் ஒரு உறுதி பளபளத்தது. அதை கண்டபடி மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் 'ஆம்' என தலையசைத்தாள்.


ஒரு பெருமூச்சு விட்டபடி "இ.. இன்னிக்கு இங்க இருக்கியா?" என ஆடவன் கேட்டது தான் தாமதம். சட்டென ஒரு அடி பின்னே நகர்ந்தவள் அவனை மருட்சியும் பரிதவிப்புமாக பார்த்தாள். அந்த பார்வை 'உன்னை விடமாட்டேன் என்றாயே' என்ற கேள்வியில் தொக்கி நின்றதுபோல் தோன்றியது, அவனுக்கு. மீண்டும் அவள் கரம் பற்றியவன் "இன்னிக்கு ஒரு நாள் தான்டா. நா உன்ன கூட்டிட்டு போகிடுவேன். என்ன நம்புற தானே?" எனக் கேட்டான்.


அவள் கண்களில் நீர் பளபளத்தது. "என் மேல நம்பிக்கை இல்லையா மகி?" என‌ அவன் கேட்க ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டவள் 'இருக்கு' என்பதுபோல் தலையசைத்தாள். அவள் கன்னம் தட்டியவன்‌ "இன்னிக்கு இங்கேயே இரு‌ மதுரா. வெளிய எங்கேயும் போய்டாத. சாப்பாடுலாம் நானே கொண்டு வந்துட்டேன். ஸ்பூன் இருக்கு, சாப்பிட்டு ஒழுங்கா மருந்துலாம் போட்டுக்கோ. கை பத்திரம்" எனக் கூறி அனைத்தையும் அங்கு மேஜையில் வைத்தான்.


தூசியான வீட்டில் அவளை விட்டுச் செல்ல மனமே இல்லை தான். இருப்பினும் அவனுக்கு வேறு வழியும் இல்லை. ஒரு பாயை எடுத்து வந்து உதறிப்போட்டவன் "டேக் கேர்" எனக் கூற அப்போதும் வார்த்தை உதிர்க்க தெம்பற்று தலையை மட்டும் அசைத்து வைத்தாள். தன்னையே ஏக்கமும் கலக்கமும் பரிதவிப்புமாக பார்த்தவளை கண்களில் நிறப்பிக் கொண்டு புறப்பட்டான்.


தன் வீடு வந்தவன் விறுவிறுவென படிகளில் ஏறி தன்னறை சென்று குளித்து முடித்து தனது காக்கியில் காளையாக கிளம்பி வந்தான். வாயில் நோக்கி சென்றவனை "விட்டாச்சா?" என்ற கடுமையான குரல் தடுத்தது. திரும்பாமலே விரைத்து நின்றவன் "ம்ம்" என்றான். "திவி வேணும் தான்டா. அவ என் உயிரு. அ.. ஆனா அதுக்காக மதுவ பணையம் வைக்குறது நியாயமே இல்லடா. மதுவும் எனக்கு முக்கியம்டா" என்று கவலையுடன் கூறியவன் வேறு யாருமல்ல, வம்சி தான்.


அவனை திரும்பிப் பார்த்தவன் "ஒன்னும்.." எனக் கூறி முடிக்கும் முன் "கொனுடுவேன். எதாவது ஆச்சுன்னா" என்ற வசியின் வார்த்தைகள் விழுந்தது. படிகளில் கோர்ட் ஸ்டெடஸ்கோப் சகிதம் வந்தவன் கூற இருவரையும் எந்தவித உணர்வும் அற்றுப் பார்த்தவன் திரும்பி சில அடிகள் நடந்து மீண்டும் நண்பர்களை ஏரிட்டான். "அவ என் மகிடா" என மட்டும் கூறியவன் 'மேலும் விளக்கம் அளிக்கும் அவசியம் எனக்கில்லை' என்பதுபோல் சென்றுவிட்டான்.


நேரம் அப்படியே கடந்தது. வீட்டின் தூசி சாளரத்தின் வழி வந்த சூரியவொளியில் துள்ளிக் குதித்தது; ஆடவன் வைத்துச் சென்ற உணவு இடமசையாது ஆரிக் கிடந்தது; பாவையின் விழி வெறித்து நின்ற கூரையிலிருந்து மாறாமல் இருந்தது; கண்களில் கண்ணீரன்றி காய்ந்த சிவப்புத் தடம் ஜொலித்துக் கொண்டிருந்தது; அவள் மனமும் இந்த நாள் எப்போது முடியும் எனக் காத்துக் கிடந்தது.


அத்தனை நேரம் இருந்த கொடூர மௌனத்தை தடால் என்று கதவு திறக்கும் சத்தம் உடைத்தது. பாவையும் பதறிப்போக, சிறமப்பட்டு எழுந்தவள் முன் இரு தடியர்கள் வந்து நின்றனர். அன்று கண்ட அதே கண்கள். அதைக் கண்டவளின் மனதில் குளிர்ப்புகை பரவ, காய்ந்த கண்களில் எரிச்சலை பாய்ச்சி நீர் வடிந்தது. "நீங்க அன்னிக்கு.." என பேசமுடியாமல் தந்தியடித்தவளிடம் "அன்னிக்கே சொன்னோமே கேட்டியாடி?" என்றான், ஒருவன்.


பாவையின் உடலை நடுக்கம் பற்றித் தொற்றிக் கொள்ள "அன்னிக்கு சொன்னத செஞ்சிடனும் போலடா. அதானே பாப்பா" என கூறிய மற்றையவன் அவளை விழிகளில் மேலும் கீழுமாக அழந்தான். விரிந்த விழிகள் விரித்தபடி விரைத்து நடுங்கிக் கொண்டிருந்தவளை நெருங்கி "பெறவு என்ன? பாப்பாவே ஆசைப்படுது" என கூறியப்படி மற்றையவன், மதுராந்தகியின் இதையத்தை ஏகபோகத்திற்கு துடிக்கச் செய்தான்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
12.இனம் புரியா‌ தேடலில் நாம்!


பாவையின் முகம் வெளிரிப் போகவே, பயத்தில் நடுங்கியவளின் அருகே வந்தவன் அவளுக்கு இருபுறமும் கைவைத்து சிறையெடுத்தபடி "என்ன பாப்பா? சொன்னா கேக்க மாட்டியோ? போலீஸ் வரைக்கும் போகிருக்க போல" என வினவ "இல்ல.. நா.. விடுங்க" என தடுமாறினாள். "விடுறதா?" என்றவன் கை அடுத்து அவள் இடையில் பதிய, பதறி‌ விளகியவளை, அந்த மற்றையவன் பிடித்துக் கொண்டான்.


"பிளீஸ் வேணாம். என்ன விட்ருங்க" என அவள் கதற இளம் பெண் வாசம் அவனை போதைக்கு உள்ளாக்கியது. தானும் அப்பெண்ணை இச்சையோடு வருடியவன், அவள் கதறுவதை பொருட்படுத்தாமல் "அன்னிக்கே சொன்னோமே கேட்டியா?" என்றான். "அய்யோ வேணாம் விடுங்க" என அவள் கத்த "ஏ! இவ கிட்ட என்னடா பேச்சு?" என அவளை இழுத்து தரையில் தள்ளியவன் அவள் மேல் படற "ஆ.. வேணாம் வேணாம் விடுங்க" என கத்தினாள்.


அவள் கதறலை ரசித்தபடி அவன் பாவையின் முகம் நோக்கி குனியவும், "அரெஸ்ட் ஹிம்!" என சிங்கத்தை ஒத்த உறுமலில் ஆதித்தன் கர்ஜிக்கவும் சிரியாக இருந்தது. இரு தடியர்களும் விதிர்‌விதிர்த்து விழிக்க, தானே சென்று அவள் மேல் படர்ந்திருப்பவனை தூக்கியவன், கன்னத்தில் பளார் பளாரென இரு அறை விட்டு, அவன் கையில் விளங்கு பூட்டி கோவிந்தண்ணனிடம் ஒப்படைக்க, உடன் வந்த இன்னொரு காவலன் அந்த இன்னொரு தடியனை கூட்டிச் சென்றார்.


சட்டென தள்ளப்பட்ட வலியிலும், நடந்த நிகழ்வு கொடுத்த பயத்திலும் பாவை முகத்தை ஒரு கையில் மூடி வீரிட்டு அழுது கொண்டிருக்க, அவளை தாங்கியவன் "மகி மா. ஒன்னுமில்லடா. நா வந்துட்டேன்டா. ஒன்னுமில்லைடா" எனக் கூறினான். அவன் சட்டை காலரை இறுக பற்றி, அணைத்துக் கொண்டவள் "என்ன ஏன் விட்டுட்டு போனீங்க? அ..அன்னிக்கி விடமாட்டேன்னு சொன்னீங்களே? இ.. இப்ப ஏன் விட்டுட்டுப் போனீங்க?" என கதற அவள் முகத்தை மாரோடு அழுத்திக் கொண்டவன் " சாரிடி. சாரி பட்டு. தப்பு தான் தப்பு தான்டா" என கூறினான்.


ஆடவன் கண்களிலும் கண்ணீர் மழை பொழிந்தது.. கண்ணீர் என்பதை எட்ட நிறுத்தி இறுக்கத்தை பூசிக் கொண்ட அந்த காவலதிகாரனுக்கு சில நாட்களாகவே கண்ணீர் பழக்கப் பட்டுப் போனதல்லவா! மேலும் வீரிட்டு அழுதவள் "அவன் என்ன.. அய்யோ! என்னால முடியலை. இதுக்குத் தான் என்ன காப்பாத்துனீங்களா? இதுக்கு நா செத்தே போகிருப்பேன். அருவருப்பா இருக்கு" என்க "அய்யோ பிளீஸ்டி. இப்படிலாம் பேசாதடி. சாரி மதுரா இனிமே சத்தியமா உன்ன விடமாட்டேன்" என உரைத்தான்.


கண்ணீருடன் நிமிர்ந்தவள் "எனக்கு இங்க பயமா இருக்கு. பிளீஸ் இ இங்க வேணாம். அவனுங்க வ..வந்துடுவாங்க. எனக்கு பயமா இருக்கு. என்ன கொன்னா கூட பரவால, இப்படி என்னால முடியாது" என வீரிட்டு அழுதாள். இருபது வயது இளம் பெண்ணுக்கு காமுகர்களின் வருடலே நரகத்தை காட்டிவிட்டது. அவன் காலரை மேலும் இறுக பற்றியவள் "உங்கள‌ கெஞ்சி கேக்குறேன். இங்க வேணாம்" என கதற "வேண்டாம்டா பாப்பா. வேணாம்" என சிறுபிள்ளையை சமாதானம் செய்வதுபோல் செய்தான்.


அழுது அழுது பெண்ணவள் மயங்கிட, அவளை மார்போடு அணைத்துக் கொண்டு அழுதவன் "சாரி மகிமா" எனக் கூறிக் கொண்டான். உள்ளே வந்த கோவிந்தனுக்கு ஆதித்தின் கண்ணீர் அதிர்வை கொடுத்தது. "சார்!" என அவர் விளிக்க, மெல்ல சுயம் வந்தவன் புறங்கையில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு பாவையை தன் கையில் ஏந்திக் கொண்டான். மீண்டும் முகம் இறுகி கண்கள் சிவந்திட, "அவன் எனக்கு வேணும் ண்ணா. நம்ம எ(இ)டத்துக்கு கொண்டு போகிறுங்க" என கூறி பாவையை தனது வண்டியில் கிடத்தினான்.


உள்ளே ஏறியவன் தனது அழைப்பேசியில் வசிக்கு அழைக்க, ஆதித் பேசுவதற்குள் "ஹாஸ்பிடல்ல இருக்கேன். ஷிப்டு முடிஞ்சுருச்சு. நீ வருவதற்கு முன்னமே வீட்டுல இருப்பேன்" எனக் கூறி இணைப்பை துண்டித்தான். அவன் கூறியதற்காகவே வண்டியை வேகமாக அதே நேரம் கவணமாக ஓட்டியவன், வசி வருவதன் ஐந்து நிமிடங்கள் முன்னமே வீட்டை அடைந்திருந்தான். முன்னறையில் அமர்ந்திருந்த சிற்பி, ஆதித் மதுவை தூக்கி வருவதைக் கண்டு பதிறி எழ, மதுவை நீள்விருக்கையில் கிடத்தியவன் சிற்பியை பார்த்த "ஒன்னுமில்லடா. கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ல மயங்கிட்டா. வசி இப்ப வந்திடுவான்" எனக் கூறினான்.


உள்ளே வந்த வசி நண்பனைக் கண்டு சற்று வியந்து பின் "இதுக்கொன்னும் கொரச்சல் இல்ல" என முணுமுணுத்துக் கொண்டான். வந்து மதுராவை பறிசோதித்தவன் "ரொம்ப டென்ஷனாகிருக்கா. சலைன் போடனும் அண்ட் கைய மறுபடியும் ஸ்கேன் பண்ணனும்" எனக் கூற தோள்களை குலுக்கி "சலைன் இங்கயே போட அரேஞ்ச் பண்ணு. ஸ்கேன்க்கு நைட் கூட்டிட்டு வரேன்" என அவ்வளவு தான் என்பதுபோல் கூறிச் சென்றான்.


ஒரு பெருமூச்சு விட்ட வசி, தனது அறை சென்று வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு வந்து அவளுக்கு நரம்பூசி செலுத்தினான். அருகில் கண்ணீருடன் நின்றிருந்த சிற்பியை கண்டு‌ "ஒன்னுமில்லடா. பயத்துல மயங்கிட்டா. மூனு வாரம் ஆகிடுச்சுல, அதான் ஒரு ஸ்கேன் பாக்கலாம்னு சொன்னேன். பயப்பட ஒன்னுமில்ல" என வசி கூறினான். அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டு தலையசைக்க, ஏதும் பேசாமல் ஆதித் தன்னைக்கு சென்றான்.


எந்த அசம்பாவிதமும் இன்றி, அவன் நினைத்தது நடந்தாகிவிட்டதில் ஒரு குதூகலமும், இருந்தும் தன்னவளை கலங்கவைத்திட்ட வருத்தமும் இனைந்து வாட்டியது. அந்த அந்தி மாலை நேரத்தில் பல மணித்துளிகள் நீருக்கடியில் நின்று தன்னை சமன் செய்துக் கொண்டவன், கீழே வர, அவளுக்கு போடப்பட்ட நரம்பூசியை வசி நீக்கிக் கொண்டிருந்தான். "ஹவ் இஸ் ஷீ நவ்? (இப்ப அவ எப்படி இருக்கா?)" என ஆதித் கேட்க "ரொம்ப அக்கறை தான்" என முணுமுணுத்துக் கொண்டு "ஃபைன் (நல்லாயிருக்கா)" என வசி கூறினான்.


அதில் குறும்பு புன்னகையை உதிர்த்துக் கொண்ட ஆதித் சமையலறைக்குள் நுழைந்தான். வசியோ "மச்சி நான் ஹாஸ்பிடல் போறேன். மதுராவோட ட்ரீட்மெண்ட்கான ஏற்பாடுகள்லாம் பண்ணி வைக்குறேன். வம்சி இன்னிக்கு வரமாட்டான். டேக் கேர்" என்றவன் "சிற்பி டோர்ஸ்லாம் நல்லா லாக் பண்ணிக்கோ.." எனக் கூறிச் சென்றான். சில நிமிடங்களில் சமைத்து வந்தவன் அங்கு மதுராவின் அருகேயே கலக்கத்துடன் அமர்ந்திருந்த சிற்பியை கண்டான்.


முந்தைய நாள் நினைவுகள் வந்தன. மூவரும் தலையணையில் சண்டையிட்டு விளையாடிய போது மதுராவிற்கு தங்களின் விளையாட்டு நினைவில் படர்ந்தது. அந்த கலக்கத்தில் சென்றவளை சிற்பி பின் தொடர்ந்து செல்ல, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு பெருமூச்சு விட்ட ஆதி "அவ திவிய ரொம்ப மிஸ் பண்றா மச்சி. எந்த தடையமும் கிடைக்காதது அவளுக்கு ரொம்ப கில்ட்ட கொடுக்குது. இங்க நமக்கு பாரமா இருக்கோமோனு ஃபீல் பண்றா" என அவளின் உணர்வுகளை படித்தவனாகக் கூறினான். "நீ பேசாம உன் லவ்வ சொல்லிடலாமே மச்சி. நமக்கு பாரமா இருக்கோம்ங்குற தாட்டாவது (நெனப்பாவது) போகும்" என வசி கூற மறுப்பாக தலையசைத்தான்.


இப்படி ஒரு சூழலில் தன் காதலை சொல்லி ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது தவிக்கும் ஒரு நிலைக்கு அவளை தள்ள அவன் விரும்பவில்லை. அதை விளக்க ஆதித் விழையவில்லை என்றபோதும் வசிக்கு அது புரிந்தது. "நா மதுராவ அவ வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறேன்" என ஆதித் கூறவும் இருவரும் அவனை புரியாமல் பார்த்தனர். "இத்தனை நாள் அங்க கூட்டிட்டு போகாததுக்கு காரணம் அவளுக்கு நான் துணையா இருக்குறது தெரிஞ்சு அவங்க உஷாராகிட கூடாதுனு தான். ஆனா இப்போ அதே காரணத்துக்காக தான் அவளை கூட்டிட்டு போகப்போறேன்" என ஆதித் கூற வம்சி "ஆர் யூ யூசிங் ஹர்‌ ஆஸ் அ டிராப்? ( அவளை நீ பொறியாக பயன்படுத்துகிறாயா?)" எனக் கேட்டான்.


ஆதித்திடம் அதற்கு பதிலில்லை. "ஆதி விளையாடாத" என வசி கூற "விளையாடாம எப்படி டா ஜெயிக்க முடியும்?" என்றான். "நீ ஜெயிக்க மதுவ பயண்படுத்த போறியா?" என வம்சி கேட்க "டேய் நீயே இப்படி கேட்கலாமா?" என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டு "ஆமா நான் மதுராவ பொறியா வச்சு தான் அந்த எலிகள பிடிக்கப் போறேன். இது நாங்க மாட்டியிருக்கும் வட்டம். நாங்க தான் விளையாடி திவிய மீட்கனும்" எனக் கூறினான். இரட்டையர்கள் இருவருக்கும் இதில் சுத்தமாக உடன்பாடில்லை.


"டேய் புரிஞ்சுகோங்கடா" என்றவன் "வசி போய் அவள கூட்டிட்டு வாடா" என கூற "மச்சான் இது விளையாட்டு இல்லடா. திவ்யா எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தான் மதுவும். மதுக்கு இன்னும் உடம்பு சரியாகக் கூட இல்ல" என வம்சி பொறிந்தான். "நம்ம கூட இருக்கும் மதுவுக்கே இந்த நிலைனா அங்க திவி என்ன நிலமைல இருக்காளோ? இது உனக்கு புரியலையா?" என ஆதித் உறும " இப்ப என்ன சொல்ல வர?" என வசி கேட்டான். "நா மதுராவ அங்க கூட்டிட்டு போகப் போறேன்" என ஆதித் உறுதியுடன் கூறினான்.


வசி இறுகிய முகத்துடன் எழுந்து செல்ல "மச்சி நீ பண்றது எனக்கு சுத்தமா புடிக்கலைடா. திவிய கண்டுபிடிக்க வேற வழியா இல்லை? நா வேணும்னா பிரசாத் சார் கிட்ட எதும் ஹெல்ப் கேட்டு பாக்கவா? அவருக்கு ஆஸ்பிடல்ஸ் கூடலாம் கணெக்ஷன் இருக்கு" என தனது ஆய்வு கூடத்தின் டீனை குறிப்பிட்டு கேட்டான். "டேய் எனக்கும் பெரிய ஆபிஸர்ஸோட தொடர்பிருக்கு. விஷயம் வெளிய போகவேணாம்னு தான் நானே ஹான்டில் பண்றேன்" என்றவனை முறைக்க மட்டுமே முடிந்தது வம்சியால்.


பின் நடந்த யாவும் நாம் அறிந்தவை. சிற்பியிடம்‌ வந்தவன் "சிற்பி" என்க அவனை வருத்தம் தொனிக்கும் முகத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். "கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்டா. இப்ப நம்ம திவிய கண்டுபிடிக்க ஒரு கிளூ பிடிபட்டிருக்கு. ஃபீல் பண்ணாதடா" என ஆதித் கூற அவனை வியப்புடன் பார்த்தவள் "நிஜமாவா ண்ணா?" என்றாள். "ஆமாடா" என்றவன் "நா இவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். நீ டோர் லாக் பண்ணிட்டு சாப்பிட்டு படு. என்கிட்ட ஸ்பேர் க்கீ இருக்கு" எனக் கூறினான். "நானும் வரேனே ண்ணா" என அவள் கெஞ்சும் பாணியில் கேட்க "பிளீஸ் சிற்பி, வேணாம். தெரிஞ்சே மறுபடியும் ரிஸ்க் எடுக்க நான் விரும்பலை" எனக் கூறியவன் மதுராவை தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.


நன்கு இருட்டியிருந்தது. சாலையில் அவனது கருநிற நான்கு சக்கர வாகனம் இருளோடு இருளாகச் சென்றுகொண்டிருக்க, பாவை துயில் கலைந்தாள். மெல்ல கண்விழித்தவள் பதறி எழ, வண்டியை ஓரம் கட்டியவன் அவளிடம் திரும்பி "மதுரா காம்டவுன்" என்றான். சுற்றி முற்றி பார்த்தவள் "எ..எங்க போறோம்?" எனக் கேட்க அவனுக்கு மனதில் சுருக்கென்றது. முதன் முறை கூட்டிச் சென்ற போது தன்மீது வைத்திருந்த மலையளவு நம்பிக்கையில் ஒரு வார்த்தை கூட கேட்காதவள் தற்போது மருண்டு விதிர்விதிர்த்து கேட்டதில், மனமுடைந்து போனான்.


அவன் பதில் கூறாதிருந்தமையால் "அங்க கூட்டிட்டுப் போறீங்களா?" என‌ அவள் கேட்க வேதனையுடன் "இல்லடா" என்றான். அவள் கண்களில் கண்ணீர் வடிய, சில நிமிடங்கள் மௌனமே ஆட்சி புரிந்தது. பாவை அவனை ஏறிட்டு பார்த்து "என்ன ஏன் அங்க கூட்டிட்டு போனீங்க?" என பாவம் போல் கேட்க ஒரு பெருமூச்சு விட்டவன் "திவிய கண்டுபிடிக்க" என்றான்.


அவனை புரியாமல் பார்த்தவளை கண்டு "சாரி மதுரா நா உன்ன பொறியா பயன்படுத்திதான் இந்த கேஸில் அடுத்த நிலைக்கு போகவேண்டியதா இருந்தது. எனக்கு வேற வழி தெரியலை. உன்னால தான் திவி தொலைஞ்சுட்டாளோனு தினம் தினம் நீ வேதனை படுறத என்னால பாக்க முடியல. அதை போக்கமுடியாத என் இயலாமை என்னை கொல்லுது. திவ்யா எனக்கும் முக்கியம் தான். அவளை கண்டுபிடிக்க எனக்கு வேற வழி தெரியலை" என்றவன் அவள் கைபிடித்து "அதுக்காக உன்ன விட்டுடமாட்டேன்" எனக் கூற அவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"இப்ப ஹாஸ்பிடல் தான் போறோம். கை செக் பண்ண" என‌ ஆதித் கூற மௌனமாக தலைகுனிந்தாள். அதற்கு மேல் பேச்சு வளர்க்காதவனும் இறுகிய முகத்துடன் வண்டியை கிளப்பினான். சில நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தவன் தன் கழுகு பார்வையில் நோட்டமிட்டுவிட்டு அவளை கூட்டிச் சென்றான். உள்ளே தயாராக இருந்த வசியும் அவளை பரிசோதித்துவிட்டு "கட்டெடுத்துட்டு பெல்ட் போட்டுடலாம்டா. உனக்கும் ரிமூவ் பண்ணி மாட்டிக்க வசதியா இருக்கும். இன்னும் போன் (எலும்பு) ஜாயின் ஆகலை (சேரவில்லை). சோ இன்னும் கொஞ்ச நாள் போடனும்" என வசி கூற தன்னைப்போல ஆதித்தை திரும்பி பார்த்தாள்.


தாயுடன் வந்த பச்சைப் பிள்ளை மருத்துவர் கூறும் ஆளோசனைக்கு தாயிடம் என்ன பதிலோ எனப் பார்ப்பது போல் அவனை திரும்பிப் பார்த்தாள் பெண். அதில் வருத்தமுற்றவனின் மனம் சற்று ஆரிக் குளிர்ந்தது. அவன் 'சரி' என்பதுபோல் தலையசைக்க பாவையும் வசியிடம் தலையசைத்தாள். மெல்ல அவள் கட்டை பிரித்தவன் கையை மெல்ல, மிகவும் மெல்லவே அசைத்தான். ஆனால் பாவையோ "ஆ.. அண்ணா.. வலிக்குதூஊ" என கத்திவிட்டாள். அதில் ஒரு நொடி வசியே மிரண்டு போக பின் "ஒன்னுமில்லடா" என்றான். "வலிக்குது அண்ணா" என பாவை மூக்கை உறிஞ்ச "ஓகே ஓகே" என மென்மையாக கூறினான்.


அவளருகே வந்த ஆதித் மதுவை தோளோடு அணைவாகப் பிடித்துக் கொள்ள அவனிடம் பாந்தமாகப் பொருந்தியவள் "ஆ.. அண்ணா பிஸீஸ்" என கதறினாள். இதுபோல் பலவற்றை கண்டிருப்பவன் அவள் கதறலை பொருட்படுத்தாமல் மருத்துவனாக தனது பணியை செய்துக் கொண்டிருந்தான். பின் கையில் பெல்ட் போட்டு முடிய "மருந்து குடுத்திருக்கேன். கரெக்டா எடுத்துக்கனும். இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு மறுபடியும் ஸ்கேன் பண்ணி பாப்போம்" என வசி கூறியதற்கு கண்ணீருடன் பாவமாக தலையாட்டி வைத்தாள்.


பின் ஆடவன் அவளை மீண்டும் வீட்டிற்கு கூட்டி வந்து உணவளித்தவன் மருந்துகளையும் கொடுத்து "டேக் கேர் டா" எனக் கூறி படுக்க அனுப்பினான். தனக்காக அறையை பூட்டாமல் சாத்தி வைத்துவிட்டு சிற்பி உறங்கியிருக்க, சென்று அவளருகே படுத்தவளது மனதில் ஆதித்தின் ஆதிக்கம் மாயம் செய்துக் கொண்டிருந்தது. அந்த மாயையில் குழம்பியபடி படுத்திருந்தவள் குழப்பத்துடனே உறங்கிப் போனாள்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
13. இனம் புரியா தேடலில் நாம்!


பாந்தமான அணைப்பில் இதமாக துயில் கொண்டிருந்த மதுராந்திகி மெல்ல துயில் கலைந்தாள். வலிய கரங்களின் பிடியில் உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வு பட்டும் படாமல் மூளையின் கதவை தட்டி கூற எத்தனிக்க, மீன் விழிகளை மெல்ல திறந்தாள். பாவையின் முகத்திற்கு வெகு அருகே, அவளவனின் குறும்பு புன்னகை தவழும் வதனம் இருக்க, அகல விழிவிரித்தவள் பின்னே நகர எத்தனிக்க, அவன் வலிய பிடியிலிருந்து அசையமுடியாமல் போனது.


கண்களை மூடி மூடி திறந்தவள், தன் கையை கொண்டு அவன் முகத்தினை தொட்டு உருதி செய்துகொள்ள பார்க்க, அவள் விரல்களை சுண்டி இழுத்தவன், கிசுகிசுப்பான குரலில் "குட் மார்னிங்" என்றான். பாவையின் விழிகள் மேலும் விரிந்துக் கொள்ள, அதை கண்டு புன்னகைத்தவன் "குட் மார்னிங் சொன்னா திரும்பி சொல்லனும். அது கூட தெரியலை. ம்ம்.. தப்பாச்சே, இதுக்கு தண்டனை குடுத்திடுவோமா?" என்றபடி சட்டென அவள் இதழை சிறைபிடிக்க, பதறிப் கொண்டு துயில் கலைந்து எழுந்தாள்.


அவள் எழுவதற்கும், சிற்பி குளியலறையிலிருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. மதுவின் பாவனையே அவள் ஏதோ கனவு கண்டுள்ளதை எடுத்துக் காட்டியது. சிற்பி இங்கு வந்ததிலிருந்து இதோடு மூன்றாவது முறை, இப்படி கனவு கண்டு விழிக்கின்றாள். ஆனால் இதற்கு முன்பு கண்ட கனவும் இதுவும் ஒன்றல்லவே! அதை பற்றி கேட்டுக் குடைய வேண்டாம் என எண்ணிய சிற்பி அவளிடம் வந்து "மது!" என்க அவளை நிமிர்ந்து பார்த்தாள். முகம் முழுதும் சிவந்து, வேர்த்திருக்க, அவள் தோளை தட்டிக் கொடுத்தவள் "போ ஃபிரஷ் ஆகு. நா உனக்கு குடிக்க எதாவது கொண்டுவரேன்" என அவளை நிலைக்கு இழுத்து வந்தாள். சரி என்பது போல் தலையாட்டிய மது, குளியலறை செல்ல, ஒரு பெருமூச்சு விட்ட சிற்பி கீழே சென்றாள்.


குளியலறை கண்ணாடி முன் வந்து நின்ற மதுவோ "ச்ச! ஏன் இப்படிலாம் கனவு வருது" எனக் கேட்டுக் கொள்ளும் போதே அவனது குறும்பு புன்னகை தவழும் முகம் கண்முன் வந்து, முகத்தை சிவக்கச் செய்தது. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், கையில் உள்ள பெல்ட்டை மெல்ல கலட்டி குளித்துமுடித்து உடையணிந்துக் கொண்டாள். கலட்டும்போது சுலபமாக இருந்த பெல்ட், மீண்டும் மாட்டுவதற்கு சிரமமாக உணர்ந்தாள். இதில் விரிந்த கூந்தல் வேறு வந்து இம்சித்தது.


பலமணிதுளிகளின் போராட்டம் வீனாய் போக, அதை வைத்துவிட்டு வெளியே வந்தாள். உப்பரிகையில் நின்றபடி பாவை கீழே எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்க, அவளவன் தன் அறை விட்டு வெளி வந்தான். வெளியே வந்தவன் கண்களுக்கு விருந்தாய், அழகிய நீளமான கூந்தலை தோகையை போல் ஒரு பக்கமாக விரித்துவிட்டு, டி ஷர்ட் ஜீன்ஸ் சகிதம் நின்றிருந்தாள். பின்புறம் சரியாக இழுத்து சரிசெய்ய முடியாமல், தூக்கியிருந்த உடையில் அவள் பளிங்கு இடை மின்ன "ம்ப்ச் எங்க இவள?" என்றபடி எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு சிரித்துக் கொண்டான்.


சத்தமில்லாமல் அவள் அருகே வந்தவன், "என்ன மதுரா?" என்க அவன் குரலில் சட்டென திரும்பினாள். "ரிலாக்ஸ் நா தான்" என்றவன் "என்னாச்சு?" என்க "அ அது.." என பாவையின் வார்த்தைகள் தந்தியடித்தன. அவன் முகம் காண முடியாது தலைகுனிந்து நின்றவளை கண்டு புரியாத புன்னகையுடன் "என்னமா?" என அவன் கேட்க "அந்த பெல்ட் போட முடியலை. அதான் சிற்பிய கூப்பிடலாம்னு" என்றாள். "இதுக்கு தான் இவ்வளவு திக்கினியா?" என்றவன் "வா போட்டு விடுறேன்" என்க பாவையோ பதிலேதும் கூறாமல் நின்றாள்.


"என்னாச்சு மதுரா?" என அவன் கேட்க "இல்ல அது.." என திணறினாள். அவனிடம் சென்று போட்டுக் கொள்ள மனம் விளையவில்லை. ஆனால் சிற்பி வரும் முன் வரை இவன் தானே அவளை கவணித்துக் கொண்டது! ஆதலால் மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தவித்தாள். அவளவனுக்கா அது புரியாது? இருந்தும் அவள் தவிப்பை ரசித்தப்படி "என்ன மகி? பெல்ட் தானே? நானே போட்டுவிடுரேன்" என அவன் கூற தலையை மேலும் தாழ்த்தியபடி "இல்ல‌ சிற்பியே வரட்டும். டி.. டிரஸ் அட்ஜஸ்ட் பண்ணனும்" என ஒருவாறு கூறி முடித்தாள்.


தெரியாதது போல் ‌"ஓ" என்றவன் "ஓகே" எனக் கூறி நகர "அவள வர சொல்லுங்க" என்றாள். இத்தனை நாள் 'சொல்வீங்களா?' 'செய்வீங்களா?' என்றவளது வார்த்தை இப்போது 'சொல்லுங்க' என்னும் நிலைக்கு வந்திருந்தது. அதை அவள் கவணியவில்லை எனினும் அவன் குறித்துக் கொண்டான். "ம்ம்" என்றவன் சென்று சிற்பியிடம் மது அழைப்பதாகக் கூற அவளும் சென்றாள்.


சில நிமிடங்களில் இருவரும் வரவே, வசியும் வம்சியும் மட்டும் இருந்தனர். பாவையின் விழிகள் அவளவனை தேட, அதை கண்ட வம்சி, வசியின் காலில் இடித்து மதுவை ஜாடை காட்டினான். அதில் புன்னகையை கட்டுப் படுத்திக் கொண்டு "சிற்பி!" என வசி அழைக்க, சமையலறையிலிருந்து வெளி வந்தாள். "ஆதி ஏதோ முக்கியமான வேலைனு கிளம்பிட்டான். எப்ப வருவான்னு தெரியலை. நானும் வம்சியும் இப்ப கிளம்பிடுவோம், பார்த்து இருந்துக்கோங்க" என வசி கூற "ம்ம்.. எங்களுக்கு தான் திவா துணையிருக்கானே" என புன்னகையாக சிற்பி கூறினாள். அவனவள் புன்னகையை ரசித்துக் கொண்டிருப்பவனை சீண்டவென்ற வந்த திவா, அவளை இழுக்க, "இதோ வந்துட்டான். வாடா, உனக்கும் தரேன்" என அவனை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.


அங்கு தன் முன் நாற்காலியில், முகம், கை கால் என அடியும் கீறலுமாக, கட்டப்பட்டிருந்தனர் அந்த இரு தடியர்கள். அவர்கள் முன் இருந்த இருக்கையில் வெகு கம்பீரமாகவும் திடமாகவும் அமர்ந்திருந்த ஆதித், எதுவுமே நடவாததுபோல் "கோவிந்தண்ணா" என அவரை அழைத்தான். அவரும்‌ "தம்பி!" என்றபடி வர "கிளைமேட் நல்லா இருக்கே சூடா காஃபி குடிப்போமா?" எனக் கேட்டான். அவனை பற்றி நன்கு அறிந்தவரோ "நானே கொண்டு வந்துட்டேன் தம்பி" என்க "ஆஹாங்! சூப்பர் ண்ணா" என்றான். அவர் இருவருக்குமாக கப்பில் ஊற்றிக் கொண்டுவர, "பாவம் அடிவாங்கி டயர்டாகிட்டாங்க, முதல இவங்களுக்கு குடுப்போம்" என்றபடி சூடான குளம்பியை ஒரு தடியனின் வாயில் ஊற்ற "ஆ.." என கத்தினான்.


"ம்ப்ச் என்னடா? பாவமேனு குடுத்தா கத்துற? காபி புடிக்காதா?" என்றவன் "சரி நீ குடி" என‌ மற்றையவன் வாயில் ஊத்த அவனும் சூடு பொருக்க முடியாமல் அலறினான். இருவரும் முனகலுடன் பெருமூச்சுகள் விட்டு சமனடைய முயற்சிக்க "வலிக்குதுல? இப்படி தானே என் மதுராவுக்கும் வலிச்சிருக்கும்?" என்றான். "சார் விட்ருங்க" என ஒருவன் கூற சட்டென எழுந்து அவனை எத்தி நாற்காலியோடு சாய்த்தவன், அவன் நெஞ்சிலேயே‌ "சொல்லுடா. திவ்யா எங்க? சொல்லு" என்றபடி மிதித்தான்.


ஏற்கனவே அவனிடம் அடிவாங்கி குத்துயிரும் கொலையுயிருமாய் கிடப்பவனுக்கு, இந்த மிதி ரணமாய் வலித்தது. அவன் வாயிலிருந்து இரத்தம் பொங்கி வர, இரும்பியபடி "நா..நா சொல்றேன்" என்றான். அவன் தலைமுடியை கொத்தாகப் பிடித்துத் நாற்காலியோடு சேர்த்து தூக்கியவன் "ம்ம்.. குட்" என புன்னகையுடன் புருவங்களை ஏற்றி கூறினான். இரும்பியவனுக்கு நீர் கொடுத்து அவன் பேச வழிவகுத்த, ஆதித் மௌனமும் அழுத்தமுமாய் அவனை ஏரிட்டான்.



"நா.. நாங்க, வீராண்ணே ஆளுங்க. அண்ணன் தான் அடிக்கடி இப்படி எதாவது ஆள கடத்திட்டு வர அனுப்பி வைப்பாரு. பெரும்பாலும் எப்பவுமே பிரச்சினை வந்ததே இல்லை. இந்த பொண்ண தூக்கும்போது தான் கூட உள்ள பொண்ணு பிரச்சனை பண்ணிச்சு. மிரட்டி அணுப்பினோம். அப்பவே ஆக்ஸிடன்ட்‌ ஆனதை பார்த்துட்டு அப்படியே போய்ட்டோம். அந்தப் பொண்ணு வீட்ட சுத்தி எப்பவும் ஆளு போட்டிருந்தோம். அன்னிக்கு உங்களோட பார்த்ததுனால, முடிச்.." என கூற வந்தவனை முடிக்கவிடாமல் அலறச் செய்தது, அவன் கொடுத்த அறை.


அடித்துவிட்டு மீண்டும் சாதாரணமாக அமர்ந்தவன் "எதுக்கு கடத்துறீங்க? கடத்துன பொண்ண என்ன பண்ணுவீங்க?" என கர்ஜனையாகக் கேட்டான். "பொ..பொண்ணு பையன்னுலாம் இல்ல சார். எல்லாரையுமே தான் கடத்துவோம்" என அவன் கூற மீண்டும் பளார் என அறைந்தவன் "கேட்ட கேள்விக்கு பதில்" என்றான். "அது‌ எனக்கு தெரியாது சார்" என்றவனை ஆடவன் மீண்டும் அடிக்க "சத்தியமா தெரியாது சார். கடத்துவது, கொல்றது தான் எங்க வேலை. காசு வந்திடும். எதிர்த்து கேள்வி கேட்டா அண்ணனுக்கு புடிக்காது" என்றான். மீண்டும் ஒரு அறை! அவனருகில் இருக்கும் இன்னொரு தடியன் புறம் ஆதித் திரும்ப "சத்தியமா எனக்கும் வேற எதுவும் தெரியாது சார்" என கதறினான்.


அழுத்தமாக இருவரையும் பார்த்தவன் "கோவிந்தண்ணே அந்த வீரா மேல இப்போ எதும் கேஸ் இருக்கானு பாருங்க. அவன இன்னிக்கே அரெஸ்ட் பண்ணனும்" எனக் கூறிச் சென்றான். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் சிந்தனை தற்போது நடந்ததிலேயே பயணித்தது. 'வீரா எப்போலருந்து இந்த வேலைலாம் பாக்குறான்? பொண்ணுங்கனா கூட அவனோட கேடுகெட்ட வேலையில இதுவும் பண்றான்னு எடுத்துக்கலாம்.. ஆனா இங்க அவன் அனாதைகளா டார்கெட் பண்றதால இவன் சொல்றான்? அனாதை பசங்களை கடத்தினா கேட்க ஆளில்லைனு திமிரு..' என எண்ணும்போதே ஆத்திரத்தில் வண்டி வேகமெடுத்தது.


வீரா என்பவன் அந்த பகுதியின் மிகப் பெரிய ரவுடி கும்பல்களுக்கான தலைவன். பல முறை அவனை ஆதித் தன் கையினால் அடித்து துவைத்து ஜெயிலில் போட்டுள்ளான். கடந்தமுறை ஒரு கஞ்சா கடத்தல் விடயமாக ஆதித் அவனை பிடித்ததிலிருந்து எப்போதும்போல் தனது செல்வாக்கினால் வெளிவந்தபோதும் தங்களின் மொத்த சரக்கும் கைமீறிபோன ஆத்திரத்தில் ஆதித்துடன் கடுமையான வாய் சண்டை போட்டுவிட்டே சென்றான்.


"உன் சாவு என் கைல தான்டா. உன்ன துடிக்கவிடல என் பேரு வீரா இல்ல" என வீர வசனம் பேசிவிட்டு அவன் சென்றது ஆதித்திற்கு நினைவு வந்தது. 'எனில் தன்னை பழிவாங்கும் முயற்சியில் தான் இதையெல்லாம் செய்கின்றானோ?' என்ற எண்ணம் மேலும் ஆடவனை ஆத்திரமடையச் செய்தது. அதே வேகத்துடன் வீட்டை அடைந்தவன் ஏதோ யோசனை தோன்ற கோவிந்தனுக்கு அழைத்தான். அவர் அழைப்பை ஏற்கவும் ‌"அண்ணா அவன அரெஸ்ட் பண்ண‌ வேணாம்" எனக் கூற "ஏன் தம்பி? ஏற்பாடு எல்லாம் தயாரா தான் இருக்கு. புடிச்சு நம்ம இடத்துக்கே கூட கூட்டிட்டு வந்.." என அவர் முடிக்கும் முன் தான் தொடர்ந்தான்.


"வேண்டாம் ண்ணா. எங்க போகிட போறான்? அந்த தடியனுங்கள மட்டும் ஜாக்கிரதையா வச்சிருங்க" என்றவன் அழைப்பை துண்டித்தான். ஆடவன் உள்ளே நுழைய உணவு மேஜையின் மேல் ஏரி அமர்ந்துகொண்டு கால்களை ஆட்டியபடி "அடியே பசிக்குதுடி" என்றாள், அவனவள். "அப்படியே கொண்டு வரேன் சாப்பிடுரியா?" என சிற்பி உள்ளிருந்து கத்த "நா என்ன நீயா? பச்சையா திங்க" என்றாள். அவள் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்த தினுசில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் விடுவிடுவென நகர, அவனைக் கண்டு‌ திடுக்கிட்ட பாவை, விழிகள் வட்டமாக விரிந்துக் கொண்டது. தான் எதையும் கண்டுகொள்ளாதது போல் அவன் சென்றிடவே, 'அய்யோ மானம் போச்சு' என தலையில் அடித்துக் கொண்டவள் "சிற்பி கொஞ்சம் வந்து என்ன எறக்கி விடு" என‌ கத்தினாள்.


"அடியே.." என‌ அவளை வசைபாடிய போதும் வந்து இறக்கிவிட்டே சென்றாள். அதன் பின் மூச்சு காட்டாத தோழியை வினோதமாக எட்டிப் பார்த்துவிட்டு சமைத்தவள் கொண்டு வருகையில் ஆதித்தும் வர "அண்ணா எப்போ வந்தீங்க?" என்றாள். "இப்போ தான்டா" என அவன் கூற அவனையும் அழைத்து உணவிட்டாள். மௌனமாக உணவுண்ணும் அவனவளை ரசித்தபடி உண்டு முடித்தவன், தனது அழைப்பேசியை எடுத்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்து சில பல வேலைகளில் இருந்தான்.


தனது வேலை முடிந்த‌ திருப்தியிலும் திவ்யாம்பிகை கிடைக்கப் போகும் நம்பிக்கையிலும் அவன் மனம் உவகையில் கூத்தாடியது. அவன் திட்டமும் செயல் படும், திவ்யாம்பிகையும் கிடைப்பாள். ஆனால் அவனது உவகை நிலைக்குமா?


-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
14. இனம் புரியா தேடலில் நாம்!


அந்த காலைப் பொழுது… பிரம்மாண்டமான மாளிகையதில் நடூ கூடத்தில் தன் சகாக்களுடன் அமர்ந்திருந்தான், வீரா. மது கோப்பையை வாயில் கவிழ்த்தியவன் "ம்ம்" என்க அவனிடம் அன்றைய தினத்தின் செயல்களை பற்றி கூற காத்திருந்தவனோ "ண்ணே! இன்னிக்கு அந்த வெள்ளக்காரன் பணம் அனுப்புவான். போய் வாங்கிட்டு வரனும்" எனக் கூறினான். "ம்ம்.." என யோசனையாக தலையசைத்தவன் "அந்த போலீஸ்காரன் என்ன கொஞ்ச நாளா கம்முனு இருக்கான்?" எனக் கேட்கவே ஆதியின் காதுகள் கூர்மையாகின.


"தெரியல ண்ணே" என அந்த அடியாள் கூற "நம்ம பக்கம் எதுவும் சீண்டலை?" என வீரா கேட்டான். "ம்ம்.. ஆமா ண்ணே. எதும் பெருசா யோசிக்குறான் போல" என அந்த தடியன் கூற "ம்ம்.. சரி, அந்த டாக்டர் பணம் அனுப்பினானா?" என வீரா கேட்டான். தற்போது ஆதியின் புருவம் சுருங்கியது. "இல்ல ண்ணா. நா கேட்டேன், இன்னும் ஒரு வேலை இருக்காம். அதையும் முடிச்சிட்டு பணத்தை வாங்கிக்க சொன்னான்" என அந்த தடியன் சொல்ல யோசனையாக தாடையை நீவியவன் "அதுலாம் முடியாது. முதல் கடத்தலுக்கு காச குடுத்தா தான் அடுத்ததை செய்வோம்னு சொல்லு" என கூறியதற்கு "சரிண்ணே" என்றான்.


இங்கு வீட்டில் தனது காதொலிப்பானை கலட்டிய ஆதித்தின் முகத்தில் யோசனை ரேகைகள். ஆம்! இத்தனை நேரம் அந்த பங்களாவில் பேசியதை தன் செவிவழிக் கேட்டுக் கொண்டிருந்தான், வீராவே அறியாமல் அவனிடத்தில் இருந்த தனது ஆள் மூலம். அந்த மருத்துவருக்கு இதில் பங்கு இருக்கும் என்று தான் கணித்திருந்தான். ஆனால் மருத்துவரே கடத்தும்படி கேட்டிருப்பார் என அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் சிந்தனை தேங்கி தான் நின்றது, நேரமில்லை.


அப்படியே சில மணித்துளிகள் கடக்க, கீழே வந்த இரு தோழிகளையும் கண்டான். "சிற்பி!" என ஆடவன் அழைக்க இருவரும் திரும்பினர். ஆதியிடம் வந்த சிற்பி "சொல்லுங்க ண்ணா" என்க "அடுத்து காலேஜ் எப்போடா?" என கேட்டான். அவனை தயக்கத்துடன் பார்த்தவள் "ஏன் ண்ணா?" என கேட்க "உன்ன திருப்பி காலேஜ்ல விடனும்ல?" என்றான். "அ..அது இன்னும் ரெண்டு நாள்ல. திங்கள்கிழமை ண்ணா" என அவள் சொல்ல "ஓ.. சரிடா. உனக்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் பண்ணி வைடா. உனக்கு உங்க காலேஜ் ஹாஸ்டல்லயே ரூம்க்கு ஏற்பாடு பண்ணிட்டேன். காலேஜ் விட்டு வெளிய எங்கேயும் போக வேணாம். எதாவது வேணும்னா எங்க யாருக்காச்சும் கால் பண்ணு, அரெஞ்ச் பண்ணி தரோம்" என ஆதித் பேசிக் கொண்டே போக அவளோ தயக்கமாக "இ..இல்ல ண்ணா. நா போகலை" என தலைகுனிந்துபடி கூறினாள்.


அவளை புருவம் சுருங்கியபடி பார்த்தவன் "ஏன்?" என்க "அண்ணா பிளீஸ் தப்பா நினைக்காதிங்க. மதுவ இந்த நிலைமையில விட்டுட்டு போக எனக்கு மனசே இல்ல. திவி கிடைக்கும் வரை நான் லீவ்ல இருக்கேன். அப்படி ரொம்ப நாள் ஆச்சுன்னா, அடுத்த வருஷம் படிச்சுக்குறேன்" என்றாள். அவளை அழுத்தமாக பார்த்த ஆதி "என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அதுக்கப்புறம் உன் இஷ்டம்" என்க "ம்ம்.." என்றாள். தன் உயரத்திற்கு எழுந்து நின்றவன் "எங்க மேல நம்பிக்கை இல்லையாடா?" என கேட்க சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.


"நாங்க மூனு பேரும் அவள ஒரு குழந்தைய போல தான் பாத்துக்குறோம்" என ஆதித் கூற "அய்யோ அண்ணா. நா அப்படி சொல்லலை. எனக்கு இவள விட்டுட்டு போக மனசில்லைனு சொல்றேன்" என்றாள். "திவியோ மதுராவோ இதை தான் உன்கிட்ட விரும்பினாங்களா?" என ஆதித் கேட்க அவள் கண்களில் குளம் கட்டியது. "யோசிச்சுக்கோ" என்ற ஆதித் நகர்ந்திட தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு சென்றாள்.


அன்று இரவு உணவை சமைத்துக் கொண்டே அவளவனுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள். எங்கே இன்றிரவு வராமல் விட்டிடுவானோ என்ற பதட்டம் பாவையை வெகுவாக கலங்கச் செய்தது. உள்ளே வந்த மது‌ "என்ன சிற்பி?" என்க சட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பியவள் "அ.. என்ன மது?" என்றாள். அவளை புருவம் சுருக்கி பார்த்தவள் "என்ன பண்ற? ஏன் அழற?" என்க தலையை கவிழ்ந்து கொண்டாள். அவளிடம் வந்தவள் அவள் கை பற்றி "உன் படிப்பு கெட கூடாதுனு தானே சிற்பி உனக்கு நான் அன்னிக்கு போன் கூட பண்ணாம இருந்தேன்? இப்ப நீ இப்படி கிளம்ப மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? இதே என் இடத்துல திவி இருந்திருந்தா என்ன பண்ணிருப்பா? இதோ, இங்கிருக்குற பாத்திரம் எல்லாம் உருண்டிருக்கும்" என மது கூற சிற்பி மெல்ல சிரித்தாள்.


"நா இங்க பத்திரமா தான் இருக்கேன் சிற்பி. இங்க பாதுகாப்ப உணர்ந்ததுனால தான் நீ வரும் முன்ன கூட தைரியமா இருந்தேன்" என மது கூற அவள் கூற்று புரிந்தவளாக தலையசைத்தாள். "எதுவும் யோசிக்காம போய் நல்லா படி சிற்பி. எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம திவி கண்டிப்பா கிடைப்பா" என மது கூற சிறு புன்னகையுடன் தலையசைத்தாள். பின் இரட்டையர்கள் இருவரும் வீடுவரவே பாவைக்கு மூச்சு வந்தது. மௌனமாக இரவுணவு முடியவே யாவரும் தத்தமது அறை சென்றனர்.


மது எப்போது உறங்குவாள் என காத்திருந்த சிற்பி அவள் நன்கு உறங்கியப் பின் எழுந்து வெளியே வந்தாள். உப்பரிகையில் ஏதோ உருவம் தெரியவே திடுக்கிட்டு போனவள் வாய் பொத்தி "நான் தான்" என கிசுகிசுப்பான குரலில் கூறினான். பின் அவளை தன்னறை பாலகனிக்கு ஆடவன் கூட்டிச் செல்ல நிலவொளியில் தன்னவள் தன்னை ஏக போகத்திற்கு முறைப்பது தெரிந்தது. "சிபி குட்டி" என அவன் கூற "எத்தனை கால் பண்ணேன்? ஏன் எடுக்கவே மாற்றீங்க? என்னிக்காவது இப்படி டிஸ்டர்ப் பண்ணிருக்கேனா? அப்படியிருக்க இத்தனை தடவை பண்றாளேனு அட்லீஸ்ட் ஒரு மெசேஜாச்சும் போட கூடாது?" என பொறிந்தாள்.


"ஏ! என்ன சிற்பி? நான் வார்டுக்கு போகிருந்தேன். போன சைலண்ட்ல வச்சிருந்தேன்டி. உனக்கு தெரியாதா?" என அவன் கூற அவள் முகம் சோர்வை தத்தெடுத்தது. "என்னமா?" என அவன் கேட்க "நா சண்டே கிளம்பிடுவேன்" என சோகமாக கூறினாள். "ம்ம்.. காலேஜ் போணும்ல? என்னென்ன வேணும்னு பாரு. எதும் புக்ஸ், டிரஸிங்ஸ் வேணுமானு பாத்துவை. நாளைக்கு போவோம்" என உரிமையாகவும் இயல்பாகவும் அவன் கேட்க "உங்களுக்கு வருத்தமா இல்லையா?" என கேட்டாள். அவளை கண்டு மெல்ல புன்னகைத்தவன் "இந்த ரெண்டு வாரம் எனக்கு செம்ம டிலைட், நீ வந்தது. சோ உன்னோட ஆப்ஸன்ஸ் ஒரு ஒரு நாளைக்கு ஏக்கமா தான் இருக்கும். அப்பறம் அப்டியே ஓகே ஆகிடுவேன்" என எதார்தத்தை கூறினான்.


"உன் ஸ்பெஷல் வெண்டைக்காய் பொரியல மிஸ் பண்ணுவேன்" என பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூறியதில் பாவை சிரித்திட, அதை ரசித்தபடி அவள் சிகையை ஒதுக்கி விட்டவன் "நம்ம பொண்டாட்டி நல்லா படிச்சிட்டு இருப்பாங்குற திருப்தியே என்ன ஹாப்பியா வச்சிக்கும்" என கூறினான். அவனை காதலாக பார்த்தவள் "மதுவ பாத்துக்கோங்க" என கூற "ம்ம்" என்றவன் "ஏ! உன் பவிம்மாவ பாக்க போகவே இல்லை?" என கேட்டான். "அவங்க மருமகளுக்கு டெலிவரி ஆகிருக்கு. அதான் துபாய்க்கு போகவானு கேட்டாங்க. எப்படியும் நா லாஸ்ட் காலேஜ் போகும்முன்ன ரெண்டு நாள் தானே அங்க போறேன், அதான் போங்கன்னு சொல்லிட்டேன்" என பாவை கூற "ம்ம்.." என்றான்.


"சரி! எதுவும் யோசிக்காம நல்லா தூங்கு. அதான் இன்னும் ஒரு நாள் இருக்குல?" என அவன் கூற "ம்ம்.." என்றபடி சென்றாள். கதவு வரை சென்றவள் மீண்டும் அவனிடம் வந்து அவனை இறுக அணைத்து "ஐ வில் மிஸ் யூ" என கூற மெல்லிய புன்னகையுடன் அவள் தலையில் முத்தமிட்டு "மீ டூ டி" என்றான். சிறு நாணப் புன்னகையுடன் "குட் நைட்" என கூறியவள் சிட்டாய் பறந்து வந்து தன் அறையை அடைந்தாள்.


மறுநாள் காலை பொழுது மிக அழகாகவே புலர்ந்தது. ஆதித்தன்‌ தன் முன் இருந்த கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். அந்த மருத்துவரின் மொத்த சரித்திரமும்‌ அதிலிருந்தது. அனைத்தும் நல்லவிதமாகவே இருந்தது. அதிலேயே அவன் பூசிமொழுகும் திரன்வாய்ந்தவன் என ஆதித்திற்கு புரிந்தது. ஒரு பெருமூச்சொன்றை விட்டவன் அடுத்த கட்டமாக என்ன அடி வைப்பது என திணறிதான் போனான். இனி நேரடியாக பாய்வதை தவிற வேறு வழி இல்லை என யோசித்தவன் தனது சில நண்பர்களிடம் சொல்லி அந்த மருத்துவரை கண்காணிக்க ஆள் ஏற்பாடு செய்தான்.


அன்றைய பொழுதை எப்படியோ கழித்துவிட்டு வீடு வந்தவன் தன்னிடம் உள்ள சாவிகள் கொண்டு வீட்டினை திறந்து உள்ளே நுழைந்தான். சோஃபாவில் பசியிலும் தூக்கத்திலும் பாதி நித்திரையில் மது படுத்திருக்க, சுற்றி முற்றி பார்த்தவன் முதலில் தன்னறை சென்று புத்துணர்ச்சி பெற்று வந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பது புரியவே அவளை எழுப்பச் சென்றவன், மணியை பார்த்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தான். சில நிமிடங்களில் உணவை தயாரித்தவன் அவளுக்காக தட்டில் போட்டுக் கொண்டு வந்து அவளை எழுப்பினான். சிறுபிள்ளை போல் அரைமயக்க நிலையில் இருந்தவளை கண்டு முறுவலித்தபடி "ஏ பொண்டாட்டி எழுந்திரிடி" என எழுப்பினான்.


அரண்டடித்து விழித்தவள் அவனை கண்டு ஒரு பெருமூச்சு விட, "பசிச்சிடுச்சா?" என கேட்டான். "ம்ம்.." என்றபோல் தலையாட்டியவள் "வசி அண்ணாவும் சிற்பியும் கடைக்கு போகிருக்காங்க. வம்சி அண்ணா லேப் போகிருக்காங்க" என கூற "அப்போ நம்ம மட்டும் தான் இருக்கோமா?" என்றான். ஆடவன் உள்ளுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் சாதாரணமாக கேட்க, பாவை தான் திணறிப் போனாள். "சரி சாப்பிடு" என்றவன் உணவினை கரண்டியால் எடுத்து ஊட்டி விட்டான். சிற்பி வந்தபின் பெரும்பாலும் சிற்பி தான் ஊட்டிவிடுவாள். தற்போது வெகு நாள் பின் அவன் ஊட்டுவதாலோ, அன்று கண்ட கனவின் தாக்கத்தினாலோ பாவைக்கு ஏதோ சங்கோஜமாக இருந்தது.


எப்படியோ அவள் உண்டு முடியவே, சில மணி நேரங்களில் சிற்பி மட்டும் வந்தாள். "என்னடா, தனியா வர?" என ஆதித் கேட்க "டாக்டர் ஆஸ்பிடல்ல எமர்ஜென்சினு கிளம்பிட்டார், மைக்ரோபயாலஜிஸ்ட் லேப் போகிருக்கார். ரெண்டு பேரும் நைட் வரமாட்டாங்க" என கூறினாள். "நீ தனியாவா வந்த?" என அவன் கேட்க "இல்ல ண்ணா. என்ன வீட்ல விட்டுட்டு தான் போனாங்க" என கூறினாள். பின் இருவரும் உண்டு முடியவே படுக்கச் சென்றனர், மறுநாள் காலை தரப்போகும் அதிர்ச்சியை பற்றி அறியாமல்.


கீழ் வானம் சிவந்து, பின் விடிந்து நீல மயமாகவே சிற்பி தனது உடைமைகள் அனைத்தயும் கீழே கூடத்தில் வைத்துவிட்டு காலையுணவை செய்துகொண்டே தேநீர் போட்டுக் கொண்டிருந்தாள். அங்கு வந்த வசி "ஏ சிற்பி ஊருக்கு கிளம்பும் போதும் செஞ்சு வச்சிட்டு போகனுமா?" என கேட்க "நீங்க எப்போ வந்தீங்க?" என்றாள். "இப்போ தான்" என்றவன் சென்று தயாராகி ஆதித்துடன் வரவே இருவருக்கும் தேநீர் போட்டுக் கொண்டு வந்து தந்தாள். வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே, மூவரும் எட்டிப் பார்க்க, கையில் யாரோ ஓர் மாதுவை ஏந்தியபடி வந்தான் வம்சீகரன்.


மூவரும் எழுந்து நிற்க, வலதுபுறம் முழுதும் கீரலுடனும், வெள்ளை நிறத்தில் மருத்துவமனை உடைபோன்ற கவுன் முழுதும் கரைபடிந்து கிழிந்த நிலையில், ஆடவனின் சட்டை போர்த்தப்பட்டு பரிதாபமாக இருந்த பெண்ணை சிவந்த கண்களில் கண்ணீருடன் வம்சி ஏந்தி வந்தான். உச்சகட்ட அதிர்ச்சியில் சிற்பி "தி..திவி!" என்கவே யாவரும் அப்பெண்ணின் முகம் கண்டனர். ஆம் அவள் திவ்யாம்பிகையே!

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
15. இனம் புரியா தேடலில் நாம்!


"திவி!" என அதிர்ச்சியின் உச்சத்தில் சிற்பி அழைக்கவே, ஆதித்தும் வசியும் அவள் முகம் கண்டனர். யாரையும் பாராமல், விடுவிடுவென படிகளில் ஏறியவன் தன்னறைக்கு அவளை தூக்கிச் செல்ல, யாவரும் அவன் பின்னே ஓடினர். அவளை கட்டிலில் கிடத்தியவன், கண்ணீருடன் அவளை காண, மனதில் அமிலத்தின் சாரல் பரவிய உணர்வு.

உள்ளே வந்த வசி அவள் நாடியை பிடித்துப் பார்த்து "வம்சி என்னாச்சு? திவிய எங்க பார்த்த?" என கேட்க "எ..என் லேப் பக்கத்துல கொஞ்சம் தள்ளி ஒரு ரெ..ரெசார்ட் இருக்குல, அங்க.." என கூறத் துவங்கினான். தனது பணியை முடித்துக் கொண்டு காலை வேலையில் அவனது டீனிடம் அனைத்தையும் கூறிவிட்டு விடைபெற்றான்.


அங்கிருந்து புறப்பட்டவன் கார், விதிவசத்தால் அந்த லார்ஜின் முன் தடுமாற, வண்டியை ஓரம் கட்டினான். " ச்ச! என்னதிது?" என்றபடி வந்தவன் அந்த லார்ஜை சுற்றி வளர்க்கப் பட்ட புதரிலிருந்து தெரிந்த மெத்தென்ற கையை கண்டு புருவம் சுருக்கினான். அந்த அதிகாலை பொழுதில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நிசப்தம் நிலவியிருந்தது. அந்த கையினருகே சென்றவன் புதரினை விளக்கிப் பார்க்க, கிழிந்த உடையும் உடல் கீறல்களுமாக ஒரு பெண் குப்புற விழுந்திருந்தாள்.

அப்பெண்ணை திருப்பிப் பார்த்தவன் விழிகள் கண்ட காட்சியினை நம்பாதே என கூறுவதற்காகவே கண்ணீரால் காட்சியை மறைத்தது போலும். சட்டென தன் சட்டியினை கலற்றியவன் சுற்றி முற்றி யாரும் இல்லாததை உருதி செய்து கொண்டு அவளுக்கு அதை போர்த்தி இங்கு கூட்டிவந்திருந்தான். இவ்வளவையும் அவன் கூறி முடிக்க ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டது. அறைவாசலிலிருந்து கட்டிலை வெறித்தபடி நின்றிருந்தாள், மதுராந்தகி.


யாவரும் அவளை கண்டு மேலும் என்ன நிகழப்போகிறதோ என அஞ்ச, உள்ளே வந்தவள் கட்டிலின் அருகே பொத்தென அமர்ந்து, வம்சியை நீர் திரை மின்னும் விழிகளுடன் ஏறிட்டாள். நடுங்கும் கரங்களில் திவியை சுட்டிக் காட்டி "தி திவி?" என அவள் கேட்க கண்ணீர் வழிய, ஆம் என்பது போல் தலையசைத்தான்.

"என்னாச்சு? என் திவ்வி இப்படி?" என பேசமுடியாமல் திணறிய பாவை, "திவீஈஈஈ" என்ற பெருங்குரலுடன் கட்டிலில் முகம் புதைத்து அழுதாள். அவளிடம் வந்த ஆதித் கண்ணீர் தேங்கிய விழிகளில் அவளை தாங்கியவன் "மகிமா" என்க "அ.. அவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படி இருக்கா? என் திவி. அய்யோ எல்லாம் என்னால தான். நா தான் திவிய இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்துட்டேன். என்னால தான்" என்று கதறினாள்.


ஆதித்திடமிருந்து விடுபட்டவள் படுத்திருப்பவளை உலுக்கி "திவ! என்ன பாரு திவி. எழுந்திரி திவி. பிளீஸ் எழுந்திரி திவி" என கதற அவளை பின்னிலிருந்து பிடித்தவன் "மதுரா ஸ்டாபிட். மகி பிளீஸ் கண்டிரோல் யுவர் செல்ஃப்" என்றான். அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையிலேயே அவள் இல்லை. அவனிடமிருந்து திமிரியபடி அவள் திவ்யாவை உலுக்க, அவளை சட்டென தன்புறம் திரும்பியவன் "மகிமா!" என கத்தினான்.

அதில் ஸ்தம்பித்து விழித்தவளை கண்டவன் "வேணாம்டா" என்க அவன் காலரை இறுக பற்றிக் கொண்டவள், அவன் மார்பில் முகம் புதைத்து வீரிட்டு அழுதாள்.


நிலையை கையிலெடுத்த வசி, "ஆதி, கொஞ்சம் இவங்கள வெளிய கூட்டிட்டு போ. ஐ வான்ட் டு செக் ஹர்" எனக் கூற மதுவையும் சிற்பியையும் கூட்டிச் சென்றான். பாவையின் நாடி பிடித்து பார்த்தவன், அவள் விழிகளை ஆராய்ந்துவிட்டு முதலில் காயங்களுக்கு வேண்டிய மருந்துகளை எடுத்து வந்தான்.

அவளையே விழியகற்றாது பார்த்திருக்கும் சகோதரனை கண்டவன், விடுவிடுவென கீழே வந்தான். ஆதியின் மாரில் வெம்பி வெடித்து மதுரா கதறிக் கொண்டிருக்க, அவளது உடல் நிலை கருத்தில் வந்தது. சட்டென ஒரு மயக்க ஊசியை எடுத்தவன் "ஆதி, ஹோல்ட் ஹர் (அவள புடிச்சுக்கோ)" என கூறி அவளுக்கு அதை போட்டுவிட்டான்.


பின் சிற்பி புறம் திரும்பியவன் "திவி உனக்கு வேணுமா, வேணாமா?" என கேட்க அழுது கொண்டிருந்தாள் சட்டென அவனை விழிகள் விரிய பார்த்தாள். 'என்ன கேள்வி இது?' என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது. "இப்போ நர்ஸ்லாம் கூப்பிட்டு அவங்க வந்து டிரீட் பண்றது கஷ்டம். அவ டிரஸ் ரிமூவ் பண்ணி காயங்கள்ல நான் குடுக்குற மருந்த போடு. வா" என அவன் கூறவே அவனுடன் விரைந்தாள்.

ஒரு மருத்துவனாக இது போன்ற சிகிச்சைகளை கண்டவன் தான். ஆனால் உடன்பிறந்தவனை வைத்துக் கொண்டே அவன் காதலிக்கு செய்ய அவனால் எங்கனம் முடியும்? உள்ளே சென்ற சிற்பி, வசியும் வம்சியும் வெளியே சென்றதும் பாவையின் உடைகளை கலைந்தாள்.


கை, கால் மற்றும் முகம் ஒருபுறமாக மட்டும் ஏதோ செவிற்றில் உரசியதால் ஏற்படுவது போன்ற கீறல்களாக இருந்தது. அனைத்தையும் துடைத்து மருந்துகளை சரியே இட்டவள், வசி கொடுத்திருந்த மருத்துவமனை உடையை அவளுக்கு சரிவர அணிவித்தாள். பின் உள்ளே வந்த வசி அவளுக்கு நரம்பூசியும் மேலும் சிலபல ஊசிகளும் போட்டு "மயக்கத்துல தான் இருக்கா. நார்மல் வெளிச்சத்துல ஐ (கண்) பூப்பில் ரெண்டுலருந்து நாலு மில்லிமீட்டர் தான் இருக்கும். ஆனா இவ கண்ண பாரு" என இமையை தூக்கி காட்டியவன் "இட் ஸீம்ஸ் பிக் அன்ட் ரெட்டிஷ். ஐ திங்க் ஷீ டுக் டிரக் போர்சிபிலி. இவ உடம்புல எதோ வித்தியாசமான ஸ்மெல் வருது, ஆனா அது ஆல்கஹால் வாடை போல இல்ல. அண்ட் எதுவும் செ..ஸெக்சுவல் அட்டாக் நடந்தபோல எனக்கு தெரியலை. பட் உறுதியா சொல்ல முடியாது. திவி கண்ண முழிச்சா தான் அடுத்தெல்லாம்" என வசி கூற அனைத்தையும் கவனமாக கேட்டவள் "எனக்கும் எதும் அப்படி தெரியலை" என்றாள். "குட்" என்றவன் கதவினை திறக்கவே வம்சி வந்தான்.


அவனுடன் ஆதித்தும் இருக்க, "மது?" என வசி கேட்டான். "கீழ படுத்திருக்கா" என ஆதித் கூற "வேற வழி தெரியலைடா. இப்போ தான் ஹெல்த் சரியாகிட்டு வருது. இப்போ ரொம்ப அழுதா பிக்ஸ் வர சான்ஸ் இருக்கு. அதான் இன்ஜெக்ஷன் போட்டேன்" என்றான். சில நிமிடங்களில் மௌனமாக கரைய "திவிக்கு..?" என வம்சி கேட்டான். "தப்பா எதுவும் நடந்தபோல இல்லடா" என வசி கூற "அப்போ அவ இருந்த இடத்திலிருந்து தப்பிச்சு வரும்போது ஏற்பட்ட காயமா இருக்கலாம், இல்லயா?" என ஆதித் கேட்டான். "ம்ம்.. ஆமா ஆதி. அப்படி தான் தெரியுது" என வசி கூற மீண்டும் மௌனம் குடிகொண்டது.


"திவிய கடத்தினது வீரா தான்டா. நான் கூட முதல என்னை பழிவாங்க எதும் செய்யுறான்னு நினைச்சேன். ஆனா அந்த ஆஸ்பிடல் டாக்டர் தான் இவள வந்து கடத்திட்டு போக சொல்லிருக்கான். அவனோட தேவைக்காக கடத்திருந்தாலும் இப்பவரை திவிய விட்டுவச்சிருக்க மாட்டானே? முதல திவிய அந்த லார்ஜ்க்கு ஏன் கொண்டு போகனும்? அவனுக்கே பல கெஸ்ட் ஹவுஸ் இருக்கு" என ஆதித் குழம்பிதான்‌ போனான். எது எப்படியோ, திவி தற்போது இவர்களிடம்.


அப்படியே நேரம் ஓடிட யாவரும் கீழே வந்தனர். மதுவை பார்த்த சிற்பி "மது இருக்குற நிலமையை நினைச்சா இன்னும் பயமா இருக்கு. இப்ப தான் திவிக்கும் ஆபரேஷன் பண்ண பட்டிருக்கு. இவளுக்கும் பிபி ரேட் சரிகிடையாது. திவி கண்ணு முழிச்சு எதாவது ரியாக்ட் பண்ணபோய் மது இன்னும் பயந்தா, ரெண்டு பேருக்குமே நல்லதில்லை" என கூற யாவருக்கும் அவள் கூற்று புரிந்தது. ஒரு பெருமூச்சு விட்ட ஆதித் சென்று யாவருக்கும் உணவினை செய்து கொண்டு வந்தான். "மதுராவ நான் அம்மா அப்பா கூட விட்டுட்றேன்" என ஆதி கூற வசிக்கு புரையேறியது.


அவனை நிமிர்ந்தும் பாராமல் ஆடவன் உண்டு கொண்டிருக்க "டேய்! என்ன சொன்ன?" வம்சி கேட்டான். எதற்கு இவ்வளவு அதிர்ச்சி என சிற்பி புரியாமல் பார்க்க வம்சியோ "இப்ப போய் அவள விட்டா இத்தனை நாள் எங்க இருந்தானு கேப்பாங்கடா. திவி தொலைஞ்சதை பத்தி சொன்னோம்னா இவ இங்க தான் இருந்தானு சொல்லவேண்டி வரும். மூனு பசங்க உள்ள வீட்டுல ஒரு பொண்ண யாருக்கும் தெரியாம இத்தனை நாள் வச்சிருந்தது தெரிஞ்சது, யசோதா தேவியும் கல்யாணி தேவியும் சாமியாடிடுவாங்க" என கூறினான். அதில் அகல விழிவிரித்த சிற்பி "அ..அப்போ அம்மாக்கும் அப்பாக்கும் மது இங்க இருக்குறது தெரியாதா?" என கேட்க வசியும் ஆதித்தும் வம்சியை முறைத்தனர்.


வம்சியும் உளரிவிட்டதை உணர்ந்து, "தி..திவிய பாத்துட்டு வரேன்" என எழுந்து செல்ல, பாவை இவர்கள் இருவரையும் பார்த்தாள். "இல்ல சிற்பி. மதுவோட சேஃப்டிகாக தான்" என வசி கூற "இல்ல நா உங்க அப்பா அம்மா எல்லாருக்கும் தெரிஞ்சு தான் மது இங்க இருக்கானு நினைச்சேன். இப்போ தெரியாதுனு சொல்றீங்களே. நாளை தெரியும்போது ஆதியண்ணாக்கும் பிரச்சினை மதுக்கும் பிரச்சினை" என்றாள். "எதும் தப்பா நினைக்க மாட்டாங்கடா" என வசி கூற அதற்கு மேல் என்னவென்று பேச என சங்கடத்துடன் சென்றாள்.


ஒரு பெருமூச்சு விட்ட வசி "இவன் இருக்கானே.." என்க ஆதியின் முகத்தில் யோசனை ரேகைகளே தாண்டவம் ஆடியது. "ஆதி" என வசி அழைக்க "ம்ம்.." என்றான். "சிற்பி.." என வசி கூற "ம்ம்! கேட்டுது" என்றான். "என்னடா பண்ண?" என வசி கேட்க "அதான் சொன்னேனே" என்றான். "டேய் என்னடா நீ? உன் மனசுல என்னத்த நினைச்சுட்டு பேசுறனு புரியவே மாட்டிகுது" என வசி கூற சிறு முறுவலுடன் தோள்களை குலுக்கிக் கொண்டு சென்றான்.


அங்கே திவியை காண அறைக்குள் நுழைந்த வம்சியின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. துயில் கொண்டிருந்தவளது உடல் தோல் முழுதும் சிவந்து ஆங்காங்கே தடித்திருந்தது. அதை கண்டு உரைந்த வம்சி, பின் தன்னை நிலைபடுத்திக் கொண்டு, அவளிடம் வந்தான். தனது கையுறைகளை எடுத்துப் போட்டுக் கொண்டவன் அவளது கையினை தொட்டுப் பார்த்தான். புசுபுசுவென தடித்த இருந்த பகுதிகள் மெத்தென்று இருந்தது. விறுவிறுவென கீழே வந்தவன் "வசீ!" என்க கீழே அமர்ந்திருந்த யாவரும் அவனை கண்டனர்.


"திவி உடம்புலாம் தடிப்பு தடிப்பா இருக்குடா" என வம்சி கூற யாவரும் அதிர்வுடன்‌ வந்து அங்கு அவளை காணவே மேலும் அதிர்ந்து போயினர். "எ..என்னதிது?" என சிற்பி கேட்கவே "டேய் நீ தூக்கிட்டு வரும்போது நல்லா தானே‌டா இருந்தா?" என வசி கேட்க "ஆமாடா. இப்ப வந்து பார்த்தா இப்படி இருக்கா" என கூறினான். "வசி, வம்சி பேசுறத விடுங்க. முதல அவளுக்கு என்னனு பாக்கனும்" என ஆதித் கூற "ம்ம்" என்ற இரட்டையர்கள் அவளிடம் சென்றனர். வசி "சிற்பி! என் ரூம்ல உள்ள நுழைஞ்சதும் சைட்ல ஒரு கப்போர்ட் இருக்கும். அதுலருந்து ஒரு ஊசியும், வக்யூடெயினர் (இரத்த சேகரிப்பு குழாய்) எடுத்துட்டு வா" என்றவன் தன் அலைபேசியில் திவ்யாவின் கை பகுதியை மட்டும் புகைப்படம் எடுத்தவன் தனது நண்பனான ஒரு தோல்மருத்துவருக்கு அழைத்தான்.


அழைப்பு ஏற்கப்பட்டதும் "மச்சி! நான் தான் வசி பேசுறேன்டா. உன் வாட்ஸப்கு ஒரு போடோ அனுப்புறேன். அது கொஞ்சம் பாத்து என்னனு சொல்லுடா" என கூறியவன் தான் எடுத்த படத்தினை அனுப்பினான். அந்த படத்தை கண்டவன் "மச்சி நார்மல் ஸ்கின் அலர்ஜி மாதிரி தான் தெரியுது. எதும் பூச்சி கடிச்சோ இல்ல சேராத சாப்பாடோ சாப்பிட்டாங்களா?" என கேட்டான். "அ..அது இல்லயே" என வசி கூற "அப்படினா பயாப்ஸி பண்ணி தான் பாக்கனும்டா" என கூறினான். "ம்ம் சரிடா. தாங்ஸ்" என்ற வசி திரும்பவே, தனதறையினுள் இருக்கும் மற்றொரு அறையிலிருந்து சிலபல பொருட்களுடன் வம்சி வந்தான்.


சிற்பியும் அவன் கேட்ட பொருட்களுடன் வர வசி அவளது இரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு வம்சியை பார்த்து "ஸ்கின் சாம்பில் எடுக்க போறியா?" என கேட்க அவன் ஆம் என்பது போல் தலையசைத்தான். திறந்திருந்த அந்த உள்ளறையினை எட்டிப் பார்த்த சிற்பியின் விழிகள் அகல விரிந்துக் கொண்டன. அங்கு ஒரு குட்டி ஆய்வகமே இருந்தது.


"அங்கென்ன பார்வை? இங்க வா" என்ற வம்சியின் குரலில் அவனிடம் வந்தவள் கரத்தினில் அனைத்தையும் தினித்தவன் ஒரு ஆன்டிசெப்டிக் திரவத்தில் தோய்ந்த பஞ்சினைக் கொண்டு திவியின் கையின் சிறு பகுதியை துடைத்தான். அதை வைத்துவிட்டு அவளிடம் "மார்கர்" என கைநீட்ட, அதை கொடுத்தாள். தோல் நீக்க வேண்டிய பகுதியினை குறித்துக் கொண்டவன் "ஸ்கால்பெல்" என்க அறுவை சிகிச்சைகளில் பயண்படும் தோல் நீக்கும் கத்தியினை அவனிடம் கொடுத்தாள்.


வசியோ "ஆர் யூ ஷ்யோர்?" என்க "ஸ்கின் தானே‌டா? ஏதோ ஆப்ரேஷன் லெவல்க்கு பண்றியே" என கூறி அந்த கருவிக் கொண்டு மெல்ல அவள் கையில் அழுத்தி இழுக்க தோல் உரிந்து கொண்டு வந்தது. சிற்பியிடம் கைநீட்டி "பெட்ரிபிலேட்" என அவன் கூற உயிரியலாலர்கள் பயன்படுத்தும் வளர்த்தளமான ஒரு வட்டவடிவ ஆழமற்ற கின்னத்தினை கொடுத்தாள். அந்த தோலினை அதில் சேமித்து வைத்துக் கொண்டவன் தோல் நீக்கப் பட்ட இடத்திற்கு மருந்திட்டு கட்டுபோட்டு(பேன்டேஜ்) முடித்தான்.


அங்கு இறுகிய முகத்துடன் இருந்த ஆதித்தோ மணியை பார்த்துவிட்டு "சிற்பி! உன் டிரஸ் எல்லாம் பேக் பண்ணிட்ட தானே?" என கேட்க அவனை அதிர்வுடன் திரும்பிப் பார்த்தாள். "செல்லுடா" என அவன் கேட்டதற்கு 'ம்ம்' என்பதுபோல் தலையசைத்தவளிடம் "கொஞ்சம் மதுவோட திங்ஸ்ஸ பேக் பண்ணுடா" என்றான். யாவரும் அவனை புரியாமல் பார்க்க சிற்பியை பார்த்து "போடா" என்றான். அவள் சென்றதும் வசி "மச்சி! இப்ப என்ன பண்ண போற?" என கேட்க மௌனமாக சென்றவன் திரும்பி "நா முடிவு பண்ணது பண்ணது தான்" எனக் கூறிச் சென்றான்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
16. இனம் புரியா தேடலில் நாம்!

இருவரது உடைமைகளும் தயாராக இருக்க, மதுராந்தகி துயில் கலைந்தாள். கண்விழித்தவளுக்கு மெல்ல நடந்தவை நினைவு வர "திவி!" என்ற அலறலுடன் எழுந்தாள். அவளை தாங்கி பிடித்த வலிய கரங்கள் அமர்த்தி ஆசுவாசப் படுத்த, வசி அவளுக்கு உணவெடுத்து வந்தான்.

"அ.. அண்ணா திவி?" என அவள் பதற " அவளுக்கு ஒனுமில்லைடா" என்றான். "நா அவள பாக்கனும்" என மதுரா கூற வசி ஆதித்தை பார்த்தான். "மகி கொஞ்சம் என்ன கவணிக்குறியா?" என்றவன் தன்னை ஏறிட்டுப் பார்த்தவளிடம் "திவி தூங்குறா. நீ முதல சாப்பிடு" என்றான்.

"பரவால நா போய் பாத்துட்டு வரேன்" என்றவளை நிறுத்தியவன்‌ "உனக்கு திவி வேணுமா வேணாமா?" என்றான். அவனை கண்ணீருடன் பார்த்தவள் ஆற்றாமையான குரலில் "ஏன் இப்படி கேக்குறீங்க" என்க "நீ சாப்பிட்டு கிளம்பு" என்றான்.

"எ.. எங்க?" என அவள் பதற "கேள்வி கேக்குறத நிறுத்திட்டு சாப்பிடு" என வசி கொண்டு வந்ததை அவள் வாயில் திணித்தான். கண்ணீரை துடைத்து சிணுங்கியபடி உண்டு முடித்த பாவை கீழே வந்த சிற்பியிடம் ஓடி "சிற்பி! திவிக்கு என்ன? ஏன் என்ன‌ அவள பாக்க விடமாட்றீங்க?" என கேட்க "திவிக்கு ஒன்னுமில்ல மது. நம்ம திவி நமக்கு கிடைச்சுட்டா. அவளுக்கு இப்ப தானே ஆபரேஷன் முடிஞ்சது? அதோட கொஞ்சம் காயம் வேற, அதான் மயக்கத்துல இருக்கா" என சிற்பி கூறினாள்.

"நிஜமாதானே?" என சிறுபிள்ளை போல் கேட்டவள் "வே..வேற எதும் தப்பாலாம் இல்லைல?" என கேட்க "இல்ல மது. அவ எங்கிருந்தோ குதிச்சு தப்பிச்சிருப்பா போல. அதான் டிரெஸ் கிழிஞ்சு காயமாகிருக்கு" என சிற்பி சொன்னாள். ஒரு பெருமூச்சை‌ விட்டவள் "அப்பறம் ஏன் என்ன பாக்கவிடமாட்றீங்க?" என கேட்க அங்கு வந்த வம்சி "இல்லடா. அவ ரொம்ப வீக்கா இருக்கா. நீயும் இப்ப தான் கியூராகிட்டு வர. யாரும் சும்மா சும்மா போக வேணாம்டா. இன்பெக்ஷன் ஆகாம இருக்கதான் சொல்றோம்" என வாய்க்கு வந்த பொய்யை கூறினான். திவ்யாவின் உடல்நலம் என்றதும் அதற்கு மேல் அதை பற்றி கேட்கவில்லை.

ஆதியிடம் "நா எங்க போகணும்? நான் இங்கேயே இருக்கேனே. திவி ரூம்க்கு போகனும்னு கேட்கமாட்டேன். பிளீஸ்" என பாவை கூற சிற்பி "அண்ணா! நா வேணும்னா மதுவை என் கூட கூட்டிட்டு போகிடவா?" என கேட்டாள். "இல்ல டா. முன்ன நீ வெளி ஹாஸ்டல்ல தங்கி இருந்த, ஆனா இப்ப உனக்கு காலேஜ் ஆஸ்டல்ல ரூம் அரேஞ்ச் பண்ணிட்டேன். அதனால மதுவ கூட்டிட்டு போகமுடியாது" என்ற ஆதித் "அவ எங்க வீட்லயே இருக்கட்டும். அதுதான் சேஃப்" என‌ கூற மதுரா "உங்க வீட்டுக்கா?!" என்றாள்.

அவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தவன் "ஏன்? என்ன?" என்க‌ "அ.. அங்க ஏன்? உங்க அம்மா அப்பா எல்லாரும் இருப்பாங்க தானே? கேக்க மாட்டாங்களா?" என தயக்கத்துடன் கூறினாள். "அந்த கவலை உனக்கெதுக்கு? அதலாம் நா பாத்துபேன்" என‌ அவன் கூறிய போதும் அவளுக்கு திவ்யாவை விட்டு செல்ல மனமே இல்லை.

இங்கு வந்த சில நாட்களிலேயே ஆடவனின் பெற்றோருக்கு தான் இங்கு இருப்பது தெரியாது என்பதை தெரிந்து கொண்டவள் அதன் காரணத்தையும் அவனிடமே கேட்டிருந்தாள். 'தனது வேலை சம்மந்தமான செயல்திட்டங்களை பெற்றோரிடம் எப்போதும் கொண்டு செல்லமாட்டேன்' என அவன் கூறி அந்த பேச்சை அப்போதே முடித்திருந்தான்.

தற்போது தன்னை அங்கு கூட்டிச் சென்றால், அனைத்தையும் கூற நேரிடும். மேலும் ஒரு பெண் பிள்ளையை இத்தனை நாள் தனியாக வைத்துக் கொண்டதை அவர்கள் எவ்வாறு ஏற்பரோ? என்ற கலக்கமும் அவளை நச்சரித்தது.

தயங்கியபடி நிற்பவளை கண்டவன் தன் நண்பர்களை திரும்பி பார்க்க, வம்சி "சிற்பி.. கொஞ்சம் வா" என அவளை கூட்டிக் கொண்டு திவி அறைக்கு அழைத்து செல்வது போல் சென்றான்.

மேலும் வசியும் அவ்விடம் நீங்க, குனிந்த தலை நிமிராமல் நிற்பவளிடம் வந்தவன் "என்ன மதுரா?" என கேட்க "இ..இல்ல ஏன்? நா இங்கயே இருக்கேனே?" என கெஞ்சலாக கேட்டாள். ஒரு பெருமூச்சு விட்டவன் "என்ன பாரேன்" என்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். "எம்மேல நம்பிக்கை இல்லையா?" என ஆடவன் கேட்க கண்ணீர் திரைமின்ன அவனை கண்டவள் "ஏன் இப்படி கேக்குறீங்க? நம்பிக்கை இல்லாம தான் இத்தனை நாள் இங்க இருந்தேனா? நம்பிக்கை இல்லாம தான் சிற்பி வரும்முன்ன கூட தைரியமா இங்க இருந்தேனா?" என வழியும் கண்ணீரை துடைத்தபடி ஆற்றாமையாக கேட்டாள்.

அவளையே ஆழமாக பார்த்தவன், "அப்போ என்ன நம்புரியா?" என கேட்க அவனை பாவமாக பார்த்தவள் 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தாள். "அப்பறம் என்ன?" என கேட்டவன் "இப்ப என்ன எதுவும் கேட்காத மதுரா. என் மேல நம்பிக்கை இருந்தா நா சொல்றதுபோல செய்யு" என கூற அதற்கு மேல் மறுத்து பேசமுடியாமல் தலைகுனிந்தவள்‌ 'சரி' என்பதுபோல் தலையசைத்தாள்.

பின் "சரி உனக்கானதுலாம் சிற்பி எடுத்துவச்சிட்டா. வேற எதும் வேணும்னா எனக்கு கால் பண்ணு. நா எடுத்துட்டு வந்து தருவேன்" என கூறி "சிற்பி" என்க பாவை கீழே வந்தாள்.

உள்ளே வந்த வசி ஆதியை பார்க்க, ஆதி "திவிய பாத்துக்கோங்கடா. நா நைட் வந்திடுவேன். வசி எதும் எமர்ஜென்சினு போனாலும் நீ கூட இருந்து பாத்துக்கோ" என வசியிடம் துவங்கி வம்சியிடம் முடித்தான். "கிளம்பலாமா?" என ஆடவன் பெண்களிடம் கேட்க மனமே இன்றி இருவரும் சம்மதித்தனர். வாயில் வரை சென்ற மதுரா மாடிப்படியை கண்ணீருடன் ஏறிட்டு பார்த்துவிட்டு வம்சியிடம் "அ..அண்ணா! திவிக்கு ஒன்னுமில்ல தானே?" என்க "ஒன்னுமில்லடா" என்றான். "அவ தான் எனக்கு எல்லாமே ண்ணா. அவள பத்திரமா பாத்துக்கோங்க. எனக்கு அவள பாக்காம போக மனசே இல்ல" என கூற அவள் கண்ணீரை துடித்து தலையை கோதிக் கொடுத்தவன் "அவ உன் திவிடா. உன்னவிட்டு எங்க போக போறா?" என்றான்.

"ம்ம்" என்றவள் வசியிடமும் கூறிவிட்டு வண்டியில் ஏறி அமர, "திவிய பாத்துக்கோங்க" என்ற சிற்பி நீர் விழிகளுடன் தன்னவனை பார்த்துவிட்டு வண்டியில் அமர்ந்தாள்.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த ஆதி, இரட்டையர்களிடம் தலையசைத்து விடைபெற்றான். முதலில் ஆதியின் வீட்டிற்கே வண்டி சென்றது. அந்த பிரம்மாண்டமான இரண்டு தளம் கொண்ட மாளிகை வீடு, முற்றும் முழுதும்‌ இக்குடும்பத்தார் யாவருமே பணம் செலவழித்து, அன்பை கொட்டி கட்டிய வீடு.

பெரிய முன்வாயிலை தாண்டி உள்ளே வந்த காரின் சத்தம் கொண்டு "ஏங்க பாத்தீங்களா என் புள்ள வண்டி சத்தம்னு சொன்னேன்ல" என யசோதா கூறினார். "ம்ம் ம்ம் சரிதான். உன் புள்ள ரெண்டு நாளா ஆளயே காணுமே? அதை கேளு" என ஆதித்யன் கூற "ம்க்கும்! அவனுக்கு என்ன வேலையோ" என்றார்.

ரெண்டு நாளா? ஆம்! இரண்டு நாளே தான். ஆடவர்கள் அவரவர்கள், காலை பணிக்கு செல்லும் முன்னும், பணி முடிந்து திரும்பும்போதும் பெற்றோரை பார்த்து, சீராட்டி, கிண்டலடித்து ஓய்ந்தே அவ்வீடு வருவர். இரண்டு நாளாக சற்று குழப்பத்துடனும் நேரமில்லாமலும் வேலையிலிருந்த ஆதி தான் வரவே இல்லை. அதை குறித்து கவலையற்ற போதும் மனைவியை சீண்டுவதற்காகவே ஆதித்யன் அவ்வாறு கேட்டது. மகனை எதிர்நோக்கி காத்திருந்தவர் முன் மதுராந்தகியுடன் நுழைந்தான்.

இந்நிலையில் மதுவை வைத்துக் கொண்டு சமாளிப்பதே பெரும்பாடு என்பதால் சிற்பியை காரிலேயே விட்டுவிட்டனர். அப்போதே கல்யாணியும் கதிர்வேலும் தங்கள் அறையிலிருந்து வர மதுராந்தகியின் பயம் மேலும் எகிறியது. கிட்டதட்ட வெளிப்படையாகவே நடுங்க துவங்கியவள் கைகளை அழுந்த பற்றி கூட்டி வந்த மகனிடம் "கண்ணா, இது நம்ம மது தானே?" என்றவர் மதுவிடம் "கை இன்னும் சரியாகலையாடா?" என கேட்டார்.

பாவை பயத்துடன் 'இல்லை' என்பதுபோல் தலையசைக்க ஆதி "ம்மா.." என்றான். யாவரும் ஆதியை பார்க்க குரலை செருமியவன் "இவ கூட இருப்பாளே திவ்யா" என்க "ம்ம் ஆமா அந்த பொண்ணு எங்க?" என்றார், கல்யாணி. அதில் மதுராவின் விழியில் மழை பொழிய, "அந்த பொண்ணுக்கும் ஆக்ஸிடென்ட் ம்மா. நம்ம வசி தான் டிரீட்மெண்ட் பாக்குறான். மதுராக்கும் இன்னும் உடம்பு சரியாகலை. அதான் கொஞ்ச நாள் நம்ம வீட்டுல இருக்கட்டும்னு கூட்டிட்டு வந்தேன்" என சர்வ சாதாரணமாகவும் கல்லமற்றார் போலவும் கூறினான்.

அதில் அவளை பரிதாபமாக பார்த்த கல்யாணி மற்றும் யசோ "என்னாச்சு ப்பா? இப்போ எப்படி இருக்கா? எப்போ நடந்தது?" என கேள்விகளை அடுக்க அவனோ சர்வ சாதாரணமாக பொய்களை அடுக்கினான். "நேத்து தான் ம்மா. பவி ஆன்ட்டி பொண்ணு சிற்பிகாவும் வந்திருக்கா. யாரோ டிரங்கன் பர்சன் ஆக்ஸிடென்ட் பண்ணிட்டான். சிற்பிக்கு காலேஜ் திறக்குது, அதான் இவளை நம்ம வீட்டில் வைத்திருக்கலாம்னு" என ஆதித் கூற "இதிலென்ன ப்பா இருக்கு? தாராளமா இருக்கட்டும். திவ்யா இப்ப எப்படி இருக்கா?" என யசோ கேட்டார். "ம்ம் ம்மா. ஆபரேஷன் முடிஞ்சது" என அவன் கூற "சரிப்பா" என்றவர் மதுவை பார்த்து "மதுக்கு காலேஜ் எப்போ?" என கேட்க அப்போதே பாவைக்கு அது நினைவு வந்தது.

ஆனால் ஆடவனிடத்தில் எந்த அதிர்வும் இல்லை! "மதுராக்கும் இந்த திங்கள்லருந்து தான் காலேஜ். ஆனா கை சரியில்லாததால ஒரு வாரம் பர்மிஷன் போட்டிருக்கா" என அவன் கூற அவளோ அதிர்வை வெளிகாட்டாதிருக்க போராடிக் கொண்டிருந்தாள். "ஓ.. சரிப்பா" என அவர் கூற கதிர் "நீ இப்ப எங்கயும் போகனுமா ப்பா?" என கேட்டார். "ம்ம் ப்பா. சிற்பிய காலேஜ்ல விட ஏற்பாடு பண்ணனும்" என அவன் கூற "சரிப்பா! பாத்து போய்ட்டு வா" என்றனர். கீழ் தளத்திலியே உள்ள ஒரு விருந்தினர் அறைக்கு மதுவை கூட்டிச் சென்றவன் அவள் பெட்டிகளை வைத்துவிட்டு அவளிடம் வந்தான்.

அவளிடம் வந்து "எதுவும் யோசிக்காத. எது வேணும்னாலும் அம்மா கிட்ட கேலு. சரியா?" என கூற "ம்ம்" என்றாள். அவள் கன்னம் தட்டியவன் "பை!" என்க அதற்கும் ஒரு தலையசைப்பை கொடுத்தாள். பின் வீட்டாரிடம் விடை பெற்றவன் சிற்பியை கல்லூரியில் விட புறப்பட்டான்.

மதுராவின் தலையை பரிவாக கோதிய யசோ "எல்லாம் சரியாகிவிடும்டா" எனக் கூற 'ம்ம்' என்பதுபோல் தலையசைத்தாள். கல்யாணியோ "சாப்பிட வாடா" எனக் கூற "சாப்பிட்டுடேன் ம்மா" என்றாள். "மருந்துலாம் சாப்பிட்டியாடா?" என ஆதித்தன் கேட்கவே "ம்ம் ப்பா. சாப்பிட்டுடேன்" என்றாள். அதற்குமேல் என்ன பேச என தயங்கியபடி நின்றவளை கண்டு "நீ போய் ரெஸ்ட் எடுடா" என கதிர் கூற "ம்ம் ப்பா" எனக்கூறி தனக்கென கொடுக்கபட்ட அறைக்கு சென்றாள்.

மனம் பலவித எண்ணங்களில் ஊசாலாடி, தன்னவனிடமே வந்தடைந்தது. 'நா எப்போ பெர்மிஷன் போட்டேன்? எனக்கு காலேஜ் எப்போனு கூட தெரியாதே' என யோசித்தவளுக்கு அசராமல் அவன் பெற்றோரிடம் பேசியது யாவும் நினைவு வந்தது. 'அப்பப்பா! எப்படி இப்படி உண்மை போலவே பேசுறாறோ' என எண்ணுகையிலேயே அவளையும் அறியாத ஒரு புன்னகை உதையமானது. அதுவும் அடுத்து வந்த திவ்யாவின் நினைவில் கரைந்து போனது. யாவருக்கும் அது முழுநிலவை ரசிக்கும் நாளாகி துயிலின்றி தான் போனது.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
17. இனம் புரியா தேடலில் நாம்!

மறுநாள் காலை…

முகத்தில் சுளீரென்று கீறும் பகலவனின் தாக்கத்தில் கண்விழித்த மதுரா, சுயமடைய சற்று நேரம் எடுத்தது. பின்பே இருப்பிடம் உணர சட்டென மணியை பார்த்தவள் கண்கள், அது எட்டை தாண்டி சென்றதில் விரிய, எழுந்து குளியலறை சென்றாள். எப்போதும் போல் தயாராணவளால், அந்த பெல்ட்டை அணிய முடியவில்லை.

சுத்தமாக பழக்கமில்லாதவரிடம் சென்று கேட்க தயக்கப்பட்டவள் அப்படியே சோர்ந்து போனால். கண்களில் கண்ணீர் குடிபுகுந்து அவளை வருத்தியது. எத்தனை துன்பத்திலும் சிரித்தே பழகியவளுக்கு இந்த புதிய கண்ணீர் துளிகள் சற்று எரிச்சலை தான் தந்தது.

அப்போது பாவையின் அறைக்கதவு தட்டப்பட, பதறி சென்று கதவை திறந்தாள். புன்னகை முகமாக நின்றிருந்த யசோ, "குளிச்சிட்டியாடா?" என்றபடி உள்ளே வந்தார். அவள் வைத்திருந்த பெல்ட்டையும் மார்புக்கு குறுக்கே மடித்த வாக்கில் வைத்திருந்த அவள் கையையும் கண்டவர், அவளிடம் ஏதும் கேட்காது அதை எடுத்து அணிவித்தார்.

பாவை அவரை அதிர்ந்து நோக்க "என்கிட்ட கேட்க என்ன தயக்கம்? என்னை உன் அம்மா போல நினைச்சுக்கோடா" என கூற கண்ணீருடன் அவரை பார்த்தாள். அவள் கன்னம் வருடியவர் "சாப்பிட வா" என கூட்டிச் சென்று உணவையும் தானே ஊட்டி விட்டார்.

அங்கு சிற்பியை பத்திரமாக விட்டு வீடு திரும்பியிருந்த ஆடவன் தன் காலைப் பணிகளை முடித்து வர, வம்சி அறையிலிருந்து திவி அலறும் சத்தம் கேட்டது‌. ஆடவன் பதறிக் கொண்டு செல்லவே, வசியும் பதட்டத்துடன் தன்னறையிலிருந்து வந்தான். வம்சியோ "ஒன்னுமில்லடா.." என கண்ணீருடன் அவள் கைபிடித்து கூற "எ..எரியுதூஊஊ" என கத்தினாள்.

கண்களை திறக்க கூட முடியாதவளின் குழைந்து வந்த வார்த்தை மூவரையும் வாட்டியது. வசியோ வம்சி தோளில் கரம் வைக்க அவனை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தவன், "பாவம்டா. வ..வலி தாங்க மாட்டா!" என கூற "பிளட் ரிப்போர்ட் எப்போ வரும்?" என வசி கேட்டான். புறங்கையில் கண்ணீரை துடைத்த வம்சி "ரெண்டயுமே சாயிங்காலம் குள்ள முடிக்க பாக்குறேன்" என கூறினான்.

வசியிடம் வந்த ஆதி "டேக் கேர் ஆஃப் தெம்" எனக் கூறி புறப்பட்டான். முதலில் எப்போதும் போல் தன் வீடு வந்தவன் கண்டது, தன் அன்னை மதுராவிற்கு ஊட்டி விடுவதை தான். அவரை நன்றியும் பாசமும் கலந்த பார்வை பார்த்தபடி அவள் உண்டு முடிக்கும் வேளையே ஆடவன் வந்தான்.

"வாடா" என்றவர் மதுராவிடம் "இன்னொன்னு எடுத்துட்டு வரவாடா?" என கேட்க "இல்ல ம்மா போதும்" என்றாள். தன் அன்னையின் உபகரணங்களை புன்னகையுடன் கண்டவன் அவர் எழுந்து சென்றதும் "எல்லாம் ஓக்கேவாடா?" எனக் கேட்டான். "ம்ம்.." என தலையசைத்தவளை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்படி கல்யாணி கூறியதன் பேரில் தன்னறை சென்றாள்.

"சாப்பிடுறியா ஆதி?" என கல்யாணி கேட்க "ம்ம் ம்மா" என்றவனுக்கு உணவினை எடுத்து வைத்தார். தான் உண்டு முடித்து இத்தனை பொழுதுகள் ஆகியும் வெளிவராத தன்னவள் அறை வாசலையே எதிர்நோக்கி அமர்ந்திருந்தான்.

யசோ சமையலறையில் வேலையாகவும், கல்யாணி மடிக்கணினியில் வேலையாக இருந்த கணவருக்கு உணவெடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கும் சென்றிட, அதற்காகவே காத்திருந்தது போல் அவள் அறைக்குள் உரிமையுடன் நுழைந்தான்.

தனது மொத்த பெட்டிகளையும் திறந்த போட்டு அனைத்தையும் கொட்டி பாவை எதையோ தேடிக் கொண்டிருக்க "மகி மா" என்றவன் அழைப்பில் திடுக்கிட்டு திரும்பினாள். அவள் முகத்தில் இருந்த பதட்டம் கண்டு குழம்பியவன் "என்னாச்சுடா?" என அவளை நெருங்க, சட்டென "ஒன்னுமில்ல" என பின்னே நகர்ந்தாள்.

அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "என்ன தேடுற?" என்க பாவை மலங்க மலங்க விழித்தாள். அநியாயத்திற்கு அவளுக்கு வியர்த்து போக, "எதும் வேணுமா?" என அவன் அழுத்தமாக கேட்க‌ பாவை தலைகுனிந்தபடி மௌனியானாள். மௌனத்தின்‌ சம்மதம் அவனுக்கு புரிந்து போக "என்னடா வேணும்?" என அவளிடம் வந்தான்.

"இல்ல" என்றபடி நகர்ந்தவள் "நா அம்மா கிட்ட வாங்கிகுறேன். நி..நீங்க போங்க" என கூற "பார்ரா! வந்த ஒரே நாள்ல என்னவிட‌ எங்கம்மாவ பிடிச்சு போச்சா?" என்றவன் பேச்சு அவள் கருத்தில் பதியவில்லை போலும். "ம்ம்" என்றபடி அவன் சென்றிட "அய்யோ இப்ப என்ன பண்ணுவேன்? இந்த சிற்பி இதுலாம் எடுத்தே வைக்கலையா?" என புலம்பினாள்.

சில நிமிடங்களில் ஆடவன் மீண்டும் வரவே திடுக்கிட்டு போனவள் "எதுக்கு? என்ன வேணும்? பிளீஸ் கொ.. கொஞ்சம் வெளிய இருங்க. பிளீஸ்" என கெஞ்ச அவள் கையை பிடித்தவன் அதில் ஒரு கவரினை திணித்தான். பாவை புரியாமல் அதை பார்க்க, அதனுள் சுகாதார நாப்கின்கள் இருந்தன. பாவையின் விழிகள் விரிந்து கொள்ள "கூடபிறந்த தங்கை இல்லாமல் இருக்கலாம். ஆனா நானும் ஒரு பொண்ணுக்கு பையன். பொண்ணுங்க வலி புரியும்" எனக் கூறிச் சென்றான்.

அவன் சென்ற பாதையையே விழி எடுக்காது கண்டவள் சில நிமிடங்களில் சுயம் பெற்று குளியலறை புகுந்து கொண்டாள். அப்படியே பொழுது ஓட, மாலை பொழுதை எட்டியது. வம்சி தனது ஆய்வறையினில் புகுந்து வெகு நேரமாக ஆராய்ச்சியில் இருக்க, வசி திவ்யாவின் அருகில் அமர்ந்திருந்தான்.

அப்போதைக்கு அலர்ஜிக்கு போடப்படும் மருந்துகளை அவளுக்கு போட்டுக் கொண்டிருந்தனர். மெல்ல தனது தடித்த கண்களை திறந்தவள், கண் முன் இருக்கும் வசியை கண்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகி ஓட, "வ..வலிக்குது" என முணுமுணுத்தாள். அவள் சத்தம் கேட்டு அவள் காதருகில் வந்தவன் "என்னடா?" என்க "எரியிது" என முனகினாள்.

அவளை பாவமாக பார்த்தவன் "ஒன்னுமில்லமா. சரியாகிடும்" என்க அவள் கண்களில் கண்ணீர். "என்ன வி.. விட்டுடாதிங்க" என அவள் கூற தன்னை வம்சி என அவள் நினைத்துக் கொண்டாள் என உணர்ந்தவன் அதை அவளிடம் சொல்லவும் இல்லை அவனது விளக்கத்தினை கேட்கும் நிலையிலும் அவள் இல்லை. "நாங்க இருக்கோம்டா" என அவன் கூற "அவன் அ..அந்த" என்றவளால் அதற்கு மேல் பேசமுடியவில்லை. உடலில் பழுக்க காய்ச்சிய ஊசிகள் கொண்டு குத்துவது போல் இருக்க "ஆ…" என கத்திவிட்டாள். அதில் பதறிப்போன வசி "எ..ஏ..ஒன்னுமில்லடா" என சமாதானம் செய்ய வம்சி பதறியடித்து வந்தான்.

அவனை கண்டதும் ஆடவன் விலகிக் கொள்ள அவளிடம் வந்த வம்சி "திவி! பாப்பா! என்னாச்சுடா?" என அவளை தாங்க அவனை கண்டு "முடியல. எரிது. எதாவது பண்ணுங்க" என கத்தினாள். கண்ணீரோடு அவளை பார்த்து "சரியாகிடும்டா பாப்பா" என அவன் கூற அவனை கண்ணீரோடு பார்த்தவள் தளர்ந்து போனாள்.

அவளை வருத்தத்துடன் பார்த்தபடி நின்றவனிடம் வந்த வசி "வம்சி டெஸ்ட்ஸ் முடிஞ்சதா?" என கேட்க அவனை வேதனையுடன் பார்த்தவன் "டெஸ்ட் எல்லாம் முடிஞ்சது. ஆனா வந்த ரிசல்ட் தான் ஒன்னும் புரியலை" எனக் கூறினான்.

"புரியலையா? என்னடா சொல்ற?" என வசி கேட்க அவனை கூட்டிக் கொண்டு தனது ஆய்வரை சென்றான். நுண்ணொக்கியினை காட்டி "பாரு" என வம்சி கூற அதில் ஊதா நிறத்தில் ஆங்காங்கே குட்டி குட்டி உருண்டைகளாக தெரிந்தன. தமையனை பார்த்த வசி "அடேய்! நீ உண்மையிலேயே மைக்ரோபயாலஜிஸ்ட் தானா? இதுல என்ன உணக்கு சந்தேகம்? ஸ்டபைலோகாகஸ் (staphylococcus) தானேடா இது? சொரியாசிஸோட காசிடிவ் பாக்டீரியா" என கூற "அடேய் அது எனக்கும் தெரியும். இப்ப இவ ஸ்கின் ரிப்போர்ட் பாரு" என மற்றொரு நுண்ணோக்கியை காட்டினான்.

அதில் பார்த்தவன்‌ இரட்டை சகோதரனிடம் திரும்பி "அடேய் என்னடா? ரெட்ரோ வைரஸ் போல இருக்கு? இதுவும் கூட சொரியாசிஸ் காஸ் பண்ணும், ஆனா ஸ்கின்ல மட்டும் எப்டி?" என கேட்க "அதே தான் என்னோட சந்தேகமும். அந்த வைரஸ் இப்போ விருலன்ட்டா (வீரியமா) இல்ல தான். இவ பிளட்ல இன்னும் சில சேஞ்சஸ் இருக்கு. ஆனா என்ன வகையான காம்பவுன்ட்ஸ்னே தெரியலை" என கூறினான்.

"அதுமட்டுமில்லைடா. இவளுக்கு எதோ கம்பளி பூச்சி கடிச்சது போல தடிப்பு தடிப்பா தான் இருக்கு. பார்த்தா சொரியாசிஸ் மாதிரியே இல்லை" என வம்சி கூற வசியும் யோசனையில் ஆழ்ந்தான்.

இருவரும் சில வினாடிகள் யோசனையில் இருக்க, "வம்சி நீ இந்த ரிப்போர்ட்ஸ மட்டும் உங்க டீன்க்கு அனுப்பி பாரேன். எதும் விவரமா சொல்ல வேணாம். அவர் எக்ஸ்பீரியன்ஸ்கு அவருக்கு தெரியலாம்" எனக் கூற "ம்ம்.. நல்ல ஐடியாடா" என்றான். தனது அலைப்பேசியில் அந்த குறிப்புகளை அனுப்பியவன் அவருக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்றவர் "குட் ஈவினிங் மை பாய்! என்ன நைட் டியூட்டி டயர்டா?" என கேட்க "அது சார்.." என்றான். "ஜஸ்ட் ஜோக்கிங்" என்ற பிரசாத் "என்ன விஷயம் ப்பா?" என கேட்க "சார் எனக்கு வந்த ஒரு ரிபோர்ட்ஸ் உங்களுக்கு ஷேர் பண்ணிருக்கேன். எனக்கு அந்த ரிப்போர்ட்ஸ் கொஞ்சம் குழப்பமா இருக்கு. நீங்க பார்த்து சொல்லுங்களேன்" என சொன்னான். "ம்ம்டா இரு" என்றவர் அவன் அனுப்பிய விவரங்களைப் பார்த்து திடுக்கிட்டு போனார்.

"வாட்?" என சத்தமாகவே கூறிக் கொண்டவர் "ஐ திங்க் ஷீ இஸ் இன்ஜெக்டட் டூ சம்திங் ராங் (அவளுக்கு ஏதோ தவறான மருந்து சேலுத்தப்பட்டுள்ளது)" எனக் கூற தமையன்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அது என்னதுனு கண்டுபிடிக்க முடியுமா சார்?" என வம்சி தயங்கியபடி கேட்க "என்னடா திடீர் தயக்கம்?" என்றார். பிராசாத்திற்கு கிட்டதட்ட வம்சி செல்லப்பிள்ளை போன்றவன். வம்சியும் அவரிடம் உரிமையாகவே பேசுவான். அதனாலேயே அவன் தயக்கத்துடன் கேட்டதை கண்டித்தார்.

"அய்யோ அப்படி எல்லாம் இல்ல சார்" என வம்சி கூற "ஓகே மேன். நீ ஸ்பெஸிமென்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வா பார்ப்போம்" எனக் கூறினார். "ஓகே சார்" என்றவன் இணைப்பை துண்டித்து விட்டு, அனைத்தையும் சிதைவின்றி எடுத்துச் செல்லவேண்டிய ஏற்பாடுகளுடன் புறப்பட்டான்.

"டேக் கேர் ஆஃப் ஹர்‌டா" என வம்சி கூறிச் செல்ல, "ம்ம்" என்றுவிட்ட வசி அவளிருக்கும் அறை வந்தான். அவளிடமிருந்து மெல்லிய முனகல். அருகே வந்தவன்‌ அவள் எதையோ கூறுகிறதை உணர்ந்து கூர்ந்து கேட்டான். விழிகளை திறக்க முயற்சித்து மெல்ல திறந்து திறந்து மூடியவள் "எரியுது" என்றாள்.

இப்போதைக்கு சொரியாசிஸ்க்கு கொடுக்கப்படும் மருந்துகளை ஆடவன் அவளுக்கு கொடுக்க மெல்ல அவனை பார்த்தாள். பார்த்தவள் விழிகள் பார்த்தபடியே இருக்க, வசிக்கு சங்கடமாகிப் போனது. தனது தமையனின் காதலி என்பதால் அவனால் அவளுக்கு இயல்பாக ஏதும் செய்ய இயலவில்லை போலும்.

அவளிடமிருந்து விலகி எழ எத்தனித்தவன் கரங்களை மெல்ல பற்றிக் கொண்டாள். அதில் அவளை அதிர்வுடன் பார்த்தவன் "தி..திவி.. நா வம்சி இல்லடா" எனக் கூற அவள் காதுகளினை அவை தெளிவாக சென்றடையவில்லை போலும். அவன் கண்களையே கண்ணீரினூடை பார்த்துக் கொண்டிருந்தாள். அது அவனை என்னவோ செய்தது.

"எ.. எனக்கு சரி ஆகுமா?" என அவள் தடுமாற "ஆகிடும்டா" என்றான். அவனை காதலோடு அவள் பார்க்க வசிக்கு தான் என்னவோ போல் ஆனது. அவனை கண்டு "என்னை.." என ஏதோ கூற வந்தவள் பின் தன் இதழ் கடித்து அடக்கிக் கொண்டாள்.


"எதும் வேணுமாடா?" என அவன் கேட்க "எ..என்னால முடியலை. என்னை எதாவது பண்ணிடுங்களேன்" என தன்னையும் மீறிய நிலையில் கதறினாள். "திவி! ஏன் இப்படிலாம் பேசுற? வம்சி கேட்டா ரொம்ப வருத்தபடுவான். அவன் உன்ன எவ்.." என கூற வந்தவனை இடைமறித்து "அ..அப்போ உங்களுக்கு வருத்தமில்லையா?" என கேட்டாள். அவளை புரியாமல் பார்த்தவன் "திவி?" என்க அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தவள் 'ஒன்னுமில்லை' என்பதுபோல் தலையசைத்தவள், கண்களை மூடி முகத்தினை திருப்பிக் கொண்டாள்.

அங்கு வம்சி அனைத்தையும் பிரசாத் முன் வைத்திட்டு பாவை கையிலுள்ள தடிப்பின் புகைப்படத்தையும் வைத்திருக்க, எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தவர் "இந்த பிளட்ல ரெட்ரோ வைரஸும் இருக்கு அன்ட் ஸ்டபைலோகாகஸும் இருக்கு ப்பா.. எதோ தப்பான வாக்ஸினேஷன் பண்ண பட்டிருக்கு. வைரஸ் விருலன்டா இல்ல. ஆனா ஸ்டபைலோகாகஸ் அவ்ளோவா வீரியம் குறைக்க படலை. அதனால அது தன்னோட வேலைய காட்டிருக்கு. ஆனாலும் அவ்வளவா வீரியம் இல்லாததால வெரும் தடிப்பு தடிப்பா மட்டும் வந்திருக்கலாம். அந்த பொண்ணுக்கு இப்ப‌ ஏதும் ஆபரேஷன் நடந்திருக்கா? ஒருவேலை தவறுதலா ஏதும் இன்ஜெக்ஷன் மாறிருக்கும்" என கூறினார். 'ஆம்' எனக் கூற வந்தவன் "தெரியல சார். அவன் குடுத்தான். எனக்கு புரியலை அதான் உங்க கிட்ட கேட்டேன். தாங்க்கியூ சார்" எனக் கூறினான்.

"அட என்ன வம்சி நீ" என்றவர் "ஓகே எப்போ ஷிப்ட் வர?" எனக் கேட்க "சார்.." என தயங்கினான். "என்ன?" என அவர் கேட்க என்ன பொய் சொல்ல என புரியாமல் "நம்மாளு வந்திருக்கா.." என இழுத்தான். அதில் வாய்விட்டு சிரித்தவர் "இது தானா? போ‌ போ. ஏற்கனவே உன்னை ரொம்ப படுத்திட்டேன். நாள மறுநாள் வந்திடனும்" எனக் கூற "கண்டிப்பா சார்" என அவரை கட்டியணைத்து புறப்பட்டான்.

அங்கு தன்முன் நாற்காலியில் முகம் முழுதும் ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவனிடம் "சொல்லுங்க டாக்டர் முகேஷ்.." என கேட்டான், ஆதித்த கிருஷ்ணன். அவனிடம் முனகல் மட்டுமே..

"திவிய ஏன்டா கடந்த சொன்ன?" என‌ கர்ஜனையாக கேட்டவன், அவன் கண்ணத்தில் ஓங்கி அறைய, அதில் ஆடவன் அருகிலிருந்த கோவிந்தனே அதிர்ந்து தான் போனார். ஆதித்தன் கண்களில் அத்தனை கனல் பறக்க, முகேஷ் வலி பொருக்க முடியாமல் கூற விழைந்தான்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
18. இனம் புரியா தேடலில் நாம்!


அந்த மருத்துவமனையின் உரிமையாளனும், திவிக்கு சிகிச்சை செய்த மருத்துவருமான முகேஷின் வாயிலிருந்து குருதி வடிந்துக் கொண்டிருந்தது. அவனோ திக்கி திணறி "உண்மைலயே தெரியாது சார்" எனக் கூற "அவன் சட்டையை கொத்தாக பிடித்து நாற்காலியோடு தூக்கிய ஆதித் "அப்பறம் எதுக்குடா அவள கடத்தின? அவள என்னடா பண்ணீங்க?" என கர்ஜிக்க கோவிந்தன் அவனிடம் வந்து "தம்பி!" எனப் பதறினார்.

அவனை பொத்தென போட்டவன் கோவிந்தனிடம் திரும்பி "வெறும் இருபது வயசு பொண்ணு ண்ணா அவ. வலில துடிச்சிட்டு இருக்கா. என்ன பண்ணி தொலைச்சானுகனு தெரியலை. உடம்பெல்லாம் தடிச்சுபோய்" என கூறியவன் விழிகள் ரத்த நிறத்திற்கு சிவந்திருந்தது. அவன் கண்கள் அப்போதும் கண்ணீர் சிந்த விரும்பவில்லை போலும். கண்கள் காய்ந்து சிவந்திருந்தன.


"புரியுது தம்பி! அவன் பேசுறத கேட்டுட்டு என்ன வேணாலும் பண்ணுங்க" என அவர் கூற ஆழ்ந்த மூச்சை விட்டவன் நாற்காலியை இழுத்து அவன் முன் போட்டு அமர்ந்து, "சொல்லு" என்றான். அவனோ "எ.. எங்க டார்கெட் எப்பவும் யாருமில்லாத அநாதைகள் தான்" என தத்தி பித்தி கூற ஆத்திரத்தை கட்டுபடுத்த அந்த நாற்காலியின் பிடியை இறுக பற்றிக் கொண்டான்.

"எ.. எங்க குரூப்ல எப்ப ஆள் வேணும்னு சொல்லுவாங்க. அப்போ எங்க சுத்துவட்டாரத்துல யார் ஆஸ்பிடல்ல எங்களுக்கு ஏத்த ஆள் இருக்காங்களோ அவங்க சொல்லுவோம். அந்த அந்த ஏரியாவோட பெரிய பெரிய ரௌடிகள் கூட எங்களுக்கு தொடர்பு இருக்கும். ஆள் ரெடினா, அவங்கள கூப்டு தூக்கிட்டு போக சொல்லிடுவோம். அவங்க சேர்க்க வேண்டிய இடத்துல செ..சேத்திடுவாங்க" என அவன் கூற அவனை புரியாமல் பார்த்த ஆதித் "என்ன குரூப்? எதுக்கு ஆள்? அதுவும் யாருமில்லாதவங்களா ஏன்?" என கேள்விகளை அடுக்கினான்.


"எதுக்குன்னு தெரியாது சார். ந..நா பொண்ணுங்க பிஸ்னஸ்னு தான் நினைச்சேன். ஆனா அங்க ஆண் பெண்ணு பேதமில்லை. யாருமில்லாதவங்களா இருந்தா பெருசா அவங்கள காணும்னாலும் பிரச்சினை வராது. அதான்" என அவன் கூற இதற்குமேல் பொருக்க முடியாது என்னும் நிலையில் அவனை எட்டி மிதித்தான், ஆதித்தன். "யாருடா அது? என்ன குரூப்?" என ஆதித் கர்ஜிக்க "த தெரியாது சார்" என்றான். அவனை இதற்கு மேல் அடித்து சாகடிக்கவும் முடியாமல் அடிக்காதும் இருக்க முடியாத நிலையில் செவிற்றில் "ஆ.." என கத்தியபடி ஓங்கி குத்தினான்.


இத்தனை ஆக்ரோஷமாக அவனை பார்க்க கோவிந்தனுக்கே பயமாக இருந்தது. "தம்பி!" என அவர் கூற சட்டென வெளியேறிவிட்டான். யாருமற்ற பகுதி; மாலை நைர மங்கிய வெளிச்சம்; இளந்தென்றல்; என சூழல் அவனது மனச்சூழலுக்கு முற்றிலும் முரணாக இருந்தது. ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவன் மனம் தகித்தது.

வீட்டில் எளிதில் தன் உணர்வுகளை அவன் காட்டுவதில்லை. காரணம் அவனை சுற்றி இருப்பவர்கள். தான் பக்கபலமாக இருக்கும் இடத்திலிருந்து கலங்குவது தன்னை நம்பியிருப்போரை வருத்தும் என்பதை விட அந்த கண்ணீரே வீண் என கருதுபவன். அதனால் தானோ பாவைகளின் நிலையை கண்கூடாக கண்டு இப்படியான பேச்சுகளை நிலையாக கேட்க முடியவில்லை.


அழுத்தமாக இருந்தவன், இன்று உணர்வுகளின் பிடியில் அல்லல் படுகின்றான். சில நிமிடங்களில் உள்ளே வந்தவன் "அது என்ன குருப்?" என கேட்க அந்த மருத்துவன் நடுங்கியபடி "ச..சார் அது உண்மையிலயே யாருனு தெரியாது. ஒரு கடன்ல மாட்டிட்டு இருந்தேன். அப்போ தான் இதுல என் பிரண்ட் சேர்த்துவிட்டான். இதுல யார் நம்பரும் விஸிபிலா(visible -தெரிவது) இருக்காது. அந்த குரூப்ல உள்ளவங்கல நம்ம மொபைல்ல ஏற்கனவே சேவான நம்பரா இருந்தா தான் பெயர் காட்டும். அதுல என்னோட டெல்லி பிரண்ட் கூட இருக்கான். ஆனா அதுல உள்ளவங்க எல்லாருமே டாக்டர்ஸ் தான். அதுவும் சொந்தமா ஆஸ்பிடல் நடத்துறவங்க. அதுல மொத்தம் இந்தியால உள்ள ஆஸ்பிடல்ஸ் நடத்துறவங்க தான் இருப்பாங்க. அதுல எப்ப ஆள் வேணுமோ அப்போ மெசேஜ் போடுவாங்க, எங்கல்ல யார்கிட்ட இருக்கோ அவங்கலாம் சொல்லுவோம். யார்கிட்ட வேணும் எப்ப வேணும்னுலாம் தனியா மெசேஜ் பண்ணி சொல்லுவார்" என்றான்.


"யாருனே யாருக்கும் தெரியாதபோது இந்தியா குள்ள மட்டும் தான் இந்த டீலிங் நடக்குதுனு உனக்கு எப்படி தெரியும்?" என ஆதித் கேட்க "அதுல சேரும்போதே விவரமும் விதிமுறைகளும் சொன்னாங்க சார்" என்றான். யோசனையில் ஆழ்ந்தவன் முகேஷின் அலைப்பேசியை எடுத்துக் கொண்டு அவனை நாற்காலியோடு இறுக கட்டிவிட்டு "போலாம் ண்ணா" எனக் கூறி புறப்பட்டான். நேரே ஆடவன் தன் வீட்டிற்கு வர‌ கலகலவென்ற சிரிப்பொலியே அவனை வரவேற்றது.


உள்ளே ஒரு நாலு வயது குழந்தையுடன் குழந்தையாக மாறி வம்பளத்துக் கொண்டிருந்தாள், மதுராந்தகி. ஏனோ மனம் லேசாக உணரத்துவங்கியது, அந்த இரும்பனுக்கு. பல நாட்கள் கழித்து பழைய மதுராவை கண்ட உணர்வு அவனுள். தட்டில் குட்டி தோசையோடு வந்த யசோ "இந்த வாண்டுக்கு கல்யாணியோட குட்டி தோசையும் கார சட்டினியும் தான் உயிரு மது" எனக் கூற "ஏ‌ வாயாடி! காரம்னா வெளுத்து கட்டுவியோ?" என அந்த குட்டியிடம் கேட்டாள். அந்த நான்கு வயது சுட்டி "பாத்தி! இந்த அக்கா என்ன வாயாதி வாயாதினே சொல்றாங்க" என யசோவிடம் குற்றப்பத்திரிகை வாசிக்கும்போதே ஆதித் உள்ளே வந்தான்.


அவனை கண்டதும் "ஆதி மாமா" என மதுவிடமிருந்து ஓடியவளை வாரி அணைத்துக் கொண்டவன் "அகல் குட்டி" என அவள் கொளு கொளு கண்ணத்தில் முத்தமிட்டான். அக்குழந்தை அவர்களது பக்கத்து வீட்டாரின் குழந்தை. இருவருமே வேலைக்கு செல்லும் தம்பதியர் என்பதால் குழந்தையை எங்கே விடுவது என்ற தயக்கத்தில் இருந்தோருக்கு யசோவின் குடும்பம் அவர்களின் சொந்த ஊர் என தெரியவரவும் ஒருவித நம்பிக்கை பிறந்தது. அப்படி இரண்டு வயதிலிருந்தே இக்குடும்பத்திற்கு பரிட்சையப் பட்டு போன அந்த சின்னஞ்சிறு வண்டே, அகல்யா.


திவ்யாவை பார்க்கமுடியாத போதும், அவள் கிடைத்துவிட்ட திருப்தியே, மதுவை அவள் இயல்பிற்கு மாற்றிக் கொண்டது. அதில் கலகலப்பான மற்றும் வெள்ளந்தியான குணமுள்ள யசோ மற்று கல்யாணியிடம் சட்டென ஒட்டிக் கொண்டாள். முதலில் வந்தன்று இருந்த தயக்கம் தற்போது அறவே ஒழிந்தது. அதிலும் இந்த சின்னஞ்சிறு வாண்டு அவளை மேலும் குதூகலப் படுத்தி பழைய நிலைக்கு திருப்பியது. அகல்யா "ஆதி மாமா.. அந்த அக்கா என்ன வாயாதி வாயாதினு சொல்றாங்க. உங்க கன் வச்சு சூட்டுதுங்க" என கூற அத்தனை நேரம் இருந்த துடுக்குத் தனம் யாவும் அவனை கண்டதும் பாவையை விட்டு தூரச் சென்றது போலும்.


"அப்படியா?" என்றவன் மதுராவை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தபடி "என்ன என் செல்லகுட்டிய வாயாடினு சொன்னியாமே?" என அதட்டலாக கேட்பதுபோல் கேட்டான். அதில் வார்த்தைகளற்று திக்கியவள் "அ..அது.." என யசோவை பார்க்க புன்னகையாக "ஆமா. கூப்பிட்டோம். எப்பவும் என்னை இவன் கிட்ட மாட்டிவிடுவ இன்னிக்கு இவளா?" என ஆதித்திடம் துவங்கி அகல்யாவிடம் முடித்தார். அங்கே வந்த கதிர் "அடடா! என்ன? என் அகல் குட்டிய ஏன் வாயாடினு சொல்றீங்க? நீ வாடி குட்டி" என்றபடி அவளை தூக்கிக் கொண்டார். "குட் தாத்தா" என அவரை முத்தமிட்ட குழந்தை மதுராவிற்கு பழிப்பு காட்ட, இவளும் இதழை சுலித்து பழிப்பு காட்டினாள்.


அதில் புன்னகைத்து விட்டு ஆதி தன் அறை சென்று புத்துணர்வு பெற சென்றான். "ஏ வாயாடி! என்ன போட்டுகுடுக்குறியா?" என இடையில் கைவைத்தபடி மதுரா குழந்தையிடம் கேட்க "ஆமா! என் மாமாவ பாத்ததும் பயந்த தானே?" என கூறினாள். "யாரு பயந்தா? நாலாம் பயப்படலை" என மதுரா சொல்ல "ஓ!" என்றவள் "பயப்பதலையாம் மாமா" என அவளுக்கு பின்னே எம்பி பார்த்தபடி கத்தினாள். அதில் பாவை திடுக்கிட்டு திரும்ப படிகளின் பிடியில் அமர்ந்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான். பாவை மலங்க மலங்க விழிக்க, இவர்கள் உரையாடல்களை ரசித்துக் கொண்டிருந்த ஆதித்யன் வாய்விட்டு சிரித்து "டேய்! போடா. சும்மா சும்மா பயமுடுத்தாத. நீ வாடாமா அவன் கிடக்குறான்" என மகனிடம் துவங்கி மருமகளிடம் முடித்தார்.


பின் புத்துணர்வு பெற்று வந்தவன் சில நிமிடம் அகல்யாவுடன் விளையாடிவிட்டு அவள் புறபட்டதும், கூடத்து சோஃபாவில் அன்னை மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தந்தையிடம் கேலி பேசிக் கொண்டிருந்தான். அவனது கலகலப்பு குடும்பத்தாருக்கு அதிலும் முக்கியமாக தாய்க்காக மட்டுமே. அதை தன்னையும் அறியாமல் பாவையின் விழியோரம் ரசனையை கசியவிட்டு ஒளியை வரவேற்றது.


பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு

வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா…


என பாரதியின் கவிதைகள் மனதில் வலம் வந்தன. பின் மணியை பார்த்தவன் "சரிமா வரேன்!" எனக் கூற "எப்பா.. வேலைக்குனு சொல்லி ஒரு வீட்ட வாங்கிட்டு மொத்தமா இப்படி அங்கேயே இருக்கீங்களே?" என கட்டுபடுத்த முடியாத தன் ஆதங்கத்தை வெளிப் படுத்தினார், யசோதா. இதுவே முதல் முறை அவர்கள் தங்களது இரவு பொழுதுகளையும் அங்கேயே கலிக்க துவங்கியது. "ஆமா ப்பா! ஒரு மாசமா இது ஒன்னு புதுசா பண்றீங்க. நைட்டுலாமும் அங்கயே இருக்கீங்களே. அந்த வம்சி தான் அப்பப்ப ராத்திரியும் அந்த ரிசர்சுனு போய்டுவான். இப்ப நீங்க இங்க வர்றதே குறைஞ்சது போல இருக்குது ப்பா" என கல்யாணி கூற மதுராவின் மனதில் சுருக்கென்ற உணர்வு.


அவன் பெற்றோரை பாதிக்கும் இந்த புது பழக்கத்தின் காரணி அவள் தானே? அது உரைக்கவே மனதில் கணமேறிய உணர்வு. கதிரோ "கல்யாணி! என்ன இது?" என்க "அவ கேக்குறதுல என்ன அண்ணா தப்பு?" என யசோ கேட்டார். ஆதித்யன் இறுகிய மகனின் முகம் கண்டு "அவன் புதுசா இந்த ஒரு மாசம் நம்மையும் மறந்து சுத்துறான்னா முக்கியமான குழப்பத்தில் தவிக்குறான்னு அர்த்தம். வெறும் நம் நாளு பேரை தவிற, இன்னும் முக்கியமான சிக்கல்கள் அவன் பிடி வந்திருக்குனு அர்த்தம். அதுக்கு அவனுக்கு துணையா அவனோட தோழர்கள் உதவியும் அவனுக்கு வேணும்னும், நண்பனோட கஷ்டத்துல அவன தனியா குழம்பவிட்டுட்டு வர அந்த ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லைனு அர்த்தம். அவனோட குழப்பங்களுக்கும் பணிக்கும் நம்ம மதிப்பு கொடுப்போம்னு நம்பிக்கையில் அவன் இருக்கான்னு அர்த்தம். ரெண்டு பேருக்கும் விளக்கம் போதுமா?" என கூற மதுரா அவரை வாய் பிளந்து பார்த்தாள்.


அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் இருவரும் சமையலறை சென்றிட, தந்தையை கட்டியணைத்து "தாங்ஸ் டாட்" என்றான். மகன் தோளை தட்டிக் கொடுத்தவர் "எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும்டா! போ, போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு இவங்க கோபத்தை மொத்தமா கரைச்சுக்கோ" எனக் கூறி சென்றார். கதிர் அவனை கட்டியணைத்து புன்னகையுடன் நகர, தன்னறை செல்ல திரும்பிய மதுராவை "மதுரா" என நிறுத்தினான்.

அவன் அழைப்பில் சிறு அதிர்வுடன் திரும்பியவளிடம் வந்தவன், "இந்த சனிக்கிழமை காலைல கடைக்கு போகனும். ரெடியா இருந்துக்கோ. உனக்கு காலேஜ்கு வேண்டியதை வாங்கிட்டு, கைய செக் பண்ணிட்டு வருவோம்" என்றான். "ம்ம்" என அவள் தலையசைக்க, "ஒரு நிமிஷம்" என சென்று ஒரு சிறு பெட்டி அடங்கிய பையை எடுத்துவந்து அவளிடம் கொடுத்தான்.


பாவை அவனை புரியாமல் பார்க்க "உன் பழைய போன டியாக்டிவேட் பண்ணிட்டு புது போன் வாங்கிருக்கேன்" என கூறினான். அவனை விழிவிரிய பார்த்தவள் "இ..இல்ல இது எனக்கு வேணாம்" என கூற "ஏன்?" என்றான். "இல்ல வேணாம்" என அவள் தயங்க அவளை அழுத்தமாக பார்த்தபடி "காரணம் தான் கேட்டேன்" என்றான். "இல்ல ஏற்கனவே என்னால உங்களுக்கு நிறைய செலவு. இ..இதுல இதுலாம் எனக்கு வேணாம். பிளீஸ்" என தயங்கியபடி அவள் கெஞ்ச, அதை அவள் கையில் தினித்தவன் "உன்னால செலவுனு யார் சொன்னா? அப்படியேனாலும் உனக்கு செலவு பண்றதுல தப்பில்லை" எனக் கூறி சென்றான்.


அங்கு வம்சியோ பிரசாத் கூறிய தகவல்களை கூறி "இவளுக்கு எதோ ஊசி மாத்தி போட்டிருப்பாங்க போலடா. அதான் இப்படி ஆகிருக்கு" எனக் கூற "இப்ப இதுக்கு என்ன மருந்து?" என வசி கேட்டான். "டேபிலட்ஸ் சொரியாசிஸ்கானதே குடுத்து பார்க்கலாமாம். ஆலோவேறா ஜெல் அப்லை பண்ணா இன்னும் நல்ல பலன் கிடைக்கும்" என வம்சி கூற "ம்ம்.. நானும் அதான் குடுத்திருக்கேன்" எனக் கூறினான். இருவரும் அவளிடம் செல்ல, அவளருகே மண்டியிட்டு அமர்ந்த வம்சி அவள் தலையை கோதி "பாப்பா!" என்றான். முழித்தபடி கண்மூடி இருந்தவள் மெல்ல விழி திறக்க "எப்படிடா இருக்கு?" என்றான். "எரியுது" என்றவள் ஏதோ கூற வந்து வசியை நிமிர்ந்து பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.


அதையுணர்ந்த வசிக்கு ஆதியின் வண்டி சத்தம் ஒரு சாக்காக அமைய, "ஆதி வந்துட்டான். நா கீழ போறேன்" எனக் கூறி சென்றான். அதில் அவளை முறைத்த வம்சி "என்ன திவி?" என்க "ப..பாத்ரூம் போகனும்" என்றாள். "இத வசிகிட்ட கேட்க உனக்கென்ன? ஹீ இஸ் அ டாக்டர். நான் வரும்வரை வெயிட் பண்ணிட்டு இருப்பியா?" என கடிந்துகொண்டான். அவனை வேதனையோடு பார்த்தவள் "உன்கிட்ட கேக்குறதும் அவர் கேக்குறதும் ஒன்னா?" என தத்திபித்தி கூற "ஏ! என்ன பாப்பா?" என்றான். "எ..என்னால முடியல. அ.. அவர் என்கிட்ட எ..எதோ சங்கோஜப்படுற போல எனக்கு தோனுது" என கூறினாள்.


"சங்கோஜம் அவனுக்கு இருக்காது. உனக்கு தான் இருக்கும்" என கூறிய வம்சி அவளை தூக்கிச் சென்று கூட்டிவந்தான்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
19. இனம் புரியா தேடலில் நாம்!


திவ்யாவிற்கு வேண்டிய உபகரணங்கள் முடியவே, மீண்டும் அவளை படுக்கையில் கிடத்திய வம்சி "எதாவதுனா அவன்கிட்ட கேளு பாப்பா. இப்படி நான் வரும்வரை பொருத்திருந்து, கூட நாலு பிரச்சனைய இழுத்துவிட்டுக்காத" எனக் கூற "எ என்னால முடியல ந நா உனக்கு எப்படி சொல்ல? அ அவர்கிட்ட எதும் கேக்க பயமா இருக்கு. நாளைக்கு நான் ஏதும் உரிமை எடுத்துகிட்டதா அவர் நினைச்சுட்டா என்ன பண்ணுவேன்?" என கேட்டவள் விழிகளில் கண்ணீர் ஆறாக வடிந்தது.


"ஏ பாப்பா!" என வம்சி கூற "அவர பாக்க பாக்க அவர்கிட்ட என் காதல சொல்ல மனசு துடிக்குது தெரியுமா? எதும் கேக்க பயமா இருக்கு. நாளை இதுனால தான் காதல் வந்துதுனு நினைச்சிடுவாரோனு பதறுது. எ என் நிலமை என்னன்னே தெரியாத பட்சத்துல அவர் கிட்ட என் காதல வெளிப்படுத்தவும் முடியாம, வெளிகாட்டிகாம இருக்கவும் முடியாம தவிக்குறேன். எ எனக்கு செத்துடலாம் போல இருக்கு" என கதறினாள். காதலா? திவ்யாவா? வசியையா? ஆம்! திவ்யா காதலிப்பது வசீகரனை தான். எனில் சிற்பி?


வம்சியின் அலைபேசி ஒலி இருவரையும் நிதர்சனம் கூட்டி வந்தது. ஆடவன் அதை எடுக்க அதில் 'சிபி' என்ற பெயருடன் இதயத்தின் இமோஜிகள் இருந்தன. அத்தனை நேரம் இருந்த இறுக்கம் கலைந்தது. அதை சைலண்டில் போட்டவன் திவியிடம் திரும்ப "எடுத்து பேசு. அப்பறம் ரெண்டு நாளா பேச்சே இல்லைனு மூக்கு சிந்துவா" என முடிந்தமட்டும் குரலை கொண்டு வந்து பேசினாள். அதில் புன்னகைத்த வம்சி அழைப்பை ஏற்று "சிறூ" என்க "திவிக்கு எப்படி இருக்கு?" என்றாள். அதில் திவி மெல்ல புன்னகைக்க "அப்போ எனக்காக போன் போடலை?" என்றான்.


"ம்ப்ச்! என்ன இது?" என அவள் கேட்க "சரி சரி. உன் தங்கச்சி நல்லா தான் இருக்கா. நார்மல் ஸ்கின் அலர்ஜி தான். சரியாகிடும். நீ எதும் யோசிக்காம படி" என்றான். "ம்ம்!" என்றவள் "என்ன பண்றீங்க? சாப்டீங்களா?" என்க "பார்ரா! அக்கறை?" என்றான். "ஏன்? இருக்க கூடாதா? உரிமபட்டவ நான் தானே?" என அவனவள் பொறிய திவ்யாவின் இதழ் விரிந்தது. அதில் அந்த ஆடவனுக்கும் அழகு வெட்கம் தொற்றிக் கொள்ள எழுந்து பால்கனி சென்றவன் அவளுடன் பேசிவிட்டு வந்தான். "பேசியாச்சா?" என திவி கேட்க "ஏ பாப்பா! ரொம்ப ஒட்டாத. ஒழுங்கா ரெஸ்ட் எடு. கண்டதையும் நினைச்சு மனச போட்டு குழப்பிகாத. டெஸ்ட்ஸ்லாம் பண்ணிட்டேன். நார்மல் ஸ்கின் பிராப்ளம் தான். நீ முதல ஸ்ட்ரெஸ் பண்ணிகாத" என்றான்.


"ம்ம்" என அவள் கூற ஆதியும் வசியும் வந்தனர். நலவிசாரிப்புகள் முடிய யாவரும் உண்டு உறங்கினர். ஆம், சிற்பியும் வம்சியும் தான் இருதலை காதல் ஜோடி. திவ்யா வசியை ஒருதலையாக பல வருடங்களாக காதலித்து வருகின்றாள். எனில் ஆதியும் வசியும் ஏன் வம்சி திவியை காதலிப்பதாக கூறுகின்றனர்? திவிக்கு நேர்ந்தது என்ன? கதையின் போக்கில் அறிவோம்!!!


அழகிய பொழுது புலர்ந்து, அன்றைய புதிய பக்கங்களை விரிக்க காத்திருக்க, வம்சி தன்னறை வந்தான். திவிக்கு தன்னறையை கொடுத்திருந்தவன், வசியின் அறையில் அவனுடன் படுத்துக் கொண்டான். உள்ளே வந்தவன் துயில் கலையா தூரிகையவள் தலைகோதிவிட்டு, அவளுக்கு வேண்டியவற்றை தயார் செய்தான். சில நிமிடங்களில் பாவை மெல்ல நித்திரை கலைந்து எழ, சில பல மருந்தட்டைகளை ஆராய்ந்து கொண்டிருந்த வம்சியை கண்டாள்.

அவளது சத்தத்தில் நிமிர்ந்தவன் "குட் மார்னிங் பாப்பா" என்க மெல்ல புன்னகைத்தவள் "குட் மார்னிங் மாம்ஸ்" என்றாள். அதில் அழகிய வெட்க சிரிப்பை உதிர்த்தவன் "வாயாடி" என்க அவளோ அவனை முறைத்து "கேடி" என்றாள். அவன் அவளை பெரும்பாலும் 'வாயாடி' என தான் சீண்டுவான். பதிலுக்கு அவனை முறைத்துக் கொண்டே 'எங்கக்காவ கரெக்ட் பண்ண கேடி' என்பாள். அந்த நினைவுகளில் இருவரும் சிரித்துக் கொள்ள அவளிடம் வந்து ஒரு களிம்பை கொடுத்து "வாம் வாட்டர் தயாரா இருக்கு. உள்ள ஒரு மெடிசனல் சோப் வச்சிருக்கேன். அதையே யூஸ் பண்ணு. குளிச்சிட்டு இந்த கிரீம் அப்லை பண்ணிக்கோ" என செப்பினான்.


அதில் மெல்ல புன்னகைத்தவள் "ஓகே டாடி" என்க அவள் தலையை மெல்ல கோதினான். பின்னந்தலையில் சிகிச்சை செய்யபட்ட இடத்தில் முடிமலிக்கப் பட்டு கட்டிடபட்டிருக்க அதை கண்டவன் கட்டை பிரித்து மருந்திடவேண்டும் என மனதில் குறித்துக் கொண்டான். அவளை குளியலறை வரை கூட்டிச் சென்று விட்டவன்‌ "எதும் வேணும்னா கூப்பிடு" எனக் கூறி செல்ல பாவையும் அந்த வெதுவெதுப்பான நீரில் நீராடினாள். அவளது உடல் அரிப்பிற்கு, எரிச்சலிற்கு மற்றும் அசதிக்கு அந்த நீர் பெரும் இதத்தை தந்தது.


குளித்து வந்தவள் அவன் கொடுத்த களிம்பினை தடவிக் கொண்டு, வம்சி வைத்திருந்த மருத்துவமனை உடையை அணிந்து கொண்டாள். கண்ணாடி முன் நின்றவள் விழிகள் மெல்ல அவளை அளவெடுத்தது. முன்பக்கமிருந்து பார்க்கயில் முடி 'பாப்கட்' வடிவில் இருக்க பின்புறம் சிகிச்சை செய்யப்பட்டு இடத்தில் முடி மலிக்கப்பட்டு கட்டிடபட்டிருந்தது. முகம், கை, கால் என எங்கும் சிவந்து தடித்திருந்திருந்தது. அந்த கட்டினை பாவை மெல்ல கையை பின்னே கொண்டு சென்று வருட, கண்ணாடியில் அவள் அன்று கீழே விழுந்தது படம் போல் தெரிந்தது போல் இருந்தது. அதன் பின் என்ன நிகழ்ந்தது என்று பாவை சிந்திக்க, ஏதும் நினைவில் இல்லை.


முடிந்தவரை சிந்தித்தவளுக்கு தன்னிடம் யாரோ ஊசியுடன் வந்த பிம்பம் நிழலாடுவது போல் தோன்றியது. அதற்கு மேல் என்ன என்னவென்று அவள் யோசிக்க தலை வின்வின்னென்று தெரித்தது. "ய யாரு? நா நா எங்க இருந்தேன்?" என அவள் வாய்விட்டே கேட்க தலை வெடிப்பது போல வலியை தந்தது.

சரியாக அப்போது வசீகரன் உள்ளே வர, தலையை பிடித்துக் கொண்டு "ஆ.." என்று கத்தியபடி மயங்கி தள்ளாடினாள். "ஏ!" என ஓடிவந்த வசி அவளை தாங்கிக் கொள்ள அவள் சத்தம் கேட்டு வம்சியும் வந்தான். பாவையின் தொலதொலப்பான உடை தோள்பட்டையில் விலகி இருக்க, அவளை தாங்கி இருந்தவன் முகத்தில் வம்சியை கண்டதும் ஒருவித சங்கடப் படபடப்பு தொற்றிக் கொண்டது.


"வசி என்னாச்சுடா?" என வம்சி வர "தெ தெரியல டா. நா வரும்போது கத்திட்டே மயங்கிட்டா" என அவளை கட்டிலில் கிடத்திவிட்டு "நி நீ பாத்துக்கோ. நா இவளுக்கு சாப்பிட கொண்டு வரேன்" என நகரமுற்பட்டான். 'அவருக்கு ஏதோ சங்கடமா இருக்கு' என திவி கூறிய போது நம்பாத வம்சி, தற்போது வசியின் செயலில் புருவங்களை சுருக்கினான். அவனை போகவிடாமல் தடுத்தவன் "வசி! அவளோட கட்டு பிரிக்கவே இல்லடா. அதுக்கு டிரெஸ்ஸிங் பண்ணேன்" என கூற "நானா?" என்றான். "நீ தானேடா டாக்டர்?" என வம்சி கூற "டேய் இதுலாம் உனக்கே தெரியுமே. நீ பண்ணலாமேடா" என்றான்.


"உனக்கு என்னாச்சு வசி? நேத்து திவி சொல்லும்போது நம்பலை. இப்போ அவ சொல்றது சரியாதான் இருக்கு. உனக்கு ஏன் இவகிட்ட இவ்வளவு தயக்கம்?" என கேட்ட வம்சியின் குரலில் எரிச்சல் ஏகபோகத்திற்கு இருந்தது. "டேய் அப்படிலாம் இல்லைடா" என வசி கூற "பொய் சொல்லாத வசி" என்றான். ஒரு பெருமூச்சுடன் தலைகுனிந்தவன் "சாரி வம்சி. ஐ கான்ட் ஃபாலோ மை ப்ரொபஷ்னல் எதிக்ஸ் இன் ஹர் கேஸ். அதுவும் உன்னயே பக்கத்துல வச்சுகிட்டு உன் லவ்வர்க்கு எ என்னால முடியலடா" என தத்தி பித்தி கூற "என் லவ்வரா?" என வம்சி அதிர்ந்தான்.


நண்பர்களை உணவுண்ண அழைக்க வந்த ஆதித் உள்ளே வர "ஆமா! திவியும் நீயும் லவ் பண்றீங்க தானே?" என வசி கேட்டான். "அப்டினு யாருடா உனக்கு சொன்னது?" என வம்சி கூறவும் ஆதித்தும் வசியும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "அப்போ நீ லவ் பண்ணலையா?" என ஆதித் கேட்க, "ம்க்கும்!" என குரலை செருமியவன் "லவ் பண்றேன். ஆனா திவிய இல்ல. சிற்பிய" என்றான்.

அதில் அதிர்ந்த நண்பர்கள் "அடேய்! அப்போ நீ திவிய லவ் பண்ணலையா?" என்றனர். "அடேய் என்னடா உலருறீங்க? அவ எனக்கு குழந்த மாதிரிடா. நாங்க ரெண்டு பேரும் லவ்லாம் பண்ணலை. வெறும் பிரண்ட்ஸ் தான்" என வம்சி கூற இதுநாள் வரை தாங்கள் தான் தவறாக புரிந்து கொண்டோம் போலும் என ஆதித்தும் வசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"அடேய்! அவ என் லவர்னு நினைச்சுட்டா அவகிட்டிருந்து இப்படி தள்ளி தள்ளி போன?" என வம்சி கேட்க "ஆமாடா. நா, நீயும் திவியும் லவ் பண்றீங்கனு தான் நினைச்சேன். அதான் ஒரு தயக்கம்" என வசி செப்பினான். "டேய்! அவ என் பாப்பாடா. அது குழந்தை" என உணர்வுபூர்வமான குரலில் கூறிய நண்பனை புன்னகையோடு பார்த்த ஆதித் "அவ குழந்தயாம் அவ அக்கா பொண்டாட்டியாம். நல்ல கணக்குடா" என கூறினான். அதில் வசி பக்கென சிரித்திட இருவரையும் முறைத்த வம்சி "அதுலாம் அப்படிதான். உனக்கு புரியாது போடா" என கூறவும் இருவரும் மேலும் சிரித்தனர்.


சட்டென அறிவு பிறந்தார் போல் "டேய்! அப்போ ஏன் நீ சிற்பிய லவ் பண்றத எங்ககிட்ட சொல்லவே இல்ல" என கேட்ட வசி ஆதியின் தோள் தட்டி "ஆயிரம் இருந்தாலும் என் மச்சான் தான்டா நல்லவன். எந்த ஒளிவு மறைவும் இல்லாம அவன் காதல உணர்ந்தப்பவே நம்மகிட்ட தான் முதல்ல சொன்னான்" என கூற வம்சிக்கு ஒருமாதிரி ஆனது. "டேய் எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை இருக்காது. இவ்வளவு பெரிய விஷயத்த நம்மகிட்டயே மறைச்சிருக்கான்னா அதுக்கு பின்னாடி எதும் காரணம் வச்சிருப்பான்" என நண்பனை புரிந்தவனாக ஆதித் கூறினான்.


"சொல்லவேண்டிய சமையம் இன்னும் அமையலைனு அமைதியா இருந்தேன். ஆனா நீங்க இப்படி நினைச்சிட்டு இருந்தீங்கனு தெரிஞ்சிருந்தா முதலையே சொல்லிருப்பேன்" என வம்சி கூற "சரிசரி. முதல எந்தங்கச்சிக்கு என்னனு பாருங்கடா" என ஆதித் சொன்னான். வசியை பார்த்த வம்சி "இப்போ பண்ணுவியா?" என கேட்க புன்னகையுடன் தலையசைத்தவன் தன்னறை சென்று வேண்டிய உபகரணங்களை எடுத்து வந்தான். அவளது சிகிச்சை முடிய, ஆதித் "மச்சி! அந்த டாக்டர புடிச்சு விசாரிச்சேன்டா" என்றான். "டேய் சொல்லவே இல்ல. எப்போடா?" என வசி கேட்க "நேத்து இருந்த டயர்ட்ல சொல்ல தோணலை" என கூறினான்.


பின் நடந்த அனைத்தையும் ஆதித் கூற அமைதியாக அவற்றை கேட்டுக் கொண்டிருந்த இரட்டையர்கள் குழம்பி போயினர். "நம்பர், பெயர் ஊர்னு எந்த ஒரு அடையாளமும் இல்லாம எப்படிடா கண்டுபிடிக்க போற?" என இருவரும் கேட்க இருவரையும் ஒற்றை புருவம் உயர்த்தி இதழோர சிரிப்போடு பார்த்தான். அதில் 'ஸ்ஸ்' என தலையை தேய்த்துக் கொண்ட வம்சி "நீ படிச்சதே மறந்துட்டேன்டா" என கூற பின்பே ஆதித் 'சைபர் செக்கியூரிடியில் (இணைய பாதுகாப்பு)' தான் தனது பட்டப்படிப்பை முடித்திருந்தது நினைவு வந்தது. ஆனால் அவன் கையிலெடுத்திருப்பது அவன் அறிவிற்கும் அப்பாற்பட்டது என அப்போது அவன் அறிந்திருக்கவில்லை!


-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
20. இனம் புரியா தேடலில் நாம்!


இங்கு திவ்யாம்பிகை கண்விழிக்க அவள் முன் தன் வசீகர புன்னகையுடன் அமர்ந்திருந்தான் வசீகரன். அவனது வசீகர புன்னகையின் மாயமோ? இல்லை மயக்க கலக்கமோ? பெண்ணவள் அவன் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தோழி இப்படி பகிரங்கமாக பார்ப்பதில்.. இல்லை இல்லை சைட்டடிப்பதில் மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட வம்சி குரலை செரும திடுக்கிட்டு சுயம் வந்தாள். வசியோ சும்மா இல்லாமல் 'ஊரோரம் போற மாரியாத்தா ஏம்மேல வந்து ஏறாத்தா' என்னும்படி "சாரி திவி" என்றான்.


பாவை அவனை புரியாமல் பார்க்க தயாராகிக் கொண்டிருந்த வம்சிக்கு தூக்கி வாரி போட்டது. 'ஆத்தீ!! இப்ப இது முக்கியமா? பாவி மவனே' என்றபடி திரும்பியவன் பேசும் முன் "எ எதுக்கு?" என்றாள். "தி திவி. நி நீ இன்னும் சாப்பிடல" என வம்சி பேச்சை மாற்ற அந்த அறிவு சிகாமணி "சாப்பிட்றேன்" என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டு "என்னாச்சு? என்கிட்ட ஏன் சாரி?" என தத்தி பித்தி கேட்டாள்.

'போச்சு!' என வம்சி எண்ண "இல்ல.. நான் நீயும் வம்சியும் லவ் பண்றீங்க போலன்னு நினைச்சேன். அதான் உன் கிட்ட கொஞ்சம் ஒதுக்கத்தோடயே இருந்தேன்டா. சாரி" என வசி கூறியது தான் தாமதம். சட்டென அனல் தெறிக்கும் பார்வையோடு வம்சியை திவ்யா முறைக்க, "எஸ்கேப்" என்று பாய்ந்தோடி போனான்.


சென்றவனையே கோபமும் ஆற்றாமையுமாக பார்த்தவள் அந்த கோபத்திற்கு தன் முன் இருப்பவனையே பலியாக்கினாள். "ஏன்? ஒரு பொண்ணு பையனும் பேசிகிட்டாளே லவ் தானா?" என அவள் பொறிய "ஏ! கூல்! கூல்! அப்படிலாம்‌ இல்ல. அது நா" என காரணமின்றி தடுமாறினான். 'நா உன்ன லவ் பண்றேன்டா பக்கி. அத கண்டுபிடிக்க தெரியலையாம். இவரு தம்பி லவ்வ கண்டுபிடிக்குறாறாம். நல்லா யோசிச்ச. ச்சை!' என மனதிற்குள் மட்டுமே அவனை திட்டமுடிந்தது. 'என்ன மேடம்? மரியாதை குறையுது?' என அவள் மனதில் இருக்கும் அவளவன் கண்ணடித்து கேட்க உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்வில் அவள் முகம் வண்ணம் பூசிக் கொண்டது. "ச சாரி" என அவள் கூற "ஹே சில்! நான் எதுவும் நினைச்சுகலை. மிஸ்டேக் என்னோடது தான்" என்றவன் "சரி சாப்பிடு" என அவளுக்கு கொண்டு வந்த உணவை கொடுத்தான்.


அப்படியே நேரம் ஓட அங்கு சோஃபாவில் சோகமாக அமர்ந்திருந்த மதுராவை கண்ணத்தில் கைவத்தபடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அகல்யா "இப்ப என்ன உனக்கு? ஏன் பேச மாட்த?" என கேட்க அந்த குழந்தையை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தவள் "ஒன்னுமில்ல குட்டி" என்றாள். "குத்தியா? வாயாதி தானே சொல்லுவ?" என்ற அகல்யா அங்கு வந்த யசோதாவிடம் "பாத்தி! என்னவாம் அக்காக்கு?" என கேட்க, பலமுறை கேட்டு சோர்ந்தவரோ ஒரு பெருமூச்சுடன் "தெரிலயேடா" என்றார்.


அங்கு வந்த கதிர் "என்னாச்சு டா? உடம்பு எதும் முடியலையா?" என வாஞ்சையுடன் கேட்க அவர்கள் காட்டும் கரிசனம் மேலும் அவளை கலங்கச் செய்தது. "இ இல்ல ப்பா. ஒன்னுமில்ல. தலைதான் லேசா வலிக்குற போல‌ இருக்கு" என அவள் சமாளிப்பது அப்பட்டமாக தெரிந்தது. அவளை மேலும் குடைய விரும்பாமல் "சரிடா. சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு. சரியாகிடும்" என அவர் கூற "ம்ம்" என பாவை தலையசைக்கும் போதே அவளவன் வந்தான்.

அவன் வண்டி சத்தத்தில் பாய்ந்து ஓடிய அகல்யா "மாமாஆ.." என அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டாள். அவளை பாசத்தோடு முத்தமிட்டவன் "குட் மார்னிங் அகல் குட்டி" என கூற அவன் கண்ணத்தில் முத்தமிட்ட குழந்தை "மாமா மாமா! அக்கா உம்ம்ம்ம்முனு இதுக்கா" என அந்த 'உம்' இல் ஒரு அழுத்தம் கொடுத்து செப்பினாள்.


அதில் பாவை திடுக்கிட்டு போக அவளை பத்தே வினாடிகள் தன் விழியில் அளந்தவன் "அப்படியா? ஏன்டா?" என குழந்தையிடம் கேட்டான். "தெல்ல மாமா. என்ன வாயாதினு கூட கூப்பிட்ல" என அகல் கூற "அப்படியாடா பாப்பா?" என்றபடி வந்து அமர்ந்தான்.

அவனிடமிருந்து இறங்கியவள் மதுவிடம் வந்து "எங்க ஆதி மாமா போலீஸ். அவங்க கித்த பொய் சொன்னா சுட்டுடுவாங்க" என கூற 'அய்யோடா! வாயாடி என்ன பேச்சு பேசுற. இருடி அவர் போகட்டும் உனக்கு இருக்கு. எதோ கொஞ்சம் பீலிங்ஸ்ல இருந்தா சந்துலயா சிந்து பாடுற' என உள்ளுக்குள் குழந்தையுடன் அவள் வாதிட்டு உதட்டை சுலித்துக் கொள்ள ஆடவன் வாய்விட்டு சிரித்தான்.


"சுடுவான் சுடுவான்! உன் மாமன் பெருமை போதும். வா!" என அவளை தூக்கிக் கொண்ட ஆதித்யன் "யசோ! சாப்பாடு எடுத்து வைடா" என கூற "எனக்கும்" என்றபடி வந்தான் வம்சீகரன். மகனின் குரலை கிட்டதட்ட மூன்று நாட்களுக்கு மேலாக கேட்காத அந்த தாயவளோ உள்ளிருந்து வேகமாக வர, தாயின் அவசரத்தில் தன் அரிசிப் பற்கள் தெரிய அழகாய் புன்னகைத்தான்.

சட்டென முகத்தை திருப்பிக் கொண்டவர் "ம்ஹீம்" என முகவாயை தோளில் இடித்துக் கொண்டு உள்ளே சென்றிட வாய்விட்டு சிரித்த ஆதி "மச்சி உனக்கு சோறில்லடா" என்றான். "ஏன் இல்ல? ரெண்டு நாள் வராம வந்த உனக்கு போட்டோம்ல" என்றபடி வந்த யசோ "வாடா கண்ணா" என்க 'ஈஈ' என வந்தமர்ந்தான்.


"ஏ வம்சி மாமா" என அகல் கூற "நல்ல மரியாதடி மருமகளே" என்றபடி அவளிடம் வந்தவன் தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து பிரித்து, அதிலிருந்த தேன் மிட்டாயை அவளிடம் கொடுத்தான். "ஐ!" என்ற கூவலுடன் அதை வாங்கி அவன் கண்ணத்தில் முத்தமிட்டாள்.

யாவரும் உண்டு முடிய, வம்சி தன் அன்னையை கட்டிக் கொண்டு "டார்லிங்! உன்கிட்ட பேசாம என்னால இருக்கமுடியுமா?" என்றான். "இத்தனை நாள் பாக்க கூட வரலை" என அவர் முகத்தை சுழித்துக்கொள்ள "அத தான் சொல்றேன். பேசம இருக்க முடியாத நான் பார்க்கவே வரலைன்னா காரணம் இருக்குமில்லையா?" என கொஞ்சும் குரலில் கூறினான்.


மகனை அன்னாந்து பார்த்தவர் அவனது கொஞ்சலில் வழிந்த கெஞ்சலை பொறுக்க முடியாது "சரிசரி! போ" என்க அவரை முத்தமிட்டு "பை டாலு" என்றுவிட்டு பறந்தான். மகனை புன்னகையாக பார்த்துவிட்டு கல்யாணி திரும்ப மனைவியை செல்லமாய் முறைத்துவிட்டு கதிர் உள்ளே சென்றார். "பார்ரா! பொசஸிவ்வு" என ஆதித்தனும் ஆதித்யனும் சிரிக்க அதில் அந்த முதிர்ந்த பெண்மணக்கும் அழகாய் வெக்கம் சிவந்தது.

இவர்களின் இந்த செல்ல சண்டைகளையும் சிணுங்கல்களையும் கண்ட மதுராந்தகிக்கு ரசனையும் ஏக்கமும் கலந்த கலவையான உணர்வு எழுந்தது. வெளிக்காட்ட தெரியாத அந்த உணர்வும் பெருமூச்சில் வெளியேறியது.


அகல்யாவின் அன்னை வந்து அவளை கூட்டிக் கொண்டு செல்ல, கணவர் பின்னோடே கல்யாணி செல்வதை புன்னகையுடன் பார்த்த யசோதா "எத்தனை வயசு ஆனாலும் பையன்கிட்ட பொண்டாட்டிய கொஞ்ச விட பொறாமை படும் புருஷனும் எத்தனை வயசானாலும் தன்னோட கண்ணசைவுக்கு வெட்கப்படும் பொண்டாட்டியும்‌ கிடைக்குறதுலாம் ஒரு வரம்!" என கூறி கண்வரை கண்டு புன்னகைக்க, அந்த இடைவேளையில் தன் அன்னையை மலர்ந்த புன்னகையுடன் பார்த்த தன்னவளை கண்டு புன்னகைத்துக் கொண்டான், ஆதித்தன்.


பின் தந்தையிடம் திரும்பிய ஆதித் ஏதோ பேச முற்பட அவன் அலைப்பேசி ஒலித்தது. ஆடவன் அலைப்பேசியை எடுத்துப் பார்க்க வசி தான் அழைத்திருந்தான். ஏதும் பிரச்சனையோ என‌ பதறியபடி அழைப்பை ஏற்றவன் "வசி" என்க எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ? மதுராவிடம் தன் அலைப்பேசியை ஆடவன் நீட்ட பாவை அவனை புரியாமல் பார்த்தான். "உனக்கு தான்" என அவன் கூற ஆதித்யன் புன்னகையாக அவள் தனியுரிமை கருதி மனைவியுடன் எழுந்து சென்றார்.

பாவை பேசியை காதில் வைக்க "என்னடா இந்த பக்கிய பார்க்கவே முடியலையே, இந்த நாய்க்கு நாளைக்கு பிறந்தநாள் விஷ் பண்ண முடியுமானு யோசனையாடி கும்பகர்னி?" என்ற திவ்யாம்பிகையின் குரலில் பாவை விழியிலிருந்து கோடாக நீர்த்துளி வடிந்தது.


"என்னடி கும்பகர்னி? பேச்சையே காணும்?" என திவ்யா கூற "தி திவி" என்றவள் கண்கள் மேலும் பொழிந்தது. ஆம் இத்தனை நேரம் அவளது சோகத்திற்கும் அதுதான் காரணம். "தி திவி. எ எப்படி இருக்க? தி திவி இவங்க யாரும் உன்ன பாக்க கூட விடமாட்றாங்க திவி. உன்ன பாக்கணும் போல இருக்கு திவி. எப்போ திவி வருவ?" என்றவள் ஏதோ ஊருக்கு சென்ற அன்னைக்காக சிறுபிள்ளை அழுவதுபோல் உணர்ச்சிவசத்தால் அழ, ஆதித்துக்கே அவளது தவிப்பில் மனம் கலங்கியது.

அங்கு திவ்யாவின் விழிகளில் கண்ணீர் பொங்க அதை துடைத்துக் கொண்டு "எ ஏ கும்பகர்னி. என்னடி அழறியா?" என முடிந்தமட்டும் தடுமாற்றமின்றி பேச முயற்சித்தாள்.


இங்கே "திவி உன்ன பாக்கணும் திவி. ஏன் திவி பாக்கவிடமாட்றாங்க? நீ வேணும் திவி. எ எப்பவும் உன் பர்த்டேக்கு நா தானே முதல்ல விஷ் பண்ணுவேன்" என பாவை அழுதபடி கூற அதற்கு மேல் பொறுக்க முடியாது அவளிடம் வந்த ஆதித் அவள் தோளை சுற்றி கைபோட்டு அனைத்தவாரு "மதுரா பிளீஸ்.." என்றான். அவனை கண்ணீர் வழிய பார்த்தவள் "அவ மடில படுக்கனும் போல இருக்கு. எனக்கு அம்மா அ..அப்பா அ..அக்கா தங்கை எல்லாமே என் திவி தான். அவள ஏன் பாக்க விடவே மாட்றீங்க?" என கூற அங்கு திவி வாயினை பொத்திக் கொண்டு விம்மினாள். அவள் அருகே இருந்த வசிக்கே கண்கள் கலங்குவது போலானது.


"ம மது! நா நல்லா தான் இருக்கேன்டி. பிளீஸ் அழாதடி" என திவி கூற "உன்ன பாக்கணும் திவி" என்றாள். ஆதிக்கு இவளது கண்ணீர் அச்சுறுத்த இதற்கு இவள் திவியை பார்த்தே இருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் இதற்கே இந்த அழுகை எனில் வலியில் திவி கத்துவதை கண்டே இவள் போய் சேர்ந்துவிடுவாள் போலும் என்ற எண்ணம் முந்தைய எண்ணத்தை மூடி புதைத்தது. "எப்போ வருவ திவி?" என மூக்கை உறிஞ்சிக் கொண்டே கேட்டவளிடம் சிறுவயது மதுவின் சாயலை உணர்ந்து புன்னகையுடன் "வருவேன்டி கும்பகர்னி. நீ அழாம இரு. உடம்பு நல்லா கியூர் ஆனாதானே வரமுடியும்?" என திவி கூறினாள்.


"ச்ச! ஆமா. ஏ திவி இப்ப எப்படி இருக்க? என்னாச்சு? எங்.." என்றவள் மேலும் 'எங்கடி இருந்த?' என கேட்க வந்த கேள்வி அவளவனின் கையில் அடங்கியது. அவள் வாய் பொத்தியவனை திடுக்கிட்டு அகல விழி விரித்து நிமிர்ந்து பார்த்தவள் 'என்ன' என்பதுபோல் பார்க்க 'வேண்டாம்' என்பதுபோல் தலையசைத்தான். அதற்குள் திவி "முன்னைக்கு பரவாயில்லடி" என பொத்தாம்பொதுவாக கூற "திவி" என்றாள். "என்னம்மா?" என திவி கூற "மி மிஸ் யூ" என்றவள் அதற்கு மேல் முடியாமல் அழைப்பை துண்டித்து விட்டு வெம்பி அழுதாள்.


ஆதித் அவளை அனைவாக பற்றியபடி "மதுரா பிளீஸ்டி. இப்படி அழுது அழுது உடம்பு கெடுத்துக்காதடி" என கூற "அ அவ தான் எனக்கு எல்லாமே. அவள பத்திரமா பாத்துக்கோங்க. பிளீளீஸ்" என கூறியவள் 'பிளீஸ்' என கூறும்போது முற்றிலுமாக குரல் உடைந்து போனது. அவள் முகத்தை கையில் ஏந்தியவன் அவள் கண்ணீரை துடைத்து "உன் திவிய உன் திவியாவே உன்கிட்ட குடுப்பேன்னு உனக்கு நா பிராமஸ் பண்ணிருக்கேன்டி. எம்மேல நம்பிக்கை இல்லையா?" என்க அவனை நிமிர்ந்து பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

அத்தனை நேரம் இருந்த நெருக்கம் அப்போதே மூளையை எட்டியதுபோலும். சட்டென நகர்ந்து அமர்ந்தவள், தலைகுனிந்தபடி தன் கூந்தலை காது மடலுக்கு பின்னே சொருகியவள் "அ அது ந நா ஏதோ" என தடுமாறினாள். அவள் தடுமாற்றத்தை அழகிய புன்னகையுடன் அவன் ரசிக்க அவளோ அதை அறியாது "சாரி" என்றாள்.


வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் "பரவால" எனக் கூறி "பை" என்றுவிட்டு சென்றான். அங்கு திவ்யாவின் கண்ணீரை கட்டுபடுத்த வசி வெகுவாக தவித்துக் கொண்டிருந்தான். "திவி" என அவன் கூற "அவ பாவம். எவ்வளவு துடிச்சிருப்பா? நா தான் அவளுக்கு எல்லாமே. அவ எவ்வளவுக்கு எவ்வளவு துருதுருப்பா கலகலப்பா இருப்பாளோ அவ்வளவுக்கு அவ்வளவு சென்சிடிவ். அ அவ அழுறத கேக்கமுடிலைங்க" என்றபடி அவன் தோள் சாய்ந்தாள்.

சற்று தயக்கத்துடன் அவள் தலைகோதியவன் "புரியுது. நீ இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி சீக்கிரம் குணமாக? அப்போ தானே மதுவ இங்க கூட்டிட்டு வர முடியும்?" என கூற ஆமோதிப்பாக தலையசைத்தபடி ஓய்ந்தவளுக்கு சிறுவயது முதலான நினைவுகள் வந்தது.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
21. இனம் புரியா தேடலில் நாம்!


வசியின் தோள் சாய்ந்து படுத்திருந்தவள் தாங்கள் மதுராவை கண்டது முதல் தற்போது வரை நடந்தவற்றை கூறியதன் தாக்கத்தில் இருந்தாள். "திவி!" என்றவன் குரலில் சித்தம் பெற்றவள் சட்டென நிமிர்ந்து "ச சாரி" என்க "இட்ஸ் ஓகே" என்றவன் "எதும் யோசிக்காத திவி! ரெஸ்ட் எடு" என்றான்.

"ம்ம்" என பாவை தலையசைக்க தன் அலைப்பேசி ஒலித்ததாள், எழுந்து சென்றான். ஒரு பெருமூச்சு விட்டு கண்மூடியவளுக்கு சிறுபிள்ளை போல் தன்னிடம் பேசிய மதுராவின் நினைவு சொர்க்கமாய் விரிந்தது.


பெங்களூரில் உள்ள ஒரு சாதாரண ஆசிரமம். அன்றைய தினம் எப்போதும் போல் தான் விடிந்தது. ஆசிரமத்தில் தலைமையாளரான சுஜித் என்பவரின் மனைவி லலிதாவின் அறை கதவு விரைவாக தட்டப்பட்டது. பதறி வந்து திறந்துவரிடம் அங்கு பணிபுரியும் தீக்ஷிதா என்னும் பெண் "ம்மா! நேத்து வந்ததே ஒரு ரெண்டு வயசு குழந்தை, அந்த குழந்தைக்கு காய்ச்சல்ல உடம்பு கொதிக்குது ம்மா. குழந்தை கத்தி விரைக்குறத பாக்கவே பயமா இருக்கு" என கன்னடம் பாதி தமிழ் பாதியாக பதற சட்டென அங்கு விரைந்தார்.

குழந்தை வீரிட்டு அழுது கொண்டிருக்க பதமாக தூக்கி "அச்சோ! ரோ ரோ ரோ ஒன்னுமில்லடா" என தட்டிகொடுத்த லலிதா "டாக்டர்கு சொல்லிடீங்களா?" என்றார்.


"இதோ வரேன்னு சொன்னாங்க ம்மா" என தீக்ஷா கூற "ம்மா!" என மற்றைய பணியாளர் அழைத்தார். லலிதா அவர் புறம் திரும்ப தனக்கு இருபுறமும் இரு பெண் குழந்தைகளுடன் அவர் நின்றிருந்தார். "மூர்த்தி! யாரிது?" என லலிதா கேட்க "ம்மா. ரெண்டு நாள் முன்ன இங்க பக்கத்துல ஒரு கார் ஆக்ஸிடன்ட் ஆச்சு. அதுல இந்த பிள்ளைகளோட பெத்தவங்க நாலு பேரும் இறந்துட்டாங்க. அண்ணன் தம்பியோட பிள்ளைக. தமிழ் தான்" என்றவர் தனக்கு இடது புறம் உள்ளவளை காட்டி "இந்த புள்ளைக்கு அஞ்சு வயசு" என்றும் வலதுபுறம் உள்ள குழந்தையை காட்டி "இந்த பிள்ளைக்கு நாளாக போகுதுனு சொல்லிச்சு" என்றார்.


கையில் உள்ள குழந்தையை பாந்தமாக பிடித்தபடி சிறியவள் முன் மண்டியிட்டவர் "உன் பேரு என்னடா?" என கேட்க "திவ்யாம்பிகை" என அழகாகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறினாள். அவளின் அழுத்தத்தில் "அம்மாடி.." என்றவர் "நாலு வயசாக போகுதா?" என கேட்க "ஆமா. இன்னும் டூ மன்த்ஸ் இருக்கு" என்றாள். அதில் புன்னகைத்தவர் மூத்தவள் பக்கம் திரும்ப "எம்பேரு சிற்பிகா. இது என் பாப்பா திவ்யா" என கூறி ஏதோ பெரிய மனுஷி போல் "அம்மா அப்பாலாம் சாமி கிட்ட போகிட்டாங்களாம். அம்மா எப்பவும் நா தான் பாப்பாவ பத்திரமா பாத்துக்கனும்னு சொல்லுவாங்க" என கூறினாள்.


அதில் புன்னகைத்தவர் கையிலுள்ள குழந்தை மீண்டும் சிணுங்க "அச்சோ! ஜோ ஜோ ஜோ.." என தட்டிக் கொடுத்தார். அதில் அவரிடம் வந்த திவ்யா, எட்டிப்பார்க்க புன்னகையுடன் குழந்தையை காட்டியவர் "பாப்பாக்கு உடம்பு முடியலடா" என்றார். சந்தன நிறமுடைய குழந்தை முகம் சிவந்து வியர்த்து இருக்க அதை கண்டு "பாப்பா பேர் என்ன?" என திவ்யா கேட்டாள்.

அக்குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் அவளது தாய் உடல்நலமற்று இறந்திட அவளின் தந்தையும் குழந்தையை வளர்க்கும் பக்குவமும் வசதியும் தனக்கில்லை என கூறி ஆசிரமத்தில் விட்டுச் சென்றிருந்தார். பிறந்த ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஆசிரமம் வந்திருந்த குழந்தை இரண்டு வருடங்கள் பின்னாக முந்தைய நாள் தான் சென்னையிலிருக்கும் ஆசிரமத்தில் போதிய வசதியின்மையால் இவ்வாசிரமம் மாற்றப் பெற்றது. ஆதலால் குழந்தைக்கென்று பெயர் ஏதும் இல்லை.

"பாப்பாக்கு பெயர் வைக்கலையேடா" என லலிதா கூற சோழர்களின் கதைகளை கேட்டு வளர்ந்த திவ்யா சட்டென "மதுராந்தகன்னு வையுங்க" என கூறினாள்.


அதில் அவளை கூட்டிவந்தவர் "பிள்ளையோட அப்பா பெரிய தமிழ் டீச்சராம். அதான் நல்லா அழுத்தமா பேசுது" என கூற அவரை கண்டு புன்னகைத்துக் கொண்டு "இது பொண்ணு பாப்பாடா" என்றார்."ஓ.. அப்போ மதுராந்தகி" என கூறி "மது" என குழந்தையை கண்டு அழைக்க சட்டென தன் கோலிகுண்டு கண்களை திறந்து பார்த்த குழந்தை திருதிருவென விழித்தது. அதில் கைகளை தட்டி சிரித்த திவ்யா "ஐ! பாப்பாக்கு பேர் புடிச்சிருக்கு போல" என கூற "அப்போ அதையே வச்சிடுவோம்" என்றார். இவ்வாறு தான் இவர்களின் உறவு துவங்கியது.


மூவரும் ஆசிரமத்தில் அடிக்கும் லூட்டிக்கு ஈடு இனையே கிடையாது. மதுரா சுட்டி தனத்தின் மறு உருவமாக இருந்தாள்‌ என்றால் திவ்யா சுட்டிக்கு சுட்டியும் பொறுப்பிற்கு பொறுப்பும் என இருப்பவள். தங்கைகள் இருவரையும் தன் இமைக்குள் அடைகாத்து அன்னையாக இருந்து பொறுப்பின் மறு உருவமாக திகழ்ந்தவளே சிற்பி. அப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடியது. அன்று லலிதாவை பார்க்க ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். அவரிடம் வந்த பெண்மணி "சிற்பிகானு எதும் பொண்ணு இங்க.." என தவிப்புடன் இழுக்க "நீங்க யாரு?" என லலிதா கேட்டார்.


"நா பவித்ரா. இவர் என் கணவர் சதீஷ்" என கூறியவர் தாங்கள் வந்ததன் காரணத்தையும் கூறினார். பவித்ராவின் உடன்பிறந்த தமக்கையே சித்ரா. அதாவது நமது சிற்பிகாவின் அன்னை.

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டு வந்தவரை குடும்பம் ஏற்கவில்லை எனினும் தங்கையவளுக்கு அக்கா மீதிருந்த அதீத பாசம் அக்காவுக்கான ஏக்கத்துடனே இருந்தது. திருமணம் முடிந்து வெளியூர் சென்ற பவி சமீபமாக இரண்டு வருடங்கள் முன்பு தான் மீண்டும் பெங்களூரு திரும்பினார். தமக்கையை தேடி அழைந்தவருக்கு அவள் இறந்த செய்தியும் அவளது மகள் ஆசிரமத்தில் வளர்வதும் தெரியவரவே பதைபதைத்து ஓடி வந்துள்ளார்.


அனைத்தையும் அவர் கூறி முடிக்க லலிதா அவரை உள்ளே கூட்டிச் சென்றார். சிற்பிகாவை அழைத்தவர் அவள் தலைகோதி "சாப்டியாடா?" என கேட்க "சாப்டேன் லலி ம்மா" என்றாள். அச்சு அசல் தன் அக்காவை கொண்டு பிறந்த குழந்தையை கண்டு பொறுக்க முடியாது மண்டியிட்டு குழந்தையை கட்டிக் கொண்டு அழுதுவிட்டார், பவித்ரா.

சிற்பி ஒன்றும் புரியாமல் விழிக்க "சி சிற்பி அ அம்மாடா. உ உன் பவி ம்மா" என அவர் அழுக புரிந்தும் புரியாமல் விழித்தாள். லலிதா கூட்டிச் சென்று அச்சிறுமியிடம் விளக்க கண்ணீருடன் நின்றிருந்த பவியை கண்டாள். அவரிடம் வந்தவள் அவரையே பார்த்து "பவிம்மா" என்க அவளை வாரி அனைத்துக் கொண்டார்.


அங்கு துவங்கியது சிற்பியின் முல் பாதை. சிற்பியோ திவி மற்றும் மதுவுக்கும் சேர்த்து பெற்றோரை பெற்றுத் தந்த மகிழ்வில் இருக்க பவித்ரா திவ்யா மற்றும் மதுவை ஏற்றுக் கொள்ள இயலாது என்றிட்டார். அக்கா மீதிருந்த அலாதி பாசமே தமக்கையை தன்னுடனிருந்து பிரித்துச் சென்ற சிற்பியின் தந்தை மீதான கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்தது.

அதனாலேயே திவ்யாவை அறவே வெறுத்தார். இதில் இலவச இணைப்பாக எங்கே மதுராவை ஏற்க? சிற்பியோ "எங்க மம்மிக்கு நா பிராமஸ் பண்ணிருக்கேன். திவி பாப்பாவ நா தான் பாத்துக்கணும்" என கூறி கண்கள் கலங்க அவரை பார்த்தாள். அவருக்கு முன்பே ஒரு ஆண் குழந்தை இருக்க மேலும் ஒரு பிள்ளையை தான் வளர்க்க முடியும் என்று வாதாடினார்.


திவ்யா இன்றி சிற்பி வரமாட்டேன் என மறுக்க வேறு வழியின்றி திவ்யாவை ஏற்றார். ஆனால் அதற்கு மேல் மதுவை எல்லாம் ஏற்கும் எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. இருவரையும் கூட்டி சென்ற ஒரே வாரம் தான், மதுரா காய்ச்சலில் தவிக்க திவி அழுது ஆர்ப்பாட்டம் செய்து மதுவை பார்க்க வந்திட்டாள். திவி ஒரு பக்கம் மதுவை விட்டு வரமுடியாது என வாதிட பவி ஒருபக்கம் மதுவை ஏற்க இயலாது என வாதிட்டார்.

இருவருக்கும் இடையில் தவித்த சிற்பி அன்று கண்ணீருடன் லலிதாவின் மடியில் படுத்திருந்தாள். "லலி ம்மா நா யாருக்குனு பேச? திவியும் மதுவும் எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியும் தானே? அவங்கள விட்டுட்டு என்னால இருக்க முடியாது. அ ஆனா பவி ம்மா" என்றவள் லலிதாவை நிமிர்ந்து பார்த்து "அவங்க என்மேல உயிரே வச்சிருக்காங்க லலி ம்மா. என்னால அவங்களயும் சட்டுனு அவாய்ட் பண்ண முடியலை" என தலை குனிந்தாள்.


"என்மூலமா திவி மதுக்கும் அப்பா அம்மா கிடைப்பாங்கனு‌ நினைச்சேன் லலி ம்மா. ஆனா" என கூறி அவர் மடியில் முகம் புதைத்து அழுதாள். லலிதா மௌனமாக அவள் தலையை கோதி விட "நா இப்ப என்ன பண்ண லலி ம்மா?" என‌ சிற்பி கேட்டாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டவர் "சிற்பி உனக்கு நல்லாவே தெரியும் நம்ம ஆசிரமத்தில ஸ்கூல் (பள்ளி) படிச்சு முடிக்கும் வரை தான் இருக்க முடியும். இத நீ உன் அம்மா அப்பாவோட செலவிடு. அதுக்காக திவி மதுவை நீ விடனும்னு நா சொல்லலை. ஸ்கூல்ல அவங்கள பாக்க தானே போற? வாரயிறுதி நாட்கள்ல நீ இங்கயோ இல்ல இவங்க அங்கயோ இருக்கும்படி வச்சுகோங்க. ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் நீ அவங்க கிட்ட உன் உணர்வுகளை எடுத்து சொல்லு. உனக்கு திவியும் மதுவும் எவ்வளவு முக்கியம்னு புரியவை" என கூறி இறுதியாக "ஆனா‌ எப்பவும் இவங்கள விட்டுடாத" என கூற சற்று தெளிவு பெற்றார் போல் தலையசைத்தாள்.


பின் அவர் கூறியது போல் திவி மற்றும் மது இங்கே இருக்க, சிற்பி பவித்ரா வீட்டில் இருந்தாள். வாரயிறுதி நாட்களில் மட்டும் இருவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்து அணைத்து உறவுகளையும் தாங்கும் சுமையை தனதாக்கினாள். அப்படி சிற்பி தங்கியிருந்த பவித்ராவின் பக்கத்து வீட்டில் தான் வசி மற்றும் வம்சியின் குடும்பம் தங்கியிருந்தது.

ஆடவர்கள் மூவரும் தங்கள் முதுகலை பட்டப்படிப்பை தொடர்கையில் தான் ஒரே வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். அதுவரை வசி மற்றும் வம்சியின் குடும்பம் இங்கு தான் இருந்தது. பதினேழு வயதை தொட்டிருந்த இளைவட்டனான வம்சி கண்களில் பரிதவிப்புடன் வந்த சிற்பிகா பட்டாள். கண்டதும் காதலெல்லாம் கிடையாது. காண காண வந்த காதல் தான். அவள் அவ்வீட்டிற்கு வந்த புதிது, பவி மூலம் அவளை பற்றி தெரிந்து கொண்ட அன்னை வீட்டில் பேசியது காதில் விழுந்தது.

காற்றுப் போக்கில் வந்த செய்தி அவனையும் அறியாமல் அவன் மனதில் பதிந்தது. அவ்வப்போது சிற்பியின் அண்ணன் சந்திரனுடன் பேசுவதற்கு அவர்கள் வீடு செல்லும்போது காணும் ஒற்றை பார்வை. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதினுள் ஊடுருவிக் கொண்டிருந்தாள். ஆனால் இதில் ஆதித்தனின் காதல் முற்றிலும் வேறு மாதிரியானது. நண்பர்களுடன் படிப்பதற்கு விளையாடுவதற்கு என வந்தவன் கண்களில் அவனவள் தேவதையாய் தென்பட்டாள்‌.

அவன் கண்களுக்கு எப்போதும் மதுரா குட்டி தேவதையாகவே தெரிந்தாள்.


தன் வாழ்வில் ஆண்டவன் தனக்கென தந்த தேவதை இவளென அப்போது தெரியாத போதும் அவளது அணுவசைவையும் ரசித்தான், ஆதித்தன். தோட்டத்தில் திவி, சிற்பி மற்றும் மது விளையாடுகையில் அவளது சேட்டைகளையும் துருதுருப்பையும் ஆடவர்களின் மொத்த குடும்பமும் மாடியிலிருந்து ரசித்து மகிழும். ஆதி தன்னுணர்வுகளை காதல் என உணராத போதும் அதை ரசிக்கும் தன் ரசனையை நண்பர்களிடம் வெளிப்படுத்தியே இருந்தான்.

"அந்த மதுரா என்னவோ எனக்கு ப்ரிஷியஸ்ஸா ஃபீல் ஆகுறாடா" என்று அவன் கூறும்போதெல்லாம் வசி "ஏன்டா" என கேட்க "தெர்ல. பட் ஷி இஸ் ஸம்திங் ஸ்பெஷல்" என கூறுவான்.



இது ஒருபக்கம் இருக்க, வம்சிக்கு அப்போது தான் திவ்யாவின் நட்பு வந்தடைந்தது. ஒரு நாள் சந்திரனுடன் திவ்யா இவர்கள் வீடு வந்திருந்தாள். தின்னையில் ஆடவர்கள் பேசிக் கொண்டிருக்க சந்திரனுக்காக சற்று தள்ளி நின்றிருந்த திவ்யாவின் விழிகள் வம்சியின் கண்கள் எதையோ தேடுவதை நோட்டமிட்டது. அதுவும் அடிக்கடி திவ்யாவை தொட்டுச் செல்லும் அவன் பார்வை அவளை மேலும் உசுப்பியது.

சந்திரனின் பேச்சு முடிய புறபட்டவள் "ஒரு நிமிஷம் நீங்க போங்க. வரேன்" என்று அவனை அனுப்பியவள் மீண்டும் அவர்கள் வீடு வந்தாள். அங்கே பலகனியில் தான் ஆடவர்கள் மூவரும் இருந்தனர். அவர்களிடம் மூச்சிரைக்க வந்து நின்றவளை மூவரும் புரியாமல் பார்க்க "ஒ ஒரு நிமிஷம் உங்க கூட பேசனும்" என வம்சியை பார்த்து கூறினாள். ஆடவர்கள் அவளை குழப்பத்துடன் பார்க்க "ஏன் சந்திரனண்ணாவோட தமிழ் தான் புரியுமா?" என நக்கலாக கேட்டாள்.


அதில் சிரித்துக் கொண்ட வம்சி எழுந்து சற்று தள்ளி செல்ல "யார தேடுன?" என்றாள் அந்த எட்டாம் வகுப்பு சிறுமி. அவளது துடுக்குத் தனத்தை வெகுவாக ரசித்தவன் "உன்ன இல்ல" என்க "நா என்ன லூசா? இல்ல உனக்கு தான் அறிவில்லையா? உன் முன்னாடியே இருந்த என்ன நீ ஏன் தேட போற? நீ எனக்கு வேண்டிய யாரயோ தேடுற தானே?" என்றாள். அதில் திடுக்கிட்டவன் 'ஆத்தீ! குழந்தையா இது?' என எண்ண "சொல்லு" என்றாள்.

அதில் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டவன் "உன் அக்.." என்பதற்குள் "சிற்பிய லவ் பண்ற தானே? எனக்கு தெரியும்" என்றாள். அதில் அவளை திடுக்கிட்டு பார்த்தவன் "ஏ என்ன பாப்பா? சின்ன புள்ள மாதிரி இருந்துட்டு பேச்ச பாரு" என கூற "ஏன் சின்ன புள்ளைக்கு லவ் பத்தி தெரியாதா? சின்னவயசுலருந்து ஆதரவே இல்லாம வளர்ந்த பிள்ளைகளுக்கு தான் உண்மையான பாசத்த அடையாளம் காண தெரியும்" என பெருமையாக கூறி காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.


அவளை கண்டவன் பார்வையில் என்ன கண்டாளோ? "பிரண்ட்ஸ்?" என கை நீட்டினாள். அவளது இயல்பான மற்றும் துருதுருப்பான பேச்சு அவளை அவனுக்கு மிக நெருங்கிய உறவாக மனதில் பாவித்தது. "நா ஏன் உன் கூட பிரண்டா இருக்கனும்?" என அவன் நக்கலாக கேட்க "வேணாம்னா போ!" என நகர்ந்தவள் மீண்டும் அவனை நெருங்கி "நா சொன்னா தான் சிற்பி உன்ன கல்யாணம் பண்ணிப்பா" என கிசுகிசுப்பாக கூற "ஓய்" என்றான்.

"உண்மைய தான் சொல்றேன்" என அவள் கூற "நா லவ் பண்றேன்னு உன்கிட்ட சொன்னேனா?" என்றான். "ஓ ஆமால" என்றவள் "சரி என்கிட்ட சொல்ல வேணாம். அத நீ சிற்பி கிட்டயே சொல்லிக்கோ. என்கிட்ட ஃபிரண்ட்ஸ்னு மட்டும் சொல்லு" என கூறி கைநீட்ட புன்னகையுடன் அதை பற்றி குலுக்கியவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டி "போ" என்றான். "பை கேடி மாமா" என்றவள் சிட்டாய் பறக்க ஆடவன் "வாயாடி" என முணுமுணுத்துக் கொண்டான்.


"என்ன மச்சான்? என்னவாம்?" என ஆதித் கேலி செய்ய "வாயாடி என்ன பேச்சு பேசுறா" என கூறிக் கொண்டான். அவர்கள் பேசிக் கொண்டதை அவன் தவிர்த்ததால் நண்பர்களும் அவனை துருவாமல் பேச்சை நிருத்தினர்.

-தேடல் தொடரும் 💝

 
Last edited:

NNK34

Moderator
22. இனம் புரியா தேடலில் நாம்!


அப்படியே காலம் ஓட மது மற்றும் திவியின் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு காலம் வந்தது. அப்போது வார இறுதியில் இருவரும் சிற்பி வீடு சென்றிருந்தனர். உள்ளே வந்த பவியின் மகன் சந்திரன் "ஹாய் டா பாப்ஸ்" என்க "ஹாய் ண்ணா" என்றனர். ஆடவன் தனது அன்னையை அழைத்து தோழன் தனக்காக வழங்கிய ஒரு‌ விலையுயர்ந்த பேனாவைக் காட்ட "பாரேன்! இந்த காலத்துலயும் பேனா கிஃப்ட் பண்ணும் பிள்ளைகளும் இருக்கு" என்றார்.


ஆடவன் அலைப்பேசி ஒலித்ததில் அதை மேஜை மேல் வைத்துச் செல்ல சிற்பி, திவ்யா மற்று மதுவை கட்டியணைத்து அமர்த்தி உபசரித்துக் கொண்டிருந்தாள். அதில் சற்றே எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவர் உள்ளே செல்ல பேனாவை பார்த்துக் கொண்டிருந்த சிற்பி மாடியிலிருந்து வந்த தந்தையின் அழைப்பில் அதை திவி மடியில் போட்டுவிட்டு சென்றாள்.

அதை ஒரு பொருட்டாக கருதாத திவி மதுவுடன் கலகலத்துக் கொண்டிருக்க, அங்கே வந்த பவி அவள் மடியில் கிடக்கும் பேணாவை கண்டு 'இவ யாரு என் புள்ள பொருள தொட?' என ஆத்திரமுற்றார். அவருக்கு வசதியாக சிற்பியும் இல்லாது போக "ஏ எதுக்கு எம்புள்ள பேனாவ எடுத்து வச்சிருக்க?" என அவளிடம் பொறிந்தார்.


அப்போதே அதை கண்ட திவி "சிற்பி பாத்துட்டு இருந்தா. அப்பா கூப்பிட்டாங்கனு மடில போட்டுட்டு போய்ட்டா" என கூற "ஆமா ஆமா அப்படியே எடுத்துட்டு போக யோசிட்டு இருந்தியோ?" என கொடும் சொற்கள் உமிழ்ந்தார். அதில் ஆத்திரம் பெற்ற திவி "இங்க பாருங்க உங்க பொருள் ஒன்னும் எங்களுக்கு தேவையில்லை. எங்க சிற்பி உங்க கூட இருக்குற ஒரே காரணத்துக்காக தான் நாங்க இங்க வர்றதே" என கூற "ஆமா ஆமா. உன் சித்தப்பனால என் அக்கா வாழ்க்கை போச்சு. இப்போ உன்னால அவ பொண்ணு நிம்மதி கெடுது" என்றார்.


அவர் திவியை கடிந்து சொல்வதில் கொதித்துபோன மது "ம்மா சம்மந்தமே இல்லாம பேசாதிங்க. திவியும் சரி சிற்பியும் சரி கூட பிறக்காதது தான் குறை. ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்வளவு பாசமா இருக்காங்க" என கூற "வாடிமா வா! உன்னால தான் எல்லா பிரச்சனையும். ஏதோ போனாபோகுதுனு இவள ஏத்துகிட்டதே பெருசு. இதுல காய்ச்சல் வந்தபோல நடிச்சு எங்க பொண்ண பிரிக்க பார்த்தவ தானே நீ? ஆநாதைகளுக்குலாம் இடம் கொடுக்க என் வீடு என்ன ஆசிரமம்மா?" என்றது தான் தாமதம் "வாயமூடுங்க" என திவி கத்தியிருந்தாள்.


அப்போதே உள்ளே வந்த சந்திரன் "ம்மா ஏன் இப்படி பேசுறீங்க?" என்க "நீ சும்மா இருடா" என்றார். அவரை ரௌத்திரம் கொப்பளிக்க பார்த்வளோ "என் மது ஒன்னும் அநாதை இல்ல. அவளுக்கு நா இருக்கேன். சிற்பிகாக தான் வந்தேன். ஆனா அதுக்காக நீங்க பேசுறது எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்கமுடியாது" என கத்திவிட்டு கண்கள் கலங்க நின்ற மதுவின் கைபிடித்து வெளியே சென்றாள். அவள் பின்னே வந்த சந்திரன் "திவி அம்மா பத்தி‌ தான் தெரியும்ல? பிளீஸ்டா வாமா. சிற்பிக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா" என்றான்.


"பிளீஸ் அண்ணா. அவகிட்ட சொல்லாதிங்க. முக்கியமான விஷயம் இல்ல பிரண்டுக்கு உடம்பு முடியலை பார்க்க போகிட்டோம்னு ஏதாவது சமாளிச்சுக்கோங்க" என்றவள் "என்ன என்னவேனா சொல்லட்டும். கேட்டுப்பேன். ஏன் மதுவ கூட வேற என்ன சொல்லிருந்தாலும் இவ்வளவு பெருசா எடுத்துக்க மாட்டேன். ஆனா என் மதுவ அநாதைனு சொன்ன ஒரு இடத்துல என்னால சத்தியமா இருக்க முடியாது ண்ணா. பிளீஸ்" என கூறி சென்றாள்.


கலங்கிய முகத்துடன் ஏதோ குற்றம் செய்த பிள்ளையாக இருக்கும் மதுவை இழுத்துக் கொண்டு கோபமாக சென்ற திவ்யாவை பார்த்தபடி மாடியில் நின்றிருந்த தோழர்கள் மூவரும் கீழே வந்தனர். கலக்கத்துடன் நின்றிருந்த சந்திரனிடம் வந்து என்னவென்று கேட்க நடந்தவற்றை கூறியவன் "அம்மா இன்னும் பழைய ஆளாவே இருக்காங்கடா" என வருத்தப்பட்டு சென்றான். "மச்சி நா வந்திடுறேன்" என்ற வம்சி திவி சென்ற பாதையில் ஓட ஆதித்தும் வசியும் ஒருவரை ஒருவர் கண்டு புன்னகைத்துக் கொண்டனர்.


அதற்குள் கோபமாக ஆசிரம்த்தை நெருங்கிய திவி சட்டென நிற்க மது அவளை புரியாமல் பார்த்தாள். "நீ போ வரேன்" என திவி கூற ஏதும் கேட்காது மதுவும் சென்றுவிட்டாள். மது சென்ற பின்‌ திரும்பியவள் ஓடி வந்துகொண்டிருந்த வம்சியை சிறு புன்னகையுடன் பார்த்தாள். அவளிடம் வந்து மூச்சிரைக்க நின்றவன் "எம்மாடி! என்ன வேகம்" என்க தன் அரிசிப் பற்கள் தெரிய புன்னகைத்தாள். "ஃபீல் பண்ணாத பாப்பா" என அவன் கூற "அதென்ன வார்த்தை? எம்மது அநாதையா? அப்ப நா என்ன செத்தா போய்ட்டேன்?" என்றாள்.

"ம்ப்ச் திவி. என்ன பேச்சிது?" என வம்சி கடிந்து கொள்ள "நீயே சொல்லு. உனக்கு தெரியும் தானே? மதுனா எனக்கு எவ்வளவு உயிர்னு. அவங்க என்ன வார்த்தை பேசினாங்க தெரியுமா? மது காச்சல் வந்தபோல நடிச்சு சிற்பிய அவங்க கிட்டருந்து பிரிக்க பார்த்தாளாம். எப்படி இப்படிலாம் அவங்களால பேசமுடியுது? அவ எவ்வளவு வருத்தப்படுவா? இதுல அநாதைனு வேற" என வெறுப்புடன் பேசினாள்.


அவள் தோள் சுற்றி கரம் போட்டவன் "ரிலாக்ஸ் திவி. உன் ஃபீலிங்ஸ் புரியுது. உனக்கு தான் அவங்கள பத்தி தெரியும்ல? " என கூற ஒரு பெருமூச்சு விட்டாள். "சரி அடுத்த வாரம் உன் பர்த்டே வருதுல?" என அவன் கூற "ம்ம் ஆனா அங்க வரமாட்டேன்" என்றாள். "ஏன்?" என அவன் கேட்க "பிளீஸ் மாம்ஸ். என் மதுவ இப்படி ஒரு வார்த்தை பேசினவங்க வீட்டுக்கு இனியும் போய் என்னால நிக்க முடியாது" என்றாள். "அப்போ சிற்பி?" என அவன் கேட்க அவனை முறைத்தவள் "என்ன டெஸ்ட் பண்றியா?" என்றாள்.


"உனக்கு எப்படி உன் கூட சுத்துற ரெண்டு பேரும் முக்கியமோ அதே போல தான் எனக்கு இதுங்க ரெண்டும். இன்னும் கொஞ்ச நாள் தான். டுவல்த் முடிஞ்சதும் மூனு பேரும் தனியா போய்டுவோம்" என்றவள் "ஏ வேலை வீடுலாம் பாத்து சொல்றேன்னு சொன்னியே" என கேட்டாள். "ம்ம் பாத்துட்டேன் பாப்பா" என அவன் கூற "சரிசரி அது பத்தி இன்னொரு நாள் பேசுவோம். என் மது என்ன தேடுவா" என்றாள். "வார்த்தைக்கு வார்த்தை 'என் மது' 'என் மது' னு சொல்றியே அவளுக்கு கல்யாணம் ஆச்சுனா என்ன பண்ணுவ" என கேட்டான்.

சற்றே திகைத்தவள் சில வினாடிகளில் தன் புன்னகையை திருப்பிக் கொண்டு "எனக்கும் என் அக்காக்கும் நல்லவனுங்க கிடைச்சது போல அவளுக்கு எங்க நட்ப மதிக்கும் ஒருத்தன் கிடைப்பான்" என கூறி ஓடினாள். "ஏ என்ன சொன்ன? யாரது?" என வம்சி கத்த "முதல நீ ப்ரொபோஸ் பண்ணு. அப்பறம் நான் சொல்றேன்" எனக் கூறி சென்றாள்.


சென்றவள் முன் முகம் கடுக்க நின்ற மது "யாரது? உன் கேடி மாமாவா?" என்க 'பாத்துட்டாளா?' என்ற திகைப்பில் "ம மது?" என்றாள். "எனக்கு மட்டும் ஏன் அவங்கள காட்ட மாட்ற? என்ன விட அந்த பிரண்ட் கிட்ட என்ன அப்டி தனிமை?" என மது பொறிய 'பாக்கலை. ஹப்பா!' என பெருமூச்சு விட்டவள் "ஏ டார்லிங் நீ தான்டி எனக்கு முதல்ல" என கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்தால். இதில் இருவரும் நடந்த பிரச்சனையை தற்காலிகமாக மறந்து போயினர்.


அப்படியே அடுத்த வாரம் வந்தடைந்தது. சிற்பிகா தனது பள்ளிப்படிப்பை முடித்து ஒருவருடம் போட்டித் தேர்வுக்கு படித்து பரிட்சை எழுதி மதிப்பெண்ணுக்காக காத்துக் கொண்டிருந்த நேரமது. திவ்யாவின் பிறந்தாள் என்றபோதும் அவள் வராததால் சந்திரனை பிடிங்கி அவனுடன் ஆசிரமம் கிளம்பினாள். அவளை ஆசிரமத்தில் விட்டவன் வேலையாக சென்றிட ஆசிரமத்திற்கு அருகே இருந்த பூங்காவிலிருந்து வந்தான், வம்சி. அவனை கண்டு ஒரு சினேகப் புன்னகையுடன் அவள் நகர "சிற்பி" என அழைத்தான். பாவை அவன் புறம் திரும்ப "உன் கூட பேசனும் வாயேன் நடந்துட்டே பேசுவோம்" என்றான்‌.


"எ என்கூடயா?" என அவள் கேட்க "ம்ம். வா" என்றான். மதிய வேலை என்பதால் பூங்காவில் யாருமில்லை. அவளுடன்‌ நடந்தபடி "எக்ஸாம் எப்டி பண்ணிருக்க?" என்றான். "ம்ம் பண்ணிருக்கேன். டாக்டர் சீட் கிடைச்சா சூப்பர். இல்லைனா நர்ஸிங் பண்ணலாம்னு ப்ளான்" என இயல்பாக கூறினாள்.

அதில் மருத்துவம் கிடைக்காமல் தான் செய்த ஆர்ப்பாட்டம் நினைவு வர சிறு புன்னகையுடன் தலையை ஆட்டிக் கொண்டான். சில நிமிடங்களில் என்ன பேசுவது என புரியாமல் மௌனமாக இருந்தவன் அவள் புறம் திரும்பி "சிற்பி" என்க பாவையும் நடையை நிறுத்தினாள். "ஸீ முதல பானிக் ஆகாத. அப்பறம் நா சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லமுடியாம போய்டும்" என அவன் கூற பாவை அவனை புரியாமல் பார்த்தாள்.


"நா உன்ன லவ் பண்றேன் சிற்பி. முதல் தடவை உன்ன பாத்தப்போயே கண்டதும் காதல்னுலாம் சொல்ல மாட்டேன். பட் ஒரு சின்ன அபெக்ஷன் இருந்தது. உன்ன பத்தி என் வீட்டுல பேசும்போது சொல்லபடுற செய்தியெல்லாம் என்னையும் அறியாம என் மனசுல பதிஞ்சிருக்கு. முக்கியமான ரெண்டு உறவ பாலன்ஸ் பண்ண உன்னோட பக்குவம் எனக்கு புடிச்சது. உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ படுற கஷ்டத்துக்கு உன் கூட துணையாவும் உன் சந்தோஷத்துக்கு காரணமாகவும் இருக்கனும்னு ஒரு சின்ன ஆசை. லவ் மேரேஜவிட எனக்கு மேரேஜ் லவ்ல தான் இன்டிரஸ்ட் அதிகம். அதனால நா உன்ன பத்திரமா பத்துப்பேன்னு நம்பிக்கை இருந்தா மட்டும் வா. காதல நா குடுத்து உணர்த்துறேன்" என்றவனை தன் பவள வாய் திறந்து வியப்புடன் பார்த்தாள்.


என்ன கூற ஏது கூற என ஏதும் புரியாத நிலையில் அதிர்ந்து நின்றிருந்தாள். "நா உன்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லி நிரூபிக்க விரும்பலடா. நா உன்ன உண்மையா காதலிக்குறேன். உனக்கும் பிடிச்சா சொல்லு. நா காத்திருக்கேன். இதையெல்லாம் யோசிச்சுட்டு படிப்புல கோட்டை விட்டுடாத. நல்லா படி" என கூறியவன் "போ! உன் தங்கச்சிய தானே பாக்க வந்த?" என்றான். அவனையே விழிகள் பிதுங்க பார்த்திருந்தவள் பார்த்தது பார்த்தபடி நகர காலிடறி விழுந்தாள்… இல்லை இல்லை விழப் பார்த்தாள்.

அதற்குள் அவனின் வலிய கரம் அவள் கைபற்றி படித்து நிறுத்த அதில் மேலும் அவள் தண்டுவடம் சில்லிட்டுப் போனது. சட்டென விளகியவள் படபடக்கும் மனதுடன் அங்கிருந்து ஓடிவிட அவளிடம் தன் மனதை கூறிய திருப்தியில் புன்னகைத்துக் கொண்டான்.


திவ்யாவை பார்த்துவிட்டு ஏனோ தானோ என பேசிவிட்டு பாவை சென்றிட 'இந்த கேடி சொல்லிடுச்சு போலயே' என தோழனை சரியாக கணித்தாள். அவள் எண்ணியதை மெய் படுத்தும் விதம் அவளுடன் அதே பூங்காவில் அமர்ந்து அவன் நடந்த அனைத்தையும் கூறி "செம்ம ஃபீல்.. இன்னிக்கே போய் முதல்ல அவனுங்க கிட்ட சொல்லிடனும்" என்றவன் "ஆமா நீ யார லவ் பண்ற? என்கிட்ட சொல்லவே இல்ல? மதுக்கு தெரியுமா? வன் சைடா? டபில் சைடா?" என கேள்விகளை அடுக்கினான்.

அவனை பாவமாக பார்த்தவள் "வன் சைட் தான். ஆனா சொன்ன பிறகு திட்டமாட்டியே?" என்க "ஏன்? அப்படி யார லவ் பண்ற?" என்றான். "ஏ ஏ பையன் ரொம்ப நல்ல பையன் தான். எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டு ஸ்பெஷலிஸ்ட் பண்ணிட்டு இருக்கார்" என அவள் கூற "பார்ரா! அவர்ர்ரா?" என கேட்டு சிரித்தவன் "எங்க படிக்குறான்னு சொல்லு. வசிய விட்டு விசாரிக்க சொல்வோம்" என கூறினான்.


அவனை கண்டு மலங்க மலங்க விழித்தவள் "நா லவ் பண்றவர் கிட்டயே அவர பத்தி விசாரிக்க சொல்ல போறியா?" என கேட்க "எதே?" என்றான். மேலும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு 'ஆம்' என்பது போல் அவள் தலையாட்ட "ஏன்டி பாப்பா அவன்?" என்றான். "ஏன்‌? ஏன்? ஏன்? நீ என் அக்காவ லவ் பண்ணலாம் நா உன் அண்ணன லவ் பண்ண கூடாதா?" என அவள் கூற "ஏ ஏ கூல்! நா அப்படி சொல்லலை" என்றவன் தன் நெற்றியை நீவிக் கொண்டு "எப்போலருந்து?" என்றான்‌.

பச்சை பிள்ளைப்போல் விரல் விட்டு எண்ணியவள் "தெரிஞ்சு நாலு, தெரியாமனா அஞ்சு" என்றாள். ஏதோ ஒன்றிறன்டு மாதம் இருக்கும் என நினைத்தவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. "ஏதே!" என அதிர்ந்தவன் "அதென்னடி தெரிஞ்சு தெரியாம?" என்க "அ அது நா லவ் பண்றேன்னு தெரியாம சைட்டடிச்சுட்டு இருந்த ஒரு வர்ஷத்த சேத்தா அஞ்சு இல்லைனா நாலு" என்றாள். சற்றே கணக்கிட்டு பார்த்தவன் "ஏழாங்கிலாஸ்லருந்தா?" என்க "இல்ல இல்ல.. அப்போ வெரும் சைட்டிங் தான்" என்றாள்.

"ரொம்ப முக்கியம்" என்றவன் "ஏன் என்கிட்ட சொல்லலை" என கேட்க "அப்போ நா சின்ன புள்ளை. சொல்லி மண்டைல கொட்டி வச்சுட்டீனா? அன்ட் அது உண்மைலயே காதல் தானானு நான் உணர எனக்கும் பக்குவம் தேவை பட்டுச்சு" என்றாள். "ஆமா இப்ப ரொம்ப பெரிய புள்ள. அவன் மேல உனக்கு ஏன் லவ் வந்தது?" என கேட்க அவனை முறைத்தவள் "இதென்ன கேள்வி?" என்றாள்.


"ஏ வாயாடி பாப்பா! எந்த பாய்ண்ட்ல லவ் வந்ததுனு கேக்குறேன்" என அவன் கூற சற்று யோசித்தவள் "சரியா சொல்ல தெர்ல. ஆனா எனக்கு அவர்கிட்ட எல்லாமே புடிச்சிருக்கு. அவரோட கலகலப்பு, நல்ல குணம், எல்லாத்தையும் விட அவர அவருக்காக புடிச்சிருக்கு. என்னவோ அவர பார்த்தா ஒரு நெருக்கமான உணர்வு. உனக்கு அவருக்கும் ஒரே முகம் தான். ஆனா சத்தியமா சொல்றேன் என்னால உங்கள சரியா ஐடன்டிபை பண்ண முடியுது. ஐ ஃபீல் சம்திங் டிபரண்ட் ஆன் ஹிம்" என உணர்வு பூர்வமாக கூறினாள்.


அவளை கண்டு ஒரு பெருமூச்சு விட்டவன் "உனக்கு அவன் மேல காதல் போதை முத்திடுச்சு. ஆனா நல்லா கேட்டுக்கோ. அவன் லவ்வர் பாய் மெட்டீரியலுக்கு சூட் ஆக மாட்டான்‌. எல்லார்கிட்டயும் நல்லா பேசுற ஜோயல் டைப் தான். ஆனா அவனுக்கு காதல் மேல அவ்வளவா இன்டிரஸ்ட் கிடையாது. காதல்க்கு எதிரி கிடையாது. இன்னும் சொல்ல போனா காதலை காதலிக்குறவன் ஆனா காதலிக்க விருப்பமில்லாதவன். எனக்கு தெரிஞ்சே அவனுக்கு ரெண்டு ப்ரோபோசல் வந்திருக்கு. ரிஜக்ட் பண்றதென்ன அவன் காதலிக்குறத பத்தி யோசிச்சு கூட பாக்கலை. அப்படி ஒரு ஆளத்தான் என் மக்கு வாயாடி லவ் பண்ணி வச்சிருக்கு" என தலையில் அடித்துக் கொண்டான்.


"டப்புனு அக்ஸெப்ஷன் வாங்குறதுல என்ன கிக்கிருக்கு? கொஞ்சம் கொஞ்சி கெஞ்சி காதலிப்போமே" என அவள் கூற "அதுசரி மது குட்டிக்கு இது தெரியுமா?" என்றான். "லவ் பண்றேன்னு தெரியும். ஆனா யாரனு சொல்லலை. அவளும் கேட்டுக்கலை" என திவி கூற 'உனக்கேத்த ஜோடி தான் மச்சான்' என மனதில் ஆதித்தை நினைத்துக் கொண்டான். "ரெண்டு பேரும் என்ன படிக்க போறீங்க? சொல்லு காலேஜ் பார்ப்போம்" என அவன் கேட்க "மதுக்கு ஆட்டிஸம்‌ டீச்சர (autism teacher - மதியிருக்கத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளை வழி நடத்தும் ஆசிரியர்) ஆகனுமாம்" என்றாள். "ஏ சூப்பர் திவி. என்ன டிகிரி பண்ண போறா?" என ஆடவன் கேட்க "பி.எஸ்.சி ஹியூமன் சைக்காலஜி (மனித உளவியல்) முடிச்சிட்டு ஸ்பெஷல் எஜீகேஷன்ல பி.எட் பண்ண போறதா சொன்னா" என கூறினாள்.

"மேடம் என்ன படிக்க போறீங்க? டுவல்த் பாஸ் பண்ணிடுவியா?" என வம்சி நக்கலடிக்க "இதோடா! அதுலாம் பாஸ் பண்ணிடுவோம்" என்றவள் "நம்மலாம் கொஞ்சம் சாகசமான வேலையா தான் பாப்போம்" என்றாள்.

"ஏன் புள்ளகுட்டி எதும் கடத்த போறியா?" என அடக்கப்பட்ட புன்னகையுடன் அவன் கேட்க அவனை முறைத்துவிட்டு "நக்கலு?" என்றாள். "பின்ன என்னடி பாப்பா? என்ன படிக்க போற?" என அவன் கேட்க "ஜர்னலிஸம்" என்றாள். "ஓ! சூப்பர் சூப்பர்" என்றவன் "சரி பாப்பா. நா எல்லாம் பாத்து வைக்குறேன்" என கூறி அவளை மீண்டும் ஆசிரமத்தில் விட்டுச் சென்றான்.

அங்கு கோப முகத்துடன் நின்றிருந்த மது "என்ன மேடம் உங்க கேடி மாமாவ பாத்தாச்சா?" என கேட்க திவ்யா அவளை கண்டு பக்கென சிரித்தாள். 'மவனே நீ யாருனு தெரியலை. தெரியட்டும் சட்னி தான்' என நினைத்துக் கொண்டு வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற மதுவை சிரித்தபடி சமாதானம் செய்ய ஓடினாள்.


அப்படியே நாட்கள் ஓட சிற்பிக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்பின்றி போகவே மைசூரில் உள்ள கல்லூரியில் செவிலியருக்கான படிப்புக்கு வாய்ப்பு கிடைத்தது. மதுரா மற்றும் திவி தங்கள் சம்பாத்தியத்திற்கு ஏற்ப ஒரு சாதாரண கல்லூரியில் சேர்ந்து கொள்ள, சிற்பிகா தான் சோர்ந்து போனாள். "சிற்பி கிடைச்ச இடத்துல போய் படிடி" என மது கூற "அந்த ஊரே புதுசு மது. என்னால பார்டைம் கூட போகமுடியாது" என கூறினாள்.

"நீ எதுக்கு பார்ட்டைம் போகனும்?" என திவி கேட்க "இதென்ன கேள்வி? காலேஜ்கு பீஸ் வேணாமா? நான் முதலயே சொன்னேனே ஸ்கூல் வரை தான் ந..நா பவிம்மா கூட இருப்பேன்னு" என தயங்கியபடி கூறினாள். திவ்யாவோ "சிற்பி நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அவங்களுக்கு நீன்னா உயிருடி. என்னை அவங்களுக்கு புடிக்காதுதான். ஆனா நீ தான் அவங்களுக்கு எல்லாம். தேவையில்லாம இப்படிலாம் யோசிக்காம போடி. அவங்களே உன்ன படிக்க வைப்பாங்க" என கூற "ஏன் உனக்கு மட்டும் தான் மதுமேல பாசம் இருக்குனு நினைச்சுட்டியா?" என கண்களில் சிவந்த நீர்த்திரை மின்ன கேட்டாள்.


இருவரும் அவளை புரியாமல் பார்க்க "அன்னிக்கு பவிம்மா பேசினதுல தான் நீங்க இத்தனை நாள் இங்க வரலைன்னும் தெரியும் அவங்க என்ன பேசினாங்கனும் தெரியும். சந்திராண்ணா சொல்லிட்டாங்க" என்றாள். மதுவின் முகம் சடுதியில் கருத்திட "மதுவ அப்படி பேசினவங்க காசுல படிக்க நா விரும்பலை திவி. நீங்க மட்டும் கஷ்ட பட்டு படிக்க நா சொகுசா படிக்கனுமா? எனக்கு அவ்வளவு கல்லு மனசில்லை" என பொறிந்தாள்.

ஒரு‌ பெருமூச்சுடன் மூவரும் மௌனமாக இருக்க விதி அதன் அழகிய வேலையை செவ்வனே செய்தது. சிற்பியின் தாய் சித்ரா பேரில் இருந்த சொத்துக்களை எப்படியோ சிற்பியின் பெயருக்கு மாற்றிய திருப்தியில் வந்த பவித்ரா அந்த செக்கை அவளிடம் நீட்டினார்.


சிற்பி புரியாமல் விழிக்க "இது எங்கப்பா சித்ரா பேருல வச்சிருந்த பணம். என்னதான் நான் உன்ன படிக்க வெச்சாலும் உன்ன பெத்தவ காசுல உனக்கு எதாவது செய்யனும்னு ஒரு ஆசை இருந்தது. இதோ இந்த பணத்தை உன் பெயருக்கு மாத்திட்டேன். இது முழுக்க முழுக்க உங்க அம்மாவோடது" என்றவர் கண்கள் கலங்கி இருந்தது.

"ஆனா ஒன்னு. பெத்தது வேணும்னா என் அக்காவா இருக்கலாம். நா உன்ன என் நெஞ்சுல சுமந்தேன். நா தான் உனக்கு அம்மா சொல்லிட்டேன்" என அவர் கண்கள் பனிய கூற "அ..அம்மா" என அழுகையுடன் அவரை கட்டியணைத்துக் கொண்டாள்.


பின்பு வேறு வழியின்றி தவித்தவளை திவ்யாவும் மதுவும் தேற்றி அனுப்ப, இங்கு தாங்களும் தங்கள் பணியில் நுழைந்தனர். விடுமுறைக்கு வரும்போதெல்லாம் இனி திவியுடன் தான் இருப்பேன் என கண்டிப்பாக கூறினாலும் கிளம்பும் கடைசி நாள் பவியுடன் செலவிட்டுவிட்டே செல்வாள்.

‌ -தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
23. இனம் புரியா தேடலில் நாம்!


சிந்தனையிலிருந்து மீண்ட திவ்யா முன் வந்து நின்ற வம்சி "என்ன வாயாடி? என்ன சிந்தனை?" என்க அவனை முறைத்தவள் பக்கத்திலிருந்த தலையனையை தூக்கி அவன் மேல் எரிந்தாள்‌. அதை லாவகமாக பிடித்தவன் சிரித்தபடி அவளிடம் வர "உனக்கு எத்தனை தடவ சொல்லிருக்கேன்?" என ஆரம்பித்தவளை நிருத்தி "நீ தானடி சிற்பிய லவ் பண்றத இப்போதிக்கு சொல்ல வேணாம், நானும் ஓகே பண்ணதுகப்றம் சேந்து சொல்லிக்கலாம்னு சொன்ன?" என்றான்.

"இந்த வியாக்கியானம்லாம் நல்லா பேசுறியே இதே நான் தான் உன் பிரண்ட்ஸ்கிட்ட நீயும் நானும் பிரண்ட்ஸ்னு சொல்லிடு எதும் தப்பா நினைச்சுக்க போறாங்கனு சொல்ல சொன்னேன். அப்போ டிங்கு டிங்குனு தலையாட்டிட்டு இப்ப பாத்தியா? அவர் என்ன இத்தனை நாள் உன்னோட லவ்வரா பாத்திருக்கார். இப்ப என்மேல் எப்படி வேற எண்ணம் வரும்?" என அவள் பொங்க இப்படி ஒரு பாணியில் தான் சிந்திக்காததை எண்ணி நொந்தான்.


உடல் வலியிலும் எரிச்சலிலும் கூட வடியாது தேங்கி இருந்த அவளது விழிநீர் அனைத்திற்கும் சேர்ந்து தற்போது பொழிந்தது. "அ அவர் என்னை இத்தன நாளா உன்னோட லவ்வரா பாத்திருக்கார். மதுக்கு ட்ரீட்மெண்ட் பாத்தப்போ கூட தங்கைபோல அவளை நினைச்சிருப்பார். அதான் அவகிட்ட அப்படி ஒரு தயக்கம் இல்லை" என்றவள் வம்சியை பாவம் போல் நிமிர்ந்து பார்க்க "ஏ பாப்பா! சாரிடி. பிளீஸ் பாப்பா அழாத. பிளீஸ்" என சிறுபிள்ளை போல் கெஞ்சினான்.

தனது இடதுபுற மார்பை குத்திக் காட்டி "வலிக்குது.. என்னமோ தெரியலை என் காதல இ இழந்துடுவேனோனு பயமா இருக்கு" என்று கூறி குலுங்கி குலுங்கி அழுதவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் "பாப்பா பிளீஸ்டி. அழாதடி. அப்படிலாம் நடக்காது பாப்பா. சாரி சாரி பாப்பா. என் தப்பு தான். நிஜமா நான் அப்படி யோசிக்கலைடி" என்றான்.


சில நிமிடங்களில் கண்ணீர் ஓய்ந்தவள் சோர்ந்து போகிட "ஏ ஸ்ட்ரெஸ் பண்ணாதடி. ரொம்ப சோர்ந்து போற" என வம்சி கூறியதில் அமைதியாக அவன் தோள் சாய்ந்து உறங்கிப் போனாள். அவளை கண்டவன் ஒருபெருமூச்சுடன்‌ எழுந்து சென்றான். அந்த நாளும் இனிதே முடிய மறுநாள் காலை சலிப்புடன் எழுந்த ஆதித்தின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடிக்காத குறையில் இருந்தது.

கண்கள் ஜிவ்வென்று சிவந்திருக்க "டேய் என்னடா ஆச்சு? நைட்டு தூங்கினியா இல்லையா?" என வம்சி கேட்டான். "ம்ப்ச் ஒன்னுமில்லடா" என்றவன் எழுந்து செல்ல "மச்சி சாப்.." என வசி முடிக்கும் முன் தன் வண்டியை இயக்கிக் கொண்டு பறந்துவிட்டான்.


உள்ளே ஓடிவந்த திவா முகத்தை திருப்பி பாவமாக வைத்துக் கொண்டு பார்க்க "நீவாடி தங்கம்" என திவாவை தூக்கிக் கொண்டு "அடேய் பிள்ளைக்கு பசிக்குது சாப்பாடு தாடா" என்றான், வம்சி. அங்கு இரவெல்லாம் முழித்திருந்து தேடியும் அந்த அலைப்பேசிக் கொண்டு ஒன்றும் அறியமுடியாத கோபத்தில் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தான் ஆதித். நல்ல எண்ணம் ஒன்று தோன்றியும் அதை செயல்படுத்த தயங்கினான். 'ஆழம் தெரியாமல் காலை விடுவது நல்லதில்லை எனினும் காலை விடாமல் அதன் ஆழத்தை எங்கனம் அறிய முடியும்?' என அவன் மனம் குழம்பியது.


அந்த மருத்துவரை வைத்திருக்கும் தங்களின் இடத்திற்கு ஆதித் செல்ல, அவனுக்கு உணவு கொடுத்துவிட்டு கோவிந்தன் வெளியே வந்துகொண்டிருந்தார். அவனை பார்த்து "என்ன தம்பி? எதும் வேலையா?" என்க "இல்ல ண்ணா. அவனுக்கு சாப்பாடு கொடுத்துட்டீங்களா?" என கேட்டான். "ம்ம் கொடுத்துட்டேன் தம்பி" என அவர் கூற "சரி நீங்க போங்க (அ)ண்ணா" என்றான்.

அவரும் புறப்பட்ட உள்ளே வந்தவனை கண்ட முகேஷின் முதுகுத்தண்டு சில்லிட மீண்டும் அடிக்கப் போகின்றானோ என்ற பதட்டத்தில் நடுநடுங்கி விழித்தான். அவனிடம் வந்தவன் "உனக்கு அந்த ஹெட்ட பத்தி எதுவும் தெரியாதா? இதுவரை போன் கால்ஸ்ல பேசினதே கிடையாதா?" என கர்ஜனையாக கேட்க பயத்துடன் 'இல்லை' என தலையசைத்தான்.


ஒரு பெருமூச்சை விட்டவனின் மனம் எரிவதன் தாக்கம் அருகிலிருந்தவனையும் சென்றடைந்தது போலும். மேலும் பயத்துடன் விதிர்விதிர்த்தவனை கண்டு தன் கூர் பார்வையை வீசினான். சில நிமிடங்களில் அவ்வீட்டை விட்டு சென்றவன் அறையை திரும்பி பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையுடன் சென்றான். அந்த புன்னகையும் நிலைக்காமல் பல கவலைகள் அவனை வண்டாய் குடைந்தன. அதில் மீண்டும் முகம் இறுக்கத்தை பூசிக் கொண்டது. அதே இறுக்கத்துடன் வீடு வந்தான்.


வீட்டிற்குள் நுழைந்தவன் விடுவிடுவென மதுராவின்‌ அறைக்குள் நுழைய படுத்திருந்த பெண்ணவள் பதறி எழுந்தாள். அவளிடம் வந்தவனின் வேகத்தில் முதலில் அதிர்ந்தவள் பின் அவன் கண்களை கண்டு "என்னாச்சு? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?" என கேட்டாள். அதில் ஒரு நொடி அவனுள் இன்ப அதிர்ச்சி. தன் கண்களை பார்த்து தன் நலம் விசாரிக்குமளவு தன்னுடன் நெருங்கிவிட்டாளா என்ற இன்பம். அவளிடம் வந்தவன் தொண்டையை செருமி "சாப்டியா?" என்றான். அவளோ அவனை புரியாமல் பார்த்து "ம்ம்" என்றாள்.


"உனக்கு காலேஜ்கு வேண்டியதை வாங்க போவோமா?" என அவன் கேட்க "சன்டே போலாம்னு சொன்னீங்களே?" என தயங்கினாள். "ம்ம். இப்போ ஃப்ரீ தான். அதான் கேட்டேன்" என அவன் கூற அவளும் சரி என தலையாட்டியதால் வீட்டாரிடம் கூறிவிட்டு புறப்பட்டான். பாவை வண்டியில் அமரவும் "ஏ! உனக்கு பீரி.." என கூற வந்தவன் "அ.. அது ஐ மீன் வரமுடியுமா? இல்ல ரெஸ்ட் எடுக்கனும்னா சண்டேவே போலாம்" என்க அவன் கூறுவது புரிந்து சிறு சங்கோஜத்துடன் "இ இல்ல போலாம்" என்றாள்.


அவளுடன் 'மால்' ஒன்றிற்கு அவன் செல்ல அதை விழிவிரிய கண்டவள் "இ இல்ல.. இங்க ஏன் வந்திருக்கோம்?" என்றாள். அவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தவன் "உனக்கு வாங்க தான்" என்க "இல்ல இங்க வேணாமே" என்றாள். முதலில் புரியாமல் "ஏன்?" என்றவனுக்கு அவள் தயக்கம் கூட பதில் கூறியது போலும்! அவள் கரத்தினை அழுத்திக் கொடுத்தவன் "ஏன் மதுரா? ஒன்னும் பிரச்சனை இல்லை. வா" என்க அவனை கண்ணீருடன் பார்த்தவள் "பிளீஸ்! என்னால முடியலை. ஏற்கனவே உங்களுக்கு பாரமா இருக்குற உணர்வு கொல்லுது. என்னை புரிஞ்சுகோங்களேன்" என கெஞ்ச அவளை வருத்தத்துடன் பார்த்தான்.


'எனக்கு உரிமை இல்லயாடி?' என மனம் வெதும்பிய போதும் அவள் நிலை புரிந்தது. அவர்கள் வேலை பார்த்த கெபேவில் இதுவரை ஒரு ரூபாய் கூட இருவரும் கடன் என்று வாங்கியது கிடையாது. ஏன் பிறந்த வீடு போன்ற ஆசிரமத்தில் தாய் போல பார்த்துக் கொண்ட லலிதாவிடம் கூட தங்கள் வறுமையின் கஷ்டங்களை கூறி வருந்தியது கூட கிடையாது. அப்படி வைராக்கியமாக இருந்தவளுக்கு புது அறிமுகமாளனாக வந்தவனின் செலவில் நாட்களை கழிப்பது கத்தி மேல் நடப்பது போன்ற உணர்வை கொடுத்தது. இத்தனை நாள் உணவு உறைவிடம் கொடுத்தது கூட சகிக்க முடிந்தது. அவன் வாங்கி கொடுத்த அலைப்பேசியை சங்கடத்துடன் பயண்பாடற்று வைத்திருக்கிறாளே! இதில் பெரிய விலை உயர்ந்த பொருட்களை கொண்ட கடையில் தனக்கானவற்றை வேறொருவர் பணத்தில் வாங்குவதை அவள் வைராக்கியம் இடம் கொடுக்குமா என்ன?


அதிலும் அவளிடம் துளிர் விட்டிருக்கும் அவன் மீதான ஈர்ப்பை, அவள் மனமானது சுட்டெரித்துக் கொண்டிருக்கிறதை அவள் எப்படி விளக்குவாள்?

அன்று கண்ட கனவு இன்று வரை அவளை வாட்டுவதை அவன் எங்கனம் அறிவான்?

தனக்கு அவன் புரியும் உதவியை வைத்துக் கொண்டு காதல் கீதல் என பித்து பிடித்துவிடுமோ என அவள் மனம் துடிப்பதை அவள் எவ்வாறு கூறுவாள்?

அவனிடமிருந்து அவள் உணரும் காதல் வெரும் அக்கறையாக தான் இருக்கும் என அவளது ஒருமனம் மறுமனதை கடிந்து கொள்வதை அவள் எப்படி சொல்லுவாள்?

வார்த்தைகளற்று அவள் கலங்குவதே, அவளது நிலையை வாய்மொழியின்றி அவன் புரிந்துகொண்டான் என்பதை அவள் எப்போது அறிவாள்?


மௌனமாக திரும்பியவன் வண்டியை இயக்கி அவளும் திவியும் எப்போதும் செல்லும் கடைவீதிக்கு சென்றான். அவனது இறுகிய முகம் அவளை குற்ற உணர்வில் குறுகுறுக்கச் செய்தது. தனக்கு உதவுபவனை உதாசினம் செய்துவிட்டோமோ என வருந்தினாள்.

அவளது கலக்கத்தினை உணர்ந்தே "உன்னோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது. நீ எதுவும் யோசிக்காத மதுரா. நா இதை சும்மா செய்றதா நீ நினைக்க வேண்டாம். உன் நிலமை பழையபடி திரும்பின பிறகு நீ இதை திரும்பி குடுத்தாலும் நா மறுக்காம ஏத்துக்குறேன். அதனால பிளீஸ் இப்போ தயங்கி தயங்கி நிக்காத. உனக்கு ஏத்தபோல ரேட்லயே வாங்கிக்கோ ஆனா நல்லதா வாங்கு" என கூற அவளது மனதில் பெரும் நிம்மதி ஒன்று பரவியது.


தன்னை புரிந்துகொண்ட திருப்தியுடன் அவனை கண்டு "தாங்ஸ்" என அவள் கூற "இப்போவாவது சிரிக்கலாமே?" என்றான். அதில் மலர்ந்து சிரித்தவள் கண்டு "இது தான் கியூட். பழைய மதுராவ பார்த்த ஃபீல்" என ஆதித் கூற "என் திவிய பாக்கும்வரை பழைய மதுவோட குறும்பு வர்றது கஷ்டம் தான்" என கூறினாள். அதில் புன்னகைத்துக் கொண்டவன் "பாக்கலாம் பாக்கலாம். வா" என்க இருவரும் சென்றனர்.


அந்த சந்தையினுள்‌ தனக்கு பழக்கப்பட்ட கடை ஒன்றினுள் பாவை நுழைய "ஏ மது குட்டி. வா வா! என்னடா காலேஜ் திறந்திருக்குமே இந்த ரெண்டு வாண்டுகளையும் காணுமேனு நினைச்சேன். என்னடா கைல கட்டு?" என அந்த கடையின் உரிமையாளர் கேட்டார். மென்மையான புன்னகையுடன் "ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் தாத்தா. அதான் லீவ் எடுத்திருந்தேன். அடுத்த வாரத்திலிருந்து தான் போனும். அதான் வேண்டியதுலாம் வாங்களாம்னு வந்தேன்" என்றாள்.


"அட என்னடா பாத்து போகிருக்க கூடாதா? எங்க அந்த வாலு? அவளுக்கும் அடியா?" என அவர் கேட்க "ம்ம் ஆமா தாத்தா" என்றாள். "அச்சோ! உடம்ப பாத்துக்கோங்கடா" என்றவர் "இது யாரு? கட்டிக்க போறவரா?" என பட்டென கேட்டிட பாவை திடுக்கிட்டு போனாள். சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் 'சாரி' என சைகை செய்து "அய்யோ இல்ல தாத்தா" என்க, மனம் அவனை எந்த உறவில் அறிமுகம் செய்ய என்ற சுய அலசலில் இறங்கியது. பின் "த..த..தெரிஞ்சவங்க" என அவள் கூற அவளவன் 'இதே வசியோ வம்சியோ வந்திருந்தாள் அவள் என்ன கூறியிருப்பாள்' என எண்ணி புன்னகைத்துக் கொண்டான்.


"ஓ சாரி சாரிடா" என்றவர் "சரி வா. என்ன வேணும் பாரு" என்றார். தனக்கு வேண்டிய பேனா மற்றும் புத்தகங்களும் தேவையான உடைகளும் வாங்கிக் கொண்டு சென்றனர். அவளவன் அவளுக்காக பார்த்து பார்த்து செய்த ஒவ்வொரு செயலில் அவன் காதல் நிரம்பி வழியவே, அதை உணர்ந்தவளுக்கு உண்மைக்கும் மாயைக்கும் இடையான போராட்டத்தில் மனம் சிக்கியது. "வேற எங்கேயும் போணுமா?" என அவன் கேட்க "ம்ம்.." என்றவள் சற்று தயங்கி "எங்க வீட்டுக்கு" என்றாள்.

அவளை ஒருமுறை திரும்பி பார்த்தவன் ஏதும் கேட்காது சென்று அவளது வீட்டை அடைந்தான். வண்டியிலிருந்து இறங்கியவள் அவனை பார்க்க தானும் இறங்கியவன் "என்னடா எடுக்கனும்?" என்றான். "என்னோட சில டிரஸ்" என அவள் கூற "அதுலாம் ரொம்ப தூசியா இருக்கும்ல? நம்ம லாண்ட்ரிக்கு குடுத்துட்டு போவோமா?" என கேட்டான்.


பேசியபடி இருவரும் உள்ளே சென்றிருக்க தனக்கு வேண்டியதை எடுத்தபடி "இல்ல நானே வாஷ் பண்ணிடுவேன்" என்றாள். "ஏ லுசா நீ? ஒரு கைய வச்சுட்டு எப்படி பண்ணுவ?" என அவன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவள் "யசோம்மாவும் கல்யாணிம்மாவும் என் துணிய துவைச்சு தரேன்னு சொன்னாங்க. எனக்கு அது கொஞ்சம் சங்கடமா இருந்தது. அதனால உங்க ரூம்ல இருந்து வாஷிங் மிஷின என் ரூமுக்கு மாத்திட்டாங்க" என கூறினாள். இடையில் கைவைத்துபடி அவளை பார்த்தவன் "அடப்பாவிகளா!" என்க பாவை வாய்விட்டு.. இல்லை இல்லை மனம்விட்டு சிரித்தாள்.


வேண்டியதை எடுத்துக் கொண்டு இருவரும் செல்ல, ஒரு பனிகூல் கடைக்கு வந்தான். அவனை பாவை கேள்வியாக பார்க்க "சும்மா நாலு வார்த்த முடிஞ்சா ஒரு கப் ஐஸ்கிரீம்?" என்றான். அதில் மேலும் புன்னகைத்தவள் அவனுடன் செல்ல, சில நிமிடங்களில் அனைத்து பணியும் முடித்து புறப்பட்டனர். அவளை வீட்டில் விட்டவன் அவள் கண்களை பார்த்து "எதும் யோசிக்காம நிம்மதியா இரு. நா இருக்கேன்" என கூறி சென்றான். அவனின் துணை எதுவரையோ???

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
24. இனம் புரியா தேடலில் நாம்!


அன்றைய பொழுது அழகாய் விடிந்தது நம் நாயகிக்கு! தான் கொண்டு வந்த உடைகளில் அழகுபட தயாராகியவளுக்கு கை பெல்டினை கல்யாணி மாட்டிவிட "தாங்ஸ் ம்மா" என அவரை அணைத்துக் கொண்டாள். இந்த ஒரு வாரம் அவளை பழைய நிலைக்கு எழுபது சதவிகிதம் மீட்டிருந்தது. அடிக்கடி திவ்யாவிடம் அலைப்பேசியில் பேசியது அவள் மனதை வெகுவாக நிம்மதியடைய செய்தது.

அதே புத்துணர்வுடன் தன் இயல்புக்கு திரும்பியவள் இவ்வீட்டாருடன் வெகுவாக ஒட்டிக் கொள்ளத் துவங்கினாள். தனக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு பாவை வர, எப்போதும் போல் யசோதா அவளுக்கு உணவூட்டினார்.


அப்போதே ஆதித் வர, "வாடா கண்ணா" என்றவர் மீண்டும் மருமகளுக்கு உணவூட்டுவதை தொடர்ந்தார். அதை ரசித்தபோதும் வேண்டுமென்றே அவனவளை வம்பிழுக்க ஆசை கொண்டு "இப்பல்லாம் எனக்கு கூட நீங்க ஊட்டி விடுறதில்ல" என்க பாவை சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"அவனுக்கு இப்போ‌ உன்ன வம்பிழுக்கனும். அதான் வாயக் கிழருறான். நீ சாப்பிடுடா" என யசோ கூற யாவரும் பக்கென சிரித்தனர். அதில் தானும் புன்னகைத்தவன் தானும் உண்டு முடிய, அவளுக்கான‌ மதிய உணவை கொடுத்தவர் "பாத்து போடா" என்றார்‌. நடப்பவை அனைத்தும் கனவு போல் இருந்தது அவளுக்கு.


வீட்டில் அத்தனை உறவுகளும் இருக்க, பாசத்துடன் உணவூட்டி மதிய உணவு கட்டிக் கொடுத்து‌ வழியனுப்ப வேண்டும் என திவியும் மதுவும் கனா காணாத நாளில்லை. அதை இன்று அனுபவிக்கவே சற்றே இன்பமாக கலங்கி நின்றாள். அந்த டப்பாவிலிருந்து பார்வையை கல்யாணி மற்றும் யசோ புறம் திருப்பியவள் மனம் நிறைந்த புன்னகையுடன் அவர்களை கட்டியணைத்து "பை மா" என விடைபெற்றாள். அவளை புன்னகையுடன் கண்டவன்‌ தன் வண்டியில் அவளை ஏற்றிக்கொண்டு அவள் கல்லூரி சென்றான்.


ஆடவன் ஏதோ கூற வாய்திறக்க "ஓடாம குதிக்காம நடக்கனும், ஒழுங்கா சாப்பிடனும், மாத்திரை போட்டுக்கணும், கைய ஆட்டக்கூடாது, எதும் தேவைனா ப்ரெண்ட்ஸ உதவிக்கு கூப்பிட்டுக்கனும். அவ்ளோ தானே? பலதடவ சொல்லிட்டீங்க" என மது கூறினாள்.

அதில் சிரித்துக் கொண்டவன் "எத்தனை தடவ சொன்னாலும் என் அருந்த வாலு கேட்குமானு தெரிலயே?" என்க 'என்' என்ற சொல்லை 'அருந்த வால்' என்ற சொல் முந்திக் கொண்டது போலும்! "யாரு? நா அருந்த வாலா?" என்றாள். அதில் மேலும் சிரித்துக் கொண்டவன் கல்லூரியை ‌அடைந்தான். பாவை வண்டியிலிருந்து இறங்க "பாத்து போடா" என்றுவிட்டு சென்றான்.


இங்கு உள்ளே வந்தவளை நட்பு வட்டம் சூழ்ந்துக் கொள்ள அங்கு மனதில் குழப்பத்துடன் அமர்ந்திருந்த திவ்யாவின் முகத்தில் யோசனை ரேகைகள்! அவளுக்கான மாத்திரைகளுடன் வந்த தன் வருகை கூட உணராது இருந்தவளை கண்ட வசி "திவ்யா" என்க சட்டென திடுக்கிட்டு நிலை பெற்றாள். "ஏ கூல்! நா தான்" என அவன் கூற 'ம்ம்' என்பதுபோல் தலையசைத்தவள் அவனிடம் ஏதோ கேட்கவந்து பின் தயங்கி திரும்பிக் கொண்டாள்.

அவளிடம் வந்தவன் "திவ்யா ரெஸ்ட் ரூம் போகனுமா?" என கேட்க 'இல்லை' என்பதுபோல் தலையாட்டினாள். "என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என அவளருகே அவன் அமர சற்று சங்கடத்துடன் தலைகுனிந்தாள். "என்னாச்சு ம்மா?" என அவன் கேட்க "ந நா எந்த நிலமைல இங்க வந்தேன்?" என தலைகுனிந்தபடி கேட்டாள்.


"ஏன் என்னாச்சு? இப்ப எதுக்கு அதுலாம் உனக்கு?" என அவன் கேட்க கூனி குறுகிய போன்ற உணர்வில் நெளிந்தாள். "திவ்யா?" என அவன் அவள் தோள் தொட அவனை நீர் திரை மின்னும் கண்களோடு நிமிர்ந்து பார்த்தவள் "பிளீஸ்!" என்றாள்.

அதில் தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை விட்டவன் "வ வம்சி தான் தூக்கிட்டு வந்தான். மயக்க நிலைல கீரளோடவும், ட்..ட்ரெஸ்.." என்றவன் அதற்கு மேல் கூற முடியாது விழிக்க பாவையின் உடல் குலுங்கியது. "ஏ திவ்யா" என அவன் அவள் தோள் பற்ற "எ..எனக்கு எ எதும்?" என்றவள் கேள்வியை முடிக்க முடியாமல் முகம் சுருங்கி குனிந்துக் கொண்டாள்.


"ஏ அப்படிலாம் ஏதும் ஆகலைடா. ஏன் என்னென்னமோ யோசிக்குற?" என அவன் கூற "நிஜமா தானே?" என்றாள். "நிஜமா தான்டா" என அவன் கூற "எ எனக்கு எதேதோ.." என நெற்றியில் கைவைத்து யோசித்தவள் "என்னென்மோ தெளிவில்லாம நினைவுல வந்து போகுது. ய..யாரோ ஊசியோட வர்ற மாதிரி சிலசமயமும், எ எங்கெங்கயோ கக்..கை வைக்குற போல" என கூறமுடியாத தவிப்புடன் தேம்பி தேம்பி அழுதாள்.

அரவணைத்த கரங்கள் அவனையும் அறியாது அணைத்துக் கொள்ள, அருதலாக தட்டிக் கொடுத்தான். "ரொம்ப யோசிச்சா தலை வலிக்குது. அ..ஆனா யோசிக்காம இருக்க முடியலை" என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து "ப்ராமிஸா அப்.. அப்படி எதுவும் நடக்கலை தானே?" என கேட்டு வீரிட்டு அழுதாள்.


அழுகை கூடுவதில் அணைப்பு இறுக, "அப்படிலாம் ஒன்னும் இல்லைடா. நீ எதும் யோசிக்காத திவி ம்மா. நா தான் சொல்றேன்ல? எதுவும் நடக்கலைடா" என்றான். மனதால் தன்னவனாக நினைத்தவனிடமே கேட்கக்கூடாத கேள்விகளை கேட்ட அருவருப்பில் மேலும் அவள் தேம்பி அழ, வீடு வந்திருந்த வம்சி அவள் அழும் சத்தத்தில் பதறிக் கொண்டு வந்தான். உள்ளே வந்தவன் இருவரையும் வாய் பிளந்தபடி பார்க்க அவனது அறவத்தில் சட்டென இருவரும் விலகினர். பாவையின் முகம் குப்பென்று சூடாகி சிவந்திட, முகத்தை வேறு புறம் திருப்பி தன் சிகையினை காது மடலில் சொருகிக்கொண்டு கண்ணீரை துடைத்தாள்.


"எ..ஏ வம்சி. வாடா" என்றபடி எழுந்த வசிக்கு தெய்வமாக வழி கொடுத்தபடி அலைப்பேசி ஒலிக்க, 'ஹப்பாடா!' என்றபடி அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். பாவையின் அருகே வந்தமர்ந்த வம்சி குரலை செரும, வடியும் கண்ணீரை துடைத்தபடியே அவனுக்கு முகம் காட்டாது அமர்ந்திருந்தாள்.

"ஓய்! என்னாச்சு?" என்றவன் அவள் கரம் பற்றி தன் புறம் திருப்ப "ஸ்ஸ்.." என வலியில் முகம் சுருங்கினாள். "ஏ சாரி சாரிடா" என அவன் கூற அவனை தாவி அணைத்துக் கொண்டாள். "ஏன் மாமா எனக்கு இப்படி ஒரு நிலமை?" என அவள் கதற பதறிப்போனவன் "ஏ பாப்பா! என்னாச்சு?" என்றான்.


தன் நினைவில் எழும் பிம்பங்களில் துவங்கி வசியிடம் தற்போது பேசியது வரை கூறியவள் "ந நா லவ் பண்றவர் கிட்டயே இப்படிலாம் கேக்குறத நினைச்சாலே அருவருப்பா இருக்கு மாமா" என அழுதாள். "ஏ பாப்பா ஏன்டி இப்படிலாம் யோசிக்குற?" என அவன் கேட்க "என்னால முடியல மாமா. உடம்பு வலியவிட இந்த மனசு கொடுக்குற வலி ரொம்ப படுத்துது.
எல்லாமே என்ன விட்டு போற போல இருக்கு. ஏதேதோ கனவுலாம் வருது" என கதறி அழுதாள். "திவிமா! எல்லாம் நம்ம யோசிக்குறது தான். அதான் வசி சொல்றான்ல? எதுவும் நடக்கலைடா" என வம்சி கூற "அப்போ என் உணர்வு சொல்றத பொய்னு சொல்றியா? எ..எனக்கு யாரோ என்மேல கை வச்சபோல ஃபீல் குடுக்குது. அ..அது அப்போ என்னது?" என கலங்கினாள்.


அவளை கலக்கத்துடன் பார்த்தவன் "ஏ பாப்பா உனக்கு ஆப்ரேஷன் நடந்தது தானே? உனக்கு ட்ரீட்மெண்ட் பண்ண நர்ஸ் தொட்டதா கூட இருக்கலாமே?" என கூற அவள் முகம் யோசனையில் சுருங்கியது. "நீ வீணா மனச போட்டு குழப்பிக்காதடி" என அவன் கூற "நா எங்க இருந்தேன் எப்படி தப்பிச்சேன்னு எதுவுமே நினைவு வர மாட்டேங்குது. ரொம்ப யோசிச்சா தலை வின் வின்னு பிளக்குது" என்றாள்.

அவள் தலையை கோதியவன் "நீ கண்டதையும் யோசிக்காத. ஆப்ரேஷன் பண்ணபட்ட மண்டை ரொம்ப யோசிச்சா சூடாகிடும். அப்பறம் வின் வின் ரன் ரன்னு எல்லா 'ன்'னும் வரும்" என்க சோர்வாக அவன் தோள் சாய்ந்தாள்‌.


சோகமே உருவாக இருப்பவளின் நிலை அவளை விட அவனை வெகுவாக வாட்ட, அவள் நிலை மாற்றும் பொருட்டாக குறும்பு புன்னகையுடன் "ஆனாலும் சந்ததி சாக்குல ஒரு கட்டிபிட வைத்தியம் வாங்கிட்டல என் ப்ரதர் கிட்ட?" என்றான். சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் "ச்சி! பொண்ணு கிட்ட கேக்குற கேள்வியா இது?" என அவள் கூற "அப்பன் முன்னாடி பண்ற காரியமா அது?" என்றான்.

அவனை ஏற இறங்க பார்த்தவள்‌ "எங்கக்காவ நீ கட்டிபுடிச்சதே இல்ல?" என்க அதில் விழி விரிய அவளை பார்த்தவன் 'ம்க்கும்' என குரலை செறுமினான். "சொல்ல முடியாதுடா மாமா. அது பச்சை புள்ள. நீ இழுத்து வச்சு வாய கடிச்சாலும் கடிச்சிருப்ப" என அவள் கூற "ஏய்!" என்றான். அதில் வாய்விட்டு சிரித்தவள் "என்ன சரியா சொல்லிட்டேனா?" என்க "வாயாடி வாயாடி" என அவள் வாய்மீதே ரெண்டு போட்டான்.


"ஆ! வலிக்குது கேடி" என அவள் கத்த "ஸ்ஸ்! சாரிடி. மறந்து மறந்து போகுது" என்றான். "மூஞ்சி பூரம் வீங்கி கிடக்கு இத பாத்துமா உனக்கு மறக்குது?" என சோகமாக அவள் கேட்க "இது‌ கண்ணில் பட்ட அளவு கருத்துல பதியலையே!" என்றான். அதில் மென்மையாக புன்னகைத்தவள் "பேசி பேசி தானே என் அக்காவ கவுத்த?" என கேட்க "ச்ச ச்ச! குடுத்து குடுத்து கவுத்தேன்" என்றான். "என்னத்த?" என அவள் கேட்க "கவித கவித" என்றான். "ஏ கரெக்ட் பண்ணிட்டனு சொன்ன, ஆனா எப்படினே சொல்லலையே நீ" என அவள் கேட்க அழகிய சிரிப்புடன் கூறினான்.


சிற்பிகா மைசூர் தனிவிடுதியிலிருந்து கல்லூரி புறப்பட்டுக் கொண்டிருந்த காலை வேலை! தனது பையை தூக்கிக் கொண்டு பாவை வெளியே வர "சிற்பி உனக்கு கொரியர் வந்திருக்கு. கீழ நிக்குறாங்க" என ஒரு பெண் கூறிச் சென்றாள். 'நமக்கா? யாரு? இந்த அராத்துகளா?' என எண்ணியபடி வந்தவளிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அந்த சின்னஞ்சிறு பெட்டியை அவளிடம் கொடுத்துச் சென்றான்.

அதை புன்னகையும் ஆர்வமுமாக பார்த்தவள் மெல்ல பரிக்க, அழகிய நீல நிற குடை ஜிமிக்கி இருந்தது. அதை ஆர்வத்துடன் எடுத்து ஆட்டிப்பார்த்தவள் "கியூட்" என கூறிக்கொண்டு டப்பாவை பார்க்க ஒரு சிறு அட்டை இருந்தது.


அதிலே "கடலின் அடியாழம் சென்று (சிற்பி) தேடுவோருக்கு கொடுத்த சிரமத்தை, அவ்விறைவன் எனக்கு கொடுக்காததே என் காதலின் விந்தை!" என்றிருந்தது. அதை கண்டவுடன் வம்சியின் அழகிய முறுவலிக்கும் முகம் அவள் கண்முன் வந்துபோக பாவையின் முதுகு தண்டு சில்லிட்டது.

வெளியே வந்த சிற்பி சுற்றிமுற்றி பார்க்க சற்று தொலைவில் தன் வண்டியில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். அவனை கண்டு மேலும் அதிர்ந்தவள், தன்னை நிலைப்படுத்தி பயத்தை விழுங்கிக் கொண்டு அந்த பெட்டியினை திட்ண்டில் வைத்துவிட்டு அவனை முறைத்து விட்டு ஓடினாள்.


அதில் ஒரு நொடி மனம் சுனங்கியவன் மீண்டும் புன்னகைத்துக் கொண்டு அந்த பெட்டியை எடுத்துச் சென்றான். ஆனால் இதுவே வாடிக்கையானது! வாரம் ஒரு குட்டி பரிசுடன் கூடிய கவிதை அவளை வந்தடையும்.


'கடலினை ரசிக்கும் மனமோ அதன் ஆழத்திலிருக்கும் சிற்பிகளை தேடித் துடிக்கிறது,

உன்னைவிட என்னவள் அழகி என வாதிட!' என்ற கவியுடன் வந்த, சிற்பி டாலர் வைத்த அழகிய கழுத்துச் சங்கிலியை கண்டவள் முன்பு போலவே அதை திண்டில் வைத்துவிட்டு சென்றாள்.


'காணி நிலம் உள்ளது,

அதில் தென்னை ரெண்டும் உள்ளது,

பாடி மகிழும் பைங்கிளி பத்து பதினைந்துள்ளது.

தோயா அழுதுள்ளது,

தேயா நிலவுள்ளது,

பத்தினி அவளிடமோ என்ன பதில் உள்ளது?' என்ற கவிதையுடன் வெள்ளை நிற கூலாங் கல்லில் அவளது பெயர் ஒரு பக்கம் அவனது பெயர் ஒரு பக்கம் என பொரிக்கப்பட்டிருந்தது. அத்தோ பாவம்! அதே நிலை தான் அந்த கல்லுக்கும்.


இப்படியே ஆறு மாத காலமாக அழைய விட்டாள். அழைய விட்டால் என்பதை விட அவளை புரியாமல் அவன் அழைந்தான் என தான் கூறவேண்டும்! அன்று அவளுக்கு வாங்கி குவிந்திருந்த பரிசுகள் புடை சூழ அமர்ந்திருந்தவன், மென் புன்னகையுடன் அவற்றை வருடினான். கைபோன போக்கில் அவற்றை திறந்தவன்‌ அப்போதே அதை கவணித்தான். அதில் அவன் அவளுக்கு வாங்கிய சிப்பியில் செய்த குட்டி பேனா இருந்தது, ஆனால் அவன் வைத்திருந்த கடிதம் இல்லை. அதை புருவம் சுருக்கியபடி பார்த்தவனுக்கு ஏதோ பொறிதட்ட அனைத்து பரிசுகளையும் திறந்த பார்த்தான்.


ஒருசிலதை தவிற அனைத்திலும் பரிசு மட்டுமே இருந்தன, கவிதைகள் யாவும் அவள் வசம் இருந்தது! அதில் இன்பமாக அதிர்ந்தவன்‌ அடுத்த பரிசை தயாராக்கினான். அன்று விடுமுறை! அவன் பரிசு அனுப்புவான் என ஆவளோடு அலைப்பேசியை நோண்டுவது போல் பாவை வெளி வராண்டாவில் இருக்க, அவள் எண்ணப்படி பரிசு வந்தது. ஆர்வத்துடன் பாவை அதை திறக்க பரிசில்லை! காகிதம் மட்டுமே! அதிலும் கவிதை இல்லை அவனது அலைப்பேசி எண் மட்டுமே இருந்தது. சரியாக அவள் அலைப்பேசி ஒலி எழுப்ப அதை திறந்து பார்த்தாள்.


'கன்னியவளிடம் காதல் உள்ளது,

அதை காளையவன் கண்டுகொண்டது!' என்ற குறுஞ்செய்தி வந்திருந்தது. அதை கண்டு நாணப் புன்னகையுடன் ‌"காளையவனுக்கு மூளை உள்ளது,

அதை கன்னியவள்‌ கண்டுகொண்டது" என அனுப்பியிருந்தாள்.


ஆடவன் கூறி முடிக்க "உனக்குள்ள இப்படி ஒரு‌ ரொமான்டிக் வம்சி இருப்பான்னு தெரியாம போச்சே?" என்ற திவி "உன்ற பிரதர்‌ எப்படி?" என கேட்க அதில் வாய்விட்டு சிரித்தவன் "அவனுக்குள்ளயும் இருக்கலாம். ஆனா கொண்டு வர்றது உன் சாமர்த்தியம்" என்றான். அதில் பெருமூச்சு ஒன்று விட்டவள் "ரொம்ப கஸ்டம்" என்க உள்ளே வந்த வசி "மச்சி நா போய் மதுவ காலேஜ்லருந்து கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன்" என கூறினான். "ஓ ஆமால! குட்டி இன்னிக்கு காலேஜ் போனாலோ?" என வம்சி கூற "ம்ம் ஆமாடா" என்றான்.


"சரி நா விட்டுட்டு வரேன்" என்ற வசி "உன் மதுவ பத்திரமா விட்டுடுவேன்" என திவியிடம் கூறி புறப்பட்டான். ஆனால் எந்த நேரத்தில் கூறினானோ அதை செய்ய முடியாத கையாலாகாத நிலையில் தவிப்புடன் ஆதித்தனுக்கு அழைத்தான்!

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
25. இனம் புரியா தேடலில் நாம்!


பதைபதைப்புடன் கைப்பேசியை எடுத்த வசி, ஆதித்திற்கு அழைத்தான். அழைப்பு ஏற்கப்பட்டதும் ஆதித் பேச இடமின்றி "மச்சான், ந..நம்ம மதுவ யாரோ கடத்திட்டு போகிட்டாங்கடா! ந..நா பாலோ பண்ணி போனேன். ஆனா வண்டி வேகமா போகிடுச்சுடா" என வசி கூற அதிர்வில் விரிந்த கண்களுடன் "ஓ ஷிட்" என தரையில் ஓங்கி எத்திக் கொண்டான். "அ..ஆதி" என வசி அழைக்க "வசி பதறாத. நீ வீட்டுக்கு போ. நா பாத்துக்குறேன். திவிகிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்காதடா. பயந்துடபோறா" என்றான். "ம்ம்டா" என வசி கூற "திவிய பாத்துக்கோங்க" என்றவன் இணைப்பை துண்டித்தான்.


அங்கு அடிபட்ட கையை விடுத்து மற்றைய கைமட்டும் பின்னோக்கி கொண்டு சென்று உடலோடு கட்டப்பட்டு வாயும் கட்டப்பட்ட நிலையில் கண்கள் கலங்கி உடல் நடுங்க வண்டியின் கதவோரம் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள், மதுராந்தகி. மனம் படபடக்க, மயங்கி விடுவோமோ என அஞ்சும் நிலையில் பல்லை கடித்துக் கொண்டு விழித்தாள். அவளை கண்ட அந்த தடியன் "ஏ என்ன முழிக்குற?" என அதட்ட உடல் தூக்கிவாரி போட அதிர்ந்து 'ஒன்றுமில்லை' என்பது போல் தலையசைத்தாள். மனம் பயத்தில் துடிதுடிக்க அவளவனிடம் தஞ்சமடைந்திட மாட்டோமா என ஏங்கி தவித்தது!


சில நிமிடங்களில் வண்டியும் நின்றிட, நடுங்கியபடி அமர்ந்திருந்தவளை இழுத்துக் கொண்டு அந்த உயர்ந்த கட்டிடத்தின் பின்வாசல் வழி இழுத்துச் செல்லப்பட்டாள். உள்ளே செல்லவும் அது மருத்துவமனை என பாவைக்கு உரைக்க, உடல் மேலும் நடுங்கத் துவங்கியது! தன்னை சுற்றி நடப்பதை கண்டு குழப்பத்துடன் கூடிய பீதியில் இருந்தவள் ஒரு அறையினுள், இழுத்துச் செல்லப் பட்டாள். அங்கு ஓர் படுக்கையில் பாவையை படுக்கவைத்து அந்த தடியர்கள் கட்டிப்போட, வாய் மூடியநிலையில் கத்த முடியாமல் "ம்ம் ம்ம்" என ஒலி எழுப்பினாள்.


"ஷ்ஷ்" என வாயில் விரல் வைத்து கூறிய ஒருவன், செல்ல சில நிமிடங்களில் மூவர் அங்கு வந்தனர். மூவரும் அம்மருத்துவமனையின் செவிலியராக இருக்க வேண்டும். அவர்களது உடை அவ்வாறு கூறியது. பாவை அவர்களை பீதியுடன் பார்க்க, ஏதோ‌ ஒரு ஊசியை எடுத்து வந்தனர். ஒருவன் அவள் மேல் சட்டையினை உயர்த்த "ம்ம் ம்ம்" என்றாள். அவள் கண்களில் ஊற்று பெருகி ஓடியது. மற்ற இரு பெண்கள் அவளை மேலும் இறுக பிடித்துக் கொள்ள, அவ்வூசியை அவளுக்கு செலுத்தினான். அதன் வலியில் "ம்ம்.." என ஒலி எழுப்ப, அவையாவும் கண்டுகொள்ளாது வந்த பணி முடிந்தது என்பது போல் அவன் மற்ற இருவரையும் பார்த்து தலையசைத்தான்.


மூவரும் வெளியேறிட அவளோ 'யார் இவர்கள்? என்ன ஊசி போட்டார்களோ தெரியவில்லையே?' என்ற பீதியில் கண்கள் கலங்கினாள். சில நிமிடங்களில் அவளால் தன் உடலில் எந்த பாகங்களையும் அசைக்க முடியவில்லை! அதில் அதிர்ச்சி எழவே, சில நிமிடங்களில் கண்களை கூட திறக்கமுடியாமல் போனது. பின் யாரோ‌ வந்த அவள் கட்டுக்களை அவிழ்த்து அவளை வேறொரு ஸ்ரெட்சரில் மாற்றினர். அவளால் எதையும் பார்க்க முடியவில்லை தான். ஆனால் அனைத்தையும் கேட்க முடிந்தது.


'எங்க கூட்டிட்டு போறாங்க? என்ன ஊசி போட்டாங்க? போதை ஊசியா இருக்குமோ? ஆனா ஏன் கை கால் எதையும் அசைக்க முடியல?' என பலவகையான கேள்விகள் அவளை வண்டாய் குடைந்தது. சற்றுமுன் பயத்திலிருந்து சமனடைய நடுங்கவும் கலங்கவுமாவது முடிந்தது. தற்போது அவை ஏதும் முடியாமல் மனதிற்குள்ளேயே புலம்பினாள்.


சில நிமிடங்களில் ஏதோ வண்டியில் மாற்றினர் போலும். அப்படி தான் தெரிகிறது. மதுவிற்கு வெளியில் கேட்கும் வாகனங்களின் சத்தமும் வண்டியில் பயணிக்கும் உணர்வும் அதை மேலும் உறுதி படுத்தியது. 'எங்க கூட்டிட்டு போறாங்க? அவர் வந்து எ..என்ன காப்பாத்துவாரா? ஒ..ஒருவேல எதும் ஆர்கன் திருடும் கும்பலா? இ..இல்ல வி விபச்சார விடுதி? ஐய்யோ கடவுளே!' என மனம் போன போக்கில் அவள் சிந்தனை அல்லாடியது.


அப்படியே சிலமணிநேரங்களை சர்வ சாதாரணமாக விழுங்கிக் கொண்ட பயணம் நிறைவு பெற்றார்போல் வண்டி நின்றது. பின் சில நிமிடங்களில் அவள் எங்கோ கொண்டு செல்ல பட்டாள். ஸ்ரெட்சரிலிருந்து தூக்கப்பட்டவள் வேறு படுக்கைக்கு மாற்றப்பட்டாள். பின் சில நிமிடங்கள் எந்த சத்தமும் இல்லை. அவள் மனம் ஏகபோக வேகத்திற்கு துடித்தது. அமைதியான சூழலை ஏதோ ஒரு காலடி சத்தம் மிதித்து தள்ளியது. அதில் அவள் நேஞ்சுக் கூட்டு தடதடக்க, காலடி சத்தம் அவளை நெருங்கி வந்தது.


அந்த காலடி சத்தத்திற்கு உறியவரோ அவள் கைநாடியை பிடித்து பார்த்தார். "வெல் ஃப்ரெஷ்(fresh) பீஸ்" என்ற வன்மம் நிறைந்த குரலில் பாவையின் உள்ளம் உறைந்து உடைவதை போன்று உணர்ந்தது. 'ஃப்ரெஷ் பீஸ்னா? அ..அப்போ இது வி விபச்சார விடுதியா? இங்கிருந்து எப்படி தப்பிக்க?' என்று எண்ணியவள் கண்முன் வந்து கண்சிமிட்டி சிரித்தான் அவளவன். 'எ எங்கங்க இருக்கீங்க? பிளீஸ் வந்திடுங்க.. பயமா இருக்கு' என அவள் உள்ளம் அவளவனின் அரவணைப்புக்காக ஏங்கியது.


அவன் மார்பில் தஞ்சம் புகுந்து ஓவென அழுது தீர்த்திட மாட்டோமா என ஏங்கியது. அப்படியே சில மணிநேரம் கடந்தன. மெல்ல தன் கண்களில் உணர்வு பெற்றார் போல் உணர்ந்தாள். கண்களை திறக்க முயற்சிக்க, அது பலனை கொடுத்தது. ஆனால் சற்று மங்கலாகவே தெறிந்தது. கைகளை அசைக்க முயற்சிக்க, அது முடியவில்லை! கண்களை மூடி மூடி திறந்து பார்வையை தெளிவு படுத்த பாவை வெகுவாக போறாடினாள்.


அது சிலநிமிடங்களை சன்மானமாக பெற்றுக் கொண்டு பார்வையை தந்தது. கண்களை சுழல விட்டு அவ்வறையை நோட்டம் விட்டாள். சுற்றி அவ்வறை முழுதும் அலமாரிகளாக இருந்தன. அலமாரிகள் முழுதும் வண்ண வண்ண குடுவைகள். அதை கண்டவளுக்கு இது விபச்சார விடுதி போன்று இல்லையே என மகிழ்வதா இல்லை புரியாத இடமாக உள்ளதே என வருந்துவதா என்ற நிலை. பின் மெல்ல மெல்ல அவளது உடல் செயல்பாட்டை அடையத் துவங்கியது. கைகளையும் கால்களையும் அசைக்க முடியவே, எழுந்து அமர்ந்தாள்.


கொஞ்ச கொஞ்சமாக எழுந்து நிற்க, நடக்க என முழுதுமாக பழைய நிலையை அவள் அடையவே ஒருமணி நேரமானது. பொறுமையாக சத்தமின்றி ஒவ்வொறு அடியாக வைத்து அவ்வறையை பார்வையிட்டாள். அந்த குடுவைகளில் யாவும் உள்ளிருக்கும் திரவங்களின் பெயர்கள் எழுதி ஒட்டப்பட்டது. அதை பார்வையிட்டவளை அந்த ஒரு அலமாரி அதிரவே வைத்திட்டது. அந்த திரவத்தினை உச்சரிக்கையிலேயே அவள் முதுகுத் தண்டு சில்லிட்டது.


ஒரு குடுவையில் 'scorpion venom' என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு லிட்டர் தேள்விஷமானது கிட்டதட்ட பத்து மில்லியன் டாலர் மதிப்புடையது. இவ்விஷத்தினை கொண்டு வலிநிவாரணி தயாரிக்கும் ஆராய்ச்சி ஒன்று இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடப்பதாக என்றோ படித்த கட்டுரை மதுராந்தகியின் நினைவில் உதித்து உடலை சிலிர்க்கச் செய்தது.


அடுத்த குடுவையிலோ 'cyanide' என்று எழுதப்பட்டிருந்தது. உலகிலியே மிக கொடிய விஷமாக கருதப்படும் ஒன்றே சையணைடு. இதை உட்கொள்போர் இதன் ருசியை உணரும் முன்னறே இறந்து விடுவர். அந்த அளவு வேகமாக உயிரை உறியும் தன்மை கொண்ட விஷமிது. இத்தனை விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்போதும் இதற்கு மருத்துவத் துறையில் பெரும் பயன்பாடுகள் இருப்பது தான் விந்தையே!


அடுத்த குடுவையில் 'tetrodotoxin' என்றிருந்தது. இது நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ் என்ற கடல்வாழ் உயிரினமிடமிருந்து பெறப்படும் ஒரு கொடிய விஷம். இதை உட்கொள்ளும் மனிதனின் நரம்பு மண்டலத்தில் புகுந்து பக்கவாதம் வரவழைக்கும் தன்மை கொண்டது. இதனை கொண்டு புற்றுநோயாலிகளுக்கு வலிநிவாரணி தயாரிக்கும் ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது.


இதே போல் அந்த வரிசை முழுவதும் கொடிய விஷங்களே இருந்தன. அவற்றை காணக் காண பாவையின் தண்டுவடம் சில்லிடுவது போன்று உணர்ந்தாள். ஏதோ ஆராய்ச்சி கூடம் போன்ற அந்த அறையில் இருந்து வந்த வேதியல் பொருட்களின் வாடையை சிலமணிதுளிகளுக்கு மேல் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை‌. குமட்டுவதை போன்று உணர்ந்தாள்.


அங்கு வீட்டிற்கு வந்ததிலிருந்து வசிக்கு படபடப்பாக இருந்தது. நண்பன் தன்னை நம்பி அனுப்பியிருக்க இப்படி ஆகிவிட்டதே என மனம் நொந்து போனான். வீட்டிற்குள் நுழைந்த வம்சி படபடப்பாகவே இருந்த உடன்பிறப்பை பார்த்த 'என்ன குட்டி போட்ட பூன மாதிரி சுத்திகிட்டே இருக்கான்? ஒருவேல நேத்து கட்டிபுடிச்சவன் இன்னிக்கு கிஸ்ஸு எதும் அடிச்சிருப்பானோ?' என மனதிற்குள் நினைத்தபடி வசியிடம் வந்தான். "வசி என்னாச்சு?" என வம்சி கேட்க வம்சியை கண்டு பதட்டத்துடன் ஏதோ கூற வந்தான். அதற்குள் "ஆ.." என திவ்யா கத்தும் சத்தம் கேட்கவே இருவரும் பதறி ஓடினர்.


கட்டிலில் உருண்டபடி "ஆ.." என அவள் கத்திக் கொண்டிருக்க‌ அவளிடம் பதறி வந்த வம்சி "ஏ பாப்பா என்னாச்சுடி?" என்றான். "ஆ மாமா எரியுதுஉஉ.." என அவள் கத்த "திடீர்னு என்ன பாப்பா? என்ன திவி பண்ண?" என அவன் கேட்க "தெ..தெரியல" என கூறி பாவை வீரிட்டு அழுதாள். பின்பே ஏதோ நினைவு பெற்றவனாக வம்சி "வசி மார்னிங் அவ மாத்திரை சாப்டாலா?" என கேட்டான். சற்றே யோசித்தவன் "இ..இல்லடா" என்க "ஓ ஷிட்" என்றான். மதியம் அழுது அழுது ஓய்ந்தவளுக்கு மருந்து கொடுக்க மறந்து போயிருந்த வம்சி அவள் காலை சாப்பிட்டாளா என அறியாது விட்டான். காலை மருந்து கொடுக்க சென்றபோது ஏதேதோ பேசி அதையும் மறக்கச் செய்திருந்தாள் அல்லவா!


வசிக்கு அவள் நிலை புரிந்திட சட்டென தன் அறை சென்றவன் சிலபல மருந்துகளுடன் வந்தான். வம்சி "ஒன்னுமில்ல பாப்பா" என கண்ணீருடன் அவளை சமாதானம் செய்ய "வம்சி மூவ்" என்றவன் திவ்யாவை அணைத்தவாறு பிடித்துக் கொண்டு அவளுக்கான மருந்துகளை புகட்டினான். ஒரு களிம்பை எடுத்தவன் சற்றே தயங்கி பின் அவள் கரங்களில் அவற்றை மெல்ல தேய்த்து விட்டான். "ஆ..வேணாம்" என அவள் கத்த "ஷ்ஷ்" என்றவன் அவள் கை, கால், முகம் கழுத்து போன்ற இடங்களில் அதை தேய்த்தான். முதலில் எரிந்து பின் அது குளுமையை கொடுக்க, அவள் கண்ணீர் மெல்ல மட்டுப்பட்டது. இப்போது அவளவனுக்கு கண்ணீர் சுரந்தது.


அங்கு ஒவ்வாமையோடு தலை கிருகிருக்க சென்று பொத்தென அமர்ந்த மது முன் இருந்த கதவு மெல்ல திறக்கப்படும் சத்தம் கேட்க, பாவை பதறி எழுந்தாள். கதவு மெல்ல திறக்கப்பட அழுத்தமான அடிகளோடு வந்தவனை கண்டு விழிகள் விரிய சமைந்து நின்றாள்.

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
26. இனம் புரியா தேடலில் நாம்!

கண்கள், வாய், கை என யாவும் கட்டப்பட்டு குண்டுகட்டாக தூக்கிவரப்பட்ட மதுராந்தகியை ஓர் நாற்காலியில் கட்டியிருந்தனர். திமிரியபடி இருந்தவளிடம் வந்தவன் தன் கையிலிருந்த ஊசி கொண்டு அவள் ரத்த மாதிரிகளை எடுத்தான்.

திடீரென அதுவும் வழுக்கட்டாயமாக எடுக்கப்பட்டதில் பாவை கத்த, வாய் கட்டப்பட்டதால் "ம்ம் ம்ம்" என்ற சத்தம் மட்டுமே கேட்டது. "ஷ்ஷ்" என்றவன் "உன்னை ஒன்னுமே பண்ணமாட்டேன். பை சான்ஸ் உனக்கும் எனக்கும் அதிஷ்டம் இருந்தா நீ பொழச்சுப்ப. ஆர் எல்ஸ்.." என்றபடி நிறுத்தினான்.

"ம்ம்..ம்ம்" என அவள் அழுகையுடன் ஒலி எழுப்ப "இங்க பார். ஒரு உயிரோட மதிப்பு எனக்கு தெரியும். உன்னை கற்பழிச்சு எனக்கு எதுவும் கிடைக்க போறதில்ல. இன்னும் சொல்லபோன அது எனக்கு நஷ்டம் தான். அதுனால பயப்படாத. நீ செத்தாலும் ஒரு வகைல நம்ம நாட்டுக்காக சாகுற போல தான். சோ உனக்கு புண்ணியம் தான் வந்து சேரும்" என கூறிவிட்டு சென்றான்.

அவன் சென்ற சிலநிமிடம் கட்டிலிருந்து விடுபட திமிரியபடியே பாவை சோர்ந்து போனாள். வலிமையற்ற நிலையில் தோய்ந்து போனவள் கட்டுகளை யாரோ அவிழ்க்க "ம்ம் ம்ம்" என்றாள். "ஷ்ஷ்" என்ற‌ சத்தத்தில் மனதிலும் ஓர் கதகதப்பு பறவவே அது யாரென்று புரிந்து கொண்டாள். ஆம் அது ஆதித்தனே.

சில நிமிடங்கள் முன்…

கட்டிலில் அமர்ந்திருந்தவளுக்கு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க விதிர்விதிர்த்து எழுந்தவள் முன் அவளவன் வந்து‌ நின்றான். அவனை விழிகள் விரிய கண்டவளோ ஓடி வந்து இறுக கட்டியணைத்துக் கொண்டு "ப..பயந்துடேன் தெரியுமா?" என்றாள். "ஒன்னுமில்ல மகிமா" என அவன் அவள் தலைகோத "யாருனே தெரியலை. வந்து எ ஏதோ ஊசி போட்டாங்க. ந நா பயந்தே போய்ட்டேன்" என கதறினாள். "நா தான் சொன்னேனே மகி. அப்பறம் எதுக்கு பயம்?" என அவன் கேட்க "நீங்க ஒன்னும் இதுலாம் சொல்லலை. சு.. சும்மா சும்மா என்ன நம்புறல நம்புறலனு கேட்டே என்னய தலையாட்ட வச்சுடீங்க" என மூக்கை சிந்தினாள்.

அதில் சிரித்துக் கொண்டவன் "அது ஜஸ்ட் மரத்துப்போக வைக்கும் ஊசி தான்" என்றவன் அவளுக்கு விளக்கத்துவங்கினான்.

அன்று சிலபல குழப்பங்களுடன் முகேஷை கட்டிவைத்திருக்கும் அறைக்கு வந்த ஆதித் "உனக்கு அவனை பத்தி தெரியாதுனாலும் சரி. நா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. திவிய ஒப்படைச்சவனுக்கு மதுவ பத்தின விஷயங்கள் எதுவும் தெரியுமா?" என கேட்டான். "இ..இல்ல சார். கடத்தப்படுற நபர் அநாதையா தான் இருக்கனும்னு ரூல்ஸ் இருக்குறதால அவங்க பெயர கூட கேட்டுக்க மாட்டார்" என தயங்கியபடி கூறினான். அவ்வளவே! ஆதித்தின்‌ முகம் மிலிர்ந்தது.

வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவனை ஒரு ஆட்டோ வலிமறித்தது. புருவங்கள் சுருங்க யோசனையுடன் ஆட்டோவை நெருங்கியவனிடம் "தம்பி உங்க கிட்ட தனியா பேசணும். கொஞ்சம் ஆட்டோ குள்ள வாங்க" என்று ஆட்டோ உள்ளிருந்த பெண் கூறினார்.

குழப்பத்துடன் வண்டியை ஓரம் கட்டியவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஆட்டோவில் அமர, தன் முக்காடை எடுத்தவர் "தம்பி நா அந்த ஆஸ்பிடல்ல நர்ஸா வேலை பார்த்தேன். உங்க கிட்ட இருக்காளே அந்த பொண்ணோட பிரண்டுக்கு டிரீட்மென்ட் பார்த்த நர்ஸ். அன்னிக்கு ஒரு நாள் நைட்டு கூட உங்க வீட்டுக்கு வந்துட்டு ஓடிட்டேன்" என்றார்.

ஆதித் "நீங்க..?" என ஏதோ கேட்க வந்தவனை நிறுத்தி "தம்பி.. அந்த ஆஸ்பத்திரில இதுமாதிரி நிறையா தடவ நடந்திருக்கு ப்பா. இந்த பொண்ண கடத்திட்டு போகும்போது தான் அதை நேர்ல பாத்தேன். அந்த டாக்டர் தான் ஆள விட்டு பிள்ளைகள எங்கயோ விக்குறான் ப்பா. இத சொல்ல தான் அன்னிக்கு வந்தேன். அந்த வீராவோட ஆளுக அந்த பக்கம் வரவும் தான் பயந்து ஓடிட்டேன்" என படபடப்பாக பேசி முடித்தார்‌.

தாமதமாக கிடைத்த ஆதாரம் எனினும் தன்னிடம் கூற முயற்சித்த பெண்மணி மேல் மரியாதை கொண்டு, நன்றி கூறி விடைபெற்றான்.

அடுத்து நேரே வீடு வந்து அவனவளை கடைக்கு கூட்டிச் சென்றவன் கடைசியாக பனிகூல் கடைக்கு அவளை கூட்டிச்சென்று தன் பேச்சை துவங்கினான். "மகி" என அவன் அழைக்க கடையை சுற்றி பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தவள் அவனை பார்த்தாள். "எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்" என அவன் பேச்சை துவங்க "என்ன உதவி?" என்றாள்.

ஒரு நெடிய மூச்சை விட்டுக் கொண்டவன் "திவி விஷயமா தான். அவளை யார் கடத்தினாங்கனு தெரியலை. உனக்கே தெரியும் இப்போ தான் அவளுக்கு தலைல ஆபரேஷன் நடந்திருக்கு. ரொம்ப யோசிச்சா அவளுக்கு தலைவலி வருது" என கூற "அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டரை கேட்டுப்பார்போமா?" என அந்த காவலனுக்கே ஆலோசனை வழங்கினாள். அதில் மெல்ல புன்னகைத்தவன் "அதெல்லாம் நான் பண்ணிட்டேன். இப்போ கிடைச்ச தகவல்களுக்கு ஏத்த மாதிரி ஒரு திட்டம் இருக்கு. அதுக்கு நீ உதவுறியா? டிபார்ட்மெண்ட் ஆட்களயே உதவிக்கு கூப்பிடலாம். ஆனா இந்த கேஸ நா எடுத்து நடத்துறது வெளியே யாருக்கும் தெரியாத பட்சத்தில் முதலருந்து எல்லாத்தையும் சொல்லவேண்டி வரும்" என கூறினான்.

அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மெல்ல அவள் கையினை தனது கைகளுக்குள் பொத்திக் கொண்டவன் "என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என கேட்க பட்டென நிமிர்ந்து பார்த்தாள். "நா உனக்கு ப்ராமிஸ் பண்ணி தரேன். போன தடவை நடந்ததுபோல எதுவும் நடக்காது நடக்கவும் விடமாட்டேன்" என ஆதித் கூற பாவை இமைகள் சிறகடித்தன. அவளது அலைபாயும் விழிகளே அவள் யோசிப்பதை உணர்த்த, அவனிடம் மெல்லிய புன்னகை!

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "உங்கள நம்புறேன்" என்ற இரண்டே வார்த்தைகளில் அவனை உள்ளும் புறமும் மகிழ்வில் நனைய வைத்தாள். "தேங்ஸ் மகி. நா கண்டிப்பா உனக்கு எதுவும் ஆகவிட மாட்டேன்" என கூறி அவளை வீட்டில் விட்டிருந்தான்.

மது கடத்திக்கொண்டு அவ்வறையை நோட்டமிட்டு ஓய்ந்திருக்க அப்போது மெல்ல கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அவளவன். "நா தான் சொன்னேனே உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்னு" என ஆதித் கூற "எப்படி இந்த இடத்த கண்டுபிடிச்சீங்க?" என கேட்டாள். "உன்னோட டிரஸ்ல ஒரு ட்ராகிங் டிவைஸ் ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். அதை வச்சு நீ போகுமிடத்த தெரிஞ்சுகிட்டேன். மயக்க மருந்து கொடுத்தா மொத்தமா மயங்கிடுவ. மயங்கின மாதிரி நடிக்க உனக்கு வராது. அதான் உனக்கு மரத்து போற ஊசி போட சொன்னது. உன்ன சுத்தி என்ன நடக்குதுனு நீ தெரிஞ்சுக்க தான்" என கூற அவனது திட்டத்தில் வாய்பிளந்து நின்றாள்.

பின் கதவருகே ஏதோ அரவம் கேட்க சட்டென ஆடவன் சென்று ஒரு கடைசி அலமரி வரிசைக்கு பின் மறைந்து கொண்டான். பாவை தான் ஒன்றும் புரியாத நிலையில் விழித்துக் கொண்டு நிற்க உள்ளே சிலர் நுழைந்தனர். பின் இதோ குண்டுகட்டாக கட்டி இங்கு தூக்கி வந்திருந்தனர்.


தன் கட்டை ஆடவன் அவிழ்க்கவும் படபடப்புடன் "யாரது? நீங்க பாத்தீங்களா? என் ரத்தத்த எதுக்கு உரிஞ்சுட்டு போறாங்க?" என மது கேட்க ஆதித்தின் முகம் இறுகியது. அதை கண்டவள் "என்னாச்சு?" என பாவம் போல் கேட்க சட்டென தன் இறுக்கம் கலைந்தவன் "தேங்க்யூ சோ மச் மகி. நீ செஞ்சது மிகப்பெரிய உதவி. முதல உன்னை அப்புறப்படுத்திட்டு தான் என் அடுத்த வேலை" என்றான்.

அவனை முறைத்து பார்த்தவளளை கண்டு 'என்னத்த சொல்லிட்டேன்னு இப்படி ஒரு காதல் பார்வை?' என நினைத்தவன் "என்ன?" என்றான். அவனது கேள்வி என்னவோ சாதாரணமாக தான் இருந்தது. ஆனால் அவனது இறுகிய மனநிலையை சற்று முன் கண்டவளுக்கு தான் அவனிடம் தேவியில்லாது உரிமை எடுத்துக் கொண்டு கேட்கிறோமோ? என தோன்றியது. 'உதவி கேட்டான் செய்தாயிற்று இனி அவனது விளக்கம் தனக்கு வேண்டும் என எதிர்பார்ப்பது சரியன்று' என எண்ணியவள் 'ஒன்றுமில்லை' என்பது போல் தலையசைத்து முன்னே நடந்தாள்.

அவள் கைபற்றி நிறுத்தியவன் "நீபாட்டுக்கு போற? போனவன் திரும்பி வந்தா நீ அவ்ளோதான்" என‌ கூற "அதான் இப்போ நீங்க இருக்கீங்களே" என பட்டென கூறிவிட்டாள். அதில் ஆடவன் இன்பமாக அதிர "அ..அது நீங்க கூட்டிட்டு போவீங்கனு சொல்ல வந்தேன்" என கூறி மானசீகமாக தனக்குத் தானே ஒரு குட்டு வைத்துக் கொண்டாள்.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் "வா" என அவளை கூட்டிச் சென்றான். அது என்ன இடமென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ பெரிய நிறுவனமாக இருக்க வேண்டும் என மட்டும் அவளுக்கு தோன்றியது. நிறுவனத்தின் மொட்டைமாடியை அடைந்தவுடன் பின் பக்கமாக எகுறி குதித்தவன் திரும்ப, அவனை கினற்றை எட்டிப் பார்ப்பது போல் பார்த்தாள். பின்ன, அவனது ஆறடி உயரத்திற்கு அது வெறும் பள்ளமாக இருக்கலாம். ஆனால் அவளது ஐந்தறையடி உயரத்திற்கு அது குழியாயிற்றே! அவளை கண்டு அவன் நக்கலாக சிரிக்க முசுமுசுவென எழுந்த கோபத்தை கடினப் பட்டு அடக்கினாள்.

அவளுக்கு கைகொடுத்து இறங்க உதவியவன் எப்படியோ தாவி குதித்து சாலையை அடைய சரியாக கோவிந்தண்ணன் நான்கு சக்கர வாகனத்தில் வந்து நின்றார். "அண்ணா உன்ன வீட்ல விட்டுடுவார். அம்மா கிட்ட நீ திவிய பாக்க வந்திருக்குறதா சொல்லிருந்தேன். இப்ப மிட்நைட். அதனால உன்ன நம்ம வீட்ல விட்டுடுவார். வசி சாப்பாடோட தயாரா இருப்பான். ஒழுங்கா சாப்டு மாத்தரைய போட்டு படு. நாளைக்கு காலேஜ் போகனும்" என கூற பாவை மலங்க மலங்க விழித்தாள்.

இத்தனை உதவி செய்தும் அவன் யார்? எதுக்கு என் ரத்தம்? என தான் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காதவன் மீது கோபமாக வந்தது. இதில் தற்போது மடமடவென பேச மேலும் சலிப்பாக, முகத்தை திருப்பிக் கொண்டு திரும்பியவள்‌ கரம் பற்றியவன் "போய் ரெஸ்ட் எடு. காலைல எல்லாம் சொல்றேன்" என கூறினான்.

காலை மொத்த குடும்பமும் அதிர்ந்து அமர்ந்திருக்க, தொலைகாட்சியில் அச்செய்தி ஓடியது.


-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
27.இனம் புரியா தேடலில் நாம்!


காலை தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தி இதுவே…


'LI(O)VE BIO ஆர்ய்ச்சி கூடத்தின் தலைமையாளறான திரு ஆர்.பிரசாத் குமார் மறைமுகமாக ஆட்களை கடத்தி தனது கண்டுபிடிப்புகளை அவர்கள் மீது பரிசோதித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து மறைமுக விசாரணை செய்து கொண்டிருந்த காவலர் ‌திரு ஆதித்த கிருஷ்ணன், பிரசாத் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை சமர்பித்து அவரை கைதுசெய்த செய்தி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது' என்ற செய்தியில் மதுரா, வசி மற்றும் வம்சி அதிர்ந்து நின்றனர் (வம்சியின் அறையில் பிரசாத்துடன் அவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களினை கண்டுள்ளதால் மதுராவாலும் பிரசாத்தை கண்டுகொள்ள முடிந்தது).


அதில் யாவரும் அதிர்ந்து நின்றிருக்க, வசி மற்றும் வம்சியின் அலைப்பேசி விடாது ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் நிலைபெற்ற வசி தனது அழைப்பை ஏற்க "வசி என்னப்பா நியூஸ்ல என்னென்னமோ சொல்றாங்க?" என்றார் கதிர். "ம்ம் ப்பா எங்களுக்கு ஒன்னும் புரியல. ஆதி வந்த தான் தெரியும். நீங்க எதுவும் யோசிக்காதிங்க" என அவரை சமாதானம் செய்து அழைப்பை துண்டித்தவனுக்கு வம்சியின் பேசியில் ஒளிரும் 'சிபி' என்ற பெயர் பட்டது.


பேச்சற்று விரைத்து நின்றபடி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த வம்சியை கண்டு பெருமூச்சு விட்டவன் அழைப்பை ஏற்க "ஏங்க எங்க இருக்கீங்க? சாப்டீங்களா?" என சாதுவாக ஒலித்தது சிற்பியின் குரல். தன்னவன் இருக்கும் நிலைக்கு படபடப்பாக பேசி அவனை மேலும் வருத்தாமலிருக்கவே சாதாரணமாக பேச்சை துவங்கினாள் பெண்.


"சி..சிற்பி" என வசி கூறவே ஒரு நொடி இதயம் நின்று துடிப்பதை போல் உணர்ந்தாள். சிற்பியோ வசி மற்றும் ஆதிக்கு தங்கள் காதல் விஷயம் தெரியும் என்பதை அறியாதவளாயிற்றே!


"அ அது ஏதோ தெரியாம போட்டுட்டேன்" என அவள் சமாளிக்க "கரெக்டா தான் போட்டிருக்க. வம்சி நம்பர் தான்" என்றவன் "இப்ப தான் நியூஸ் பாத்தோம். அவன் இன்னும் அந்த ஷாக்லருந்தே வரலைடா. அப்பறம் பேச சொல்றேன்" என்றான். என்ன கூற என புரியாதவள் "ம்ம்" என்றதோடு இணைப்பை துண்டிக்க அதிர்வுடன் நிற்கும் வம்சியை பார்த்தான்.


"அவன் தப்பு பண்ணிருக்கான்டா. ஹீ டிசர்வ்ஸ் திஸ்" என வசி கூற "தென் மீ?" என்றான். தன்னை புரியாமல் பார்த்த வசியை கண்டு "அவரோட பல ரிசர்ச்க்கு சில கல்சர்ஸ் ப்ரிபார் பண்ண நானும் உதவிருக்கேனேடா. அ..அப்போ அந்த பாவத்துல எனக்கும் தானே பங்கிருக்கு?" என கண்களில் கண்ணீருடன் கேட்பவனை பார்க்கவே இருவருக்கும் பாவமாக இருந்தது.


"டேய் லூசு மாதிரி பேசாதடா. அது ஒன்னும் நீ தெரிஞ்சு செய்யலையே?" என்ற வசி "இந்த மாதிரி வேலைக்குனு தெரிஞ்சிருந்தா உதவி செய்வியா?" என கேட்க சட்டென அவனை நிமிர்ந்து பார்த்து "டேய்!" என்றான். "மாட்ட தானே? அப்பறம் எதுக்குடா இந்த பேச்சு?" என கண்டிப்பில் தொடங்கி வேதனையில் முடித்தான். எனினும் வம்சியின் மனம் ஆறவில்லை!


அப்போது கண்கள் சிவக்க தளர்ந்த நடையுடன் வந்த ஆதித்தின் சோர்வே அவனது தூக்கமின்மையை கூறியது. அதை கண்ட மூவரும் அத்தனை நேரம் இருந்த படபடப்பை மறைத்துக் கொண்டு நிற்க சோர்வாக வந்தமர்ந்தான். வம்சியின் மனமோ ஆர்பரித்துக் கொண்டிருந்தது. தற்போதைய நிலையில் நண்பனை வருத்த விரும்பாது கண்ணீருடன் விறுவிறுவென வம்சி செல்ல, அவனை வேதனையாக பார்த்தபடி வசியும் சென்றான்.


சோர்வாக அமர்ந்திருப்பவனை பார்க்கவே மதுவிற்கு பாவமாக இருக்க சென்று தன் ஒற்றை கையின் உதவியோடு தேநீரை போட்டுக் கொண்டு வந்தாள். தன்முன் நீட்டப்பட்ட தேநீரை வாங்கியவன்‌ அவளை அருகே அமரும்படி கண்காட்ட சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். தேநீரை பருகியவன் "காலேஜ்கு ரெடியா?" என கேட்க இமைகள் படபடக்க "இ..இல்ல நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றாள்.


அவளையே ரசனையாக பார்த்தவன் மெல்லவே அவளை இழுத்து அணைத்துக் கொள்ள, பெண்ணவள் திடுக்கிட்டு போனாள். அப்போது தொலைக்காட்சியில்‌ 'காவலர்களிடமிருந்து தப்பியோட முயற்சித்த திரு பிரசாத்தை தடுத்து நிறுத்துகையில் அவர் காவலர் திரு.கோவிந்தன் என்பவரை தாக்கவே வேறு வழியின்றி அவரை சுட்டுக் கொலை செய்த காவலர் ஆதித்த கிருஷ்ணன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்' என்ற செய்தி அவள் காதில் விழுந்தது. அதில் சட்டென அவனிடமிருந்து பிரிந்தவள் அவனையும் செய்தியையும் மாறி மாறி பார்க்க 'ஆ.. கொல்லுறா' என எண்ணியவன் சிறு புன்னகையுடன் கண்சிமிட்டி சென்றான்.


சில மணிநேரம் முன்பு…


குண்டுகட்டாக தூக்கி வரவழைக்கப்பட்ட மதுராவை வைத்திருந்த அறையிலே தான் ஆதித் மறைந்திருந்தான். அப்போதே அவளிடமிருந்து இரத்த மாதிரிகளை எடுக்க உள்ளே நுழைந்தான், பிரசாத். அவரை கண்ட ஆதித்தின் விழிகள் அதிர்ச்சியில் உரைந்தே போனது. வம்சியின் வாயிலாக எத்தனை முறை இவரை பற்றிய புகழுரையை கேட்டிருப்பான்? அத்தனைக்கும் துளியேனும் பொருந்தாதவனல்லவா இவன்? என்ற எண்ணங்கள் அழையா விருந்தாளியாக வந்தது.


ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றவன் வெளியே சென்று "வம்சிட்ட இத குடுத்து நா எழுதி தர்ற டெஸ்டெல்லாம் பண்ண சொல்லு" என அவர் கூறியது கதவண்டை நின்றவனுக்கு அச்சரம் பிசகாமல் கேட்டது. சற்று தூரம் அவனை பின்பற்றி சென்றவன் ஏதோ அறையிலிருந்து பிரசாத் வெளியேறுவதை பார்த்து அவ்வறையினுள் நுழைந்தான்.


நடுநாயகமான மேஜையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த மடிக்கணினி. அதை சென்று பார்வையிட்டவன் அதிர்ந்தே விட்டான். சட்டென தன் கைவசம் கொண்டு வந்த பெண்டிரைவில் அந்த பதிவுகளை ஏற்றம் செய்து கொண்டவன்‌ அவ்வறையை விட்டு வெளியேறி மதுராவுடன் தப்பியிருந்தான்.


ஒரு மருந்தோ தடுப்பூசியோ உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் முதலில் அவற்றை பற்றிய தகவல்கள் ஆலோசகர்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்களின் அனுமதிக்கு பின்பே அம்மருந்து விலங்குகளின் மீது பரிசோதிக்கப் படும்.


அதற்கும் 'விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960 (prevention of animal cruelty act 1960) என்ற சட்டதிட்டங்கள் உள்ளன. பரிசோதனைக்கு உட்பட்ட விலங்கிற்கு எந்த வேதனையும் இல்லாது இருத்தல் வேண்டும். அப்படி ஒருவேளை அந்த விலங்கு இறந்துவிட்டால் இச்சட்டத்தின் படி கட்டணம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும்.


அப்படி விலங்கு பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால், நூறு சுய ஆர்வத்துடன் வரும் மக்களுக்கு போட்டு பரிசோதனை செய்யப்படும். பின் நல்ல உடல்நிலை கொண்ட ஒரு குழுவுக்கும், நோய்வாய்ப்பட்ட ஒரு குழுவுக்கும் போடப்பட்டு பரிசோதிக்கப்படும். பின் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என அனைத்து பரிசோதனைகளும் முடியவே அம்மருந்து சந்தைக்கு கொண்டுவரப்படும். மேலும் '{World Health Organization (WHO)}' உலக சுகாதார அமைப்பு மற்றும் தேசிய சுகாதார அமைப்பு அம்மருந்தினை பராமரித்து வரும். இதுவே ஒரு மருந்து உற்பத்தி ஆவது முதல் சந்தைபடுத்துவது வரையான விதிமுறைகள்.


ஆனால் பிரசாத் மறைமுகமாக இணையதளத்தின் உதவியோடு, தன்னை போன்ற சுயநல புத்தி கொண்ட மருத்துவர்களை தன் வசம் போட்டுக் கொண்டு ஒரு குழு அமைத்து ஆதரவற்று இருப்போரை கடத்தி தனது மருந்துகளை அவர்கள் மீது பரிசோதனை செய்துவந்துள்ளான். பல வெளிநாட்டு ஆய்வகங்களில் தொடர்பு கொண்டிருப்பவன் இங்கு தான் பரிசோதனை செய்து வெற்றிபெறும் மருந்துகளை அங்கு சட்டவிரோதமாக விற்று வருகிறான்.


அப்படியான ஒன்றில் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் சற்றே அதிகாரமாக இருக்கும் சொரியாசிஸ் என்ற தோள் நோய் ஒன்றிற்கு களிம்பு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான். அதற்கு அவன் வசம் சிக்கியவளே திவ்யாம்பிகை. ஆனால் அவனது துரதிஷ்டவசம் ஒரு நாள் அவளை பரிசோதித்துவிட்டு கதவை தாழிடாமல் வந்ததால், சற்றே மயக்கம் தெளிந்த நிலையோடு தப்பி வந்தவள் மாடியை அடைந்திருந்தால். தள்ளாடியபடியே மாடியிலிருந்தே தப்பியவள் கிழே இறங்கும் முயற்சியில் காம்பவுண்ட் செவுரு ஒன்றில் உரசியபடி கீழே விழுந்திருந்தாள். மேலும் நடக்க முயற்சித்து பலனின்றி புதருக்குள் மயங்கி விழுந்தவளை தான் வம்சி கூட்டிவந்திருந்தான்.


இத்தனை ஆதாரத்துடன் முகேஷ் மற்றும் வீராவின் அடியாட்களுடைய வாக்குமூல பதிவையும் சமர்பித்தவனால் பிரசாத், முகேஷ், வீரா மற்றும் அவனது குழுவிற்கு சிறை தண்டனை மட்டுமே தர முடிந்தது. ஒரு மனிதரின் மீது சட்டவிரோதமாக மருந்து செழுத்துவதற்கு பத்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் மருந்து தயாரிக்கும் உரிமையட்டை தடை செய்யப்படும். மேலும் சட்டவிரோதமான வணிகத்திற்கும் சேர்த்து அவனுக்கு ஆயுள் தண்டனையும், முகேஷ், வீரா மற்றும் அவனது குழுவிற்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.


மேலும் பிரசாத்தின் பரிசோதனையால் பலர் இறந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால் நிச்சயம் அவனுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரலாம் என இருந்த நிலையில் அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காமல் போனது. போனது போகட்டும் என விட்ட ஆதித் தீட்டிய திட்டத்தின்படி இரவோடு இரவாக பிரசாத்தை கடத்தியிருந்தான்.


தங்களது இடத்தில் கட்டப்பட்டிருந்த பிரசாத் கண்விழிக்கவும் அவனை நக்கல் பார்வை பார்த்தபடி நின்றிருந்தான், ஆதித். "டேய்.. சின்னப்பய நீ, என்கிட்ட உன் வேலைய காட்டிட்டல?" என பிரசாத் சீர அதில் ஏளனமாக சிரித்த ஆதித் ஒரு ஊசியுடன் அவனை நெருங்கினான். அதில் அத்தனை நேரம் திமிராக பேசிக் கொண்டிருந்த பிரசாத் "ஏ ஏ‌ ஏ என்னதது?" என பதற அதை அவனுக்கு செலுத்தியவன் "ஸ்ட்ரைக்னைன் (Strychnine). கேள்வி பட்டிருப்பியே?" என்றான்.


ஸ்ட்ரைக்னைன் என்பது உலகிலேயே மிகவும் வலி கொடுக்கக் கூடிய விஷம். இம்மருந்து உடலில் உள்ள மொத்த சதையும் ஒரே நேரத்தில் சுருங்கும் வலியை கொடுக்கக் கூடியது. அதிலும் பெரிய துரதிஷ்டவசம் இது மிகவும் மெதுவாக செயல்பட கூடியது!


உடலிலிருக்கும் சதையை எலும்பிலிருந்து பிரித்து அதிகப்படியான வலியை கொடுக்கக் கூடிய மருந்தே இது என இரசாயன நிபுணர்களால் கண்டறியப்பட்டது.


ஆதித் கூறியதும் சர்வமும் நடுங்கப் பெற்றவன் "ஏய்‌! ஏய்! ஏய்! வேணாம். எ என்ன எதாவது பண்ண உ உன்ன.." என்றவனுக்கு பயத்தில் பேச்சு வர மறுத்தது.


"உன்னால ஒன்னும் பண்ண முடியாது. எந்தனை பேரோட வலிய உன் ஆராய்ச்சிக்காக சம்பாதிச்சிருப்ப? ஒரு உயிரோட மதிப்பு தெரியும்னு சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல? உயிரோட மதிப்பு தெரிஞ்சவன் அதை காக்க தான் நினைப்பான். உன்னை போல அழிக்க நினைக்க மாட்டான்" என ஆவேசமாக பேசிய ஆதி சற்றே வேதனையுடன் "உன்ன போய் வம்சி அவ்வளவு நம்பினானேடா? அவன பாசம்ங்கிற பெயர்ல நல்லா ஏமாத்தி பயன்படுத்திருக்கல?" என கர்ஜித்தான்.


அதில் சர்வமும் நடுங்கிப்போன ‌பிரசாத் "ஏ பி..பிளீஸ் எதாவது பண்ணு. நா‌ எல்லாத்தையும் விட்டுட்டுறேன். எ என்ன எப்படியாவது காப்பாத்து" என கெஞ்ச அவனை வக்கிரமான புன்னகையுடன் பார்த்தவன் "ஹாப்பி ஜெர்னி டு தி ஹெல் (Happy journey to the hell)" என கூறிவிட்டு சென்றான்.


தனது காவல் நண்பர்களின் உதவியோடு தானாக ஒரு கதையைக் கட்டி அவன் இறந்ததாக சித்தரித்தவனுக்கு தலைமை அதிகாரிகளிடமிருந்து விசாரணை நடத்தப்பட்டது. 'தற்காப்புக்கு வேறு வழி இல்லாததால் சுடவேண்டியதாக போயிற்று' என சர்வ சாதாரணமாக கூறிய அந்த காவலனை வேலை விட்டு தூக்கும் எண்ணம் யாருக்குமில்லை. சர்வ நிச்சயம் இவனை போன்ற ஒரு அதிகாரி கிடைப்பது அரிது! எனவே இரண்டு மாத பணியிடை நீக்கம் வழங்கியிருந்தனர். அனைத்தும் ஒரே இரவில் முடிந்திருந்தது!

-தேடல் தொடரும் 💝
 
Last edited:

NNK34

Moderator
28. இனம் புரியா தேடலில் நாம்!


சில நாட்களுக்கு பிறகு…


கண்ணை துடைத்தபடி "என்கிட்டருந்து மறைச்சுட்டீங்கள்ல" என சிணுங்கினாள் மதுராந்தகி. "அப்போ உனக்கு உடம்பு சரியில்லை மதுரா. சொன்னா சும்மாவா இருப்ப? அழுது ஊரையே கூட்டிருப்ப. அப்பறம் திவியும் உன்ன நினைச்சு வருத்தப்படுவா, நீயும் திவிய நினைச்சு வருத்தப்பட்டுடே உடம்ப கெடுத்துப்ப" என ஆதித் கூற "இப்ப தான் சரியாகிட்டேனேடி" என திவ்யா கூறினாள்.


ஆம்! தற்போது திவ்யா உடல் தேரி வந்துவிட்டாள். ஆனாலும் உடல் மெலிந்து தடித்த இடங்களில் தடம் மறையாது இருப்பவளை காணவே மதுராவிற்கு அழுகையாக வந்தது.


அன்று ஓர் விடுமுறை நாள்! சிற்பிகாவும் வந்திருக்க, அறுவரும் வீட்டில் கூடி அமர்ந்திருந்தனர். அப்போதே திவ்யாவை பற்றி தனக்கு அனைத்தும் தெரிய வர, மனம் பொறுக்காமல் குமுறி விட்டாள்.


வம்சியிடம் தங்களது காதலை பற்றி நண்பர்களிடம் எப்போது சொன்னான் என தெரிந்துகொள்ள வேண்டி அவ்வப்போது சிற்பியின் பார்வை அவன் புறம் சென்றது. அப்போது சட்டென எழுந்த வசி, "ஆதி, மது, திவி வாங்க" என்க "எங்கடா?" என ஆதி கேட்டான். "பாவம்டா! அந்த புள்ள ரொம்ப நேரமா என் உடன்பிறந்தவன்கிட்ட பேச தவிக்குது. நம்ம எதுக்கு நந்தி மாதிரி. அதான் நம்ம கார்டன்ல இருப்போம்" என பட்டென வசி கூற சிற்பியும் மதுராவும் திகைத்து விழித்தனர். மற்ற நால்வரிடமும் புன்னகையே!


"இல்ல எனக்கு புரியல?" என‌ மது கூற "நீ இன்னும் பாப்பாவாவே இருக்க பேபி" என திவி கூறினாள்.

அதில் யாவரும் வெடி சிரிப்பு சிரிக்க, "நா விளக்குறேன் வா" என திவ்யா கூறினாள். நால்வரும் எழ, சட்டென "ஒரு நிமிஷம்" என்ற திவி "ஏ மது. உனக்கு கேடி மாமா ஞாபகம் இருக்கா?" என கேட்டாள். அதில் செந்தணலாய் சிவந்த முகத்துடன் "இப்ப எதுக்கு அவங்க பேச்சு?" என கடுகடுத்த மதுவை வம்சி 'ஆ' என பார்க்க பக்கென சிரித்து வம்சியை பார்த்து கண்ணடித்த திவி "அது வம்சி தான்" என்றாள்.


அதில் அதிர்வுடன் மது வம்சியை நோக்க "எஸ்கேப்" என்றபடி சிற்பியை கூட்டிக் கொண்டு ஜுட் விட்டான். ஆதி வசியிடம் திரும்பி "ஏன் உன் உடன்பிறப்புக்கு தான் காதலுக்கு மரியாதை வசனமா? எனக்கெல்லாம் குடுக்க மாட்டியா?" என கேட்க வசி பக்கென சிரித்தான். பாவைகள் இருவரும் புரியாது விழிக்க, திவியிடம் திரும்பி "வா" என்றபடி அவளை கூட்டிச் சென்றான் வசி.


மதுரா புரியாது விழிக்க, அவள் கண்களையே பார்த்தபடி அவளை நெருங்கினான். அவள் கண்களை பார்த்தபடியே "இத்தனை நாள்ல ஒரு நாள் கூடவா உனக்கு என்னோட உணர்வுகள் புரியலை?" என கேட்க அவள் இமைகள் சிறகடித்தது. 'எதை குறிப்பிடுகிறான்?' என புரிந்தும் 'இது தானா?' என்று ஐயம் அவள் மனதை சூழ்ந்தது.


"மகி" என்றவனது ஒற்றை வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் பார்வையை கண்டு புன்னகைத்தவன் தன்மையாக "யெஸ்" என்றான்.


விழிகள் குழியினுள் அமுங்க, சிவந்த கண்ணங்கள் மேலெழும்பின. அதில் தனது முரட்டு கைவைத்து மென்மையாக வருடியவன் "ஐ லவ் யூ" என்க அவள் விழிகளை நீர் தமதாக்கியது.


அகண்ட விழி படைத்தவளாயினும் எத்தனை துளிகளுக்கு இடமளிக்கும்? இடமின்றி முத்துமுத்தாய் நீர்மணிகள் சொட்ட, அவை ஆடவன் உள்ளங்கையில் தஞ்சம் புகுந்தது.


அவள் முகம் நிமிர்த்தியவன் "என்னடா?" என்க "எனக்கு‌ தெரியும்" என்றாள். புன்னகையாக "என்ன தெரியும்?' என ஆதித் கேட்க "நி நீங்க என்ன லவ் பண்றீங்கனு" என்றாள். அவளை வளைத்து பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் "எப்படி?" என கேட்க அவன் அணைப்பில் திடுக்கிட்டவள் "எ என்ன பண்றீங்க?" என்றாள்.


"ஷ்ஷ்.. கேட்ட கேள்விக்கு பதில்" என அவன் கூறியபடி மேலும் இருக்கி அணைத்துக் கொள்ள "அ அது நா ஒன்னும் சின்னப்பிள்ள இல்ல. என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது" என்றாள். "ஓ.. அப்ப ஏன் என்கிட்ட எதுவும் கேக்கலை?" என அவன் கேட்க அவள் விழிகளை மீண்டும் வைரத்துளிகள் நிறைத்தன.


"எ என்னனு கேட்க? நீங்க என்ன(னை) லவ் பண்றீங்களானா? எப்படி கேட்பேன்? நா உணர்ந்த உணர்வு உண்மை தானானு எனக்கே பயமா இருந்தது. ஒ..ஒரு உதவி செஞ்சதுக்கு காதல்னு வந்து நிக்கிறாளேனு நினைச்சுட்டா? எ..எனக்கு பயமா இருக்கு. எனக்குனு எனக்கே இருந்த ஜீவன் திவி சிற்பி தான். திவி இல்லாம அந்த ஒரு மாசம்.." என்றவளிடமிருந்து கேவலொலி!


ஆதித்தன் அவள் முதுகை வருடிக்கொடுக்க "செத்துட்டேன்! அந்த ஒரு மாசம் அத்தனை வெறுமை. ஏன்டா வாழறோம்னு தோணும். ஆமா! நா ரொம்ப ரியாக்ட் பண்றேன் தான். ந..நா அப்படி தான். எனக்குனு இருக்குறவங்களும் என்ன விட்டுட்டு போனா என்னால தாங்க முடியாது" என்றாள்.


ஆதித்தனிடம் வாய்மொழி ஏதுமில்லை! மேலும் தானே தொடர்ந்தவள் "எங்க உங்க அக்கறையதான் காதல்னு நா நினைச்சுட்டு இருக்கேனோனு தோணும். அப்படி இருந்து நா தேவையில்லாம உங்கள லவ் பண்ணிட்டு அது இல்லனு சொன்னா நா எப்படி தாங்குவேன்?" என்றபடி கண்ணீருடன் அவனை பார்த்தாள். அவனிடம் அதே சாந்தமான புன்னகை!


"என்ன சிரிப்பு?" என அவள் கேட்க "என் மதுராக்கு இவ்வளவு யோசனை வந்திருக்கே! பரவால நா டியூப்லைட்னு நினைச்சுட்டேன்" என்றான். அவனது கேலியில் அவன் மார்பில் குத்தியவள் "நா எவ்வளவு எமோஷனலா பேசுறேன். நீங்க சிரிக்கிறீங்க" என மதுரா கூற வாய்விட்டு சிரித்தவன் "ஏ மகிமா! எனக்கு தெரியும்டி. நீ என்ன நினைச்சுட்டு இருக்கனு அன்னிக்கு உன்ன கடைக்கு கூட்டிட்டு போனப்போவே கண்டுபிடிச்சுட்டேன். இருந்தும் அப்போ இருந்த சூழலில் என் காதல உன்கிட்ட சொல்ல விரும்பலை. கிட்டதட்ட பன்னிரெண்டு வருஷமா உன்னை மட்டுமே தான் நினைச்சுட்டு இருக்கேன்டி. இந்த ஃபீலிங்ஸ அப்படி ஒரு சூழ்நிலையில் சொல்ல விரும்பலை" என்றான்.


பெண்ணவள் 'பன்னிரெண்டு வருடமா? என மலங்க மலங்க விழிக்க, அவள் இடை பற்றி இழுத்தவன் "அதான் இப்போ சொன்னேன். சோ நவ் இட்ஸ் யுவர் டர்ன்" என முதல் பாதியை சுத்தமாகவும் இரண்டாம் மீதியை கிசுகிசுப்பாகவும் கூறினான். அவன் அணைப்பில் நெழிந்தவளோ "விடுங்க" என்க "பதில் சொல்லு விடுவேன்" என்றான்.


அவனை நிமிர்ந்து பார்த்தவளோ "என்ன பதில் சொல்லனும்?" என குறும்பாக கேட்க அவளை நக்கலாக பார்த்தவன் "ஓ உனக்கு தெரியாதா? சரி அப்ப நா சொல்றத அப்ப்படியே சொல்லு" என்றான். மேலும் "ஆதித்த.. இல்ல இல்ல. உன்னோட தித்தன உனக்கு ரொம்ப புடிக்கும்னும், உன் தித்தன தான் கல்யாணம் பண்ணிப்பனும், அவன் கூட ரொமான்டிக்கான ஒரு வாழ்க்கை வாழுவனும்.." என அவன் கூறிக் கொண்டே போக ஏதும் ஏடாகுடமாக கூறிவிடுவானோ என்ற பயத்தில் "போதும் போதும்" என்றாள்.


அதில் ஆடவன் வாய்விட்டு சிரிக்க அதை ரசனையாக பார்த்தவள் "நான் உங்களை காதலிக்கின்றேன்" என்றாள். தேனாக வழிந்த சொற்களை‌ பொழிந்த இதழ்களை ஆதித்தன் வருட, நாணத்தினாள் முகம் சிவக்க தலை குனிந்தாள்.

அதை அழகாய் ரசித்தவன் மென்மையினும் மென்மையாக அவள் இதழ் பூட்ட, அவனின் மகி அவன் அணைப்பில் பாந்தமாய் பொருந்திக் கொண்டாள்.


அங்கு தோட்டத்தை சுற்றிக் கொண்டிருந்த திவி மற்றும் வசியினிடையே இருந்த அவஸ்தையான மௌனத்தை அவளவனே உடைத்தான். "திவி" என அவன் அழைக்க அவனை நிமிர்ந்து 'என்ன?' என்பதுபோல் பார்த்தாள். "சிற்பிய கரெக்ட் பண்ணி குடுக்க தான் வம்சிக்கு உதவி செஞ்சியா?" என வசி கேட்க அவனை சட்டென்று முறைத்தவள் "ஹல்லோ! நீங்க சொல்ல வர்றதே சரியில்லையே?" என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள்.


அதில் வாய்விட்டு சிரித்தவன் "அம்மாடி என்ன கோவம்?" என்க 'ஆமா ஆமா இந்த வெளக்கெண்ணைலாம் நல்லா போசுவீங்க. என் லவ்வு மட்டும் புரியாது' என முணுமுணுத்தாள். "இல்ல பரவால சத்தமாவே சொல்லலாம்" என அவன் நக்கலடிக்க அவனை மீண்டும் முறைத்து பார்த்தவள் "ஒன்னுமில்ல" என்றபடி வெடுக்கென திரும்பி நடக்கவே கால் தடுக்கி விழுந்தாள். இல்லை இல்லை விழப்போனாள்!


அவளை அவளவன் தாங்கி பிடித்திருக்க, கண்களை இறுக மூடியபடியே அவன் கையில் தவழ்ந்தாள். "புடிச்சுட்டேன்" என அவன் கூறவே பட்டென கண் திறந்தவள் பதறி நகர்ந்தாள். "ஓய்!" என அவன் அழைக்க அவன் தோரணையே அவளுக்கு புதிதாக இருந்தது. புரியாமல் அவனை திரும்பிப் பார்த்தவள் முன் வசீகரிக்கும் புன்னகையுடன் "என்ன ஏன்டி லவ் பண்ண?" என கேட்டான்‌.


அவனை விழிகள் விரிய கண்டவள் "எ என்ன?" என்க "என்மேல ஏன் உனக்கு லவ் வந்தது?" என கேட்டான். "உ.. உங்களுக்கு?" என திவ்யா திகைக்க "அதானே எனக்கெப்படி தெரியும்?" என்றான். திவியோ "சொல்லுங்க" என கூற "அன்னிக்கி பார்த்தியே ஒரு பார்வை, அந்த பார்வை சொல்லிச்சு. அன்னிக்கு வம்சினு நினைச்சு பாக்குறியோனு நினைச்சேன். ஆனா எப்போ வம்சி உன்ன நீ அவனுக்கு குழந்தை போலன்னு சொன்னானோ அப்பவே சந்தேகம் வந்தது. என்னை பார்க்கும்போதெல்லாம் உன் கண்ணுல நொடிப் பொழுதுல வந்து போற அந்த காதல், ஏக்கம், பயம் எல்லாமே.. என் சந்தேகத்த உறுதி படுத்திக்கிட்டேன். இப்போ ஒன்னு முணுமுணுத்தியே அதுல கண்பார்ம் பண்ணிட்டேன்" என்றான்.


அவனையே வியப்பாக பார்த்தவள் பார்வையில் அத்தனை பயம்! "உண்மை தான்! எனக்கு காதல் மேல இவனுங்க அளவுக்கு ஆர்வம் வந்ததில்லை. ஆனா உன்னை ரிஜக்ட் பண்ண தோணலையே" என யோசனை செய்வதுபோல் நாடியில் விரல் வைத்து தட்டினான். அதில் கண்ணீருடன் புன்னகைத்தவள் ஓடி வந்து அவனை கட்டியணைக்க சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டவன் "யா! (yah) ஐ லவ் யூ" என்றான்‌. அவனை நிமிர்ந்து பார்த்தவள் "நி..நிஜமாவா?" என்க "ஏன் ஃபீல்புல்லா இல்லயா?" என்றான்.


"உங்களுக்கு அதுலாம் வராதுன்னு எனக்கு தெரியும்" என அவள் கூற "ஓ.." என்றபடி அவளை இறுக்கி அணைத்தவன் "மேடம்க்கு அப்போ எப்படி சொல்லனும்?" என்றான். "அதான் சொன்னேனே உங்களுக்கு அதுலாம் வராது" என்றபடி எம்பியவள் "நா அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்" என்றபடி அவன் கண்ணத்தில் முத்தமிட்டாள்.


இவர்களை கைகோர்த்தபடி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த வம்சி மற்றும் சிற்பியில் சிற்பி, "சீக்ரெட் கிங்கா இருந்திருக்கீங்க. எவ்வளவு மேட்டர்ஸ உள்ள வச்சிருந்திருக்கீங்க" என வியந்தாள். "உள்ள வச்சிருந்த உனக்காக தான்" என்றவன் அவளை திரும்பிப் பார்த்து "ஹாப்பி?" என்க அவனை இறுக அணைத்தவள் "இதென்ன கேள்வி" என்றாள்.


இன்பமாக தங்கள் காதல் வாழ்வை தொடர்ந்த மூன்று ஜோடிகளும் நலம்பெற வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்!


முற்றும்…
 

NNK34

Moderator
எபிலாக்:


அன்றைய காலைப் பொழுதின் இதமான குளிர்ச்சியில் தன்னவன் அணைப்பில் பாந்தமாக பொருந்தி படுத்திருந்தாள், மதுராந்தகி. அவளை தன்னோடு அணைத்தபடி படுத்திருந்தவன், முன்னுச்சியில் புரளும் அவள் கூந்தலை மெல்ல ஒதுக்கி அவள் நுதழில் இதழ் பதிக்க, மென்மையான புன்னகையை உதிர்த்தாள்.


'கள்ளி.. முழிச்ச பிறகும் தூங்குற மாதிரியே நடிக்குறது' என எண்ணியபடி அவள் நாசியில் முத்தமிட்டவன் "உனக்கு நடிக்க கூட தெரியலடி மகி" என்றான்.


அதில் நாணத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டு இதழ் விரிந்து முத்துப் பற்கள் தெரிய புன்னகைத்தவளது அந்த புன்னகை அவள் வாழ்வை அவள் சுகமாக வாழுவதை பறைசாற்றியது.


"நேத்து கூட கோவமா இருக்குற போல பொய் சொன்ன. ஆனா பாரு..பொய்ய கூட முழுசா கடைபிடிக்க முடியல உன்னால" என ஆதி கூற "அச்சோ.. போதும்" என்றாள். அதில் வாய்விட்டு சிரித்தவன் "ஹாப்பி பர்த்டே" என்க விழித்திறந்து "தேங்ஸ்" என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.


எழ மனமின்றி படுத்திருந்த இரு ஜீவன்களில் ஆடவனை நிமிர்ந்து பார்த்த மது "ஐ லவ் யூ" என்றாள். அதில் புன்னகைத்த ஆதி அவள் நுதழில் இதழ் பதிக்க "புருஷன கட்டிபுடுச்சுட்டு தூங்கனும், மாமியார் கூட சமைக்கனும், மாமனார் கூட சேந்து மாமியார வம்பிழுக்கனும், சண்டை போடனும், முத்தா ரெண்டு பிள்ள பெத்துக்கனும், கூட்டு குடும்பத்துல சொல்லிக்க அத்தனை சொந்தத்தோட வாழனும்னு இருந்த ஆசைகள் கனவாவே போய்டுமோனு நினைச்சேன். அத்தனையும் உங்க ஒருத்தர் மூலமா வந்துடுச்சு" என்றவள் "உங்கள அவ்ளோ அவ்ளோ காதலிக்குறேன்" என மெல்லிய கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள்.


சில நிமிடங்களில் இருவரும் தயாராகி வர, அவள் மேடிட்ட வயிற்றை வருடியவன் "குட்டி தித்தன்" என அவள் கொஞ்சியதில் சிரித்துக் கொண்டான். இருவரும் கீழே வர நீள்விருக்கையில் திவியும் வசியும் தயாராக இருந்தனர்.


"ஏ குட்டு.. ஹாப்பி பர்த்டே" என திவி அவளை அணைத்துக் கொள்ள, அவள் தலைகோதிய வசியும் அவளை வாழ்த்தினான். பின் அவளை அமர்த்திக் கொண்டு திவி பேசத்துவங்கிட வம்சியும் சிற்பியும் ஒரு பட்டாளத்தையே கூட்டி.. இல்லை இல்லை மேய்த்து வந்தனர்.


கல்யாணி, யசோ, ஆதி மற்றும் கதிர் அந்த குட்டி பட்டாளத்தினை அணைத்து ஆரத்தழுவிக் கொண்டு‌சமையலறை கூட்டிச் செல்ல "என்ன மச்சான்.. நல்ல உறக்கம் போல?" என வம்சியிடம் கேட்டான், ஆதி.


அதில் அவனை கொலை வெறியுடன் பார்த்த வம்சி "டேய்.. எதாவது சொல்லிட போறேன்.. இதுகல நைட்டு தூங்க வைக்க தலையால தண்ணி குடிக்காத குறையா நானும் என் பொண்டாட்டியும் போராடிட்டோம்" என கூற சிற்பி "யம்மா சாமி.. என்னால முடியலை. இன்னிக்குலாம் நானே இதுங்க ரெண்டையும் கல்யாணி அம்மாட விட்டுட்டு படுக்க போறேன்" என்றாள்.


"குழந்தைங்கனா அப்படிதான்டா" என வசி கூற அவனை வெட்டவா குத்தவா என பார்த்த வம்சி "நீ என்ஜாய் பண்ணுறதுக்கு என்னைய பஞ்சா பிரிச்சுட்டு பேச்சாடா பேசுற? அடியே வாயாடி உம்புருஷன கப்பு சிப்புனு இருக்க சொல்லு" என கூறினான்.


வசியின் கையில் கிள்ளிய திவி "இதுக்கு தான் இவன்கிட்ட விடவேணாம்னு சொன்னேன். இப்ப எம்மானத்த வாங்குவான்" என கிசுகிசுக்க வாய்விட்டு சிரித்த வசி "அவன் ஒன்னும் இல்லாதத‌ சொல்லலையே" என அவள் கதருகே கூற பாவைக்கு தான் 'அய்யோ' என வெக்கம் வந்து படுத்தியது.


அதில் யாவரும் சிரிக்க ‌"அண்ணா.. பாவம் என் திவிய ரொம்ப ஓட்டாதிங்க" என மது கூற "அப்டி சொல்லுடா" என கூறிய திவி மதுவை அணைத்துக் கொண்டாள். ஆனால் அந்த சுட்டிப்பெண்ணோ "சொல்றேன்.. பாவம் நீயே டயர்டா இருப்ப.. இவ்ளோ ஓட்டினா வெக்கத்துல எழுந்து போகவேண்டி வரும். ஆனா நீ தான் டயர்டா இருப்பியே" என்றதும் யாவரும் வாய்விட்டு சிரிக்க தன்னவளை அரவணைத்துக் கொண்டு "டேய் டேய்.. போதும்டா" என வசி கூறினான்.


உள்ளே சென்ற பட்டாளம் மீண்டும் வரவே "ஹாப்பி பர்த்டே மம்மி" மற்றும் "ஹாப்பி பர்த்டே அத்தை" என்ற வாக்கியங்கள் ஒன்றாக ஒலித்தது. வேகமாக ஓடி வந்து தந்தையிடம் தாவிக் கொண்டு அன்னை கழுத்தை கட்டி கண்ணத்தில் முத்தமிட்டு "லவ் யூ ம்மா.. ஹாப்பி பர்த்டே" என்றாள் ஆதித் மற்றும் மதுவின் காதல் பரிசான நான்கு வயது குழந்தை ஆதிரை.


"தேங்ஸ்டா குட்டி" என மகளை முத்தமிட்டவள் முகத்தில் அத்தனை பூரிப்பு! ஆதிரையை அடுத்து வந்த இரட்டை பெண் குழந்தைகள் கையில் தாங்கள் வரைந்த ஒரு கிரீட்டிங் கார்டுடன் "ஹாப்பி பர்த்டே மது த்தை" என்க "தேங்கியூ வினி" "தேங்கியூ வித்து" என இருவரையும் மது முத்தமிட்டாள்.


வசி மற்றும் திவியின் ஐந்து வயதான இரட்டை கொழுந்துகளே, வித்யாம்பிகை மற்றும் வினிதாம்பிகை.


அவர்களையடுத்து "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை" என ஆதி மற்றும் மது இருக்கும் புகைபடத்தின் மென்தகடை பரிசாக வழங்கினர் வம்சி மற்றும் சிற்பியின் ஏழு வயது இரட்டை ஆண்பிள்ளைகளான ஆரியன் மற்றும் ஆரோஹன்.


குழந்தைகளின் வாழ்த்து முடியவே பெரியோரிடம் ஆசி வழங்கி உண்டு வந்தவளுக்கு 'MD' என்ற எழுத்துக்களை டாலராகக் கொண்ட அழகிய தங்க சங்கிலி ஒன்றை திவி அணிவித்தாள்.


"ஏ திவி.." என அதை பூரிப்புடன் பார்த்த மது அந்த டாலரை வருட ஆதியை பார்த்து "என்னதான் இவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருந்தாலும், இவ என் மதுதான்" என திவி கூறினாள்.


அதில் புன்னகைத்த ஆதி "அஃப்கோர்ஸ்.. நான் காதலிச்சதும் திவியோட மதுவ தான்" என்றான். 'எங்க நட்ப புரிஞ்சுக்குற ஒருத்தரா எம்மதுக்கு கிடைப்பாங்க' என என்றோ திவி கூறியது வம்சியின் காதுகளில் ஒழித்து அழகிய புன்னகையை உதையமாகச் செய்தது.


இதமான மனநிலையுடன் யாவரும் கோவிலுக்கு செல்ல, பின் வாகனம் ஏதோ புது பாதையில் பயணித்தது. "எங்க போறீங்க?" என மது கேட்க "எம்பொண்டாட்டிக்கு நா இன்னும் கிப்ட் தரலையே" என்றான். "உங்க பொண்டாட்டிய கேட்டா நீங்களே பெரிய கிப்டுனுல சொல்லுவா" என சிற்பி கேலி செய்ய "அதானே" என மனைவிக்கு வம்சி ஒத்து ஊதினான்.


கலகலப்புடன் வண்டி ஒரு ஆசிரமத்தில் நின்றது. மது புரியாமல் விழிக்க, யாவர் இதழிலும் புன்னகை. மதுவின் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றவன் தன் மகளை தூக்கிக் கொண்டு அவள் காதில் ஏதோ கிசுகிசுக்க வேகமாக இறங்கி ஓர் அறையினுள் ஓடியவள் "டாடி ரெடி" என கத்தினாள்.


கணவனை கண்டு புரியாத புன்னகையுடன் மது உள்ளே நுழைந்ததும் விழிகள் விரிய உரைந்து நின்றாள். அங்குள்ள செவிற்றில் 'ஹாப்பி பர்த்டே மதுராந்தகி' என்றும் 'ஹாப்பி பர்த்டே மதியுகா' என்றும் ஒட்டப்பட்டிருந்தது.


ஒரு குழந்தையை ஆசிரமத்து உதவியாளர் உதவியுடன் தூக்கி வந்த ஆதிரை "அம்மா.. நம்ம வீட்டு பாப்பா மதியுகா" என்க ஆதித்தை வியப்புடன் ஏறிட்டாள்.


குழந்தையை வாங்கி அவளிடம் கொடுத்தவன் "நம்ம பாப்பா" என்க சில தினங்கள் முன் தன்னிடம் காரணமின்றி சிலபல கையெழுத்துக்களை அவன் வாங்கியது நினைவு வந்தது.


கண்களில் கண்ணீருடன் பாவை அனைவரையும் நோக்க அவளை நெருங்கிய திவி மற்றும் சிற்பிகா "மது, திவி, சிற்பிகாவோட இந்த குடும்பத்துக்கு வரும் புது மெம்பர் மதியுகா" என்றனர்.


"நா, வசி, சிபி, வாயாடி அன்ட் ஆதியோட கிஃப்ட்" என வம்சி கூற கண்ணீருடன் யாவரையும் ஏறிட்டாள். மதுவின் முன் வந்து "உன் ஆசைல இதுவும் இருக்குனு எனக்கு தெரியும் பாப்பா" என கூறியவன் "எனக்காக பிறந்த பாப்பாக்கும் என்னோட பாப்பாக்கும் ஒரே நாள்ல பிறந்தநாள் கொண்டாடிலாம்னு தான் சொல்லாம இருந்தேன்" என்றான்.


அனைவரையும் கண்டு "தே..தேங்ஸ்.." என இதழசைத்த மது தன் கையில் சிணுங்கிய இரண்டு மாத குழந்தையின் நெற்றியில் முத்தமிட அத்தருணத்தை படமாக்கி மென்தகடிட்டு தங்கள் வீட்டு கூடத்தில் மாட்டப்பட்டிருப்பதை கண்டு குடும்பமே புன்னகைத்தது.


முற்றும்…
 
Status
Not open for further replies.
Top