எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கருவறைக் காதல் - கதைத்திரி

Status
Not open for further replies.

Habi

Moderator
அத்தியாயம் - 01


என் முதல் தாயாக நீயும் உன் முதல் சேயாக நானும் இருக்க என்றும் உன் அன்பில், அணைப்பில் உருகி கரையும் உன் கருவறைக் காதலி நானடா.


வெண்பனி போர்த்திய மலைகளைப் போல் எங்கும் வெண்மை நிறைந்து இருக்க புகை மண்டலம் சூழ்ந்து அந்த ரம்யமான அழகிய காட்சியை கண்களில் தாங்கி அதில் தன் மொத்த ரசனைகளையும் செலுத்தி லயித்திருந்தாள் அவள் வெண்ணிலவின் தோழி வெண்மதியாள்..

அந்த வெண்மதிக்கு போட்டியாய் பிறந்தாளோ பெண்ணவள் பூமுகமும் மென்மையான அழகை பிரதிபலித்திட அவள் கண்களில் நிறைந்த பூரிப்பு மேலும் அவளை அழகூட்ட கைவிரித்து இயற்கையோடு ஒன்றிற்கும் முனைப்போடு இயற்கை அன்னை அள்ளித்தந்த அற்புதமான ரசனையில் தன்னை மறந்து லயித்திருந்தவளின் காதுகளில் நாரசமாய் ஒலித்தது அவள் சிற்றன்னை கஸ்தூரியின் கத்தல் குரல்..

"ஏய் எழுந்திரிடி எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்கேன்" என்று மீண்டும் அதே குரல் ஒலித்திட..திடுக்கிட்டு பதறி எழுந்தவளின் இனிய கனவோ கலைந்து தான் போனது..

முதலில் திருதிருவென விழித்தவளுக்கோ சற்று முன் கண்ட காட்சிகள் கனவு என்பது புரியவே சற்று நேரம் எடுத்திருக்க அதற்கிடையில் மீண்டும் தன் ஒலிபெருக்கியை ஒலிக்கவிட்டிருந்தார் கஸ்தூரி..

அதில் அவசரமாய் கண்களை கசக்கிவிட்டு எழுந்தவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளிமுடிந்திட்ட சமயம் அறைக்குள் நுழைந்த அவள் சித்தியோ மீண்டும் தன் கத்தலை தொடங்கினாள்..

"எவ்வளவு நேரமாடி எழுப்புறேன்..மகாராணிக்கு தூக்கம் கேக்குதோ?? எழும்பி வேலையை பாருடி" என்ற காலை நேர அர்ச்சனையை அவரிடம் வாங்கிக் கொண்டே அன்றைய நாளை துவங்கிக் கொண்டாள் வெண்மதி..

வெண்மதி பெயருக்கேற்றது போலவே அந்த வானத்து வெண்ணிலாவின் அழகை கொண்டு பிரகாசிக்கும் அழகைக் கொண்டவள்..மெல்லிய உடல்வாகு பால்வண்ண வட்ட முகம் அதில் உருளும் மீன்விழிகள்..திருஷ்டி பொட்டாய் அவ்விழிகளில் இழையோடும் சிறுசோகம், இப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க இருக்கும் ஆசைகளை அதிகம் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் கிராமத்து எழில் கொஞ்சும் அழகிய அமைதியான மங்கையவள்.

சிற்றன்னையின் கத்தலில் அவசரமாய் எழுந்து கொண்டு குளியறை நுழைந்தவளின் அன்றைய நாளுக்கான ஓட்டம் தொடங்கியது.
சிறிது நேரம் தான் சென்றிருக்கும் மீண்டும் சித்தியின் குரல்

"அடியேய் இன்னும் என்னடி பண்ற வந்து வேலையைக் கவனிடி"எனக் கூறிய மறு நிமிடம் மின்னலென தன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சமையலறை நுழைந்தாள்..

அதே நேரம் வீட்டு வாசலிலோ
"என்ன கஸ்தூரி காலையிலே ஒரே சத்தமா இருக்கு" எனக் கேட்டபடி உள் நுழைந்தனர் அந்த தம்பதியினர்.

அவர்களை கண்ட கஸ்தூரியோ புன்னகையுடன்
"அடடே வாங்க அண்ணா வாங்க அண்ணி" என அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்தார்..

"என்ன கஸ்தூரி ரொம்ப சத்தமா இருக்கு" என்ற தன் அண்ணி வசந்தாவை பார்த்த கஸ்தூரியோ தன் புலம்பழுக்கான காரணத்தை கூறினார்..

"அந்தக் கழுதையைத் தான் எழுப்பிக்கிட்டு இருந்தேன் அண்ணி அதான் சத்தம்" என சலிப்புடன் மொழிந்தார்..

அவர் முகத்தின் சிடுசிடுப்பை பார்த்த வசந்தாவோ எப்போதும் போல "ம்ம் வாழ வேண்டிய வயசுல உனக்கு இப்பிடி ஒரு பாரம் வந்து ஏறி இப்போ வாழ்க்கை பூரா தொடருது" எனக் கூறி பெருமூச்சு விட அவருடைய இந்த போலியான வருத்தத்தில் எரிச்சலடைந்தவருக்கோ இது ஒன்றும் புதிதல்ல கடந்து வந்த பதினெட்டு வருடங்களாக நிகழும் நிகழ்வுதான்.. இவ்வாறான அவருடைய போலியான வருத்தத்தில் எரிச்சலடையும் கஸ்தூரியின் கோபத்திற்கு உள்ளாவது என்னவோ அந்த அழகுப் பாவையே..

மூர்த்திக்கோ மனைவியின் பேச்சும் தங்கையின் எரிச்சலும் நிலமையை உணர்த்த பேச்சை முடிக்கும் பொருட்டு "சரி சரி விடுங்க முடிஞ்ச கதையெல்லாம் பேசிக்கிட்டு" எனக் கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார் அந்த மென்னுள்ளம் கொண்ட மனிதர்..

அண்ணனின் வார்த்தையில் அதைவிடுத்தவர் அவர்களிடம்
"என்ன அண்ணி வீட்டு பக்கம் வந்து இருக்கிங்க ஏதும் விசேஷமா???" என்றார்..

அவரின் கேள்வியில் வந்த விடயம் நினைவு வந்தவராக வசந்தாவோ "ஆமா கஸ்தூரி நம்ம சாந்திக்கு நல்ல வரன் ஒன்னு அமைஞ்சு இருக்கு அதான் அத சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.." என்றார்..

"என்ன அண்ணி சொல்றிங்க நம்ம சாந்திக்கு கல்யாணம் பண்ண போறிங்களா?? அவளுக்கு இப்போ தானே பதினெட்டு வயசு அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்.." என அதங்கமாய் தன் கேள்வியை முன்வைத்தார்..

அவரோ ஒரு பெருமூச்சுடன் "ம்ம் இப்போ காலம் ரொம்ப கெட்டு போய்க்கிடக்கு கஸ்தூரி..இதெல்லாம் காதல் கத்தரிக்கானு அலையுற வயசு அதான் அவசரமா இந்த முடிவு.." என்றவரின் பார்வையோ கஸ்தூரியை அர்த்தமாய் பார்த்து வைத்தது..

தன் அண்ணியின் பேச்சில் முகம் சுருக்கியவர் "என்ன அண்ணி இப்பிடி சொல்றிங்க நம்ம சாந்தி அப்பிடி எல்லாம் செய்றவள் இல்லை.."என்று தன்விருப்பமின்மையை வெளிப்படுத்தினார்..

வசந்தாவோ அப்போதும் விடாதவராய் "நான் சாந்திய சொல்ல இல்லை பொதுவா இந்த காலத்து பசங்கள சொன்னேன்" என அங்கே காபி கொண்டு வந்த வெண்மதியை பார்த்து ஜாடையாக பேசினார்..

அவரின் ஜாடை பேச்சு கஸ்தூரி வெண்மதி இருவருக்கும் புரிந்தது.

கஸ்தூரிக்கு அவரின் ஜாடை பேச்சு கோபத்தை தந்த போதிலும் வீடு தேடிவந்தவரிடம் முகம் திருப்பக்கூடாது என்பதற்காக அவரின் பேச்சை ஆமோதிப்பவராய்
"நீங்க சொல்றதும் சரி தான் அண்ணி." என அவர் முடிவுக்கு ஒத்து ஊதி அமைதியாகினார் கஸ்தூரி..

மதிக்கோ சிற்றன்னையின் பேச்சில் முகம் சுருங்கிட அமைதியாய் நின்றிருந்தாள்..அவளை பொறுத்தவரை அவள் இலட்சியம் கனவு எல்லாம் வேறு அல்லவா?? ஆனால் அதற்கு தடையாக இந்த திருமணப் பேச்சு அமைந்துவிடுமோ என்றெண்ணியவள் மனமோ..சித்தியை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று எடுத்துரைக்க அமைதியாய் நின்று கொண்டாள்..

வசந்தாவோ கஸ்தூரியின் ஒப்புதலில் மேலும் அவரைத் தூண்டியவராய்.."ஏன் கஸ்தூரி மதிக்கும் சாந்திட வயசு தானே" என தூண்டில் போட.. கஸ்தூரியோ "ஆமா அண்ணி" என்றார்..

வசந்தாவோ தற்போது பார்வையை வெண்மதி புறம் திருப்பியவர்..
"ம்ம் என்னமா மதி பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கியா??"என்றார் அவளிடம்..

அவர் கேள்வியில் திடுக்கிட்டவள் நிமிர்ந்து "ஆமா அத்தை ரெம்ப நல்லா எழுதியிருக்கேன்" என அமைதியான குரலில் கூறினாளும் அந்தக் குரலில் இருந்த துள்ளல் சந்தோஷத்தைக் கண்ட வசந்தாவிற்கு எரிச்சல் வந்தது.

தன் பிள்ளையை விட அழகிலும் அறிவிலும் உயர்ந்த வெண்மதியின் மீது எப்போதும் மிகுந்த எரிச்சலே அவருக்கு..

முகத்தை கோணியவர்..
"என்னத்த படிச்சு என்னத்த செய்ற.. வயசு பொண்ணுங்களுக்கு அந்தெந்த வயசுல கல்யாணம் பண்ணி வெச்சிடனும் இல்லைனா நமக்குதான் ஆபத்து" எனக் குத்தலாக மொழிந்திட கஸ்தூரியின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

கஸ்தூரியின் யோசனை முகத்தைக் கண்டவர் தான் வந்த வேலை சிறப்பாக முடிந்த சந்தோஷத்தில் அங்கிருந்து விடை பெற்றவர்..
திரும்பி வந்து கஸ்தூரியிடம் எதையோ முனுமுனுத்து விட்டுச் செல்ல..

அவரின் பேச்சும் நடவடிக்கையும் வழமையே என்பது போல் சுவர் ஓரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த வெண்மதியின் பார்வையோ சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படச் சட்டத்தில் புன்னகையுடன் வீற்றிருந்த தன் பெற்றோர் முகத்திலே நிலைத்திருந்தது..

கிராமத்தில் நல்ல வசதி படைத்த கேசவன்.. மற்றும் பிறந்த வீட்டு உறவுகளின்றி தன் காதலனையும் காதலையும் நம்பி வந்த பூமாதேவி இருவரின் காதலின் சாட்சியாகாப் பிறந்தவளே அவர்களின் செல்லச் சீமாட்டி வெண்மதி.

குழந்தை பிறந்த பின் பிரசவத்தின் பின் ஏற்பட்ட ஒரு சில உடல் உபாதைகளால் கைக்குழந்தையும் தன் காதல் கணவனையும் விட்டு விண்ணுலகம் எய்தினார் பூமாதேவி

காதல் மனைவியின் இழப்பு ஒருபக்கம் வேதனை தர மறுபக்கம் பிறந்தவுடனே தாயின் அரவணைப்பை இழந்த பச்சிளம் குழந்தையின் ஏக்கம் என கேசவனை வாட்டி வதைக்க ஓய்ந்து தான் போனார்..

தன் நண்பன் படும் கஷ்டத்தை பார்த்த மூர்த்தியோ மனமுவந்து தன் தங்கையை திருமணம் செய்யுமாறு கேட்டிட முற்றாய் மறுத்துவிட்டார் கேசவன்..

மூர்த்தியோ விடாது அவரிடம் பேசியவர் தன் தங்கையின் நிலைமையையும் எடுத்துக் கூறினார்..திருமணம் முடித்தும் குழந்தையின்மையினால் வாழாவெட்டியாய் தன் வீட்டில் இருக்கும் தங்கைக்கு ஒரு வாழ்க்கை கொடுக்குமாறு நண்பனிடம் கேட்டவர் அதோடு உன் பிள்ளைக்கு ஒரு தாயாகவும் இருப்பாள் என அவரை பேசிப் பேசியயே திருமணத்திற்காக சம்மதிக்க வைத்திருந்தார்..

காலம் அழகாக நகர்ந்தது கஸ்தூரியின் வாழ்க்கையும் சந்தோஷமாகவே இருந்தது...ஒரு கணவன் மனைவியாய் இருவருக்குமே அந்நியொன்னியம் இல்லாதுவிடினும் ஒரு நல்ல பாதுகாவலனாய் நல்ல தந்தையாய் தன் குடும்பத்தை காத்து நின்றார் கேசவன்..

கஸ்தூரியோ தாய்க்கு நிகராய் இல்லாவிடினும் தன்னால் இயன்றவரை மதியை நன்றாகவே கவனித்து வந்தார்.

மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருந்த அவர்களின் அழகிய கூட்டில் திடீர் இடியாய் வந்து வீழ்ந்தது என்னவோ கேசவனின் இறப்புச் செய்தியே..

வீட்டின் ஆணிவேராய் தாங்கி நின்றவர் முற்றாய் சாய்ந்திட..இத்தனை காலமும் அவர் பாதுகாப்பில் இருந்த கஸ்தூரியின் மனமோ அவர் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது தவிக்க அதனால் உண்டான கோபம் கவலை அனைத்தும் வெண்மதி மீதே இறங்கியது..

பருவ வயதையும் எட்டாத அச்சிறு பாவைக்கோ தந்தையை இழந்த வலி ஒருபுறம் என்றாள் தன்னை இத்தனை நாளாய் காத்து நின்ற சிற்றன்னையின் திடீர் வெறுப்பு ஒருபுறம் சேர்ந்து கொள்ள மொத்தமாய் நொடிந்து போனாள்..

இத்தனை நாள் அன்பை கொட்டியவர் இன்று மாறிப் போனதை சிறு பெண்ணவளால் ஏற்றுக் கொள்ள முடியாதுவிடினும் காலம் அழகாய் கற்றுக் கொடுத்தது அவளுக்கான பக்குவத்தை..

வாழ்க்கையின் மீது விரக்தி கொண்டே தன் மீது கோபத்தை காட்டுகிறார் என்று மெல்ல மெல்ல நிதர்சனத்தை உணரத் தொடங்கியவள் அன்று முதல் இன்று வரை தன் சித்தியிற்காக மௌனம் காத்து நின்றாள் பாவையவள்...
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் -02


அன்றைய வசந்தாவின் வருகையின் பின் கஸ்தூரியின் மனம் முழுவதும் யோசனையிலே ஆழ்ந்து போனது..


எதை எதையோ யோசித்தவராய் இருதினங்களாய் அமைதியாய் வலம் வந்த சிற்றன்னையை கண்ட வெண்மதிக்கோ அவர் எண்ணவோட்டம் புரியாமல் இல்லை..அன்றைய அத்தையின் போதனை தான் காரணம் என்றதை உணர்ந்தவளோ சிற்றன்னையின் முடிவு அடுத்து இதுவாகத்தான் இருக்கும் என ஊகித்திருக்க அவளின் எண்ணத்தை பொய்யாக்காது அடுத்து வந்த நாட்களில் கைநிறைந்த போட்டோக்களுடனும் ஜாதகங்களுடனும் வந்து சேர்ந்தார் கஸ்தூரி..


வீட்டினுள் நுழைந்தவர் தன் கையிலிருந்த பையை அவளை நோக்கி நீட்டியவராய் .."இதுல சில போட்டோஸ் இருக்கு இதுல உனக்கு பிடிச்சத பார்த்து சொல்லு மதி" என கூறிவிட்டு அவள் முகம் பார்த்தார்..


அவரின் பேச்சில் ஓர் நொடி அதிர்ந்தவளின் மனம் முழுவதும் அவளின் லட்சிய கனவு மின்னி மறைந்திட கண்ணில் நிறைந்த
தவிப்புடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள்..


பெண்ணவள் விழிகள் கூறிய செய்தியே அவளின் மறுப்பை உணர்த்திட ஒரு கணம் கண்மூடித் திறந்தவர் ஒரு பெருமூச்சுடன் அவளருகில் அமர்ந்து அவள் கரத்தை பற்றிக் கொள்ள.. அவர் என்ன கூறுவாரோ என்ற தவிப்புடன் அவரையே பார்த்து இருந்தாள் வெண்மதி..


சில நொடி மௌனம் காத்தவர் பின் மௌனம் களைந்தவராய் தன் மனதில் உள்ளதை கூறத் தொடங்கினார்..


"இங்கப் பாரு மதி..நான் சொல்றத கவனமா கேட்டுக்கோ.. நான் சொல்றது உனக்கு புரியுமான்னு தெரியல ஆனா இத நான் இப்போ சொல்லித் தான் ஆகனும் .. கொஞ்ச நாளா நம்மள சுத்தி ஏதோ தப்பாவே நடக்குற போல ஒரு எண்ணம் என் மனச குடைஞ்சிக்கிட்டே இருக்குது..ஏதோ மனசுக்குள்ள ஒரு பயமாவே இருக்கு என்றவருக்கோ நிஜமாகவே ஏதோ ஒரு பயம் ஆட்டிக் கொண்டிருந்தது..
அதே பயத்தோடு இருந்தவருக்கு அன்று வசந்தாவின் வருகையும் அவர் பேச்சும் ஒரு யோசனையை கொடுத்திருக்க அதையே நிறைவேற்றவும் செய்திருந்தார்..


"என்னோட பயம் தேவையில்லாததா இல்ல நிஜமான தான்னு எனக்கு தெரியல ஆனா ஒரு அம்மாவா எனக்கு சில கடமைகள் இருக்கு அதை நான் பண்ணணும் அதுக்கு தான் இந்த கல்யாண ஏற்பாடு..உனக்குன்னு ஒரு துணையை தேடி தந்துட்டேன்னா அப்புறம் நான் நிம்மதியா இருந்திடுவேன்..உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா இதுல உனக்கு பிடிச்ச மாப்பிள்ளை போட்டோவ பார்த்து சொல்லு " என்றவர் அவள் தலை வருடிவிட்டு அங்கிருந்து அகன்றார்..


நீண்ட நாட்களுக்கு பின்னான சித்தியின் இந்த மென்மையான பேச்சில் சற்றே ஆச்சர்யத்துடன் அவரை பார்த்து இருந்தவளுக்கோ அவரின் குரலில் இருந்த மாற்றம் புரிந்தாலும் அவர் கூறிச் சென்ற சில விடயங்கள் புரியாதவளாய் குழம்பிப் போய் அமர்ந்திருந்தவள் கையிலிருந்த பையை பார்த்தாள்..


அவர் கூறிச் சென்றது போல அவர் மேல் கொண்ட நம்பிக்கைக்காக அதை பிரித்து பார்க்க எண்ணியவளாய் அறைக்குள் நுழைந்தாள்..


மனமே இன்றி சித்தியின் ஒற்றைச் சொல்லுக்காக பையிலிருந்த போட்டோக்களை வெளியிலடுத்தவள் பார்வை வீழ்ந்தது என்னவோ அந்த ஒரு புகைப்படத்திலே..


இமைக்காது புகைப்படத்தில் பார்வையை வைத்திருந்தவளுக்கோ அதில் இருந்தவனின் விழிகளின் கூர்மை ஏதோ செய்திட தன்னிலை மறந்து அதை ரசித்துக் கொண்டிருந்தாள்..


முதல் பார்வையிலே அவளறியாது அந்த ஆடவன் மீது சிறு ஈர்ப்புத் தோன்றினாலும் அதை மறைத்துக் கொண்டவள் மனமோ நிலையில்லாது தவித்தது..


அவள் கனவுப் பாதை ஒரு புறம் இருக்க சிற்றனையின் இந்த திடீர் திருமண ஏற்பாடு என இரண்டுக்குமிடையே குழம்பியவளாய் தடுமாறியவள் ஓர் நிலையான முடிவின்றி குழப்பத்துடனே தூங்கிப் போனாள்..


......


அடுத்த நாள் காலையில் தூக்கம் களைந்தவள் காதில் வந்து வீழ்ந்த சத்ததில் அடித்துபிடித்து எழுந்து கொண்டவளுக்கோ மனமோ படபடவென அடித்துக் கொண்டது..


வெளியில் கேட்ட சத்திலே வந்திருப்பது யார் என்று புரிந்தவளுக்கு உடல் நடுங்கியது..


அது வேறு யாருமல்ல கஸ்தூரியின் தம்பி தாஸ் என்பவனே..


பருவம் எய்திய நாளிலிருந்தே தன் மீது விழும் அவனின் வக்கிரப் பார்வை கண்டு எத்தனை நாட்கள் ஓடி ஒழிந்திருப்பாள்..அப்போது எல்லாம் அவளுக்கென்று ஒற்றைக் காவலாய் இருந்தது என்னவோ கஸ்தூரியே..அவரை தாண்டி அவனாலும் அவளை நெருங்க முடியாது விட அதுவே இத்தனை காலமும் வெண்மதிக்கு மிகுந்த நிம்மதியை கொடுத்திருக்க..இன்றோ வீட்டிற்குள்ளே கேட்ட குரலில் சற்று மிரண்டு தான் போனாள் பெண்ணவள்...


பயத்தில் படபடக்கும் இதயத்துடன் வெளியே அக்கா தம்பி இருவருக்குமிடையேயான பேச்சில் தன் கவனத்தைச் செலுத்தி கேட்டிருந்தாள் வெண்மதி..


"அக்கா என்னக்கா திடீர்ன்னு மதிக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டியாம் அந்த தரகர் சொன்னான்.." என்றவன் கேள்வி அமைதியாய் வந்த போதிலும் அவன் பார்வை தன் அக்காவை இப்போதே கடித்துக் குதறி விடும் அளவிற்கு ஆத்திரத்தில் சிவந்திருந்தது..


கஸ்தூரியோ அவன் பார்வையை காணதவர் அவன் கேட்ட கேள்விக்கு பதிலாய் "ஆமாடா அண்ணி நம்ம சாந்தியோட கல்யாணம் பத்தி பேசிட்டு போகும் போது தான் சொன்னாங்க மதிக்கும் ஒரு நல்ல வரன பார்த்து முடிச்சிவிடுன்னு சொன்னாங்க அதுதான் நம்ம தரகர்ட சொல்லிவெச்சேன்.. அவரும் நல்ல மாப்பிள்ளைங்க போட்டோ கொடுத்துவிட்டாரு..கொடைக்கானல்ல ஒரு மாப்பிள்ளை இருக்காராம்னு போட்டோ கொடுத்தாரு நல்ல வேலை நல்ல பையன் அதோட நம்ம மதிக்கும் ரொம்ப பொறுத்தமானவனா இருக்கான்..மதிக்கு பிடிச்சிதுனா அடுத்த முகூர்த்தத்துலயே பேசி முடிச்சிடலாம்னு இருக்கேன்" என தன் போக்கில் பேசியவரை கோபமாய் இடை மறித்தான்..


"அக்கா நீ ஏன் வெளியூர்ல இப்போ மாப்பிள்ளை தேடுற..கண்ணு முன்னாடி தாய் மாமனா குத்துக்கல்லாட்டம் நான் இருக்கும் போது நீ எப்பிடி இப்பிடி பண்ணலாம்..இங்க பாருக்கா மதி புள்ளைய எனக்கே கட்டி வைச்சிடு உன் கண்முன்னாடி அவள ராணி மாதிரி நான் பார்த்துக்குறேன்.." என தமைக்கையிடம் நயமாய் பேசியவன் பேச்சில் அதிர்ந்தே போனாள் வெண்மதி..


"அம்மா" என சத்தமில்லாது முணங்கியவள் இதயத்தின் படபடப்பு அதிகரிக்க நடுங்கி நின்றவள் மனதில் பால் வார்ப்பது போலவே அடுத்து பேசிய கஸ்தூரியின் வார்த்தைகள் வந்து வீழ்ந்தன..


கஸ்தூரிக்கோ தம்பியின் பேச்சு கடுப்பைக் கிளப்பியது..என்ன தான் சொந்த தம்பியாய் இருந்தாலும் அவருக்கும் தெரியுமல்லவா தன் தம்பியின் சீத்துவம்..அதனாலே சற்று கோபமாய் "டேய் என்னடா பேசுற உனக்கும் அவளுக்கும் எப்பிடி பொருந்தும்..சும்மா வாய்க்கு வந்தத உளறாம போ.." என விரட்டாத குறையாய் அவனிடம் கூறினார்...


அவனுக்கோ அவரது பேச்சு ஆத்திரத்தை உண்டுபண்ண இத்தனை நேரமும் அமைதியெனும் போர்வையில் பேசியவன் அதைவிடுத்து ஆக்ரோஷமாய் கத்தத் தொடங்கினான்..


"இங்கப் பாருக்கா ஒழுங்கு மரியாதையா அவள எனக்கு கட்டிக் குடுக்க சம்மதிச்சன்னா ஊர்மெச்ச கல்யாணம் நடக்கும் இல்லையா தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவேன் இதுக்கு குறுக்க யாரு வந்தாலும் கொலை பண்ணக் கூட தயங்க மாட்டேன்" என உறைத்துவிட்டு வெளியேறினான்.


ஆக்ரோஷமாய் உறுமிவிட்டுச் சென்றவனின் பேச்சில் கஸ்தூரியே சற்று மிரண்டு தான் போனார்..இருந்தும் தன்னை மீறி எதையும் நடந்துவிடாது என நம்பிக்கை கொண்டவராய் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றார்..


அனைத்தையும் கேட்டிருந்த மதிக்கோ தாஸை எண்ணி பெரும் அச்சம் சூழ்ந்திட உடல் நடுங்க அமர்ந்திருந்தாள்..


திருமணம் ஹென்பதையே தற்போது ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தவளுக்கு அடுத்த இடியாய் இவன் ரூபத்தில் வந்திருக்க அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்திலே அடுத்து வந்த நாட்களை நகர்த்தினாள்..


.....


கஸ்தூரியோ தன் தம்பியை முழுதாய் அறிந்தவராய் நிச்சயம் மதியின் வாழ்க்கையில் இவனின் குறுக்கீடு வரும் என ஊகித்தவர் மறைமுகமாகவே அவளுக்கான திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தார்..


என்ன தான் ஒழித்து மறைக்க முயன்றாலும் ஒருகட்டத்தில் அது அவன் காதை சென்றடைய அதன்பின் அவன் தொல்லைகள் அத்துமீறத் தொடங்கின..


அவனின் அத்துமீறல் ஒருபுறம் தொடர அதற்கு மேலும் தூபம் போடுபவராய் தினம் தினம் அவனிடம் ஏற்றிவிட்டார் வசந்தா..
"கொழுந்தனாரே நீங்க இன்னமும் பொறுமையா இருந்தீங்கன்னா உங்க அக்கா மதிய கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கே அனுப்பி வெச்சிடுவா" என அவனை தூண்டிவிட..


அவனோ"அண்ணி நான் எவ்வளவோ செய்துட்டேன்.. மிரட்டி கூடப் பார்த்துட்டேன் எங்க அக்கா எதுக்குமே அசரமாட்டேங்குறா..அந்த மதிய கட்டிக்கிட்டு சொத்து சுகத்தோட சுகமா வாழலாம்னு பார்த்தா என் கூட பிறந்ததே எனக்கு எதிரா நின்னு சதி செய்து" என கோபமாய் எரிந்து வீழ்ந்தான்..


"கொழுந்தனாரே புள்ள பூச்சி இருக்கும் போது நீங்க புயல் கிட்ட மோதாதிங்க..உங்க அக்கா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க போறது இல்ல அதனால நீங்க என்ன பண்றீங்கன்னா முதல்ல அவள உங்க குழந்தைக்கு அம்மாவாவா ஆக்கிட்டிங்கன்னா உங்க அக்கா உங்களுக்கே அவளை கட்டி வெச்சிடுவா என கேவலமான ஒரு யோசனையை அவனுக்கு கூறியவர்..தானும் ஓர் பெண்ணுக்கு தாய் என்பதை மறந்து தான் போனார் அக்கணம்..


தாஸுக்கோ பணம் மீது கொண்ட மோகமும் பெண்ணவள் அழகில் கொண்ட காமமும் இவரின் யோசனைக்கு தலையாட்டிட வைக்க அடுத்து எவ்வாறு அவளை அடையலாம் என யோசிக்க ஆரம்பித்தான்..


தாயினது பேச்சை மறைவில் நின்று கேட்டிருந்த சாந்திக்கோ தாயை எண்ணி அருவெறுப்புத் தோன்றினாலும் தன்னால் இவர்களை தடுக்க முடியாது என எண்ணியவள் தன் அத்தையின் காதுக்கே செய்தியை ரகசியமாய் கொண்டு சேர்த்திருந்தாள்..


சாந்தி மூலம் அடுத்து நடக்கப் போவதை அறிந்த கஸ்தூரிக்கோ அத்தனை நாள் இருந்த நம்பிக்கை ஆட்டம் காணத் தொடங்கியது..தாஸ் மட்டும் என்றாலாவது கஸ்தூரி எப்பாடு பட்டாவது அவனிடம் இருந்து மதியை காப்பாற்றி இருப்பார் ..ஆனால் சில நாட்களாய் அவனோடு சுற்றும் புது மனிதர்களை கண்டவருக்கோ அத்தனை சுலபமாய் தன்னால் மட்டும் அவனைத் தடுத்திட முடியாது என்பதை உணர்ந்தவர் இதற்கு வேறு மாற்றுவழியை யோசிக்கத் தொடங்க அவருக்கோ அவ்வொரு வழியை தவிர வேறேதுமே தோன்றாதுவிட அதையே செய்யவும் முடிவெடுத்துவிட்டார்..


....


நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதிக்கோ யாரோ தன்னை உலுக்குவது போல் தோன்ற பட்டென கண்விழித்தவள் தன்னெதிரே பதட்டத்தோடு நின்றிருந்த சிற்றன்னையை கண்டவள் "என்ன சித்தி.. என்னாச்சு" என்ற கேள்வியோடு கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள்..


அவரோ அவள் கேள்விக்கு பதிலளிக்காதவராய் "மதி எழுந்துரு சீக்கிரம் ரெடியாகு" என்றவர் அவள் மறு கேள்வி கேட்காதவாறு அவசரமாய் அவளை கிளப்பினார்..


அவளுக்கோ நடப்பது எதுவுமே புரியாதவளாய் அவசர அவசரமாய் தாயாராகி அவர் முன் வந்து நின்றிட அவரோ "மதிமா இந்தா இதுல உன் துணிமணி கொஞ்சம் பணம் இருக்கு அதோட உன்னோட செர்ட்டிபிகேட் பேப்பர்ஸும் எல்லாம் இருக்கு இதை பத்திரமா வெச்சுக்கோ.." என்றவர் அவளை அழைத்துக் கொண்டு சாமியறை நுழைந்தவர் சாமி படத்திற்கு பின்புறமிருந்து இரு கவரை எடுத்து அவள் முன் நீட்டினார்..


"இந்தா வாங்கிக்கோ மதிமா..உன்னோட அப்பா உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு இத உன்கிட்ட கொடுக்க சொல்லி தந்தது..ஆனா இப்போ இதை உன்கிட்ட கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்மா ..இதுல ஒன்னு உனக்கானது ..இன்னொன்னு உன்னோட அம்மாவுக்கு வேண்டபட்டவங்களுக்கானது" என்றவரை குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்..


"யாரு சித்தி அவங்க..எனக்கு அப்பிடி யாரையும் தெரியாதே..நான் எப்பிடி இத அவங்ககிட்ட கொண்டு சேர்ப்பேன்" என பாவமாய் முழித்து நின்றவளை கண்டவருக்கோ மனம் கனத்துப் போனது..


"இங்கப் பாரு மதி சொல்றத கவனமா கேளுடா..இன்னைக்கு இப்போவே நீ இந்த ஊரவிட்டு கிளம்பிப் போ ..இதோ இந்த லெட்டர்ல இருக்குற அட்ரெஸ் ..இதுல தான் நிச்சயம் இது போய் சேரவேண்டியவங்க இருப்பாங்க..இந்த லெட்டர் உன் மூலமா அவங்க கைக்கு போகனுங்குறது தான் உங்க அப்பாவோட எண்ணமே அதனால தான் இத்தனை வருசம் இத உன்கிட்ட கொடுக்காம வெச்சியிருந்தாரு ..அதனால எப்பிடியாச்சும் அவங்ககிட்ட போய் சேர்ந்திடுமா..நிச்சயம் அங்க உனக்கு பாதுகாப்பு கிடைக்கும்" என்றவர் கலங்கிய விழியோடு அவளை பார்த்து நின்றாள்..


மதிக்கோ எதுவுமே புரியாத நிலை என்ன நடக்கின்றது..என்ன சொல்கிறார் என புரியாது அவரைப் பார்த்தவளுக்கு அவர் இங்கிருந்து போய்விடு என்றதும் பயம் பிடித்துக் கொண்டது..


இத்தனை நாளும் தாய்ப் பறவையின் சிறகுக்குள் பாதுகாப்பாய் இருந்த அச் சிறுபெண்ணிற்கு வெளியுலகம் பற்றிய பயம் மனதை அச்சுறுத்த தன் சித்தியை மிரண்ட பார்வை பார்த்தாள்..


"சித்தி நா..நான் எங்க போவேன் சித்தி எனக்கு பயமாயிருக்கே நா..நான் எப்பிடி இங்க போய் சேருவேன்" என பயந்த குரலில் பேசியவளைப் பார்த்தவர் முதன்முறையாக தன் வளர்ப்பை எண்ணி நொந்து கொண்டார்..


இருந்தும் தன் மனதை வெளிக்காட்டாதவர் அவளுக்கு தைரியம் கூறுபவராய் "இங்கப் பாரு மதிமா ..நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை உனக்கு இப்போவே பதினெட்டு வயசாக போகுது..நீ தைரியமான பொண்ணா இருக்கனும் ..உன்னோட லட்சியம் என்னென்னு எனக்குத் தெரியும் உன்னோட லட்சியத்தை அடைய நீ இப்பிடி பயந்துட்டு இருக்க முடியுமா?? யோசிச்சு பாருடா" என்றவரின் பேச்சில் இருந்த உண்மை புரிய நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்..


"ஆனா பயமா இருக்கு சித்தி என்னால தனியா போக முடியுமான்னு தெரியலையே" என்றவளை அணைத்துக் கொண்டவர்..


"இந்த சித்திய மன்னிச்சுடு மதிமா தேவையில்லாத என்னோட விரக்தியினால உன்னவிட்டு ஒதுங்கியே இருந்துட்டேன்..உன் மேல அளவில்லா பாசம் இருந்தும் அதை வெளி காட்டமுடியாத சூழ்நிலையில் இருந்திட்டேன்டா..என்ன மன்னிச்சுடு மதிமா.. என வேதனையோடு கூறியவரை தவிப்புடன் ஏறிட்டாள்..


"என் அண்ணி பேச்சை கேட்கும் போது எனக்கே ஒரு விரக்தி வரும் அந்தா விரக்தியில உன்ன நான் காயபடுத்திடுவேன்..எல்லாத்துக்கும் இந்த சித்திய மன்னிச்சுடுடா..என்ன தான் திட்டினாலும் நீ என்னோட குழந்தைடா ..அம்மாவா நினைச்சி என்ன மன்னிச்சுடுமா" என கையெடுத்துக் கும்பிட அவரைத் தாவி அணைத்துக் கொண்டாள்...


"அம்மா ஏன்மா இப்பிடியெல்லாம் பேசுறீங்க எனக்கு உங்க மேல எந்த கோபமோ வருத்தமோ இல்லமா" என கேவிக்கேவி அழுதவள் முதுகைவருடிவிட்டு அவளை சமாதானம் செய்தவர் அவர் கன்னம் துடைத்து
" மதிமா இங்கப் பாரு இது அழ வேண்டிய நேரம் இல்லை இப்போ நீ இங்க இருந்து போய் ஆகணும் கிளம்பு" என்றவர் ..அவசரமாய் அவளை அழைத்துக் கொண்டு ஊரின் எல்லையிலிருந்த பேருந்து தரிப்பிடம் நோக்கி புறப்பட்டார்..


இருவரும் வரும் வழியிலே யாரோ தங்களை பின் தொடர்வது போல் தோன்றிட பயந்து போனார் கஸ்தூரி..


"மதிமா யாரோ பின்னாடி வரமாதிரி இருக்குடா..நீ எப்பிடியாவது பஸ் ஸ்டாப் போயிடு இன்னும் கொஞ்ச நேரத்துல

டவுன் பஸ் வரும் அதுல ஏறி கொடைக்கானல்க்கு டிக்கட் எடு சரியா பார்த்து போடா என்றவர் மனமேயின்றி அவளை மாற்றுவழியில் அனுப்பி வைத்தவர் தானும் வேறோரு வழியில் வீடு நோக்கிச் சென்றார்..


அவர் நினைத்தது போலவே தாஸின் கூட்டாளி ஒருவனே அவர்களை பின் தொடர்ந்திருந்தான்..எப்படியோ அவன் கண்ணிலிருந்து தப்பி இருவருமே மறைந்திருந்தனர்..


.....


அந்த நள்ளிரவு நேரத்தில் நெஞ்சில் பயத்துடன் பாதையோரம் நடந்து கொண்டிருந்தவள் கண்களும் கலங்கித் தான் போனது..


"அம்மா அப்பா எந்த ஆபத்தும் இல்லாம நான் போக வேண்டிய இடத்துக்கு என்ன கொண்டு சேர்ந்திடுங்க" என தன் பெற்றோரிடம் வேண்டிக் கொண்டவள் தூரத்தில் ஏதோ பஸ் நிற்பதை கண்டு சற்று தைரியம் வரபெற்றவளாய் அவசரமாய் அதை நோக்கி ஓடினாள்..


பெண்ணவளின் அதிஸ்டமோ துரதிஸ்டமோ அந்த பேருந்தை நெருங்கு முன்னே அதுவே கிளம்பியிருந்தது..


மூச்சு வாங்க ஓடிவந்தவளுக்கோ பேருந்தை தவறவிட்டதில் கண்ணீர் உடைப்பெடுக்க நின்றிருந்தாள்..


அதே நேரம் பெண்ணவளை மேலும் சோதிக்கவெனவே அவ்வழி வந்து சேர்ந்தனர் மூன்று குடிமகன்கள்..


"டேய் மச்சி அங்கப் பாருங்கடா பொண்ணு" என்றவன் குரலில் மற்றைய இருவரும் திரும்பி அவளைப் பார்த்தனர்..


"அட சரக்குக்கு நல்ல சைடீஸ் கிடைச்சியிருக்கு இன்னைக்கு நல்ல விருந்து தான் என்றவனோ மற்றையவர்களிடம்
"டேய் நீங்க பட்சியைப் பிடிங்க நான் வண்டி கொண்டு வாறேன் ஊருக்கு எல்லையில உள்ள மலைல வெச்சி இந்த பட்சியைக் கொண்டாடுவோம்" என்றவன் கிளம்பிட.. மற்ற இருவரும் பெண்ணவளை நெருங்கினர்..



அழுதவிழியோடு தன்நிலையை எண்ணி நொந்தவாறு நின்றிருந்தவளுக்கோ தன் அருகில் அசைவு தெரிய நிமிர்ந்து பார்த்தவள் சுதாகரிக்கும் முன்னே அவள் வாய் பொத்தி அவளை தூக்கி இருந்தனர்..
அந்த ஆள் அரவமற்ற சாலையிலே உதவிக்கு யாருமின்றி அந்த கயவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டாள் மதியவள்..
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 03


இத்தனை வருடம் பாதுகாப்பாய் தன் கூட்டிலிருந்து இன்றோ சந்தர்ப்ப சூழ்நிலையால் விரட்டப்பட்டு தன் கூட்டைவிட்டு வெளியேறிய சிறு பறவையொன்று கழுகுகளுக்கு இரையானது போன்ற நிலையில் மாட்டிக் கொண்டாள் பெண்ணவள்..


எத்தனை முயன்றும் அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்று தோற்றவளுக்கோ தன்நிலையை எண்ணி கண்ணீர் உடைப்பெடுத்தது..

"கடவுளே ஏன் எனக்கு இந்த நிலமை..ஒரு ஆபத்துல இருந்து தப்பிச்சு என்ன இன்னுமோர் ஆபத்துல சிக்கவெச்சிட்டியே " என மானசீகமாய் கடவுளிடம் முறையிட மட்டுமே முடிந்தது பெண்ணவளால்..

போதையில் தட்டுத் தடுமாறி வண்டியைச் செலுத்தியவர்களோ ஒரு வழியாக அந்த மலைப்பாங்கான இடத்தை வந்தடைந்தனர்..

"டேய் இறக்குடா அந்தக் குட்டிய" என்றவனின் குரலில் பயந்தவள் நெஞ்சோடு இறுக்கிய பையுடன் உடலை குறுக்கி அமர்ந்திருக்க.. அவர்களோ அலேக்காக அவளை தூக்கி இறக்கிவிட்டனர்..

தப்பிக்க ஏதாவது வழி கிடைக்குமா என சந்தர்ப்பத்தை காத்திருந்தவளோ அவர்கள் அசந்த நேரமாய் தன் பலம் மொத்தமும் சேர்த்து அவர்களை தள்ளிவிட்டவள் அடுத்த நொடி அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்..

எங்கும் கும்மிருட்டு சூழ்ந்த அந்த மலைப்பகுதியில் தட்டுத் தடுமாறி ஓடியவளை பிடித்துவிடும் வேகத்தில்

அவனுகளும் விடாமல் துரத்தினர்...

ஒரு கட்டத்தில் மலையின் உச்சியை அடைந்தவளுக்கோ போக இனி வழி இல்லை என்பது புரிந்து திரும்பிட அவளை நெருங்கியிருந்தனர் அக்கயவர்கள்..

"ஏய் எங்க ஓடுற மாட்னீயா..மவளே இன்னைக்கு செத்தடி" என்றவன் அவளை நெருங்க .. பயத்தில் பின்னே நகர்ந்தவளுக்கோ அக்கணம் தோன்றியது எல்லாம் ஒன்றே இவர்கள் கையில் சிக்கினால் மானமிழந்து உயிர் போகும் அதைவிட தானே மாய்த்துக் கொள்ளலாம் என்ற முட்டாள்தனமான எண்ணம் நொடியில் தோன்றிட கண்களை இறுக மூடியவள் அடுத்த அடி எடுத்து வைக்கத் தயாரான சமயம் கேட்டது ஒரு துப்பாக்கி சத்தம்..

அதில் மேலும் பயந்தவள் காதுகளை இறுகமூடியவளாய் தரையோடு மண்டியிட்டாள் என்றால் மற்ற மூவரும் கேட்ட சத்ததில் அதிர்ந்தவர்கள் எங்கு பொலீஸ் வந்துவிட்டார்களோ என்று பயந்து அவ்விடம் விட்டே தலைதெறிக்க ஓடினர்..

கண்களை இறுகமூடி குனிந்திருந்தவர்களுக்கோ பயத்தில் உதறத் தொடங்க கடவுள் பெயரை முணுமுணுத்தவளாய் சில நிமிடம் அமர்ந்திருந்தவள் எந்த அரவமும் இல்லாதிருப்பதை உணர்ந்து மெல்லமாய் கண்திறந்தவளுக்கோ அந்த காரிருளில் எதுவும் தென்படாதுவிட மெல்ல மெல்ல எழுந்து கொண்டவள்..
பார்வையை இருளுக்கு பழக்கப்படுத்திக் கொண்டவள் மெதுவாய் அவ்விடம்விட்டு நகர்ந்துவிடும் நோக்குடன் அடுத்த எட்டு வைத்திட மோதி நின்றது என்னவோ ஓர் உருவம் மீதே..

அதில் திடுக்கிட்டவள் அதிர்ந்து கத்தும் முன்னே அவள் வாயை தன் கை கொண்டு அடைந்திருந்தது அவ்வுருவம்..

அதில் விழிகள் மிரள முகம் தெரியாத அவ்வுருவத்தை பார்த்தவளுக்கோ அது ஓர் ஆண் என்பது புரிந்திட மேலும் பயம் தொற்றிக் கொண்டது..மறுபடியும் அடுத்த ஒரு கயவனிடம் மாட்டிக் கொண்டோமோ என்று எண்ணியவள் வேகமாய் அவன் பிடியிலிருந்து விலக முயல அவளின் முயற்சியை தடுத்தவன் தன்னையே விழிகள் மிரள பார்த்தவளின் விழிகளை அவ்விருளிலும் ஆழ்ந்து நோக்கினான் அவன்..

அவன் பிடித்திருந்த பிடியிலே அவளின் நடுக்கம் அப்பட்டமாய் தெரிய அவள் பயம் போக்க எண்ணினானோ என்னவோ மெதுவாய் அவள் புறம் குனிந்தவன் "ஹேய் ஏஞ்சல் கேர்ள் டோன்ட் பேனிக்.. ஐ.. ஐ வில் ஹெல்ப் யூ.. ஓகே" என சில வார்த்தைகள் தடுமாறினாலும் திடமாய் கூறிக் கொண்டவன் பிடியை தளர்த்தி அவளை விடுவித்தான்..

அதில் சற்றே பயம் நீங்கி ஆசுவாசமானவள் அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவனோ தொப்பென்று வீழ்ந்திருந்தான்..

"அய்யோ" என பதறியவளாய் அவனைப் பார்க்க..அந்த இருளில் அவன் முகம் அத்தனை தெளிவாய் தோன்றாது அவன் வரிவடிவமே புலப்பட்டது..


கீழே வீழ்ந்தவனோ மூச்சிப் பேச்சின்றி சில நிமிடத்தை கடந்திருக்க இவளுக்கோ நெஞ்சில் பயம் கவ்விக் கொண்டது..

"அய்யோ என்னாச்சு ...ஏன் சத்தமே இல்லாம இருக்காரு" என எண்ணியவளுக்கு ஒருவேளை இறந்துவிட்டானோ என்ற எண்ணம் மனதை ஆக்கிரமிக்க நடுங்கும் விரலோடு அவன் மூச்சுக்காற்றை சோதிக்க குனிந்தவளோ ""ஹேய் ஏஞ்சல் கேர்ள்..என்ன பண்ற" என திடீரென்று கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்..

அவனோ சாவகாசமாய் இவளைப் பார்த்தவாறே படுத்திருந்தான்..

"அ..அது ..நீ..நீங்க" என வார்த்தை வராது திக்கியவளைக் கண்டவனோ அவளை ஆழ்ந்து பார்த்தவாறே..
"நீ ஏன் இந்த நேரத்துல தனியே வந்த உங்க வீட்ல உன்னைத் தேடமாட்டாங்களா?? வீட்ல ஏதாச்சும் பிரச்சனையா?? அதான் வீட்ட விட்டு வந்திட்டியா?? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான்..

அவன் கேள்விகளில்
இத்தனை நேரமும் மறந்திருந்த தன்நிலை நியாபகம் எழ கண்கலங்கியவளோ பொங்கிய அழுகையோடு விசும்பினாள்.

அவளின் விசும்பல் ஒலியில் மெதுவாய் எழுந்தமர்ந்தவனோ தன் கர்ச்சீப்பை எடுத்து நீட்டியவனாய்
"ஹேய் ஏஞ்சல் கேர்ள் அழாத கூல்" என்றவன் தானே அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன் "சரி உன் பெயராச்சும் அழாம சொல்றீயா??" என்றதுமே அழுகையை நிறுத்தியவள்..
"வெ..வெண்மதி" என்றாள்..

"வாவ் நைஸ் நேம் அந்த மூன் போல அழகா ஏஞ்சல் போல தான் இருக்க நீ..ஆனா என்ன குட்டியா இருக்க" என்றவன் கரமோ அவள் தலையை களைத்துவிட..இவளோ பயத்தில் சற்றே விலகினாள்..

அவனோ"சரி என்னோட பெயர் கேளு ஏஞ்சல்" என சிறு குழந்தை போல் தன் முகம் பார்த்து கேட்டவனைப் பார்த்தவளோ "உங்க பெயர் என்ன??" எனக் கேட்டிட அடுத்த கணம் தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றவன் நெஞ்சை நிமிர்த்தியவனாய்
"ஐ ம் கௌசிக் நாராயண கிருஷ்ணா" என்றவனின் குரல் அந்த மலையுச்சி முழுவதும் எதிரொலித்தது..

அவன் குரலின் தொனியில் இவளோ மிரண்டு அவனைப் பார்த்திட அவனுக்கோ அவள் மிரண்ட விழி சிரிப்பை தர சிரித்தவன்.
"ஹஹா என்ன ஏஞ்சல் பயந்துட்டியா?? என்க நாலா பக்கமும் தலையசைத்து வைத்தாள்..

"சரி ஏஞ்சல் நீ இங்கயிருந்து தனியே போய்டுவியா.. ஏன்னா எனக்கு லேட் ஆகுது..எனக்குனு சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கு அதுதான் கேக்குறேன்.." என பேசியபடியே நடந்து சென்றவனை பின் தொடர்ந்தாள் அவள்..

ஏனெனில் இப்போதைக்கு இவன் ஒருவனை தவிர தன்னை காக்க வேறொருவரும் இல்லை என்பதால் அவனிடம் உதவி கேட்க எண்ணியவளாய் அவனை பின்தொடர்ந்தாள்..

அவனோ புதர் போன்ற ஒன்றினுள் புகுந்திட தானும் அதற்குள் நுழைந்தவள் சிறு டார்ச்லைட் வெளிச்சத்தில் மின்னிய அவ்விடத்தை கண்ணுற்றாள்..

அவனோ தள்ளாடும் நடையோடு அவ்விடம் சென்றவன் கரமோ அங்கிருந்த பையொன்றை துலாவி ஒரு கோக் போத்தலை எடுத்துக் கொண்டது..

அதை கையில் ஏந்தியவனோ அதையே வெறித்திருக்க இவளுக்கோ அவன் வெறித்த பார்வை ஏதோபோல் இருக்க அவனை எப்படி அழைப்பது என தடுமாறி நின்றிருந்தாள்..

அவனோ சிலநொடி அதே நிலையில் நின்றவன் பின் ஒரு பெருமூச்சுடன் அதை உடைத்தவன் பின் மீண்டும் எதையோ தேடத் தொடங்கினான்.."ம்ம் எங்கவெச்சேன் ...காணுமே" என புலம்பியபடி தேடியவனை கண்டவள்

"ஸார்..என்னாச்சு ஏதாச்சும் தேடுறீங்களா??" என்றிட நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் "ஆமா ஏஞ்சல் என்னோட டேப்ளெட்ஸ்அ காணல அதான் தேடிட்டு இருக்கேன்" என பதிலளித்துவிட்டு மீண்டும் தேடியவன் கண்ணில் சிக்கிக் கொண்டது..

"ஹாங் இதோ இருக்கு" என்றவன் அந்த போத்தல் முழுவதுமே அந்த கோக் போத்தலினுள் கொட்டிட அவன் செய்கைகளை பார்த்திருந்தவளுக்கோ பக்கென்றானது..

"அய்யோ ஸார் எதுக்கு மொத்தமா கொட்டுறீங்க" என கேட்டவளுக்கு பதிலாய் " ஐ நீட் டீப் சிலீப் ஏஞ்சல்..நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு ..இனி வர நாட்களும் அந்த நல்ல தூக்கம் கிடைக்குமான்னு தெரியலை அதுதான் மொத்தமா சிலீப்பிங் டேப்ளெட்ஸ் போட்டு இன்னைக்கே மொத்த தூக்கத்தையும் தூங்க போறேன்.." என விளக்கம் கொடுத்தவன் அதைகுடிக்க முயல..

அவன் விளக்கத்தில் அதிர்ந்து நின்றவளுக்கு இவன் என்ன லூசா என்றே தோன்றியது..அவன் அதை குடிக்க முயன்றதை கண்டவள் அவனைத் தடுத்தாள்..

"ஸார் குடிக்காதீங்க இப்பிடி மொத்தமா சாப்டிங்கன்னா உங்க உயிரே போயிடும்" என்றவளின் வார்த்தையில் நிறுத்தி அவள் முகம் பார்த்தவன்

"அப்படி சரி இந்த நரகத்துல இருந்து விடுதலை கிடைக்குமே எனக்கு" என்றவன் குரலில் அத்தனை விரக்தி நிரம்பியிருந்தது..

அவளுக்கோ அவன் பேச்சிலிருந்த விரக்தி புரிய மெதுவாய் அவனருகே சென்றாள்..

"இப்பிடி பண்ணாதீங்க ஸார் ..எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம்மளால தாங்கவே முடியாத அளவுக்கு கடவுள் கஷ்டத்த தர போறதில்ல ..என்னால முடியும் இதையும் கடந்து வருவேன் அப்படிங்குற ஒரு நம்பிக்கை நமக்குள்ள உருவாகி எதையும் சாதிக்கலாம்ங்குற தைரியம் உள்ளவங்கள மாறனும்னு தான் இந்த கஷ்டங்கள் எல்லாம்.." என தான் இருக்கும் நிலையையும் மறந்து அவனுக்கு ஆறுதலாய் பேசியவளை இமைக்காது பார்த்தான் கௌசிக் ..

அவன் பார்வை உணர்ந்தவளோ "எ..என்ன ஸார்" என தடுமாறி கேட்டாள்..

"என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகா போய்ட்டு இருந்துச்சு ஆனா அது இப்போ நரகமா மாறிடுச்சு ..என்னால முடியல..நான் நம்பிக்கை வெச்சியிருந்த உறவுங்க பொய்த்துப் போயிடுச்சு எனும் போதே அவன் உடல் இறுகிப் போனது..

"நாளைக்கு என் குடும்பத்த சந்திக்கனும் ஆனா என்னால முடியாது நான் சொல்லிட்டு வந்த வார்த்தையை என்னால காப்பாத்த முடியல..அத முடிப்பேனானும் தெரியல" என ஏதேதோ உளறியவனாய் தலையை கைகளில் தாங்கியவனுக்கு தலைசுற்றி கண்கள் இருட்டத் தொடங்கியது..


மதிக்கு அவன் பேசுவது எதுவும் புரியவில்லை.. ஏதோ குடித்துவிட்டு மன. கஷ்டத்தில் உளறுகிறான் என எண்ணியவள் அவனை நெருங்கவும் பயந்தவளாய் தள்ளி நின்றவாறே அவனை ஆறுதல் படுத்த முயன்றாள்..

"ஸார் எல்லாம் ஒரு நாள் சரியாகும் ..இந்த கஷ்டம் எதுவுமே இங்க நிரந்தரம் இல்லை நம்பிக்கை வைங்க..நாளைக்கே போய் உங்க குடும்பத்த பார்த்தா போதும் இந்த கஷ்டம் எல்லாமே மறந்து போயிடும்.." என்றவளின் பேச்சில் தன் குடும்ப உறவுகளின் எண்ணம் தோன்றிட இதழ்கடையோரம் மெலிதாய் புன்னகைத்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்..

"ஆமா நிச்சயம் என் குடும்பத்தை பார்த்தா என் கஷ்டம் எல்லாம் மறந்திடுவேன்" என்றவனோ தன் அழைப்பேசியை உயிர்ப்பித்து அதிலிருந்த தன் குடும்ப புகைப்படத்தை பார்த்திருந்தான் இதழில் உரைந்த புன்னகையோடு ..

அவளும் அவன் முகம் காட்டிய சந்தோஷத்தில் மெல்ல அவனருகில் சென்று தானும் பார்க்க..அவனோ அவளுக்கு ஒவ்வொருவராய் அறிமுகம் செய்தான்..

யார் எவரென்று அறியாமலே ஓர் இக்கட்டான நிலையில் சந்தித்துக் கொண்டவர்கள் அக்கணம் அடுத்தவரின் வலிக்கு ஆறுதலாய் மாறிப் போயினர்..

எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ திடீரென்று கேட்ட சலசலப்பில் அதிர்ந்தவள் அவனை பார்க்க ..அவனோ தலையை உலுக்கிக் கொண்டிருந்தான்..

கண்கள் இருள்வது போல இருக்க கண்ணை கசக்கிக் கொண்டவன் காதுகளிலும் சத்தம் கேட்டிட நிமிர்ந்தவனின் தோளை உரசி பின்னிருந்த மரத்தை துளைத்துச் சென்றது ஓர் தோட்டா..

திடீர் துப்பாக்கி தாக்குதலில் பெண்ணவளோ அதிந்து கத்தினாள்..என்றால் அவனோ "ப்ச் என்ற சலிப்புடன் தலையை உலுக்கி தன்னை நிதானபடுத்த முயன்றான்..

அதே நேரம் தோட்டா வந்த திசையிலிருந்தோ "டேய் பொண்ணு சத்தம் கேக்குதுடா..என்ன செய்வோம் அவனோட சேர்த்து அந்த பொண்ணையும் போட்டுடுவோமா??" என கட்டை ஆண்குரல் கேட்க அதுக்கு சம்மதமாய் ஒலித்தது மற்றையவனின் குரல்..

அனைத்தையும் கேட்டவளுக்கோ உடல் உதறிட பயந்து போய் அசையாது நின்றவளை உலுக்கியது என்னவோ அவனே..

"ஹேய் வா..என அவள் கரத்தை பற்றியிழுத்தவன் அடுத்த கணம் தடுமாற்றத்துடன் புதருக்குள் நுழைந்து அங்கு மறைவாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் வண்டியில் அவளை ஏற்றியவன் தானும் ஏறிக் கொண்டவனாய் வண்டியைக் கிளப்பினான்..

கண்கள் இருண்டிட வண்டியோ அவன் கைகளில் தடுமாறிட மேலும் பயந்து போனாள் மதி..

அவளுக்கோ நடப்பது எதுவும் புரியவில்லை..திரும்ப திரும்ப தான் சிக்கலில் மாட்டிக் கொள்ளவதை எண்ணி தன் விதியை நொந்து கொண்டவள் கண்ணீர் வழிய பயத்தோடு அமர்ந்திருந்தாள்..

ஏற்கனவே பயத்தோடு ஒன்றி அமர்ந்திருந்தவளின் பயத்தை கூட்டவென பின்னே தொடர்ந்தது சில வண்டிகள்..அதோடு துப்பாக்கியினால் தாக்கவும் செய்திட பயத்தின் உச்சத்தில் மயங்கித் தான் போனாள் வெண்மதி..

கௌசிக்கோ நிலைமையின் தீவிரம் உணர்ந்தாலும் இதிலிருந்து தப்பிக்க அவன் உடலும் மூளையும் ஒத்துழைக்காது விடவே தடுமாறித்தான் போனான்..

முடிந்த வரையிலும் தன்னை பின்தொடர்ந்தவர்கள் பார்வையில் மண்ணைத் தூவி விட்டு ஒருவழியாய் அவர்களிடமிருந்து தப்பித்து சென்னையின் ஹைவேயில் தன் வண்டியை செலுத்தத் தொடங்கினான்..

நீண்ட நேர பயணத்தின் பின்னே தான் தங்கியிருக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்திருந்தான் கௌசிக் ..

உடலோ காற்றில் மிதப்பது போல தோன்ற கண்களோ மங்கலாய்த் தோன்ற தலையை உலுக்கி சரிசெய்ய முயன்று தோற்றுத் தான் போனான்..

தட்டுத் தடுமாறியவன் பார்வையோ அருகிலிருந்தவளை பார்த்திட அவளோ மயக்கமா தூக்கமா என அறியாத நிலையில் கண்மூடி இருந்தாள்..

குழந்தையென தூங்கும் பெண்ணவள் முகத்தை உற்று நோக்கியவன் விழிகள் மங்க முயன்று தன் தலையை உலுக்கிவிட்டவன் அவளை தன்கரத்தில் தூக்கியபடி தன் வீடு நோக்கிச் சென்றான்..

பாதி இரவு தாண்டி மொத்த குடியிருப்பும் அடங்கிய அவ்வேளையிலும் இவனை எதிர்பார்த்து காத்திருந்தவன் போல நின்றிருந்த அவ்வொருவனின் பார்வையோ தடுமாற்றத்துடன் கையில் ஓர் பெண்ணை சுமந்து செல்பவனையே வன்மம் கக்கும் விழியோடு நோக்கியது..

எதையோ யோசித்தவனாய் தன் கரத்திலிருந்த மொபைலில் அவன் செல்வதை தெளிவாய் படம்பிடித்தவன் இதழோ "சிக்கினடா மவனே" என முணுமுணுக்க போகும் அவனையே கோபமாய் பார்த்து நின்றான்..

.....
தன் வீட்டினுள் நுழைந்த கௌசிக்கோ தன் அறைக் கட்டிலில் கிடத்தியவன் அவளை விட்டு விலகிட முனைய அவள் கரங்களோ அவன் சட்டையை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருந்தது..

அதைவிடுவிக்க முனைந்தவனுக்கோ இத்தனை நேரமும் ஒத்துழைத்த உடலோ இதற்கு மேல் தன்னால் முடியாது என்பது போல் காற்றோடு பறக்க தொப்பென்று அவளருகே வீழ்ந்திருந்தான்..

இருவரும் தங்களை மறந்து மொத்தமாய் மயங்கிய நிலையில் அடுத்தவரின் அருகாமையில் தூங்கிப் போயினர்..

.....

அடுத்த நாள் பொழுது புலர்ந்திட விடாது ஒலித்த அழைப்பேசியின் சத்தம் ஒருபுறம் வீட்டின் மணியோசை ஒருபுறம் என காதை அடைக்க தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான் கௌசிக் கிருஷ்ணா ..

மெதுவாக கண்விழித்தவனின் கண்களோ தீயாய் எரிந்திட தலையோ பாராங்கல்லாய் கணத்திட தலையை பிடித்துக் கொண்டே எழுந்து கொள்ள முயன்றவன் தன் மீது மெலிதாய் ஓர் அழுத்தம் இருப்பதை உணர்ந்து பார்வையை தாழ்த்திட அவன் விழிகளில் சிக்கினாள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பெண்ணவள்..

தன் மீது தூங்கும் பெண்ணை அதிர்ந்து பார்த்தவனுக்கோ இது கனவோ என்ற எண்ணம் தோன்ற மீண்டும் கண்களை தேய்த்துவிட்டு பார்த்தவனுக்கு இது கனவல்ல நிஜம் என்ற உண்மை புரிந்திட அதிர்ச்சி நீங்கியவன் கண்களில் கோபம் குடியேற உடல் இறுகி தன் மீது தூங்கியவளை ஒரே உதறலில் உதறிட கீழே வீழ்ந்திருந்தாள் வெண்மதி..

கீழே வீழ்ந்ததில் தூக்கம் கலைந்து பதறி எழுந்தவள் முதலில் தான் எங்கியிருக்கோம் என புரியாதவளாய் தடுமாற்றத்துடன் முழித்து நின்றவள் பார்வையோ கட்டிலில் அமர்ந்து தன்னையே முறைத்திருந்தவனை கண்டு நேற்றைய நிகழ்வுகள் மனதில் தோன்ற தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்து பெருமூச்சுவிட்டிட அந்த நொடி நேர நிம்மதியை குழி தோண்டி புதைத்திருந்தது அடுத்து அவன் கேட்ட கேள்வி..
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 04


பாதுகாப்பாகத் தான் உள்ளேன் என எண்ணி பெருமூச்சுவிட்டவள் அடுத்தடுத்த அவன் கேள்விகளில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்..

"ஹேய் யார் நீ??? நீ எப்பிடி உள்ளே வந்த? ??யாரு உன்னை அனுப்பினா?? அனல் கக்கும் விழியோடு தன்னிடம் கேள்விக்கணைகளை தொடுத்தவனை அதிர்ந்த விழியோடு நோக்கியவளுக்கோ வார்த்தைகளோ தந்தியடித்தது..

"நா..நான் ..நீ..ங்க " என என்ன சொல்வது என தடுமாறியவளை முறைத்துப் பார்த்தவன் ..

"ஹேய் உனக்கு என்ன திக்குவாயா இல்ல நடிக்கிறியா?? யார் நீ எப்பிடி உள்ள வந்த??" என மீண்டும் அதட்டலாய் வந்த அவன் குரலில் பெண்ணவளுக்கோ கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது..

அவள் கலங்கிய விழி பார்த்தவன் தன் கோபத்தை முயன்று கட்டுப்படுத்தியவனாய் கண்மூடி நேற்று நிகழ்ந்த நிகழ்வுகளை மீட்டியவனுக்கு தலை தான் வலித்ததே ஒழிய எதுவும் நியாபகத்தில் வரவில்லை..

"ப்ச்ச் நேத்து நைட் என்ன கருமத்தை குடிச்சேன் இப்பிடி தலைவலிக்குது" என சலித்துக் கொண்டவன் தலையை அழுந்தக் கோதி நின்றிருக்க அவன் வீட்டின் மணியோசை மீண்டும் அடித்தது..அதில் நிமிர்ந்து அவளை பார்த்தவன் எதுவும் பேசாது அறைவிட்டு வெளியேறிச் சென்றான்..

போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சற்று அரண்டு தான் போனாள்..

நேற்றிரவு அத்தனை அமைதியுடன் இருந்தவனா இவன் என்ற கேள்வி நெஞ்சில் எழ அதே நேரம் தன்னை விரட்டி அடித்துவிடுவானோ?? அப்படி நடந்தாள் அடுத்து எங்கே செல்வது?? எப்படி செல்வது?? என அனைத்தையும் எண்ணியவளுக்கோ பயத்தில் உடல் நடுங்க அப்படியே சுவற்றில் சாய்ந்தபடியே மடிந்து அமர்ந்தவளுக்கோ அடுத்து என்ன என தன் நிலையை எண்ணி அவளால் அழ மட்டுமே முடிந்தது.. என்ன தான் மனதில் தைரியத்தை வரவழைத்திட முயன்றாலும் இத்தனை நாள் ஓர் கூட்டிற்குள் அடைபட்டு வளர்ந்தவளால் அத்தனை எளிதில் தன் மனதை ஆக்கிரமிக்கும் பயத்தை தூக்கி எறிந்த முடியவில்லை..

சத்தமின்றி அழுதவள் மனமோ அடுத்து என்னாகுமோ என எண்ணியே பயத்தில் துடித்தது...

கௌசிக்கோ வீட்டின் முன்னறைக்குள் செல்வதற்குள்ளாகவே விடாது ஒலித்த வீட்டின் மணியோசையில் பொங்கிய எரிச்சலோடு வேகமாகக் கதவைத் திறந்தவன் முன்னே நின்றிருந்தவனைக் கண்டும் மேலும் எரிச்சல் அதிகரிக்க அதை முகத்தில் காட்டியவனாய் "வாட்" என்றான்..

அவன் எரிச்சல் எல்லாம் மற்றையவனை பாதிக்கவில்லை போலும் நக்கல் சிரிப்புடன் இவனைப் பார்த்து நின்றவன் "என்ன கௌசிக் ஸார் தப்பான டைமிங்ல வந்து தொந்தரவு பண்ணிட்டேனா என்ன..இந்தளவு சூடா இருக்கிங்க" என்றவன் கேலியில் புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவன்..

"மிஸ்டர் தேவன் இப்போ எதுக்கு இங்க வந்து சம்மந்தமே இல்லம உளறிட்டு இருக்கிங்க..இதுக்கு முன்னாடி வாங்கினது பத்தலையா இல்ல இன்னும் வேணுமா" என்றவன் ஓர் அடி முன்வைக்க தன்னிச்சையாய் பின்நகர்ந்தான் அவன்..

இருந்தும் அப்போதும் அடங்காதவனாய் "ஹலோ கௌசிக் ஸார் கொஞ்சம் பொறுங்க நான் வந்த விசயத்தை சொல்லிடுறேன்" என்றவன் நக்கல் சிரிப்புடன் தன் போனை எடுத்து அதில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை படித்துக் காட்டினான்..

"நேற்றிரவு பொலீஸ் துறை அதிகாரி கௌசிக் நாராயண கிருஷ்ணன் நள்ளிரவு வேளையில் வலுக்கட்டாயமா ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்லும் காட்சி சமூகத் தளங்களில் வைரலாகும் வீடியோ இதோ" என கூறி அதை அவன் முன்னே காட்டியவன்..

"என்ன கௌசிக் ஸார் ..தெ க்ரேட் ஐபி எஸ் அதிகாரி நீங்க போய் இப்படி ஒரு வேலை பார்த்திருக்கிறீங்க" என எள்ளி நகையாடும் குரலில் கூறியவனை அழுத்தமாய் பார்த்தவனோ தாடையை தடவியபடி ஓர் கணம் வீடியோவை உற்று நோக்கியவன் பின் நிமிர்ந்து தன்னெதிரே நின்றவனை பார்த்தவன் ஒற்றைப் பார்வையே "இது உன் வேலை தானே" என்ற கேள்வியை தேக்கி நிற்க பயந்து தான் போனான் தேவன்..

ஆம் இது அவன் வேலை தானே நேற்றிரவு தன் போனில் அதை வீடியோ எடுத்தவனும் அவனே அதை சில எடிட் செய்து சமூகவளையத் தளங்களில் பதிவிட்டவனும் அவன் தானே..
காரணம் அவன் மீது கொண்ட வன்மம் ..

கௌசிக் நாராயண கிருஷ்ணன் இளம் வயதிலே அத்தனை திறமையோடு பொலீஸ் துறைய கலக்கும் ஓர் இளம் ஐபி எஸ் அதிகாரி...ஆளுமையும் கம்பீரமும் கொண்ட ஆணவன் அவன் பதவிக்கு வந்த சில நாட்களிலே சட்ட விரோதமான பல தவறுகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்து இன்றைய இளம் சமூதாயத்தினர் மத்தியில் நாயகனாய் திகழ்பவன்...எதிரிகளுக்கு சிம்ம சொற்பனமாய் விளங்குபவன் அவனைச் சார்ந்த சில சக அதிகாரிகளுக்கு வில்லனாகவும் மாறிப் போனான்..

தங்களைவிட வயதில் குறைந்த ஒருவன் உயர் பதவியில் வகிப்பது மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் நற்பெயர் கொண்டு இருப்பது கண்டு அவர்கள் டிப்பார்ட்மெண்டில்லே அவனுக்கு எதிராக சிலர் வயிறெரிவதுண்டு..அது மட்டுமல்லாது அவன் இருக்கும் இடத்தில் எந்த தப்பு நடந்தாலும் அதற்கான தண்டனையை கொடுப்பவன் அதிரடிக்கு பயந்தே பலரால் தங்கள் விருப்பப்படி அதிகாரத்தை பயன்படுத்திட முடியாது போய்விட அவனை எதிரியாய் பாவித்து பலர் இருக்க அதில் தேவனும் ஒருவன்..

கௌசிக்கின் திறமை அவனுக்குக் கிடைக்கும் மரியாதை என அவன் மீது பொறாமை ஒருபக்கம் இருக்க சில நாட்கள் முன் நடந்த சில உட்பூசல்களும் அவனுக்கு அவன் மீது வன்மத்தை விதைத்திருக்க.. அவனை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்தவனுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்திட அதை பயன்படுத்தியும் கொண்டான்..

ஆனாலும் இத்தனை வேலை செய்தும்
பார்த்த நொடியிலே தன்னைக் கண்டு கொண்டவனின் திறமையை கண்டு அச்சம் எழுந்தாலும் அதை மறைத்துக் கொண்டவனாய் அவனை நக்கலாய் பார்த்து நின்றான் தேவன்..

கௌசிக்கோ அதைவிட நக்கல் பாவனையோடு "ம்ம் ஓகே தேவன் படம் சூப்பரா இருக்கு..வெல்டன் டிப்பார்ட்மெண்ட்ல சொல்லி இதுக்குன்னே உங்களுக்கு அவார்ட் கொடுக்க சொல்றேன் ஓகேவா" என நக்கலோடு கூறியவன் அடுத்த கணமே கதவை அறைந்து சாத்தினான்..

அவனின் அந்த நக்கல் பேச்சிலும் முகத்தில் அறைந்தது போன்ற அவன் செயலிலும் மேலும் கோபம் அதிகரிக்க அவனை திட்டித் தீர்த்தான் தேவன்..

"இருடா இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த மொத்த அப்பார்ட்மெண்ட் ஆட்கள் முன்னாடி உன்ன அவமானபடுத்துறேன்" என வன்மமாய் எண்ணிக் கொண்டவன் யாரோ ஒருவரின் வருகைக்காக காத்திருக்க..அடுத்த பத்துநிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார் கமிஷ்னர் சங்கர்..

"குட் மோர்னிங் ஸார்" என காலை நேர வணக்கத்துடன் சல்யூட் அடித்த தேவனை எரிச்சலாய் பார்த்தார் சங்கர்..

"என்ன தேவன் என்ன இதெல்லாம்" என அங்கே குழுமியிருந்த கூட்டத்தையும் அவர்கள் கையிலிருந்த போனையும் பார்த்து எரிச்சலாய் கேட்டார்..

அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலரோடு மேலும் சிலர் கையில் போனுடன் அங்கே நடப்பதை லைவ்வாக சமூக வலையளத்தளங்களில் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்..

தேவனோ அவர் கேள்வியில் "எல்லாமே என்னோட ஏற்பாடு தான்" என மனதில் எண்ணிக் கொண்டாலும் வெளியிலோ எதுவும் தெரியாதவன் போன்று
"ஸார் எல்லாருமே யங்ஸ்டர்ஸ்ஆ இருக்காங்க நாம ஏதாவது பண்ணப் போய் அது இன்னுமொரு பிரச்சனைல முடிஞ்சிடக் கூடாதே அதான் என்னால எதுவுமே பண்ண முடியல.." என்றவனை எரிச்சலாய் பார்த்தவர் எதுவும் பேசாது வீட்டின் மணியோசையை அழுத்தினார்..

தேவனிடம் பேசிவிட்டு ஹால் சோபாவில் அமர்ந்தவனுக்கோ ஏற்கனவே இருந்த குழப்பத்தோடு தேவன் கூறிய செய்தியும் சேர்ந்து கொள்ள.. அதிகரித்த தலை வலியில் தலையை அழுந்தப் பற்றியபடி அமர்ந்திருந்தவன் மூளையோ மீண்டும் மீண்டும் நேற்றைய நிகழ்வை மீட்டிட முயன்று தோற்றுத் தான் போனது..

"ப்ச்ச்" என்று சலிப்புடன் கண்மூடி அமர்ந்திருந்தவன் மீண்டும் ஒலித்த மணியோசையில் கோபம் பொங்க விருட்டென்று எழுந்தவனோ பட்டென்று கதவைத் திறந்து ஏதோ கூற வாயெடுத்தவன் அங்கு நின்றவரைக் கண்டு அமைதியாகினான்..

அங்கே வந்திருந்த உயர் அதிகாரியும் அத்துடன் குழுமியிருந்த கூட்டமும் அவர்கள் கையிலிருந்த போனும் நிலைமையின் வீரியத்தை உணர்த்திட தலையை அழுந்தக் கோதியவன் அடுத்து என்ன என்னபது போல் பார்த்து நின்றான்..

தேவனோ இந்த சூழ்நிலையிலும் பதட்டப்படாது அமைதியாய் நின்றிருந்தவனைக் கண்டு பல்லைக் கடித்தவன் அவனை அவமானப்படுத்த எண்ணி வேண்டுமென்றே அவனைச் சீண்டத் தொடங்கினான்..

"என்ன கௌசிக் ஸார் ஒரு உயர் அதிகாரி கண்டு ஒரு சல்யூட் கூட பண்ணாம இப்படி மரியாதை இல்லாம நிற்குறிங்க.. இது தான் உங்க ட்ரெய்னிங்ல சொல்லித் தந்தாங்களா??" என மேலும் ஏதோ பேச முயன்றவனின் அடுத்த வார்த்தை வாய்க்குள் அமிழ்ந்து போனது எதிரிலிருந்தவன் பார்த்த ஒற்றைப் பார்வையில் ..

தேவனின் கேள்வியில் அவனை பார்த்தவன்.. தன் ஒற்றைப் பார்வைக்கே அவன் அமைதியானதைக் கண்டு இதழோ வளைந்திட நக்கல் தொனியோடு " ஏன் தேவன் ஸார் விடியற் காலையிலே எல்லோரும் என் சல்யூட் பார்க்கத்தான் என் வீட்டு வாசல்ல வந்து நிற்கிறிங்களா??.. ம்ம் அது தான்னா உங்களுக்காக சல்யூட் அடிச்சிட்டா போச்சு" என்றவன் தன் உயர் அதிகாரியைப் பார்த்து சல்யூட் வைத்தான்..

தேவனுக்கோ அவன் செயலும் பேச்சும் மேலும் மேலும் கோபத்தை தூண்டிவிட்டாலும் வெளியில் எதையும் கூற தைரியமற்றவனாய் வாய்க்குளே முனுமுனுத்துக் கொண்டான்...

கௌசிக்கோ தன் பார்வையை கமிஷ்னர் புறம் திருப்பியவன் "ஸார் ஐ வில் எக்ஸ்ப்ளைன்" என்று ஒற்றை வார்த்தையில் கூறியவனுக்கும் தெரியும் இவரே வீடு தேடி இத்தனை தூரம் வந்திருக்கிறார் என்றால் நிலமை தீவிரம் பெரிது என்று..

இருந்தும் தற்போது இருக்கும் நிலையில் எதையும் தன்னால் தெளிவாய் கூறிட முடியாது என்பது தோன்றவே ஒற்றை வார்த்தையில் அவரிடம் அனுமதி கேட்டு நின்றான்..

அவருக்கும் அவனைப் பற்றி தெரிந்தாலும் தற்போது இருக்கும் சூழ்நிலை சிக்கலாய் இருப்பதால் அவராலும் எது செய்ய முடியாது அவனைப் பார்த்தவர் .."கௌசிக் ஐ ம் ஸாரி.. உங்க வீடியோ மக்கள் மத்தியில வைரலாகிட்டதுனால என்னால ஒன்னும் பண்ண முடியாது.. அன்ட் நேத்து நீங்க தூக்கிட்டு வந்த பொண்ணு உயிரோட இருக்காளா?? இல்லையான்னு??? மீடியா எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டு குடையுது.." என தன்நிலை எடுத்துக் கூறி அவனைப் பார்த்திட..

அவனோ உடல் இறுகிப் போய் நின்றிருந்தான்..நேற்றைய ஒரு இரவு எத்தனை பிரச்சனைகளை இழுத்துவிட்டது என எண்ணியவனுக்கோ இது அனைத்துமே ஏதோ தனக்கு பின்னப்பட்ட சதி வலை என்பதை உணர்ந்தே இருந்தான்..

அவன் அமைதியாய் நிற்பதைக் கண்ட தேவனோ அந்த சந்தப்பத்தை பயன்படுத்திக் கொண்டவனாய்..

"ஸார் நேரம் போய்ட்டே இருக்கு இன்னும் கூட்டம் சேருவதற்குள்ள உள்ள போய் செக் பண்ணிடலாமே" என்றவன் உள்ளே நுழைந்திட முயல அவன் நெஞ்சில் கைவைத்துத் தடுத்தான் கௌசிக்..

கமிஷ்னரோ "கௌசிக் ஐ க்னோ உங்க மேல தப்பு இருக்காது ஆனா இப்போ நிலமைல இத நாங்க செய்து தான் ஆகனும் ப்ளீஸ்.. என்றவரை நிமிர்ந்து பார்த்தவன் அவர் பார்வை காட்டிய திசையை பார்க்க அங்கே அனைத்தையும் படம் பிடித்து நின்றவர்களைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்தியவனாய் தன்கையை நீக்கினான்.....

அவன் வாய் மூடிய மௌன நிலை கண்ட தேவனோ எள்ளல் சிரிப்புடன் உள்ளே நுழைந்தான்..

அறைக்குள் நுழைந்த தேவன் கண்களோ அங்கே சுவரோடு சாய்ந்து அழுது கொண்டிருந்தவளைக் கண்டு விரிந்து கொண்டது..

கொஞ்சும் அழகுடன் சிறு பெண்ணாய் அமர்ந்திருந்தவள் அழகு அவனை மயக்கத் தான் செய்தது..

"ப்பாஹ் இவனுக்கு மட்டும் எப்பிடித் தான் அமையிதோ" என்றவன் தான் சில மாதங்கள் முன் இதே போன்று ஒரு பெண்ணிடம் அத்துமீறிய செயலுக்காக கௌசிக்கிடம் வசமாய் சிக்கி தக்க சன்மானமும் வாங்கிக் கொண்டது..

அதே போல இன்று அவனைச் சிக்க வைத்த மிதப்பில் அவளை நெருங்கியவன் அவள் கைச் சந்தைப் பிடித்து தூக்கிட..இந்த திடீர் செயலில் அதிர்ந்து தான் போனாள் வெண்மதி..

புது ஆடவன் ஒருவன் சட்டென்று இழுத்ததில் பயத்தில் அலறியவள் அவனிடமிருந்து விடுபட முயல அவனோ"ஹேய் வாடி ஓவரா சீன் போடாத" என்று அவளை இழுத்துக் கொண்டு முன்னறைக்குள் சென்றான்....

அவனின் முரட்டுப் பிடியில் கைகள் வலித்திட கண்களும் கலங்கிட அவனிடமிருந்து விலகத் துடித்து அவள் போராடியவாறே அவனோடு இழுத்து வரப்பட்டவளைக் கண்ட கௌசிக்கோ தேவனின் அநாகரீகச் செயல் கோபத்தை கொடுக்க வேகமாய் அவர்களை நெருங்கியவன் ஒற்றை இழுப்பில் அவளை தன் புறம் கொண்டு வந்திருந்தான்..

கௌசிக்கின் செயலை அங்கிருந்த அனைவரும் கவனித்தபடி நின்றிருந்தனர்..

அவனோ அதையெல்லாம் சட்டை செய்யாதவனாய் கமிஷ்னர் புறம் திரும்பியவன் "ஸார் நீங்க சொன்ன மாதிரி இங்க எதுவும் நடக்கல இங்க எந்த பொண்ணும் சாகவும் இல்ல வலுக்கட்டாயமா இழுத்துட்டும் வரவும் இல்ல " என அழுத்தம் திருத்தமாய் கூறியவன் பார்வையோ தேவனை சுட்டெரித்தது..

தேவனுக்கு அவன் பார்வை புரிந்தாலும் கமிஷ்னர் இருக்கும் தைரியத்தில் பேச்சை வளர்த்தான்..

"அப்போ வலுக்கட்டாயமா இழுத்து வரலன்னா உல்லாசமா இருக்க அழைச்சிட்டு வந்தீங்களா ஸார்...இப்போலாம் ஹோட்டலுக்கு போனா மாட்டிடுவோம்னு பயந்து வீட்டையே யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டிங்களோ" என வார்த்தையை விஷமமாய் கொட்டிட ..துடித்துப் போனாள் பெண்ணவள்...

என்ன பேச்சு இது...இங்கு என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது.?? யார் இவர்கள் எல்லாம்? ? என பல கேள்விகள் மண்டையை குடைந்தாலும் புது மனிதர்களை காண அஞ்சியவளாய் தலையை குனிந்து நின்றிருந்தவளுக்கு உடல் பயந்தில் நடுங்கி அழுகையில் குலுங்கியது..

கௌசிக்கோ தேவனை கொல்லும் வெறியே உண்டாகிய போதிலும் இருக்கும் நிலை உணர்ந்து அமைதி காத்தவனின் பொறுமையை மேலும் சோதிக்கவென்றே பேசினான் தேவன்..

"ஏய் பொண்ணு அழுது சீன் போடாத இந்த மாதிரித் தொழில் பண்ணுற நீங்க பொலீஸ்ல சிக்கக் கூடாதுங்குறதுக்காவே பொலீஸ்ஸே வளைச்சு போடூறிங்க" என கூர்தீட்டியாய் வார்த்தைகளை அவளை நோக்கி பாய்ச்சிட.. மேலும் உடைந்து போனாள்..

தேவனின் பேச்சு எல்லை மீறுவதை உணர்ந்த கௌசிக்கோ கமிஷ்னரை பார்க்க அவரும் அதை தடுத்திடாது அமைதியாவே நின்றிருப்தை பார்த்தவனுக்கோ இதற்கு மேல் பொறுமை நிற்பேனா என அடம்பிடிக்க அதை உடைத்தெறிந்தது அடுத்த தேவனின் செயல்..

அழுது கொண்டிருந்தவளை நெருங்கியவனோ "பார்க்க சின்ன பொண்ணா இருந்துட்டு என்ன வேலையெல்லாம் இந்த தொழில் பண்றீயா..அப்படி எதை காட்டி இவன மயக்கின" என அவனுக்கும் அவளுக்கும் கேட்கும் குரலில் முனுமுனுத்தவனின் செவிப்பறை கிழியும் அளவில் ஓங்கி அறைந்திருந்தான் கௌசிக் ..

அடித்த வேகத்தில் தேவனோ தரையோடு வீழ்ந்திருக்க அவன் அவதாரம் கண்டு அதிர்ந்து நின்றனர் மற்றைய அனைவரும்..

கூட்டத்திலோ சலசலப்பு எழுந்திட கமிஷ்னரோ கௌசிக்கை அதட்டினார் "கௌசிக் என்ன காரியம் பண்றீங்க" என்றிட அவரை முறைத்துப் பார்த்தவன் கூட்டத்தில் சலசலத்தவர்கள் புறம் திரும்பினான்..

"இப்போ என்ன தெரியனும்னு எல்லாரும் கூடியிருக்கிங்க...ஆமா நான் ஒரு பொண்ண கூட்டிடு வந்தேன் தான் அதுக்கு இப்போ என்ன செய்யனும்..ஏன் ஒரு பொண்ண அழைச்சிட்டு வந்தா அது தொழில் பண்ற பொண்ணா தான் இருக்கனுமா?? ஏன் சொந்தத்து பொண்ணுல அக்காவோ தங்கையோ அத்த பொண்ணாவோ யாரோ வேணா இருக்கலாமே ஏன் அப்படி எதுவுமே உங்க மண்டைக்கு நினைக்கத் தோணாதா??" என சாராமாரியாய் கேள்வி தொடுத்திட அதிர்ந்து நின்றிருந்தனர் அனைவரும்..

கூட்டத்தில் நின்றிருந்த தேவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களில் ஒருத்தனோ "என்ன ஸார் மாட்டிக்கிட்டதும் ப்ளேட்ட திருப்பி போடுறீங்களா?? நாங்க எப்பிடி நம்புறது நீங்க சொல்றது எல்லாம் உண்மைனு" என்றவனை தலையை சரித்து பார்த்தவன்..

"நீங்க எதுக்கு நம்பனும்?? இட் ஸ்மை பேர்சனல் யாருக்கும் விளக்கம் சொல்லனும்னு எனக்கு அவசியம் .இல்லை ..சோ ஆல் ஆர் ஹெட் அவுட் ப்ரொம் ஹியர்" என அடிக்குரலில் சீறிட அதிர்ந்து களைந்து போனது கூட்டம்..

தேவனோ வலித்த கன்னத்தை பற்றிக் கொண்டு எழுந்தவன் "ஸார் என்ன பார்த்துட்டு இருக்கீங்க..பப்ளிக் முன்னாடி ஒரு பொலீஸ் ஆபிஸர்னும் பார்க்காம கை நீட்டுறாரு இதெல்லாம் கேக்கமாட்டீங்களா?? " என கத்தினான்..

"கௌசிக் வாட் இஸ் திஸ் ..இத உங்ககிட்ட இருந்து நான் எக்ஸ்பெக்ட் பண்ணல" என சற்றே கோபமாய் பேசியவர் பின் நிதானமாய் "கௌசிக் இது இப்போ ரொம்ப பெரிய பிரச்சனையா போகக் கூடாதுன்னு தான் நானே உங்கள நேர்ல மீட் பண்ணலாம்னு வந்தேன் ஆனா அதுவே இப்போ வேற திசை மாறி போயிடுச்சு என்றவர் பார்வையோ அப்போதும் அங்கே நின்ற சிலரில் படிந்து மீண்டது..

கௌசிக்கோ நிதானமாய் தலையை கோதிக் கொண்டவன் அடுத்து என்ன செய்வது என யோசிக்கும் போதே அவன் அழைப்பேசி ஒலித்திட அதை எடுத்து அழைப்பை ஏற்றவன் "ஹலோ" என்றிட மறுபுறமோ

"ஸார் நீங்க கேட்ட டீடெய்ல்ஸ் அன்ட் அட்ரெஸ் எல்லாமே கிடைச்சிட்டு ...உங்க மொபைலுக்கு வாட்ஸப் பண்ணியிருக்கேன் செக் பண்ணுங்க" என்ற குரலில் கண்கள் மின்ன அவசரமாய் தனக்கு வந்திருந்த செய்தியை கண்டவன் கண்களும் விரிந்து கொள்ள இதழோரம் சிறு புன்னகையும் தோன்றி மறைந்தது..

மீண்டும் ஒரு முறை அந்த செய்தியை படித்தவனோ நிம்மதிப் பெருமூச்சுடன் நிமிர்ந்து கமிஷ்னரை பார்க்க அவரோ இந்த பிரச்சனையை எப்படி தீர்க்கப் போகிறாய்" என்ற கேள்வியோடு அவனைப் பார்த்து நின்றார்..

அவனோ தன் பார்வையை பெண்ணவள் புறம் திருப்பிட அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்காது தலையை குனிந்து அழுது கொண்டிருந்தாள்..

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவனோ ஓர் முடிவுடன் "இப்போ என்ன இந்த பிரச்சனைக்கு பதில் சொல்லனும் இல்லையா?? " எனக் கேட்டுவிட்டு விறுவிறுவென உள்ளறைக்குள் நுழைந்தவன் வெளியே வரும் போது அவன் கையில் அழகாய் வீற்றிருந்தது தங்கச் சாலி சரடு..

வேகமாய் அவள் முன்னே வந்து நின்றவனோ தன்னையே அதிர்ந்து பார்த்த அனைவரையும் அழுத்தமாய் பார்த்தவாறே "இப்போ இந்த நொடி இவ என்னோட மனைவி" என்று விட்டு திரும்பியவன் தன்னையே விழிகள் விரிய அதிர்ந்து நோக்கியவளின் விழியோடு விழி கலந்தவாறே அவள் கழுத்தில் அணிவித்தான்..

மங்கள நாதஸ்வர முழக்கம் இல்லை ஐய்யர் மந்திரம் இல்லை உறவுகளின் ஆசிர்வாதம் இல்லை எதுவுமே இல்லாமலே சத்தமின்றி நடந்தேறியது ஓர் திருமண பந்தம்..

அவன் இப்படி செய்வான் என எதிர்பாராது அனைவரும் அதிர்ச்சியில் இருக்க மதிக்கோ கண்கள் இருட்டி தலை சுற்றிக் கொண்டு வந்தது..

எதற்கு பயந்திருந்தாளோ அதே திருமணம் அவள் அனுமதியே இன்றி நடந்து விட்டதே அதுவும் பார்த்து ஒரு நாளே ஆன ஒருவனுடன்..

தலைசுற்றல் அதிகரிக்க தடுமாறி நின்றவளைக் கண்டவனோ சட்டென்று அவளை தாங்கி தன் மேல் சரித்து நின்றவன் பார்வையோ அதிர்ந்து போய் தங்களைப் பார்த்து நின்றவர்கள் பக்கம் திரும்பியது..

தேவனுக்கோ கட்டுக்கடங்காத ஆத்திரம் கிளம்பியது..தான் நினைத்து வந்தது என்ன இங்கு நடந்து கொண்டிருப்பது என்ன என நினைத்தவன்

"என்ன தாலிய கட்டிட்டா நீங்க பண்ண தப்பு இல்லன்னு ஆகிடுமா ..ஸார் என்ன நீங்க பார்த்துட்டு எதுவும் பேசாம இருக்கிங்க " என குதித்தவனை முறைத்தவன்..

"ஒழுங்கு மரியாதையா இப்போ நீ வாய மூடல என் கை பேசுறதுக்கு பதிலா என் கன் பேசும் எப்பிடி வசதி ..??" என்றவனின் குரல் அமைதியாய் இருந்த போதிலும் அதில் இருந்த அழுத்தம் அவனை வாய்மூடச் செய்தது..

கமிஷ்னரோ ஏதோ பேச வாயெடுக்க அவரைத் தடுத்தவன் "இந்த பிரச்சனையை நானே பார்த்துக்குறேன் ஸார்..நீங்க கிளம்பலாம் " என்றிட அமைதியாய் வெளியேறினார்..

தேவனோ முறைப்புடன் அவனைத் தாண்டி செல்ல முயல அவனை கை நீட்டித் தடுத்தவனோ "இன்னைக்கு ரொம்ப ஆடிட்ட அதுக்கு எல்லாம் மொத்தமா சேர்த்து செக்மேட் வைக்கிறேன் வைட் அன்ட் சீ மிஸ்டர் தேவன் ஸார்" என்றவனின் பேச்சில் பயந்தாலும் அவனை முறைத்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்..

கௌசிக்கோ இன்னுமே போனும் கையுமாக நின்றிருந்த சிலரை நோக்கி " இவ இப்போ என் பொண்டாட்டி என் பொண்டாட்டி என் கூடவே இருக்குறது இப்போ யாருக்கெல்லாம் தப்பா படுவுதோ அவங்க இங்க நில்லுங்க அவங்களுக்கு நல்ல பதிலா சொல்றேன்" என தன் கையை முறுக்கியபடி கூறியவன் தோற்றத்தைக் கண்டு பயந்து அனைவரும் களைந்து போனர்..


கூட்டம் அனைத்தும் சலசலப்புடனே அங்கிருந்து வெளியேற கதவை அறைந்து சாத்தியவன் முகமோ பாறையென இறுகிப் போனது..

தன்மீது அரைமயக்கத்தில் சாய்திருந்தவளை குனிந்து பார்த்தவன் கண்களோ அவள் கழுத்தில் உறவாடிய மாங்கல்யத்தை வெறித்தது..

ஏதேதோ பல நினைவுகள் எழுந்திட கண்களை அழுந்த மூடித் திறந்தவன் உடல் இறுக.. முயன்று தன்னைக் கட்டுப்படுத்தியவனோ கைத்தாங்கலாய் அவளை தூக்கி வந்து சோபாவில் கிடத்தியவனோ அவளையே ஆராய்ச்சியாய் பார்த்து இருந்தான்..


தான் அணிவித்த மாங்கல்யம் மின்ன அழுது வீங்கிய முகத்தோடு கண்மூடி கிடந்தவள் மாசு மறுவற்ற குழந்தைத் தனமான பால் நிலா போன்ற முகத்திலே அவளின் வெகுளித்தனம் அப்பட்டமாய் தெரிந்தது ... பார்க்கும் போதே அவள் நகரத்துக்கு புதியவள் என அவள் தோற்றமும் பயந்த சுபாவமும் காட்டிக் கொடுத்திட ..இப்படி பட்டவள் எப்படி அர்த்த ராத்திரியில் என்னிடம் வந்தாள்.. என எண்ணியவனின் கேள்விக்கான பதிலை அவள் தான் கூற வேண்டும் என நினைத்தவன் அவள் கண்விழிக்கும் நேரத்திற்காக காத்திருந்தான்..
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 05



பெண்ணவள் கண்விழிக்க எடுத்துக் கொண்ட நேரத்திற்குள்ளே காட்டுத்தீ போல தன்னைப்பற்றி பரவிய செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க சில வேலைகளை செய்தவன் தன் உதவியாளர்கள் மூலம் அதை செய்து முடிக்க கட்டளையிட்டான் கௌசிக்..

அவன் நினைத்தது போலவே அடுத்த ஒரு மணிநேரத்திலே அவன் பற்றி வெளியாகிய செய்தி முற்று முழுதாய் நீக்கப்பட்டிருந்தது..

அந்த செய்தியும் போன் அழைப்பின் மூலம் அவனை வந்தடைய மெலிதாய் சிரித்துக் கொண்டவன் சோம்பலாய் தன் உடலை முறுக்கி தான் இருந்த இருக்கையை விட்டு எழுந்தான்..

அடுத்து அவன் முடிக்க வேண்டிய வேலைகள் பல மூளையில் எழுந்தாலும் அதையனைத்தையும் ஒதுக்கி வைத்தவன் மனமோ சற்று முன் ஒற்றை தாலிச் சரத்தில் தன் சரிபாதியாய் ஏற்றுக் கொண்ட பெண்ணவளிலே நிலைத்து நின்றது..

தலையை கோதிக் கொண்டே அவளிருக்கும் அறைக்குள் நுழைந்தவன் ..கட்டிலில் அநாதரவற்ற குழந்தையாய் உடலை குறுக்கி கண்மூடிக்கிடந்தவள் மீது பார்வையை பதித்தான்..

சற்று நேரம் அவளையே பார்த்திருந்தவனுக்கோ அவளிடம் அசைவு தெரிய மார்பிற்குக் குறுக்கே கைகட்டி அவள் கண்விழிக்க காத்து நின்றான்..

நேற்றைய ஓட்டத்தில் உண்டான உடல் களைப்பும் இன்றைய அளவுக்கு மீறிய அதிர்ச்சிகளிலும் துவண்டு போனவளுக்கோ மெல்ல மயக்கம் தெளிந்திட மெதுவாய் விழி திறந்தாள்..

கண்கள் மங்கலாய் தெரிந்திட கண்களை கசக்கிவிட்டவள் விழிகளோ தன் முன்னே நின்று தன்னையே பார்த்து நின்றவன் அதிர்ச்சியில் விரிந்திட படக்கென்று எழுந்தவளுக்கோ அந்த வேகத்தில் மீண்டும் தலை கிறுகிறுக்க தலையை தாங்கி குனிந்து கொண்டாள்..

அவள் நிலை உணர்ந்தவனோ அவளருகே நெருங்கி மேசையிலிருந்த க்ளாஸில் நீரை நிரப்பி அவள் புறம் நீட்டினான்..

குனிந்திருந்தவளுக்கோ தன் முன் நீட்டிருந்த வலிமை மிகுந்த கரங்களை கண்டு ஒரு வித அச்சத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் அவன் விழி சொன்ன செய்தியில் தன்னிச்சையாய் க்ளாஸைப் பற்றி அருந்தினாள்..

கைகள் நடுங்க நீரை அருந்தியவள் நிதானத்திற்கு வருவதற்காக சில நிமிடம் அமைதியாய் அவளையே பார்த்திருந்தவன் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து தன் கேள்வியை ஆரம்பித்தான் கௌசிக்..


"நீ யாரு?? உன் பெயர் என்ன?? என அவள் விழியோடு விழி கலந்து வந்து வீழ்ந்த அவன் கேள்வியில் பதிலின்றி மௌனமாய் தலைகவிழ்ந்தாள் வெண்மதி..

அவளுக்கோ ஒரு வார்த்தை பேசிடவே மனது திக்கென்றிருக்க அமைதியாய் அமர்ந்திருந்தாள்..

கௌசிக்கோ அவளது மௌனம் அவளின் பயத்தை உணர்த்திட முயன்று தன் குரலில் மென்மையை கொண்டு வந்தவன் .."ஹேய் இங்கப் பாரு நீ யாரு என்னன்னு சொன்னா தான் என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்..சோ பயப்படாம உன்ன பத்தி சொல்லு " என்றவன் குரலிலிருந்த மென்மையில் தன் தயக்கத்தை துறந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்..

"ம்ம் சொல்லு" என அவளை உந்திட மெல்ல வாய் திறந்தாள் ..

" எ....என்டோ பெயர் வெண்மதி" என திக்கலோடு தன்னைப் பற்றியும் நேற்று நடந்த அனைத்தையும் கூறிமுடித்து அவன் முகம் பார்க்க..

அதுவோ கற்பாறையென இறுகி போயிருந்தது..அதில் பயந்தவளோ அவனை அச்சம் சுமந்த விழியோடு நோக்கினாள்..

அவனுக்கோ அது எதுவுமே கருத்தில் பதியவில்லை அவள் கூறிய நேற்றைய இரவின் நினைவிலே மனது நிலைத்திட உடல் இறுக அமர்ந்திருந்தவனுக்கோ ஒன்று மட்டும் தெளிவாய் தெரிந்து போனது..நேற்று தனக்கு மிகப்பெரிய சதி பின்னப்பட்டிருப்பது..அது யாரென்றும் ஊகித்தவனுக்கோ உள்ளத்தில் கோபத் தீ கனன்றாலும் முயன்று தன்னை கட்டுப்படுத்தியவன் அடுத்து என்ன செய்வது என்று சிந்தனையில் ஆழ்ந்தான்..

வெண்மதியோ அவன் முக இறுக்கம் கண்டு பயந்து ஒடுங்கியவள் அவன் தன்னை ஏதும் திட்டிவிடுவானோ என மேலும் பயந்து நடுங்கியவள் தடதடக்கும் நெஞ்சை அழுத்த அவள் கரத்தில் தைத்த உணர்வில் தன் பார்வையை தாழ்த்தியவள்..சற்று முன்னே அவன் அணிவித்த தங்கத் தாலியை கண்டு அதிர்ந்து விழி விரித்தாள்..

"இதை எப்படி மறந்தேன்.." என தனக்குள்ளே கேட்டுக் கொண்டவள் கைகள் நடுங்கிட அதை தொட்டு தன் கைகளில் ஏந்தியவள் மனமோ ஊமையாய் அழுதது..

எத்தனை முயன்றும் வெளிவந்த விம்மலை அடக்க முடியாது கேவியவள் சத்ததில் இத்தனை நேரம் தன் சனையில் உழன்றவன் சட்டென்று அவள் புறம் பார்வையை திருப்பினான்..

கைகளில் ஏந்திய தாலியை பார்த்து கண்ணீர் வடித்தவளின் நிலை கண்டவனுக்கோ உள் மனம் உறுத்திட அவளை நெருங்கினான்..

"இப்போ எதுக்கு அழற...அழாத" என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்..

விழி நீர் நிறைந்த சிவந்த விழியோடு தன்னைப் பார்த்தவளின் பார்வை அவன் மனதை ஏதோ செய்திட அவன் கரமோ தன்னிச்சையாய் எழுந்து அவள் கண்ணீரைத் துடைத்தது..

ஆணவன் தொடுகையில் அவளோ ஸ்தம்பித்து அவனைப் பார்த்தாள்..

அழுத்தமாய் அவள் கண்ணீரைத் துடைத்தவன் "அழாத உன்னோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு ..இனி நீ எத பத்தியும் கவலைப்படாத சரியா??" என்றவன் குரலில் இருந்த உறுதியில் அவளோ தலையாட்டி வைத்தாள்..

அவளையே பார்த்திருந்தவன் "எனக்கொரு கப் காபி கிடைக்குமா??? " என கேட்டவன் கேள்வியில் பே வென முழித்தவளை கண்டவன்

"காபி போட தெரியாதா?? என்ற அடுத்த கேள்வியில் மறுப்பாய் தலையசைத்தவள் வேகமாய் எழுந்திட
அவனோ "கிச்சன் அந்த பக்கம் " என கை காட்டிட விறுவிறுவென்று அவன் காட்டிய திசையில் சென்றாள்.

அவளின் வேகத்தை பார்த்தவனுக்கோ இதழ்கடையோரம் ஒரு சிரிப்பு தோன்றிட உதட்டை மடித்துச் சிரித்துக் கொண்டான்.

.....

கிச்சனில் அவசரமாக நுழைந்தவள் பார்வையை சுழலவிட்டாள்..
அனைத்துப் பொருட்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது..
அதில் தேவையானதை அவசரமாக எடுத்து அவன் கேட்ட காபியை தயாரித்தவள் மனதில் குழப்பங்கள் இருந்தாலும் அவன் கூறிய வார்த்தைகள் அவளில் சிறு நிம்மதியை பரவச் செய்தது என்பது உண்மையே..

இருந்தும் தன் கழுத்தில் தொங்கிடும் தாலிக்கு இன்னுமே அவன் விளக்கம் தராததில் மனம் சோர்ந்தவள் அந்த யோசனையோடே காபியை கலந்து அவன் முன் கொண்டு நீட்டினாள்..

அவளை நிமிர்ந்து பார்த்தவன் அதை வாங்கிபடி "உனக்கு" என்றிட அவளோ மறுப்பாய் தலையசைத்தவள் அவன் முகம் பாராது குனிந்திருந்தாள்.

அவனோ "சரி உட்காரு" என்றுவிட்டு காபியை குடித்து முடிக்கு வரை அவளோ குனிந்த தலை நிமிரவே இல்லை..

அதை கண்டவனோ ஓர் சலிப்புடன் "ப்ப்ச் இப்போ எதுக்கு இப்பிடி இருக்க இங்கப் பாரு" என்ற அதட்டல் குரலில் பட்டென்று நிமிர்ந்து அவனை மிரண்ட பார்வை பார்த்தாள்..

"ப்ச்ச் மறுபடியுமா?? இங்கப் பாரு வெண்நிலா" என்றவனை இடைமறித்தவள்.."வெண்மதி" என தன் பெயரை திருத்திட..

அதில் அவனோ எழுந்த சிரிப்பை மறைத்துக் கொண்டவன்"ஓகே ஓகே வெண்மதி என்ன பார்த்தே இப்பிடி பயப்படுற நீ எப்பிடி தைரியமா அந்த நடு ராத்திரி வீட்ட விட்டு வெளியேறின" என்றிட அவளுக்கோ வீட்டு நினைவில் கண்கலங்கியது..

அவள் கலங்கிய விழிகளை பார்த்தவன் சிறு கோபத்துடன்" ஹேய் இப்போ எதுக்கு கண்ணு கலங்குது ..இனி ஒருவாட்டி கண்ணு கலங்கிச்சு "என ஒருவிரல் நீட்டி அதட்ட..அதில் மலங்க விழித்து அவனைப் பார்த்தாள்..

"சொல்லு என்ன தைரியத்துல இப்பிடி வயசுப் பொண்ண வீட்ட விட்டு அனுப்பினாங்க?? என்றவனுக்கு சிறு பிள்ளையாய் தன் முன்னே அமர்ந்திருந்தவளைக் கண்டு அவளது வயதை தெரிந்து கொள்ளும் முனைப்பில்..

"உன் வயசு என்ன??" என்க..

"பதினெட்டு" என்றவள் பதிலில் அவன் முகம் சற்று சோர்ந்து தான் போனது...

தன் மீட்டுக் கொண்டவன் "சரி சொல்லு ஒரு நடு ராத்திரில இப்பிடி பயந்த பொண்ண வெளில விட எப்பிடி முடிஞ்சது உன் வீட்டாளுங்களால என்றவனுக்கு அவள் முன் கூறிய சித்தி என்பதில் அவரால் தான் ஏதோ பிரச்சனையாய் இருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்டான்..

அவளோ அவன் முதலில் அவன் கேள்வியில் தயங்கியவள் பின் தன்குண்டான பிரச்சனையையும் தான் போகவேண்டிய இடத்தையும் தெளிவாய் அவனிடம் விளக்கி கூறிட அனைத்தையும் கேட்டிருந்தவன் முகத்தில் ஓர் வித வெற்றிப் புன்னகை தவழ்ந்திட அவளைப் பார்த்தான்

"ம்ம் சரி இனி உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. நீ சொன்ன இடத்துக்கே உன்ன கொண்டு போய் பத்திரமா சேர்த்திடுறேன்..என்றவன் பார்வை அவள் கழுத்தில் படிந்திட எதோயோ யோசித்தவனாய்..

"அப்புறம் இது " என தாலியை சுட்டிக் காட்டியவன்..

"அந்ந நேரத்துல அந்த பிரச்சனையை முடிச்சு வைக்க தான் இதை உன் கழுத்துல மாட்டிவிட்டேன்.. இனி இது உனக்கு தேவையில்லை சோ அதை கழட்டிடு" என்றவன் வார்த்தையில் விழிகள் விரிய அதிர்ந்து போனாள்..

அவனோ அவள் அதிர்ச்சியை கண்டு கொள்ளாதவனாய் " இப்போ மீடியாவால எந்த பிரச்சனையும் வராது சோ நீ நிம்மதியா இருக்கலாம்..இனி இந்த செய்ன் தேவைப்படாது" என்றவன் அவள் முன் கரம் நீட்டிட அவளோ தன் நெஞ்சோடு இறுக்கியவள்..

திணறிபயடி "இ....இது தாலி தி..திருப்பி கழற்றக் கூடாது" என கூறி மிரட்சியாய் அவனைப் பார்த்தாள்..

அவனோ "ப்ச் இந்த செண்டிமென்டெல்லாம் தூக்கிப் போடு அது ஜஸ்ட் செய்ன் அத கழட்டிடு" என்றவனுக்கு மறுப்பாய் தலையசைத்தாள் பெண்ணவள்..

அதில் இத்தனை நேரமிருந்த மென்மையை தொலைத்தவனாய் முகம் இறுக "முட்டாள் போல நடந்துக்காம கழட்டித் தா " என அவளை நெருங்கியவனை விட்டு விலகியவள் கையெடுத்து இரு கரம் கூப்பியவளாய் ..

"ப்ளீஸ்" என்றாள்..

அவள் ஒற்றை வார்த்தையில் அவளை விட்டு விலகி நின்றவன் முகம் இறுகியிருந்தாலும் அவன் விழியிலோ ஒரு மின்னல் மின்னி மறைந்தது எதனால் என்பது அவன் மாத்திரமே அறிந்த ரகசியம் அல்லவா??
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 06



இருகரம் கூப்பி கலங்கிய கண்ணில் தேங்கி நின்ற கண்ணீரோடு இரைஞ்சும் பார்வை பார்த்து நின்றவளிடம் மேலும் நெருங்க முடியாது அவளையே பார்த்து நின்றான் கௌசிக் ..

வெண்மதியோ எங்கு அவன் தன்னிலிருந்து தாலியை பிரித்துவிடுவானோ என அஞ்சியவளாய் பின்நகர்ந்தவள் நடுங்கும் இதழ்களோடு "வே...வேணாம் ஸார்.. கழட்ட வேணாமே ப்ளீஸ்" என்ற அழுகுரலோடு கெஞ்சினாள்..

அவளையே பார்த்து நின்றவன் அவளிடம் ஏதோ பேச முயன்ற நேரம் இடையூறாய் ஒலித்தது வீட்டின் மணியோசை..

அதில் பேச வந்ததை விடுத்து கதவைத் திறக்கவென நகர்ந்து சென்றான்..

பெண்ணவள் பற்றிய சிந்தனையோடு கதவைத் திறந்தவனோ தன் மீது வாரி விழுந்துடும் வேகத்தில் மோதவந்தவளை நொடிப் பொழுதில் கண்டுகொண்டு தன்னில் வீழாது சட்டென்று விலகியவன் தன்னெதிரே நின்றிருந்தவளை முறைத்து நின்றான்..

அவளோ அவன் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாதவளாய்
"ஹாய் கௌசிக் " என்று குழைந்திடும் குரலோடு அவனை நெருங்கிட முயல, எட்டி நின்றவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க முகத்தை கோணலாக்கி அவளைப் பார்த்தான்..

அவளோ அவனை மயக்கும் பார்வை பார்த்தவள் "என்ன கௌசிக் பேபி உங்க பேஸ் டல்லா இருக்கு வாட் ஹெப்பன்ட்" என மீண்டும் அவனை நெருங்கினாள் அந்த நவநாகரீக மங்கை..

குழைந்திடும் குரலும் மயக்கும் பார்வையுமாய் தன்னை நெருங்கியவளை கண்டு எரிச்சல் மேலிட "ஹேய் றியா ஜஸ்ட் ஸ்டாப்பிட்" என வீடே அதிரும் வண்ணம் கர்ஜித்தான் கௌசிக்..

அவனது கர்ஜனையில் பயந்தவளோ இரண்டடி தள்ளி நின்று அவனை பார்த்தாள் என்றாள் வீட்டினுள்ளே இருந்த மதிக்கோ என்னவோ ஏதோ என பயந்தடித்து வெளியே வந்தவள் அவ்விருவரையும் பார்த்து முழித்து நின்றாள்..

அவன் கோபமுகம் கண்டு ஒர் நொடி பயந்து நின்றாலும் எப்போதும் போல அதை தூக்கி வீசிய றியா பாவமாய் "என்னாச்சு பே.. என அழைக்க வந்தவள் அவனின் தீயென்ற முறைப்பில் சொல்ல வந்ததை வாய்க்குள் முழுங்கிவிட்டு "என்னாச்சு கௌசிக் ஏன் இந்தக் கோபம்" என்றாள்.

கௌசிக்கோ அவள் கேள்வி காதிலே விழாதவன் போன்று "நீ எதுக்கு இங்க வந்த" என்றான் குரலில் கடுமையுடன்.

"உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் கௌசிக் ஐம் ஸாரி நேற்று பார்ட்டியில நடந்ததுக்கு வெரி ஸாரி" என கெஞ்சலாய் கூறியவளை முகம் இறுக பார்த்தவன் அழுத்தம் நிறைந்த குரலில்..

"ஜஸ்ட் ஸ்டாப்பிட் .. லுக் றியா நான் நிறைய வாட்டி சொல்லிட்டேன் என் லைன்ல குறுக்க வராதேன்னு ஆனாலும் நீ அடங்க மாட்டேங்குற..உன் இடத்துல இதே ஒரு ஆம்பள இருந்தான்னா நடக்குறதே வேற .." என எச்சரித்தவன் சைகையாலே அவளை வெளியறுமாறு கட்டளையிட்டான்..

அவன் பேச்சில் முகம் சுருக்கியவள் "கௌசிக் ஐ ரியலி லவ் யூ ப்ளீஸ் என் காதல புரிஞ்சிக்கங்க" என உருகலான குரலோடு பேசியவள் அவனை நெருங்க அடுத்த கணம் அவன் கைபட்டு சிதறியது அருகே இருந்த கண்ணாடி பூச்சாடியொன்று..

அது உடைந்த வேகத்திலும் சத்ததிலும் இத்தனை நேரம் அனைத்தையும் பார்வையாளராய் பார்த்து நின்ற மதியோ அதிர்ந்தவள் "அம்மா" என்ற சிறு கூச்சலுடன் கண்ணை இறுக மூடி நின்றாள்..

அந்த சத்ததிலே அவள் புறம் திரும்பிய றியாவின் பார்வையோ வெள்ளை நிற சுடிதாரில் செயற்கை ஒப்பனையின்றி கழுத்தில் தங்கத் தாலிச் சரம் தொங்க கண்மூடி நின்றிருந்தவள் மீது அழுத்தமாய் வீழ்ந்தது..

சட்டென்று நிகழ்ந்ததில் கண்மூடி கூச்சலிட்டவள் மெதுவாய் கண்திறந்து அவர்களை பார்த்தாள்..

இருவரின் பார்வையும் தன்னிலே நிலைத்திருப்பதை கண்டவளோ பயத்துடன் அவர்களை பார்க்க அவளை நெருங்கினாள் றியா..

"ஹேய் ஹு ஆர் யூ" என கேட்டவள் பார்வை அந்தத் தாலியை கூர்ந்தவள் பின் அவள் இன்னுமே பதில் கூறாது நிற்பதைக் கண்டு ..

"ஹேய் உன்ன தான் யார் நீ " என மீண்டும் கேட்டிட ..அவள் கேள்விக்கு பதிலோ அவனிடமிருந்து வந்தது..

"சீ இஸ் மை வைப்.." என்றான் அழுத்தத்தோடு..

அதில் அதிர்ந்து போய் அவன் புறம் திரும்பியது இரு பெண்களுமே..

மதிக்கோ சற்றுமுன் தாலியை கழட்டிக் கேட்டவனா இவன்? ? என்ற அதிர்வென்றாள் றியாக்கோ "மனைவியா??" என்ற அதிர்வு தாக்கியது..

எல்லாம் ஒரு கணமே அடுத்த நிமிடம் கோபமாய் அவள் புறம் திரும்பியவள்
"நோ.. நோ ..நான் இருக்கும் போது இவ எப்பிடி உன் மனைவியா வரலாம்" என்றவளாய் அவள் தாலியை இழுக்க அதிர்ந்தவள் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் வெண்மதி..

கௌசிக்கோ றியாவின் செய்கை கோபத்தை கொடுத்தாலும் அவளை தடுக்காது கைககட்டி பார்த்து நின்றவன் பார்வை முழுவதும் மதியின் மீதே..

"அவள் என்ன செய்யபே போகிறாள் " என அவளையே பார்த்து நின்றவனுக்கோ அவளது கண்ணீர் சிறு சலிப்பை தோற்றுவித்தது "இவளுக்கு அழ மட்டும் தான் தெரியுமா?? என எண்ணியபடி நின்றிருந்தான்..

றியாவோ பொங்கிய கோபத்தோடு "ஹேய் விடுடி" என தன்

கூரிய நகத்தால் அவள் கழுத்தில் கீறிட அது தந்த வலியில் "ஸ்ஸ்" என்ற முனங்கியவள் அவள் கரத்தை விலக்கிட முயன்றாள்..

இவ்வளவு நேரமும் அமைதியாய் வேடிக்கை பார்த்தவனுக்கோ இந்த செயல் ஆத்திரத்தை மூட்ட
"றியா! என கத்தியவன் அவள் பிடியிலிருந்த மதியை இழுத்து தன் கைவளைவில் நிறுத்தினான்..

இரு பெண்களும் அவன் கத்தலில் மிரண்டு அவனை பார்த்தனர்..

றியாவோ அப்போதும் அடங்காதவளாய் கோபத்தோடு அவளை முறைத்தாள் ..
மதியோ மீண்டும் தன்னைச் சுற்றி நடக்கும் களபேரத்தில் மனமுடைந்தவளாய் விசும்பிட..

தன் கைவளைவில் நின்றவளை விலக்கியவன்
சற்றே கோபத்துடன் "உஷ்ஷ்.. ஹேய் ஸ்டாப் அழாத " என வாயில் விரல் வைத்து அதட்டினான்..
அதில் கப்பென்று வாயை மூடி அவனைப் பார்த்தாள்..

"இன்னொருவாட்டி அழுத மவளே கன்னம் பழுத்துடும் பார்த்துக்கோ " என மிரட்டிட விழிகள் விரிய அதிர்ந்து அவனைப் பார்த்தாள்..

கௌசிக்கின் அதட்டலைக் கண்ட றியா மனமோ குத்தாட்டம் ஆடியது..

தன்னை அதிர்ந்து பார்த்தவளை ஒரு பார்வை பார்த்தவன் அவள் கழுத்துக் காயத்தை ஆராய்ந்தான்...

காயம் கொஞ்சம் ஆழமா தான் இருக்கு வலிக்கல ?? என கேட்டவன் கேள்வியில் ஆமென தலையசைத்தவளை கூர்ந்தவன்..

" நிஜமாலுமே உனக்கு இந்த தாலி அவ்வளவு முக்கியமா தேவைனா தைரியமா அவ உன்ன காயப்படுத்தினதுக்கு பதிலடி கொடு..
அப்பிடி இல்ல அந்த தாலி வேணாம்னா அத கழட்டி என் கைல கொடு என தன் கையை நீட்டினான்..

அவன் கூறியதைக் கேட்டு திருதிருவென முழித்தவளுக்கோ றியாவை பார்க்க அவளோ குதறிவிடும் நோக்கில் அவளை பார்த்தாள்..

அதில் சற்றே பயந்தவள் "நா...நான் அவங்கள அடிக்கனுமா என்னாலே முடியாதே" என உள்ளூரே தோன்றிய பீதியோடு விழிகளாலே அவனிடம் மறுப்பை காட்டிட..அது புரிந்தாலும் அமைதியாய் கை நீட்டியபடி நின்றிருந்தான்..

றியாவோ" இவ என்ன அடிச்சிடுவாளா" என்ற ஏளனத்தோடு அவளைப் பார்த்தாள்..

"என்ன கழட்டித் தாறியா?? இல்ல?? என கேள்வியாய் இழுத்திட மறுப்பாய் தலையசைத்தவள் தாலியை இறுக்கியபடி இல்லையென தலையசைத்தாள்..

றியாவுக்கோ ஆத்திரம் தலைக்கேற "ஹேய் என்னடி ரொம்ப சீன் போடுற...நீ என்ன கழட்டுறது நானே கழட்டுறேன் " எனக் கூறி அவளை நெருங்க கௌசிக்கோ விலகி நின்று வேடிக்கை பார்த்தான்..

மதியோ அவனைப் பார்த்தவள் அவனிடம் தனக்கு உதவி கிடைக்காது என்பது புரிய தன்னை நெருங்கி தாலியில் கைவைத்து இழுக்க முயன்றவள் கன்னத்தில் பட்டென்று ஓர் அறையை விட்டு விலகி நின்றாள்..

அவள் தன்னை அடித்திட மாட்டாள் என்ற வேகத்தில் சென்ற றியாவின் கன்னமோ சுள்ளென்று எழுந்த வலியில் அதிர்ச்சியும் கோபமும் கலந்து அவளை முறைத்தாள்..

"ஏய் என்னையே அடிச்சிட்ட இல்ல உன்னை விட மாட்டேன்டி" என அவள் தன்னை அடித்த அவமானமும் கோபமும் சேர அவளை அடிக்க நெருங்க அவளை மறைத்து நின்றான் கௌசிக் ..


"இனாஃப் ..இதுக்கு மேல ஒரு நிமிசம் நீ இங்க இருந்தேன்னு வை உன் அப்பனோட சேர்த்து உன்னையும் களி தின்ன வெச்சிடுவேன் ஒழுங்கா இடத்த காலி பண்ணிடு " என அடிக்குரலில் அழுத்தமாய் மிரட்டியவன் வார்த்தையில் விலகி நின்று அவனை முறைத்தவள் இனி அவனை மீறி அவளிடம் நெருங்க முடியாது என்பது புரிய வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள்..


அவள் அங்கிருந்து சென்றதுமே வெண்மதிக்கோ ஏதோ பெரிய புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது..

நேற்றிலிருந்து எத்தனை அலைச்சல் ஓட்டம் என அனைத்தையும் எண்ணி பெருமூச்சுவிட்டவள் அப்பொழுதுதான் உணர்ந்தாள் இன்னமும் தான் அவனை ஒட்டி நிற்பதை..அடுத்த நொடி பதறி விலகி நின்றவள் அவனைப் பார்த்தாள்..


அவள் விலகளில் அவளைப் பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான்..

அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்தவளுக்கோ திகில் சூழ அவன் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் நகர்ந்திட ஓர் கட்டத்தில் சுவற்றில் மோதி நின்றவளோ இனி தப்பிக்க வழியின்றி அவனை மிரண்டு பார்த்தாள்..

அதில் அவன் இதழ்கடையோரம் சிறு புன்னகை தோன்றிட அவளை மேலும் நெருங்கியவன் அவள் இருபுறமும் தன் கைகளை ஊன்றி அவளைப் பார்த்தான்..

மார்பளவே இருந்த அந்த குட்டி உருவத்தை அளவிடும் பார்வை பார்த்து நின்றவனுக்கோ தன் அருகாமை தந்த பயத்தில் வெளிப்படையாய் நடுங்கிய உடலோடும் தாழ்த்திய பார்வையோடும் நின்றவளை கண்டு சுவாரஷ்யம் கூடிட அவளை மீண்டும் சீண்ட எண்ணியவனாய் மேலும் அவளை நெருங்கி நின்றவன் கரமோ அவள் கழுத்தின் கீழ் நோக்கிப் பயணிக்க அவன் கரம் செல்லும் திசை கண்டு அதிர்ச்சியில் படக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் வெண்மதி..

இத்தனை நேரம் கவிழ்ந்திருந்தவள் தற்போது தன்னை அதிர்ந்து பார்த்த விதம் சிரிப்பை தர சிரித்துக் கொண்டவன் அப்போதும் தன் கரத்தை அவள் கழுத்திலிருந்து கீழிறக்க
பதறியவள் தன் கரம் கொண்டு அவன் கரத்தை தடுக்க முயல அவன் கைகளோ அவள் தாலிக் கொடியை பற்றிக் கொண்டது..அதில் அதிர்ந்து மீண்டும் முழித்தவளைக் கண்டவன்..

"ஹேய் ரிலாக்ஸ் " என அமைதியாய் கூறியவன் அவள் விழி பார்த்து "என்ன நம்பிக்கையில இந்த தாலிக்கு இவ்வளவு மதிப்புக் கொடுக்குற" என கேள்வியாக அவள் முகம் நோக்கினான்..

அவளோ அவன் கேள்வி புரியாதவளாய் அவனைப் பார்த்தாள்..

"நேற்று ஒரு இரவு உன்ன காப்பாத்திட்டேங்குறதுக்காகவும் இந்த தாலிய உன் கழுத்துல கட்டிடேங்குறதுக்காகவும் முன்ன பின்ன தெரியாத என்ன ஏத்துக்க துணிஞ்சிட்டியா?? நான் நல்லவனா? ? கெட்டவனா?? எதுவுமே தெரியாம எப்பிடி இந்த தாலிக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குற?? " என்றவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாது தடுமாறி நின்றாள்..

"நான் கெட்டவனா இருந்தா என்ன பண்ணி இருப்ப அப்போவும் இதே போல தாலி கட்டிடானேனு சகிச்சிக்கிட்டு இருந்துருப்பியா??" என்றவன் கேள்வியிலுக்கு பதில் கூற முடியாது தடுமாறி நின்றாள்..

"இந்த தாலிக்கு அத்தனை முக்கியமா நினைக்குற நீ இந்த தாலியால நமக்குள்ள உருவாகியுள்ள கணவன் மனைவி என்கிற உறவையும் ஏற்றுக்கொள்ள தயாரா இருக்குறீயா?? என்றவன் கேள்வியில் சிறு திடுக்கிடலோடு அவனைப் பார்த்தாள்..

இதை எபடி மறந்தாள் ..தாலியை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால கணவன் என்ற பந்தத்தையும் ஏற்றுக்கொள்ள முடியுமா?? என்ற மனதின் கேள்விக்கு பதில் தெரியாது நிமிர்ந்தாள்..

அவனோ அவள் முகம் பார்த்தே அவள் மனதினோட்டம் புரிந்தவன் அவளை விட்டு நகர்ந்து இருக்கையில் அமர்ந்தவன் அவளையும் அமருமாறு கூறிட மௌனமாய் அமர்ந்து கொண்டாள்..

"என்ன பத்தி எதுவுமே தெரியாம நீ இந்த தாலிக்கு முக்கியத்துவம் கொடுக்குறது முட்டாள் தனமா தெரியுது.. என்றவன் அவள் முகம் காட்டிய பாவனையில் பெருமூச்சைவிட்டான்..

"இங்கப் பாரு நான் உன்ன போல இல்ல இந்த தாலி செண்டிமென்ட்ல நம்பிக்கையில்லை" என்றவனின் மனதில் ஒரு சில நிகழ்வுகள் நிழலாட முயன்று அதை ஒதுக்கினான்..

" உன்னோட நம்பிக்கையை பார்க்கும் போது என்னை நீ உன் லைப்ல ஏத்துக்க தயாரா இருக்கன்னு தானே அர்த்தம்...என்று கூறி சிறு இடைவெளிவிட்டவன்..
"என்னோட வாழ்க்கைல நீ நுழையிறதுக்கு முன்னாடி என்ன பத்தி நீ முழுசா தெரிஞ்சிக்கனும் " என்றவன் அவனைப் பற்றி கூறத் தொடங்கினான்..

தன்னைப் பற்றியும் தன் வேலையை பற்றியும் கூறியவன் தன் குடும்பத்தை பற்றி கூறும் போது அவள் முகத்தில் ஆர்வம் படிவதைக் குறித்துக் கொண்டான்..

பெண்ணவளுக்கோ அவனைப் பற்றியோ வேலையோ பற்றியோ எந்த எண்ணமுமில்லை அவன் கூறிய குடும்பத்தை பற்றிய எண்ணமே..தாத்தா பாட்டி அத்தை மாமா என நீண்டு கொண்டே சென்ற அவன் குடும்ப உறவுகளைக் கேட்டதில் தானும் இனி அந்தக் கூட்டில் ஒருத்தியாகிவிடுவோம் என்ற எண்ணமே ஓடியது..
உறவுகளின்றி ஒற்றையாய் வளர்ந்தவளுக்கு இது பெரும் வரமாகவே தோன்றியது..

அவள் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தவன்
"நீ சொன்ன போல நீ யாரை தேடி வந்தியோ அவங்ககிட்ட உன்ன ஒப்படைப்பேன் " என்றவன் குரலில் இருந்த உள்ளர்த்தம் புரியாதவளாய் மெதுவாய் தலையாட்டினாள்...

"அவங்கள கண்டுபிடிச்சதும் உனக்கு இந்த வாழ்க்கையில இருந்து போகனும்னு தோணினாலும் நீ தாராளமா போகலாம் ..நான் தடுக்க மாட்டேன் " என்றவன் எழுந்து தன்னறைக்குள் நுழைந்திட ..அவன் கூறிச் சென்ற வார்த்தையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டவளுக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது..அவனைப் பொறுத்தவரையில் இது வெறும் தங்கச் சங்கிலியே.. தான் விருப்பமில்லையென்றாலும் அவனுக்கு சம்மதமே.."

ஆனால் கிராமத்திலே வளர்ந்த அவளால் அப்படி நினைக்க முடியவில்லை.. சந்தர்ப்ப வசத்தால் தாலி ஏறினாலும் இனி அவனே தன் துணைவன் என மனதில் உறுதிகொண்டாள்..


...

அறைக்குள் வந்த கௌசிக்கின் மனமோ பல யோசனைகளில் உழன்றது..
நேற்றைய நிகழ்வுகள் எதுவும் எத்தனை முயன்றும் அவன் நினைவடுக்கில் எழாமல் விட குழம்பித் தான் போனான்..

"எனக்கென்ன ஆச்சு ஏன் எனக்கு எதுவும் நியாபகம் இல்லை..ட்ரிங் பண்ணியிருந்தாலும் நேத்து நடந்த ஒன்னு கூடவா நியாபகம் இல்லாம விடும்" என தனக்குள்ளே கேள்விகளை கேட்டுக் கொண்டவனுக்கு விடை தான் தெரியவில்லை..

மீண்டும் யோசித்தவனுக்கு பெண்ணவளின் நினைவு தோன்ற
இனி இவளை என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்..

அவனைப் பொறுத்தவரை தாலி என்பது பெரிய விசயமல்ல ..இருந்து அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவன் அவளிடமே முடிவெடுக்கும் உரிமையும் வழங்கிவிட்டான்.. இனி முடிவு பெண்ணவள் கையில் அவள் எதை தேர்ந்தெடுத்தாலும் சம்மதமே..

அவள் கூறியதில் நேற்று நடந்தவைகள் இது தான் என யூகித்தவனுக்கு நேற்றைய இரவு அவன் சென்ற அந்த விழாவிலே ஏதோ தனக்கு நிகழ்ந்துள்ளது என்பது மட்டும் தெளிவாய் உறுதியானது..

" சோ நேத்து அந்த பார்ட்டில நடந்தது மட்டும் தான் எனக்கு நியாபகம் இருக்கு அப்போ அங்க தான் எனக்கு ஏதோ நடந்து இருக்கு" என யோசிக்கத் தொடங்கியவனுக்கு பொறி தட்டியது என்னவோ அவ்வொருவனின் நினைவுகளே ..

"நான் நினைக்கிறது சரின்னா இது எல்லாமே உன் வேலையாதான் இருக்கும்" என எண்ணிக் கொண்டவன் முகத்தில் இகழ்ச்சிப் புன்னகை..

"நீ உன்னோட ஆட்டத்தை ஆரம்பிச்சு வெச்சிட்ட இனி என்னோட ஆட்டத்தை பார்க்க ரெடியா இரு ..லெட் சீ மை கேம்.." என மானசீகமாய் எண்ணிக் கொண்டான்..



.....


அந்த பளிங்குத் தரை அதிரும் வண்ணம் கோபத்தோடு வீடு நுழைந்தவள் அடுத்த கணம் அந்த வீடே அதிரும் வண்ணம் அழைந்தது என்னவோ அவள் தந்தையே..

மகளின் காட்டுக் கத்தல் காதில் வீழ்ந்தாலும் இது தான் முன்னமே எதிர்பார்த்தது தான் என்பது போல் எவ்வித ஆர்பாட்டமின்றி இறங்கி வந்தார்
றியாவின் தந்தை சுந்தரம்..

தான் இத்தனை கோபமாய் கத்தியும் எவ்வித அலட்டலுமின்றி இறங்கி வந்தவரை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்துக் கொண்டிருந்தாள்..

சுந்தரமோ தன் மிடுக்கான நடையுடன் சோபாவில் வந்தமர்ந்தவர் மகளை ஒரு பார்வை பார்க்க..அதற்காகவே காத்திருந்தவள் போல கத்தத் தொடங்கினாள்..

" அப்பா அந்த ராஸ்கல் வேறொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான்" என அகங்காரமாய் கத்திய மகளை நோக்கியவர் ..

"எனக்குத் தெரியும் றியா" என்றார் ..

"என்ன! தெரியுமா?? எப்பிடி எப்பிடித் தெரியும்.. தெரிஞ்சும் எப்பிடி விட்டிங்க உங்களுக்குத் தெரியும் இல்ல நான் அவன லவ் பண்றது அப்புறம் எப்பிடி இத நடக்க விட்டிங்க" என தந்தையை உலுக்கினாள்..

அவரோ சற்றே எரிச்சல் மேலிட "றியா நிறுத்து கத்தாத .. அவன் யாருன்னு தெரிஞ்சும் எப்பிடி அவன லவ் பண்ற நீ..உன்னோட அப்பாவோட மொத்த பிஷ்னெஷ்ஷையும் குழி தோண்டி புதைக்க வந்தவன் மேல காதல் வெச்சியிருக்க ..இத எப்பிடி நான் அனுமதிப்பேன்..அதுக்கு முதல்ல நீ பண்றது ஒன்னும் காதல் இல்ல வெறும் அட்ராக்ஸன் றியா அத முதல்ல புரிஞ்சிக்கோ..
உனக்கு இவன விட பெட்டரா நல்ல மாப்பிள்ளையை பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்குறேன்..நீ அவன மறந்துடு.. அவன் தேவையில்லாம பல பேரோட லைன்ல க்ரோஸ் ஆகுறான் நிச்சயமா இன்னும் கொஞ்ச நாளைல அவன் ஆட்டமே க்ளோஸாகிடும் ...அப்பிடி பட்டவன கல்யாணம் பண்ணிட்டு விதவையாவா இருக்க போற" என்ற தந்தையின் கேள்வியில் இத்தனை நேரம் ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருந்தவள் சற்று நிதானித்தாள்..

தந்தை சொல்வது அனைத்தும் உண்மை தானே..தந்தையின் தொழில் உள்ள குழறுபடியை பற்றி விசாரிக்க வந்தவனின் ஆளுமையில் வீழ்ந்தவளோ தந்தையின் தொழிலை அவனிடமிருந்து காப்பாற்றவும் அவன் மீது கொண்ட ஈர்ப்பிலும் அவனை காதலெனும் வலையில் சிக்கவைக்க திட்டமிட்டாள்..

வலையில் சிக்க நான் மானல்ல சிறுத்தை என்பதை உணர்த்துபவனாய் பல முறை தன்னை நெருங்க முயன்றவளை எட்டி நிறுத்தியவன் இறுதி வரை அவள் எண்ணம் நிறைவேற விடவில்லை ..இதோ இன்றும் அப்படியே அவளை மொத்தமாய் அவன் வாழ்வை விட்டு அகற்றியுள்ளானே..

அனைத்தையும் புரிந்து கொண்டாலும் அவள் ஈகோவோ அதை ஏற்க மறுத்தது..

"நோ நோ நான் அவன சும்மாவிடமாட்டேன் ..என்ன வேணாம்னு சொல்லிட்டு எப்பிடி அவன் அவளோட வாழுறானு நானும் பார்க்குகிறேன்" என கோபமாய் கத்திவிட்டு சென்றவளை எரிச்சலாய் பார்த்து நின்றார் சுந்தரம்..

அதே நேரம் அவர் அழைபேசி ஒலித்திட எடுத்து காதில் வைத்தவர் மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ ..
"என்ன என்ன பண்ண சொல்ற நேத்து நைட்டே அவனை போட்டுத் தள்ளலாம்னு முடிவு பண்னேன் ஆனா எப்படியோ தப்பிச்சிட்டான்.. இந் நேரம் அவன் கண்டுபிடாச்சு இருப்பான் .. இனி என்னாலா அவனோட மோத. முடியாது நீயே பார்த்துக்கோ ..இருக்குற தொழிலயாச்சும் நான் காப்பாத்திக்க பார்க்குறேன் என்றவர் பட்டென்று அழைப்பைத் துண்டித்தார்..


.......


சோபாவில் கால்களைக் கட்டிக் கொண்டு சோகமே உருவாக தன் வாழ்க்கையை எண்ணியபடி அமர்ந்திருந்தாள் வெண்மதி..

அவள் மனமுழுவதும் தன் சித்தியைப் பற்றியும் அவர் சொன்ன செய்தியும் மனதில் உலா வர யோசனையோடு அமர்ந்திருந்தவளுக்கோ எதிரில் ஒருவன் தன்னையே பார்த்திருப்பது கூட உரைக்கவில்லை..


காலையிலிருந்து எதுவும் உண்ணாததில் பசியெடுத்தவனுக்குகி அப்போது தான் அவளும் காலையிலிருந்து எதுவும் உண்ணவில்லை என்பது நினைவில் வர அறையை விட்டு வெளியே வந்தவன் கண்டதோ சோகப் பதுமையாய் அமர்ந்திருந்தவளையே..

தான் வந்தது கூடத் தெரியாது அமர்ந்திருந்தவளை கலைக்கும் விதமாக
தொண்டையைச் செருமிட அப்போதும் அவள் நினைவு கலையாமல் இருக்க மெல்ல அவள் அவளருகே அமர்ந்தவன் அவள் தோள் தொட்டுக் உலுக்கினான்..

அவன் உலுக்கலில் நினைவுக்கு வந்தவள் அவன் தன்னைருகே அமர்ந்திருப்பதை உணர்ந்து வேகமாக எழ முயற்சிக்க அவளை இருக்க வைக்க எண்ணி கையை பிடித்தவன் பிடியில் க தடுமாறியவள் அவன் மீதே விழுந்து வைத்தாள்..

"ஹேய் பார்த்து" என அவள் சோபாவில் இடித்துட விடாமல் இருக்க அவள் இடுப்பில் கைகளைக் கோர்த்து பிடித்துக் கொண்டான்..

சட்டென்று அவன் கரம் பதிந்ததில் அதிர்ந்து அவன் முகம் பார்த்திட அதுவோ எவ்வித சலனமின்றி சாதாரணமாகவே இருந்தது..

ஆணவனின் தொடுகையில் உடல் நெளிந்திட அவனைவிட்டு அவசரமாய் எழ முயன்றவளைத் தடுத்தவன்..

"ஹேய் ரிலாக்ஸ்" என்றவன் அவள் இடுப்பில் கைகோர்த்து அவளைத் தூக்கி நிறுத்தினான்..

"எதுக்கு இந்த பதட்டம் என்ன பார்த்தா பூதம் போலவா இருக்கு .." என அவள் பதட்டம் நீங்க பேச்சுக் கொடுத்தான்..

அவளுக்கோ அவன் அப்படி கேட்டதும் வேகவேகமாய் மறுப்பாய் தலையசைக்க அவளின் செய்கையில் சிரித்தவன் ..

"அப்போ எதுக்கு இந்த பயம் ..அர்த்த ராத்திரில பேய்க்கு கூட பயமில்லாம வீட்ட விட்டு வெளிய வந்த ஜான்சி ராணிக்கு எதுக்கு என்ன கண்டா மட்டும் பயம்" என கேலியாய் கேட்டவன் கேள்வியில் வீட்டு நியாபகம் மீண்டும் எழ கண்கள் கலங்கத் தொடங்கியது..

அதைக் கண்டவனும் "ப்ப்ச் போச்சுடா ஆரம்பிச்சிட்டியா.. உன்ன பார்த்து ஒரு நாள் கூட முழுசா ஆகல ஆனா இந்த கண்ணுல இருந்து லீட்டர் கணக்குல தண்ணிய பார்த்துட்டேன்" என சலித்தவன் பாவமாய் தன்னையே பார்த்திருந்தவளை நோக்கி அவள் முன் முட்டி போட்டு அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்..

" எனக்கு அழுறதெல்லாம் சுத்தமா பிடிக்காது..பொண்ணுங்களோட பலாவீனமா கண்ணீர் இருக்கக் கூடாது சோ எதுக்கெடுத்தாலும் அழுகுறது நிறுத்து.. யாரோடா துணையும் இல்லாம இனி நீ உன் வாழ்க்கையை தைரியமா எதிர்கொள்ளத் தயாராகனும்" என்றவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓர் அழுத்தம் நிறைந்திருந்தது..

அது புரிந்தும் புரியாதவளாய் தலையாட்டி வைத்தவளைக் கண்டவனுக்கு மனம் கனத்தது..இருந்தும் தன் உணர்வுகளை மறைத்தவன் அவளுக்கு என்றும் அரணாய் நானிருப்பேன் என உறுதியாய் எண்ணிக் கொண்டான்..
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 07



பெண்ணவளுக்கு தன் வார்த்தைகளாலே தைரியமளித்தவன் அவள் முகம் காட்டிய தெளிவில் சிறு நிம்மதியோடு எழுந்து கொண்டவன் சத்தமிடும் வயிற்றின் பசி போக்க உணவை தயார் செய்ய சமையலறை நுழைந்து கொண்டான் கௌசிக் ..


அவன் சமையலறையில் வேலை செய்வதை விழி விரித்து பார்த்தவளுக்கோ "இவருக்கு இதெல்லாம் கூட செய்யத் தெரியுமா??" என்றே நினைக்கத் தோன்றியது..

அடுத்த பத்து நிமிடத்தில் காலை உணவை தயார் செய்தவன் அவளை அழைத்து இருவருக்குமான உணவை பரிமாறினான்..

மௌனமாய் தங்கள் காலையுணவை முடித்துக் கொண்டு எழும்பியவன் அறைக்குள் நுழைந்து குளித்து தயாராகி வெளியேறி அவளிடம் "எனக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு நீ பயப்படாம இரு ஓகே வா?" என்றுவிட்டு அவளின் சரியென்ற தலையாட்டலை பெற்ற பின்பே வீட்டை விட்டு வெளியேறிச் சென்றான் கௌசிக் ..

...

வீட்டை விட்டு வெளியேறியவன் சென்றது என்னவோ அவன் ஆருயிர் நண்பன் ப்ருத்வியின் வீடு நோக்கியே..

நேற்றைய பொழுது தன்னோடு இருந்த நண்பனுக்கு நேற்று தனக்கு என்னானது என்று தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் என எண்ணிக் கொண்டே அவனைத் தேடி வந்திருந்தான் கௌசிக்..

தன் வீட்டு வாசல் போர்டிகோவில் வந்து நின்ற நண்பனின் வண்டியைக் கண்டவனோ வேகமாய் அவனை நோக்கிச் சென்றான் ப்ருத்வி..

" ஹேய் மச்சான்..வாடா" என நண்பனை அழைத்தவன் இருவருமாய் உள் நுழைந்தனர்..

"என்ன மச்சான் நேத்து எங்கடா அவ்வளவு அவசரமா போன.. நான் வாரதுக்குள்ளாவே போய்ட்ட" என்றவன் கேள்வியில் நெற்றியை வருடியவன் யோசனையாய்..

"டேய் எனக்கு நேத்து நடந்த எதுவுமே நியாபகம் இல்லடா" என்றவன் நேற்று நடந்ததை தான் அறிந்து கொண்டதை அனைத்தையும் நண்பனிடம் கூறி முடித்திட அவனை அதிர்ந்து பார்த்தான் ப்ருத்வி..

"என்ன மச்சான் சொல்ற இவ்வளவு நடந்திருக்கா?? யாருடா உன்ன கொல்ல வந்தா அத பத்தி ஏதும் தெரிஞ்சுதா?? என்றவனுக்கு சன்னச் சிரிப்புடன்..

"ஒருத்தன் ரெண்டு பேருன்னா சொல்லலாம் பூரா பேரும் என்ன போட்டுத் தள்ளத்தான் சுத்துறானுங்க இதுல யாருன்னு சொல்றது" என்றவனை சற்றே முறைத்தான் ப்ருத்வி..

"டேய் சிரிக்காதடா நேத்து நீ நிதானத்துலயே இல்ல அந்த பொண்ணு மட்டும் இல்லன்னா உனக்கு என்னாகியிருக்கும்" எனும் போதே ஒரு நண்பனாய் அவன் உள்ளம் பதறியது..

"சரிவிடு.. எப்பிடியும் என் யூகம் படி இது அந்த சுந்தரம் இல்லன்னா அந்த மினிஸ்டரோட வேலையா தான் இருக்கும்னு தோணுது..ஏன்னா கொஞ்ச நாளாவே அவனுங்க லைன்ல தான் ஓவரா க்ரோஸாகிட்டே இருக்கேன்ல" என தன் சந்தேகத்தை நண்பனிடம் ஒப்புவித்தான் கௌசிக் ..

"அப்போ அந்த சுந்தரம் ப்ளான் பண்ணித் தான் உன்ன வரவெச்சியிருக்கான்ல" என பல்லைக் கடித்தபடி கேட்ட நண்பனுக்கு ஆமென்று தலையசைத்தவன் யோசனையோடு தலையை சோபாவில் சாய்த்து கண்மூடி அமர்ந்தான் ..

அவன் நினைவுகளோ நேற்று தான் சென்ற பார்ட்டியில் நிலைத்தது..

அது வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்காக வைக்கப்பட்டிருந்த வெற்றி விழா அதில் ப்ருத்வியும் அவன் தொழில் சார்பாக விருந்தினராக அழைக்கப்பட்டிருக்க அத்தோடு கௌசிக்கும் அவ்விழாவிற்கான அழைப்பை விடுத்திருந்தார் சுந்தரம்..

அவரின் அழைப்பு அவனுக்குள் பல சந்தேகங்களை விதைத்திருந்தது..ஏனெனில் கடந்த சில தினங்களாக அவரின் தொழிலில் உள்ள தவறுகளை கண்டுபிடித்து அவருக்கு தொல்லைகளை கொடுத்த தனக்கு சம்மந்தமே இல்லாத இந்த தொழில் சார்ந்த விழா அழைப்பு எதற்கு என யோசித்தாலும்..இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் ஏதாவது தகவல்களை பெற்றிடலாம் என்ற திட்டத்தோடே அதில் கலந்து கொள்ள முடிவு செய்தவனுக்கு ..அங்கு சென்ற போதே ஏன் வந்தோம் என்றானது ரியா என்ற ஒருத்தியினால்..

அவள் தந்தைக்கு இவன் தொல்லை கொடுத்த நாள் தொடங்கி அவனுக்கு காதல் எனும் பெயரில் தொல்லையாய் வந்து சேர்ந்தவளிடம் எத்தனை கடுமை காட்டிய போதிலும் பெண் என்ற ஒற்றைக் காரணத்திற்காக சற்றே ஒதுங்கி இருந்தவனுக்கோ நேற்று அந்த விழாவில் அவளின் அதிகப்படியான ஒட்டுதலிலும் உரசலிலும் கடுப்பாகித் தான் போனான் கௌசிக் ..

அவளிடமிருந்து தப்பவே விலகி வந்தவனுக்கு அடுத்து என்னானது என்ற நினைவே நினைவடுக்கில் இல்லாது அழிந்து தான் போனது..

கண்மூடி யோசனையில் ஆழ்ந்திருந்த நண்பனை கண்ட ப்ருத்விக்கோ அவனைச் சுற்றி சூழ்ந்திருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தெரியுமாதலால் அவன் கரத்தை அழுந்தப் பற்றினான்..

அதில் கண்விழித்து நண்பனை பார்த்தான் கௌசிக் ..

"இப்போ என்னடா செய்யப் போற..அந்த பொண்ணு ??" என்று இழுத்த நண்பனின் எண்ணம் உணர்ந்தவன் சிரிப்புடன்..

"அந்த பொண்ணு இல்ல மச்சி உன்னோட தங்கச்சினு சொல்லு" என்றிட விழிவிரித்து நண்பனைப் பார்த்தான் ப்ருத்வி..

"என்னடா சொல்ற அப்போ நீ.." என கூற வந்த நண்பனின் தோள் தட்டியவன் சிரித்துக் கொண்டே எழுந்தான்..

"எல்லா பிரச்சனையும் முடியட்டும் மச்சி ஆறுதலா பேசலாம் " என்றவன் நண்பனின் விடைபெற்று கிளம்பிச் சென்றான்..

நண்பனிடம் பேசிவிட்டு சற்றே தெளிந்த மனதுடன் கிளம்பிய கௌசிக்கோ அடுத்து சென்றது என்னவோ மருத்துவமனை ஒன்றிற்கே..

அவன் மனதில் தோன்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவே அங்கு சென்று தன் இரத்த மாதிரியை பரிசோதனைக்குக் கொடுத்தவன்..பரிசோதனை முடிவிற்காக காத்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து வைத்தியர் அறைக்குள் அழைத்திட அறைக்குள் நுழைந்தவனை வரவேற்று அமர வைத்தார் வைத்தியர்..

தன் கையிலிருந்த ரிப்போர்ட்டை ஒரு முறை படித்தவர் நிமிர்ந்து அவனைப் பார்த்திட அவனும் அவரையே பார்த்திருந்தான்..

"கௌசிக் உங்களோட ரிப்போர்ட் வந்துடுச்சி..நீங்க நினைச்சது கரெக்ட் தான் நீங்க போதைக்குட்படுத்தப்பட்டிருக்கிங்க.. என்றிட தான் சந்தேகித்தது உண்மை தான் என உறுதியாகித் தான் போனது..

ஆம் ஆரம்பத்திலிருந்தே நேற்றைய நிகழ்வுகள் எதுவும் நியாபகத்தில் இல்லை என்பதை உணர்ந்தவனுக்கோ ஒருவேளை தான் போதைக்குள்ளாக்கப்பட்டிருப்போமோ என்ற சந்தேகம் எழவே மருத்துவனையை நாடியிருந்தான்..

தலையைக் கோதி வைத்தியரை பார்த்தவன் அவர் அடுத்து என்ன கூறுவார் என கவனிக்கத் தொடங்கினான்..

"நீங்க போதைக்குட்படுத்தப்பட்டதனால உங்களுக்கு நேத்து நடந்த நிகழ்வுகள் எதுவுமே உங்க மூளையில பதியவில்லை அதுனால தான் இந்த மறதி" என்றவரிடம் தனக்குத் தோன்றிய சில சந்தேகங்களை முன்வைக்கத் தொடங்கினான் கௌசிக் ..

"டாக்டர் ஒருத்தங்க போதைக்குட்படுத்தப்பட்டா அது தெளிந்தவுடனே அந்த இடைப்பட்ட நேர நினைவுகள் நியாபகம் இல்லாதது ஓகே..ஆனா போதைக்குட்பட்ட நிலையில ஒருத்தர் சூஸைட் பண்ண கூட தயங்கமாட்டாங்களா??" என்றிட..

அவரோ" ஆமா கௌசிக் ..ஒருத்தன் நல்ல மனவுளைச்சல் இருக்கும் போது குடிச்சான்னா நிச்சயம் அந்த மனவுளைச்சளால தற்கொலை செய்யக் கூட துணிஞ்சிடுவான்..அது போல தான் போதையும் ..நாம எவ்வளவு தான் திடமான மனக்கட்டுப்பாட்டோட இருந்தாலும் நம்மளோட ஆழ்மனசுல புதைஞ்சு இருக்குற மனவுளைச்சல் ஏதோ ஒரு விதத்துல நம்மள தப்பான வழிக்குத் தூண்டிவிட்ரும் அது உயிர எடுக்கறதாவும் இருக்கலாம் உயிர விடுறதாகவும் இருக்கலாம்..
போதை உள்ள போனா அவங்க அவங்களாவே இருக்கமாட்டாங்க இதுல எங்க இருந்து அவங்க செய்வது சரியா தவறானு தோன்றும்..

உங்களோட வேலை ப்ரஸர்னால உங்களுக்கு செலுத்தப்பட்ட இந்த போதைக் கூட உங்கள தப்பான வழிக்குத் தூண்டியிருக்க வாய்ப்பிருக்கு" என தன் கருத்தை முன்வைத்தார்..

கௌசிக்கோ அவர் கூறுவதும் சரியென்றே தோன்றியது..எத்தனை தான் உறுதியானவனாய் இருந்தாலும் அவன் ஆழ்மனதில் மறைக்கப்பட்ட பல ரகசியங்களால் அவன் தினம் தினம் ரணப்படுவது அவன் மட்டுமே அறிந்த ஒன்று..

"உங்க ரத்த மாதிரில கலந்து இருக்குற போதை வீரியம் குறைஞ்சது தான் கௌசிக் இதனால உங்களுக்கு வேற எந்த உடல் பாதிப்பும் வராது.." என அவன் உடல் நிலை குறித்து கூறினார்..

டாக்டரிடம் நன்றி கூறி விடைபெற்றவன் யோசனையோடு அங்கிருந்து வெளியேறினான்..

டாக்டர் கூறியதை அசைபோட்டபடி நடந்து சென்றவனோ யாரோ அழைக்கும் குரலில் சட்டென தன் நடை நிறுத்தி குரல் வந்த திசைபக்கம் பார்க்க..
அவனை விட்டு சற்றே தள்ளி நின்று ஒரு ஆடவனோடு சிரித்துப் பேசியபடி நின்றிருந்தவளைக் கண்டு உடல் விறைத்தான்..

அது அவளே தான் ..நேஹா.. அவனின் அழகிய வாழ்க்கையயை அடியோடு புரட்டிப் போட்டு திசைமாற்றியவளே தான்..

அவள் தான் என உறுதிப்படுத்திய அவன் விழிகளோ அவளை வெறித்திருந்தது..

தன்னை ஒருத்தன் பார்த்திருக்கிறான் என்பது கூட தெரியாது தான் வந்த ஆடவனுடன் கைகோர்த்து சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தவளை வெறித்திருந்தவன் நினைவுகளில்
தன் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகள் அவன் கண்முன்னே விரியலானது..
தன் வாழ்க்கை தடம் மாறிய நிலையை எண்ணிப் பார்த்தவன் உடல் விரைத்தது..
அந்த எண்ணத்திலே உழன்றவன் மனதில் சொல்லொண்ணாத் துயரம் எழ கண்களை இறுக்க மூடியவன் முயன்று தன்னை நிலைப்படுத்தி அவ்விடம் விட்டுக் கிளம்பிச் சென்றான்.

இத்தனை நேரமும் அவனையே நோட்டமிட்ட ஒருவனோ அழைப்பில் யாரோயோ அழைத்திட மறுபுறம் அழைப்பு ஏற்றதும் "ஐய்யா அவன் இப்போ தான் ஹாஸ்பிடல் விட்டு கிளம்பினான்..அவனுக்கு எல்லா உண்மையும் தெரிய வந்திருக்கும் போல தான் இருக்கு" என கூறிட மறுபுறம் என்ன கூறப்பட்டது சரியென்று தலையசைத்துவிட்டு அழைப்பை துண்டித்தான்..

.....

தன் பிளாட்டை வந்தடைந்த கௌசிக்கோ தன் வீடு இருக்கும் தளத்தை நோக்கி செல்ல அவன் வீட்டை அடைந்த நேரம் அவன் முன் வந்து நின்றான் தேவன்..

தேவனும் அதே பிளாட்டில் உள்ள வேறொரு தளத்தில் வசிப்பதால் தான் கௌசிக்கை தினமும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறான்..

தன் முன் நின்றவனை எரிச்சலாய் பார்த்த கௌசிக்கோ இருந்த மனநிலையில் இவன் ஏதாவது பேசினால் நிச்சயம் இன்று இவனுக்கு சமாதி தான் என மனம் எடுத்துரைத்ததுக்கு ஏற்ற போலவே தன் வாயை திறந்தான் தேவன்..

"என்ன கௌசிக் ஸார் பொண்டாட்டி வந்து கொஞ்ச நேரமும் ஆகல அதுக்குள்ள வீட்டுக்கு வெளியே நிக்குறீங்க ..என்ன சின்ன பொண்ணுக்கு விவரம் பத்தலையோ" என சீண்டலாய் வந்து வீழ்ந்தவனின் வார்த்தையில் செந்தணலாய் சிவந்தது கௌசிக்கின் முகம்..

அவனின் முகத்தை குரூரமாய் பார்த்தவாறே "என்ன அவமானபடுத்தினப் போலவே உன்ன அவமானப்படுத்த நினைச்சா தாலிய கட்டி பொண்டாட்டியா ஆக்கிட்டியா?.. அதுவும் நல்லது தான் உன்ன போட்டுத் தள்ளனும்னு சுத்துறவங்க கண்ணுல உங்குடும்பத்த கண்ல காட்டாம மறைச்சிவெச்சியிருக்கல்ல..இனி இவள எப்பிடி மறைக்கிறேன்னு பார்க்குறேன்" என்றவன் வேகமாய் அங்கிருந்து நகர முற்பட ..அவனைச் சொடக்கிட்டு நிறுத்தினான் கௌசிக்..

அதில் நின்று திரும்பியவனின் முன்னே தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன்.."இப்போவும் எப்போவும் சரி என்னைச் சார்ந்தவங்களோட ஹெயார கூட பிடுங்க முடியாதுனு போய் சொல்லு அந்தாளுக்கிட்ட" என செய்கையில் செய்தவனை முறைத்தவனின் கன்னம் தட்டி..

"தேவன் ஸார் போடுற யூனிபோர்ம்க்கு தான் உண்மையா இருக்குறீங்க இல்ல அதனால எழும்ப தூக்கி வீசுற அந்த பொறம்போக்கு முதலாளிக்கு சரி உண்மையா இருங்க சரியா" என நக்கலுடன் கூறியவன் தன் வீட்டை நோக்கி நடைபோட்டான்..

போகும் அவனை முறைத்து நின்ற தேவனோ அவன் சொன்னது போலவே அவன் கூறிய செய்தியை உரிய இடத்தில் கொண்டு சேர்த்திருந்தான்..



....

பணச் செழுமை நிறைந்திருந்த அந்த வீட்டின் முற்றத்தில் வெள்ளை வேட்டி சட்டை சகிதம் அமர்ந்திருந்தார் தொழில் துறை அமைச்சர் மணிகண்டன் ..அவர் அருகே அவர் தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரியும் அமர்ந்திருக்க அவர்கள் முன்னே கோபத்துடன் அமர்ந்திருந்தான் தேவன்..

"என்ன அமைச்சரே அவன போட்டுத் தள்ளுறேன்னு சொன்னீங்க அவன் என்னடான்னா ஒருத்திய கூட்டிட்டு வந்து போதாததா குறைக்கு அவள தாலி கட்டி குடும்பம் நடத்துறான்..நீங்களும் பார்த்துட்டு அமைதியா இருக்கிங்க" என்றான் கோபம் பொங்க..

"என்ன என்னைய்யா பண்ண சொல்ற எந்த பக்கம் ஸ்கெட்ச் போட்டாலும் பய துள்ளிகிட்டு வெளிய வாரான்..அந்த சுந்தரத்த வெச்சு அவன கவுத்திடலாம்னு பார்த்தா எஸ்ஸாகிட்டான்..இப்போ அந்த சுந்தரம் என்னடான்னா இதுக்கு மேல உங்க கூட கூட்டு சேர முடியாதுனு சொல்லி ஒதுங்கிட்டான்" என்றார் அவரும் கோபத்தோடு..


"அவன சாதாரணமா எடை போட்டுட்டிங்க ..அவன சீண்டாத வர அவன் அமைதியா இருந்து இருப்பான் இப்போ ரொம்பவே சீண்டிவிட்டோம் போதாக்குறைக்கு அவன கொல்ல போட்டத் திட்டத்தையும் இன்னேரம் கண்டுபிடிச்சியிருப்பான்.." என்றவன் கூடுதலாக அவன் சொன்ன செய்தியையும் கூறினான்..

"ம்ம்..அந்த பயலுக்கு ரொம்பத் தான் திமிருலே ..அடங்கவே மாட்டேங்குறான்ல ..ம்ம் என்ன சொன்னான் அவன மீறி எதுவும் செய்ய முடியாதா?? இதுக்காகவாச்சும் அவன வெச்சு செய்யனும்லே..என கோபத்தோடு பொறிந்தவர் பின் தன் அடியாள் ஒருவனிடம் " ஏலே சேகரு நம்ம சரக்கு கொண்டு போக ஒன்னு குறையுதுனு சொன்னேல அதுக்கு பதிலா அவனோட சுத்துவான்ல அந்த இன்ஸ்பெக்டரு அவனோட பொண்டாட்டிய தூக்கிடு" என கட்டளையாய் கூறினார்..

தேவனோ" என்ன ஸார் இப்போ எதுக்கு அவன் பொண்டாட்டிய தூக்க சொல்றீங்க.. அவனுங்க கஷ்டடியில தான் இன்னுமே உங்க ஆளு இருக்கான் இந்த நேரத்துல இதையும் செய்து மாட்டிக்காதிங்க.." என்று எச்சரித்தவனையை அசட்டையாய் பார்த்தவர்..

"எனக்கு எல்லாம் தெரியும்லே.. அந்த பய இந்த கேஸ்ஸ முடிக்கனும்னு தானே என் ஆள தூக்கினான்..அவனால ஒன்னுமே பண்ண முடியாது..அவன கோர்ட்ல ஒப்படைச்சாலும் ஒரு வார்த்தை பேசமாட்டான்.." என அத்தனை நம்பிக்கையாய் உரைத்தவரின் எண்ணத்திற்கு மாறாக வேறொரு திட்டத்தை வகுத்திருந்தான் கௌசிக் கிருஷ்ணா..


.....

வீடு வந்ததிலிருந்தே ஒரு வார்த்தை பேசாது அமைதியாய் இருந்தவனையே பார்த்திருந்தவளுக்கோ அவனிடம் பேசவும் முடியாது தயக்கம் ஒட்டிக் கொள்ள மௌனமாய் அமர்ந்திருந்தவள்..

அந்த நிசப்தமான அமைதியில் கண்கள் சுழ தன்னையறியாமலே தூங்கிப் போனாள் வெண்மதி..

நீண்ட நேரமாய் யோசனையோடு இருந்தவனும் யோசித்தது போதுமென்று எண்ணினானோ என்னவோ சுவர்க் கடிகாரம் புறம் பார்வையை திருப்பிட அதுவோ மதிய நேரத்தை தாண்டி காட்டிட எழுந்து கொண்டவன் அப்போது தான் கவனித்தான் ஒற்றைச் சோபாவில் கைகால்களைக் குறுக்கி தூங்கிக் கொண்டிருந்தவளை..

"இப்பிடியே தூங்கிட்டாளா?? எழுப்புவோமா?? " என நினைத்துக் கொண்டு அவளை நெருங்கியவன் பின் என்ன நினைத்தானோ அவளை விட்டு விலகி சமையலறை நுழைந்தவன் இருக்கும் பொருட்களை வைத்து சிறிய சமையலை செய்து முடித்தான்..

நேரம் மூன்றை தொட்டிருக்க மெல்ல அவளை எழுப்பியவன் குரலில் அடித்துப் பிடித்து எழுந்தவள் மிரட்சியாய் அவனைப் பார்த்தாள்..

"ஹேய் ரிலாக்ஸ் ..நான் தான்..ரிலாக்ஸ்" என அவனின் சமாதானத்திலே சற்று நிதானமடைந்தாள் வெண்மதி..

"எதுக்கு இப்போவும் இந்த பயம் ஹாங்" என கேட்டவனிடம் என்ன சொல்வது என தெரியாது அமைதியாய் இருந்தாள்..

அவள் அமைதியை பார்த்தவனுக்கோ அவளை சீண்டும் எண்ணம் தோன்றிட வேண்டுமென்றே
" புருஷன் வீட்டுக்கு வந்தா ஒழுங்கான பொண்டாட்டியா சமைச்சி போடனும் உங்க வீட்ல சொல்லித் தரலையா? இப்பிடி தூங்கி கொறட்டை விடனும்னா சொல்லித் தந்தாங்க" என இதழ்கடையோரம் மறைத்து நின்ற சிரிப்புடன் கேட்டவனை பார்த்து திருதிருவென விழித்தாள் மதி..

"அ..அது..நா..நான்" என வார்த்தைகள் தந்தியடிக்க பேசியவளைக் கண்டு மேலும் சுவாரஷ்யமானவன்..

"என்ன..அ..ஆ னு சொல்ற சமைச்சி வெச்சியிருக்கியா?? இல்லையா?? இப்போவே நேரம் மூனு தாண்டிட்டு செம்ம பசியில இருக்கேன்.." என வயிற்றை தடவிவிட்டு நின்றவனை பாவமாய் பார்த்து வைத்தாள்..

"என்னையே மன்னிச்சிடுங்க..நா..நான் சமைக்கல" என உதடுபிதுக்கி கூறியவளை கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் கோபம் போல..

"வாட் சமைக்கலையா?? சமைக்காம தான் அம்மணி நல்லா தூங்கிட்டு இருந்திங்களோ " என முறைப்பாய் கேட்டவன்.. "போ போய் ஐஞ்சு நிமிசத்துல எனக்கு லன்ஜ் ரெடி பண்ணு போ" என அதட்டலிட வேக வேகமாய் எழுந்து கிச்சன் பக்கம் ஓடியவளை சிரிப்புடன் பின் தொடர்ந்தான் கௌசிக் ..

வேகமாய் பாத்திரத்தை எடுக்க முயன்றவள் அதில் இருந்த மெல்லிய சூட்டில் பட்டென கையெடுத்தவள் சந்தேகத்தோடு அதை திறந்திட மதிய உணவு இருந்ததைக் கண்டு விழிவிரித்தவள் தன் பின்னே நின்றவனைப் பார்த்தாள்..

அவனோ "என்ன " எனும் விதமாய் பார்வையால் கேட்டவன் இதழ்கள் சிரித்திட "அம்மணி இப்படியே பார்த்துட்டே இருக்கப் போறீங்களா?? இல்ல சாப்பாடு போடுவீங்களா? ?" எனக் கேட்டிட மெல்லிதாய் தன் தலையை கொட்டிக் கொண்டு அவனுக்கான உணவை எடுத்துப் பரிமாறினாள்..

தன்னோடு அவளையும் அமர வைத்தவன் அவளுக்கும் சேர்த்தே உணவைப் பரிமாறிட அவளுக்கோ என்னவோ போல் ஆனது..காலை மதியம் என இருவேளையிலும் அவனே உணவு சமைத்து பரிமாறியதில்..

சிறு தயக்கத்துடன் அவனைப் பார்த்தவள் "ஸாரி இனி நானே டைம்க்கு சமைச்சிடுறேன்" என கூறிட அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன்..

"பரவாயில்லையே திக்காம ஒரு முழு வசனம் பேசிட்ட ..ம்ம் குட் கேர்ள்" என கேலி போல் கூறிட அதில் வெட்கம் மேலிட சிரித்துக் கொண்டாள் வெண்மதி..

சாப்பிட்டு முடிந்து எழுந்தவனோ அவளிடம் " ட்ரெஸ் சேன்ஜ் பண்ணலையா?? என அவள் இன்னுமே ஒரே ஆடையுடன் இருப்பது கண்டு கேட்டிட..

அதில் சற்றே தயங்கியவள் "எ..என்னோட பேக் அது எங்க போச்சுனு தெரியலை" என்றவள் அவனைப் பார்த்தாள்..

"ம்ம்" என்றவன் உள்ளே சென்று சிறு பையை எடுத்து வந்து அவளிடம் நீட்டிட குழப்பத்தோடு அதை வாங்கிக் கொண்டவள் கேள்வியாய் அவனைப் பார்த்தாள்..

"இது என்னோட தங்கச்சிக்காக வாங்கினது நீ போட்டுக்கோ நாளைக்கு உனக்குத் தேவையான ட்ரெஸ் வாங்கிக்கலாம் " என்றிட சரியென்று தலையசைத்தாள்..

"அப்புறம் அதோ அந்த ரூம்ல தங்கிக்கோ சரியா??" என்றவனை நிம்மதியாய் பார்த்தாள்..

அவளுக்கோ எங்கு அவனோடு ஒரே அறையில் தங்க வேண்டுமோ என்ற பயம் உள்ளரித்துக் கொண்டிருக்க அதை இல்லாமல் செய்திருந்தான்..

சரியென்று அவனிடம் தலையசைத்து அவன் காட்டிய அறைக்குள் நுழைந்து கொண்டாள் வெண்மதி..


......


கண்ணீர் மல்க கைகூப்பி தன் முன்னே தொங்கிய இருவரின் புகைப்படத்தை வெறித்து நின்ற கஸ்தூரியின் மனமுழுவதும் அவள் பற்றிய கவலையே அரித்துக் கொண்டிருந்தது..

"கடவுளா நின்னு உங்க பொண்ண நீங்க தான் காப்பாத்தனும் " என மதியின் பெற்றோரிடம் வேண்டுதல் வைத்தவரின் நினைவில் அழையாத விருந்தாளியாய் காலையில் வந்து கத்திச் சென்ற தம்பியின் எண்ணம் ஊசலாடியது..

மதி ஊரைவிட்டே சென்றுவிட்டாள் என்பதை எப்படியோ தன் கூட்டாளி மூலம் அறிந்து கொண்ட தாஸோ விடியலில் வீட்டு வாசலில் ருத்ர மூர்த்தியாய் வந்து நின்றான்..

"ஏய் கதவத் திற" என காட்டுக் கத்தலிட்டவனின் கத்தலில் அதிர்ந்த மனதை முயன்று கட்டுப்படுத்திய கஸ்தூரியோ திடத்துடன் கதவைத் திறந்திட புயலென உள் நுழைந்தவன் அடுத்த கணம் வீட்டையே ரணகளப்படுத்தியிருந்தான்..வீட்டில் ஒரு இடம் விடாது தேடியவன் அவள் இல்லை என்பதை கண்டு நேரே கஸ்தூரி முன் நின்று அவர் கழுத்தை நெறித்தான்.

"எங்க அவ...ராத்திரியோட ராத்திரியா அவள ஊரவிட்டே அனுப்பிட்டியா??" என தன் கூடப்பிறந்தவள் என்றும் பாராது கஸ்தூரியின் கழுத்தை நெறித்தான்..

கண்கள் சொருக நின்றிருந்தவர் முன்னரே தன் புடவை மடிப்பில் சொருகி வைத்திருந்த குறுங்கத்தியை எடுத்து அவன் கையில் கீறிட வலியில் கையை உதறியவன் சீறலாய் அவரை நெருங்க முதலே கத்தியை அவன் முன் நீட்டினாள்..

"டேய் ஒரு அடி முன்னவெச்சே கைல போட்ட கோடு கழுத்துல விழும் பார்த்துக்கோ" என சீறிய அக்காளின் சீற்றத்தில் ஓரடி பின் நகர்ந்தான் தாஸ்..

"பொறுக்கி நாய உன்கிட்ட இருந்து அவள காப்பாத்த தான் அவள ஊரவிட்டு அனுப்பி வைச்சேன் ..முடிஞ்சா அவள கண்டுபிடிச்சுக்கோ இப்போ வீட்டை விட்டு வெளியே போடா" என கத்தியவரை முறைத்தான்..

"என்கிட்ட இருந்து வேணா நீ அவள காப்பாத்தியிருக்கலாம் ஆனா அவன் கிட்ட இருந்து உன்னால காப்பாத்த முடியாது..எப்பிடியிருந்தாலும் அவன் அவள தேடி கண்டுபிடிக்கத் தான் போறான்" என கூறியவன் விறுவிறுவென வீட்டை விட்டு நகர..இவரோ அவன் கூறியது புரியாது அதிர்ந்து நின்றார்..


இப்போது அதை எண்ணியவருக்கு தாஸ் கூறிச் சென்ற அவன் யாராக இருக்கும்..?? மதிக்கு அவனால் எந்த ஆபத்தும் வரக் கூடாது என கடவுளிடம் மானசீகமாய் வேண்டி நின்றார் கஸ்தூரி..
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 08



அடுத்த நாள் விடியல் அழகாய் புலர்ந்திட கிழக்கின் சூரியனும் மெல்ல மேலெழுந்தான்..
அந்த காலைப் பொழுதினில் தன் தூக்கம் களைந்தெழுந்த மதிக்கோ எப்போதும் கேட்கும் சித்தியின் திட்டல் குரல் இல்லாது மந்தமாய் இருக்க அவரது எண்ணங்களும் எழுந்து அவளை கவலையுறச் செய்தது.

முயன்று தன் கவலையை ஒதுக்கியவள் படுக்கையைவிட்டெழுந்து தன் காலைக்கடன்களை முடித்து நேற்று தந்த பையிலிருந்த ஆடைகளில் ஒன்றை அணிந்து அறையை விட்டு வெளியேறியவளுக்கு நேற்றிருந்த தயக்கம் இன்று இல்லை போலும் சாதாரணமாய் சமையலறை நுழைந்து கொண்டாள்.

நேற்றைய அனுபவத்தில் காபிக்கான பொருட்களை எடுத்து காபியை போட்டு முடித்தவளுக்கு அடுத்ததாய் அழையா விருந்தாளியாய் பெரிதும் வந்து ஒட்டிக் கொண்டது தயக்கம்.

கையிலிருந்த காபியை பார்த்தவள் இதை எப்படி அவனிடம் கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த நேரத்திற்குள்ளே அவனது அறைக் கதவு திறக்கப்பட அந்த சத்ததில் அவசரமாய் வெளியே வந்தவள் கண்டது என்னவோ காக்கிச் சண்டையில் கம்பீரமாய் நின்றவனையே.

இறுக்கிபிடித்த காக்கிச் சட்டையில் ஒரு படி கூடிய கம்பீரத்தோடு நின்றவனை வாய்பிளந்தபடி பார்த்து நின்றவளுக்கோ கையிலிருக்கும் காபியை அவனிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அக்கணம் மறந்து தான் போனது.

அவனும் அவள் ஒருத்தி நிற்பது கூட தெரியாதவன் போல முகத்தில் டன் கணக்கில் கொட்டிக் கிடந்த எரிச்சலோடு வீட்டை விட்டு வெளியேறியவன் எண்ணம் முழுவதும் விடியலில் தனக்கு வந்த அழைப்பிலே நிலைத்திருந்தது.
அந்த அழைப்பின் விளைவே இந்த கோபமும் எரிச்சலும்.

நேற்றைய அளைச்சலில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவனுக்கோ எங்கோ மூலையில் ஒலித்த அலைபேசி ஒலி கேட்டிட புரண்டு படுத்தவன் கரமோ தட்டுத்தடுமாறி மேசையின் மீதிருந்த தொலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்து "ஹலோ" எனும் முன்பே மறுபுறத்தில் நக்கலாய் வந்து வீழ்ந்தது அந்தக் குரல்.

"என்னப்பா கௌசிக் நல்லா இருக்கியா?" என்றதில் தூக்கம் பறந்தோட பட்டென எழுந்தமர்ந்தவன் புருவ முடிச்சுடன் அழைபேசியை எடுத்து திரையில் தெரிந்த இலக்கத்தை கண்டவன் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் காதில் வைத்துக் கொண்டான்.

"என்னப்பா சத்தமே இல்லே? மாப்பிள்ளைக்கு மாமன அடையாளம் தெரியலையா? இல்ல மாமன் மேல பயம் வந்துடிச்சா?" என்றவரின் பேச்சில் எரிச்சல் மண்டிட பல்லைக் கடித்தான்.

"இப்போ என்ன வேணும் எதுக்கு இப்போ கூப்டிங்க" என இழுத்து வைத்த பொறுமையுடன் பேசியவனை மேலும் சீண்ட எண்ணியவராய் தன் வாய் திறந்தார் கௌசிக்கின் மாமா

"என்னப்பா இப்பிடி கேட்டுட்ட மாமங்காரன் மாப்பிள்ளையோட பேச ஏதாச்சும் காரணம் இருக்கனுமா என்ன? ம்ம் அது சரி நீ என்ன என்ன மாமாவா பார்க்குற வில்லனா தானே பார்க்குற" என பொய்யாய் சலித்துக் கொண்டார்.

அதில் முயன்று தன்னை கட்டுப்படுத்தியவன் "என்ன விஷயம்னு நேரடியா சொல்லுங்க?" என வெட்டிப் பேசினான் கௌசிக்.

"ம்ம்.. சரி சரி கோபப்படாத மாப்ள.. எப்பிடி இருக்கா உன் புதுப் பொண்டாட்டி? ம்ம்.. பொண்டாட்டியா? இல்ல கூ...?" என வார்த்தையை முடிக்கும் முன்னே "ஏய்!" எனக் கோபமாகக் கத்தியிருந்தான் கௌசிக்.

அதில் மறுபுறமோ சத்தமான சிரிப்பொலி கேட்டிட இங்கு இவனோ அழுத்தமாய் விழி மூடித் திறந்தான்.
மனதினுள்ளோ ஆயிரமாம் முறையாய் பொறுமை என ஜபம் போல் முணுமுணுத்தவன் நொடியில் தன்னை மீட்டெடுத்தான்.

"என்ன மாப்ள இவ்ளவு சூடாகுற அப்போ நைட் ஒன்னுமே நடக்கலையா? அய்யோ மாப்ள நீ ரொம்ப பாவம்டா உனக்கும் அதுக்கும் ராசியே இல்லை" என கேலி பண்ணிச் சிரித்திட அதில் அருவெறுப்பாய் முகத்தைச் சுளித்தவன்.

"வயசுக்கு தகுந்த மாதிரி எப்போ தான் நடந்துக்க போறீங்க.. வாய் நிறைய மாப்ளன்னு சொல்லிக் கூப்பிட்டுடு மகள் ஸ்தானத்துல இருக்குற பொண்ண இப்பிடி கேவலப்படுத்துறீங்க என்ன மனுஷன் நீங்க" வெறுப்பை உமிழ்ந்து வெளியேறியது அவனது வார்த்தைகள்.

அதில் மறுபுறமோ அமைதி நிலவிட இவனோ அழைப்பைத் துண்டித்தான்.

அவர் பேச்சிலே அங்கு மதியை அழைத்துச் சென்றாள் என்னாகும் என்பதை உணர்ந்தவனுக்கோ அங்கு போகவும் வேண்டுமா? என்ற கேள்வியெழுந்து அலைமோதியது.. இருந்தும் தான் முடிக்க வேண்டிய வேலையை முன்நிறுத்திக் கொண்டவனாய் அவர் பேச்சில் உண்டான கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டவன் குளித்துத் தயாராகி கிளம்பியிருந்தான்.

தன்னை கண்டு கொள்ளாது அமைதியாய் வெளியேறிச் சென்றவனைப் பார்த்தவளுக்கோ எதுவும் புரியாது நின்றிருந்தாள்.

....

வேகவேக எட்டுக்களுடன் நிமிர்ந்த அந்த அறையினுள் நுழைந்தவனை எதிர் கொண்டான் அவனது உயிர் நண்பனும் இன்ஸ்பெக்டருமான மாதவ்.

"குட்மார்னிங்" என நண்பனாய் இருந்தாலும் போட்டிருக்கும் காக்கிச் சட்டைக்குரிய மரியாதையாய் தன் வணக்கத்தை வைத்தான் மாதவ்.

அவனுக்கு பதிலளித்த கௌசிக்கின் விழிகளோ கேள்வியாய் அவனை நோக்கிட அது புரிந்தவனாய் "உள்ள தான் இருக்கான் ஆனா வாய திறக்கமாட்டேங்குறான்" என்றான்.

ஒரு தலையாட்டலுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் கௌசிக்.

கைகள் கால்கள் இறுக்கையோடு கட்டப்பட்டு அங்காங்கே சிறு காயத்துடன் தலை தொங்க அமர்ந்திருந்தவன் முன்னே இருக்கையொன்றை இழுத்து அமர்ந்தவன் பார்வையோ அவன் மீதே படிந்திருந்தது.

"என்ன குமார் சௌக்கியமா?" என்றவனின் குரலில் இத்தனை நேரமும் யாரோ என்று மௌனமாய் இருந்தவனுக்கு திக்கென்றிட திடுக்கிட்டு நிமிர்ந்தான் குமார் என்கிற குமரேசன்.

விழிகள் மிரண்டிட மிரட்சியாய் தன்னைப் பார்த்தவனை பார்த்து சிரித்தான் கௌசிக்.

"என்ன குமரேசா என்ன அடையாளம் தெரியுதா? இல்ல யாருன்னு சொல்லனுமா?" என்றதில் அவன் இதழ்களோ "கிருஷ்..கிருஷ்ணா" என தட்டுத்தடுமாறி அவன் பெயரை உச்சரித்தது.

அதில் சிறு சத்தத்தோடு சிரித்தவன் "பரவாயில்லையே இன்னும் என் பெயரை நியாபகம் வெச்சியிருக்க" கேலி போல் உரைத்தவன் அவனை மேலும் நெருங்கி "நமக்குள்ள விட்ட குறை தொட்ட குறை ஒன்னு பாக்கி இருக்குல்ல" என நாடியை நீவிவிட்டவாறே அவனை ஆழமாய் பார்த்தவன் பார்வையில் எதிரிலிருந்தவன் நெஞ்சுக் கூடு காலியானது பயத்தில்.

"எ..என்னை விட்டுடு நா..நான் அது வேணும்னு பண்ணல" பயத்தில் உளறியவனை எள்ளலாய் பார்த்தான் கௌசிக்.

"சரி நீ வேணும்னு பண்ணல உன்ன யாரோ சொல்லித் தான் என்னை கொல்ல முயற்சி பண்ண இல்லையா? அந்த யாரோ யாருனு இப்போ நீ எனக்கு சொல்லிட்டீயென்னா உன்ன நான் எந்த சேதாரமும் இல்லாம விட்டுறேன். டீல் ஓகே வா?" என்றதில் அவன் உடலும் வெளிப்படையாய் நடுங்கத் தொடங்கியது.

"இல்ல நா..நான் சொல்லமாட்டேன்" என உறுதியாய் கூறியவனுக்கோ உண்மையை கூறி அவனின் கையில் சாவதைவிட உண்மை சொல்லாது அடி உதைகளோடு ஜெயிலுக்குள்ளே செல்வது மேல் என்றே தோன்றிட உறுதியாய் மறுத்தான் குமரேசன்.

அவன் பதிலில் அழுத்தமாய் தலைக் கோதிக் கொண்டவனோ "அப்போ உண்மைய சொல்லமாட்ட இல்ல" என்றதில் பயந்தாலும் உறுதியாய் இருந்தவனை சலிப்பாய் பார்த்தான் கௌசிக்.

"சரிவிடு இப்போ அடுத்த விசயத்துக்கு வருவோம்.. கடந்த சில மாசமா சிட்டில இருக்குற பல பொண்ணுங்க காணாம போறாங்கல்ல அத பத்தி உனக்கு தெரிஞ்சத சொல்லு" என அமைதியாகவே விசாரித்த நண்பனை ஆச்சர்யமும் குழப்பமும் ஒருசேர பார்த்து வைத்தான் மாதவ்.

"என்னடா இவ்வளவு சிம்பிளா விசாரிக்குறான்.. என்னாச்சு நம்மாளுக்கு" என எண்ணிக் கொண்டவன் அதே பாவனையோடு அவனை பார்த்திருந்தான்.

கௌசிக்கோ சட்டென்று அவன் புறம் திரும்பியவன் ஒற்றைக் கண்சிமிட்டி சிறு இதழ் புன்னகையோடு திரும்பிக் கொள்ள.. அதில் நண்பனின் விளையாட்டுப் புரிந்தவனாய் தலையாட்டிச் சிரித்தவன் அடுத்து நடக்கப் போவதை வேடிக்கை பார்த்தான்.

கௌசிக்கின் அமைதியான விசாரிப்பில் தைரியம் வரப்பெற்ற குமரேசனோ இவனால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற மிதப்பில் "எனக்குத் தெரியாது" என்றான்.

"ஆஹாங் அப்போ உனக்குத் தெரியாது இல்லையா?" அழுத்தமாய் மீண்டும் கேட்டு வைத்தவன் பின் "உன்ன தூக்கினது நோ யூஸ்..சோ செத்து போயிடு" சாதாரணமாய் உரைத்தவன் நொடியில் அவன் நெஞ்சில் குறிவைத்து சுட்டிருக்க.. எதிரிலிருந்தவன் என்ன ஏது என சுதாகரிக்கும் முன்னரே அவன் உயிர் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

உயிரற்ற உடலை வெறித்தபடி கையில் கனக்கச்சிதமாய் வீற்றிருந்த துப்பாக்கியை சுழற்றி இடுப்பில் சொருகியவன் நண்பன் புறம் திரும்பினான்.

மாதவ் "கொல்லனும்னு முடிவு பண்ணிட்டு அப்புறம் எதுக்கு இந்த கொஷ்டீன் எல்லாம்" என்க. ஒற்றை கண்சிமிட்டியவன் "டைம் பாஸ்" என இதழோடு ஒட்டி நின்ற புன்னகையோடு கூறினான்.

அதில் வாய்பிளந்து நண்பனை பார்த்தவன்
"அடப்பாவி என்னையோ டைம் பாஸ்க்கு லவ் பண்றவன் மாதிரியே சொல்றியேடா" என்றதில் அவன் தோளில் தட்டினான் கௌசிக்.

"இப்போ அடுத்து என்னடா பண்ணப்போற இப்போ நம்மகிட்ட இருந்த ஒரே ஆதாரம் இவன் தான் இப்போ இவனையும் போட்டாச்சு நெக்ஸ்ட் என்ன?" என நண்பன் அடுத்து ஏதாவது ஓர் திட்டம் வைத்திருப்பான் என்ற நம்பிக்கையில் கேட்டான் மாதவ்.

"ம்ம்.. இவன தூக்கினது இவன்கிட்ட இருந்து உண்மையை வாங்க இல்லடா.. இவன் அந்த அமைச்சரோட பினாமி சோ இவன தூக்கினா நிச்சயமா அவனே நம்ம வலையில சிக்குவான்னு தான் தூக்கினேன்.. ஆனா இவன் அப்ரூவரா மாறினாலும் இவன உயிரோட விடுற எண்ணமெல்லாம் எனக்கில்லை. இவனால எத்தனையோ அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க இவன ஜெயில்ல போட்டாலும் நிச்சயம் வெளிய வந்துடுவான்.. அப்புறம் இன்னும் பல அப்பாவி பொண்ணுங்க தான் பலியாகுவாங்க அதுக்கு இவன கொல்றது மேல்" அடிக்குரலில் அழுத்தமாய் வந்து வீழ்ந்தது அவன் குரல்.

அவன் செல்வதில் உள்ள உண்மை புரிந்தவனாய் தலையசைத்தவன் "எல்லாம் சரி தான்டா ஆனா இவன் எப்பிடிடா இந்த அமைச்சர் கூட லிங் ஆனான்? கொடைக்கானல்ல இருந்தவன் இங்க சென்னையில ஒரு அமைச்சருக்கு பினாமியா வந்து இருக்கான்னா இதுல ஏதோ இருக்கும்னு தோணுதுடா?" சந்தேகமாய் கூறிய நண்பனை மெச்சுதலாய் பார்த்தான் கௌசிக்.

ஆம், அவன் சந்தேகிப்பது போலவே சில வருடங்கள் முன் கொடைக்கானலில் சாதாரண அடிதடி ரௌடீஸம் என செய்து வந்தவனே இந்த குமரேசன்.
சாதாரண ரௌடியாய் வலம் வந்தவன் இன்று பல கோடி சொத்துக்களுக்கு பினாமியாய் மட்டுமல்லாது பல இல்லீகல் தொழில்களிலும் செய்பவனாய் மாறிப் போயிருந்தான்.

"இவனுங்க எல்லாமே ஒரு புள்ளில தான் கனெக்ட் ஆகுறாங்க அது இந்த பொண்ணுங்க கடத்தல். என் கெஸ்ஸிங்படி இவனுக்கும் சரி அந்த பொறம்போக்குக்கும் சரி இதுல தான் கான்டெக்ட் கிடைச்சியிருக்கும் அவனோட அரசியல் செல்வாக்கவெச்சி இவன் வளர்ந்து இருப்பான் அவ்வளவும் தான். இப்போ நாம சின்ன மீனுக்கு தூண்டில் போட்டுத் தான் பெரிய மீன பிடிக்கனும்.. இதோ சின்ன மீன தூக்கியாச்சு பெரிய மீனும் தானா நம்ம வலையில சிக்கிடும்" என உறுதியாய் கூறினான் கௌசிக்.

இருவரும் பேசியவாறே அந்த இடம்விட்டு வெளியே வந்தனர்.

"மாதவ் நீ பாடிய டிஸ்போஸ் பண்ணிட்டு ஸ்டேஷன் போயிடு நான் கமிஷ்னெர் ஆபிஸ் போய்ட்டு வரேன்" என்றவன் வண்டியில் ஏற அவனிடம் வந்த மாதவ்வோ கரம் நீட்டினான்.

"என்னடா" என புரியாத பாவனையாய் அவனைப் பார்த்தவன் நண்பனின் முகத்திலிருந்த சிரிப்பைக் கண்டு புரிந்தவனாய் தானும் சிரித்தான்.

"கங்கிராட்ஸ் மச்சி.. தங்கச்சிய கூட்டிட்டு வீட்டுக்கு வா உன்னோட தங்கச்சி ரொம்ப ஆசையா இருக்கா" என தன் வாழ்த்தோடு தன் மனைவியின் விருப்பத்தையும் கூறினான் மாதவ்.

"டேய் அதுக்குள்ள அந்த நாதாரி சொல்லிட்டானா? " சிரித்துக் கொண்டே நண்பனின் கரத்தை பற்றிக் கொண்டவன் "ம்ம் சீக்கிரம் கூட்டிட்டு வரேன்டா.. நீ அஸ்வினிய நல்லா பார்த்துக்கோ" என கர்ப்பமாய் இருக்கும் தன் கூடப் பிறவா சகோதரியின் நலன் குறித்து அக்கறையாய் கூறியவன் நண்பனிடம் விடைபெற்று கிளம்பிச் சென்றான்.

...

காலையில் தன்னைக் கண்டும் காணமல் போன கணவனை நினைத்து மனம் சுருங்கினாலும் தற்போதைய நிலையை எண்ணி தன் மனதை தெளியப்படுத்திய மதியோ தன் மனதை திசைதிருப்ப எண்ணியவளாய் வீட்டை சுத்தப்படுத்தத் தொடங்கினாள்.

வீட்டை துப்பரவு செய்து காலையுணவையும் தயாரித்து பசித்த வயிற்றுக்கு கொஞ்சமாய் கொறித்துவிட்டு சோர்வாய் இருக்கையில் அமர்ந்தவள் எண்ணம் முழுவதும் மீண்டும் அவள் மணாளனிடமே தஞ்சமடைந்தது.

"காலையில ஒரு வார்த்தை கூட பேசாம போய்ட்டாங்க. என்ன அவசரமோ தெரியலையே? காபி கூட குடிக்கல.. இன்னேரம் சாப்பிட்டு இருப்பாங்களா?" என தனக்குள்ளாறே பல கேள்விகளைக் கேட்டவளுக்கு பதில் தான் இல்லை.

"இனி எப்போ வருவாங்க மதியத்துக்கு வருவாங்களா?" என்றவள் திடீரென ஒலித்த தொலைபேசி சத்ததில் திடுக்கிட்டவளாய் அதன் புறம் பார்வையை திருப்பியவளுக்கு எடுத்து பேசுவதா? இல்லையா? என்ற கேள்வி எழ அமைதியாய் இருந்தாள்.

தொடர்ந்த அழைப்பில் ஏதும் அவசரமாக இருக்குமோ என எண்ணியவள் ரிசீவரை எடுத்து காதில் வைத்திட மறுபுறம் ஒலித்தது அவள் எண்ணத்தின் நாயகன் குரல்.

"ஹலோ மதி.. ஆர் யூ தேர்" என்றவன் குரலிலே சிறு பதற்றம் இருந்ததோ எனத் தோன்ற அவசரமாய் பதிலளித்தாள்.

"ம்ம் இருக்கேன்.. சொல்லுங்க" என்றாள்.

"ம்ம்..ஸாரிடா மோர்னிங் ஏதோ அவசரத்துல உன்கிட்ட சொல்லாம வந்துட்டேன்.." என்றவனின் பேச்சில் மனம் குளிர்ந்தவள்.

"பரவாயில்லை" என்றாள் சிறு முறுவலோடு.

"ம்ம்.. சாப்பிட்டியா?" என்றதற்கும் "ம்ம்" என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.


மேலும் அவளிடம் பேசுவதற்கு முடியாததால் "ம்ம் சரி மதி.. நான் மதியம் வருவேன் அப்புறம் பேசிக்கலாம் ஓகே" என அழைப்பை துண்டித்தான்.

அவனது அழைப்பும் அக்கறையான பேச்சும் காலையில் உண்டான மனசுணக்கத்தை இல்லாது செய்திருக்க மகிழ்வோடு மதிய உணவை தயாரிக்க சென்றாள்.


.......

நண்பனின் விசாரிப்பிலே மதியின் எண்ணம் எழ காலையில் அவளுடன் ஒரு வார்த்தையும் பேசாது வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தவனாய் அவளை அழைப்பில் அழைத்து பேசியவன் கமிஷ்னர் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தினான்.

நேரே கமிஷ்னர் அறையின் முன் நின்றவன் அனுமதி கேட்டு உள்நுழைந்து சல்யூட் வைத்திட ஒரு தலையசைப்பை கொடுத்து அவனை அமர வைத்தார் கமிஷ்னர் சங்கர்.

"அந்த கடத்தல் கேஷ் பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சிதா? கௌசிக்.. மேலீடத்துல இருந்து ரொம்பவே ப்ரஷர் பண்றாங்க.. கடத்தப்பட்ட பொண்ணுங்களோட ரிலேடீவ்ஸ் பத்திரிகை காரங்கன்னு ஒன்னு சேர்ந்து மொத்த டிப்பார்ட்மெண்டையும் குதறி எடுக்குறாங்க..போதாதற்கு உங்களோட பெர்சனல் நியூஸை போட்டும் பிரச்சனை பண்றாங்க" என சிறு எரிச்சலுடன் கூறிமுடித்தார்.

"என்னோட பெர்சனல் இதுல எந்த விதத்துலயும் கனெக்ட் பண்ணணும்னு அவசியம் இல்ல ஸார் .. அப்புறம் கேஷ்ல முக்கியமான ஆதாரம் எல்லாமே கிடைச்சிட்டு குற்றவாளிங்கள நெருங்கிட்டோம். இன்னும் இரண்டு நாள் டைம் கொடுங்க மொத்தக் கூட்டத்தையும் பிடிச்சிரலாம்" என்றவனின் பேச்சில் தெரிந்த உறுதியில் நம்பிக்கை கொண்டவர்.

"ஓகே கௌசிக் எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.. அப்புறம் இந்த கேஸ்ல உங்களுக்கு சப்போர்ட்டா நான் ஒருத்தர ரெக்கமெண்ட் பண்றேன்" என்றவர் அழைப்பின் மூலம் யாரோயோ அழைத்திட அறைக்குள் நுழைந்தான் அவன்.

"கௌசிக் இவர் சிவா.. சிவா இது தான் கௌசிக் நீங்க இவர் கூட தான் வேலை செய்யப் போறிங்க." இருவரையும் அறிமுகம் செய்திட.. கௌசிக்கின் பார்வையோ மற்றையவனின் மேல் அழுத்தமாய் பதிந்தது.

"ஹலோ ஸார் ஐ ம் சிவா இன்ஸ்பெடர் ஆப் பொலீஸ்" என கைகுலுக்க கரம் நீட்டியவனின் கரத்தை அழுந்தப் பற்றிவிடுவிக்க சிறு முனங்களோடு கையை உருவிக் கொண்டான் சிவா.

"ஓகே சிவா நீங்க கௌசிக் கூட போங்க அவர் உங்களுக்கு எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணுவாரு" என்றிட இருவரும் அவரிடம் விடைபெற்று வெளியேறிச் சென்றனர்.

.....

தன்னையே முறைப்பாய் பார்த்து நின்றவனை கண்டு சன்னமாய் சிரித்தவன் "என்ன ஸார் இப்பிடி குறுகுறுன்னு பார்க்குறீங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருது" என தரையில் கோலமிட்டு நகத்தை கடித்து வெட்கப்பட்டவனை நோக்கி கைகளை முறுக்கிக் கொண்டு அடிக்கப் பாய்ந்தான் கௌசிக்.

அவன் கழுத்தை வளைத்துப் பிடித்தவன் கிடுக்குப்பிடி போட சிவாவோ அலறினான்.

"டேய் அண்ணா விட்டுடா.. பாவிப்பயலே விடுடா" என்று கத்தியவன் நடு உச்சியில் கொட்டியவன்
"ஒரு சீனியர் ஆபிஸர இப்பிடித் தான் டேய்னு சொல்லுவீங்களா மிஸ்டர் சிவக்கிருஷ்ணா.. இது தப்பாச்சே" என்றவன் அவன் கழுத்தை வளைத்து இறுக்கினான்.

"அய்யோ டேய் விடுடா கொலைகாரா?" என திமிறியவனை சிறு சிரிப்புடன் விலக்கியவன் அவனை இறுக அணைத்துக் கொண்டான்.

"எப்பிடிடா இருக்க?" என்றவன் விழிகளோ தன் உடன் பிறந்த சகோதரனை பாசமாய் தழுவியது.

"நான் நல்லா இருக்கேன் அண்ணா நீ எப்பிடி இருக்க? அப்புறம் என் அண்ணியார் எப்பிடி இருக்காங்க?" என கண்சிமிட்டி சிரித்தவனின் தலையில் தட்டினான் கௌசிக்.

"ஒருத்தன் விடாம எல்லாருக்கும் சொல்லிட்டானா?" என ப்ருத்வியை போலியாய் திட்டிக் கொண்டான்.

"அதெல்லாம் அப்புறமா சொல்றேன்.. நீ எதுக்கு இப்போ சென்னைக்கு வந்த" என முறைப்பாய் அவனைப் பார்த்தான்.

அண்ணனின் முறைப்பில் அவனைப் பார்த்தவன் "டேய் அண்ணா நீ எதுக்கு இப்போ முறைக்குற.. நான் இங்க வரதுக்கு காரணமே மாதர்குல மங்கைகள் தான் போ போய் உன் மாதர்குலத்துக்கிட்ட பேசிக்கோ" என்றவன் யாரை கூறுகிறான் என்பது புரிந்தவனாய் சிரித்துக் கொண்டான்.

"எல்லாரும் எப்பிடியிருக்காங்க சிவா..நான் உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன்" என்றதிலே அவன் தவிப்பை புரிந்து கொண்ட சிவாவோ அவனை தோளோடு அணைத்துக் கொண்டான்.

"அதான் அண்ணா இப்போ தான் நான் வந்துட்டேன்ல இனி யாரையும் மிஸ் பண்ணமாட்டாயே" என்று சிரித்தபடி கூறியவன் கூற்று உண்மை தான்.

கலகலப்பிற்கு பெயரெடுத்தவன் அவன். தான் இருக்கும் வேலைக்கு சம்பந்தமே இல்லாதவன் எப்பொழுதுமே தன்னைச் சுற்றி கலகலப்புடனே வைத்திருப்பான்.

தம்பியின் கூற்றில் ஆமோதிப்பாய் தலையாட்டி சிரித்தவன் அவனையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 09



இருவரும் வண்டியில் ஏறிட தன் பையை பின்புறம் இருக்கையில் வைத்த சிவாவோ கீழே கிடந்த பையை கண்டு

யோசனையுடன் அதை எடுத்தவன் கௌசிக்கிடம் கேட்க அப்போது தான் கௌசிக்கும் அதைக் கவனித்தான்.

"இது.. அவ பேக்ஆ இருக்குமோ?" என எண்ணியவனுக்கோ அன்றைய இரவின் பதற்றத்தில் தன் கையோடு கொண்டு வந்திருந்த பையை காரில் தான் தவறவிட்டிருக்கிறாள் என்பது புரிய அதையே சிவாவிடமும் கூறினான்.

"இது மதியோட பேக்ஆ தான் இருக்கும்.
ஆனா நேத்துலயிருந்து வண்டில தானே சுத்திட்டு இருக்கேன் என் கண்ல படவே இல்லையே" என்றான்.

"ம்க்கும் பட்டுடாலும்.. நீ தான் வண்டியை ஓட்ட ஆரம்பிச்சா அதுல மட்டும் தானே கவனமா இருப்ப ரோபோ மேன் போல" என்று கேலி பேசிவனை முறைக்க முயன்று முடியாதவன் தம்பியின் கேலியில் சிரித்தான்.

இருவரும் சிறு கிண்டலுடன் பேசியவாறே வீடு நோக்கிச் செல்ல..
போகும் வழியிலே சிவாவோ தான் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கௌசிக் மூலம் தெரிந்து கொண்டவனுக்கு அதிர்ச்சியோடு இத்தனை பெரிய ஆபத்தில் சிக்கி மீண்ட தன் அண்ணன் மீது கோபமும் எழ அவனிடம் கத்தத் தொடங்கினான்.

"இந்தளவுக்கு நடந்திருக்கு ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லணும்னு தோணலையா உனக்கு? எது நடந்தாலும் உன்னோட போகட்டும்னு நினைச்சிட்டியா? இல்ல மொத்தமா எங்கள ஒதுக்கிவெச்சிட்டியா?" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியவன் கோபமாய் முகத்தை திருப்பிக் கொண்டான்.

கௌசிக்கோ தம்பியின் கோபத்தில் இதழில் பூத்த புன்னகையோடு தன்னருகே அமர்ந்திருந்தவன் தோளில் கை போட வேகமாய் தட்டிவிட்டவன் அவனை முறைத்தான்.

"டேய் சிவா.. நீ நினைக்கிற போல எல்லாம் இல்லடா? இவனுங்க இந்தளவு இறங்குவானுங்கன்னும் நானும் நினைக்கல" என்ற போதும் மாறா முறைப்புடன் அண்ணனை முறைத்தவன்.

"நீ தெரிஞ்சியிருந்தாலும் சொல்லிட்டு தான் மறு வேலை பார்ப்ப.. எல்லா பிரச்சனையும் கஷ்டமும் உன் தலைல சுமத்திட்டு எங்கள ஒதுக்கி வைக்குற நீ.. ஏன் தம்பியா நான் உனக்கு துணையா இருக்கக் கூடாதா?" எனும் போதே அவன் குரல் கலங்கியது.

அவன் குரலில் தெரிந்த வேதனையை கண்டுகொண்டவன் வண்டியை ஓரமாய் நிறுத்தி அவனை தன்புறம் திருப்பிட அவனோ அப்போதும் உர்ரென்று இருந்தான்.

"சிவா.. நம்ம அப்பாவ இழந்தது போல இன்னொரு இழப்பு வரக்கூடாதுடாதுனு தான் எல்லா பிரச்சனையும் என்னோட போகட்டும்னு இருக்கிறேன்டா.."
என்றவனை இடைமறித்து ஏதோ பேச முயன்றவனை தடுத்தவன் மேலும் பேசினான்.
"எல்லாமே கொஞ்ச நாளைக்கு தான் சிவா.. இந்த கேஷ் முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புவோம் அங்க வெச்சு இத்தனை நாள் நம்ம மேல வீண்பழி சுமத்தினவங்களுக்கு பதிலடி கொடுத்திடலாம்.
சீக்கிரமாவே நம்ம அப்பாவுக்கு கொடுத்த வாக்கையும் காப்பாத்திடலாம்" என்றவன் உறுதியில் அண்ணனை நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் அத்தனை எதிர்பார்ப்புக்கள்.

"அண்ணா நிஜமா தான் சொல்றியா? அப்போ அத்தை மாமா கிடைச்சிட்டாங்களா?" என்றவன் கேள்விக்கு புன்னகைத்தவனை தாவியணைத்துக் கொண்டான் சிவா.

"அண்ணா எப்பிடிடா கண்டுபிடிச்ச இப்போ அவங்க எங்க இருக்காங்க? என கேள்வியாய் தொடர்ந்தவனை நிறுத்தியவன்.. "உன் கேள்விக்கு பதில் சீக்கிரமா சொல்றேன்டா இப்போ வா கிளம்பலாம்" என வண்டியை கிளப்பினான்.

பழைய ரணங்களின் தாக்கமோ? தந்தையின் நினைவுகளோ? இருவருக்குமிடையே சில நிமிடம் மௌனத்தை நிலவிடச் செய்ய..
அந்த மௌனத்தை களைத்தவனாய் பேசினான் சிவா.

"அந்த நைட் அண்ணி வரலன்னா நிச்சயம் உன் உயிருக்கு ஆபத்தா முடிஞ்சியிருக்கும்ல" என்றவனுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தான் கௌசிக்.

அவள் மட்டும் இல்லையென்றால் நிச்சயம் தன்னை தானே மாய்த்து இருப்பேன்.. இல்லை எதிரிகளின் துப்பாக்கிக்கு இரையாகியிருப்பேன் என்ற உண்மை உரைக்க தலையை அழுத்திக் கொண்டவன் மனக்கண்ணில்
பெண்ணவளின் பால் முகம் மின்னிட அவன் முகத்தில் அழகாய் குடியேறியது சிறு புன்னகை.

அண்ணணில் சிரிப்பில் சிவாவோ " டேய் அண்ணா.. வெட்கப்படுறியா என்ன?" குறும்பு கூத்தாடும் குரலில் கூற.. அவன் தலையில் தட்டி அவனை அடக்கிட முயல அவனோ உன்னை விடுவேனா? என்பது போல் அவனை வம்பிழுக்கத் தொடங்கினான்.

"எனக்கு என்னமோ நீ வெட்கப்படுறதா பார்த்தா சந்தேகமா இருக்கு.. அண்ணியா உன்கிட்ட வந்தாங்களா இல்ல நீ காதல் பண்ணி கடத்திட்டு வந்து கட்டிக்கிட்டியாடா? உண்மையைச் சொல்லு" என்றவனுக்கு அந்தக் காதல் என்ற வார்த்தை கசப்பாய் இறங்கியது அவனுள்.

இந்தக் காதல் என்ற வார்த்தை தானே எத்தனை எத்தனை அவமானங்களை அனுபவிக்க வைத்தது.
ஒரு ஆணாக மானம் இழந்து அவமதிக்கப்பட்டது எல்லாம் இந்தக் காதலால் தானே என நினைத்தவன் முகமோ உணர்வுகளை தொலைத்து இறுகித் தான் போனது.

தன் அண்ணணின் முகம் காட்டிய பாவனையில் அவன் மனநிலை உணர்ந்தவனாய் பேச்சை மாற்றினான் சிவா.
"சரி சொல்லு அண்ணி என்ன படிச்சியிருக்காங்க? அவங்கள பத்தி ஏதும் தகவல் வெச்சியிருக்கியா? என அடுத்தடுத்த கேள்விக்குத் தாவினான்.

தம்பியின் கேள்வியில் தன் மனநிலை மாற்றியவன்
"நீ அண்ணின்னு சொல்ற அளவுக்கு அவ இல்லைடா.. அவளுக்கு இப்போ தான் பதினெட்டு வயசு" என்றவன் மதி பற்றி சில தகவல்களை அவனிடம் கூறினான்.


அனைத்தையும் தெளிவாய் கேட்ட சிவாவிற்கோ ஏதோ புரிவது போலிருக்க அதை அவனிடமும் கேட்க அதற்கு பதிலாக புன்னகைத்தானே தவிர வாய் வார்த்தையாய் பதிலேதும் சொல்லாது வண்டியை கிளப்பினான் கௌசிக்.

மதிய உணவை சமைத்துவிட்டு அவனது வருகைக்காக காத்திருந்தவளுக்கோ நேரம் செல்ல செல்ல அந்த அமைதியான வீட்டின் சூழல் அச்சத்தை கொடுத்திட எழுந்து கொண்டவள் விழிகளோ அவன் அறைக் கதவில் நிலைத்திருந்தது.

காலையில் வீடு முழுவதும் சுத்தம் செய்தவளுக்கோ அவன் அறை நுழைந்திட உண்டான தயக்கத்தில் அதைத் தவிர்த்திருந்தாள்.
இப்போதோ சும்மா இருக்கத் தோன்றாதவளாய் அவ்வறையையும் சுத்தபடுத்தினால் என்ன? என்று தோன்றிட தனது தயக்கத்தை விடுத்து அவனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அலங்கலோமாய் இருந்த அறையை சுத்தப்படுத்தியவள் கரமோ அங்கிருந்த மேசையிலிருந்த கண்ணாடி சட்டத்தை பட கீழே வீழ்ந்து முன் கண்ணாடி சிதறியிருந்தது கண்டு சற்று பதட்டமாகினாள்.

"அச்சச்சோ உடைஞ்சிடுச்சே அவங்க திட்டுவாங்களோ?" என பயந்தவாறே அந்த கண்ணாடித் துண்டுகளை அகற்றிட முயல அதுவோ அவள் கரங்களில் கீறிட சிறு கீறலில் இருந்து ரத்தம் துளிர்த்தது. அதை ஒதுக்கியவள் உடைந்த துண்டுகளை மெதுவாக அப்புறப்படுத்தி அனைத்தையும் சுத்தம் செய்தாள்.

அவள் சுத்தம் செய்து முடியவும் வீட்டு மணி அலறவும் சரியாக இருக்க அந்தப் புகைப்படத்தை கையில் எடுத்தவாறே பயத்துடனே கதவைத் திறந்தாள் வெண்மதி.

கதவைத் திறந்திட முகத்தில் பூத்த புன்னகையுடன் நின்ற புதியவனைக் கண்டு சற்று பயந்து தான் போனாள் வெண்மதி.

சிவாவுக்கோ அவள் முகம் காட்டிய பாவனையில் மேலும் புன்னகை விரிந்திட "ஹாய் அண்ணி" என்றான் உரிமையாய்.

அதில் பெண்ணவளோ மேலும் திகைத்து அவனை விழி விரித்து நோக்கிட ..அவள் முன் தோன்றினான் அவளவன்.

"என்னடா என்ன சொல்றா? உன் அண்ணி" என்றவாறே அவன் தோள் தட்டி உள்ளே அழைத்து வந்தான் கௌசிக்.

"ஏதோ பேய பார்த்த மாதிரி முழிக்கிறாங்கடா அண்ணா ..அவ்வளவு கேவலமாவா இருக்கு நம்ம பெர்சனாலிட்டீ" என பாவம் கேட்டவனை பார்த்து சிரித்தவன் தங்களை விழிவிரித்து பார்த்து நின்றவளிடம் "மதி இது என் தம்பி சிவா" என அறிமுகப்படுத்தினான்.

அதில் அவளோ புன்னகைத்தவள் "வணக்கம்" எனும் விதமாய் கைகூப்பிட அப்போது தான் கண்டனர் அவள் கையிலிருந்த புகைப்படம் மற்றும் அவள் காயத்தை.

கௌசிக்கோ "ஹேய் என்னாச்சு ரத்தம் வருது" என்று அவள் கையைப் பிடித்தான்.
அவன் திட்டப் போகிறான் என்றெண்ணி பயந்தவளுக்கோ அவன் அக்கறை கண்டு அவனைப் பார்த்தாள்.

சிவாவோ அங்கிருந்த பெர்ஸ்ட் எய்ட்டை எடுத்து வர கௌசிக்கோ அதில் மருந்தை தடவிவிட்டான்.

சிறு காயத்திற்கூட அக்கறையான அவர்களின் சிறு செய்கையும் அவளிற்கு பெரிதாகவே தோன்றிட அவர்களின் அன்பில் நெகிழ்ந்து போனாள் அந்த அன்பிற்கு ஏங்கும் பேதை.

கைக்கு மருந்திட்டவனோ தன்னையே பார்த்திருந்தவளை நோக்கி "எதுக்கு இப்போ இந்த தேவையில்லாத வேல.. இப்போ பார்த்தியா கைய கீறி வெச்சியிருக்க" உரிமையான அதட்டலோடு அவளை கடிந்து கொண்டான் கௌசிக்.

சிவா அண்ணணின் உரிமையில் புன்னகைக்க மதியோ விழிகள் விரிந்திட அவனைப் பார்த்தவள் என்ன சொல்வது என முழித்தாள்.

"அ..அது.. தெரியாம.. உடைஞ்சு போச்சு ஸாரி"
குழந்தை போல் கண்களை சுருக்கி பயத்துடன் மன்னிப்பைக் கேட்டவளை கண்டவன் தலையாட்டி "இனிமே கவனமா செய்" என்றுவிட்டு தங்களையே பார்த்து நின்ற சிவாவின் புறம் திரும்பினான்.

"டேய் நீயென்னடா வா.. வந்து உட்காரு என்றவன் அவனருகே தானும் அமர்ந்து கொண்டான்.

மதியோ இருவரையும் மாறி மாறி பார்த்து நிற்க அவளிடம் பேச ஆரம்பித்தான் சிவா.

"ஹாய் அண்ணி என்ன எங்களையே பார்த்துட்டு இருக்கிங்க.. முத முதலா உங்க கொழுந்தனார பார்க்குறீங்க..ஒரு டீ காபி..பஜ்ஜி சொஜ்ஜி கொடுத்து உபசரிக்காம இப்பிடியே நிக்குறீங்க" என அவளிடம் வம்பிலுக்க அதில் திருதிருத்தவள் பாவமாய் அவனைப் பார்த்தாள்.

"என்ன அண்ணி சாப்பாடு தான் தரமாட்டீங்கன்னு பார்த்தா ஒன்னுமே பேசமாட்டேங்குறிங்க.. இருங்க உங்கத்தைக்கு போன் போட்டு அவங்க மருமகளோட லட்சணத்தை சொல்றேன்" என்றவன் பேசிக் கொண்டே அழைப்பேசியை எடுத்திட பயந்தே போனாள் வெண்மதி..

அவளோ அழுதுவிடுவேன் எனும் விதமாய் கௌசிக்கை பார்க்க அவனோ தம்பின் அலட்டலைக் கண்டு சிரித்தவன் அவள் முகம் காட்டிய பாவனையில் தனருகே இருந்தவன் தலை தட்டி
"டேய் போதும் நிறுத்துடா.. அங்க பாரு உன் அண்ணி விட்டா அழுதுடுவா போலயிருக்கு" என மதியை காட்டினான்.

"அய்யோ அண்ணி அழுதுடாதிங்க நான் சும்மா சொன்னேன்..கூல் " என்ற போதும் அவளோ பாவமாய் நின்றிருந்தாள்.

"டேய் சிவா.. அவ உன்னை விட சின்ன பொண்ணு தான் அவள பெயர் சொல்லியே கூப்பிடு.."

"இல்லை இல்லை இப்போவே அண்ணி பேசுறாங்க இல்ல இதுல நான் அப்பிடி கூப்பிட்டு அண்ணி கோவிச்சிட்டாங்கனா?" என ஓரவிழியாய் மதியை பார்க்க அவளோ அவன் தன்னை தவறாக எண்ணிவிட்டானோ? என்ற பயத்தில் அவசரமாக மறுத்தாள்.

"இல்லை இல்லை நான் கோவிச்சுக்க மாட்டேன் நீங்க பெயர் சொல்லியே கூப்பிட்டுங்க" என மெல்லிய குரலில் கூறியவளைக் கண்டு இருவரும் சிரித்துக் கொண்டனர்.

"அப்பாடா உங்களுக்கு பேசத் தெரியும்னு நிரூபிச்சிட்டிங்க இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்றவன்..
"ரொம்ப பயப்படாதிங்க மதி.. இனி இது உங்க வீடு நாங்க உங்க உறவு தயக்கமில்லாம பேசுங்க சரியா?" என அவளுக்கு ஆறுதலாய் பேசிட
அவளோ தன் தயக்கம் அகன்று நட்புடன் அவனை நோக்கினாள்.

சிறிது நேரத்தில் தன் பேச்சு திறமையால் அவளையும் பேச வைத்தவன் அவன் தயக்கத்தை தகர்த்தான் சிவா..

மூவருமாய் பேசியபடியே மதிய உணவை உண்டு முடித்தனர்.

கௌசிக்கோ அடுத்து வேலையிருக்க மதியிடம் பத்திரமாய் இருக்கும்படி கூறியவன் சிவாவை அழைத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான்.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 10



கௌசிக் சிவா இருவருமே ஸ்டேஷனை வந்தடைய அவர்களுக்காகவே காத்திருந்த மாதவ்வோ சிவாவைக் கண்டவன் புன்னகையோடு அவனை அணைத்துக் கொண்டான்.
சிலபல நலவிசாரிப்புக்களை முடித்துக் கொண்டு மூவருமாய் தனியறைக்குள் நுழைந்து கொண்டனர்.

கேஷ் பற்றி தாங்கள் திரட்டிய ஆதாரங்களை பற்றி பேசியவர்கள் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளையும் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில் அனுமதியே இன்றி அவ்வறையினுள் நுழைந்தான் தேவன்..

அவனைக் கண்ட மூவருக்குமே கோபம் வந்தாலும் அமைதியாய் அவனை முறைத்திருக்க.. அவனோ எவ்வித அலட்டலுமின்றி அவர்களைப் பார்த்தவன் பார்வை கௌசிக்கில் நிலைத்தது.

"கௌசிக் ஸார் உங்கக் கூட மினிஸ்டர் தனியா பேசனுமாம் சோ இன்னைக்கு ஈவ்னிங் அவரோட பீச் ஹவுஸ்ல அவர மீட் பண்ண வந்துடுங்க" என்றவன் தன் வேலை முடிந்தது என்பது போல அறையை விட்டு வெளியேறிவிட கௌசிக் தவிர மற்ற இருவருக்குமே அவன் கூறியது கோபத்தைக் கொடுக்க கத்தத் தொடங்கினர்.

"எவ்வளவு தைரியம் இருந்தா இவன் இப்பிடி தெனாவட்டா வந்து பேசுவான்" என கோபமாய் கத்திய இருவரையும் அமைதியாய் இருக்கும்படி செய்கை செய்தான் கௌசிக்.

சிவாவுக்கும் தேவன் பற்றி அனைத்தும் தெரிந்திருக்க அவனும் கோபமாய் எகிறினான்.
"அண்ணா இப்போ எதுக்கு எங்கள அமைதியா இருக்க சொல்ற.. போட்டிருக்குற யூனிபோர்ம்க்கு உண்மையா இல்லாம யாரோ ஒரு பொறம்போக்குக்கு கூலி வேல பார்க்குற இவன போல இருக்குறவனுங்களால தான் மொத்த டிப்பார்ட்மெண்ட்டும் கேவலமா போயிடுச்சு" என தன் ஆதங்கத்தை வார்த்தையில் வடித்தவனை அமைதியாய் பார்த்திருந்தான்.

"ஆமாடா எத்தனை நாளைக்கு நமக்குள்ளவே இந்த கருப்பாட வெச்சிக்கிட்டு அந்த மினிஸ்டர்க்கு எதிரா நம்மளால வேலை பண்ண முடியும்..நாம இங்க ஒரடி அவனுக்கு எதிரா செய்யப் போறோம்னு யோசிச்ச அடுத்த செக்கனே அவனுக்கு தகவல் போயிடுது. இப்பிடி இருந்தா நம்மளால எத்தனை ப்ளான் போட்டாலும் அந்த மினிஸ்டர சிக்க வைக்க முடியாது" என்றவனை இடைமறித்து "ஏன் முடியாது?" என்றவனை சிவா மாதவ் இருவருமே புரியாது பார்த்து வைத்தனர்.

அவர்கள் பார்வையில் உணர்ந்த கேள்விக்கு பதிலளிப்பவனாய் தன் இருக்கையை விட்டெழுந்தவன் "ஒரு கல்லுல இரண்டு மாங்கா அடிக்கலாம் தெரியும்ல" என்றவன் சிரிப்புடன்..
"சிவா நீ என் கூட வா.. போய் தொழிலமைச்சர் மணிகண்டன் ஸார பார்த்துட்டு வந்துடலாம்" என்றவன் வேக எட்டுக்களுடன் அறைவிட்டு வெளியேற குழப்பத்துடனே அவன் பின்னே சென்றான் சிவா.

....

கரை தொட்டுச் செல்லும் கடலலைகளின் அமைதியான அலைப்புறுதலை பார்த்து நின்றவனையே குழப்பம் சுமந்த முகத்தோடு பார்த்து நின்றான் சிவா.

அமைச்சரை சந்திக்கலாம் என்று அழைத்து வந்துவிட்டு கடலலைகளை வெறித்து பார்த்து நின்றவனை கண்டு ஏதோ ஒன்று உள்ளது என யூகித்தவனாய் அவனே சொல்லட்டும் என்று பார்த்திருந்தவனிடம்
"இன்னும் எத்தனை நேரத்துக்குடா என்னையே சைட் அடிக்கப் போற" என்ற கௌசிக்கின் குரல் அவன் மௌனத்தை களைத்திட.. அவன் முன் சென்று நின்றவன் "இப்போ எதுக்கு இங்க வந்திருக்கோம்?" என்றவனுக்கு அவன் யோசனை நிறைந்த முகம் எதோ பிரச்சனை என்பதை உணர்த்திட அவனை கேள்வியாய் பார்த்திருந்தான்..

கௌசிக்கோ எதுவும் பேசாது அமைதியாய் கடலலைகளை வெறித்து நிற்க சிவாவிற்கோ பொறுமையிழந்து போனது.

"டேய் அண்ணா உன் மனசுல என்ன தான்டா ஓடுது. சத்தியமா எனக்கு புரியல" என்றவன் புறம் பார்வையை பதித்தவன்.
"ஏதோ ஒன்னு தப்பா இருக்குடா?" என்றவனை புரியாது பார்த்தான் சிவா.

"என்னாச்சு.. என்ன தப்பாயிருக்கு?"

"சம்திங், ஏதோ ஒன்னு தப்பாயிருக்கு.. என்றவன் நிறுத்தி "என்னோட கெஸ்ஸிங் கரெக்ட்னா நிச்சயமா இந்த பிரச்சனை அந்த மணிகண்டனோட முடிஞ்சிடும்னு எனக்குத் தோணல.. அவனுக்கு பின்னாடியும் வேற யாரோ இருக்கான்னு தோணுது" என்றவனை கேள்வியாய் பார்த்தான் சிவா.

"வேற யாரு இருக்கா அப்படி?" என்றவனை அழுத்தமாய் பார்த்தவன்.
"ஈஸ்வர்" என்ற பதிலில் அதிர்ந்தவன் "வாட்" எனக் கத்தியிருந்தான்.

"அவனா? அவன் எப்பிடி? அப்போ தப்பிச்சிட்டானா?? ஹவ் இஸ் பாசிபிள்? அவனால எப்பிடி தப்பிக்க முடிஞ்சது? என்னால நம்ப முடியல?" என. அடுக்கடுக்காய் அதிர்ச்சி மாறாக் குரலில் கேள்வியைத் தொடுத்தவன் கௌசிக்கை பார்க்க.

அவனோ "ஐ டோன்ட் நோ.. எப்பிடி தப்பிச்சான்னு தெரியல பட் அவனோட அடுத்த டார்கெட் நம்ம மேல தான் இருக்கும்னு என்னால ஹண்ட்ரெட் பேர்சன்ட் சொல்ல முடியும்" என்றவனை பரிதவிப்பாய் பார்த்த சிவாவோ "நான் அவசரப்பட்டுடேண்ணா நான் ஊர்லயே இருந்து இருக்கனும்..அவங்கள எல்லாம் விட்டுடு வந்திருக்கக் கூடாது" என்க.

அவனை ஆறுதலாய் அணைத்துக் கொண்டவனோ "டேய் இப்போ எதுக்கு பீல் பண்ற..விடு பார்த்துக்கலாம்..எப்போவும் எந்த நேரத்துலயும் நம்மளோட நிதானத்தை இழக்கக் கூடாது.." என்றவன் அவன் தோள் தட்டி தைரியப்படுத்திட அதில் நிமிர்ந்தவன்.

"சோ இந்த கேஷுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நினைக்குறியா?" என்றவனுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன்.

"எதிரிக்கு எதிரி நண்பன்.. அப்போ நான் யாருக்கெல்லாம் எதிரியோ அவங்க எல்லாம் கூட்டு சேர வாய்ப்பு இருக்குல்ல" என்றவனின் வார்த்தையில் உள்ள உண்மை புரிந்தவனாய்.. "அப்போ அந்த அமைச்சருக்கு பின்னால ஈஸ்வர் இருக்கான்" என்றான்.

"இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்" என்றவன் தன்னை முறைப்பவனின் பார்வையை கண்டு கொள்ளாதவனாய் யாருக்கோ அழைப்பை விடுத்தவன் கூறிய செய்தியில் அருகிலிருந்தவன் விழிகளோ விரிந்திட அண்ணனை பார்த்தான்.

"டேய் அண்ணா உன் பிளான் தான் என்னடா?" என்றவனுக்கு ஒற்றைக் கண்சிமிட்டியவன் "வில்லனுங்க வில்லத் தனம் பண்ணும் போது பொலீஸ்காரன் நாமளும் கொஞ்சம் வில்லத் தனம் பண்றது தப்பு இல்ல தம்பி" என்றவன் அவனை அழைத்துக் கொண்டு மினிஷ்டரின் இல்லம் நோக்கிச் சென்றான்.


.....

அந்த பெரிய பங்களாவின் உள்ளே நுழைந்த வண்டியோ போர்டிகோவில் நிறுத்தி கௌசிக் சிவா இருவரும் கீழிறங்க அவர்களை மறித்து நின்றனர் இரு தடியர்கள்.

"செக் பண்ணணும்" என்றவர்கள் இருவரையும் தொட முன்னே அவர்களை தடுத்த கௌசிக்கோ தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து வண்டியில் வைத்தவன் சிவா நீட்டிய துப்பாக்கியையும் வைத்துவிட்டு தன் முன்னே நின்றவர்களை பார்க்க. அவன் பார்வையின் அழுத்ததிலே இருவரும் விலகிட வீட்டினுள் நுழைந்தனர் இருவரும்..

"அடடே வா..வா.. பொலீஸு எப்பிடியிருக்க?" என்ற எகத்தாளமான குரலோடு கையில் ஓர் மதுக் கோப்பையுடன் ஹாலில் அமர்ந்து வரவேற்றார் தொழில் துறை அமைச்சர் மணிகண்டன்.

அவரருகே அமர்ந்திருந்த ஈஸ்வரியும் இளக்காரமான பார்வையோடு "அடடே ஒருத்தன் வருவான்னு பார்த்தா கூடவே இன்னொரு அல்லக்கை பொலிஸும் வந்து இருக்கான் போலேயே" எனக் கூறிச் சிரித்தவளோடு இணைந்து பெருத்த உடல் குலுங்க சிரித்தார் மணிகண்டன்.

சிவாவிற்கோ அவர்களது சிரிப்பில் கோபம் வர பல்லைக் கடித்து அருகில் நின்றவன் புறம் பார்வையை திருப்பிட விழிகளாலே அவனை அமைதிப்படுத்தி எதிரிலிருந்தவர்கள் மீது அழுத்தமாய் பார்வை பதித்தான் கௌசிக்.

எவ்வித பயமுமின்றி நிமிர்வாய் நின்றவனின் நிமிர்ந்த தோரணையில் உள்ளுக்குள் எரிச்சல் உண்டாகிட சிரிப்பு மறைந்து முறைப்புடன் அவனைப் பார்த்தவர்.
"என்ன பொலீஸூ ரொம்பத் தான் என் லைன்ல குறுக்க வர.. நான் யாருன்னு தெரியும்ல.. நான் நினைச்சா உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு தூக்கி போட முடியும்" என நேரடியாகவே தன் மிரட்டலை விடுக்க..

அப்போதும் எந்தவித பாவனையுமின்றி அவரையே அழுத்தமாய் பார்த்து நின்றான்..

"பசங்க சொன்னானுங்க.. எனக்கெதிரா ஏதோ ஆதாரம் எல்லாம் வெச்சியிருக்கியாம்ல.. நீ என்ன பண்ற அந்த ஆதாரத்தெல்லாம் தூக்கி என்கிட்ட கொடுத்துட்டு அமைதியா இருந்தீயன்னா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம மாசத்துக்கு ஒரு லம்பா பணத்த உன் வீட்டுக்கே அனுப்பிவெச்சிடுறேன்.. நீ என்ன சொல்ற" என பேரம் பேசியவரை வெறித்துப் பார்த்தானே ஒழிய ஒருவார்த்தை பேசவில்லை.

அவன் அமைதி தன்னை உதாசீனப்படுத்துவதாய் எண்ணியவருக்கோ கோபம் எகிற.. "ஏய் பொலீஸூ என்ன? நீ அமைதியா இருக்குறத பார்த்தா இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட போலயிருக்கீயே" என எகிறியவர்.

"இங்கப் பாரு பொலீஸூ நீ என் ஆளு குமார பிடிச்சி வெச்சியிருக்கேன்னு நல்லாவே தெரியும். ஆனா அவன் செத்தாலும் எனக்கெதிரா உண்மையை சொல்லமாட்டான்..அதனால நீ ஒழுங்கா அவன விட்டுடு உன்கிட்ட இருக்குற எல்லா ஆதாரத்தையும் என்கிட்ட கொடுத்துடு இல்லன்னா உன் நண்பனோட மனைவி பிணமா தான் வீடு திரும்புவா?" என மிரட்டியவரை புரியாது பார்த்தான்.

"என்ன பொலீஸூ புரியலையா..? உன் கூட்டாளி அதான் அந்த இன்ஸ்பெக்டரோட பொஞ்சாதி இப்போ என் ஆளுங்க கைல" என்ற அதே நேரம் கௌசிக்கின் போனும் ஒலி எழுப்பியது.

"எடுத்து பேசு ..உன் கூட்டாளியா தான் இருக்கும் பொண்டாட்டிய காணோம்னு பதறிட்டு போன் போட்டு இருக்க போறான்" என்க அழைப்பை ஏற்று காதில் வைத்தவனுக்கு மறுபுறம் மாதவ்வின் பதற்றம் நிறைந்த குரலே கேட்க அவனிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் தன்னெதிரே இருந்தவரை பார்த்தான்.

"என்ன சொல்றான் உன் கூட்டாளி..மாசமா இருக்குற பொண்டாட்டி செக்கப்புக்கு போனவ வீடு திரும்பலன்னு சொல்றானா?" என்று கேட்டு இடிச்சிரிப்பு சிரிக்க ..சிவாவோ கோபம் எகிற "ஏய்" என அவரை நெருங்க முயன்றவனைத் தடுத்தான் கௌசிக்.

"ஏய் தம்பி பொறுப்பா அதான் பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல" என்றவர் கௌசிக்கிடம் திரும்பியவர் "என்னப்பா நான் சொன்ன டீலுக்கு ஓகேவா? இல்ல ?" என்றவரை அமர்த்தலான பார்வை பார்த்தவன்.

"ம்ம் வெல் பிளான் மினிஷ்டர் ஸார் பட் டூ லேட் உங்க பினாமி எப்போவோ பரலோகத்துக்கு பார்சல் அனுப்பிட்டேனே.. அப்புறம் எப்பிடி அவன உங்ககிட்ட ஒப்படைக்கிறது?" என பாவம் போல் கூறிவனை அதிர்வாய் பார்த்தனர் மற்ற இருவரும்.

சிவாவிற்கோ அவனின் பதிலும் அவர்கள் முகம் காட்டிய அதிர்வும் சிரிப்பை தர சிரித்துக் கொண்டே நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
அவனுக்குத் தான் தெரியுமே அடுத்து தன் அண்ணனின் ஆட்டம் என்ன என்பது.

"ஹேய் என்னடா இவ்வளவு சொல்லியும் திமிறா பதில் சொல்ற..ஒழுங்கு மரியாதையா எல்லா ஆதாரத்தையும் ஒப்படைச்சிடு இல்லையா.. அந்த பொலீஸ்காரன் பொண்டாட்டி மாசமா வேற இருக்கால்ல..இப்போவே அவளுக்கு பிரசவம் பார்க்குற மாதிரி பண்ணிடுவோம் பார்த்துக்கோ" என கோபமாய் மிரட்டிய ஈஸ்வரியை முறைத்தனர் அண்ணன் தம்பி இருவரும்.

"என்னங்கடா என் இடத்துக்கே வந்து என்னையே எதிர்க்குறீங்களா? இங்கப் பாரு பொலீஸூ இன்னைக்கு நைட் கடத்தப்பட்ட பொண்ணுங்க எல்லாம் இந்த ஊரவிட்டே காலி பண்ணப் போறேன்..அதுல ஒருத்தியா அந்த பொலீஸ்கார பொண்டாட்டியும் இருப்பா? உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ" என கத்தினார்.

"அய்யோ மினிஸ்டர் ஸார் ரொம்ப கத்தாதிங்க நீங்க வேற ஆனா ஊன்னா ஹார்ட் அட்டாக்னு சொல்லி ஹாஸ்பிடல்ல போயி படுத்துக்குறீங்க இந்த வாட்டி நிஜமாலுமே ஹார்ட் அட்டாக் வந்து பொட்டுனு போய்டப் போறிங்க" என்று சிரித்துக் கொண்டே கூறியவன் அவர் அருகில் சென்று அவர் நெஞ்சை நீவி விட்டு பணிவாக நிற்க அவனை தள்ளிவிட்டவர்.
"டேய் என்னங்கடா விளையாட்டா காட்டுறீங்க.. என் இடத்துலயே வந்து என்னையே நக்கல் பண்றீங்களா " என கத்தியதில் அவர் அடியாட்களோ அங்கு வந்து சேர்ந்தனர்.

"ஏய் இன்னைக்கு நைட்டுக்குள்ள ஆதாரம் எல்லாம் என் கைக்கு வந்தா அந்த பொண்ணு உயிரோட திரும்புவா இல்லன்னா?" என கை நீட்டி எச்சரித்திட
கௌசிக் சிவா இருவரும் அமைதியாய் பார்த்தவர்கள் "ஏன் மினிஸ்டர் ஸார் உங்க இடத்துக்கே வந்து உங்ககிட்டே இவ்வளவு அமைதியா பேசிட்டு இருக்கோம்னா? பிளான் இல்லாமலா வந்து இருப்போம்.." என்றவனோ அங்கிருந்து வெளியேறிட போகும் அவர்களை குழப்பமாய் பார்த்தவருக்கு சந்தேகம் தோன்ற
"டேய் நம்மாளுக்கு போன போட்டு அங்க எல்லாம் கரெக்ட்டா இருக்கானு கேளுங்கடா" என்றவர் தன் அடியாட்களுக்கு அழைத்தும் அழைப்பு ஏற்காது விட பதறியவர் தானே உறுதிபடுத்த எண்ணியவராய் அவ்விடம் நோக்கி கிளம்பிச் சென்றார்.

......


மாலை மங்கி இருள் கவிழ்ந்த நேரம் அந்த சற்றே ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த பாழடைந்த குடோனிலோ சிறு வெளிச்சத்திற்கு மத்தியில் அங்குமிங்கும் சற்றே முரட்டுத் தோற்றத்தோடு நடமாடியவர்களோ அங்கே நிறுத்தப்பட்டிருந்த லாறியில் மூட்டை போல சுமந்து வந்து பெண்களை போட்டுக் கொண்டிருக்க அந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கினர் மணிகண்டனும் ஈஸ்வரியும்.

தங்கள் முதலாளியைக் கண்டவர்களோ பணிவாய் அவரைப் பார்த்திருக்க. மணிகண்டனின் பார்வையோ அங்கே நின்றிருந்த தன் அடியாள் சேகர் மீது படிய அவரை நோக்கி வந்தான்.

"என்னடா சேகரு எல்லாம் சரியா நடக்குதா? ஏதும் பிரச்சனையா? " என்க.

"அய்யா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல எல்லாம் பக்காவா தயாரா இருக்கு" என்றான் பணிவோடு.

"ம்ம் எங்க அந்த பொலீஸ்காரன் பொஞ்சாதி.. " என்றவரை அங்கிருந்த ஓர் அறை நோக்கி அழத்துச் சென்றான் சேகர்.

மையிருட்டாய் இருந்த அறைக்குள் நுழைந்தவர்
"ஏலேய் அந்த லைட்ட போடுடா அதான் இருட்டா இருக்குதுல்ல" என்க அவர் குரலைத் தொடர்ந்து கேட்ட குரலில் வெடவெடத்து போனவராய் அதிர்ந்து நின்றவரின் பார்வையோ வெளிச்சம் பரவிய அவ்வறையின் நடுவிலே சட்டமாய் கால் காலிட்டு அமர்ந்திருந்தவனைக் கண்டு மேலும் அதிகரிக்க ஆணியடித்தாற் போல விறைத்து நின்றார்..

அவனை அங்கு எதிர்பாரதவர் அதிர்வோடு "ஏய்...நீ...நீ எப்பிடி இங்க.." திணறலோடு கேட்டவரின் பின்னே..
"அத நான் சொல்லவா சாரே" என்றபடி முன்னே வந்து நின்றான் சிவா.

"டேய் நீங்க எப்பிடிடா என்னோட இடத்துக்கு வந்தீங்க" என்று கோபமும் அதிர்வோடும் கேட்டவர் தன் அடியாள் புறம் பார்வையை திருப்ப அவனோ தலைகுனிந்து ஒதுங்கி நின்றதிலே புரிந்து கொண்டவர்.

"துரோகி..எனக்கே துரோகம் பண்ணிட்டல்ல" என அவன் மீது பாய முயன்றவரை தடுத்தது கௌசிக்கின் ஓங்கி ஒலித்த குரல்.

"மினிஸ்டர் ஸார் பொறுமை.." என்ற கௌசிக்கோ எழுந்து அவர்களை நோக்கிச் வர..உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே முறைத்தவர் "என்னடா பொலீஸூ என்ன அரெஸ்ட் பண்ண போறியா..? அரெஸ்ட் பண்ணாலும் இரண்டே நாள்ல இந்த கேஷூக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லன்னு என்னால வெளிவர முடியும் பார்க்குறீயா?" என எகிறியவரை அமர்த்தலாய் பார்த்தவன் சிறு சிரிப்புடன்..

" தெரியும் மினிஸ்டர் ஸார் அதான் நான் மட்டும் தனியா வராம மொத்தப் பேரையும் கூட்டி வந்து இருக்கேன்" என்றவன் கண்ணசைக்க மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் வர அந்த அறைக்குள் நுழைந்தனர் மீடியாக்காரர்கள் மற்றும் பொலீஸ் அதிகாரிகள்.

திடீரென உள் நுழைந்தவர்களைக் கண்டு தன் குட்டு வெளிப்பட்டதை எண்ணி திகைத்து நின்றனர் மணிகண்டன் ஈஸ்வரி இருவரும்.

கமிஷ்னரோ "பெண்களை கடத்திய குற்றத்துக்காக உங்கள கைது பண்றோம்" என்றவர் செய்கை செய்ய இருவருக்கும் கைவிலங்கிடப்பட்டு வெளியில் இழுத்துச் செல்லப்பட மொத்த கேமராக்களும் அதை உள்வாங்கிக் கொண்டன.

ஒரே நொடியில் தன் மொத்த சாம்ராஜ்ஜியமும் சரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாதவராய் தன்னை இந்நிலைக்கு கொண்டு வந்தவனை முறைத்தவர் கோபத்தோடு "டேய் எப்பிடிடா எப்பிடிடா கண்டுபிடிச்ச" என ஆற்றாமையில் கத்தியவருக்கு அப்போது தான் அங்கு சுற்றியிருந்த அடியாட்களை கவனிக்க அனைத்துமே புதுமுகங்களாய் தோன்ற குழப்பமாய் அவனைப் பார்த்தார்.

"எல்லாமே பொலீஸ்..மப்டில இருக்காங்க.. கடத்தப்பட்ட பொண்ணுங்க எல்லாரும் சேப்.. அந்த பொண்ணுங்க கூட செட்டப் தான்.. என்றவன் வண்டியில் மயக்கத்திலிருப்பது போல நடித்திருந்த பெண் காவல் அதிகாரிகளையும் காட்டிட அத்தனை அதிர்ச்சி.
அதோடு இவன் எப்படி கண்டுபிடித்தான் என்ற கேள்வியும் உண்டாக அவனைப் பார்த்தவரின் பார்வையின் கேள்வியுணர்ந்து சிரித்தவன்.

"சிம்பிள், நீ எப்பிடி என் ஆள கடத்த பிளான் பண்ணியோ அதே ஆள வெச்சே உன்ன பிடிக்க பிளான் பண்ணிட்டேன்..சொன்னேன்ல உன் இடத்துக்கு வரும் போதே பிளானோட தான் வந்தேன்னு..இது தான் என்பிளான்" என்க இடைபுகுந்த சிவாவோ "மாஸ்டர் பிளான்" என்றான் கண்சிமிட்டி.

மணிகண்டன் ஈஸ்வரி இருவருக்குமே தலையில் இடி விழுந்தால் போல அதிர்வுடன் நின்றிருக்க..அடுத்த சில மணிநேரத்தில் இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கௌசிக்கை நெருங்கிய கமிஷ்னரோ "வெல்டன் கௌசிக் சொன்ன மாதிரியே இந்த கேஷ சக்ஸஸா முடிச்சிட்டிங்க கங்கிராட்ஸ்" என வாழ்த்தியவர் சக அதிகாரிகளுக்கும் வாழ்த்தைக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

சில மணிநேரத்தில் அந்த இடமே அமளித்துமளியாக அனைவரையும் அப்புறப்படுத்தி கிளம்பும் நேரம் அங்கு வந்து சேர்ந்தான் மாதவ்.

"டேய் வாடா..அஸ்வினி ஓகே வா?" என்க நண்பனை முறைத்தான்.

"ஏன் எருமைங்களா இவ்வளவு பெரிய மேட்டர் நடந்து இருக்கு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம முடிச்சிட்டீங்களடா" என்றவனை பார்த்து சிரித்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாய் அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு..

"டேய் மச்சி இங்க இருக்குறத விட நீ அஸ்வினி பக்கத்துல இருக்குறது தான் சரி..அதனால தான் அவ கூடவே உன்ன இருக்க சொன்னேன்..அந்த நிலமையில நமக்கு அவ பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம் அதுதான்" என்ற நண்பனின் கூற்றிலிருந்த உண்மை புரியத் தான் செய்தது.

"அஸ்வினி கடத்தப்படப் போகிறாள்"
என அழைப்பில் மூலம் அவன் சொன்ன நொடியிலிருந்தே மனைவியை எண்ணி துடுத்தவன் அவளைக் காணும் வரை உயிரை கையில் பிடித்து அல்லவா பதறிக் கொண்டிருந்தான்..

"அதெல்லாம் சரிடா அஷ்வினிய தூக்கப் போறானுங்கன்னு உனக்கு எப்பிடி தெரிய வந்திச்சு..? அப்புறம் அந்த சேகரு அவன் எப்பிடி அப்ரூவரா மாறினான்" என தன் சந்தேகத்தை முன்வைத்தான் மாதவ்.

"இந்த கேஷ் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட இரண்டு மாசமா ஆகுது.. இதோட சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தன பத்தியும் அக்குவேர் ஆணிவேரா டீடெய்ல்ஸ் எடுத்து இருக்கோம்..இதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வீக்னெஷ் இருக்கு.. அதுல இவனோட வீக்னெஷ் நமக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்.. அவன் அப்ரூவரா மாறிட்டான்..
இந்த மணிகண்டனுக்கு எதிரா நிறைய ஆதாரங்கள எடுக்க உதவி பண்ணதும் கூட சேகர் தான். அஸ்வினிய கடத்த சொன்னத பத்தி தகவல் சொன்னதும் அவன் தான். அந்த மணிகண்டன் என்ன போலவ் பண்ண ஒருத்தன அனுப்பியிருந்தான்.. அதான் அவன போலவே அவன் கைய வெச்சே அவன் கண்ண குத்திட்டேன்" என்றவனை விழிவிரித்து பார்த்தான் மாதவ்.

"டேய் உன்னோட தானே நானும் சுத்தினேன்..இதெல்லாம் எனக்குத் தெரியாம எப்போடா பண்ணிண" என்றவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்தவன்.
"சில விசயங்கள் ரகசியமா இருக்குறதும் நன்மை தான்டா" என்றவனை இருவரும் முறைத்தனர்.

"எல்லா சுமையையும் நீயே சுமக்கனும்னு சொல்லு அதானே" என முறுக்கி நின்றவர்களை மலையிறக்கி சமாதானம் செய்து வைத்தவன். " சரிடா நீ அஸ்வினிய பார்த்துக்கோ நாங்க நாளைக்கு வந்து பார்க்குறோம்" என நண்பனிடம் விடைபெற..

சிவாவோ "ஆமா ஆமா நீ உன் பொண்டாட்டியை பார்த்துக்கோ எங்கண்ணா அவ பொண்டாட்டிய பார்க்க போறான்.. ம்ம்ஹும் நமக்கு தான் ஒன்னும் மாட்ட மாட்டேங்குது சிங்கிளாவே சுத்துறேன்" என்று பெருமூச்சு விட்டவனின் முதுகில் தட்டிய கௌசிக்கோ "டேய் போதும் வாடா" என அவனை இழுத்துக் கொண்டு தன் வீடு நோக்கிச் சென்றான்.

......

இத்தனை நாட்களாக அழுத்திய ஒரு பிரச்சனையில் இருந்து வெற்றி பெற்ற மகிழ்வுடன் வீடு வந்தவனோ கதவைத் திறந்த மதியின் சோர்ந்த முகம் கண்டு புருவம் சுருங்க அவளைப் பார்க்க.. சிவாவோ அது அறியாதவன் அவளிடம் சிரித்து பேசிவிட்டு அறைக்குள் நுழைந்து கொள்ள..கௌசிக்கோ அவளையே பார்த்து இருந்தான்.

சிவாவுடன் இணைந்து சிரித்தவளுக்கு மீண்டும் கவலை குடிகொள்ள சோகமாய் இருந்தவள் அப்போது தான் தன்னவன் பார்வை தன்னில் நிலைத்திருப்பது புரிய சிறு மிரட்சியோடு அவனைப் பார்த்தாள்.

"இங்கே வா" என்றழைத்தவன் அழைப்பின் அழுத்தத்தில் பயந்தவள் மிரட்சியோடு அவனருகே வர பட்டென்று அவள் கரம் பற்றி தன்னருகே அமரவைத்தவனை விழிகள் தெறித்திவிடுவது போல விரித்து பார்த்தாள் வெண்மதி.

"ஹேய் பார்த்து கண்ணு கீழ விழுந்திடப் போகுது" என கேலி பண்ணிட அதில் இமைகள் படபடக்க அவனைப் பார்த்தவளின் பாவனையில் சிரித்தவன் ஆறுதலாய் அவள் கரம் பற்றி "என்னாச்சு மதிக்கு ஏன் டல்லா இருக்கே" என மென்மையாய் வினவிட அவனை ஆச்சர்யமாய் பார்த்தவள்.

"உங்களுக்கு எப்பிடித் தெரியும்" என்றாள் ஆர்வமாய்.. அதில் அவள் தலையில் வலிக்காது கொட்டியவன் "இந்த சின்ன பேஸ்ல அது நல்லாவே தெரியுதே.. " என அவள் முகத்தை வட்டமிட்டு காட்டிட அதில் மெலிதாய் சிரித்தாள் பெண்ணவள்.

"ம்ம் சரி சொல்லு என்ன பிரச்சனை" என்றவன் கேள்வியில் முகம் வாடிட "அ..அது.. நாளைக்கு ப்ளஸ் டூ ரிசல்ட் வறப் போகுதுல அது தான் கொஞ்சம் கவலையா இருக்குது" என தன் வாட்டத்திற்கான காரணத்தை கூறியவளை பார்த்து தலையாட்டியவன்.

"இதுக்கு தானா? இப்போ என்ன ரிசல்ட் தானே வருது வரட்டுமே.. நல்லா எழுதியிருக்கீயா?" என்றவனிடம் வேகமாய் தலையாட்டிட. அவனும், "அப்போ எதுக்கு இந்த கவலை.." என்றவன் எழுந்து கொள்ள வேகமாய் அவன் கரத்தை பற்றிக் கொண்டவள் தயக்கத்துடன் "எ...என்.. என்ன மேல படிக்க வைக்குறீங்ளா??" என தன் மனதின் ஆசையை ஏக்கத்தை வார்த்தைகளால் வடித்தவள் விழியிலிருந்த ஏக்கத்தை கண்டு கொண்டவன் அவள் தலை மேல் கை பதித்தவன் "உனக்கு என்ன படிக்க விருப்பமோ படிக்க வைக்குறேன்.. சொல்லு உன் ஆசை என்ன?? என்ன படிக்கப் போற?" என்றதும் இத்தனை நேரமிருந்த கவலை துளியும் அற்றவளாய் முகம் விகாசிக்க..இதழ்கள் விரிந்திட "எனக்கு டாக்டருக்கு படிக்கனும்னு ரொம்ப ஆசை.. சின்ன வயசுல இருந்தே டாக்டராகனும்னு கனவோட இருக்கேன்..ஆனா.. ஆனா அது படிக்க நிறைய செலவாகும்னு சொல்றாங்க.." என ஏதோ ஒரு வேகத்தில் தன் ஆசையை கூறியவள் பணம் என்ற சொல்லில் நிதானித்தவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அதில் அவள் தயக்கம் புரிந்தவன் அவள் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்து அவள் கழுத்தோடு உறவாடியா தாலிச் சரடை தூக்கி காமித்து "இதுக்கு இன்னுமே முழுமையான அர்த்தம் உணரலையா?? டாக்டர் பாப்பா" என்றவனின் "டாக்டர் பாப்பா" என்றழைப்பில் விழிகள் மின்னிட அவனை பார்த்தவள் இதழ்களும் புன்னகைத்தது.

"என்ன டாக்டர் பாப்பா.. உங்க ஊர்ல தாலி கட்டின பொண்டாட்டிக்கு புருஷன் செலவு பண்ணாம வேற யாரும் பண்றாங்காளா? ஹாங்" என கேட்டவனிடம் மறுப்பாய் தலையசைத்தவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் சிறு சிரிப்புடன் "அப்போ நீங்க எதுக்கு அத பத்தி கவலைப்படுறீங்க.. இந்த பொலீஸ்காரன் பொண்டாட்டிய டாக்டர் ஆக்குறது தான் என்னோட வேலை.. ஓகே வா.. இனி நீங்க டாக்டர் ஆகுறதுக்கு நல்லா படிக்குற வேலையை பாருங்க சரியா?" என்க விழிகள் ஆனந்தமாய் கலங்கிட இதழ்களோ புன்னகையில் விரிந்திட தலையாட்டி வைத்தவளைக் கண்டு தானும் புன்னகைத்தவனாய் நிமிர்ந்தவன் அறைக்கதவில் சாய்ந்து நின்ற சிவாவைக் கண்டு தலையை கோதிக் கொண்டு அவனைத் தாண்டிச் செல்ல.

சிவா அவனைச் சீண்ட எண்ணியவனாய்
"ப்ப்பா டேய் அண்ணா எப்போலயிருந்துடா இப்பிடி ரொமாண்டிக் மன்னனான?? என்னையே மிஞ்சுடுவ போலயே" என்க..

அவனோ அசராதவனாய் "உனக்கு அண்ணன்டா நானு" என கண்ணடித்து கூறி அறைக்குள் நுழைந்திட அண்ணனின் அவதாரத்தில் வாய்பிளந்து அவனைப் பார்த்தவன் அவன் மாற்றம் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்..
 
Last edited:

Habi

Moderator
வழமையான கதிரவன் தன் வேலையிலிருந்து விடுமுறை வாங்கிக் கொள்ள பூமித் தாயின் தாகம் தீர்க்க வந்து சேர்ந்தான் வருணன்.
காற்றோடு சேர்ந்து சொட்டிய மழைத்துளிகளோடு இடியும் மின்னலும் இணைந்து இன்னும் இன்னும் உற்சாகம் தர தாயைக் கண்ட சேயைப் போல ஆர்வத்துடன் ஆசையாய் தழுவியது பூமித் தாயை.

ரம்மியமான குளிர்ந்த காலைப் பொழுதில் இயற்கையின் அலாரமாய் கேட்ட இடிச் சத்தத்தில் மெதுவாய் கண்விழித்தான் கௌசிக்.
தன் மீதே கைகால்களை பரப்பியபடி தூங்கும் தன் உடன் பிறப்பை புன்னகையுடன் நோக்கியவன் அவன் தூக்கம் கலையாதவாறு அவனை விலக்கி எழுந்து குளியறைக்குள் புகுந்து தன் காலைக்கடன்களை முடித்து வந்தவன் தன் போனை எடுத்துக் கொண்டு ஹால் சோபாவில் வந்தமர்ந்து கொண்டான்.

தன் போனை உயிர்ப்பித்து இன்று வெளியாகிய ப்ளஸ்டூ பரீட்சைக்கான முடிவுகளை பார்க்க எண்ணியவன் நேற்றிரவு மதியிடமிருந்து பெற்ற அவள் பரீட்சை இலக்கத்தை கொடுத்து அவளுடைய பரீட்சை முடிவை பார்த்திட
அனைத்துப் பாடங்களிலும் உயர் தேர்ச்சி பெற்றிருந்தாள் வெண்மதி.

ஆச்சரியத்துடன் விழி விரித்து புன்னகையோடு அனைத்தையும் பார்வையிட்டவன் இந்த மகிழ்ச்சியை அவளிடம் பகிர்வதற்காக அவளை எதிர்பார்த்து அவளது அறைக் கதவை பார்க்க அதுவோ திறக்கப்படாமலே இருந்தது.

தூங்கி எழுந்து வரட்டும் என எண்ணிக் கொண்டவன் சமையலறை புகுந்து தனக்கென காபியை கலந்து வந்து பால்கனி வழியே பெய்யும் மழையை ரசித்தவாறே அருந்திக் கொண்டிருக்க சோம்பலோடு அங்கு வந்து சேர்ந்தான் சிவா.

"குட்மார்னிங் ண்ணா" என்றவன் அவன் கையிலிருந்த காபி கப்பை பறித்து தான் அருந்த அவன் தலையில் கொட்டி சிரித்துக் கொண்டே மழையை ரசித்தான் கௌசிக்.

"ப்பாஆ செம்ம மழைல.. சும்மா ஜில்லுன்னு இருக்கு" காபியை அருந்திக் கொண்டே பேசியவனை பார்த்தவன் தலையசைத்து கொண்டே மதியின் அறைபக்கம் பார்வையை பதிக்க..அதைக் கண்டுகொண்ட சிவாவோ..
"ம்க்கும் என்ன ஸார் பார்வை எல்லாம் பலமா இருக்கு" என்று கேலியாய் கேட்டிட அதில் அவன் புறம் திரும்பியவன் தன் கையிலிருந்த மொபைலை அவன் புறம் காட்டினான்.

அதில் பார்வையை பதித்த சிவாவோ விழிகள் விரிந்திட "ஹேய் வாவ் சூப்பர்.. க்ரேட்" என்றான் சந்தோஷமாய்.
"நல்ல மார்க் எடுத்திருக்கா நிச்சயம் அவளுக்கு பிடிச்ச போல டாக்டர் துறை அவளுக்கு ஏத்தது தான்" என்றான்.

"ம்ம்.. அதுக்கேத்த எல்லா குவாலிபிகேஷனும் அவளுக்கு இருக்கு" என்றான் கௌசிக்.

"அவ இன்னும் எழுந்துக்கல போல இருக்கே..இத பார்த்தா ரொம்ப சந்தோஷபடுவா"

"அவ வர டைம் வரட்டும் இப்போ வா ப்ரெக்பாஸ்ட் ரெடி பண்ணுவோம்" என்றவன் கையோடு அவனை அழைத்துச் செல்ல இருவருமாய் இணைந்து காலை நேர உணவை செய்து முடித்த நேரம் அறைக்கதவை திறந்து அவசரமாய் வெளியே வந்தாள் வெண்மதி.

அவள் முகம் காட்டிய பதட்டமே அவள் மனநிலையை உணர்த்திட அவளை சீண்ட எண்ணிய சிவாவோ "என்ன அண்ணி இது தான் குடும்ப பொண்ணு எழுந்துக்குற நேரமா..ஹாங்..இப்பிடி உங்கள போல பொண்ணுங்க இருந்தா எங்கள போல நாட்டுக்கு வேலை செய்ற ஆபிஸர்ஸ் எல்லாம் இப்பிடி சமையல் கட்டுல தான் நிற்க வேண்டி வரும்.." என்றவன் பெருமூச்சுடன் "கன்ன பிடிக்க வேண்டிய எங்கண்ணன் கைல இப்பிடி கரண்டிய பிடிக்க வெச்சிட்டீங்களே.. அய்யோஹோ.. இந்த கொடுமையை கேக்க யாருமில்லையா?" என பொய்யாய் அலறியவனின் அலறலில் இதோ அதோ அழுதுவிடுவேன் என்ற பாவனையில் உதடுபிதுங்க நின்றிருந்தாள் வெண்மதி.

தம்பியின் கலாட்டாவைக் கண்டு கைகட்டி பார்த்து நின்ற கௌசிக்கோ மதியின் பாவனை மேலும் சிரிப்பூட்ட தலையாட்டிச் சிரித்தவன் சிவாவின் தோள் தட்டி அவனை அடக்கிவிட்டு மதியருகே செல்ல அவளோ பயந்து விழித்தாள்.

தாமதமாய் எழுந்ததுக்கு தன்னை திட்டிவிடுவானோ என்ற பயத்தில் கலங்கிய விழியோடு "அ..அது..நா..நான்" என திக்கித் திணறி வார்த்தைகள் வெளிவர சண்டித் தனம் பண்ண அப்பாவியாய் விழித்து நின்றவளை பார்த்து அவள் உயரத்திற்கு குனிந்தவன் "இது தான் எழுந்துக்குற நேரமா?" என கேட்டதில் வேகவேகமாய் மறுப்பாய் தலையசைத்தவள்.
"நல்ல மழை பெஞ்சிதா அது தான் தூங்கிட்டேன்..ஸாரி இனி லேட்ஆ எழுந்துக்க மாட்டேன்" என கெஞ்சும் குரலில் கேட்டிட அதில் சிரித்துக் கொண்டவன்.

"சரி போய் கிளம்பி ரெடியாகி வா..வெளில போகலாம்" என்றதில் கண்கள் பளிச்சிட ஆர்வமானவள் "எங்கே போறோம்" என்க..
சிவாவோ"அது சர்ப்ரைஸ்.." என்றான்.

"ஆமா சர்ப்ரைஸ் தான் போய் கிளம்பி வா" என்றவனிடம் வேகமாய் தலையசைத்து அறைக்குள் நுழைந்தவள் அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வர ..மூவருமாய் சேர்ந்து காலையுணவை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.

வண்டியின் ஜன்னல் வழியே வெளித் தெரிந்த காட்சியை ஆர்வமாய் பார்த்திருந்த வெண்மதியின் முகம் முழுவதும் புன்னகை நிறைந்திருந்தது.

கடந்த சில நாட்களாய் அவள் மனதளவில் அழுத்திய பாரங்கள் யாவும் ஜன்னல் வழி வீசிய குளிர்ந்த காற்றில் மாயமாய் மறைந்திருக்க விரும்பியே அந்த பயணத்தை ரசித்திருந்தாள் பெண்ணவள்.

தூறலாய் தூறிய மழைத் துளிகளை ரசித்தவள் "ரொம்ப நல்லாயிருக்குல" என தன்னை மறந்து இயற்கையை ரசித்துக் கூறிட அதில் கௌசிக் சிவா இருவரும் ஒரு சேர அவளைத் திரும்பி பார்த்தனர்.

இருவரின் பார்வையும் தன்மீது பதிந்ததில் சற்றே பயந்தவள்..
"அ...அது இந்த க்ளைமெட் நல்லா இருக்குனு சொன்னேன்" என தயங்கிட..
அதில் சிரித்த சிவாவோ "சில் மதி நீ திடீர்னு பேசவும் வேற யாரோ கார்ல ஏறிட்டாங்களோனு நினைச்சி பயந்திட்டோம் அது தான் டக்குனு திரும்பி பார்த்துட்டோம் இல்லடாண்ணா" என கௌசிக்கை பார்த்து கண்சிமிட்டிட அவனும் சிரித்தான்.

மதியோ அவன் கேலி புரியாதவள் "இல்ல இல்ல வேற யாரும் இல்லை நான் தான்" என அவசரமாய் மறுக்க சிவாவோ "கொடுமைடா குழந்தைப் பிள்ளை வெச்சிகிட்டு காமெடி பண்ணது என் தப்பு தான்" தலையிலடித்துக் கொள்ள கௌசிக்கோ சத்தமாய் சிரித்தே விட்டான்.

ஒரு வாவழியாய் மூவரும் அந்த மிகப் பெரிய மாலிற்கு வந்து சேர்ந்தனர்.
சிவாவோ வண்டியை நிறுத்த பார்க்கிங் செல்ல கௌசிக் மதியை அழைத்துக் கொண்டு உள்நுழைந்தான்.

விழிகள் விரிய ஆச்சரியத்துடன் அனைத்தையும் வாய்பிளந்து பார்வையிட்டவாறே அவனோடு இணைந்து வந்தவள் விழிகளோ
ஒவ்வொரு கடைகளையும் நோட்டமிட்டன.

"உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்" என்றவன் குரலில் களைந்தவள் அவன் புறம் திரும்பினாள்.

"எனக்கு ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் இங்க ஐஸ்கிரீம் கிடைக்குமா?" என சுற்றி முற்றி பார்வையால் அலசிட அவனோ "இங்க உனக்கு தேவையான எல்லாமே கிடைக்கும் என்ன வேணுமோ எடுத்துக்கோ" என்க. அவளோ தலையாட்டி மறுத்தவள்.
"இல்ல எனக்கு வேறெதுவும் வேணாம்.. ஐஸ்கிரீம் போதும் வாங்கித் தாறிங்களா?" என கேட்க அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்த கடைக்குள் நுழைந்தவன் அவள் கேட்டதை வாங்கி கொடுக்க விழிகள் பளிச்சிட ஆசையாய் வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

தானும் ஒன்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே விழிகளை அவள் மேல் பதித்திருந்தான் கௌசிக்.

தன்னை பார்த்திருந்தவனை நோக்கியவள் பின் விழிகளால் சுற்று முற்று தேடியபடி "சிவா அத்தான் எங்கே?" என்று கேட்டிட அவளின் அத்தான் என்ற விழிப்பில் கேள்வியாய் அவளை நோக்கியவனோ "அத்தானா?" என்றான்.

அவளோ "ம்ம் அது அவங்க முறைக்கு எனக்கு அத்தான் தானே" என்றவளை தலைசரித்து நோக்கியவன் குரலில் சிறு துள்ளலோடு "ஆஹாங்..ம்ம் ஆமா அப்போ நான் யாரு உனக்கு?" என்று கேட்க திருதிருவென முழித்தாள்.

என்ன சொல்வாள்..? தயக்கமின்றி சிவாவை அத்தான் என உறவாய் உரிமையாய் அழைக்க முடிந்தவளால் உரிமைப்பட்டவனை அழைக்க கூச்சம் தடுக்க தயங்கியல்லவா இருக்கின்றாள்.

அவள் முகம் பார்த்தே அவளை புரிந்து கொண்டவனாய் சிறு புன்னகையோடு
"சரி விடு அத்தான் பொத்தான் உறவுமுறையெல்லாம் இப்போதைக்கு வேணாம் இப்போதுலயிருந்து நாம ப்ரெண்ட்ஸ்ஆ இருப்போம் போகப்போக அத்தான் பொத்தான் ஆ மாறுவோம் சரியா?" என அவளை இலகுவாக்கிட வேகமாய் தலையசைத்தாள் வெண்மதி.

"சரி வேற ஏதாச்சும் வேணுமா?" எனக் கேட்க அவளோ "இன்னோரு ஐஸ்கிரீம் வேணும்" என கேட்டாள்.

"இன்னொன்னா..? நோ.. மழை நேரத்துல நிறைய சாப்டா கோல்ட் வரும்" என்றவனிடம் மறுப்பாய் தலையசைத்தவள் "எனக்கு கோல்ட் வரவே வராது ப்ளீஸ் வாங்கி தாங்களேன்" என்க.. அதை மறுக்க முடியாதவனாய் எழுந்து சென்றான்.

அவன் செல்ல சிவாவும் இவர்களை தேடி வந்திட மதியின் அருகே அமர்ந்தான்.
"வந்துட்டிங்களா சிவா அத்தான்" என்றவளின் அழைப்பில் முளித்தவன் பின் ஆச்சர்யத்துடன்
"அடப்பாருடா அத்தான் எல்லாம் சொல்றாங்க" என சிரித்தபடி கேட்க கௌசிக்கிடம் கூறியதையே இவனிடமும் கூற சிரித்தபடி தலையாட்டி வைத்தான்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கௌசிக்கும் வந்து சேர மூவருமாய் கடையை சுற்றினர்.
ஆண்கள் இருவரும் அவள் மறுக்க மறுக்க அவளுக்கென நிறைய பொருட்களை வாங்கி குவித்தவர்கள் மேலும் சில ஆடைகளை வாங்கிக் கொண்டு பர்சஸை முடிக்கும் போதே மதிய நேரமாகிட அங்கேயே மதிய உணவு உண்ண கடைக்குள் நுழைந்தனர்.

தங்களுக்குள் பேசி சிரித்தபடி அவளையும் தங்கள் பேச்சில் இணைத்து கொண்டு மூவருமாய் உணவை உண்ண கௌசிக்கிற்கோ ஏதோ உள்ளுணர்வு உந்த திரும்பியவன் பார்வை வட்டத்தில் வீழ்ந்தாள் அவள்.. நேஹா.

வெறுப்பைச் சுமந்த விழிகளோடு பொசுக்கும் பார்வை பார்த்து நின்றவளை அலட்சியமான பாவனையோடு நோக்கியவன் தன் பார்வையை விலத்திக் கொள்ள.. அதே நேரம் அவனிடம் ஏதோ பேச திரும்பிய சிவாவின் பார்வையும் அவளின் மீது வீழ இத்தனை நேரமிருந்த மகிழ்ச்சி மறைந்தவனாய் கோபம் குடியேற அவளை முறைத்தான் சிவா.

அண்ணன் தம்பி இருவரின் பார்வையையும் சளைக்காது எதிர் கொண்டவளோ வேகமாய் அவ்விடம் விட்டு நகர்ந்து செல்ல போகும் அவளை வாய்க்குள் திட்டிக் கொண்டவனாய் தன் உணவில் கவனமானான் சிவா.

நேரம் கடக்க மூவருமாய் வீடு திரும்பினர்..

வீட்டினுள் நுழைந்ததுமே சோபாவில் தொப்பென்று அமர்ந்த சிவாவின் அருகில் கௌசிக்கும் அமர மதியும் அங்கிருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் பார்வையோ நிறைந்து இருந்த பைகளிலே நிலைத்தது.
வேண்டாம் வேண்டாம் என்ற போதும் இத்தனை பொருட்களை வாங்கி குவித்திருந்த இருவரையும் பார்த்தவளுக்கோ தேவையில்லாது அவர்களுக்கு செலவை வைத்துவிட்டோமோ என்ற குறுகுறுப் உண்டாக தயக்கத்தோடு "எதுக்கு இப்போ இதெல்லாம் வாங்கினீங்க.." என்க.
"உனக்குத் தான் எங்களுடைய சின்ன கிப்ட்" என்றான் கௌசிக்.

எதற்கு கிப்ட் என்ற கேள்வி உதித்தாலும் அதை கேட்கத் தயங்கி அவளிருக்க கௌசிக்கோ தன் போனை அவளிடம் நீட்டினான்.
அவனைப் புரியாது பார்த்தவாறே அதை வாங்கியவள் விழிகளோ மகிழ்ச்சியில் மலர்ந்திட ஆனந்தமாய் இருவரையும் பார்த்தாள்.

"ம்ம் ..இதுக்கு தான் எங்களோட சின்ன சர்ப்ரைஸ் கிப்ட்..ஹெப்பி?" என்ற சிவாவிற்கு ஆனந்தமாய் தலையசைத்தவள் புன்னகையோடு "தைங்யூ" என்றாள் உள்ளார்ந்த மகிழ்வோடு.

அவள் மனம் விரும்பிய கனவு நிறைவேறுவதற்கான முதல் வெற்றியல்லவா இது..மனம் நிறைந்த மகிழ்வோடு அந்த நாள் முழுவதும் சந்தோஷமாய் கழிந்தது.
......
வேக எட்டுக்களுடன் அந்த நீதிமன்ற அறையை விட்டு வெளியேறிய விஷ்வாவின் முகத்திலோ சற்று முன் நடந்த வழக்கில் வெற்றியீட்டியதன் பலனாக சிறு வெற்றிப் புன்னகை குடிகொண்டிருக்க நிமிர்ந்த நடையுடன் அங்கிருந்து வெளியேறியவனிடம் எதிர்ப்பட்ட "கங்கிராட்ஸ் விஷ்வா எப்போவும் போல இப்போவும் திறமையா வாதாடினீங்க" என தங்கள் வாழ்த்தை தெரிவித்த அனைவருக்கும் தலையசைத்து நன்றியை தெரிந்தவனாய் தன் காரை நோக்கி சென்றவன்.. காரில் ஏறி அமரவும் அவன் அழைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது..
போன் திரையில் தெரிந்த தங்கையின் பெயரில் அவன் புன்னகை மேலும் விரிய அழைப்பை ஏற்றவன் பேசும் முன்னே அவனை இடையிட்டு கோபமாய் ஒலித்தது மறுபுறம்.

"அண்ணா..என்ன பண்ணிட்டு இருக்க..இங்க என்னெல்லாமோ நடக்குது ..நீயென்னடாண்ணா அத பத்தி கவலையே இல்லாம இருக்க" என தலை வால் புரியாது காட்டுக் கத்தலாய் கத்தியவளின் கத்தலில் கண்களை மூடித் திறந்தவன் தங்கையின் பதற்றம் எதனால் என அறியாது அதை அறிந்து கொள்ள எண்ணியவனாய்.
"ஹேய் நேஹா ரிலாக்ஸ்.. இப்போ என்னாச்சு? எதுக்கு இந்த கோபம்? முதல்ல அத சொல்லு" என அவளை அடக்கியவன் அவள் கோபத்திற்கான காரணத்தை கேட்க..

அதில் மேலும் கோபம் ஏறியவளாய்.
"என்ன ஆச்சா நாம யாரை அவமானப்படுத்தி அழிக்க நினைச்சோமோ அவன் இங்க ஒருத்தி கூட கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கான் கூடவே அவன் தம்பி வேற அண்ணணும் தம்பி அவ்வளவு சந்தோஷமா இருக்கானுங்க." என பொறாமையில் பொங்கி விழுந்த அவள் வார்த்தைகளை உள்வாங்கியவன் அவள் யாரை கூறுகின்றாள் என்பது புரிந்த நொடி முகம் இறுக..
"என்ன சொல்ற? என்ன நடந்ததுனு தெளிவா சொல்லு?" என அழுத்தமாய் கேட்டதும் அனைத்தையும் அவனிடம் ஒப்புவித்தாள்.

"ம்ம் இப்போ என்ன பண்ண சொல்ற..அது தான் அவனுக்கும் நமக்குமான கணக்கு தீர்ந்திடுச்சே இன்னும் இன்னும் எதுக்கு அவன சீண்டனும்" அழுத்தமாய் மிக மிக அழுத்தமாய் வந்த அவன் வார்த்தைகளில் மறுபுறமோ மேல் மூச்சு கீழ் மூச்சு இழுக்க கோபத்தில் நின்றாள் நேஹா.

அவள் கோபம் புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாதவன்.
"இங்கப் பாரு நேஹா ..அவங்க சேப்டர் எப்போவோ முடிஞ்சிது இனி நமக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. இத முதல்ல உன் மனசுல பதிய வெச்சிக்கோ இனி தேவையில்லாம அவங்க லைப் பத்தி நீ யோசிக்க தேவையில்லை.." என கண்டிப்பாய் ஒலித்தவன் குரலில் சில நொடி மௌனம் காத்தவள் பின் அவனை விட அழுத்தத்தோடு ..
"அப்போ அந்த குடும்பத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லயாண்ணா ..அப்போ எதுக்கு அந்த வீட்டு பொண்ணோட உறவ முறிச்சிக்காம இருக்க..அத்துவிட வேண்டியது தானே" என்றதில் ஓர் நொடி அதிர்ந்தவன் கணநொடியில் தன்னை மீட்டுக் கொண்டவனாய் "தட்ஸ் மை பெர்சனல்.." என ஒற்றை வார்த்தையில் அவளை எட்டி நிறுத்திட ..இங்கு இவள் இதழ்களோ இகழ்ச்சியாய் வளைந்தது.

"நீ மாறிட்டண்ணா.. நீ முன்ன மாதிரி இல்ல..உனக்கு உயிர் கொடுத்த அப்பா ..கூடப்பிறந்த தங்கச்சிய விட உன் காதல் பெருசா போகிடுச்சுல.. சரி நீ உன் வாழ்க்கையை பாரு நானே தனியா என் அப்பாக்காக போராடுறேன்" என கலங்கிய குரலில் கோபமாய் உரைத்தவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
தங்கையின் குற்றச்சாட்டில் அழுத்தமாய் கண்மூடிக் கொண்டவன் மனதின் அடியாழத்தில் புதைந்திருந்த காதல் வடுக்கள் கிளறிவிட்டிருக்க.. சொல்லொண்ணாத் துயரம் மனதை அழுத்த அவன் மூடிய விழிகளுக்குள் கண்ணீர் கரையோடும் விழியோடு வெறுப்பை சுமந்து தன்னை பார்த்து நின்ற பெண்ணவளின் தோற்றம் தோன்றி மறைந்திட பட்டென்று விழி திறந்தவன் கண்களோ கோவைப்பழமாய் சிவந்து அவன் மனதின் வெம்மை எடுத்துக் காட்டியது.

புதைக்கப்பட்ட அவன் காதலோடு பல ரகசியங்கள் வெளிகொண்டு வரவே அடுத்த இரு தினங்களில் தன் சொந்த ஊர் நோக்கி மதையும் சிவாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தான் கௌசிக் கிருஷ்ணா.
 

Habi

Moderator
அத்தியாயம் - 11



வழமையான கதிரவன் தன் வேலையிலிருந்து விடுமுறை வாங்கிக் கொள்ள பூமித் தாயின் தாகம் தீர்க்க வந்து சேர்ந்தான் வருணன்.

காற்றோடு சேர்ந்து சொட்டிய மழைத்துளிகளோடு இடியும் மின்னலும் இணைந்து இன்னும் இன்னும் உற்சாகம் தர தாயைக் கண்ட சேயைப் போல ஆர்வத்துடன் ஆசையாய் தழுவியது பூமித் தாயை.

ரம்மியமான குளிர்ந்த காலைப் பொழுதில் இயற்கையின் அலாரமாய் கேட்ட இடிச் சத்தத்தில் மெதுவாய் கண்விழித்தான் கௌசிக்.
தன் மீதே கைகால்களை பரப்பியபடி தூங்கும் தன் உடன் பிறப்பை புன்னகையுடன் நோக்கியவன் அவன் தூக்கம் கலையாதவாறு அவனை விலக்கி எழுந்து குளியறைக்குள் புகுந்து தன் காலைக்கடன்களை முடித்து வந்தவன் தன் போனை எடுத்துக் கொண்டு ஹால் சோபாவில் வந்தமர்ந்து கொண்டான்.

தன் போனை உயிர்ப்பித்து இன்று வெளியாகிய ப்ளஸ்டூ பரீட்சைக்கான முடிவுகளை பார்க்க எண்ணியவன் நேற்றிரவு மதியிடமிருந்து பெற்ற அவள் பரீட்சை இலக்கத்தை கொடுத்து அவளுடைய பரீட்சை முடிவை பார்த்திட
அனைத்துப் பாடங்களிலும் உயர் தேர்ச்சி பெற்றிருந்தாள் வெண்மதி.

ஆச்சரியத்துடன் விழி விரித்து புன்னகையோடு அனைத்தையும் பார்வையிட்டவன் இந்த மகிழ்ச்சியை அவளிடம் பகிர்வதற்காக அவளை எதிர்பார்த்து அவளது அறைக் கதவை பார்க்க அதுவோ திறக்கப்படாமலே இருந்தது.

தூங்கி எழுந்து வரட்டும் என எண்ணிக் கொண்டவன் சமையலறை புகுந்து தனக்கென காபியை கலந்து வந்து பால்கனி வழியே பெய்யும் மழையை ரசித்தவாறே அருந்திக் கொண்டிருக்க சோம்பலோடு அங்கு வந்து சேர்ந்தான் சிவா.

"குட்மார்னிங் ண்ணா" என்றவன் அவன் கையிலிருந்த காபி கப்பை பறித்து தான் அருந்த அவன் தலையில் கொட்டி சிரித்துக் கொண்டே மழையை ரசித்தான் கௌசிக்.

"ப்பாஆ செம்ம மழைல.. சும்மா ஜில்லுன்னு இருக்கு" காபியை அருந்திக் கொண்டே பேசியவனை பார்த்தவன் தலையசைத்து கொண்டே மதியின் அறைபக்கம் பார்வையை பதிக்க..அதைக் கண்டுகொண்ட சிவாவோ..
"ம்க்கும் என்ன ஸார் பார்வை எல்லாம் பலமா இருக்கு" என்று கேலியாய் கேட்டிட அதில் அவன் புறம் திரும்பியவன் தன் கையிலிருந்த மொபைலை அவன் புறம் காட்டினான்.

அதில் பார்வையை பதித்த சிவாவோ விழிகள் விரிந்திட "ஹேய் வாவ் சூப்பர்.. க்ரேட்" என்றான் சந்தோஷமாய்.
"நல்ல மார்க் எடுத்திருக்கா நிச்சயம் அவளுக்கு பிடிச்ச போல டாக்டர் துறை அவளுக்கு ஏத்தது தான்" என்றான்.

"ம்ம்.. அதுக்கேத்த எல்லா குவாலிபிகேஷனும் அவளுக்கு இருக்கு" என்றான் கௌசிக்.

"அவ இன்னும் எழுந்துக்கல போல இருக்கே..இத பார்த்தா ரொம்ப சந்தோஷபடுவா"

"அவ வர டைம் வரட்டும் இப்போ வா ப்ரெக்பாஸ்ட் ரெடி பண்ணுவோம்" என்றவன் கையோடு அவனை அழைத்துச் செல்ல இருவருமாய் இணைந்து காலை நேர உணவை செய்து முடித்த நேரம் அறைக்கதவை திறந்து அவசரமாய் வெளியே வந்தாள் வெண்மதி.

அவள் முகம் காட்டிய பதட்டமே அவள் மனநிலையை உணர்த்திட அவளை சீண்ட எண்ணிய சிவாவோ "என்ன அண்ணி இது தான் குடும்ப பொண்ணு எழுந்துக்குற நேரமா..ஹாங்..இப்பிடி உங்கள போல பொண்ணுங்க இருந்தா எங்கள போல நாட்டுக்கு வேலை செய்ற ஆபிஸர்ஸ் எல்லாம் இப்பிடி சமையல் கட்டுல தான் நிற்க வேண்டி வரும்.." என்றவன் பெருமூச்சுடன் "கன்ன பிடிக்க வேண்டிய எங்கண்ணன் கைல இப்பிடி கரண்டிய பிடிக்க வெச்சிட்டீங்களே.. அய்யோஹோ.. இந்த கொடுமையை கேக்க யாருமில்லையா?" என பொய்யாய் அலறியவனின் அலறலில் இதோ அதோ அழுதுவிடுவேன் என்ற பாவனையில் உதடுபிதுங்க நின்றிருந்தாள் வெண்மதி.

தம்பியின் கலாட்டாவைக் கண்டு கைகட்டி பார்த்து நின்ற கௌசிக்கோ மதியின் பாவனை மேலும் சிரிப்பூட்ட தலையாட்டிச் சிரித்தவன் சிவாவின் தோள் தட்டி அவனை அடக்கிவிட்டு மதியருகே செல்ல அவளோ பயந்து விழித்தாள்.

தாமதமாய் எழுந்ததுக்கு தன்னை திட்டிவிடுவானோ என்ற பயத்தில் கலங்கிய விழியோடு "அ..அது..நா..நான்" என திக்கித் திணறி வார்த்தைகள் வெளிவர சண்டித் தனம் பண்ண அப்பாவியாய் விழித்து நின்றவளை பார்த்து அவள் உயரத்திற்கு குனிந்தவன் "இது தான் எழுந்துக்குற நேரமா?" என கேட்டதில் வேகவேகமாய் மறுப்பாய் தலையசைத்தவள்.
"நல்ல மழை பெஞ்சிதா அது தான் தூங்கிட்டேன்..ஸாரி இனி லேட்ஆ எழுந்துக்க மாட்டேன்" என கெஞ்சும் குரலில் கேட்டிட அதில் சிரித்துக் கொண்டவன்.

"சரி போய் கிளம்பி ரெடியாகி வா..வெளில போகலாம்" என்றதில் கண்கள் பளிச்சிட ஆர்வமானவள் "எங்கே போறோம்" என்க..
சிவாவோ"அது சர்ப்ரைஸ்.." என்றான்.

"ஆமா சர்ப்ரைஸ் தான் போய் கிளம்பி வா" என்றவனிடம் வேகமாய் தலையசைத்து அறைக்குள் நுழைந்தவள் அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வர ..மூவருமாய் சேர்ந்து காலையுணவை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.

வண்டியின் ஜன்னல் வழியே வெளித் தெரிந்த காட்சியை ஆர்வமாய் பார்த்திருந்த வெண்மதியின் முகம் முழுவதும் புன்னகை நிறைந்திருந்தது.

கடந்த சில நாட்களாய் அவள் மனதளவில் அழுத்திய பாரங்கள் யாவும் ஜன்னல் வழி வீசிய குளிர்ந்த காற்றில் மாயமாய் மறைந்திருக்க விரும்பியே அந்த பயணத்தை ரசித்திருந்தாள் பெண்ணவள்.

தூறலாய் தூறிய மழைத் துளிகளை ரசித்தவள் "ரொம்ப நல்லாயிருக்குல" என தன்னை மறந்து இயற்கையை ரசித்துக் கூறிட அதில் கௌசிக் சிவா இருவரும் ஒரு சேர அவளைத் திரும்பி பார்த்தனர்.

இருவரின் பார்வையும் தன்மீது பதிந்ததில் சற்றே பயந்தவள்..
"அ...அது இந்த க்ளைமெட் நல்லா இருக்குனு சொன்னேன்" என தயங்கிட..
அதில் சிரித்த சிவாவோ "சில் மதி நீ திடீர்னு பேசவும் வேற யாரோ கார்ல ஏறிட்டாங்களோனு நினைச்சி பயந்திட்டோம் அது தான் டக்குனு திரும்பி பார்த்துட்டோம் இல்லடாண்ணா" என கௌசிக்கை பார்த்து கண்சிமிட்டிட அவனும் சிரித்தான்.

மதியோ அவன் கேலி புரியாதவள் "இல்ல இல்ல வேற யாரும் இல்லை நான் தான்" என அவசரமாய் மறுக்க சிவாவோ "கொடுமைடா குழந்தைப் பிள்ளை வெச்சிகிட்டு காமெடி பண்ணது என் தப்பு தான்" தலையிலடித்துக் கொள்ள கௌசிக்கோ சத்தமாய் சிரித்தே விட்டான்.

ஒரு வாவழியாய் மூவரும் அந்த மிகப் பெரிய மாலிற்கு வந்து சேர்ந்தனர்.
சிவாவோ வண்டியை நிறுத்த பார்க்கிங் செல்ல கௌசிக் மதியை அழைத்துக் கொண்டு உள்நுழைந்தான்.


விழிகள் விரிய ஆச்சரியத்துடன் அனைத்தையும் வாய்பிளந்து பார்வையிட்டவாறே அவனோடு இணைந்து வந்தவள் விழிகளோ
ஒவ்வொரு கடைகளையும் நோட்டமிட்டன.

"உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்" என்றவன் குரலில் களைந்தவள் அவன் புறம் திரும்பினாள்.

"எனக்கு ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் இங்க ஐஸ்கிரீம் கிடைக்குமா?" என சுற்றி முற்றி பார்வையால் அலசிட அவனோ "இங்க உனக்கு தேவையான எல்லாமே கிடைக்கும் என்ன வேணுமோ எடுத்துக்கோ" என்க. அவளோ தலையாட்டி மறுத்தவள்.
"இல்ல எனக்கு வேறெதுவும் வேணாம்.. ஐஸ்கிரீம் போதும் வாங்கித் தாறிங்களா?" என கேட்க அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்த கடைக்குள் நுழைந்தவன் அவள் கேட்டதை வாங்கி கொடுக்க விழிகள் பளிச்சிட ஆசையாய் வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

தானும் ஒன்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே விழிகளை அவள் மேல் பதித்திருந்தான் கௌசிக்.

தன்னை பார்த்திருந்தவனை நோக்கியவள் பின் விழிகளால் சுற்று முற்று தேடியபடி "சிவா அத்தான் எங்கே?" என்று கேட்டிட அவளின் அத்தான் என்ற விழிப்பில் கேள்வியாய் அவளை நோக்கியவனோ "அத்தானா?" என்றான்.

அவளோ "ம்ம் அது அவங்க முறைக்கு எனக்கு அத்தான் தானே" என்றவளை தலைசரித்து நோக்கியவன் குரலில் சிறு துள்ளலோடு "ஆஹாங்..ம்ம் ஆமா அப்போ நான் யாரு உனக்கு?" என்று கேட்க திருதிருவென முழித்தாள்.

என்ன சொல்வாள்..? தயக்கமின்றி சிவாவை அத்தான் என உறவாய் உரிமையாய் அழைக்க முடிந்தவளால் உரிமைப்பட்டவனை அழைக்க கூச்சம் தடுக்க தயங்கியல்லவா இருக்கின்றாள்.

அவள் முகம் பார்த்தே அவளை புரிந்து கொண்டவனாய் சிறு புன்னகையோடு
"சரி விடு அத்தான் பொத்தான் உறவுமுறையெல்லாம் இப்போதைக்கு வேணாம் இப்போதுலயிருந்து நாம ப்ரெண்ட்ஸ்ஆ இருப்போம் போகப்போக அத்தான் பொத்தான் ஆ மாறுவோம் சரியா?" என அவளை இலகுவாக்கிட வேகமாய் தலையசைத்தாள் வெண்மதி.

"சரி வேற ஏதாச்சும் வேணுமா?" எனக் கேட்க அவளோ "இன்னோரு ஐஸ்கிரீம் வேணும்" என கேட்டாள்.

"இன்னொன்னா..? நோ.. மழை நேரத்துல நிறைய சாப்டா கோல்ட் வரும்" என்றவனிடம் மறுப்பாய் தலையசைத்தவள் "எனக்கு கோல்ட் வரவே வராது ப்ளீஸ் வாங்கி தாங்களேன்" என்க.. அதை மறுக்க முடியாதவனாய் எழுந்து சென்றான்.

அவன் செல்ல சிவாவும் இவர்களை தேடி வந்திட மதியின் அருகே அமர்ந்தான்.
"வந்துட்டிங்களா சிவா அத்தான்" என்றவளின் அழைப்பில் முளித்தவன் பின் ஆச்சர்யத்துடன்
"அடப்பாருடா அத்தான் எல்லாம் சொல்றாங்க" என சிரித்தபடி கேட்க கௌசிக்கிடம் கூறியதையே இவனிடமும் கூற சிரித்தபடி தலையாட்டி வைத்தான்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கௌசிக்கும் வந்து சேர மூவருமாய் கடையை சுற்றினர்.
ஆண்கள் இருவரும் அவள் மறுக்க மறுக்க அவளுக்கென நிறைய பொருட்களை வாங்கி குவித்தவர்கள் மேலும் சில ஆடைகளை வாங்கிக் கொண்டு பர்சஸை முடிக்கும் போதே மதிய நேரமாகிட அங்கேயே மதிய உணவு உண்ண கடைக்குள் நுழைந்தனர்.

தங்களுக்குள் பேசி சிரித்தபடி அவளையும் தங்கள் பேச்சில் இணைத்து கொண்டு மூவருமாய் உணவை உண்ண கௌசிக்கிற்கோ ஏதோ உள்ளுணர்வு உந்த திரும்பியவன் பார்வை வட்டத்தில் வீழ்ந்தாள் அவள்.. நேஹா.

வெறுப்பைச் சுமந்த விழிகளோடு பொசுக்கும் பார்வை பார்த்து நின்றவளை அலட்சியமான பாவனையோடு நோக்கியவன் தன் பார்வையை விலத்திக் கொள்ள.. அதே நேரம் அவனிடம் ஏதோ பேச திரும்பிய சிவாவின் பார்வையும் அவளின் மீது வீழ இத்தனை நேரமிருந்த மகிழ்ச்சி மறைந்தவனாய் கோபம் குடியேற அவளை முறைத்தான் சிவா.

அண்ணன் தம்பி இருவரின் பார்வையையும் சளைக்காது எதிர் கொண்டவளோ வேகமாய் அவ்விடம் விட்டு நகர்ந்து செல்ல போகும் அவளை வாய்க்குள் திட்டிக் கொண்டவனாய் தன் உணவில் கவனமானான் சிவா.

நேரம் கடக்க மூவருமாய் வீடு திரும்பினர்..


வீட்டினுள் நுழைந்ததுமே சோபாவில் தொப்பென்று அமர்ந்த சிவாவின் அருகில் கௌசிக்கும் அமர மதியும் அங்கிருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் பார்வையோ நிறைந்து இருந்த பைகளிலே நிலைத்தது.
வேண்டாம் வேண்டாம் என்ற போதும் இத்தனை பொருட்களை வாங்கி குவித்திருந்த இருவரையும் பார்த்தவளுக்கோ தேவையில்லாது அவர்களுக்கு செலவை வைத்துவிட்டோமோ என்ற குறுகுறுப் உண்டாக தயக்கத்தோடு "எதுக்கு இப்போ இதெல்லாம் வாங்கினீங்க.." என்க.
"உனக்குத் தான் எங்களுடைய சின்ன கிப்ட்" என்றான் கௌசிக்.

எதற்கு கிப்ட் என்ற கேள்வி உதித்தாலும் அதை கேட்கத் தயங்கி அவளிருக்க கௌசிக்கோ தன் போனை அவளிடம் நீட்டினான்.
அவனைப் புரியாது பார்த்தவாறே அதை வாங்கியவள் விழிகளோ மகிழ்ச்சியில் மலர்ந்திட ஆனந்தமாய் இருவரையும் பார்த்தாள்.

"ம்ம் ..இதுக்கு தான் எங்களோட சின்ன சர்ப்ரைஸ் கிப்ட்..ஹெப்பி?" என்ற சிவாவிற்கு ஆனந்தமாய் தலையசைத்தவள் புன்னகையோடு "தைங்யூ" என்றாள் உள்ளார்ந்த மகிழ்வோடு.

அவள் மனம் விரும்பிய கனவு நிறைவேறுவதற்கான முதல் வெற்றியல்லவா இது..மனம் நிறைந்த மகிழ்வோடு அந்த நாள் முழுவதும் சந்தோஷமாய் கழிந்தது.
......
வேக எட்டுக்களுடன் அந்த நீதிமன்ற அறையை விட்டு வெளியேறிய விஷ்வாவின் முகத்திலோ சற்று முன் நடந்த வழக்கில் வெற்றியீட்டியதன் பலனாக சிறு வெற்றிப் புன்னகை குடிகொண்டிருக்க நிமிர்ந்த நடையுடன் அங்கிருந்து வெளியேறியவனிடம் எதிர்ப்பட்ட "கங்கிராட்ஸ் விஷ்வா எப்போவும் போல இப்போவும் திறமையா வாதாடினீங்க" என தங்கள் வாழ்த்தை தெரிவித்த அனைவருக்கும் தலையசைத்து நன்றியை தெரிந்தவனாய் தன் காரை நோக்கி சென்றவன்.. காரில் ஏறி அமரவும் அவன் அழைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது..
போன் திரையில் தெரிந்த தங்கையின் பெயரில் அவன் புன்னகை மேலும் விரிய அழைப்பை ஏற்றவன் பேசும் முன்னே அவனை இடையிட்டு கோபமாய் ஒலித்தது மறுபுறம்.

"அண்ணா..என்ன பண்ணிட்டு இருக்க..இங்க என்னெல்லாமோ நடக்குது ..நீயென்னடாண்ணா அத பத்தி கவலையே இல்லாம இருக்க" என தலை வால் புரியாது காட்டுக் கத்தலாய் கத்தியவளின் கத்தலில் கண்களை மூடித் திறந்தவன் தங்கையின் பதற்றம் எதனால் என அறியாது அதை அறிந்து கொள்ள எண்ணியவனாய்.
"ஹேய் நேஹா ரிலாக்ஸ்.. இப்போ என்னாச்சு? எதுக்கு இந்த கோபம்? முதல்ல அத சொல்லு" என அவளை அடக்கியவன் அவள் கோபத்திற்கான காரணத்தை கேட்க..

அதில் மேலும் கோபம் ஏறியவளாய்.
"என்ன ஆச்சா நாம யாரை அவமானப்படுத்தி அழிக்க நினைச்சோமோ அவன் இங்க ஒருத்தி கூட கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கான் கூடவே அவன் தம்பி வேற அண்ணணும் தம்பி அவ்வளவு சந்தோஷமா இருக்கானுங்க." என பொறாமையில் பொங்கி விழுந்த அவள் வார்த்தைகளை உள்வாங்கியவன் அவள் யாரை கூறுகின்றாள் என்பது புரிந்த நொடி முகம் இறுக..
"என்ன சொல்ற? என்ன நடந்ததுனு தெளிவா சொல்லு?" என அழுத்தமாய் கேட்டதும் அனைத்தையும் அவனிடம் ஒப்புவித்தாள்.

"ம்ம் இப்போ என்ன பண்ண சொல்ற..அது தான் அவனுக்கும் நமக்குமான கணக்கு தீர்ந்திடுச்சே இன்னும் இன்னும் எதுக்கு அவன சீண்டனும்" அழுத்தமாய் மிக மிக அழுத்தமாய் வந்த அவன் வார்த்தைகளில் மறுபுறமோ மேல் மூச்சு கீழ் மூச்சு இழுக்க கோபத்தில் நின்றாள் நேஹா.

அவள் கோபம் புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாதவன்.
"இங்கப் பாரு நேஹா ..அவங்க சேப்டர் எப்போவோ முடிஞ்சிது இனி நமக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. இத முதல்ல உன் மனசுல பதிய வெச்சிக்கோ இனி தேவையில்லாம அவங்க லைப் பத்தி நீ யோசிக்க தேவையில்லை.." என கண்டிப்பாய் ஒலித்தவன் குரலில் சில நொடி மௌனம் காத்தவள் பின் அவனை விட அழுத்தத்தோடு ..
"அப்போ அந்த குடும்பத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லயாண்ணா ..அப்போ எதுக்கு அந்த வீட்டு பொண்ணோட உறவ முறிச்சிக்காம இருக்க..அத்துவிட வேண்டியது தானே" என்றதில் ஓர் நொடி அதிர்ந்தவன் கணநொடியில் தன்னை மீட்டுக் கொண்டவனாய் "தட்ஸ் மை பெர்சனல்.." என ஒற்றை வார்த்தையில் அவளை எட்டி நிறுத்திட ..இங்கு இவள் இதழ்களோ இகழ்ச்சியாய் வளைந்தது.

"நீ மாறிட்டண்ணா.. நீ முன்ன மாதிரி இல்ல..உனக்கு உயிர் கொடுத்த அப்பா ..கூடப்பிறந்த தங்கச்சிய விட உன் காதல் பெருசா போகிடுச்சுல.. சரி நீ உன் வாழ்க்கையை பாரு நானே தனியா என் அப்பாக்காக போராடுறேன்" என கலங்கிய குரலில் கோபமாய் உரைத்தவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
தங்கையின் குற்றச்சாட்டில் அழுத்தமாய் கண்மூடிக் கொண்டவன் மனதின் அடியாழத்தில் புதைந்திருந்த காதல் வடுக்கள் கிளறிவிட்டிருக்க.. சொல்லொண்ணாத் துயரம் மனதை அழுத்த அவன் மூடிய விழிகளுக்குள் கண்ணீர் கரையோடும் விழியோடு வெறுப்பை சுமந்து தன்னை பார்த்து நின்ற பெண்ணவளின் தோற்றம் தோன்றி மறைந்திட பட்டென்று விழி திறந்தவன் கண்களோ கோவைப்பழமாய் சிவந்து அவன் மனதின் வெம்மை எடுத்துக் காட்டியது.


புதைக்கப்பட்ட அவன் காதலோடு பல ரகசியங்கள் வெளிகொண்டு வரவே அடுத்த இரு தினங்களில் தன் சொந்த ஊர் நோக்கி மதியையும் சிவாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தான் கௌசிக் கிருஷ்ணா.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 12



பனி மூட்டம் சூழ்ந்த ரம்யமான காலை நேர வேளையில் கொடைக்கானல் பயணித்த வண்டியின் ஜன்னலோரமாய் வெளியே தெரிந்த அழகிய காட்சிகளை தன்விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டு அந்த நேர இனிமையினை ஆழ்ந்து ரசித்தாள் வெண்மதி.


தன் முகத்தில் வந்து மோதிய குளிர்ந்த எதிர்காற்றினால் சிவந்திருந்த கன்னத்தில் கைகளை தேய்த்து சூடேற்றி வைத்துக் கொண்டவளுக்கோ இந்த இனிமையான பயணம் முடிவடையவே கூடாது என்றெண்ணம் உதித்திட
அந்த இனிமையை ரசித்துக் கொண்டே இருந்தவளுக்கோ அவர்களது வண்டி அரண்மனை போன்றமைப்பிலிருந்த வீட்டினுள் நுழைவதைக் கண்டு விழிகள் விரிந்திட பார்த்திருந்தாள்.

வண்டியோ வீட்டின் முன் போர்டிகோவில் நிற்க அதிலிருந்து கௌசிக் சிவா இருவரும் முதலில் இறங்க அவர்களைத் தொடர்ந்து தயக்கத்தோடு இறங்கியவள் அவ்வீட்டின் தோற்றத்தைக் கண்டு அச்சம் மேலிட தன்னருகே நின்றவனை ஒட்டி நின்றாள்.

தன்னை நெருங்கி நின்றவள் புறம் திரும்பிய கௌசிக்கின் பார்வையோ அவள் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு கொள்ள..ஆறுதலாய் அவள் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டவனாய் அவளை அழைத்துக் கொண்டு முன்னே நடந்தான்.

பொம்மை போல அவன் இழுக்கும் திசை நகர்ந்தவளுக்கோ ஆள் அரவம் இல்லாது அமைதியாய் இருந்தது கண்டு ஏதோ பேய் பங்களாவைப் பார்ப்பதைப் போன்ற ஒரு பயம் தொற்றிக் கொள்ள தன்பிடியில் அவளறியாமலே இறுக்கத்தைக் கூட்டினாள்.

தன் கையில் உணர்ந்த இறுக்கத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தவன்.. விழிகள் அங்கும் இங்கும் அலைபாய நின்றிருந்தவளை நெருங்கி "ஹேய் ரிலாக்ஸ் இப்போ எதுக்கு இந்த பதட்டம் ம்ம்?" என ஆறுதலாய் கூறிட..அதற்கு என்ன சொல்வது என தெரியாது அமைதியாய் நின்றிருந்தவளை இயல்பாக்கும் பொருட்டு சிவாவோ
"மதி நீ பயப்படுற அளவுக்கு இங்க பேயோ பிசாசோ இல்லமா..அதுக்கும் மேல ரத்தத்தை ஸ்ட்ரோ போட்டு உறிஞ்சுற ரத்தக் காட்டேறிங்க தான் இருக்காங்க" என சிரிப்போடு கூறியவனை கௌசிக்கோ கண்டிப்பான பார்வை பார்த்து வைக்க கப்பென்று வாயை மூடிக் கொண்டான் சிவா.

"இங்கப் பாரு மதி இங்க இருக்குற எல்லாருமே..உன் சொந்தங்க தான் அத மனசுல ஏத்துக்கிட்டு தயக்கம் இல்லாம உள்ளே வா" என்றவனின் அழுத்தமான வார்த்தைகளில் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் பறந்தோடிட அவனோடு இணைந்து வீட்டினுள் நுழைய அவர்களை தடுத்தது ஒரு குரல்.

அந்தக் குரலில் ஆண்கள் இருவரும் புன்சிரிப்புடன் குரல் வந்த திசை நோக்க மதியும் திரும்ப அங்கோ
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஓர் பெண்மணியோடு ஓர் இளம் பெண்ணும் முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு கையில் ஏந்திய ஆரத்தித் தட்டுடன் இவர்களை நோக்கி வந்தனர்.

"அடடே அண்ணா இங்க பாரு நம்ம வீட்டு வானரத்துக்கு இன்னிக்கு கால் முளைச்சு நடந்து வருது" என தாயோடு இணைந்து அமைதியாய் தங்களை நோக்கி வந்த தன் செல்லத் தங்கையை சீண்டிவிட்ட சிவாவோ அவளை பார்த்து பழிப்புக் காட்டிட.. அண்ணணின் சீண்டலில் பொங்கியெழுந்தாள் திவ்யா..

"அண்ணா..இங்கப் பாரு இவன " என சிணுங்கிக் கொண்டே கௌசிக்கிடம் முறையிட அஅவனோ சிரிப்போடு தங்கையை அணைத்துக் கொண்டவன் புன்னகையோடு "எப்பிடியிருக்கடா திவி குட்டி" என்றான் கனிவு மீதுற.

"நான் ரொம்ப நல்லா இருக்கேன்ண்ணா..உன் மேல கோபமாவும் இருக்கேன்" என்றவளின் தலையை வருடியவன் "என்ன திவி என் மேல கோபப்படமாட்டா" என்று பாசத்தோடு கூறிட அவளும் தலையாட்டி அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

தன் பிள்ளைகளின் ஒட்டுதலை முகம் கனிய பார்த்து நின்ற கமலமோ தன் மூத்தபிள்ளையின் அருகே சிறுபிள்ளையாய் மிரண்டு பார்த்திருந்த தன் மருமகளையும் கனிவோடு நோக்கியவர்.. இருவரையும் நிற்க வைத்து ஆரத்தியை சுற்றி நெற்றியில் திலகமிட்டு வாஞ்சையாய் பெண்ணவள் முகம் வருடி "மகாலஷ்மி மாதிரி இருக்கடாமா" என்றார்.

"ஆமா அண்ணி ரொம்ப அழகா இருக்கிங்க" என தாயோடு இணைந்து கூறிய திவ்யாவும் மதியின் கையை பற்றிக் கொள்ள ..அவ்விருவரின் அன்பிலுல் இத்தனை நேரமிருந்த புது இடம் புது மனிதர்கள் என்ற ஒதுக்கம் அகன்றவளாய் புன்னகைத்தாள் வெண்மதி.

பெண்கள் மூவரின் முகம் காட்டிய புன்னகையை ரசித்துப் பார்த்த கௌசிக்கின் பார்வையோ இன்னும் யாரோ ஒருவரை எதிர்பார்த்து வீட்டினை அளந்து பின் தாய்யிடம் தன் பார்வையை திருப்பியவனாய் அவரை அணைத்து விடுவித்தவன்.
"எப்பிடிமா இருக்கிங்க" என்க.

மகனின் கேள்வியில் அவன் தலை கோதியவர் "எனக்கு என்ன கண்ணா நல்லா இருக்கேன்" என்றவரின் வார்த்தையில் இருந்த உண்மை அவர் கண்ணில் இல்லாதிருப்பதைக் கண்டு கொண்டவன் ஆறுதலாய் அன்னையை அணைத்து "இனி எல்லாமே சரியாகிடும்மா" என மனதோடு கூறிக் கொண்டான்.

மகன் மருமகள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்ற கமலமோ சாமியறையில் மதியை விளக்கேற்றச் சொல்ல அவளும் அமைதியாய் சாமியை வணங்கி விளக்கேற்றி முடித்து தம்பதி சகிதமாய் அவர் காலில் வீழ்ந்து ஆசி வாங்கிட இருவரையும் மனம் நிறைந்து வாழ்த்தினார்.

அனைவரும் ஹாலிற்கு வந்து சேர அங்கோ தங்களைத் தவிர யாருமே இல்லாதிருப்பதைக் கண்ட கௌசிக்கின் இதழ்களோ கேலியாய் சிரித்துக் கொண்டது.

"கௌசிக் கண்ணா முதல்ல சாப்டுடு அப்புறம் மதிமாவ அழைச்சிட்டு ரூமுக்கு போப்பா" என்றவர் மற்ற இருவரிடமும் "எல்லாரும் ஒன்னா இருந்து சாப்டலாம் வாங்க" என அழைத்துவிட்டு திரும்பியவர் பார்வையோ மாடிப்படியில் மார்பிற்குக் குறுக்கே கைகட்டி நின்றவரின் தோரணை கண்டு சற்றே தேங்கி பின் தன் மகன் புறம் பார்வையை திருப்பினார்.

தாயின் பார்வையை உணர்ந்த கௌசிக்கோ சற்றே தன் பார்வையை உயர்த்தியவன் மேலிருந்து தன்னையே உறுத்து பார்த்து நின்றவரைக் கண்டு இதழ்கள் இரகசியமாய் புன்னகைத்திட.. தங்கையோடு பேசிக் கொண்டிருந்த மதியின் தோள்வழியே கையிட்டு அணைத்துக் கொண்டவன் அவரை நோக்கி மாடியேறினான்.

திடீரென அவன் கையிட்டு அழைத்து சென்றதில் மதியோ சற்றே தடுமாறியவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவனோடு குனிந்த தலையோடு மேலேறிச் சென்றவள் கணவனின் "ஹலோ ஸ்வீட் ஹார்ட்" என்றழைப்பில் விழுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவனோ கண்ணில் கூத்தாடும் குறும்புப் புன்னகையோடு எதிரே பார்வையை பதித்திருக்க அப்போது தான் தானும் எதிரே பார்வையை பதித்தவள் அங்கே நின்றிருந்தவரின் தோற்றத்தில் உள்ளம் அதிர விழிகள் தெரித்திட அதிர்ச்சியாய் பார்த்தாள்.

தான் காண்பது கனவா நனாவா இது உண்மை தானா என அதிர்ந்து நின்றவளுக்கோ தலை சுற்றுவது போலிருக்க பற்றுகோலாய் தன்னருகே நின்றவனின் கைசந்தை பற்றிக் கொண்டாள்.

அவளைத் தாங்கலாய் அணைத்துக் கொண்டவன் பார்வை அப்பொழுதும் அகலாது அவரிலிலே பதிந்திருந்தது.

சிறு புன்னகையோடு அவரை நோக்கிச் சென்றவன் "ஹலோ ஸ்வீட் ஹார்ட் .. மீட் மை வைப் மிஸிஸ் வெண்மதி கௌசிக் கிருஷ்ணா" என ஒவ்வொறு வார்த்தைகளையும் அழுத்தமாய் கூறிட அவனைப் பார்த்து நின்றவரின் முகத்திலோ கோபம் எகிறியது.

அவர் முகம் காட்டும் கோபத்தை சிரிப்புடன் பார்த்தவன் பின் தன்னருகே தன்னை அணைத்தவாறே அதிர்வும் திகைப்புமாய் விழிகள் கலங்க தன்னெதிரே நின்றவர் மீது பார்வையை பதித்திருந்தவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன் "மதி இவங்க என்னோட அத்தை பூரணிம்மா.. உனக்கு அம்மா" என்ற வார்த்தையில் சட்டென ஒரு துளி விழி நீர் அவள் கன்னத்தை நனைத்திட அவனை அதிர்ந்து பார்த்தாள்.

"அ..அம்மா" என அதிர்வோடு இதழ் நடுங்க கேட்டவளிடம் "ஆம்" என தலையசைத்தவன் தங்களையே புருவம் சுருங்க பார்த்து நின்றவர் புறம் திரும்பியவனாய் "என்ன அத்தம்மா உங்க பொண்ணு மாப்பிளையோட கல்யாணம் பண்ணி வந்திருக்கா..ஆசிர்வாதம் பண்ண மாட்டிங்களா?" என கேட்டதும் இல்லாமல் மதியோடு அவர் காலைத் தொட்டு எழுந்தவனை முடிந்த மட்டும் முறைத்தவர் அடுத்த கணம் தன் கழுத்தில் தொங்கிய முத்துக்கள் பதித்த மாலையை பெண்ணவள் கழுத்தில் போட்டுவிட்டவர் அவள் தலை வருடி "நல்லா இரு" என்றுவிட்டு வேகமாய் அங்கிருந்து விலகிச் செல்ல..
அவரது செய்கையில் மனநிறைவோடு புன்னகைத்தனர் அனைவரும்.

மதிக்கோ கண்முன்னே இருக்கும் உறவை நம்பவும் முடியாது நம்பாமல் இருக்கவும் முடியாது குழப்பம் சூழ உடல் தளர்ந்து நின்றாள்.
தன் அணைப்பிலே அவளை உணர்ந்தவன் ஆறுதலாய் அவள் தோள் தட்டிட அவனை கலங்கிய விழியோடு நோக்கியவள் "அ..அவங்க" என ஏதோ சொல்ல முயல அவள் உதட்டில் விரல் வைத்து அவளைத் தடுத்தவன்.

"எத பத்தியும் இப்போ பேச வேணாம் மதி..பிறகு பேசலாம்.. இப்போ வா" என அவளை அழைத்துக் கொண்டு கீழிறங்கிச் சென்றான்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க கௌசிக் சிவா வெளியில் செல்ல கமலம் மதியை கௌசிக்கின் அறையில் தூங்குமாறு திவ்யாவுடன் அனுப்பி வைத்தார்.

திவ்யாவுடன் அமைதியாய் கௌசிக்கின் அறைக்குள் நுழைந்தவளுக்கோ எதிலுமே கவனைத்தை பதித்திட முடியவில்லை.. தன்னருகே பேசிக் கொண்டிருந்த திவ்யாவின் பேச்சுக்கு மட்டும் தலையசைத்து புன்னகைத்தவள் மனதிலோ ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும் படை சூழ பொம்மையென அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் அவளோடு பேசிய திவ்யாவும் அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிட இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரோ கன்னம் தாண்டி வழிந்தோடியது..

"அம்மா.. அம்மா.." என்ற வார்த்தையே ஜெபம் போல அவள் மனது அரற்ற நிஜம் எது நிழல் எது என புரியாத மனநிலையில் சிக்கிக் கொண்டாள் பெண்ணவள்.


......

"இப்போ தானே அண்ணா வந்து இருக்கோம் அதுக்குள்ள இவ்வளவு அவசரமா எங்கே போறோம்.. என்ன வேலை" என வந்ததுமே தன்னை அழைத்துக் கொண்டு எங்கோ அழைத்துச் செல்லும் அண்ணணின் நடவடிக்கை புரியாதவனாய் கேள்வியால் அவனை துளைத்தான் சிவா.

அவனது கேள்விகளுக்கு பதிலெதும் கூறாதவனாய் இதழ் குவித்து விசிலடித்தவாறே தன் கைகளில் வண்டியை பறக்கவிட்டவனின் செய்கையில் குழம்பியவன் மீண்டும் தன் கேள்வியை தொணதொணக்க அவன் தொல்லை தாங்காதவனோ
"டேய் சிவா கொஞ்சம் நேரம் உன் திரு வாய மூடிக்கிட்டு வாடா" என அலுப்போடு கூறினான் கௌசிக்.

"ம்க்கும் ரொம்பத் தான் போடா.." என அவன் அலுப்பில் முறுக்கிக் கொண்டவன் பாதையில் கவனத்தை பதிக்க அது போகும் திசையை அறிந்தவன் விழிகளோ தெறித்து விழும் அளவிற்கு விரிந்தது.


"டேய் இப்போ எதுக்கு இந்த வழில போற..ஒழுங்கா வண்டிய திருப்புடாண்ணா.." என தன்னை முறைத்துக் கூறியவனை பார்த்து சிரித்தான் கௌசிக்.

அண்ணணின் சிரிப்பின் அர்த்தம் அறிந்தவன் பல்லைக் கடித்தவாறே "வேணாண்ணா அவகிட்ட சிக்கினேன் அப்புறம் உன் தம்பிக்கு நீ மலர் மாலை தான் போடனும்" என விளையாட்டாய் கூற அவன் தலையில் தட்டியவன் முறைப்புடன் "வாய மூடு" என தம்பியை கடிந்து கொண்டான்.

"அதான் மஞ்ச தண்ணி தெளிச்சு பழி கொடுக்க கூட்டி வந்தாச்சுல அப்புறம் என்ன பாசம் வேண்டி கிடக்கு. நீ நடத்து ராசா நடத்து" என சிரித்தவாறே கூறியவனின் கன்னம் கிள்ளி
"தட்ஸ் மை போய்" என்றான் கௌசிக்.


அவன் செய்கையில் உதட்டை சுழித்தவன் வண்டி நின்ற இடம் கண்டு இத்தனை நேரமிருந்த முறைப்பு காணமல் போக கண்ணில் ஆர்வம் குடியேற விரைந்து காரை விட்டு இறங்கினான்.

இருவரும் இணைந்து அவ் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தனர்.
கதவு திறக்கப்படும் சத்தத்தில் ஆர்வமாய் பார்த்த சிவாவிற்கோ புஷ்ஷென்றானது தன்னெதிரே நின்றவரைக் கண்டு.

முகம் விழுந்து சோகமாய் நின்றவனை பார்த்து சிரித்த கௌசிக்கோ
"சோ சேட் வட போச்சே பியூட்டி தரிசனம் எதிர்பார்த்த என் செல்லத்துக்கு பாட்டி தரிசனம் தான் கிடைச்சியிருக்கு" கேலியாய் தம்பியை சீண்டிட அதில் நிமிர்ந்தவன் அவனை முறைத்தான்.

வாசலில் நின்ற இரு ஆண்களையும் மாறி மாறி பார்த்த அந்த வயதான பாட்டியோ "தம்பிங்களா யாரு வேணும் உங்களுக்கு" என தன் கேள்வியை முன்வைத்திட.. அதில் பார்வையை அவர் பக்கம் திருப்பினர் இருவரும்.

"பாட்டி சிவாங்கி இருக்காங்கலா?"

"ஆமா தம்பி நீங்க யாரு? பாப்பாவோட தோஸ்துங்களா பாப்பாவையா பார்க்க வந்திங்களா?" என்றவரிடம் ஆமென்று தலையசைத்து கூறிட இருவரையும்
உள்ளே அழைத்து அமர வைத்தார்.

இருவரின் பார்வையும் அவளைத் தேடிட அதை உணர்ந்தவரும் "பாப்பா கோயிலுக்கு போய் இருக்கு தம்பி.. இனி வர்ற நேரம் தான்" என்றார்.

அதில் சிவாவோ விழிகள் விரிய "என்னது கோயிலுக்கு போய் இருக்காளா?" ஆச்சர்யமாய் கேட்டான்.

அவனின் அதிர்ச்சியில் அவன் புறம் குனிந்த கௌசிக்கோ கிசுகிசுப்பாய் "அதிசயம் ஆச்சர்யம்" என்றிட சிவாவும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

"என்ன தம்பிங்களா வந்ததுலயிருந்து உங்களுக்குளே பேசிக்கிறிங்க." என சந்தேகமாய் இருவரையும் பார்க்க அதில் சிவாவோ இளிப்புடன் "அதெல்லாம் ஒன்னுமில்லை பாட்டி சிவாங்கி கோயிலுக்கு போனதா சொன்னீங்கள்லா அதான் கொஞ்சம் ஸாக் ஆகிட்டோம்" என்றான்.

"அது உண்மதான் தம்பி நான் வேலைக்கு சேர்ந்ததுல இருந்து இந்த பாப்பா கோயிலுக்கு போயி பார்த்ததே இல்ல ஆனா இப்போ கொஞ்ச நாளா தான் கோயிலுக்கு போகுது. நானும் ஆச்சர்யபட்டேன் குழந்தைக்கு அந்த கடவுள் பக்தியே கொடுத்துட்டானு.. ஆனா அந்த பாப்பா அப்பிடியில்லைனு சொன்னிக்கே ஒரு பதில் அதை தான் என்னால தாங்க முடியலபா" என்றவரை இருவரும் கேள்வியாய் பார்க்க அவரோ அவள் கூறிய வார்த்தைகளை கூற ஆரம்பித்தார்.

"நான் நல்லது வேண்டிக்க போகல பாட்டி ஒருத்தன் நாசமா போகனும்னு வேண்டிக்கப் போறேன் அவன் மட்டும் என் கைல மாட்டாம காப்பத்திடு கடவுளே அப்பிடியில்லைனா நானே என் கையால அவனுக்கு சமாதி கட்டி.. நான் ஜெயிலுக்கு போற மாதிரி ஆகிடும் அதனால என்னை காப்பாத்துனு வேண்டிக்க போறேன்னு.. சொன்னிச்சு தம்பி" என பெருமூச்சோடு கூறியவரை பார்த்து சிவாவோ வாய்பிளக்க கௌசிக்கோ வாய்விட்டே சத்தமாய் சிரித்திருந்தான்.

"பாவம்பா அந்த பையன்.. கடவுள் தான் பாப்பா கண்ணுல படாம காப்பாத்தனும்" என் கடவுளிடம் வாய்விட்டு கோரிக்கை வைத்தார்.

பட்டென்று தன் இருக்கையிலிருந்து எழுந்த சிவாவோ தன்னை பார்த்து சிரித்தவனை நோக்கி முறைத்துவிட்டு பாட்டியிடம் திரும்பியவன் "பாட்டி எனக்கு முக்கியமா ஒரு வேலையிருக்கு.. நான் போய்ட்டு அப்புறமா வரேன்" என கூறி விறுவிறுவென வெளியேற அதே சமயம் உள்ளே வந்தவளோடு மோதி நின்றான்.

"அடடே இந்தா பாப்பாவே வந்திடுச்சே.. இருந்து பார்த்து பேசிட்டே போங்க தம்பி" என்றவர் சிவாங்கியிடம் "பாப்பா அப்போ நான் கிளம்புறேன்" என்றவர் அவளிடம் விடைபெற்று கிளம்பிச் சென்றார்.

புது மனிதர்களை பார்க்கும் பாவனையாய் தன் முன்நின்ற இருவரையும் பார்த்தவள் பார்வையோ அவன் ஒருத்தனை மட்டும் முறைத்தது போலிருக்க அவசரமாய் கௌசிக் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

"யாரு வேணும் உங்களுக்கு..?" என்றவளின் வார்த்தையிலிருந்த கோபம் புரிந்தவனாய் வேகமாய் அவளருகே சென்ற கௌசிக்கோ "ஸாரிடா" என மன்னிப்பை கேட்டவாறே அவள் தலையில் கரம் பதித்த அடுத்த கணம் அவனைக் கட்டிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் பெண்ணவள்.

அவளின் அழுகை ஆண்மகன்கள் இருவரதும் மனதை கலங்கச் செய்தது. கௌசிக்கோ அவள் தலை வருடியவன் அவள் முகம் நிமிர்ந்தி "ஹேய் சிங்கி.. எதுக்கு இந்த அழுகை" என்றான்.

"ஏன் உங்களுக்கு தெரியாதா அத்து? எதுக்கு அழுறன்னு.. இரண்டு பேரும் என்ன தனியா தவிக்க விட்டுடு உங்க வேலைய பார்க்க போய்ட்டிங்கல்ல.. இப்போ மட்டும் எதுக்கு வந்திங்க" என சிலிர்த்துக் கொண்டவளின் வார்த்தையில் தெரிந்த ஏக்கத்தில் அவளை ஆறுதலாய் தட்டிக் கொடுத்தவன்
"உனக்குத் தான் தெரியும்லடா என் நிலைமை.. எல்லாமே தெரிஞ்ச நீயே இப்பிடி பேசலாமா" என்றதிலிருந்த உண்மை புரிந்தவளாய் மௌனித்தாள்.

இருவரை பார்த்து நின்ற சிவாவோ "ஹலோ பாசமலர்களே நானும் இங்க தான் இருக்கேன்.. என்னையும் கொஞ்சம் கவனிக்கலாம்ல" என தானே வாயைக் கொடுத்து சிக்கிக் கொள்ள அவன் புறம் திரும்பியவள் அனல் பார்வை பார்க்க அதில் கப்பென்று அடங்கினான் சிவா.

"இது உனக்குத் தேவையா" என்ற நக்கல் பார்வை பார்த்து வைத்த கௌசிக்கோ அவளோடு அமர்ந்து பேச்சினை ஆரம்பித்தான்.
பரஸ்பர நல விசாரிப்புக்கள் செல்ல சண்டைகள் சமாதானங்கள் அனைத்தும் முடிய கௌசிக் மதியை பற்றியும் நடந்த அனைத்தையும் கூறியவன் சிவாங்கி செய்ய வேண்டியவற்றையும் கூறி முடித்தான்.

"நீங்க கவலப்படாதிங்க அத்து நான் எல்லாத்தையும் பெர்பெக்ட் ஆ செய்து முடிச்சிடுவேன். சொன்ன டைம்க்கு நீங்க சொன்ன எல்லாமே உங்ககிட்ட வரும்" என்றவளின் தலையை வருடிவிட்டு எழுந்து கொண்டவன் அவளிடம் விடை பெற்று வெளியேற அவனோடு ஒட்டுண்ணியாய் வெளியேற முனைந்தவனின் சட்டைக் காலரை பின்னிருந்து பற்றியிழுத்திருந்தாள் சிவாங்கி..

"ரைட்டு நமக்கு சங்கு ரெடி" என முணுமுணுத்தவன் அவளை திரும்பி அப்பாவியாய் பார்த்து வைக்க அவளோ அவனை முறைத்தவள்
"அத்து எனக்கு ஒரு பழைய கணக்கு பாக்கி இருக்கு அதை முடிச்சுட்டு அனுப்புறேன்.. நீங்க போங்க" என கௌசிக்கிடம் கூறிட அவனும் தலையசைத்தவன்
"ஆல் தெ பெஸ்ட் தம்பி பையா" என அவனிடம் கூறிவிட்டு சிரிப்புடன் வெளியேறினான்.

"டேய் டேய் அண்ணா பாவி நில்லுடா? இப்பிடி தனியா கோர்த்துவிட்டு போறியடா" எனக் கத்தியவன் கத்தல்கள் அனைத்தும் காற்றோடு கரைந்து தான் போனது.

தன்னை சிக்க வைத்து சென்றவனை முடியும் மட்டும் மனதோடு திட்டிக் கொண்டவன் மெல்லமாய் தன் பார்வையை திருப்பி அவளை பார்த்திட.. சூலாயுதம் இல்லாத காளியாய் அவனை முறைத்து நின்றவள் தோற்றம் கண்டு மனதிற்குள் அலறினான் அவன்.

"அய்யெய்யோ டேய் சிவா செத்தடா மவனே" என்ற மனதின் அலறலோடு அவளை பார்த்து நின்றவனை வெறித்துப் பார்த்தவள் முகமோ நொடியில் கசங்கிட கலங்கிய கண்களை அவனுக்கு காட்ட பிடிக்காதவளாய் வேகமாய் அங்கிருந்து நகர்ந்தாள்.

நொடி நேரம் என்றாளும் தன்னவளின் கலங்கிய விழிகளை படம்பிடித்துக் கொண்டவனோ வேகமாய் அவள் பின்னே சென்று அவள் வழி மறித்து நின்று
"பப்பு ஸாரிடி" என்ற வார்த்தையை முடிக்கும் முன்பே பட்டென்று ஓங்கி அறைந்திருந்தாள்..

அதில் கன்னத்தை பொத்தி "ஸ்ஆ.. வலிக்குதுடி பப்பு" என பாவமாய் பார்த்தவனை தாவி அணைத்துக் கொள்ள ஆனந்தமாய் அவனும் அவளை இறுக்கியணைத்தான்.

நொடிக்கு நொடி கூடிய அவன் அணைப்பின் இறுக்கத்தில் திமிறியவள் "விடு.. விடுடா" என அவன் பிடியிலிருந்து நழுவ முயன்று தோற்றுத் தான் போனாள்.
"டேய் பொறுக்கி விடுடா" என்றவளாய் அழுத்தமாய் அவன் தோளில் பல்பதிய கடித்து வைத்தவள். வலியில் இளகிய நொடி நேரத்தில் அவன் அணைப்பிலிருந்து துள்ளி விலகியவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

வலித்த கரத்தை தேய்த்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன் விழிகளோ அவளிடம் மன்னிப்பை யாசித்திட அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு நகர அவளிடம் கெஞ்சலில் இறங்கினான் காக்கிச் சட்டை காவலன்.

"பப்பு சாரிடி என் செல்லம்ல"

" இல்ல"

"என் கன்னுல"

"இல்ல"

"என் சிங்கி குட்டில"

"இல்ல இல்ல" என அவன் கெஞ்சலையெல்லாம் தூசு போல் தட்டியவளைக் கண்டு சிறு கோபம் முளைத்திட வேகமாய் அவளை இழுத்தவன் தன்னை முறைத்தவள் கன்னம் தாங்கி "என்னடி ரொம்ப பண்ற.. இப்போ இல்லன்னு சொல்லுடி பார்ப்போம்" என்றவன் அவள் பதில் பேசும் முன்பே அவள் இதழ்களை தன்னிதழ் கொண்டு அடைத்திருந்தான்.

அவன் முத்தத்தில் தினறியவள் சிறிது நேரம் அடங்கிப் போனாள்.
சிறு நிமிடம் கழித்து அவளை விடுவித்தவன் அவள் கண்களில் வடிந்த நீரை துடைத்து விட்டவாறே அவள் ஈரம் சுமந்த விழிகளில் முத்தமிட்டு
"ஸாரி பப்பு" என்றான் மனம் வருந்தி..

அதில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தவளை கண்டு முகம் வாடியவன்.
"உன்னை வேணும்னே அவோய்ட் பண்ணலடி எங்கள சுத்தியிருக்குற எல்லா பிரச்சனையும் சரியாகனும்.. அந்த பிரச்சனையால நீ பாதிக்கப்படக் கூடான்னு தான் உன்ன விட்டு விலகியிருந்தேன்" என்றவனை முடிந்த மட்டும் தன்னை கைகளால் மொத்தியவள் அவனை முறைத்துக் கொண்டே "அப்போ நான் யாரோவாடா.. உன் பிரச்சனை என் பிரச்சனைனு பிரிச்சு பேசுற நான் யாரோவா அப்போ" என அடித்தவள் அடிகளை சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டவன்.

"நீ யாரோ இல்லடி என் பொண்டாட்டி ..என் பொண்டாட்டிக்கு ஆபத்து வராம காப்பாத்துறது புருஷனோட கடமைடி" என கொஞ்சலாய்க் கூறி அவளை அடக்கினான் அந்தக் கள்வன்.

சிறிது நேரம் தன்னணைப்பில் அடங்கி நின்றவள் காதோரம் குனிந்தவன்
"பப்பு.." என்க அவளும் "ம்ம்" என்றாள்.

"ரொம்ப நாளாச்சு ஒன்னே ஒன்னு" என்றவன் கிசுகிசுப்பில் பட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்
"என்னது" என கேள்வியாய் கேட்டிட.

அவனோ கண்களை சுருக்கி கெஞ்சலோடு "ஒன்னே ஒன்னு தாடி" என அவளை நெருங்க விழிகள் விரிய பின்னகர்ந்தாள்.

"டேய் வேணாம் சொல்லிட்டேன் ஒழுங்கா ஓடி போயிடு" விரல் நீட்டி எச்சரித்தவளை விஷமப் புன்னகையோடு மேலும் நெருங்கியவன் நெருக்கத்தில் பட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.

கண்மூடி நின்றவள்ள் தவிப்பை நிதானமாய் ரசித்தவன் மூச்சுக் காற்று படும் தூரத்திற்கு நெருங்கி நுனி மூக்கு உரச காதோரம் குனிந்தவன் கிசுகிசுப்பாய் "ஒரு கப் சுடு தண்ணீ தாடி ..ரொம்ப நாளாச்சு உன்கையால குடிச்சு" என்றிட படக்கென்று விழி திறந்தவள் அதிர்ச்சியாய் "என்னது சுடு தண்ணீயா?" எனக் கேட்க..

அவனோ உதட்டுக்குள் சிரித்தவன் "ஆமா சுடு தண்ணீ தான்.. நீ தான் காபிங்குற பேர்ல சுடு தண்ணீ தருவியே அத தான் கேட்டேன்.. நீ என்ன நினைச்ச" என்றதிலே அவன் குறும்பு புரிந்தவள்.


"டேய் உன்ன.." என்ற கூவலோடு அவனிடம் பாய்ந்தவளின் பிடியில் சிக்காது சிரித்தவாறே ஓடினான் சிவா.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 13



சிவாங்கியிடம் பேசிவிட்டு வீடு நோக்கி வண்டியை செலுத்தியவன் மனமுழுவதும் மதியை பற்றிய எண்ணங்களே வலம் வந்தது.

இன்று விழிகளில் அத்தனை தவிப்போடும் கலக்கத்தோடும் தன்னை நோக்கி நின்றவள் பூமுகமே மீண்டும் மீண்டும் அவன் கண்ணில் தோன்றி மறைந்தது.

"எல்லா பிரச்சனைக்கும் கூடிய சீக்கிரமே முடிவு கட்றேன்" என மனதோடு சொல்லிக் கொண்டே வண்டியின் வேகத்தை அதிகரித்தவன் அடுத்த சிலநிமிடங்களில் வீட்டை அடைந்திருந்தான்.

வீட்டினுள் நுழையும் போதே வாசலில் நின்ற வண்டிகளைக் கண்டு கொண்டவனுக்கு இதழோரம் வளைந்திட"வர வேண்டியவங்க எல்லோரும் வந்தாச்சு போல" என எண்ணிக் கொண்டே தன் வேக எட்டுக்களுடன் வீட்டினுள் நுழைந்தவனை வரவேற்றது என்னவோ ஹாலில் நிறைந்திருந்த அவனின் குடும்பத்தவர்களே.

அனைவரையும் உதட்டில் பூத்த புன்னகையோடு பார்த்தவன் நடுநாயகமா வீற்றிருந்த அவரொருவரை மாத்திரம் இதழ் வளைத்து நக்கலாய் பார்த்து வைத்தான்.

அவன் பார்வையில் தெரிந்த நக்கலை புரிந்து கொண்டவரும் பல்லைக்கடித்து தன் கோபத்தை அடக்கியவர் அவனை சீண்டிவிடும் வேலையை செவ்வனே ஆரம்பித்தார் அவ்வீட்டின் மூத்த மருமகனும் பூரணியின் கணவருமாகிய மோகன்ராஜ்.

"அடடே வாப்பா கௌசிக் என்ன திடீர்னு இந்த ஊர் பக்கம்.. நீ வந்துட்டன்னு தகவல் வந்ததும் செஞ்ச வேலையெல்லாம் அப்பிடியே போட்டுடு உனக்காக ஓடி வந்திருக்கேன்.. சொல்லுப்பா என்ன விஷயம்? என்றவர் யோசனை பாவனையோடு "ஆமா நீ தான் ரோஷக்காரனாச்சே நீ எப்பிடி ஊர் பக்கம் வந்தே.. உங்கப்பா செஞ்ச காரியத்துக்கு நீங்க எல்லாரும் குடும்பத்தோட நாண்டுகிட்டு செத்துயிருக்கனும்.. ஆனா நீ புத்தியுள்ள பய புழச்சிகிட்ட.. அப்பனாவது சொப்பனாவதுனு எல்லாத்தையும் தூக்கி போய்ட்டு போனவன்.. திடீர்னு இங்க வந்து இருக்கேன்னா ஏதாவது விசயம் இல்லாமலா இருக்கும்.. என்னடா பாரி நான் சொல்றது சரி தானே" என விஷம் தேய்ந்த வார்த்தைகளை கொட்டித் தீர்த்தவர் இறுதியில் தான் பெற்ற மகனையும் கூட்டு சேர்த்திட..அப்பனுக்கு தப்பாத பிள்ளையாய் அவரின் பேச்சுக்கு ஆமாம் சாமி போட்டவன் கௌசிக்கை எள்ளலாய் பார்த்து வைத்தான் மோகன்ராஜ் மற்றும் பூரணியின் மூத்த புதல்வன் பாரி.

அவரின் பேச்சில் அழுத்தமாய் விழிமூடித் திறந்த கௌசிக்கின் பார்வையோ அங்கே குழுமியிருந்த தன் குடும்பத்தினர் மீது அழுத்தமாய் படிந்து மீண்டது.
அதிலும் இந்த பேச்சனைத்தையும் கேட்டும் கேளாதவர் போல சோபாவில் அமர்ந்திருந்த தன் சித்தப்பாகிய கோகுலகிருஷ்ணாவின் மீது அதிகமாகவே படிந்து மீண்டது.

தாங்கள் இத்தனை பேசியும் பதில் பேசாது மௌனித்திருந்தவன் மௌனத்தை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த எண்ணியவர்கள் வார்த்தையை வளர்க்கத் தொடங்கினர்.

"ஏன் மாமா அவங்க அப்பா நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தேடி தந்து இருக்காரு.. இப்போ மகனும் அப்பாவ போல ஏதும் பண்ணதான் ஒருத்திய கூட்டிட்டு வந்திருக்கான் போல இருக்கு" என்றவளை..

"காவேரி வாய மூடு.. இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு" என அதட்டிய ஆனந்தியோ கௌசிக்கின் புறம் திரும்பியவர் கவலையாய் அவனைப் பார்த்தார்.

அவனோ காவேரியை அழுத்தமாய் பார்த்தானே ஒழிய ஒருவார்த்தை பேசாது அமைதியாகவே நின்றவன் தன்னை கவலையோடு பார்த்த தன் சித்தியினை நோக்கி மென்னகை புரிந்தான் கௌசிக்.

"ஏம்மா தங்கச்சி இப்போ எதுக்கு மருமவள அதட்டுற .. அவ கேட்டதுல என்ன தப்பு இருக்கு .. சரியா தானே கேக்குறா?" என்றவர் கௌசிக்கிடம் "என்னப்பா நீ யாரோ ஒருத்திய கூட்டிடு வந்திருக்கியாமே..யாரது? எங்க இருந்து பிடிச்சிட்டு வந்த" என்றவர் அங்கே இவையனைத்தையுமே கேட்டு இறுக்கத்தோடு அமர்ந்திருந்த தன் மருமகன் திருவிடம் "மாப்ள உங்க ப்ரெண்ட் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் தானே.. நீங்களே கேட்டு சொல்லுங்க.. உங்களுக்காவது பதில் சொல்றானான்னு பார்க்கலாம்" என அவனை ஏற்றிவிட.. அவனை நிமிர்ந்து பார்த்த திருவோ தன்னை புன்னகையோடு பார்த்து நின்றவனை கோபக்கனலோடு நோக்கியவன் விருட்டென்று இருக்கையை விட்டெழுந்தவனாய் "மாமா ..எனக்கு இங்க யாரும் ப்ரெண்ட் இல்ல நான் இங்க உங்க மருமகன் மட்டும் தான்.." என்றவன் கோபத்தோடு அவ்விடம் விட்டு அகன்று சென்றான்.

கணவன் கோபமாய் எழுந்து சென்றதும் அவன் வீசிச் சென்ற வார்த்தைகளிலும் கலங்கி நின்ற நித்யாவோ மௌனப் புன்னகையோடு பார்த்து நின்ற தன் பாசத்துக்குரிய அத்தானை நோக்கி விழியிலே மன்னிப்பை யாசித்தாள்.

அதை உணர்ந்தவனாய் கண் மூடித் திறந்து அவளை சமாதானம் செய்தவன் மற்றவர்களிடம் திரும்பி தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவாறே அழுத்தமாய் மிக அழுத்தமாய் தன் பிடரி முடியைக் கோதிக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்று ஒற்றையாய் வீற்றிருந்த இருக்கையில் கம்பீரமாய் கால் மேல் காலிட்டு அமர்ந்து அவர்களை நோக்கி அழுத்தமான பார்வை பதித்திட.. அவன் ஒற்றைப் பார்வையில் இத்தனை நேரமிருந்த தைரியம் மாயமாகிட அவனை பார்த்தனர்.

அவர்கள் கண்களில் மின்னிய பயத்தை திருப்தியாய் கண்டு ரசித்தவன் இதழ் வளைய "என்ன மாம்ஸ் வரபேற்பெல்லாம் படு பயங்கரமா இருக்கு.. ம்ம் பரவால்ல நான் எதிர் பார்த்ததை விட செம்ம தில்லு தான் உங்களுக்கு.. ஐ ம் வெரி இம்ப்ரெஸ்ட்" என்றவன் பார்வையோ பாரியின் மேல் விழ அவனோ அவனைப் பாராது பார்வையை திருப்பிக் கொண்டான்.

"பாருங்க எல்லாம் மாறினாலும் இங்க ஒரு சிலது மட்டும் மாறுதே இல்ல மாம்ஸ்.. உங்களுக்கு ஜால்ரா போடுற என் அருமை மச்சான்.. புருஷனுக்கும் மாமனாருக்கு ஜால்ரா போடுற காவேரி அக்கா.. இடியே விழுந்தாலும் நான் வாயவே திறக்கமாட்டேங்குற என் அன்பான சித்தப்பா.. இப்பிடி ஒரு சிலதுங்க இன்னுமே மாறாமலே இருக்குது.." என போலியாய் பெருமூச்சுவிட்டவனின் கேலியில் அவர்களோ அவனை முறைத்துப் பார்த்தனர்.

"அப்புறம் மாம்ஸ் என்னவோ கேட்டிங்கல்ல என்ன விஷயமா வந்துயிருக்கேன்னு.. சொல்றேன் சொல்றேன் எதுக்கு இந்த அவசரம் சொல்றதுக்காகத் தானே நானே வந்து இருக்கேன்..ஆனா அத முழுசா இப்போ சொல்ல முடியாதே.. சில விருந்தாளிங்க வரவேண்டியிருக்கு அவங்க எல்லாரும் வந்தப்புறம் படத்த ஓடவிடலாம் ரைட்டா மாம்ஸ்." என்றவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தனர்.

"அப்புறம் இது என்னோட வீடு இங்க நான் எப்போ வேணா வரலாம் எப்போ வேணா போகலாம்.. அத கேட்க யாருக்குமே ரைட்ஸ் இல்ல.. அதிலயும் முக்கியமா நீங்க" என விரல் நீட்டி ராஜசேகரை சுட்டிக் காட்டி கோபத்தில் பொங்கியெழுந்தார்.

" என்னது நீ இந்த வீட்டுக்கு சொந்தக்காரனா? ஹா.. உங்கப்பா செஞ்ச காரியத்துக்கு உங்கள இந்த வீட்ல இருக்க வெச்சதே பெரிய விசயம் அதுல நீ வந்து உரிமை கொண்டாடுறீயா" எனச் சீறியவரை நக்கலாய் பார்த்தான்.

"மாமா கூல் இப்போ எதுக்கு கத்தி சும்மா பிபீய ஏத்திவிடுறீங்க காம்டவுன். எங்கப்பா தப்பே செய்தாலும் இது அவருக்கு சொந்தமான சொத்து.. என் தாத்தா வழில என் அப்பா உழைச்சு கட்டிக் காத்த சொத்து.. இதுல அவரு பெத்த பையன் எனக்கு இல்லாத உரிமையா.. வீட்டோட மாப்பிள்ளையா இங்க இருக்குற உங்களுக்கு கிடைச்சிடப் போகுது" நறுக்குத் தெறித்தாற் போல வந்து வீழ்ந்த அவன் வார்த்தைகளில் பொதிந்திருந்த நக்கலில் அவனை முறைத்தார்.

"என்னடா ரொம்பத் திமிறா பேசுற.. உங்கப்பா எப்போவோ இந்த சொத்துல பங்க எங்கம்மாக்கு எழுதி வெச்சிட்டாங்க .. அதெல்லாம் மறந்து போச்சா" என எகிறியவனை அமைதியாய் பார்த்தான்.

"சொத்துல பங்கு தானே மச்சான் கொடுத்திருக்கு.. என்னமோ முழு சொத்தையும் தூக்கி கொடுத்த போல பேசிட்டு இருக்க.." என்றான்.

"என்னப்பா கௌசிக் பொலீஸ்ஸா பெரிய பதவில இருக்குறோம்னு திமிறுல பேசுறீயா?" என்றவரை நோக்கி தலைசரித்து பார்த்தவன்.

"இது திமிறு இல்ல மாமா தைரியம் தன்னம்பிக்கை.. இதுக்கு பொலீஸ் பதவி தான் வேணும்னு இல்ல அது கூடவே பிறந்தது"

"உனக்கு பேசுறதுக்கு சொல்லியா தரனும்" என நொடித்துக் கொண்டவர் பார்வையோ மாடியிலிருந்து இறங்கி தன் மனைவியை கண்டு இத்தனை நேரமிருந்த கோபமுகத்தை மறைத்துக் கொண்டவர்.. சாந்தமான பாவனையோடு அவனை பார்த்து நின்றார்.

அவரின் முகமாற்றத்தை கண்டு கொண்டவனும் புரிந்து கொண்டவன் நக்கலான பார்வையோடு பார்த்திருந்தான்.

"வா பூரணி.. கௌசிக் வந்திருக்கானு நீ ஒரு வார்த்தை சொல்லலியே.. வேலைக்காரன் போன் போட்டு சொல்லித் தான் எங்களுக்கே தெரியும்.. அது தான் கோவிலுக்கு போன கோகுல் மாப்பிள்ளைக்கு தகவல் கொடுத்து எல்லாரையும் வரவழைச்சிட்டேன்" என்றவரின் பேச்சில் "நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை" என்ற மறைமுகமான குத்தலிருந்ததோ?

"சொல்ற அளவுக்கு இங்க யாரும் அவ்வளவு முக்கியமானவங்க வரலையே.." என்றவர் சளைக்காது அவருக்கு பதிலடி கொடுத்திட..
"ஆங் அது சரி தான்" என தலையசைத்து அசட்டு சிரிப்பை உதிர்த்தார் ராஜசேகர்.

"அம்மா இப்போ எதுக்கு இவன் இங்க வந்திருக்கான்.. அவன் வந்ததுமில்லாம கூட ஒருத்தியையும் கூட்டிட்டு வந்திருக்கான்.. ஏன் இதுக்கு முன்னாடி போன குடும்ப மானமெல்லாம் பத்தாதா ..இன்னும் இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் குழி தோண்டு புதைக்கப் போறானாமா? உங்க அண்ணன் பையன்" என காட்டுக் கத்தலாய் கத்திய பாரிக்கு பதிலுரைக்காதவர் பார்வையோ கௌசிக்கின் மீது அழுத்தமாய் பதிந்து "நீயே இதற்கான பதில் கூறு" என கட்டளை விதித்திட.. அதை உணர்ந்தவனும் அங்கே ஓரமாய் நின்றிருந்த தன் தங்கையை நோக்கி "திவி மதிய அழைச்சிட்டு வா" என்றதும் விரைந்து சென்றவள் மதியை அழைத்துக் கொண்டு கீழிறங்கினாள்.

ஏற்கனவே பல குழப்பத்துக்கு மத்தியில் தவித்திருந்த மதிக்கோ தற்போது அங்கே குழுமியிருந்தவர்களைக் கண்டு மேலும் மனதில் குழப்பங்கள் சூழ்ந்திட மிரண்ட விழியோடு தன்னருகே வந்த திவ்யாவின் கரங்களை அழுத்தமாய் பற்றிக் கொண்டு கீழிறங்கினாள்.

மிரண்ட பார்வையோடு இறங்கிய பெண்ணவளின் அமைதியான அழகில் அவளை பார்த்திருந்த ஆனந்தி நித்யா இருவரும் ஒருவரையொருவர் பார்த்து ரகசியமாய் புன்னகைத்தனர்.

தன்னருகே வந்து நின்ற மனைவியின் கரத்தை பற்றிக் கொண்டவன் தங்களை பார்த்து நின்றவர்களை நோக்கி "இவ என் மனைவி வெண்மதி கௌசிக் கிருஷ்ணா.. இந்த வீட்டோட மூத்த மருமகள்" என ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாய் கூறினான்.

"மனைவியா? நல்ல கதையால்ல இருக்கு..? எந்த கோவில்ல எந்த மண்டபத்துல? எந்த ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வெச்சு உங்க கல்யாணம் நடந்திக்கு.. ஒரு தாலி செயினை கழுத்துல கட்டிட்டா அது கல்யாணமாகிடுமா?" என நக்கலோடு வந்து வீழ்ந்த வார்த்தைகளில் அவரிடம் திரும்பியவன் நிதானமாய்..

"ஏன் ஒரு உயிர காவு வாங்கினது போதாதா?" என்றதில் சற்றே அதிர்ந்து அவனைப் பார்த்தவர் "என்ன உளறல்" என்பது போல அவனைப் பார்த்தார்.

அவனோ "இங்க எல்லாருக்கும் பொதுவா சொல்றேன் கேட்டுகங்க.. இவ தான் என்னோட மனைவி.. இந்த வீட்டோட மூத்த மருமக.." உரக்க கூறியவன் அனைவரையும் அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு மதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

போகும் அவனைப் பார்த்திருந்த ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு நிலையில் இருந்தது.


......

தன்னறைக்குள் வந்தவன் அவளை கட்டிலில் அமர வைத்து அவளுக்கு தண்ணீர் கொடுத்து சற்று அவளை ஆசுவாசப்படுத்தியவன் அவளையே பார்த்திருந்தான்.

அவள் முகத்திலிருந்தே அவள் பல குழப்பங்களில் சிக்கித் தவிக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.. எதுவென்றாலும் அவளே தன்னிடம் மனம் திறந்து கேட்கட்டும் என்றும் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

தண்ணீரைக் குடித்து முடித்தவள் தயக்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க..அவன் பார்வை தன்னில் நிலைத்திருப்பது கண்டு கேட்கலாமா? இல்லையா? என தடுமாறியவள் பின் ஒரு முடிவோடு தன் குழப்பங்களுக்கான விடையை அவனிடம் அறிய முயன்றாள்.

"உ..உங்ககிட்ட நான் சில விசயங்கள் கேட்கலாமா?" என தயக்கமாய் கேட்க சம்மதமாய் தலையசைத்தவன் கேளு என்பது போல் பார்த்திருந்தான்.

"இவங்க எல்லாம் யாரு? இவங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? அவங்க.. அவங்களுக்கும் எனக்கு என்ன உறவு? எனும் போதே அவள் கண்களோ கலங்கி கண்ணீரை வெளியேற்றியது.

அவள் கன்னம் தாங்கி தன் இரு பெருவிரல் கொண்டு அவள் கண்ணீரை துடைத்தவன் "உன்னோட எல்லா விதமான கேள்விகளுக்கும் இப்போதைக்கு நான் சொல்ற ஒரு பதில்.. என்று நிறுத்தியவன் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்து "நீ சேர வேண்டிய இடத்துக்கு பத்திரமா வந்து சேர்ந்துட்ட" என்றவன் பதிலில் முதலில் புரியாது முழித்தவள் பின் புரிந்தவளாய் விழிகள் விரிந்திட ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தவள் நெற்றி முட்டி சிரித்தவன்.

"நிம்மதியா தூங்கு.. நாளைக்கு உன்னோட எல்லா கேள்விகளுக்குமான பதில சொல்றேன்" என்றவன் அறைவிட்டு வெளியேறிச் செல்ல. அவன் கூறியது போன்றே நிம்மதியாய் கண்ணசந்தாள் பெண்ணவள்.

.....

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் சீற்றத்தோடு நடந்து கொண்டிருந்த மோகன்ராஜ்ஜிற்கோ சற்று முன் கௌசிக் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து அவர் சீற்றத்தை அதிகரிக்க செய்தது.

தந்தையை பார்த்திருந்த பாரியோ "இப்போ என்னப்பா செய்றது. இவன் இப்பிடி திடுதிடுப்புன்னு வந்து குதிச்சதும் இல்லாம ரொம்ப பேசுறான்" என்க.

அவரோ எரிச்சலோடு "என்னடா பண்ண சொல்ற.. அன்னைக்கு அவனுக்கு போன் பண்ணி வேண்டியமட்டும் அவன சீண்டிவிட்டேன்.. நிச்சயமாய் அந்த பொண்ண கூட்டிட்டு இந்த பக்கம் வரமாட்டான்னு நினைச்சி தான் பண்ணேன் .. ஆனா இவன் என்னடான்னா இப்பிடி வந்து நிற்கிறான்..
வந்ததுமில்லாம ஒரு மார்க்கமா வேற பேசுறான்.. எனக்கு தெரிஞ்சு இவன் ஏதோ திட்டத்தோட தான் வந்திருக்கான்னு தோணுது" என யோசனையாய் கூறியவர் கோபத்தோடு
"இவன அப்போவே வீட்ட விட்டு துரத்தியடிச்சியிருக்கனும்" என்றார்.

"ம்ம்.. அதான் நம்மளால முடியலையே.. போனத விடுங்க இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லுங்க" என்க.

சிறிது நேரம் தன் யோசனையில் மூழ்கியவர் பின் "இவன நாம தனியா சமாளிக்க முடியாது.. விஷ்வா நேஹா இரண்டு பேருக்கும் போன போட்டு உடனடியா கிளம்பி ஊருக்கு வர சொல்லு" என்றிட அடுத்து இருவருக்கும் அழைப்பை விடுத்திருந்தான் பாரி.

சிறிது நேரம் இருவரிடமும் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் "நாளைக்கே இரண்டு பேரும் கிளம்பி வராங்க" என்க.
விஷமமாய் சிரித்துக் கொண்டார் மோகன்ராஜ்.

......

மதியிடம் பேசிவிட்டு அறை விட்டு வெளிவந்த கௌசிக்கின் கால்களோ தன்னிச்சயாய் தன் தந்தையின் அறை நோக்கி சென்றது.

மூடிய அறைக் கதவை சில நொடிகள் வெறித்திருந்தவன் விழிகள் கலங்கிட மெதுவாய் கதவின் பிடியை திறந்து உள்நுழைந்தவனை எதிர்பார்த்தது போல காத்திருந்தார் கமலம்.

தாயையும் தாயின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்த தங்கையையும் கண்டவனுக்கோ இதயம் கனக்க அவர்களை நோக்கிச் சென்றவன்.
தன்னை நோக்கி கைநீட்டி அழைத்திட்ட தாயின் மடியில் சிறு பிள்ளையாய் தஞ்சம் புகுந்திருந்தான் அவ் ஆண்மகனும்.

தன் பிள்ளைகளின் தலை கோதிவிட்டவர் விழிகளோ எதிரே சுவற்றில் மாலையிட்டு புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த தன் கணவரின் கம்பீரமான ஆளுயர நிழல் விம்பத்தில் நிலைத்திருந்தது.


தாயின் வருடலில் தன் மனசுணக்கம் நீங்கியவனாய் எதிரில் வீற்றிருந்த தந்தையின் புகைப்படத்தில் பார்வையை பதித்தவன் மனமோ "நாளைய நாள் உங்க மேல சுமத்தின எல்லா பழியையும் நான் இல்லாம செய்யப் போற முக்கியமான ஒரு நாள் ப்பா.. உங்க ஒழுக்கத்த கேவலபடுத்திய அத்தனை பேருக்கும் பதிலடி கொடுக்கப் போற நாள்.. நிச்சயம் உங்க இறப்புக்கு அவங்க பதில் சொல்லியே ஆகனும்" என தந்தையிடம் மானசீகமாய் உரையாடிட விழிகள் மூடிக் கொண்டவனின் நினைவடுக்குகளில் இத்தனை நாள் அவன் மறக்க நினைத்திடும் அந்தக் கசப்பான நாட்களின் நிகழ்வுகள் அலையலையாய் எழுந்திட அதில் ஆழ்ந்து போனான் கௌசிக் கிருஷ்ணா.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 14



அவன் மட்டுமல்ல அவ்வீட்டிலிருந்த ஒவ்வொருவரின் மனமும் இன்றைய கௌசிக்கின் வருகையால் கடந்து வந்த அவர்களது அழகான நாட்களையும் அதை தொடர்ந்த அந்த கசப்பான நாட்களையும் அசைபோடத் தொடங்கியது..

(ஒவ்வொருத்தங்களும் அவங்க அவங்க பேசின நிகழ்வ நினைக்கிறாங்கன்னு கற்பனை பண்ணிக்கங்க மக்களே.. அப்போ தான் லாஜிக் கரெக்டா இருக்கும் ஹிஹிஹி.)


அந்த அரண்மனை வீடு முழுவதும் தோரணங்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு அத்தனை அம்சமாய் ஜொலிக்க வீடு முழுவதும் சொந்த பந்தம் உற்றார் உறவினவர்கள் நண்பர்கள் என நிரம்பி வழிந்தனர்.
கொடைக்கானலின் மதிப்பிற்குரிய நாராயண கிருஷ்ணணின் வீட்டுத் திருமணம் என்றால் சாதாரணமாக இருக்குமா? என மக்கள் வியக்கும் அளவிற்கு அத்தனை தடபுடலாய் தங்கள் அரண்மனை வீட்டிலே தங்கள் வீட்டின் பெண்ணரசி பூரணியம்மாளின் செல்ல இளவரசி நித்யாவின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தை கோலகாலமாய் ஏற்பாடு செய்திருந்தார் நாராயண கிருஷ்ணண்.

நாளை திருமணம் இன்று முதல் நாளோ நிச்சயதார்த்தத்துடன் மேலும் சில சடங்குகளை செய்யவே இந்த நிகழ்வை கோலாகலமாய் ஏற்பாடு செய்திருந்தார்.

வீட்டின் நுழைவாயிலிலே வருவோரை வரவேற்று நாராயண கிருஷ்ணண் கமலம்

பூரணி மோகன்ராஜ் மற்றும் கோகுல கிருஷ்ணன் ஆனந்தி ஆகியோர் தம்பதி சகிதமாய் நின்றிருந்தனர்.

வீட்டின் வரவேற்பரையின் நடுநாயகமாய் திரு வெட்ஸ் நித்யா என மணமக்கள் பெயரை தாங்கி நின்ற அலங்கரிக்கப்பட்ட மேடையில் புன்னகை முகமாய் நின்றிருந்தினர் மணமக்கள்.

அவர்களைச் சூழ நின்று கேலி செய்தே ஒரு வழி செய்து கொண்டிருந்தனர் அவ்வீட்டின் இளவட்டங்கள்.

"புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே"
என பாடிய சிவாவிற்கு பின்பாட்டாக திவ்யா மற்றும் அவ்வீட்டின் கடைக்குட்டிகள் தீரன் தீக்ஷி இருவரும் கோரஷ்பாட அவ்விடமே களைகட்டியது.

"மனசோ இப்போ தந்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டம் டம்
மத்தல டம் டம்... மத்தல டம் டம்... மத்தல டம் டம்
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்
அட்சத டம் டம், அட்சத டம் டம், அட்சத டம் டம்
புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான் கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது
மால டம் டம், மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம், ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம் " என பாடியபடி திவ்யாவோ நித்யாவின் கன்னத்தை கிள்ள மணப்பெண்ணும் வெட்கத்தில் சிவந்து நின்றாள்.

இளம் சிவப்பு நிறத்தில் இடையை இறுக்கி பிடித்த லெஹெங்காவினூடு வெளித் தெரிந்தும் தெரியாதவாறு மின்னிய சிற்றிடையிலும் ஓர் ஆண்மகன் மனம் தடுமாறி நிற்பதை கண்டும் காணாது போல தன் போக்கில் விழாவை ரசித்துக் கொண்டிருந்தவளை ரசித்திருந்தான் விஷ்வா.

"ராட்சஷி கொஞ்சமாச்சும் திரும்பி பார்க்குறாளா பாரு" என வாய்க்குள் அர்ச்சித்தவன் அவள் தனியே சிக்கும் தருணத்திற்காய் காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அவளும் ஏதோ பொருளெடுக்க ஸ்டோர் ரூம் பக்கம் செல்ல அவளைத் தொடர்ந்து தானும் சென்றவனோ அவளை பின்னிருந்து வேகமாய் அணைத்திருந்தான்..

திடீரென்ற அணைப்பில் அரண்டு கத்த முயன்றவள் இதழ்களை வேகமாய் கரம் கொண்டு மூடியவன் அவள் காதோரமாய் "தியா பேபி நான் தான்" என கிசுகிசுப்பாய் கூறிட அதில் சற்றே பதற்றம் நீங்கியவள் ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு விலகி இடுப்பில் கைகுற்றி அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவனோ சிரிப்புடன் அவளை மேலிருந்து கீழ் ரசித்தபடி "கோபப்பட்டாலும் ரொம்ப அழகா இருக்க தியா பேபி" என அவள் கன்னம் கிள்ள முயல அவன் கரத்தை தட்டிவிட்டவள் மாறா முறைப்புடன் "ஹலோ வக்கீல் ஸார் இந்த டச்சிங் டச்சிங் எல்லாம் என்கிட்ட வெச்சிக்கிடாதிங்க தெரியும்ல நான் பொலீஸ்காரன் தங்கச்சி.. என் அண்ணன் கிட்ட சொன்னேன்னு வெச்சிக்கொங்க அப்புறம் லாடம் தான்" என்றவளின் பேச்சில் கேலியாய் சிரித்தான் விஷ்வா.

"ஹலோ மிஸிஸ் விஷ்வா உங்க அண்ணன் இன்னும் பொலீஸ் ஆகல இப்பா தான் ஐபிஎஸ் எக்ஸாமே எழுதி முடிச்சியிருக்காரு.." என்றவனை உதட்டை சுழித்து பார்த்தவள்.

"எங்கண்ணன் தான் பெஸ்ட் லெவல்ல பாஸ் பண்ணுவான்" என சற்றே கர்வமாய் கூறியதில் எதிரே நின்றவனோ பல்லைக் கடித்தான்.

அவன் முகம் காட்டிய பாவனையில் இதழ்களுக்குள் சிரித்தவள் மனமோ "நான் வேணும் ஆனா என் அண்ணன் வேண்டாதவனா? " என எண்ணிக் கொண்டவளுக்கு மனதின் ஓரம் சிறு கவலை எழத் தான் செய்தது.

தன் மனதிற்கு பிடித்தவனுக்கு தன்னை உயிராய் நேசிப்பவனுக்கு ஏன் நான் உயிராய் மதிக்கும் தன் அண்ணணின் மீது இத்தனை கடுகடுப்பு.. தன் மீது கொண்ட அன்பால் உண்டான பொறாமையா? என சில நேரங்களில் எண்ணுபவளுக்கு பதில் என்னவோ இல்லை என்பதே..

விஷ்வாவின் இந்த கடுப்பும் கோபமும் இன்று நேற்று அல்லவே..
எப்போது தன் தங்கையுடன் இந்த வீட்டிற்கு முதல்முறை வந்தானோ அன்றிலிருந்து கௌசிக் சிவாவிடம் பேசுவதே இல்லை .. எந்த நேரமும் அவன் பெரியப்பாவுடனும் அவர் மகனோடும் மட்டுமே தன் நேரத்தை செலவிடுபவன்
சிலசில நேரங்களில் மட்டும் தன்னோடு சீண்டி விளையாடுபவனுக்கு எந்தப் புள்ளியில் தன் மீது காதல் தோன்றியது என இன்று வரை அவளுக்குத் தெரியவில்லை.

என்று அவன் மனம் கொண்ட காதலை ஒழிவு மறைவின்றி தைரியமாய் அவளிடம் கூறியனானோ அன்றே பெண்ணவள் மனம் அவனிடம் காதலில் தடுமாற ஆரம்பித்தது.


நாட்களின் போக்கில் ஒருத்தர் மீது ஒருத்தர் உயிராய் நேசிப்போம் என்பதை அவ்விருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

காதலால் அவ்விரு மனங்களும் இணைந்திருக்க அவர்களுக்கு குறுக்கே நின்றது என்பது என்னவோ விஷ்வாவின் மனதில் அமிழ்ந்து கிடக்கும் பழிவெறி என்பது அவன் மனமறிந்த ரகசியம்.

ஆம் பழிவெறியே, அவன் கொண்ட பழிவெறி ஒரு உயிரை மட்டுமல்ல தன் உயிர்க் காதலையும் காவு வாங்கப் போவதை அவன் அறிந்திருக்கவில்லை.

மௌனமாய் சில கணங்கள் அவனையே பார்த்திருந்தவள் அங்கிருந்து நகர முயல எட்டி அவள் கரத்தை பிடித்தவன் "சரி சொல்லு எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்" என்க அவனைத் தலைசரித்துப் பார்த்தவள்..

"என் அண்ணன் ஓகேன்னு சொன்னா எனக்கும் டபுள் ஓகே வக்கீல் ஸார்" என்றவள் மான்குட்டியாய் துள்ளி ஓடிட அவள் பதிலில் பல்லைக்கடித்தது கோப பெருமூச்சுடன் நின்றிருந்தான் விஷ்வா.

சிறிது நேரம் வரை அங்கிருந்தவன் பின் வெளியேறி வர அவன் விழிகளோ அங்கே ஒரு ஓரமாய் நின்று நடக்கும் நிகழ்வுகளை வெறித்து நின்ற தங்கையில் பதிந்திட "இவளை எப்பிடி மறந்தேன்" என்ற மனதில் எழுந்த குறுகுறுப்போடு அவளை நெருங்கிச் சென்றவன் அவள் தோள் தொட்டான்.

அதில் தன் பார்வையை மாற்றாது அவனை பார்த்தவள் பார்வையிலிருந்த கேள்வியில் பதிலின்றி மௌனமாய் அவளைப் பார்த்தான் விஷ்வா.

அவன் மௌனத்தில் அவள் இதழ்களோ
கேலியாய் வளைய அவனை பார்த்தவள்
"என்ன அண்ணா.. உன் காதல் முன்னாடி பழி வெறியெல்லாம் மறந்து போயிடுமோ?" என நக்கலாய் கேட்டதில் விழுக்கென்று நிமிர்ந்து தங்கையை பார்த்தவன் அழுத்தமாய் இல்லையென தலையசைத்து "திவ்யா மேல நான் வெச்சுருக்க காதல் எப்பிடி மாறாதோ அத போல என்னோட குறிக்கோளும் மாறாது நேஹா" என்க.. அதில் நம்பாத பார்வை பார்த்தவள் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

தங்கையின் நம்பாத பார்வையில் மனது அடிபட்டாலும்.. அவள் புரிந்து கொள்வாள் என எண்ணியவன் நிகழ்வுகளை பார்த்திருந்தான்.

நேரம் செல்ல வருகை தந்தவாறிருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வரவேற்று நின்ற நாராயணனின் விழிகளோ யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்க அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே அங்கே வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கினார் அவரின் ஆருயிர் தோழன் குருநாத்.

நண்பனைக் கண்டதும் துள்ளளோடு ஓடிச் சென்று நண்பனை அணைத்துக் கொண்டவர்.
"டேய் வாடா.. எங்க நீ வராம போய்டுவியோன்னு நினைச்சேன்" என தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

தன்னை அணைத்திருந்த நண்பனை புன்னகை முகமாய் பார்த்த குருநாத் "என்னோட உயிர் நண்பனோட வீட்டுக் கல்யாணம் நான் வராமாலாடா?" என அவருக்கு சளைக்காத சந்தோஷத்தோடு நண்பனை அணைத்திருந்தார்.

நண்பர்கள் இருவரினதும் சந்தோஷத்தையும் கண்டு புன்னகையோடு அவர்களை பார்த்திருந்தனர் மற்றவர்கள்.

பார்ப்பவர்கள் அனைவரும் பொறாமை
கொள்ளும் அளவிற்கு நெருங்கிய
பால்யகால நட்பல்லவா இருவரதும்..
சிறுவயதிலிருந்து ஒன்றாய் படித்து வளர்ந்தவர்கள் இடையில் குருநாத்தின் தந்தையின் வேலையின் மாற்றல் காரணமாய் பிரிந்து சென்ற நட்போ மீண்டும் இதே கொடைக்கானலில் இணைந்து கொண்டது என்னவோ குருநாத்தின் காதல் வாழ்க்கையால் தான்.

ஆம் குருநாத் காதல் திருமணம் செய்து கொண்டு வந்து குடியேறியது என்னவோ அவரது சிறுவயதில் வாழ்ந்த கொடைக்கானலிலே..

மீண்டும் பழைய நட்பு புதிதாய் புதுப் பரிணாமத்தில் உருவாகி இரும்பென இறுகிட அதே போலவே அவர்களது குடும்பம் குழந்தைகளுக்குமிடையே அவர்களது நட்பும் பகிரப்பட்டு அவர்களிடையே ஒரு இணைபிரியா பந்தத்தை உருவாக்கியவர்கள் இதோ எத்தனை வயதானாலும் நாங்கள் இப்படித்தான் எங்கள் நட்பும் இப்படித்தான் என்பது போல நட்பின் ஆரம்புள்ளியிலிருந்து இதோ இன்றுவரை இருவரும் தங்கள் தோழமையில் அத்தனை உறுதியோடு ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாய் இருந்து வருகின்றனர்.

நண்பர்கள் இருவரும் தங்களுக்கு பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு குறுக்கே வந்து குதித்து நின்ற பெண்ணவளோ சிறு முறைப்புடன் "மாமா உங்க ப்ரெண்ட்ட கண்டவுடனே என்ன மறந்திட்டிகளா?" என கேட்ட தன் நண்பனின் நகலை புன்னகையோடு அணைத்துக் கொண்டார் நாராயணன்.

"உன்ன மறப்பேனா சிவாங்கிமா? நீ என் செல்ல மருமகளாச்சே" என்றவர் அவள் தலை வருடி "எப்பிடிடா இருக்க.. இந்த ராஸ்கலால என் செல்ல மருமகளையும் பிரிஞ்சி நாங்க இருக்குற நிலமை" என மருமகளிடம் கொஞ்சி நண்பனிடம் கோபமாய் முடித்து வைத்தார் நாரயணன்.

குருநாத் ஒருவருடம் முன்பு வரை இதே கொடைக்கானலில் டிஎஸ்பி யாக இருந்தவர் கடந்த வருடம் பணி மாற்றலாக வேறொரு ஊருக்கு செல்ல வேண்டி ஏற்பட்ட தன்னோடு தனக்கு ஒரே துணையாய் இருந்த தன் மகளையும் அழைத்துச் செல்ல எண்ணியவர் அவளையும் அழைத்துச் சென்றிருந்தார்.
அதுவோ இத்தனை காலமாய் தங்களோடு ஒன்றியிருந்தவர்கள் வேலையை காட்டி தனியே சென்றதில் சிறு கோபத்தை நாராயணன் மனதில் விதைத்திருக்க..அதன் வெளிப்பாடே இது.

நண்பனின் கோபத்தில் சிரித்த குருநாத்தோ அவர் தோளோடு தோளணைத்து "டேய் எப்போ திரும்ப வந்தாலும் இதே சொல்லி சண்ட போடாதடா நாராயணா.. இன்னும் ஒருவருசம் தான் என் சிங்கக் குட்டி இந்த காவல்துறைக்குள கால் எடுத்து வெச்சிட்டா போதும் நான் ரிட்டெய்யர் ஆகிடுவேன்..அப்புறம் நீ ஆசப்பட்ட போலவே நாம எல்லாரும் ஒரே குடும்பமா ஒரே வீட்ல இருக்கலாம் சரியா?" என நண்பனை தாஜா செய்து சமாதானம் செய்தார்.

தந்தையின் பேச்சில் சிவாங்கியோ "டாடி நான் உங்க மகளா? இல்ல அத்து உங்க மகனானே எனக்கு டவுட்டா இருக்கு" என தாடையில் கைவைத்து யோசித்தவள் காதை செல்லமாய் திருகிவிட்டவர் "இதுல என்ன சந்தேகம் என் கௌசிக் கிருஷ்ணா தான் என் சிங்கக்குட்டி.. என்னோட ஆசைக்காகவே பொலீஸ் வேலைல சேர தயாரான என் ஆண் வாரிசு" எனும் போதே அவர் கண்ணில் பெருமை மின்னியது.

நண்பனின் கூற்றில் சிரித்த நாரயணன் "டேய் போதும்டா என் மருமகள வம்பு பண்ணாத.. நீயே உன் சிங்கக் குட்டியவெச்சிக்கோ.. பெத்தது என்னவோ நான் தான் ..அதுக்கப்புறம் அவன் வளர்ந்தது என்னவோ உன்ன பார்த்து தான்.. அதுதான் பையன் அவனோட பாசக்கார அத்தம்மா அழைச்சிக் கூட கல்யாணத்துக்கு வராம போயிட்டான்" என்க அவர் தோள் தட்டி நடந்த குருநாத்தோ "டேய் நாரயணா நீ இன்னும் என் கிருஷ்ணாவ சரியா புரிஞ்சிக்கலடா" என்றவர் தன்னை குழப்பமாய் பார்த்த நண்பனை அழைத்துக் கொண்டு உள்நுழைந்தார்.

இத்தனை நேரமும் யாரையும் கண்டு கொள்ளாது தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்த இருவரையும் முறைத்து நின்ற பூரணியோ "ஹப்பா இப்போவாச்சும் இரண்டு பேரும் பேசிமுடிச்சிங்களே" என போலியாய் சலித்துக் கொள்ள அவரை பார்த்து சிரித்து வைத்தனர் நண்பர்கள் இருவரும்.

குருநாத்தோ அங்கிருந்த அனைவரிடம் நலம் விசாரித்தவர் பெயருக்கு சிரித்தபடி நின்ற மோகன்ராஜ்ஜின் தோளில் அழுத்தமாய் தட்டிக் கொடுத்து சிரித்துவிட்டு உள்நுழைந்தார்.

அவர் தட்டியதில் வலித்த தோளை வருடிவிட்ட மோகன்ராஜ்ஜின் மனமோ வன்மத்தில் புகைந்தது.
நாராயணண் குருநாத் இருவரினதும் இந்த நட்பில் அவருக்கு எப்போதுமே ஓர் புகைச்சல் உண்டு.
இந்த வீட்டிற்கு அவர் வந்த காலத்திலிருந்து அவ்வீட்டின் மருமகன் தன்னை விட குருநாத்திற்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவருக்கு கோபத்தை உண்டாக்கினாலும் அதை வெளிக் கட்டும் அளவிற்கு தைரியமில்லாதவர் வெளிப் பார்வைக்கு போலியாய் நல்லவர் போல வாழ்ந்தவர் உள் மனமோ தன் வஞ்சத்தைக் கக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

தங்கையின் கணவனின் நயவஞ்சக குணத்தை அறிந்திருந்தாலும் நாராயணனோ தங்கையின் முகத்திற்காக அமைதியாய் அவரை பொறுத்துக் கொள்வார். ஆனால் குருநாத்தோ மறைமுகமாய் அவரை அதட்டி மிரட்டுபவர் அவரை அடக்கி வைத்திருந்தார்.
இருவருக்கும் பயந்தே தன் வாலைச்சுருட்டி தன் மனைவிக்கு நல்ல கணவனாய் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய் அவ்வீட்டில் தன்வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றார் மோகன்ராஜ்.

தந்தையோடு உள்நுழைந்த சிவாங்கியின் விழிகளோ மேடையில் நின்ற தன் இளவட்டங்களை நோக்கி பாய அடுத்த கணம் சிட்டாய் அங்கு பறந்திருந்தாள்.

கடல் நீல நிற லெகேங்ஹாவில் தேவதையென வந்து நின்ற தன்னவளைக் கண்டு விழிகள் விரிய பார்த்து நின்ற சிவாவோ தன் வாயில் உணர்ந்த தொடுகையில் குனிந்து பார்க்க அங்கோ கைக்குட்டையால் தன் வாயை துடைத்துவிட்ட மணமகன் திருவை முறைத்தான்.

அவனோ "ரொம்ப வழிஞ்சிதா அதான் துடைச்சிவிட்டேன்" என நக்கலாய் கூறிட அதில் அசட்டு சிரிப்பை உதிர்த்தான் சிவா.

அவன் சிரிப்பில் அவனை முறைத்தவன்
"டேய் சிவா உங்கண்ணன் வருவானா மாட்டானாடா.. அவனெல்லாம் ஒரு ப்ரெண்ட்டாடா.. நண்பனோட கல்யாணத்துக்கு கூட வராம அப்பிடி என்ன தான் வேல.. வரட்டும்" என தன் புலம்பலை ஆரம்பித்திட பாவமாய் பார்த்து வைத்தான் சிவா.

பின்னே திருமணம் முடிவாகிய தினத்திலிருந்து இவனின் அலுப்பே இல்லாத அனத்தலில் பழியாவது அவனல்லவா..

திரு கௌசிக்கின் சிறுவயது நண்பன்.. யாருமற்றவனுக்கு அனைத்துமாய் இருந்து கல்வி முதல் அனைத்தையும் அவனுக்கு வழங்கியது என்னவோ கௌசிக்கும் அவன் தந்தை நாராயணனுமே .. இருவரின் உதவில் படித்து நல்ல வேலையில் சேர்ந்தவனுக்கு தன் தங்கையின் மகளையே திருமணம் பேசி முடித்தவர் இதோ திருமணத்தையும் நடத்திக் கொண்டிருந்தார்.

தன் கேள்விக்கு பதில் பேசாது அமைதி நிலவியதை உணர்ந்து நிமிர்ந்த திருவோ அவ்விடம் சிவா இல்லாதிருப்பது கண்டு பார்வையால் தேட அவனோ எப்போதோ அவன் கண்ணை விட்டு மறைந்திருந்தான்.

இளசுகளின் சந்தோஷக் கூச்சலோடும் பெரியோர்களின் மகிழ்வோடும் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.

அடுத்தடுத்த நிகழ்வுகளாய் நலங்கு வைத்து மணமக்களுக்கான திருமண ஆடைகளை கொடுத்து ஓய்வெடுக்குமாறு அவரவர் அறைக்குள் அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாளை அதிகாலை வேளை ஆறு மணிக்கு நல்ல முகூர்த்த வேளையில் திருமணம் வைத்திருந்தபடியால் மணமக்களுக்கு உணவை வழங்கி நேரமாகவே அவரவர் அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொண்டாட்டங்கள் முடிந்து இளையவர்கள் அனைவரும் ஓய்ந்து போய் தத்தமது அறைக்குள் முடங்கிட பெரியவர்களோ சற்று ஓய்வாய் ஒன்றாய் அமர்ந்திருந்தனர்.

அனைவரின் முகத்தில் நிறைவான புன்னகை நிறைந்திருந்தது.

"எல்லாம் ஒருவழியா நல்லபடியா முடிஞ்சுது ..நாளைக்கு கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சிதுன்னா சந்தோஷம் தான்" என்ற தங்கையை புன்னகையோடு பார்த்தவர்.

"கவலப்படாத பூரணிமா எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்றார்.

"பசங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க ஆனா இந்த கிருஷ் பய தான் வராம ஏமாத்திட்டான்.. அதுதான் கொஞ்சம் கவலையா இருக்குண்ணா" என சற்றே வாடிய முகமாய் கூறினார் பூரணி.

குருநாத்தோ "நீ கவலப்டுற அளவுக்கு உன் மருமவன் நடந்துக்க மாட்டான்மா பூரணி.." என்றவர் வார்த்தையை முடிக்க வீட்டு வாசலில் வண்டியொன்று வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.

வண்டிச் சத்ததில் குருநாத்தோ புன்னகையுடன் "சொன்னேன்ல" என்றவர் புன்னகையோடு விரைந்து வெளியேறிச் செல்ல அவரை ஓடி வந்து அணைத்திருந்தான் கௌசிக்கிருஷ்ணா.

"குருப்பா .. எப்பிடி இருக்கிங்க" என்ற சந்தோஷக் கூச்சலிட்டவனை தானும் அணைத்துவிடுவித்தவர் "நான் ரொம்ப நல்லாயிருக்கேன் மை போய்.. நீ எப்பிடியிருக்க.." என்க.

"எனக்கென்ன டிசிபி ஸார் .. நான் ரொம்ப நல்லாயிருக்கேன்" என கண்சிமிட்டி சிரித்தவன் அங்கே வந்த தந்தையை கண்டு புன்னகையோடு அவரை அணைத்துக் கொண்டான்.

"எப்பிடிப்பா இருக்கிங்க.. " என தந்தையிடம் நலம் விசாரித்தவன் அருகே நின்ற தாயையும் அணைத்து அவரையும் நலம் விசாரித்து திரும்பியவன் பார்வையோ தன்னையே முறைத்தி நின்றவரைக் கண்டு மன்னிப்பை யாசிக்கும் பாவனையில் "ஸாரி ஸ்வீட் ஹார்ட்" என்றதில் அவர் முறைப்பும் இருந்த இடம் இல்லாது போய்விட புன்னகையோடு அவனை அணைத்துக் கொண்டார்..

அனைவரின் நல விசாரிப்புக்களுக்கும் புன்னகையோடு தலையசைத்தவன் அடுத்து தன் நண்பனைக் காணச் சென்றவனுக்கு அங்கும் நண்பனிடம் பல அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டு நண்பனை சமாளித்து மலையிறக்கிய பின்னரே தன்னறைக்குள் புகுந்து கொண்டான் கௌசிக்.

அனைவரும் உறக்கத்திற்கு சென்றிருக்க நள்ளிரவு வேளையில் தன்னறையின் பால்கனி வழியே வானத்தை வெறித்திருந்தவளின் முகத்தில் அத்தனை கோபம் ஆக்ரோஷம் தாண்டவாட நின்றிருந்தாள் நேஹா.

சற்று முன்னர் தூக்கமின்றி தன்னறையை விட்டு வெளியே வந்தவளுக்கு கீழே தன் மகனோடு பாசமழை பொழிந்து நின்ற நாராயணன் குருநாத் இருவரின் முகம் காட்டிய சந்தோஷத்தைக் கண்டவளுக்கோ உள்ளம் பற்றியெறிய அங்கு நிற்க முடியாதவளாய் மீண்டும் தன்னறைக்குள் அடைந்து கொண்டவளுக்கு உடம்பெல்லாம் பற்றியெரியும் அளவவிற்கு ஆத்திரம் கொழுந்துவிட்டெரிந்தது.
அவள் மனமுழுவதும் "என் அப்பாவோட சந்தோஷ பறிச்சிட்டு நீங்க மட்டும் குடும்ப குழந்தை குட்டினு சந்தோஷமா இருக்கிங்களா?? விடமாட்டேன்.. எங்கப்பாவுக்காக உங்க எல்லோருடைய சந்தோஷத்தையும் குழி தோண்டி புதைக்காம விடமாட்டேன்" என்ற வஞ்சமே வேரூன்றி பரவியிருந்தது.

நிமிடங்களாய் வானத்தை வெறித்திருந்தவள் தோளில் உணர்ந்த தொடுகையில் திரும்பிட அங்கு நின்றிருந்தார் மோகன்ராஜ்.. அவளின் பெரியப்பா..

"என்ன நேஹாமா இன்னும் தூங்கலையா?" என்றவரை அழுத்தமாய் பார்த்தவள் ..
"எப்படி பெரியப்பா தூங்க சொல்றிங்க..இங்க நடக்குறதெல்லாம் பார்த்து நிம்மதியா எப்பிடி தூங்க சொல்றீங்க.. எங்கப்பாவோட நிம்மதிய சந்தோஷத்தை அழிச்ச அந்த நாராயணன் அவர் குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறத பார்த்துட்டு எப்பிடி நிம்மதியா தூங்க சொல்றீங்க?" என சீறலாய் வந்து வீழ்ந்தவளின் வார்த்தையில் அவளின் கோபம் உணர்ந்தவர் அவளை சமாதானம் செய்ய முயன்றார்.

"கோபப்படாத நேஹா.. பொறுமையா இரு.. இது எதுவுமே அந்த நாராயணனுக்கு நிலைக்காது.. கூடிய சீக்கிரமே இதுக்கு எல்லாம் முடிவு கட்டி என் தம்பியோட இழப்புக்கு நியாயம் செய்யலாம்.. நம்ம திட்டத்தை செயற்படுத்தனும்னா அதுக்கு உன்னோட இந்த கோபத்தையும் வேகத்தையும் பொறுமையோட கையாளனும்.. அவசரத்துல ஏதாச்சும் ஒரு தப்பு பண்ணி நாமளே அந்த குருநாத்தோட பார்வையில சிக்கிடக் கூடாது.. நண்பனுக்கு ஒன்னுனா அவன் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டான்" என எச்சரித்தவர் அவளை கூர்மையாய் பார்த்தபடி..
"இப்போ நம்மளோட துருப்புச்சீட்டு அந்த திவ்யாவும் அந்த கௌசிக்கும் தான் அவங்கள வெச்சு தான் நாம காய் நகர்த்தனும்" என்றவர் தன் திட்டத்தை கூறி முடித்திட இருவரும் வில்லத்தனமாய் சிரித்துக் கொண்டனர்.

என்றோ நிகழ்ந்த ஒரு தவறிற்கு பழிவாங்கும் ஆயுதமாய் நேஹா விஷ்வா என்ற இருவரின் பிஞ்சு வயதிலே தங்கள் நஞ்சை விதைத்து இதோ இந்தளவிற்கு அவர்கள் மனதை வன்மத்தால் நிரப்பியிருந்த மோகன்ராஜ்ஜிற்கு தன்னால் சாதிக்க முடியாததை தன் தம்பியின் பிள்ளைகளைக் கொண்டு சாதிக்க எண்ணியவராய் இதோ அவர்களை வஞ்சத்திலே வளர்த்துவிட்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்தது போலவே அவரின் போதனையிலும் வளர்ந்தவர்களின் குறிக்கோள் ஒன்றேயொன்று அது இந்தக் குடும்பத்தின் மூத்தவரின் கௌரவத்தை சுக்குநுறாய் உடைப்பது.. அதற்காகவே இன்றை வரை இந்தக் குடும்பத்தில் ஒருத்தராக வளர்ந்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதற்கான நாளும் வெகு அருகிலே அவர்களை நெருங்கியிருந்தது..
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 15



அடுத்த நாள் விடியல் கல்யாண மேளதாளங்களோடு அமோகமாகவே விடிந்தது.
வீடு முழுவதும் பட்டுபுடவை சரசரக்க பெண்களும் பட்டுவேட்டி சட்டையில் ஆண்களும்.. அத்தனை அம்சமாய் வீட்டையே நிறைத்திருந்தனர்.


அரண்மனை போன்ற வீடிருக்க வீட்டிலே தங்கள் பிரம்மாண்டமான ஹால் நடுவிலே திருமண மேடையமைத்து மணமகன் இருக்கையில் திரு அமர்ந்து அய்யர் கூறிய மந்திரத்தை உச்ச்சரித்துக் கொண்டிருந்தான்.


அவனைச் சுற்றி சிவா கௌசிக் இருவரும் மாப்பிள்ளை தோழர்களாக அவனருகே நின்றிருந்தனர்.


முகூர்த்த நேரம் நெருங்க மணப்பெண் அழைத்து வரப்பட்டு மேடையில் அமர்ந்து மணப்பெண்ணும் அய்யர் கூறிய மந்திரங்களை கூறத் தொடங்கினாள்.


மந்திர உச்சரிப்புகள் முடிந்திட
அடுத்து மங்கள நாண் அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டு எடுத்து மேடைக்கு கொண்டு வர அய்யர் தந்த மாங்கல்யத்தை பெற்றவன் கெட்டிமேளம் முழங்க தன் சரிபாதியின் கழுத்தில் தாலியை முடித்து தன் மனைவியாக்கிக் கொண்டான்.


பெரியவர்கள் இளையவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியோடு அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்தி நின்றனர்.


அடுத்தடுத்து சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் எனஅடுக்கடுக்காய் வந்து குவிந்தவைகளை செய்து முடிவப்பதுக்குள்ளே மணமக்களை ஒருவழியாக்கியிருந்தனர்.


கேலி கிண்டல் மகிழ்ச்சியாய் ஆரவாரமாய் நேரங்கள் அழகாய் நகர்ந்திட வந்திருந்த விருந்தினர்கள் உறவினர்கள் ஒவ்வொருவராய் மணமக்களை வாழ்த்திவிட்டு விடைபெற்று கிளம்பிச் சென்றுவிட இறுதியில் வீட்டினர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.


அடுத்த நிகழ்வாய் மணமக்களுக்கான இரவு சடங்கிற்கான ஏற்பாடுகளை தடபுடலாய் இளையவர்கள் தலைமையில் செய்துமுடித்த பெரியவர்களோ இசுகள் மத்தியில் கேலியில் சிக்கித்தவித்த மணமக்களை காப்பாற்றி ஒருவழியாய் அவர்களை அனுப்பி வைத்து மற்றவர்களையும் அதட்டி உருட்டி அவர்களுக்கான இரவுணவையும் கொடுத்து அவரவர் அறைக்கு அனுப்பி வைத்து ஓய்வாய் தத்தமது அறைக்குள் அடைந்து கொண்டனர்.


தொடர்ந்த நாட்களாய் கல்யாண வேலையால் உண்டான அலைச்சலில் அவ்விரவு களைப்பு மீதுற கண்ணசந்து போயினர் அனைவரும்.


அடுத்தடுத்த நாட்களும் ரிசப்ஷன் கோவில் பூஜை என ஓடிட அந்த வாரம் முழுவதுமே அரண்மனை வீடு ஜெகஜோதியாய் மின்னிக் கொண்டிருந்தது.


இதோ திருமணம் முடிந்து ஒரு வாரம் முடிந்திருக்க திருமணத்திற்கென வந்திருந்த குருநாத்தும் நண்பனிடம் விடைபெற்று கிளம்பத் தயாராக நின்றார்.


"போய்ட்டு வரேன் நாராயண பத்திரமா இருந்துக்கோடா உடம்ப நல்லா பார்த்துக்கோ" என நண்பனுக்கு ஆயிரம் பத்திரம் கூறியவர் மனமோ ஏதோ போல அடித்துக் கொள்ள நண்பனின் கரங்களை இறுக பற்றிக் கொண்டு நின்றிருந்தார்.


நாராயணுக்கோ நண்பனின் சிறுபிள்ளைத் தனமான செய்கையில் உதட்டில் புன்னகை பூக்க தானும் அவர் கரங்களை அழுந்தப் பற்றிக் கொண்டவர் "டேய் நாதா ..என் குருநாதா நான் பத்திரமா இருந்துக்குறேன்டா.. நீ ரொம்ப பீல் பண்ணாம இரு" என சிரிப்புடன் கூறி நண்பனை அணைத்து விடுவித்தார்.


நண்பனின் வார்த்தையில் சிறு தெம்புடன் அவரிடமிருந்து விடைபெற்றவர்.
மனமோ என்னவோ போல் இருக்க கௌசிக்கை தனியே அழைத்து அனைவரையும் பத்திரமாய் பார்த்துக் கொள்ளுமாறு கூறி அவனிடமும் குடும்பத்தினரிடமும் விடைபெற்று மகளை அழைத்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்.


போகும் நண்பனை பார்த்திருந்த நாரயணனுக்கும் மனம் என்னவோ போலிருக்க எதுவும் பேசாது அமைதியாய் தன்னறைக்குள் அடைந்து கொண்டார்.


அடுத்தடுத்த நாட்களும் வேகமாய் நகர்ந்திட ஐ.பி.எஸ் தேர்வுக்கான முடிவுகளும் வெளியாகியிருந்தது.
அன்று திவ்யா சொன்னது போலவே முதலிடத்தில் தேர்வாகியிருந்தான் கௌசிக்.


வீட்டினர் அனைவரும் சந்தோஷமாய் அவனுக்கு வாழ்த்தை தெரிவிக்க மோகன்ராஜ் மற்றும் நேஹா இருவரினதும் முகங்களும் சுருங்கித் தான் போனது.. இருந்தும் தங்கள் மனதை மறைத்துக் கொண்டவர்கள் அவனுக்கு வாழ்த்தை தெரிவித்தனர்.


இன்னும் சில நாட்களில் பயிற்சிக்காக மும்பை செல்ல வேண்டியிருப்பதால் தன் குடும்பத்துடனே அதிகளவான நேரத்தை செலவளித்தான் கௌசிக்.


....


"என்ன பெரியப்பா செஞ்சிட்டு இருக்கிங்க பொறுமையா இரு இருன்னுஇன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடி அமைதியா இருக்க சொல்றீங்க" வானுக்கும் பூமிக்கும் குதித்தவளாய் கத்திக் கொண்டிருந்தவளை என்ன சொல்லி அமைதிபடுத்துவது என தெரியாது வாய்மூடி நின்றிருந்தார் மோகன்ராஜ்.


"பேசுங்க எதுக்கு இப்போ அமைதியா இருக்கிங்க.. என்ன தான் செய்து அந்த நாராயணண் குடும்பத்தை அவமானத்துறது அதுக்கான வழிய சொல்லுங்க." என்றவளுக்கு பதில் பேச வாய் திறந்த சமயம் அறைக்குள் நுழைந்தான் விஷ்வா.


அவன் முகமோ கோபத்தில் சிவந்திருக்க வேகமாய் நுழைந்தவன் பொத்தென்று படுக்கையில் அமர்ந்திட அவனையே குழப்பமாய் பார்த்திருந்தனர் மற்ற இருவரும்.


"என்னாச்சு விஷ்வா எதுக்கு கோபமா இருக்க" என்ற மோகன்ராஜ்ஜை நிமிர்ந்து பார்த்தவன்.


"பெரியப்பா எனக்கு திவ்யாவ கல்யாணம் பண்ணி கொடுங்க" என பட்டென்று கேட்டவனை அதிர்ந்து பார்த்தனர் இருரூவரும்.


"அண்ணா என்ன பேசிட்டு இருக்க நீ" என்ற நேஹாவை அழுத்தமாய் பார்த்தவனோ "நான் எல்லாமே தெரிஞ்சு தான் பேசுறேன் நேஹா.. எனக்கு திவ்யா வேணும்" என்றான் தெளிவாய் இது தான் என் முடிவு என்பது போல்.


அதில் சுறுசுறுவென கோபம் பொங்க அவனை நெருங்கியவள் "என்ன சொன்ன எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா" மூச்சிரைக்க கேட்டவள் கிண்டலாய் "அது சரி பொண்ணு மயக்கத்துல பேசுறியா பேசு" என்றவள் மோகன்ராஜிடம் திரும்பி "பெரியப்பா எங்கண்ணன் கேட்ட போலவே அவன் ஆசபட்ட பொண்ண கட்டி வைங்க அப்படியே அந்த கௌசிக்கும் எனக்கும் கல்யாணத்தை பேசுங்க" என்றவளை அதிர்ந்து நோக்கினர்.


"நேஹா என்ன பேசுற நீ" என அவளை தன்பக்கம் திருப்பி கோபமாய் கேட்டவனை நிதானமாய் ஏறிட்டாள் நேஹா.


"என்ன பேசுறேன்..சரியா தானே பேசுறேன்.. நீ உன் காதல பாரு நான் என் காரியத்தை பார்த்துக்குறேன்." என்றவள் மீண்டும் அவரிடம் "இரண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையிலே முடிச்சிக்கலாம்னு சொல்லி பேசுங்க பெரியப்பா" என்றவள் விஷ்வா அழைத்தும் பேசாது விறுவிறுவென வெளியேறிச் சென்றாள்.


விஷ்வாவோ போகும் தங்கையை அலுப்புடன் பார்த்தவன் அவரிடம் திரும்பி "என்ன பெரியப்பா இவ இப்பிடி பேசிட்டு போறா.. நானே ஏற்கனவே கடுப்புல இருக்கேன் இப்போ இவ வேற" என்று தலையை அழுந்தக் கோதி நின்றவன் தோள் தட்டியவர்.


"என்னாச்சு விஷ்வா எதுக்கு இந்த திடீர் முடிவு" என அவனிடம் கேட்க அவனோ "திவ்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றதா அவ அப்பா யாரோடவோ போன்ல பேசிட்டு இருந்தாரு.." எனும் போதே அவன் முகம் கோபத்தில் சிவந்தது.


அவன் முகமாற்றத்திலே அவன் அவள் மீது கொண்ட விருப்பத்தின் அளவை புரிந்து கொண்ட மோகன்ராஜின் உள்ளமோ கனன்றது. இருந்தும் அதை வெளிக்காட்டாதவர்.


"சரிப்பா அதுக்குன்னு இப்படி திடுதிடுப்புனு கல்யாணம் பண்ண சொன்னா நேஹா என்ன நினைப்பா அவ உன் தங்கச்சி அவள பத்தி யோசிக்காம நீ இப்பிடி பேசுறது நல்லா இல்ல விஷ்வா" என சிறு கண்டிப்போடு கூறியவரை இயலாமையுடன் பார்த்தான் விஷ்வா.


"பெரியப்பா தப்பு தான் நான் அவசரப்பட்டு பேசினது.. எனக்கு அந்த விசயத்தை கேட்டதும் எங்க திவ்யா என் கை விட்டு போயிடுவாளோன்னு ஒரு பயத்துல பேசிட்டேன்" உள்ளே போன குரலோடு கூறியவனை தட்டிக் கொடுத்தவர்.


"சரி விடு இந்த விசயத்தை நான் பார்த்துக்குறேன்.. அப்புறம் நீ நேஹா கிட்ட இந்த விசயத்தை பத்தி பேசாத சரியா" என்றவர் அறையைவிட்டு வெளியேறி சற்றே தள்ளி யாருமற்ற ஒதுக்குபுறமாய் சென்று நின்றவர் போனில் அழைப்பை விடுத்து மறுமுனை எடுத்ததும் "சொன்ன வேலையை கரெக்ட்ஆ பண்ணிட்ட என் மகன்கிட்ட பணத்தை கொடுக்கிறேன் வாங்கிக்கோ .. அப்புறம் இந்த விசயம் வெளிய தெரிஞ்சுது உன் தரகர் தொழிலோட சேர்த்து உனக்கும் சமாதி கட்டிடுவேன் ஜாக்கிரதை" என மிரட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர் இதழ்களில் ஓர் கேலிச் சிரிப்பு.



"நான் என் தம்பிக்காக போராடினா அவன் பெத்த பையன் நீ இந்த வீட்டு பொண்ண காதலா பண்ணித் திரியுற. இந்த காதலை வெச்சே உன் காதலுக்கும் இந்த குடும்பத்துக்கும் சேர்த்து சமாதி கட்றேன் விஷ்வா" என மனதோடு எண்ணிக் கொண்டவரின் திட்டமே.. திவ்யாவிற்கு வரம் பேசியதும் அதை விஷ்வா கேட்க வேண்டும் என்பதும். அவரின் திட்டப்படியே அவனும் திவ்யாவை திருமணம் செய்யக் கேட்டிருக்க.. அதை வைத்தே காய் நகர்த்த திட்டம் தீட்டிருந்தார்.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 16



தன்திட்டத்தை அமுல்படுத்த எண்ணிய மோகன்ராஜ்ஜோ தன்னை உயிராய் நேசித்து தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தன் மனைவி மூலமே காய் நகர்த்த எண்ணியவர் பூரணியிடம் பேசிவிடும் நோக்கத்தில் அடுத்த நாள் விடியலிலே மனைவியை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.

காலை வேளையில் குளித்து முடித்து வந்து மங்களகரமாய் தயாராகிய மனைவியை என்றும் போல் கண்ணில் ரசனை மின்ன பார்த்திருந்த மோகன்ராஜின் பார்வையை நிலைக் கண்ணாடியினூடே கண்டுகொண்ட பூரணியின் முகமும் வெட்கத்தை பூசிக் கொண்டது.

மனைவியின் வெட்கத்தை ரசித்தவாறே சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணியவர் மெதுவாய் தன் பேச்சை ஆரம்பித்தார்.

"இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க பூரணிமா.. உன்ன முதல் வாட்டி பார்த்தப்போ எப்பிடி இருந்தியோ அப்படி இருக்க" என்ற கணவனின் வார்த்தையில் மேலும் வெட்கியவர்.

"ச்சூ.. என்ன பேச்சு" என செல்லமாய் கடிந்து கொண்டு சிரிப்புடன் "என்னங்க உங்க பொண்ணுக்கு கல்யாணமே முடிஞ்சுது ஆனா நீங்க என்னடான்னா புது மாப்பிள்ளையாட்டம் பேசிக்கிட்டு இருக்கிங்க" என்ற மனைவியின் கிண்டலில் தானும் சிரித்தவர்.

"நான் எப்போவும் இந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தானே" என கண்சிமிட்டி சிரிக்க அவருடன் இணைந்து சிரித்தார் பூரணி.

மனைவியின் சிரிப்போடு தான் சொல்ல வந்த விசயத்தையும் சொல்லிட என மனதோடு எண்ணிக் கொண்டே வாய்திறந்தார் மோகன்ராஜ்.

"பூரணி எப்பிடியோ நம்ம நித்யா கல்யாணத்தை பண்ணி முடிச்சாச்சு.. நம்ம பொண்ணுக்கும் சரி பையனுக்கும் சரி அவங்களுக்கு பிடிச்ச போல எப்பிடி ஒரு துணையை தேடிக் கொடுத்தோமோ அப்படியே நம்ம விஷ்வா நேஹா கல்யாணத்தையும் நல்லபடியா செய்துட்டோம்னா நம்ம கடமையும் முடிஞ்சதாகிடும் இல்லையா?" என்றவரின் வார்த்தையில் அவரை திரும்பி பார்த்தார் பூரணி.

"கண்டிப்பா அவங்களுக்கும் நல்லபடியா செய்யலாம்ங்க ஆனா இப்போதைக்கு அவங்களுக்கு கல்யாணத்துக்கு அவசரம் இல்லையே.. அதுவும் விஷ்வாக்கு இப்போ என்ன அவசரம்" என்றார்.

மனைவியின் பேச்சின் கூர்மையிலே அவரிடம் மெதுவாய் பேசி தான் காரியம் சாதிக்க முடியும் என மனதினுள் கணக்கிட்டவர் தயக்கத்தோடு..
"இல்ல பூரணி..இந்த விசயத்தை உங்கிட்ட எப்பிடி சொல்றன்னு தெரியல" என தயங்க அவரை புரியாது பார்த்தார் பூரணி.

"நம்ம விஷ்வாக்கு நம்ம திவ்யா மேல விருப்பம் இருக்குது" என்றவர் நிமிர்ந்து பார்க்க.. கணவனின் கூற்றில் வியப்பும் சிறு மலர்ச்சியுமாய் பார்த்த பூரணியோ "என்னங்க சொல்றிங்க நிஜமாவா? நம்ம விஷ்வாக்கு திவ்யா மேல விருப்பமா?" என மீண்டும் அவர் சொன்னதை உறுதிப்படுத்திக் கொண்டவர் முகத்தில் புன்னகை ததும்பியது.

அவரை பொறுத்தவரை விஷ்வா தங்கமான பிள்ளை எந்தவித கொட்டபழக்கமும் இன்றி பொறுப்புடன் தன் படிப்பை நிறைவு செய்து நல்ல வேலையில் இருப்பவன்.. அவனுக்கு தன் மருமகள் மீதான விருப்பம் உள்ளுக்குள் சிறு மகிழ்ச்சியை தோற்றுவிக்க அதை முகத்தில் காட்டி கணவனை பார்த்தார்.

மனைவியின் முகம் காட்டிய பாவனையில் உள்ளுக்குள் பொங்கிய ஆர்வத்தை அடக்கி முயன்று தன்னை சாதாரணமாய் காட்டிக் கொண்டவர் "ஆமா பூரணி.. நேத்து மச்சான் தரகர்கிட்ட திவ்யாவோட கல்யாண விசயமா பேசினத கேட்டிருப்பான் போல அடுத்ததா என்கிட்டவே வந்து அவன் விருப்பத்த சொல்லிட்டான்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல இந்த விசயத்துல என்ன முடிவெடுக்கனும்னு தெரியல அதான் உன்கிட்ட செல்லலாம்னு சொல்லிட்டேன்" என குரல் தாழ்த்தி கூறி மனைவியை பாவமாய் பார்த்தார்.

கணவனின் முகம் காட்டிய வாட்டத்தில் அவர் சங்கடப்படுகிறாரோ என தப்பாய் அர்த்தம் கொண்ட பூரணியோ அவர் அருகே அமர்ந்து "என்னங்க இப்போ நீங்க எதுக்கு இவ்வளவு தயங்குறிங்க.. விஷ்வா நல்ல பையன் நிச்சயம் அண்ணா திவ்யாவ விஷ்வாக்கு கொடுக்குறதுக்கு மனப்பூர்வமா சம்மதிப்பாங்க" என மறைமுகமாகவே தன் விருப்பத்தை கணவனிடம் ஒப்புவிக்க.. கண்கள் மின்ன மனைவியை பார்த்தார் மோகன்ராஜ்.

"அப்போ உனக்கும் சம்மதமா பூரணி" என்ற கணவனின் கேள்விக்கு புன்னகையோடு தலையசைத்தார்..

"இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு பூரணி.. எங்க நீ தப்பா நினைச்சுக்குவியோன்னு பயந்துட்டேன்.. தாய் தகப்பன் இல்லாத பிள்ளைங்களுக்கு தகப்பன் ஸ்தானத்துல இருந்து அவங்க ஆசைபட்டத கொடுக்க முடியாத கடனாளியா போயிடுவேனோன்னு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா?" என அளவுக்கதிகமாகவே தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதில் முற்றாய் உருகித் தான் போனார் பூரணி.

கணவனின் நரித் தந்திரம் புரியாது அவர் வார்த்தையில் நெகிழ்ந்தவர் "என்னங்க இப்பிடியெல்லாம் பேசுறிங்க.. அவங்களும் நமக்கு பாரி நித்யா மாதிரி பசங்க தான்.. என் வயித்துல சுமக்கலன்னாலும் அவங்க என் புள்ளைங்க தான்" என்றவரை கனிவுடன் பார்த்தார்.

என்ன தான் மோகன்ராஜ் வீட்டிற்கு எதிராய் சதி திட்டம் தீட்டினாலும் அவர் எப்போதும் அவர் மனைவியின் அன்புக்கு அடிமையே.. இன்றும் மனைவியின் தன்னலம் இல்லாத பேச்சில் மகிழ்ந்தவர் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார்.

சில நொடி மௌனத்தில் கழிய பின் மௌனம் களைத்தவர்.
"பூரணி நான் உன்கிட்ட பாதி விசயம் தான் இப்போ சொல்லியிருக்கேன் மீதியையும் சொன்ன அப்புறமா இது பத்தி நீ உன்னோட முடிவ சொல்லு" என்றவர் தன்னையே கேள்வியாய் பார்த்தவரை நோக்கி.
"விஷ்வாக்கு திவ்யா மேல ஆசையிருக்குற போல நம்ம நேஹாக்கும் நம்ம கௌசிக் மேல விருப்பம் இருக்கு" என்றதும் நிமிர்ந்து கணவனைப் பார்த்தார்.

அவர் பார்வையுணர்ந்தவரும்
"எனக்கே நேத்து தான் இந்த விசயமும் தெரிய வந்திச்சு.. நேஹாக்கு கௌசிக் மேல விருப்பம் இருக்கு ஆனா நமக்கு பயந்துட்டு அவ மனச மறைச்சி இருந்திருக்கா.. நேத்து விஷ்வா இந்த விசயத்தை சொன்னப்புறம் நான் விஷ்வாகிட்ட சத்தம் போட்டேன்.. நேஹாக்கு கல்யாணம் பண்ணாம உனக்கு பண்ண முடியாதுன்னு .. அப்போ தான் விஷ்வாவும் சொன்னான் நேஹாக்கு நல்ல இடத்துல வரன் தேடி அவளுக்கு முடிச்சிட்டு தான் என் வாழ்க்கை தொடங்கும்னு.. ஆனா நேஹா அதுக்கு மறுத்துட்டா.. அப்புறம் கொஞ்ச நேரம் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் போயி கடைசியில தான் அவ மனசுல இருந்தத சொன்னா.. கௌசிக் மேல விருப்பம் இருக்குறதா" என அச்சுபிசுகாமல் உண்மை போல் கூறி முடித்தவரை அசையாது பார்த்திருந்தார் பூரணி.

அவரின் அமைதி எங்கு தன் திட்டம் பலிக்காதோ என அச்சத்தை விளைவித்திட மனைவியின் கரங்களை அழுத்தமாய் பற்றிக் கொண்டவர் "எனக்கு இந்த விசயத்துல என்ன முடிவெடுக்குறதுன்னு தெரியல பூரணிமா.. எனக்கு நம்ம பசங்க விருப்பத்துல எந்த ஆட்சேபனையும் இல்ல ஆனா இது நான் மட்டுமே எடுக்க வேண்டிய முடிவு இல்லையே எல்லாருமா ஒன்னா சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு ஆனா இத என்னால எப்பிடி எல்லார்கிட்டயும் சொல்ல முடியும். ஏற்கனவே நான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேன் இதுல என் தம்பி பசங்களையும் இங்கயே கட்டிக் கொடுக்க பேசினா இன்னுமே என்ன தப்பா தானே நினைப்பாங்க.." மனம் வருந்தி மெல்லிய குரலில் பேசியவர் பேச்சில் பதறித்தான் போனார் பூரணி.

"அய்யோ என்னங்க எதுக்கு இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க.. அப்பிடி உங்கள யாருமே தப்பா பேச மாட்டாங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதிங்க.. நீங்க சொன்ன விசயத்தை நானே அண்ணாகிட்ட பேசுறேன்.. அதோட நம்ம கிருஷ்ணாகிட்டயும் நானே பேசுறேன்.. நீங்க எத பத்தியும் கவலபடாம இருங்க" என கணவனுக்கு தன்னால் முடிந்தளவு நம்பிக்கையை கொடுத்தவர் இன்றே இதை அண்ணணுடன் பேசிவிடும் முடிவோடு அறைவிட்டு வெளியேறிச் சென்றார்.

போகும் மனைவியை பார்த்த மோகன்ராஜின் முகம் தன் திட்டம் நிறைவேறப் போகும் குரூர சிரிப்பில் பளபளத்தது.
அவர் அறிவார் நிச்சயம் தன் மனைவியிடம் கூறினாள் அவர் அதை முடித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தானே இத்தனை பசப்பு வார்த்தைகளை அள்ளித் தெளித்தார். அவர் எண்ணியபடியே மனைவியும் கூறிவிட்டுச் சென்றதில் அத்தனை மகிழ்ச்சி பொங்க அடுத்து வரும் தருணத்திற்காக காத்திருந்தார்.

கணவனின் தந்திரம் அறியாது இன்றே தன் அண்ணணிடம் பேசி ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு அண்ணனை தேடிச் சென்றவர் வீட்டுத் தோட்டத்தில் சாய்வான நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தை ரசித்தவாறே காலை நேர தேநீரை பருகிக் கொண்டிருந்தவரை கண்டு அவரை நோக்கிச் சென்றார்.

தன் முன்னே மங்களகரமாய் வந்து நின்ற தங்கையை பார்த்து புன்னகைத்த நாரயணணோ "வா பூரணிமா.. காபி குடிச்சிட்டியாடா" பாசமாய் கேட்டவர் அவரை அமருமாறு சொல்ல அண்ணணின் கேள்விகளுக்கு சிறு புன்னகையோடு பதிலளித்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

"அண்ணா நான் ஒரு முக்கியமான விசயம் பேசனும்" என தயக்கமாய் ஆரம்பித்த தங்கையின் புறம் பார்வையை திருப்பியவரும் "ம்ம் சொல்லுடாமா.." என்க. அண்ணணின் அனுமதியில் பூரணியும் கணவன் கூறியதை அச்சுப்பிசுகாமல் அவரிடம் ஒப்புவித்து அண்ணணின் பதிலை எதிர்பார்த்து அவர் முகத்தை ஆவலாய் பார்க்க.. அங்கோ முகத்தில் யோசனை ரேகையாய் அமர்ந்திருந்தவரின் தோற்றத்தில் அவர் உற்சாகம் முழுவதும் வடிந்து தான் போனது.

மௌனமாய் யோசனையில் ஆழ்ந்திருந்தவரின் மௌனத்தை களைப்பவராய் "என்ன அண்ணா உங்களுக்கு இதுல விருப்பமில்லையா?? விஷ்வா நேஹா இரண்டு பேருமே நல்ல பசங்கண்ணா அவங்களுக்கு வெளியே வரன் தேடுறத விட அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தா நம்மளோடவே காலம் பூரா ஒன்னா இருந்துடுவாங்களே" என எங்கே அண்ணன் மறுத்துவிடுவாரோ என்ற பயத்தில் படபடப்பாய் பேசி முடித்து தன் முகத்தை பார்த்திருந்த தங்கையின் மனநிலை நாராயணனுக்குப் புரியாமலில்லை.
பெற்ற பிள்ளைகள் மேல் கொண்ட பாசத்திற்கு நிகராகவே மற்றவர்கள் மீதும் அன்பு கொண்ட தங்கை அவர்களின் வாழ்வு சிறக்க நெஞ்சம் முழுவதும் ஆசையை சுமந்து தன்னை பார்த்திருப்பதை அவர் ஏக்கம் நிறைந்த பார்வை வழியே உணர்ந்திருந்தவருக்கோ
தன் மௌனம் தான் அவரை படபடக்க வைத்துள்ளது என்பது புரிய சிறு புன்னகையுடன் தங்கையின் கரத்தை பற்றியவர் "நீ சொன்னதுல எனக்கும் விருப்பம் தான் பூரணிமா" எனும் போதே பூரணியின் முகமோ பிரகாசிக்க அடுத்து அவர் கூறியதில் முகமோ சற்றே யோசனையில் சுருங்கித் தான் போனது.

"நம்ம பசங்க நம்மளோடவே இருக்குறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்ல பூரணிமா ஆனா ஒரு பக்க விருப்பத்தை மட்டும் வெச்சிகிட்டு நாம எந்த முடிவுமே எடுக்க முடியாதுமா.. இந்த விசயத்துல கிருஷ்ணா திவ்யா இவங்க இரண்டு பேரோட விருப்பம் முக்கியம்.. அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லாம இருந்துச்சுன்னா என்ன செய்றது.. யாரையும் கட்டாயத்துல வாழ வைக்க கூடாது.. நம்ம துணையோட நாம வாழ்ற வாழ்க்கையை பிடிச்சி வாழ்ந்தா தான் அந்த வாழ்வுக்கே ஒரு அர்த்தமே இருக்கும்" என்றவரின் கூற்றிலிருந்த உண்மை பூரணிக்கு புரிய நிதானமாய் நிமிர்ந்து கண்ணில் நிறைந்திருந்த குழப்பத்தோடு அண்ணனை பார்த்தார்.

"இந்த விசயத்தை பத்தி அவங்க ரெண்டு பேருக்கிட்டேயும் பேசுமா .. அவங்களுக்கு இதுல முழு சம்மதம்னா எனக்கும் மனப்பூர்வமான சம்மதம் தான் அதுக்கப்புறம் அடுத்த முகூர்த்ததுலே கல்யாணம் பண்ண சொன்னாலும் அண்ணன் நான் தயார் தான்" என தன் விருப்பத்தையும் சேர்த்தே சொல்லிட மகிழ்ச்சியுடன் அண்ணணின் கரங்களை பற்றிக் கொண்டார்.

"ரொம்ப சந்தோஷம் அண்ணா நானே அவங்ககிட்ட பேசி அவங்க விருப்பத்தை கேட்கிறேன்" என்றவர் அங்கிருந்து எழுந்து அடுத்து சென்றது என்னவோ கௌசிக்கின் அறை நோக்கியே.

பொழுது விடிந்தும் இன்னுமே அறைவிட்டு வெளியே வராதவனை தேடி அவன் அறைக்குள் நுழைந்தவர் கண்டது என்னவோ அறைக்கதவை பார்த்தவாறே கண்திறந்து படுத்திறந்தவனையே..

அவன் இருந்த கோலமே இப்பொழுதுதான் விழித்திருக்கிறான் என்பதை உணர்த்த புன்னகையோடு "என்ன கண்ணா எழுப்பிவிட்டுட்டேனா" என கேட்டவாறே அவனருகே கட்டிலில் சென்றமர அவனும் சிறு புன்னகையோடு எக்கி அவர் மடியில் தலை சாய்த்தவன் மீண்டும் கண்மூடி அத்தை மடி தந்த தாய்மையின் சுகத்தில் கண்மூடினான்.

அவன் செய்கையில் அவர் புன்னகை விரிய களைந்திருந்த அவன் தலை கோதிவிட்டவர் பேச வந்ததை மறந்து மௌனமாய் அவனை பார்த்திருந்தார்.

சில கணங்களாய் நிலவிய மௌனத்தை களைக்கும் விதமாய் "என்ன விசயம் அத்தம்மா? எதுக்கு ரொம்ப யோசனை?" என பட்டென்று ஒலித்த அவன் குரலில் தன் யோசனை களைந்தவர் அவனை பார்க்க அவனும் விழி திறந்து அவரை தான் பார்த்திருந்தான்.

அவன் கேள்வியில் நொடியில் தயங்கியவரின் தயக்கத்தை கண்டு கொண்டவன் எழுந்தமர்ந்து "என்னாச்சு என் ஸ்வீட் அத்தம்மா இன்னைக்கு என்கிட்டவே இந்த தயங்கு தயங்குறாங்க? அவ்வளவு பயமா என்ன இந்த ஐபிஎஸ் ஆபிஸர்கிட்ட" என சிறு சிரிப்புடன் அவரை இயல்பாக்கும் பொருட்டு பேசி வைத்தவனின் பேச்சில் சிரித்தவர்.

"ஹாங் எனக்கொன்னும் இந்த பொடிப்பயல பார்த்து பயமில்லையே.. நான் தூக்கி வளர்த்த என் கண்ணாகிட்ட எனக்கென்ன பயம்" என கெத்தாய் கூறியவரை பார்த்து சிரித்து
"அது.. " என்றவன் "சரி சொல்லுங்க என்ன விசயம்" என அவரிடம் கேட்டு வைக்க அவனை நிமிர்ந்து பார்த்தவர்
"நான் உன்கிட்ட பேசனும் கண்ணா நான் இப்போ சொல்லப் போறதுல உனக்கு இஷ்டமில்லன்னா நீ மறுத்து சொல்லிடனும் சரியா?" என ஆரம்பித்தவரின் பேச்சிலே ஏதோ பெரிய விசயம் பேசப் போகிறார் என புரிந்தவன் தலையை அசைத்து சரி என்க அதன்பிறகே தான் சொல்ல வந்ததை கூற ஆரம்பித்தார்.

முதலில் விஷ்வாவின் திவ்யா மீதான விருப்பத்தைக் கூறியவர் பின் நேஹா பற்றியும் கூறிட முதலில் விஷ்வாவின் காதலை கேட்டு முகத்தில் புன்னகை மின்ன இருந்தவனோ அடுத்து கூறியதில் முகம் சுருங்க சற்றே யோசனையாய் குழப்பம் சூழ அவரைப் பார்த்தான் கௌசிக்.

அவரோ அவன் குழப்பம் புரியாதவராய் பேசிமுடித்தவர் அவனிடம் "கண்ணா நேஹாவும் எனக்கு நித்யா போல எம் மக தான்.. அவ ரொம்ப நல்ல பொண்ணுப்பா.. உன் மேல விருப்பத்த வளர்த்துட்டு யார்கிட்டயும் சொல்லாம தவிச்சியிருக்கா" என பேசியவரை இடைமறித்தவன்.

"அத்தம்மா நான் முதல்ல நேஹாகிட்ட இத பத்தி பேசிட்டு என் முடிவ சொல்றேன்.. நீங்க திவ்யா விஷ்வா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க" என்றவனை சற்று அதிர்வாய் பார்த்தார்.

"என்ன கண்ணா இப்பிடி சொல்ற எனக்கு உங்க நாழு பேர் கல்யாணத்தையும் ஒரே மேடையில தான் வைக்கனும்னு ஆசை.. ஆனா நீ இப்பிடி சொல்ற.. அதுவும் திவ்யா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்காமலே" என்றவர் தோளணைத்தவன்

"அதெல்லாம் உங்க மருமக ஓகே தான் சொல்லுவ.. ஏனா அங்கேயும் லவ்ஸ் தான் ஓடுது" என பெரியவர்கள் அறிந்திறாத காதல் நாடகத்தை தெள்ளத் தெளிவாய் தெரிந்து வைத்திருந்தவன் அவரிடமே போட்டுடைத்தான்..

அவன் கூறியதில் கண்கள் விரிய அவனை பார்த்தவர் உண்மையா என்பது போல் கேட்க ஆமென்று தலையசைத்து "விஷ்வா ரொம்ப நல்லவன் அத்தம்மா அவனவிட என் திவி குட்டிக்கு வேற யாரும் நல்லவன் கிடைக்கமாட்டான்.. அவன் அவள ரொம்ப நல்லாவே பார்த்துக்குவான்" என்றவன் பின் "ஆனா ஒன்னு நம்ம திவி குட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டு பயபுள்ள ரொம்ப கஷ்டப் போகுது" என தங்கையின் குணம் முழுமையாய் தெரிந்தவனாய் சொல்லிச் சிரிக்க அவனோடு இணைந்து சிரித்தார் பூரணி..

"விஷ்வாவ போல நேஹாவும் நல்ல பொண்ணு தான் கண்ணா" என நேஹா பற்றி அவன் முடிவு என்ன என அறிந்து கொள்ள மீண்டும் கேட்க.

அவனோ "ஐ நோ அத்தம்மா.. நல்ல பொண்ணு தான்.. எனக்கு பிடிக்கலன்னு இல்ல நம்ம குடும்பத்துல எல்லார பிடிக்குற போலவும் அவளையும் பிடிக்கும் ஆனா" என்றவன் நிறுத்தி அவரைப் பார்க்க அவரும் ஆவலாய் அவனையே பார்த்திருந்தார்..

"எனக்கு இப்போ இந்த கல்யாணத்துல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல அத்தம்மா.. முதல்ல ட்ரெய்னிங் முடிச்சிட்டு வேலையில ஜாயின் பண்ணுறது தான் இப்போ என் மூளை மனசு எல்லாத்தையும் ஆக்கிரமிச்சு இருக்கு.. இந்த நேரத்துல கல்யாணம் பண்ணி அந்த லைப்க்குள்ள என்னால முழு மனசோட நுழைய முடியும்னு தோணல.. அது தான் நேஹாகிடட் நானே இத பத்தி பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன்" என விளக்கமாய் அவன் மனநிலையை எடுத்துரைத்தான்.

அவன் கூறியதில் இருந்தே அவனுக்கு திருமணத்தில் மறுப்பு இல்லை என்பது புரிய மனதில் சிறு நிம்மதி பரவியது.
அவன் மறுப்பும் சொல்லவில்லை தான் ஆனாலும் அவன் விருப்பமும் கூறவில்லை என்பதை அவர் அக்கணம் உணரவில்லை.

"இது தான் உன் பிரச்சனையா கண்ணா.. நானும் வேற ஏதோன்னு பயந்திட்டேன்" என அவனை பார்த்து சிரித்து வைத்தவர்
"இதெல்லாம் பத்தி நீ கவலபடாத கண்ணா இப்போவே கல்யாணம் பண்ணி வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு இல்ல உங்களுக்கு நேரமும் காலமும் நீண்டு இருக்கு நீங்க பொறுமையாவே உங்க வாழ்க்கையை தொடரலாம் அதுக்கு நல்ல புரிதலோடனான ஒரு உறவ உங்களுக்குள்ள உருவாக்கினாலே போதும் எத்தனை நாள் போனாலும் அந்த உறவு காத்திருக்கும்" என அவனுக்கு தெளிவாய் எடுத்துரைத்தவர் தொடர்ந்து "இங்கப் பாரு கண்ணா எனக்கு தெரியும் நீ இந்த வேலைக்குள்ள முழு மூச்சா இறங்கினா பிறகு எதை பத்தியும் யோசிக்க மாட்டேனு அதனால நீ வேலையில ஜொய்ன் பண்ண முன்னாடியே உங்களுக்கு கல்யாணத்த பண்ணி பார்க்கனும்னு ஆசையா இருக்குபா.. உனக்கு சரின்னா நீ ட்ரெய்னிங் போக முன்னாடி உங்க கல்யாணத்தையும் முடிச்சிடலாம் என்ன சொல்ற கண்ணா?" என ஆவலாய் தன் பதில் எதிர்பார்த்து கேட்டவரிடம் மறுத்து சொல்ல மனிமில்லாதவன் மௌனமாய் தலையாட்டலுடன் சிறு புன்னகை அளித்திட மனம் சந்தோசத்தில் துள்ள அவன் கன்னம் வழித்து முத்தமிட்டார்.


"ரொம்ப ரொம்ப சந்தோஷம் கண்ணா இப்போவே வீட்ல எல்லாருக்கிட்டயும் இத பத்தி பேசுறேன் கண்ணா.. அப்புறம் நேஹாகிட்டயும் நீ பேச வேண்டியத சேர்த்து நானே பேசுறேன்.. நீ ஜம்முனு கல்யாண மாப்பிள்ளையா ரெடியாகு அது போதும்" என்றவர் அறையை விட்டு வெளியேற சிறு புன்னகையோடு போகும் அவரை பார்த்திருந்தான் கௌசிக்.

அவனுக்கோ திருமணத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிடினும் தன் விருப்பத்துக்குரிய அத்தையின் முகம் காட்டிய மகிழ்ச்சிக்காவேனும் சம்மதமாய் தலையசைத்தவனுக்கு இப்போது நேஹா பற்றிய எண்ணங்கள் மனதில் எழுந்தது.
தன் மீது அவளுக்கு காதலா? என ஒரு பக்கம் கேள்வி எழுந்தாலும் இன்னொரு பக்கமோ திருமணம் என்ற பந்தத்திற்கு நான் தாயாரா?' என்ற கேள்வியும் எழாமலில்லை. எனினும் மனதின் கேள்விகளை ஒத்தி வைத்தவன் எது நடந்தாலும் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அடுத்து இனி வரும் தன் பயிற்சிக்கான ஆயத்தங்களை தொடங்கினான்.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 17



"நல்ல நேரம் முடியுறதுக்குள்ள தாம்பூலம் மாத்திடலாமே" என்ற ஐயரின் குரலில் அனைவரின் பார்வையும் வாசலையே பார்த்திருந்த நாராயணின் மேலே பதிந்தது.

அவருக்கும் சூழ்நிலை புரிந்த போதிலும் தன் ஆருயிர் நண்பன் இல்லாது அதுவும் அவனின் மகன் போன்ற பாசத்துக்குரியவனின் வாழ்வில் நிகழவிருக்கும் சுபநிகழ்வுக்கு நண்பன் இல்லாமலா என்ற கவலை மனதை அரிக்க கலங்கிய உள்ளத்தை வெளிக்காட்டதவராய்.. எப்படியேனும் நண்பன் வந்துவிடமாட்டானா என்ற நப்பாசையில் வாசலையே பார்த்திருந்தார் நாராயணன்.

அங்கிருந்த குடும்பத்தவர்களுக்கோ அவரின் மனப் போராட்டம் புரிந்தாலும் அவர்களாலும் என்ன தான் செய்ய இயலும் அமைதியாய் பார்த்திருந்தனர்..

மௌனமாய் தந்தையை பார்த்திருந்த கௌசிக்கின் மனமும் தன் மனதுக்கு நெருக்கமான ஓர் உறவு இல்லாது நிகழும் இந்த நிகழ்வில் பெரிதும் விருப்பமேதும் இல்லாவிடினும் தன் மனதை வெளிப்படுத்தாதவனாய் தன் உணர்வுகளை மறைத்து அமர்ந்திருக்க ஒரே காரணம் அவன் அத்தையே.

ஆம் பூரணியே, என்று கௌசிக்கின் சம்மதத்தை பெற்றாரோ அன்றே குடும்பத்தினர் முன்னிலையில் திருமண பேச்சை எத்தி வைத்தவர் அனைவரின் சம்மதத்தையும் பெற்று இதோ அடுத்த வாரமே நல்ல முகூர்த்ததில் இரு ஜோடிகளுக்கான நிச்சயதார்த்த விழாவை சிறப்பாய் ஏற்பாடு செய்திருந்தார்.

பூரணியின் அவசரத்தினாலே அடுத்த வாரமே நிச்சயதார்த்தை வைக்க முடி செய்திருந்த நாராயணனோ இதைப் பற்றி நண்பனுக்கு அழைத்து கூறிட வேண்டும் என எண்ணி எத்தனை அழைத்தும் கூட நண்பனை தொடர்பு கொள்ள முடியாது போனது.

என்னாச்சோ என்ற கேள்வி மனதை குடைந்து அச்சுறுத்த சிவாங்கிக்கு அழைத்து அவளிடம் பேசியவருக்கு நண்பன் ஏதோ முக்கியமான கேஷ் விசயமாக பிஸியாக இருப்பது தெரியவர சிவாங்கியிடம் விடயத்தைக் கூறி அவளை அழைத்தவர் நண்பனையும் அழைத்து வருமாறு கூறி வைத்தார்.

ஆனால் நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தது என்னவோ சிவாங்கி மாத்திரமே.. அவளிடம் விசாரித்ததில் நண்பன் வேலை காரணமாக வெளியூர் சென்றிருப்பது தெரிய மனம் நெருடினாலும் கடைசி நிமிடமாவது நண்பன் வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்போடு வாசலை பார்த்திருந்தவர் "அண்ணா" என்ற தங்கையின் அழைப்பில் அவர் புறம் திரும்பினார்.

"நல்ல நேரம் போகுதுண்ணா நிச்சயத்தை முடிச்சிடலாமே" என்ற தங்கையின் குரலிருந்த கெஞ்சலில் பெருமூச்சை இழுத்துவிட்டவர் தலையசைத்து சரியென்றிட நிச்சய விழா ஆரம்பமானது..

ஐயர் நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்து தட்டு மாற்றும் கடைசி நேரம் வரை நண்பனை எதிர்பார்த்து ஏமாந்து போனவர் மனதேயின்றி அந் நிகழ்வுகளை சிறப்பாய் நிறைவேற்றினார்.

கௌசிக்கிற்கும் மனம் ஒன்றாது போக சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் நிச்சயம் முடிந்த அடுத்த கணமே ஏதேதோ காரணத்தை கூறியவனாய் அங்கிருந்து எழுந்து சென்றான்.

அப்பா மகனின் மனநிலையை உணர்ந்த மோகன்ராஜ்ஜிற்கோ உள்ளுக்குள் இரட்டிப்பு மகிழ்ச்சி கூத்தாடியது.. தான் எண்ணப்படி திருமண ஏற்பாடு ஒருபக்கம் நடக்க இருவரினதும் பாசத்துக்குரியவரின் வருகை இல்லாது போனதும் அவருக்கு மேலும் மகிழ்ச்சியைக் கூட்ட சந்தோஷமாகவே அனைத்து வேலைகளையும் செய்தார்.

விஷ்வா திவ்யா காதல் கொண்ட இரு உள்ளங்களும் திருமணம் எனும் புதிய பந்தத்தின் ஆரம்ப நிகழ்வில் மனம் நிறைந்த எதிர்பார்ப்போடு காத்திருக்க.. நேஹாவோ அவர்களை பழிதீர்க்கும் நாளாய் தன் திருமண நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் திருமண நாளை எதிர்பார்த்துக் காத்திருக்க காலமும் நில்லாது அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விரைந்தோடியது.

இதோ அனைவரும் எதிர்பார்த்த திருமண நாள் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தன்னறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்த தந்தையின் முகத்தில் தெரிந்த குழப்பம் கண்டு புருவம் நெறிய அவரைப் பார்த்திருந்தான் கௌசிக்.

நீண்ட நேரம் தனக்குள் யோசித்தவர் அவனிடம் "கிருஷ்ணா எனக்கென்னமோ பயமாவே இருக்குப்பா நாதாவோட பேசி நாள்கணக்கா போயிடுச்சு அவன்கிட்ட இருந்து எந்தவொரு தகவலும் வரல என்னாச்சோ ஏதாச்சோனு ரொம்ப படபடப்பா இருக்குப்பா" தன் மனதிலுள்ள பயத்தை மகனிடம் ஒப்புவித்தவராய் மகனை பார்த்த பார்வையிலே ஏதாவது செய்யேன் என்ற கெஞ்சல் இருக்க அது புரிந்தவனும் எழுந்து தந்தையின் கரங்களை பற்றியவனாய் "அப்பா நீங்க கவலபடாதிங்க குருப்பா ஏதோ முக்கியமான கேஷ் விசயமா இருக்காங்க.. அது ரொம்ப கான்பிடன்ஸியலானதா இருக்குறதுனால யார்கிட்ட இருந்தும் என்னால விளக்கம் எடுக்க முடியல" என தான் முயற்சித்தும் பயனில்லை என்றவனுக்கும் மனதில் அவரை பற்றிய எண்ணங்களே.. இருந்தும் அவனுக்கு தெரிந்த குருவோடு வேலை செய்பவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அவனுக்கு அளித்த தகவல் நம்பகத் தன்மையுடையது என்பதினாலே அவனும் தன் குழப்பங்களையெல்லாம் ஒத்தி வைத்திருந்தான்.

மகனின் கூற்றில் சிறிது மனம் தெளிந்தாலும் ஆருயிர் நண்பன் இல்லாது மகனின் திருமணம் நடைபெறப் போகிறதே என்ற கவலையோடு சேர்த்து நண்பன் மீது சிறு கோபமும் துளிர்விட "பொல்லாத சீக்ரெட் வேலை.. இந்த வயசான காலத்துல ரிட்டெய்ர் ஆகுறத விட்டுடு பெரிய இளவயசு பையனாட்டாம் ஓவரா தான் ஆடுறான்.. வரட்டும் வரட்டும் இருக்கு அந்த பொலீஸ்காரனுக்கு கச்சேரி" என நண்பனை திட்டியவரை இதழில் பூத்த புன்னகையோடு பார்த்தான் கௌசிக்.

"இங்கப் பாரு கண்ணா அவன் உன் கல்யாணத்துக்கே வராமா விட்டிருக்கான் நீயும் நான் சொல்ற வர அவன் கூட பேசாத சரியா" என மகனுக்கு உத்தரவிட்டவர் வேகமாய் அறையை விட்டு வெளியேறிச் சென்றார்.

போகும் தந்தையை பார்த்தவனோ தலையாட்டி தனக்குள் சிரித்தவன் நாளைய திருமணத்தை எண்ணி மனதில் எழுந்த வெறுமையை தடுக்க முடியாதவனாய் கட்டிலில் கண்மூடி தூங்கிப் போனான்.

விடிந்தால் திருமணம் அதிகாலை சுபமுகூர்த்ததில் அவர்களது திருமணம் வைத்திருக்க வீட்டிலோ அதற்கான வேலைகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்க அனைவரையும் ஏவியபடி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் நாராயணன்.

அதே சமயம் தங்கள் அறையில் அவரை வீழ்த்துவதற்கென்று பாரிய திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தனர் அவ்விருவரும்.

"பெரியப்பா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் ரெடி பண்ணிடிங்களா?" என்ற நேஹாவிடம்
"ஆமாம்மா எல்லாம் தயார் நீ மட்டும் சொல்லிக் கொடுத்தது போல சரியா செய்திடு புரிஞ்சுதா" என்றவரை பார்த்தவள் கண்களில் கலக்கம் சூழ
"ஆனா பெரியப்பா இ..இது தப்பில்லையா? நாம இந்தளவுக்கு இதுல கீழிறங்கனுமா?" என கேட்கும் போதே தான் செய்யப் போகும் காரியத்தை எண்ணி உடல் கூசினாள்.

அவளின் பேச்சில் அவளை முறைத்தவர் "என்னம்மா நீயும் உன் அண்ணன போல கட்சி மாறுறியோ?" என காட்டமாய் கேட்க அதில் கோபத்தில் முகம் சிவக்க அவரைப் பார்த்தவள் அழுத்தமாய் "நான் ஒன்னும் கட்சி மாறல" என்றாள்.

அவள் கோபத்தில் புன்னகைத்தவர் "ம்ம் எனக்கு உன்ன பத்தி தெரியும் நேஹா.. நீ எதபத்தியும் யோசிக்காம சொன்ன வேலையை செய்து முடி" என்றார்.

இருந்தும் சற்றே தயங்கியவள் "அண்ணாகிட்ட ஒரு வார்த்தை சொல்லலாமே" என்றாள்.

"ப்ச் புரியாம பேசாத நேஹா அவன் இதுக்கு ஒத்துப்பானு எனக்கு நம்பிக்கையில்லை.. அப்புறம் நாம போட்ட ப்ளான் முழுவதும் கெட்டுடும்"

"ஆனா பெரியப்பா "

"இங்கப் பாரு நேஹா உன் அப்பாக்கு நடந்த கொடுமையைப் பற்றி நினைச்சுப்பாரு உன் அப்பா உன் கண் முன்னாடி எப்பிடி வேதனைபட்டு இறந்தாருனு..
நீ அவனுக்கு பண்ணின சத்தியம் எங்கே போச்சு இந்த நாராயண பழி தீர்த்து உன் அப்பன் பட்ட அதே அவமானத்தை அவனுக்கு கொடுக்கனும்னு நீ சொன்ன வார்த்தை எங்க போச்சு" என்க அவள் கண்கள் கலங்கி சிவப்பேறியது.

அதைக் கண்டு தனக்குள் புன்னகைத்தவர் அவளை பேசிப்பேசியே மேலும் உசுப்பேத்திவிட்டு தாங்கள் தீட்டிய கேவலமான திட்டத்தினை அன்றிரவே செயல்படுத்தத் தொடங்கினார்.

மோகன்ராஜ்ஜின் திட்டப்படி வேலைகளை ஏவி விட்டு சற்று ஆசுவாசமாய் அமர்ந்திருந்த நாராயணனுக்கு கொடுத்த காபியில் போதை கலந்து கொடுக்கப்பட்டது.

காபியை குடித்து சில விநாடிகள் கடந்திருக்க உட்சென்ற போதையோ தன் வேலையை காட்டத் தொடங்க தலை கிறுகிறுக்க தள்ளாட்ட நடையோடு எழுந்தவர் தன்னறை நோக்கிச் செல்ல முயல மறைவாய் நின்று அவரையே பார்த்திருந்த மோகன்ராஜோ அவரை திசைதிருப்பி நேஹாவின் அறைக்குள் அனுப்பிவிட்டார்.

குடிப்பழக்கமே இல்லாத நாராயணனுக்கு அவர் அறியாமல் உட் செலுத்தப்பட்ட போதையின் வீரியமும் அந்த சூழ்ச்சிக்காரனின் கேவலமான திட்டத்திற்கு சாதகமாய் அமைந்திட அவர் வலையில் சிக்கிக் கொண்டார் நாராயணன்.

நள்ளிரவைத் தொடும் நேரம் மற்றையவர்களோ தூக்கத்திற்கென தத்தமது அறைக்குள் அடைந்திருந்த நேரம் பார்த்தே மோகன்ராஜ்ஜோ திட்டத்தை அமுல்படுத்திருந்ததாலோ என்னவோ இத்தனை பெரிய பாதகமான செயலை தடுக்க அங்கு யாருமே இல்லாது தான் போனது.

அறைக்குள் தள்ளாட்டத்துடன் நுழைந்தவரைக் கண்ட நேஹாவின் கண்ணில் மின்னிய பழிவெறியில்
எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத காரியத்தை செய்யத் துணிந்தாள் அவள்.

அடுத்த நாள் காலை தனதறையில் கண்விழித்து எழுந்த நாராயணனுக்கு தலை வலிப்பது போல் இருக்க என்ன நடந்தது என்பதே தெரியாமல் யோசனையில் மூழ்கியவருக்கு எதுவும் புலப்படவில்லை அவர் மேலும் யோசிப்பதற்கு தடையாக இன்றைய கல்யாண வேலைகள் அவரை உள்ளிளுத்துக் கொள்ள தன் வேலையை கவனிக்கத் தொடங்கினார்.

அக்கணம் அவர் அறிந்திருக்கவில்லை செய்யாத தப்பிற்கு தண்டனையாக தன் மானத்தையும் உயிரையும் காணிக்கை வைக்கப்போகிறார் என்பதை.

அந்த அதிகாலை வேளை வீடே திருமணக் களையில் திளைத்திருக்க அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சியும் நிறைவும் நிறைந்து வழிந்தது.

வீட்டின் நடுவில் அழகுற அலங்கரிக்கப்பட்ட மணவறையில் கம்பீர தோரணையும் அமர்ந்திருந்தனர் மணமகன்கள் இருவரும்.

"நாழியாகிடுது பொண்ணுங்கள அழைஞ்சிண்டு வாங்கோ" என்ற ஐயரின் அழைப்பில் அழங்கரிப்பட்டு அழகு தேவதைகளென மணவறை நோக்கி வந்தனர் மணப்பெண்கள் இருவரும்.

சபை நோக்கி வணங்கிவிட்டு மணவறையில் அமர்ந்தவர்கள் ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினர்.

மூகூர்த்த நேரம் நெருங்க பெரியவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட மங்கள நாணோ கையில் ஏந்தினர் மணமகன்கள் இருவரும்.

ஐயர் மந்திரம் ஓத கெட்டிமேளம் முழங்க
முதலில் தன் மனம் நிறைந்தவள் கழுத்தில் அவசரமாய் மங்கல நாணை பூட்டிய விஷ்வாவோ அடுத்த கணம் வீறுகொண்டவனாய் எழுந்து நின்றவன்

தன்னருகே கையில் மங்கள நாணை வைத்து வெறித்த பார்ர்வையாய் அமர்ந்திருந்த கௌசிக்கின் கரங்களிலிருந்த மாங்கல்யத்தை தட்டிவிட்டவன் அவனருகே அமர்ந்திருந்த நேஹாவை மணமேடையிலிருந்து எழுப்பியிருந்தான்.

பொங்கிய மகிழ்ச்சியோடு அர்ச்சதை தூவிய அனைவருமே கணத்தில் நடந்த நிகழ்வில் அதிர்ந்து தான் போயினர்.

திருமணத்தில் அத்தனை ஈடுபாடு இல்லாது இருந்த கௌசிக்குமே தாலியை கரங்களில் ஏந்திய நொடி அலைப்புறும் மனதை அமைதிப்படுத்த எண்ணி விழி மூடி திறந்த அக்கணத்தில் நிகழ்ந்த விஷ்வாவின் ஆக்ரோஷத்தில் சற்றே அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டாதவனாய் அவனையே புருவம் சுருங்க அழுத்தமாய் பார்த்தவாறு எழுந்து நின்றான்.

விஷ்வாவின் அதிரடியில் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றது என்னவோ சிலகணமே.

அதிர்விலிருந்து மீண்டவராய் பூரணியோ
"விஷ்வா" என்று அவனை அழைத்தவர்
அவனை முறைத்தபடி
"என்ன பண்ணிட்டு இருக்க நீ" என்றவரின் கோபம் நிறைந்த கேள்விக்கு பதிலாக நக்கலாய் ஓர் பார்வை கௌசிக்கை நோக்கிச் செலுத்தியவன்

"இந்த கல்யாணம் நடக்காது.. நடக்க விடமாட்டேன்" என்றான் அழுத்தமாய்.

"விஷ்வா என்ன உளறுற.. தாலி கட்டுற நேரத்துல இது என்ன விளையாட்டு" என்றவருக்கோ அவன் செய்கையில் அத்தனை கோபம் கிளர்ந்திருந்தது.

"நான் ஒன்னும் உளறள கல்யாணம் நடக்கும் ஆனா மாப்பிள்ளை இவன் இல்லை" என்றவன் பார்வையோ இப்போது நாராயணனின் மீது வன்மமாய் படிந்தது.

விஷ்வாவின் பேச்சும் பார்வையும் நாராயணனுக்கு எதுவோ தவறாய் நடக்கப் போவதை உணர்த்த அவரது விழிகளோ அங்கே மணமேடையில் புதுத் தாலி தொங்க கண்ணீர் மல்க நின்ற தன் செல்ல மகளையும் உணர்வுகள் துடைத்து வெறித்து நின்ற தன் மகனையும் தொட்டது.

விஷ்வின் பேச்சில் சிவாவுக்கோ கோபம் எல்லை மீற "டேய் என்னடா" என எகிறியவனாய் வர
விஷ்வாவோ "ஷ்ஷ்ஷ் சத்தம் வரக்கூடா.. இங்க இப்போ நான் நான் மட்டும் தான் பேசுவேன்" என அடிக் குரலில் சீறியவன் நாராயணனிடம் "நீங்க தான் பெரிய மனுசராச்சே.. காதலிச்ச ரெண்டு பேரை சேர்த்து வைக்கிறதுல தான் நீங்க ரொம்ப நல்லவராச்சே" எனும் போதே ஏகத்துக்கும் அவன் குரலில் நக்கல் தெறித்தது.

அவன் நக்கல் தொனியில் பொங்கியெழுந்த கோபத்தை கட்டுபடுத்தி அவன் பேசட்டும் என்று அமைதிகாத்து அவனை வெறித்து நின்றான் கௌசிக்.

அவன் உள்ளம் முழுவதும் எரிமலைக்குழம்பின் கொதிப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.

திவ்யாவிற்கோ நடக்கும் எதையுமே ஜீரணிக்க முடியாத நிலை.. மனதில் மணாளானை குடிகொண்டவன் தன்னை சரிபாதியாய் ஏற்று நொடியில் தன் உயிரானவர்களை வார்த்தையால் வதைப்பது கண்டு உறைந்து நிற்க அவள் விழிகளிலோ நில்லாமல் ஓடியது கண்ணீர்.

தன்னை நேசித்தவளின் மனதையும் தன்னை ஈன்றெடுக்காத தாயின் மனதையும் சுக்குநூறாய் உடைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும் உள்ளத்தில் நிரம்பி வழிந்த பழிவெறிக்காக மேலும் வார்த்தைகளை சிதறவிட்டான் விஷ்வா.

"எல்லாரும் கேட்டுங்கங்க இதோ என் தங்கச்சியும் என்னோட நண்பன் ரோஹித்தும் தான் உயிருக்குயிரா விரும்புறாங்க" என்றவன் அங்கே ஓரமாய் நின்றவனை கைநீட்டி அழைத்து ததன்னருகே வைத்துக் கொண்டு கூறிட அவனை அதிர்ந்து பார்த்த பூரணியின் பார்வையோ அங்கே நின்றிருந்த தன் கணவனின் மீது படிய. மனைவியின் பார்வையை கண்டும் காணாதவராய் நின்றிருந்தார் மோகன்ராஜ்.

நாராயணனுக்கு அவன் கூற்றில் உள்ளம் துடிக்க மகன் முகம் நோக்கியவருக்கோ அவனது இறுகிய தோற்றமே அவன் மனநிலை உணர்ந்தவருக்கோ தற்போது விஷ்வாவின் மீது கோபம் எழ கோபத்துடன் "விஷ்வா உனக்கு இவங்க விரும்புறது தெரியும்னா எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன.." என இடையிட்டு ஒலித்த நாராயணனின் குரலில் திரும்பியவனோ எள்ளல் நிறைந்த பார்வையோடு


"எதுக்கா.. எல்லாமே உங்கள பழிவாங்கத்தான் இப்பிடியெல்லாம் பண்ணோம்.. எங்க அப்பாக்கு நீங்க செய்த அதே துரோகத்தை இப்போ இதோ இந்த மண்டபத்துல வெச்சு உங்க பையனுக்கு நாங்க பண்ணனும்ங்குறதுக்காக தான்" என ஆக்ரோஷமாய் கத்தியவன் கத்தலில் மொத்த பேருமே அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 18



விஷ்வாவின் ஆக்ரோஷத்தில் ஒட்டு மொத்த மண்டபமுமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க.


அவனோ "இதோ இந்தாள பழிவாங்க தான் எல்லாமே செய்தோம் ப்ளான் பண்ணி இந்த கலல்யாணத்த ஏற்பாடு பண்ணினோம் எல்லாமே இதோ இந்த பெரிய மனுசன்ட முகத்திரையை கிழிக்கத்தான்" கை நீட்டி கோபமாய் இரைந்தான்.

நாராயணணுக்கு விஷ்வாவின் இந்த அவதாரம் கண்டு பழைய நினைவுகள் மனக் கண்ணில் ஊர்வலம் வர மனதில் திடுக்கிட்டவர் பார்வையோ இப்போது அங்கே நின்ற மோகன்ராஜின் மீது விழுந்தது..

அவர் பார்வைக்காகவே காத்திருந்த மோகன்ராஜோ அவரைப் பார்த்து குரூரமாய் புன்னகைக்க
அதில் உள்ளம் அதிர நின்ற நாராயணணின் மனதிலோ அன்றைய
மோகன்ராஜினதும் அவன் தம்பியினதும் கொடூர முகம் மின்னி மறைந்தது.

ஒரு அய்யோக்கியனுக்காக தன்னை பழிவாங்க எண்ணி தன் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடியவர்களை எண்ணி கோபம் கிளர்ந்தெழ மோகன்ராஜை தீப்பார்வை பார்த்தார் நாராயணன்.

அவருக்கு தெரியும் வார்த்தைகள் விஷ்வாவினுடையதாக இருந்தாலும் அதற்கான வித்திட்டவர் மோகன்ராஜ் மட்டுமே என்பது. அதனாலே கோபத்தில் உடல் இறுக நின்றிருந்தவர் அடுத்து விஷ்வா செய்த செயலில் பொங்கிவிட்டார்.

"ரோஹித் நீ உட்காரு நேஹா கழுத்துல நீ தாலியைக் கட்டு எவன் தடுக்கிறான்னு நானும் பார்க்குறேன்.." என்றவன் கௌசிக்கிடம் "உன் அப்பா செய்ததுக்கு இது தான் நான் கொடுக்குற தண்டனை காலம் பூரா இந்த அவமானம் உன் வாழ்க்கைல தொடரனும்" என வன்மமாய் உரைத்தவன் அவனை விலக்கிவிட்டு ரோஹித்தை அமர வைக்க விஷ்வாவின் செயலில் கோபம் எல்லையை கடந்தவராய் நாராயணனோ "விஷ்வா" என ஆத்திரமாய் அவன் சண்டையைப் பிடித்து உலுக்க
அடுத்த நொடியே அவரைப்பிடித்து தள்ளிவிட்டாள் நேஹா.

அதில் தடுமாறியவர் விழப்போக அவரை தாங்கிப்பிடித்த கௌசிக்கோ கோபத்துடன் நேஹாவை நெருங்கியவன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து ஒற்றை விரல் நீட்டி " யார பிடிச்சு தள்ளிவிடுற கொன்னுடுவேன் பார்த்துக்கோ" என எச்சரித்தவனாய் ருத்ரமூர்த்தியாய் நின்றிருக்க.

உன் கோபம் என்னை ஒன்றும் செய்துவிடாது என்ற ரீதியில் அவனை பார்த்து இகழ்ச்சிப் புன்னகையை சிந்தியவள் அடுத்து கேட்ட கேள்வியில் மொத்த பேருமே ஆடித்தான் போனர்.

"என்னடா பெரிய ஆம்பிளை மாதிரி கோபப்படுற பொட்ட பைய தானடா நீ. அதனால தானே நைட் உன் அப்பன் உனக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னு சொல்லி என் ரூமுக்கு வந்து என்கிட்ட முறை கெட்டு நடந்துக்கிட்டான்" என்ற வார்த்தையை முடிக்கு முன்னலே
" நேஹா!" என வீடே அதிரும் வண்ணம் கத்தியிருந்தான் விஷ்வா.

அவன் கத்தலில் அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தவள் கதறியழுதவாறே தன் கதையை அள்ளித் தெளித்தாள்.
"ஆமா ண்ணா நேற்று இந்தாளு என்கிட்ட த..தப்பா நடந்துக்க பார்த்தாரு" என கேவியழுதவளை ஒட்டு மொத்த கூட்டமும் அதிர்ச்சியாய் பார்த்தனர்.

"நேஹா.. எவ்வளவு தைரியம் இருந்தா இப்பிடி அபாண்டமா பழி போடுவ.. நீ என்ன சொன்னாலும் நம்புவோம்னு நினைச்சியா" அண்ணனின் மீது வீழ்ந்த பழியில் காளியாய் சிலிர்த்தெழுந்த பூரணிக்கோ தான் தூக்கி வளர்த்த பிள்ளைகளென்ற பாசம் அந்நொடி முற்றாய் அழிந்து தான் போனது.

"பெரியம்மா எந்த பொண்ணும் இந்த விசயத்தில பொய் சொல்ல மாட்டாள்" என அழுது கொண்டு கதறியவளை அங்கு விஷ்வாவைத் தவிர யாருமே நம்பவில்லை.

"ஏம்மா பொண்ணு நீ சொல்றதெல்லாம் நம்ப நாங்க ஒன்னும் முட்டாள்கள் இல்லை பழிவாங்கத்தான் கல்யாண ஏற்பாடுனு சொன்னிங்க அப்போ இதுவும் பொய்யாகத்தான் இருக்கும் எங்க ஐயா அப்பிடி இல்லை" என்று கூட்டத்தில் உள்ளவர்கள் சலசலக்க ஆரம்பிக்க அவளோ மேலும் பெருங்குரலெடுத்து அழுதவள் "அண்ணா" என அவனை அணைத்துக் கதற..


தங்கையின் அழுகையில் ஏற்கனவே கோபத்தில் கொதித்த விஷ்வாவிற்கோ தங்கையை நம்பாது பேசிய கூட்டத்தைக் கண்டு இதற்கெல்லாம் காரணம் நாராயணன் தான் என்றும் கோபம் அதிகரிக்க சித்தம் கலங்கியவனாய் பாய்ந்து அவர் சட்டையை கொத்தாய் பற்றியவன் "யோவ் நீ...நீயெல்லாம் மனிசனாயா எங்க அப்பா வாழ்க்கைய தான் கெடுத்தேன்னு பார்த்தா சின்ன பொண்ணு அவ மேலயே கைவெச்சியிருக்க நீயெல்லாம் பெரிய மனுசன்னு இன்னமும் இந்தக் கூட்டம் நம்புது ச்சீதூ" என அவர் மீது காரிஉமிழ்ந்திட அதில் மொத்தமாய் நொருங்கிப் போனார் நாராயணன்.

நேஹாவின் வார்த்தையில் அதிர்ந்து நின்றவர்கள் விஷ்வாவின் இந்த செயலை எதிர்பார்க்கவில்லை.
அனைவரும் "விஷ்வா" என்று கத்த கௌசிக்கோ விஷ்வாவின் முகத்தில் ஓங்கி குத்தியவன் அவனை தாறுமாறாய் அடித்திட நொடியில் அங்கு கலவரம் மூண்டது.

கூட்டத்தில் இருந்தவர்களோ முயன்று இருவரையும் பிரித்திட ஒருத்தரையொருத்தர் முறைத்தவராய் நின்றிருக்கோ கௌசிக்கோ இப்போதே விஷ்வாவை அடித்துக் கொல்லும் ஆத்திரம் மேலோங்க தன்னை பிடித்திருந்தவர்களை உதறித் தள்ளியவன் அவனிடம் "இதுக்கு மேல அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் இங்க நின்னிங்க வெட்டி வீசிடுவேன் வீட்ட விட்டு வெளியே போடா" என அடைத்து வைத்த சீற்றம் கர்ஜனையாய் வெடிக்க கத்தினான்.

அவன் கத்தலுக்கு அசராதவன் அங்கிருந்தவர்களிடம் "நீங்க பெரிய மனுசன்னு தூக்கிவெச்சி கொண்டாடின இந்த மனுசன் செஞ்ச தப்புக்கு இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்க." என அங்கிருந்தவர்களிடம் நியாயம் கேட்க அவர்களில் ஒருவர் "ஏப்பா நீ சொல்றதெல்லாம் உண்மைனு நாங்க எப்பிடி நம்புறது" என கேள்வியெழுப்ப அதற்காகவே காத்திருந்தவர் போல சபை முன் வந்தார் மோகன்ராஜ்.

"நேஹா சொல்றது எல்லாமே உண்மை தான்.. அதுக்கு ஆதாரம் இதோ என்கிட்ட இருக்கு" என்றவர் கையில் வைத்திருந்த போனில் வீடியோ ஒன்றை ஓடவிட்டார்.

அதில் நாராயணன் தட்டுத்தடுமாறி நேஹாவின் அறைக்குள் நுழைவதும் சிறிது நேரத்தில் நேஹா ஆடை கிழிந்து அறையை விட்டு வெளியே வருவதும் போன்ற காட்சியும் ஓட அனைவரும் அதிர்ந்து போயினர்.

நாராயணனுக்கு நேற்றிரவு நடந்த எதுவுமே நினைவில் இல்லை. நேற்று இருக்கையில் அமர்ந்து காபி அருந்திய வரைக்குமே நியாபகம் இருக்க மற்றையவை அனைத்தும் களங்களாகவே நினைவடுக்கில் ஓடியது.

மீண்டும் மீண்டும் நேற்றைய நிகழ்வை ஓட்டிப் பார்த்தவர் முடியாது போக உடல் வழுவிழந்தவராய் தரையில் சரிய அவரை தாங்கினார் அவர் மனைவி கமலம். அவரை கலங்கிய விழி கொண்டு பார்த்த நாராயணனோ மனைவியின் கலங்கிய கண்களில் நான் உன்னை நம்புகிறேன் என்ற நம்பிக்கை தெரிந்ததில் மேலும் உடைந்து தான் போனார் மனிதர்.

"இது எல்லாமே பொய் பொய் நான் நம்ப மாட்டேன்" இத்தனை நேரமாய் அதிர்வில் மௌனமாய் கண்ணீர் வடித்து நின்ற திவ்யாவோ தந்தை மேல் சுமற்றப்பட்ட களங்கத்தில் வெறிவந்தவளாய் ஆக்ரோஷமாய் கத்தியவள் கழுத்திலிருந்த மாலையை பிய்த்தெறிந்துவிட்டு கீழே சரிந்த தந்தையை நோக்கி வேகமாய் ஓடிட முனைந்த கணம் அவள் கரத்தை இறுக்கிப் பிடித்து தடுத்திருந்தான் விஷ்வா.

சிவாவிற்கோ அவன் செய்கையில் ஆத்திரம் மேலோங்க "டேய் அவள விடுடா" என பாய்ந்து வர அவனோ இறுமாப்புடன் "இவ இப்போ என்னோட மனைவி" என்ற கணம் திவ்யாவின் மென்கரமோ இடியென அவன் கன்னத்தில் இறங்கியது.

அதில் அதிர்ந்து அவளைப் பார்த்தவனை
வெறுப்புமிழும் பார்வையால் எரித்தவள் அவன் பிடியிலிருந்து தன் கரத்தை உதறியவளாய் அடுத்த நொடி தன் கழுத்திலிருந்த தாலியை கழற்றி அவன் முகத்தில் வீசியெறிந்தாள்.

"என் குடும்பத்தை பழி தீர்க்க துடிக்கும் உன் கூட நான் வாழ்றதற்கு செத்துபோவதே மேல்.. உன் பழிவெறிக்கு என் உணர்வுகள பகடைக்காய பயன்படுத்திட்டல்ல.." ஆக்ரோஷமாய் ஆரம்பித்தவள் இறுதியில் அழுகையோடு முடித்திட.. பெண்ணவளின் அழுகையில் ஆணவன் நெஞ்சமும் கதறித் துடித்தது.

அவன் பழிவாங்க நினைத்தது எத்தனை உண்மையோ அதே அளவு அவன் அவளை உயிராய் நேசித்ததும் உண்மை அல்லவா!

அவனோ அவளிடம் ஏதோ கூற முயன்றவனாய் அவள் கரம் பற்ற முயல "ச்சீ" என்ற ஒற்றை சொல்லில் அவனை உயிரோடு வதைத்தவள் பெரும் கேவலோடு சிவாவின் நெஞ்சில் தஞ்சமடைந்து அழுது தீர்த்தாள் பெண்.

அவள் அழுகை அவன் மனதை வதைத்தாலும் மனதை இரும்பாக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றவன் பார்வையில் மீண்டும் குடியேறியது பழிவெறி.

கண்கள் கலங்க தன் குடும்பத்தின் ஆணி வேர் அடியோடு சாய்ந்திருப்பதைக் கண்ட பூரணிக்கோ இத்திருமணம் நடக்க காரணமான கணவன் மீதும் தன் அவசரப் புத்தி மீதும் அத்தனை வெறுப்பு மேலிட நெஞ்சை நிமிர்த்து நின்றவன் அருகே நெருங்கியவர் அவனை கையெடுத்துக் கும்பிட்டவராய் "உங்கள வளர்த்துவிட்டதுக்கு நல்லாவே நன்றிக்கடன் பண்ணிடப்பா ரொம்ப சந்தோஷம்.. உன்ன என் சொந்தப் புள்ளையா நினைச்சதுக்கு உன்னோட கைம்மாறு ரொம்ப பெருசு." அடைத்த தொண்டையை முயன்று சரிபடுத்தியவராய் அவனை பார்த்தவர் பார்வையில் அவனது உள்ளம் நொடியில் களங்கிப் போக "பெரியம்மா" என அழைத்தவனை கைநீட்டித் தடுத்தவர் "இங்க இனி எந்த சொந்ததுக்கும் இடமில்லை .. என் அண்ணா மேல சுமத்தின குற்றத்துக்கும் அவர் மேல நீங்க கொண்ட பழிவெறிக்கும் இப்போ இந்த நொடியே என்ன காரணம்னு சொல்லனும்" என்றவரின் குரலில் இருந்த கட்டளை நீ சொல்லித் தான் ஆக வேண்டும் என்ற அழுத்தம் இருக்க விழி மூடி தன்னை கட்டுப்படுத்தியவன் அனைத்தையும் கூறத் தொடங்கினான்.

என்னோட அப்பாவுக்கு ரொம்ப பெரிய துரோகத்த பண்ணின இவர பழிவாங்கத் தான் நாங்க இந்த வீட்டுக்குள்ளவே நுழைஞ்சது.
என்னோட அப்பா வரதராஜ்ஜும் உங்க கூடப் பிறந்த தங்கையையும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சிருந்தாங்க ஆனா இவரு இவரோட பணத்திமிறுனாலயும் கௌரவத்தாலையும் காதலிச்ச அவங்க இரண்டு பேரையும் பிரிக்க முயற்சி செய்து கடைசியில அவங்க உயிரையும் பறிக்க துணிஞ்ச ஒரு கொலைகாரப் பாவி தான் இந்தாளு" என்றிட பூரணிக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு.

'என்ன சொல்கிறான் இவன் என் தங்கையும் வரதராஜும் காதலித்தார்களா? இது எப்போது நடந்தது' என மனதோடு எண்ணியவருக்கு தன் இரட்டை சகோதரியின் இறப்பு விபத்தென்று கூறிய அண்ணணின் மீது பார்வை படிந்தது.

முதல் பிரசவம் காரணமாக உடல் நிலை சரியில்லை என மாதக்கணக்கில் வைத்தியசாலையில் இருந்தவருக்கு திடீரென்று ஓர் நாள் தங்கை விபத்தில் இறந்துவிட்டதாக கண்கலங்க கூறி நின்ற தன் அண்ணனின் முகம் மனக்கண்ணில் தோன்ற அவரையே பார்த்தவர் பார்வையை சந்திக்காது தலைகுனிந்து அமர்ந்திருந்தார் நாராயணன்.

"அவங்க என்ன தப்பு பண்ணாங்க காதலிச்சது ஒரு குத்தமா அவங்க இரண்டு பேரையும் அநியாயமா பிரிச்சதுமில்லாம கர்ப்பமா இருந்த பொண்ணுன்னு கூட பார்க்காம அவங்கள வெட்டி கொன்ன பாவி தான் இந்தாளு.. இந்தாளத் தான் இத்தன வருசமா இந்த ஊரே தலை மேலே தூக்கி வெச்சு கொண்டாடுது" வெறுப்புடன் வந்து வீழ்ந்த அவனது வார்த்தைகளில் துடிதுடித்து போனார் பூரணி. அதிலும் அவன் சொன்ன தங்கையின் கர்ப்பம் அவரது நெஞ்சை உலுக்கியது.

" காதலிச்ச ஒரே பாவத்துக்காக வயித்துல குழந்தையோட செத்து போனாங்க அவங்க எங்க அப்பா ஒரு கையை இழந்து உயிர் இருந்தும் நடை பிணமா மாறிட்டாரு" என்றவன் கூறிய கதையில் ஒட்டு மொத்தப் பேரும் அதிர்ச்சியில் வாயடைத்து போயினர்.

அவன் கூறிய கதையில் வெகுண்டெழுந்த சிவாவோ "டேய் உன் அப்பன் உண்மையா காதலிச்சு இருந்தா நீயும் இவளும் எப்பிடிடா பொறந்திங்க.. பெருசா பழிவாங்க வந்தேன்னு சொல்ற.. காதலிச்சவங்க இறந்ததும் அடுத்த பொண்டாட்டி தேடி கல்யாணம் பண்ணி அதுல புள்ளகுட்டினு வாழ்ந்தவனுக்காக நீ பழிவாங்க வந்திருக்க.. கேக்கவே கேவலமா இருக்கு" என்றவனை அடிக்கப் பாய்ந்த விஷ்வாவை அங்கிருந்தவர்கள் தடுத்துப் பிடித்தனர்.

பூரணிக்கோ விஷ்வாவின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கையில்லையென்றாலும் ஒரு வார்த்தை தன் அண்ணன் உண்மையை கூறிவிடமாட்டாரா என கண்ணில் எதிர்பார்ப்பை தேக்கி அவரை நெருங்கியவர் "அண்ணா என்ன தான் நடந்திச்சுனு உண்மையை நீ சொல்லு.. இவங்க யாரையும் நான் நம்பமாட்டேன் உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் என்ன தான்ண்ணா நடந்திச்சு" கண்களில் உயிரை தேக்கி உண்மையை எதிர்பார்த்து நின்ற தங்கையை நிமிர்ந்து பார்த்தவருக்கோ என்றோ ஓர் நாள் தான் இட்ட சத்தியமே அவர் வாயைக் கட்டிப் போட்டிருக்க உண்மையை கூற முடியாதவராய் தங்கையின் கரத்தை பற்றிக் கொண்டவர் தன் கண்ணில் வைத்து மௌனமாய் கண்ணீர் வடித்தார்.

அண்ணணின் கண்ணீரில் ஏதோ மறைக்கப்பட்ட உண்மையை புரிந்தவருக்கும் கண்ணீர் நில்லாமல் வடிந்தோடியது.

"ஏன் ஏன் பதில் சொல்லாம இருக்க.. இன்னும் என்ன விசயத்தை சொல்லாம உனக்குள்ளே போட்டு மறைக்க போற சொல்லுண்ணா" அழுகையில் வெடித்தவரை பார்க்க முடியாதவராய் தன் மௌனம் களைந்தார்.

"அம்மாடி .. நம்ம பூ குட்டி அவ ஆசபட்ட வாழ்க்கை எங்கோ ஓர் மூலையில சந்தோஷமா வாழ்ந்துட்டு தான்மா இருக்கா" என்றவரை இடைமறித்து ஒலித்தது மோகன்ராஜின் குரல்

"அதான் எங்க இருக்கான்னு சொல்லுங்க உண்மையா பொய்யான்னு எல்லாரும் தெரிஞ்சுக்குறோம்" என்றார் நக்கலாய்.

அதில் கணவன் புறம் ஓர் வெட்டும் பார்வை பார்த்த பூரணியின் பார்வையில் மோகன்ராஜோ வாயை மூடிக் கொண்டார்.

விஷ்வாவோ அவர்களை எள்ளல் நிறைந்த பார்வை பார்த்தவன் தங்கையிடம் திரும்பி "நேஹா ரோஹித் நீங்க உட்காருங்க" என்றவன் அதே மேடையிலே இருவரின் திருமணத்தை நடத்தி முடித்து அவர்களிடம் "இதோ இந்த ஊர் முன்னாடி என் அப்பாக்கு செய்த துரோகத்துக்காக பெரிய அவமானத்தை கொடுத்துட்டோம் இது இவரோட பழைய கணக்கு ஆனா இப்போ என் தங்கைக்கு செய்ததுக்கு சீக்கிரமே அனுபவிப்பாரு.." என்றவன் நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் "இத்தோட இந்தக் குடும்பத்துக்கும் எங்களுக்குமான உறவு முடிஞ்சு போச்சு" என சொல்லும் போதே அவனது பார்வையோ அங்கு அழுது கொண்டு நின்ற தன் மனையாளின் மீது வேதனையாய் படிந்திட அவளோ அவனை வெறுப்பை சுமந்த பார்வை பார்த்து வைத்தாள்.

அடுத்த சில நிமிடத்தில் விஷ்வாவோ அவ்வீட்டை விட்டு வெளியேறிட பொலீஸ் ஜீப்பொன்றும் உள்நுழைந்தது.

பொலீஸ்க்கு அழைத்ததும் மோகன்ராஜின் திட்டமே.

உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரோ பலாத்கார வழக்கின் பேரில் நாராயணனை கைது செய்திட அனைவருக்கும் என்ன செய்வதென்று திகைத்து நின்றது என்னவோ ஒரு கணமே கௌசிக்கோ அவரிடம் தடுத்து பேசிட முனைய அதையெல்லாம் கேட்காது
நாராயணனை ஜீப்பில் ஏற்றிய நொடி ஏற்கனவே அடிக்கு மேல் அடி வாங்கிய அவர் இதயமோ ஜீப்பில் ஏறிய நொடி தன் துடிப்பை நிறுத்தியிருக்க உயிரற்ற மரமாய் சரிந்து வீழ்ந்தார் மனிதர்.

அதைக் கண்டு கொண்டவனோ அடுத்த நொடி வில்லிருந்து புறப்பட்ட அம்பாய் தந்தையின் உடலை தாங்கியவன் கண்களிலிருந்து அவனையுமறியாது கண்ணீர் வழிந்திட தந்தை முகம் பார்த்த கௌசிக் மனம் முற்றிலும் மரத்துப் போனது.
ஊரே போற்ற கம்பீரமாய் தலை நிமிர்ந்து நின்ற தந்தை இன்று உயிரற்ற உடலாய் தன் கையில் கிடப்பதைக் கண்டு அந்த ஆண்மகனும் உடைந்து தான் போனான்.

கணவனின் இறப்பில் கமலமோ முற்றாய் நொருங்கிட வாய்விட்டு கதறியழுதவரை தாங்கிய சிவாவின் கண்களும் தந்தையின் இறப்பில் கண்ணீரை வடித்தது.

சிவாங்கியோ திவ்யாவை தாங்கியிருக்க அவள் கண்ணிலும் நில்லாமல் வடிந்தது கண்ணீர்.

பூரணியின் மனமோ அண்ணனின் இறப்பில் மேலும் சுக்குநூறாய் உடைந்திட கதறியழுதார்.

ஒற்றை நாளில் அவர்களது மொத்த வாழ்க்கையை திருப்பி போட்டிருக்க துக்கம் மட்டுமே அவர்களை ஆட்சி செய்தது.

ஊரே போற்றிய மனிதர் தன் இறுதி நொடியில் ஊர் பார்வையில் தலைகுனிந்தவராய் தன் உயிரை துறந்திருக்க அவரது இறுதிச் சடங்குகளையும் யாரின் உதவியுமின்றி ஒற்றை ஆளாய் செய்து முடித்திருந்தான் கௌசிக்.

எப்படியோ ஆரம்பித்த அன்றைய தினமோ எப்படியோ முடிந்திருக்க அந்த அரண்மனை வீடே முற்றாய் களையிழந்து போயிருந்தது.

அறையில் அழுதழுது ஓய்ந்து போய் படுத்திருந்த திவ்யா கமலம் இருவருக்கும் துணையாய் சிவாங்கி நித்யா அமர்ந்திருக்க.. பூரணிக்கு துணையாய் அவர் அறையில் அமர்ந்திருந்தார் ஆனந்தி.

பெண்கள் அனைவரும் அறைக்குள் முடங்கியிருக்க ஆண்களோ வெளியே அமர்ந்திருந்தனர்.

அனைத்தையும் முடித்து இரவு கவிழும் நேரம் வீடு திரும்பிய கௌசிக் சிவா இருவரும் ஹாலில் அமர்ந்திருந்த மோகன்ராஜின் குரலில் நின்று அவரைப் பார்த்திட அவரோ தெனாவெட்டாய் "எப்போ இங்க இருந்து கிளம்பப் போறீங்க" என்றார்.

அதில் புருவம் நெருங்க அவரைப் பார்த்தவன் எதுவுமே பேசாது நின்றிருக்க சிவாவோ "நாங்க எதுக்கு போகனும்
இந்த வீட்டை விட்டு எங்களை வெளியேற்ற யாருக்கும் எந்த உரிமையும் இல்லை." என கோபம் தெறித்து வந்து வீழ்ந்தது அவன் வார்த்தைகள்.

"இங்கப் பாரு நீ வேணா உங்கப்பன் நல்லவன்னு நம்பலாம் ஆனா நாங்க நம்ப மாட்டோம் உங்கப்பன் அய்யோக்கியன்னு ஆதாரத்தோடு ஊருக்கே தெரியுமே.. உங்க அப்பாவால எங்களுக்கும் சேர்த்து தான் அவமானம்" என வார்த்தையை முடிக்கு முன்னே
"ஏய்!" என்று அந்த வீடே அதிரும்படி கத்திய கௌசிக்கின் கத்தலில் அறையிலிருந்த அனைவருமே பதறி வெளியே வந்திருந்தனர்.

"இனி ஒரு வார்த்தை எங்கப்பா பத்தி தப்பா வந்திச்சு அறுத்துடுவேன்" ஆக்ரோஷத்தில் கண்கள் சிவக்க மிரட்டியவன் மிரட்டலில் அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர் அவனது புதிய பரிமாணத்தில்.

புன்னகை முகமாய் கன்னக்குழி சிரிப்புடன் பேசித் திரிந்தவன் மாயமாய் மறைந்திருக்க ருத்ரமூர்த்தியாய் நின்றவனைக் கண்டு சற்று பயந்து தான் போயினர்.

கோகுலோ "கிருஷ்ணா மரியாதையா பேசு அவர் இந்த வீட்டு மாப்ள." என அண்ணன் மகனை கண்டித்திட அவரை இடையிட்டு ஒலித்தது சிவாவின் சீற்றக் குரல்
"ச்சீ வாய மூடுங்க கூடப் பிறந்த உடன்பிறப்பை பற்றி கேவலமா பேசும் போது வாயை மூடிக்கிட்டு இருந்த நீங்க எல்லாம் பேசுறதுக்கு தகுதியே இல்லாத ஜென்மம்" என்றதில் முகம் கறுக்க அவனை பார்த்தவர்

"சிவா உங்க அப்பா தப்புனு ஆதாரம் இருக்கு" என்றவரை நக்கல் பொதிந்த பார்வை பார்த்தவன் "ஹாங் அப்படியா உங்களைக் கூட வேற யார் கூட வேணாலும் இருக்குற மாதிரி நான் வீடியோ இப்போ எடுத்து தரவா? இல்லை உங்க உண்மை முகத்த தான் எல்லாருக்கும் வெளிச்சம் போட்டு காட்டவா?" என்றதில் உடல் நடுங்க பார்த்தவரை கேவலமாய் பார்த்தவன் "ச்சேஹ் கூடபிறந்தவர் மேல இல்லாத நம்பிக்கை அந்த வீடீயோ மேலயும் அதை சொன்ன அந்த தருதலைங்க மேலேயும் வருது இல்ல ச்சேஹ்.. " என வெறுப்பை உமிழ்ந்தவன் கண்கலங்க "இங்க தப்பு செய்தவங்களே நெஞ்ச நிமிர்த்தி வாழுறாங்க ஆனா தப்பே செய்யாம என் அப்பாவ பழிகொடுத்துட்டு நிக்குறோம்" உடைந்த குரலில் கூறிட அவன் தோளை ஆறுதலாய் பிடித்துக் கொண்ட கௌசிக்கின் பார்வையோ அனைவரையும் துளைத்தது.

இனியொரு வார்த்தை பேசினால் கொலைகூட செய்ய தயங்கமாட்டேன் என்பது போல பார்வையாலே மிரட்டியவன் சிவாவை அழைத்துக் கொண்டு திரும்ப அவனை அழுத்தமாய் பார்த்து நின்றார் பூரணி.

அவர் பார்வையில் தயங்கி நின்றவன் அவரை கடந்து செல்ல முயல அவனை தடுத்தார் அவர்.

"நில்லு அவங்க சொன்னத தான் நானும் சொல்றேன் எப்போ இங்க இருந்து கிளம்பப் போற" என்றதில் ஓர் நொடி அதிர்ந்தாலும் தன்னை மீட்டவன் அழுத்ததுடன் "இது எனக்குரிமையான இடம் இங்க இருந்து என்னை போக சொல்ல யாருக்குமே உரிமையில்லை" என்க அதில் உள்ளம் வலித்தாலும் வெளிக்காட்டாதவராய்..

"உன்ன விட அதிக உரிமை எனக்குண்டு.. நீ இங்க இருக்கனும்னா முதல்ல என் அண்..." என சொல்ல வந்தவர் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு "உன் அப்பா மேல வீசப்பட்ட களங்கத்தை போக்கிட்டு அவரோட மகனா இங்க உரிமையோட வா" என்று வார்த்தைகளை அழுத்தமாய் வீசிட அதில் பொதிந்திருந்த மறைமுக கட்டளையை புரிந்து கொண்டவன் அவரை அழுத்தமாய் பார்த்து நின்றான்.

அவரோ "எல்லாருக்கும் சொல்றேன் இனி யாருமே இந்த விசயத்தை பற்றி இந்த வீட்ல பேசக் கூடாது மீறி பேசினா அவங்களுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை" என கட்டளையாய் கூறியவர் பார்வை நிலைத்தது என்னவோ மோகன்ராஜின் மீதே.

மனைவியின் பார்வையில் உள்ளுக்குள் அதிர்ந்தாலும். இத்தனை தூரம் அவர் திட்டம் வெற்றி அடைந்ததில் உண்டான அகந்தையில் விட்டேற்றியாய் நின்றிருந்தார்.

இனி அவருக்கு கவலையில்லை நாராயணன் எனும் ஆலமரத்தையே அடியோடு வெட்டி சாய்த்தவருக்கு கௌசிக் எல்லாம் பொடிப் பயலாய் தெரிய அவனை சரிகட்டிடலாம் என மனதில் தப்புக் கணக்கிட்டவர் அது தவறோ என யோசிக்கும் நிலையில் இன்று அவரை நிறுத்தியிருந்தான் கௌசிக்.

அன்று சிறு களையாய் எண்ணி அவனை விட்டிருக்க இன்றோ பெரும் விருட்சமாய் வளர்ந்து நின்று அவரையே ஆட்டுவிக்க வந்திருந்தான் கௌசிக் நாராயண கிருஷ்ணன்.
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 19



பழைய எண்ணங்களின் சுழற்சியில் உழன்றவன் கண்விழித்திட அவன் தலை கோதிவிட்டவாறே தூக்கத்தில் அயன்றிருந்தார் கமலம்.

மெல்ல எழுந்து கொண்டவன் தாயை வாகாக படுக்க வைத்துவிட்டு தூங்கும் தங்கையின் தலை வருடிவிட்டு அறைவிட்டு வெளியேறினான்.

அறைவிட்டு வெளிவந்தவனின் மனம் முழுவதும் இனி அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் வரிசை கட்டி நிற்க அதற்கான ஏற்பாடுகளை செய்ய அழைப்பை ஏற்படுத்தியவன் என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொன்றாய் கட்டளையிட்ட பின்பே சிறு நிம்மதியோடு தன்னறை நோக்கிச் சென்றான்.

குடும்பத்தின் ஒதுக்கம் அவனுக்கு இருந்தாலும் அவன் தந்தையின் உண்மையான விசுவாசிகளினால் அவன் நினைத்ததை நடத்துவது அத்தனை சிரமமாக இருக்கவில்லை அவனுக்கு.

தன்னறைக்குள் நுழைந்தவன் அறையில் வெளிச்சம் இருப்பதை உணர்ந்து கட்டிலை பார்க்க, மடியில் தலையணை ஒன்றை வைத்து சம்மணமிட்டவளாய் தூங்காது முழித்துக் கொண்டிருந்தாள் வெண்மதி.

அவளை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டே உள்நுழைந்தவன் "ஹேய் நீ இன்னுமா தூங்கல" என்க. அவன் திடீர் குரலில் திடுக்கிட்டவளாய் அவன் புறம் திரும்பினாள் மதி.

"ஹேய் ரிலாக்ஸ் நான் தான்" என்றவன் அவளருகே சென்றமர்ந்து "என்னாச்சு தூங்கலையா?" என்றான் மெல்லிய குரலில் பரிவுடன்.

அவன் கேள்விக்கு மறுப்பாய் தலையசைத்தவள் "தூக்கம் வரல" என்றாள்.

"ஏன்? புது இடம்ங்குறதுனாலயே?" என்றவனிடம் இல்லையென்று தலையசைத்தவள் "அ..அது" வார்த்தைகளின்றி திணறியவள் என்ன சொல்வது என்று தெரியாது மௌனமாய் தலைகுனிந்தாள்.

அவள் தடுமாற்றத்திலே அவள் உள் மனப் போராட்டத்தை அறிந்து கொண்டவன் ஆறுதலாய் அவள் கரம் பற்றிட அதில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த கலக்கம் அவன் மனதை இளக்கிட அவள் களைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டவன்.

"எத பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு மதி, நாளைய விடியல் நமக்கு ரொம்பவும் முக்கியமான ஒன்று" என்றவனை அவள் புரியாமல் பார்த்தாள்.

அதை கண்டு கொண்டவன் சிரித்துக் கொண்டே ரொம்ப யோசிக்க வேணாம் அத்.." என ஏதோ சொல்ல வந்தவன் இடைநிறுத்தி அவள் தலையை செல்லமாய் ஆட்டிவிட்டு "தூங்கு மதி" என்றவன் அவளை தூங்க வைத்திட அவளோ தூங்காது அவனைப் பார்த்திருந்தாள்.

"என்ன" அவன் பார்வையாலே அவளிடம் கேட்டிட அவளோ "அ..அது என் பை" என்றாள் தயங்கியவாறு.

அது புரிந்து கொண்டவன் "எல்லாம் பத்திரமா இருக்கு நீ தூங்கு" என்றவன் தன் அலைபேசியில் மூழ்கிட அவளும் சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள்.

அவள் தூங்கிவிட்டதை உணர்ந்து அழைபேசியியை அணைத்து வைத்தவன் சிறு கணம் அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.

கள்ளம் கபடமற்ற பால் முகம்.. அவள் மனதை காட்டிட அவளையே பார்த்திருந்தான்.

சற்றுமுன் அவள் கேட்க வந்தது நினைவு வந்தவன் எழுந்து தான் கொண்டு வந்த பையினுள் இருந்த அவ்விரு காகித உறைகளையும் எடுத்தவன் இதழ்களில் வெற்றிப் புன்னகை.
இது ஒன்றே போதும் அவனின் இத்தனை நாள் போராட்டத்திற்கு ஒரு முடிவை கண்டுவிடலாம் அல்லவா.

இது இரண்டும் அவன் கையில் கிடைத்த தினத்தை எண்ணிப் பார்த்தான். அன்று சிவாவின் வருகையின் போது வண்டியிலிருந்து அவள் பையை எடுக்கும் போதே அதை ஆராய்ந்தவன் அதிலிருந்து எடுத்துக் கொண்டவைகளை தன்னிடமே பத்திரமாக்கிக் கொண்டான்.

நீண்ட நாள் பின்னே தன் வீடு திரும்பினாலும் மனதில் ஏதோ ஓர் அலைக் கழிப்பு மனதை ஆக்கிரமிக்க தலையை அழுந்தக் கோதியவனாய் சாளரத்தின் வழியே வானை வெறித்திருந்தான்.

எத்தனை நாள் போராட்டம் அவனுடையது. அனைத்தும் நாளையோடு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என மனது சொல்லிக் கொள்ள பெருமூச்சுடன் வான்வெளியை பார்த்து நின்றவன் சிந்தையை களைத்தது அவன் அறைக்கதவு தட்டும் ஓசை.

அதில் சிந்தனை களைந்தவன் சென்று கதவை திறக்க அவன் முன்னே நின்றிருந்த இருவரையும் பார்த்து இதழ் பிரித்தவன் மார்புக்கு குறுக்கே கைகட்டி கதவுப்படியில் சாய்ந்து அவர்களை பார்த்தான்.

அவன் சிரிப்பில் ஒருவர் அவனை முறைக்க மற்றையவரோ அவனை வாஞ்சயாய் பார்த்திருந்தார்.

அவனோ இருவரின் பார்வையையும் சளைக்காமல் எதிர் கொண்டவன் "என்ன வேணும்" என அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டது தான் தாமதம் அவனை தாவியணைத்திருந்தான் திரு.

"மச்சான் எப்பிடிடா இருக்க? எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து" கண்கலங்க குரல் தழுதழுக்க தன்னை அணைத்திருந்த நண்பனின் அன்பில் நெகிழ்ந்து நின்றான் கௌசிக்.

எத்தனை கால பிரிவு சொந்தங்களை விட்டு எங்கோ ஊரில் எவ்வித தொடர்புமின்றி அநாதை போல அநாதரவ வாழ்வை வாழ்ந்தான். அவனுக்குமே அந்த பிரிவின் தாக்கத்தில் மனம் கலங்கினாலும் அதை மறைத்துக் கொண்டவனாய் நண்பனை தேற்றினான்.

"எனக்கென்ன மச்சி நான் ரொம்ப ஹெப்பியா இருக்கேன்.. உன் டார்ச்சர் இல்லாம ரொம்ப ஜாலியா இருந்தேன்" மயக்கும் கண்ணனாய் கண்சிமிட்டி சிரித்தவனை கண்டு திருவோ முறைக்க.

அவன் புன்னகை கண்டு மனம் நெகிழ நின்றிருந்தார் பூரணி.

எத்தனை நாட்களுக்குப் பின் இப்படி மனதார புன்னகைக்கிறான். என எண்ணியவருக்கு உள்ளம் கனத்தது பழைய எண்ணங்களின் தாக்கத்தில்.

அவரின் மன சுணக்கத்தை அறிந்தவன் போல அவரை நெருங்கியவன் அவர் தோளை ஆதரவாய் அணைத்துப் பிடித்திட அவன் தோள் சாய்ந்தவர் கண்ணீர் துளி அவன் சட்டையை நனைக்க அதில் பதறித் தான் போனான் அவன்.

"அத்தம்மா அழாதீங்க" என்றவனை நிமிர்ந்து பார்த்தவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

"ப்ச் எதுக்கு இப்போ இந்த அழுகை.. நாளைக்கு எல்லாமே முடிஞ்சுடும் அத்தம்மா.. என் அப்பா தப்பானவர் இல்லைனு இந்த ஊருக்கே நிரூபனம் ஆகிடும்." என்றவரின் வார்த்தையில் இத்தனை நாட்களாய் அவர் மனதை அழுத்திய பாரம் சற்றே குறைவதாய் இருக்க அவனையே கனிவுடன் பார்த்திருந்தார்.

"ஸாரி மச்சான் அவங்க முன்னாடி உன்ன ரொம்பவே பேசிட்டேன்" காலையில் தான் நடந்து கொண்டதற்காக நண்பனிடம் மன்னிப்பை யாசித்தான் திரு.

"ப்ச் அதவிடுடா.. அவங்க முன்னாடி நீங்க இப்பிடித்தான் நடந்துக்கனும்னு நான் சொன்னத தானே செய்தீங்க" என்றான்.

ஆம் அனைத்தும் அவன் திட்டமே. என்று அவன் இந்த வீட்டை விட்டு வெளியேறினானோ அன்றே மற்றவர்கள் முன்னிலையில் தன்னை வெறுப்பது போல் நடந்து கொள்ள வேண்டும் என இருவரிடமுமே கூறியிருந்தான்.

ஏன் எதற்கு என்ற கேள்விகளை முன்வைத்தவர்களிடம் மோகன்ராஜ் மீதும் நேஹா மீதும் தனக்கிருக்கும் சந்தேகங்களை கூறியிருந்தான் கௌசிக்
இந்த திருமண ஏற்பாடே அவர்களது விருப்பத்தின் பேரில் தான் தொடங்கியிருக்க கடைசி நேரத்தில் தந்தையை பழிவாங்கவே இந்தச் செயலை செய்ததாக கூறியவர்கள் ஏன் அந்த வீண் பழியையும் சுமத்திருக்க முடியாது என தீவிரமாய் யோசித்தவனுக்கோ அவர்களது உண்மையான முகத் திரையை கிழிக்க தனக்கு ஆதரவாய் இருப்பவர்கள் அவர்கள் பக்கம் இருந்தால் மட்டுமே அவர்களிற்கு எதிராய் காய் நகர்த்த முடியும் என எண்ணியே இருவரிடமும் அவ்வாறு கூறியிருந்தான்.

அவர்களுக்கும் அது சரியென தோன்ற வெளிப்படையாய் அவனிடம் கோபம் போல் காட்டிக் கொண்டனர்.

இன்றும் அதற்கேற்றது போல அவர்கள் முன்னிலையில் வார்த்தையால் அவனை காயப்படுத்தியும் இருந்தனர்.

"கண்ணா.. அந்த பொண்ணு" என ஆரம்பித்த பூரணியை திரும்பி பார்த்தவன் "என் மனைவி.. உங்களுக்கு மகள்" உரிமையாய் உறவை நிலை நாட்டி கூறியதில் அவர் இதழ்கள் புன்னகைக்க.

"ம்ம் ஆமா என் பொண்ணு எங்க? தூங்கிட்டாளா?" எனகேட்க அவனோ அறைக்கதவை திறந்து காட்டினான்.

அவள் தூங்குவதைக் கண்டவர் சிரித்துக் கொண்டே "என் பொண்ணு மகாலக்ஷ்மியாட்டம் லட்சணமா இருக்கா கண்ணா" காலையில் சொல்ல முடியாததை தனிமையில் கூறிட அவன் மனமோ "அம்மாவ போல" என தன்னுள்ளே சொல்லிக் கொள்ள வெளியே புன்னகைத்தான்.

"மச்சான் நாளைக்கு என்ன பண்ண போற" என்ற திருவிற்கு புன்னகையை வழங்கியவன் "நாளைக்கு தெரிஞ்சும்டா.. எல்லாரோட முகத்திரையும் கிழிச்சிடலாம்" அழத்தத்தோடு வந்து வீழ்ந்தது அவன் வார்த்தைகள்.

அதில் இருவருமே அவன் மனநிலையை புரிந்தவர்களாக அவனிடம் பேசிவிட்டு கிளம்பிச் சென்றிட அறைக்குள் நுழைந்தவனோ மஞ்சத்தில் நிம்மதியாய் உறங்குபவளைள சில கணம் பார்த்து நின்றவன் பின் அவளருகே தானும் தூங்கிப் போனான்.

.....

அடுத்த நாள் விடியலில் ஒவ்வொரு மாற்றங்களை தர கதிரவன் கீழ் வானில் மெல்ல தன் கால் தடம் பதித்து பூமிக்கு ஒளியூட்டியது.

காலை வேளை தன்னறையில் கண்விழித்த மோகன்ராஜோ அருகில் மனைவியை தேடிட அவரிடம் வெற்றிடமாய் காட்சியளித்தது.

இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல என்று இவ் வீட்டில் நாராயணனின் மரணம் நிகழ்ந்ததோ அன்றிலிருந்து பூரணியோ முற்றிலும் இறுகித் தான் போனார். முன்பு போல் யாரிடமும் சிரித்து பேசுவதில்லை அனைத்திலும் ஓர் ஆளுமை அதிகாரம் கண்டிப்பு மாத்திரமே இருந்தது.
மற்றவர்களிடம் காட்டும் அதே இறுக்கத்தை கணவனிடமும் காட்டியவர் அவருடனான பேச்சையும் குறைத்திருந்தார். தேவைக்கு மட்டும் பேசுபவர் மற்ற நேரங்களில் அழுத்தமே உருவாய் நடமாடுவார்.

ஆரம்பத்தில் மனைவியின் மாற்றத்தை கண்டு கொள்ளாது தன் திட்டம் வெற்றி பெற்று விட்டது தன் எதிரியை அழித்துவிட்டேன் என இறுமாப்பில் சுற்றித் திரிந்த மோகன்ராஜ்ஜிற்கு நாட்கள் செல்ல மனைவியின் இறுக்கமும் ஒதுக்கமும்.. அவரை களங்கடித்தது உண்மை.
மனைவி தன்னிடம் மட்டும் இப்படியிருக்கிறாளோ தன் வேஷம் கண்டுபிடித்துவிட்டாளோ என அஞ்சியவர் அவரை நோட்டமிட்டதில் அவர் எல்லோரிடமும் அப்படி இருப்பது கண்டு நிம்மதி வந்தாலும் கணவனாய் அவர் மனம் பழைய காதல் மனைவிக்காக ஏங்கத் தொடங்கியது இருந்தும் மனதை அடக்கிக் கொண்டவர் தன் வெற்றிக்கு கிடைத்த சொத்துக்களை தன் போக்கில் ஆள முயல அதற்கும் தடைக்கல்லாய் வந்து நின்றார் பூரணி.

அனைத்துக்கும் கணக்கு வழக்கு காட்டச் சொல்லி கேட்கும் மனைவியிடம் தன் திருகுத் தளத்தை காட்ட முடியாதவராய் திண்டாடிப் போனார் மோகன்ராஜ்.

இதைத் தானே கௌசிக்கும் எதிர்பார்த்தது. அவர் எதிர்பார்த்த எந்த சொத்தும் அவர் கைக்கு போக கூடாது அவரின் உண்மையான முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் முன் வேஷமிடச் சொன்னதே.


மனைவி இல்லாததைக் கண்டு பெருமூச்சுடன் எழுந்து குளியறை புகுந்தவர் தன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு அறையில் இருந்து வெளி வந்தவர் கீழே கேட்ட சலசலப்பில் என்னவோ என கீழே பார்க்க அங்கே கூடியிருந்தவர்களைக் கண்டு யோசனையுடன் நின்றிருந்தார்.

அந்த அரண்மனை வீட்டைச் சுற்றியிருந்தவர்களும் அந்த ஊரில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுமே கீழே அமர்ந்திருந்தனர்.

அனைவருமே அன்றைய நாள் திருமணத்திற்காக வந்திருந்தவர்களே அனைவரையும் நினைவு வைத்து இரவோடு இரவாக விடியலிலே அத்தனை பேரையும் அழைத்திருந்தான் கௌசிக் கிருஷ்ணா.

அங்கே இருப்பவர்களை கண்டு அதிர்வுடன் பார்த்தவாறே கீழிறங்கி வந்தவர் விழிகளோ அதிர்ச்சியில் மேலும் விரிந்து கொண்டது அங்கே போடப்பட்ட சிறிய மணமேடையில் மணமகன் தோற்றத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த கௌசிக்கை கண்டு.

"இங்க என்ன நடக்குது பாரி இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்" தன்னை நோக்கி வந்த மகனிடம் சீறியவர் பார்வை கௌசிக்கை முறைக்க அவனோ நக்கல் சிரிப்புடன்
"ஹலோ மாம்ஸ் என்ன அங்க நின்னு பாம்பாட்டம் சீறிக்கிட்டு இருக்கிங்க உங்களோட கேள்விக்கான பதில் அங்கே இல்லை இங்கே" என தன்னைத் தானே சுட்டிக் காட்டியவன் தன்னை முறைத்தவரை அலட்சியத்துடன் நோக்கியவாறு ஐயர் கூறிய மந்திரத்தை கூறத் தொடங்கினான்.

அவருக்கோ நடப்பதை எதையும் தடுக்க முடியாத நிலையில் கடுப்புடன் நின்றிருந்தவர் பார்வையை மனைவியை தேட அவரோ அங்கே போடப்பட்டிருந்த இருருக்கையில் இறுகிப் போய் அமர்ந்திருந்தார்.

"பொண்ணை அழைஞ்சிட்டு வாங்கோ" என்ற ஐயரின் கூற்றில் அறைக்குள் அலங்கரிக்கப்பட்டு இருந்த வெண்மதியை அழைத்து வந்தாள் திவ்யா.

சர்வ அலங்காரத்துடன் தலைகுனிந்து தயக்கத்துடனே நடந்து வந்தவள் மனமோ
இங்கு என்ன நடக்கின்றது என புரியாது குழம்பியிருக்க அவள் மனதிலோ சற்று நேரா முன் நிகழ்ந்த அதிரடி அலங்காரத்தை நினைத்துப் பார்த்தது.

அதிகாலையில் தூக்கம் களைந்து கண்விழித்தவள் கண்டது என்னவோ தன் முன்னே கையில் புது ஆடைகளுடன் நின்றிருந்த திவ்யாவையே.
அங்கே அவளை எதிர்பாராதவள் திரு திருவெனு முழித்தபடி குழப்பத்துடன் ஏதோ பேச வாய் திறந்திட அவளை பேசவே விடாதவளாய் அதிரடியாக அவளை அலங்கரிக்கத் தொடங்கியவள் அனைத்தையும் முடிக்கும் நேரம்

ஐயரின் அழைப்பும் வர அவளை அழைத்துக் கொண்டு வெளியேறியிருந்தாள் திவ்யா.

குனிந்த தலை நிமிராமல் தயங்கித் தயங்கி மறந்தும் அங்கிருந்தவர்களை நிமிர்ந்து பாராது மேடையேறியவள் அவனருகே அமைதியாய் அமர்ந்தாள்.

அவளுக்கோ ஒருவித பதட்டம் பயம் மனதை ஆக்கிரமிக்க அவள் உடலோ பயத்தில் நடுங்கியது.
அவளருகே அமர்ந்திருவனுக்கு அவள் நிலை புரிய அவள் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.

அவன் கை அழுத்தத்தில் நிமிர்ந்தவள் அவன் முகம் பார்க்க அவனும் விழி மூடித் திறந்து ஆறுதல் கூறியவன் ஐயர் கூறிய மந்திரத்தை அமைதியாய் கூற அவனோடு இணைந்து அவளும் உச்சரித்தாள்.

ஐயர் தாலியை நீட்டி கெட்டி மேளம் கூறிட மங்கள நாணை அவள் கழுத்தில் கட்டினான் கௌசிக்.

தன் கழுத்திலேறிய தாலியை கண்டவள் இது அவன் முதன் முதலில் தனக்கு கட்டிய தாலியே மீண்டும் தன் கழுத்தில் ஏறுவதைக் கண்டு கேள்வியாய் அவன் முகம் நோக்கியவள் புறம் சரிந்தவன் "நான் தான் நீ தூங்கும் போது தாலியைக் கழட்டினேன்" என்றதும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவளை நோக்கி கண்சிமிட்டி சிறு புன்னகை உதிர்த்தவன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் குடும்பத்தின் முன்னிலையில் கடவுள் சாட்சியாக சம்பிராதயப்படி மீண்டும் தன் மனைவியாக்கிக் கொண்டான்.

அதன்பின் அவள் கைபிடித்து அக்னியை சுற்றி வந்தவன் மேடையில் இருந்து இறங்கி தம்பதி சகிதமாய் அங்கே நடு ஹாலில் வைக்கப்பட்டிருந்த தன் தகப்பனின் படத்தை பார்த்து வணங்கியவன் மனதில் அத்தனை அமைதி.

அங்கே கண்ணீரோடு நின்ற தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட அவர்களை மனமார வாழ்த்தினார் கமலம்.

அன்று தம்பதியாய் தன் பிள்ளைக்கு வாழ்த்த முடியாததை இன்று தனிமனிதியாய் வாழ்த்தியதில் அவர் கண்கள் கலங்கி கண்ணீரைச் சிந்தியது.

தாயின் கண்ணீரை துடைத்துவிட்டவன் இப்போது அங்கே நின்றிருந்த பூரணியின் புறம் திரும்பி, மதியை அழைத்துக் கொண்டு அவரை நோக்கிச் சென்றவன்
அவர் கால்கள் நோக்கிக் குனிய இருவரையும் மனம் நிறைய வாழ்த்தியவர் கண்ணீரோடு இருவரையும் அணைதுக் கொண்டார்.

மதிக்கோ அவர் அணைப்பிர் கண்ணீர் வழிய அவரை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள். அவள் மனதிர் சொல்லெண்ணா மகிழ்ச்சி

அவரின் இந்தச் செயலில் அதிர்ந்து தான் போனார் மோகன்ராஜ்.
கௌசிக் பூரணி காலில் விழும் போதே பூரணி கண்டிப்பாக அவனை வார்த்தைகளால் காயப்படுத்துவார் என்று அலட்சியத்துடன் நின்றிருந்தவருக்கு அவரின் இந்த செயல் அதிர்ச்சியை தந்தது.

அவரின் அதிர்ச்சியை கண்ட கௌசிக்கின் இதழ்கள் கேலியாய் வளைய அழுத்தமான பார்வையுடன் அவரை நோக்கி நெருங்கினான்.

"என்ன மாமா அதிர்ச்சியா இருக்குதா?" என்றவன் கேள்வியில் முகம் சிடுசிடுவென மாற அவனையே முறைத்து நின்றிருந்தான்.

அவர் முறைப்பையெல்லாம் கண்டு கொள்ளாதவன் மதியிடம் திரும்பி "


"மதிம்மா" என்ற குரலில் நிமிர்ந்தவள் அவன் பின் பார்க்க அங்கோ கண்ணீரோடு நின்றிருந்த சிற்றன்னையை கண்டவள் இதழ்கள் புன்னகைக்க "சித்தி" என்ற கூவலுடன் அவரை அணைத்திருந்தாள்.

என்ன தான் வீடு நிறைந்த சொந்தங்கள் இருந்தாலும் ஏதோ ஓர் வெறுமையை உணர்ந்தவளுக்கு அவளை தூக்கி வளர்த்தவரின் வருகை அத்தனை நிறைவைத் தர அவரை அணைத்துக் கொண்டே கண்ணீர் சிந்தினாள்.

"அழாத மதி கல்யாணப் பொண்ணு அழலாமா" என்று கேட்டுக் கொண்டே அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவரை ஏறிட்டவள் குழப்பத்துடன் "சித்தி நீ....நீங்க எப்பிடி இங்க?" என்று கேட்டவள் அப்போது தான் கஸ்தூரியின் அருகே நின்ற அவர் அண்ணன் மூர்த்தியையும் கண்டவள்
"மாமா நீ..நீங்க எப்பிடி" என்று கேள்வியாய் கேட்க அவர்கள் இருவரின் பார்வையும் கௌசிக்கின் மீதே வீழ்ந்தது.

அவளும் அவனை கேள்வியாய் பார்க்க அவனோ அவள் கரம் பற்றி அனைவருக்கும் முன்னே வந்து நின்றவன் பார்வை அனைவரின் மீது அழுத்தமாய் படிந்தது.

அவன் அழுத்தமான பார்வையில் ஏதோ நடக்கப் போவதை உணர்ந்த மோகன்ராஜ்ஜோ திகில் படிந்த முகத்தோடு நின்றிருந்தார்.

அவர் எண்ணத்தை மெய்பிப்பவன் போலவே தன் பேச்சை ஆரம்பித்திருந்தான் கௌசிக்.

"என் திடீர் அழைப்பை ஏற்று இங்க வந்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. உங்கள்ல பெரும்பாலன பேர் அன்னைக்கு இதே வீட்ல ஒரு உயிர் போறப்போ இந்த இடத்துல கைகட்டி வாய் பொத்தி அமைதியா நின்னவங்க தான்" என்றவன் பார்வையோ தீர்க்கமாய் அங்கிருந்த அனைவரையும் துளைத்ததில் அனைவரும் மௌனமாய் தலைகுனிந்தனர்.

"அன்றைய நாள் இதே இடத்துல இதே ஊர் மக்கள் முன்னால எங்கப்பா மேலே சுமத்தப்பட்ட வீண்பழி.." என்றவன் பேச்சை தடுக்கும் முகமாய்

"வீண்பழியில்லை உண்மை தான்" என்ற கணீர் குரலில் அனைவரின் பார்வையும் வாசல் பக்கம் திரும்ப அங்கே மார்புக்கு குறுக்கே கைகட்டி முகத்தில் இறுக்கம் சூழ நின்றிருந்தான் விஸ்வா. அவனருகே கண்ணில் திமிருடன் கௌசிக்கை முறைத்தபடி நின்றிருந்தாள் நேஹா.

வாசலில் நின்ற இருவரையும் கண்ட கௌசிக்கின் இதழ்களோ விரிந்து கொண்டது.

அவன் எதிர்பார்த்த இருவரும் வந்துவிட்டார்கள் அல்லவா. இனி அவன் ஆட்டத்தை தொடங்கிவிடலாமே என எண்ணிக் கொண்டவன் சிரிப்புடன் "வெல்கம் பேக் மிஸ்டர் விஷ்வா வரதராஜ். ஒரு வழியா என்னோடா அழைப்பை ஏற்று என் கல்யாணத்துக்கு வந்திட்டிங்க போல. தைங்யூ" என்றவனின் நிதானத்தில் நேஹாக்கோ பற்றி எரிய விஷ்வாவோ அமைதியாய் அவனை பார்த்தான்.

அவனுக்கு தான் கௌசிக்கை பற்றி தெரியுமல்லவா. கடந்து வந்த சில காலத்தில் அவன் அடைந்த வெற்றிகளை அவனும் தான் அறிந்திருக்கிறானே.
அவனது நிதானம் அவன் அடைந்த வெற்றிகளாலே அவனுக்கு கிடைத்திருக்கும் என்பதை அவனும் இத்தனை காலத்தில் தன் அனுபவத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறானே.

காலத்தின் ஓட்டத்திலும் காதலின் பிரிவிலும் அவனுக்கோ அன்றிருந்த பழிவெறியும் கோபமும் இன்று இல்லை தான். ஆனாலும் கௌசிக் தங்கள் கூறியதை பொய்யொன்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது அவனை எதிர்த்து மீண்டும் அவன் முன் நின்றிருந்தான் விஷ்வா.

அதே நேரம் இங்கு இவனை கண்டதில் முதலில் அதிர்ச்சியும் பின் கண்ணீருமாய் அவனைப் பார்த்திருந்தவளுக்கு ஏதேதோ எண்ணங்கள் மனதை அழுத்த பட்டென்று தலை குனிந்து தன் மனவேதனையை அடக்க முயன்றாள் திவ்யா.
தங்கையின் வேதனையை உணர்ந்தானோ என்னவோ சிவாவோ அவளை நெருங்கி ஆதரவாய் அவளை அணைத்துக் கொண்டான்.


தம்பியின் செயலை பார்த்திருந்த கௌசிக்கின் இதழ்கள் விரிந்ததென்றால் விஷ்வாவிற்கோ தன்னவள் முகம் பார்க்காமலே அவள் வேதனை புரிய அவளை அணைத்து ஆறுதல்படுத்த முடியாத தன் நிலையை சபித்தவனாய் நின்றிருந்தான்.

அவர்களுக்கிடையேயான இந்தப் பிரிவு அவனின் காதலின் ஆழத்தை அதிகரித்ததே தவிர இம்மியும் குறைக்கவில்லை என்பதை இக்கணம் உணர்ந்து கொண்டான் விஷ்வா.

இறுகிய தோற்றத்தில் பார்வை வெறிக்க நின்றிருந்தவனைக் கண்ட கௌசிக்கிற்கு அவன் எண்ணவோட்டம் புரிய அவனையே ஆழமாய் பார்த்தவன்.

"என் அப்பா மேல சுமத்தினது வீண்பழி தான் அதுவும் எந்தப் பொண்ணுமே செய்யத் துணியாத காரியத்தை செய்து நாடகம் போட்டு சுமத்தின வீண்பழி" என கணீரென்ற அவன் குரலில் விஷ்வாவின் கவனத்தை தன்புறம் திருப்பினான்.

அதில் விஷ்வாவின் பார்வையோ அவனை சந்தேகமாய் ஊடுறுவியது.

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவனும் சன்னச் சிரிப்புடன்
"நான் பொலீஸ்காரன் வக்கீல் சார் ஆதாரம் இல்லாம எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டேன்" கண்சிமிட்டி கூறி மதியின் புறம் திரும்பி அவளை தோள் சுற்றி அணைத்தபடி அனைவரையும் பார்த்து
"எங்கப்பா யாரை அவங்க குழந்தையோட கொலை பண்ணிட்டாருன்னு சொல்லி அவருக்கு கொலையாளி பட்டம் சூட்டினிங்களோ.. அவங்களோட ஒரே பொண்ணு அவங்க வயித்துல வளர்ந்து பெற்றெடுத்த பொண்ணு.. வெண்மதி கேசவன் இப்போ மிஸிஸ் வெண்மதி கௌசிக் நாராயண கிருஷ்ணன். என்னோட மனைவி என்னோட அத்தை பூமாதேவியோட ஒரே பொண்ணு வெண்மதி" என கணீரென்று கூறியவன் குரலில் அத்தனை பேருமே அதிர்வாய் நின்றிருந்தனர்.



 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 20



கௌசிக்கின் வார்த்தைகளில் அங்கிருந்த அத்தனை பேருமே அதிர்ந்து தான் நின்றனர்.

நேற்று மதி பற்றிய தகவலை சேகரிக்கவும் அவளின் சித்தியை அழைக்கவும் மதியின் சொந்த ஊர் சென்ற சிவா சிவாங்கி இருவருக்கும் கூட இது அதிர்ச்சியே.

அவர்கள் அவளின் பிறப்பு உள்ளிட்ட அனைத்து தகவலை திரட்டினாலும் அதிலுள்ளவற்றை அந்தளவு ஆராய்ந்தும் பார்க்கவில்லை. அத்தோடு அவளின் சித்தியுடன் அழைப்பின் மூலம் பேசியதும் கூட கௌசிக்காகையால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அதிர்ச்சியோடு இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து நின்றனர்.

பூரணிக்கோ அவன் வார்த்தையில் அத்தனை அதிர்ச்சி.
இன்று தன் அண்ணன் மீதான களங்கத்தை ஒரு மகனாய் அவன் நிரூபிக்கப் போகிறான் என எண்ணியிருந்தவருக்கு கூடுதல் சந்தோஷமாக தன் இரட்டையின் வாரிசை அறிமுகப்படுத்தியிருக்க அதிர்ச்சியில் வாயடைத்து நின்றவர் அவனை நெருங்கி
"க்ரிஷ் கண்ணா என்னப்பா சொல்ற? இது நம்ம தேவியோட பொண்ணா?" என குரல் நடுங்கக் கேட்டவருக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன்

"ஆமா இது தேவி அத்தை பொண்ணு தான். உங்க தங்கைப் பொண்ணு தான்" என்றான் உறுதியாய்.

அதில் கண்கலங்கியவர் விழிகளை அவனருகே நின்றவள் மீது பதித்து நடுங்கும் விரல் கொண்டு அவள் கன்னம் வருடிட அவளுக்குமே விழிகள் கலங்கிப் போனது.
முன் முதலாய் தாயின் உருவத்தில் தன்னெதிரே வந்து நின்றவரைக் கண்டு அதிர்ந்து நின்றவள் அந்நொடி "அம்மா" என்றழைக்கவும் முடியாத நிலையில் நின்றிருக்க. இப்போதோ நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும் கணவனின் வார்த்தைகளில் இவர்கள் தன் தாய் வீட்டு சொந்தம் என்பது மட்டும் புரிந்திட அவள் கண்களோ தன் முன்னே தாயின் உருவாய் நின்ற தன் பெரியன்னையை கண்டு கண்ணீரைச் சிந்த இதழோ "அம்மா" என்றழைத்தது தான் தாமதம் அவளை தாவியணைத்திருந்தார் பூரணி.

"அம்மா தான்டா உன் அம்மா தான்" என்றவர் அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்த அவரோடு இணைந்து அவளும் அழுதாள்.

இருவரின் அழுகை அங்கிருந்தவர்களுக்குமே கண்ணீரை வரவைத்தது.

கௌசிக்கோ அத்தையை நெருங்கியவன் "அத்தே அழாதிங்க ரிலாக்ஸ்" என ஆறுதல்படித்திட..

இத்தனை நேரமும் மௌனமாய் அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்த விஷ்வாவோ அவர்களை இடையிட்டு "யாரோ ஒரு பொண்ண கூட்டி வந்து இவ தான் என் அத்தை பொண்ணுன்னு சொன்னா எப்பிடி நம்புறது" என நெஞ்சை நிமிர்த்தி நின்றவனை பார்த்து தலையாட்டிச் சிரித்தான் கௌசிக்.

"மறுபடியும் சொல்றேன் நான் பொலீஸ்காரன் ஆதாரம் இல்லாம எதுலயும் இறங்கமாட்டேன்" என்றவன்
சிவாவின் புறம் பார்வையை திருப்ப அந்த பார்வை புரிந்தவனாய் கையில் ஓர் பைலுடன் முன்னே வந்தவன் கௌசிக்கிடம் கொடுக்க அவனோ அதை விஷ்வாவின் புறம் நீட்டியிருந்தான்.

புருவம் சுருங்க அதை வாங்கியவன் அதிலுள்ள அனைத்தையும் நிதானமாய் ஏறிட்டதில் அவன் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

அவன் அதிர்ச்சியைக் கண்ட கௌசிக்கின் இதழ்கள் வளைய அவனைப் பார்த்தவன்.

"என் அத்தைக்கும் அவர் மனசார விரும்பின கேசவன் மாமாக்கும் சட்டப் பூர்வமாக திருமணம் நடந்ததற்கான மேரேஜ் சர்ட்டிபிக்கேட்.. அதற்கு சாட்சி கையெழுத்தாக அத்தை சர்பாக எங்க அப்பாவும் மாமா சார்பாக அவருடைய நண்பர் மூர்த்தியும் கையெழுத்துப் போட்டியிருக்குற ஆதாரம். வெண்மதி தான் அவங்களோட குழந்தை என்றதற்கான ஆதாரமா மெடிகல் ரிப்போர்ட் அன்ட் மதியோட பேர்த் செர்ட்டிபிகேட்.. அது எல்லாத்துக்கும் மேல அவங்களோட கல்யாணத்தை பதிவு பண்ண நாள்ல அவங்க எடுத்துக் கொண்ட போட்டோ.. எல்லாமே எல்லாமே அதுல இருக்கு" என அவன் ஒவ்வொன்றாய் கூறக் கூற விஷ்வாவின் கரங்கள் அவற்றை எடுத்துப் பார்த்தன.

ஒரு வக்கீலாய் அவனால் இந்த ஆதாரங்களை மறுக்கவே முடியவில்லை
அதுவும் அதில் மாலையிலும் கழுத்துமாக நின்ற கேசவன் மற்றும் பூமாதேவியின் அருகே மூர்த்தி மற்றும் நாராயணன் நின்றிருந்த புகைப்படமும் நிறைமாத கர்ப்பிணியாய் கணவனருகே மங்களகரமாய் புன்னகையுடன் நின்றிருந்த பூமாதேவியின் புகைப்படமும் அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க அதிர்ந்து போய் நின்றிருந்தான்.

"என்ன விஷ்வா அதிர்ச்சியா இருக்கா.. இல்ல இந்த ஆதாரம் போதாது இன்னும் வேணும்னாலும் கொடுக்க நான் ரெடி" என்றவன் பார்வையாலே அவனுக்கு சவால்விட்டு நின்றான்.

விஷ்வாவோ பதிலின்றி மௌனியாகி நின்றான்.
அந்த புகைப்படங்களே அவனுக்கு பல உண்மைகளை கூறினாலும் ஏனோ இன்றுமே தந்தை மரணப்படுக்கையில் கூறியவை காதில் அபஸ்வரமாய் ஒலித்திட நிமிர்ந்து கௌசிக்கை பார்த்தவன் பார்வையில் தெரிந்த நம்பாத் தன்மையில் தலையாட்டிக் கொண்ட கௌசிக்கின் பார்வையோ இப்போது அங்கிருந்த மோகன்ராஜின் மீது அழுத்தமாய் படிந்தது.

நடப்பதையெல்லாம் ஓர் அதிர்வோடு பார்த்திருந்தவருக்கு அவன் அழுத்தமான பார்வை நடுக்கத்தை கிளப்ப பயத்துடன் நின்றிருந்தார் மோகன்ராஜ்.

அவனோ அவரை நெருங்கியவன்
"என்ன மாமா இப்போவாச்சும் உங்க வாயாலே உண்மையை சொல்றீங்களா? இல்லை" அமைதியான குரல் தான் ஆனால் அதில் இருந்த அழுத்தம் அவரை கிலி பிடிக்கச் செய்திட முகத்தில் வியர்வை ஊற்றெடுக்க நின்றிருந்தார் மனிதர்.

அவர் நிலையை கண்டு அவன் இதழ்கள் கேலியாய் வளைந்தது. அவரை விடுத்து அவன் பார்வை விஷ்வாவின் புறம் திரும்பிட அவனோ என்ன சொல்லப் போகிறாய் என்ற கேள்வியை விழிகளில் தேக்கி நின்றிருந்தான்.

அவனையே அழுத்தமாய் பார்த்தவன்
"உன்னோட அப்பாவும் இதோ உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ண உன் பெரியப்பாவும் சேர்ந்து சொத்துக்காக சொந்த வீட்டு பொண்ணையே கட்டாய கல்யாணம் பண்ண முயற்சி செய்ததுனால தான் என்னோட அப்பா உன்னோட அப்பாவ வெட்டினார்" என்றவன் உண்மையை உரக்க அந்த சபை மத்தியில் போட்டுடைத்தான்.

அவரோ "இல்ல நான் எதுவும் பண்ணல" வேகமாய் மறுத்தவரை திரும்பி ஓர் பார்வை தான் பார்த்தான் கப்பென்று வாய் மூடிக் கொண்டார் மோகன்ராஜ்.

"இங்க இப்போ நான் தான் பேசுவேன் நான் மட்டும் தான் பேசுவேன் புரிஞ்சுதா" அடிக்குரலில் சீறியவன் கர்ஜனையில் நடுங்கித் தான் போனார்.

அவனோ அவரை பார்த்து "உங்களோட பணத்தாசை புத்திக்காக என்னோட அப்பாவோட உயிரை காவு வாங்கிட்டாங்கல்ல" ஆக்ரோஷமாய் சீறியவன் சீறலில் அவரோ விதிவிதிர்த்து நின்றார்.

ஆம் அவன் சொல்வது உண்மை தானே அவருடைய பணத்தாசையினால் உண்டான வன்மம் தானே நாராயணனின் உயிரைக் குடித்தது.

பூரணியை திருமணம் முடித்து வீட்டோடு மாப்பிளையாக வந்தவருக்கு அரண்மனை போன்ற வீடும் அந்த சொத்துக்களும் அவரின் பேராசைகளை தூண்டிவிட
பெரும் தொகையான பணத்தை சூதாட்டம் ரேஸ் போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்த அதை கண்ட நாராயணனோ பல முறை அதை தடுத்து கண்டித்தார் ஆனால் அப்போதும் அவர் சிறுசிறு தப்புக்களை செய்து கொண்டிருக்க.. பண விசயத்தில் தப்பானவராக இருந்தாலும் தன் தங்கை மீது அன்பாக இருந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே தங்கைக்காக பொறுத்துக் கொண்டார் நாராயணன்.

இந்த நிலையில் தான் நாராயணின் மற்றைய தங்கை தன் அண்ணணிடம் கேசவனை விரும்புவதாக கூற அவரும் தங்கையின் விருப்பத்திற்கு சம்மதம் கூறியிருந்தார்.

ஆனால் மோகன்ராஜ்ஜின் தம்பி வரதராஜோ பூமாவின் அழகிலும் அவர் சொத்திலும் மோகம் கொண்டு அவரையே திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்க.
பூமாதேவியின் காதல் விவகாரத்தை அறிந்து கொண்டவர் தன் அண்ணணிடம் தன் விருப்பத்தை சொல்ல மோகன்ராஜ்ஜும் சொத்து ஆசையில் தம்பியையும் வீட்டின் மருமகனாக்க முடிவு செய்தார்.

அந்த முடிவை நாராயணனிடம் கூறிட மது மாது என அனைத்து கெட்ட பழக்கங்களை கொண்ட வரதராஜ்ஜிற்கு தங்கையை கொடுக்க முற்றாக மறுத்துவிட்டார் அவர்.

நாராயணணின் மறுப்பில் அண்ணன் தம்பி இருவருமே குறுக்கு வழியில் திட்டம் தீட்டினர் அதன்படி பூமாவைக் கடத்தி வந்து கட்டாயத் தாலி கட்டினாள் நிச்சயம் இந்த திருமணத்தை மறுக்க முடியாது என எண்ணியே தங்கள் திட்டத்தை அமுல்படுத்த நினைத்து பூமாவையும் கடத்தியிருந்தவரோ அவர் மீது கொண்ட மோகத்தில் அவரை நாசமும் செய்திருந்தார் வரதராஜ்.

இதை கேள்வியுற்ற நாராயணன் எப்படியோ தங்கையை அந்த அய்யோக்கியன் பிடியிலிருந்து மீட்டெடுத்தவர் தங்கையின் கோலம் கண்டு அண்ணனாய் துடிதுடித்து தான் போனார்.
தங்கையின் இந் நிலைக்கு காரணமானவனை கண்டு எழுந்த கண்மண் தெரியாத கோபத்தில் அவரை வெட்டியிருந்தார்.


சீரழிக்கப்பட்டு உயிருக்காய் போராடிய தன் தங்கையை யாருக்கும் தெரியாது வெளியூர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தார்.

இந்நிலையில் தான் விசயம் கேள்விபட்டு ஓடி வந்தார் கேசவன்.
அங்கே தான் உயிருக்குயிராய் விரும்பியவள் வாடிய கொடியாய் வதங்கிக் கிடந்ததைப் பார்த்ததும் எதை பற்றியும் யோசிக்காமலே அதிரடியாக அவரை தன் மனைவியாக்க எண்ணிட அதற்கு முற்றாய் மறுத்தார் பூமாதேவி.

அவர் மறுப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாதவர் தன் காதலியின் கழுத்தில் தாலி கட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொண்டார்.

கேசவனை பொறுத்தவரையில் அவர் காதலி பரிசுத்தமானவளே என எண்ணியே அவரை தன்மனைவியாக்கிக் கொண்டவர் .தன் மனைவிக்கு நடந்த கொடூரம் இனி யாருக்கும் எக் காலத்திலும் தெரியக் கூடாது தங்களுக்குள்ளே ரகசியமாய் போகட்டும் என்றவர் இனி தாங்கள் எங்கள் ஊருக்கே போய்விடுவதாகவும் கூறி நாராயணனிடமிருந்து சத்தியம் வாங்கி கொண்டு அங்கிருந்து பூமாவுடன் தன் ஊருக்கே கிளம்பினார்.

இத்தனைக்கும் மௌன சாட்சியாக அவரோடு துணையாய் இருந்தது என்னவோ அவரின் ஆருயிர் நண்பன் மூர்த்தியே.

மோகன்ராஜ்ஜிற்கு உண்மை அனைத்தும் தெரிந்தாலும் நாரயணனுக்கு பயந்து வாயை இறுக மூடிக் கொண்டு நாட்களை கடத்தியவருக்கு உள்ளுக்குள் நாராயணனின் மீது அத்தனை வன்மம் நிறைந்திருந்தது.

அவரின் வன்மத்திற்கு வடிகாலாய் தம்பியின் வாரிசுகளும் வந்து சேர அதன் பின் அவரின் நஞ்சு வார்த்தைகளில் அந்த பிஞ்சுகளும் பழிதீர்க்கும் பாம்பாய் காத்திருந்து கடைசியில் நாராயணனின் உயிரையும் பறித்திருந்தனர்.

கௌசிக் நடத்த அனைத்தையும் கூறி முடித்திருந்தான் ஒன்றைத் தவிர.. அது அந்த அய்யோக்கியனால் தன் அத்தை சீரழிக்கப்பட்டதாகும் எந்த ரகசியத்தை தந்தை கட்டிக்காத்தாரோ அதை தானும் மறைத்தாவனாய் மற்றதை கூறி முடித்தான் கௌசிக்.

அவன் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நிற்க விஷ்வாவோ இறுகி போய் நின்றிருந்தான். தன் தந்தைக்கு எதிராய் ஆதாரத்துடன் அவன் அடுக்கிப் போகும் குற்றங்களை பொய்யென்று கூறுவதற்கு அவனிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லையே.

"இப்போ இந்த இடத்துல என் அப்பா கொலைகாரன் இல்லங்குறத ஆதாரப் பூர்வமா உங்க முன்னாடி நிரூபிச்சுட்டேன். இது உண்மையில்ல பொய்தான்னு உனக்கு தோணிச்சுன்னா உன் அப்பா சொன்னது தான் நிஜம்னு தோணிச்சுன்னா இப்போவே இந்த இடத்துலயே ஆதாரத்தோடு நிரூபி" என சட்டமாய் கூறியவன் மார்புக்குக் குறுக்கே கைகட்டி அவனை பார்த்து நின்றான் கௌசிக்.

அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாதவனாய் அமைதியாய் நின்ற அண்ணனின் தோற்றம் கண்டு இத்தனை நேரம் நடப்பதை அமைதியாய் பார்த்து நின்ற நேஹா வாய் திறந்தாள்.


"வாவ் சூப்பர் நல்ல ட்ராம ஐ ம் இம்ரெஸ்ட்" என்றவள் பார்வை கேலியாக கௌசிக்கின் மீது படிந்தது.

அவள் பார்வைக்கு சளைக்காது அழுத்தமாய் கூர் பார்வை பார்த்தவன் இதழ்கள் கேலியாய் வளைந்தது.
நீ வாய்திறக்கும் சந்தர்ப்பத்திற்காகத் தானே காத்திருக்கிறேன் என்பது போல் அவன் சிரிப்பு இருந்தது.

இப்போது அவளும் வாய் திறந்திருக்க இனி அவள் மூக்குடைக்கும் தருணத்திற்காக அமைதியாய் அவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்தான் கௌசிக்.

அவளும் அதை அறியாதவளாய் எப்படியும் அவனை மண்ணைக் கவ்வ வைக்கும் நோக்கில் பேச ஆரம்பித்தாள்.

"என்ன பொலீஸ் ஸார் உங்களால எந்த அளவு உங்க பதவியைப் பயன்படுத்தி பொய் சாட்சியம் தயார் பண்ண முடியுமோ நல்லா பண்ணிட்டிங்க போல ம்ம்ம் ரொம்ப கெட்டிக்காரர் தான் நீங்க ஆனாலும் நீங்க ஒன்ன மிஸ் பண்ணிட்டிங்க உங்கப்பா செய்த இன்னொரு தப்பு. அதுதான் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணது அதுக்கு என்ன சொல்லப் போறீங்க" குரலில் அத்தன எகத்தாளம் தெறிக்க மிடுக்குடன் கேட்டாள்.

விஷ்வாவிற்கோ இத்தனை ஆதாரங்கள் காட்டியதிலே பல உண்மைகள் புரிந்திருக்க நாராயணன் குற்றமற்றவர் என அவன் வக்கீல் புத்தி உரைக்க நின்றிருந்தவனுக்கு தங்கையின் கேற்ள்வியில் நிச்சயம் அதிலும் அவர் தப்பு இருக்காது என மனது அடித்து சொல்ல மீண்டும் ஒரு முறை இந்த சபை முன்னிலையில் தங்கையின் மானம் கடைபரப்பப்படுவதை விரும்பாதவன் "நேஹா" என அவளை அதட்டு முன்பே கௌசிக் முந்திருந்தான்.

"கண்டிப்பா அதை எப்பிடி மறக்க முடியும் நிச்சயம் உங்களுக்கு நடந்த தப்புக்கு நியாயம் வாங்கியே தருவேன்" என நக்கலாய் கூறியவன் வார்த்தையில்

"என்ன கிரிமினலா யோசிச்சு இதுலயிருந்தும் உன் அப்பாவ காப்பாத்திடலாம்னு நினைப்பா" என்றாள்.

"ம்ஹூம் ஒரு பொலீஸா நான் கிரிமினலா யோசிக்குறத விட ஒரு பொண்ணா நீங்க செய்த கிரிமினல் வேலை தான் பெர்பெக்ட்.. மிஸிஸ் நேஹா" என்றதுமே


நேஹாவிற்கு உள்ளுக்குள் உதறத் தொடங்கியது இருந்தும் அதற்கு ஆதாரம் அவனிடம் இருக்காது என்ற திமிறுடன் நிமிர்ந்து நின்றவள்.
"நீ சொல்ற எதுவுமே உண்மையில்லை நீ இப்போ சொன்ன ஆதாரம் எல்லாம் பொய் உன் அப்பன் செய்ததை மறைக்க உன் அதிகாரத்தை பயன்படுத்தி நீ போலியா உருவாக்கின ஆதாரம் அதெல்லாம் காட்டினா மட்டும் உன் அப்பா எவ்வளவு கீழ்த்தரமானவன்னு இல்லன்னு ஆகிடுமா?" என வார்த்தைகளை விட்டவள் அக்கணம் ஒன்றை மறந்து போனாள்.

அவர்களின் அப்பா காலத்து உண்மைகளே தோண்டித்துருவி கண்டு பிடித்தவனுக்கு சில காலம் முன் அவன் வாழ்வில் நடந்த சூழ்ச்சியை கண்டுபிடிக்க அத்தனை கடினமாய் இருக்காது என்பது.

அவளின் வார்த்தைகளில் எழுந்த கோபத்தை கைமுஷ்டி இறுக்கி கட்டுபடுத்தியவன் நிதானமாய் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அந்த ஒற்றைப் பார்வையில் அவள் முதுகுத் தண்டு சில்லிட்டது.

"வெல்.. இப்போ நான் சொன்னது எல்லாமே பொய்யாவே இருக்கட்டுமே ஆனா இப்போ நிஜத்த சொல்றதுக்காகவே நான் உங்களுக்காக ஸ்பெஷல் குறும்படம் காட்டுறேன் அதைப் பார்த்துட்டு உண்மையை நீங்களே தெரிஞ்சுக்கங்களே மிஸிஸ் நேஹா மேடம்" என அதி நக்கலாய் கூறியவன் பார்வை திருவைப் பார்க்க திரு அவனும் தலையசைத்து முன்னே வந்தவன் தான் ஏற்கனவே கையில் வைத்திருந்த டெப்பில் அந்த வீடியோவை ஓட வைத்தான்.

கௌசிக்கின் பார்வையில் முன்னே வந்து நின்ற திருவைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
நேற்று அத்தனை மோசமாய் அவனை திட்டியவன் இன்று அவன் கண்ணசைவிற்கு முன்னே வந்து நிற்கிறானென்றாள்.
"அப்போ இவனும் அவன் ஆளா துரோகி" என முனுமுனுத்த மோகன்ராஜிற்கோ இவன் எதற்காக தன் உயிர் நண்பனை விடுத்து தங்களோடு கூட்டு சேர்ந்தான் என்பதற்கு காரணம் அவன் ஓடவிட்ட வீடியோ மூலம் தெள்ளத் தெளிவாய் புரிந்திட அவரின் பார்வை திருவை முறைக்க அவனோ அவரை அற்பமாய் பார்த்து வைத்தான்.

தங்கள் முன் ஓடியே வீடியோவில் பார்வையை பதித்திருந்தவர்களுக்கோ அத்தனை அதிர்ச்சி.

அதில் மோகன்ராஜ் போதையில் தாங்கள் செய்த குற்றத்தை உளறிக் கொண்டிருக்க அத்தோடு நேஹாவிற்கு அழைத்து அவள் வாயாலும் அவள் செய்ததை கேட்டதும் அந்த வீடியோவில் பதிவாகிருந்தது.

அதைப் பார்த்து நேஹாவிற்கு அத்தனை அதிர்ச்சி தன் வார்த்தைகளாலே தன்னை மடக்கிவிட்டானே என்று அத்தனை கோபம் பொங்கிட அவனை முறைத்திருந்தவளுக்கு துளி கூட தான் செய்த குற்றத்தினால் குற்றவுணர்ச்சி எழவில்லை.

வீடியோவில் பார்த்ததை விஷ்வாவோ நம்ப முடியாது உறைந்து நின்றிருந்தான்.

தன் தங்கையா இத்தனை கீழ்த்தரமான செயலுக்கு ஒத்துக் கொண்டாள் என்பதை ஏற்க முடியாதவனாய் மனம் கூச நின்றவன் பார்வை தங்கையை வெறித்தது.

அண்ணனின் பார்வையில் படபடத்தவள்
"இல்ல இது.. இது பொய் இவன் சீட் பண்றான்" என்று உச்சத்தில் கத்திட அவள் சொல்வதை நம்புவதற்கு அங்கு யாரும் தயாராக இல்லை.

கௌசிக்கிற்கோ அவள் முகம் காட்டிய பதற்றத்தை பார்த்தவனுக்கு அன்று இதே இடத்தில் தன் தந்தையை அவமானப்படுத்தியவளுக்கு தக்க தண்டனை கொடுத்த நிம்மதி எழ அவளை நோக்கி கேலி புன்னகையுடன்
"என்ன மேடம் குறும்படம் எப்பிடி இருக்கு செம்ம ட்விஸ்ட்ல" கேட்டிட..
அதில் கோபம் அதி உச்சத்தில் ஏறியவள் "யூ ராஸ்கல்" என கத்திக் கொண்டே அவனை நெருங்கு முன்னே இடியென அவன் கன்னத்தில் அறைந்திருந்தான் விஷ்வா.

அதில் தொப்பென்று கீழே வீழ்ந்தவள் நிமிர்ந்து தன்னை அடித்த அண்ணனை அதிர்ச்சியாய் பார்க்க அவனோ ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான்.

"ஸ்ஸ் இனி ஒரு வார்த்தை பேசின உன்ன நானே கொன்னுடுவேன்" ஒற்றை விரல் நீட்டி அவளை எச்சரித்தவன் சபை நடுவே திரும்பியவனாய் அனைவரும் முன்னே கைகூப்பி "எல்லாரும் எங்கள மன்னிச்சிடுங்க.. தப்பெல்லாம் எங்க மேல தான் எங்களால ஒரு உயிர் இறந்துட்டு அதுக்கு நீங்க என்ன தண்டனை தந்தாலும் ஏத்துக்க நான் தயார்" என்றவனை அங்கிருந்த அனைவரும் திட்டத் தொடங்கினர்.

"செய்றதெல்லாம் செய்துட்டு மன்னிப்பு கேட்டா போன உயிர் வந்துடுமா"

"அப்பன போல தானே புள்ளைங்களும் இருப்பாங்க அதான் அந்த பொண்ணு வெக்கமே இல்லாம நடந்திருக்கு ச்சீ"

"வளர்த்தவரோட உயிரையே காவு வாங்கியிருக்குங்க இதுங்கள்லாம் என்ன ஜென்மமோ"

"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணியிருக்குங்க இதெல்லாம் எங்க நல்லா வாழபோகுது நாசமாத்தான் போகும்" பல வசவு சொற்கள் வசைமாறிப் பொழிய கூனிக்குறுகி இறுகிப் போய் நின்றான் விஷ்வா.

தான் செய்த தவறுக்கு இதெல்லாம் பெரிதாகவே இல்லை என அவன் மனம் குற்றவுணர்ச்சியில் புழுங்கித் தவித்தது.

நேஹாவிற்கோ அண்ணன் அடித்த அடியோடு அவர்களின் வசவுச் சொற்களையும் கேட்க முடியாதவள் முகம் இறுக நின்றிருந்தாள்.

மோகன்ராஜிற்கோ நடப்பவை அனைத்தையும் பார்த்து வேற மாதிரியான பயம் தொற்றிக் கொண்டது.
எங்கு தான் செய்த தவறிற்கு தன்னை வீட்டை விட்டு விரட்டிவிடுவானோ என்ற பயத்துடன் நின்றிருந்தவர் பார்வை மனைவியின் புறம் திரும்ப அவர் இவரை பார்த்தாள் அல்லவா.

ஆதாரப் பூர்வமாய் உண்மைகள் நிரூபிக்கப்பட்டதில் தன் தவறை புரிந்து கொண்ட விஷ்வாவிற்கு இனி அங்கு நிற்க முடியாதவனாய் அங்கிருந்த குடும்பத்தினரிடம் திரும்பியவன்
"மன்னிச்சிடுங்க இந்த மன்னிப்பை கேட்க கூட தகுதியே இல்லாத இடத்துல நானிருக்கேன். ஆனா செய்தது தப்புன்னு உணர்ந்து என்னால மன்னிப்பு மட்டும் தான் கேக்க முடியும்" கைகூப்பி தலை கவிழ்ந்து மன்னிப்பை யாசித்தவன் கண்ணின் ஓரம் கசிந்தது.

ஆண்மகன் அவன் செய்த தப்பிற்காக அத்தனை பேர் முன்னிலையில் மன்னிப்பை யாசித்து நிற்க வீட்டுப் பெண்களின் முகத்திலோ கவலை சூழ்ந்தது.

என்ன தான் அவன் பழிவெறி கொண்டு இந்த வீட்டில் வளர்ந்திருந்து தவறு செய்தாலும் அவனை தங்கள் வீட்டுப் பிள்ளையாய் எண்ணி உண்மையான அன்பை வாரிவழங்கியவர்களுக்கு அவன் உடைந்து போய் நின்றிருந்த கோலம் அவர்களின் தாய்மை தட்டியெழுப்ப கவலையாய் அவனை பார்த்திருந்தனர்.

திவ்யாவிற்கோ அவன் மீது அத்தனை கோபமும் வெறுப்பும் மண்டிக்கிடந்தாலுமே அவள் காதல் கொண்ட மனமோ இத்தனை பேர் முன்னிலையில் அவன் கைகூப்பி நிற்பதை காண முடியாது விழிகளை இறுக மூடி கண்ணீர் சிந்தியது.

அனைவரிடமும் மன்னிப்பை யாசித்தவனோ கௌசிக்கை பார்க்க அவனோ இறுகிப் போய் நின்றிருந்தான் அவன் இறுக்கமே அவன் கோபத்தை காட்ட அவனிடம் எதுவும் பேசாது, தன்னையே விழிகலங்க பார்த்திருந்த திவ்யாவின் புறம் பார்வையை கூட திருப்பாது தன்னருகே இறுகி நின்ற
நேஹாவின் கரங்களை பற்றிக் கொண்டு வேகமாய் நகர முயன்றவனின் நடை தடைபட்டு நின்றது கௌசிக்கின் வார்த்தையில்.





 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 21



"என்னோட தங்கையோட வாழ்க்கைக்கு நீ இன்னுமே பதில் சொல்லல விஷ்வா" என்ற கௌசிக்கின் வார்த்தையில் உடல் இறுக தன் நடையை நிறுத்தியவன் திரும்பி கௌசிக்கை பார்க்க அவனோ மார்பிற்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டவனாய் அழுத்தமாய் நின்றிருந்தான்.

"என்னோட தங்கைக்கு காதல்ங்குற பெயர்ல நீ செய்த துரோகம் கல்யாணங்குற பேர்ல நீ செய்த அநியாயம் இதுக்கெல்லாம் மொத்தமா பதில் சொல்லிட்டு இந்த வீட்ட விட்டு நீ போகலாம்" என்றவனின் வார்த்தையின் அழுத்தம் எதிரிலிருந்தவனை குறி தவறாது தாக்கியது.

இத்தனை நேரம் செய்த தப்பிற்காக குற்றவுணர்ச்சியில் மன்னிப்பை யாசித்து அமைதியாய் விடைபெற்று கிளம்ப முயன்றவனின் அமைதியை சீண்டிப் பார்த்தது கௌசிக்கின் வார்த்தைகள்.

'துரோகமா? அதுவும் காதல் துரோகமா? இவனுக்கு என்ன தெரியும் என்னுடைய காதலை பற்றி' அவன் காதல் கொண்ட மனமோ அவன் வார்த்தையில் சிலிர்த்தெழுந்தது.

உண்மையாய் காதலித்தவனல்லவா.. அதனாலே தன் காதலை பொய்மை போன்று பேசிய அவன் வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது அவனிற்கு.

அதில் முகம் இறுக கௌசிக்கை நிமிர்ந்து பார்த்த விஷ்வாவின் கனல் கக்கும் பார்வையை அலட்டலேயின்றி எதிர் கொண்டு நின்றிருந்தான் கௌசிக்.

"காதல்ங்குற பேர்ல நான் துரோகம் பண்ணல.. காதலிச்சு தான் மனம் விரும்பி தான் அவ கழுத்துல தாலியை கட்டினேன்.. பழிவாங்கனும்னு வெறி என் மனசுல ஆழ பதிஞ்சு இருந்தாலும் அதற்கு பகடையா ஒரு போதும் என் காதல பணயம் வைக்க நான் நினைச்சதில்ல.. என்ன நடந்தாலும் அவள விட்டுட கூடாதுங்குற உறுதியோட தான் அவ கழுத்துல தாலியை கட்டினேன் ஆனா அந்த காதலுக்கும் தாலிக்கும் அர்த்தமே இல்லாம போயிடுச்சு" கோபமாய் ஆரம்பித்தவன் குரல் இறுதியில் வலியை சுமந்து சோகமாய் முடித்திட முயன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி நின்றான்.

அவன் வார்த்தையில் கௌசிக்கின் இதழ்கள் யாரும் அறியா வண்ணம் புன்னகைத்து மீண்டது.
அவனுக்கா அவர்கள் காதல் பற்றி தெரியாது. அவர்களது காதலை முதலில் கண்டு கொண்டு அவர்களது திருமணத்திற்கு வித்திட்டதற்கு முக்கிய காரணகர்த்தாவே அவனாக இருக்க எப்படி அவன் காதல் புரியாமல் போகும்.

விஷ்வாவின் வார்த்தைகளில் திவ்யாவின் காதல் மனமோ துடிதுடித்துப் போனது. என்ன தான் அவனை வேண்டாம் என தூக்கியெறிந்தாலும் இத்தனை நாள் பிரிவில் அவனை எண்ணி அவள் ஊமையாய் அழுத நாட்கள் எத்தனையோ அது அவள் மட்டுமே அறிந்த ரகசியமல்லவா.

"சரி இப்போ உன்னோட முடிவு என்ன? என் தங்கை வாழ்க்கைகாக உன்னோட முடிவு?"
என்றான்.
நடந்த முடிந்த ஒன்றிற்காக இனி வாழவேண்டிய தங்கையின் வாழ்க்கையை சிதைக்க அண்ணனாய் அவன் மனம் ஒப்பவில்லை.. தங்கையின் காதலை அறிந்தவனுக்கு நிச்சயம் தங்கை இன்னொருவனை தன் வாழ்க்கைத் துணையாய் ஏற்றுக் கொள்ள மாட்டாள் என தெள்ளத் தெளிவாய் அறிந்து வைத்தவன் அதனாலே ஒரு முடிவுக்கு வந்தவனாய் விஷ்வாவிடம் பேச்சை ஆரம்பித்திருந்தான்.

இருவரின் பேச்சையும் கேட்டிருந்த சிவாவிற்கோ அத்தனை ஆத்திரம் கிளர்ந்தது. தந்தையின் இறப்பிற்கு காரணமானவன் தங்கையின் வாழ்க்கையை சிதைக்க காரணமானவனிடமே தன் அண்ணன் அமைதியாய் பேசுவது பிடிக்காமல் தான் போனது.

"அண்ணா நீ எதுக்கு இவன் கிட்ட நின்னு பேசிட்டிருக்க போக சொல்லு" காட்டுக் கத்தலாய் கத்திய சிவாவின் புறம் பார்வையை திருப்பியவன் பார்வையாலே அவனை பேசாதே என்க.. "அண்ணா" என பேச வந்தவனின் பேச்சு தடைபட்டது கௌசிக்கின் "சிவா" என்ற அழுத்தமான குரலில். அதில் அடங்கிப் போனவன் கோபமாய் நின்றிருந்தான்.

"திவ்யாவோட வாழ்க்கைக்கு பதில் சொல்லிட்டு நீ இங்க இருந்து தாராளமா போகலாம்" என்றவன் நிறுத்தி "என் தங்கையோட வாழ்க்கையை சீர்படுத்துறது ஒரு அண்ணனா என்னோட கடமை உன்னோட அவ வாழ்க்கையை முடிஞ்சு போக நான் விடமாட்டேன். நிச்சயமா நான் அவளுக்கான வாழ்க்கையை தேடி கொடுப்பேன் இதெல்லாம் நடக்கனும்னா அதுக்கு முதல் உங்களுக்கு விவாகரத்து ஆகனும்"
அழுத்தமாய் கூறியவன் வார்த்தையில் அதிர்ந்து போனது என்னவோ விஷ்வா திவ்யா இருவருமே.

விஷ்வாவை அழுத்தமாய் பார்த்த கௌசிக்கோ "எனக்கு தெரியும் விஷ்வா உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நீ சட்ட பூர்வமா திவ்யாவை உன்னோட மனைவியாக்கிக் கொண்டது" என்றதுமே தான் மறைவாய் செய்ததையும் அவன் கண்டு கொண்டான் என்பது புரிந்தது விஷ்வாவிற்கு.

ஆம் சம்பிராதயமாய் தன்னவள் கழுத்தில் தாலி கட்டும் முன்பே சட்ட ரீதியாய் அவளையே தன் துணையாக்கி கொண்டான் விஷ்வா.
வக்கீல் மூளையல்லவா அதனாலே முன்கூட்டியே அவளை சட்ட ரீதியாய் தன்னவளாக்கிக் கொண்டு தன்னிடம் தக்க வைக்க எண்ணிக் கொண்டவன் அதை திவ்யாவே அறியாத வண்ணம் செய்து முடித்திருந்தான்.
தங்கள் பழிவெறியினால் தன்னவள் தன்னை விட்டு கைநழுவி விடக்கூடாது என்பதற்காகவே அவன் அவ்வாறு திட்டமிட்டு செய்திருந்தவன் இந்த ஒற்றைப் பத்திரம் தங்கள் வாழ்க்கை பிணைத்துவிடும் என அக்கணம் அளாதி நம்பிக்கை வைத்திருக்க அவன் நம்பிக்கைகை முற்றாய் உடைத்தெறிந்தது திருமணமன்று திவ்யாவின் செயல்.
காதலே வேணாம் என்று அவள் தாலியை தூக்கி வீசிய பின் அந்த வெற்று காகிதம் மட்டும் அவர்கள் வாழ்க்கையை உயிர்ப்பித்து விடுமா? என்ற எண்ணத்திலே அதைபற்றி சிந்திக்காதவனாய் காலத்தை கடத்திருந்தான் விஷ்வா.

பிரிந்திருந்தாலும் அவன் காதல் மனதில் அவள் மனைவியாய் ஆட்சி செய்ய சட்ட ரீதியாய் நீ என் மனைவி நான் உன் கணவன் என்ற எண்ணத்தில் சிறு நிம்மதியோடு வாழ்ந்தவனுக்கு விவாகரத்து என்ற வார்த்தையில் அவன் கனவு வாழ்க்கையை சிதைந்து போய்விடுமோ என எண்ணி வலியோடு நின்றிருந்தான்.

திவ்யாவிற்கோ அண்ணனின் வார்த்தைகளில் தான் சட்ட ரீதியாய் அவன் மனைவியாய் இருக்கிறோமா என்ற எண்ணமே அவளறியாது உள்ளத்தில் ஓர் இதத்தை பரப்பிச் செல்ல அந்த இதத்தை அனுபவிக்க முடியாது தடுத்தது அவனின் விவாகரத்து என்ற ஒற்றை வார்த்தை.

இருவரும் அவர்கள் மனநிலையில் துடித்து நிற்க கௌசிக்கோ விஷ்வாவின் முடிவிற்காக காத்து நின்றான்.

கௌசிக்கின் முகம் பார்த்த விஷ்வாவிற்கு அவன் முகத்திலிருந்த தீவிரமே சொல்லாமல் சொல்லியது அவன் எதையும் செய்யத் தயாராக இருப்பதை.

சிறிது நேரம் கண்மூடி யோசித்த விஷ்வாவின் மனமோ இத்தனை நாள் முட்டாள் தனமாய் தன் காதலைத் தொலைத்ததை எண்ணி தன்னையே சபித்துக் கொள்ள அக்கணம் ஓர் முடிவெடுத்தவனாய் நிமிர்ந்தவன் பார்வை கௌசிக்கை தைரியமாய் எதிர்கொண்டது.

அந்த ஒற்றைப் பார்வையிலே புரிந்து கொண்ட கௌசிக்கின் பார்வையோ மணமேடையை சுட்டிகாட்ட அது புரிந்தவனாய் மணமேடையில் சென்று அமர்ந்து கொண்டான் விஷ்வா.

கௌசிக் அவன் செய்கையில் மெலிதாய் சிரித்தவன் தன் தாயின் புறம் பார்வை திருப்பினான் அவனுக்கு தாயின் சம்மதமும் முக்கியமல்லவா?
எங்கு தந்தையின் இறப்பிற்கு காரணமானவனை தன் மகளுக்கு கணவனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாரோ என்று அவனுக்கு மனதினோரம் ஓர் கேள்வியெழுந்தாலும் தாயை நன்கு அறிந்தவனாய் அவர் புறம் பார்க்க.

மகனின் பார்வையை அறியாததா தாயுள்ளம்.
என்ன தான் கணவனின் இழப்பு பெரும்மிழப்பாகவே இருந்தாலும் தன் பிள்ளைகளின் சந்தோஷமான எதிர்கால வாழ்க்கை அவருக்கு முக்கியமல்லவா.

அவனுக்கு புன்னகையுடன் கண்கலங்க தலையசைத்தவர் அங்கே நின்ற திவ்யாவிடம் "போய் உட்காருடா" என்க அவளோ அசைவின்றி விறைத்து நின்றாள்.

தங்கையின் செயலில் அவள் மனதை படித்தவனாய் அவளருகே நெருங்கியவன்
"திவி போய் உட்கார்" என்றான் அமர்த்தலான குரலில் அந்தக் குரலில் நிமிர்ந்த திவ்யாவின் வலி நிறைந்த பார்வையை சளைக்காது எதிர்கொண்டவன் "போய் உட்காரு அம்மு" என்றதும் அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தை நனைக்க அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கால்களோ மணமேடையில் இருந்த விஷ்வாவின் அருகில் சென்றமர்ந்தது.

அண்ணனின் செயலில் சிவாவிற்கு எல்லையில்லா கோபம் உண்டான போதிலும் தன் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாதவனாய் கைமுஷ்டி இறுக கோபத்துடன் விறைத்து நின்றான்.

அண்ணனின் செயலில் அவனை தடுக்க முடியாதவளாய் கையாலாகாததனத்தோடு சில நொடி அங்கே வெறித்து நின்ற நேஹாவோ அதற்கு மேல் அங்கு நில்லாதவளாய் வேகமாய் அந்த வீட்டை விட்டு விறுவிறுவென கிளம்பிச் சென்றாள்.

மணமேடையிலிருந்து தங்கை போவதை வேதனையோடு பார்த்திருந்த விஷ்வாவோ அவளை தடுக்கத் தோன்றாது அப்படியே அமர்ந்திருந்தான்.

அன்று பழிவெறிக்காக காதலை தூக்கி வீசிச் சென்றவன் இம்முறை அவன் தன் காதலுக்காக சுயநலமாய் முடிவெடுத்துக் கொண்டான்.

மங்கள நாதம் முழங்க மீண்டும் அங்கே ஒரு காதல் கதைக்கான அச்சாரம் போடப்பட்டது.

மணித்துளிகள் கடக்க வந்திருந்த விருந்தினர் அனைவரும் வெளியேறியிருக்க அந்த ஹாலில் அமர்ந்திருந்த குடும்பத்தினரும் அனைவரிடம் ஓர் அசாத்திய அமைதி.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க அங்கு பயத்தில் நின்றிருந்தது என்னவோ மோகன்ராஜ் மட்டுமே.
இனி தன் நிலை என்னாகுமோ என பயந்தவாறே எதுவுமே பேசாது நின்றிருந்தவர் பார்வை கௌசிக்கை பார்க்க அவன் பார்வை மொத்தமும்
மணமேடையிலிருந்து இறங்கியதிலிருந்தே யார் முகம் பாராது தலை குனிந்து நின்ற தங்கையின் மீதே நிலைத்திருந்தது.

அவன் அறிவான் நிச்சயம் தங்கை தன் மீது எத்தனை வருத்ததில் இருப்பாளென்று இருந்தும் அவன் அவள் வாழ்க்கையை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்ததால் அவள் மறுப்பையும் தாண்டி இந்த திருமணத்தை நடத்திவிட்டான்.

அவளை பார்த்தவாறே அவளருகே நெருங்கியவன் அவள் முகத்தை நிமிர்த்த அவளோ அவன் கரத்தை தட்டிவிட்டு அவனை நிமிர்ந்தும் பாராது அங்கிருந்து வேகமாய் விலகிச் செல்ல அவளைத் தொடர்ந்து அவனை முறைத்துவிட்டு அவள் பின்னே சென்றான் சிவா.

போகும் இருவரையும் பார்த்தவனுக்கு அவர்களது இந்தங் கோபம் சிரிப்பை தர தலையாட்டி சிரித்தவாறே விஷ்வாவின் புறம் திரும்ப அவனோ கைகட்டி இறுகி நின்றிருந்தான்.

அவன் மனநிலை புரிந்தவன் இப்போது அவனுக்கு சற்று அமைதி தேவை என்பதை உணர்ந்து திருவிடம் அவனை அழைத்துச் செல்லுமாறு கூறிட திருவும் விஷ்வாவை அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இப்போது மிஞ்சியிருந்தவர்களிடம் திரும்பிய கௌசிக்கின் பார்வையோ அங்கே தன் அத்தையின் கைப்பிடியில் திக்குத் தெரியாத குழந்தை போல் முழித்துக் கொண்டிருந்த தன் மனையாள் மீதே படிந்தது.
அவளது நிலை கண்டு அவனுக்கு சிரிப்பு கூட எழுந்தது.

பூரணியோ சொல்லெண்ணா மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தார்..
தன்னருகே அமர்ந்திருந்தவள் கரத்தை வருடிக் கொண்டே மௌனமாய் அமர்ந்திருந்தவர் "அத்தம்மா" என்றவனின் குரலில் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவர் முன்னே கவரிடப்பட்ட ஒரு கடித உறையை நீட்டினான் கௌசிக்.

மதிக்கு அவன் கையிலிருந்ததை கண்டதும் இது தன்னுடையது தான் என்பது புரிய அவனைப் பார்த்தாள்.
அவள் தன்னை பார்ப்பதை கண்டவனும் ஒற்றைக் கண்சிமிட்டி சிரித்திட அதில் அதிர்ந்து விழித்தவள் தன் பார்வையை தளைத்துக் கொள்ள அவனோ சிரித்துக் கொண்டான்.

பூரணியோ தன் முன் நீட்டியிருந்த கடிதத்தை புரியாது பார்த்தவாறே வாங்கியவர் "என்னப்பா இது" என்றார்.

"அப்பாக்கு மதியோட அப்பா எழுதின கடிதம்..மதி இந்த வீட்டுக்கு வந்து சேரும் போது அவ தான் இந்த வீட்டு வாரிசு என்பதற்கான எழுத்து பூர்வமான ஆதாரம் தான் இந்த கடிதம்" என்றான்.

அந்த கடிதத்தை பிரித்து படித்தவருக்கு தங்கையின் வார்த்தைகளாய் எழுதப்பட்டிருந்த அவளின் ஆசைகளை படித்தவர் தங்கையின் நியாபகத்தில் கண்கலங்கினார்.

பெரியன்னையின் கண்ணீரை காண முடியாதவளாய் அவரை அணைத்து சமாதானம் செய்தாள் வெண்மதி.

அப்போதும் அவர் அழுகையை நிற்காது போக அவரின் மறுபுறம் அமர்ந்தவன் "அழாதிங்க அத்தை தேவி அத்தை ஆசபட்ட போலவே அவங்க மக அவங்க குடும்பத்துகிட்ட வந்து சேர்ந்திட்டா இனி அவங்க ஆசைப்படி அவள பார்த்துக்குறது உங்க பொறுப்பு.. இந்த அழுகையெல்லாம் விட்டுடு உங்க மக கூட சந்தோஷமா இருங்க" என ஆறுதலாய் பேசியவன் அவர் மனதை மாற்றும் விதமாய் குறும்புடன்.
"பட் வன் கண்டிஷன்.. என் பொண்டாட்டியே எப்பிடி தரேன்னோ அப்பிடியே என்கிட்ட சீக்கிரமா தந்திடுங்க.. எனக்கு இந்த பூனைக்குட்டி தான் வேணும்" என்றதும் அவரோ அவன் கூற்றில் வாய்விட்டு சிரித்தவர்.
"என் பொண்ணு உனக்கு பூனைகுட்டியாடா படுவா" என அவன் காதை திருக.

அவனோ "இல்லையா பின்ன எப்போ பாரு பாலை திருடி குடிச்ச கிட்டி(kitty) போல திருதிருனு முழிச்சிட்டு இருந்தா பூனைனு தானே சொல்லலாம்" என்க அவன் கூறிய பாவனையில் அங்கிருந்த அனைவரும் சிரித்துக் கொண்டனர்.

சிறு பிள்ளை போல தன் அத்தையோடு மல்லுகட்டும் அந்த காவலனை இமைக்காது பார்த்திருந்த பெண்ணவளுக்கோ அக்கணம் அவன் மீது ஓர் ஈர்ப்பு இழையோட இமை சிமிட்டாது அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வை தன் மீதே நிலைத்தது கண்டு இதழ் மடித்து சிரித்தவன் விழிகள் அவள் விழியோடு விழி கலந்து கண்சிமிட்டிட அவன் செயலில் முகம் சிவக்க குனிந்து கொண்டாள்.

அதில் மேலும் புன்னகை விரிந்தவனாய் அவளை பார்த்தவன் பின் தன் தாயிடம் பேசிவிட்டு திரும்ப அங்கே புன்னகையுடன் நின்ற தன் சித்தி மற்றும் தங்கை நித்யாவுடனும் பேசியவன் அங்கே அமர்ந்திருந்த கோகுல கிருஷ்ணாவிடம் பேசாது தவிர்த்தான்.

அவரும் அவனின் ஒதுக்கத்தை உணர்ந்து அமைதியாய் அவ்விடம் விட்டு நகர்ந்திருக்க அவரோடு பாரி காவேரி இருவரும் நழுவியிருந்தனர்.

மோகன்ராஜ்ஜிற்குமே எங்கு தான் இங்கு நின்றால் தன்னை வீட்டை விட்டு வெளியேறச் சொல்வானோ என பயந்தவராய் யாரும் அறியா வண்ணம் அங்கிருந்து நழுவி ஓடிட போகும் அவரை மர்மச் சிரிப்புடன் பார்த்தான் கௌசிக்.

அவருக்கான தண்டனையை அவன் எப்போதோ திர்மானித்திருக்க அதற்கான நேரம் இது இல்லை என்பதாலே அவரை போகவிட்டு அமைதியாய் நின்றவன் மதியின் சித்தி கஸ்தூரி மற்றும் மூர்த்தியை நெருங்கினான்.

"ரொம்ப நன்றி நீங்க இரண்டு பேரும் என்னோட அழைப்பை ஏற்று இங்க வர சம்மதிச்சதுக்கு" இருவரிடமும் கைகூப்பி வணங்கி நன்றியை கூறியவனை புன்னகையுடன் பார்த்தனர்.

"என் பொண்ண வீட்ட விட்டு அந்த அர்த்த ராத்திரில தனியே அனுப்பிட்டு இத்தனை நாளும் வயித்துல நெருப்ப கட்டிடு ராத்திரி பகல்னு பாராம அந்த கடவுள்கிட்ட நான் வேண்டின வேண்டுதல்களுக்கு எல்லாம் பலன் கிடச்சிட்டு தம்பி.. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்.. அவ அப்பா அம்மா ஆசைபட்ட போலவே அவ குடும்பத்தோட சேர்ந்துட்டா இதுவே போதும்" கண்கலங்க கூறிய கஸ்தூரியின் பார்வையோ கமலம் பூரணி மத்தியில் அமர்ந்து புன்னகை முகமாய் அமர்ந்திருந்த வெண்மதி மீது நிறைவுடன் படிந்து மீண்டது.

அவர் வார்த்தையில் தன்னவளின் மீதான அவர் பாசத்தை புரிந்தவனாய் நிறைவுடன் புன்னகைத்தான்.

"சின்ன வயசுலயிருந்தே அவகிட்ட கடுமையா நடந்துகிட்டாலும் மனசளவுல அவள என் பொண்ணா தான் நினைச்சேன். எப்போ என் தம்பியினால அவளுக்கு ஆபத்துனு தெரிஞ்சுச்சோ அப்போவே அவசரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி அவ அப்பா சொன்ன மாதிரி அவ குடும்பத்த தேடி அவ புருசங்கூட அனுப்பி வெச்சிடலாம்னு நினைச்சேன் ஆனா அது தெரிஞ்சு என் தம்பி ஏதோ பெருசா எங்களுக்கு எதிரா பண்ண போறான்னு தெரிஞ்சுது அவன் மட்டுமே பிரச்சனை பண்ண துணிஞ்சவன்னா நான் தனியாளா நின்னு கூட என் பொண்ண காப்பாத்தியிருப்பேன் ஆனா அவனுங்க முன்னாடி ஒத்த பொம்புளையா என்னால சமாளிக்க முடியாதுங்குறதுனால தான் அவள தனியா அனுப்ப வேண்டிய சூழ்நிலைக் கைதியாகிப் போயிட்டேன்" என்றவர் கண்கள் கலங்கிப் போனது.

"ஆனா இனி அவங்களால என் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வராது..அந்த நம்பிக்கையோட இனி நான் நிம்மதியாயிருப்பேன்" என்றவரை புருவம் சுருங்க பார்த்தவன் அவரிடம் அதைபற்றி கேட்க முதலே கஸ்தூரியை அழைத்திருந்தார் பூரணி.

அவர் அழைப்பில் கஸ்தூரியும் மூர்த்தியும் அவர்களை நோக்கிச் சென்றிட யோசனையாய் நின்றவனின் கரத்தை பற்றி கொண்டாள் சிவாங்கி
"அத்து சூப்பர் கலக்கிட்டிங்க இந்த ட்விஸ்ட்ட நான் எதிர்பார்க்கவே இல்ல" என தன்னை பாராட்டிய சிவாங்கியின் தலையை களைத்துவிட்டவன் சிரிப்புடன் "அவங்க இரண்டு பேரும் எம்மேல செம்ம காண்ட்ல இருக்குறாங்க சிங்கி.." என்றான்.

"ஹஹா.. அத்து அவங்கள சமாளிக்குறதெல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரே இல்ல நீங்க போய் அந்த இரண்டு வானரத்தையும் மலையிறக்குங்க நான் போய் என் அத்துவோட பூனைக்குட்டி கூட பேசிட்டு வறேன்" கண்சிமிட்டி சிரித்தபடி மதியை நோக்கிச் சென்றாள்.

அவனும் சிரித்தபடி தன் உடன்பிறப்புக்களை மலையிறக்க அறை நோக்கிச் சென்றான்.

இங்கு அறையில் அழுகையில் கரைந்து கொண்டிருந்த திவ்யாவை சமாதானம் செய்து கொண்டிருந்தான் சிவா.

"ஹேய் திவி அழாதடா" தன் மடியில் தலைசாய்த்து கண்ணீர் வடிக்கும் தங்கையின் கண்ணீரை காண முடியாதவனாய் ஆறுதல்படுத்தினான் சிவா.

"ஏன் அண்ணா இப்பிடி பண்ணாங்க.. நம்ம அப்பா இறக்க காரணமானவன எப்பிடி திரும்பவும் என் வாழ்க்கைல கொண்டு வந்தாங்க.. அப்போ அவங்களுக்கு என் விருப்பம் முக்கியமே இல்லைல" இதழ்கள் அழுகையில் நடுங்க பேசியவளைக் கண்டு பாவமாய் பார்த்தான் சிவா.

"ஹேய் அப்பிடி இல்ல திவி.. நீ அழாதடா நான் எப்போவும் உன்கூடவே இருப்பேன் உனக்காக யாராயும் எதிர்த்து நிற்பேன்" விஷ்வாவை எண்ணியவனாய் அவன் கூறிட.
"நானாக இருந்தாலுமா?" என்ற கேள்வியோடு கதவில் சாய்ந்து கைகட்டி நின்றிருந்தான் கௌசிக்.

அவன் குரல் கேட்டு நிமிர்ந்த இருவரும் அவனைக் கண்டு முறைத்தவர்கள் ஒரு சேர தங்களது முகத்தை திருப்பிக் கொண்டனர்.

அவர்களின் செயல் அவனுக்கு குழந்தைகளின் பிடிவாதத்தை உணர்ந்த மெல்லிய புன் சிரிப்புடன் அவர்களை நெருங்கி இருவருக்கும் நடுவில் அமர்ந்து அவர்களை தன் இருகைகளால் அணைத்திருக்க அப்போதும் அசையாமல் முகத்தை பக்கவாட்டில் திருப்பியவாறே அமர்ந்திருந்தனர் இருவரும்.

"திவி அண்ணா மேல கோபமா" மென்மையாய் ஒலித்த அவன் குரலில் அவன் புறம் திரும்பியவள் முகத்தில் அத்தனை வலி.

அவனை வலி நிறைந்த பார்வை பார்த்தவள் " ஏன்ண்ணா இப்பிடி பண்ண" என அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்திட தங்கையை அணைத்துக் கொண்டவன் "உன் நல்லதுக்கு தான் பண்ணினேன்டா" என்றான் அமைதியாய்.

"இது எனக்குப் பிடிக்கலன்னா எதுவுமே பிடிக்கலை எனக்கு இந்த வாழ்க்கை வேணா காலம் பூரா நான் தனியாவே இருந்துக்குறேன்" கதறியழுதவள் தலை வருடியவன் அவளுக்கு புரிய வைத்திடும் நோக்கத்தில்

"விஷ்வா நல்லவன்டா.."

"எனக்கு வேணாம் அவன் எப்பிடி வேணா இருக்கட்டும் எனக்கு அவன் வேணாம்.. அவனோட சேர்ந்து வாழ சொல்லாத.. நான் செத்துடுவேன்" தன்னிலை மறந்து ஆவேசமாகக் கத்தியவள் கௌசிக்கின்
"திவ்யா" என்ற அதட்டலில் உடல் நடுங்க பயந்து அமைதியானாள்...

"இப்போ எதற்கு அவளுக்கு சத்தம் போடுற" என்று எகிறினான் சிவா..

"டேய் சிவா அவ என்ன பேசுறான்னு புரியுதா"

"அவ சரியா தான் பேசுறா நீ தான் புரியாம நடந்துக்குற.. எல்லாம் நல்லா தானே செய்த இப்போ மட்டும் என்னாச்சு எதுக்கு இப்படி பண்ண" அத்தனை கோபமாய் எகிறினான் அண்ணணிடம்.
விஷ்வாவின் மீதான கோபம் இவன் மீது பாய்ந்திருந்தது.

"சிவா நான் சொல்றத கொஞ்சம் அமைதியா கேளுடா" தம்பியை அமைதிபடுத்த முயன்றான் கௌசிக்.

அவனோ அடங்காதவனாய் "முடியாது.. உன்னப் போல இருக்க என்னால முடியாது
நம்ம அப்பா சாகுறதுக்கு காரணமானவனையே நீ திரும்ப இவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சியிருக்க.. இதே இவ உன் கூட பிறந்தவளா இருந்தா இப்பிடி பண்ணியிருப்பியா?

நீ இவள தங்கையா நினைக்கலன்னா பரவால நான் அவளை என் தங்கையாத்தான் நினைக்குறேன் அவள் என் தங்கச்சி இத சரி பண்றது அண்ணனாய் என் கடமை" என கோபத்தில் எது பேசுகிறோம் என்றறியாமல் வார்த்தையை சிதறவிட்டான்.

"சிவாண்ணா என்ன பேசுற நீ" சிவாவின் பேச்சின் போக்கில் அதிர்ச்சியாய் கூவினாள் திவ்யா.

அதில் தன்னிலை திரும்பியவனும் அப்போது தான் தான் பேசிய பேச்சின் வீரியத்தை உணர்ந்து தவிப்புடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க.. அவனை அடிபட்ட பார்வை பார்த்தான் கௌசிக்.

அவன் பார்வையில் தன் வார்த்தை அவனை எந்தளவு காயபடுத்திருக்கும் என தன் தவறை உணர்ந்தவன் குற்றவுணர்வுடன் "அண்ணா நா..நான் ஏதோ" தவிப்பும் தடுமாற்றமுமாய் மன்னிப்பை யாசிக்கும் பார்வையோடு அவனை நெருங்கியவனைத் தடுத்தான் கௌசிக்.

"டேய் அண்ணா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடா ஏதோ தெரியாம கோபத்துல பேசிட்டேன்" கண்கலங்க அவன் கரம் பற்றி மன்னிப்பை யாசித்தவனை வெறுமையாய் ஓர் பார்த்தவன் மௌனமாய் அமர்ந்திருக்க.
அந்த மௌனமே கொல்லாமல் கொன்றது இருவரையும்.

"நான் எது பண்ணாலும் உங்க நல்லதுக்கு பண்ணுவேன்னு என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா இப்போ நான் தப்பு பண்ணிட்டேன்னு தோணுது." என்றவன் இருவரையும் அந்நியமாய் பார்த்த பார்வையில் சிவாவோ குற்றவுணர்ச்சியில் தலை கவிழ திவ்யாவோ துடித்துப் போனாள்.

அவளுக்கு அவன் அண்ணனைப் பற்றி தெரியும் அல்லவா.. தங்களுக்காக என்றால் எதையும் செய்யத் துணிந்தவன் அப்படி பட்டவனை தங்கள் கோபத்தால் காயப்படுத்திவிட்டோமே என மனம் வருந்தியவளாய் அவன் கரத்தை பற்றிக் கொண்டவள்
"நீ எந்த தப்புமே பண்ணலண்ணா நீ எங்களுக்கு நல்லது தான் பண்ணுவ.. நாங்க தான் புரியாம ஏதோ கோபத்துல நடந்துகிட்டோம்" என்றவள் அவன் முகம் காட்டிய வெறுமையில் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.

"இந்த கல்யாணம் உன்னோட காதலுக்கானது திவிமா.. ஒரு அண்ணனா என் தங்கையோட காதல நான் மீட்டுக் கொடுத்திருக்கேன்.. விஷ்வா கெட்டவனா இருந்திருந்தா இந்த வாழ்க்கையே வேணாம்னு நானே உன்ன அவன்கிட்ட இருந்து பிரிச்சியிருப்பேன் ஆனா அவன் நல்லவன் நிச்சயம் அவன் காதல் உன் காயத்தை ஆற்றி உங்க வாழ்க்கையை வாழ வைக்கும்.." என்றவன் தன்னையே குற்றவுணர்வுடன் பார்த்திருந்த சிவாவின் புறம் பார்த்து
"அவ எனக்கும் தங்கை தான்டா.. எனக்கு நீ எப்பிடியோ அத போல தான் அவளும்.. இன்னொருவாட்டி என்ன பிரிச்சி பேசாத சிவா.." என்றவன் குரல் நலிந்து ஒலிக்க துடிதுடித்தவன் "அண்ணா" என்ற கூவலுடன் அவனை அணைத்திருந்தான்.

"ஸாரி நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன். .சத்தியமா மனசளவுல அப்பிடி நினைக்கல" தன்னை உணர்த்திவிடும் வேகத்தோடு பேசியவனை தன்னிலிருந்து பிரித்து விட்டு எழுந்து நின்றவன் "திவிக்கு எப்போவுமே நாம துணையாயிருந்து பாதுகாப்பு கொடுக்க முடியும்னு சொல்ல முடியாது சிவா.. நம்மள மீறி எதுவும் நடக்கலாம் .. அப்பிடி நடக்கக் கூடாதுங்குறதுக்காக அவ கூட எப்போவுமே துணையாயிருக்க அவளுக்கான வாழ்க்கைத் துணையாய் நான் விஷ்வாவ தேர்ந்தெடுத்தேன்.
நிச்சயம் விஷ்வா திவ்யாவுக்கு பாதுகாப்பு அரணா நிற்பான்" என்றவன் விறுவிறுவென வெளியேறிச் சென்றான்.




 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 22




அண்ணனின் உணர்வுகளற்ற வார்த்தைகளில் மனதளவில் துடித்து தான் போயினர் சிவா திவ்யா இருவரும்.



சிவாவிற்கோ கோபத்தில் தான் வார்த்தையை விட்டது எண்ணி தன்னை தானே சபித்துக் கொண்டவனுக்கு ஒரு கட்டத்தின் மேல் தாங்கமாட்டாதவனாய் தன் அண்ணனை தேடிச் சென்றான்.


யாருமற்ற மொட்டை மாடியில் மார்பிற்குக் குறுக்கே கரத்தை இறுகக் கட்டி வானத்தை வெறித்து நின்ற கௌசிக்கின் மனம் முழுவதும் இனி என்ன என்ற எண்ணவலைகள் படையெடுத்தது.


பல நாட்களாய் காத்திருந்து அடைந்த வெற்றியின் சந்தோஷத்தை மகிழ முடியாதவனாய் சிவாவின் வார்த்தைகள் ஊசி போல் அவனை துளைத்தது.
'நான் அப்படி நினைப்பவனா?' மனசாட்சியின் ஓலத்தில் கண்களை இறுக மூடி தன்னை சமப்படுத்த முயன்றவனாய் நின்றிருந்தான்.


அண்ணனை தேடி வந்த சிவாவிற்கோ யாருமற்ற தனிமையில் நின்றவனின் இறுகிய தோற்றம் கண்டு மனது கலங்கித் தான் போனது.
அவனது வார்த்தையின் வீரியம் அவனை எந்தளவு தாக்கியிருக்கும் என்பது அவனுக்குமே தெரியும்.
தன் மடமையினால் வார்த்தையை விட்டதை எண்ணி மீண்டும் தன்னையே திட்டிக் கொண்டவன் அவனை நெருங்கினான்.


"அண்ணா" என்றவன் கரம் அவன் தோளை தொட அதை உணர்ந்தாலும் அவன் புறம் திரும்பாது தன்னிலை மாறாது சிலையென நின்றிருந்தான் கௌசிக்.


அவனுக்குள் அத்தனை ஆற்றாமை பொங்கிக் கொண்டிருந்தது தம்பியின் வார்த்தைகளினால்.


தன் அழைப்பிற்கும் தொடுகைக்கும் உணர்வின்றி நின்றவனை அப்படிக் காண பிடிக்காதவன் அவன் கழுத்தோடு கையிட்டு அவன் முதுகில் சாய்ந்து வாய் ஓயாமல் மன்னிப்பை யாசிக்கத் தொடங்கினான் சிவா.


"ஸாரி ஸாரி நான் அப்பிடி பேசியிருக்கக் கூடாது ஸாரிடா. நான் பண்ண தப்புக்கு நாழு அடி வேணா அடி இப்பிடி பேசாம உனக்குள்ள இறுகி போய் நிற்காதண்ணா"


முதுகோடு தன்னை அணைத்துக் கொண்டே புலம்பும் தம்பியின் செயல் அவனின் சிறுபிரயாத்தை நினைவூட்ட கௌசிக்கின் இறுகிய இதழ்களிலும் கீற்றாய் ஓர் புன்னகை மின்னி மறைந்தது.


அப்போதும் இப்படித் தான் தவறு செய்து விட்டு தவறை உணர்ந்து தன்னை அணைத்துக் கொண்டே மன்னிப்பை யாசிக்கும் குட்டி சிவாவின் நினைவில் இறுக்கம் தளர்ந்தவனாய் அவன் புறம் திரும்பியவன் அவனை பார்க்க கலங்கிவிடட் கண்களோடு நிமிர்ந்து அவனை பார்த்தான் சிவா.


கௌசிக்கின் பார்வையோ அழுத்தமாய் அவன் முகத்தில் பதிந்தது.


அவன் பார்வையின் வீச்சில் கண்களில் கெஞ்சலோடு "ப்ளீஸ்ணா மன்னிச்சுடு" என இதழ்கள் முனுமுனுக்க தன்னை பார்த்து நின்றவனின் கன்னத்தில் சப்பென்று ஓர் அறையை வைத்திட இப்போது சிவாவின் இதழ்கள் புன்னகைக்க தாவி அவனை அணைத்திருந்தான்.


"தைங்ஸ்டாணா அன்ட் ஸாரி " என வாய் ஓயாது நன்றியும் மன்னிப்பையும் கேட்டுவிட்டு அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தம் வைக்க "அடேய்" என்ற கூச்சலோடு அவனை விட்டு தள்ளி நின்றவன் தம்பியை முறைக்க அவனோ வாய்விட்டு சிரித்தான்.


"என்னடா பண்ற" கன்னத்தை தேய்த்தபடி இதழ்கள் சிரிப்பில் துடிக்க கேட்ட அண்ணனின் முகம் கண்டு தானும் சிரித்தவன்


"என்னவோ புதுசு போல வெட்கப்படுற" என்றான் கிண்டலாய்.


"டேய் சத்தமா சொல்லாதடா கேட்குறவங்க ஒருமாதிரி நினைச்சிட போறாங்க" என்றவனை பொருட்படுத்தாது அவனை அணைத்துக் கொண்டவன்
"நினைக்கிறவன் நினைக்கட்டும் நீ என்னோட அண்ணா" என்றுவிட்டு அவனிடம் மீண்டும் "அண்ணா மன்னிச்சிடுடா" என்றான் குரலில் தவிப்புடன்.


அவனை தானும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் "ஹேய் போதும் விடுடா சிவா.." என்றவன் அவன் முகம் இன்னுமே தெளியாததைக் கண்டு
இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் இனி இத போல உளறினன்னுவை நான் சிங்கிக்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்"
அவன் மனநிலை எதை சொன்னால் மாறும் என நன்கு புரிந்து வைத்தவனாய் பெண்ணவள் பெயரை இழுத்துவிட உடல் விறைத்து நிமிர்ந்து நின்றான் சிவா.


"அய்யோ சாமி உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன் அந்த தப்பை மட்டும் பண்ணிடாத உனக்கு கோடிப் புண்ணியம் கிடைக்கும்" என கையெடுத்துக் கும்பிட்டவன்
"உங்கிட்டே நான் இப்பிடி நடந்தது தெரிஞ்சுது பேய் ஆட்டம் ஆடுவாடாண்ணா ப்ளீஸ் உளறிடாதட" என்றவனைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த கௌசிக்கின் பார்வையோ அவன் பின்புறம் எட்டி பார்க்க சிவாவும் புரியாதவனை பின்னே திரும்பியவன்
அங்கு சூலம் இல்லாத பத்ரகாகாளியாய் நின்றவளைக் கண்டு விழிகள் விரிய தொண்டைகுழி ஏறி இறங்க எச்சிலை விழுங்கி தன் அண்ணனை பார்க்க..


அவனோ பல்வரிசை தெரிய சிரித்தவன் "தவளை தன் வாயால் கெடும்" என்றுவிட்டு சிவாங்கியிடம் "ஓகே லவ் பேர்ட்ஸ் நீங்க லவ் பண்ணுங்க நான் போய் என் பொண்டாட்டியைப் பார்த்துட்டு வறேன்" என்று சிவாவை பார்த்து கண்சிமிட்டி அங்கிருந்து நகர்ந்தான்.


தன்னை சிக்கலில் மாட்டிவிட்டு செல்லும்அண்ணனை முறைக்க முடியாது முழித்து நின்ற சிவாவின் பார்வை தன்னையே முறைத்து நின்றவள் பக்கம் பதிந்தது.


அவள் நின்ற தோற்றம் அவள் கோபத்தை பறைசாற்ற அவளை சமாதானம் செய்ய அவளை நெருங்கியவனை கை நீட்டி தடுத்திருந்தாள் பெண்.



"பப்பு அது வந்து.. நான்"


"உன்னைப் பேச வேணான்னு சொன்னேன் உஷ்" ஒரு விரல் நீட்டி அவனை பேச வேண்டாம் என்றவள் அவனை கோபத்துடன் நோக்கி
"அப்பிடியொரு வார்த்தை பேச எப்பிடி மனசு வந்திச்சு உனக்கு?
அத்து எது பண்ணாலும் நல்லதற்குனு ஏன் உன்னால நினைக்கத் தோணலை..
அப்போ உன் அண்ணா மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா?" என்றவள் வார்த்தையில் பதறியவன்


"ஹேய் அப்பிடி இல்லடி பப்பு அது ஒரு கோபத்துல சொல்லிட்டேன்" என்றவனை நக்கலாய் பார்த்தவள்.


"ஓ கோபம் வந்தா எதுவேனா பேசுவ அப்படித்தானே" அவள் பார்வையில் இருந்த கேலியில் தன் பார்வையை திருப்பிக் கொண்டான் சிவா.


அவனையே பார்த்தவளுக்கு அவன் மீது அத்தனை கோபம் பொங்கியது. எப்படி இவனால் அப்படி பேச முடிந்தது என்று.


கௌசிக் இருவரையும் சமாதானம் செய்திருப்பான் என்ற எண்ணத்தோடு அவர்களைக் காண அறைக்குள் நுழைந்தவளுக்கு திவ்யாவின் அழுகையும் புலம்பலும் நடந்ததை தெள்ளத் தெளிவாய் விலக்கிட சிவாவின் மீது அத்தனை கோபம் உண்டாக அவனை
குதறிவிடும் நோக்கில் வந்தவளுக்கு சிவாவின் வார்த்தைகள் அவளுக்கு இன்னும் சூடேற்ற இதோ அவனை கேள்வியாய் கேட்டு குதறத் தொடங்கியிருந்தாள்.


"அண்ணன் தங்கச்சி நீங்க இரண்டு பேரும் வேணா அத்து மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு நிச்சயம் ஏதோ ஒரு காரணத்திற்காகை தான் திவ்யாவோட வாழ்க்கைல திரும்பவும் விஷ்வாவ கொண்டு வந்திருப்பாரு" அவளின் உறுதியான வார்த்தையில் தன் அண்ணன் மீதான அவள் அன்பில் எப்போதும் போல மனம் குளிர்ந்தது.


அவள் தந்தையை போலவே கௌசிக் என்றாள் அவளுக்கும் அத்தனை அன்பு.
அவள் தந்தையை இழந்த போதிலும் காதலனாய் தன்னிடம் அடைக்கலம் தேடிடாது ஒரு சகோதரனாய் கௌசிக்கிடம் தஞ்சம் புகுந்தவள் அவள். அவன் மீது எத்தனை காதல் உண்டோ அதற்கு சற்றும் குறையாத ஏன் அதற்கு ஒரு படி மேலே கூடுதலான அன்பை அவன் மீது வைத்திருப்பவளால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


தன்னை பாவமாய் பார்த்து நின்றவனை முறைப்பான பார்வை பார்த்தவள் அவனின் எவ்வித சமாதானத்தையும் காது கொடுத்துக் கோளாதவளாய் கோபத்துடன் அங்கிருந்து விலகிச் செல்ல தலையில் கைவைத்து சோகமாய் நின்றிருந்தான்.


தம்பியை மாட்டிவிட்டு முகத்தில் புன்னகையோடு கீழிறங்கியவன் ஹாலில் அமர்ந்திருந்த மனையாளைக் கண்டு மேலும் புன்னகை விரிய அவர்களை நோக்கிச் சென்றான்.


பல வருடக் கதையை இன்றே பேசி முடித்துவிடுவோம் என்பது போல அவளைச் சுற்றி அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தவர்களையும் அதற்கு சளிக்காது பதில் கூறிக் கொண்டிருந்தவளையும் சில கணம் பார்த்து நின்றவன் அவர்களை தொல்லை செய்யாது தோட்ட பக்கம் செல்ல அவனை பின் தொடர்ந்து சென்றார் கஸ்தூரி.


"தம்பி" என்றவர் அழைப்பில் திரும்பியவன் அங்கே நின்றவரைக் கண்டு "சொல்லுங்கத்தை" என்றான் உரிமையுடன்.


அவன் அத்தை என்ற அழைப்பில் அவருக்குள் இருந்த தயக்கம் அகன்றவராய் "மாப்ள உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" என்றார்.


"ம்ம்" என்றவன் அவரை அழைத்துக் கொண்டு தோட்டம் பக்கம் சென்றவன் அவரை அங்கிருந்த இருக்கையில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டான்.


"மாப்ள இத எப்பிடி சொல்றன்னு தெரியல" என ஒரு கணம் தயங்கி நிறுத்தியவரை யோசனையாய் பார்த்தவன் "எதுன்னாலும் தயங்காம சொல்லுங்கத்தை" என்றான்.


அவன் வார்த்தையில் நம்பிக்கை பெற்றவர் "மதிய ஊர விட்டு அனுப்ப முன்னாடி நான் மதிக்கு வரன் பார்த்திருந்தேன் மாப்ள.." என்றவர் தன் பையிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து அவனிடம் நீட்டி "ஜோசியர் கொண்டு வந்த மாப்பிள்ளைங்க போட்டோவுல இந்த போட்டோவும் இருந்திச்சு" என்க அவனோ அதை புரியாது வாங்கியவன் அதில் பார்வையை பதித்த கணம் அவன் விழிகள் விரிந்து கொண்டது.


ஏனெனில் அதில் இருப்பது அவன் முகமல்லவா? இது எவ்வாறு சாத்தியம்
தன் படம் அதுவும் மதியிருக்கும் இடத்தில். ஒரு கணம் ஆச்சர்யமாய் விழி விரித்து பார்த்தவன் முகம் படத்தை உன்னிப்பாய் பார்த்து அடுத்த கணமே புருவம் சுருங்க யோசனையில் ஆழ்ந்தது.


அவனின் முகத்தையே பார்த்திருந்தவருக்கு அவன் முகம் காட்டிய யோசனையில் புரியாதவராய் "தம்பி இந்த போட்டோல இருக்குறது நீங்க தானே" என்றார்.


அவனோ அவர் கேள்வியில் நிமிர்ந்து "ம்ம்" என்றான் பட்டும் படாது.


"உங்க போட்டோ எப்பிடி தரகர் கொண்டு வந்ந்தாருன்னு தெரியல மாப்பிள்ளை.. ஆனா கடவுள் சித்தம் உங்க இரண்டு பேரையும் எப்பிடியோ சேர்த்திடலாம்னு பார்த்திருக்கு அது தான் நீங்களே மாப்பிள்ளைங்க போட்டோல ஒருத்தரா வந்திருக்கிங்க போல" சிறு புன்னகையோடு மகிழ்ந்து கூறியவரின் முகம் பார்த்தவன் தானும் சிறு புன்னகையுடன் அமைதியாய் நின்றிருந்தான்.


அவரும் அவனுடன் மதி பற்றிய சில விசயங்களை பேசியவர் மகளின் வாழ்க்கையில் இனி எவ்வித கஷ்டமும் நெருங்காது என்ற நிம்மதியோடு அங்கிருந்து சென்றிட.. அவர் சொல்லிச் சென்ற சில விசயங்களில் கௌசிக்கின் மூளையோ படுவேகமாய் எதையெதையோ முடிச்சிட்டு சிந்திக்கத் தொடங்கியது.


...


திவ்யா அழுதழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள்.


அறைக்கதவை மெதுவாகத் திறந்தபடி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் விஷ்வா.


யாரோ உள்ளே வரும் அரவம் கேட்டு கலங்கிய கண்களோடு நிமிர்ந்தவள் அங்கிருந்தவனைக் கண்டு இத்தனை நேரம் அடங்கி வைத்த கோபம் உடைப்பெடுக்க ஆக்ரோஷமாக "வெளியே போ" என்றாள்.


அவள் கத்தலில் விஷ்வாவின் நடை தடை பட அவளை பார்த்து நின்றான்.


அவளுக்கோ அவன் மீது வருடங்களாய் அடக்கி வைத்திருந்த கோபம் எரிமலையாய் பொங்கிட அதன் பிரதிலிபலிப்பாய் அவனை நெருங்கியவள் அழுது கொண்டே அவன் மார்பில் தன் கைகளால் குத்தினாள்.


"ஏன்டா ஏன் வாழ்க்கைல மறுபடியும் வந்த ஏன் என்னை மறுபடி மறுபடி கொல்லுற நான் என்ன பாவம் பண்ணேன்
உன்னை உயிருக்குயிரா நேசிச்சது தப்பா அதற்கு ஏன் இவ்வளவு வலியை எனக்கு கொடுத்த? உன் கேவலமான பழி வெறிக்கு என் தூய்மையான காதலை பலி கொடுத்திட்டியடா பாவி" என அழுதழுதே அவன் நெஞ்சில் தன் கரம் கொண்டு அடித்தவள் அடிகளை உணர்வே இல்லாது வாங்கிக் கொண்டவன் அவளின் கண்ணீரை தாங்க முடியாதவனாய் அவளை இறுக அணைத்துக் கொண்டு
"ஸாரி பேபி ஸாரி" என பிதற்ற
அவன் அணைப்பிலிருந்து திமிறி வெளிப்பட்டவள் "தொடாதே என்னைத் தொடாதே" என்றவளின் முகத்திலிருந்த கோபத்தை தாண்டிய வலியில் தன்பிடியை தளர்த்தி அவளை விடுவித்தவன் அவளையே முகம் கசங்க பார்த்து நின்றான்.



"என் அண்ணன் சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டும் தான் நீ இப்போ இங்க நிற்குற.. என் அண்ணனுக்காக மட்டும் தான் இந்த தாலி இந்த வாழ்க்கை எல்லாமே அத மீறி உனக்கும் என் மேல எந்த உரிமையும் இல்ல போ"
என கத்தியவள் கட்டிலில் தொப்பென்று வீழ்ந்து அழுதவள் அப்படியே சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள்.


 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 23




கஷ்தூரி கூறிய அனைத்தையும் யோசித்த கௌசிக்கிற்கோ ஏதோ தவறாய் தோன்றிட மீண்டும் மீண்டும் அவர் கூறியதை தனக்குள்ளாகவே கிரகிக்க முயன்றவனுக்கு ஏதோ ஓர் தெளிவில்லாத மர்மமுடிச்சு மதியினைச் சுற்றியிருப்பதை மாத்திரம் புரிந்து கொள்ள முடிந்தது.

"சம் திங் ரோங் என்னோட போட்டோ இவங்களுக்கு கிடைச்சிருக்குன்னா எப்பிடி? எங்கயோ இடிக்குது" என தாடையை தடவி யோசித்தவன் தன்கையிலிருந்த தன் புகைப்படத்தில் பார்வையை பதித்தான்.

அது அவன் தந்தையின் இறப்பின் முன் திரு நித்யவின் திருமணத்தன்று வேட்டி சட்டையில் எடுத்த புகைப்படம்.

அன்றைய அவன் தோற்றத்திற்கும் இன்றைய அவன் தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்க இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒழிய இருவரும் ஒரே நபர் என கண்டு கொள்வது சற்றே சிரமமே.

கஸ்தூரியோ கௌசிக்கின் புகைப்படத்தை நன்கு கவனித்திருக்க அவனது தோற்றத்தில் மாற்றம் இருந்தாலும் சட்டென்று அவன் தான் இவன் என அடையாளப்படுத்திக் கொண்டதினாலே அவனிடம் பேசிவிட்டுச் சென்றிருந்தார்.

"இது என் பெர்சனல் போட்டோ குடும்ப ஆல்பத்துல இருக்குற போட்டோ எப்பிடி ஜோசியர் கிட்ட போயிருக்கும்.. நிச்சயம் அம்மாவோ அத்தையோ என்கிட்ட கேட்காம இத பண்ணியிருக்க வாய்ப்பில்லை.. சோ வேற யாரோ இத பண்ணியிருக்கா யாரா இருக்கும்?"
என்ற யோசனையோடு தோட்டத்தில் நடை பயின்றவனையே ஒரு சோடி விழிகள் குரோதமாய் பார்த்து கொண்டிருந்தது.

நீண்ட நேரம் யோசித்தவாறே நடந்தவனுக்கு கால்வலியோடு சேர்ந்து தலைவலியும் உண்டாக தலை பிடித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

இன்னுமே மதியை சுற்றி கதை பேசிக் கொண்டிருந்தவர்களைக் கண்டு தலையாட்டி சிரித்துக் கொண்டவன் அவர்களை நெருங்கினான்.

"இன்னும் எவ்வளவு நேரத்துக்கு என் பொண்டாட்டிய டார்ச்சர் பண்ண போறீங்க எல்லாரும்" சிரிப்புடன் கேட்டவாறே இயல்பாய் மதியருகே சென்றமர்ந்து கொண்டான்.

"எது டார்ச்சர் பண்றோமா?" என சிறு முறைப்புடன் அவனை பார்த்தவர்களை கண்டு கண்சிமிட்டி சிரித்தவன்..

"போதும் போதும் உங்க பொண்ண கொஞ்சினது எல்லாம்.. இப்போ இந்த வீட்டு பையன கொஞ்சம் கவனிங்க.. ஸ்ட்ரோங்கா ஒரு காபி" என்றவன் தன்னருகே அமர்ந்திருந்தவளைச் சுற்றி கரத்தை போட்டு அவளோடு சாய்ந்து அமர அவன் நெருக்கத்தில் அவளுக்கு தான் அவஸ்தையாகிப் போனது.

"அய்யோ எதுக்கு இவ்வளவு கிட்ட இருக்காங்க" என எண்ணிக் கொண்டே அவனை பார்க்க அவனும் அவளை பார்த்தவன் என்ன என புருவம் உயர்த்தி கேட்டிட தன்னிச்சையாய் தலையசைத்தவள் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

தம் வீட்டு பிள்ளைகள் இருவரதும் ஜோடி பொருத்தத்தையும் கண் கொண்டு ரசித்தவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்கும் பொருட்டு "கண்ணா நீங்க ரெண்டு பேரும் போய் ஓய்வெடுங்க" என்ற பூரணியோ அவன் கேட்ட காபியை கொடுத்து இருவரையும் அவர்கள் அறைக்கு அனுப்பி விட்டவர் அதன் பின் பம்பரமாய்ச் சுழன்று புதுமணத் தம்பதிகளுக்கான மதிய உணவை தடபுடலாய் ஏற்பாடு செய்ய வேலையாட்களை ஏவிட மதிய விருந்தும் தயார் செய்யப்பட்டது.

மதியை அழைத்துக் கொண்டே அறை நுழைந்த கௌசிக்கோ அவளை அமரச் செய்து தானும் அவளருகே அமர்ந்து அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான்.

அவன் பார்வை புரியாது அவளும் அவனை பார்த்தாள்.

"என்னை முன்னாடியே தெரியுமா மதி?" என திடீரென்று கேள்வியை முன்வைக்க குழப்பமாய் அவனைப் பார்த்தவள் இல்லையென தலையசைத்தாள்.

அவள் பதிலில் பெருமூச்சொன்றை வெளியிட்டவன் அவனது புகைப்படத்தை அவளிடம் நீட்டிட அதை பார்த்தவள் விழிகளோ சுருங்கிட சிறிது நேரம் அதையே உற்று நோக்கியவளுக்கு அந்த விழிகள் ஏதையோ நியாபகம் மூட்ட "இது.." என இழுத்தவாறே பார்வையை நிமிர்த்தியவள் "இது நீங்களா?" என்றாள் சிறு வியப்புடன்..

அவனோ ஆம்மென்று தலையசைத்தவன் "இதுக்கு முன்னாடி இந்த படத்தை பார்த்திருக்கியா?" என்க அவள் விழிகள் மீண்டும் அதில் படிந்தது.

சில நொடி எதையோ யோசித்தவள் நினைவு வந்தவளாய் "இ..இது சித்தி காட்டின போட்டோ" என அவள் சித்தி கொடுத்ததை அவனிடம் ஒப்புவித்தவள் விழிகள் ஆச்சர்யத்துடன் விரிந்து கொள்ள அவனைப் பார்த்தாள்.

தன்னை ஆச்சர்யமாய் பார்த்தவளிடம்
"அப்போ என்ன முன்னாடியே உனக்கு தெரியுமா மதி" சற்றே அழுத்தமாய் அவன் கேள்வியை கேட்க அவளோ பதறியவளாய் "இல்லங்க. சத்தியமா தெரியல. முதன் முதலா சித்தி என்கிட்ட கல்யாண பண்ணிக்க சொல்லி போட்டோஸ் காட்டினப்போ எனக்கு விருப்பமே இல்லாம கடமையேனு தான் பார்த்தேன் அப்போ தான் இந்த போட்டோ" என்றவள் அன்று எந்த மனநிலையில் தான் இருந்தோம் என்றும் அதன் பின் நடந்த திடீர் சம்பவங்களும் அவளுக்கு அந்த புகைப்படம் பற்றிய நினைவே பிற் தள்ளி போட்டிருக்க அதையே அவனிடம் கூறி முடித்தவள் அவனை பாவம் போல் பார்த்தாள்.

எங்கு தான் சொன்னவற்றை நம்பாது போய்விடுவானோ என்ற தவிப்பை கண்ணில் தேக்கி வைத்து அவனை பார்த்தவளைக் கண்டு மனம் இளக "ஹேய் ரிலாக்ஸ்" என அவளை அமைதிபடுத்தியவன் அவளிடம், "அப்போ உன்னோட பெஸ்ட் சொய்ஸ் நான் தான் இல்லையா?" என்று சிறு சிரிப்புடன் கேட்க அவளும் இதழ் விரித்து ஆமென்றாள்.

"ம்ம்.. யூ ஆர் லக்கி கேர்ள்..ஆசை பட்ட நானே ஹஸ்பெண்ட்ஆ கிடைச்சிட்டேன்ல" என இதழ் சிரிப்புடன் கூறியவனைக் கண்டு அவளுக்கு வெட்கம் முளைக்க சிரித்துக் கொண்டாள்.

அவளிடம் சிறிது நேரம் பேசியவன் அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு எழ அவனிடம் "நான் ஒன்னு கேக்கவா?" என்றாள்.

"ம்ம்" என்று அனுமதி வழங்கி அவளை பார்க்க அவளும் "அது.. எப்பிடி எல்லாம் கண்டுபிடிச்சிங்க.. நா..நான் இந்த வீட்டு பொண்ணுன்னு எப்பிடி கண்டுபிடிச்சிங்க" என்றாள் தயக்கத்துடன்.

அவள் கேள்வியில் மீண்டும் இருக்கையில் அமர்ந்தவன் அவள் கேள்விகளுக்கு பதிலாய் தன் வாழ்வில் நடந்தவைகளை ஒவ்வொன்றாய் தெளிவுபடுத்திட கேட்டிருந்தவளுக்கோ கண்கலங்கிப் போனது தன்னவன் பட்ட துயர் கேட்டு..

அவள் முகம் கலங்கிய தோற்றம் கண்டு அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன்..

"அப்பாவோட இறப்புக்கு பின்னாடி அப்பா மேல சுமத்தின கலங்கத்த போக்கனும்னா பூமா அத்தையை கண்டுபிடிக்கனும்.. ஆனா அது அத்தனை சுலபமா முடியக் கூடிய காரியம் இல்லன்னு போக போக தான் புரிஞ்சிகிட்டேன்.

என்னோட வேலைக்கான பயிற்சி ஒரு பக்கம் அத்தையை தேடுறதுக்கான தேடல் ஒரு பக்கம்னு என்னால இரண்டுலயும் கான்சென்ரேட் பண்ண முடியல அதனால அத்தையை கண்டுபிடிக்குற வேலைக்காக நான் எனக்கு நம்பிக்கையான சில பேர ஏற்பாடு செய்திருந்தேன்.

அவங்களும் அத்தை பற்றி எத்தனை முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாம தோல்வியில தான் முடிஞ்சுது." என்றவன் ஒரு பெருமூச்சுடன் "அதுக்கப்புறம் அத்தை பற்றி எந்த தகவலுமே கிடைக்கலன்னு இருந்தப் போது தான்.. நீ என்கிட்ட வந்து சேர்ந்த.. அது தற்செயலா இல்லை கடவுள் விதியா வட்எவர்.. அன்னைக்கு முதல் நாள் காலையிலயே உன்னை பத்தின மொத்த டிடெய்ல்ஸ்ஸும் என் கைக்கு வந்துடுச்சு" என்றவன் அன்று அவனுக்கு வந்த அழைப்பும் அதில் கிடைத்த செய்தியும் என ஒவ்வொன்றாய் விளக்க அவள் விழிகளோ ஆச்சர்யத்தில் விரிந்து கொண்டது..

அவள் விரிந்த விழிகளை பார்த்தவாறே
"அன்னைக்கு உன் கழுத்துல இந்த தாலிய கட்டினதே நீ என் அத்த பொண்ணுன்னு தெரிஞ்சு தான்" என்றான்.

அதில் அவள் கண்கள் மேலும் விரிந்திட அவன் இதழ்களோ அவள் விரிந்த விழி கண்டு சிரிப்பில் மலர்ந்தது.

"அப்போ தெரிஞ்சு தான் தாலி கட்டினீங்களா?" என்றவளிடம் "ம்ம்" என்று தலையசைத்தான்.

அவனையே பார்த்தவளுக்கு அன்றைய நாளில் அவன் கேட்ட தாலியை கழட்டிவிடு என்ற வார்த்தைகள் நாராசமாய் இப்போது ஒலித்திட முகம் சுருக்கியவள் "அப்போ ஏன் அப்படி சொன்னிங்க" என்றாள் மொட்டையாய்..

அவனுக்கு அவள் எதை சொல்கிறாள் என்று புரிந்திட தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன். "என்னோட சுயநலத்துக்காக உன் விருப்பமில்லாம நான் கட்டின தாலி.. அதை ஏத்துக்க உனக்கு விருப்பமில்லன்னா? அது தான் அப்பிடி பேசினேன்" என்றான் தன்னிலை விளக்கமாய்.

அவன் விளக்கத்தில் பொம்மையென தலையாட்டியவள் அமைதியாய் இருக்க அவனும் அமைதியாய் அவளை சிறிது நேரம் பார்த்தவன் பின் எழுந்து "நீ தூங்கி ரெஸ்ட் எடு நான் வெளியே போய்ட்டு வரேன்" என்றவன் அறை விட்டு வெளியேறிச் சென்றான்..

நேரம் நகர்ந்திட மதிய உணவுக்கு அவளை கீழே அழைத்து செல்ல வந்திருந்த நித்யாவுடன் கீழிறங்கிச் சென்றவள் உணவு மேசையில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டு புன்னகைத்தபடி அங்கே அமர்ந்து கொண்டாள்.

திவ்யா விஷ்வா இருவரையும் தவிர மற்ற அனைவருமே உணவு மேசையில் அமர்ந்திருந்தனர்.

கமலத்திற்கோ மகளின் எண்ணத்தில் முகம் வாடிட அவள் அறையை பார்த்தவாறு அமர்ந்திருந்தவர் கரம் பற்றினான் கௌசிக்.

"மா.. அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கலாம்.. நிச்சயம் எல்லாம் சரியாகும்" என்று ஆறுதலளித்தவன் பூரணியை பார்க்க அவரும் "அண்ணி நம்ம திவி வாழ்க்கை இனி தான் சரியாகும்.. நீங்க கவலைப்படாதிங்க நிச்சயம் விஷ்வா அவளை பழைய மாதிரி மீட்டெடுப்பான்" என தேற்றினார்.

அதன் பின் சகஜமான மனநிலைக்கு திரும்பியவர்கள் பேசியவாறே உணவை உண்ண..
அவர்களிடையே பார்வையாளர்களாய் இருந்த மோகன்ராஜ்க்கு கடுப்பாக இருந்தாலும் இனி தன் ஆட்டம் செல்லாது என்ற நினைப்பில் வாலைச் சுருட்டி அமைதியாய் அமர்ந்திருந்தார் மனிதர்.

அதன் பின் உணவு வேளை முடிந்திட அனைவரும் ஓய்வெடுக்க அறைக்குள் முடங்கிப் போயினர்.

விஷ்வா திவ்யா இருவருக்குமான உணவு அறைக்குள் கொடுக்கப்பட்டாலும் அதுவோ இருவராலும் தீண்டப்படாமலே மூடி வைக்கப்பட்டிருந்தது.


வீட்டிலிருந்தவர்களுக்கோ நடந்த சம்பவத்தினால் பழைய ரணங்கள் மீட்டப்பட்டிருந்தாலும் புதிய வரவு ரணங்களின் காயத்தை ஆற்றியிருக்க சந்தோஷ மனநிலையோடே நேரத்தை நெட்டித்தள்ளியவர்களுக்கு அன்றைய நாள் ஒருவித நிம்மதியோடு கழிந்தது.




தொடரும்...


 

Habi

Moderator
அத்தியாயம் -24


அடுத்த நாள் விடியலில் இருளை விரட்டி இளவரசனாய் வானத்தில் ஜொலி ஜொலித்தான் கதிரவன்.

நேற்றைய குளறுபடியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இரவைக் கடத்தி விடியலில் புதிய தொடக்கத்தோடு எழுந்து கொண்டனர் வீட்டினர்.

நேற்று முழு நாளும் உணவு உண்ணாததினாலும் அழுததினாலும் பசியோடு சேர்ந்து உண்டான தலைவலியோடு கண் விழித்தாள் திவ்யா.

உடலின் சோர்வோடு எழுந்தமர்ந்தவள் தீயாய் எரிந்த கண்களை கசக்கியவாறே கண்ணை விரித்து நேரத்தை பார்க்க அதுவோ காலை ஆறு மணியை தொட்டு நின்றது.

"மணி ஆறாச்சா.." என்ற முணுமுணுப்போடு எழுந்தவள் தன்னெதிரே போடப்பட்டிருந்த சோபாவில் ஏதோ அசைவை உணர்ந்து பார்வையை திருப்பிட அங்கு நிர்மலமான முகத்துடன் அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்தான் விஷ்வா.

அவனைக் கண்டதுமே நேற்றைய நாளின் நினைவுகள் வரிசையாய் வந்து சேர்ந்திட தன் கழுத்தை உறுத்திய தாலியை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் கண்கள் லேசாய் கலங்கித் தான் போனது.

ஆசைபட்ட மணவாளன் கண்முன்னே இருந்தும் அவனோடு ஆசையாய் தங்கள் வாழ்க்கையை தொடங்க முடியாத நிலையை எண்ணி அவள் மனம் ஊமையாய் அழுதிட அவனையே அசையாது பார்த்து நின்றாள் பெண்.

அந்த சிறிய சோபாவில் தன் உயரமான உடலைக் குறுக்கி வைத்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டு அவளுக்கு பரிதாபம் எழுந்தாலும் நொடியில் தன் மனதை தட்டி அடக்கியவளுக்கு பழைய ரணங்களின் தாக்கத்தில் இத்தனை நேரமும் வேதனை கொண்ட மனம் அவன் மீதான கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டது.

அவனின் பழைய செயல்கள் அனைத்தும் அவள் நினைவடுக்கில் வந்து போக கோபமாய் அவனை முறைத்தவள்
"என்னோட நிம்மதியை பறிச்சிட்டு நீ மட்டும் நிம்மதியா தூங்குறியா?" என்று ஆதங்கமாய் நினைத்தவள் அங்கிருந்த மேசையிலிருந்த தண்ணீர் மக்கை எடுத்துக் கொண்டு அவனை நெருங்கினாள்.

அவளின் நேரம் அவனை நெருங்கியவளின் கால் தடுக்கிவிட அவன் மீதே தொப்பென்று விழுந்த கணம் இருவரின் இதழ்களும் ஒட்டிக் கொள்ள அவள் கையிலிருந்த தண்ணீர் கவிழ்ந்து இருவரின் முகத்திலும் தெளித்தது.

முகத்தில் வீழ்ந்த தண்ணீரின் குளிர்மையில் பட்டென்று கண்விழித்தவனோ தன் மீது இதழ் உரச வீழ்ந்திருக்கும் பெண்ணவளைக் கண்டு விழிகள் இன்பமாய் விரிந்திட அவளையே பார்க்க அவளும் அவனை பார்க்க இருவர் பார்வையும் இணைந்து கொண்டது.

முதலில் சுதாகரித்த திவ்யாவோ அவனை விட்டு விலக முற்பட அவளை விடாது அவள் தலையை பிடித்து மேலும் தன்
மீது அழுத்தியதில் அவளோ விழிவிரித்து அவனைப் பார்த்தவள் அவனிடமிருந்து திமிறி வெளிவந்தாள்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனைப் பார்த்து முறைத்தவளைப் பார்த்தவாறே எழுந்தவன் தன் உடலை முறுக்கி சோம்பல் முறித்துவிட்டு முகத்தில் வடிந்த நீரை தன் கைகளால் துடைத்தவன் நாவால் உதட்டை தடவிட அவன் செய்கையில் பெண்ணவள் திவ்யாவின் பிபி ஏகத்துக்கும் எகிறியது.

"யூ ராஸ்கல்" என அவன் மீது எறிந்து வீழ்ந்தவள் அவனை அடிக்க அவன் இதழ்களோ புன்னகைத்துக் கொண்டது.

"எவ்வளவு தைரியமிருந்தா இப்பிடி பண்ணுவ பொறுக்கி" திட்டியவாறே அவனை அடித்திட சிரித்துக் கொண்டவன்
"ஹேய் திவி நான் ஒன்னுமே பண்ணலடி" என அப்பாவியாய் கூற அவளுக்கோ அவன் உரிமையான அழைப்பும் சிரிப்பும் மேலும் கடுப்பேற்றியது.

"பொய் சொல்லாதே வேணும்னே பண்ண நீ" என்றாள்.

"சரி சொல்லு என்ன பண்ணேன்" என்றவன் பார்வை அழுத்தமாய் அவள் இதழை தீண்டிட அவளுக்கோ வார்த்தை சிக்கிக் கொண்டது.

"நீ..தான்... என்னையே" என திக்கித் திணறியவளை சுவாரஷ்யமாய் பார்த்தவன் "நான் உன்ன என்ன பண்ணேன்" என்றான் அவனும் கேள்வியாக.

"இன்னொரு வாட்டி என்ன தொட்ட.." என ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவளை பாவமாய் பார்த்தவன்
"ஹேய் நான் உன்னை தொடவே இல்லை நான் என்பாட்ல தூங்கிட்டு இருந்தேன் நீயா தானே எம் மேல விழுந்து வாரின.. நீயா எல்லாம் பண்ணிட்டு என்ன தொடக் கூடாதுன்னு சொன்னா எப்பிடி? ஹாங்" அவன் தன் வாதத் திறமையால் அவளையே குற்றவாளியாய் நிறுத்தி கள்ளச் சிரிப்புடன் அவளை பார்த்து வைக்க அவளுக்கோ அவன் மண்டையை பிடித்து மாவாட்டும் அளவிற்கு கோபம் கிளர்ந்தெழுந்தது.

இருந்தும் இவனிடம் மேலும் வம்பு வளர்க்க பிடிக்காதவளாய் அவனை முறைத்துவிட்டு நகர முயல அவனோ "விஷ்வா நீ ரொம்ப கொடுத்து வெச்சவன்டா காலையிலே முத்தத் தரிசனம் எல்லாம் கிடைச்சிருக்கு" என தன்னைத் தானே பாராட்டிட அவளோ "யூ..யூ .." என கை நீட்டி அவனை நெருங்க அவனோ அவள் கை பற்றி சுழற்றியவன் அவளை தன் அணைவிற்குள் பிடித்து நிறுத்தி.. "தைங்யூ மை டியர் பொண்டாட்டி ஹெப்பி மோர்னிங்" என கிசுகிசுப்பாய் கூறி அவள் கன்னத்தில் இதழ் ஒற்றிவிட்டு வேகமாய் அறையைவிட்டு வெளியேறியிருந்தான்.

அவன் இதழ் ஒற்றலில் சில கணம் தடுமாறி நின்றவள் பின் அவன் செய்த காரியம் உறைக்க அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தவாறே குளியறை புகுந்து கொண்டாள்.

அறையை விட்டு வெளியேறியவன் இதழ் முழுவதும் புன்னகைக்க தலைகோதி சிரித்தவன் "எவ்வளவு நாளைக்கு உன் கோபம்னு நானும் பார்க்குறேன்டி என் சண்டி ராணி அமைதியெல்லாம் உன்கிட்ட வேலைக்காகாது இந்த அதிரடி தான் உனக்கு சரியா வரும்" என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.


...

சாளரம் வழியே அறைக்குள் நுழைந்த கதிரவனின் வெளிச்சத்தில் தூக்கம் மெல்ல களைந்திட மெல்லிய முனங்களோடு கண்விழித்தாள் வெண்மதி.

நேற்றைய நிகழ்வில் தன் சொந்த இடம் வந்து சேர்ந்த நிம்மதியில் நன்றாய் தூங்கியதால் வழமையான நேரம் தாண்டியே அரைக்கண் விழித்தவளுக்கு தான் கனமான எதன் மீதோ படுத்திருப்பது போல தோன்ற கைகளாலே மெல்ல வருடியவள் "தலகாணில தானே தூங்கினேன்.. ஆனா இது என்ன ரொம்ப கனமா இருக்கு" என்று தொட்டுத்தடவியபடியே வாய்விட்டு முனங்கிட

அவள் முனங்களைக் கேட்டு "மேடம் என் மேலே படுத்தா கனமாதான் இருக்கும் கொஞ்சம் இறங்கி கீழே படுத்தா பஞ்சு மெத்தை சுகமா இருக்கும்" என்க பட்டென்று தன் விழி விரித்து நிமிர்ந்து பார்க்க அங்கு குறும்புக் கண்ணனாய் தலைக்கடியில் கைகுற்றி இவளையே புன்சிரிப்புடன் பார்த்தவன்
"குட் மார்னிங் பொண்டாட்டி" என்றான் கண்சிமிட்டி.

அவன் பொண்டாட்டி என்ற அழைப்பில் வாய்பிளந்து அவனைப் பார்த்தவள் "நா...நான் இங்கே எ..எப்பிடி" என்று தடுமாறியபடி அவனை விட்டு எழாமலே முழித்தாள்.

அவளின் பாவனையில் பொங்கி வந்த சிரிப்பை இதழ்களுக்கு மறைத்தவன் வேண்டுமென்றே "நைட் முழுக்கவும் என் மேலே இதே பொசிசென்ஸ்ல தான் தூங்குறீங்க மேடம்" என்றான் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு.

அதில் பதறியவள் "அச்சோ நைட் முழுக்க இப்படியேவா இருந்தேன்..ஸாரி ஸாரி.." என்றவள் தான் இன்னுமே அவன் மேலே இருப்பது உணர்ந்து பட்டென்று விலகி எழுந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன் தன் முகம் பாராது தலை குனிந்திருந்தவளைக் கண்டு
"அம்மா உடம்பு ரொம்ப வலிக்குது" என்று உடலை வளைத்த்தான்.

அவனை பாவமாய் பார்த்தவள்
"ஸாரிங்க நா..நான் தெரியாம பண்ணிட்டேன்" விட்டால் அழுதுவிடுவேன் என்ற பாவனையில் முகம் சுருங்க தன்னை பார்த்தவளைக் கண்டடவனுக்கோ அவளை அள்ளி அணைத்திடும் வேகம் உள்ளத்தில் உதித்திட.. தன் மனம் போகும் போக்கை உணர்ந்து தலையை குலுக்கி தன்னை மீட்டவன்

"ஓய் என்ன ஸாரி கேட்டா எல்லாம் போச்சா உன்னால என்னோடு எலும்பெல்லாம் பிராக்ஸர் ஆகியிருக்கும் போல" என அவளை கேலி பண்ணிட
அது புரியாதவளாய் "அய்யோ அப்பிடியெல்லாம் ஆகியிருக்காதுங்க நான் ஒன்னும் அவ்வளவு வெய்ட் இல்லை" என்றாள்.

"என்னாது வெய்ட் இல்லையா குட்டி கும்கி மாதிரி இருந்துட்டு வெய்ட் இல்லைனா சொல்ற" என்று அவளை சீண்டியவனுக்கே தான் அதிகப்படியாய் அவளை வம்பிலுக்கிறோம் என புரிந்தாலும் இந்த சீண்டல் அவனுக்கு பிடித்திருக்க தன் இறுக்கம் தளர்த்தி அவளைச் சீண்டினான்.

அவன் வார்த்தையில் விழிகள் விரிந்திட "என்னது குட்டி கும்கியா நானா?" என சிறு கோபம் கொண்டு அவனை பார்த்தாள்.

"ஆமா நைட் முழுக்க உன்னை தாங்கிக்கிட்ட எனக்கு தான் தெரியும் உன் வெய்ட்.. உடம்பெல்லாம் செம்ம வலியா இருக்கே" வலியால் முகம் சுருக்கினான் தினம்தோறும் உடற்பயிற்சியால் உரமேறி இறுகிய தசை கொண்ட படிக்கட்டு தேகமுடைய ஆண்மகன்.

அவன் நடிப்பையும் உண்மையென்று நம்பியவள் முகம் சுருங்கிட "ஸாரிங்க..நான் தெரியாம தூக்கதுல வந்திருப்பேன்.. ஸாரி.. நீங்க என்னை தள்ளி படுக்க வைச்சு இருக்கலாமே உங்களுக்கு வலியா இருந்திருக்காதுல" என்றாள்.

"உங்களுக்கு ரொம்ப வலிக்குதா? நான் வேணா பிடிச்சுவிடட்டா?" தன் வலி போக்கிடும் தவிப்போடு தன்னையே பார்த்திருந்தவளைக் கண்டவன் மனம் இளக சிறு தலையசைப்புடன் சரியென்றான்.

உரமேறிய அவனின் வன்மையான தோள்பகுதியை பிடித்தவளுக்கோ மனதினுள் சிறு நெகிழ்ச்சி தோன்றிட அதை வெளிக்காட்டாதவளாய் அவன் கரம் பிடித்தவளுக்கு ஒரு கட்டத்தில் கைகள் வலித்திட அவள் தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.

அவனும் என்ன என்பது போல் அவளைப் பார்த்தான்.

"அ...அது வந்து உங்க ஆர்ம்ஸ் ரொம்ப பொருசா இருக்கா அத பிடிக்க என் கை ரொம்ப வலிக்குது...அதனால நான் பிறகு பிடிச்சி விடவா?" என்றாள் அப்பாவிக் குழந்தை போல்.

அவளின் இந்த சிறு பிள்ளைத் தனத்தில் மொத்தமாய் கவிழ்ந்து போனான்.

"நான் அப்புறமா உங்க கையை பிடிச்சு விடுறேன் சரியா? ப்ளீஸ்" கண்களால் கெஞ்சியபடி கேட்டவளைக் கண்டு புன்னகைத்தவன் அவள் தலை முடியை கலைத்தபடி "சரி" என்று எழுந்து பாத்ரூம் புகுந்து கொண்டான்.

கௌசிக் முகம் கழுவி வெளியே வந்த போது அவன் வந்தது கூட தெரியாமல் கண்ணாடி முன்னே நின்று புலம்பிக் கொண்டிருந்தாள் வெண்மதி.

"அவ்வளவு குண்டாவா இருக்கேன்" என்று முன்னும் பின்னுமாக தன்னை தானே சோதித்து பார்த்தவளுக்கு அப்படியொன்றும் தோன்றாது விட உதட்டை பிதுக்கியவள் "நான் குண்டாவெல்லாம் இல்லை ரொம்ப ஒல்லியா தானே இருக்கேன்.. அப்புறம் ஏன் அப்பிடி சொன்னாங்க?" என்றவாறே தான் போட்டிருந்த ஆடையை இறுக்கிப் பிடித்ததில் அவள் உடல் வளைவுகள் அப்பட்டமாய் காட்சியளிக்க விக்கித்து போனான் கௌசிக்.

"கன்ட்ரோல் பண்ணுடா" என தனக்குள்ளே முனங்கிக் கொண்டவன் அவளிடம் "ஓய் என்ன பண்ற" என்றதுமே பட்டென்று திரும்பி பார்த்தவள் கைகள் பட்டென்று தன் ஆடையை தளர்த்தி விட்டு நெளிந்தபடி அவனைப் பார்த்து திருதிருவென முழித்து நின்றாள்.

"அய்யெய்யோ பார்த்து இருப்பாங்களா? கடவுளே" மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டவள் அவனைப் பார்க்க அவனோ சிரித்தபடி அவளை நெருங்கினான்.

"என்ன குண்டா ஒல்லியான்னு செக் பண்றீயா?" என்றதும் அவன் தன்னை கண்டு கொண்டான் என்பது புரிய நாக்கை கடித்து கண்மூடி குனிந்து கொண்டவள் தலை ஆமென்க..அவனோ சத்தமாய் சிரித்து வைத்தான்.

"எதுக்கு சிரிக்கிறீங்க.. சிரிக்காதிங்க நான் அப்பிடியொன்னும் குண்டாவே இல்லை ஒல்லியா தான் இருக்கேன்" என்றாள்.

அவளின் அறியா குழந்தை தனத்தை ரசித்து அவன் நிற்க அவளோ "நான் குண்டுனா இனி டயர்ட் பண்றேன்" என்க அவனுக்கோ திக் என்றானது..

'எத டயர்ட் பண்ண போறாளா? இப்போவே தொட்டா ஒடிஞ்சு விழு மாதிரியிருக்கா
என் பக்கத்துல நின்னா கொசு போல தெரியுறா இன்னமும் மெலிஞ்சானா கண்ணுக்கே தெரியமாட்டாளே?' என மனசாட்சி புலம்பிட அவன் புலம்பலை அறியாதவளாய்
அவளோ "இனி கொஞ்சம் சாப்பாட்டை குறைக்கனும் அப்புறம் காலையில கிரீன் டீ குடிக்கனும்" என அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக அவள் தலையில் நங்கென்று கொட்டினான் கௌசிக்.

"ஸ்ஸ்ஸ் அம்மா" என வலியில் தலையை தேய்த்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் "ஏன் கொட்டினிங்க வலிக்குது" வலியில் முகம் சுருங்க கேட்டதுமே தான் அவசரப்பட்டு கொட்டிவிட்டது புரிய..

"ப்ச்சு ஸாரி ஸாரி" என அவள் தலையை தேய்த்தவன் அவளை கண்ணாடி முன் நிறுத்தி அவளை பின்னால் அணைத்தவாறு நின்று
"ஹோய் அங்கே பாரு நீ இப்போவே என் பக்கத்தில கொசு போல தெரியுற நீ இன்னும் மெலிஞ்சா என் கண்ணுக்கே தெரியாம போய்டுவியே" என்றான் சிரிப்புடன்.

"அப்போ நான் குண்டா இல்லையா?" என்றாள் விழி விரித்து.

"இல்லவே இல்ல ஆத்தா நான் சும்மா தான் சொன்னேன்" என்று செல்லமாய் அவள் தலை முட்டி சிரித்தான்.

அவன் சிரிப்பில் தானும் சிரித்தவள் அவன் அணைப்பிலிருந்து நெளிந்திட அதை புரிந்தவனாய்
"போ போய் ப்ரெஷ் ஆகி வா" என அவளை அனுப்பிவிட்டு அறையை விட்டு வெளியேறி ஹால் வர அங்கே அலங்கோலமான நிலையில் வீட்டில் நுழைந்தான் சிவா.

"டேய் சிவா என்னடா இது கோலம்" என அவனை நெருங்க அவனோ தன் அண்ணனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.

"வாடா நல்லவனே.. பார்த்தா தெரியல என் கோலம்"

"அது தெரியுது எப்பிடி ஆச்சு?" என்றான்.

"நீ தான்டா நல்லவனே காரணம்" என்றான் முகம் சிவக்க..

அவனோ "நானா?" என புரியாதவனாய் தம்பியை பார்த்தான்.

"ஆமா நீயே தான் நேத்து நீ பத்த வெச்ச வெடில நான் சிக்கி சின்னா பின்னாமாகி வந்திருக்கேன்டா பாவி அண்ணா" என்றதுமே புரிந்து கொண்டவன்
"யூ மீன் சிவாங்கி" என ராகமாய் இழுத்து கேட்க அவனோ "ஆமான்டா நல்லவனே அவளே தான்" என்றான் அழும் பாவனையில்.

அவன் அலங்கோலமும் அவன் பாவனையும் சிரிப்பை தர சிரிக்க முயன்றவனை கண்டவன் "டேய் அண்ணா சிரிக்காதடா?" என்றான் பல்லைக்கடித்தபடி.

"ஓகே ஓகே சிரிக்கல வா வந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு" என ஆர்வமாய் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர வைக்க.

"அடப்பாவி அண்ணா நான் இங்கே நொந்து நூடுல்ஸ் ஆகி வந்து இருக்கேன் நீ என்னடான்னா குஜாலா இருந்து கதை கேட்குறியாடா பாவி" என்றான் ஆற்றாமையாய்.

"சரிடா அழாத.. மொத்தமா எல்லாத்தையும் சொல்லிட்டு அழு ஓகே" என்றவனை முறைத்துவிட்டு தன் சோக கதையை சொல்ல ஆரம்பித்தான் சிவா.


தொடரும்..


 

Habi

Moderator
அத்தியாயம் - 25


அடுத்த நாள் அதிகாலை சூரிய தேவன் தன் பூமிக் காதலியை காண ஓடி வரும் முன்னரே கோபம் கொண்டு முறுக்கிச் சென்ற தன் காதலியை காண ஓடோடி வந்திருந்தான் சிவா.

ஊசியாய் உடலை துளைக்கும் கொடைக்கானல் குளிரையும் பொருட்படுத்தாமல் அந்த புலராத வேளையில் தன்னவள் முகம் காண தவம் கிடந்தவன் மனசாட்சியோ இதற்கு காரணமான தன் அண்ணனை எண்ணி புலம்பிக் கொண்டது.

"டேய் அண்ணா நீ பண்ண வேலையினால எனக்கு இதெல்லாம் அனுபவிக்கனும்னு தலையெழுத்துடா நான் எப்பிடி அவளை மலையிறக்கி அவ கூட லவ்ஸ் பண்றது ம்ஹூம்" பெருமூச்சை விடm அந்தக் குளிரில் அது புகை போல் வெளியேறியது.

நேரம் நகர்ந்திட அவன் யாருக்காக தவமிருந்தானோ அவளே தரிசனம் தந்தாள் தலைவனின் முன்.

காலையில் ஜாக்கிங் செல்ல கதவைத் திறந்தவள் தன் வாசலிலே நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து தான் போனாள்.

அவளைக் கண்டதுமே முகம் மலர அவளை நோக்கி வந்தவன் "ஹாய் பப்பு குட்டி" என நடுங்கும் உதடுகளால் அழைத்திட அவனைப் பார்த்தவளுக்கோ குளிரில் நடுங்கியவனைக் கண்டு அவள் காதல் மனம் இளகினாலும் நேற்றைய நினைவுகள் அவள் நினைவடுக்கில் உதித்திட அவனை முறைத்தவள் பார்வையை திருப்பிக் கொண்டு ஜாக்கிங்கை தொடர அவள் பின்னே ஓடினான்.

"ஹேய் பப்பு சாரிடி நேத்து நான் கோபத்துல அப்படி பேசிட்டேன் ஸாரி" என்ற கெஞ்சலோடு ஓடிவந்தவனை பொருட்படுத்தாது ஓடியவளை விடாது பின் தொடர்ந்தவன் ஆயிரம் தடவை மன்னிப்பை யாசிக்க ஒருகட்டத்தில் பொருக்கமாட்டாதவள்

"இப்போ எதுக்கு என்கிட்ட இப்பிடி ஸாரி கேட்டு சீன போடுற. நீ யார ஹேர்ட் பண்ணியோ அங்க போய் கேளு" வெடுக்கென கூறிவிட்டு நகர முயன்றவள் கையை பற்றி நிறுத்தினான்.

"அண்ணன் கிட்ட ஸாரி கேட்டுடேன் பப்பு அவன் என்னை மன்னிச்சிட்டான்.. நீ என் கூட பேசுடி" என கெஞ்சலாய் அவன் முகம் பார்த்தவனை சந்தேகமாய் பார்க்க..

"ஹேய் நம்புடி சத்தியாம அண்ணன் மன்னிச்சுட்டான்" என்றான்.

"எனக்கு உன் மேலே நம்பிக்கையில்லை.
உனக்கு கோபம் வந்தா யாருன்னும் பார்க்காம காயப்படுத்துவ.. இன்னைக்கு அத்து நாளைக்கு நான்" என்றாள் தோளைக் குலுக்கி வேண்டுமென்றே.

"அடியேய் லூசு போல பேசாதடி.. அது நேத்து ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்.. அதுக்கும் உன் மேல கோபப்படுவேன்னு சொல்றதுக்கும் என்னடி சம்பந்தம்" என சற்று குரல் இறுக அவளிடம் கேட்டான்.

"பார்த்தியா பார்த்தியா இப்போ கூட நீ கோபப்படுற தானே.. உனக்கு உன் கோபம் தான் முக்கியம் நீ அதையே கட்டிக்கிட்டு அழு என்னை விட்டுடு" என்றவள் விறுவிறுவென நடக்க தலையிலடித்துக் கொண்டான்.

"அம்மா தாயே மன்னிச்சிடும்மா நான் பண்ணது தப்புதான்.. வேணும்னா உன் அத்து காலுலே விழுந்து மன்னிப்பு கேக்குறேன்டி ப்ளீஸ்டி இந்த அடிமைக்கு கொஞ்சம் கருணை காட்டுடி தங்கமே" அப்பாவியாய் கெஞ்சியவனை கண்டு அவள் கோபம் முழுவதும் பனிபோல் பறந்து போனாலும் அவனை மேலும் கெஞ்ச வைத்திட எண்ணியவள் அமைதியாய் நின்றிருந்தாள்.

"பப்பு குட்டி உன் கோபம் குறைக்க மாமா என்ன வேணாலும் பண்ணுவேன்டா" என அவள் கோபம் போக்க எண்ணி வாயை விட்டான்.

'அடடா ஆடு அதுவா வந்து அடுப்பு சட்டிக்க விழுதே' என தனக்குள் எண்ணி சிரித்துக் கொண்டவள்
"சரி ஓகே நீ இவ்வளவு கெஞ்சுறதுனால உன்ன மன்னிச்சு விடுறேன்.. ஆனா அதுக்கு நீ எனக்காக ஒன்னு பண்ணனுமே" என்றாள்.

அவள் தன்னை மன்னித்து விட்டாள் என சந்தோஷமாய் முகம் மலர்ந்தவன் அதே மகிழ்வோடு "உனக்காக எது வேணா பண்ணுவேன்டி மை பப்பு" என்றான் கொஞ்சலாய்.

"ம்ம் பெருசா எதுவும் பண்ண வேணாம் அதோ அந்தா தெரியுதுலே அந்த மரத்துல இருக்குற பூ வேணும் பறிச்சுக் கொடு" என்றவள் அங்கிருந்த ஒரு வீட்டில் கொத்தாய் மலர்ந்து கிடந்த பூக்களைக் காட்டினாள்.

"அட இவ்வளவும் தானா இதோ இப்போவே ஓடோடிப் போய் பறிச்சிட்டு வந்திடுறன்டி என் செல்லாக் குட்டி" என விறுவிறுவென சென்றவனை விசமமாய் பார்த்தவள் அவன் அவ் வீட்டின் கதவை எகிறி குதித்து தாண்டியதுமே
""மாமோய்" என்றாள் கத்தலாய்.

அதில் அவள் புறம் திரும்பியவன் கண்கள் மின்ன அவளை பார்க்க அவளோ சிரித்துக் கொண்டு தன் கைகளை சுட்டி ஓர் இடத்தைக் குறித்து காட்ட பார்வையை திருப்பியவன் கண்ட காட்சியில் கண்கள் விரிய அதிர்ந்தவன் திரும்பி அவளை பார்க்க

அவளோ "ஆல் தி பெஸ்ட் மாமோய்" என சிரித்துக் கொண்டே நகர அவன் இதழ்களோ "சண்டாளி இப்படி என்ன கோர்த்து விட்டுட்டியடி" என்றவன் பார்வை அங்கே நாய்கள் ஜாக்கிரதை என்ற பலகையையும் அதற்கருகே அரை மனிதனின் உயரத்திற்கு நின்ற மூன்று டோபோரமன் வகை நாய்கள் மீது படிந்திட தொண்டைக் குழி ஏறி இறங்க நின்றவன் மனசாட்சியோ 'டேய் சிவா இதுங்க கிட்ட மாட்ன மொத்தக் கறியையும் கவ்விடுங்களே..' என அலற அடுத்த கணமே 'உயிரே எப்படியாவது தப்பிச்சு ஓடி விடு' என்ற பின் பாட்டுடனே ஓட்டம் பிடித்தான்.

.....

கண்ணீர் வடிக்காத குறையாய் தன் சோகக் கதையை சொல்லி முடித்த சிவாவோ தன்னருகே கேட்ட சிரிப்பொலியில் பார்வையை திருப்ப அங்கே வயிற்றைப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்த தன் உடன்பிறப்பைக் கண்டு கொலைவெறியாகிப் போனான்.

"டேய் அண்ணா சிரிக்காதடா சிரிக்காத" என
அவனை அடிக்க மேலும் சிரித்தவன் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு "சரி அப்புறம் என்ன நடந்திச்சு.. எந்த சேதாரம் இல்லாம முழுசா திரும்பி வந்திருக்க" என அவன் தாடையை பிடித்து திருப்பியபடி கேட்க.

"பாவி.. அண்ணா வாடா நீயெல்லாம்.
நானே உயிரை கைல பிடிச்சு காடுமேடெல்லாம் புகுந்து தப்பி வந்திருக்கேன்.. நீ என்னடான்னா நான் முழுசா வந்திட்டேனு கவலப்படுறல" என்றான்.

"சில் ப்ரோ.. பொலிஸ்காரனா இருந்துட்டு இப்படி பயந்து ஓடி வந்துயிருக்கியேடா" என்றான் கேலிக் குரலில்.

"நீ எல்லாம் சொல்லுவடி நீ அந்த மூனையும் பார்த்து இருந்த அப்போ தெரிஞ்சியிருக்கும் உன் பொலிஸ் வீரமெல்லாம்" என்றவன்
"பாவி எப்படி என்னை நேக்கா மாட்டிவிட்டு சிரிச்சிக்கிட்டு ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு போனா தெரியுமா?.. வரட்டும் இனி நானும் அவ கூட பேசமாட்டேன் ராட்சசி திமிறு பிடிச்சவ" என கோபமாய் திட்டியபடி நிமிர்ந்தவன் அண்ணனின் பார்வை தன் பின்னே செல்வதைக் கண்டு ஜெர்க்காகி நின்றவன் பார்வையை திருப்ப கௌசிக்கின் இதழ்களோ பொங்கிய சிரிப்பில் விரிந்திட இதழ் மடித்து சிரித்தவன் "அவசரப்பட்டிடியே தம்பி பையா" என்றான்.

பத்ரகாளியாய் தன்னை முறைத்துப் பார்த்தவளை கண்ட சிவாவோ பாவமாய் அவளைப் பார்க்க அவளோ "திருந்தவே மாட்டல்ல.. ச்சேஹ் போடா" என்றுவிட்டு வேகமாய் வெளியேறிச் செல்ல அவனோ "ஏய் நில்லுடி சும்மா சொன்னேன்டி" என்று அவளை தொடர்ந்து போவதற்குள் அவள் கிளம்பி விட்டிருந்தாள்.

தலையை தொங்க போட்டுக் கொண்டே நின்றிருந்தவன் தோள் மீது கை வைத்த கௌசிக்கோ "போனால் போகட்டும் தோழா" என்று ராகமாய் இழுத்து பாட கொலை வெறியானான் சிவா..

"டேய் அண்ணா உன்னையே இருடா" என்று அவனை விரட்ட ஆரம்பிக்க அவன் பிடியில் சிக்காது ஓடினான் கௌசிக்.

வெகு நாள் கழித்து அண்ணன் தம்பி இருவருமே மனம் லேசாக தங்கள் வயது தாம் வகிக்கும் பதவி மறந்து சிறுபிள்ளையாய் விளையாடியவர்களின் ஆராவரக்குரல் கேட்டு வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் அறைவிட்டு வெளியேறினர்.

இருவரினதும் முகம் காட்டிய மகிழ்வை கண்டு வீட்டில் உள்ளவர்களின் மனமும் குளிர்ந்து தான் போனது.

"கடவுளே இதே சந்தோஷத்தோட என் பிள்ளைங்க வாழ்க்கையை அமைச்சிடு" மானசீகமாய் கடவுளிடம் வேண்டிக் கொண்டு அவர்களை பார்த்து நின்றார் கமலம்.

அண்ணன்கள் இருவரின் மகிழ்வைக் கண்ட திவ்யாவிற்கோ தானும் அவர்களோடு இணைந்து கொள்ள மனம் உந்தினாலும் தானிருக்கும் நிலமைக்கு தன்னால் முடியாது என தோன்ற அமைதியாய் நின்றிருந்தாள்.

அண்ணன் தம்பி இருவரும் ஓடிக் கொண்டே வாசல் பக்கம் செல்ல அப்போது வாசலில் வந்து நின்ற புதியவனைக் கண்டு ஓட்டம் தடை பட நின்றனர்.

கௌசிக்கின் பார்வை அவன் மீது ஆராய்ச்சியாய் படிய சிவாவோ யார் நீ? என்ற கேள்வியை கண்களில் தேக்கி அவனை பார்த்தான்.

இருவரின் பார்வையையும் புன்னகை முகமாய் எதிர் நோக்கியவன்
"ஹாய் ஐ ம் சக்தி" என தன்னை அறிமுகபடுத்திட அவனை அழுத்தமாய் பார்த்த கௌசிக்கின் பார்வையில் நொடியில் தடுமாறி தயக்கமாய் அவனைப் பார்த்தான்.

அவன் தடுமாற்றத்தில் கௌசிக்கின் இதழ்களோ மெலிதாய் விரிய "ஹாய் சக்தி.. உள்ளே வா" என்றான்.
உரிமையோடு தன்னை அழைத்தவனை ஆச்சர்யமாய் பார்த்த சக்தியோ உள்ளே நுழைய இப்போதும் யாரிவன் என்ற கேள்வியோடு நின்றிருந்தான் சிவா.

"அண்ணா யாரிது?" என்ற கேள்வியோடு அவனை பார்க்க.

"எல்லாம் நமக்கு வேண்டப்பட்டதவங்க தான் சிவா" என்றவன் வார்த்தையில் அழுத்தம் கூட்டி சொன்னதில் சக்தியோ தடுமாற்றத்தோடு அவனைப் பார்த்தான்.

சிவாவோ மீண்டும் அவனை கேள்வியாய் பார்க்க சக்தியோ "ஹாய் நான் காவேரி அக்காவோட ப்ரதர்" என்றான் .

சிவாவோ அண்ணன் முகம் பார்க்க அவனோ சாதாரணமாய் பார்த்து நின்றான்.

"அண்ணியோட ப்ரதரா ஆனா இதுவரைக்கும் உங்களை கண்டதே இல்லையே" என்றான்.

"அது நான் அப்ரோட் போயிருந்தேன் சோ என்ன பார்த்து இருக்கமாட்டிங்க" என்றான்.

"பார்த்து இருக்கமாட்டோம் ஓகே பட் கேள்வி கூடவா படக்கூடாது?" என்றான் இன்னுமே சந்தேகமாய்.

அதில் மெலிதாய் சிரித்த சக்தியோ "என்னுடைய ஹயர் ஸ்டடி எல்லாமே வெளி நாட்ல தான்.. நான் இந்தியா வந்து ஐஞ்சு வருசத்துக்கு மேலாகுது.. காவேரி அக்கா என் சொந்த அக்கா இல்ல என் அம்மாவோட பெரியம்மா பொண்ணோட பொண்ணுதான்.. அதாவது என் பெரியம்மா பொண்ணு.. என் அம்மா அப்பா என் கூட செட்டில் ஆனதுனால அவங்களால அக்கா கல்யாணத்துக்கு வரமுடியல" என்றான் மொத்த விளக்கமாய்.

சிவாவின் பார்வையோ அப்போதும் சந்தோகத்துடனே அவன் மீது படிந்தது.

சக்தி கூறியதைக் கேட்ட கௌசிக்கோ
தலையை இட வலமாக ஆட்டி சிரித்துக் கொண்டான்.

"ஆனா.." என ஏதோ பேச முயன்ற சிவாவின் தோளில் கையிட்டு அழுத்தியவன் "வீட்டுக்கு வந்தவங்கள வெளிய வெச்சே பேசிட்டு இருப்பீயா சிவா" என அவனை அடக்கிவிட்டு "நீ உள்ள வா" என சக்தியை அழைத்துக் கொண்டு மூவருமாய் உள்நுழைந்தனர்.

மூவருமாய் வர புதிதாய் நின்றவனைக் கண்டு வீட்டினர் யாரென்பது போல் பார்த்து நிற்க அதே நேரம் மாடியிலிருந்து இறங்கி வந்த கஸ்தூரியோ தம்பியைக் கண்டு

"ஹேய் சக்தி.." என்ற மகிழ்ச்சியுடன் படிகளில் இறங்கி அவனை நோக்கி வந்தாள்.

"வா சக்தி.. எப்பிடி இருக்க எங்க சித்தி சித்தப்பா எல்லாம் வரலையா தனியாவா வந்திருக்க?" நீண்ட நாள் கழித்து தம்பியை கண்ட மகிழ்ச்சியில் பேசிக் கொண்டே சென்றவளை இடைநிறுத்தியது சிவாவின் குரல்.

"ஏன் ண்ணா இந்த இன்ஸ்டான்ட் தம்பில ஏதும் உள்குத்து இருக்குமோ" என வேண்டுமென்றே சத்தமாய் கேட்க காவேரியின் பார்வையோ அவனை முறைத்தது.

"பயந்திட்டேன் பயந்திட்டேன்" என கேலிபோல் கூறியவனை மேலும் முறைத்தவள் சக்தியை அழைத்துக் கொண்டு செல்ல

சிவாவோ "என்க்கேதோ தப்பாவே தோணுதுடா அண்ணா" என்றவன் கௌசிக்கை பார்க்க அவனோ கண்சிமிட்டியபடி அவனை அழைத்துக் கொண்டு உள்நுழைந்தான்.

காவேரியோ சக்தியை அழைத்து சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்திட அனைவரிடமும் புன்னகையோடும் மரியாதையோடும் பேசினான் சக்தி.

அவனையே பார்த்த சிவாவோ "பரவால ஓரளவு நல்லவன் தான் போல" என கௌசிக்கின் காதில் கிசுகிசுக்க அவன் பார்வை முழுவதும் சக்தியே கூர்மையாய் துளையிட்டது.

அனைவருடம் பேசியபடி அமர்ந்திருந்த சக்திக்கோ தன்மீதே படிந்திருந்த கௌசிக்கின் பார்வையில் தடுமாற்றம் வந்தாலும் அதை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு சக்தியை ஓய்வெடுக்குமாறு பூரணி கூற அவனை அழைத்துக் கொண்டு சென்றாள் காவேரி.

"கிருஷ்ணா.." என்ற பூரணியின் அழைப்பில் அவர் முன் சென்றவன் "என்ன அத்தை" எனக் கேட்க அவரோ அங்கே ஓரமாய் நின்ற திவ்யாவை பார்வையால் சுட்டி காட்டியவர் "காலையிலயிருந்தே விஷ்வாவ காணலப்பா" என்றார் கவலையாய்.

"விஷ்வா வெளில போயிருக்கான் அத்தை திருகிட்ட சொல்லிட்டு தான் போனான் திரு என்கிட்ட சொல்லிட்டான்" என்றான் அவர் கவலை போக்கு விதமாய்.

"சரி கண்ணா.. அவ நேத்துலயிருந்து எதுவுமே சாப்டலனு அண்ணி கவலைப்பட்டு சொல்லிட்டே இருந்தாங்க அவள சாப்பிட வைப்பா" என்றார்.

"நான் பார்த்துக்குறேன் அத்தை என்றவன் அங்கே ஓரமாய் ஒதுங்கி நின்ற தங்கையை பார்த்துவிட்டு சிவாவை பார்த்தான்.

அண்ணனின் பார்வையில் புரிந்தவன் போன்று தங்கையை நோக்கிச் சென்றவன் அவள் என்னவென்று நிமிர்ந்து பார்க்கும் முன்னே குழந்தையென அவளை கையில் ஏந்தியிருந்தான் சிவா..

"அய்யோ டேய் அண்ணா விடுடா" என கத்திக் கொண்டே அலறியவளின் அலறலை பொருட்படுத்தாதவன் "திவி குட்டி உனக்கு தான் சின்ன வயசுல என் மேல உப்பு மூட்ட சவாரி செய்றேன்னா பிடிக்குமே .. வா ஒரு ரைட் போலாம்" என அவளை சுழற்றி எடுக்க தலை சுத்திப் போனாள் பெண்.

"அய்யோ எரும அண்ணா விடுடா தல சுத்துது" என கத்தியவள் பட் பட்டென அவன் தோளில் அடிக்க அவனோ அசால்டாய் அவளை தூக்கிப் பிடிக்க அலறவே தொடங்கினாள்.

"அண்ணா இந்த தடியன் கிட்ட இருந்து என்ன காப்பாத்துண்ணா" கைகட்டி வேடிக்கை பார்த்த கௌசிக்கை பார்த்து கத்தியதுமே அவள் தன்னை அழைப்பதற்கென காத்து நின்றவனும் அவர்களை நோக்கிச் சென்றவன் சிவாவிடமிருந்து அவளை பிரித்து தன் கையணைவுக்குள் நிறுத்த அவளோ தலை சுத்தலில் அண்ணன் தோள் சாய்ந்தாள்.

நேற்று முழுக்க உண்ணாத சோர்வோடு இதுவும் சேர்ந்து கொள்ள அவனில் முழுதாய் சாய்ந்தவள் "பசிக்குதுண்ணா" என வாய்விட்டே கேட்டதும் அண்ணன்கள் இருவருக்கும் சட்டென கண்கள் கலங்கிப் போனது.

சிவாவோ வேகமாய் சென்று உணவை எடுத்து வந்தவன் அவளுக்கு ஊட்ட அவளோ அந்த நிலையிலும் அவனை முறைத்துக் கொண்டே உணவை வாங்கியவள் நறுக்கென்று அவன் கையை கடித்து வைத்தாள்.

"ஸ்ஸ் பிசாசு.. கடிக்காதடி" என்றவனிடம் "அப்படித்தாண்டா கடிப்பேன்" என்றுவிட்டு அவன் ஊட்ட ஊட்ட அவன் கையை கடித்து தின்றாள் அந்த அண்ணன்களின் பாசக்கார செல்ல ராட்சசி.

ஒரு அண்ணனின் தோளில் வாகாக சாய்ந்து கொண்டே மறு அண்ணனின் கையால் உணவு உண்டவளை பார்த்து மற்ற அனைவருக்கும் மனம் நிறைந்தது.

அவளின் கவலை போக்கும் மருந்து மூத்த அண்ணனின் ஆறுதலும் சின்ன அண்ணனின் சேட்டையும் தானே.
சிறு வயது முதல் கொண்டு அவர்களுக்குள் நடப்பது இதுவே.
கோபமோ கவலையோ சோகமாய் இருக்கும் தங்கையை சீண்டி அவளை வெறுப்பேற்றி அவள் கவலையே மறக்கச் செய்பவன் சிவா என்றால்.
சிவாவின் சேட்டையை கூறி முறைப்படுபவளுக்கு ஆறுதலாய் தோள் கொடுப்பவன் கௌசிக்.

இதுவரை காலமும் அவளின் உலகமே அவர்களாய் இருக்க இனி அவளின் உலகத்தில் அவளவனுக்கு இடம் கொடுப்பாளோ என்னவோ அவளே அறிவாள்.

வயிறும் மனதும் நிறைய உண்டு முடித்தவள் நிமிர்ந்து தன் அண்ணன்களை முறைக்க இருவருமே இரு காதுநுனியை பிடித்துக் கொண்டு கெஞ்சலாய் தங்கையை பார்க்க அதைப் பார்த்தவளுக்கோ கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் தான் போனது.

இருவரின் கரம் பற்றி கொண்டவள் "ஸாரி ண்ணா" என்றாள் கண்கலங்க.

அவளை அணைத்து தலை வருடிய கௌசிக்கோ அமைதியாய் இருக்க சிவாவோ "ஓய் என்ன ஒரு ஸாரியோட நிறுத்திட்ட.. இங்கப் பாரு ஒழுங்கு மரியாதையா கால்ல விழுந்து மன்னிப்பு கேளு.. உனக்காக உன்னோட விசப் பல்லால கடி வாங்கினவன் நானு.. பாரு என் ஐஞ்சு விரலும் எப்பிடி பஞ்சராக்கி வெச்சியிருக்கேன்னு" என காச் மூச்சென்றவனை மொத்தத் தொடங்கினாள் அவள்.

"தடியா நான் ஒரே ஒரு தடவை தான் கடிச்சேன் அதுக்கப்புறம் நீயா பில்டப் கொடுத்துட்டு இப்போ கால்ல விழனுமா உனக்கு" என கேட்டு கேட்டே அவனை துவைத் தெடுத்தாள்.

நிமிடத்தில் அவள் கவலைகளை முற்றாய் களைத்துவிட்டனர் அண்ணன்கள் இருவரும்.

இதுவரை நடந்த அனைத்தையும் பார்த்து நின்ற மதிக்கோ மூவரின் ஆத்மார்த்தமான உறவை கண்டு அத்தனை நெகிழ்ச்சி மனதினுள்ளே எழ தனக்கும் இது போன்ற அன்பு கிடைக்க வேண்டும் என மானசீகமாய் கடவுளிடம் வேண்டுதல் வைத்து அவர்களை பார்த்தபடி நின்றிருந்தாள்.

தன்னவளின் பார்வையை உணர்ந்தானோ கௌசிக்கும் அவள் புறம் பார்வையை திருப்பியவன் கண்சிமிட்டி விட்டு திரும்பிக் கொள்ள அவன் திடீர் செய்கையில் திருதிருவென முழித்தவள் தலை குனிந்து கொண்டாள்.

அதே சமயம் வாசலில் அண்ணன் தங்கை மூவரையும் பார்த்து நின்ற விஷ்வாவிற்கோ தன்னவளின் முகத்திலிருந்த சிரிப்பைக் கண்டு அவன் மனதை சூழ்ந்த கவலைகள் பறந்தோட அவளையே இமைக்காது பார்த்து நின்றவனுக்கு அவன் தங்கை நினைவும் எழாமலில்லை.

தங்கையின் நினைவு எழவும் அவளோடு பேச வேண்டும் என தனக்குள் எண்ணிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.





தொடரும்...

 

Habi

Moderator

அத்தியாயம் - 26

தன்னவளின் புன்னகை முகத்தை ரசித்தவாறே உள்நுழைந்த விஷ்வாவைக் கண்ட பூரணியோ "வாப்பா விஷ்வா எங்கப்பா போன" என அவனிடம் கேட்டதும் இத்தனை நேரமிருந்த புன்னகை முற்றாய் மறைந்திட முகம் சுருங்கிப் போனாள் திவ்யா.

அவளின் முகமாற்றத்தை பார்த்தபடியே நுழைந்தவன் பூரணியை பார்த்து புன்னகைத்து "கொஞ்சம் வெளில வேல இருந்திச்சு பெரியம்மா அதான் போய்ட்டு வந்தேன்" என்றான்.

"ம்ம் சரிப்பா நீ குளிச்சுட்டு வா எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்டலாம் " என்றவர் அங்கே முகத்தை உர்ரென்று வைத்தமர்ந்திருந்த சிவாவிடம் "சிவா விஷ்வாக்கு உன் ட்ரெஸ் எது சரி கொடுப்பா" என்றார்.

"என்னோட ட்ரஸ் எல்லாம் கொடுக்க முடியாது" வெடுக்கென்று கூறிவிட்டு அமர்ந்திருந்தவனை கண்டிப்பான குரலில் அழைத்தார் கமலம்.

"சிவா.. அவரு நம்ம வீட்டு மாப்ள இப்பிடித்தான் மரியாதையில்லாம நடந்துக்குவியா?" என்றதும் சிவா ஏதோ பேச வர அவனை முந்திக் கொண்டு "ம்மா இப்போ எதுக்கு அண்ணாவ திட்ற" மூக்குவிடைக்க இதற்கெல்லாம் காரணமான கணவனை முறைத்தாள் திவ்யா.

அவளின் முறைப்பில் அவன் மனசாட்சியோ "பாசமலர் பொங்கிட்டா இனி எனக்கு சங்கு தான்" என கேலியாய் கவுண்டர் கொடுக்க தன்னை முறைத்தவளை மேலும் கோபப்படுத்த விரும்பாதவனாய் "அத்த ட்ரெஸ் எல்லாம் இருக்கு நேத்து நைட்டே திரு எனக்கு ட்ரெஸ் எடுத்து கொடுத்துட்டாரு" என்றான்.

"ஆமாம்மா கௌசிக் சொல்லி ட்ரெஸ் எல்லாம் நைட்டே ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டேன்" என்றான் திரு.

"சரி விஷ்வா நீ குளிச்சுட்டு வா சாப்டலாம்" என்றதும் அவனும் சரியென்றவன் அங்கே அமர்ந்திருந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

திவ்யாவின் நடவடிக்கை கமலம் பூரணி இருவருக்கும் கவலையை கொடுத்தாலும் எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தனர்.

சிறிது நேரத்தில் விஷ்வாவும் வர அனைவரும் காலை உணவு உண்ண அமர்ந்து கொண்டனர்.

"காவேரி சக்தி எங்க? சாப்பிட அழைச்சிட்டு வரலையா?" என்ற பூரணியிடம்
"இல்லத்த ட்ராவல் பண்ணி வந்த டயர்ட்டா இருக்காம் கொஞ்சம் தூங்கி எழுந்து சாப்பிடுறேன்னு சொன்னான்" என்றாள்.

"ம்ம் சரி" என தலையசைத்தவர் கௌசிக் அங்கிருந்த வேறொரு இருக்கையில் அமரப் போவதைக் கண்டு அவனை அழைத்தார்.
"க்ரிஷ் கண்ணா இங்க வந்து உட்காருப்பா" என அந்த குடும்பத் தலைவரின் இருக்கையை கைகாட்டியவர் அவனை அழைத்துச் சென்று அங்கே அமர வைக்க முயல அவனோ சிறு புன்னகையோடு அவரை பார்த்தான்.

"இனி இந்த அரண்மனை ராஜா நீ தான் கண்ணா இந்த வீட்டு முழு நிர்வாக அதிகாரம் உனக்கு தான்" என்றிட

அவனோ "நான் எப்போவும் இந்த வீட்டு இளவரசனா இருக்கத்தான் அத்தை ஆசைப்படுறேன் என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த அரண்மனைக்கு ராணியா அப்பாவுக்கு அடுத்ததா நீங்க இருக்கனும். இத்தனை வருஷமா இந்த வீட்டை கட்டிக் காப்பாத்தின உங்களுக்கே இந்த இடம் சொந்தம்" என்றவன் பூரணி மறுக்க மறுக்க அவரை அங்கு அமர வைத்து அங்கே அமர்ந்திருந்த மதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

"அத்தை என்ன பொறுத்தவரைக்கும் இந்த அரண்மனைக்கு தான் நான் ராஜாவா இருக்க ஆசைப்படுறேன்" என மனையாளின் தோள் அணைத்துக் கூற அவளோ அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து பின் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

அனைவரும் அவர்களை மனநிறைவோடு பார்க்க மோகன்ராஜ்ஜிற்கோ உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.
இருந்தும் தன் கோபத்தை காட்ட முடியாது அமைதியாய் அமர்ந்திருந்தார்.

அனைவருக்கும் உணவு பரிமாறப்பட சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டனர்.

அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க அவர்களோடு அமர பிடிக்காதவராய் மோகன்ராஜ்ஜோ மகனை அழைத்துக் கொண்டு வெளியேற போக அவர்களை பார்த்த பூரணியோ கௌசிக்கை அர்த்தப் பார்வை பார்த்திட விழி மூடித் திறந்தவன் அவர்களை தடுத்து நிறுத்தினான்.

"உங்க இரண்டு பேர்கூடவும் பேசனும் வந்து உட்காருங்க" என்றதும் என்ன செய்யப் போகிறானோ என்ற பயம் தொற்றிக் கொள்ள அமைதியாய் வந்தமர்ந்தனர் இருவரும்.

பூரணியோ பேச்சை ஆரம்பித்தார்.
"இங்கே இந்த வீட்ல நிறைய குழப்பங்கள் நடந்து இருக்கு அதற்கெல்லாம் காரணம் நீங்க தான் நடந்தது நடந்து முடிஞ்சு இனி அதைப் பத்தி பேச வேணாம்னு கிருஷ்ணா சொன்னதுனால அத பத்தி நான் பேசல.. ஆனா செய்த தப்புக்கு கட்டாயம் தண்டனை இருக்கு என்றவர் கௌசிக்கை பார்க்க அவனோ இருவரையும் அழுத்தமாய் பார்த்து நின்றவன்.
எந்த பண மோகத்தால இத்தனை சூழ்ச்சி செய்தீங்களோ அந்த பணத்துல சொத்துல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எந்தவொரு அதிகாரத்துலையும் உங்க தலையீடும் இருக்கக் கூடாது" என்றதும்

அவனின் கூற்றில் அதிர்ந்த மோகன்ராஜ் "ஏன் .. ஏன் எனக்கு உரிமையில்லை" என்ற கேள்வியோடு மனைவியை பார்க்க அவரோ அவர் முகம் பார விரும்பாதவராய் "இனி குடும்பத் தொழில்ல உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்ல இனி அதெல்லாம் திருகிட்ட ஒப்படைச்சிடுச்சு நீங்க ஒதுங்கிடுங்க.. உங்க செலவுக்கு நீங்க உழைச்சிக்கொங்க" என்றதும் கோபத்தோடு ஏதோ பேச வந்தவரை தடுத்து "இது என் அப்பா அண்ணன் உழைச்ச சொத்து இதுல பங்கு கேட்க உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.. நீங்க பண்ண தப்புக்கு உங்கள கழுத்த பிடிச்சு வெளியே தள்ளியிருக்கனும் ஆனா என்ன பண்ண இத்தனை வருசம் உங்களோட வாழ்ந்து தொலைச்சிட்டேனே அதனால பொறுத்து போக வேண்டியதா இருக்கு.." என வெறுப்பாய் கூறியவரின் பேச்சை மீறி அவரால் எதுவும் பேசமுடியாது போக அமைதியாய் மனைவியை வெறித்தவர் அங்கிருந்து வெளியேறினார்.

பாரியோ அன்னையின் பேச்சில் கோபம் வர "அப்போ இந்த சொத்துல எனக்கும் உரிமையில்லையா.." என கேட்க.

பூரணியோ "உன் அப்பன் சொத்து தான் உனக்கு உன் அப்பாகிட்டயே போய்க் கேளு..அவரோட பாவச் செயல்லையும் பங்கு போட்டல்ல இப்போ இந்த தண்டனையையும் சேர்ந்தே அனுபவி" என்றிட அவரை முறைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறிச் சென்றான்.

போகும் இருவரையும் பார்த்த பூரணிக்கோ கவலை மனதை அரித்தாலும் இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்.. கஷ்டபட்டாலாவது புத்தி வரட்டும் என்று எண்ணி அவர்களுக்காக இறங்கிய மனதை இறுக்கிக் கொண்டார்.

கௌசிக்கிற்கும் அத்தையின் மனம் புரிந்தாலும் அவ்விருவருக்கும் காலம் சரியான பாடம் கற்பிக்கும் என எண்ணிக் கொண்டவன் அங்கே நின்றிருந்த தன் சித்தி ஆனந்தியிடம் "சித்தி தீக்ஷன் தீக்ஷி எப்போ வறாங்க" கேட்க.. அவரோ "இன்னைக்கு நைட் ஊருக்கு ரீச் ஆகிடுவாங்கன்னு தீக்ஷி போன் பண்ணியிருந்தாப்பா" என்றார்.

தீக்ஷன் தீக்ஷி... கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆனந்தி தம்பதியினரின் இரட்டை வாரிசுகள் மேற்படிப்பிற்காக பெங்களூர் சென்றவர்கள் இதோ தங்கள் படிப்பை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

அவர் பதிலில் தலையசைத்தவன் முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்க சிவாவை அழைத்துக் கொண்டு வெளியேறிச் சென்றான்.

இங்கு சக்தியோ அறையினுள் முடங்கிக் கிடந்தவனுக்கு நெஞ்சமோ பதட்டத்தில் அடித்துக் கொண்டது.

தலையை கோதிக் கொண்டே குறுக்கும் நெடுக்குமாய் அறைக்குள் நடமாடியவன் போன் சத்தத்தில் அதை எடுக்க திரையில் ஒளிர்ந்த பெயரில் உடனே அழைப்பை ஏற்றிருந்தவன் மறுபுறம் பேசுமுன்னரே "நீங்க சொன்ன போல இங்க வந்துட்டேன்.." என்றான்.

மறுபுறத்தில் என்ன கூறப்பட்டதோ அவன் முகம் சுருங்க "ஓகே சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்" என்றவன் அழைப்பை துண்டித்து கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

அவன் மனதிலோ தான் இங்கு வந்த காரியம் நல்லபடியாய் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதல் இருக்க அதற்கான வேலையை ஆரம்பித்தான்.

.......

அறைக்குள் நுழைந்தது முதல் தன்னையே விழுங்கும் பார்வை பார்த்திருந்த விஷ்வாவின் பார்வை வீச்சில் கோபமும் நாணமும் ஒருங்கே பெண்ணவளை தாக்கிய போதிலும் உணர்வுகளை அடக்கிக் கொண்டே தன் வேலையில் மூழ்கியிருந்தவளுக்கோ ஒரு கட்டத்திற்கு மேலே அவனின் ஆளை ஊடுருவும் பார்வையில் அசௌகரியமாய் நெளிந்தவள் அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

அவனா அசருபவன்.. அவள் முறைப்பை தூசி போல் தட்டியவன் தன்னை முறைப்பவளை நோக்கி மந்தாசகப் புன்னகையொன்றை வீசி கண்சிமிட்டி சிரித்திட அவளுக்கோ கோபம் சுர்ரென்றது.

"எதுக்கு இப்போ என்னையே பார்த்துக்கிட்டு இருக்க எழுந்து வெளியே போ" என விரட்டினாள்..

அவனோ "இதென்ன கொடுமை கட்டின பொண்டாட்டியை நான் பார்க்கேன் இதுல என்னம்மா தப்பு இருக்கு" என்றவன் குரலில் நக்கலும் குறும்பும் ஏகத்திற்கும் தெறிக்க அவளோ பல்லைக் கடித்தாள்.

எதுவுமே நடவாதது போன்று காதல் கொண்ட கணவனாய் தன்னையே பார்வையால் காதல் தொல்லை செய்தவனை காயப்படுத்த எண்ணியவளாய் "ம்ம் பொண்டாட்டியா?" இதழ் வளைய ஒற்றை புருவமுயர்த்திக் கேட்டவள் தோரணையே அவள் ஏதோ வில்லங்கமாய் பேசப் போகிறாள் என்பதை உணர்த்த அவளை வெறித்தான்.

அவன் எண்ணத்தை பொய்யாக்காதவளாய் "இதோ என் கழுத்துல தொங்குதே இத வெச்சு சொல்றியா? " கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை தூக்கிக் காண்பித்தவளாய் கேட்டவள் "ம்ம் இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லை இதற்கு முதல் இந்த உரிமையை நான் தூக்கி எறிஞ்சவ தான்.. இப்போவும் தூக்கி எரிய முடியும்.. கழுத்துல தாலி கட்டிட்டா மட்டும் உரிமை வந்திடுமா" நக்கலாய் கேட்டிட
விஷ்வாவிற்கோ அவள் நக்கலில் கோபம் வந்தாலும் கைமுஷ்டி இறுக்கி தன்னை அடக்கிக் கொண்டவன் அவளை நெருங்கி
"முதல்வாட்டி உன் இஷ்டத்துக்கு விட்டுடேன்னு இப்போவும் அப்பிடியே விட்டுடுவேன்னு நினைக்காத.." என்றவனின் சீற்றக் குரலில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனும் அவளைப் பார்த்தவன் "இன்னொருவாட்டி இது உன் கழுத்துல இருந்து இறங்கனும்னா அது நான் செத்த பிறகு தான் நடக்கும். ஒருவாட்டி உன்ன இழந்துட்டேன் மறுபடியும் உன்ன இழக்க மாட்டேன்டி.. சீக்கிரம் என் தப்ப மன்னிச்சுடுடி" என்றவன் நொடியில் அவள் நெற்றியில் இதழ் பதித்து அங்கிருந்து வெளியேறிட அவன் வார்த்தை தந்த தாக்கத்தில் கண் கலங்க நின்றிருந்தாள் திவ்யா.
அவள் நெற்றியில் பதித்த அவனின் ஈர முத்தம் அவள் நெஞ்சை குளிர்விக்க கண்கள் கலங்கியவள் "சீக்கிரமாவே உன்ன மன்னிக்கனும்னு தான் ஆசப்படுறேன்.. விச்சு.. ஆனா என்னால முடியலையே.. நீ மட்டும் என் லைப் விட்டு போகாம இருந்திருந்தா என் வாழ்க்கையோட சில கசப்புகள நடக்காம தடுத்திருக்கலாமே... ஏன்டா என்ன விட்டுப் போன.. ஏன்? ஏன்?" தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவள் சத்தமின்றி கண்ணீர் வடித்தாள்.

......

சிவாவை அழைத்துக் கொண்டு தங்களுக்கு சொந்தமான அவுட்ஹவுஸிற்கு வந்து சேர்ந்தான் கௌசிக்.

"எதுக்குண்ணா இங்க வந்திருக்கோம்" என்றவனுக்கு பதில் கூறாது அவனை அழைத்துக் கொண்டு உள் நுழைந்தான் கௌசிக்.

அங்கு அவர்களுக்கென காத்திருந்தனர் இருவரும் இவர்களைக் கண்டு சல்யுட் அடித்தனர்.

அவர்களுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்த கௌசிக்கோ அவர்களை அமரச் செய்து தானும் அமர்ந்தவன் பேச்சை ஆரம்பித்தான்.

"ரவி நான் சொன்ன வேலைய முடிச்சிட்டிங்களா?" என்று அமர்ந்திருந்த ஒருவனை நோக்கி கேட்டிட அந்த ரவி என்பவனும் "ஆமா ஸார் நீங்க சொன்னது போலவே விசாரிச்சிட்டேன்.." என்றவன் தான் திரட்டிய தகவல் அடங்கிய கோப்பை அவனிடம் நீட்டினான்.

அதை வாங்கிப் படித்துவிட்டு சிவாவிடம் நீட்டிட அவனும் புரியாத குழப்பத்துடன் அதை வாங்கிப் படிக்க அவன் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தது.

கௌசிக்கோ அங்கே அமர்ந்திருந்த மற்றையவனிடம் "தினேஷ் எனக்கு இரண்டு நாளைக்குள்ள ஒருத்தர பத்தின புல் டீடெய்ல்ஸ்ஸூம் வேணும்.. உங்களால கலெக்ட் பண்ணி தர முடியுமா?" என்க..

அவனோ "கண்டிப்பா ஸார் யாருன்னு சொல்லுங்க டீடெய்ல்ஸ் எடுத்துடலாம்" என்றதும் அவனும் யார் எந்த ஊர் என்ற தகவலைக் கூறினான்.

"ஓகே ஸார் டூ டேய்ஸ்ல நீங்க கேட்ட எல்லா டீடெய்ல்ஸ்ஸும் உங்க கைக்கு வரும்"

"ஓகே தினேஷ்... அப்புறம் ரவி ரொம்ப தைங்ஸ் நான் கேட்டதும் இந்த ஹெல்ப் பண்ணதுக்கு"

"அய்யோ ஸார் இதுக்கு நீங்க தைங்ஸ் சொல்ல வேண்டியதே இல்ல.. இது நான் குருமூர்த்தி ஸாருக்கு செய்ய வேண்டிய நன்றிக் கடன்.. ஸாரால தான் நான் இந்த நிலமைல இருக்குறதே.. அவரப் போல ஓர் நியாயமான அதிகாரியோட இழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டி என்னாலான சிறு உதவி ஸார்.." என்றவன் அங்கிருந்து விடைபெற்று செல்ல மற்றையவனும் அங்கிருந்து வெளியேறினான்.

கையில் ஏந்திய கோப்பில் பார்வை பதித்திருந்த சிவாவோ நிமிர்ந்து கௌசிக்கை பார்க்க அவன் எண்ணவோட்டத்தை அறிந்தவனாய் "எனக்கு குருப்பாவோட டெத்ல சந்தேகமா இருக்கு சிவா" என்றதும் சிவாவோ அண்ணனை விளங்காத பார்வை பார்த்தான்.

"என்ன ண்ணா சொல்ற.. அது ஆக்ஸிடென்ட்னு தானே பைல் பண்ணி கேஸ் க்ளோஸ் பண்ணாங்க.. அப்பிடியிருக்கும் போது இதுல என்ன சந்தேகம் இருக்கு" என்றவனை அழுத்தமாய் பார்த்தவன் இல்லையென்பது போல் மறுப்பாய் தலையசைத்தான்.

"இல்ல சிவா இதுல ஏதோ ஒரு புதிர் இருக்கு.. குருப்பாவோட டெத் ஆக்ஸிடெண்ட் இல்ல.. ப்ளான் மேர்டர்.. நிச்சயமா அது திட்டமிடப்பட்ட ஒரு கொலை தான்" ஆணித்தரமாய் கூறியவனின் கூற்றில் அதிர்ந்து தான் போனான் சிவா..

எதிலும் தெளிவோடும் நிதானத்தோடும் அனுகும் அண்ணனே இத்தனை உறுதியாய் கூறுகின்றான் என்றால் ஏதோ ஒன்று இருப்பதாக எண்ணியவனுக்கு தன்னவளை எண்ணி கவலை கொண்டது அவன் மனம்.

தங்கள் தந்தையின் இழப்பையே தாங்கிக் கொள்ள முடியாத கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு அடுத்த இடியாக வந்து சேர்ந்தது தான் சிவாங்கியின் தந்தை குருமூர்த்தியின் இறப்பு..

கௌசிக்கின் திருமண நிச்சயிக்கப்பட்ட நாள் தொடங்கி வேலை விசயமாக வெளியூர் பயணம் சென்றிருந்தவர் திருமணம் நின்று நண்பன் இறந்துவிட்டான் என்ற செய்தி அறிந்தோ அறியாமலோ தான் சென்ற வேலையை முடித்துவிட்டு நீண்ட நாட்களின் பின் ஊர் திரும்பியவரின் உயிரைக் கைப்பற்றிச் சென்றது எதிர்பட்ட லாரி..
விபத்து நடந்த இடத்திலே அவர் உயிர் நீத்திருக்க ட்ரைவரோ பலத்த காயத்தோடு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருந்தான்.
அதன் பின் அவன் மூலமே தகவல்கள் அனுப்பப்பட்டு குருமூர்த்தியின் இறப்பை அறிந்து கொண்டனர் குடும்பத்தினர்.

ஒருவரின் இழப்பிலிருந்து மீள்வதற்குள்ளாகவே அடுத்தவரின் இழப்பும் மொத்த குடும்பத்தையும் ஆட்டி வைத்திருந்தது. அதிலும் தாயுமானவாரான தந்தையின் இழப்பில் மொத்தமாய் ஒடிந்து போனாள் சிவாங்கி.. தாயுமின்றி தந்தையுமின்றி அநாதையாய் தவித்து நின்றவளை தாயுமானவனாய் ஆதரவாய் அணைத்துக் கொண்டவன் கௌசிக். அவனுக்கு அவளும் ஒரு தங்கையல்லவா..

முடிந்தளவு கௌசிக்கின் அன்பினாலும் சிவாவின் காதலினாலும் மெல்ல மெல்ல தன் கூட்டை விட்டு வெளியேறி வந்த பெண்ணவளிடம் மீண்டும் அவள் தந்தையின் இறப்பு தற்செயல் இல்லை திட்டமிடப்பட்டது என்ற விடயம் தெரிய வந்தாள் என்னாகுமோ என்ற பயம் மனதை அரிக்க அண்ணனை கலக்கத்தோடு பார்த்தான் சிவா.

அவன் கலக்கம் புரிந்தவனும் அவன் தோள் தட்டி "சிங்கிக்கு இத பத்தி தெரியாம பார்த்துக்கலாம் சிவா.. கவலப்படாத" என்றவன் சிறிது நேர யோசனையின் பின் சிவாவின் கரத்திலிருந்த கோப்பினை விரித்து படித்தவன் விழிகள் சுருங்கி மீள "கிட்நாப்பிங் இன்வெஸ்டிகேஷன்ஸ்" இதழ்கள் முணுமுணுக்க யோசனையாய் தாடையை தடவினான்.

அண்ணனின் யோசனை முகம் கண்ட சிவாவோ "என்னாச்சு" என்க. அவனோ "குருப்பாவோட டெத் க்கும் அவரு லாஸ்ட்டா இன்வெஸ்டிகேட் பண்ண கேஸுக்கும் இடைல ஏதோ ஒன்னு கனெக்ட் ஆகுது சிவா.. அந்த கேஸ ரீஓபன் பண்ணா நிச்சயமா நம்ம கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்" என்றவன் அடுத்து அதற்கான வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கினான்.


தொடரும்...


 

Habi

Moderator
அத்தியாயம் - 27


காலையில் சிவா பேசிய பேச்சில் உச்சகட்ட கடுப்பில் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த சிவாங்கியோ வாய் ஓயாமல் அவனையே திட்டித் தீர்த்தாள் பெண்.

கைகள் வழமை போலவே அவள் வேலைகளை செய்தாலும் வாயும் ஓயாது தன்வேலையை செவ்வனே செய்தது.

"வரட்டும் இனி பப்பு சோப்புனு சொல்லிக்கிட்டு பிராடு பிராடு..திருந்தவே மாட்டான் பிராடு பய " திட்டிக் கொண்டே வேலைகளை செய்து முடித்தவள் ஓய்வாய் அமர வீட்டின் மணியோசையில் எழுந்து கதவைத் திறந்தாள்.

அவனே தான்.. கௌசிக்கிடம் பேசிவிட்டு தன்னவளைக் காண ஓடோடி வந்துவிட்டான் சிவா.

முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து நின்றவனை கண்டு முறைத்தவள் கதவை அடைத்திட முயல
அவனோ "ஹேய் பப்பு ஸாரிடி" என்றான் அவசரமாய்.

அவனை முறைத்தவள் "இப்போ எதுக்கு ஸார் இங்க வந்து ஸாரி கேக்குறீங்க" என்றாள் மார்புக்குக் குறுக்காக கையை கட்டியவாறு.

"பப்பு ப்ளீஸ்டீ உள்ள விடு உட்கார்ந்து பேசலாம்" கெஞ்சலாய் கேட்டவனைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டவள் "தெரியாதவங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விட முடியாது" என்றாள் வேண்டுமென்றே.

"நான் தெரியாதவனாடி உனக்கு?" அவள் வார்த்தையில் அவனுக்கு கோபம் வந்தது.

அவளோ அவனை முறைத்து "ஆமா நீ தெரியாதவன் தான்" என்றாள் வீம்புடன்.

"இங்கம் பாரு பப்பு வேணாம்டி எனக்கு கோபம் வருது உள்ளே விடு ரிலாக்ஸ்ஆ பேசலாம்" என உள்ளே நுழையப் போனவனின் நெஞ்சில் கைவைத்து தடுக்க அதில் நிலை தடுமாறியவன் கீழே விழுந்தான்.

அவள் விழுவான் என எதிர்பாராதவள் பதறியபடி "அய்யோ சிவா" என அவன் கை பிடித்து தூக்க முயல அவளை தடுத்தவன் அவள் கரத்தை தட்டிவிட்டு எழுந்தான்.

"சிவா ஸாரி தெரியாம" என்றவளை ஒரு பார்வை பார்க்க அவள் வாய் மூடி பார்வையாலே அவனிடம் கெஞ்சினாள்.

"வார்த்தையால மட்டுமில்லாம செயலாலயும் உன் வீட்டுக்குள்ள வர எனக்கு உரிமையில்லைனு சொல்லிட்டல" வெற்றுக் குரலில் கூறியவன் அவளை வெற்றுப் பார்வை பார்த்தான்.

காதலில் கோபமும் ஈகோவும் கூட்டணி சேர்ந்தாள் பாதிப்பு என்னவோ காதலை சுமக்கும் சிறு இதயத்திற்கே.
சிவாங்கியின் செயல்களில் சிவாவின் ஆண் என்ற கர்வம் முளைக்க அவன் ஈகோவும் விழித்தது.

"அப்பிடியில்ல சிவா நான் விளையாட்டா மெதுவாத்தான் தள்ளிவிட்டேன் நீ தான் விழுந்துட்ட.." அவனின் வெற்று குரலில் மனம் பதறியவளாய் அவள் கூறிட

அவனோ விடாக்கொண்டனாய் "அப்போ நான் நோஞ்சான்னு சொல்ல வர அப்பிடித்தானே" என்றான்.

"ஹேய் நான் அப்பிடி சொல்ல சிவா" என்று அவசரமாய் மறுத்தவள் அவனிடம் பேச முயல அவனோ சற்று காட்டமாய் "தெரியும்டீ எனக்கு.. உன் காலையே நாய் குட்டி மாதிரி சுத்தி சுத்தி வர என்னை பார்த்தா உனக்கு இளக்காரமா போய்டுச்சு அதான் என்னை இப்பிடியெல்லாம் அவமானப்படுத்துற காலையில என்னடான்னா நாயை விட்டு துரத்த வெச்ச இப்போ கழுத்தை பிடிச்சு நாயை விரட்ற மாதிரி விரட்ற" என அடிக் குரலால் சீறியதிலும் பெண்ணவள் கண்களோ கண்ணீரில் நனைந்து தான் போனது.

அவள் ஏதோ விளையாட்டாய் செய்யப் போனது விபரீதமாய் முடிந்ததில் பயந்தவள் அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

"இல்ல சிவா நான் விளையாட்டா தான் உன்கிட்ட இப்பிடியெல்லாம் பண்ணேன் மத்தபடி என் மனசுல நீ சொல்ற போல எந்த எண்ணமும் இல்லடா ப்ளீஸ் என்ன நம்பு.. நீ உள்ளே வா பேசுவோம்" கலங்கிய குரலோடு அவன் கை பற்றி இழுக்க அவளை உதறித்தள்ளினான்.

"விடுடி என்னை அதான் சொல்லிட்டல தெரியாதவன் கண்டவன்னு எல்லாம்.. இப்போ எதுக்கு கூப்புடுற
போ போய் வேற தெரிஞ்சவன் எவானையாச்சும் உன் பெட்ரூமுக்கு உள்ளே கூப்டு" என கோபத்தில் என்ன பேசுகிறோம் என அறியாதவனாய் வார்த்தையை விட அவன் கன்னத்தை பொளீர் என பதிந்தது சிவாங்கியின் கரம்.

கண்ணீர் கன்னத்தை நனைத்திட தீயென அவனை முறைத்தவள் "என்ன சொன்ன வேற எவனாச்சும் பெட்ரூமுக்கு கூப்டவா? நான் என்ன அந்த மாதிரி பொண்ணாடா சொல்லுடா?" அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள் அழுகையோடு "ச்சேஹ் போடா இனி என் முகத்திலையே முளிக்காதே போ" அவனை தள்ளிவிட

அவள் அழுகுரலில் தான் விட்ட வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தவனுக்கு தன்னவளின் கண்ணீர் அவனை கலங்கச் செய்ய அவளை இழுத்தணைத்திருந்தான்.

இறுகிய அணைப்பின் இடைவெளியிலே "பப்பு ப்ளீஸ்டி என்னை மன்னிச்சிடு ஏதோ கோபத்துல வார்த்தையை விட்டுட்டேன் ஸாரிடி" என அவளை அணைத்து சமாதானம் செய்ய தன் கரம் கொண்டு அவனை அடித்தவள் ஒரு கட்டத்தில் கோபம் குறைய அவனணைப்பில் அடங்கிப் போனாள்.

அவள் திமிறல் அடங்கியதுமே தன்னை விட்டு அவளைப் பிரித்தவன் அவள் கலங்கிய கண்ணில் முத்தமிட்டு "மன்னிச்சிடுடி நான் கோபத்துல அப்பிடி பேசிட்டேன்" என்க. அவளோ "கோபத்துல இப்பிடித்தான் பேசுவியாடா.." என கேட்டவாறே அவன் நெஞ்சில் குத்தினாள்.

அவள் அடிகளை தண்டனையாய் ஏற்றுக் கொண்டவன் அவள் மனதை மாற்றும் பொருட்டு "ஹேய் ரொம்ப போட்டு நெஞ்சுல அடிக்காதடி அங்கதான் என் பப்பு இருக்கா அவளுக்கு வலிக்கப் போகுது" என்றான் அவள் அடிகளை வாங்கிக் கொண்டே சிரித்தவாறு.

அதில் அவள் கோபம் முழுதாய் குறைந்திட "ச்சீ போடா இன்னுமா இந்த 80'S உருட்டெல்லாம் உருட்டிட்டு இருக்க" என அவன் கன்னத்தில் கிள்ளியவள் புன்னகையோடு அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள்.

அவள் தலையை வருடிவிட்டவன் "ஏதோ கோபத்துல பேசிட்டேன்" மனம் வருந்தி மன்னிப்பை யாசித்திட அவனை நிமிர்ந்து பார்த்தவள்
"நான் பண்ணதும் தப்பு தான் நீ பண்ணதும் தாப்புதான் பட் என்னை விட உன் தப்பு தான் ஜாஸ்தி அதனால?" கோர்வையாய் இழுக்க
அவனும் "அதனால" என்க..

அவளோ"அதனால உனக்கு நான் பணிஷ்மென்ட்டா தரப் போறேன்" என்றாள்.

"பணிஷ்மென்ட்டா போலீஸ்காரனுக்கே பனிஷ்மெண்ட்டா" ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க அவளும் அதே தோரணையில் "போலீஸ் தப்பு பண்ணாலும் பணிஷ்மென்ட் உண்டு தலைவரே" என்றாள்.

"ம்ம் சரிங்க தலைவி.. தாங்கள் என்ன சொன்னாலும் அடியேன் சிரம் தாழ்த்தி செய்கிறேன்" இடை வரை குனிந்து அவன் வணக்கம் வைத்ததில் அவளோ ஓர் கள்ளச் சிரிப்புடன் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் அங்கு காட்டிய காட்சியில் ஆடிப் போனான் போலீஸ்காரன்.

"இதுதான் பணிஷ்மென்ட் எப்பிடி இருக்கு" இதழோரம் துடித்த சிரிப்புடன் கேட்டவளை திரும்பி பார்த்தவன்
"அடிப்பாவி என்னடி இது ரூம் போலவா வைச்சியிருக்க" என கத்தினான்.

அலங்கோலமாய் கிடந்த அறையை பார்வையால் அளவிட்டவனுக்கு மலைப்பாக இருக்க அவளை திரும்பிப் பார்த்தான்.

"இதுக்கெல்லாம் நீ தான் காரணம் சோ நீ தான் கிளீன் பண்ணியாகனும்" மார்பிற்குக் குறுக்கே கைகட்டி நின்று அவனிடம் கூற

அவனோ "என்னது நான் காரணமா?" என்றான் அதிர்வோடு.

"ஆமா நீ தான் காரணம் உன் மேலே இருக்குற கோபத்துல தான் ரூமையே அலங்கோலமாக்கிட்டேன்."

"அடிப்பாவி கிராதகி.. பண்றதெல்லாம் பண்ணிட்டு பழி என் மேலயா?" பாவமாய் கேட்டவனை கண்டு கொள்ளாதவளாய்

"சரி சரி புலம்பல நிறுத்திட்டு வேலையை ஆரம்பி.. இப்போ ஆரம்பிச்சாதான் நாளை காலையிலே வேலை முடியும்" என்றிட பாவமாய் அவளை பார்த்தவன் "நான் போலீஸ்டி என்னப் போய் கீளினிங் வேல பார்க்க சொல்றியே" வராத கண்ணீரை துடைத்து அவன் கூற

அவளோ "போலீஸ்கார் போலீஸ்கார். ஊருக்கு வேணா நீங்க ராஜாவா இருக்கலாம் ஆனா எனக்கு நீங்க புருஷன் சோ இந்த வேலையெல்லாம் பண்ணி தான் ஆகனும்" என கண்சிமிட்டி சிரிப்புடன் கூற அவனும் கண்சிமிட்டி சிரித்தவன் தன் வேலையை ஆரம்பித்தான்.

.......

"மதிம்மா இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்டா" தன்னருகே அமர்ந்திருந்து தன் கரங்களை பற்றியபடி பேசிய கஸ்தூரியை பார்த்தாள் வெண்மதி.

"ஏன்மா போகப் போறீங்க நீங்களும் இங்கேயே என்கூட இருந்திடுங்களேன்.." கலக்கம் நிறைந்த குரலோடு பேசியவளின் தலையை பரிவாய் வருடியவர் "இல்லமா இங்கேயே என்னால இருக்க முடியாது.. ஊர்ல உனக்கு சேர வேண்டிய எல்லாத்தையும் பத்திரமா பார்த்து உன்கிட்ட சேர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கு அந்த வேலையெல்லாம் பார்க்கனும்டா" என்றார்.

"அதெல்லாம் வேணாம்மா நீங்க என் கூடவே இருங்க இங்கயே எல்லாரும் ஒன்னா இருக்கலாம்" அவரை பிரிய முடியாத ஏக்கத்துடன் கூறியவளை அன்பாய் அணைத்துக் கொண்டவருக்கோ குற்றவுணர்ச்சியில் மனம் துடித்தது.

தான் வெளிப்படையாய் பாசத்தை காட்டிடாத போதிலும் தன்னில் அளாதி அன்பை வைத்து சிறு பிரிவை கூட தாங்க முடியாத தன் பெறாத மகளின் அன்பில் கண்கலங்க அவள் உச்சியில் முத்தமிட்டவர் "கண்டிப்பா நான் திரும்ப வருவேன் மதிமா.. உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா.. என் பொண்ணு நீ.. உன்ன பிரிஞ்சு அங்க நான் தனியே இருக்க மாட்டேன் நிச்சயம் வருவேன்டா.. இப்போ அங்க இருக்குற உனக்கு சேர வேண்டியது எல்லாம் முறையா உன்கிட்ட கொண்டு சேர்க்க வேண்டி தான் நான் போறேன்னு சொல்றேன்.. அதுமட்டுமில்ல அண்ணனுக்கும் ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது அதனால நான் போய்ட்டு வரேன்" என்றார் தெளிவாய்.

அவளுக்கோ அவளைச் சுற்றி புதுப்புது உறவுகள் அதுவும் ரத்த உறவுகள் இருந்தாலும் இத்தனை நாள் தனக்காக இருந்த ஒற்றைச் சொந்தமான தாய்க்கு நிகரானவர் தன்னை விட்டு போகிறார் என்று சொன்னதும் அவள் மனதில் எழும் வெறுமையும் தனிமையும் தடுக்க முடியாதவளாய் தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

இத்தனை நேரமும் தாய் மகளின் பேச்சை கேட்டபடி அறை வெளியே நின்றிருந்த பூரணி கமலம் இருவரும் முகத்தில் கலக்கத்தோடு அமர்ந்திருந்த மதியை பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தனர்.

"வாங்கக்கா வாங்கண்ணி" உரிமையோடு அழைத்த கஸ்தூரியைக் கண்டு புன்னகைத்தபடி மதியின் அருகே சென்றமர்ந்தனர்.

"என்னடாமா எதுக்கு இப்போ டல்லா இருக்க?" கனிவாய் தன் மகளின் நாடி பற்றிக் கேட்ட பூரணியின் குரலில் நிமிர்ந்து அவரைப் பார்த்தவள் "அ..அம்மா ஊருக்கு போகப் போறாங்களாம் பெரியம்மா அவங்கள போக வேணானு சொல்லுங்களேன்" எதிர்பார்ப்புடன் கேட்டவளை மென்புன்னகையுடன் பார்த்தவர் "கஸ்தூரி இங்கேயே இருக்கலாமே.." என்றார் மகளின் ஆசையை நிறைவேற்ற எண்ணியவராய்.

"இல்லக்கா ஊர்ல கொஞ்சம் வேலையிருக்கு அதெல்லாம் முடிச்சுட்டு நானே இங்க வரேன்னு தான் சொல்றேன்." என்றார்.

"அதான் அவ திரும்ப வருவேன்னு சொல்றாளடா நீ கவலப்படாதடா நிச்சயம் வருவா" என்றாலும் அவளுக்கோ அவரோடு செல்ல மனம் தூண்ட "நானும் ஊருக்கு போகவா பெரியம்மா" என்றாள்.

"மதி" என கஸ்தூரியோ ஏதோ சொல்ல வர கமலமோ "இருங்க அண்ணி.. அவ தான் ஆசப்படுறால நீங்க அழைச்சிட்டு போய் இரண்டு நாளையால திரும்ப இங்கயே வந்துடுங்க நாமெல்லாம் ஒன்னா இருக்கலாம்" என்க பூரணியும் அதையே சொல்ல கஸ்தூரியும் சரியென்று தலையசைத்தார்.

மூன்று பெண்களும் சரியென்றதுமே இத்தனை நேரம் முகத்திலிருந்த சோகம் பறந்தோடிட பூவென முகம் மலர்ந்தவள் "தைங்யூ பெரியம்மா" என பெரியன்னையின் கை பற்றி மகிழ்ச்சியாய் கூறினாள்.

அவள் மகிழ்ச்சியில் மற்ற மூவரும் புன்னகைத்தவர்கள் அவள் தலை வருடி "எப்போவும் இப்பிடியே சந்தோஷமா இருக்கனும்டா சரியா" என்க குழந்தையாய் தலையசைத்தாள் பெண்.

சிறிது நேரம் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வீட்டினுள் நுழைந்த கௌசிக்கோ பார்வையால் மனையாளை தேடியவன் விழிகளில் அவள் சிக்காது போக அவளை அழைத்தான்.

அவன் அழைப்பில் பூரணியோ "கிருஷ்ணா வந்துட்டான் போல மதிமா போ போய் என்னன்னு கேளு" என அவளிடம் சொல்ல எழுந்தவளிளிடம் கஸ்தூரியோ "நீ ஊருக்கு வாறத மாப்பிள்ளை கிட்டயும் கேட்டுடுவா மதி" என கூறிட சரியென்றவள் அவனிடம் விரைந்தாள்.

அவனோ அவர்களின் அறைக்குள் நுழைந்திருக்க அவன் பின்னே தானும் சென்றாள் பெண்.

அவளைக் கண்டவன் "எங்க போயிருந்த" அவன் என்னமோ சாதாரணமாய் தான் கேட்டிருந்தான் அவளுக்குத் தான் அவன் கோபத்தில் கேட்கிறானோ எனத் தோன்ற
விழிகள் விரிய "அ..அது அ..ம்மா பெ..ரியம்மா அ..த்தை கூட பேசிட்டு இருந்தேன்" என்றாள் திக்கியபடி.

அவள் தடுமாற்றத்தில் அவள் பயமுணர்ந்தவனுக்கு சிரிப்பு வர "ஹேய் இப்போ எதுக்கு அழற.." நகைப்புக் குரலில் அவன் கேட்கவுமே அவன் கோபமில்லை சாதாரணமாகத் தான் உள்ளான் என்பதை உணர்ந்தவள் "நான் அழலியே" என்றாள் தைரியத்துடன்.

"ம்ம்.. அப்பிடியா?" என தாடையை வருடிவிட்டு கேட்க ஆமென்று வேகமாய் தலையசைத்தாள்.

அதில் தலையாட்டி சிரித்தவன் கட்டிலில் அமர்ந்து தன் மொபைலில் பார்வையை பதிக்க அவளோ கையை பிசைந்து கொண்டே தயங்கியபடி அவனருகே வந்து நின்றாள்.

அவள் நின்ற தோரணையே அவள் எதையோ தன்னிடம் கேட்கப் போகிறாள் என்பது புரிந்தாலும் அவளாகவே பேசட்டும் என அமைதியாய் அமர்ந்திருந்தான் கௌசிக்.

அவன் முன் வந்து நின்றவள் "இ..இன்னைக்கு மதியம் அம்மாவும் மாமாவும் ஊருக்கு போகப் போறாங்கலாம்" என்றாள் மொட்டையாய்..

"ம்ம்ம் என்கிட்டயும் சொன்னாங்க அவங்க போறதுக்கு வண்டி ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கேன்" என்றான் அவன்.

"ம்ம்ம்... அ..அது நானும் அவங்க கூட போலாம்னு இருக்கேன்" என்றதும் விலுக்கென்று பார்வையை நிறுத்தி அவளை அழுத்தமாய் பார்த்தவன்
"ஊருக்கு போகப் போறியா?" என்க

அதில் பயந்தவள் "அ..அது போய்ட்டு இரண்டு நாளையால திரும்ப வந்திடுவோம்" என்றாள் வார்த்தைகளை மென்று முழுங்கி..

அவள் போகிறேன் என்றதுமே ஏனோ அவன் மனதினுள் கோபத்தை உண்டாக்க நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்
"அவங்க போகட்டும்... நீ போக வேணாம்" என்றான் முடிவாய் உறுதியான குரலில்.

அதில் அவளுக்கோ சிறு கோபம் முளைத்திட "ஏன் போகக் கூடாது. நான் போய்ட்டு இரண்டு நாள்ல வந்திடுவேன்" என்றாள் சற்று பிடிவாதம் இருந்ததோ அவள் குரலில்..

அவளை நிமிர்ந்து பார்த்தவன் "போகக் கூடாதுன்னா போகக் கூடாது தான்.." என்றான்.

"பெரியம்மா அத்தையெல்லாம் போக சொல்லிட்டாங்க" என்றாள் ..இப்போதாவது சம்மதிப்பானோ என்ற எதிர்பார்ப்பில்.

அவனோ அழுத்தமாய் "நான் சொல்றதை தான் நீ கேக்கனும்.. நீ ஊருக்கு போகக் கூடாது" என்றான்.

"நான் எங்க ஊருக்கு தானே போகப் போறேன் அதுவும் நான் அங்கே இருக்கலையே திரும்பி வந்திடுவேனே.. ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலாய்..

"ஹேய் இங்கப் பாரு நான் சொன்னது சொன்னது தான் நீ போகக் கூடாது.. அப்புறம் லூசு மாதிரி பேசாம போ போய் வேலையை பாரு" பொங்கி வந்த கோபத்தில் அவனோ கத்தியிருக்க திடுக்கிட்டுப் போனாள் பெண்ணவள்.

"இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு திட்டுறிங்க" அழும் குரலில் கேட்டவள் கண்கள் கண்ணீரை சிந்த அவனுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது.

"ச்சேஹ்.. எதுக்கு இப்போ இப்பிடி ரியாக்ட் பண்றேன்" நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டவன் அவளை பார்க்க அவளோ கண்கலங்க நின்றிருந்தாள்.

"ஹேய் அழாத" மென்மையாய் அவன் கூற அவள் அழுகையோ சிறு சத்தத்தோடு மேலுயர்ந்தது.

குழந்தையிடம் அழாதே என்றாள் எப்படி பிடிவாதமாய் சத்தமிட்டு அழுமோ அது போல அவனின் மென்மையான பேச்சில் அவளோ மேலும் அழுகையை தொடர அவனுக்கு அவள் செயல் சிரிப்பைத் தான் கொடுத்தது.

"இது சரிபட்டு வராது" மனதோடு உரைத்தவன் தன் முன் நின்று கொண்டிருந்தவள் கரம் பற்றி இழுத்திட அவளோ தடுமாறி தொப்பென்று அமர்ந்திருந்தவன் மடி மீதே வந்து வீழ்ந்தாள்.

இந்தத் திடீர் செய்கையில் அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க அவனோ "ஹேய் நான் தான் சொல்றேன்ல அப்போவும் கேக்காம அழுற ..கண்ணைத் துடை வாயை மூடு உஸ் உஸ் சத்தம் வரக் கூடாது" உர்ரென்று முகத்தை வைத்து அவன் மிரட்டிய மிரட்டலில் மிரண்டு முழித்தது மான் குட்டி.
கண்களை உருட்டி மிரண்டவள் விழியசைவைப் பார்த்து ரசித்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்..

"ம்ம் என்ன கேட்ட ஊருக்கு போகப்போறியா?" பொய் முறைப்புடன் அவன் கேட்ட தோரணையில் பயந்தவள் இல்லையென்று வேகமாகத் தலையாட்டினாள்.

"ம்ம் குட்.. இப்படியே அமைதியாவே இருக்கனும் அவங்க ஊர் போற வரைக்கும் வாய திறக்கக் கூடாது சரியா?" என்க சரியென்று தலையசைத்தாள்.

"ம்ம்ம்" என்றவன் அவளை தன் மடியிலிருந்து இறக்கிவிடாமலே தன்னோடு இறுக்கிக் கொண்டவன் தன் மொபைலில் மூழ்கிவிட அவனருகாமையில் தவித்துப் போனது என்னவோ பெண்ணவளே.

"அய்யோ எதுக்கு இப்படியே வெச்சியிருக்காங்க.. இறக்கிவிடலாம்ல" என மனதோடு புலம்பியவளுக்கு அவன் மீது சிறு மனத்தாங்கலும் இருக்க தலையை திருப்பி அமர்ந்திருந்தாள்.

இருவருக்குமிடையேயான பேச்சற்ற மௌனத்தில் அவனோ தன் மடி மீது அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.
முகம் வாட அமர்ந்திருந்தாள் அவள்.

"ஹோய் பொண்டாட்டி என்ன மனசுல என்னை திட்டுறியா?" அவள் காதோரம் மீசை முடி உரச கேட்டவனின் திடீர் கேள்வியில் அரண்டு விழித்தாள்.

அவனோ "என்ன திட்டினியா?" என மீண்டும் கேட்க.. வேகமாய் இல்லையென தலையசைத்தவள் அவனைப் பாவமாய் பார்க்க அவள் நிலை பார்த்து கௌசிக் வாய்க்குள் சிரித்துக் கொண்டான்...

அவள் கன்னம் பற்றியவன் "என் மேல கோபமா?" என்க அவளோ அமைதியாய் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் அதிலே அவள் கோபம் புரிந்திட இதழ் பிரித்து சிரித்தவன் "இன்னும் இரண்டே நாள்ல நாம சென்னைக்கு போகனுங்க பொண்டாட்டி அது மட்டுமில்ல டிப்பார்ட்மெண்னால உங்க புருஷனுக்கு ரொம்பவே முக்கியமான ஒரு கேஷ் கொடுத்து இருக்காங்க அதெல்லாம் பார்க்கனுமே அதனால தான் இப்போதைக்கு என்னால உங்க ஊருக்கு வர முடியாது.. கல்யாணம் பண்ணிட்டு பெஸ்ட் டைம் ஊருக்கு போக போற பொண்டாட்டிய தனியா அனுப்பாம ஜோடியா போகலாம்னு ஆசைப்பட்டு தான் தனிய போக வேணாம்னு சொன்னேன்..
ஆனா இப்போ இந்த ஆங்ரி பேர்ட்அ பார்க்கும் போது.. போய்ட்டு வான்னு சொல்ல தோணுது.." என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் அவளிடம் "ஊருக்கு போய்ட்டு வா.." என்க அவள் தலையோ இல்லையென்பது போல் மறுப்பாய் அசைந்தது.

"ஏன் என்னாச்சு இன்னும் கோபம் போகலையா?" அவள் மறுப்பில் அவளிடம் கேட்க அவளோ "ம்ம்ஹூம் நா..நான் போகல நான் உங்கக் கூடவே வரேன் நாம இன்னொரு முறை சேர்ந்து ஊருக்கு போகலாம்" என்றதும் அவன் முகமோ புன்னகைக்க அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் இதழ்களோ "தைங்யூ ஏஞ்சல்" சத்தமின்றி முணுமுணுத்துக் கொண்டது.

அவன் நெற்றி முத்தத்தில் கன்னங்கள் சூடேற வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.

அவள் வெட்கத்தை ரசித்த ஆணவன் நெஞ்சமோ மெல்ல மெல்ல அவள் மீதான உரிமையையும் உணர்வையும் காதலையும் உணர்ந்து அவள் பால் சரியத் தொடங்கியது.

சத்தமின்றி அவ்விரு நெஞ்சங்களிலும் காதல் விதை முளையிடத் தொடங்கியது.




தொடரும்....


 

Habi

Moderator
அத்தியாயம் - 28


அன்று மாலையே கஸ்தூரி மூர்த்தி இருவரும் மதியிடம் ஆயிரம் அறிவுரைகள் கூறி குடும்பத்தினரிடம் விடைபெற்று கிளம்பிவிட மதியோ கலங்கிய கண்களை மறைத்தபடி அவர்களை அனுப்பி வைத்தாள்.

அதன் பின் அவளின் நேரமோ குடும்பத்தினருடன் கழிந்துவிட கௌசிக்கோ சிவாவுடன் வெளித் தோட்டத்தில் அமர்ந்து ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தான்.

அண்ணனோடு பேசியபடி பேச்சின் நடுவில் எதார்த்தமாய் திரும்பிய சிவாவோ அங்கு வீட்டின் மாடியில் தங்களையே குறுகுறுவென பார்த்து நின்ற சக்தியை கண்டு கொண்டவன் புருவங்கள் இடுங்க அவனை பார்த்தான்..

சிவாவின் பார்வை சென்ற திசையில் தானும் பார்த்த கௌசிக்கோ சக்தியை கண்டு தாடையை வருடியவன் "என்ன சிவா?" என்றான் கேள்வியாய்.

"எனக்கு அந்த சக்தியை பார்த்தாலே ஏதோ சரியில்லாத போல தோணுதுண்ணா?? அவன் பார்வையே ஏதோ திருட்டுத் தனம் பண்ணம் போறவன் போலயே இருக்கு" என்றதும் கௌசிக்கின் பார்வையோ சக்தியின் மேலேயே அழுத்தமாய் பதிந்தது.

"அவன பார்த்தா நல்லவன்னு மனசு சொல்லுது ஆனா அவன் ஏதோ ஒரு திட்டத்தோட இங்க வந்திருக்கான்னு புத்தி சொல்லுது.." என்றவனை சிறு புன்னகையுடன் பார்த்தான் கௌசிக்.

"பொலீஸ்காரனா புத்தி சொல்லுறது கேளு சிவா" என்றதும் அண்ணனை திரும்பி அர்த்தமாய் பார்த்தான் சிவா.

அந்தப் பார்வையில் ஒரு பெருமூச்சை வெளியிட்டவன் "சக்தி வேற யாருமில்ல சிவா தீக்ஷன் தீக்ஷியோட ப்ரெண்ட் தான்" என்றதும் விழிகள் விரிந்திட "வாட்" என்றான் சிவா..

"என்னண்ணா சொல்ற.. அவங்க எப்பிடி இவன் கூட ப்ரெண்ட் ஆனாங்க இவன் தான் பாரின்ல படிச்சேன்னு சொன்னானே" குழப்பமாய் கேட்டவனை பார்த்தவன் "காலேஜ் ப்ரெண்ட் இல்ல சிவா பேஸ்புக் ப்ரெண்ட்ஸ்" என்றான் அவன்.

சிவாவிற்கோ மேலும் அதிர்ச்சியாகிப் போனது.. காலேஜ் நட்பு என்றாலே அவனுக்கு சக்தியின் மீதான சந்தேகம் குறைந்திருக்கும் போல.. ஆனால் முகநூல் நண்பர்கள் என்றதும் சிவாவின் மனதில் சக்தியின் மீதான சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.

"எனக்கு புரியல.. இவன் காவவேரி அக்காவோட தம்பியா இங்க வந்திருக்கானா இல்ல தீக்ஷன் தீக்ஷியோட ப்ரெண்ட்டா வந்திருக்கானா? அவனுக்கு முன்னாடியே அவங்க சொந்தம்னு தெரிஞ்சு தான் அவங்க கூட ப்ரெண்ட் ஆனான?" குழப்பிக் குழப்பிக் கேள்வியாய் கேட்டவனை பார்த்து புன்னகைத்தவாறு அமர்ந்திருந்தான் கௌசிக்.

"என்னடா நான் இவ்வளவு கேள்வி கேக்குறேன் நீ பாட்டுக்கு சிரிச்சிட்டே இருக்க" அவனின் டா என்ற அழைப்பே அவன் கடுப்பாகிவிட்டா என புரிய அவன் தோள் தட்டியவன் "ரிலாக்ஸ்டா இப்போ எதுக்கு இந்த குழப்பம்.. நீ நினைக்குற போல எதுவும் இல்ல.. அவங்க ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ்.. அவ்வளவும் தான்" என்றான் கூலாக.

ஆனால் சிவாவிற்கு தன் அண்ணன் இவ்வளவு எளிதாய் பேசுவதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என தீவிரமாய் அவனைப் பார்த்தவன் "என்கிட்ட ஏதாச்சும் மறைக்கிறீயா அண்ணா" என்றான் அழுத்தமாய்.. எங்கு தன் அண்ணன் மீண்டும் அவன் மீதே அனைத்து சிக்கல் சுமைகளையும் தனியே சுமக்க முடிவெடுத்துவிட்டானோ என்று அவனை நன்கு அறிந்தவனாய் கேட்டிட அதுக்கு ஒரு புன்னகையே பதிலாய் கொடுத்தவன்.

"நேரம் வரும் போது சொல்றேன்.. சிவா இந்த வாட்டி என்னால தனியா போராட முடியாது எனக்கு கட்டாயம் உங்க எல்லார் உதவியும் தேவை" முதலில் கூறியதை சத்தமாய் கூறியவன் பின் கூறியதை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

அவனை புரியாது பார்த்த சிவாவோ "அண்ணா உனக்கு பக்க பலமா நான் எப்போவுமே கூட இருப்பேன்" என்க "எனக்குத் தெரியும்" என்பது போல கண்மூடி திறந்தான் கௌசிக்.

மீண்டும் சிவாவோ "அப்போ இந்த சக்தியால எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்றீயா?" என்று கேட்டதற்கு அவனோ "அப்படி சொல்லிட முடியாது.. ஆனா" என்று இழுவையாய் இழுத்தவன் அமைதியாகிவிட சிவாவோ "ரைட்டு ஏதோ ஒரு வில்லங்கத்தோட தான் வந்திருக்கான் இல்லையா?" என்றதும் கண்சிமிட்டி ஆமென்றான் பெரியவன்.

அதில் தலை கைவைத்த சிவாவோ "அடுத்து என்ன பண்ணலாம்" என்க கௌசிக் "வைட் அன்ட் சீ" என்றான் ஏதோ உட் பொதிந்த அர்த்தக் குரலோடு.


......

சித்தி சென்றவுடன் திவ்யா நித்யா இருவருடனும் நேரத்தை கழித்தாள் மதி.
திரு வரவும் நித்யாவோ கணவனை கவனிக்கச் சென்றுவிட திவ்யாவிற்கும் தோழி ஒருவள் அழைப்பை ஏற்படுத்த அவளும் பேசியபடி அங்கிருந்து சென்றாள்.

சிறிது நேரம் அமர்ந்திருந்தவளின் பார்வை தன்னவன் எங்கேயாவது தென்படுகின்றானா என பார்வையால் அலசியவளுக்கு அவன் அவள் பார்வை வட்டத்தில் வீழாமல் போகவும் தனிமையில் அலுப்பாய் உணர்ந்தவள் எழுந்து தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அறை வந்தவள் அவனிருக்கின்றானா ஒரு எதிர்பார்ப்போ கதவை திறந்து பார்க்க அங்கும் இல்லாதது கண்டு முகம் வாட "இவங்க எங்க தான் போனாங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவும் இல்லை.. சொல்லிட்டு போனா தான் என்னவாம்" அவன் இல்லையே என்ற ஆதங்கத்தில் அவள் வாய்விட்டே புலம்பினாள்.

இயல்பாய் மனைவி என்ற பதவியில் பெண்களுக்கே உரித்தான கணவன் மீதான உரிமை குணம் அவள் மனதிலும் அன்னிச்சையாய் எழுந்தது பெண்ணவளுக்கு.

சிறிது நேரம் அவன் வருவான் என எதிர்பார்த்து அமர்ந்திருந்தவள் அவன் வராது போக அலுப்புடன் நேரத்தை கடத்த எண்ணி அங்கிருந்த தொலைக்காட்சியை ஓடவிட்டாள்.

தொலைக்காட்சியை பார்த்தவள் "ஐய்ய் படம் போட்டிருக்கான்.. என்ன படம்" குதூகலத்தோடு பார்த்தவளுக்கு படத்தின் பெயரைக் கண்டதுமே அது பேய் படம் என்று புரிந்து போக பக்கென்றானது.

"அய்யோ பேய் படமா போட்டிருக்கு" என அவள் மனம் அலறினாலும்.. பேய் படங்களையே விரும்பி பார்க்கும் அந்த அதி வீர தைரியசாலிக்கு எப்போதும் போல படத்தை பார்க்க வேண்டும் என்ற பயத்தோடு கூடிய ஆவல் எழத்தான் செய்தது.
உள்ளம் நிறைந்த பயம் இருந்தாலுமே பேய் படங்கள் என்றால் மிக விரும்பி ஆர்வமாய் தன் சித்தியோடு அமர்ந்து பார்ப்பவள் படத்தின் தாக்கத்தினால் நடு இரவினில் பல முறை பயந்து அலறி கத்தி சித்தியின் வாயினால் பலதரபட்ட திட்டுகளை வாங்கிய போதிலும் அடுத்த முறையும் மீண்டும் ஆவலாய் படத்தை பார்ப்பவளைக் கண்டு தலையில் அடித்துக் கொள்வார் அவள் சித்தி கஸ்தூரி.

இன்றும் அப்படியே உள்ளுக்குள் பயமிருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்தில் தனியே இருக்கிறோம் என்ற எண்ணமும் மறந்து படத்தில் மூழ்க ஆரம்பித்தாள் பெண்.

படத்திலே கண்ணாக இருந்தவளுக்கு கௌசிக் அறைக்குள் நுழைந்ததையோ தான் கைகளால் முகம் மறைத்து விரலிடுக்கில் படம் பார்த்த கோலத்தைக் கண்டு சிரித்தபடி நிற்பதையோ அறியாதவள் படத்தில் மூழ்கியிருந்தாள்

அவளின் பயத்திலும் சிறு பிள்ளைத்தனத்திலும் வெகுவாய் ஈர்க்கப்பட்டவனாய் சிரிப்புடன் பார்த்து நின்றவனுக்கு அவளைச் சீண்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்ற அவள் பின்னால் சென்றவன் சரியாக படத்தில்
திகில் காட்சி வரும் நேரம் அவள் காதோரம் சென்று சிறு கூச்சல் போட்டது மட்டும் தான் தாமதம் ஏற்கனவே பயத்தின் உச்சத்தில் படம் பார்த்திருந்த பெண்ணவளோ "ஆஆ" என அலறியடித்துக் கொண்டு எழுந்தவள் அங்கிருந்த தலைகாணியை எடுத்து கண்ணை மூடிக் கொண்டு அடிக்கத் தொடங்கினாள்.

"போ போ இங்கயிருந்து போ சாத்தானே கடவுளே என்னை காப்பாத்து" என வாய் முனுமுனுக்க அவனை போட்டு அடித்தவள் செய்கையில் வாய்விட்டு சிரித்தான் ஆணவன்.

"ஹேய் மதி ரிலாக்ஸ் நான் தான்" என்று கூற அவளுக்கு அது எல்லாம் கேட்டாள் அல்லவா பயத்தில் படபடத்து நின்றவளுக்கு அவன் குரல் காதை சென்றடையாது விட அவளோ கண்களை மூடி காற்றில் வீசி கொண்டிருந்தாள்.

அவள் கண்ணை திறக்கமாட்டாள் என்பது புரிய அவளை அடக்க வழி தெரியாதவன் அவள் கைகளை இழுத்து அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

அவளோ அப்போதும் அவன் பிடியிலிருந்து திமிற அவளை தன்னணைப்பில் இறுக்கிக் கொண்டவன்
"ஹேய் மதி இங்க பார் கண்ணை திறந்து பார்" மென்மையாய் கூற..

அவன் குரலில் இருந்த மென்மையில் பயம் குறைந்தவள் மெல்லமாய் கண்களை மலர்த்தி அவன் முகம் பார்த்திட மயக்கும் கிருஷ்ணனாய் புன்னகையுடன் நின்றிருந்தான் அவளின் மணவாளன் கிருஷ்ணன்.

"ரிலாக்ஸ்... ஓகே" மென்மையாய் அவள் காதோரம் முடியை ஒதுக்கியபடி பேசியவனையே இமைசிமிட்டாமல் பார்த்து நின்றாள் பெண்.

அவன் அருகாமையும் அணைப்பும் குரல் மென்மையும் அவளை எங்கோ மாயவலைக்குள் இழுத்துச் செல்ல அவன் குரலிலும் பார்வையிலும் கட்டுப்பட்டுக் கிடந்தாள்.

அவள் அசையாத விழிவீச்சு அவன் விழிகளை காந்தமாய் இழுத்திட அவனும் அவளையே பார்த்தான்.. விழிகள் நாழும் கவ்விக் கொள்ள அசையாது நின்ற இருவர் மனதிலும் அக்கணம் தங்கள் இணை மீதான உணர்வுகள் கிளர்ந்து ஆர்பாட்டமிட அந்த உணர்வுகளின் தாக்கத்தில் ஆணவன் கரங்களும் அன்னிச்சையாய் எழுந்து தன் அணைப்பிலிருந்த பெண்ணவள் கன்னம் வருடிட அவன் தொடுக்கையில் உடல் சிலிர்க்க கண்ணை மூடித் திறந்தவள் அவனையே பார்த்திருந்தாள்.

அவள் சிலிர்ப்பை தானும் உணர்ந்தவனுக்கு அவளை மீண்டும் தீண்ட வேண்டும் என மனம் குதிக்க அவன் கரங்களோ அவள் இதழ் நோக்கி பயணித்து அவனோ அவள் முகம் நோக்கி குனிந்த கணம் அவர்களின் மோனநிலையை கலைக்கவென அவர்களது அறைக்கதவும் தட்டப்பட அதனோடு சேர்த்து திவ்யாவின் "அண்ணா" என்ற அழைப்பும் காதில் விழ அவன் அணைப்பில் பதறி விலகினாள் வெண்மதி.

அவனோ எவ்வித பதட்டமும் தனக்கில்லை என்பது போல் அவளை விடுவித்தவன் அவளைப் பார்க்க அவளோ தலை குனிந்து சங்கடத்துடன் நின்றிருந்த தோற்றம் அவனுக்கு அவன் செய்ய விளைந்த காரியத்தை நினைவூட்ட அழுத்தமாய் தலையை வருடிக் கொண்டவனுக்கு "டேய் என்னடா பண்ற ..அவ சின்னப் பொண்ணுடா" என்ற மனது அவனை திட்ட அதற்கு அசராதவனாய் அவனோ "அவள் என் மனைவி" என்று தனக்குள் கூறிக் கொண்டு நொடியிலே தன் மனதோடு பட்டி மன்றம் நடத்தியவனை திவ்யாவின் அடுத்த அழைப்பு களைத்தது.

தலையை குலுக்கிக் கொண்டு கதவை திறந்தவனிடம் "அண்ணா அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க" முகத்தில் சந்தோஷத்தோடு கூறிய தங்கையை பார்த்து சிரித்தவன் "மதி வா போலாம்" என்று மனைவியையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு கீழியிறங்கினான்.

குடும்பமே புடை சூழ அதற்கு மத்தியில் அவர்கள் வீட்டின் கடைக்குட்டி இருவரும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்தவாறே கீழே இறங்கியவனைக் கண்டு இத்தனை நேரமிருந்த குதூகலம் அடங்க அவனைக் கண்டு எழுந்து நின்றனர் இருவரும்.

அவர்கள் எழுவதைக் கண்டு மற்றவர்களும் புரியாது அவர்களைப் பார்க்க அங்கே கண்ட கௌசிக்கை கண்டு மென் புன்னகையோடு விலகிக் கொண்டனர்.

கீழே வந்தவன் மார்புக்குக் குறுக்காக கை கட்டி நின்று அவர்களை அழுத்தமாய் பார்த்து அடுத்த நொடி இதழ் பிரித்து சிரித்ததுவே தாமதம் அடுத்த நொடியே அவனிடம் ஓடிச் சென்று தஞ்சமடைந்தனர் இருவரும்.

தன்னை அணைத்த இருவரையும் தானும் அணைத்துக் கொண்டவனுக்கு நீண்ட நெடிய பிரிவின் பின்னான இந்த அணைப்பு அவன் மனதை இளகச் செய்தது.

இந்த வீட்டின் தலைப் பிள்ளையாய் அவனிருக்க அவனுக்கு அடுத்து பிறந்த அத்தனை பேருக்குமே தோள் கொடுத்த மூத்தவன் அவனல்லவா.
ஒன்றாய் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தவர்களை கல்லடிபட்ட கண்ணாடித் துகள்களாய் சிதறச் செய்து இதோ காலத்தின் கோலத்தில் மீண்டும் உறவுகள் பிணைக்கப்பட்டு விட்டனவல்லவா.

தன் இரு தோள்களிலும் அடைக்கலமாகியிருந்தவர்களை புன்னகையுடன் பார்த்தான் கௌசிக்.
அவர்களோ கண்கலங்க "மிஸ் யூ ண்ணா" என்றனர் கோரஷாய்.

அவர்களை பார்த்திருந்தவர்களுக்கும் அந்த இளம் குருத்துகளின் ஏக்கம் புரிந்திட கலங்கிய கண்ணோடு நின்றிருந்தனர்.

"ஸப்பா இவங்க பாசமலர் படம் பார்க்க சகிக்கல" என்ற சிவாவோ அங்கே இவர்களை வேடிக்கையாய் பார்த்து நின்ற சக்தியின் தோளில் கை குத்தி சொல்ல சக்தி அவனை பார்த்து முழித்தான்.

அவன் முழிப்பை கண்டு பொங்கிய சிரிப்பை அடக்கிய சிவாவோ "என்னா கண்ணு லுக்கு" என்று புருவமுயர்த்திட அவனோ சிவாவின் பேச்சில் திருதிருத்தான்.

தீக்ஷன் தீரன் இருவருமே சக்தியை பார்த்தாலும் அவனை கண்டு கொள்ளாது
"சிவாண்ணே உன்ன விடவா நாங்க பாசமலர் படம் ஓட்டிட்டோம்.. எங்களோட குருவே நீதானேண்ணா" என்றவர்கள் அவனையும் தங்களோடு சேர்த்துக் கொள்ள மகிழ்வோடு அவர்களோடு இணைந்து கொண்டான்.

சக்திக்கோ அவர்கள் தன்னை கண்டு கொள்ளாது இருப்பதைக் கண்டு பல்லைக் கடித்தவன் அமைதியாய் நின்றிருக்க கௌசிக்கோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

தீக்ஷன் தீக்ஷியிடம் முன்னரே வீட்டில் நடந்த நிகழ்வுகள் கூறப்பட்டிருக்க அவர்கள் இருவருமே மதியை ஆர்வமாய் பார்த்தனர்.

"ஹாய் அண்ணி ஐ ம் தீக்ஷன்" என அவன் தீக்ஷியும் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டவள் சிறிது நேரத்தில் அவளோடு பேசிப் பேசியே ஐக்கியமாகிவிட பெரியவர்களும் சிறியவர்கள் பேசட்டும் என ஒதுங்கிப் போயினர்.

நேரம் நகர்ந்தாலுமே தன்னை கண்டு கொள்ளாது பேச்சில் மூழ்கியிருந்தவர்களை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் சக்தி.

"அடப்பாவிங்களா நான் ஒருத்தன் இருக்குறதையே கண்டுக்காத மாதிரி இருக்கிறிங்களே" மனதோடு புலம்பிய போதிலும் எதையும் வெளிக்காட்டாது நின்றுயிருந்தவனை பார்த்து தங்களுக்குள்ளே சிரித்துக் கொண்டனர் கௌசிக் சிவா இருவரும்.

நேரம் நகர்ந்திட அனைவரும் தங்கள் இரவுணவை முடித்துக் கொண்டு தத்தமது அறைக்குள் தூங்கச் சென்றனர்.

கௌசிக்கோ அழைப்பில் தன் நண்பன் மாதவ்வை அழைத்தவன் அங்கே நிலமையை பற்றியும் கேஸ்களைப் பற்றியும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் தன்னறைக்குள் நுழைந்து மதியை தேட அவள் அறைக்குள் இருக்கும் அரவமில்லாது போகவே "இவ எங்கே போனா என்ற யோசனையில் நின்றிருந்தவனுக்கு பால்கனி பக்கம் நிழலாட அங்கே சென்றான்.

பால்கனி கம்பியை பிடித்து எக்கி எக்கி நின்றவளைக் கண்டு என்ன செய்கிறாள் என்று பார்த்தவனுக்கு அவள் அதிகமாய் காலை ஊன்றி எக்கியது கண்டு எங்கு விழுந்துவிடுவாளோ என்று பயந்தவன்
"மதி" என்றழைத்திட அவன் நினைத்தது போலவே பயத்தில் திடுக்கிட்டு திரும்பியவள் தடுமாறி விழப் போக வேகமாய் அவளை நெருங்கிப் பிடித்திருந்தான்.

"ஹேய் பார்த்து ஜாக்கிரதை" தன் நெஞ்சோடு அவளை அழுத்திப் பிடித்தவன் மூச்சை விட அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளுக்கு தெள்ளத் தெளிவாய் கேட்டது அவன் இதயம் துடிக்கும் ஓசை.. அதை கண்மூடி தனக்குள் உள்வாங்கிக் கொண்டவள் அவன் அணைப்பிலிருந்து விலக்கிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ சற்று கடுமை ஏறிய முகத்துடன் "இங்க நின்னு என்னத்த அப்பிடி பார்த்துட்டு இருக்க" என்றதுமே அவன் குரலில் சற்று பயந்தவள் "அ..அது.." என்று பயத்தில் எச்சில் கூட்டி அவனைப் பார்க்க..

அவள் பயத்தை உணர்ந்தவன் தன் கோபத்தை கட்டுபடுத்தி சற்றே சாந்தமாய் "என்ன" என்றான்.

"அ..அது.. இன்னிக்கு பௌர்ணமில அ..அதான் வானத்தை பார்க்கலாம்னு.." அவன் சிறு முறைப்பில் அதற்கு மேல் பேசமுடியாது வாய் மூடினாள் பெண்.

"அதுக்கு இப்பிடித் தான் நின்னு எட்டி எட்டி பார்க்குறதா?" சூடு குறையாது வந்து வீழ்ந்தது அவன் வார்த்தை.

அவளுக்கோ அவன் தொனியில் முகம் வாடிட "இ..இல்ல அது தெ..தெரியலையா.. அ..து தான்" என்று திணறலோடு கூற..

அவனோ "இங்க தெரியலன்னா என்ன மொட்டை மாடிக்கு போன நல்லாவே பார்த்திருக்கலாம் தானே" என்றான்.

அவன் சொன்னதும் வேகமாய் தலையசைத்தவளை அவனோ குழப்பத்தோடு பார்த்தவன் "ஏன் என்னாச்சு" என்றான்.

அவளோ என்ன சொல்வது என முழித்தவள் அவனைப் விழி உயர்த்தி பார்த்து ரகசியமாய் சின்னக்குரலில் "அது.. இந்த வீடு ரொ..ரொம்ப பெருசா இருக்குல்ல இப்பிடி பெரிய பெரிய அரண்மனை வீட்டுல எல்லாம் எங்காவது சரி ஒரு மூலையில போய் குடியிருக்கும்னு சொல்லுவாங்க.. அதுதான் எனக்கு பயமா இருக்கு" என்றாள்.

அவனும் அவளைப் போலவே குனிந்தவன் "அப்படியா?" ஆச்சரியம் போல் கேட்டவனிடம் "ம்ம்" என தலையாட்டியவளைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் "யாரு இப்படியெல்லாம் சொல்லுவாங்க" என்றான்.

"அ...அது அதுதான் படத்துலையெல்லாம் காட்டுறாங்களே அதுதான் சொல்றேன்" என்றாள்.. அது தான் உண்மை என்பது போன்ற தோரணையில்.

அவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. .இப்போது வெளிப்படையாகவே அவன் சிரிக்க அவளோ அவன் சிரிப்பை பார்த்தவள் அவன் நம்பவில்லையோ என்று எண்ணி "உண்மையா நான் சொல்ற மாதிரி தான்" என்றாள் அப்பாவியாய்.

அதில் சிரிப்பை நிறுத்தியவன் "ம்ம் சரி நீ சொல்ற மாதிரி அங்க பேய் இருக்கானு நாம போய் செக் பண்ணிடலாமா?" என்கவும் மதியோ பயத்தில் முளித்தாள்.

"அய்யோ வேணா.. நாம போக வேணாம்" என்று மறுத்தவளை போகத்தான் வேணும் வலுக்கட்டாயமாக அவள் கை பிடித்து இழுத்து மாடி நோக்கிச் செல்ல அவளோ பிடிவாதமாய் பயத்தில் மறுத்து நின்றாள்.

அவளின் செயல் அவனுக்கு சிரிப்பை மூட்ட நொடியில் அவளை கைகளில் லாவகமாகத் தூக்கியவன் படியேறினான்..

அவன் தூக்கியதில் பயத்தில் "அய்யோ" என அலறியவள் விழாமல் இருக்க அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்கள் மூடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

தன் நெஞ்சில் முக புதைத்தவளை மென் புன்னகையோடு பார்த்தவன் அவளை தூக்கிக் கொண்டே படியேறிச் சென்று மொட்டை மாடியில் சென்று நிற்க.. அப்போதும் கூட அவள் கண்கள் திறவாமல் மூடியிருந்தாள்.

"ஹேய் மதி இங்கப் பாரு" மென்மையாய் அவளை அழைத்திட அவளோ முடியாது என மறுக்க அவனோ அவள் விழி திறக்க வைக்க எண்ணி அவள் இடையில் அழுத்தம் கொடுத்திட அவளோ அந்த தொடுகையில் பட்டென்று விழி விரித்து அவனைப் பார்த்தாள்.

அவனோ குறும்பாய் கண்சிமிட்டி சிரித்தவன் அவள் நாடி பிடித்து அவளை நிமிர்த்தி "அங்கே பாரு" என வானத்தை சுட்டிக் காட்டிட விழி நிமிர்த்தி பார்த்தவள் விழிகளோ ஏகத்துக்கும் விரிந்து கொண்டது..அங்கே வான் நட்சத்திரங்கள் புடைசூழ அலங்காரத்துடன் மணப் பெண்ணாய் ஒற்றையாய் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்த வெண்ணிலவின் அழகு கண்டு.

அந்த வானத்து வெண்நிலவின் அழகு கண்டு முகம் மலர்ந்தாள் இந்த கண்ணனின் மனையாட்டி வெண்மதி.

"ரொம்ப அழகா இருக்குல" என்று வாய்விட்டு கூறியவள்.. தான் இன்னுமே அவன் கையிலிருக்கிறோம் என்பதையே மறந்து வானில் மின்னிக் கொண்டிருந்த வின்மீன் நட்சத்திரங்களை விழி விரித்து ரசித்திட அவனோ தன் கையில் மிதக்கும் இந்த உயிருள்ள வெண்ணிலவின் அழைகயும் அவள் முகம் காட்டிய ஒவ்வொரு ரசனைகளையும் ரசித்து கொண்டிருந்தான்.



தொடரும்..



 

Habi

Moderator
அத்தியாயம் - 29


மொட்டை மாடியில் நிலவின் ஒளியில் வின்மீன்களை கண்ணில் ரசனை மின்ன ரசித்த தன் இணையானவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் கௌசிக்.

குழந்தையென தன் கையணைவில் அவளை தூக்கியிருக்க அதைக் கூட மறந்து வானத்தை அன்னார்ந்து ரசித்திருந்தவளின் முகத்தின் அழகையும் சிரிப்பையும் அவன் விழிகள் ரசனையாய் அளவெடுத்தன.

அவன் மார்பளவே ஆன குட்டி உருவம் அவனின் திடகாத்திரமான கைச் சிறையிலே மேலும் குட்டியாகவே தெரிந்திட இவள் தனக்கு மனைவியா என்பதையே நம்ப முடியாது போன்று அவளை அளந்த அவன் மனமோ "ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா" என எண்ணிக் கொண்டிருக்க அவனை களைத்தது அவள் குரல்.

"ஹேய் அங்கப் பாருங்க" துள்ளலான அவள் குரலில் அவளைப் பார்த்தவன் அவள் பார்வையும் கையும் சென்ற திசைப்பக்கம் பார்க்க வால் நட்சத்திரம் ஒன்று வானில் தோன்றி மறைய அதையே சந்தோஷ கூச்சலோடு காட்டியவள் வேகமாய் கண்மூடி ஏதோ முணுமுணுப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டான்.

மெல்ல விழி விரித்து அவனைப் பார்த்தவள் "நீங்க எதுவும் வேண்டிக்கலையா?" என கேட்க அவனோ குறும்புடன் "என் கைல தான் வெய்ட்டான பொக்கிஷம் இருக்கே இதுவே எனக்கு போதும்" என்றதுமே தான் தான் இன்னுமே அவன் கைகளில் இருக்கிறோம் என்ற உணர்வு வர அதிர்ந்து அவனைப் பார்த்தவள் அவன் கன்னக்குழி சிரிப்பில் முகம் முழுவதும் வெட்கச் சிவப்பு படர்ந்திட அவன் பிடியிலிருந்து இறங்க முயன்றவளின் வெட்கச் சிவப்பை ரசித்தவாறே அவளை மெதுவாய் இறக்கிவிட்டான்.

வெட்கத்தில் முகம் சிவக்க அவனைப் பாராது அவனுக்கு முதுகு காட்டி நின்றவளை ரசனையாய் பார்த்து நின்றவனின் முதுகை துளைக்கும் பார்வையிலும் இரவு நேர குளிர்ந்த காற்றின் குளுமையிலும் உடல் சிலிர்க்க வெட்கத்தோடு தலைகுனிந்து நின்றவளுக்கு தங்கள் இருவருக்குமே இடையிலான அந்த பேச்சற்ற அமைதி ஏதோ செய்ய அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாது தடுமாறி நின்றவள் தடுமாற்றத்தை உணர்ந்தானோ அவனும் அவள் தயக்கம் போக்கும் பொருட்டு சாதாரணமாய் பேச்சை ஆரம்பிக்க எண்ணி அவளிடம் அவள் படிப்பு சம்பந்தமாய் கேள்வி எழுப்பிட அதில் தெளிந்தவள் அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினான்.

அவள் பற்றி அனைத்து தகவலுமே முன்னமே தெரிந்திருந்தாலுமே அவள் வாயால் கேட்க எண்ணி அவளிடம் பேச்சை வளர்க்க அவளுமே அவள் படிப்பு முதற் கொண்டு அவளுக்கு பிடித்தது பிடிக்காதது அவள் பொழுது போக்கு என அனைத்தையும் மடைதிறந்த வெள்ளமாய் கொட்டித் தீர்த்தாள்.

இத்தனை நாள் யாரிடமும் தன் விருப்பத்தை பகிர்ந்து கொள்ளாத தாக்கமோ இல்லை இவன் தனக்கே தனக்கான ஓர் உறவு என்று எண்ணியதாலோ அனைத்தையுமே அவனிடம் கிளிப்பிள்ளையாய் ஒப்புவித்தாள் பெண்.

அவனுக்குமே பேசா மடந்தையாய் அமைதியாய் இருக்கும் பெண்ணவளை விட வாய் ஓயாது முகத்தில் பல பாவனைகளைக் கொட்டிக் காட்டி தன்னோடு பேசும் பெண்ணவளின் பரிணாமத்தில் மனம் இலேசாக அவளையே விழி சிமிட்டாது பார்த்திருந்தவன் அவளின் திடீர் கேள்வியில் "ஹாங்" என்றான் ஏதோ தூக்கத்திலிருந்து விழிப்பது போன்று..

அவளோ "நான் ஒன்னு கேக்கவா?" தயக்கத்தோடு தன் முகம் பார்த்து கேட்டவளிடம் "ம்ம் கேளு" என்பது போல் பார்க்க அவளோ "அது... நா..நான் உங்கள எப்பிடி கூப்டட்டும்" அவள் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வியை அவனிடமே கேட்டு வைத்தாள்.

அவளுக்கு இங்கு வந்ததிலிருந்து கிடைத்த புதுப் புது உறவுகளுக்கு அழைப்பதற்க்கு ஒரு முறை பெயர் இருக்க தனக்குத் தாலி கட்டிய கணவனை எப்படி அழைப்பது என்ற குழப்பமும் தான் அவனை உறவு முறை கூறி அழைத்தால் என்ன சொல்வானோ என்ற தடுமாற்றமும் இருக்க எந்தவித விளிப்புமின்றி இதுவரை அவனோடு பேசியவளுக்கு இப்போது அவனை எவ்வாறு அழைக்க என்று அவனிடமே கேட்டிருந்தாள்.

அவள் கேள்வியில் அவளைப் பார்த்தவன் "உங்க ஊர்ல புருஷன பொண்டாட்டி எப்பிடி கூப்பிடுவாங்க?" என்றான் ஒற்றையாய் புருவமுயர்த்தி.

அதில் விழித்தவள் அவன் கேள்விக்கு பதிலாய் "அ..அது.. அத்தான் மச்சான் மாமான்னு சொல்லுவாங்க" என்றாள்.

அவனோ அவள் விழிகளை பார்த்தவன் "இதுல உனக்கு எப்பிடி கூப்ட தோணுதோ அப்பிடி கூப்பிடு இல்ல என் பேர சொல்லி வேணாலும் கூப்டலாம்" என்றான் கண்சிமிட்டி.

அவளோ "இல்ல பேர் சொல்லியெல்லாம் கூப்டல... நா..நான் மா..மான்னு கூப்டுறேன்" என்றாள்.

அவனோ இதழ்ம டித்து சிரித்தவன் தலையசைத்து அனுமதி வழங்கிட அத்தோடு அவளும் அமைதியாய் வான்வெளியை ரசிக்க தொடங்கினாள்.

சிறிது நேரம் மொட்டை மாடியில் நின்றவளுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்ற கண்ணை கசக்கியவள் "எனக்கு தூக்கமா வருது போலாமா?" என்க தலையசைத்தவன் அவளை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

அவளோ தூக்க கலக்கத்தில் மஞ்சத்தில் சரிய அவனோ அவளையே பார்த்து நின்றான்.

தலையணையில் வசதியாய் தலை வைத்து கண்களை மூடிக் கொண்டவளுக்கு என்ன தோன்றியதோ சற்றே விழி திறந்து தன்னையே பார்த்து நின்றவனிடம் "குட்நைட் மா..மா" என்று கூறிக் கொண்டே தூங்கிப் போனாள்.

அவள் மாமா என்றழைப்பில் அவன் முகத்தில் மந்தாசகப் புன்னகை தோன்ற சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு அவள் நெற்றியில் பட்டும் படாமல் இதழொற்றி "குட் நைட் ஏஞ்சல்" என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

......

இங்கு தன்னறையில் தூக்கம் வராது அமர்ந்திருந்த சக்தியின் எண்ணம் முழுவதும் தான் இங்கு வந்த காரியத்தை எவ்வாறு செயல்படுத்த என்பதே ஓடிக் கொண்டிருக்க யோசனையோடு அமர்ந்திருந்தவன் அறைக் கதவு தட்டப்படும் ஓசையில் யோசனை களைந்து எழுந்து சென்று கதவைத் திறக்க அவன் முன் நின்றிருந்தான் கௌசிக்.

அவனை அந்நேரம் அங்கு எதிர்பாராதவன் ஒரு கணம் அதிர்ந்து அவனை பார்த்திட அவன் முகம் காட்டிய அதிர்வில் புன்னகைத்தவன் "உள்ளே வரலாமா சக்தி" என்றான்.

அதில் தடுமாறினாலும் மறைத்துக் கொண்டவன் "வா..வாங்கண்ணா" என்றான்.

அறைக்குள் நுழைந்தவன் மார்பிற்குக் குறுக்கே கைகட்டி அழுத்தமாய் சக்தியை பார்க்க அந்த பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று சக்தியின் மனதை ஆட்டம் காணச் செய்தது.

"ஏதாச்சும் ஐடியா கிடைச்சதா?" பட்டென்று வந்து வீழ்ந்த கேள்வியில் தலை நிமிர்த்தி திருதிருவென முழித்த சக்தியோ "எ..என்ன.. ஐ..டியா?" என்றான் தடுமாற்றத்தோடு.

"அதான் நீ வந்த வேலையை சிறப்பா செய்ய ஏதாச்சும் ஐடியா கிடச்சுதான்னு கேட்டேன்" என்ற கௌசிக்கின் பேச்சிலே அவனுக்கு தன்னைப் பற்றி ஏதோ தெரிந்திருக்கு என்ற யூகத்தை கணித்துக் கொண்ட சக்தியோ ஏதோ பேச வாயெடுக்க அவன் அறைக் கதவு மீண்டும் தட்டப்பட்டது.

அதில் கௌசிக்கோ சிறு இதழ் புன்னகையோடு "போ போய் திற உன் ப்ரெண்ட் தான் வந்திருக்கான்" என்றதும் மீண்டும் அதிர்வுடன் அவனைப் பார்த்த சக்தியோ "உ..உங்களுக்கு எப்பிடி தெரியும்?" என்றாலுமே அவனுக்கு மௌனச்சிரிப்பையே பதிலளித்தான் அவன்.

மீண்டும் அறைக்கதவு தட்டப்பட கௌசிக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை நோக்கிச் சென்றவன் அதை திறந்திட அவனை அணைத்துக் கொண்டான் தீக்ஷன்.

"டேய் மச்சான் எப்பிடிடா இருக்க?.. ஸாரிடா கீழே எல்லார் முன்னாடியும் தெரிஞ்ச போல காட்டிக்க முடியல.. ரொம்ப தைங்ஸ் மச்சி என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண நீ வந்ததுக்கு" சக்தியின் பதிலை எதிர்பார்க்காது அவனாகவே படபடவென பேசிக் கொண்டே போனவன் ஏதோ தோன்ற "மச்சான் நீ எங்க ப்ரெண்டுனு அண்ணன் கிட்ட காமிச்சுக்காதடா அப்புறம் ஏதாச்சும்..." என பேசியபடியே திரும்பியவன் அவனெதிரே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து காட்சி தந்த அண்ணனைக் கட்டு வாரர்த்தைகள் வாயுள்ளே அமுங்கிப் போய்விட விழிகள் மிரள "அ....அண்ணா" என எச்சில் விழுங்கியவன் தொண்டைக் குழி ஏறி இறங்கியது அவனுக்கு.

கௌசிக்கோ மார்புக்குக் குறுக்கே கைககட்டி அமர்ந்து அவனை அழுத்தமாய் ஆழ்ந்து பார்த்த பார்வையிலே தன் தவறு உணர அவனிடம் பேச ஆரம்பிக்க முதலே கதவு மீண்டும் தட்டப்பட சக்தியோ கதவை திறந்தான்.

அங்கு நின்றது வேரு யாருமல்ல தீக்ஷியே.
நண்பனோடு பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் அவனை தேடி வந்திருந்தாள்.

"டேய் சக்தி எப்பிடி இருக்க" கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவள் அங்கே நின்ற தீக்ஷனைக் கண்டு "டேய் தடியா நீயுமா இங்க இருக்க.. அப்போ என்ன விட்டுடு நீங்க ப்ளான் பண்றீங்களாடா" என கேட்டவளை இருக்கையில் அமர்ந்தவாறே சற்று உடல் வளைத்து பார்த்த கௌசிக்கை கண்டு பேஷ்டடித்தவள் போன்று ஜெர்க்காகி நின்றாள்.

அவளையும் அழுத்தமாய் பார்த்த கௌசிக்கோ இருக்கையை விட்டு எழுந்து நின்று முதுகு பின்னே கை கட்டி நிமிர்ந்த தோரணையில் நின்றவன் "சோ... மூனு பேருமே கூட்டு களவாணிங்க இல்லையா?" அழுத்தமாய் கேட்க மூன்று பேருமே தலை கவிழ்ந்தனர்.

"என்கிட்டயே உங்க திருட்டுத் தனத்தை காட்டிட்டிங்க" என்க பதறித் தான் போயினர் அண்ணன் தங்கை இருவரும்.

"அண்ணா ஸாரி ண்ணா.. " பதற்றத்தோடு மன்னிப்பை கேட்டவர்களை கை நீட்டி பேச வேண்டாம் எனத் தடுத்தவன்..
"எனக்கு ஒன்னு விடாம எல்லாத்தையும் இப்போ சொல்லுங்க அப்புறம் நான் உங்க ஸாரிய அக்செப்ட் பண்ணலாமா வேணாமானு யோசிக்குறேன்" தாடையை தடிவியபடி கூறியவனுக்கு ஒரு சில விடயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

என்ன தான் மூன்று பேருமே நண்பர்கள் என்று அறிந்தாலுமே சக்தியின் வருகையின் காரணி வேறாக இருக்க.. இன்று வந்த தீக்ஷன் தீக்ஷி இருவருமே சக்தியை கண்டு கொள்ளாது யாரென்றே தெரியாது அவனை காட்டிக் கொண்டது வேறு அவனுக்குள் குழப்பத்தை விதித்திருந்தது. அது ஏன் என தெரிந்து கொள்ளவே சக்தியை தேடி வந்தவனுக்கு தீக்ஷனதும் தீக்ஷியினதும் பேச்சில் ஏதோ காதல் விடயம் என்பது மட்டும் புரிந்து போக அதையே அவர்கள் வாயால் தெளிவுபடுத்தட்டும் என்று அவர்களையே பேச வைத்தான்.

அண்ணனின் கேள்வியில் அனைத்தையும் ஒன்றுவிடாது கூறத் தொடங்கினான் தீக்ஷன்.
சக்தி அவர்களின் முகநூலில் சாதாரண நண்பனாய் அறிமுகமாகியவர்கள் அதன் பின் எப்போதோ முகநூலில் அவர்கள் பதிவிட்ட குடும்ப புகைப்படத்தை வைத்து காவேரி தன் அக்கா என தெரிந்து தாங்கள் சொந்தம் என அறிந்த பின்னரே அவர்களின் நட்பு மேலும் வலுப்பெற்றது என்றும்.. அதன் பின் ஆறு மாதம் முன்னர் சக்தி இந்தியா வந்ததும் அதன் பின் நேரடி சந்திப்பில் மேலும் தங்கள் நட்பு பிணைக்கப்பட்டு விட்டது என்றும் முதலில் சக்திக்கும் தங்களுக்குமிடையேனா நட்பை கூற கௌசிக்கோ அதை நான் அறிவேன் என்பது போல் கேட்டிருந்தான்.

பின் தீக்ஷனோ தான் காலேஜில் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அதற்கு வீட்டில் உள்ளவர்களிடம் பேச உள்ள தயக்கத்தையும் அவன் சக்தியிடம் கூறியிருக்க அவன் தான் நான் உதவி செய்கிறேன்... நானும் அக்காவை பார்க்க செல்கிறேன் அங்கே வைத்து உன் காதலுக்கு உதவி செய்கிறேன் என அவன் கூறியது என அனைத்தையும் கூறிட கௌசிக்கோ எதுவுமே பேசாது அமைதியாய் பார்த்திருந்தான்.


அவன் அமைதி அவர்களுக்கு கலக்கத்தைக் கொடுக்க "அண்ணா" என்றழைத்தனர் இருவரும்.

அவனோ ஒரு பெருமூச்சுடன் "சோ உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண தான் சக்தி இங்க வந்தான் இல்லையா?" என சக்தியை பார்த்தபடி தீக்ஷனிடம் கேட்க ... அண்ணனின் கேள்வியில் உட் பொதிந்திருந்த அர்த்தம் புரியாதவனாய் அவன் ஆமென்க.. சக்தியோ அந்த கேள்வியின் அர்த்தம் புரிந்து தலை கவிழ்ந்தான்.
அவன் அதற்கு மட்டும் வரவில்லையே என அவன் மனசாட்சி கூறியது.

"ஓகே லீவிட்.. இந்த விசயத்தை நான் பார்த்துக்குறேன்.. நீயும் உங்க அப்பாகிட்ட சொல்லிடு" சித்தப்பா என்ற வார்த்தையை தவிர்த்து அவன் கூற அண்ணனை தயக்கமாய் பார்த்த தீக்ஷனோ..

"அண்ணா அப்பா.." என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்தியவனை தீர்க்கமாய் பார்த்தான் கௌசிக்.

"என்னாச்சி?" என்க..

"அப்பா முன்ன மாதிரி இல்லண்ணா.. பெரியப்பா இறந்தப்புறம் ரொம்பவே மாறிட்டாரு.. எங்க கூட எல்லாம் ஒழுங்கா பேசுறதே இல்ல" சோகம் இழையோட கூறியவனை புருவம் நெறிய பார்த்திருந்தான் கௌசிக்.

அவனுக்கு தந்தை இறப்பிலிருந்தே சித்தப்பாவின் மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் மொத்தமாய் துடைக்கப்பட்டிருந்தது. சொந்த அண்ணனை நம்பாது ஓரமாய் கை கட்டி அமைதியாய் அனைத்தையும் பார்த்து நின்றவரின் அன்றைய தோற்றம் இன்றுமே அவன் கண்ணில் தோன்றி மறைய அவனோ உள்ளம் இறுக நின்றிருந்தான்.

அவன் இறுகிய தோற்றம் கண்டு
"அண்ணா ஸாரிணா எங்க மேல கோபமா?" முகம் வாட கேட்ட தங்கையின் குரலில் அவள் புறம் திரும்பியவன் அவளை நெருங்கி சிறு புன்னகையுடன் "கோபமெல்லாம் இல்லடா.. ஆனா என் கண்காணிப்புல இருந்து சில விசயங்கள தவற விட்டுடேன்னு தான் யோசனை" என்றான்.

கௌசிக்கோ தன் குடும்பத்தை விட்டு விலகியிருந்த காலத்தில் கூட தன்னைச் சார்ந்தவர்களை தன் கண்காணிப்பின் கீழ் தான் வைத்திருந்தான். தீக்ஷன் தீக்ஷி தொலைதூரமாய் கல்வி கற்கச் சென்றாலுமே அவர்கள் மீதும் தன் பாதுகாப்பு கண்காணிப்பை வைத்திருந்தவனுக்கு தெரிந்ததே சக்தியினுடனான புது நட்பு.. அதுவும் கூட சக்தி இந்தியாவிற்கு வந்த இந்த ஆறுமாத காலப் பகுதியிலே அவர்களை சந்திக்கச் சென்ற வேளையிலே அவனுக்கு அவர்களின் நட்பும் தெரிய வந்திருக்க இவன் யார் என தன் ஆட்களின் மூலம் விசாரித்தவனுக்கு சக்தி பற்றி முழு ஜாதகமும் கைக்கு வந்து சேர்ந்தது.

அதன் பின் நிச்சயம் அவன் தன்னைத் தேடி வருவான் என அவன் வருகைக்காக இவன் காத்திருக்க அவனும் இதோ இங்கு அவர்கள் வீட்டில் வந்து சேர்ந்துவிட்டான்.

கௌசிக்கின் கண்காணிப்பு என்ற வார்த்தையில் நிமிர்ந்து அவனைப் புரியாது பார்த்தனர் இருவரும்.

அவர்களின் பார்வையில் "நீங்க மூனு பேரும் ப்ரெண்ட்ஸ்னு முன்னாடியே தெரியும்.. பட் இந்த லவ் மேட்டர் தான் புதுசு" என்ற அண்ணனை திகைப்பும் சங்கடமுமாய் பார்த்தான் தீக்ஷன்.

"ஸாரிண்ணா" என்றவன் தோள் தட்டி "இட்ஸ் ஓகே தீக்ஷா.." என்றவன் மூவரிடமும் "இனி எந்த ப்ளானும் நீங்க போடத் தேவையில்லை நான் பார்த்துக்குறேன்" என்க அதில் மறைமுகமாய் இருந்த தனக்கான எச்சரிக்கையில் தன்னால் தலையசைத்தான் சக்தி.

கௌசிக்கோ தம்பி தங்கை இருவரையும் அறைக்குள் அனுப்பி வைத்தவன் சக்தியிடம் "நீ எதுக்காக இங்க வந்திருக்கன்னு எனக்கு தெரியும் பட் என்னை தாண்டி உன்னால அவ சொன்ன வேலையை முடிக்க முடியாது.. சோ இனி இந்த வேலையை பத்தி நீ யோசிக்காத.." தீர்க்கமாய் கூறியவன் முகம் இளக.. "ஐ க்னோ.. நீ இது எதுக்காக செய்றேன்னு.. டோன்ட் வொர்ரி நீ பீல் பண்ற போல எதுவும் நடக்காது" என்று அவன் தோள் தட்டி கூற

அப்போதும் தெளிவில்லாது கலக்கத்தோடு நின்றிருந்தான் சக்தி.

அவன் முகம் பார்த்தவன் "அவ்வளவு லவ்வா?" என்றவனிடம் "என் லைப்பே அவ தான்ண்ணா.. அவளுக்காக தான் நான் இந்த வேலையை செய்யவே ஒத்துகிட்டேன்" இனி மறைக்க எதுவுமில்லை என்று அவனே வாய் திறந்தான்.

"ஐ அண்டெர்ஸ்டான்ட் சக்தி.. உன் லவ்வ சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு சரியா?" என்றவன் ஏதோ யோசித்து "ஆமா அந்த பிசாசுட நம்பர் இருக்கா?" என்றதும் திருதிருவென்று முழித்தான் சக்தி.

கௌசிக்கோ சிரித்துக் கொண்டவன் "அதுதான் உன்னோட அண்ணியார் நம்பர் இருக்கா?" எனக் கேட்க அப்போது தான் அவன் யாரை கேட்கிறான் என்பது புரிய ஆமென்றவன் அவனுக்கு அவள் தொலைபேசி இலக்கத்தை கொடுத்தான்.

"ம்ம் இதோட நூத்தி பத்தாவது நம்பர்" என்று சலிப்பாய் கூறியவனை பார்த்து முழித்தான் சக்தி.

"என்ன பார்க்குற.. மேடம் எனக்கு தெரியக் கூடான்னு ஒவ்வொரு நாளைக்கு ஒரு தடவை நம்பர் மாத்திடுவாங்க." என்றவன் அவனிடம் விடைபெற்று செல்ல அவனைத் தடுத்தான் சக்தி..

"அவங்களுக்கு தெரிஞ்சா நிச்சயமா என்ன சும்மா விடமாட்டாங்க.. ப்ளீஸ் நான் தான் நம்பர் தந்ததுன்னு சொல்லிடாதிங்க" சிறு மிரட்சியோடு பேசியவனைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கிய கௌசிக்கிற்கோ இதற்கு காரணமானவளை எண்ணி அவன் புன்னகை மேலும் விரிந்தது.

சக்தியிடம் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு வெளியேறிய கௌசிக்கின் இதழ்களோ "நீ இன்னும் மாறவே இல்ல ராதி" என அவளைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டது.

அறையை விட்டு வெளியேறியவனுக்கு தீக்ஷன் கூறியது நினைவு வர அவனின் சித்தப்பாவின் எண்ணம் அவன் மண்டையை குடைய ஆரம்பித்தது.

அவரின் யோசனையோடே நடந்து சென்றவன் தாயின் அறையை கடக்கும் போது எண்ண தோன்றியதோ அவர் அறையினுள் நுழைய அங்கு இன்னுமே தூங்காது அமர்ந்திருந்தவரைக் கண்டு "ம்மா.. இன்னும் தூங்கலையா?" என்று கேட்க அவரோ அவன் அரவத்தில் திரும்பியவர் கையில் வைத்திருந்த புகைப்படத்தை மறைக்க..அதையும் கண்டு கொண்டான் அவன்.

"வா கண்ணா.. இனி தூங்கத் தான்.. நீ இன்னுமா தூங்கல மதி எங்க தூங்கிட்டாளா?" குரலில் தழுதழுப்புடன் அவசரமாய் பேசியவரை கூர்மையாய் பார்த்தவனுக்கு அவரின் கண்களின் சிவப்பே அவர் அழுதிருக்கிறார் என்பதை பறைசாற்றியது.

தாயை நெருங்கியவன் அவர் கரங்களைப் பற்றி "என்னம்மா" மென்மையாய் கேட்டிட முழுக்கென்று கண்களில் நீர் திரள மகனைப் பார்த்தார் கமலம்.

தாயின் கண்ணீரில் அவரின் மனநிலை எதுவென உணர்ந்தவனுக்கு உள்ளம் இறுகிப் போனது..

அவர் கண்ணீர் சிந்துவது என்றால் இரண்டே விடயத்திற்கு தானே.. ஒன்று தாலிகட்டி நிறைவான வாழ்க்கையை தந்த கணவனின் மறைவு என்றால் மற்றையது அவர் பத்து மாதம் ஈன்றெடுத்த புத்திரனின் பிரிவின் துயரம் அல்லவா..

இப்போது அவர் கண்ணீர் வடிப்பது அவர் ஈன்றெடுத்த மகனின் பிரிவிற்காக என்பதை அறியாதவனா அவன்..

அவர் கண்ணீருக்கான காரணம் அவன் அறிந்தாலுமே அவனால் என்ன செய்திட முடியும்.. இந்த பாசத்தையும் தாயின் அன்பையும் உணர வேண்டியவனோ இது எதுவுமே தேவையில்லையென்று உதறிவிட்டு பாதை மாறிச் சென்றுவிட்டான் அல்லவா.. அதை நினைக்கும் போதே அவன் மீது கொலைவெறி ஆத்திரம் எழ தாயின் முகத்திற்காக தன்னையே அடக்கிக் கொண்டவன் அவர் கண்ணீரை துடைத்து..

"எத பத்தியும் யோசிக்காம தூங்குங்கமா.." என்று அவரை ஆறுதல் செய்து அவர் தூங்கும் வரை அவர் அருகே அமர்ந்திருந்தான்.

அவரின் சீரான சுவாசத்திலே அவர் உறங்கிவிட்டார் என எண்ணியவன் கரமோ அவர் மறைத்து வைத்த புகைப்படத்தை எடுத்தது.

அதில் அந்த பதினைந்தே வயதிலே இறுக்கம் சூழ்ந்த முகத்துடன் நின்றிருந்த பாலகனைக் கண்டு இவன் முகத்திலோ வேதனையின் சாயல்.

அவன் மனதில் எப்போதும் போலவே எழுந்தது அந்த கேள்வியொன்றே "இவனுக்கு அப்படி என்ன அநியாயம் செய்தேன் என்று என்னை கொலை செய்ய முயன்றான்" என்று மீண்டும் அதே கேள்வி மூளையை குடைய இதற்கு மேல் எதை பற்றியும் சிந்தனை செய்ய முடியாத நிலையில் மனம் தளர்ந்தவன் அறையை விட்டு வெளியேறினான்.

தளர்ந்த மனதோடு தனதறைக்குள் நுழைந்தவனுக்கு மேலும் அதிர்ச்சியளிப்பது போன்று அறையில் அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்..



தொடரும்...


 

Habi

Moderator
அத்தியாயம் - 30

மனதில் உண்டான தளர்வுடன் அறைக்குள் நுழைந்தவன் அங்கே கண்ட காட்சியில் உறைந்து நின்றான்...

கை கால்கள் வெட்டி வெட்டி துடித்துக் கொண்டிருக்க வாயிலிருந்து நுரை தள்ள வலிப்பு வந்தவள் போல் துடித்துக் கொண்டிருந்த மனைவியை கண்டு ஒரு நொடி சிலையென விறைத்து நின்றவன்
அடுத்த நொடி வில்லிருந்து புறப்பட்ட அம்பாய் பாய்ந்து அவளை நெருங்கியிருந்தான்.

"மதி.. மதி" கன்னம் தட்டி அவனழைத்த அழைப்புகள் எதுவுமே பெண்ணவளை சென்று சேரவில்லை போல.. நிலமையின் தீவிரம் உணர்ந்தவன் சட்டென்று அவளை கைகளில் ஏந்தியிருந்தான்.

சற்று முன்னர் பெண்ணவளை ஏந்திய போது இருந்த மனநிலைக்கு முற்றாக மாறிய மனநிலையில் உள்ளம் படபடக்க தன்னவளை ஏந்தியவன் வேகமாய் அவ்வறைவிட்டு வெளியேறி கீழே இறங்கியவன் "சிவா" என கத்தியதில் வீட்டிலிருந்த அனைவருமே தூக்கம் களைந்து என்னவோ ஏதோ என பதறியடித்து அறையிலிருந்து ஓடி வந்தனர்.

"அண்ணா என்னாச்சு" என்றவனிடம்
"சிவா வண்டியை எடு க்விக்" கத்தியவனின் பதட்டக் குரலும் அவன் மதியை தூக்கியிருந்த கோலமுமே நிலைமியின் தீவிரத்தை உணர்த்த வேகமாய் வண்டியை இயக்க ஓடினான்.

"அய்யோ மதிம்மா" என பதறிய பூரணியிடம் "அத்தை என்னோட வாங்க" என அவரையும் அழைத்துக் கொண்டே வண்டியிலேறிட வண்டியோ ஹாஸ்பிடல் நோக்கிப் பறந்தது.

வீட்டினர் அனைவரும் பயத்தில் உறைந்து நின்றனர்.. யாருக்குமே மதிக்கு என்ன ஆனது என்று தெரியாது பதற்றம் மனதை வியாபித்திருக்க தூக்கமின்றி ஹாலிலே அமர்ந்திருக்க ஒருவர் மட்டும் தான் நினைத்த காரியம் நிறைவேறிய சந்தோஷத்தில் உள்ளுக்குள் மகிழ்ந்தவர் சிரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அவசரமாய் மருத்துவமனை வந்து சேர்ந்திட மதியை கைகளிலேந்தியவாறு உள்ளே நுழைந்ததுமே நிலமையை உணர்ந்து மதியை அவசர சிகிச்சைப் பிரிவினில் சேர்த்து அவளுக்கான ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கப்பட்டது.

கௌசிக் சிவா பூரணி மூவரும் அறைக்கு வெளியே காத்திருந்தனர்.

கௌசிக்கின் உள்ளமோ புரியாத ஒரு படபடப்பில் அடித்துக் கொண்டது.. எப்போதும் நிதானம் இழக்காதவன் இன்று முற்றிலுமாய் நிதானமிழந்து தான் போனான்.

அவன் வேலையில் எத்தனையோ கொலைகள் மரணங்களை கண்கூடாக பார்த்தவனுக்கு ஏனோ அந்த நிலையில் பெண்ணவளைக் கண்ட நொடி அவன் மொத்த உடலுமே மரத்துத் தான் போனது அதிர்ச்சியில்..

அவள் மீது காதலா என்றால் தெரியவில்லை ஆனால் அவனுக்கு அவள் வேண்டும் அவளருகாமை வேண்டும் சற்று முன்னர் குழந்தையாய் வானத்தை பார்த்து ரசித்திருந்தவள் சிரிப்பு வேண்டும் அவனை மாமா என்றழைத்த அழைப்பு வேண்டும்.. எல்லாமுமாய் அவள் வேண்டும் என அவன் மனது அடித்துக் கொள்ள நிமிர்ந்து அவளிருக்கும் அறையையே வெறித்துப் பார்த்திருந்தான்.

தலையில் இருகையை வைத்து நிமிர்ந்து வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்த அண்ணனின் தோற்றம் சிவாவிற்கு என்னவோ போல் இருக்க அவன் தோளில் ஆதரவாய் அழுத்தியவன் "அண்ணா மதிக்கு ஒன்னும் ஆகாது தைரியமா இரு" என்க அப்போதும் அசைவின்றி அமர்ந்திருந்தான் அவன்.

பூரணிக்கோ தான் பார்த்து வளர்ந்த பையன் எதற்கும் கலங்காது உறுதியோடு நிற்பவன் இப்போது அமர்ந்திருந்த கோலமே அவனின் மனதின் ஓட்டத்தை உணர்த்த அவனருகே அமர்ந்தவர் அவன் தலை வருடி "ஒன்னுமில்லடா கண்ணா" என்றிட அவர் கரங்களை கெட்டியாய் தன் கரத்தினுள் பொதித்துக் கொண்டான்.

அதே நேரம் சிகிச்சை முடித்து அறையை விட்டு வெளியேறி வந்த மருத்துவரைக் கண்டு அவரிடம் விரைந்தனர் மூவரும்.

"டாக்டர் இஸ் சீ ஆல்ரைட்" என்று கேட்டவன் கேள்வியில் இருந்த தெளிவில் சற்று முன் இவன் தான் அப்படி வெறித்த பார்வையுடன் இருந்தானா என்பது போல் சிவா பூரணி இருவருக்குமே நினைக்கத் தோன்றியது.

டாக்டரோ அவன் கேள்வியில் "நத்திங் சீரியஸ் கௌசிக் நவ் சீ இஸ் ஆல்ரெய்ட் ஆனா அவங்க உடம்பளவுல ரொம்ப வீக்கா இருக்காங்க அன்ட் இந்த க்ளைமட் குளிரும் அவங்களுக்கு ஒத்துப் போகாமல் தான் அவங்களுக்கு பிக்ஸ் வந்திருக்கு" என்றார்.

"இப்போ போய் நாங்க பார்க்கலாமா டாக்டர்" பூரணியின் கேள்விக்கு
"எஸ்.. அவங்களை தொந்தரவு பண்ணாமல் போய் பாருங்க" என்றவரிடம் நன்றியை தெரிவித்து மூவருமாய் உள்ளே நுழைந்திட கையில் ட்ரிப்ஸ் ஏறிட வாடிய கொடியாய் படுத்திருந்தாள்.

கண்மூடி படுத்திருந்தவள் தலை வருடிய பூரணிக்கோ கண்கலங்கிப் போனது.. புன்னகை முகமாய் வலம் வந்த பெண்ணவளின் வாடிய தோற்றம் கண்டு..

கௌசிக்கின் பார்வை முழுவதும் அவள் மீதே.. அவளை பார்க்கும் போது உள்ளுக்குள் மெல்லிய வலி ஊடுறவ அமைதியாய் அவளையே பார்த்து நின்றான்.

நேரம் நகர கௌசிக்கோ "சிவா நீ அத்தையை அழைச்சிட்டு வீட்டுக்கு போ நான் மதிக் கூட இருக்கேன்.. நீங்க காலைல மதிக்கு தேவையானத எடுத்துட்டு வாங்க" என்றதும் மறுத்த பூரணியை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தவன் மதியின் அருகே சென்றமர்ந்து அவளின் ட்ரிப்ஸ் ஏற்றிய கரத்தை மென்மையாய் வருடிவிட்டான்.

சிறிது நேரத்தில் மயக்க மருந்தின் வீரியம் குறைந்து கண்விழித்தவள் தன் முன்னே அமர்ந்திருந்தவனைக் கண்டு சோபையாய் புன்னகைக்க அவனும் மென்மையாய் புன்னகைத்தான்.

அவன் முகத்திலே பார்வையை பதித்திருந்தவளின் கண்கள் கலங்கிட அவனோ "என்னாச்சுடா வலிக்குதா?" அவளின்ஊசி ஏற்றப்பட்ட கரத்தை மென்மையாய் வருடிவிட அவளோ கண்களில் கண்ணீர் வழிய இல்லை என தலையசைத்தாள்..

"அப்போ எதுக்கு இந்த அழுகை" அவள் கண்ணீரை துடைத்து கேட்க..

"பயமாயிருக்கு" என்றவளின் பதிலில் அவளைப் பார்த்தவன் "எதுக்கு பயம்" என்றான் புரியாது.

"நான் சீக்கிரம் செத்து போய்டுவோனோன்னு பயமா இருக்கு" என்றாள் கண்களில் நீருடன்.

அவள் சொன்ன பதிலில் சிறு திடுக்கிடுலுடன் அவளைப் பார்த்தவன் "ப்ப்ச் என்ன பேச்சு மதி.. உனக்கு ஒன்னுமில்லை இந்த குளிர் உனக்கு ஒத்துக்காமல் தான் இப்படி நடந்ததுன்னு டாக்டர் சொல்றார் வேற ஒன்னுமில்ல யூ ஆர் ஆல்ரெய்ட்" என்று அழுத்தமாய் சொல்ல அவள் மறுத்து தலையாட்டினாள்.

அவள் மறுப்பில் அவன் புருவம் இடுங்க கேள்வியாய் அவள் முகம் பார்த்தான்..

"எனக்கு இப்பிடி முன்னாடியும் ஆகியிருக்கு.. அப்பா இறந்த போ கூட இப்பிடி தான்" என்றாள்...

அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தவன் அவள் தலை வருடி "அப்படி ஒன்னும் ஆகாது சரியா ஒரு சிலவங்களுக்கு இப்படி ஆகுறது நேச்சர் தான்.." என்றவன் "நீ தான் டாக்டர்க்கு படிக்கப் போறியே நீயே எல்லாத்தையும் தெரிஞ்சிப்ப புரியுதா? இனி இப்பிடி எல்லாம் பேசக் கூடாது" சிறு கண்டிப்பாய் கூறிவிட்டு அவளை தூங்கச் சொல்லியவன் டாக்டர் அறை நோக்கிச் சென்றான்.

டாக்டரும் அவனின் வரவை எதிர் பார்த்தவர் போல அவனை உள்ளே அழைத்தார்.

அவர் கௌசிக்கின் குடும்ப வைத்தியர் ஆகையால் அவரிடம் தனக்குண்டான சந்தேகங்களை கேட்டிடவே அவரிடம் சென்றவன் மதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க அவரும் தான் சொல்ல வேண்டியதை அவனிடம் கூறினார்.

"கௌசிக் இந்த பிரச்சனை அவங்களுக்கு இப்பிடி அடிக்கடி வந்தா அவங்க உயிருக்கே ஆபத்தா முடியும்" என்றதும் உள்ளம் திடுக்கிட நிமிர்ந்தான் அவன்.

அவரோ மேலும் தொடர்ந்தவராய் "அது மட்டுமில்ல கௌசிக் அவங்க உடம்பு ரொம்ப பலகீனமா இருக்கு...ஐ க்னோ உங்களுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கு பட் உங்க வாழ்க்கையைத் தொடங்க இது சரியான நேரமில்லை. அவங்களால குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு உடம்புல சக்தியில்லை" என்று மதியின் உடல் பற்றி கூறிட கூர்மையாய் கேட்டிருந்தவன்

"இத சரிபடுத்த முடியாதா டாக்டர்" என்க.. அவரோ "இவங்களுக்கு இந்த ப்ரோப்ளம் சின்ன வயசுலயிருந்தே இருக்குறதுனால இத குணப்படுத்துறது கஷ்டம்" என்றதும் அவன் புருவங்கள் இடுங்க..

"மதிக்கு இந்த ப்ரோப்ளம் சின்ன வயசுலயிருந்தே இருக்குன்னு உங்களுக்கு எப்பிடி தெரியும்" என்று சந்தேகமாய் கேட்டதும் ஒரு நொடி அதிர்ந்து விழித்தவர் பின் "அ..அது ட்ரீட் பண்ணும் போது நான் தான் அவங்ககிட்ட இத பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன்" என்றதும் ஒரு தலையசைப்புடன் அவன் ஏற்றதுமே அவருக்கு சற்று படபடப்பு குறைந்தது.

"ஓகே கௌசிக் முடிஞ்சளவு அவங்களுக்கு அதிர்ச்சியோ பயமோ ஏற்படாதவாறு பார்த்துக்கங்க.. இன்னொரு முறை இத போல ஆகிடுச்சுன்னா அவங்க உடம்பு தாங்காது.. சோ பீ கேர்புள்" என்றதும் சரி என தலையசைத்தவன் மதியின் உடல் நிலை குறித்து மேலும் சில தகவல்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் அறையை விட்டு வெளியேறியதுமே படபடத்த நெஞ்சை நீவி விட்டவர் ஒரு பெருமூச்சுடன் யாருக்கோ தன் அழைப்பேசியில் செய்தியை அனுப்பிவிட சிறிது நேரத்தில் அந்த எண்ணிலிருந்து அவர் மொபைலுக்கு வந்த செய்தியை கண்டு நிம்மதி பெருமூச்செறிந்தார்.

கௌசிக்கோ மதியின் அறைக்குள் நுழைந்தவன் விட்டத்தை வெறித்து படுத்திருந்தவளைக் கண்டு "என்ன மதி தூங்கலையா?" என்க..

அதில் அவன் புறம் பார்வையை திருப்பியவள் "ஹாங் வந்தீட்டிங்களா டாக்டர் என்ன சொன்னாரு.. எ..எனக்கு எதுவும் ஆகாதே" எனக் கேட்டு அவன் முறைப்பில் நாக்கை கடித்துக் கொண்டு தலை குனிந்திட அவனோ "இங்கப்பாரு இனி இப்பிடியெல்லாம் பேசின நானே என் கன் எடுத்து போட்டுத் தள்ளிடுவேன் என்றான் மிரட்டும் தொனியில்...

"அச்செச்சோ வேணாம் வேணாம் நான் பேசல பேசல" வாயை கை கொண்டு மூடிக் கொண்டு அவனை மிரட்சியாய் பார்த்திட அவனோ அது என்ற பார்வையோடு அவளருகே இருக்கையில் அமர்ந்தவன் "மதி.. திடீர்னு ஏன் இப்பிடி வந்திச்சு.. நீ எதாச்சும் கண்டு பயந்திட்டியா?" டாக்டர் கூறியதை வைத்தே அவள் எதையோ கண்டு பயந்தே இந்த நிலை வந்திருக்குமோ என்று ஊகித்தவனாய் அவளிடம் கேட்க அவளோ வேகமாய் தலையசைத்தவள் கண்ணில் மிரட்சியோடு "அ...அது... ரூம்ல ரூம்ல" வார்த்தைகளை முழுதாய் கூறும் முன்பே முகம் முழுவதும் வியர்வையால் குளித்திட அவள் நிலை கண்டு தன் மடமையை எண்ணி நொந்து கொண்டவன் "ஹேய் மதிமா இங்கப் பாரு என்னப் பாரு ரிலாக்ஸ்.. ஒன்னுமில்ல ரிலாக்ஸ்" அவளை சமாதானம் செய்து தண்ணீரை புகட்டிட அதில் சற்றே ஆசுவாசமானவள்
மௌனமாகிட அவனோ "ரிலாக்ஸ் மதி நீ ஒன்னும்சொல்ல வேணாம் நாளைக்கு பேசிக்கலாம் இப்போ தூங்கு" என்க அவளோ மறுப்பாய் தலையசைத்தவள்

"அ..அங்க ரூம்ல தூங்கிட்டு இருந்தப் போ யா..யாரோ வந்தாங்க எனக்கு தூக்க கலக்கலத்துல யாருன்னு தெரியல நீங்க தானோன்னு நினைச்சேன்.. ஆனா அப்புறமா தான் ஏதோ என் கழுத்துல சுத்துற போலவே இருக்கவும் கண்முழிச்சப் போ தான் பார்த்தேன் அ..அங்க.. பா..பாம்பு ஒன்னு என் கழுத்த சுத்திடு இருந்திச்சு" என்று சொல்லும் போதே அக்கணத்தை மீண்டும் அனுபவிப்பவள் போன்று உடல் பயத்தில் சில்லிட்டு போக கண்கள் சொருகிட பேசியவளைக் கண்டு பயந்து போனவன் உடனடியாக அவளை இயல்புக் மீட்டிட அவள் கன்னத்தில் தட்டிட அதில் சற்றே இயல்பாகியவள் கண்கலங்க அவனைப் பார்த்தாள்.

அதிலே அவளின் மனநிலைபுரிந்தவனாய் அவள் தலையை வருடியவன் "ஒன்னுமில்லடா.. நீ தூங்கு.. நீ இப்போ சேஃபா இருக்க உனக்கு எதுவுமில்ல" மெல்லிய குரலில் அவளிடம் பேசிப் பேசியே அவனை தூங்க வைத்தவன் அவள் நன்றாக உறங்கிய பின்னரே அவளை விட்டு சற்றே தள்ளி வந்து அழைப்பில் சிவாவை அழைத்திருந்தவன் மதி கூறியதைக் கூறிட மறுபுறம் சிவாவோ அதிர்ந்து தான் போனான்.

"அண்ணா என்னண்ணா சொல்ற.. யாரு இந்த வேலைய பார்த்திருப்பா?" கோபமும் குழப்பமுமாய் கேட்டவனிடம்.

"யாருன்னு தெரியல சிவா.. ஆனா ஒன்னு மட்டும் உறுதி நிச்சயம் இந்த வேலையை வீட்ல இருக்குற யாரோ தான் செய்து இருக்கனும்" என்றவனுக்கு சந்தேகம் வந்தது என்னவோ மோகன்ராஜ் மீதே..

அவர் தான் இப்போது அவனிடம் அடிபட்ட பாம்பல்லவா நிச்சயம் அவனுக்கெதிராய் பழி தீர்க்க ஏதேனும் செய்திருப்பார் என அவன் உள் மனம் சந்தேகம் கொண்டாலுமே உறுதியாய் சொல்லிட முடியாது தன் மனதோடு அதை வைத்துக் கொண்டவன் சிவாவிடம் "இங்க பார் சிவா மதிக்கு என்னாச்சுனு வீட்ல உள்ளவங்க கேட்டா பாம்பு கடிச்சிடுச்சின்னு சொல்லு." என்றிட..
அவனோ "ஏன்" என்றான் கேள்வியாய்.

"ப்ச்ச்சு சொன்னத செய் சிவா அத்தை கிட்டயும் சொல்லு நான் அப்புறமா எல்லா விளக்கத்தையும் சொல்லுறேன்" என்று விட்டு போனைக் கட் செய்தவன் மூளையோ படு தீவிரமாய் யோசனையில் மூழ்கியது.

அவன் எண்ணப்படி மதிக்கு உடலளவில் இருக்கும் பிரச்சனை நிச்சயமாய் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை அப்படியென்றாள் அறைக்குள் பாம்பை விடுத்தவன் நிச்சயம் அது மதியை தீண்ட வேண்டும் என்று எண்ணியே வைத்திருக்க வேண்டும்..என்று யோசித்தவனுக்கு இப்போது இருக்கும் நிலையை மதிக்கு பாம்பு கடித்து விட்டது என்பது போலவே கூற வேண்டும் என எண்ணிக் கொண்டே சிவாவிடம் அவ்வாறு கூறுமாறு கூறினான்.

"மதிக்கு தீங்கு நினைக்குற அளவுக்கு யாரு எதிரி... அதுவும் நம்ம வீட்ல.." நெற்றியில் தட்டி நீண்ட நேரம் கண்மூடி யோசித்தவனின் மூடிய விழிகளில் தோன்றிய விடை என்னவோ மோகன்ராஜ்ஜின் விம்பமே.

சீக்கிரம் இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நின்றிருந்தவனின் அலைபேசி அதிர்ந்து ஒலிக்க அதை எடுத்தவன் போன் திரையில் ஒளிர்ந்த மாதவ்வின் பெயர் கண்டு அழைப்பை ஏற்றான்.

"ஹலோ மாதவ்" என்றவனுக்கு பதிலாக மறுபுறம் பதட்டத்துடன் "டேய் கௌசிக்.. ஸ்டேஷன்ல பயர் ஆகிருச்சுடா..?"

"வாட் என்னடா சொல்ற.."

"ஆமாடா இப்போ தான் எனக்கு போன் வந்திச்சு நான் ஸ்டேஷனுக்கு தான் போய்ட்டு இருக்கேன்.. அங்க போய்டு என்ன நிலமைனு பார்த்துட்டு சொல்றேன்டா" என்றவன் அழைப்பை துண்டித்திருக்க கௌசிக்கோ நெற்றியை பிடித்தபடி இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

மினிஷ்டர் மணிகண்டனிற்கு எதிரான சாட்சிகள் ஆதாரங்கள் அனைத்துமே ஸ்டேஷனில் அவனறையில் பாதுகாப்பாய் வைத்துவிட்டு வந்தவனுக்கு இப்போது கேட்ட செய்தி அத்தனை உவப்பானதாக இல்லை..

எரிச்சலோடு நெற்றியை நீவி விட்டபடி அமர்ந்தவனுக்கு அடுத்தடுத்ததாய் முளையிடும் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்ற யோசனையே மனம் முழுவதும் வியாபிக்க அன்றைய இரவு அவனுக்கு தூங்கா இரவாகிப் போனது.

இங்கு வீட்டினுள் உள்ளவர்களிடம் கௌசிக் கூறியது போன்றே அனைவரிடமும் சிவா கூறிட பயந்தவர்களை சமாளித்து தூங்க அனுப்புவதற்குள் சிவாவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

ஒருவழியாய் அனைவரும் அவறவர் அறைக்குள் முடங்கிப் போக நள்ளிரவு நேரம் தோட்டத்தில் அந்த அரையிருட்டில் நின்று போனில் யாருடனோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

"நீ சொன்னத பண்ணிட்டேன்.. இதனால எனக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கோ" என்க..

மறுபுறத்தில் என்ன கூறப்பட்டதோ அவரோ "இல்ல அப்படியெதும் பண்ணிடாத இந்த சொத்து எனக்கு மட்டுமில்லை உனக்குமே சொந்தமானது.. நமக்கு மறுக்கப்பட்ட உரிமையை நாம தான் காப்பாத்திக்கனும்" என்றிட மறுபுறத்தில் ஏதோ கூற சரியென்று ஏற்று கொண்டதுமே மறுபுறம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அலைபேசி திரையை வெறித்துப் பார்த்தவர் மனமோ பழிவெறியில் கொதித்தது.

அடுத்த நாள் விடியலில் கௌசிக்கின் குடும்பத்தினர் அனைவருமே ஹாஸ்பிடலில் மதியைக் காண வந்திருந்தனர்.

ஒவ்வொருவராய் மதியை சென்று பார்த்து அவள் உடல் நிலை குறித்து நலன் விசாரித்து விட்டு கிளம்பிட மதிக்கு துணையாய் பூரணி கமலம் இருவரும் தங்கிக் கொண்டனர்.

கௌசிக்கும் வீடு சென்று வர சிவாவுடன் கிளம்பியிருந்தவன் போகும் வழியிலே சிவாவிற்கு அனைத்தையும் விளக்கி முடித்தவன் ஸ்டேஷனில் நடந்த தீ விபத்தை பற்றியும் கூறிட தலையை பிடித்துக் கொண்டான் சிவா..

"என்னண்ணா இது பிரச்சனைக்கு மேல பிரச்சனையா வந்து சேருது" சலிப்புடன் கேட்டவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் பெருமூச்சுடன் "தெரியல சிவா.. ஆனா ஏதோ பெருசா நடக்க காத்திருக்கோன்னு தோணுது" தன் மனவோட்டத்தை மறைக்காது தம்பியுடன் பகிர்ந்து கொண்டான்.

"ஸ்டேஷன்ல நடந்த தீ விபத்து அந்த மினிஸ்டரோட வேலையா இருக்குமோ " தனது சந்தேகத்தை சிவா எத்திவைத்திட "இருக்கலாம்" என்றான் அவனும்.

"சீக்கிரமா சென்னை போகனும் சிவா.. கமிஷ்னர் என்கிட்ட ஒப்படைச்ச புது கேஸ டீல் பண்ணணும் அதோட சேர்த்து இப்போ இந்த பிரச்சனையும் சமாளிக்கனும்.. அதுக்கு எல்லாம் முதல் நம்ம வீட்லயே பதுங்கியிருக்குற அந்த கருப்பாட கண்டுபிடிக்கனும்.." தீவிரமான குரலில் கூறினான்.

"வீட்ல உள்ளவங்கள்ள ஒருத்தர் தான் பண்ணியிருப்பாங்கன்னு எப்படி சொல்ற?" சிவாவிடமிருந்து வந்த கேள்வியில்
"நம்ம வீட்ல அந்த நேரம் வெளியிலயிருந்து ஆட்கள் வந்திருக்க முடியாது சிவா.. அப்படி வந்திருந்தா நிச்சயமா நம்ம வீட்டை சுத்தி நான் போட்டிருக்குற காவல்ல இருந்து தப்பியிருக்க முடியாது.." என்றதும் அண்ணனை ஆச்சர்யமாய் பார்த்தான் சிவா.

"ஆளுங்க போட்டிருக்கியா.. என்கிட்ட சொல்லவே இல்ல.."

"நீயே கண்டுபிடிச்சுயிருப்பேன்னு நினைச்சேன்.. ஏன்னா எல்லாமே நம்ம அப்பாக்கு விசுவாசமான விசுவாசிங்க தான்.. அவங்க கிட்ட தான் சொல்லிவெச்சேன்...
நம்ம சுத்தி நமக்கு தெரியாமலே நிறைய ஆபத்து நம்ம கழுத்த அறுக்க காத்திருக்குனு உனக்கு நல்லாவே தெரியும் அப்பிடி இருக்கும் போது எந்த பாதுகாப்பும் ஏற்பாடு பண்ணாம இருக்க முடியாதே.. அதுக்காகத் தான் இந்த ஏற்பாடு பண்ணேன்" என்றவன் சிறு இடைவெளிவிட்டு..

"நம்மள்ல ஒருத்தங்கள டார்கெட் பண்ணியிருந்தா கூட ஏதோ விட்ட பகைனு நினைச்சிருப்பேன் ஆனா மதிய டார்கெட் பண்றாங்கன்னா அதுவும் நம்ம வீட்லயிருக்குற ஒருத்தங்கன்னு பார்க்கும் போது தான் எனக்கு புரியல." என்றவனிடம்..

"எனக்கென்னமோ அந்தாள் மேல தான் சந்தேகமா இருக்கு.. ஏற்கனவே அவரு பல்ல பிடுங்கி வீட்ல ஓரமா ஒதுக்கி வெச்சிட்டோம்ங்குற கோபத்துல பண்ணியிருப்பாருன்னு தோணுது" என்றிட..

தனக்கு அதே சந்தேகம் தான் உள்ளது என்று கூறியவன் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற முடிவோடு வீட்டை அடைந்தவன் குளித்து தயாராகி மீண்டும் ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றான்.


அறையினுள்ளோ மதியோ உணவு உண்ண மறுத்து அலிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

பூரணி கமலம் இருவருமே அவளுடன் போராடி சோர்ந்து போய் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தனர்.

அந்த நேரம் கதவை திறந்து உள் நீ நுழைந்த கௌசிக் சிவா இருவரும் பார்த்து "என்னாச்சு ஏன் இரண்டு பேரும் இப்பிடி இருக்கிங்க" என்று கேட்டதுமே அவர்களைக் கண்டு நிம்மதி பெருமூச்செறிந்தவர்கள்.

"அப்பாடி வந்துட்டிங்களா?" என்ற கேள்வியில் இருவரும் ஒருத்தர் முகம் பார்த்து ஒருத்தர் புரியாது விழித்திட கௌசிக்கோ "என்னாச்சு அத்தம்மா" என்றதுமே அவனிடம்
"எப்பா சாமி முடியலப்பா உன் பொண்டாட்டியை சாப்பிட வைக்கவே எங்க உடம்புல இருக்குற முழு சத்தும் வடிஞ்சு போச்சு இனி நீயாச்சும் உன் பொண்டாட்டியாச்சும்" என்றவர் அவன் கையில் உணவை திணித்து விட்டு கமலத்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிட சிவாவோ அண்ணனைப் பார்த்து வாய் மூடிச் சிரித்தான்.

"டேய் என்னடா இளிப்பு" சின்ன முறைப்புடன் அவனிடம் கேட்க
"அதுவா உன்னை நினைச்சேன் சிரிச்சேன்.. டேய் அண்ணா இனி உன் பாடு திண்டாட்டம் தான்டி" அண்ணனை கேலி பேசியபடிய் அங்கிருந்து நகர்ந்திட
சின்ன சிரிப்புடன் தன்னவளை நோக்கிச் சென்றான் கௌசிக்.

"என்னாச்சு என் புஜ்ஜிமாக்கு ஏன் உம்முனு இருக்காங்க?" குறும்பாய் அவன் வார்த்தைகளை கண்டு கொள்ளாது அப்போதும் முகத்தை உம்மென்று வைத்தபடி கோபமாய் அமர்ந்திருந்தவளின் தோற்றம் சிரிப்பை தர அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் "என் புஜ்ஜிமாக்கு என்ன கோபம்?" என்று மென்மையாய் அவள் கரம் பற்றி கேட்டிட அதில் அவனை திரும்பிப் பார்த்தவள் அவனிடம் "நீங்க ஏன் என்கிட்ட சொல்லாம போனிங்க" என்றாள்.

"ஓஓ என் புஜ்ஜிமாக்கு அதுதான் என் மேல கோபமா" என தலையாட்டினயவளிடம்
"ஹேய் சாரிடா புஜ்ஜிமா எல்லோரும் இருந்ததுனால சொல்ல முடியல" என மன்னிப்பை யாசிக்கும் குரலில் கேட்டிட அப்போது தான் அவன் தன்னை அழைக்கும் பெயரை கேட்டு கண்களை அகல விரித்தவள் "அதென்ன புஜ்ஜிமா" இதழ் விரிய ஆர்வமாய் கேட்டவளின் தலை களைத்து சிரித்தவன்..

"ரொம்ப குட்டியா புஜ்ஜியா இருக்குறதுனால என் பொண்டாட்டி எனக்கு புஜ்ஜிமாவாகிட்டா" கண்சிமிட்டி அவன் கூற.. அவள் விழிகளோ மேலும் விரிந்து கொண்டது.

"உங்களுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா?" ஆச்சர்யமாய் கேட்டவளிடம்

"ஏன்... என் பொண்டாட்டிக்கு நான் செல்லப் பேரு வெச்சிக் கூப்டக் கூடாதா என்ன?" ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் கேட்ட தோரணையில் "இல்ல இல்ல நான் அப்பிடி சொல்லல நீங்க கூப்டுங்க.. சரியா" என்றவள்.. பின் ஏதோ யோசித்தவளாய் "நானும் அப்போ நிக் நேம் வெச்சு கூப்டவா?" என்றாள் ஆர்வமாய்.

அவள் கண்ணில் மின்னிய ஆர்வத்தை கண்டு அவன் தலை தன்னால் அசைய அடுத்து அவள் சொன்ன வார்த்தையில் விழிகள் விரிய அவளைப் பார்த்தவன் "என்ன சொன்ன?" என்றான்.

"கிஸ் மாமா" என்று மறுபடியும் அவள் சொன்ன வார்த்தையில் அவனிதழ்கள் விஷமமாய் புன்னகைக்க அவளை நோக்கிக் குனிந்தவன் பச்செக் என்று அவள் கன்னத்தில் இதழொற்றியெடுக்க
விழிகள் விரிந்திட வாய் பிளந்து ஆவென அவனை அதிர்ந்து பார்த்தவள் அவன் கண்சிமிட்டலில் தடுமாறித் தான் போனாள்.

அவனோ "ஓகே வா" என சிரித்தபடி கேட்டிட அவளோ "எ..என்ன" என்றாள் தடுமாறியபடி..

"நீ தான் புஜ்ஜிமா கிஸ் மீ மாமான்னு சொன்ன.. அதுதான் கிஸ் பண்ணேன் ஓகேவா" குறும்புக் கண்ணனாய் அவன் கேட்டதில் பேந்த பேந்த முழித்தவளுக்கு அப்போது தான் அவள் அவனுக்கு வைத்தா செல்லப் பெயரைத் தான் அவன் கூறுகிறான் என்று புரிந்தவள் "அய்யோ மாமா.. நான் கிஸ் மீனு சொல்லல.. அதுதான் நான் உங்களுக்கு வெச்ச நிக் நேம்.. இது தெரியாம நீங்க கிஸ் பண்ணிட்டிங்களா?" வெள்ளந்தியாய் கூறிச் சிரித்ததிலே அவள் குழந்தைக் குமரி என்று புரிந்தவன்.. மனமோ "ரொம்ப கஷ்டம்டா கௌசிக்" என நினைத்து தலையை கோதிக் கொண்டவனுக்கு அவனை எண்ணி சிரிப்பு தான் வந்தது.

அவள் கேள்விக்கு ஆமென்று தலையசைத்தவனிடம் "நான் வெச்ச நிக் நேம் நல்லாயிருக்கா உங்க நேம் கிருஷ்ணாட சார்ட் போர்ம் கிஷ் ப்ளஸ் மாமா ஈகுவல் கிஸ் மாமா" என்று விளக்கமளித்தவளை மீண்டும் முத்தமிட துடித்த இதழ்களை கட்டுப்படுத்தியவனாய் அவளிடம் "நேம் சூப்பரா இருக்கு புஜ்ஜிமா.. ஆனா இந்த நேம நீ யாரும் இல்லாத போது தான் கூப்பிடனும் ஓகேவா" என்க
அவளோ புரியாது "ஏன்" என்றாள்.

"ம்க்கும்" தொண்டையை செருமிக் கொண்டவன் அவளை நெருங்கி "அது.. நீ அப்பிடி கூப்பிடும் போது இப்போ நான் தெரியாம பண்ணப் போல கிஸ் பண்ணிட்டேன்னா.. அதுதான்.. தனியா இருக்கும் போது கிஸ் பண்ணா ஓகே ஆனா எல்லார் முன்னாடியும்" என்க "அய்யோ வேணாம் வேணாம் நான் கூப்பிடல" என மறுப்பாய் கூறியவளைக் கண்டு சிரித்தவன் "தனியா மட்டும் ஓகேவா?" என்க அவன் கேள்வியின் அர்த்தம் புரியாது "ம்ம்" என தலையசைத்தவளைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"குட் கேர்ள்..சரி இப்போ கோபம் போயிடுச்சுல இப்போ சாப்பிடலாமே" உணவை நீட்டியவனிடம் உணவை வாங்காது மறுத்தவள்

"கோபம் போச்சு தான் ஆனா என்கிட்ட சொல்லாம போனதுக்காக உங்களுக்கு பனிஸ்மெண்ட் தரணும்" என்றவளை சுவாரஸ்யமாய் பார்த்தவன் "ஆஹா.. என்ன பனிஸ்மெண்ட்" என்றான்.

"அதுவா எனக்கு சாப்பாடு நீங்க தான் ஊட்டிவிடனும்" என்றவளைப் பார்த்து சிரித்தவன் "இதெல்லா பணிஸ்மெண்ட்டு யாரு உனக்கு சொன்னாங்க" என்றாலும் அவளின் சிறுபிள்ளை தனமான செயல்கள் அவனை ரசிக்கவே வைத்தது.

"அதுவா எங்க ஊர்ல பக்கத்து வீட்டுல ஒரு அக்காவோட பையன் அவங்க கூட சணடடை போட்டான்னா அவன் கோபம் போக அவங்க கையால சாப்பாடு ஊட்டி சமாதானம் பண்ணுவாங்க.. அதை பார்க்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்.
ஆனா எனக்குத் தான் அம்மா இல்லைல என்னால சண்டை போட்டு சமாதானம் ஆக முடியலை.. அதுதான் இப்போ நீங்க இருக்கிக்கிங்களே அதனால சண்டை எப்பெல்லாம் போடுவோமோ அப்பெல்லாம் நீங்க ஊட்டி விட்டாதான் சாப்பிடுவேன் இல்லன்னா சாப்பிடவே மாட்டேன் சரியா இப்போ ஊட்டிவிடுங்க" என வாய் திறந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் அவன்.

சிறு செயலிலே அவளின் தாயன்பிற்கான ஏக்கத்தை கண்டு கொண்டவனுக்கு மனதில் ஏதோ ஒன்று பாரமாய் அழுத்தியது.. அது தன்னவளின் தாயின் அன்பிற்கான ஏகத்தினாலா இல்லை இத்தனை பேர் உறவாய் இருந்தும் தன்னவளை பாசத்திற்காக ஏங்க வைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வினாலோ என்பதை அவன் மட்டுமே அறிவான்.

அவனின் அமைதி கண்டு அவளோ "மாமா பசிக்குது ஊட்டுங்க" என வாய் திறக்க தன் எண்ண ஓட்டத்திலிருந்து வெளியானவன் உணவை ஊட்ட ஆரம்பித்தான்..

தாயாய் மடி தாங்க தாரமாய் வந்தவளே இங்கு சேயாய் மாற..
கம்பீர ஆண்மகனின் கடின மனமோ கரைந்துருகி அவள் காலடியில் சரணாகதியாக..
தன்னவளை தாங்கிக் கொண்டான் ஆணவன்..
அவன்..
ஒரு தாயாய்..
காதலனாய்..
இக்கணம் இங்கே உதித்ததோ அவனின் கருவறைக் காதல்




தொடரும்.


 

Habi

Moderator
அத்தியாயம் - 31


இரு நாட்கள் கழித்தே வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் மதி..
பாசமாய் தாங்கும் குடும்பம் ஒருபக்கமிருக்க பெண்ணவளின் ஏக்கம் ஆசையை போக்கவென்றே அவளுக்கு மொத்தமாய் தாயுமானவனாய் மாறிப் போயிருந்தான் கௌசிக்.

அவனின் அன்பான கவனிப்பிலும் பாசமான பேச்சிலும் முற்றிலுமாய் அவன் பால் சரியத் தொடங்கியது பெண்ணவள் பூமனம்.

கௌசிக் மதியை எத்தனை எத்தனை அன்பாய் கவனித்துக் கொண்டாலும் அவன் மூளையோ தன்னவளுக்கு இந்த நிலையை யார் செய்திருப்பார் என்று கண்டுபிடிக்க எண்ணி தீவிரமாய் யோசித்து இறுதியில் அவனோ மோகன்ராஜ்ஜின் மீதே தன் சந்தேகக் கண்ணை பதித்திருக்க அவரோ அவனை முறைப்பான பார்வையோடு கடந்து செல்வாறே ஒழியே சந்தேகபடும்படி அவரிடம் எந்த மாறுதலுமே இல்லாதது கண்டு குழம்பித் தான் போனான்.

குழப்பங்கள் எண்ணங்களை ஆக்கிரமித்த போதிலும் எப்போதும் போலவே இப்போதும் தன்னவளை கரிசனத்தோடு கவனித்துக் கொண்டிருந்தான்.

அன்று வைத்தியசாலையில் மதி ஆரம்பித்து வைத்த தண்டனை இன்னுமே தொடர்ந்தவனாய் பெண்ணவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தான்.

"ம்ம் போதும் மாமா.."என்று மறுத்தவளிடம்
"இன்னும் கொஞ்சம் தான் சாப்பிடுடா" என்றுமே வேண்டாம் என தலையாட்டி மறுத்தவளை விடாது "இப்போ மாத்திரை சாப்பிடனுமே அதனால கொஞ்சூண்டு சாப்பிடு" வலுக்கட்டாயமாக உணவை ஊட்டி விட்டே எழுந்தவன் மாத்திரை எடுத்து நீட்ட அவளோ முகத்தை சுருக்கியவள்

"அதான் இப்போ எனக்கு உடம்பு சரியாயிடுச்சுல மாமா.. இனியும் எதுக்கு மாத்திரை வேணாமே ப்ளீஸ்." கண்களை சுருங்கி இதழ் குவித்து கெஞ்சலாய் கேட்ட பெண்ணவளின் பாவனையில் சொக்கிய மனதை கடிவாளமிட்டு கட்டுபடுத்தியவன்

"நோ நோ டாக்டர் மாத்திரை போட சொன்ன நாள் வரைக்கும் மாத்திரை சாப்பிடனும்.. ம்ம் சாப்பிடு" அவள் முன்னே நீட்ட அந்த மாத்திரைகளைக் கண்டு முழி பிதுங்கினாள்.

"எம்மாம் பெரிய மாத்திரை" கண்களை அகல விரித்து அவள் கூறிய தினிசில் அவனுக்கோ சிரிப்பு பொங்கியது.

"கண்ணை மூடிட்டு ஆகாட்டு புஜ்ஜிமா நான் போட்டு விடுறேன் நீ முழுங்கிடு ஈஸியா போயிடும்" என்றவனின் சொல்படி அவளும் செய்ய மாத்திரை தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கியது.

"அய் மாத்திரை கசக்கவே இல்லை" துள்ளலுடன் கூறியவளின் தலை வருடினான் தாய்மை மீதுற..

மதியும் அவன் வருடலில் சுகமாய் கண் மூடிட சிறிது நேரத்தில் மருந்தின் வீரியத்தால் நல்ல நித்திரையில் ஆழ அவளை நேராக படுக்க வைத்தவன் நெற்றியில் முத்தமிட்டு அறையை விட்டு வெளியேறினான்..

...

கீழிறங்கியவன் நேராய் தோட்ட பக்கம் சென்றமர்ந்து அமைதியாய் யோசனையில் ஆழ ஏதோ தொடு உணர்வில் திரும்பியவன் அங்கு நின்ற சிவாவைக் கண்டு "வா சிவா..உட்காரு" என்க அவனருகே அமர்ந்து கொண்டான் சிவா..

"எங்கண்ணா மதி? தூங்குறாளா?" என்கவும்கி "ம்ம்" என தலையசைத்தவன் முகமே ஏதோ சிந்தனையில் இருக்கிறான் என காட்டிட "என்னண்ணா யோசிக்குற?" என்றான்..

"மாதவ் போன் பண்ணியிருந்தான் சிவா.. அந்த மினிஸ்டர் பெயில்ல வெளியே வந்துட்டானாம்" அமைதியாய் கூறிட சிவாவும் தெரியும் என்பது போல் மௌனமாய் தலையசைத்தான்.

இருவருமிடையே சிறுது நேரம் நிலவிய அமைதியை களைத்தவனாய் சிவாவோ "அவ்வளவு ப்ளான் பண்ணி அவன பிடிச்சும் கடைசில அவன் பதவி கோல்மால் தனம் எல்லாத்தையும் யூஸ் பண்ணி ரிலீஸ் ஆகி வந்துட்டான்.. அவனுக்கெதிரான ஆதாரம் எல்லாமே பயர் ஆக்ஸிடெண்ட் பண்ணி எரிச்சிட்டான்.. இனி நாம என்ன தான் பண்றது" எரிச்சலாய் தலை கோதிக் கொண்டான் சிவா.

கௌசிக்கோ அவன் கேள்விக்கு பதில் கூறாது இன்னுமே யோசனையின் பிடியில் சிக்கியவனாய் மௌனமாய் அமர்ந்திருக்க அதைக் கண்ட சிவாவும் அவனையே யோசனையாய் பார்த்தான்.

"என்னாச்சு ஏதாச்சும் பிரச்சனையா?" சிவாவின் கேள்வியில் நிமிர்ந்தவன் "ஜகன் போன் பண்ணியிருந்தான் சிவா.. மும்பைல ஈஸ்வர் மேலான குற்றச்சாட்டு எல்லாம் பொய்னு போதிய ஆதாரம் இல்லன்னு சொல்லி ஈஸ்வர ரிலீஸ் பண்ணிட்டாங்களாம்" என்றவனை அதிர்வாய் பார்த்தான் சிவா.

அன்றும் ஈஸ்வர் தப்பித்து விட்டான் எனும் போதே அதிர்ந்தவனுக்கு இன்று அவன் மீது குற்றமே இல்லையென்று அவன் வெளியாகியது மேலும் அதிர்ச்சியையூட்டியது.
"அவன் தப்பிச்சிட்டான்னுல சொன்ன இப்போ எப்பிடி"

"இல்லடா அவன் தப்பிச்சியிருப்பான்னு எனக்கொரு கெஸ் இருந்திச்சு இந்த மினிஷ்டரோ கேஷ்ல விசாரிச்சதுல எனக்கு கிடைச்ச தகவல்படி இந்த கடத்தல் எல்லாமே மும்பைல தான் முடியுது சோ அதவெச்சு தான் ஈஸ்வரா இருப்பானோன்னு சந்தேகத்துல சொல்லியிருந்தேன் ஆனா இப்போ ஜகன் போன் பண்ணி சொன்னதுமே கன்போர்மே பண்ணிட்டேன் இதுக்கு பின்னாடி அவன் தான் இருக்கனும்"

"இவன எப்பிடிண்ணா ரிலீஸ் பண்ணாங்க.. எல்லா ஆதாரமும் பக்காவா கொடுத்து தானே அரெஸ்ட் பண்ணினது.. இப்போ எப்படி ரிலீஸ் ஆனான்"

"பணம் தான்.. இங்க இந்த மினிஸ்டர் அரசியல் செல்வாக்க பயன்படுத்தி எப்பிடி வெளி வந்தானோ அத போல அங்க அவன் பணத்தை யூஸ் பண்ணியிருக்கான்" வெறுப்பாய் வந்து வீழ்ந்தது அவன் வார்த்தைகள்.
கஷ்டபட்டு கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினாலுமே பணம் பதவி மூலம் இலகுவாய் தப்பிக்கும் அளவிற்கு இருக்கும் சட்டத்தின் ஓட்டைகளால் வெறுத்து போனது அவன் மனம்.

அண்ணன் கூறியதைக் கேட்ட சிவாவிற்கோ உள்ளுக்குள் ஒரு பதட்டம் சூழ்ந்து கொண்டது..

ஈஸ்வர்... மும்பையின் சிறந்த தொழிலதிபர்.. கோடிக்கணக்கான சொத்தின் உரிமையாளன்.. இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவன் அப்படிபட்டவனின் நிஜ முகம் அறிந்தவர்களுக்கு தான் தெரியும் அவன் மனிதனல்ல மனித தோற்றத்திலிருக்கும் அரக்கன் என்று..
அப்படிபட்ட அரக்கனையே அழித்து சட்டத்தின் பிடியில் பிடித்து கொடுத்தவன் சாட்சாத் நம் நாயகன் கௌசிக் கிருஷ்ணாவே..

அன்றோ கௌசிக் கடந்து வந்த பாதையில் விஷமுள்ளாய் வந்து நின்றவன் அவன்.
அவனை அழித்து ஒழித்து கடந்து வந்திருக்க இன்றோ மீண்டும் வேர்விட்டு வளரத் தொடங்கிவிட்டான்.. அவர்களை அழிக்க வேண்டியே..

தங்களால் அன்று அடிபட்ட பாம்பாய் ஒதுங்கிப் போனவன் நிச்சயம் மீண்டும் தங்களை பழி தீர்க்க தேடி வருவான் என்பது அறிந்தது தான் என்றாலுமே இத்தனை சீக்கிரம் அவன் திரும்பி வருவான் என எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது.

சிவாவின் முகம் காட்டிய பதற்றத்திலே அவன் மனமறிந்த கௌசிக்கோ அவன் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டான்.

"அவன் நிச்சயமா நம்மள தேடி வருவான் சிவா அதுல எந்த மாற்றமும் இல்ல.. அவன் நம்மள நெருங்க முன்னாடி நாம எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும்" என்றிட ஆமோதிப்பாய் தலையசைத்தான் சிவா..

"எக்காரணத்தக் கொண்டும் அவனை நம்மள சார்ந்தவங்கள நெருங்க விடக் கூடாதுண்ணா" என்றவனுக்கு தெரிந்திருக்கவில்லை ஈஸ்வர் என்ற அரக்கன் எப்போதோ தன் வட்டத்துக்குள் நுழைந்துவிட்டான் என்பது..

சிவா கூறியதைக் கேட்ட கௌசிக்கின் மனமோ 'ஈஸ்வர் தங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறான்' என்ற உண்மையை அவனிடம் கூறாது தனக்குள்ளே பூட்டிக் கொண்டது.

ஈஸ்வர் பற்றிய எண்ணங்களை சுழலவிட்டவனுக்கு தங்கையின் நினைவே மேலெழுந்து அவனை ஆட்டுவித்தது.
அவளுக்கு மட்டும் இவனின் மீள்வரவு தெரிந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் தொலைத்துவிடுவாளே என்ற கவலை ஒரு அண்ணனாய் அவனை அரித்திட கண்மூடி நின்றவன் தனக்குள்
உறுதியாய் கூறிக் கொண்டான்.. அன்று அவள் பட்ட துன்பங்களை மீண்டும் அவள் வாழ்வில் அனுபவித்திடவே கூடாது என்று..
ஆனால் அவன் உறுதியை உடைப்பது போன்று மீண்டும் அவர்களின் வாழ்வை ஒரு புயல் சுழன்றடிக்கப் போவதையும் அதில் தங்கையோடு சேர்த்து தன் மனையாளும் சிக்கிச் சுழலப் போவதையும்.. அவன் அக்கணம் அறிந்திருக்கவில்லை.

இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க போர்டிகோவில் வந்து நின்ற கார் சத்ததில் இருவரின் பார்வையும் அங்கு திரும்பியது.

அதே நேரம் தன்னறையிலிருந்து வெளிவந்த திவ்யாவோ அண்ணன்கள் வெளிப்புறம் அமர்ந்திருப்பதைக் கண்டவள் புன்சிரிப்புடன் அவர்களை நோக்கி நடை போட அவள் பார்வையும் போர்டிகோவில் வந்து நின்ற காரின் புறம் திரும்பியது.

மூவரின் பார்வையும் புதிதாய் வந்து நின்ற காரில் நிலைத்திருக்க அதிலிருந்து இறங்கிய விஷ்வாவோ "வாங்க" என காரினுள் குனிந்து யாரையோ அழைத்திட யார் என்பது போல் பார்த்து நின்ற மூவரும் அதிர்ந்து தான் போயினர் அங்கு காரிலிருந்து இறங்கிய ஈஸ்வரைக் கண்டு.

உடல் அதிர விழிகள் அவனிலே நிலைத்து நின்றவளைப் பார்த்தவாறே இறங்கினான் அவன்.

அவனைக் கண்டதுமே முதலில் அதிர்ந்தாலும் இவன் எங்கு இங்கு என்ற யோசனையில் அவன் மீது பார்வையை பதித்து நின்ற கௌசிக்கோ அவன் பார்வை செல்லும் திசை பார்த்திட அங்கு பயத்தில் விறைந்து நின்ற தங்கையை கண்டதுமே அவளை நோக்கி ஓடினான்.
அவனைத் தொடர்ந்து சிவாவும் சென்றவன்.. தங்கையின் அருகே வந்து நின்று அவள் கரத்தை பற்றிட அத்தனை நேரமும் பயத்தில் சிலையென நின்றிருந்தவள் திடுக்கிட்டவளாய் நிமிர்ந்து பார்த்து "அ....அண்ணா" என இதழ் நடுங்க அவனை அழைத்ததுமே அவள் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டான்..

இரு புறமும் அண்ணன்கள் அரணாய் நிற்க நின்றிருந்தவள் மீதே பார்வையை பதித்திருந்த ஈஸ்வரின் இதழ்களோ ஏளனமாய் வளைந்தது.

இவர்களிடையே நடைபெறும் பனிப்போர் அறியாதவனாய் விஷ்வாவோ " உள்ளே வாங்க ஈஸ்வர்" என்றபடி அவனை உள்ளே அழைத்து வந்தவன் அங்கே நின்றவர்களைக் கண்டு அவர்களை நோக்கிச் சென்றான்.

விஷ்வா வருவதை கண்டு கௌசிக்கோ தன் முகபாவனையை மாற்றி நிற்க திவ்யாவோ மேலும் பயந்து தன் அண்ணணுடன் ஒட்டிக் கொண்டாள்.

"கௌசிக் இது என்னோட க்ளைன்ட் ஈஸ்வர மூர்த்தி.. ஒரு கேஷ் விசயமா அர்ஜென்ட்டா பேசனும்னு சொன்னதுனால இங்க வர வைக்க வேண்டியதா போச்சு.. ஸாரி தொழில் ரீதியான பேச்சுக்களை வீடு வரை கொண்டு வந்ததுக்காக தயக்கமாய் அவனிடம் மன்னிப்பை கேட்டிட..

அவனோ "இட்ஸ் ஓகே விஷ்வா யூ கேரியோன்" என்று அமைதியாய் அவன் கூறினாலுமே அவன் மனம் உளைக்களனாய் கொதித்துக் கொண்டிருப்பதை அவன் மட்டுமே அறிவான்..

"ஓகே கௌசிக்..ஏன் இங்க நிக்குறிங்க உள்ள வாங்க" என்று அவர்களையும் அழைத்தவன் ஈஸ்வரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய மூவரையும் அழுத்தமாய் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான்.

ஈஸ்வரை அமர செய்து அவனோடு தானும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விஷ்வாவோ திவ்யாவை அழைத்திட அவனின் அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் சிவாவின் கரங்களை மேலும் இறுக்கிப் பிடித்திட அவளை சற்று வித்தியாசமாய் பார்த்தான் விஷ்வா..

'இவளுக்கென்னாச்சு முகமே சரியில்லை.." அவன் மனது அவளின் வெளிறிய முகம் பார்த்து எண்ணிக் கொள்ள அவனை களைத்தது ஈஸ்வரின் குரல்..

"என்ன விஷ்வா.. அவங்க யாரு?" அவன் கேட்டதில் அவன் புறம் திரும்பியவன் "சி இஸ் மை வைஃப் ஈஸ்வர்.. அன்ட் அவங்க என்னோட மச்சாங்க.. அவளோட அண்ணன்கள்" என்றதுமே அவனின் பார்வையோ நக்கலாய் அவர்கள் மீது படிந்து மீண்டது.

"ஓஓ அண்ணன்களா. சொந்த அண்ணன்களா?" என்றவன் குரலில் திவ்யாவோ வலி நிறைந்த பார்வையோடு அண்ணனை பார்த்திட அந்த நொடி நேர பார்வையை கூட தாங்க முடியாதவனாய் தங்கையை தன் கையணைவில் கொண்டு வந்த கௌசிக்கோ நிமிர்வுடன் "ஆமா சொந்த அண்ணன்கள் தான்" என்றவன் குரலின் அழுத்தமோ ஈஸ்வரின் புருவத்தை உயரச் செய்தது.

அவனுக்கு சளைக்காத பார்வையை செலுத்தியவன் அவளிடம் "திவிமா நீ உள்ளே போய் மதி கூட இரு" அவளை அனுப்பி வைத்தவன் நிமிர்ந்த நடையுடன் ஈஸ்வரின் முன்னே கால் மேல் காலிட்டு வந்தமர்ந்திட அவனருகே சிவாவும் அமர்ந்து கொண்டான்.

விஷ்வா கேஷ் சம்பந்தமாக ஈஸ்வருடன் பேசிக் கொண்டிருக்க கௌசிக்கின் பார்வையோ அவனையே ஆராய்ந்தது.

அவன் தோற்றமும் அவன் பார்வையும் அவனுள் எச்சரிக்கை மணி அடிக்க அவனையே கூர்மையாய் பார்த்திருந்தான் கௌசிக்.

"ஓகே ஈஸ்வர் நீங்க சொன்னபடி அந்த கேஷ பத்தி சில விசயங்கள அனலைஸ் பண்ணியிருக்கேன் அத பார்த்துட்டு உங்க முடிவ சொல்லுங்க" என்றவன் பைலை எடுக்க அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் நகர்ந்ததும் ஈஸ்வரின் பார்வை நக்கலாய் தன் முன்னே அமர்ந்திருந்த இருவரின் மீதும் வீழ்ந்தது.

"ஹலோ ஆபிசர்ஸ்.. ரொம்ப நேரமா என்னையே பார்த்திட்டு இருக்கிங்க இன்னும் நான் கொடுத்த ஷாக் போகலையா?" எகத்தாளமாக அவன் கேட்ட தோரணையில் சிவாவோ பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்க முடியாதவனாய் தன் முஷ்டியை இறுக்கி சோபாவில் குத்திட அவனை பார்த்தவன் "அடடே சின்ன தம்பிக்கு கோபம் வருதா? ம்ம்" நக்கலாய் அவன் கேட்கவுமே கோபமாய் அவனை நோக்கி எழப் போனவனை தடுத்தான் கௌசிக்..

"அண்ணா" சிவா கத்த அவனைப் பார்வையாலே அடக்கினான் கௌசிக்.

"ஹலோ தம்பி அதான் உன் அண்ணன் சொல்லிட்டார்ல.. அடங்கு" கேலி போல் கூறியவனை சிவாவினால் முறைக்க மட்டுமே முடிந்தது.

அண்ணனின் பார்வையை மீறி அவனால் அவனை எதுவும் செய்ய முடியாத கோபத்தை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டான் சிவா.

"அப்புறம் மிஸ்டர் கௌசிக் ஸார் எப்பிடி இருக்கிங்க நான் வந்ததுனால ரொம்ப டென்ஷன் ஆகிட்டிங்க போலவே?" விழிகள் வேட்டையின் பளபளப்போடு கேட்டவனை சலனமின்றி பார்த்து வைத்தான் கௌசிக்.

"அப்புறம் வாழ்த்துக்கள் புதுசா கல்யாணம் வேற ஆகியிருக்குனு கேள்விப்பட்டேன்.. அதுவும் காணாம போன அத்தை பொண்ணே மனைவியா கிடைச்சியிருக்கா போல.. ம்ம்" புருவம் உயர்த்தி அவனிடம் கேட்டவனின் தோரணையே உன்னைப் பற்றி நான் அனைத்தும் அறிவேன் என்பதை பறைசாற்றுவது போலிருக்க..

கௌசிக்கோ இத்தனை நேர இறுக்கம் குறைந்தவனாய் தன் இரு விரல்கள் கொண்டு புருவத்தை நீவி விட்டவன் உடலை சற்றே முன்னோக்கி வளைத்து அதில் முழங்கையை ஊன்றி பெருவிரல் ஆட்காட்டி விரல் இரு விரல்களின் இடுக்கில் நாடியை தாங்கியவன் இதழில் மென்னகை படர்ந்திருக்க அவனைப் பார்த்தான்.

அவன் அமர்ந்திருந்த தோரணையும் அவனிதழ் புன்னகையும் ஈஸ்வரிடம் இத்தனை நேரமிருந்த அலட்சியத்தை காற்றோடு கறைந்திடச் செய்ய முகம் இறுக அவனைப் பார்த்தான்.

பேச்சற்ற அமைதி இருவரிடமுமே.. அந்த அமைதியே ஈஸ்வருக்கு ஒருவித எரிச்சலை உண்டாக்கியது.. எந்தவித அலட்டலுமின்றி தன்னையே ஊடுறுவும் பார்வை பார்த்தவனை வன்மமாய் பார்த்தவன்
"ரொம்ப கூலா இருக்கிங்க போல இனி தான் என்னோட ஆட்டம் தொடங்கப் போகுது" என்றவனை ஒற்றைப் புருவம் உயர்த்தி அப்படியா எனக் கேட்டவன் இதழோரம் வளைந்திட "வில் சீ" என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட அதற்கே ஆத்திரமாய் வந்தது.

ஏதோ பேச வாயெடுக்க முயன்றவன் அங்கு வந்த விஷ்வாவைக் கண்டு அமைதியாகினான்..
சிறிது நேரத்தில் பேசிமுடித்து ஈஸ்வர் விஷ்வா அங்கிருந்து சென்று விட கௌசிக் சிவா இருவருமே தங்கையை தேடிச் சென்றனர்.

மேலே மாடியில் உள்ள அறையின் மூலையில் மடிந்து அமர்ந்திருந்தாள் திவ்யா..
அவளை தேடியவர்கள் இறுதியில் அந்த அறையினுள் நுழைய அங்கு தங்கையிருந்த கோலம் கண்டு பதறித்தான் போயினர் அண்ணன்கள் இருவரும்..

"திவி" என்ற அண்ணன்களின் அழைப்புக்குரலில் பாய்ந்து வந்து அவர்களை அணைத்திருந்தவள் தேம்பலோடு அழுதிட அவள் உடல் நடுக்கமே அவள் பயத்தை பறைசாற்றியது.

"திவி ரிலாக்ஸ்மா ஒன்னுமில்லடா.. " என்ற
ஆறுதல் வார்த்தைகளோடு தங்கையின் தலையை தடவிக் கொடுத்தான்.

"அண்ணா.. அ..அவன் எப்பிடி இ..ங்க வந்தான்..பயமாயிருக்குன்னா.. அவன் மறுபடியும் ஏதும் பண்ணிடுவான்னோனு.." நடுங்கும் குரலோடு தன் முகம் பார்த்து பயத்தோடு பார்த்து கூறியவளின் கண்ணீரை துடைத்து விட்டவனோ

"நாங்க இருக்கோம்டா திவிம்மா.. நாங்க மட்டும் இல்லை உன் புருஷனும் இருக்கான் உனக்கு பாதுகாப்பா" என்கவும் அவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்த சிவாவோ வெடிக்கத் தொடங்கினான்.

"ஆமா புருஷன் பொல்லாத புருஷன்..
நீ யார்டயிருந்து இவளை பாதுகாக்க நினைச்சு இந்த கல்யாணத்தை பண்ணி வெச்சியோ அவனே இவளுக்கு சங்கு ஊத சந்தர்ப்பம் அமைச்சிக் கொடுக்கான்.." என கத்தியவனை "சிவா அமைதியா இரு" என்றாலும் சிவாவோ "இல்லண்ணா நீ என்ன சொன்னாலும் சரி இனி திவ்யாவ ஒரு நொடிக் கூட அவன் கூட நான் விடமாட்டேன்.. எதிரியை கூட நம்பிடலாம் ஆனா அவன் அந்த விஷ்வா துரோகி நம்பிக்கை துரோகி அவனெல்லாம் நம்பி இவளை கட்டி வெச்சதே தப்பு.. இவனே ஒரு பிரச்சனை இதுல இப்போ அடுத்த பிரச்சனை கூட்டிட்டு வந்திருக்கான்" என்று தன் பாட்டில் பேசிக் கொண்டிருந்தவன் கௌசிக்கின் அதட்டலில் நிமிர்ந்து அண்ணன் தங்கை இருவரையும் நோக்கினான்.

கண்களில் கண்ணீர் வழிய நின்ற தங்கையையும் தன்னையே முறைத்து நின்ற அண்ணனையும் கண்டவன் "இப்போ எதுக்கு முறைக்குற.. நான் ஒன்னும் தப்பா சொல்லலியே" என்க கௌசிக்கோ "வாய மூடுடா" என்று அதட்டியவன் அவளிடம் "அண்ணன் மேல உனக்கு நம்பிக்கையில்லையா திவ்யா" என்றதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் "உன்ன நம்பாம நான் யார நம்பப் போறேன்" சற்று கோபம் எட்டிப் பார்த்ததோ அவள் குரலில்.

மெல்ல சிரித்தவன் " அப்போ எதுக்கு அழற.. அழாதடா பார்க்க சகிக்கல.." சிரிப்புடன் கூறியவனை முறைப்புடன் பார்த்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு இன்னுமே கோபம் குறையாது நின்றிருந்த சிவாவைப் பார்த்தாள்.

"நான் பார்த்துக்குறேன் நீ போ" தங்கையை அங்கிருந்து அனுப்பியவன் இன்னுமே கோபம் குறையாது சுவரை வெறித்து நின்றவன் முதுகில் சுள்ளென்று ஓர் அடையை விட முதுகை தேய்த்தபடி அவன் புறம் திரும்பினான்.

"எதுக்குடா அடிக்குற.. இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீ முறைக்குற.. நான் ஒன்னும் இல்லாததையா சொன்னேன்.. அந்த விஷ்வா அவன் துரோகி தானே.. வளர்த்தவங்களுக்கு துரோகம் பண்ணான் காதலிச்சவளுக்கும் துரோகம் பண்ணான் அப்பிடி பட்டவன்கிட்ட திவ்யா பாதுகாப்பா இருப்பான்னு சொல்றத என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல" படபடவென பேசிமுடித்தவனை அமைதியாய் மார்புக்குக் குறுக்கே கைககட்டி பார்த்து வைத்தான் கௌசிக்.

"பேசிமுடிச்சிட்டியா.." அழுத்தமாய் கேட்டதும் சிவாவோ அமைதியாய் அவனைப் பார்த்தான்.

"விஷ்வா பண்ணது எல்லாம் சரின்னு சொல்லல... அவன் தப்பு பண்ணான் தான் பழிவாங்கனும்னு துரோகம் பண்ணான் தான்.. அது எல்லாமே முடிஞ்சு போன விசயம்.. தவற உணர்ந்து திரும்பவும் புது மனுஷனா வந்திருக்கான்.. இப்போவும் நீ அவன இப்பிடி பேசுறது நல்லா இல்ல சிவா.. அதுமட்டுமில்லாம விஷ்வா இப்போ திவ்யாவோட கணவன்.. அவன் மேல அவளுக்கு என்னதான் கோபமும் ஏமாற்றமும் இருந்தாலும் இன்னுமே அவளுக்கு அவன் மேல காதல் இருக்கு.. காதலோட சேர்த்து மனைவிங்குற பந்த உறவு இருக்கு.. அண்ணனே ஆனாலும் தன் கணவன தரம் இறக்கி பேசுறத எந்த மனைவியும் விரும்பமாட்டா.. உன்கிட்ட வாய் துறந்து சொல்லலன்னாலும் அவ மனசு உன் வார்த்தைகளால காயப்பட்டு தான் இருக்கும்" தங்கையின் மனதை தெள்ளத் தெளிவாய் அவனுக்கு எடுத்துக் கூறியவன்

"இனி இப்படி நடந்துக்காத சிவா.. நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் திவ்யாவத்தான் காயப்படுத்தும்.. இனியாச்சும் புரிஞ்சு நடந்துக்க" என தம்பியின் தோள் தட்டிவிட்டு நகர்ந்தான் கௌசிக்.

சிவாவிற்கும் தான் அதிகப்படியான வார்த்தைகளை பேசிவிட்டோம் என தன் தவறு உரைக்க இனி திவ்யாவின் முன்னே விஷ்வாவை திட்டக் கூடாது என தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.

தம்பியிடம் பேசிவிட்டு வந்த கௌசிக்கின் மனமோ உலைக்களமாய் கொதித்தது.. என்ன தான் தங்கைக்கு ஆதரவாய் பேசிவிட்டு வந்தாலும் நிச்சயம் ஈஸ்வரின் வருகை அவளின் நிம்மதியை குழைத்திருக்கும் என்பதை உணர்ந்தே இருந்தான் அவன்.

இனி தங்கையின் நிம்மதியை எப்படி மீட்டெடுப்பேன் என்ற சிந்தனையோடே அறைக்குள் நுழைந்தான்.



தொடரும்...
 

Habi

Moderator
அத்தியாயம் - 32

ஈஸ்வரின் வருகையும் திவ்யாவின் பயந்த முகமும் என அனைத்தையும் எண்ணியவாறே தன்னறைக்குள் நுழைந்தவன் அங்கு பால்கனியில் நின்று எதையோ எடுக்க முயன்று கொண்டிருந்த மதியை கண்டு அதிர்ந்தவன் வேகமாய் அவளை நோக்கிச் சென்று அவளை இழுத்தெடுத்தவன் இருந்த கோபத்தில்
அவளை அறைந்திருக்க.. திடீரென்று எதிர்பாராத அடியில் அதிர்ந்தவளோ அவன் மீதே மயங்கிச் சரிந்தாள்.

தன் மீது மயங்கிச் சரிந்த பெண்ணவளின் ஸ்பரிசத்தில் கோபம் குறைய அவளைத் தாங்கலாய் பிடித்துக் கொண்டவன் மனமோ தன் ஐவிரல் பதிந்த பெண்ணவள் கன்னத்தை கண்டு
தன் தவறை உணர தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவனுக்கு தன் மேலே அளவு கடந்த கோபம் எழுந்தது.

தன் மேலே மயங்கிக் கிடந்தவளை கையில் தாங்கி அறைக்கு சென்று படுக்க வைத்தவன் அவள் முகம் வருடி சிறிது தண்ணீர் தெளித்து அவள் கன்னத்தை மெல்லமாய் தட்டி எழுப்பிட சிறு முனங்கலோடு கண்களை சுருக்கி எழுந்தவள் கௌசிக்கை கண்டு பயத்தில் விலகி அமர்ந்தாள்.

அவளின் பயம் அவனுக்கு வலிக்கச் செய்திட அவளைப் பாவமாய் பார்த்தவன் "மதிமா" என அவளை நெருங்க அவளோ பயத்தில் இரு கன்னங்களையும் உள்ளங்கை கொண்டு மறைத்துக் கொண்டவள் கண்ணை இறுக மூடிக் கொண்டு "அ...அடிக்க வேணாம் மாமா ப்ளீஸ் எனக்கு வலிக்குது" என்று வாய்விட்டு அழுகுரலில் கூறியவளின் மூடிய விழிகளில் விழிநீர் வழிந்தோடியது..

தன்னவளின் இந்த நிலையைக் கண்டவனுக்கோ தன் மீதே கோபம் வர கோபத்தை அடக்க அருகில் இருந்த மேசையில் குத்தியவன் கரமோ அங்கிருந்த கண்ணாடி குவளையில் பட்டு நொருங்கி அவன் கரத்தை பதம் பார்த்தது.

மதியோ அவன் செய்கையில் பட்டென்று விழிவிரித்து மருண்டு விழித்திட
அவள் பயந்த விழியில் மீண்டும் தன்னை நொந்து கொண்டவன் அவளை தன்னுடன் அணைத்து இரு கரங்களில் அவள் முகம் ஏந்தி அவள் விழியோடு விழிகலந்தவன்
"ஸாரி புஜ்ஜிமா.. ஏதோ கோபத்துல அடிச்சிட்டேன் மன்னிச்சிடுடா" என்று அடிவாங்கிய அவள் கன்னத்தில் குனிந்து முத்தமிட்டான்.

அவன் இதழொற்றலில் பயம் விலகி அவள் முகத்தில் வெட்கப் பூ பூத்திட அவன் விழி பார்க்கத் தடுமாறி பார்வையை பக்கவாட்டாய் திருப்பியவள் அப்போது தான் உணர்ந்தாள் தன் கன்னத்தில் பதிந்த கரத்திலிருந்து குருதி கசிவதை.

"அய்யோ மாமா இரத்தம் வருது" என பதறிக் கொண்டே அவன் கரத்தை விலக்கி பார்க்க அப்போது தான் கௌசிக்கும் தன் கையை பார்த்தான்.

"ப்ச்ச் விடு புஜ்ஜி உன்னை அடிச்சதுக்கு இது எனக்கு தண்டனையா போகட்டும்" என சலிப்பாய் கூறியவனை முறைத்தவள்
"லூசா மாமா உங்களுக்கு" என அவனை நேரடியாகவே திட்ட அதில் விழி விரித்து அவளைப் பார்த்தான் கௌசிக்.

அவளோ "நான் தப்பு பண்ணா என்னை கண்டிக்குற உரிமை உங்களுக்கு இருக்கு ஆனா என்ன உங்க கையால அடிவாங்குறது ரொம்ப வலிக்குது" என்றவள் கன்னத்தை தேய்த்துக் கொண்டு பாவமாய் அவனைப் பார்த்ததில் அவன் மனம் உருகிப்போனான்.

"நீங்க என்னை உரிமையா அடிங்க ஆனா கொஞ்சூண்டு மெதுவா அடிங்க சரியா?" தலையாட்டி அவனிடம் கேட்டவள் அவன் கைக்கு மருந்திட தொடங்கினாள்..

மருந்திட்டு முடிக்கும் வரை அவளிலிருந்து தன் பார்வையை விலக்காதவன் அவள் மருந்திட்டு முடித்ததும் முகத்தை உம்மென்று திருப்பிக் கொண்டதைக் கண்டு கோபமாய் இருக்கிறாளா? நன்றாகத் தானே பேசினாள்.. இப்போது என்னாச்சு? என்ற யோசனையோடே அவளிடம் கேட்டு வைத்தான்.

"என் புஜ்ஜிமாக்கு இப்போ என்னாச்சு? ஏன் முகத்தை திருப்பிக்கிட்டு இருக்காங்க" அவன் கொஞ்சலாய் கேட்க.

அவளோ "எதுக்கு மாமா என்னை அடிச்சிங்க" என்றாள் மூக்குநுனி சிவக்க..

அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவன் "இப்போ தானே புஜ்ஜிமா உரிமைனு சொன்னிங்க" என்றான் அவள் வார்த்தையையே அவளுக்குத் திருப்பிப் போட்டவாறு.

"அது தப்பு பண்ணா தான் தண்டிக்க உரிமை இருக்குன்னு சொன்னேன் மாமா ஆனா நீங்க நான் தப்பே பண்ணாம அடிச்சிட்டிங்களே" என்றாள்.

அவனுக்கோ சிரிப்பாய் இருந்தது நிமிடத்திற்கு நிமிட மாறும் அவள் குழந்தைக் குணத்தை எண்ணி.

"சரி ஸாரி இனி தப்பு பண்ணாம அடிக்க மாட்டேன் சரியா" மன்னிப்பை கேட்டவனிடம் "ஓகே" என பெருந்தன்மையாய் மன்னித்தவள் அவனிடம் "மாமா நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?" கண்கள் சுருக்கி ஆசையாய் கேட்டவளை பார்த்து சிரித்தவன் "என்ன மதிமா திடீர்னு இந்த ஆசை?" என்க..

அவளோ "இல்ல மாமா வீடு முழுக்க எல்லார் போட்டோவும் இருக்குல்ல அதான் என்னோட போட்டோவும் வைக்கனும்னு ஆசையா இருக்கு" என்றவளின் சின்னச்சிறு ஆசையில் தலையாட்டி சிரித்தவன் சரியென்றவாறே தன் மொபைலில் அவளை ஒவ்வொரு நிலையிலுப் படம் பிடித்திட அவளோ அவனையும் தன்னோடு இணைந்து எடுக்கக் கூறிய அவனோடும் பல போட்டோக்களை எடுக்கச் செய்திருந்தாள்.

"அழகா இருக்குல" என்றவள் ஒவ்வொரு புகைப்படமாய் தட்டித் தட்டி பார்த்து ரசித்துக் கொண்டிருக்க ஆடவன் விழிகளோ தன் பொன்மானின் புன்னகையை ரசித்துக் கொண்டிருந்தது.

அவன் போனிலிருந்த ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்தவளிடம் அவனின் சிறு வயது படங்கள் குடும்ப படங்க என அனைத்தையும் காட்டவும் அவளும் ஆவலாய் அனைத்தையும் பார்த்தபடி வந்தவள் எதேர்ச்சையாக ஒரு புகைப்படத்தைப் பார்த்து கை நடுங்க கண்கலங்க அந்த போட்டோவை வெறித்திருந்தாள்.

திடீரென்ற அவள் புன்னகை முக மாற்றத்தில் கௌசிக்கோ புருவம் சுருக்கியவன் எதை பார்த்து இப்படி அமர்ந்திருக்கிறாள் என்ற சந்தேகத்தில் தன் போனை நோக்கி பார்வையை செலுத்தியவன் அதில் தெரிந்த புகைப்படத்தைக் கண்டு புருவம் சுருக்கியவன் "மதி" என அவள் தோள் தொட அதில் திடுக்கிட்டு முழித்தவள் அவனை விழி விரித்து பார்க்க.

அவனோ"போட்டோஸ் எல்லாம் பார்த்தாச்சா?" எனக் கேட்கவும் "ம்ம்" என தலையசைத்தவள் அவனிடம் போனை நீட்டினாள்..

முகத்தில் சற்று முன்னிருந்த சிரிப்பு மறைந்து கலக்கம் சூழ்ந்திருந்தது.

அவளையே பார்த்தபடி அவனோ "உனக்கு ஒரு போன் வாங்கித் தாரேன் அதுல நிறைய போட்டோஸ் எடுத்துக்கலாம் ஓகே" என்றவனிடம் அமைதியாய் சரியென்று தலையசைத்தாள்.

"ஓகே வெய்ட்" என்றவன் அறையை விட்டு வெளியேறி அவளுக்கான உணவை எடுத்து வந்து ஊட்டிவிட்டான்.

அன்று தான் கூறியதை நியாபகம் வைத்து தனக்காக செய்யும் தன்னவன் செய்கையில் இருந்த கலக்கம் யாவும் மறைந்திட ஆசையோடு உணவை வாங்கிக் கொண்டாள்.

கௌசிக் உணவை ஊட்டி விட்டவன் அவளை ரெஸ்ட் எடுக்குமாறு கூறி வெளியேற முன் அவன் கைகளை பிடித்து போக விடாமல் தடுத்தவள் புறம் திரும்பியவன் "என்னமா?" எனக் கேட்டவனிடம் "அ..அது நான்" என ஏதோ கூற வந்தவள் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் அமைதியாய் திரும்பிப் படுத்துக் கொண்டாள்..
அவள் செய்கைகள் யாவும் வித்தியாசமாய் இருக்க அவளையே சில நொடி பார்த்து நின்றவன் அறையை விட்டு வெளியேறிச் சென்றான்.

வெளியே வந்தவன் தன் அலைபேசியை உயிர்ப்பித்து அவள் பார்த்த அதே புகைப்படத்தை பார்த்தான்..
இதில் எதைக் கண்டு இவள் அப்படி பயந்தாள் என அவன் மனம் யோசிக்க சிறிது நேரம் அதையே பார்த்து நின்றவனுக்கு அந்த புகைப்படத்திலிருந்த முகம் ஏதோ ஒன்றை உணர்த்த அதே நேரம் அன்றொரு நாள் கஸ்தூரி கூறிய தகவலும் திருமணத்திற்கு வரனாய் அவர்களிடம் சென்று சேர்ந்த அவனின் புகைப்படமும் எதையோ ஒன்றை அவனுக்கு சந்தேக விதையை துளிர்விடச் செய்தது.

நிதானமாய் நின்று யோசித்தவனுக்கு
மையப் புள்ளியாய் மதியை வைத்து ஏதோ ஓர் பெரிய சதி வலை பின்னப்படுவது தெட்டத் தெளிவாய் அவன் மூளை உணர்த்திட ஆணவன் மனமோ தன்னவளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதென்று அடித்துக் கொண்டது.

இத்தனை நாளாய் பலவீனம் தனக்கில்லை என இறுமாப்பாய் இருந்த அவன் இரும்பு இதயமோ இன்று உன் ஒட்டுமொத்த பலகீனமே அவள் தான்டா மடையா என அடித்துரைப்பதாய் படபடத்துக் கொண்டிருக்க அந்த உணர்வை தாங்க முடியாதவனாய் தன் நெஞ்சில் கரம் பதித்து அழுத்தியவன் "உன்ன நெருங்கனும்னா முதல்ல என்னை தாண்டனும் ஏஞ்சல்.. ஆல்வேய்ஸ் ஐ வில் ப்ரொடக்ட் யூ" என தனக்குள் உறுதி கொண்டான்.

அன்றைய நாள் அப்படியே கழிந்திட அடுத்த நாள் சக்தியை தேடி அவன் அறைக்குள் நுழைந்தான் கௌசிக்.

கௌசிக்கை கண்ட சக்தியோ "வாங்கண்ணா" என அவனை உள்ளே அமரவைத்திட சிறு தலையசைப்போடு உள்ளே வந்து அமர்ந்தவன் சக்தியையே பார்த்திருந்தான்.

அவன் பார்வையின் அர்த்தம் புரியாது சக்தியோ முழித்திட தானாகவே பேச்சை தொடங்கினான் கௌசிக்..

"சக்தி நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணணும்" என்றதுமே அடுத்த நொடி யோசிக்காது "என்ன செய்யனும் சொல்லுங்கண்ணா" என்றவனை மெச்சுதலாய் பார்த்தவன் தான் கேட்க வந்ததை கேட்க தொடங்கினான்.

"நீ யாருக்காக இங்க ஸ்பை வேலை பார்க்க வந்தியோ அவங்கள இங்கே என்னை தேடி கொடைக்கானல் வரவைக்கனும்.. உன்னால முடியுமா?" எனக்கேட்டவனை அதிர்ந்து பார்த்தாலும் சக்தியோ "முடியும்ணா" என்றிட சிறு புன்னகையுடன் அவன் தோள் தட்டிக் கொடுத்தவன் "சீக்கிரமா வரவெச்சிடு சக்தி அவங்களுக்கு சொந்தமான ஒரு பொருள் என்கிட்ட இருக்கு அத பத்திரமா நான் திரும்ப கொடுக்கனும்" என ஏதோ பேசிவிட்டு சென்றவனை புரியாது பார்த்து நின்றான் சக்தி..

சக்தியிடம் பேசிவிட்டு தன்னறைக்குள் வந்த கௌசிக்கோ அவனறைக்குள் அங்கு ஓரமாய் அடுக்கப்பட்டிருந்த புத்தக செல்பில் "பாரதியார் கவிகள்" என்றிருந்த புத்தகத்தை எடுத்தவன் கரங்களோ தன்னிச்சையாய் ஒரு பக்கத்தை திறந்திட புத்தகத்தின் நடுவே பாந்தமாய் புதைந்திருந்தது சிறிய அளவிலான பென்ட்ரைவ் ஒன்று.

அதை தன் கைகளில் ஏந்தியபடி "இதை அடைவதற்கு எத்தனை போராட்டம்" என இதழ் வளைத்து சிரித்துக் கொண்டவன் அதை இருந்த இடத்திலே வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்..

ஒருவனின் ஒட்டுமொத்த மாபியா சாம்ராஜ்ஜியத்தையும் ஒற்றை பென்ரைவில் பாராதியாரின் கவிகள் மத்தியில் புதைத்து வைத்திருந்தான் கௌசிக் கிருஷ்ணண்.


நாட்கள் மெதுவாய் நகர்ந்திட மதியின் உடல்நிலையும் சரியாய் போயிருக்க கௌசிக்கோ மீண்டும் வேலையில் சேரும் நாளும் வந்தது.

நாளை ஊருக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டவன் தன்னறைக்குள் நுழைந்தான்..

கட்டிலில் புத்தகமும் கையுமாய் அமர்ந்திருந்தவளை நோக்கிச் சென்றவன் "மதி நாம நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம் நீ எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்க சரியா?" எனக் கூறிக் கொண்டே அலமாரியினுள் எதையோ தேடியவனுக்கு தான் பேசியும் பதில் பேசாதவளின் அமைதி என்னவோ போலிருக்க திரும்பி அவளைப் பார்த்தான்.

அவள் முகம் வாட தலைகுனிந்து அமைதியாய் அமர்ந்திருப்பதைக் கண்டவனோ அவளை நெருங்கி அவள் நாடி பிடித்து அவள் முகம் பார்த்து
"என்னாச்சு என் புஜ்ஜிமாவுக்கு முகம் ஏன் இப்பிடி வாடி போய்ட்டு?" என மென்குரலில் கேட்டிட.. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளோ "கண்டிப்பா ஊருக்கு போகனுமா மாமா" என்றாள் உள்ளிறங்கிய குரலில்.

அவள் குரலிலிருந்த வாட்டத்தில் அவள் மனம் புரிந்தவனின் முகம் கனிந்திட அவளருகே அமர்ந்தவன் "ஏன் புஜ்ஜிமா எல்லாரையும் விட்டுடு வர கஷ்டமா இருக்கா?" அவன் மனதை படித்தவனாய் அவளிடம் கேட்க ஆமென்று தலையசைத்தவள்
"நாம இங்கேயே இருப்போமா மாமா ப்ளீஸ்" கெஞ்சலாய் கண்கள் சுருக்கி கேட்ட தோரணையில் அவள் தலையை மென்மையாய் கோதிவிட்டவன்
சிறிது நேர யோசனைக்குப் பின் "ஓகே நாம இப்பிடி பண்ணுவோம்" என ஏதோ ஒரு தீர்வைக் கண்டுபிடித்தவன் போல கேட்டிட அவளும் ஆர்வமாய் "எப்பிடி மாமா" என கேட்டாள்.

"எப்பிடின்னா புஜ்ஜிமா நீங்க இங்கவே உங்க பெரியம்மா மடியிலே இருந்துக்குவிங்களா நான் ஊருக்கு போய் வேலைக்குப் போவேனாம்.. அப்புறம் மாசத்துல ஒரு தடவை ஊருக்கு வந்து நான் உங்கள பார்ப்பேனாம் எப்பிடி" என கண்சிமிட்டி கேட்டவனை முறைத்தாள் பெண்.

அவன் தான் அறிவானே இந்த இடைப்பட்ட சில நாட்களில் பெண்ணவளுக்கு தான் எத்தனை முக்கியமானவன் என்பது.
ஆரம்பத்திலிருந்த தெரியாத பாவனை எதுவுமே இல்லாது காலம் காலமாய் பழகியவர்கள் போல அத்தனை உரிமையாய் நெருங்கித் தான் போயினர் இருவரும்.

அவள் நிச்சயம் தன்னைவிட்டு பிரிந்திருக்கமாட்டாள் எனத் தெரிந்தே வேண்டுமென்று அவளை அவன் சீண்டிவிட்டிருக்க அவன் எண்ணப்படியே அவளோ கோபத்தோடு முகம் திருப்பியதைக் கண்டு நமட்டுச்சிரிப்பு சிரித்தவன் வேண்டுமென்றே "எப்பிடி என்னோட ஐடியா சூப்பர்ல" என கேட்டு மீண்டும் அவளை வெறுப்பேத்த அவளோ கோபத்துடன் உதட்டை சுளித்தவள் படுக்கையைவிட்டெழுந்து தங்களது பொருட்களை தயார்படுத்தத் தொடங்கினாள்.

அவள் செய்கையில் தன்னுள் பொங்கி வந்த புன்னகையை அடக்கிக் கொண்டவன் மனமோ "அய்யோடா என் ஏஞ்சல்க்கு கோபம் எல்லாம் வருமா.. க்யூட்" என தன்னவளை கொஞ்சிட தானும் எழுந்து அவளை நெருங்கியவன் தன்புறம் அவளைத் திருப்பி நெற்றியோடு நெற்றியை செல்லமாய் முட்டி
"என் ஏஞ்சலை விட்டுட்டு நான் மட்டும் போவேனா?" எனக் கேட்க அவள் விழிகளோ ஆனந்தமாய் விரிந்து அவன் முகம் பார்த்தவள் "அப்போ நாம ஊருக்கு போகலையா இங்கேயே இருக்கப் போறோமா?" துள்ளளோடு குதூகலித்தவளின் மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டியவனோ
இல்லையென்று தலையசைத்தவன் "நாம போகத்தான் போறோம்" என்றதும் மீண்டும் முகம் வாடினாள்.

அவள் முகவாட்டத்தை கண்டு "என் புஜ்ஜிமாக்கு எப்போ எல்லாம் வீட்டு நியாபகம் வருதோ அப்போ நம்ம இங்கே வருவோம் சரியா?" என்றதும் அவள் முகத்தில் சிறு மகிழ்ச்சி தோன்ற அவனைப் பார்த்தவள்
"ஏன் மாமா எப்போவும் எனக்கு வீட்டு நியாபகம் வந்தா அப்போ டெய்லி நாம இங்கோ வருவோமா" குறும்புக் குரலில் அவள் கேட்டிட

அவனோ "ம்ம் அப்போ மதியோட மாமா பொலீஸ் வேலைக்கு பாய் பாய் சொல்லிட்டு என் புஜ்ஜிமாக் கூடவே வந்து செட்டிலாகிட வேண்டியது தான்" அவளுக்கு சளைக்காதவனாய் பதில் கூற..

அவளோ பதறியவளாய் "அய்யோ அப்பிடி பண்ணவேணாம் மாமா அப்புறம் ரௌடிஸ் எல்லாம் யாரு தடுக்குறது.
நான் உங்கக் கூடவே இருக்கேன் பொலீஸ் வேலையை விட வேண்டாம்" என அவன் நிஜமாகவே வேலையை விட்டுவிடுவானோ என பயந்து அவனை தடுத்தவளை புன்னகையாய் பார்த்தவன் தன் இடை வளைத்து குனிந்து "உத்தரவு மகாராணியாரே" என பணிந்திட அவன் செய்கையில் சத்தமாய் சிரித்தாள் அவனின் வெண்மதி.

இங்கு ஒரு ஜோடியோ காதல் கிளிகளாய் கொஞ்சிக் கொள்ள அங்கே மற்றுமொரு ஜோடியோ எலியும் பூனையுமாய் சீறிக் கொண்டிருந்தது.

ஈஸ்வரின் வருகையில் மனமுடைந்து பயந்திருந்த திவ்யாவின் மனமோ சிவாவின் பேச்சில் மேலும் நொருங்கிப் போயிருக்க பல எண்ணங்களின் சுழற்சியோடும் நெஞ்சில் ஏறிய பாரத்தோடும் நாட்களைக் கடத்திய திவ்யாவோ என்றும் போல அன்றும் தன்னறைக்குள் அடைந்து கிடந்தவள் எதையெதையோ எண்ணியபடி விட்டத்தை வெறித்து படுத்திருந்தாள்.


இங்கு பெண்ணவளின் மனம் படும்பாட்டை அறியாத விஷ்வாவோ சந்தோஷ மனநிலையுடன் "தியா தியா " என அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்திட ஏற்கனவே மனதின் சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தவளுக்கு விஷ்வாவின் தொடர் அழைப்பு எரிச்சலை உண்டாக்க
விலுக்கென எழுந்து அமர்ந்தவள்
"இப்போ என்ன வேணும் உனக்கு எதுக்கு என் பேரை ஏலம் போடுற" எரிச்சல் மீதுற அவள் கத்திய கத்தலில் அசைவின்றி அவளை நிமிர்ந்து பார்த்தவன் விழிகளில் தப்பாது விழுந்தது அவளின் சிவந்து வீங்கிய முகமும் கண்களும்..

"என்னாச்சு தியா??" என்றவனிடம் "எ..என்ன என்னாச்சு" என்றவளுக்கு தன் அழுத முகம் கண்டு எதையாவது காண்டு கொள்வானோ என பயந்தவள் முகத்தை அவனுக்குக் காட்டாது திரும்பிக் கொண்டு "தலை வலிக்குது.. இப்போ எதுக்கு என்ன கூப்டிங்கன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?" என கத்த..

அதில் அவளின் கண்ணீருக்கான காரணம் தலைவலி தானோ என எண்ணிக் கொண்டவன் அவளிடம் தலைவலி மாத்திரையும் தண்ணீரையும் எடுத்து நீட்டிட அவன் அன்பில் கலங்கத் துடித்த கண்ணீரை கட்டுப்படுத்தியவள் மறுப்பேதும் கூறாது அதை வாங்கிப் பருகி
தன்னையே கவலை தேய்ந்த முகமாய் பார்த்து நின்றவனிடம் "எதுக்கு கூப்டிங்க?" என்றாள்.

அதிலே தான் சொல்ல வந்தது நியாபகம் வந்தவனாய் "நம்ம நாளைக்கு ஊருக்கு போகனும் தியா.. உன்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ" என்றவனை
அதிர்ச்சியாய் பார்த்தாள்.

அவள் அதிர்ச்சியை கண்டுகொள்ளாதவனாய் "நான் வீடு எல்லாம் பார்த்துட்டேன் தியா நாளைக்கு மோர்னிங் கிளம்பினா ஈவ்னிங்கே ஊருக்கு போய்ட சரியா இருக்கும்" என்றவன் மேலே பேசுமுன்னரே அவனைத் தடுத்து "என்னால வர முடியாது" என்றாள் திவ்யா.

அவள் மறுப்பில் அவன் புருவம் சுருங்க அவளைப் பார்த்தவன் "ஏன்.. முடியாது?" என்க..

அவளோ "வர முடியாதுன்னா முடியாது தான்" என்றாள் பிடிவாதமாய்..

அவளுக்கோ உள்ளுக்குள் ஒரு பயம் எங்கு தன் கூட்டை விட்டு பிரிந்து சென்றாள் மீண்டும் தன்வாழ்வில் அனுபவித்த அதே கஷ்டங்களை அனுபவிக்கக் கூடுமோ என அவளின் முந்தைய வலி நிறைந்த இறந்த காலங்கள் உள்ளத்தில் அச்சத் தீயை வளர்த்துவிட பயத்தில் அவனிடம் மறுத்தாள் பெண்.

அவளின் பிடிவாதமான மறுப்பில் அவனுக்கோ சிறு கோபம் முளையிட "வர முடியாதுன்னா என்ன அர்த்தம்" கோபத் தொனியில் அவன் கேட்டதுமே
மனதின் பயத்தோடு உழன்றவளுக்கு அவன் கோபம் அவளுக்கும் கோபத்தை உண்டாக்க வரைமுறையற்ற வார்த்தை பிரயோகத்தை தன்னை மறந்து உரைத்திருந்தாள் பெண்.

"என்ன அர்த்தமா?? ஏன்னா உன்னை நம்பி உன் கூட தனிய வர முடியாது. என் குடும்பத்து மேல உள்ள பழிவெறில என்னை கூட்டிட்டுப் போய் எவனுக்காச்சும் வித்தாலும் வித்துடுவ" என்ற வார்த்தையை முடிக்கும் தருவாயில் அவள் கன்ன்னமோ சுளீர் என்ற வலியோடு சிவந்து தான் போனது ஆணவனின் ஐவிரல் செய்த மாயத்தில்.

எரிந்த கன்னத்தில் கைபதித்து விழி கலங்க நிமிர்ந்தவள் கண்டதோ ருத்ர மூர்த்தியாய் நின்ற கணவனையே.. அவன் அவதாரத்தில் அவள் மிரண்டு முழிக்க அவள் பேசிய பேச்சின் வீரியம் குறையாதவனாய் அவள் முடிக்கற்றையை கொத்தாய் பிடித்திழுத்து தன் முகம் பார்க்கச் செய்தவன் அவள் வலியில் முகஞ்சுளித்ததை கிஞ்சிதும் மதியாதவனாய் "என்னடி விட்டா ரொம்ப தான் பேசுற நான் தப்பு பண்ணவன் தான் ஒத்துக்குறேன் ஆனா உன்னை காதலிச்சது நடிப்பு இல்லை.
உன்னை நானா ஒதுக்கல நீயா தான் தாலியை என் முகத்தில தூக்கி வீசிட்டுப் போனத மறந்திட்டியாடி..
அப்போவும் சரி இப்போவும் சரி எப்போவும் சரி எனக்கு உன் மேலே இருந்த காதல் துளி கூட குறையல ஆனா நீ என் காதலை புரிஞ்சிக்கவே இல்லல.." மூச்சு தாறுமாறாய் வெளியேற கோபத்தில் இரைந்தவன் "இப்போ சொல்றேன் கேளுடி நீ என்கூட வரனும் என் கூட வாழனும் அதுவும் முழுமையான மனைவியாய் வாழனும்.. அப்படி வாழல.. ம்ம்ஹும் வாழ்ற வாழ்ந்தே ஆகுற" அக்னி பிளம்பாய் கொந்தளித்தவன் அவளை உதறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

போகும் அவனை கண்களில் நீர் வழிய பார்த்து நின்ற திவ்யாவின் மனம்முழுவதும் அவன் கூறிச் சென்ற அவன் காதலை வெளிப்படுத்திய ஆழமான வார்த்தைகள் ஓர் நிம்மதியை பரவச் செய்திட அசைவின்றி அமர்ந்திருந்தாள்.

அதேநேரம் நாளை கிளம்புவதற்காக அறையில் தங்கள் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த மதிக்கோ
அறையிலிருந்த புத்தக ராக்கை கண்ணில் பட அதை நோக்கிச் சென்றாள்.

இங்கிருந்த நாட்களில் குடும்பத்தினருடனான நேரம் தவிர்த்து மிகுதி நேரத்தை அவள் கழித்தது என்னவோ அங்கிருந்த புத்தகங்களுடனே..

அதனாலே அங்கிருந்த புத்தகங்களில் சிலதை எடுத்து செல்லலாம் என எண்ணியவள் அங்கிருந்த புத்தகங்களை சிலவற்றை தேர்ந்தெடுத்து தன் பையில் வைத்தவளுக்கு இறுதியாய் அந்த ராக்கையின் ஓரத்தில் மறைவாய் வைக்கப்பட்டிருந்த பாரதியின் கவிகள் என்ற புத்தகத்தின் மீது பார்வை படிய அதை எடுத்தவள் முகத்தில் அத்தனை சந்தோஷம்..

கவிதைகள் என்றாலே அளப்பரிய ஆசை கொண்ட பெண்ணவளுக்கு பாரதியின் கவிகள் என்றாள் கேட்கவும் வேண்டுமா ஆர்வத்துடன் அதை எடுத்தவள் "ஐய் பாரதி கவிகள் என்னோட பேவரைட்.. நாளைக்கு ஊருக்கு போகும் போதே படிச்சிட்டு போகலாம்" என மனதில் நாளைய பயணத்திற்கான சிறு திட்டத்தை மனதில் தீட்டிக் கொண்டவள் அதை பத்திரமாய் தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள்.

யார் கைக்கும் கிடைக்க கூடாது என்று தன்னறையில் புத்தகங்கள் நடுவே ஆணவனால் மறைத்து வைக்கப்பட்ட ரகசியமானது இன்று அவனின் சரிபாதியினாலே வெளியுலகை நோக்கி பயணிப்பது விதியின் சதியோ? இல்லை அந்தக் கடவுளின் சித்தமோ? யார் அறிவார்..




தொடரும்...
 
Last edited:

Habi

Moderator
அத்தியாயம் - 33


அறையிலிருந்து கோபத்துடன் வெளியேறிச் சென்ற விஷ்வாவின் மனமோ தன்னவளிடன் தான் நடந்து கொண்ட முறையில் தன் மீதே கோபம் கொள்ள நீண்ட நேரம் தனக்குள்ளே மருகித் தவித்தவன் மீண்டும் தன்னறைக்குள் திரும்ப அங்கே தங்கள் பொருட்களை தயார்படுத்தி கொண்டிருந்த மனையாட்டியைக் கண்டு மனம் இலேசாகிப் போனது.

அறைக்குள் நுழைந்தவனைக் கண்டும் காணாதவள் போல பொருட்களை தாயார் செய்து கொண்டிருந்தவளை ஒரு கணம் நின்று பார்த்தவன் எதுவும் கூறாது குளியறை புகுந்திட போகும் அவனையே ஏக்கத்துடன் பார்த்தாள்.

அவளுக்கே தான் இன்று அதிகப்படியாய் பேசிவிட்டோம் என மனம் குற்றம் சாட்டவே அவனிடம் மேலும் வாக்குவாதம் செய்யாது நாளை கிளம்ப வேண்டி பொருட்களை தயார் செய்தவளுக்கு அவனின் இந்த பாராமுகம் மனதை வலிக்கச் செய்தது.

"பண்றதெல்லாம் பண்ணிட்டு இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என தன்னை கண்டு கொள்ளாது சென்றவனை எண்ணி மனதினுள் திட்டிக் கொண்டவள் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு கண்ணாடி முன்னே நின்று அவன் அடித்த கன்னத்தை பார்த்தாள்.
கன்னம் சிவந்து விரல் தடங்கள் பதிந்திருந்தது.

கரம் கொண்டு மெலிதாய் வருடியவள் வலியில் மெலிதாய் முகம் சுருக்கி வலியில் விழிமூடி நிற்க அவள் கன்னத்தில் சில்லென்று திடீர் குளிர்மை பரவ பட்டென்று விழி திறந்தவள் முன்னே கண்ணாடியில் விஷ்வாவின் உருவம்.

குளித்து முடித்தவன் அங்கே அவள் நின்று தன் கன்னத்தை பார்ப்பதை அறிந்து தன் செய்த தவறு நினைவு வர அவளை நெருங்கியிருந்தான்.

அவளை தன் பக்கம் திருப்பியவன் அவள் கன்னத்தை மென்மையாய் வருடினான்.
அவன் வருடலில் மென்மை இருந்தாலும் அவளுக்கு வலித்திட "ஸ்ஸ்" என முணங்கியவள் அவன் கைகளை விலக்கிவிட அவனும் அவள் வலியுணர்ந்து கரத்தை விலக்கியவன் குனிந்து அவள் கன்னத்தில் மென்மையாய் இதழ்பதித்து விலகினான்.

அவன் இதழ் முத்தம் அவள் மனம் ரசிக்க எதுவும் பேசாது அவனையே விழியகற்றாது பார்த்து நின்றாள்.

தன்னவளின் அசையாத பார்வையில் ஆணவன் தயக்கமும் தடைகளும் நீங்கிட மெல்ல அவளை நெருங்கியவன் அவள் இதழ் நோக்கி குனிந்த நொடி அவன் தலையிலிருந்த நீர்த்துளி வடிந்து அவள் முகத்தில் பட்டுத் தெறித்திட அதில் தன் சுயம் பெற்றவள் முகமோ தன்னவன் நெருக்கத்திலும் சூடான மூச்சுக்காற்றிலும் முகம் செவ்வானமாய் சிவந்திட அவனை விட்டு விலகி குளியறை புகுந்திட தலையை அழுந்தக் கோதிக் கொண்டு புன்னகையுடன் தயாராகினான்..

அன்று இரவே கௌசிக்கோ வீட்டினரிடம் தாங்கள் நாளை கிளம்புவதை கூறியிருக்க அனைவருக்கும் அது கவலையை தந்த போதிலும் அவனின் வேலையுணர்ந்து தங்கள் கவலைகளை மறைத்து அவர்களோடு சந்தோஷமாய் நேரத்தை கழித்தனர்.

அடுத்த நாள் விடியலில் கௌசிக் மதி ஜோடியும் விஷ்வா திவ்யா ஜோடியும் சென்னையை நோக்கிச் செல்ல தயாராகி கீழே வர அவர்களை வழியனுப்ப குடும்பத்தினர் அனைவரும் காத்திருந்தனர்.

நால்வரும் கீழே வந்தவர்கள் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப கௌசிக்கோ "விஷ்வா நீங்களும் எங்க கூடவே ஒரே வண்டில வரலாமே" என்றிட திவ்யாவோ கணவனை கேள்வியாய் நோக்கினாள்.

நேற்று அவன் கிளம்ப வேண்டும் என்றதுமே அவனிடம் கோபமாய் சண்டை போட்டவளோ அதன் பின் அவனிடம் எங்கு போகிறோம் எங்கு தங்குவது என எதைப் பற்றியும் கேட்காது அமைதியாகவே அவனோடு கிளம்பியிருக்க இப்போது அண்ணணின் கேள்வியில் கணவனை பார்த்தாள் திவ்யா.

அவள் பார்வையுணர்ந்தவனும் "உங்கண்ணன் வீட்டு பக்கம் தான் நானும் வீடு பார்த்திருக்கேன்.. சோ பயமில்லாம என்னோட நீ வரலாம்" உணர்வற்ற முகத்துடன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன் கௌசிக்கிடம் "இல்ல கௌசிக் என் ப்ரெண்ட் ஒருத்தர மீட் பண்ணயிருக்கு நான் மீட் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன்" என்றதும் சரியென்று மதியை அழைத்துக் கொண்டு தங்கள் வண்டியில் கௌசிக் கிளம்பிட விஷ்வாவோ தங்கள் வண்டியில் கிளம்பினான்.

சிவாவோ ஏதோ வேலை காரணமாக இரண்டு நாள் கழித்தே ஊருக்கு வருவதாய் கூறியிருக்க இரு ஜோடிகள் மட்டும் சென்னையை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்.

பயணம் தொடங்கியது முதல் எதுவுமே பேசாது அமைதியாய் வரும் மதியின் புறம் அடிக்கடி பார்வையை பதித்து மீட்டுக் கொண்டவனாய் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் கௌசிக்.

காலையில் கிளம்பத் தயாராகும் போதே அழுது கரைந்தவளை அதட்டி உருட்டி அவனோ அழைத்து வந்திருக்க இப்போதும் கவலை தேய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தவளை கண்டு "ஓய் என்னாச்சு பாப்பாக்கு அம்மா நியாபகம் வந்திடுச்சா" நகைப்புக் குரலில் அவளை சீண்டிட அவனை திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாது ஜன்னல் பக்கமாய் திரும்பிக் கொண்டாள்.

"அய்யோடா பாப்பாக்கு கோபம் போல இருக்கே பாப்பா பேச மாட்டாங்களோ?" அவளிடம் அப்போதும் மௌனமே பதிலாய் கிடைத்திட இதழுக்குள் சிரித்துக் கொண்டவன் "இப்போ பாரு உன்னை எப்பிடி பேச வைக்கேன் பாரு" என எண்ணிக் கொண்டவன் வாகனத்தை வேகமாகச் செலுத்திட அவனது அதீத வேகத்தில் தடுமாற ஆரம்பித்தாள் பெண்.

அவள் தடுமாற்றத்தைக் கண்டவனோ "அச்செச்சோ ப்ரேக் புடிக்கலயே" என அலறிய அலறலில் பெண்ணவள் முகம் கலவரமானது.

"அச்செச்சோ ப்ரேக் பிடிக்கலயே" கண்ணை உருட்டி அவன் கூறிய பாவனையில் முழுதாய் பயந்து போனவள் அவனை தாவி அணைத்துக் கொள்ள
அவளது இந்த திடீர் அணைப்பை எதிர் பார்க்காதவன் கரங்களோ சற்றே தடுமாறிட வண்டியோ கொஞ்சம் தடுமாறி சாலையை உரசி நின்றது.

வண்டி நின்றது கூட அறியாதவளாய் பயத்தில் உடல் நடுங்க தன்னையே இறுக்கியணைத்திருந்தவளின் அணைப்பின் இறுக்கமே அவள் எந்தளவிற்கு பயந்துள்ளாள் என்பதை பறைசாற்ற தன் விளையாட்டை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.

"மதிமா இங்க பாரு" அவள் முதுகை தடவி ஆறுதல்படுத்தியவன் அவள் முகத்தை நிமிர்த்த முயல அவளோ அவனை விட்டு பிரியாது தன் பிடியை இறுக்கினாள்.

"ஹேய் ஒன்னுமில்லடா இங்கப்பாரு.. நான் சும்மா விளையாடினேன்.. இங்கப் பாரு கார் நின்னுடுச்சு" என தன் நெஞ்சில் புதைந்தவளை நிமிர்த்தி அவள் முகம் பார்த்திட அவள் முகமோ கலங்கி கண்களோ கண்ணீரைச் சிந்தியது.

"ஹேய் புஜ்ஜிமா அழுகாதடா சாரி சாரிடாமா" என அவளை சமாதானம் செய்தவன் நெஞ்சில் குத்தியவளின் அடிகளை சிரிப்புடன் வாங்கிக் கொண்டவன் அவள் தலையோடு நெஞ்சோடு இறுக்கி "சாரிடா சாரி ரொம்ப பயந்துட்டியா" என அவளைத் தேற்ற அவளோ "ஏன் மாமா இப்படியெல்லாம் பண்ணிங்க நா...நான் ரொம்ப பயந்திட்டேன் தெரியுமா?" கலங்கிய குரலில்

"ஹேய் புஜ்ஜி இங்கப் பாரு நான் சும்மா தான் அப்பிடி செய்தேன்...நீ உம்முனு பேசாம வந்தே உன்னை பேச வைக்கத்தான். என்று அவள் தலை முடி கோதியதுமே தான் நினைவு வந்தவளாய் "ஆமால்ல நான் உங்கக் கூட கோபமா இருக்கேன்" என்று விட்டு விலகி அமரப் போகயிருந்தவளை தன்னுடன் இறுக்கிப் பிடித்தான் கௌசிக்.

"ஓய் புஜ்ஜி பாப்பா அப்புடி என்ன கோபம் என் மேல" சின்ன சிரிப்புடன் அவள் நெற்றி முட்டி கேட்டவனிடம்
"கோபம் தான் சும்மா சும்மா மிரட்டிட்டு இருந்திங்க அதான் சரியான முசுடு" என திட்ட கௌசிக் வாய்விட்டுச் சிரித்தான்.

அவன் சிரிப்பில் நிமிர்ந்து அவனை ரசனையாய் பார்த்தவள் பார்வையை கண்டு கொண்டவனாய் புருவமுயர்த்தி "என்ன" எனக் கேட்டதும் வேகமாய் ஒன்றுமில்லை என தலையசைத்தவள் பார்வையை தழைத்துக் கொள்ள அவனோ மெல்லிய சிரிப்புடன் வண்டியை செலுத்தினான்..

சிறிது தூரம் கடந்திருக்க அவனின் அழைபேசி அலறவும் மீண்டும் வண்டியை ஓரமாய் நிறுத்தியவன் அழைப்பை ஏற்று பேச மறுமுனையில் என்ன கூறப்பட்டது அவன் முகமோ நொடியில் இறுக்கத்தை தழுவிட தன்னருகே தன் முகத்தையே பார்த்திருந்த பெண்ணவளுக்கு தன் இறுக்கத்தை மறைத்தவன் அவளிடம் "வெய்ட் மதி" என்றுவிட்டு வண்டியை விட்டு வெளியேறி சிறிது தள்ளி சென்று பேச ஆரம்பித்தான்.

"என்ன கௌசிக் பொண்டாட்டியோட சந்தோஷமா ஊருக்கு கிளம்பியாச்சு போல" என்ற மறுமுனையில் கேட்ட ஈஸ்வரின் குரலில் பல்லைகடித்தவன் "எதுக்கு ஹால் பண்ண" என கேட்டிருந்தான்.

அவன் கேள்வியில் மறுபக்கம் சத்தமாய் சிரித்தவன் "அட இனி நாம தான் அடிக்கடி பேசிக்கனுமே கௌசிக் ஸார்.." என்றவன் "பழைய கணக்கு பாக்கியிருக்குல.. இந்தவாட்டி மொத்தமா முடிச்சிடலாம்னு இருக்கேன்.." என்றவனின் குரலின் பேதமே எச்சரிக்கை விடுக்க அதை உணர்ந்தாலுமே அசராதவனாய் "எஸ்.. இந்த வாட்டி மொத்தமா உன் கணக்க செட்டில் பண்ணிடலாம் ஈஸ்வர்.." என்றான் கௌசிக்.

"ஓ ஷ்யுர் ஏசிபி ஸார்.. போனவாட்டி ஒத்தையா தங்கச்சிய மட்டும் வெச்சு பந்தயம் ஆடுனிங்க இந்த வாட்டி மொத்த குடும்பமும் ப்ளஸ் நீயூ வைஃப்ம் இருக்காங்களே.. செம்ம இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்ல" என்றவன் குரலில் இருந்த மறைமுக மிரட்டலில் கௌசிக்கின் விழிகளோ அழுத்தமாய் மூடித் திறந்தன..

அவனிடம் நிலவிய மௌனத்தை களைத்தவனாய் ஈஸ்வரே "ஹெப்பி சேப் ஜேர்னி ஏசிபி ஸார்" என நக்கல் தொனியில் கூறவும் அவனை கடந்து வேகமாய் ஒரு லாரி கடக்கவும் சரியாய் இருக்க ஏதோ விபரீதமாய் நடக்கப் போவதை உணர்ந்து திரும்பியவன் கண்ணிமைக்கும் நொடியில் அடித்து தூக்கி வீசப்பட்டது அவனது வண்டி.

அதில் அதிர்ந்து ஓர் நொடி விறைத்து நின்றவன் காதில் "போ போய் புறக்கிக்கோ உன் பொண்டாட்டிய" என்ற ஈஸ்வரின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவன் வேகமாய் ஓடினான் அவ்விடம் நோக்கி..




தொடரும்...
 

Habi

Moderator

அத்தியாயம் - 34

திடீர் என்று நிகழ்ந்த செயலில் அதிர்ச்சியாகி நின்றவன் அடுத்த கணம் "மதி" என்ற அலறலுடன் காரை நோக்கி சென்றவன் அங்கே கண்ட காட்சியில் உறைந்தே போனான்.​

காரின் பின்பக்கம் முழுவதும் சுக்குநூறாய் நொருங்கியிருக்கக் கண்டு அவன் நெஞ்சமோ ஒரு கணம் நின்று துடித்தது.​

அவன் காவல்காரன் இதற்கு முன்னே எத்தனையோ ஆக்ஸிடெண்ட்களில் ரத்த வெள்ளத்தில் சடலங்களை, அடிபட்டவர்களை கண்டவன் தான் ஆனால் இன்றோ மனதுக்கு நெருக்கமான உறவு கண்முன்னே சிதறி போனதில் மூளை மறத்துப் போனவனாய் நிலையின்றி நின்றிருந்தவன் யாருமற்ற அந்த சாலையில் தலையில் கைவைத்து "மதி" என கத்திய கத்தலில் காற்றையும் பிளந்து அவன் குரல் எதிரொலித்தது.​

கண்களில் விழி நீர் மறைக்கத் தட்டுத்தடுமாறி எழுந்து முன்னே சென்றவன் நடுங்கும் இதயத்தோடு பெண்ணவளை தேடிட அங்கு அவள் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் இருக்க குழப்பித்தான் போனான் கௌசிக்.​

சில நொடி அவளில்லாது உறைந்து நின்றவன் பின் பார்வையை சுழற்றி அங்குமிங்கும் அவளைத் தேடியவனுக்கு அந்த வெறிச்சோடிய சாலையில் அவளிருப்பதற்கான அரவமே இல்லாமலிருக்க தடுமாறித்தான் போனான்.​

"மதி எங்கேடி இருக்க" இதழ்கள் முணுமுணுக்க சாலையின் இருபுறமும் தேடித்திரிந்தவன் பார்வைக்கு சாலையை விட்டு சற்றே தொலைதூரத்தில் அமைந்திருந்த குடிசை வீடும் அங்கே யாரோ நிற்பதும் தெரிந்திட விழிகளை கூர்மைபடுத்தி பார்த்தவனுக்கு அது தன்னவள் தான் என புரியந்த நொடி சொல்லொண்ணா உணர்வென்று கிளர்ந்தெழ அந்த குடிசை நோக்கி வேகமாய் ஓடினான்.​

இங்கு நடந்த எதுவுமே அறியாதவளாய் பெண்ணவளோ சற்றுமுன் பாதையை கடக்க முயன்ற சிறுவனைக் கண்டு அவனை பிடித்துக் கொண்டவள் அவனிடம் வீடு எது எனக் கேட்டு பத்திரமாய் சிறுவனை வீட்டில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாள்.​

மின்னலென ஓடி வந்து தன்னை இறுகணைத்தவன் திடீர் அணைப்பில்
பலமின்றி அவளோ கீழே சரிந்திட அவள் மீதே சரிந்தான் அவன்.​

பெண்ணவள் உடல் மொத்தமும் தனக்குள் வாரிச்சுருட்டி அவளை தனக்குள் புதைத்துக் கொண்டவன் அணைப்பின் இறுக்கத்தில் மூச்சு முட்டியவளாய் "மாமா" என்றவளின் அழைப்பு காதில் கேளாது அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான் அவன்.​

சற்றுமுன் அவன் கண்முன்னே நிகழ்ந்த அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில கணங்கள் அவனுக்கு தேவைப்பட மூச்சிரைக்க அவள் கழுத்து வளைவிலே இளைப்பாறியவனுக்கு பெண்ணவள் பாரம் தாளாது நெளிந்ததில் எக்குதப்பாக உடல் உரசவே சட்டென விழித்துக் கொண்டவன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க பெண்ணவளோ அதீத நெருக்கத்தில் முகம் செவ்வானமாய் சிவந்திருக்க அவன் முகம் பாராது விழி தாழ்த்திக் கொண்டாள்.​

பெண்ணவள் வெட்கம் பூசிய பூமுகம் ஆணவனுக்கு பலவித உணர்வுகளை உண்டு பண்ணிட தன் எண்ணம் போகும் திசையை அறிந்தவன் இதழ்களில் மந்தாசகப் புன்னகையொன்று தோன்றி மறைய அவள் மேலிருந்து எழுந்தவன் அவளுக்கும் கை கொடுத்து எழுப்பிவிட்டவன் கீழே வீழ்ந்து கிடந்த அவளது கைப்பையையும் எடுத்தவன் அவளிடம் நீட்டிட அவளோ அவனை பார்க்க வெட்கம் கொண்டு தலை கவிழ்ந்து கொண்டபடி அவன் நீட்டிட கைப்பையை வாங்கிக் கொள்ள அவளைப் பார்த்து புன்னகைத்தவன் கரங்களோ உரிமையாய் தன்னவள் கரங்களைப் பற்றிக் கொள்ள அவளை அழைத்துக் கொண்டே நடையிட்டான்.​

அவனின் திடீர் அணைப்பு எதனால் என புரியாதவளாய் அவன் ஸ்பரிசம் உண்டாக்கிய உணர்வுக்குவியலில் சிக்கிக் கொண்டவளாய் எதுவும் பேசாது அவன் பின்னே நடையிட்டாள்.​

அழைப்பேசியில் யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டே சாலையோரம் பெண்ணவளை அழைத்துச் சென்றவன் நிழலான ஓரிடத்தில் அவளை அமரவைத்துவிட்டு தன் தொலைபேசியில் பேசி முடித்து தன்னையே பார்த்திருந்தவளை நெருங்கி வந்தமர்ந்தவன் "கார்லயிருந்து எப்போ இறங்கின" எனக் கேட்டதும் எங்கு தனக்கு திட்டப் போகிறானோ என பயந்தவள் "அ...அது நா..நான்" என பயத்தில் தடுமாறிட அவள் முகத்தை இருகரத்தால் பற்றி நிமிர்த்தியவன் அவள் பதிலுக்காக காத்திருக்க அவளோ நடந்ததை அவனிடம் விபரித்து பயத்தோடு அவன் முகம் பார்க்க மறுத்து விழி தாழ்த்த அவனோ மென்மையாய் அவள் நெற்றியில் இதழொற்றிட விழிகள் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

அவனோ மௌனமாய் அவள் நெற்றி முட்டியவன் சில நொடி அமைதிகாக்க பெண்ணவள் குழம்பித்தான் போனாள்.​

"என்னாச்சு இவங்களுக்கு" அவன் பற்றிய யோசனையில் அவளும் அமைதியாய் அவனையே பார்த்திருக்க இருவரின் மோனநிலையை களைத்தது என்னவோ அவர்களருகே வந்து நின்ற வண்டிச் சத்தமே.​

அதில் அவளிலிருந்து பிரிந்தவன் அவளைப் பார்க்க அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.​

"இந்த வண்டில போலாம் மதி" என்றவன் அவளை வண்டியில் ஏறச் செய்திட அவளோ "நம்ம வந்த வண்டி எங்க மாமா" எனக் கேள்வியாய் கேட்டவளை பயம் காட்ட விரும்பாமல் எதையோ கூறி சமாளித்தவனிடம் "அப்போ நம்ம லக்கேஜ்" என பாவமாய் கையில் இருந்த ஒற்றை பையை மட்டும் காட்டி கேட்க அவனோ "நாம ஊருக்கு போனதும் நம்ம லக்கேஜ்ஜூம் வந்துரும் மதி" என அவளிடம் கூறிவிட்டு வண்டி ஓட்டி வந்த சாரதியிடம் "நான் சொன்ன வேலையை முடிச்சிடுங்க" என்றவன் சாவியை வாங்கிக் கொண்டு வண்டியை கிளப்பியிருந்தான்.​

வழிநெடுகிலும் ஏன் இந்த திடீர்மாற்றம் என்ற யோசனையோடு அவள் அமைதியாய் அமர்ந்திருக்க கௌசிக்கோ சற்று முன் நடந்த நிகழ்வுகளை தனக்குள் அசைபோட்டு முகம் இறுக அமர்ந்திருந்தவன் இதயம் இன்னுமே கண்முன்னே நடந்த அந்த விபத்தை எண்ணி சிறு நடுக்கம் இருக்கவே செய்தது.​

'அவள் மட்டும் கீழிறங்காவிட்டிருந்தாள் என்னாகியிருக்குமோ' என்ற எண்ணமே அவன் சமநிலையை குழப்பிக் கொண்டிருக்க முயன்று தன்னை நிலைபடுத்தியவன் அமைதியாய் அமர்ந்திருந்தவள் புறம் திரும்பியவன் "புஜ்ஜிமா" என அழைக்க அவளும் அவன் புறம் திரும்பினாள்.​

"என்ன மாமா?" என்றவளின் ஒரு கரத்தை பற்றிக் கொண்டவன் "எப்போவும் தைரியமா இருக்கனும்" என்றிட அவனை தலைசரித்து சிறு புன்னகையோடு பார்த்தவள் "நான் தைரியசாலி தானே மாமா இத நீங்க சொல்லவா வேணும்" என்க.​

தலையாட்டி சிரித்தவனோ "ஆமா ஆமா என் பொண்டாட்டி ரொம்ப ரொம்ப தைரியசாலி தான்" என அவள் மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டியவன் செய்கையில் கிளுக்கிச் சிரித்தவள் புன்னகையை தன்மனப் பெட்டகத்தினுள் சேகரித்தவன் மனமோ சிறிது சிறிதாய் அமைதியுற சென்னையை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.​

சில மணிநேரங்களில் சென்னையில் அவர்கள் தங்கியிருந்த ப்ளாட்டை வந்தடைந்தனர்.
சோர்வுடன் தங்கள் வீட்டினுள் நுழைந்ததும் மதியோ தொப்பென்று சோபாவில் அமர்ந்திட கௌசிக்கோ அவளை பார்த்தவாறு அவளருகே வந்தமர்ந்தவன் சோபாவில் கைகளை பரப்பியவாறு தலைசாய்த்து கண்மூடினான்.​

வண்டியை ஓட்டி வந்த களைப்பு இருந்தாலும் அவன் மூளையில் மீண்டும் அதே சம்பவத்தை எண்ணி எண்ணி ஈஸ்வர் மீது வெறியேற்றிட கண்களை மூடி ஆழ்ந்த அமைதியில் அமர்ந்திருந்தவன் சிந்தையை களைத்தது மதியின் அழைப்புக் குரல்.​

"மாமா மாமா" என்ற அழைப்பில் கண்களைத் திறவாமலே "ம்ம்" என்றான்.​

"நாம தான் வீட்டுக்கு வந்துடோம்ல இன்னும் நம்ம லக்கேஜ் எல்லாம் வரல பாருங்க.. எப்போ மாமா அதெல்லாம் வரும்" என்றவளிடம் என்ன பதில் கூற என நொடியில் யோசித்தவன் "வரும் புஜ்ஜிமா அப்படி வரலன்னா என்ன நான் வேற ட்ரெஸ் வாங்கி தரேன்" என்றவனின் கூற்றில் "அய்யோ மாமா" என அலறியவள் அலறலில் கண்விழித்து அவளைப் பார்த்தவன் "என்னாச்சு" என்றான்.​

"இல்ல மாமா எனக்கு அந்த லக்கேஜ் தான் வேணும் அதுல தான் எனக்கு போர் அடிக்கும் போது படிச்சுக்கலாம்னு உங்க புக்ஸ்ல கொஞ்சம் எடுத்து வந்தேன்" என தயங்கியத் தயங்கிக் கூறியவளின் கூற்றில் அவன் விழிகள் விரிய "என்ன புக்ஸ்" என்றான்.​

"அதான் அங்க நம்ம ரூம்ல இருந்திச்சே பாரதியார் கவிகள் அதோட நிறைய புக்ஸ்" என்றதும் அவன் விழிகள் மேலும் விரிந்து தான் போனது.​

"ஓஹ் ஸிட்" என இதழுக்குள் முணுமுணுத்து தலையை அழுந்தக் கோதியவனுக்கு தான் பாதுகாத்து வைத்திருந்த ரகசியம் அழிந்து போனதோ என எண்ணம் எழும் முன்னரே மதியின் கரங்களோ அவன் ரகசியம் அடங்கிய புத்தகத்துடன் அவன் முன்னே நீண்டது.​

"இதோ இந்த புக் மட்டும் தான் ஹேன்ட் பேக்ல வெச்சியிருந்தேன் வண்டில வரும் போது படிச்சிக்கலாம்னு இப்போ இது மட்டும் தான் என்கிட்ட இருக்கு" என்றவளிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டவன் அதன் முன்பக்கத்தை திருப்பிப் பார்த்ததும் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியேற நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.​

"என்னாச்சு மாமா.. நான் புக்ஸ் எடுத்து வந்தது கோபமா?ஸாரி மாமா நான் உங்ககிட்ட சொல்லாம எடுத்திருக்கக் கூடாது ஸாரி" என தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவள் கன்னத்தில் பதிந்த ஈர முத்ததில் பேச்சு தடைபட விழிகள் விரிய அவனைப் பார்த்தவளை நோக்கி கண்சிமிட்டி சிரித்தவன் அவள் மறுகன்னத்திலும் முத்தம் வைத்து "ஸ்ட்ரோங்கா ஒரு காபி கிடைக்குமா பொண்டாட்டி" என கேட்டவனிடம் தன்னிச்சையாய் தலையசைத்தவள்
அவன் புன்னகை முகம் பார்க்க வெட்கம் கொண்டு வேக வேகமாய் சமையலறைக்குள் நுழைந்திட
போகும் அவளை சிரிப்புடன் பார்த்திருந்தவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக தன் கையிலிருந்த புத்தகத்தை இறுக்கிக் கொண்டான்.​

அதே நேரம் கொடைக்கானலிருந்து புறப்பட்ட விஷ்வா திவ்யா ஜோடியின் பயணம் முழுவதும் மௌனமே ஆட்சி செய்திட பாதையில் பார்வையை பதித்து காரில் சாய்ந்து வந்த பெண்ணவளின் மோனநிலையை களைக்காது கார் மிரர் வழியே ரகசியமாய் தன்னவளை ரசித்தபடி வண்டியை செலுத்தியவனோ ஒரு ஹோட்டல் முன்னே வண்டியை நிறுத்தினான்.​

வண்டி நின்றதும் நிமிர்ந்து அமர்ந்தவள் அவனை கேள்வியாய் பார்த்தாள்.​

"தியா க்ளைண்ட் ஒருத்தர மீட் பண்ண வேண்டியிருக்கு மீட் பண்ணிட்டு சாப்பிட்டுடு கிளம்புவோம்" என்க அவளுக்கு பசியெடுப்பது போலிருக்க சரியென தலையசைத்தவள் அவனோடு அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலினுள் நுழைந்தாள்.​

தங்களுக்கான ஒரு டேபிளில் எதிரெதிரே அமர்ந்தவர்கள் முதலில் சாப்பிட உணவை ஆர்டர் செய்து காத்திருக்க விஷ்வாவின் போன் அலறியது.​

"வெய்ட் தியா இதோ வந்துடுறேன்" என்ற விஷ்வாவோ அலைபேசியோடு சற்று தொலைவில் சென்று பேச அவளோ அவன் மீதே தன் மொத்தப் பார்வையையும் பதித்தபடி அமர்ந்திருந்தாள்.​

காதல் கொண்டவனே இன்று கணவனாய் அவளின் மொத்த உலகமுமாய் அவளுக்கு கிடைத்திருந்தாலுமே அவளால் முழுமையாய் மகிழ்ச்சி கொள்ள முடியாத நிலையை எண்ணி வேதனை கொண்டவள் விழிகள் அவனருகே இருக்கும் போது ரசிக்காது தொலைதூரமாய் வைத்து ரசித்து பார்த்தது.​

தன்னவள் பார்வையை உணர்ந்தானோ ஆணவன் அழைப்பில் பேசியபடி அவள் புறம் திரும்பி புன்னகைத்தவன் அழைப்பை பேசிமுடித்து துண்டித்து விட்டு அவளருகே நெருங்கியவன் அவளிருக்கைக்கு அருகே அமர்ந்து மேசையிலிருந்த அவள் கரத்தோடு கரம் கோர்த்துக் கொள்ள தன்னருகே அவன் அமர்ந்ததிலே விழி விரித்து அவனைப் பார்த்தவள் தன் கரம் பற்றிய அவன் கைச் சூட்டில் மேலும் விரிந்த விழிகளோடு அவனைப் பார்க்க அவனும் அவளைப் பார்த்தவன் அவளிடம் பேச முனையும் நொடி "ஹாய் ஹேய்ஸ்" என்றபடி அங்கு வந்து சேர்ந்தான் ஈஸ்வர்.​

அவன் குரலிலே அவனை அடையாளம் கண்டுகொண்டவள் இதயம் அச்சத்தில் நடுங்கிட நிமிர்ந்து பார்த்தாள்.​

அங்கே இருவரின் இணைந்த கரங்களிலும் குரூரப் பார்வையை பதித்தபடி நின்றிருந்தான் அவன்.​

"ஹாய் ஈஸ்வர்" என அழைத்தாலுமே கோர்த்த கரங்களை விடாது பற்றிக் கொண்டிருந்த விஷ்வாவிடமிருந்து கரத்தை பிரிக்க முயன்று தோற்றுத் தான் போனாள் பெண்.​

"என்ன விஷ்வா வந்து ரொம்ப நேரமாச்சா? நான் தான் லேட் பண்ணிட்டேனா" என கேட்டபடி எதிரே வந்தமர்ந்தான்.​

"ம்ம் ரொம்ப நேரம் தான் ஈஸ்வர் பட் என் வைஃப் கூட நேரம் போனதே தெரியலை" என சிரிப்புடன் கூறிய விஷ்வாவின் கரங்கள் திவ்யாவின் கரங்களை விடாது பற்றிக் கொண்டது.​

"ம்ம் அப்புடியா? அப்போ உங்க வைஃப் நல்லா கம்பெனி கொடுக்காங்க டைம் பாஸ் ஆகுறதுக்குனு சொல்லுங்க" என்று சிரிக்க விஷ்வாவும் அவன் கூற்றிலிருந்த உள் அர்த்தம் தெரியாமல் வெளிப்படையாய் சிரித்தான்.​

திவ்யா அவன் கூற்றின் அர்த்தம் உணர்ந்து உடல் நடுங்க அமர்ந்திருக்க விஷ்வாவின் .அலைபேசி மீண்டும் அலற
"எக்கியூஸ்மி ஈஸ்வர் ரொம்ப இம்போர்ட்டென்டான்ன கால்" என்றபடி அழைப்பை ஏற்று எழுந்தவன் கரங்களோ திவ்யாவின் கரங்களை விடுவிக்கப் போக இத்தனை நேரம் அவன் பிடியிலிருந்து விலக எத்தனித்தவள் இப்போது விடாது அவன் கரங்களைப் பற்றிக் கொள்ள அவனோ அவளை விழிகள் சுருக்கி திரும்பிப் பார்த்தவன் அவள் முகம் காட்டிய பதற்றத்தில் "என்னாச்சு தியா? ஆர் யூ ஓகே" என அக்கறையாய் கேட்டவனை மேலும் பேச விடாது மீண்டும் அலைபேசி அலற அவசரத்தை உணர்ந்தவன் "கொஞ்சம் வெய்ட் பண்ணுடா வரேன்" என்றவன் சற்றே தள்ளிச் சென்றுவிட அவள் அழைத்த "விச்சு" என்ற அழைப்பு அவள் தொண்டைக்குள் அமுங்கித் தான் போனது.​

அவன் சென்ற பக்கமே பார்வையை பதித்திருந்தவளை இகழ்ச்சியாய் பார்த்தவாறே "ஆர் யூ ஓகே பேபி" என கிசுகிசுப்பாய் கேட்ட ஈஸ்வரின் குரலில் படீரென்று பயந்த விழிகளோடு அவனைப் பார்த்தவளை நோக்கி விசமமாய் சிரித்தவன் "என்ன செல்லம் என் மேல இன்னமும் பயமிருக்கா என்ன" கண்ணடித்து அவன் கேட்ட தோரணை அவளை மிரளச் செய்திட. பெண்ணவள் இதழ் அன்னிச்சையாய் "அண்ணா" என முணுமுணுத்துக் கொண்டது.​

அவள் இதழசைவிலே புரிந்து கொண்டவன் "என்ன பேபி உங்க அண்ணனை கூப்புடுறியா
ம்ம் கூப்பிடு பேபி உங்கண்ணனோட நேருக்கு நேரா மோதத் தானே நானும் வந்திருக்கேன்.
உங்கண்ணன் கூட விட்ட குறை தொட்ட குறையா இருக்குற கணக்க மொத்தமா முடிச்சிட்டு அப்புறமா நம்ம டீலுக்கு வரேன் ஓகே பேபி" என்றவனை அச்சம் சூழ்ந்த விழிகளால் வெறித்தாள் பெண்.​

"அப்புறம் இந்த வாட்டி நம்ம டீல கொஞ்சம் சேன்ஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன் பேபி..உனக்கு என்கிட்ட இருந்து விடுதலை வேணும்னா அதுக்கு பதிலா நீ ஒன்னே ஒன்னு பண்ணா போதும்" என்றவன் அவள் விழிகளை கூர்ந்து "உங்கண்ணன் பொண்டாட்டிய என்கிட்ட அழைச்சிட்டு வா நான் உன்ன விட்டுறேன்" என்றவனை பார்த்து முகம் சுழித்து திருப்பிக் கொண்டாள் திவ்யா.​

"நீயா கூட்டி வந்தா உனக்கு விடுதலை இல்லை நானா வரவெச்சேன்னா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ஒன்னு நீ இன்னொன்னு அவ" என்றவன் உடனே தன் முகபாவனை மாற்ற அங்கு விஷ்வா வந்து சேர்ந்தான்.​

சிறிது நேரம் அவனுடன் கேஷ் பற்றி பேசியவன் அவனிடம் விடைபெற்றுக் கிளம்பும் நேரம் திவ்யாவை பார்த்து மர்மமாக சிரித்து வைத்து கிளம்பிச் செல்ல பெண்ணவளோ அவன் பேசிச் சென்ற வார்த்தைகளில் பேயறைந்தாற் போல அமர்ந்திருக்க அருகிலிருந்த விஷ்வாவின் உலுக்கலில் தன்னிலை திரும்பியவள் விஷ்வாவை பார்க்க அவனோ "என்னாச்சு தியா.. உடம்பு எதுவும் சரியில்லையா?" அவள் நெற்றி தொட வந்த அவன் கரங்களை விலக்கிவிட்டவள் "கிளம்பலாம்" என்றுவிட்டு ஆர்டர் செய்த உணவைக் கூட உண்ணாமல் விறுவிவிறுவென எழுந்து செல்ல குழப்பத்துடனே அவளை பின் தொடர்ந்து எழுந்து சென்றான் விஷ்வா.​

தொடரும்..

 

Habi

Moderator

அத்தியாயம் - 35


அந்த இடம் முழுவதும் உச்ச டெசிபளில் பட்டுத் தெறித்த பாடலில் அறையே அதிரும் வண்ணமிருக்க அதன் தாக்கம் சிறிதுமின்றி அகண்ட சோபாவின் விளிம்பில் தன் இராட்சச கரங்களை பரப்பியவாறு தலையை பின்னால் சாய்த்து கால் மேல் காலிட்டவாறு அமர்ந்திருந்தவனின் அரக்கத் தோற்றத்தைக் கண்டு அவன் முன்பே நின்றிருந்தவன் தொண்டைக் குழி ஏறி இறங்கியது பயத்தில்.

நீண்ட நொடி நேரம் அமைதியே உருவாய் கண்மூடி சயனித்திருந்தவனின் ஒற்றைக் கையின் சொடக்கொலியில் அந்த அறையில் அத்தனை நேரம் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் சட்டென்று நிறுத்தப்பட அவன் தலை நிமிர்த்தி தன் முன் நின்றவனை விழி திறந்து பார்த்தான்.

இரத்தமென சிவந்திருந்த விழிகளின் தகிப்பில் எதிரில் நின்றிருந்த உடலோ நடுங்கத் தொடங்கிட அவன் ஒற்றைப் பார்வைக்கே தன்போக்கில் உளறத் தொடங்கினான் அவன்.
"ஸா..ஸார் நான் அந்த காரை அடிச்சு மொத்தமா தூக்கிட்டேன் ஆனா அதுக்குள்ள ஆளுங்க இல்லன்னு எனக்கு தெரியல ஸார் இருந்திருந்தா நான் அடிச்ச வேகத்திற்கு எலும்பெல்லாம் பொறுக்கியெடுக்குற நிலமை தான் வந்திருக்கும்" என்றவனை நிதானமாய் ஏறிட்டவன் எதிரிலிருந்தவன் என்ன என சுதாகரிக்கும் முன்னரே அவன் நெற்றி பொட்டை துளைத்தது துப்பாக்கித் தோட்டா ஒன்று.

உயிரழந்த உடல் தரையில் சாய்ந்திட அந்த அறைக்குள் கையில் சுழற்றிய துப்பாக்கியுடன் உள்நுழைந்தான் ஈஸ்வர்.

"கொடுத்த வேலையை ஒழுங்கா முடிக்கத் தெரியல இதுல ரீசன் சொல்லிட்டு இருக்கான் **" கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டே கால்களால் எட்டி உதைத்தவன் அங்கிருந்த இருக்கையில் சென்றமர அவனையே விழிகளால் துளைத்துக் கொண்டிருந்தான் மற்றையவன்.

அவன் துளைக்கும் பார்வை உணர்ந்த ஈஸ்வரும் அவன் புறம் திரும்பியவன் "என்ன உதய் அப்படி பார்க்குற?" என்றவனுக்கு இதழ் வளைய ஒரு நக்கல் புன்னகையை உதிர்த்த அவனால் உதய் என அழைக்கப்பட்டவனோ மீண்டும் கண்மூடி தலைசாய்த்து "அவன போட ரொம்ப ட்ரை பண்ற போல" எனக் கேட்டவன் கேள்வி புரிந்த ஈஸ்வரின் இதழ்களும் நக்கலாய் புன்னகைக்க "என்ன உதய் பாசமா?" என்றான்.

அதில் விழிகளை பட்டென்று திறந்தவன் "எஸ் அப்கோர்ஸ் பாசம் தான்" என்றவனின் மரத்த குரலில் என்ன இருந்தது என புரியாது குழம்பிப் போனது என்னவோ ஈஸ்வர் தான்.

"என்ன சொல்ற" என்ற ஈஸ்வரின் குரலில் அடக்கமாட்டாமல் சத்தமாய் அந்த அறையே அதிரும் வண்ணம் சிரித்த உதயின் சிரிப்பில் ஈஸ்வரின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் தோன்றியது.

"ஈஸ்வர் ஈஸ்வர்" என அவன் பெயரையே உச்சரித்தபடி சோபாவிலிருந்து துள்ளியெழும்பியவனோ அங்கிருந்த மேசை ட்ராயரை துறந்து அதிலிருந்த ஊசியை எடுத்து தனக்குத் தானே குத்திக் கொண்டவன் கண்கள் சொருக எதிரிலிருந்தவனைப் பார்த்தான்.

"ரொம்ப ஓவரா ட்ரக்ஸ் எடுத்துக்காத உதய் உன்னோட எதிரியை அழிக்குறதுக்கு முன்னாடி நீ அழிஞ்சிடுவ" தன்னை பார்த்து அவன் ஏளனமாய் சிரித்த சிரிப்பில் உண்டான கோபத்தில் ஈஸ்வர் பல்லைக் கடிக்க அதற்கும் அவனிடம் சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்க 'அவனிடம் கோபத்தை காட்டாதே அவன் உதவி உனக்கு தேவை' என ஈஸ்வரின் மனமோ அவனை அடக்கிட "என்னோட குறிக்கோளுக்கும் உன்னோட குறிக்கோளுக்கும் தடைக்கல்லா இருக்குற அந்த கௌசிக் அழியனும் அதுக்கு நான் என் வழில முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனா உன் பக்கமிருந்து அதுக்காக ஒரு சின்ன முயற்சியும் இல்லாம இருக்க உதைய். இப்படியே போச்சுன்னா அவன நாம அழிக்குறதுக்கு முன்ன அவன் நம்மள அழிச்சிட்டு போய்ட்டே இருப்பான்" குரலில் அத்தனை வன்மம் வழியக் கூறியவனை அசட்டையாய் நிமிர்ந்து பார்த்தான் உதைய்.

"நீ உன் வழில தோத்துகிட்டே இருக்கலாம் ஈஸ்வர் ஆனா நான் இந்த வாட்டி தோற்கமாட்டேன் ஏன்னா இந்த வாட்டி என் வழி தனி வழி. அந்த கௌசிக் கிருஷ்ணனே எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்ட அவன் லைப்ல வெச்சியிருக்கேன். அது என்னென்னு கூடிய சீக்கிரம் தெரிய வரும் அது வரும் வரை ஐ ம் இன் ஹெவன் வித் மை லவ்" என கைகளை விரித்து கண்களை சொருக்கியவன் இதழ்கள் விடாது முணுமுணுத்தது பெண்ணவள் பெயரை "வெண்மதி".

கண்கள் சொருகி போதையில் பேதையின் மயக்கத்தில் கண்சொக்கிக் கிடந்தவனை வெறித்த ஈஸ்வரின் மனதிலோ அவன் எதிரியை அழிக்கக் கூடிய ஆயுதம் இந்த உதைய் தான் இவனை வைத்தே அவனை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்ற வன்மம் கொழுந்துவிட்டெறிய அமைதியாய் அங்கிருந்து வெளியேறினான்.


அடுத்த நாள் அதிகாலை சென்னையை வந்தடைந்தனர் விஷ்வா திவ்யா இருவரும்.
பயணம் முழுவதும் அமைதியை மட்டுமே தன் மொழியாய் கொண்டிருந்த தன்னவளின் மனம்படும் பாட்டை அறியாதவனாய் என்னானது இவளுக்கு என்ற யோசனையோடே சென்னையை வந்தடைந்தவன் வண்டி நின்றதும் அருகில் மனைவியை பார்க்க அவளோ அசந்து ஆழ்ந்த தூக்கத்தின் பிடியிலிருந்தாள்.

கன்னம் தொட்ட கண்ணீர் கரை காய்ந்து போயிருக்க அவள் முகத்தை பார்த்தவன் விழிகளுக்கு அது தப்பாமால் வீழ்ந்தது.
'ஏன் இந்த கண்ணீர்? என்னோடு வருவது தன்னவளுக்கு அத்தனை கஷ்டமாகவா உள்ளது? அந்தளவிற்கு தன்னருகாமையை வெறுக்கிறாளா?' எண்ணற்ற கேள்விகள் ஊசி போல் அவன் நெஞ்சை துளைக்க அவனையும் மீறி வெளியானது ஒரு பெருமூச்சு.

அவனவள் கவலையும் பயமும் எது என அறியாமல் தன்னால் தன் முன்னைய செயல்களால் தான் இந்த சோகமும் கண்ணீரும் என அவனாய் தனக்குள் எண்ணிக் கொண்டவன் மனதளவில் இறுகிப் போனான்.

வண்டி நின்றதும் உணராமல் அசந்து தூங்குபவளை எழுப்ப மனமில்லாவிடினும் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அவளைத் தட்டியெழுப்பினான் விஷ்வா.

யாரோ தன்னை தொடும் உணர்வில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த நிலையிலும் அவளின் மனதின் பயம் செவ்வெனே தன் கடமையைச் செய்திட திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவள் மூச்சு வாங்க அவனைப் பயப் பார்வை பார்க்க அந்தப் பார்வையில் அவன் உள்ளுக்குள் நொருங்கிப் போனான்.

"நான் தான் தியா.. ரிலாக்ஸ்" என அவளை சமாதானம் செய்தவனின் குரலில் தன்னைத் தேற்றிக் கொண்டவள் அவன் முகம் பார்க்க அதுவோ உணர்வுகளற்று நிர்மலமாய் காட்சியளித்தது.

"ஸா..ஸாரி" மெலிதாய் முணுமுணுத்துக் கொண்டவள் அவனைப் பார்க்க அவனோ "ப்ளாட் வந்திடுச்சு" என்றவாறு கீழிறங்கியவன் தங்கள் பெட்டிகளை தூக்கியவாறு ப்ளாட்டினை நோக்கிச் செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள்.


இங்கு கௌசிக்கின் விடியலோ அவன் மனவாட்டியின் மெல்லிய சாமி கீர்த்தனையில் அழகாய் புலர்ந்திட அவள் குரலில் கண்விழித்தவன் எழும்ப மனமின்றி கட்டிலிலே கண்விழித்து படுத்துக் கிடந்தான்.

நேற்று நடந்த அந்த அசம்பாவிதமான விபத்தை மறைத்து அவள் கேட்ட பல கேள்விகளை சமாளித்து அவளை இரவு உறங்க வைப்பதற்குள் படாதபாடுபட்டு போனவனுக்கு நேற்றிரவு என்னவோ தூங்காவிரவு தான்.
என்னதான் பெண்ணவளை சமாதானம் செய்த போதிலும் கண்முன்னே நிகழ்ந்த அந்த கோர நிகழ்வை எண்ணி அவன் தூக்கம் பறி போக அதற்கு காரணமானவனை எண்ணி உள்ளுக்குள் அத்தனை கோப வெறி கிளர்ந்தது. இனி அவன் ஆடப் போகும் ஆட்டத்திற்கு முன் தான் ஆட்டத்தை களைக்க வேண்டும் என பல வித யோசனைக்குள் தன்னை புகுத்தியவன் தூங்கும் போதே பாதி இரவு கடந்திருந்தது.

நேற்றிருந்த மொத்த டென்ஷனுமே இருந்த இடம் தெரியாமல் ஓடியிருக்க பெண்ணவளின் இனிமையான குரலில் தூக்கம் விழித்து படுத்திருந்தவன் அறைக்குள் நுழைந்த பெண்ணவளைக் கண்டு விழிகள் விரித்தான்.

இளமஞ்சள் நிறச் சேலை பாந்தமாய் உடலைத் தழுவியிருக்க குளித்து முடித்து ஈரக் கூந்தலை கொண்டையாய் இட்டு நெற்றி வகுட்டில் குங்குமமும் கழுத்தில் தொங்கிய மஞ்சள் தாலியும் அவள் பூமுகத்தை மேலும் பொலிவுறச் செய்திட கையிலேந்திய காபியுடன் அறைக்குள் நுழைந்த தன்னவளின் அழகில் சொக்கித்தான் போனான்.

சுடிதாரில் சின்னப் பெண்ணாய் காட்சியளித்தவள் சேலையில் செதுக்கி வைத்த சிலையென வந்து நின்ற அழகில் விழிகள் விரிய அவளையே ரசித்தவன் ரசிப்பு அவள் அழைத்தும் களையாது போக அவன் தோள் தொட்டு அவனை உலுக்கி அவனை தன்னிலை மீட்டிட அதில் அவளைப் பார்த்தான் "என்ன மாமா இன்னும் தூக்கம் களையலையா?" என்ற கேள்வியில் தன்னை மீட்டுக் கொண்டவன் தலையை அழுந்தக் கோதி தன் பார்வையை திருப்பிக் கொண்டவனுக்கு தன்னை எண்ணியே சிரிப்பாய் இருக்க தனக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் கையிலிருந்த காபியை எடுத்து பருக முயன்றிட அவசரமாய் அவனைத் தடுத்தவள் அவன் கையிலிருந்த கப்பை பறித்தவளாய் இடுப்பில் ஒற்றைக் கரம் பதித்து அவனை முறைத்தவள் "பல் விளக்காம காபி குடிக்கக் கூடாது மாமா வெரி பேட் ஹெபிட்" கண்சிமிட்டி சிறு முறைப்போடு அவள் கூறிய அழகில் அவன் இதழ்களோ விரிந்திட தலையாட்டியபடி படுக்கையை விட்டு எழுந்தவன் "ஓகேங்க பொண்டாட்டி நீங்க சொன்னது போலவே ஆகட்டும்" என்றவன் குளியறை புகுந்திட அவளும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.

கௌசிக் முகம் கழுவி வர அவனுக்கான காபியை கொடுத்தவள் தானும் ஒரு காபியை அவனோடு அமர்ந்து அருந்த
வீட்டின் மணியோசை ஒலித்தது.

கௌசிக்கோ எழுந்து சென்று கதவைத் திறந்தவன் வாசலில் நின்ற தங்கையையும் விஷ்வாவையும் கண்டு புன்னகைத்தவன் "ஹேய் தியா வாடா வா விஷ்வா" என சந்தோஷத்தோடு அழைத்திட இத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த ஒட்டு மொத்த தவிப்பும் அண்ணனைக் கண்ட நொடியில் பஞ்சென வெடித்துச் சிதறிட "அண்ணா" என்ற கூவலோடு அவனைத் தாவியணைத்திருந்தாள்.

தங்கையின் திடீர் செய்கையில் என்னவோ என எண்ணியவன் தன்னை அணைத்து உடல் நடுங்கியவள் முதுகை ஆறுதலாய் தட்டியவன் கேள்வியாய் விஷ்வாவை பார்த்திட நேற்றிலிருந்து பெண்ணவளின் செயல்களில் குழம்பி தனக்குள்ளேஇறுகிக்கிடந்தவனுக்கு இப்போதைய நிகழ்வும் மேலும் குழப்பத்தை கொடுக்க தன்னவளையே வெறுமையாய் பார்த்தான்.

விஷ்வாவின் உணர்வற்ற முக பாவனையில் ஏதோ சரியில்லை என புரிந்து கொண்ட கௌசிக்கும் தங்கையை ஆறுதலாய் தட்டிக் கொடுத்தவன் "என்னாச்சுடா திவிமா ஏதும் ப்ரோப்ளமா?" எனக் கேட்டதுமே தான் அதிகம் உணர்ச்சி வசப்பட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டவள் அவனிடமிருந்து விலகி தன்னை நிலைபடுத்திக் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து வலிய சிரிக்க.

அந்த சிரிப்பில் உயிர்ப்பில்லை என அறிந்த அண்ணணவனும் மேலும் எதையும் தூண்டித் துருவாமல் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளேசென்றான்.

திவ்யாவிற்கு அண்ணனிடம் நடந்தவற்றை கூற வேண்டும் என வார்த்தைகள் தொண்டைக்குழியினுள் நின்று நர்த்தனமாடிட அவள் பார்வையோ உணர்வற்ற விஷ்வாவின் முகம் கண்டு வாய் மூடிக் கொண்டாள்.

திவ்யா விவ்வா இருவரையும் கண்ட மதியோ மகிழ்வுடன் "திவ்யாண்ணி விஷ்வாண்ணா வாங்க வாங்க" என வாய்கொள்ளா புன்னகையோடு அழைத்திட அவளிடம் புன்னகைத்தனர் இருவரும்.

"இருங்க உங்களுக்கு காபி போட்டுக் கொண்டு வறேன்" என சமையலறைக்குள் நுழைந்து கொண்ட மதியை தொடர்ந்து அண்ணனின் துளைக்கும் பார்வையை சந்திக்க முடியாது தானும் எழுந்து சென்றாள் திவ்யா.

போகும் அவளையே பார்த்திருந்த விஷ்வாவின் தோளில் கை போட்ட கௌசிக் புறம் பார்வையை திருப்பிய விஷ்வாவோ அமைதியாய் இருக்க எதுவோ சரியில்லை என ஊகித்த கௌசிக்கும் அமைதியாய் அமர்ந்திருந்தான்.
சிறிது நேரம் அமர்ந்திருந்தவர்கள் மதி தந்த காபியை அருந்தி விட்டு நால்வரும் விஷ்வா வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.


கௌசிக்கின் வீட்டிலிருந்து இரு வீடு தள்ளியே விஷ்வாவின் வீடு பார்த்து ஏற்பாடு செய்திருந்தான்.
முன்னரே வேலையாட்கள் வைத்து வீட்டை சுத்தப்படுத்தியிருக்க நால்வருமாய் வீட்டினுள் நுழைந்தனர்.

முதன் முதலாய் வீட்டினுள் வந்திருக்க திவ்யாவோ சாமியறையில் விளக்கேற்றி பூஜை செய்தவள் மதியோடு வீட்டை சுற்றி பார்க்க கௌசிக் விஷ்வா இருவரும் சாதரணமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

வீட்டின் பால்கனியில் நின்றிருந்த திவ்யாவோ தன்னை விடச் சின்னப் பெண்ணாய் புன்னகையுடன் நின்றிருந்த அண்ணன் மனைவியை கண்டு நேற்றைய ஈஸ்வரின் வார்த்தைகள் நாராசமாய் செவிகளில் ஒலித்திட அவள் கரங்களைப் பற்றிக் கொண்டவள் "அண்ணி நீங்க சந்தோஷமா இருக்கிங்களா அண்ணா நல்லா பார்த்துக்குறாங்களா?" என தன்னையறியாமலே அவள் நலன் பற்றி கேட்டு வைக்க.

மதியோ அவளை வித்தியாசமாய் பார்த்தவள் சிரித்துக் கொண்டே "எனக்கென்ன அண்ணி நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாமா என்ன ரொம்ப நல்லா பார்த்துக்குறாங்க" என்றதும் அவள் முகத்தில் தெரிந்த உண்மையான மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தவளாய் கடவுளிடம் இந்த மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற வேண்டுதலை விரைவாக வைத்துக் கொண்டாள்.

"அ...அண்ணி நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே" தயக்கமாய் தன்னை பார்த்தவளைக் கண்டு திவ்யாவோ "ம்ம் சொல்லுங்க அண்ணி" என்க மதியோ "நான் உங்கள விட சின்ன பொண்ணு தான் மதின்னே பேர் சொல்லுங்க" என கண்களை சுருக்கி கெஞ்சலாய் கேட்டவளிடம் மறுக்க முடியாது "சரி சொல்லு மதி" என்றாள்.


"அ.. அது வந்து விஷ்வா அண்ணா ரொம்ப நல்லவங்க அண்ணி. ஏதோ தெரியா தனமா ஒரு தப்பு பண்ணிட்டாங்க அதை மன்னிச்சு அவங்க கூட சந்தோஷமா இருங்க அண்ணி. அண்ணா உங்கள ரொம்ப ரொம்ம லவ் பண்ணுறாங்க அது அவங்க கண்ணுலையே தெரியுது" என தயங்கித் தயங்கி கூறி முடித்தவளை ஆச்சர்யமாய் பார்த்தாள் திவ்யா.

"ஹேய் மதி உனக்கு இப்பிடியெல்லாம் பேசத் தெரியுமா?"

"அய்யோ அண்ணி ஸாரி ஸாரி நான் தப்பா பேசியிருந்தா ஸாரி" என பதறியபடி மன்னிப்பு கேட்க திவ்யாவோ பக்கென்று சிரித்து வைத்தாள்.

அதில் அவள் கோபம் கொள்ளவில்லையென எண்ணி நெஞ்சில் கைவைத்தவள் "ஹப்பா கோபமில்ல அண்ணிக்கு" என்றவள் "நீங்க சிரிக்கும் போது அழகாயிருங்கிங்க எப்போவும் இப்படி சிரிச்சிட்டே இருங்கண்ணி" நொடியில் அவள் கன்னம் கிள்ளி சிரித்தபடி அங்கிருந்து சென்றவளைக் கண்டு அவன் புன்னகை மேலும் விரிந்தது.

"அண்ணா உன்னக்கேத்த ஆளத் தான் கடவுள் முடிச்சு போட்டிருக்காரு ஸீ இஸ் சோ ஸ்வீட்" என அவளை எண்ணி சிரித்துக் கொண்டாள்.

...

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து போனது. இன்றோடு கௌசிக் மதி தம்பதியும் விஷ்வா திவ்யா தம்பதியும் சென்னை வந்து ஒரு மாதங்கள் ஓடிப் போயிருந்தன.

அன்றைய ஈஸ்வரின் சந்திப்பின் பின்னர் மனதில் எண்ணற்ற பயத்தோடு பரிதவிப்போடு சென்னையை வந்தடைந்த திவ்யாவிற்கோ அண்ணன் வீடருகிலே தங்கியிருப்பது பெருத்த நிம்மதியை கொடுத்தாலுமே அன்றைய நாள் சந்திப்பில் அவன் கூறிச் சென்ற வார்த்தைகள் அவள் ஆழ்மனதை ஆட்டிப் படைத்ததிலே வெளிப்படையாய் அண்ணணிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அழுத்தத்துடனே நாட்களை கடத்தியவள் விஷ்வாவிடமிருந்து மொத்தமாய் தன்னை விலக்கி ஒதுங்கி அமைதியா நாட்களை கடத்திட, அவள் மனதில் இன்னும் தன் மீதான கோபத்தில் தான் தன்னை விட்டு ஒதுங்கிச் செல்கிறாளோ என எண்ணி விஷ்வாவுமே அவள் கோபம் குறைய இடைவெளியை கொடுத்து விலகி நின்றான்.

ஒரு புறம் இந்த ஜோடிகளின் உறவினில் எவ்விதம் மாற்றமும் இல்லாது போக மறுபுறம் கௌசிக் மதி ஜோடியோ மேலும் மேலும் நெருங்கிப் போயினர் மனதளவில்.

கௌசிக்கும் இந்த ஒரு மாத காலமும் மினிஸ்டரின் கெடுபிடியில் தன் வேலைகளில் மூழ்கியிருந்தான்.

சட்டத்தின் ஓட்டையில் என்ன தான் தப்பித்து வெளியே சென்றிருந்தாலும் மக்களின் பார்வையில் குற்றவாளியாகவே பார்க்கப்பட்ட மணிகண்டனின் அரசியல் வாழ்க்கை அங்கு அடிபட்டுப் போக அது தந்த வெறியில் கௌசிக்கின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தான்.

நேரடியாய் அவனிடம் மோதாது தன் ஆட்கள் மூலம் சின்னச் சின்ன பிரச்சனை செய்து ஓய்வில்லாமல் அவனைச் சீண்டும் வேலையை செவ்வனே செய்த மணிகண்டனின் தொல்லையில் சும்மா இருந்த சிங்கத்தை சுரண்டிவிட்ட கதையாகிப் போனது.

மணிகண்டன் என்ற கொசுத் தொல்லையை முற்றாக இல்லாதொழிக்கவே அவன் மீதான பழைய கேஷூகளை தூசு தட்டி விசாரிக்க தொடங்கியவனுக்கு காவல் துறையிலே அவனுக்கு எதிராக செயற்படும் தேவன் என்ற கருப்பாட்டை முதலில் வெட்டி பலி போட எண்ணியவன் அதற்கான வேலைகளை ஆரம்பித்தான்.

நேரடியாகவே தேவனை அழைத்து எச்சரிக்கை விடுத்த கௌசிக்கோ அவன் மீதான சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதை வெட்ட வெளிச்சமாக்கி ஆறுமாத சஸ்பெண்ட் ஆர்டருடன் வீட்டில் முடக்கிவிட ஏற்கனவே அவன் மீது வன்மத்திலிருந்தவன் இன்னும்மின்னும் அவன் மீது தன் வன்மத்தை வளர்த்துக் கொண்டான்.


அதே நேரம் விஷ்வாவின் நாட்களும் திவ்யாவின் ஒதுக்கத்துடன் கழிய சென்னை வந்த ஒருமாத காலத்தில் எத்தனை முறை தன் தங்கை நேஹாவை சந்திக்க முயன்று தோற்றவன் இன்று அவளை சந்தித்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்துடன் அவள் வீட்டிலே நேரடியாக சென்று சந்தித்திருந்தவனுக்கு தங்கையின் முகத் திருப்பலை பதிலாகக் கிடைக்க நொந்து தான் போனான் விஷ்வா.

"நீ எப்போ தான் உண்மையை புரிஞ்சிக்கப் போற நேஹா" என ஆற்றாமையுடன் கேட்டவனை திரும்பியும் பாராது அலட்சியமாய் அமர்ந்திருந்தவளுக்கு உள்ளே தன் உடன் பிறப்பை எண்ணி மனம் துடித்தாளும் அவன் தன்னை மீறி செய்த செயலில் உண்டான கோபமே அவள் மனமுழுவதும் ஆக்கிரமிக்க மௌனியாய் அமர்ந்திருந்தாள்.

தன் மனைவியின் அலட்சியமும் தன் மச்சினனின் கெஞ்சலையும் பார்வையாளனாய் பார்த்திருந்த நேஹாவின் கணவன் ரோஹித்தோ பொறுக்க முடியாமல் "நேஹா பேசு விஷ்வா எவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கான்.. எதுக்கு இந்த வீண் பிடிவாதம்" என மனைவியை அதட்ட,

"ப்ளீஸ் ரோஹித் எனக்கு யார் கூடவும் பேச பிடிக்கலை என்ன கம்பெல் பண்ணாதீங்க.
அதான் அவங்கவங்க லைஃப் பார்த்துட்டு போய்ட்டாங்களே அப்புறம் என்ன ஒட்டு உறவுன்னு சொல்லிட்டு மறுபடியும் வாறாங்க போக சொல்லுங்க என்னால அவங்க லைஃப்ல இனி எந்த தடங்கலும் வராது" என்றவளை வெறுமையாகப் பார்த்திருந்தான் விஷ்வா.

"நேஹா உனக்கு நல்லாவே தெரியும் நான் திவ்யாவ எந்தளவு லவ் பண்ணேன்னு அப்பிடியிருந்தும் நமக்கு நம்மளோட சத்தியம் தான் முக்கியம்னு என் காதலையும் திவ்யாவையும் தூக்கி போட்டேன் அப்பிடியிருந்த நான் அவங்க மேல தப்பு இல்ல தப்பெல்லாம் நம்ம மேல தான்னு உணர்ந்தும் கூட நான் என் காதலை விட்டு விலக தான் நினைச்சேன் அதுவும் என்னோட குற்றவுணர்ச்சியில ஆனா அங்க அந்த நிமிஷம் என்னை காதலிச்சு என் கையால தாலி வாங்கி வாழவும் முடியாம என்னை மன்னிக்கவும் முடியாம தனிமரமா நின்னுருந்த என்னோட தியாக்காக நான் குற்றவுணர்ச்சியோடவே என் காதல திரும்ப ஏத்துக்கிட்டேன்.
இது எனக்கொன்னும் தப்பா தெரியல.
நான் செஞ்ச எல்லா தப்புக்கும் வாழ்க்கை பூரா நான் தனிமையை அனுபவிக்கனும்னு இருக்கு அனுபவிச்சுட்டு போறேன்" என்றவனுக்கு மனைவியின் ஒதுக்கமும் தங்கையின் ஒதுக்கமும் மரணவலி என்பதை யாரும் அறியவே இல்லை.

சிறிது நேரம் தங்கையின் முகம் பார்த்தவன் பின் ரோஹித்திடம் விடைபெற்று அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

விஷ்வா அங்கிருந்து நகர்ந்ததுமே கண்கலங்க அமர்ந்திருந்த மனைவியின் தோள் தொட்ட ரோஹித்தோ "அண்ணன் மேல அவ்வளவு பாசம் வெச்சிடு ஏன் உன்னையும் கஷ்டபடுத்தி அவனையும் வதைக்குற? எதுக்கு இன்னும் இந்த வீண் பிடிவாதம்" என்றவனிடம் எதுவும் பேசாது அவன் நெஞ்சில் தலை சாய்ந்தவள் மனம் ஊமையாய் அழுதது.

பெற்றெடுத்த தந்தை கயவன் என்று ஏற்றுக் கொள்ள அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. கண்முன்னே வரிசையாய் காட்சிபடுத்தப்பட்ட சாட்சியங்களையும் ஏற்க முடியாது பாசமாய் ஒன்றாய் வளர்ந்த அண்ணணின் மாற்றத்தையும் ஏற்க முடியாது நிலையற்ற மனதோடு தள்ளாடினாள் பெண்.




தொடரும்..

 

Habi

Moderator
அத்தியாயம் - 36


அந்த அதிகாலை வேலை கௌசிக்கின் இல்லமோ அதிரடிக்களமாய் மாறி போயிருந்தது.
அணிந்திருந்த காக்கி சட்டையுடன் தன் மணவாட்டியுடன் மல்லுக் கட்டி நின்றான் காவல்க்காரன்.

"புஜ்ஜீ சொன்னா கேளு இங்க வா எனக்கு லேட்டாகுது பாரு" சிறு அதட்டலோடு தன் கையில் சிக்காமல் கபடியாடும் மனைவியை அரட்ட அவளோ கண்ணில் கெஞ்சலோடு அவனிடம் மறுத்து நின்றாள்.

"வேணாம் மாமா எனக்கு பயமாயிருக்கு என்னால முடியாது ப்ளீஸ்" கெஞ்சலாய் அவள் குரல்.

"இங்கப் பாரு மதி நீயா வந்திடு நானா பிடிச்சேன் சேதாரம் உனக்கு தான் ஒழுங்கா வந்திடு வா" அதட்டலாய் அவன் குரல்.

"மாமா ப்ளீஸ் மாமா விட்டுடுங்க என்னால முடியாது ப்ளீஸ்" கெஞ்சலாய் அவள் குரல்.

"ஹேய் லூசு உனக்காக நான் எவ்வளவு பண்ணியிருக்கேன் நீ என்னடான்னா பொசுக்குனு முடியாதுன்னு சொல்ற" சற்றே கோபம் கலந்த அவன் அதட்டலில் மௌனமாய் கண்ணில் கெஞ்சலை தேக்கி நின்றவளை அழுத்தமாய் பார்த்தவன்.

"உன்னை இப்பிடி எல்லாம் சொன்னா கேக்கமாட்டல்ல இரு வரேன்" என்றவன் ஒரே தாவலில் தன்னவளை தன் கைச்சிறைக்குள் கொண்டுவந்தான்.

அவன் பிடியிலிருந்து திமிறியவளை அடக்கியவன் "மதி" என அழுத்தமாய் அழைத்திட.

அந்த குரலின் அழுத்ததில் தன் திமிறலை நிறுத்தியவள் பயம் கலந்த பார்வையோடு அவனை நோக்கினாள்.
அவள் பார்வையிலே அவள் பயம் உணர்ந்தவன் கண்களை மூடித் திறந்து இழுத்து வைத்த பொறுமையுடன்
"எந்த ரீசனும் சொல்லக் கூடாது நீ போய் தான் ஆகனும்" என்றதும் அவனைப் பாவமாய் பார்த்தாள்.

இந்தப் பார்வைக்கு நான் மயங்க மாட்டேன் என்பது போல தன் பிடியிலிருந்தவளை விலக்கியவன் அவள் முன்னே காகிதமொன்றை நீட்டி "ம்ம் போடு இந்த இடத்துல உன் சைன் போடு" என கொஞ்சமே மிரட்டும் தொனியில் கூற அப்போதும் அவனைப் பாவமாய் பார்த்தவள்.

"மாமா இ..இது ரொம்ப பெரிய காலேஜ் ஆ இருக்கு மாமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என பயத்துடன் கூறினாள். பரந்த உலகைக் காண அஞ்சிய அந்த கிராமத்து பைங்கிளி.

ஆம், சென்னையில் அமைந்திருந்த பிரசித்து பெற்ற ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தான் கௌசிக். (மக்களே கதைக்காக வேண்டியே இப்படி எழுதியிருக்கிறேன் நடைமுறையில் இப்படியல்ல என்று நானும் அறிவேன்.)

கல்லூரி சேர்வதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடவே அவளிடம் கேட்டுக் கொண்டிருக்க அவளோ அவனிடம் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.

"ஆமா பெரிய காலேஜ் தான். இதுல பயப்பட என்ன இருக்கு. ஹேய் லுக் மதி முதல் உன்னை நீ நம்பனும். உன்னால எந்த தடை தாண்ட முடியும் என்ற நம்பிக்கை உனக்குள்ள வந்தாலே போதும் எந்த பயத்துக்கும் அவசியமில்லை" அழுத்தமாய் கூறியவன் வார்த்தைகளில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்.

"ஆனா மாமா" என ஏதோ சொல்ல வர அவனோ "அ னாவும் இல்ல ஆவனாவும் இல்ல ஒழுங்கா சைன் பண்ணு. ம்ம் பண்ணு" என அதட்டல் போட பயந்து கொண்டே கையெழுத்தை போட்டவளிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவன் "ஓகே" என்றவன் அவளை பார்த்தான்.
அவளோ உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டமர்ந்திருந்தாள்.

அதிலே அவளது சிறுபிள்ளைக் கோபம் புரிய தனக்குள் சிரித்துக் கொண்டவன் "ஓய்" என்றான்.

அவனழைத்தும் மூக்கைச் சுருக்கி உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டவள் செய்கையி "அய்யோ கோபத்தை பார்டா?" என தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளருகே நெருங்கி "புஜ்ஜி" என தன்னவளை தன்பக்கம் திருப்பினான்.

அவளோ அவனைப் பாராது தலைகவிழ்ந்து தன் கைகளில் பார்வையைப் பதித்திருந்தாள்.

"இங்கப்பாரு நம்மளோட வாழ்க்கையில நம்ம குறிக்கோள அடைய எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை தாண்டி முன்னேறனுமே தவிர இப்படி பயந்து ஒதுங்கி ஓடிடக் கூடாது. டாக்டர் ஆகுற உன் லட்சியத்திற்கு முன்னாடி உன் பயத்தை தூக்கிப் போடு எதையும் கடந்து முன்னேறனும்ங்குற எண்ணத்தை உன் மனதில பதிச்சுக்கோ புரியுதா?"

"ம்ம் புரியுது ஆனாலும் பயமாவும் இருக்கே" அப்பாவியாய் கூறி அவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண்.

"அடியேய் நீ பொலிஸ்காரன் பொண்டாட்டிடி எப்போவும் தைரியமா இருக்கனும்" அவள் தலையாட்டி அவளுக்கு புரிய வைக்க முயல அவளோ அப்போதும் "சரி தான் ஆனாலும்" என மீண்டும் தயங்க தலைக்கு மேல் கையை குமித்தவன் "அய்யோ முடியலைடா சாமி" என சலிப்பாய் தலையைக் கோத மதியோ "சரி மாமா சரி டென்ஷனாகாதிங்க நான் பயப்படாம காலேஜ் போறேன் நல்லா படிக்குறேன் டாக்டர் ஆகுறேன்" தைரியமாய் கண்ணை உருட்டி கூறியவளின் பாவனையில் அவனிதழ்கள் விரிந்திட "தட்ஸ் மை கேர்ள்" என்றான் அவள் தலைக் கோதிக் கொடுத்து.

..

வீட்டின் நட்ட நடுஹாலில் மதுக் கோப்பையும் கையுமாக அமர்ந்திருந்தார் அமைச்சர் இல்லை முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.
கண்களிரண்டும் கொவ்வைப் பழமென சிவந்திருக்க கையிலிருந்த முழு மதுவையும் ஒரேயடியில் வாயில் கவிழ்த்து குவளையை தூர வீசிட அதுவோ களீர் என்ற சத்தத்தோடு உடைந்து நொருங்கியது.

தன் மொத்த அரசியல் வாழ்க்கையையும் அடியோடு சாய்த்த கௌசிக்கின் மீது அத்தனை பழிவெறியும் தாண்டவமாட அவனை எப்படி வீழ்த்தலாம் என பல விதமாய் யோசித்து யோசித்து அவர் நகர்த்திய காய்களை வெட்டி வீசிய அவனின் சாதூர்யத்தில் எழுந்த கோபத்தின் வெளிப்பாடே இது.

"எப்படிடா அவனால மட்டும் எவ்வளவு தொல்லைக் கொடுத்தாலும் தப்பிக்க முடியுது எப்படி.. எப்படி" மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டே அங்குமிங்கும் நடந்தவருக்கு சற்றும் குறையாத கோபத்தோடு அவர் முன்னே அமர்ந்திருந்தான் தேவன்.

அவருக்கு எப்படி அரசியல் பறிபோனதோ அது போல அவனுக்கும் அவன் பதவி பறிபோனதே அதில் அத்தனை வன்மம் கௌசிக்கின் மேல் உருவாகியிருக்க அதற்கு பழி தீர்க்கவே அமைச்சரோடு சதித்திட்டம் தீட்ட அங்கு வந்திருந்தான் தேவன்.

"அவன சும்மா விடக் கூடாது ஸார்.. வலிக்க வலிக்க அவன அடிக்கனும் திரும்ப வரவே முடியாதபடி அவன் நிலமையை மோசமாக்கனும்" வன்மம் தெறிக்க கூறினான்.

"அதான் எப்படிடா என்ன தான் அடிச்சாலும் திரும்பவும் கண்ணு முன்ன கத்தியா வந்து நிற்க்குறானே" அதி மிஞ்சிய எரிச்சல் அவர் குரலில்.

"அவனோட நேரடியா மோதினா நிச்சயம் நமக்கு தோல்வி தான் ஸார். இவனுக்கு மரண அடி விழனும்னா அவன் குடும்பத்து மேல கை வைக்கனும் அப்போ தான் நாம அவன வீழ்த்தலாம்"

அவனது கூற்றில் சிறிது அமைதியாய் யோசித்தவர் "ஆமா அவன் பொண்டாட்டி இப்போ இந்த ஊர்ல தானே இருக்கா?" என்றதும் தேவனும் விழிகள் மின்ன ஆமென்று தலையசைத்தான்.

"அப்போ அவள தூக்கிடலாம். அவள வெச்சு இவன மடக்கலாம்" என்றவர் காதில் வீழ்ந்த காலடிச் சத்ததில் திரும்பிட அங்கு நின்றவனைக் கண்டு ஒரு நொடி ஆடித் தான் போனார்.

"நீ..நீ எப்படி உள்ளே வந்த" திணறலாய் பயத்துடன் கேட்டவரை எள்ளல் புன்னகையாய் நோக்கினான் அவன்.

அவரின் கேள்வியில் தேவனின் பார்வையும் அவரைத் தாண்டி அங்கு நின்றவனில் பதிய வேகமாய் எழுந்து நின்றவனுக்கு உடல் உதறத் தொடங்கியது.

தன் முன்னே பயத்துடன் நின்ற இருவரையும் பார்த்தவன் இதழ்களோ இகழ்ச்சியாய் வளைந்திட அமைதியாகவே நின்றிருந்தான் அவன்.

அதே நேரம் அவனைத் தொடர்ந்து உள்நுழைந்த ஈஸ்வரியோ அங்கே நின்றிருந்தவனைக் கண்டு "என்ன ஸார் இங்கயே நின்னுட்டிங்க உள்ளே வாங்க" என்றவாறு அவனை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் உறைந்து நின்ற இருவரையும் கண்டு "என்ன பார்த்துட்டு இருக்கிங்க உட்காருங்க" என சாதாரணமாய் கூறியதில் புருவம் இடுங்கப் பார்த்தனர் இருவரும்.

இருவர் பார்வை புரிந்த ஈஸ்வரியோ சிரித்துக் கொண்டே "என்ன பார்க்குறீங்க நம்ம முன்னாடி நிற்குறது யாருன்னு குழப்பமா இருக்கா?" என்றவர் அங்கே அமர்ந்திருந்தவன் புறம் தன் பார்வையை திருப்பி "இவர் நமக்கு உதவி செய்ய வந்திருக்காரு" என்றவளை இடைமறித்தார் மணிக்கண்டன்.

"என்ன சொல்ற ஈஸ்வரி உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா இ..இவனா நமக்கு உதவி பண்ணப் போறான்" தன்முன்னே கால் மேல் கால் போட்டு திமிறாய் உட்கார்ந்திருந்தவனை சுட்டிக் காட்டினார்.

"எனக்கு பைத்தியம் பிடிக்கல நான் தெளிவா தான் இருக்கேன் நீங்க முதல்ல அமைதியா உட்காருங்க நான் எல்லாம் சொல்றேன்" என அவரை உட்கார வைத்து தானும் அமர்ந்து கொண்டவள் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

"இவர் உதைய். அந்த பொலீஸ்காரன அழிக்க நமக்கு கிடைச்சியிருக்குற மிகப் பெரிய ஆயுதம்" என்றவளை குழப்பமாய் பார்த்தனர்.

"என்ன உளறுற நீ இவ..இவன்" என்றவர் பார்வை எதிரிலிருந்தவன் மீதே ஒருவித பதட்டத்துடன் பதிந்து மீண்டது.

அவரின் பதற்றம் புரிந்தவளோ "நீங்க நினைக்கிற போல இல்லை.
நமக்கு எப்பிடி கௌசிக் எதிரியோ அதே போல பல மடங்கு வன்மத்தை அவன் மேலே வெச்சியிருக்காரு" என்றவள் பேச்சை அப்போதும் இடைமறித்தவராய்.

"பைத்தியம் மாதிரி உளறாத இ.. இவன் அந்த கௌசிக்" என ஏதோ சொல்ல வந்தவரை பார்த்து முறைத்துக் கொண்டே எழுந்து கொண்டான் உதைய்.

தேவனுக்கும் அவனைப் பார்த்து சற்று குழப்பமும் அதிர்ச்சியும் தாக்க பேசாது விறைத்தபடி நின்றிருந்தான்.

இருக்கையை விட்டு எழுந்தவனோ வெளியே செல்ல முற்பட அவனைத் தடுத்தாள் ஈஸ்வரி.

"ப்ளீஸ் கோபப்படாதிங்க உதைய் ஸார் நான் எல்லாத்தையும் எடுத்து சொல்றேன்" என அவனை சமாதானப்படுத்தியவள் மற்றைய இருவரையும் தனியே அழைத்து சென்று மொத்தக் கதையையும் கூறி முடிக்க மற்றைய இருவரும் அதிர்வாய் அங்கிருந்தவனை திரும்பிப் பார்த்தனர்.

பார்த்த இருவருக்குமே சிறிது சிறிதாய் முகத்தில் ஓர் வன்மப் புன்னகை குடியேற சிரித்துக் கொண்டனர்.

"நமக்கான அதிஷ்டம் நம்மள தேடி வந்திருக்கு இவன் சொல்ற வேலையை செய்து முடிச்சா பல இலாபம் பார்க்க முடியும் அதுல ஒன்னு தான் அந்த கௌசிச்கோட அழிவு" என்க மற்றையவர்களுக்கும் முகம் வன்மத்தில் பிராகாசித்தது.

தேவனோ "அதுசரி இவன் எப்படி இங்கே உங்களை தேடி வந்தான்.. அதுவும் சரியா நம்மகிட்டயே வந்திருக்கான்னா இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்குமோ " சந்தேகமாய் கேட்டான்.

"ஏய் பொலீஸூ கொஞ்சம் கூட மூளைய வெச்சு யோசிக்கமாட்டீயா. நம்மளோட எதிரி அந்த கௌசிக் தான்னு ஊருக்கே வெளிச்சமாகிட்டு இதோ இவருக்கு தெரியாமலா இருக்கும்" என்ற ஈஸ்வரியோ அவர்களிடம் சிலவற்றை பேசி புரியவைத்த பின்னர் அவர்களை அவனிடம் அழைத்துச் சென்றாள்.

தன் முன் நின்ற மூவரையும் அழுத்தமாய் பார்த்தவன் அவர்கள் முகம் காட்டிய பாவனையிலே அவர்களை கணித்துக் கொண்டவன் இதழ்களோ புன்னகைக்க உள்ளமோ "கௌசிக் யூ ஆர் ட்ராப்ட்" வன்மமாய் எண்ணிக் கொண்டது.

.......

அங்கோ தனக்கெதிராக பின்னப்பட்ட சூழ்ச்சிகள் பற்றி அறியாதவனோ ஸ்டேஷனில் வேலையை முடித்துக் கொண்டு வீட்டினை வந்தடைந்தவன் வீட்டினுள் நுழைந்ததும் பெண்ணவளை தேட அவள் அங்கு இல்லாது கண்டு உள்ளறைக்குள் நுழைந்தவன் கண்டதோ அழுதழுது வீங்கிய கண்களுடன் கட்டிலில் சுருண்டு இருந்த தன் சரிபாதியானவளே.

தன்வளைக் கண்டவனுக்கோ அவள் படுத்திருந்த நிலை கண்டு வேகமாய் அவளை நெருங்கியவன் அவள் தோள் தொட்டு எழுப்ப முயன்றான்.

"மதி மதிம்மா" என அவளை தொட்டு உளுக்கியவன் குரலில் மெல்லமாய் கண் திறந்தவள் தன் தோள் தொட்ட அவன் கரத்தை இறுக்கமாய் பற்றி "மாமா.. மாமா ரொம்ப வலிக்குது மாமா" என வயிற்றைப் பிடித்தவளை கண்டு
"என்னடா ஆச்சு" என்றவனுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது.

சின்ஞ்சிறு பட்டாம்பூச்சியாய் காலையில் தன்னோடு பேசியவள் இப்போது வலியில் முகம் சுருங்க சுருண்டிருந்த நிலை கண்டு அவன் இதயத்தில் ஓர் இனம் புரியாத வலி உண்டானதை உணர்ந்தவனுக்குள் மதியின் விடயத்தில் மாத்திரம் தன் திடம் தொலைவதை முற்றிலுமாய் உணர்ந்து கொண்டான் ஆணவன்.

"மாமா ரொம்ப வலிக்குது மாமா..இதோ இங்க அப்புறம் இங்க ரொம்ப வலிக்குது மாமா என்னால தாங்க முடியல" என சிறு குழந்தையாய் தன்னவன் கரம் பிடித்து வயிற்றில் அங்காங்கே வைத்துக் காட்டியவள் கண்ணீரோ கன்னம் தொட்டு கழுத்தை நனைத்தது.

குழந்தையாய் தன்னிடம் வலியை கூறியவள் அணையின்றி ஓடும் அவள் கண்ணீரின் அளவே அவள் வலியின் உச்சத்தை உணர்த்த மனதளவில் நொந்து போனான்.

என்ன செய்வது என சிலகணம் நிலையற்று தடுமாறியவனுக்கு கண்களும் லேசாய் கலங்கிட அவளைப் பார்த்தான்.

"மாமா வலிக்குது..எதாவது பண்ணுங்களேன்" என உதட்டை பிதுக்கி அழுதவளை தன்னோடு இறுக்கியணைத்தவன் களைந்திருந்த அவள் கூந்தலை ஒதுக்கி "மதிம்மா எதாவது புட் ஒத்துக்கலையா? என்ன சாப்ட நீ" என்றவனுக்கு பதிலாய் "மாமா நான் பூரி தான் சாப்டேன்" என்றாள்.

"அப்போ வே..வேற எதுவும் ப்ரோப்ளமா" என தயங்கியபடி பெண்களுக்கான மாதாந்திரப் பிரச்சனையோ என ஊகித்துக் கேட்க அவளோ மறுப்பாய் தலையசைத்தாள்.

"இல்ல மாமா! திடீர்ன்னு வலிக்குது, ஏன்னு தெரியல" என்றவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் ஓடியது.

தன்னவளின் கண்ணீரின் சூடு அவன் நெஞ்சை சுட அதற்கு மேல் தாமதிக்காதவனாய் சிறு குழந்தையாய் தன்னவளை தூக்கியவன் ஹாஸ்பிடல் விரைந்தான்.

ஹாஸ்பிடல் அவசரப் பிரிவிற்குள் சேர்க்கப்பட்டாள் மதி.
அறைக்கு வெளியே இருகைகளையும் முட்டியில் ஊன்றி பிணைத்தபடி அறையின் கதவை வெறித்தவனுக்கு சற்றுமுன் வலி தாங்காது அழுத பெண்ணவளின் முகமே மனக்கண்ணில் தோன்றிட உடலோடு சேர்ந்து உள்ளமும் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

அரைமணி நேரங்கள் கடந்ததும் அறையை விட்டு வெளியே வந்த டாக்டரை கண்டு எழுந்தவனுக்கு அவனை மீறிய ஓர் பதற்றம் தொற்றிக் கொண்டது.

தன்னை நோக்கி வந்தவனை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவன் சிறிது நேரம் கழித்து இறுகிய முகமாய் வெளியேறியவன் மதியிருக்கும் அறை முன் சென்று நின்று ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் முகபாவனையை திருத்திக் கொண்டவன் அறைக்குள் நுழைந்தான்.

அறைக்கதவு திறக்கப்படும் ஓசையில் வாசல் புறம் பார்வையை திருப்பிய மதியோ உள்நுழைந்தவனைக் கண்டு புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.

சற்று முன் வலியில் துடித்ததின் விளைவாய் கன்னத்தில் காய்ந்த கண்ணீர் தடமும் சோர்வுமாய் காட்சியளித்த பூமுகத்தில் மெல்லிய தென்றலாய் சிறு புன்னகை அந்தச் சோர்விலும் அவளை அழகியாய் காட்டிட அவனிறுக்கம் முற்றிலும் தளர்ந்தவனாய் தானும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அவளை நெருங்கினான்.

"ஆர் யூ ஓகே மதிமா" என்றவன் கேள்விக்கு புன்னகையோடு வேகமாய் தலையசைத்தவள்.
"இப்போ வலியெல்லாம் பறந்துப் போச்சு மாமா.. நான் இப்போ நல்லா இருக்கேன். நாம வீட்டுக்குப் போலாமா" என ஆர்வமாய் கேட்டவளை பார்த்து சிரித்தான் கௌசிக்.

"ஏன் மாமா சிரிக்கிங்க நாம வீட்டுக்குப் போவோமா? எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல்ல ரொம்ப ஸ்மெல்லா இருக்கு மாமா" மூக்கைச் சுருக்கி அவள் கூறிய அழகில் அவள் மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்ட துறுதுறுத்த கரங்களை அடக்கிக் கொண்டவன் சிறு புன்னகையுடன் "ம்ம் கிளம்பலாம் புஜ்ஜிமா அதுக்கு முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்றியா?"

"ம்ம் சரி மாமா பதில் சொன்னா வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவிங்க தானே! அந்த நர்ஸ் அக்கா ஒரு நாள் முழுக்க இங்கே இருக்கனும்னு சொல்லிட்டு போறாங்க. நீங்க ப்ராமிஸ் பண்ணுங்க கூட்டிட்டு போவேன்னு" என கைநீட்டி அவனிடம் சத்தியம் கேட்க அவளது சிறுபிள்ளை தனத்தில் சிரித்துக் கொண்டவன் அவள் நீட்டிய பூங்கரங்களைப் பற்றிக் கொண்டவனாய் "ம்ம் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்டா" என்றதும் சரியென தலையசைத்தாள் பெண்.

அவளிடம் கேட்க வேண்டியதை எவ்வித தயக்கமுமின்றி கேட்டதும் அவள் முகமோ சிவந்திட பட்டென்று தலையை குனிந்தவள் மௌனம் சாதித்திட அவனோ அவளையே அழுத்தமாய் பார்த்திருந்தான்.

"சொல்லு புஜ்ஜிமா" என அவள் மௌனம் களைக்க அவன் தூண்டிட அவளோ தலை நிமிராது "மாமா எ..என்ன நீங்க இதெல்லாம் கேக்குறிங்க" வெட்கமும் சங்கடமும் நிறைந்த குரலோடு அவனிடம் கேட்க.

அவனோ "இதுல சங்கடப்பட எதுவும் இல்ல மதி இது ஜஸ்ட் ஜெனராலான கேள்வி. ஒரு டாக்டர் பெஸென்ட் கிட்ட கேக்குறதா நினைச்சுக்கோ" என்றதும் சற்றே தெளிந்தவள்

"அது அது இரண்டு வருசம் இருக்கும் " என்றதும் சற்றே அதிர்வாய் பார்த்தவன் அவள் முகம் காட்டிட கலக்கத்தில் "ஹேய் ரிலாக்ஸ் புஜ்ஜிமா" அவள் கன்னம் தாங்கி கலங்கிய விழிகளைத் துடைத்தவன் அவள் முகம் பார்க்க அவளும் அவனையே பார்த்தாள்.

"ரொம்ப கஷ்டப்பட்டேன் மாமா. என் வயசுப் பொண்ணுங்க எல்லாமே பெரிய பொண்ணாகியும் நான் மட்டும் அப்படியே இருக்கேன்னு எத்தனையோ கேலிப் பேச்சு அதெல்லாம் கடந்து வந்தது இப்போ நினைக்கும் போதும் ரொம்ப கஷ்டமாயிருக்கு" என்றவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அன்று தாய் மடிக்காய் ஏங்கிய பெண்ணவளின் ஏக்கம் இன்று தனக்கே தனக்கான தன்னவனின் அணைப்பில் முற்றுப் பெற்றது போலாகிவிட மனம் நிறைந்து போனாள்.

சற்றுமுன் டாக்டர் கூறிய பெண்களின் பருவயதின் காரணமாக ஏற்படும் சாதாரண வயிற்றுவலி தான் என்றவர் அவளது உடல் பலவீனமாக உள்ளதையும்
குறிப்பிட்டுகூறியவர் அவள் உடல் நிலைகுறித்து அதிக கவனம் செலுத்தக் கூறியிருந்தார்.

ஆனால் அவர்களே அறியாத ஒன்று பெண்ணவளைபகடையாய் ஒருவன் பயன்படுத்திக் கொண்டிடுக்கிறான் என்ற உண்மை.
உண்மை தெரியும் போது மதியின் நிலை? என்னாகுமோ.

மதியிடம் கூறியது போலவே அன்றே அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் கௌசிக்.

அன்றிரவு முழுதும் பெண்ணவளை நகரவிடாது முழு ஓய்வைக் கொடுத்தவன் அவளுக்கான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ள அவன் அன்பான அக்கறையில் பெண்ணவள் மனமும் அவன்பால் முற்றிலும் சாய்ந்துதான் போனது.





தொடரும்.



 

Habi

Moderator
அத்தியாயம் - 37


அந்தக் காலைநேர பரப்பரப்போடு சமையலறையில் காலை உணவை செய்து கொண்டிருந்தான் கௌசிக் கிருஷ்ணா.
கடந்த ஒரு வாரமாய் பெண்ணவளின் உடல்நிலை குறித்து பெண்ணவளுக்கு முழு நேர ஓய்வை வழங்கி சமையல் வேலைகளையும் தன்னகத்தே வைத்துக் கொண்டவன் அவள் எத்தனை மறுத்தும் அவளை தடுத்து தானே அவளது வேலைகளை செய்து, இன்றும் காலை நேர உணவை சமைத்தபடியே பெண்ணவளை அழைத்தான்.


"மதி சீக்கிரம் ரெடியாகு இன்னைக்கு காலேஜ் முதல் நாள் லேட்டா போனா நல்லாயிருக்காது" என கைகள் அதன் பாட்டிற்கு வேலை செய்ய தன்னவளை ஏவினான்.


ஆம் இன்று காலேஜ் முதல் நாள் அவள் செல்ல வேண்டியிருக்க அதற்கான பரபரப்பிலே அவன் இருக்க அதற்குரியவளோ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாய் இருந்தாள்.


நிமிடங்கள் கரைந்தும் தன் குரலுக்கு எவ்வித பதிலுமின்றி அமைதியாய் இருக்கக் கண்டவன் மீண்டும் "மதி கேட்குதா ரெடியாகிட்டியா" என மீண்டும் சொன்னவனுக்கு மௌனமே பதிலாய் கிடைத்தது.


'என்ன பண்றா இவ? ஒரு பதிலையும் காணும்' என யோசித்தவாறே அறைக்குள் நுழைந்தவன் கட்டிலின் நட்ட நடு நாயகமாக சம்மணமிட்டு அமர்ந்தபடி இரு கைகளில் கன்னத்தை தாங்கியமர்ந்து இருந்தவளைக் கண்டு
"ஓய் புஜ்ஜி என்ன இன்னும் ரெடியாகலையா நீ" என்க அவன் குரலில் விழிகளை உயர்த்தி ஒரு நொடிப் பார்த்தவள் பின் தன் பார்வையை விலக்கி மீண்டும் யோசனையை தொடங்கினாள்.


"அட என்ன மேடம் ரொம்ப யோசனையா இருக்கிங்க போல" என கேலிக் குரலில் கூறிக் கொண்டே அவளருகே அமர்ந்தவன் அவள் கைகளை எடுத்து தன் கைச்சிறைக்குள் வைத்துக் கொண்டான்.


"என்னாச்சு எம் புஜ்ஜிமாக்கு ம்ம்" கேள்வியாய் அவன் கேட்டதுமே நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்களில் கண்ணீரின் சுவடுகள்.


"ஹேய் மதிமா என்னாச்சுடா திரும்பவும் வயிறு வலிக்குதா" அவளது கண்ணீர் அவனைப் பதற்றமடையச் செய்தது.


"ம்ஹூம் இல்ல மாமா எனக்கு அப்பா நியாபகம் வந்துடுச்சு" என்றதுமே ஆதுரமாய் அவளைப் பார்த்தான்.


"பெஸ்ட்டே ஸ்கூல் போகும் போது அப்பா தான் அழைச்சிட்டு போனாங்க இப்போ காலேஜ் போகப் போறேன் ஆனா அப்பா கூட இல்லை" எனும் போதே அவள் கன்னம் தாண்டி கீழே வீழ்ந்தது விழிநீர்.


அவளது வார்த்தைகளிலே தந்தைக்கான ஏக்கத்தை புரிந்து கொண்டவன் இரு கரம் கொண்டு அவள் முகம் தாங்க கண்ணை நிறைத்த கண்ணீரோடு அவனை ஏறிட்டாள்.
"கடவுளுக்கு என் மேல என்ன கோபம்னு தெரியல மாமா அம்மா அப்பா இரண்டு பேரையும் என்னைவிட்டு சீக்கிரமா பிரிச்சிட்டாரு. அம்மா முகம் கூட பார்க்க முடியல என்னால. ஆசையா இருக்கு மாமா அம்மா கூடவே இருக்கனும் அவங்க மடி சாயனும் அவங்க கையால சாப்பாடு ஊட்டி சாப்பிடனும். இன்னும் நிறைய நிறைய ஆசையிருக்கு ஆனா அதெல்லாம் என் வாழ்க்கைல நிறைவேறாத ஆசையாவே போகிடுச்சு" என்றவளுக்கு கட்டுப்பாடின்றி வழிந்தது கண்ணீர்.


பெண்ணவளின் தாயன்பிற்கான ஏக்கத்திற்கு என்ன மறுமொழிவது என தெரியாமல் தவித்திருந்தான் ஆண்மகன்.
முழு ஆண்மகனாய் வளர்ந்த பின்பு இழந்த தந்தையின் இழப்பையே இன்றுவரை தாங்கிக் கொள்ள முடியாது துயரத்தில் இருப்பவனுக்கு உலகம் புரியாத வயதில் தாயுமின்றி தந்தையுமின்றி தவித்த பெண்ணவள் ஏக்கத்தை அவனால் முழுதாய் உணர்ந்து கொள்ள முடிந்தது.


தாய் தந்தை பற்றிய நினைவில் அவளோ மௌனமாய் கண்ணீர் சிந்த அவள் அழுவது பொறுக்காதவனாய் அவளை தனக்குள் அணைத்துக் கொண்டான்.
வார்த்தைகளால் வடிக்காத ஆறுதலை அணைப்பில் வழங்கிட எண்ணினானோ அவளை அணைத்து ஆறுதலாய் வருடியவன் 'இனி உனக்கு எல்லாமுமாய் நானிருப்பேன்' என்பது போல அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டான் தாய்மையுடன்.


அவனிதழ் தந்த குறுகுறுப்பில் அவனை விழிமலர்த்தி பார்த்தவள் நெற்றி முட்டி "இனி எப்போ எல்லாம் உனக்காக யாருமில்லைனு தோணுதோ அப்போலாம் இந்த முத்தம் நியாபகம் இருக்கனும்" என்றவன் வார்த்தைகளிலிருந்த உள் அர்த்தம் புரிந்து கொண்டாளோ இதழ்கள் புன்னகைக்க அவனை பார்த்து மலர்ந்து சிரித்தாள்.


அவள் சிரிப்பில் தானும் புன்னகைத்தவன் அவள் தலையை களைத்துவிட்டு "ஓகே கெட் ரெடி" என எழ அவன் கரத்தைப் பற்றி நிறுத்தியவள்.
"மாமா இன்னைக்கு காலேஜ் போய்த் தான் ஆகனுமா" அப்பாவியாய்க் கேட்டாள்.


"அடிக் கள்ளி காலேஜ் கட்டடிக்கத்தான் இந்த ட்ராமாவா? பொலிஸ்காரனையே ஏமாத்துற இல்லே? உன்னையே" போலிக் கோபத்தோடு அவள் காதைப் பிடித்து வலிக்காது திருகிவிட


அவளோ "அய்யோ இல்ல மாமா இல்ல மாமா உண்மையாவே அம்மா நியாபகம் தான் மாமா.. நான் பொய் சொல்லல மாமா" அவசரமாய் மறுத்தவள் கெஞ்சலில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் வேண்டுமென்றே அவளை முறைத்தான்.


"மாமா பிங்கி ப்ராமிஸ்ஆ அம்மா நியாபகம் வந்திச்சு மாமா காலையிலே அம்மா கை பிடிச்சு ஸ்கூல் போற பசங்கள பால்கனி வழியா பார்த்துட்டு நின்னேன் அந்த நினைப்புலதான் அம்மா நியாபகம் வந்திச்சு நானும் புதுசா காலேஜ் போறேன்ல என் அம்மா கூட இல்லியேனு பீல் பண்ணேன் உண்மையா மாமா என தொண்டை குழியில் கைவைத்து சத்திய குறியீடு செய்தவளை இழுத்தணைக்க வேண்டும் என மனம் பரபரக்க நொடியும் தாமதின்றி தன் கைகளால் தன்னவளை சிறை பிடித்தான்.


புன்னகையுடன் கூடிய அவனணைப்பில் அவன் கோபம் கொள்ளவில்லை என உறுதி செய்தவள் புன்னகைத்து "அய்ய் மாமாக்கு கோபம் இல்லைல" என அவன் அணைப்பிலிருந்தவாறே குதுகலித்தவளை பார்க்க அவன் புன்னகை மேலும் விரிந்தது.


"ஓகே ஓகே பேசிப் பேசியே டைம் போயிடுச்சு போ போய் ரெடியாகு புஜ்ஜி" என்க முகம் சுருங்க அவனைப் பார்த்து "அப்போபோய்த் தான் ஆகனுமா" என்றாள் சோகமாய்.


"ம்ஹூம் இது சரிபட்டு வராது" என்றவன் சிறு குழந்தையாய் தன்னவளை ஏந்தி குளியலறைக்குள் விட்டு கதவடைத்தான்.


"அரை மணி நேரம் தான் டைம் புஜ்ஜி அதுக்குள்ள ரெடியாகி நீ டைனிங் டேபிள் வர இல்லன்னுவை நான் உள்ளே வர வேண்டியிருக்கும்" என முயன்று வரவழைத்த கடினக்குரலில் பேசிவிட்டு செல்ல கதவின் மறுபுறம் நின்றவளோ மதியோ மூடிய கதவிற்கு பழிப்புக் காட்டி விட்டு அவசர அவசரமாய் ஆயத்தமானாள். 'எங்கு தான் தாமதபடுத்தினாலும் சொன்னதை செய்துவிடுவானோ என்ற அச்சத்தில் குளித்து தயாராகியவள் சிறிது நேரத்தில் கௌசிக்கின் அழைப்பில் வெளியே வந்தாள்.


"இதோ நான் வந்திட்டேன் மாமா" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவன் தன் முன்னே நின்ற பெண்ணழகுச்சிலையின் அழகில் லயித்து இமைக்க மறந்து போனான்..


வெள்ளை நிற சுடிதாரில் தேவதையாய் நின்றிருந்தவள் அழகு கண்டு தன்போக்கில் அவனிதழ்களும் "ப்ரிட்டி ஏஞ்சல்" என முணுமுணுக்க அவளையே பார்த்து நின்றான்.


அவன் பார்வையின் மாற்றம் புரியாதவளாய் பெண்ணவளோ "மாமா மாமா லேட் ஆகுதுனு என்னைப் பிடிச்சிக் கத்திட்டு இப்போ இப்பிடி நிற்குறிங்க வாங்க வாங்க" என்றழைப்பில் தன்னை மீட்டுக் கொண்டான்.


"யூ லுக் சோ ப்ரிட்டீ மை லிட்டில் ஏஞ்சல்" என்றவனின் வாழ்த்தில் முகம் பூவென மலர்ந்து புன்னகைக்க "அன்னைக்கு நைட்டும் இப்பிடித் தான் என்னை கூப்பிட்டிங்க மாமா" என்றதும் என்று என யோசித்தவனுக்கு அவர்களின் முதல் நாள் சந்திப்பாகத் தான் இருக்கும் என ஊகித்துக் கொண்டான்.


"சரி சரி உட்காரு லேட் ஆச்சு" என்றவன் தன் கைகளாலே தன்னவளுக்கு பறிமாற கண்கள் கலங்க ஆசையுடனே வாய் திறந்து உணவை உட்கொண்டவள் திடீரென ஏதோ தோன்றியவளாய்
"மாமா காலேஜ்ல ரேகிங் பண்ணுவாங்களா?" என்றாள் உணவை வாய்க்குள் அடக்கியபடி.


"ம்ம் பண்ணுவாங்களே" என்றவன் சாதாரணமாய் அடுத்த வாய் உணவை ஊட்டி விட அவளோ அதிர்ந்தவளாய் "என்னாது" என ஏகத்துக்கும் ஏங்கியதுமே உணவு புரையடிக்க பெருத்த சத்தத்துடன் இருமினாள்.


"ஹேய் பார்த்து பார்த்து" என பதறியவன் அவசரமாய் தண்ணீரை பருக வைத்து முதுகை வருடி விட்டான்.


இருமியதில் கண்கள் கலங்க தன்னவனை விழி உயர்த்தி பார்த்தாள்.
"மாமா ரேகிங் எல்லாம் நினைக்கவே ரொம்ப பயமா இருக்கு நிஜமாலுமே ரேகிங் பண்ணுவாங்களா என்ன" என்கவும் அவனோ "உன்னை" என அடிப்பது போல் செய்தவன் பின் அவன் தலையில் நங்கென்று கொட்டு வைத்தான்.


"ஸ்ஆஆ வலிக்குது மாமா" என தலையைத் தேய்த்துவிட்டவளின் கையை விலக்கிவிட்டு கொட்டிய இடத்தில் தேய்த்துவிட்டவன்.
"லூசு பொண்டாட்டி காலேஜ்னா ரேகிங் எல்லாம் இருக்கும் தான் அதெல்லாம் கடந்து தான் வரனும் இப்பிடி எல்லாம் பயப்படக் கூடாது புரிஞ்சுதா" என்க மண்டையை ஆட்டி வைத்தாள்.


"பொலீஸ்காரன் பொண்டாட்டி எப்பிடி இருக்கனும்னு தெரியும்ல ரொம்ப ரொம்ப தைரியமா இருக்கனும்" என்க.


அவளும் தலையாட்டியவள் "ஆமால தைரியமா இருக்கனும்" என்றவளின் தைரியம் பறந்து போனது சிறு நிமிடங்களின் பின்.


உணவை அவள் மறுக்க மறுக்க முழுதாய் ஊட்டிவிட்டவன் பின் வைத்த பொருளை பார்த்து மதியின் தைரியமெல்லாம் ஓடி விட அலறியே விட்டாள்.


"மாமா ப்ளீஸ் வேணாமே அதான் வயிறு வலி சரியா போச்சு தானே" கெஞ்சலாய் தன் முன் வைத்த மாத்திரைகளைக் கண்டு அவனிடம் இரைஞ்சிட அவனோ இளக்கமின்றி "நோ மாத்திரை சாப்பிடத் தான் வேணும் நோ எக்ஸ்கியூ" ஸ்ட்ரிக் ஆபிஸராய் கட்டளையிட்டவன் அவளை இழுத்து பிடித்து அவள் முன்னே மாத்திரையை நீட்டினான்.


அவன் நீட்டிய ஒவ்வொரு மாத்திரையின் அளவிலும் கண்கள் விரித்தவள் "எம்மாம் பெரிய மாத்திரை" என அழாத குறையாய் கூறியவளை அதட்டி உருக்கி போட வைத்தான் கௌசிக்.


சிறு குழந்தையாய் அடாவடி செய்யும் மனையாட்டியோடு மல்லுக்கட்டிக் கொண்டே அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் துரித கதியில் அனைத்தையும் முடித்தவன் அவளை அழைத்து வெளியே செல்ல ஆயத்தமாகவும் வீட்டின் மணியோசை அலறவும் சரியாக இருந்தது.


மணியோசையில் கதவை திறந்த கௌசிக்கோ தன்னெதிரே ஓய்ந்து போன தோற்றத்துடன் நாளைந்து நாட்கள் தாடியோடு கசங்கிய சட்டையுடன் முகம் வாடி நின்ற தன் உடன் பிறப்பை கண்டு அதிர்ந்து தான் போனான்.


"டேய் சிவா என்னடா கோலம் இது" என கேட்டவாறே தம்பியை நெருங்கியவன் அவனை தோளோடு அணைத்து உள்ளே அழைத்து அமரச் செய்தான்.


கௌசிக்கின் குரலில் "மாமா சிவா அத்தான் வந்திருக்காங்களா" என அங்கே வந்தவளும் அவனது ஓய்ந்த தோற்றத்தைக் கண்டு குழம்பித் தான் போனாள்.


அவளோடு அறிமுகமான நாள் தொட்டு அவனைப் பார்த்தவளுக்கு ஒரு நாளும் அவனை இந்தத் தோற்றத்தில் கண்டதே இல்லை.. எப்போதும் துறுதுறுவென தங்கையோடும் தன்னவளோடும் இணைந்து சேட்டைக்காரனாய் வலம் வந்தவன் தோற்றம் இன்று ஏனோவென்று இருக்கக் கண்டு அவளையும் ஒரு நொடி பேச்சற்று மௌனியாக்கியது.


"சிவா அத்தான் என்னாச்சு" அவள் கேள்விக்கும் அமைதியாய் அமர்ந்திருந்த தம்பியின் தோற்றம் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த மதியிடம் "புஜ்ஜி அவன் கொஞ்சம் டயர்ட்ஆ இருக்கான் போல நீ போய் ஒரு காபி கொண்டு வா" என்றான்..


"ம்ம் சரி மாமா" எனஅவள் அங்கிருந்து விலகியதும் தம்பியின் தோளை அழுத்த அவனை நிமிர்ந்து பார்த்தான் சிவா.


"இந்த வேசத்தை களைச்சிட்டு ஒழுங்கா என் தம்பியா ரெடியாகி இரு நான் வந்து பேசிக்கிறேன்" என அதட்டலிட்டதும் சம்மதமாய் தலையசைத்தான்.


மதியும் காபியுடன் வர அதை சிவாவிடம் குடுத்து குடிக்கச் செய்தவன் மதியை அழைத்து வெளியேற போக அவளோ அசையாது சிவாவைப் பார்த்தவள் "மாமா அ...த்தான்" என்றாள் தயக்கத்துடன்.


"ஆமா அத்தான் தான் இப்போ அதுக்கு என்ன" என்றான்.


"இல்ல தனியா இருப்பாங்களே" என மெல்லிய குரலில் உரைக்க அவளை நக்கலாய் பார்த்தவன், "சரி அதுக்கு இப்போ என்ன வேல்ர்ட் நம்பவர் வன் தைரியசாலியான வெண்மதி அவர்கள் துணையிருக்கப் போறிங்களா?' என நக்கல் தொனியில் கேட்டு வைக்க அவள் முகம் போன போக்கில் சிரித்து வைத்தான்.


"காலேஜ் ரேகிங் பயப்புடுறவ ஒரு மாத்திரை சாப்புட பயப்புடுறவ இவனுக்கு துணையா இருக்கப் போற" என்று நக்கலாய் கேட்கவும்
"மாமா போங்க மாமா நான் தைரியசாலி தான்.. என்னை ரொம்பத்தான் கலாய்க்கிறீங்க போங்க" என அவள் சிணுங்கி சொன்ன விதத்தில் கௌசிக்கோடு சேர்ந்து சிவாவும் வாய்விட்டுச் சிரித்தான்.


தன்னெதிரே நின்றிருந்த இருவரின் சகஜமான உரையாடலிலே அத்தனை நேரமும் இருந்த கலக்கம் மட்டுப்பட சிறிது தெளிந்திருந்தான் சிவா.


சிவாவின் சிரிப்பில் அவன் புறம் திரும்பியவள் "அத்தான் நீங்க இப்பிடி இருந்தா தான் நல்லாயிருங்கிங்க எப்போவும் சந்தோஷமா சிரிச்சிட்டே இருங்க" என்றவளை கண்ணில் கனிவுடன் பார்த்து நின்றனர் அந்த ஆண்மகன்கள்.


"சிவா அத்தான் எப்போவும் போல சிரிச்சிகிட்டு காமெடி பண்ணிக்கிட்டு காமெடி பீஸ்ஆ இருக்குற அத்தான் தான் எனக்கு வேணும் இந்த முரட்டு பீஸ் வேணாம்" கெஞ்சலாய் அவன் முன்னே முட்டி போட்டு அமர்ந்து பேசியவளை பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தவன் அவள் சிகையை மெதுவாய் கலைத்துவிட்டான்.


இவர்களின் பாசப்பிணைப்பை பார்த்த கௌசிக் மனம் நிறைந்தது. தன்னைப் போலவே தன் இணையவளும் தன் சொந்தங்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்ற அவனெதிர்பார்ப்பை அவளே அறியாது நிறைவேற்றியிருந்தாள் பெண்.


"ஹேய் என்ன என் தம்பி உனக்கு காமெடி பீஸா" அவளை வேண்டும் என்று அரட்ட அவனை பார்த்து முழித்தவள் "இல்லையில்லை அப்பிடி சொல்லல அ..அது அது" என திணறவியவளைக் கண்டு இருவருக்குமே சிரிப்பு வர அடக்கிக் கொண்டனர்.


"அண்ணா மதி குட்டியை திட்டாதிங்க ஷி இஸ் ஏஞ்சல்" என்றவன் அவள் தலையை பாசமாய் வருடிவிட தம்பியின் பாராட்டில் சிறு பொறாமை எழுந்ததோ அவனுக்கும் "டேய் டேய் நல்லவனே அது என்னோட டயலோக்டா அவ எனக்கு தான் ஏஞ்சல்" உர்ரென்று கூறியவனைக் கண்டு இப்போது மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்து வைத்தனர்.


சற்றுமுன் இருந்த இறுக்கமான சூழல் தளர்த்தப்பட கௌசிக் மதியை அழைத்து வெளியேறிட சிவாவும் சற்று தெளிந்தவனாய் குளியலறை புகுந்து கொண்டான்.


....


பயணம் தொடங்கிய முதல் பெண்ணவளுக்கு ஆயிரம் வார்த்தைகளில் அட்வைஸ் மழையை பொறிந்து தள்ளியவனுக்கு அமைதியாக "ம்ம் ம்ம்" என மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள் வெண்மதி.


நீண்ட நேரமாய் மீண்டும் மீண்டும் அதே பல்லவியை பாடி முடித்தவன் திரும்பவும் முதலிருந்து தொடங்கிய பாதையில் பார்வையை பதித்து பேசிக் கொண்டு வந்தவன் அமைதி நிலவ பார்வையை திருப்ப அங்கே அவனின் சரிபாதியானவளோ தூங்கிக் கொண்டிருந்தாள்.


"அடிப்பாவி இங்கே நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன் இப்பிடி தூங்கிட்டா" என வாய்விட்டு புலம்ப க்ளுக் என்று சிரித்து வைத்து கண்மிட்டி அவனைப் பார்த்தாள்.


"ஏய் திருடி நடிச்சியா நீ உன்னையே" என அவள் தலையில் மெதுவாய் கொட்டியதில் மேலும் சிரித்தவள்.


"பின்ன என்ன மாமா நானே கொஞ்சம் தைரியமா இருக்கேன். நீங்க அட்வைஸ் பண்ணி ரொம்ப தைரியமா மாத்துறேனு என்னை ரொம்ப பயம்தான் காட்டுறிங்க"


"ம்ம் ஏன் புஜ்ஜிமா தைரியமா இருக்கேனும்னு தான் இதெல்லாம் சொல்றேன். ஆனா என் புஜ்ஜிமா இவ்வளவு தைரியமான பொண்ணுன்னு எனக்கு தெரியாம போச்சே" என கேலியாய் சொல்ல அதை உண்மையென எண்ணி கெத்தாய் பார்வை பார்த்தாள் மதி.


அவள் கெத்தான பார்வையும் அவனுக்கு மேலும் சிரிப்பூட்ட சிரித்தவாறே வண்டியை செலுத்தினான்.


அந்த தனியார் மருத்துவக் கல்லூரியின் முன்னே தன் வண்டியை நிறுத்தியவன் அவளை அழைத்துக் கொண்டு கீழிறங்கினான்.


இன்று முதல் நாள் புது மாணவர்களின் வரவுகளாகயிருக்க ஆங்காங்கே பெற்றோர்களோடும் மாணவர்கள் குழுமியிருந்தனர்.


பெற்றோர்களிடம் விடைபெற்று மாணவர்களும் ஒவ்வொருவராய் காலேஜ் வளாகத்தினுள் நுழைந்திட மதி தன்னருகே நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.


"ஆல் த வெரி பெஸ்ட் மதி.. இது உன் கனவுக்கான பாதை தைரியமா போ எப்போவுமே நான் உன் கூடவே இருப்பேன் பெஸ்ட் ஒப் லக்" என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.


மதி கண்கலங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள் "தைங்யூ சோ மச் மாமா.. என் கனவு கனவாவே போயிடும்னு நினைச்சேன் ஆனா கடவுளுக்கு என் மேல கொஞ்சூண்டு பாசமிருக்கும் போல அதான் என் லைப்ல உங்கள எனக்கு கொடுத்திருக்காரு" என்றவள் உணர்ச்சி மிகுதியில் இருக்குமிடம் மறந்து அவன் கன்னத்தில் அவன் உயரத்துக்கு எக்கி முத்தமிட அவன் கன்னம் எட்டாது தடுமாறினாள்.


"மாமா ஏன் மாமா இப்படி பனை மரம் போல வளர்ந்திருக்கிங்க பாருங்க எனக்கு எட்டவேயில்ல" அவளையறியாத சலிப்பில் புலம்பியவள் அவன் சிரிப்பு சத்தத்திலே என்ன செய்தோம் என்ன பேசினோம் என்பது புரிய குப்பென்று முகம் சிவந்து நாக்கை கடித்து தலைகுனிய அவள் செய்கையில் மேலும் விரிந்தது அவன் புன்னகை.


"சிரிக்காதிங்க மாமா" சிறு சிணுங்கள் அவளிடம்.

"ஹாஹா புஜ்ஜி புஜ்ஜி என் புஜ்ஜிம்மா" என அவள் இரு கன்னத்தை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்சினான் காளையவன்.


"உன்னை ஏன் புஜ்ஜின்னு கூப்பிடுறேன்னு இப்போ புரியுதா என் குள்ளச்சி" என்க அவளோ அவனுக்கு சளைக்காதவளாய்
"மாமா நான் குள்ளச்சி இல்ல நீங்க தான் போஷ்ட் கம்பம்" எனக் கூறி கிளுக்கிச் சிரித்தாள்.


"ப்ப்பா வர வர உனக்கு வாய் கூடிப் போச்சி.. என்கிட்டயே அரட்டை போடுற ம்ம்" சற்றே அரட்டும் குரலில் அவளோ மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.


"ஹஹா இதோ பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு" என அவள் நெற்றியில் முட்டக் குனிந்தவன் கன்னத்தில் மென்மையாய் முத்ததமிட்டு விலகினாள்.


அவள் எதிர்பாரா முத்தத்தில் திகைத்தாலுமே அதில் காதலோ காமமோ எதுவுமில்லை அன்பின் பரிமாற்றமான அம்முத்தமதில் இதழ் பிரியா அழகிய புன்னகை அவன் வதனத்தில்.


அனைவரும் காலேஜினுள் நுழைந்துவிட்டதைக் கண்டு அவளும் "மாமா நான் போகவா" என்க அவள் கையை அழுத்தி தன் தொடுகையில் தைரியமளித்தானோ அவளை அனுப்பி வைத்தவன் அவள் உள்ளே நுழையும் வரை பார்த்து நின்று பின் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.


இத்தனை நேர அவர்களிருவரையுமே
விழிகளில் வன்மம் சொட்ட சற்றே தொலைவில் தன் வண்டியிலிருந்து வெறித்திருந்தான் உதைய்.


அவன் மனக் கண்ணில் மீண்டும் மீண்டும் புன்னகை முகமாய் காட்சியளித்த கௌசிக்கின் முகம் தோன்ற கண்களை இறுக மூடித் திறந்தவன் கண்களோ ரத்தமாய் சிவந்திருந்தது.


"ஐ கில் யூவர் ஸ்மைல் ஐ கில் யூவர் ஹெப்பினெஸ் ஐ கில் யுவர் எவ்ரிதிங்" என வன்மமாய் கர்ஜித்தவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.


தொடரும்..



 

Habi

Moderator
அத்தியாயம் - 38

உள்ளம் சுமந்த கனவுகளோடும் காலேஜ் பற்றிய பயத்தோடும் காலேஜ் வளாகத்தினுள் நுழைந்தாள் பெண்.

சுற்று முழுதே பல மாணவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குழுக்குழுவாய் நின்றியிருக்க எங்கு செல்வது யாரிடம் கேட்பது என்ற தயக்கத்தோடு தடுமாறியவள் ஒரு வழியாய் நடந்து செல்ல சற்று தள்ளி அமர்ந்திருந்த பெண்கள் கூட்டமோ இவளைக் கண்டு கைதட்டி அழைத்தது.

கை தட்டு ஓசையில் திரும்பிய மதியோ அங்கு நின்றவர்களைக் கண்டு புரியாது பார்க்க கை காட்டி அவளை அழைத்தனர் அவர்கள்.

முற்றிரும் பெண்கள் சூழ்ந்த பட்டாளமாய் இருக்கக் கண்டு சிறு நம்பிக்கை தோன்ற பயத்தைக் களைந்தவளாய் அவர்களை நோக்கிச் சென்றாள்.

"ஹேய் என்ன கூப்பிட்டா உடனே வரத் தெரியாதா இன்னொருவாட்டி கூப்பிடனுமோ" ஆரம்பமே அதட்டலாய் ஒருத்தி கேட்டதும் சற்றுமுன் விடைபெற்ற பயம் மீண்டும் அவளைக் கவ்விக் கொண்டது.

அவளோ மிரண்டு முழிக்க அவள் பயத்தைக் கண்டு மற்ற பெண்களோ ரகசியமாய் தங்களுக்குள் கண்பாஷை செய்து கொண்டனர்.

கூடட்டத்தில் ஒருத்தி மதியின் நோட்டை வெடுக்கென்று பறித்தெடுத்தவள்
"என்னம்மா நீயு அட்மிசனா?" என நக்கலாய் கேட்க மதியோ தலையசைத்து வைத்தாள்.

"பெர்ஸ்ட்டே அதுவுமா சீனியர்ஷ்க்கு விஷ் பண்ணாம நீ பாட்டுக்கு போற .. ம்ம் விஷ் பண்ணு" என்றதும் மதியோ உள்ளுக்குள் பயந்தாலும் தன் பயத்தை வெளிக்காட்டாது குட்மார்னிங் சொல்ல.

"ஹேய் இப்பிடியா விஷ் பண்ணுவாங்க. உன்னை விட வயசுல பெரியவங்க நாங்க சோ கால்ல விழுந்து மரியாதை பண்றது தான் முறை உங்க வீட்ல யாரும் உனக்கு சொல்லித் தரலையா?" என்றாள் ஒருத்தி.
"ஆதானே" என கோரசாய் பின் பாட்டு பாடினர் மொத்தக் கூட்டமும்.

மதிக்கோ பயத்தையும் மீறி சிறு கோபம் எழுந்தது அவளோ அசையாது அவர்களை பார்த்து நின்றாள்.

"ஹேய் என்ன முறைக்குற நாங்க யாரு தெரியுமா? சீனியர்ஸ்.. ஒழுங்கா சொன்னத பண்ணு இல்ல இங்கயிருந்து நகர முடியாது" மிரட்டலாய் எகிறியவள் தோள் தொட்டு அடக்கிய மற்றையவளோ "ஹேய் ஹெச்சோடி வாறார்டி வாங்க போயிடலாம் இவள இன்னொரு நாள் பார்த்துக்கலாம்" என கிசுகிசுக்க மதியிடம் நோட்டைத் திணித்துவிட்டு மொத்தக் கூட்டமும் ஈசலென களைந்து சென்றன.

அனைவரும் சென்றதுமே சற்று நிம்மதியாய் மூச்சுவிட்டவள் தனது வகுப்பறைத் தேடி நுழைந்து கொண்டாள்.

அன்று முதல் நாள் என்பதால் எவ்வித பாடங்களும் ஆரம்பிக்கப்படாது மாணவர்களுக்கிடையே அறிமுகப்படலம் மாத்திரம் நடந்து முடித்திருந்தது.

அந்த வகுப்பில் அதிக மேல் தட்டு வர்க்க மாணவர்களே இருக்க அவர்களுடன் இயல்பாக பேச முயன்றவளுக்கு அவர்களின் பார்வையிலிருந்த ஒதுக்கமே மேலும் அவர்களோடு பேச விடாது செய்ய ஒதுங்கியே அமர்ந்திருந்தாள்.

இடைவெளை நேரத்தில் வகுப்பறை விட்டு தயங்கி வெளியே வந்தவளுக்கு காலேஜ்ஜை சுற்றி பார்க்கும் ஆசையிருந்தாலுமே காலையில் நடந்ததை எண்ணியவள் மீண்டும் அவர்களிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என எண்ணி ஒதுக்கமாய் ஓரிடம் சென்றமர்ந்தாள்.

"அச்சோ பசிக்குது.. ஹேன்டீன் போவோமா? ம்ஹூம் வேணாம் அங்க அந்த சீனியர்ஸ் இருந்தா மறுபடியும் வம்பு பண்ணுவாங்க வேணாம்" என தனக்குள்ளாகவே பேசிக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு அந்நேரம் தன்னவன் பற்றிய எண்ணலைகள் எழ "எல்லாம் இந்த மாமாவால தான் ரொம்ப தைரியமா பேசி பேசியே என்ன அனுப்பி வைச்சிட்டு இப்போ என்னென்னா இப்பிடி பயந்து வருதே!" என தலையாட்டி புலம்பியவள் புலம்பல் அங்கே ஸ்டேஷனிலிருந்து நண்பனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவனுக்கும் டெலிபதியாய் கடத்தப்பட்டதோ புரையேற இருமிக் கொண்டான்.

அவன் இருமலில் அருகே அமர்ந்திருந்த மாதவ்வோ "என்ன மச்சி யாரோ உன்ன நினைக்குறாங்க போலயே" குறும்பாய் சிரித்திட கௌசிக்கின் மனக்கண்ணில் தன்னவளின் முகம் மின்னி மறைய இதழ்கடையோரம் எட்டிப் பார்த்தது சின்னதாய் அழகிய முறுவலொன்று.

நண்பனின் முறுவல் எதனால் என்று அறிந்த மாதவ்வும் சிரித்துக் கொண்டான்.

.....

மதியின் புலம்பலைக் களைக்கும் விதமாய் ஓர் சத்தம் கேட்க அதில் களைந்தவள் சத்தம் வந்த தன் கைப்பையை விழிகள் சுருங்க பார்த்து பின் அதை திறந்து பார்த்திட அதிலோ ஒரு ஸ்மார்ட் போன் இருப்பதைக் கண்டு விழிகள் விரிய அதை எடுத்தவள்.
கையிலிருந்த அலைபேசியோ மீண்டும் ஒலியெழுப்ப அதை ஆராய்ந்தவள் விழிகளோ அழகாய் மலர்ந்தது அதன் முகப்புத் திரையில் அவர்களின் திருமண புகைப்படம் இருக்கக் கண்டு.

"இது எப்போ வெச்சாங்க மாமா" என்ற யோசனையோடே அதை ஆராய்ந்தவளுக்கு தன்னவன் பெயர் சேமித்த இலக்கத்தில் இருந்து குறுஞ்செய்திகள் வந்திருப்பதை கண்டு ஆர்வமாய் உள்ளே சென்று படித்தாள்.

"ஹாய் குட்டி டாக்டரம்மா இன்னைக்கு முதல் நாள் எப்படி போச்சு மாமாக்கு செம்ம திட்டு திட்டியிருப்பீங்க போல ம்ம் ஓகே ஓகே என்னை திட்டினது போதும் மிச்சத வீட்ல வந்து பார்த்துக்கலாம் ஓகே" என்றதை படித்தவள் முகத்தில் சிரிப்பின் ரேகை.

"உன் லன்ஞ் பேக்ல வெச்சியிருக்கேன் நல்லா சாப்பிடு மிச்சம் வைய்க்காத அப்புறம் மாத்திரையும் இருக்கு மறக்காம போட்டுக்கோ. இல்லன்னா நைட்டுக்கு எக்ஸ்ட்ரா டெப்லட் தந்திடுவேன் ஒகே வா" செல்லமாய் மிரட்டலுடனான அவன் குறுஞ்செய்தியை படித்தவள் முகம் விகாசித்தது.

"ஈவ்னிங் காலேஜ் முடியும் போது போன் பண்ணு உன்னை பிக்கெப் பண்ணிக்கிறேன் பாய்" என்றதோடு மெஸேஜ்கள் முடிவடைந்தது.

அனைத்தையும் படித்தவள் முகத்தில் பலவிதமான உணர்வுக்குவியல்கள். தாய் தந்தை அன்பை முழுதாய் அனுபவித்திராதவள் வலி போக்கவே அனைத்துமானவானாய் கணவன் என்ற உருவில் கடவுள் மொத்த அன்பையும் தனக்கு கிடைக்க வேண்டுமென எழுதி வைத்தாரோ? என்ற எண்ணமே அவள் மனதில்.

ஒவ்வொரு சிறு சிறு செய்கையிலும் விருப்பம் அறிந்து தேவையறிந்து நடக்கும் துணை கிடைப்பது வரம் அல்லவா? அந்த வரமே அவளுக்கு அவளது வாழ்க்கை முழுவதுக்குமாய் கிடைத்துவிட்டது அவளவன் உருவத்தில்.

இனிய மனநிறைவோடு பையிலிருந்த உணவை எடுத்தவள் சாப்பிட முயல அவள் அமர்ந்திருந்த மரத்தின் பின்னே கேட்ட சத்ததில் எழுந்து கொண்டவள் மறுபுறம் எட்டிப் பார்த்தாள்.

அங்கோ நால்வர் சேர்ந்து ஒருத்தனின் உணவுப் பொருட்களை பறித்து வீண் செய்தவர்கள் அவனிடம் வம்பு பண்ணிக் கொண்டிருந்தனர்.

பார்த்தமட்டிலே புரிந்து போனது அவளுக்கு. காலையில் தன்னிடம் வம்பு செய்த பெண்களைப் போலத் தான் இவர்களும் அவனிடம் வம்பு செய்கின்றனர்.

சிறிது நேரம் அவனைச் சீண்டியவர்கள் அவன் எவ்வித பாவனையும் காட்டாது அமைதியாய் இருப்பது கண்டு அவர்களுக்கே சலித்துப் போனது இடத்தைக் காலி செய்தனர்.

அந்த ஆடவனோ அவர்கள் சென்றதைக் கூட உணராது கீழே வீண் செய்யப்பட்டிருந்த உணவையே வெறித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்தவளுக்கோ ஒருமாதிரியாகிப் போனது.
உணவை வெறித்த அவனது பார்வையில் அவன் பசியோடு இருக்கிறானோ என தோன்றவும் தன் கையில் இருந்த உணவை ஒரு கணம் பார்த்தவள் எதுவும் யோசியாது அவனை நோக்கிச் சென்றாள்.

துணிச்சலாய் எழுந்த வந்த போதிலும் அறிமுகமற்ற ஒருவனோடு எவ்வாறு பேசுவது என்ற தயக்கமும் தான் பேசினால் ஏதாவது திட்டுவானோ என்ற பயமும் எழ அமைதியாய் நின்றவள் முயன்று தைரியத்தை வரவழைத்தவளாய் அவன் முன்னே நின்று தன் உணவுப் பொதியை நீட்டினாள்.

தன் முன்னே மெல்லிய கரம் ஒன்று உணவை ஏந்தி நின்றதை கண்டவன் மெதுவாய் தலை நிமிர்த்தி அவளை பார்த்தான்.

அவன் பார்வையில் "இந்தாங்க இத சாப்பிடுங்க. அவங்க உங்க சாப்பாட்டெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டாங்கல்ல" என புன்னகை முகத்துடன் நீட்டியவாறே இருக்க பேச்சற்று மௌனமாய் அவளையே பார்த்தான் அவன்.

அவன் அசைவற்ற பார்வையில் அதிகபிரங்கித் தனமாய் செய்கிறோமோ என மனம் சாடினாலும் உதவி தானே இதில் என்ன இருக்கிறது என அதே மனமே எதிர் கேள்வியெழுப்ப அடுத்து என்ன பேசுவது என தெரியாது தடுமாறியவள் தடுமாற்றம் உணர்ந்தவனும் சிறு புன்னகையோடு அவளைப் பார்த்தான்.

அவன் புன்னகையில் சற்றே ஆசுவாசமானவள் தன் உணவுப் பொதியை மேலும் அவன் முன்னே நீட்ட அவளது உதவி புரிந்தாலுமே வேண்டாம் என்பது போல தலையசைக்க அவள் முகம் சுருங்கிப் போனது.

அவளின் புன்னகை முகம் சுருங்கியதை கண்டு என்ன நினைத்தானோ அவள் நீட்டிய உணவை வாங்கியெடுத்ததும் சுருண்ட முகம் மலர அவனைப் பார்த்தாள்.

சிறிதளவை உணவை எடுத்து மீதியை அவளிடம் கொடுக்க அவளும் பசியின் வேகத்தில் அதை பெற்று கொண்டாள்.


அங்கேயே சற்றுத் தள்ளியமர்த்து கொண்டவள் தன் உணவை சாப்பிட்டு முடித்து கைகழுவிக் கொண்டே எழுந்து கொள்ள "தைங்ஸ் வெண்மதி" என்றான் அவன் இத்தனை நேர மௌன விரதத்தைக் களைத்தவனாய்..

அதில் விழிகள் விரிந்திட திரும்பி அவனை பார்த்தவள் "ஹேய் என் பெயர் உங்களுக்கு எப்பிடி தெரியும்" என்க.

அவனோ "க்ளாஸ் ரூம்ல ஒன்னுமே கவனிக்காம குனிஞ்ச தலை நிமிராம இருந்தா இப்பிடித் தான் யார் என்னன்னு முளிக்கனும்" என கேலி பேசிட புருவம் நெறித்தவள் முகம் பிரகாசமாக "ஹேய் அப்போ நீ என் க்ளாஸ் மேட்டா" என பட்டென்று ஒருமைக்குத் தாவியவளாய் கேட்டாள்.

"அய்யோ மரியாதை போச்சா? வாய மூடிட்டு கெத்து காட்டியிருக்கலாமோ" என வாய் விட்டு புலம்ப அவனை குழப்பமாய்ப் பார்த்தாள் மதி.

"ஆமா மதி நானும் உன் க்ளாஸ் தான் சீனியர் ராகிங் அதான் கப்புனு இருந்துட்டேன்" என சிரித்தவனைப் பார்த்து அவளும் சிரித்தாள்

"சரி சரி உன் பேர் என்ன?"

"ஐயம் குட்டி" என தன் கைகளை நீட்ட மதியோ க்ளுக் என வாய் மூடிச் சிரித்தாள்.

"ஹேய் சிரிக்காத மதி. இந்த பெயரை வைச்சி நான் படுற கஷ்டம் எனக்கு தான் தெரியும்" என சிணுங்கியவனைப் பார்த்து சிரிப்பை அடக்கியவள்.

"ஏன் உன் பேருக்கு என்ன நல்லா தான் இருக்கு நீ பீல் பண்ணாத சரியா" என உடனே ஆறுதலாய் பேசிட,

"ம்ம்ம் ஆனா இந்த காலேஜ் ல இந்த பெயர் தெரிஞ்சா என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க. என் எல்லா டாக்குமென்ட்லயும் என் நேம் அஷ்வின் இருக்கு ஆனா ஏனோ உன்கிட்ட என் உண்மையான பேரை சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன். நீ என்ன அஷ்வின்னு சொல்லியே கூப்பிடு" என்க மறுத்து தலையசைத்தவள்.

"இல்ல நான் குட்டின்னு கூப்பிடுறேன் அதான் பிடிச்சியிருக்கு. உன்னை பார்க்கும் போது எனக்கு குட்டி பிரதர் பீல் ஆகுது சோ நீ குட்டி பையா தான் ஓகே" என்றதும். அவனுக்கும் அவளது வெகுளியான பேச்சு பிடித்துப் போனதோ அவனும் சிரித்தவாறே தலையசைத்தான்.

"ஓகே அப்போ நாம இப்போலயிருந்து ப்ரெண்ட்ஸ்" என கை நீட்ட அவனும் மகிழ்ச்சியுடன் கை குலுக்கினான்.

யாருடைய நட்பும் இல்லாது ஒதுங்கியிருந்தவளுக்கு குட்டியின் நட்பு பெரிதாய் சந்தோஷத்தை தர மகிழ்ச்சுயுடன் நட்பாய் கரம் கோர்த்தாள் பெண்.

விதியின் திருப்பத்தில் இந்த மெல்லிய நட்பு ஒரு பகடைக் காயே என்பதை அவர்கள் அறிந்திருக்க சாத்தியமில்லையே!

இருவரும் காலேஜை சுற்றி வந்தனர்.
இருவருக்கும் கிடைத்த முதல் நட்பு ஆகையால் தங்களைப்பற்றி பகிர்ந்து கொண்டனர்.

மதி தன்னைப் பற்றியும் தன் திருமணமானவள் என்றும் கூற குட்டி ஆச்சர்யமாய் அவளை பார்த்து வைத்தான் இருந்தும் அதைப் பற்றி மேலும் கேட்காது அப்படியே விட்டவன் அவளிடம் தன்னைப் பற்றியும் தான் தாய் தந்தை அற்றவன் என்றும் கூறி வைத்தான்.

அவனும் தன்னைப் போல தாய் தந்தை அற்றவன் தான் என அறிந்ததுமே பெண்ணவளுக்கோ அவன் மீது இயல்பாகவே ஓர் அன்பு தோன்றியது.

காலேஜ் முழுவதும் வட்டமடித்தவர்கள் எதேர்ச்சையாக தங்கள் முன் வந்த உருவத்தில் மோதிட அவர்களோ பதறியவாறே நிமிர்ந்து பார்க்க அங்கே நின்றிருந்த உருவத்தைக் கண்டு ஒரு கணம் விழிவிரித்தவர்கள் மிரட்சியாய் பார்த்து நின்றனர்.

ஆண்பாதி பெண்பாதியாய் அர்த்த நாதீஸ்வர தோற்றத்தில் நின்ற உருவத்தில் நின்ற பெண்ணைப் பார்த்து முழித்து நிற்க அவளோ அதைக் கண்டு கொள்ளாது மோதியதில் கீழே வீழ்ந்த தன் புத்தகங்களை எடுத்தாள் அவள்.

"பெஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஆ" எனக் தன் கரகரப்பான குரலில் கேட்டதும் ஒருத்தரையொருத்தர் பார்த்து முழித்தவர்கள் ஆம் என தலையசைக்க அவர்களது மிரண்ட பார்வையில் அவர்களது பயத்தை உணர்ந்தாளோ அந்தப் பெண்ணும் "ரிலாக்ஸ் இப்போ எதுக்கு இந்தப் பயம் நானும் உங்கள போல மனிஷன் தான் இதோ பாருங்க காலு கூட இருக்கு" என காலை காட்டி அவர்களிடம் கூற..

அவளது இயல்பான பேச்சிலே பயம் தெளிந்தவர்கள் அவளை எண்ணி பயந்ததில் சங்கடமாய் நெளிந்து "ஸாரி" என்றனர் ஒரு சேர.

"எதுக்கு ஸாரி இது எல்லாம் பழகிப் போன ஒன்னு தான்" என்றவள் "ஐம் சோபனா இந்த காலேஜ்ல லேப் இன்ஜார்ஜ்ஜா புதுசா ஜாயின் பண்ணியிருக்கேன்" என தன்னை அறிமுகம் செய்தாள்.

மற்ற இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

"ஓகே பசங்களா மீண்டும் சந்திக்கலாம்" என ஒரு புன்னகையோடு கடந்து சொல்ல போகும் அவளை பிரமிப்பாய் பார்த்து நின்றனர்.

ஆணாய் பெண்ணாய் பல தடைகளை தாண்டி ஒரு நிலைக்கு வருவது எத்தனை கடினமோ அதை விட இருமடங்கு கடினம் இவர்களைப் போன்றவர்களுக்கு. சமூகத்தின் பார்வையில் தாழ்த்தப்பட்டு தூற்றப்பட்டு திறமையிருந்து ஒதுக்கப்படும் நிலையிலும் ஒரு நல்ல நிலை வருவது என்பது சாதனை தானே.

போகும் அவளைப் பார்த்தவர்களுக்கு சற்று முன் அவளைக்கண்டு இருந்த மனநிலைக்கு முற்றும் மாறுபட்ட மனநிலையில் நின்றிருந்தனர்.


....



தன் நண்பன் மாதவ்வோடு தன் வீட்டினுள் நுழைந்தவன் அங்கே குளித்து முடித்து புத்துணர்வாய் அமர்ந்திருந்த சிவாவைக் கண்டு முறைப்பாய் பார்த்து வைக்க அவனோ மாதவ்வைக் கண்டு அவனோடு பேசிக் கொண்டிருந்தான்.

"என்னடா சிவா கௌசிக் வந்து டூ டேய்ஸ்ல வரேன்னு சொன்ன இப்போ தான் வந்திருக்க" என்றதுமே சிவாவின் முகம் சுருங்க நிமிர்ந்து தன்னை முறைத்த அண்ணனைப் பார்த்தான்.

அவனும் அதே கேள்வியை கண்ணில் தேக்கி அவனைப் பார்த்திருக்க முதலில் தயங்கியவன் பின் நிமிர்ந்தபடி "அண்ணா முதல்ல என்னை மன்னிச்சிடு உன்கிட்ட சொல்லாம ஒரு வேளை செய்துட்டேன்" என்றவனை மாதவ்வோ புரியாமல் பார்க்க கௌசிக்கோ 'அதையும் நீயே சொல்' என்ற பார்வையோடு அமர்ந்திருந்தான்.

"குரு அங்கிள் டெத்ல ஆக்சிடெண்ட் இல்ல கொலைன்னு சொல்லவும் அத பத்தின தகவல சேகரிக்க அந்த ஊர் போலாம்னு யோசிச்சேன். அதுக்காக சிங்கிக்கிட்ட இது பத்தி விசாரிச்சதுல அவ எதுக்குன்னு என்ன ரொம்ப கேள்வி கேட்டு குடைஞ்சதுல என்னையறியாமலே உண்மையை உளறிட்டேண்ணா" என்றவன் அண்ணனை பாவமாய் பார்க்க அதிலே புரிந்து கொண்டான் இத்தனை நாள் தாமதமும் அவனது தோற்றத்தில் உண்டான மாற்றமும் எதனால் என்பது.

தந்தையின் இழப்பு எதிர்பாராது என்று அறிந்த போதே மனதளவிலும் உடலளவிலும் துவண்டு போனவள் இன்று தந்தையின் இறப்பு இயற்கையல்ல திட்டமிடப்பட்ட கொலையென்றாள் அவளால் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது அல்லவா!

தன்னைப் பார்த்திருந்த தம்பியை ஒரு பெருமூச்சுடன் பார்த்தபடி எழுந்து வந்தவன் அவன் தோள் தட்டி "இப்போ எப்பிடி இருக்கா" என்க "ரொம்ப உடஞ்சி போய்ட்டாண்ணா" எனும் போதே அவன் குரல் உடைந்து வெளியேற அவனை ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான் கௌசிக்.

"அண்ணா அங்கிளோட டெத் கேஷ ரீஓபன் பண்ணு அதுல இருக்குற மர்மத்த கண்டுபிடிக்கனும்" தீவிர முகபாவனையோடு கூறியவனை பார்த்த கௌசிக்கும் ஆமோதிப்பாய் தலையசைத்தவன்.

"எஸ் அத பத்தி பேசத்தான் மாதவ்வையும் அழைச்சிட்டு வந்தேன்" என்றதும் சிவா மாதவ் இருவரும் அவனையே பார்த்தனர்.

"குருப்பாவோட லாஸ்ட் இன்வெஸ்டிகேஷன் நடந்தது கேரளால அங்க கேஷ் விசயமா போனவரு ரிட்டன் வரும் போது தான் ஆக்சிடெண்ட் ஆகியிருக்கு சோ நமக்கு முதல்ல கேரளால குருப்பா இன்வெஷ்டிகேட் பண்ண கேஷ் டீடெய்ல்ஸ் வேணும் அத நான் ராம் மூலமா கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்" என்றவன் சிறு அமைதிக்குப் பின்,

"மதியோட சித்தி என்கிட்ட ஒருவிசயம் சொன்னாங்க" என்றவன் தன்னை புகைப்படம் அவர்கள் கைக்கு சென்றதிலிருந்து அதன் பின் நடந்த அனைத்தையும் கூறிட சிவா மாதவ் இருவருமே விழிவிரிய அமர்ந்திருந்தனர்.

"என்னடா சொல்ற அப்போ மதி உன்கிட்ட வர முன்னாடியே அவள யாரோ டார்கெட் பண்ணியிருக்காங்களா?" என்க.

"எஸ் மாதவ். யாரு எதுக்காகனு தெரியல பட் ஒன்னு மட்டும் புரியுது மதி எனக்கு அறிமுகமாக முன்னாடியே மதி தான் பூமா அத்தை பொண்ணுனு யாருக்கோ தெரிஞ்சியிருக்கு" என்றான் உறுதியாய்.

"யாரா இருக்கும்ணா எனக்கென்னமோ அந்தாள் மேல தான் சந்தேகமே" மோகன்ராஜ்ஜை எண்ணி பல்லைக் கடித்தான் சிவா.

"இல்லடா சிவா அவரா இருக்க வாய்ப்புகள் குறைவு தான்" என்றவனுக்கு அது யாராக இருக்கக் கூடும் என்று கண்டுபிடிப்பது அத்தனை இலகுவானதாக இல்லை.

"ஆமாண்ணா அன்னைக்கு தினேஷ் கிட்ட சொல்லி மதியோட சித்தி தம்பி அந்த தாஸ்ஸ விசாரிக்க சொல்லியிருந்தல்ல ஏதாச்சும் தகவல்கிடைச்சிதா" என்ற சிவா அவனை கேள்வியாய் பார்க்க.

"ம்ம் வாட்ச் பண்ண சொல்லியிருக்கேன் சிவா தேவைன்னா ஆள தூக்கவும் சொல்லியிருக்கேன்" என்றவன் கண்மூடி சில நொடி மௌனமாய் அமர்ந்திருக்க மற்ற இருவருமே அவனை புரியாது பார்த்தனர்.

சுருங்கிய புருவங்கள் மத்தியில் ஒற்றை விரல் கொண்டு தட்டிக் கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன் பின் அமைதியாய் விழி திறந்து எதிரிலிருந்த இருவரையும் பார்த்தான்.

"என்னாச்சு கௌசிக் ஏதாச்சும் ப்ரோப்ளமா" நண்பனின் யோசனை முகம் கண்டு கேட்க.

"ஆமா திவிகிட்ட ஏதோ ப்ரோப்ளம் இருக்குன்னு தோணுது" என்றான்.

"என்னாச்சுண்ணா திவிக்கு" தங்கையென்றதும் தானாகவே பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது.

"சி இஸ் நோட் ஓகே சிவா.. ஊர்லயிருந்து வந்ததிலிருந்து அவ என் கூட பேசவே இல்ல ஏன் வீட்ட விட்டு வெளியேவும் வர்றதில்ல" அவனையும் மீறி தங்கையை பற்றிய கவலை அவன் குரலில் வெளிப்பட்டது.

சிவாவிற்குமே தங்கை பற்றிய கவலை அதிகரித்தது. என்று ஈஸ்வரின் வருகையை கண்டார்களோ அன்றே எதிர்பார்த்ததே இனி தங்கையின் நிம்மதியான தூக்கம் தொலைந்து போய்விடுமென்று இருந்து விஷ்வா என்ற ஒருவரின் காதல் நிச்சயம் அவளை மாற்றும் என எண்ணியிருந்த கௌசிக்கின் நம்பிக்கையோ சில நாட்களாய் ஆட்டம் கண்டது போலானது தங்கை நத்தையாய் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது கண்டு.

அண்ணன் தம்பி இருவரின் வேதனை முகம் கண்ட மாதவ்வோ இருவரையும் தேற்றியவன் "ஏன் மச்சி திவ்யாவோட பாஸ்ட் பத்தி விஷ்வாகிட்ட சொன்னா என்ன" என்கவும்.

"நானும் அத தான் நினைச்சேன் மாதவ்.. சீக்கிரம் விஷ்வாகிட்ட எல்லாம் சொல்றது தான் நல்லது" என கூறிக் கொண்டான்.

அதன் பின் மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கௌசிக் மாதவ் இருவரும் கிளம்பி ஸ்டேஷன் நோக்கிச் சென்றுவிட சிவாவோ தங்கையைக் காண அவள் வீடு நோக்கிச் சென்றான்.





தொடரும்.



 

Habi

Moderator
அத்தியாயம் -39


சமையலறையில் மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்த திவ்யாவின் எண்ணம் முழுவதும் அவளவனைச் சுற்றியே வலம் வந்தது.

இன்றோடு இவ் இல்லம் வந்து ஒரு மாதகாலம் கடந்த போதிலும் கணவன் மனைவியரிடையே எந்தவித முன்னேற்றமுமின்றி ஒட்டுதலின்றியே நாட்களை கடத்தி வந்தனர்.
இரு கைதட்டினாலே ஓசைவரும் என்பது போல காதலிலும் அவ்விதிதான் செல்லுபடியாகும் போல? என்ன தான் தன் பக்கமிருந்து தன் காதலை பெண்ணவளுக்கு புரிய வைத்திட அவன் முயன்றாலுமே பலம் என்னவோ பூஜ்ஜியமே. உணர்வற்ற ஒரு பார்வையாலோ அல்லது முறைப்பான பார்வையாலோ அவனைக் கடந்து செல்வாளே ஒழிய ஒரு துளியேனும் அவள் கண்ணில் காதலை காண முடியவில்லை அவனால்.
இருந்தும் விக்ரமாதித்யன் போல விடாது தன் முயற்சியை மேற்கொண்டவன் இன்றும் விடியலில் அவள் கண் முழிக்கு முன்னே எழுந்து காலையுணவை தயார் செய்து அவள் கண்விழிக்க காத்திருந்தான்.

தூக்கம் களைந்து எழுந்தவள் தன்னருகே தலைக்கு ஒருகை கொடுத்து இமைக்காது தன்னையே பார்த்திருந்தவன் தோரணையில் விழிவிரித்து அவனைப் பார்த்தாள் பெண்.

"குட் மோர்னிங் தியா" என்றவன் அவள் நெற்றியில் மென் முத்தம் பதித்து விலகிட அவள் கண்ஙளும் மேலும் விரிந்து கொண்டன.

"ப்ரெக்பாஸ்ட் செய்துட்டேன் மதியம் லன்ஜ்க்கு ஓர்டர் பண்ணியிடுறேன். இன்னைக்கு எந்த வேலையும் நீ பண்ண வேண்டாம் இன்னைக்கு பூரா ரெஸ்ட் தான் எடுக்கனும்" என்றவன் கரங்களோ அவள் தலை கோதிட அவளோ புரியாது அவனைப் பார்த்தாள்.

அவள் புரியாப் பாவனையில் புன்னகை சிந்தியவன் அவள் நெற்றி முட்டி "இன்னைக்கு உன்னால இதெல்லாம் பண்ண முடியாதுடா ரெஸ்ட் எடு" கனிவு மீதுற கூறியவன் குரலில் எதுவோ புரிவது போலிருக்க அன்னிச்சையாய் அவள் பார்வையோ சுவரில் தொங்கிய நாட்காட்டியில் பதிந்தது.

இன்று அவளது மாதாந்திர சுழற்சி தினம். பருவம் எட்டிய நாள் முதல் நாள் அவளது மாதவிடாய் காலத்தின் முதல் தினம் தாங்கமுடியாத வலியில் சுருண்டு போவாள் அவள். காதலித்த காலம் தொட்டு அவளது அந்த நேரங்களில் அவளுக்குத் தேவையான அனைத்தையுமே யாரும் அறியா வண்ணமே பார்த்து பார்த்து கவனிப்பவன் இன்று அவனது உடைமையாய் உரிமைப்பட்டவளாய் மாறிய பின் கவனிக்காது விடுவானா? இதோ அவளின் நாட்களை இத்தனை காலம் கடந்து மறக்காது நினைவு கூர்ந்து அவளுக்குத் தேவையான அனைத்தையுமே செய்து வைத்துவிட்டான் அல்லவா!

கண்கள் விரிய அவனைப் ஆச்சர்யமாய் பார்த்தவள் பார்வை மெல்ல மெல்ல உணர்வுகளைத் தொலைத்து முகம் இறுகிப் போய்விட அவன் அணைப்பிலிருந்து விலகியவள் அவன் முகம் பாராது "ஒன்னும் தேவையில்லை நானே என் வேலையை பார்த்துக்குறேன்" காட்டமாய் கூறிட அவள் முகத்திலும் குரலிலும் தெரிந்த வேறுபாட்டை உணராத விஷ்வா "இல்ல தியாமா உன்னால அதெல்லாம் பண்ண முடியாது ரொம்ப பெய்னாயிருக்கும்" கனிவான குரலில் தன்மையாய் அவளிடம் பேசினான்.

ஹார்மோன்களின் மாற்றமோ என்னவோ அவனது பேச்சில் அவளுக்கு எரிச்சலும் கோபமும் அதனூடு இணைந்து அழுகையும் பீறிட வேகமாய் அவன் புறம் திரும்பியவள் "எதுக்கு இப்போ இந்த ட்ராமா? என் மேல ரொம்பத்தான் அக்கறையா இருக்குற போல ஏன் நடிக்குற? அதான் நான் வேணாம்னு விட்டுடுட்டு போனியே அப்படியே போக வேண்டியது தானே? எதுக்கு திரும்பவும் என் வாழ்க்கைல வந்து போலியான அன்பையும் பொய்யான காதலையும் எம் மேல திணிக்குற" கத்தலாய் கதறியவள் கண்ணில் கண்ணீர் நில்லாது வழிந்தோடியது.

அவளது வார்த்தைகளின் வீரியம் அவன் நெஞ்சை சுட்டாலும் அதைவிட அவளது அழுகையும் கண்ணீரும் அவனை மேலும் ரணப்படுத்தியது.

"திவி" பேச முயன்றவனை கரம் நீட்டித் தடுத்தவள் "ப்ளீஸ் எதுவும் பேச வேணாம் நீ எவ்வளவு தான் காதலை கொடுத்தாலும் அது எனக்கு போலியா தான் தெரியுது" என்றதும் முகம் கசங்க வேதனையோடு நின்றவனைக் கண்டு மனம் ஏதோ செய்தது.

எதற்கு இந்த வேதனை தந்தாய் இறைவா? அவனது காதலை ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது அவனால் பட்ட வேதனைகளை மறக்கவும் முடியாது தன்னை இந்நிலையில் கொண்டு நிறுத்திய விதியை சபித்தவளாய் தன்னை வேதனை சுமந்த விழிகளால் பார்த்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஸாரி.. ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் மறந்துட முடியல என்னால" அவன் முகம் பாராது முணுமுணுத்தவள் வேகமாய் குளியறை புகுந்து கொள்ள போகும் அவளையே பார்த்து நின்றான் விஷ்வா.

அதன்பின் அவன் சொல்லச் சொல்ல பிடிவாதமாய் மறுத்து மதிய உணவை தானே செய்வதாக கூறிட அதற்கு மேல் அவளை வற்புறுத்தமாட்டாது அவன் கிளம்பிச் சென்றிருக்க அவளோ தன் மனவேதனையை விட இந்த உடல் வேதனை பெரிதல்ல என எண்ணிக் கொண்டே வேலைகளை செய்தாள்.

அவன் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தவள் எண்ணத்தை களைத்தது வீட்டின் மணியோசை.

தன் நினைவிலிருந்து மீண்டவள் அடுப்பை அணைத்துவிட்டு கதவைத் திறக்க அவள் முன் நின்றிருந்தான் சிவா.

அவனை அங்கு எதிர்பாராதவள் முகம் மலர "சிவாண்ணா" என்ற சந்தோஷக் கூவலோடு அவனை அணைத்துக் கொண்டாள் பெண்.

தங்கையின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து அவளை அணைத்துக் கொண்டவன் "ஹேய் வாலு எப்பிடி இருக்க" எனக் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் "எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்" எனும் போதே முகம் கசங்க வேகமாய் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவள் "நீ உள்ளே வா வா" என அவனை கைபிடித்து அழைத்துச் செல்ல அவள் முகமாற்றத்தை நொடியில் கண்டு கொண்டாலும் எதை காட்டிக் கொள்ளாது அவளோடு இணைந்து உள்ளே நுழைந்தான்.

"எப்போண்ணா ஊர்லயிருந்து வந்த அம்மா அத்தை சித்தி நித்யா திரு அண்ணா தீக்ஷி தீரன் எல்லாரும் எப்படியிருக்காங்க" மூச்சுவிடாது அனைவரையும் பற்றி நலம் விசாரித்தாள்.

"ஹேய் வாலு மூச்சு விட்டு பேசுடி.. எல்லாருமே நல்லா இருக்காங்க. நீ எப்படியிருக்க அத சொல்லு ஆமா எங்க உன் ஆளு" என விஷ்வாவை பற்றிக் கேட்டான்.

"அவரு வெளிய போய் இருக்காரு" என்றவளை அழுத்தமாய் பார்த்தவன்.
"நான் நீ எப்படியிருக்கேன்னு கேட்டேன் தியா அதுக்கு மட்டும் பதில் சொல்லாம விட்டுட்ட" என்கவும்.

அவளோ "ஹாங் எனக்கென்ன அண்ணா நான் நல்லா தான் இருக்கேன். அத விடு என்ன சாப்பிடுற நீ" என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு.

"நான் சாப்பிட்டுட்டு தான் வந்தேன் இங்க நம்ம உடன் பிறப்பு ஒருத்தன் இருக்கானே நியாபகம் இருக்கா உனக்கு" வேண்டுமென்றே அவளைச் சீண்ட அவனை முறைத்தாள் பெண்.

"என்ன என்ன முறைப்பு அண்ணா சொல்லிச்சு அவன் வீட்டுக்கு கூட நீ போறதில்லைன்னு.. என்னடி பிரச்சனை உனக்கு" சற்றே அதட்டலோடே அவளிடம் கேட்டான் சிவா.

அண்ணணின் அதட்டலில் கண்கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் தோற்றமே எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த அவளை நெருங்கி ஆறுதலாய் தட்டிக் கொடுத்தவன் "தியா என்னமா என்ன தான் ஆச்சு சொல்லு" மென்மையாய் கேட்டதுமே இத்தனை நாள் அடைத்து வைத்த அத்தனையையும் மூச்சுவிடாது படபடவென சொல்லி முடித்தவள் கண்களோ பயத்தில் விரிந்திருக்க உடலோ நடுங்கியது.

அவள் சொன்ன அனைத்தையும் கேட்டவன் முகம் இறுகிப் போய்விட "இத ஏன் அண்ணாகிட்ட சொல்லல தியா"

"என்னால முடியலண்ணா எனக்கு பயமாயிருந்துச்சு மீண்டும் அவனால அண்ணாக்கு பிரச்சனை வந்திடுமோன்னு பயந்துட்டேன்" என்றவளை முறைக்க முடியாது அமைதியாய் அமர்ந்திருந்தவனுக்கு ஈஸ்வர் மீது கொல்லும் வெறியே கிளர்ந்தது.

"அண்ணா எனக்கு ரொம்ப பயமாயிருக்குன்னா அ..அவன்" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாது உடல் நடுங்கிப் போக அவளது பயம் உணர்ந்தவன் வேகமாய் அவளைத் தேற்றி தண்ணீர் குடிக்கக் கொடுத்தவன் "ரிலாக்ஸ் ஒன்னுமில்ல நீ பயப்படாத தியா" என்றவன் அவளை ஆறுதலாய் தேற்றி சமாதானம் செய்தான்.

சில நேர மௌன இடைவெளிக்கு பிறகு தன்னை தேற்றிக் கொண்டவள் "இரு அண்ணா உனக்கு காபி போட்டுக் கொண்டு வரேன்" என எழுந்து கொண்டவள் அவனுக்கும் தனக்கும் காபியை கலந்து வந்து அவனிடம் ஒன்றை நீட்டி தானும் எடுத்துக் கொண்டு அதை அருந்த அவளையே பார்த்திருந்த சிவாவோ "தியா ஈஸ்வர் பத்தி விஷ்வாகிட்ட சொல்லிடலாம்" என்றதும் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் அப்பட்டமான பயமே.

"இ..இல்ல வேணாம் சிவாண்ணா" என்றவளை முறைத்தவன் "எத்தனை நாளைக்குடி இப்படி பயந்து சாகப் போற.. வேணாம்டா நாம விஷ்வாகிட்ட சொல்லிடுவோம் அவனுக்கு தெரியுறது தான் நல்லது இல்லன்னா அந்த ஈஸ்வர கேஷ் விசயமா அடிக்கடி விஷ்வா மீட் பண்ணுவாரு அது அவருக்குத் தான் பிரச்சனை" என நிலமையின் தீவிரத்தை உணர்த்த முயன்றான்.

அவளுக்கோ அப்போதும் பயம் விலகாது மிரட்சியோடு அமர்ந்திருக்க "நீ எத பத்தியும் யோசிக்காத தியாமா நாங்க பார்த்துக்குறோம்" என அவளை சமாதானம் செய்துவிட்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.


......

மாலை நேரம் காலேஜ் முடித்து தன்னவன் வருகைக்காக காத்திருந்த மதியின் பார்வை பாதையிலும் கையிலிருந்த மொபைலிலும் பதிந்து மீள அவனுக்காக காத்திருந்தவள் தன்னருகே வந்து நின்ற பைக்கின் சத்ததில் பயந்து ஓரடி விலகி நிற்க தலையிலிருந்த ஹெல்மேட்டை கழற்றியபடி அவளை பார்த்து சிரித்தான் குட்டி.

"ஹேய் குட்டி நீயா? பைக்லயா நீ வந்த? பைக்கெல்லாம் ஓட்டத் தெரியுமா உனக்கு" ஆச்சர்யமாய் அடிக்கடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டவளை பார்த்து போலியாய் முறைத்தவன்.

"ஹேய் என்ன மதி நக்கலா?" என்கவும் பதறியவள்.

"இல்ல இல்ல நான் சும்மா தான் கேட்டேன் ஸாரி" முகம் சுருங்க கூறியவளைக் கண்டு தலையிலடித்துக் கொண்டான் அவன்.

"அய்யோ நானும் சும்மா தான் மதி கேட்டேன் ஸாரி ஸாரி போதுமா? இப்போ கொஞ்சம் சிரி" என்கவும் மெலிதாய் சிரித்தாள் பெண்.

"என்ன மதி எங்க இன்னும் உன் ஆள் வரலையா" என்றவனை முறைத்தவள்.

"ஆளுன்னு சொல்லாத குட்டி என் மாமான்னு சொல்லு" சிறு கோபத்துடன் முறுக்கிக் கொள்ள கைகளிரண்டையும் உயர்த்தி சரண்டர் போல சைகை செய்தவன் "ஓகே ஓகே மதி மேடமோட மாமா வரலையா இன்னும்" என சிரிப்புடன் கேட்க அவன் செய்கையில் தானும் சிரித்தவள்.

"இல்ல குட்டி. போன் பண்ணேன். அதையும் எடுத்து பேசல" என்றாள்.

"ஏதாச்சும் வேலையா இருக்கலாம் மதி நீ வேணா ஆட்டோ பிடிச்சி போய்டுறியா"

"அச்சோ என்னால முடியாது பயமா இருக்கு குட்டி" என்றவளை குறும்பாய் பார்த்தவன் "அப்போ என் கூட வா நான் ட்ராப் பண்றேன்" என்றவனைத் தயக்கமாய் பார்த்தவள் "அ..அது நான்" என தயங்கினாள் பெண்.

"என்னாச்சு மதி என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் உன் ப்ரெண்ட் தானே" சோகம் போல் அவன் கேட்கவும்
"அய்யோ குட்டி அப்படியில்ல அது மாமா வருவாங்க" என்றவள் அவனைக் காயப்படுத்தாமல் எப்படி பேச என தெரியாது தடுமாற.

அவள் முயற்சி புரிந்தவனும் மென்புன்னகையோடு "சரி சரி நீங்க உங்க மாமாக் கூடவே போங்க மதி மேடம் அதுவரை நாம வெய்ட் பண்ணலாம்" என்றவன் அவளுக்குத் துணையாய் நின்று கொண்டான்.

சில நிமிடங்கள் கடந்த நிலையில் அவர்கள் முன் வந்து நின்ற வண்டியைக் கண்டு முகம் மலர்ந்தவள் "குட்டி மாமா வந்துட்டாங்க" என வண்டியை நெருங்க வண்டியிலிருந்த சிவாவைக் கண்டு முகம் சுருங்கிட பவமாய் திரும்பி நண்பனைப் பார்த்தாள்.

"என்னாச்சு மதி உன் மாமா தானே" என்க.
இல்லையென தலையசைத்தவள் "இது சிவா அத்தான் மாமா வரல குட்டி" எனும் போதே வண்டியிலிருந்து இறங்கிய சிவாவோ "மதிமா ஸாரி ஸாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சு" ஸாரி கேட்டவன் பக்கத்திலிருந்த குட்டியை கேள்வியாய் நோக்கினான்.

அவன் பார்வையின் கேள்வியுணர்ந்து தன் சுணக்கத்தை மறைத்து இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் மதி.

குட்டியோ சிறிது நட்புடன் நேரம் உரையாடிய சிவாவோ அவனிடம் விடைபெற்று மதியை அழைத்துக் கிளம்பிச் சென்றான்.

வண்டியில் ஏறியது முதல் உர்ரென்று இருந்தவள் முகம் கண்டே அவள் மனதை புரிந்து கொண்ட சிவாவோ 'அடேய் அண்ணா உன்னையும் மிரட்டி சண்டை போட ஆள் ரெடியாடுச்சுடோய்' என தன் அண்ணனை எண்ணி சிரித்துக் கொண்டவனுக்கு இனி தன் அண்ணணின் வாழ்வில் இந்தக் குட்டிப் பெண்ணால் மகிழ்ச்சியாய் போகும் என்ற எண்ணத்தோடே வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.




தொடரும்.



 
Status
Not open for further replies.
Top