எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதலே பிரளயமாய்! - கதை திரி

Status
Not open for further replies.

NNO7

Moderator
ஹாய் டியர்ஸ்! இதோ நான் மறுபடியும் வந்துட்டேன். நிதுவைப் போலவே உங்களது ஆதரவு இந்த கதைக்கும் தேவை. கதையுடன் சேர்ந்து பயணித்து அதன் நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

காதலே பிரளயமாய்

அத்தியாயம் – 1

தேவதச்சனான விஸ்வகர்மாவே பூலோகத்திற்கு வந்து வடிவமைத்ததைப் போல இருந்தது, அந்த திருமண மண்டபத்தின் அலங்கார தோற்றம்.

அந்த திருமணமண்டபத்தின் இரண்டு நாள் வாடகையே பல லட்சங்களை முழுங்கி இருக்க, அங்கே செய்யப்பட்டிருந்த அலங்காரம், மண்டபம் வாடகை தொகையையே தாண்டும் அளவுக்கு மேலும் பல லட்சங்களைத் தாண்டி இருந்தது.

பலவித வெளிநாட்டு மலர்களான பிரீசியஸ், பட்டர்கப், ஆர்கிட்ஸ் போன்ற மலர்களின் வண்ணத்தாலும், நறுமணத்தாலும், அந்த அரங்கம் அழகாக. அந்த அழகுக்கு அழகு சேர்ப்பதைப் போல பலவித அலங்கார மின்சார ஒளிவிளக்குகள், அந்த இரவு நேரத்தில் பார்ப்பவரைக் கவர்ந்து இழுத்தபடி இருந்தன.

அந்த மண்டபத்தில் நோக்கும் இடமெல்லாம் கண்ணைப் பறிக்கும் ஒளிமயம். ஆங்காங்கே சிறுசிறு அருவிகள் போல் எழுப்பப்பட்டிருந்த நீர்வீழ்ச்சி அழகுக்கு அழகு சேர்த்தது. அதன் அருகிலையே சிங்காரப்பதுமைகள் இருந்தன.

இதுபோதாதென்று விருந்து நடக்கும் இடத்திலும், ஒவ்வொரு பலகாரத்திலும் பணத்தின் செழுமை அப்பட்டமாகத் தெரிந்தது.

மண்டபத்திற்கு இருவீட்டாரும் போட்டிப் போட்டு செலவு செய்த விதத்திலையே தெரிந்திருக்கும், மணமகனும், மணமகளும் சாதாரண வீட்டுப்பிள்ளைகள் இல்லை என்று.

ஆம் இப்போது இருக்கும் தமிழ் சினிமாவில், கதாநாயகர்களில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஷைனிங் ஸ்டார் வசீகரனுக்கும், அதே துறையைச் சேர்ந்த, பிரபல டைரக்டர், பல வெற்றிப் படங்களைக் குவித்து, சினிமா துறையில் சாதனை நிகழ்த்தும், அகிலனின் தங்கை அகரயாழினிக்கும் திருமணம்.

இன்னும் சற்று நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பமாகிவிடும் என்ற நிலையில், திரைத்துறை பிரபலங்களும், தொழில் அதிபர்களும், அரசியல்வாதிகளும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.

மீடியா துறையினர் மண்டபத்தின் வாயிலில், உள்ளே வரும் பிரபலங்களை படம்பிடித்து, செய்தி சேகரித்துக்கொண்டிருக்க, அகிலனோ, ஒற்றை ஆளாக, மண்டபத்தில் சுழன்று கொண்டிருந்தான்.

சரியாக அவன் முதல் படம் வெளிவரும் போது அவனுக்கு இருபத்திரண்டு வயது தான். அந்த நேரத்தில் தான் ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழந்திருந்தான். அதன் பிறகு மனம் தளராமல், தாயும் தந்தையுமாய் தன் பதினேழு வயது தங்கையை அரவணித்தான். இப்போது தன் ஒரே தங்கையின் திருமணத்தை தடபுடலாக நடத்திக்கொண்டு இருக்கின்றான்.

அவனின் தந்தையும் இதே துறை தான். படவிநியோகஸ்தர். திரைத்துறையில் அவரும் பல நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருந்தார். அதில் தான் அகிலன் அந்த துறையில் மேலும் முன்னேறக் காரணம். திறமை இருந்தாலும், படவாய்ப்பு வேண்டுமே.

இங்கே மணப்பெண் அறையில், தன் தோழிகள் படைசூழ புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள், விழாவின் நாயகியும், நம் கதையின் நாயகியுமான அகரயாழினி.

வட்டநிலா வடிவம் கொண்ட செந்தாமரை முகம். வில்லைப் போன்று வளைந்திருந்த புருவத்தின் கீழே மீனைப்போன்ற பளிச்சிடும் கண்கள். அதன் உள்ளே பார்ப்பவரை கட்டி இழுக்கும் கருவிழிகள். செண்பகப்பூ போன்ற அவளது மூக்கில் மிகவும் சிறியதாக வைரமூக்குத்தி ஒளிர்ந்து கொண்டிருந்தது. கொவ்வைப் பழம் போன்ற செக்க சிவந்த அதரங்கள். அவள் செவிகளில் ஜிமிக்கிக் கம்பல் அலங்கரிக்க, அவள் கழுத்து, கை, கால் என அவள் அங்கமெல்லாம் வைரங்கள் மின்னியது.

இவ்வாறு அலங்கார பூஷணியாக விளங்கிய அகரயாழினி, தன்னையே ஒரு தரம் கண்ணாடியில் பார்த்துக் கொண்டவள், தன் தோழிகளின் சீண்டலில் முகம் சிவந்து போனாள்.

அந்த நேரத்தில் அவளின் நினைவுகளில் வசீகரன் முழுவதுமாக அவளை ஆக்கிரமித்து இருந்தான். ஆம் இது காதல் திருமணம் தான்.

இரண்டு வருடமாக இருவருக்கும் பழக்கம். அகரயாழினி சொந்தமாக பொட்டிக் வைத்திருக்கின்றாள். பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைவரும் அவளது வாடிக்கையாளர்கள்.

தன் தங்கை தனக்கென்று தனியாக ஒரு அடையாளத்தை உருவாக்கி இருப்பது, அகிலனுக்கு மிகவும் பெருமை. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வசீகரனும், அகிலனும் ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றினர். அப்போது வசீகரன் அடிக்கடி அகிலனைப் பார்க்க, அவன் வீட்டிற்கு வர, யாழினிக்கும், அவனுக்கும் நல்ல நட்பு மலர்ந்தது.

அதுவே, பின்னாளில் காதலாக மாறியது. ஆனால் இவர்கள் காதல் விஷயம் எதுவும் மீடியாவில் கசிந்தது இல்லை.

வசீகரன் அவளிடம் முதல் முதலாக தன் காதலைச் சொன்னதும், அவள் போட்ட முதல் நிபந்தனையே இது தான்.

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு வசீகரன். ஆனா எனக்கு என் அண்ணன் தான் எல்லாமே!. என் அண்ணன் பெயருக்கு கலங்கம் வருகிற மாதிரி நான் எதுவும் பண்ணமாட்டேன்.” என்று உறுதியாக கூறினாள்.

முதலில் அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தவன், அவள் பின் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு குழம்பிப்போய், அவளைப் பார்த்து, “என்ன என்ன சொல்ல வர்ற?. அப்ப என்னை பிடிச்சிருந்தும், என்னை லவ் பண்ணமாட்டியா?.” என்று முகத்தில் தோன்றிய கலவரத்துடன் அவன் கேட்க.

அதற்கு மென்மையாக சிரித்தவள், “நான் அப்படி சொல்லல வசீகரன். காதல் பண்றது எதுக்கு, கல்யாணம் பண்றதுக்குத்தானே. அதனால் திருமணம் வரைக்கும் நாம போனில் மட்டும் தான் பேசிக்கணும். நேரில் பார்க்கவோ, எங்கும் சுத்தவோ கூடாது.” என்று நிபந்தனை வைக்க.

‘இவளைப் பேசி கரைக்க வைக்க முடியாது.’ என்று உணர்ந்த வசீகரன், அவள் மேல் கொண்ட அளவுக்கு அதிகமான காதலால், அவள் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டான்.

இது நடந்து சரியாக ஆறுமாதங்களில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து, இன்று திருமணத்தில் வந்து நிற்கின்றது.

அகரயாழினி, மிகவும் மென்மையானவள், அதிர்ந்து கூட பேசமாட்டாள். ஆனால் தனியாக தொழிலை எடுத்து நடத்துவதால், அவளிடம் ஒரு வித மிடுக்கு இருக்கும். அவளுக்கு அவள் தமையன் அகிலன் ஒருவனே உலகம்.

தன் பெற்றோர் இழப்பில் மிகவும் நொடிந்து போய் இருந்தவளை, அரும்பாடுபட்டு சகஜ நிலைக்குக் கொண்டு வந்தான் அகிலன். இன்று அவள் வசீகரனை கைக்காட்ட, அவனைப்பற்றி பெரியதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்று இருந்தாலும், தன் தங்கையின் மகிழ்ச்சிக்காக இதற்கு சம்மதித்தவன், வசீகரனிடம், “என் தங்கைக்காக மட்டும் தான் வசீ. உன் பழைய வேலையை திரும்ப ஆரம்பிக்க நினைக்காதே!.” என்று மிரட்டவும் செய்திருந்தான்.

வசீகரனோ சிரித்துக்கொண்டே, “யாழினியைப் பார்த்ததில் இருந்து, நான் முழுவதும் மாறிவிட்டேன் அகிலன். நீயும் என்னைப் பத்தி விசாரிச்சிருப்பியே!. அதுக்குப் பிறகு தானே திருமணதிற்கு சம்மதம் சொல்லி இருக்க.” என்று எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் அவன் பேச.

அகிலனோ, அவன் தோளில் கைப்போட்ட படி, “இது என் கடமை வசீ. நானும் பெருசா ஒன்னும் நல்லவன் கிடையாது. ஆனா என் தங்கை விசயம்னு வரும் போது, அவளுக்கு வர்றவன் ரொம்ப நல்லவனா இருக்கணும். நீ தவறும் பட்சத்தில், உன்னை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” என்று அதிராமல், வசீகரனை கலங்கடித்துவிட்டு சென்றான்.

தங்கை நிபந்தனைகளை வைக்க, அண்ணனோ மிரட்டல் விடுக்க என வசீகரனின் நிலைமை தான் பரிதாபமாக இருந்தது. ஆனால் அவனோ அவளைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்தான். அந்த அளவுக்கு அவனிடம் யாழினி பைத்தியம் தலைவிரித்து ஆடியது. முதன் முதலாக அவன் யாழினியைப் பார்க்கும் போதே, அவள் அழகில் முழுவதுமாக தன்னைத் தொலைத்தவன், அந்த கணமே, ‘இவள் தான் தன் வாழ்க்கை துணை.’ என்று மனதில் பதியம் போட ஆரம்பித்திருந்தான்.

ஆனால் யாழினி போட்ட நிபந்தனை அவனுக்கு அதிகமாக தோன்றியது. ‘இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா!.’ என்று நினைத்துக் கொண்டான்.

இப்போது நடப்பில், வசீகரனும், அகரயாழினியும், வரவேற்பில் நிற்க, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அவர்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, தங்களது வாழ்த்துக்களைக் கூறி சென்றனர்.

வரவேற்பு முடிந்ததும் மணமக்கள் இருவரும் உணவு அருந்த சென்றனர், அப்போது யாழினி முகம் முழுவதும் பூரிப்பாக, “நாம நினைச்சது எல்லாம் நடக்கப்போகுது வசீ.” என்றாள் ஆர்பாட்டமாக.

“ஆமாம் ஆமாம்...” என்று அவனும் ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

அதைக் கண்ட யாழினி, “ஏன் வசீ ஒரு மாதிரியா இருக்கீங்க?. என்ன ஆச்சி?.” என்றாள் அக்கறையான குரலில்.

“ஒன்னும் இல்லை யாழினி. இது வோர்க் டென்ஷன். ஒரு மாசமா ஒருத்தன் என்னை வச்சி செய்றான்.” என்றவன், அவன் துக்கத்திற்கு காரணமானவனை நினைக்கும் போதே, அவனது முகம் சிறுத்துப் போனது.

உடனே வசீகரனின் கைகளைப் பற்றிக் கொண்டவள், “நீங்க எதைப்பத்தியும் கவலைப் படாதீங்க வசீ. நம்ம திருமணத்தில் மட்டும் கவனம் செலுத்துங்க. உங்க கவலைக்குக் காரணமானவனை, அண்ணன் கிட்ட சொல்லுங்க, அவர் பார்த்துப்பார்.” என்றாள் ஆறுதலாக.

அவள் ஆறுதலில் அவன் முகம் லேசாக தெளிவது போல் இருந்தது. அவளைப் பார்த்து புன்னகை செய்தவன், “கண்டிப்பா யாழினி.” என்றான்.

சூரியன் அஸ்தமிக்க, நல்ல நேரத்தில் திருமண சடங்கு ஆரம்பமானது. வசீகரனோ, சிரத்தை எடுத்து, ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது முகத்தில் பொலிவு இல்லை.

வெகுநாள் காதலித்து, யாழினியை கரம் பிடிக்கப் போகின்றோம் என்ற மகிழ்வு சிறிதும் அவனிடம் இல்லை. தலைவிரி கோலமாய் கவலைகள் கிடந்தாலும், காதல் திருமணம் என்று வந்ததும், யாருக்கு என்றாலும் முகத்தில் ஒரு வித பூரிப்பு தோன்றும். அது எதுவும் அவனிடம் இல்லை.

அவன் பதற்றத்திற்குக் காரணம், மேடைக்கு வரும் முன் அவனுக்கு வந்த அலைபேசி அழைப்பே காரணம். அதைப் பற்றி அவன் யாரிடமும், ஏன் தன் குடும்பத்தினரிடம் கூட வாயைத் திறக்கவில்லை.

எந்த நேரத்திலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற மனநிலையில் தான் இருந்தான். அவனது இன்னொரு மனமோ, ‘அகிலன் உன்னுடன் இருக்கின்றான். எதுவென்றாலும் பார்த்துக்கொள்ளலாம்.’ என்று ஆறுதல் அளித்தது. இருந்தும் அவனின் முகம் தெளிந்தபாடில்லை.

நவரத்தின பொன்மணிகளை சூட்டி, ஆயிரம் கோடி சூரியன் உதித்தாற் போன்ற பேரொளியுடன் மணமேடைக்கு நடந்து வந்தாள் அகரயாழினி.

அவள் முகத்தில் ஆயிரம் கனவுகள். தன் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகின்றோம் என்று பூரிப்போடு, வந்தவள் வசீகரனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

ப்ரோகிதர் மங்கள நாணில் கோர்க்கப்பட்ட பொன் தாலியை வசீகரனிடம் நீட்ட. அதைத் தன் கைகளில் வாங்கிக்கொண்டவன், அகரயாழினியின் கழுத்தில் மூன்று முடிச்சியிட சென்றான்.

வந்திருந்த அனைவரும் அர்சதைத் தூவ, குனிந்து தாலியை நமஸ்கரித்தபடி அதை வாங்கிக்கொண்டாள் அகரயாழினி. வசீகரனும் மூன்று முடிச்சிட்டு நிமிர, ப்ரோகிதர், இருவரையும் மூன்று முறை அக்னியை வளம் வரச்சொன்னார்.

அவர்கள் வலம் வரும்போதே, அதிவேகமாக மண்டபத்தில் நுழைந்தது வெளிநாட்டு மகிழுந்து ஒன்று.

அதனுள் இருந்து நடுநயமாக இறங்கினான் வாலிபன் ஒருவன். அவன் கண்களில் தீப்பொறி பறந்தது.

அவன் நேராக உள்ளே வந்து, கண் இமைக்கும் நேரத்தில் மணமேடையில் குத்தித்து ஏறினான். அனைவரும் அதிர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருக்க, கண் இமைக்கும் நேரத்தில், வசீகரன் கையைப் பற்றி இருந்த யாழினியின் கையை வெடுக்கென்று விடுவித்து, அவளின் வெண்டை விரலைப் பற்றியவன், “எனக்கு குடுக்க வேண்டியதை கொடுத்துட்டு, இவளைக் கூட்டிட்டுப் போ....” என்று வசீகரனிடம் கூறி பெண்ணவளின் இடையைப் பற்றினான், யாருக்கும் அடங்காத அதிகாரனான ஆடவன்.
 
Last edited:

NNO7

Moderator
அத்தியாயம் – 2

மூன்று சுற்று இன்னும் சுற்றி முடிக்காத நிலையில், சுற்றி அனைவரும் இருக்க, அவ்வளவு தைரியத்துடன் மணமேடையில் அவன் ஏறும் வரை அனைவரும் அந்த ஆடவனையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவனைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. ஏனென்றால் அவனது உயரம் அப்படி. இவர்கள் எல்லாம் சினிமாத்துறை என்றால், அந்த துறையையே கட்டி ஆள்பவன் அவன்.

அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட அகிலன், சரியாக அவன் முன்பு வந்து நிற்கும் போது யாழியின் இடையைப் பற்றி இருந்தான் அந்த ஆடவன்.

யாழினியும் அதே நிலையில் தான் இருந்தவள், அவன் தன் இடையைப் பற்றியதும் அவனிடம் இருந்து விடுபட்டுக் கொள்ளவேண்டி, “என்னை விடு....” என்று அவன் வளைவுக்குள் இருந்து தப்பிக்க போராடினாள்.

அவளால் போராட மட்டுமே முடிந்தது. கோபத்துடன் அவன் முன்னே வந்து நின்ற அகிலனோ, “என் தங்கச்சியை விட்டுடுங்க சார். உங்களுக்கும், வசீகரனுக்கும் இருக்குற பிரச்சனையில் என் தங்கச்சியை இழுக்காதீங்க.” என்று அவன் வந்த வேகத்திற்கு மாறாக கெஞ்சல் குரலில் யாசித்தான்.

இதிலையே தெரிந்திருக்கும் வந்திருக்கும் ஆடவனின் உயரம் என்னவென்று. தமிழகம் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் புகுந்து வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் அகிலனால் கூட, வரம்பு மீறி நடந்துகொண்டிருக்கும் ஆடவனை எதுவும் கண்டித்து பேசிவிட முடியவில்லை.

ஆனால் அகிலனின் கோபம், இவ்வளவு நடந்தும் பேசாமல் சிலை போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன் மீது திரும்பியது, “வசீ!” என்றான் பல்லைக் கடித்தபடி.

அவனோ வந்திருந்த ஆடவனைப் பார்த்து பயத்தில் வெளிறிப்போய் நின்றிருந்தானே! அவன் எப்படி பேசுவான்.

அகிலனே திரும்பவும், “சார் கல்யாண சடங்குகள் எல்லாம் தடை படுறது நல்லதுக்கு இல்லை சார். நானே உங்களுக்கு வேண்டியதை தந்துடுறேன் சார். இப்போ பிரச்சனை பண்ணாதீங்க.” என்று சொன்னவன் கண்கள் ஆடவன் பற்றி இருந்த தன் தங்கையை நோக்கியது.

பெண்ணவளோ அவஸ்தையில் நெளிந்து கொண்டிருந்தாள். மேடைக்கு வரும் போது இருந்த பொலிவு அவள் முகத்தில் சுத்தமாக இல்லை. மாறாக காரிகையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அகரயாழினி, என்ன தான் தனியாக தொழில் செய்து மிடுக்குடன் வலம் வந்தாலும், அவளுக்கு அப்போது ஆடவனை எதிர்த்து பேசும் துணிவு சிறிதும் இருக்கவில்லை.

அதற்கு முன்பு கூட சிறிது தைரியமாக, ‘தன் அண்ணன் இருக்கின்றான்.’ என்று நினைத்தவள், அவனும் ஆடவனிடம் பணிந்து பேசுவதைப் பார்த்து, விதிர்விதிர்த்துப் போய் நின்றுவிட்டாள்.

தங்கையின் நிலை அகிலனுக்கு, ஆடவனின் மீது கண்மண் தெரியாத கோபத்தை உண்டுபண்ணியது. கோபப்பட்டால் காரியமே கேட்டுவிடும் என்ற நினைப்பில் தான் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு, தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அந்த ஆடவனைப் பற்றி முழுவதுமாக அறிந்திருந்ததே அதற்குக் காரணம்.

பூஜை வேளையில் கரடியாக நுழைந்த ஆடவனோ, தன் கூர்மை மிகுந்த கண்களால் அகிலனை நோக்கிவிட்டு வசீகரனைப் பார்த்தவன், ‘நீயே என்னவென்று சொல்லிக்கொள்.’ என்பது போல் அலட்சியமாக பார்த்துவிட்டு, தன் நடுவிரலையும், கட்டைவிரலையும் சேர்த்து சுடக்கிட்டு தன் பாதுகாவலர்களை அழைத்தான்.

ஆஜானுபாகுவான தோற்றத்தில் துப்பாக்கியுடன் உள்ளே நூறுக்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். அவர்கள் அகிலனைத் தடுக்க, கதற கதற அகரயாழினியை இழுத்துக்கொண்டு சென்றான் அந்த ஆடவன்.

மண்டபமே பேரமைதியில் இருக்க, யாழினியின் கூச்சல் அரங்கத்தை நிறைத்து, காணும் யாவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அகிலனின் உதடுகள் துடித்தன. புருவங்கள் மேலேறின. கண்களில் இருந்து மின்னல் கிளம்பி, அந்த ஆடவனைத் தாக்கின.

“டேய் சக்கரவர்த்தி! உன் அழிவு என் கையில் தான்டா. உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்.” என்ற சொற்கள் சீறிக்கொண்டு பாயும் அம்புகளைப் போல, அவன் வாயில் இருந்து புறப்பட்டன. அவனும் எவ்வளவு நேரம் தான், தன் கோபத்தைக் கட்டுப்படுத்துவான்.

அந்த சொற்கள் என்னும் அம்புகள் சரியாக ஆடவனை நோக்கிச் சென்று அவனை அந்த இடத்திலையே நிலை பெற செய்தது. ஆனால் அவனோ அகிலனை திரும்பி பார்க்கவில்லை.

அவன் ஒரு கை யாழினியை பிடித்திருக்க, இன்னொரு கையால் தன் காற்சட்டைப் பையில் இருந்த தன் அலைபேசியை எடுத்தவன், தன் நீண்ட விரல்களால் அதில் எதுவோ செய்துவிட்டு, எதுவும் நடவாததைப் போல, ஒரு வித கேலி சிரிப்புடன் திரும்பவும் தன் நடையைத் தொடர்ந்தான் ஆடவன்.

அவன் சென்றதும் அவனுடன் சேர்ந்த ஆட்களும் அங்கிருந்து சென்றனர். பெரும் புயல் ஒன்று, அந்த மண்டபத்தையே தாக்கிவிட்டு சென்றதைப் போல் இருந்தது.

அகிலன் அந்த இடத்திலையே நொடிந்து போய் அமர்ந்துவிட்டான். பின் தன் தங்கையைக் காப்பாற்றும் நோக்கோடு, அங்கே தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த ஒரு பெரியவரிடம் சென்று நின்றவன், “ஏதாவது பண்ணுங்க சார். அவன் கிட்ட இருந்து, என்... என் தங்கையை காப்பாத்துங்க.” என்று கிட்டத்தட்ட கெஞ்சினான். அவனது நிலை பார்க்க பாவமாக இருந்தாலும் அவர்களால் என்ன செய்ய முடியும்?.

“இங்கப்பாரு அகிலன். எங்களால ஒன்னும் செய்ய முடியாது. அவங்க அதிகார பலத்தில் இருக்குறவங்க. தயாரிப்பாளர் சங்கமே அந்தப்பையனால நொடிஞ்சி போய் இருக்கு. சிஎம் பையன் வேற.” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

அவர் அருகே இருந்த டைரக்டர் சங்கத் தலைவரும், அகிலனின் குருவுமான, ஒரு வயதான மனிதர், அகிலனின் தோளில் கையை வைத்து, “நிலைமை நம்ம கையை மீறி போயிடுச்சு. இந்த நேரத்தில் யாழினியை கூட்டிட்டு வர எந்த வழி இருக்குன்னு மட்டும் பாரு. சக்கரவர்த்தி ஏன் இப்படி செய்தான்?.” என்று கேட்டுக் கொண்டிருந்தவரின் கண்கள், அங்கு ஓரத்தில் தன் தாயுடன் பேசிக் கொண்டிருந்த வசீகரன் மீது பதிந்தது.

பின் அகிலனைப் பார்த்தவர், “இந்த விசயத்தில் அமைச்சர்கள் கூட நமக்கு உதவி செய்யமாட்டாங்க அகிலன்.” என்றார்.

“சார் சிஎம்கிட்ட பேசி பார்க்கலாம் இல்லையா?.” என்று அவன் நலுங்கிய குரலில் கேட்க.

எப்போதும் கம்பிரமாகவே பார்த்துப் பழக்கபட்ட அகிலனின் நிலை அவரை வருத்தம் கொள்ள செய்தது. “அதெல்லாம் நடக்குற காரியம் இல்லை அகிலன். சிஎம் என்ன வேலை செஞ்சாரோ, அதையே தான் இப்ப அவர் பையன் செய்யுறான். அவங்கக்கிட்ட சவகாசம் வச்சிக்கிட்டா புலிவாலை பிடிச்ச கதை தான். நீ ஆகவேண்டியதைப் பாரு.” என்று சொல்லிவிட்டு சென்றார்.

நேராக வசீகரன் நீற்கும் இடத்திற்கு சென்று அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துக்குத்தினான் அகிலன். உடனே அவன் வாயில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.

வசீகரனோ, வலியால் துடிக்க பதறிக்கொண்டு அவனைத் தாங்கிய அவனது தாயார், “ஏய் என் பையனை ஏன்டா அடிக்குற?.” என்று மரியாதையைக் கைவிட்டவராக கத்தினார்.

திருமண பேச்சு வார்த்தை நடக்கும் போது, “அப்படி தம்பி, இப்படி தம்பி.” என்று ஆயிரம் தடவை குலைந்தவரின் பேச்சு இப்போது வேறு மாதிரி வந்தது.

ஆனால் அதை சிறிதும் கண்டுகொள்ளாத அகிலன், வசீகரனின் சட்டையைப் பிடித்து, “நீ தாலி கட்டின பெண்ணை ஒருத்தான் இழுத்துட்டுப் போறான் உன்னால் எப்படிடா அமைதியா நின்னு பார்க்க முடியுது?.” என்று கத்தினான்.

வாயில் இருந்து ரத்தம் வடிய அகிலனைப் பார்த்தவன், “அவனை மீறி என்னால் என்ன செய்யமுடியும்?. ஏன் நீயே அவன்கிட்ட அடங்கிப் போய் தானே நின்ன.” என்றான் எகத்தாளமாய்.

அவன் சொற்கள் தந்த கோபத்தில் திரும்பவும் அவன் முகத்தில் குத்துவிட்டான்.

வலி தாங்க முடியாத வசீகரன் அவனிடம் சரணடைந்தவனாய், “ஒன்னும் பிரச்சனை இல்லை, அவன் கேட்குற பணத்தை கொடுத்துட்டா அவன் யாழினியை விட்டுடுவான்.” அவ்வளவு தான் விஷயம் என்பது போல் பேசிய வசீகரனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தான் அகிலன்.

தன் சினத்தை கட்டுப்படுத்தி, “அவன் செய்கையால், எங்க மானமே போயிடுச்சு. அது உனக்கு பெருசா தெரியலையா?.” என்று அழுத்தமாக கேட்டான்.

“இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அகிலன். நாம ரெண்டு பெரும் சேர்ந்து அடுத்து எடுக்கப்போற படத்துக்கு நல்ல பப்லிசிட்டி கிடைக்கும்.” என்றவன் பேச்சை அகிலன் ரசிக்கவில்லை.

‘தங்கை ஆசைப்பட்டாள் என்ற ஓரே காரணத்திற்காக, தவறு செய்துவிட்டோமோ!.’ என்று அப்போது தான் அகிலனுக்கு உரைத்தது.

அகிலனோ தன் நிலை குலைந்த நெஞ்சை நிலைப்படுத்திவிட்டு, “அவன் உள்ளே வந்தது, என் தங்கையை இழுத்துச் சென்றது எல்லாத்தையும் வெளியே இருந்த மீடியா கவர் செய்திருக்கும். அவள் உன்னை போல் சாக்கடை இல்லை வசீ. அவள் துளசியைப் போல் புனிதமானவள்.” என்று அவன் சொல்லும் போதே, இடையிட்ட வசீகரனின் தாயார், “ஏய்! என் பையனை சாக்கடைன்னு சொல்றியா.” என்று கத்தினார்.

அதில் நீயும் சேர்த்தி தான் என்பது போல் அவரை ஒரு பார்வை பார்த்தவன், மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து வெளியே விட்டு, “சரி அவன் கேட்கும் பணத்தைக் கொடு.” என்றான். இப்போது அவன் எண்ணமெல்லாம் தன் தங்கையின் நலம் மட்டுமே. அவளை அந்த கொடியவன் பிடியில் இருந்து அழைத்து வரவேண்டும்.

அவன் கேள்வியில் முழித்தவனாக, “என்கிட்ட ஏது அவ்வளவு பணம்?. எல்லாம் நான் எடுத்த ரத்த ஜெயம் படத்திலையே போயிடுச்சு.” என்றான் அவன்.

அவனது பொறுப்பற்ற பேச்சைக் கேட்டு பல்லைக் கடித்தவன், “எவ்வளவு பணம்னு சொல்லித் தொலை.” என்றான் அகிலன்.

“வட்டியோட சேர்த்து 510 கோடி.” என்று ஆசால்ட்டாக கூறி அகிலனுக்கு அதிர்ச்சி அளித்தான்.

இங்கே வெளியே இருந்த மீடியாக்கள், அந்த ஆடவன் உள்ளே நுழைந்ததையும், பின் அகரயாழினியை இழுத்துச் சென்றதையும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஆடவனைப் பற்றி தவறாக எந்த செய்தியும் வரவில்லை.

*************************

சிறிது நேரத்திற்கு முன்பு, வசீகரன் கட்டிய தாலி பெண்ணவளின் கழுத்தில் தொங்கிக் கொண்டு, அவளின் நிலையைப் பார்த்து கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருக்க, பெண்ணவளோ, அந்த பூட்டிய அறையின் ஓரத்தில் ஒடுங்கிப் போய், தன் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

அப்போது அந்த அறை படாரென்று திறக்கப்பட, உள்ளே காலடி சத்தம் கேட்டது. அந்த சத்தமே அச்சத்தைத் தர, தரையில் இருந்து தன் கண்களை எடுக்காமல் அப்படியே பயத்தில் அமர்ந்திருந்தாள் அகரயாழினி.

அந்த காலடி சத்தம் அவளை நோக்கி தான் வந்து, அவள் முன்னால் வந்து நின்றது. தன் முன் நிற்கும், பெர்லுட்டி ப்ரெஞ்ச் சூ அணிந்திருந்த கால்களைப் பார்த்தவள், மெதுவாக தன் தலையை உயர்த்தினாள்.

கண்களில் கூர்மையுடன் தன்னை நோக்கிய ஆடவனைப் பார்த்தவள், அத்தனை பேர் முன்பும், தன்னை மண்டபத்தில் இருந்து கடத்தி வந்தவன் தான் இவன் என்பதை உணர்ந்து, “ப்ளீஸ் சார் என்னை விட்டுடுங்க.” என்றாள் தன் இருகைகளையும் கூப்பியபடி.

அந்த அடங்காதவனோ, தன் ஒரு பக்க இதழை மட்டும் வளைத்து சிரித்தவன், அவள் கைகளை எட்டுப்பிடித்து, “உன் கணவன் வரும்வரை என்கூட இரு.” என்று சொல்லி அவள் தலையில் இடியை இறக்கினான்.



ஹாய் டியர்ஸ்!. கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அடுத்த அத்தியாயத்தில் ஹீரோவின் முழு பெயரையும், அவனைப் பற்றியும் பார்க்கலாம்.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 3

ஆடவனின் பேச்சு பெண்ணவள் மனதில் கிலியை உண்டாக்க, “என்ன பேசுருறீங்க?. நான் இன்னொருத்தரோட மனைவி.” என்று மிகவும் கடினப்பட்டு தான் பேச வந்த வார்த்தைகளை பேசினாள்.

உடனே அவனுக்கு மணமேடையில் வசீகரன் நின்றிருந்த தோரணை நியாபகத்திற்கு வர கேலியாக சிரித்தவன், “இருந்துட்டுப்போ... எனக்கு அதெல்லாம் தேவை இல்லாத ஆணி.” என்று சொல்லிக் கொண்டே அவள் கையை இப்போது வெடுக்கென்று இழுத்தவன், அவளை அப்படியே அங்கிருந்த கட்டிலில் தள்ளினான்.

அவன் செயலில் விதிர்விதிர்த்துப் போன யாழினி, கட்டிலில் இருந்து படாரென்று எழுந்தாள். அவள் முன்னே வந்து நின்றவன், தன்னை ஒரு காமுகனாக நினைத்து பயந்து போய் இறைஞ்சல் பார்வையுடன் பார்க்கும் பெண்ணைப் பார்த்து கோபம் வந்தது.

தன் சுட்டெரிக்கும் பார்வையினால் அவளை நோக்கியவன், “நீ வெறும் பணயக்கைதி மட்டும் தான். என் ரேஞ்சிக்கு உன்கிட்ட ஒன்னுமே இல்ல. ஓவரா சீன் போடாம இரு.” என்றவன் வார்த்தைகளில் அப்பட்டமாக திமிர் தோரணை தெரிந்தது.

அவன் பேச்சு பயத்தை தந்தாலும், அவன் சொன்ன வார்த்தைகளில் அவளுக்கு சிறிது ஆசுவாசம் பிறந்தது, ‘சீக்கிரம் வா அண்ணா.’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவள், தப்பித்தவறி கூட வசீகரனிடம் அவள் மனது செல்லவில்லை.

எப்படி அறைக்குள் வந்தானோ, அதே தோரணையில், கதவை மூடிவிட்டு வெளியே சென்றான்.

“பிரபல சக்ரா பைனான்ஸ் நிறுவனத்தின் எம்டியும், பான் இந்தியா பட தயாரிப்பாளருமான ஒளியோன் சக்கரவர்த்தி, தன் நீண்ட நாள் காதலியும் பிரபல டைரக்டர் அகிலனின் தங்கையுமான அகரயாழினியை, கட்டாயத் திருமணத்தில் இருந்து காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றார். இப்போது அதைத் தான் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.” என்ற செய்தி ஒலியாக பின் ஓட, மண்டபத்தில் இருந்து யாழினியை இழுத்து வரும் காட்சி தான் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்த, கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும் பெண்மணி ஒருவர், “இதைப் பார்த்தா காப்பாத்தி கூட்டிட்டுப் போற மாதிரியா இருக்கு?. அந்த பொண்ண கதற கதற இழுத்துட்டுப் போறான்.” என்று நோடித்தவர், “ம்க்கும்...” என்று சத்தத்துடன் வேறு சேனலை மாற்றினார்.

அந்த சேனலில், நாலு பேர் அமர்ந்து தீவிரமாக இதைப்பற்றி தான் ஆராய்ந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர், “அந்தப்பெண் விருப்பப்பட்டு போற மாதிரி தெரியல. அவ்வளவு பெரிய டைரக்டர் தங்கைக்கே இந்த கதின்னா, சாதாரண பெண்கள் நிலையை யோசிச்சுப் பாருங்க!. அதனால் தான் சொல்றேன், தன் மகன் செய்த தவறுக்கு பொறுப்பேற்று சிஎம் பதவி விலகணும்.” என்று எதிர்க்கட்சிக்காரர் பேச.

அதை மறுத்துப் பேசிய இன்னொருவர், “யோவ்... அந்தப்பொண்ணு விருப்பபட்டு தான் தம்பி கூட போது.” என்று பேச, திரும்ப இன்னொருவர் “எப்படி அந்த நடிகன் கட்டுன தாலியோடவா?.” என மறுத்துப் பேச, அந்த விவாத நிகழ்ச்சி ரணகளமாய் மாறியது.

இதைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு தொலைக்காட்சியை ஆப் செய்தவர், அப்போது தான் மேலே இருந்து கீழே வரும் தன் மகனைப் பார்த்தார்.

‘இவன் இங்க தான் இருக்கானா?. வரட்டும்.” என்ற நினைப்போடு அமர்ந்திருந்தார்.

அவனோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல், சாவகாசமாக அவர் அருகில் வந்து அமர்ந்தவன், அங்கு மேஜையில் இருந்த ஆப்பிளை எடுத்து கடிக்க ஆரம்பித்தபடி, தன் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவன் அருகே வந்து அமர்ந்ததும், தன்னிடம் ஏதேனும் பேசுவான் என்ற நினைப்பில், அந்த பெண்மணி அவனையே பார்த்திருக்க, அவனோ, தன் அருகில் அமர்ந்திருந்தவரை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

அதில் கோபம் வரப்பெற்றவர், “என்கிட்ட உனக்கு ஏதாவது சொல்லணுமா?.” என்றார்.

அப்போது தான் அலைபேசியில் இருந்து தன் தலையை நிமிர்த்தி தன் தாய் கோகிலாவைப் பார்த்தவன், “என்கிட்டயா பேசுனீங்க?.”என்றான் அலட்சியமான குரலில்.

“இங்க உன்னையும் என்னையும் தவிர வேற யார் இருக்கா ஒளி?.” என்றார் அவனை நேர்பார்வை பார்த்துக் கொண்டே.

தன் கழுத்தைத் தடவியபடி அவரைப் பார்த்து, “மீடியாவில் வந்ததைப் பத்தி தான் கேட்குறீங்கன்னு நினைக்குறேன் அம்மா.” என்று சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வந்தான்.

“ஆமா அதைப்பத்தி தான் கேட்குறேன். எப்படி இப்படி ஒரு காரியத்தைப் பண்ண?.” என்றவர் குரலில் ஆத்திரம் இருந்தது.

“இது என்னோட வேலைன்னு உங்களுக்குத் தெரியாதா?. இதில் நான் தலையிடமாட்டேன்னு எனக்கு வாக்கு கொடுத்து இருக்கீங்க. ஏன் எதுக்குன்னு இதுக்கு என்கிட்ட கேள்வி கேட்குற வேலை வேண்டாம்.” என்றான் அழுத்தமாக பார்த்துக் கொண்டே.

தாய் மீது பாசமாக இருப்பவன், அவருக்கு ஒன்று என்றால், எதுவும் செய்ய தயாராக இருப்பவன். ஆனால், தன் வேலை விஷயத்தில் யாரையும் மூக்கை நுழைக்க அனுமதிக்க மாட்டான். அதுயாராக இருந்தாலும் சரி.

அப்போது உள்ளே நுழைந்த அவனின் தந்தை தயாளன் சக்கரவர்த்தி, தன் மகனையும் அவன் அருகில் அமர்ந்திருக்கும் தன் மனைவியையும் பார்த்தவர், “உன் மகன் என்ன பண்ணிவச்சிருக்கான்?. இதுனால எனக்கும் என் கட்சிக்கும் எவ்வளவு பெரிய பாதிப்புன்னு தெரியுமா?.” என்று கத்தினார்.

அதைக் கேட்டு சிறிதும் அலட்டிக்கொள்ளதவனாக, தன் காதில் ப்ளூடூத்தை மாட்டிவிட்டு, தன் தந்தையை கிஞ்சித்துக்கும் மதிக்காமல் அங்கிருந்து சென்றான்.

“பாரு கோகிலா, எப்படி போறான்னு. என்னை கொஞ்சமும் மதிக்கிறானா?.” என்று அவன் மீது உள்ள ஆற்றாமையில் தன் மனைவியிடம் பேசினார்.

அவரோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், “உங்க மகன் மீது தப்பே இல்லாத மாதிரி தானே செய்தியில் வருது!. என்னமோ போங்க நீங்களும் அவனும் சேர்ந்து பாவத்துக்கு மேல பாவம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.” என்று கோகிலா சொல்ல.

“இப்ப என்ன பாவம் பண்ணிட்டோம். கடன் வாங்கிட்டு, அவனாட்டுக்கு மொல்லைய போட்டுட்டுப் போவான். நாம கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கணுமா?. எல்லா பைனான்ஸ் நிறுவனத்திலும் இது தான் நடக்குது.” என்று காய்ந்தவர், தன் மனைவியிடம் கூட மகனை விட்டுக்கொடுத்து பேசவில்லை.

“அதுக்காக மணமேடையில் இருக்கும் பெண்ணையா இழுத்துட்டு வருவான்?.” என்று வருத்தப்பட்டார் கோகிலா. அவரால் தன் மகன் செய்த காரியத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“நீ நினைக்குற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை கோகிலா. பெண்கள் விஷயத்தில் அவன் ராமன் தான். உன் வளர்ப்பு பொய் ஆகல. ஆனா இவன் செய்தது தப்பு தான். அதுவும் எதுக்கு நேரடியா இந்த வேலை எல்லாம் பார்த்தான்னு தெரியல. அதான் நம்ம பசங்க இருக்கானுங்கலே. எப்பவும் அவனுங்க தான் இந்த வேலையைப் பார்ப்பானுங்க...” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, திரும்பவும் அந்த இடத்திற்கு வந்தான் ஒளியோன்.

அவன் தோரணையில் ராஜகளை பொருந்தி இருப்பதை எப்போதும் போல், இப்போதும் ஆசையாக பார்த்தார். அவனோ, இவர்களைத் தாண்டி, அங்கிருக்கும் தன் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

தன் கணவர் எதையோ பேசிக்கொண்டு இருந்தவர், அவர் பேச்சை நிறுத்தியதும், அவர் கண் சென்ற திசையைப் பார்த்தார். உடனே தன் தலையில் அடித்துக் கொண்டார்.

“நம்ம ஒளி அப்படியே எங்க தாத்தா மாதிரி. அவரைப் போலவே தேஜஸ் நிறைந்த முகம். அவரிடம் இருக்கும் அதே கம்பீரம், அதிகார குணம் அழகு எல்லாம் இவன்கிட்டையும் இருக்கு. அதனால் தான் நமக்கு சம்பந்தம் இல்லாத தயாரிப்பாளர் துறைக்கும் போய், பாலிவுட் படம் எடுக்கும் அளவுக்கு பெரிய ஆளா வந்துருக்கான். அவன் எனக்குப் பிறகு நம்ம கட்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டுப் போவான்.” என்று தான் பேச வந்ததையே மறந்து, தன் மகன் புராணத்தைப் பாட ஆரம்பித்தார். இது எப்போதும் நடப்பது தான்.

“ம்க்கும்... நீங்க தான் மெச்சிக்கணும். அவன் உங்களை மதிக்கக்கூட மாட்டேங்கிறான். நீங்களோ அவன் புராணத்தை பாடுறீங்க.” என்றதும் சிரித்துக் கொண்ட தயாளன், “அவன் என் பையன் கோகிலா.” என்றார்.

தந்தைக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தை பலவருடங்களாக கிடையாது. அதில் கோகிலாவுக்கு மிகப்பெரிய மனவருத்தம். அவரும் தன் மகனோடு எவ்வளவோ போராடி பார்த்துவிட்டார். ஆனால் தயாளனோ, “விடு கோகிலா, அவன் கோபம் கண்டிப்பா ஒரு நாள் போகும். அவனை அவன் போக்கில் விடு.” என்று சொல்லிவிட்டார். ஆனால் தயாளன் மனதில் வருத்தம் இருக்கத் தான் செய்தது.

“மச்... என்னமோ பண்ணுங்க. ஆனா அந்தப்பொண்ணு....” என்று இழுத்தவாறு தன் கணவனைப் பார்த்தார்.

“எந்த பொண்ணு?.” என்று இவரும் அறியாமல் வினாவ.

“மச்... அதுதாங்க அந்த டைரக்டர் தங்கச்சி. அந்த பொண்ணை அவள் கணவனோடு அனுப்பி வைக்க சொல்லுங்க.” எங்க.

“என்ன விளையாடுறியா?. அவனுக்கு என் முகத்தைக் கூட பார்க்க பிடிக்கல. இதில் நான் என்னத்த சொல்ல?. நான் சொன்னாலும் அப்படியே கேட்டுடுவான் பாரு. நீயே அவன்கிட்டப் பேசு.” என்றவர் குரலில் வருத்தம் மண்டிக்கிடந்தது.

அதில் தானும் வருத்தம் கொண்டவராய் தன் கணவனின் கையைப் பற்றியவர், “எல்லாம் ஒருநாள் மாறும்ங்க.” என்றார் நம்பிக்கையாக.

தன் மனைவியின் கைமீது, தன் கையை வைத்தவர், “நானும் அந்த ஒரு நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன் கோகிலா.” என்றார்.

தயாளன் சக்கரவர்த்தி, பரம்பரையாக மிகப்பெரிய செல்வந்தர். அவருக்கு ஏகப்பட்ட தொழில்கள் உள்ளது. ஆனால அவருக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். அவர் தந்தை உருவாக்கிய கட்சியில், கடைநிலை உறுப்பினாராக முதலில் சேர்ந்து, கட்சியின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு தான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றார்.

மிகவும் நேர்மையான மனிதர். அவருக்கு கெட்டப் பெயர் ஏற்படுவது என்னவோ, ஒளியோன் செய்யும் தொழில் மூலம் மட்டுமே!. எங்கையும் தன் மகனை விட்டுக் கொடுக்காமல், எதிலும் அவன் பெயர் வராமல் பார்த்துக்கொள்வார். இதற்காகவே மீடியாவிற்கு என்று மாதமாதம் ஒரு தொகையை ஒதுக்கிவிடுவார்.

இவர் செய்யும் செயலால் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையே தன் மகனால் சிதைந்து போய் கொண்டிருக்கின்றது என்று, இவருக்கு யார் புரியவைக்க?.

அவருக்கு இருக்கும் தொழிலில் பிடிக்காத ஒன்று என்றால் அது சக்ரா பினான்ஸ் மட்டுமே. தனியாக பத்துக்கும் மேற்பட்ட சக்ரா நிறுவனக் கப்பல்கள் கடலில் ஓட, சக்ரா கன்ஸ்ட்ரக்ஷன், சக்ரா ஏற்றுமதி நிறுவனம் என பல இருக்க. இதை எல்லாம் அவன் தள்ளி வைத்து, தன் தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பில், அவன் நேராக சென்றது என்னவோ தங்களது பினான்ஸ் நிறுவனத்திற்குத் தான்.

அதனுடன் முதலில் தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் வட்டிக்குப் பணம் தந்தவன், தானாகவே படத்தை தயாரித்தால் என்ன?. என்று கருதி ஆரம்பித்தது தான், ஒளி ப்ரோடக்க்ஷன் நிறுவனம். அவன் உள்ளே புகுந்த பிறகு எந்த பெரிய பட்ஜெட் படம் வெளிவந்தாலும், அது ஒளியின் பெயரையே தாங்கி வந்தது. அவனால் சினிமாத்துறையில் வீழ்ந்தவர்கள் பலர். ஒன்றில் அவன் காலடி எடுத்து வைத்துவிட்டால் அதில் அவன் மட்டுமே ராஜா.

தன் மகன் இருக்கும் அறைக்குள் சென்ற கோகிலா, “அந்தப் பெண்ணை அவள் கணவனோடு அனுப்பி வை ஒளி.” என்றார்.

கணினியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்தவன், அதில் இருந்து தன் தலையை எடுக்காமல், “நான் அப்போதே சொல்லிட்டேன் அம்மா.” என்றான் அழுத்தமாக.

“சரி அந்தப்பெண்ணை, எங்க வச்சிருக்க?.” என்றார்.

அவனோ அசால்ட்டாக, “மேல என் ரூமில் தான் இருக்கா.” என்றதும் தன் நெஞ்சில் கையை வைத்தவர், “என்னங்க....” என்ற பெருங்குரல் எடுத்து தன் கணவனை அழைத்தார்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 4

தன் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அடித்துப் பிடித்து ஓடி வந்த தயாளன், “என்னாச்சி கோகிலா?. எதுக்காக இப்படி கத்துற?.” என்றவர் கண்கள் அப்படியே தன் மகன் மீதும் ஆராய்ச்சியாக பதிந்து, திரும்பவும் தன் மனைவியைப் பார்த்தது.

“இவன் என்ன சொல்றான்னு பாருங்க. அந்தப் பெண்ணை நம்ம வீட்டில் தான் வச்சிருக்கானாம்.” என்றார் பதறிய குரலில்.

என்ன தான் பாசமான தந்தையாக இருந்தாலும், கண்டிக்க வேண்டியதற்கு கண்டிப்பாக கண்டித்து விடுவார் தயாளன். அதனால் தான் வந்ததும் அவன் செயலில் அதிர்ச்சி கொண்டவராய்ப் பேசினார். இப்போதும் அவனைக் கண்டிக்கும் நோக்கில், “அம்மா என்ன சொல்றா ஒளி. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?. நீ அந்தப்பெண்ணை சக்ரா பைனான்ஸ் நிறுவனத்திற்கு தானே கூட்டிட்டுப் போயிருக்கணும். இப்ப நீ பண்ண இந்த வேலையால அந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு வரும்னு தெரியுமா?.” என்று கொஞ்சம் குரலை உயர்த்தி பேசினார்.

அதற்கெல்லாம் அஞ்சுபவனா இந்த ஒளியோன். அவன் தான் யாருக்கும் அடங்காத அதிகாரனாயிற்றே!.

பணம் தராமல் அலைக்களிப்பவரின் நெருங்கிய உறவை, மிரட்டி சக்ரா பைனான்ஸ் நிறுவனதிற்கு தான் அழைத்துச் செல்வர். அதிலும் ஒளியோனின் தலையீடு நேரடியாக இருக்காது. அதுவே தயாளன் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய இடையூறாக இருக்க, இப்போதோ அவர் மகன் செய்த செயல் மிகப்பெரிய பாவமாக தோன்றியது மனிதருக்கு.

ஆனால் அவனோ மிகவும் தெனாவட்டாக, இருக்கையில் இருந்து எழுந்தவன் தன் தாயைப் பார்த்தபடி, “இது சாதரணமா ஒரு லட்சமோ, ரெண்டு லட்சமோ கிடையாது அம்மா...” என்று அவன் சொல்லும் போதே, அவன் உதவியாளரிடம் இருந்து அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

அதை எடுத்து அவன் காதில் வைத்ததும், “சார் டைரக்டர் அகிலனால், சிஎம்மை தொடர்பு கொள்ளமுடியாத படி செஞ்சிட்டேன் சார்.” என்றான் ஆர்பாட்டமான குரலில்.

“ம்.” என்று மட்டும் சொன்னவன், தன் முன்னே நிற்கும் பெற்றோர்களை மதிக்காமல், அவர்களைக் கடந்து சென்றான்.

“என்னங்க இவன்?.” என்று கோகிலா தன் கணவனைப் பார்க்க, அவரோ, “அந்த பொண்ணு மேலே தான இருக்கா, நீ போய் என்னன்னு பாரு.” என்றார்.

“அதுக்கு அவன் என்னை அனுமதிப்பான்னு நினைக்குறீங்களா?.” என்றார் இயலாத குரலில். பாசமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக இருந்தாலும் சரி அவ்வளவு சுலபமாக அவனை நெருங்கி விடமுடியாது. ஆனால் இருவருமே அவனைத் தடுக்க முயற்சி செய்வதை மட்டும் கைவிட மாட்டார்கள்.

“அப்ப என்னை போக சொல்றியா?.” என்று இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, மேலே தன் அறைக்கு வந்தவனோ, தன் மெத்தையில் கண் அசந்திருந்த காரிகையைப் பார்த்தான்.

அவள் கண்களில் கண்ணீர் காய்ந்து போய், அவள் முகத்தில் சோர்வு இருந்தாலும், முகம் பளீரென்று இருக்க, அதை அவன் ரசிக்கவில்லை மாறாக அவன் இதழ்கள் இகழ்ச்சியாக, “நடிகனின் மனைவி தானே!.” என்று முணுமுணுத்தது.

அசதியில் இருந்தாலும், விழிப்போடு இருந்தவள், பெண்களுக்கே ஊறிய பாதுகாப்பு உணர்வோடு இருந்தவள், தன்னை யாரோ உற்று நோக்கிவதைக் கண்டு படாரென்று, தன் மஸ்காரா தீட்டிய இமைகளைத் திறந்தாள்.

தன் முன்னே நடுநயமாக, நின்று கொண்டிருக்கும் ஆடவனைப் பார்த்தவள் பதறியவளாக எழுந்து அமர்ந்தாள். அவள் முன்னே இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், “நான் யாருன்னு உனக்குத் தெரியுமா?.” என்று கேட்டான்.

அதற்கு மெதுவாக, “இல்லை.” என்று தன் தலையை அவள் ஆட்ட.

அதைக் கேட்டு நெட்டி முறித்தவன், “அப்ப ரொம்ப நல்லதா போச்சு.” என்றவன் எதே உள்ளர்த்தத்தில் கூற, பெண்ணவளின் உள்ளத்திலோ அபாய ஒலி அடிக்க ஆரம்பித்தது.

‘இவன் எதுவோ முடிவெடுத்துவிட்டான்.’ என்ற நினைப்போடு அவனையே அவள் பார்த்திருக்க, “உன் முகத்தை பார்க்க சகிக்கல. முதலில் வாஷ்ரூம் போய் உன் மூஞ்சை கழுவு.” என்றான் எரிச்சலுடன்.

அவளுக்கும் வாஷ்ரூம் போக வேண்டும் என்ற உணர்வு இருக்க அவன் சொன்னதும் தான் தாமதம் வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தாள், அவன் கைக்காட்டிய திசையில் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே சென்று குளிர்ந்த நீரை வேகமாக முகத்தில் அடித்து தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், கண்களில் இருந்து திரும்பவும் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

அவளும் ஒளியோனைப் பற்றி நன்கு அறிவாள், சினிமா துறையில் இருந்து கொண்டு அவனை தெரியவில்லை என்றால் எப்படி?. அவனைக் கண்டு தான் அனைத்து தயாரிப்பாளர்களும், படவிநியோகஸ்தர்களும் அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கின்றனரே!.

ஆனால் அவனை, இதுவரை அகரயாழினி நேரடியாக சந்தித்தது இல்லை. அதனால் தான் மண்டபத்தில் சரியாக அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இப்போதும் அவன் யாரென்று தெரியாதபடி, தான் ஒரு அப்பாவி என்பது போல் நன்றாக நடித்துக்கொண்டாள்.

உள்ளே குளியல் அறையில் சுற்றும் முற்றும் பார்த்தவள், அங்கிருந்து தப்பிப்பதற்கான வழியைத் தேடினாள். அங்கே உயரமாக இருக்கும் ஜன்னல், வழியே தப்பிக்க முடியுமா?. என்று தன் தலையை உயர்த்திப் பார்த்தாள், “பாவிபய, அவன் உயரத்துக்கு ஜன்னலைக்கட்டி வச்சிருக்கான். அவ்வளவு தூரம் ஏறி எப்படி தப்பிக்க முடியும்.” என்று வாய்விட்டுப் புலம்பியவள், தான் மேலே காலை வைத்து ஏற ஏதேனும் கீழே கிடக்கின்றதா என்று பார்வையை சிதறவிட்டாள்.

அந்த குளியல் அறை நவீன தொழில்நுட்ப முறையில் கட்டப்பட்டு இருந்தது. அவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, சரியாக ஷவர் முன்பு சென்று நிற்க, அதில் இருந்து தண்ணீர் அவள் தலையில் விழ ஆரம்பித்தது. அவள் பதறி விலகுவதற்குள், அவள் தலை நனைந்து இருந்தது.

தன் விதியை நொந்து கொண்டவள், “மச்... இந்த பாத்ரூமில் ஒரு வாளி கூட இல்ல. இப்ப எப்படி நான் மேல ஏறுவேன்.” என்று வாய்விட்டுப் புலம்ப, “வேணும்னா நான் ஏணி கொண்டு வந்து கொடுக்கட்டா?.” என்று அவள் பின்பக்கமாக குரல் கேட்க, அடித்துப் பிடித்து திரும்பியவள், ஒளியோனின் சிவந்த விழிகளைப் பார்த்து, கொஞ்சம் பயந்து தான் போய்விட்டாள்.

‘இவன் எப்படி உள்ளே வந்தான்.’ என்று அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் அவள் அதை வாய்விட்டு அவனிடம் கேட்கும் துணிவு சிறிதும் இல்லை.

கையைக் கட்டிக்கொண்டு அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது என்னவோ உண்மை. ஆனால் அதை தன்னுள்ளே அடக்கிக் கொண்டவன், “என் பாத்ரூமை ஏன் இப்படி நாசக்காடா ஆக்கி வச்சிருக்க?. இங்க இருந்து தப்பிக்கலாம்னு ப்ளான் பண்றியா?.” என்று மெல்லியதாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் கேட்டான்.

அவளோ திருதிருவென்று முழித்தவள், “அப்படி எல்லாம் இல்ல. அது சும்மா பார்த்தேன். எப்படி இருந்தாலும் வெளியவும் காட்ஸ் நிப்பாங்க. உங்க அப்பா வேற சிஎம் ஆச்சே!.” என்றாள் இளித்தபடி.

முகத்தை சுழித்தவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை யாருன்னே தெரியாதுன்னு நடிச்ச?.” என்றான் தன் கையை மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டபடி.

அவன் கேட்டதும் பெண்ணவளுக்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியவில்லை. அதனால் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன், “நீ முதல்ல வெளிய வா.” என்று சொல்லி வெளியே சென்றான்.

‘அவன் பேசும் போது தன் கண்ணைத் தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை.’ என்று அவளது மனது அடித்துக் கூற, அதில் தைரியம் வரப்பெற்றவளாய், வெளியே அவன் முன்பு சென்று நின்றவள், “எதுக்காக வாஷ்ரூம்குள்ள அத்துமீறி நுழைஞ்சீங்க.” என்றாள் வேகவேகமாக.

“அது என்னோட வாஷ்ரூம்.” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“இருக்கட்டும். ஒரு பொண்ணு உள்ள இருக்கும் போது நீங்க எப்படி உள்ளே வரலாம்?. அதுவும் இல்லாம நான் கதவை லாக் பண்ணி இருந்தேன்.” என்றவள் வார்த்தைகளுக்கு தைரியம் வந்திருந்தது.

“உனக்கு அதிகம் இடம் கொடுத்துட்டேன்னு நினைக்குறேன்.” என்றவன், அங்கிருந்து வெளியேறப் போனான்.

அப்போது அகரயாழினி, “எனக்குப் பசிக்குது.” என்று கத்தினாள். அதில் அவனது வேகநடை தடைபட, அதிவேகமாக சிறுத்தை வேகத்தில் திரும்பி வந்து பெண்ணவளின் அழகு சங்கு கழுத்தைப் பற்றியவன், “அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்காத. சாவடிச்சிடுவேன்.” என்று கர்ஜனையாக முழங்கியவன், யாழினியின் கழுத்தில் இருந்து தன் கையை இறக்கினான்.

அவன் அழுத்தமாக பிடித்ததால் அவள் கழுத்து வலிக்க, அதை தன் கைகளால் தடவியவள், “நான் காலையில் இருந்து சாப்பிடல. அதான் கேட்டேன்.” என்றாள் பாவமாக.

திருமண சடங்கை முடிக்க விடாமல், தன்னை இழுத்து வந்திருக்கின்றான் ஒருவன். அவனிடம் தான் என்ன பேசிக் கொண்டு இருக்கின்றோம் என்பது எல்லாம் அவளின் நினைவில் இருக்கத் தான் செய்தது.

ஆனால் இப்போதே தான் இந்த இடத்தில் இருந்து தப்பித்தே ஆகவேண்டும், என்று அவள் எண்ணும் போது தான், அவளின் வயிறு கூச்சலிட்டு, “என்னையும் கவனியேன்.” என்றதும், முதலில் வயிற்றை கவனிக்க எண்ணினாள்.

‘இவனால் அப்படி என்ன செய்துவிட முடியும்.’ என்ற அகரயாழினியின் நினைப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் தான் நினைத்தது மிகப்பெரிய தவறு என்று அப்போது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

அவளின் முகத்தை கூர்மையாக பார்த்தவன் பார்வையை தடை செய்ததைப் போல அவனின் அலைபேசி இசை எழுப்பியது, அதை எடுத்து காதில் வைத்தவன், “அவனை மேலே அனுப்பி வை.” என்று மிகவும் மெல்லியதாக கூறிவிட்டு வைத்தான்.

அவன் சில அடிகள் தள்ளி நின்றதால், அவனின் குரல் யாழினியின் காதுகளை அடையவில்லை.

தன் அலமாரியைத் திறந்து, அதில் இருந்து பூந்துவலை ஒன்றை எடுத்து, யாழினியின் முகத்தில் தூக்கி எறிந்தவன், “கிளீன் பண்ணு.” என்றான் உத்தரவாக.

அவளும், அதைவைத்து தன் முகத்தையும், தலையையும் துடைத்தாள். மணப்பெண்ணுக்கே உரித்தான தலையலங்காரத்தில் யாழினி இருக்க, அதன் மேலையே அவள் துடைக்க, அவள் தலை அலங்கோலமானது, உடனே அவள் தன் தலை அலங்காரத்தை கலைக்க வேண்டி, அவள் தலை மீது கைவைக்கப் போக, “தேவை இல்லை. உன் புருஷன் வந்துட்டான்.” என்றான் உதட்டை சுழித்தபடி.

உடனே பெண்ணவள், முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் உண்டானது. “வசீ.... வசீ வந்துட்டாரா?.” என்று ஆரவாரமாய் ஆர்பரித்தபடி, ஒளியோனைத் தாண்டி அவள் ஓட, அவளின் கையை இழுத்துப் பிடித்து நிறுத்தினான் ஒளியோன். அதனால் அவள் ஓடிய வேகத்தில் ஆடவனின் நெஞ்சின் மீது மோதி நின்றாள் பெண்ணவள்.

“என்ன அவசரம்?. என்னை தெரியாதுன்னு பொய் பேசுனீயே!. அதுக்கு தண்டனை வேண்டாமா?.” என்றதும் அவனின் மிரட்டல் தன்மை யாழினிக்கு குழப்பத்தை உண்டாக்கியது.

அவளின் வெற்று இடையை அவன் அழுத்தமாக பிடிக்க, அவன் பிடியில் துடிதுடித்து அவளுக்குப் பேச்சு வராமல் போக, அவள் கழுத்துப் பகுதியை நோக்கிக் குனிந்தவன், கழுத்தில் மிகவும் ஆழமாக கடித்துவிட்டு நிமிரும் போது, சரியாக அங்கே அதிர்ந்தபடி நின்றிருந்தான் வசீகரன்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 5

ஒளியோனின், இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்த யாழினி வேக மூச்சுக்களை விட்டபடி ஒளியோனின் முகத்தை கேள்வியாக பார்க்க, அவன் கண்கள் அவளை விடுத்து வேறு திசையை நோக்கிப் பயணிக்க, இவளும் திரும்பி அந்த திசையைப் பார்த்தாள். அங்கு அதிர்ச்சியுடன் நிற்கும் வசீகரனைப் பார்த்ததும், அவமானத்தில் கூனி குறுகி போய்விட்டது அவளின் முகம்.

வசீகரனை எதிர்கொள்ளும் திராணி அவளிடம் இல்லை என்றாலும், தன்னை அழைத்துச் செல்ல தன் கணவன் வந்துவிட்டான் என்ற நினைப்பில், வேகமாக அவன் அருகில் ஓடி செல்லப்போனவளின் கையை திரும்பவும் பற்றிய ஒளியோன், வசீகரனைப் பார்த்து, “பணம் எங்கே?.” என்றான் ஆளுமையாக.

வசீகரன் தன் கையில் இருந்த பெரிய ட்ராவல் பேக்கை ஒளியோன் இருக்கும் திசையை நோக்கி நீட்டினான். உடனே வசீகரன் பின் பக்கம் இருந்து வந்த ஒளியோனின் பிஏ அதை வங்கிக்கொண்டான்.

அதில் இருக்கும் பணத்தை அவன் சரி பார்க்கும் போதே, கொதித்த மனநிலையில் இருந்த வசீகரன் ஒளியோனை நோக்கி, “அதெல்லாம் சரியா தான் சார் இருக்கும்.” என்றவன், அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தான் அடுத்து கேட்கும் வார்த்தைகளையும் கேட்கலாமா வேண்டாமா.’ என்று தன் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் வசீகரன்.

ஒளியோன், அகரயாழினியின் கரத்தைப் பற்றி இருக்க, கிட்டத்தட்ட அவன் மீது சாய்ந்தபடி இருக்கும் அவளின் நிலை அவளுக்குப் படபடப்பைத் தந்தது. அவள் உள்ளத்தில் அசூயை என்னும் பாம்பு படமெடுத்து ஆடி, அவளை தன் நிலையை இழக்கச் செய்தது.

‘இவன் எதுக்காக யாழினியை இங்கே கூட்டிட்டு வந்தான்?. இதை நான் இவன்கிட்டக் கேட்டா இவன் பதில் சொல்லமாட்டான். இதை இவனிடம் கேட்காமல் போனால், வெளியே இருப்பவன் என்னை சும்மா விடமாட்டான்.’ என்று வசீகரன் நினைத்தானே தவிர, வேறு ஒரு ஆடவன் அருகே கைதியாக நிற்கும், தான் தாலி கட்டிய பெண்ணைப் பற்றிய நினைப்பு சிறிதும் வரவில்லை. அதற்கும் வேறு காரணம் இருந்தது.

ஒரு வழியாக தான் கேட்க வந்த கேள்வியைக் கேட்டான் வசீகரன், “என்ன இருந்தாலும் யாழினியை உங்க வீட்டுக்கு நீங்க கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது சார். இதனால் என் பெயர் தான் கெடும்.” என்று தனலமாக கூறினான்.

அதற்கு தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி, “கெட்டுப்போச்சுன்னா எடுத்து குப்பையில போடு.” என்றவன், வசீகரன் முகத்தில் இருந்த வீக்கத்தைப் பார்த்து, “உன் இன்னொரு கன்னமும் வீங்கனுமா?.” என்று நக்கலாக கேட்டவன், தன் பிஏ, பணத்தை எண்ணி முடித்ததும், யாழினியைப் பிடித்திருந்த தன் கையை, அவள் மீதிருந்து எடுத்தான் .

அவன் விட்டதும் தான் தாமதம், வசீகரனைக் கூட கண்டுகொள்ளாமல், அங்கிருந்து ஓடினாள் பெண். அவளைத் தொடர்ந்து வசீகரனும் சென்றான்.

அவள் ஓடி வெளியே செல்ல, அவளை அழைத்தவாறு வசீகரன் பின் செல்ல என்று அங்கு நடக்கும் நாடகத்தை கோகிலா பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

வெளியே வந்த யாழினி, அங்கே சோர்ந்த முகத்துடன் நின்றிருந்த தன் அண்ணன் அகிலனைப் பார்த்து, ஓடி சென்று அணைத்துக் கொண்டாள். தன் அண்ணனைப் பார்த்ததும், இவ்வளவு நேரம் அவள் கட்டுப்படுத்தி இருந்த அழுகை வந்தது.

ஒளியோனின் ஆட்கள் அகிலனை உள்ளே அனுமதிக்கவில்லை, இல்லையென்றால் அவன் வந்த வேகத்திற்கு, இன்று ஒளியோனை பிரட்டி எடுத்திருப்பான்.

தன் தங்கையின் முதுகைத் தடவி ஆறுதல் அளித்தவன், “ஒன்னும் இல்லடா... நான் இருக்குறேன்.” என்க, அவளும், “அண்ணா... அண்ணா...” என்று உருக, அங்கே பெரிய பாச போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

இதை வசீகரன் எரிச்சலுடன் பார்க்க, பல்கனியில் நின்றிருந்த ஒளியோனின் கண்கள் வன்மத்துடன் பதிந்தது. அவன் இதோடு நிறுத்தப் போவது இல்லை என்றானது போல் ஒரு பார்வை.

பின் அண்ணன் தங்கை இருவரும், அங்கே வசீகரன் நிற்பதைப் பொருட்படுத்தாமல், காரில் சென்று ஏற, அவனும் அவசரமாக காரின் பின்பக்கம் இருந்த கதவைத் திறந்து உள்ளே ஏறினான்.

அப்போது ஒளியோன் முன்னால் தான் பேசாமல் விட்ட சொற்களை எல்லாம் இப்போது அகிலன் அருகில் இருக்கின்றான் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் யாழினியிடம் பேச ஆரம்பித்தான் வசீகரன்.

அகிலனோ, காரை பின்பக்கம் நொடித்து திருப்பிக் கொண்டிருந்தான். யாழினியோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

“யாழினி.” என்று வசீகரன் அழைக்க, தன் கழுதைத் திருப்பி வசீகரனைப் பார்க்க, “அவன் ஏன் உனக்கு முத்தம் கொடுத்தான்.” என்று கேட்டவன் பார்வை அவள் கழுத்தில் தான் இருந்தது.

அதில் யாழினி ஒருநிமிடம் பேச்சை இழந்தாள். இருந்தும் தன்னை நிருபிக்க வேண்டி, “நீங்க என் மேல் சந்தேகப்படுறீங்களா வசீ?.” என்று உடைந்த குரலில் கேட்க.

அகிலனோ, “என்ன பேசுற வசீ?.” என்றான் கோபமாக.

“ஆமாம் அகிலன். நான் போகும் போது, உன் தங்கையை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்துட்டு இருந்தான் அந்த சக்கரவர்த்தி.” என்றான் முகத்தை சுழித்தபடி.

அதில் கோபம் வரப்பெற்ற அகிலன், ஸ்டீயரிங்கில் தன் கையை குற்றியபடி, “அவனை நீ சும்மாவா விட்ட?.” என்று கத்தினான். காரும் அவன் இருந்த கோபத்திற்கு அவன் கையில் அகப்பட்டு பறந்து கொண்டிருந்தது.

“ம்க்கும்... நானே சிங்கத்தின் குகைக்குள் போயிட்டு தப்பிச்சு வந்துருக்கேன்.” என்று முணுமுணுத்தவன், “உன் தங்கை மட்டும் என்னவாம்?. அவளும் அவன் கூட ஒட்டி ஒரசிட்டு தான் இருந்தா. அவன் கொடுத்த முத்தம் இவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்குப் போல....” என்று கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் பேச, யாழினியின் நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

அகிலனால் வசீகரனின் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆள் அரவமற்ற அந்த சாலையில் “கிரிச்....” என்று பிரேக் போட்டு, தன் வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கியவன், வசீகரன் இருக்கும் பகுதியில் காரின் கதவைத் திறந்து அவனை அப்படியே கொத்தாக வெளியே இழுத்தவன், காலையில் தான் குத்துவிட்ட அதே இடத்திலையே திரும்பவும் வசீகரன் முகத்தில் குத்தினான்.

இப்போது பதிலுக்கு வசீகரனும் அவனைத் தாக்கினான். ஆள் அரவமற்ற அந்த சாலையில், இருவரும் சட்டையைப் பிடித்து சண்டையிட, பதறிய யாழினி, வேகமாக ஓடி வந்து இருவருக்கும் இடையில் நின்றாள்.

“போதும் அண்ணா. நீங்க வசீகரனை எதுவும் செய்யக்கூடாது.” என்க, “ம்ச்... அவன் என்ன பேசுறான்னு பாரு.” என்று அவன் கத்த.

“நீ சும்மா இரு அண்ணா.” என்று சொல்லிவிட்டு, வசீகரனைப் பார்த்தவள், “அங்க என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை நீங்க என்னை கேட்டு இருந்தா, நான் நடந்தது எல்லாத்தையும் சொல்லி இருப்பேன் வசீ. அதைவிட்டுட்டு, இப்படி அண்ணன் முன்னாடி....” என்று அவள் சொல்லும் போதே, துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஏய்! சும்மா நடிக்காத. நான் காதலிக்கும் போது, உன் கையை கூட தொடவிடமாட்ட, அப்படி இருக்குறவா, ஏன்டி அவன் கூட கொஞ்சி குலாவிட்டு இருந்த?.” என்று சொல்லும் போதே, அவள், அவன் வார்த்தைகளால் மரணித்தாள். அவளிடம் அசைவு இல்லை.

இப்போது அகிலனைப் பார்த்தவன், “நீயே பாரு உன் தங்கச்சியின் கோலத்தை. அவள் தலைமுடி எல்லாம் கலைஞ்சு போய் இருக்கு. அவன் கூட நாலு மணி நேரம் இருந்துருக்கா, அங்க அவன் இவளை என்னவெல்லாம் பண்ணானோ!.” என்று சொல்லும் போதே அவனை தாக்க சென்ற அகிலனின் கையைப் பற்றிய யாழினி, “வேண்டாம் அண்ணா.” என்று தன் தலையை ஆட்டியவள், சிறிதும் யோசிக்காமல் அவன் காலையில் கட்டி இருந்த தாலியை வெடுக்கென்று இழுத்தாள்.

அவள் இழுத்த இழுப்பில் அது அவள் கையோடு வந்தது. அதை அப்படியே, வசீகரன் கையில் கொடுத்தவள், “இதுக்காக தானே இவ்வளவு நேரம் பேசுன. இது எனக்கு வேண்டாம்.” என்றாள் நேர்பார்வையோடு.

“ஏதோ பத்தினி மாதிரி பேசுற?. இது தான் நீ தாலிக்கு கொடுக்கும் மரியாதையா?.” என்று அவன் எகத்தாளமாய் கேட்க.

“ஒரு மஞ்சள் கையிற்றை என் கழுத்தில் கட்டிவிட்டால், நீங்க என்னை எது வேண்டுமானாலும் செய்துவிடலாமா வசீகரன்?. இதற்காக என் சுயமரியாதையை இழந்து உங்களுடன் வாழணுமா?. உங்க காதல் உண்மையா இருந்தா, உங்க பேச்சு இப்படி இருக்காது வசீகரன்.” என்று பேச வசீகரன் முகத்தில் கேலியே மண்டிக்கிடந்தது.

தொடர்ந்து பேசியவள், “தாலி ஒரு அடையாளம் தான். ஆனால் அது அவளின் சுயமரியாதையை இழக்கச்செய்யும் போது, அது அவமான சின்னமாகின்றது.... இதை சொன்னது கூட நீங்க தான் வசீகரன். உங்க சமீபத்திய படத்தில் தான் பேசுனீங்க. அதை எல்லாம் பார்த்து உங்களை மிகப்பெரிய இடத்தில் வச்சிருந்தேன்.” என்றவள் குரலில் சுருதி இறங்கியது.

“அதெல்லாம் படத்துக்காக பேசுனது யாழினி. நமக்குள்ள எதுவும் ஒத்து வராது. நம்ம கல்யாணத்தையும் பதிவு பண்ணல. அதனால் இங்கையே இதெல்லாம் முடிச்சுக்கலாம்.” என்றான் வசீகரன்.

யாழினியின் முகத்தில் வெற்று சிரிப்பு, அவளின் புன்னகைக்கு உயிர் இல்லை. தன் தங்கையின் தோள்களைப் பிடித்து தாங்கிக் கொண்ட அகிலன், வசீகரனைப் பார்த்து சுடக்கிட்டு, “உனக்கு ஒரு மாசம் டைம் அதுக்குள்ள, அந்த ஒளியோன் கிட்ட கொடுத்த என்னுடைய பணம் எல்லாம், என்கைக்கு வரணும்.” என்று மிரட்டிவிட்டு, தன் தங்கையை தாங்கியபடி காரில் சென்று ஏறினான்.

வசீகரனை சாலையில் விட்டுவிட்டு, இருவரும் மட்டும் அங்கிருந்து சென்றனர்.

காரின் ஜன்னலில் சாய்ந்து கொண்ட யாழினியால் தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. காதலிக்கின்றேன் என்று அவனாக வந்தவன், அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு, திருமணம் முடிந்த கையோடு வலியையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அவள் கை மீது தன் கையை வைத்த அகிலன், “எதுவும் முடிஞ்சி போகல யாழி. அவன் உனக்கு வோர்த் இல்ல. வோர்த் இல்லாத ஆளை நினைச்சு அழுகாத.” என்றான்.

“அண்ணா, அங்க என்ன நடந்துச்சுன்னா...” என்று அவள் சொல்லும் போதே, அவள் வார்த்தைகளை தடை செய்தவனாக, “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் யாழி. எனக்குப் புரியுது.” என்றான் அவள் தலையைத் தடவியபடி, பின், “ஆனா, உன்கிட்ட அந்த ஒளியோன் தப்பா ஒன்னும் நடக்கலையே?. என்று கேட்க.

மறுப்பாக தன் தலையை ஆட்டியவள், “இல்லை அண்ணா.” என்றவள் அவன் கழுத்தில் முத்தம் கொடுத்ததைப் பற்றி ஏனோ வாய் திறக்கவில்லை. ஆனால், ‘ஒளியோன் ஏன் அவ்வாறு செய்தான்?.’ என்ற கேள்வி அவள் மனதை அரித்துக்கொண்டே இருந்தது.

பின் அவர்கள் வீடு வர, காரில் இருந்து இறங்கியவளைப் பார்த்து, “இங்க பாரு யாழி, இந்த சமுதாயம் நிற்பதுக்கும், நடப்பதுக்கும் என எல்லாத்துக்கும் குத்தம் சொல்லும். சொந்தக்காரன், சமுதாயம்னு, எல்லாருக்கும் ஏத்த மாறி வாழ ஆரம்பிச்சா உனக்கான பாதை உனக்கு மறந்து போய்டும். நான் சொல்றது புரியுதுல!. உனக்காக எப்போதும் நான் துணையாக இருப்பேன்.” என்று சொல்ல, தன் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

இன்று முழுவதும் யூடியூப்பில் வந்த பல செய்திகள், எதற்கும் கலங்காத அகிலனையே கலங்க செய்திருந்தது. அதை தன் தங்கை பார்த்தால் என்ன செய்வது என்ற நினைப்பில் தான் அவளுக்கு அறிவுரை கூறினான்.

அகரயாழினி சாப்பிட்டுவிட்டு தூங்கும் வரை அவள் அருகிலையே இருந்த அகிலன், பின் தன் மனதில் ஏற்பட்ட துயரத்தைப் போக்கிக்கொள்ள, நேராக சென்று நின்றது என்னோவோ பிரபல நடிகை நிலாவின் வீட்டிற்குத் தான்.



(ஹாய் டியர்ஸ்!. கதையின் இரண்டாம் நாயகன் தான் அகிலன். அவனுக்கும் உங்கள் அன்பை வாரி வழங்குங்கள். கதையைப் பற்றிய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.)
 
Last edited:

NNO7

Moderator
அத்தியாயம் – 6

“இப்போ தான் உங்களுக்கு இங்க வர வழி தெரிஞ்சதா?.” என்று தன் வீட்டிற்கு வந்த அகிலனைப் பார்த்து வினாவினாள் நிலா.

“மச்.... நான் எந்த நிலையில் இங்க வந்து இருக்கேன்னு நீயும் தானே பார்க்குற?.” என்றான் கொஞ்சம் அதட்டல் மிகுந்த குரலில்.

அதில் ஆத்திரம் கொண்ட நிலா, “என் மேல் படுற கோபத்தை நீங்க அந்த சக்கரவர்த்தி மேல காட்டி இருக்கணும் அகிலன். அவன் முன்னாடி நீங்களே தாழ்ந்து போய் தானே நின்னீங்க.” என்று சொல்லும் போதே, அவள் கையை அழுத்தமாக பற்றியவன், “நான் கோழைன்னு சொல்றியா?.” என்றான் கர்ஜனையாக.

“நான் அப்படி சொல்லவே இல்லை அகிலன். நீங்க அவன் முன்னாடி தாழ்ந்து போனது எனக்குப் பிடிக்கல.” என்றாள் அசுகையுடன்.

“அவனை வீழ்த்த, நான் நேரம் பார்த்து காத்துருக்கேன் நிலா. அவனை தந்திரத்தால் தான் வீழ்த்த முடியும். அதிகார பலத்தில் இருக்கோம்னு திமிரில் ஆடுறான் அந்த அடங்காதவன்.” என்று சொல்லிக்கொண்டே, நிலாவுடன் அறைக்குள் சென்றான். நிலாவின் முதல் படமே அகிலனோடு தான். அப்போதே இவர்களுக்குள் ஒரு வித மின்சாரம் தாக்கிய உணர்வு இருந்தது. அதன் பின் நிலா தன் தாயாரை இழந்து தவிக்கவும், அவளுக்குத் தன் தோள்களை தந்து அவள் துயர் துடைத்தான் அகிலன்.

அதன் பின் இருவருக்கும் நெருக்கம் கூடியது. இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அதைப் பற்றி எல்லாம் இருவருக்குமே கவலை இல்லை.

நிலாவோ அவன் உஷ்ணத்தைப் போக்க, அவனுக்கு கோப்பையில் மதுவை உற்றித் தந்தாள்.

அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்தவனுக்கு, நிலா அளித்த மது அமிர்த்தம் போல் இருந்தது. அதை வழக்கம் போல் அருந்திவிட்டு, பெண்ணவளின் அழகை வருணித்து பிதற்றாமல், அமைதியாக இருந்த அகிலன், நிலாவிற்கு புதிதாக தெரிந்தான்.

அவன் தோளைப் பற்றியவள், “என்னாச்சி அகிலன்?. அதான் யாழினி இப்ப பாதுகாப்பா இருக்காளே!. அந்த வசீகரனைப் பற்றி யோசிக்குறீங்களா?.” என்று அவனது அமைதியைப் பார்த்து கேள்வி எழுப்பியவள், அதற்கான விடையையும் தானே சொல்லிக்கொண்டாள்.

“அந்த வசீகரனை நான் ரொம்ப நம்புனேன் நிலா. அவனை என் தங்கையிடம் இருந்து விலக்கி வச்சிருக்க வேண்டும். தப்பு என் மேல தான்.” என்று அவன் சொல்ல, “அதான் இப்போதாவது அவனைப் பத்தி தெரிஞ்சதே!. யாழி எடுத்தது சரியான முடிவு தான்.” என்றாள் நிலா.

உடனே அவன் தோளில் இருந்த நிலாவின் வெண்டை விரல்களைப் பற்றியவன், அதில் முத்தம் வைத்து, “இன்னைக்கு உன்னால் மட்டும் தான் என் தங்கச்சி என்கூட இருக்கா நிலா. அதுக்கு நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கேன்.” என்றான் உருகிய குரலில்.

“என்ன பேசுறீங்க அகிலன். நீங்களும், நானும் வேற வேறையா?.” என்று அவள் சொன்னதும், அகிலன் முகத்தில் ஏதோ கடினம் தோன்றியது.

ஆனால் அதை நிலாவிடம் கட்டாமல் சட்டென்று மறைத்தவன், “ஐந்நூறு கோடி ரூபாயை பிரட்டுறது கஷ்டம் நிலா. நீ மட்டும் உதவி பண்ணலைன்னா....” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஆடவனின் இதழை தன் இதழ் கொண்டு மூடினாள் பெண்ணவள்.

மேற்படி நடந்த உரையாடல்கள் யாவும் ஆடவனின், நிலா என்ற சொல்லில் உருகி உருகி கரைந்தது. பின் அவளிடம் இருந்து அவன் தள்ளி படுக்க, நிலாவோ, அவன் மார்பில் தன் தலையை வைத்தவள், “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா அகி. நான் உங்க வீட்டுக்கு வந்துட்டா, யாழினியை பார்த்துப்பேன். அவளுக்கும் மனசுக்கு நல்லா இருக்கும் இல்லையா?.” என்றாள் ஆசையாக.

தன் மார்பில் இருந்த பெண்ணவளின் கையை விலக்கிவிட்டவன், “இங்க என் தங்கச்சி வாழ்க்கையே போயிருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா என்ன பேசிக்கிட்டு இருக்க. எப்ப பார்த்தாலும், அங்க இங்கன்னு சுத்தி இங்க தான் வந்து நிற்குற.” என்று சொல்லிக் கொண்டே, கோபமாக கட்டிலில் இருந்து எழுந்தவன், அங்கு சிதறி கிடந்த தனது உடைகளை வேகமாக எடுத்து மாட்டினான்.

நிலாவோ, கண்களில் நீர் வரப்பெற்றவளாக, “நான் அப்படி உங்கக்கிட்ட என்ன பெருசா கேட்டுட்டேன்.” என்றதும், அவளின் கண்ணீர் அவன் இதயத்தை உருக்க, “மச்...” என்று தன் நெற்றியை நீவியவன், நிலாவின் தலையைத் தடவியபடி, “உன்னோட கேரியரும் உனக்கு ரொம்ப முக்கியம் நிலா. நம்ம கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்.” என்று சொல்லி அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு விலகினான்.

அதில் நிலாவும் வழக்கம் போல் உருகினாள். அவன் கையைப் பிடித்தவள், “இந்த நடுராத்திரி வேளையில் எங்க போறீங்க?. ஒழுங்கா படுங்க.” என்றாள் அதட்டலாக.

அவளின் தண்ணீர் தடத்தைப் பார்த்தவன், அதை மீறாதவனாக, நிலாவின் அருகில் வந்து படுத்துக் கொண்டான்.

“நான் நாளைக்கே பீச் பக்கத்துல இருக்குற பங்களாவ உன் பெயருக்கு மாத்திடுறேன் நிலா. நாளைக்கு ஷூட்டிங் போவதற்கு முன்னாடி என்னோட ஆபிஸ் வந்துடு.” என்றான் சாதாரணமாக.

“ஆனா...” என்று அவள் ஏதோ பேச வருவதற்குள், “சும்மா இரு நிலா. இது நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்.” என்று சொல்ல.

“ஆனால் இது கறுப்புப் பணம் தானே அகி. இதில் என்ன இருக்கு?.” என்று அவள் மறுத்துப் பேச, “இதைப் பத்தி, இனி பேச வேண்டாம் நிலா.” என்றவன், தான் விட்டு செல்ல நினைத்த வேலையை திரும்பவும் தொடங்கினான்.

பரம்பரை பணக்காரனான அகிலனிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் குவிந்து கிடக்க, திடீரென்று, ஒளியோன் கேட்ட அவ்வளவு பெரிய தொகையையும் அவனால் பிரட்ட முடியவில்லை. அவன் கையில் வைத்திருந்த பெரிய தொகையையும், திருமணதிற்கு செலவு செய்திருந்தான்.

அவன் என்ன செய்வது என்று திக்குத் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் போது, அவனிடம் வந்து முழு தொகையையும் நீட்டினாள் நிலா. நிலா அகிலனை அவ்வளவு நேசிக்கின்றாள். எப்போதும் அகிலன் ஒருவனே தன் உலகம் என்று சுத்தியும் வருகின்றாள்.

ஆனால் அவளுக்கு இருக்கும் காதல் சிறிதேனும் அவனுக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை. அதை அவளிடம் வாய்விட்டு ஒரு போதும் அவன் சொன்னதும் இல்லை. ஆனால் அதைப்பற்றி எல்லாம் நிலாவுக்கு கவலை இல்லை. அவனுக்குகாக பெயர் புகழ் என்று அனைத்தையும் உதறிவிட்டு வர தயாராக இருக்கின்றாள். ஆனால் அகிலனோ, “உன் கேரியரைப் பார்.” என்று சொல்லி அவளை பேசவிடாமல் செய்துவிடுவான்.

இவர்கள் உறவின் நிலை என்னவென்று காலம் தான் பதில் சொல்லும்.

******************

மறுநாள் காலை ஆதவன் பளீரென்று ஒளியை பூமியில் பாய்ச்சிக் கொண்டு இருந்தான்.

படுக்கையில் இருந்து மெல்ல தன் கண் இமைகளைத் திறந்தாள் அகரயாழினி, நேற்று நடந்த சம்பவங்கள் எல்லாம் அவள் கண்முன்னே அணிவகுத்து நின்றது. அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவள் குளித்து கிளம்பி கீழே வரும் போது, அவளுக்கு சூடு பறக்க பதார்த்தங்களை தயார் நிலையில் வைத்திருந்தார் பணிப்பெண்.

உணவு மேஜையில் அமர்ந்தவள், “அண்ணாவை எங்க பொன்னமா?.” என்று வினாவ.

அவரோ, அவளுக்கு உணவைப் பாரிமாறிக் கொண்டே, “ஐயா இன்னும் வீட்டுக்கு வரலைம்மா.” என்றார்.

அதில் உணவை உண்டு கொண்டிருந்தவளின் கை, இரண்டு விநாடிகள் அப்படியே நின்று, பின் சகஜநிலைக்குத் திரும்பியது.

இது எப்போதும் நடக்கும் ஒன்று தான். ஆனால் அவள் ஒரு போதும் இதைப் பற்றி அகிலனிடம் கேட்டுக்கொண்டதில்லை. ஆனால் அவள் இருக்கும் இந்த நிலையில், தன் அண்ணன் தன்னுடனே இருக்க வேண்டும் என்று அவள் மனது பலவாறாக எண்ணியது.

பின் உண்டு விட்டு, வரவேற்பு அறையில் வந்து அமர்ந்தவள், வழக்கம் போல் செய்தித்தாளை தன் கைகளில் எடுத்தாள். அதில், ஒளியோன் அவளை, மண்டபத்தில் இருந்து இழுத்துச் சென்ற படம் பெரியதாக அச்சிடப்பட்டு இருந்தது. அதைப் பார்த்ததும், அதில் என்ன செய்தி இருக்கின்றது என்பதை கூட அவள் அறிய முற்படாமல், அந்த செய்தித்தாளை எடுத்த இடத்திலையே வைத்தாள்.

அப்போது அகிலனிடம் இருந்து அவளுக்கு அலைபேசி மூலம் அழைப்பு வரவே, ஆர்வமாக அதை எடுத்து காதில் வைத்தாள்.

அந்தப்பக்கம் இருந்து பேசிய அகிலனோ, அவள் நலனைக் கூட ஆராயாமல் எடுத்ததும், “யாழி, இன்னைக்கு நீ எங்கும் போக வேண்டாம். உன் பொட்டிக் முன் மீடியா ஆட்கள் இருக்காங்க. உன்னால அங்க போகவும் முடியாது. பார்த்து இருந்துக்கோ.” என்று அவசரமாக சொன்னான்.

“அண்ணா, நீ எப்ப இங்க வருவ?. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நீ இங்க வா.” என்றாள் யாழினி.

“மச்... யாழி நீ சின்ன பொண்ணு இல்ல. பீ ப்ரேவ். இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா.” என்று பொறுமையாக சொன்னான்.

“அந்த முக்கியமான வேலை அந்த நிலாவா அண்ணா?.” என்று கேட்டதும், சில நிமிடங்கள் அகிலனிடம் பதில் இல்லை. யாழினி ஒரு நாலும் நிலாவைப் பற்றி பேசியதில்லை.

இன்று நேரடியாகவே அவள் கேட்க, அவள் கேள்வியில் அதிர்ந்து பின் இயல்புக்கு வந்தவன், “இங்கப்பாரு யாழி. இப்ப நீ என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்ல. எனக்கு நீ மட்டும் தான் முக்கியம். ஆனா எனக்கு இப்ப ஷூட்டிங் போகணும். புரிஞ்சிக்கோ.” என்று கெஞ்சினான்.

“சரி அண்ணா.” என்று ஒரு வழியாக இறங்கி வந்தாள்.

ஆனால் மனதால் அவள் ஒருநிலையில் இல்லை. அவள் அடுத்ததாக அலைபேசி மூலம், அகிலனின் உதவியாளருக்கு அழைத்தாள்.

அவரிடம், “அகி அண்ணா, இப்ப எங்க இருக்காரு அண்ணா?.” என்று கேட்க.

அவரோ, “அவர் ஆபீஸ்ல தான் இருக்காரு பாப்பா. நம்ம லாயர் கூட தான் பேசிகிட்டு இருக்காரு.” என்று சொன்னதும், யாழினியின் முகத்தில் யோசனை முடிச்சுக்கள்.

அவள் அமைதியைக் கண்டு, “ஏதாவது சொல்லணும்மா பாப்பா?.” என்று அவர் அலைபேசியில் கேட்கும் போதே, அவர் முன் நிலா வர, அவளைப் பார்த்தவர், “வாங்க நிலாம்மா.... சார் உள்ள தான் இருக்காரு.” என்று அந்த வயதான மனிதர் அப்பாவியாக கூற, அவரைப் பார்த்து தலையாட்டி விட்டு சென்றாள் நிலா.

இங்கு அவர் பேசிய அத்துணையும் தெளிவாக யாழினியின் காதுகளில் விழுந்து இருக்க, பெண்ணவள் கொதித்துப் போனாள். அலைபேசியை சோபாவில் தூக்கி எறிந்தவள், தன்னை யாருமே இல்லாத அனாதையாக உணர்ந்தாள்.

“அப்பா அம்மாவோடவே நானும் போயிருக்கணும்.” என்று வாய்விட்டு சொன்னவள் கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது.

கண்ணீரை துடைத்துவிட்டு நிமிர்ந்தவள் முன்னே, “ஆர் யூ ஓகே பேபி?.” என்று தன் இதழை மிகவும் ஸ்டைலாக வளைத்து சிரித்தபடி நின்று கொண்டிருந்தான் ஒளியோன் சக்கரவர்த்தி.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 7

திடீரென்று தன் முன்னால் தோன்றிய ஒளியோனைப் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றவள், பின் அவன் முகத்தில் தோன்றிய புன்னகையைக் கண்டு, ‘இதென்ன, நெஞ்சில் ஈரப்பசையற்ற இந்த அடங்காத ஒளியோன் சக்கரவர்த்தியின் முகத்தில் சிரிப்பா?. இது உண்மை தானா?.’ என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அவள் முன்னால் சுடக்கிட்டான்.

தன்னிலைக்கு வந்தவள் அவனது முகத்தை ஏறிட்டு, “நீ.... நீங்க எப்படி உள்ள வந்தீங்க?.” என்று ஒருவாறு திக்கித் திணறி கேட்டுவிட்டாள்.

அவனோ, “கதவு வழியா தான்.” என்றான் அசட்டையாக.

“அதில்ல.... இது என் வீடு தான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?.” என்றவள் கேள்வி அவளுக்கே முட்டாள் தனமாக இருந்தது.

அவளைத் தாண்டி சென்று, அங்கிருக்கும் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், “அவ்வளவு கார்ட்ஸ்சையும் தாண்டி உன்னை மண்டபத்தில் இருந்து கூட்டிட்டு போக தெரிஞ்ச எனக்கு, வெளிய நிற்குற வாட்ச்மேனை சாமாளிக்குறது அவ்வளவு ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.” என்றவன், “ஏன் நிற்குற?. இங்க வந்து உட்காரு.’ என்று ஏதோ அவன் வீடு போல மிகவும் உரிமையாக அழைத்தான்.

பல்லைக் கடித்தவள், தைரியம் வரப்பெற்றவளாக, “இருக்குற என் கொஞ்ச உயிரையும் எடுக்குறதுக்குத் தான் இங்க வந்தீங்களா சார்!. உங்களால என் மானம் மரியாதை எல்லாம் போச்சு.” என்றவள் உணர்ச்சி மிகுதியான பேச்சை கவனிக்காதவனாய், அங்கே சுவற்றில் நிழல் படமாக, பரதநாட்டிய உடையில், அழகான ஒப்பனையில், அபிநயம் பிடித்தபடி நின்றிருந்த அகரயாழினியை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வை செல்லும் திசையைப் பார்த்தவள், அவன் முன்னே வந்து நின்று, “நான் உங்களைத் தான் கேட்டேன்.” என்று கூற.

“இவ்வளவு தெளிவா பேசுறியே பின்ன எதுக்கு அந்த வசீகரனை கல்யாணம் பண்ண?.” என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டான்.

“அது என்னோட இஷ்டம். முதல்ல நீங்க எதுக்காக இங்க வந்தீங்க?. உங்களுக்குத் தான் சினிமா சம்பந்தமான ஆளுங்களவே பிடிக்காதே!.” என்று அவனைப் பற்றி வெளியே உலாவும் கிசுகிசுவை வைத்துப் பேசினாள்.

இருக்கையில் இருந்து எழுந்தவன், “வெல். நானும் அந்த துறையில் தானே இருக்கேன். ஆனா என்னைப் பற்றி தெரியாதுன்னு சொலிட்டு, என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களை எல்லாம் படித்து வச்சிருக்கியே யாழு பேபி.” என்று சொல்லிக் கொண்டே, மிகவும் நெருக்கமாக அவள் அருகே வந்து நின்றவன், சித்திரம் வரையும் ஓவியனைப் போல், தன் கரங்களைக் கொண்டு, தூரிகை போல் பெண்ணவளின் சங்கு கழுத்தில் மெதுவாக கோலமிட்டான்.

அவள் தொடுகையில் மூர்ச்சையானாள் யாழினி. ஆனால் அவனைத் தடுக்கவில்லை. ஏதோ சொல்லமுடியாத ஒரு வித மாயை அவளுக்கு மயக்கத்தினைத் தந்து அவளைச் செம்மையுற செய்தது. ஆனால் விழிப்பில் இருந்த அவளது இன்னொரு மனமோ, ‘நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்.’ என்று அதிர, இதெல்லாம் நடந்த சரியாக ஒரு கணநேரத்தில், அடுத்த கணமே, அவளின் செந்தாமரை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அவனது கையை வெடுக்கென்று தன் மீது இருந்து எடுத்து விட்டவள், “என்ன பண்றீங்க?.” என்று கிட்டத்தட்ட கத்தினாள்.

அவள் கத்தலில் பொன்னம்மா வெளியே வந்துவிட்டார். “என்னாச்சி பாப்பா?.” என்று கேட்டு கொண்டே வந்தவர், அங்கே நடுநயமாக நிற்கும் ஆடவனைப் பார்த்து, எதுவோ கேட்க வருவதற்குள், “ஒன்னும் இல்ல பொன்னம்மா. நீங்க போங்க. நாங்க சும்மா பேசிக்கிட்டு தான் இருக்கோம்.” என்று சொல்லி அனுப்பினாள்.

அவரும் வேறு வழி இல்லாமல், அவளைத் திரும்பி பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.

ஒளியோன், தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, தன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கியபடி, “என்ன இது?.’ என்பது போல் கேள்வியாக பார்த்தான்.

“பிரச்சனை வேண்டாம்னு பார்க்குறேன் மிஸ்டர் சக்கரவர்த்தி.’ என்றாள் வேறு பக்கம் பார்த்தபடி.

திரும்பவும் தன் கரம் கொண்டு, அவள் கழுத்தை தொட்டு, அவளைக் கூச செய்தவன், மிகவும் மெல்லிய குரலில், “ரொம்ப வலிச்சதா?.” என்று கேட்டு அவளை அதிரச்செய்தான்.

கழுத்தில் கடித்து வைத்ததைத் தன் கேட்கின்றான் என்று மின்னால் வேகத்தில் அவள் மூளை கூற, ‘மன்னிப்பு என்ற வார்த்தையே வராமல் மன்னிப்பை கேட்பது ஒளியோனால் மட்டுமே சாத்தியம்.’ என்று அவள் மனது பிதற்றியது.

அவன் கையை திரும்பவும் தட்டிவிட்டவள், “அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க முதல்ல வெளியே போங்க.” என்றவள், அவனை அங்கிருந்து அனுப்புவதிலையே குறியாக இருந்தாள்.

“அதுக்குள்ள என்ன அவசரம் யாழு பேபி...” என்று அவன் இழுக்க.

“இப்படி தான், உங்களுக்குப் பணம் தராதவங்க வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் கடத்திட்டுப் போய், அவங்க கழுத்தை கடிச்சி வைப்பீங்களா?.” என்று தன் இடையில் கைவைத்தபடி அவள் கேட்க.

“இல்லையே! இதுக்கு முன்னாடி என் பசங்க கூட்டிட்டு வந்தது எல்லாம் எழுபது, எம்பது வயசு சின்ன பொண்ணுங்கம்மா.” என்று சிரிக்காமல் கூறினான்.

“பின்ன எதுக்கு என்னை கூட்டிட்டு போனீங்க. அதான் அந்த வசீகரன் அம்மா இருக்காங்கலே.” என்று அவள் தீவிரமான குரலில் கூற.

“அந்த வசீகரன் கிட்ட ஏது அவ்வளவு பணம். கொடுத்தா உன் அண்ணன் தானே கொடுக்கணும். அதான் உன்னை தூக்குனேன்.” என்று கெத்தாக சொன்னவன் பார்வை, அவள் நடனம் ஆடும் நிழல் படத்தின் மேல் சென்றது. அதில் தன் கையை வைத்தவன், அதை மெதுவாக வருடினான். அதில் இருந்த அவளின் வடிவம், அவனது சிந்தனையை கவர்ந்து இழுத்தது.

பின் அவளைப் பார்த்தவன், “இதில் இவ்வளவு அழகா இருக்க, இப்ப மட்டும் ஏன் சின்டெக்ஸ் டேங்க் மாதிரி இருக்க?.” என்று அவளை கோபமடைய வைக்க வேண்டும் என்ற நினைப்பில் பேச, அது சரியாக வேலையும் செய்தது.

அகரயாழினி கொஞ்சம் பூசிய உடல் வாகு தான். அதுவே அவளுக்குத் தனி அழகு தான்.

“நானா? நானா?.” என்று அவள் முழு சந்திரமுகியாக மாற, அதைப் பார்த்து தன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் ஒளியோன்.

இதை தூரத்தில் இருந்து சமையல் அறையின் தடுப்பு வழியாக பார்த்த பொன்னமா, “அவங்க சிரிச்சு சிரிச்சு தான் பேசுறாங்க ஐயா. அதுவும் அந்த சக்கரவர்த்தி, அம்மாவை தொட்டு தொட்டு பேசுறாரு. அவங்களும் ஒன்னுமே சொல்லாம சாதாரணமா தான் இருக்காங்க.” என்று அங்கே என்ன நடக்கின்றது என்று தெரியாமலையே, அகிலனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தார்.

அவன் பற்களைக் கடிப்பது பொன்னமாவிற்கு நன்றாக கேட்டது. “நான் அவரை வெளியே போகச்சொல்லவா ஐயா?.” என்று அவர் கேட்க, அதற்கு எதுவும் கூறாமல் அலைபேசியை வைத்தான் அகிலன்.

தான் வந்த வேலை சிறப்பாக முடிய, “பாய் பேபி.” என்று யாழினியின் கன்னத்தைத் தடவி விடைபெற்றான் ஒளியோன் சக்கரவர்த்தி.

‘இப்போது எதுக்காக வந்தான். எதுக்காக சென்றான்.’ என்று தெரியாமல் தலைவலிக்க ஆரம்பித்தது யாழினிக்கு.

அப்படியே தன் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள் பெண்.

இங்கே அதிகமான உஷ்ணத்தால் கொதித்துக் கொண்டிருந்தான் அகிலன். அவனை மலையிறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் நிலா.

“இவள் எதுக்காக அவன் கூடவெல்லாம் பேசுற?. அந்த நாய் எப்படி வீட்டுக்குள் நுழைஞ்சான். அவனை நான் சும்மா விடமாட்டேன்.” என்று கர்ஜித்துக் கொண்டிருந்தான்.

“பொறுமையா இருங்க அகி. ஷூட்டிங்க்கு போகணும் நேரமாச்சி இல்லையா!.” என்று அவனிடம் பேச்சை மாற்ற.

“உனக்கும் டைம் ஆச்சே!. நீ உன்னோட ஷூட்டிங் ஸ்பாட்க்குப் போ. எனக்கு வேறு வேலை இருக்கு.” என்று சொல்லிக் கொண்டே தன் முழுக்கை சட்டையை மடக்கினான்.

அவன் கையைப் பிடித்து தானே அவனது சட்டையை மடக்கிவிட்டவள், “யாழி கிட்டப்போய் கோபமா எதுவும் பேசிறாதீங்க. இதெல்லாம் அந்த ஒளியோன் வேலையாத் தான் இருக்கும். அவன் வேற எதுக்கோ, உங்களை டார்கெட் பண்ற மாதிரி தெரியுது அகி.” என்று கூற.

“அவனுக்கும் எனக்கும் வேற என்ன இருக்கு. அவன் கேட்ட பணத்தைக் கூட கொடுத்துட்டேன்.” என்றான் பெருமூச்சு விட்டவனாக.

“உங்க கண்களுக்கும் யாழியை கெட்டவளாக காட்ட ட்ரை பண்றான் அகி.” என்று மிகவும் சரியாக ஒளியோனை கணித்தாள் நிலா.

அவள் பேச்சில் சடாரென்று நிமிர்ந்து, நிலாவைப் பார்த்தவன், “அவனைப் பத்தி உனக்குத் தெரியுமே!. நீ உன் முதல் படத்திற்குப் பிறகு பல படங்கள் அவன் தயாரிப்பில் தானே நடிச்சிருக்க?.” என்று ஆராய்ச்சியாய் வினாவினான்.

அவளும், “ஆம்.” என்று தன் தலையை ஆட்ட, அவள் கையைப் பிடித்தவன், “எனக்குப் பழசை பேசுறது எல்லாம் பிடிக்கல. இதனால் உன் மனசு கஷ்டப்படும். இருந்தும் நான் உன்கிட்ட அதைக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கேன்.” என்று அவன் பீடிகையுடன் சொல்ல.

நிலாவின் இதயத்தில் திக்திக் உணர்வு தான். இருந்தும் அகிலன் வாயில் இருந்து வரப்போகும் வார்த்தைகள் என்னும் கேள்வி அம்புகளை தன்னுள் வாங்கிக்கொள்ள இதயத்தை திறந்து கொண்டு தான் நின்றாள்.

“அவன் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தியா இல்ல அவன்கிட்ட அட்ஜஸ்ட்மெண்ட்க்குப் போனியா?.” என்று பெண்ணவள் கேட்கப் பயந்த வார்த்தைகளை எல்லாம், கேள்வி என்ற பெயரில் அவள் மீது அள்ளி வீசினான்.

அகிலன் ஒருவனே தன் உலகம் என்று சுத்தி வரும் பெண்ணவளால் எப்படி இது போன்ற வார்த்தைகளை எல்லாம் ஜீரணித்துக் கொள்ளமுடியும்?. ஆரம்பித்தில் நிலாவின் பெயரோடு சேர்த்து பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பளர்கள் பெயர்கள் எல்லாம் வெளிவந்துள்ளது. ஆனால் அதெல்லாம் அவளுக்குப் பெரிய இடியாக இல்லை.

தன்னை தனக்காகவே ஏற்றுக்கொண்ட அகிலன் வாயில் இருந்து, முதன்முதலாக இதுபோல் வார்த்தைகளைக் கேட்பது, அவளுள் பிரளயத்தை ஏற்படுத்தியது.

“நீங்க என்னை தப்பா நினைச்சிட்டீங்க அகி. எனக்கு....” என்று அவள் ஏதோ கூற வர, அதை தடை செய்யும் விதமாக இடையில் பேசியவன், அவள் இரு கன்னத்தையும், தன் இருகைகளால் தாங்கிக்கொண்டு, “எனக்கு உன்னோட பாஸ்ட் எதுவும் தேவை இல்லை நிலா. ஆனா எனக்கு ஒளியோனைப் பற்றி தெரியணும்.” என்றான்.

அவன் சாதரணமாக ஒளியோனைப் பற்றி கேட்டிருக்கலாம், அதைவிட்டு, அவன் இதுபோல் வாக்கியங்களை அமைத்துப் பேசியது, பெண்ணவள் நெஞ்சில் வடுவாகிவிட்டது.

அவள் கண்கள் இரண்டும் கலங்க, “என் வாழ்க்கையில் இப்பவும் சரி, அப்பவும் சரி நீங்கள் ஒருத்தர் மட்டும் தான் அகி.’ என்க.

அகிலன், “அப்ப அவன்கிட்ட அட்ஜஸ்ட்மெண்ட்க்குப் போனியா?.” என்றான். ஒரு பெண், தன் காதலனிடம் இருந்து கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் மனம் நொடிந்து போய் கேட்டுக் கொண்டு இருந்தாள்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 8

அகிலன் கேட்ட கேள்வியில், நிலாவின் மனது ஊமையாய் அழுதது. ஆனால் அவள் நிலையை உணராத அகிலன் திரும்பவும், “சொல்லு நிலா. அவன்கிட்ட அட்ஜஸ்ட்மெண்ட்க்குப் போனியா?.” என்று அதில் வந்தே நின்றான்.

ஒருநிலைக்கு மேல் பொறுக்காதவள், “நான் தான் சொல்லிட்டேனே அகிலன். நீ... நீங்க மட்டும் தான் எனக்கு எல்லாமுமே!. அது உங்களுக்கே தெரியுமே!. என் முதல் நீங்க மட்டும் தான்னு.” என்று சொல்லிவிட்டு வெடித்து அழுதாள்.

தன் தலையைக் கோதியவன், “எனக்குத் தெரியும். நீ என்கிட்டே வரும் போது, நீ வெர்ஜின். ஆனா....” என்று வார்த்தைகளை எவ்வாறு தேர்ந்தேடுத்து பேசுவது என்று குழப்பம் கொண்டு, தான் கேட்க வந்த வார்த்தைகளை பாதியிலையே நிறுத்தினான்.

அதில் குழம்பியவள், தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “என்ன கேட்க வந்தீங்க?.” என்றாள் அகிலனை நேர்பார்வை பார்த்தபடி.

மூச்சை இழுத்து வெளியே விட்டவன், “என்கூட இருந்ததுக்குப் பிறகு தான் நீ அந்த ஒளியோன் கூட ரகசியமா பேசி இருக்க.” என்று சொல்லி நிறுத்தினான்.

அவன் சொல்லில் அவள் உலகமே இருண்டது போல் ஆனது. தொடர்ந்து பேசிய அகிலன், “ஆனால், நான் உன்னை நம்புறேன் நிலா.” என்க.

மெதுவாக அதிர்ச்சியில் இருந்து மீண்டவள், “இப்ப என்ன சொல்லவரீங்க அகிலன்.” என்று கேட்டாள்.

“நான் சுத்தி வளைச்சு கேட்க விரும்பல நிலா. நேரடியாவே கேட்குறேன். உனக்கும் ஒளியோனுக்கும் நடுவில் என்ன இருக்கு?.” என்று விஷயத்திற்கு வந்தான்.

அவள் முகம் சோர்வைக் கட்டியதைப் பார்த்தவன், தன் தலையில் அடித்துக் கொண்டு, “உன்னை வச்சி அவன் என்னை பழி வாங்க நினைக்குறானான்னு தெரியல. நான் தப்பா எதுவும் கேட்கல. அவன் படத்துல நீ நடிக்குறதுனால பணத்தகராறு எதுவுமொன்னு நினைச்சேன். அதான் கேட்டேன்.” என்றான் சாதாரணமாக.

சிறிது நேரத்திற்கு முன்பு பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பெண்ணவளிடம் கேட்டு, அவள் மனதினை வலிக்க செய்தவன், இப்போது உன்னை நான் தவறாக நினைக்கவில்லை, என்ற ரீதியில் பேசினான்.

நிலாவோ, அகிலனை கணவனாகவே எண்ண ஆரம்பித்து வெகுகாலமாகிவிட்டது. அகிலனை வைத்து மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும், சிறிதும் அவனிடம் அதைக்காட்டிக் கொள்ளமாட்டாள். அவளை வலிக்க வலிக்க வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், அந்த நிமிடம் வருந்தி அழுபவள், அவன் லேசாக அன்பாக ஒரு வார்த்தை பேசிவிட்டால் போதும், அப்படியே அவன் முதலில் பேசிய அனைத்தையும் மறந்துவிட்டு, அவன்பால் உருக ஆரம்பித்துவிடுவாள்.

ஆனால் கவலைகள் அவள் ஆழ்மனதில் அடைந்து கொண்டு தான் இருந்தது. அதை வெளியே காட்டுவதற்கும் ஆள் கிடையாது. அதுவும் அகிலன் முன்னால் அவளால் முடியவே முடியாது.

இப்போது தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, அவனைப் பார்த்தவள், “அப்படி எல்லாம் எதுவும் இல்லை அகி. ஆனால் இனி இது போல் என்கிட்ட கேட்காதீங்க அகி. ஒளியோன் என்னோட ரெண்டு வயசு சின்னவன்.” என்றாள்.

“தேவைகளுக்கு சின்னவன், பெரியவன் எல்லாம் தெரியாது நிலா.” என்று அவளுக்கு கேட்காதவாறு தனக்குள் முணுமுணுத்தவன், “சரி அவனை வச்சி நமக்குள்ள பிரச்சனை வேண்டாம்.” என்றவன் அவள் இதழில் தன் இதழைப் பொருத்தினான்.

‘இவர் என்ன பண்றார்?.’ என்ற பாவனையில் முதலில் இருந்தவள், பின் அவன் முத்தத்தில் தானும் கரைந்தாள். அவள் அகிலனை உணர்ந்த அளவுக்கு, அகிலன் அவளை உணர்ந்தானா என்பது தெரியாது. ஆனால் அவளின் காதல், அதே அளவில் அகிலன் மனதில் இருக்குமா என்றும் தெரியாது. அகிலனின் உணர்வுகள் எல்லாம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

தன் அறையில் இருந்த முழு நீளகண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள் அகரயாழினி, தன் இடது பக்க கழுத்தில் சிறியதாக சிவந்திருப்பதை அப்போது தான் பார்த்தவளுக்கு கோபம் பயங்கரமாக வந்தது.

காலையில் எழுந்து ஏனோ தானோவென்று கிளம்பி வந்தவளின் கண்களின் அப்போது அது புலப்படவில்லை. காதலனாக நினத்தவனிடம் கூட அவள் இரண்டு அடி தள்ளியே தான் இருந்தாள். அப்படி இருந்த பெண்ணிற்கு கோபம் வருவது இயல்பு தானே!

“அந்த ஒளியோன் முகத்தில் இனி முழிக்கவே கூடாது.” என்று தனக்குத் தானே ஓராயிரம் முறை சொல்லிக்கொண்டாள். ஆனால் அவனும் அது போல் எண்ண வேண்டுமே!

அப்போது அவளின் பொட்டிக்கில் இருந்து அகரயாழினிக்கு அழைப்பு வந்தது, அதை எடுத்து தன் காதில் வைத்தவள், அந்தப்பக்கம் கேட்ட செய்தியைக் கேட்டு ஆனந்தம் அடைந்தாள்.

“நிஜமாவா சொல்ற?.” என்று தன் பிஏவிடம் கேட்டவள், பின், “என்னால இன்னைக்கு பொட்டிக் வரமுடியாது. அதனால அவங்க மேனேஜரை வீட்டுக்குக் கூட்டிட்டு வா. நான் இங்கையே அக்ரீமென்ட்டைல சைன் பண்ணிடுறேன்.” என்று சொல்லிவிட்டு வைத்தாள்.

சற்று முன்பு வரை இருந்த கோபம் சுத்தமாக அவளிடம் இல்லை. துடைத்து வைத்த வெண்கல விளக்கைப் போல் மின்னியவள், ஒளியோன் வந்து தன்னிடம் பேசியதையும், அத்து மீறி தன்னைத் தொட்டதையும் மறந்தாள்.

அவளின் பல நாள் கனவு நிறைவேற உள்ள பூரிப்பில் இருந்தவள் அனைத்தையும் மறந்தாள். பின் சிறிது நேரம் கடந்து, அவளின் பிஏ, ஒருவரை அழைத்துவந்தாள்.

ஐம்பது வயதிருக்கும் அவரைப் பார்த்தவள் மரியாதை நிமித்தமாக, அவரை வரவேற்று உபசரித்தாள்.

அவரோ, ‘இன்ஸ்டாலா இருக்குற உங்க டிசைன்ஸ் எல்லாம் எங்க பாஸுக்கு மிகவும் பிடிச்சு போச்சு மேடம். அவர் உங்கக்கூட டைஅப் வச்சுக்கிறதுல ஆர்வமா இருக்காரு.” என்றபடியே, மார்டன் பேஷன் என்று அச்சிடப்பட்டு இருந்த சில காகிதங்களை அவளிடம் நீட்டினார்.

அதை வாங்கிப்படித்துப் பார்த்தவள் அதில் கையொப்பம் இட்டாள். நேற்றில் இருந்து அவளுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் இப்போது சிறிதும் அவளிடம் இல்லை. புதியதாக பிறந்ததைப் போல் உணர்ந்தவள், அவர்கள் சென்றதும், புதிய வேலைக்கு தேவையான ஆயத்தங்களை தன் கணினியில் பார்வையிட ஆரம்பித்தாள்.

சிலபல வேலைகளை வீட்டில் இருந்தே பார்த்தவள், தன் மகிழ்ச்சியைப் பகிர, அவள் அண்ணனின் வருகைக்காக காத்திருந்தாள்.

மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்தான் அகிலன். காலையில், வேலைக்காரி பொன்னம்மா போன் செய்து விஷயத்தை சொன்னதும், அதிகப்படியான கோபத்தில் இருந்தவனின் மனம் சிறிது மட்டுப்பட்டிருந்தது. ஆனால் அவனுள் இன்னும் ஒளியோனை அழிக்க வேண்டும் என்ற கங்கு கனன்று கொண்டே தான் இருந்தது.

அகிலனைப் பார்த்ததும், ஆரவாரமாக ஓடி வந்த அகரயாழினி, “இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் நீ வருவன்னு நான் நினைக்கலை அண்ணா.” என்று குரலில் உற்சாகத்தைக் கூட்டிப் பேச, அதற்கு சிறிதும் அகிலனிடம் அசைவு இல்லை.

மாறாக, “ரொம்ப சந்தோஷமாக இருக்கப் போல?.” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்க.

அப்போது தான் அவன் வந்த தோற்றத்தைப் பார்த்தாள் அகரயாழினி, “என்னாச்சி அண்ணா?. ஏன் இப்படி இருக்க?. குடிச்சி இருக்கியா?.” என்று அவன் சிவந்த கண்களைப் பார்த்தபடி கேட்க.

அதற்கும் அகிலன் தன் வாயைத் திறக்கவில்லை. காலையில் நிலாவுடன் இருந்த தன் அண்ணன். இப்படி பட்டப்பகலிலையே குடித்துவிட்டு வருவான் என்று அவள் சிறிதும் யோசிக்கவில்லை.

அவன் இருந்த தோற்றத்தைப் பார்த்த யாழினியின் கோபம் அப்படியே நிலாவின் மீது தான் திரும்பியது.

‘எல்லாம் அவள் வேலையாகத் தான் இருக்கும்.’ என்று நினைத்தவளுக்கு, சிறிது நேரம் முன்பு வரை இருந்த மகிழ்ச்சி இப்போது சுத்தமாக இல்லை.

அகிலனின் கையைப் பிடித்தவள், “ஏதாவது பிரச்சனையா அண்ணா?.” என்று பதற்றத்துடன் வினாவ.

இப்போது தான் தன் வாயை மெல்லத் திறந்து பேச ஆரம்பித்தான், “பிரச்சனை தான்.” என்று மட்டும் சொல்லி உள்ளே நுழைந்தான்.

அவன் பின்னே வந்தவள், “அந்த நிலா ஏதவாது....” என்று அவள் தன் சொற்களை முடிக்கவில்லை, அதற்குள் ருத்ர மூர்த்தியாக மாறிய அகிலன், “உன்னால் தான் பிரச்சனை அவளால் இல்லை.” என்று கத்தினான்.

அவன் வார்த்தைகளில் அசைவற்று நின்றுவிட்டாள் பெண். அவள் ஏதேனும் தவறு செய்தாலும், அன்பாக பேசி அதை திருத்துவானே தவிர, இது போல் எல்லாம் கத்த மாட்டான்.

இப்போது தன் அண்ணனின் புதிய அவதாரத்தைக் கண்டவள் அதிர்ச்சியில் சிலையானாள். அவளின் நிலையை உணர்ந்தவன், தன் நெற்றியை நீவிவிட்டு, அவள் அருகில் சென்றவன், அவள் தோள்களைப் பற்றி, “கொஞ்சம் டென்ஷன்டா. என்னை மன்னிச்சிரு.” என்று மிகவும் வருத்ததுடன் பேசினான்.

அப்போது தான் இயல்புக்குத் திரும்பிய, யாழினி, “நான்...நான் உன்கிட்ட ஆசை ஆசையா ஒரு விஷயம் சொல்ல காத்திருந்தேன். ஆனா நீ...” என்று சொன்னவளுக்கு, அடுத்த வார்த்தை வெளியே வராமல், அவள் கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

ஆனால் அவளை சமாதனாம் செய்யும் எண்ணம் இல்லாதவனாக, “மச் யாழி...” என்று அழுத்தத்துடன் அவள் பெயரை உச்சரித்தவன், அவள் நாடியை நிமிர்த்தி, “ஒளியோன் எதுக்காக இங்க வந்தான்?.” என்று கேட்க.

அப்போது தான அவன் கோபத்திற்கான காராணம் யாழினிக்குப் புரிந்தது.

“தெரியல அண்ணா. நான் இதோ, இங்க உட்காந்துருக்கும் போது திடீர்ன்னு என் முன்னால் வந்து நின்னாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நான் அவரை வெளிய போக சொன்னேன்.” என்றவள் சில விஷயங்களை மட்டும் முழுங்கிவிட்டு, நடந்ததை அப்படியே கூறினாள்.

அதில் அகிலனின் மனம் சமாதானம் அடையவில்லை. “அரைமணி நேரமா இதை மட்டும் தான் நீ பேசுனியா?.” என்று புருவத்தை சுருக்கியபடி கேட்டு, யாழினியின் கோபத்தை அதிகரித்தான்.

“என்ன பேசுற அண்ணா?. நான் ஒளியோன் கிட்ட அரைமணிநேரமா பேசுனேன்னு, உனக்கு தகவல் சொன்ன அந்த ஸ்பை, நான் என்ன பேசுனேன்னு சொல்லலையா?. நீயும் அந்த வசீகரன் போல தான் பேசுற.” என்றால உதட்டை சுழித்து வேறு பக்கம் பார்த்தபடி.

“மச்.. பேச்சை மாத்தாத. அவன் எப்படி உள்ளே வந்தான்.” என்று கத்த.

“அதை நீ வெளிய வேலைக்கு வச்ச வாட்ச்மேன் கிட்ட தான் கேட்கணும்.” என்று சொல்லி தன் தோளைக் குலுக்கினாள்.

தன் பல்லைக் கடித்த அகிலன், “அவன் ஏதாவது உன்னை மிரட்டுனான்னு நினைச்சு கேட்டா, நீ என்ன பேசுற?.” என்க.

“ஆனால் நீ கேட்கும் பாவனை அப்படி இல்லையே அண்ணா. என்னை சந்தேகப்படுற மாதிரி இருக்கு உன் கேள்விகள் எல்லாம்.” என்று சொல்லி நிறுத்தியவள், பின் என்ன நினைத்தாளோ, “உன்னை மாதிரி நான் நிச்சயம் கிடையாது.” என்று வார்த்தைகளை விட, அதில் அதிர்ந்து விழித்தான் அகிலன்.

“என்ன பார்குற?. அந்த நடிகை கூட நீ அடிக்கும் கூத்து எல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?.” என்று முதன் முதலாக தன் அண்ணனை எதிர்த்து பேசினாள் அகரயாழினி.

ஒளியோன் அங்கே வந்து, அவர்களுக்கே தெரியாமல், பற்றவைத்துவிட்டு சென்ற நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 9

திரைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் யாவும் தெரியாமல் இருக்க, அகர யாழினி ஒன்றும் சிறு குழந்தை இல்லையே!.

அகரயாழினியின் பேச்சில், அகிலன் அதிர்வுகளுக்கு உள்ளானான். அவன் அமைதியைப் பார்த்து, தான் என்ன பேசுகின்றோம் என்று புரியாமல் பேச ஆரம்பித்தாள் அகரயாழினி.

“உன்னையும் அந்த நிலாவையும் சேர்த்து வச்சு, பார்க்கவே கண்கூசுற மாதிரியான விஷயங்கள் எல்லாம் வருது. அதைப் பத்தி நீ என்கிட்ட ஏதவாது விளக்கம் சொல்லி இருக்கியா?, இல்லை நான் தான் அதைப் பற்றி கேட்டு இருப்பேனா!.” என்று அனல் தகிக்கும் வார்த்தைகளைப் பேசினாள்.

நிலாவுடன் அகிலன் சேர்ந்து சுத்துவதை இதுநாள் வரை கண்டுகொள்ளாமல் இருந்தாலும், அவள் மனதில் ஏற்பட்ட கலக்கத்தை எல்லாம் இன்று கொட்டி தீர்த்தாள்.

தாடை இறுக ஒரு முறை சுவாசத்தை ஆழ்ந்து வெளியிட்டவன், “பேசி முடிச்சிட்டியா?.” என்பது போல் அவளைப் பார்த்தான்.

அவளும் பேசுவதை எல்லாம் பேசிவிட்டு மூச்சு வாங்க அகிலனைப் பார்க்க, அவனோ, “உன்கிட்ட அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி எல்லாம் பேசுற?.” என்க.

“நீ என்கிட்ட ரூடா பேசுன. அதனால் தான் என் பேச்சும் அப்படி இருக்கு. அதுவும் அந்த நிலா...” என்று ஏதோ சொல்ல வருவதற்குள், அவள் வார்த்தைகளை முடிக்க விடாமல், “போதும் நிறுத்து. இப்ப நம்ம பேச்சில் எதுக்கு தேவை இல்லாம அவளை இழுக்குற.” என்று கத்தினான்.

“நான் அப்படி தான் இழுப்பேன். இதோ நீ இப்படி பேசுறியே, அதுக்குக் காரணம் அவள் மட்டும் தான்.” என்றாள் மரியாதையைக் கைவிட்டவளாக.

“யாழினி திரும்பவும் சொல்றேன், அவளை இழுக்காத.” என்றான் எச்சரிக்கையாக.

“ஏன்? என்னை என்ன செஞ்சுருவ?. நான் நடிப்பதை தவறுன்னு சொல்லவே இல்லை, இன்பாக்ட் நானும் அதே துறையின் குடும்பத்தை சேர்ந்தவள் தான். ஆனா அவள் குடும்ப பின்னணி என்னவென்று தெரிஞ்சும் எப்படி நீ அவள் பின்னாடி சுத்தலாம். இங்கப்பாரு பகல்லையே குடிச்சிட்டு வந்துருக்க. அவள் தானே இதுக்குக் காரணம்.” என்றாள் அவனை சுட்டிக்காட்டியபடி.

“ம்ச்... அவள் குடும்ப பின்னணி தெரிஞ்சு தான் நான் அவளிடம் எட்டியே நிற்குறேன்.” என்றான் கடினமான குரலில்.

அதைக் கேட்ட அகரயாழினிக்கு குழப்பம் உண்டானது. இருவருக்குமே திருமணத்தில் உடன்பாடு இல்லை என்ற காரணத்தால் தான் இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர் என்று நினைத்தவள், இப்போது அகிலன் பேச்சில் அதிர்ந்து விழித்தாள்.

தன் பேச்சைக் கேட்டாவது, அவன் நிலாவுக்கு ஆதரவாகவும் அவளுடன் உண்டான திருமணத்தைப் பற்றியும் யோசிப்பான் என்று நினைத்தவள், அவனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

“என்ன அண்ணா சொல்ற?. நீ நிலாவை விரும்புற தானே!.” என்று கேட்க.

“ம்ச்... சில விஷயங்கள் எதுவும் உனக்குப் புரியாது யாழி. இனி நம் பேச்சில் எப்போதும் நிலா வரக்கூடாது.” என்றான் உறுதியான குரலில்.

அவன் பேச்சில் குழப்பம் அடைந்தவள், ‘இது என்ன மாதிரியான உறவு!.’ என்று எண்ணம் கொண்டாள்.

அவள் அமைதியாக யோசனையில் நிற்க, “இங்கப்பாரு யாழி. இனி நாம கவனமா இருக்கணும். அந்த ஒளியோனை வச்சி நமக்குள்ள பிரச்சனை வேண்டாம். அவன் பெயரை கூட நாம் உச்சரிக்க வேண்டாம் சரியா.” என்று அவள் தலையைத் தடவியபடி கூற.

நிலாவின் எண்ணத்தில் உழன்றவள். அகிலன் சொன்னதைக் கேட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பதுமை போல், அவளது தலையும் தானாக ஆடியது.

பின் அகிலன் தன் அறையை நோக்கி செல்ல, அவனை அழைத்தாள் அகரயாழினி.

“அண்ணா!.” என்றதும் திரும்பி அவளைப் பார்த்தவன், “என்ன யாழி?.” என்றான்.

“அது... நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ.” என்றாள் கண்களில் யாசகத்தை தேங்கி வைத்தபடி.

அதில் மென்மையாக சிரித்தவன், அவள் அருகே வந்து, “பெரிய பெண்ணாகிட்ட போல யாழி.” என்றான் கேலியாக.

ஆனால் அவனது சிரிப்பு, யாழினியை எட்டவில்லை. இருந்தும் கண்களுக்கு எட்டாமல் புன்னகை புரிந்தவள், “எனக்கு அண்ணி வேணும்னு ஆசையா இருக்கு.” என்று சொல்லி தலை குனிந்தாள்.

“கூடிய சீக்கிரமே உன் அண்ணியை வீட்டுக்குக் கூட்டிட்டுவறேன் சரியா.” என்றான் மென்மையாக.

“அது அது... நிலாவா?.” என்று திக்கித்திணறிய குரலில் யாழினி கேட்டு விட்டாள். அதற்கு முன்னால் அவள் நிலவைப் பற்றி பேசிய போது இருந்த திடம் இப்போது அவளிடம் இல்லை.

“ஹேய் யாழி. நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட. நிலா எனக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான். மீடியாவில் வரும் கிசுகிசுக்களை எல்லாம் நீ ஏன் நம்புற?.” என்றவன் குரலில் இப்போது சிறிது விரக்தி இருந்தது.

யாழினிக்கோ குழப்பத்திற்கு மேல் குழப்பம், ‘நான் நினைச்சது தான் தவறோ!. ஐயோ! நான் அண்ணன் கிட்ட என்னவெல்லாம் பேசிட்டேன்.” என்று மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

அவளின் நிலையை உணர்ந்தவன், “யாழி... பீ ஹாப்பி... நீ என்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேசுவ?. நமக்குள்ள சில மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அதை பேசி தானே தீர்க்க முடியும்.” என்றான் ஆறுதலாக.

“சாரி அண்ணா.” என்று அவனை அணைத்தபடி அழுதாள் யாழினி. அவனும் அவள் முதுகை தடவி அவளுக்கு ஆறுதல் அளித்தான். ‘பின், ஏன் நிலாவை எனக்கு நீ முறையாக அறிமுகம் செய்யவில்லை?. ஏன் அவள் நம் வீட்டிற்க்கு வருவதில்லை.’ என்ற கேள்விகள் எல்லாம் பாவம் அந்த அப்பாவி பெண்ணிற்கு எழவில்லை.

மேலும் அகிலனிடம் பேசிய அகரயாழினி, “அண்ணா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதை சொல்றதுக்குத் தான், நான் உனக்காக காத்திருந்தேன்.” என்றாள் சிறுபிள்ளை போல்.

அவளது குரலில் இளகியவன், ‘தன் தங்கையின் மகிழ்ச்சிக்கு ஒளியோன் காரணம் இல்லை.’ என்று எண்ணும் போதே அவன் மனது லேசானது போல் இருந்தது. பின் அவளை தேவை இல்லாமல் மனம் வருந்தும் படி பேசி விட்டோம்.’ என்று வருந்தியவன், வெளியே அவள் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை அறியாமலையே, அவள் மகிழ்ச்சியில் தானும் பங்கு பெற்றவனாய், “அப்ப, என் தங்கச்சி எதையோ சாதிச்சிட்டு தான் வந்துருக்கா. சரி என்ன விஷயம்?.” என்றான் ஆரவாரமாய்.

“மாடர்ன் பேஷன் கூட என்னோட பொட்டிக் டைஅப் வச்சுக்கப் போகுது.” என்றாள் முகம் முழுவதும் புன்னகையுடன்.

“மார்டன் பேஷனா?.” என்று அவன் புருவத்தில் யோசனை முடிச்சு விழுந்தது.

அவன் குழப்பத்தைக் கண்டு, “ஆமாம் அண்ணா. இப்ப மிகப்பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் அவங்க கையில் தான் இருக்கு. பாலிவுட் படத்துக்கு எல்லாம் அவங்க தான் காஸ்ட்டியும் டிசைன் பண்றாங்க. இப்ப, தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்துக்கு என் பொட்டிக் கூட டைஅப் வச்சிருக்காங்க.” என்று அனைத்தையும் அவனிடம் ஒப்பித்தாள்.

“மாடர்ன் பேஷன்.” என்று திரும்பவும் அந்த பெயரை உச்சரித்தவன், அகரயாழினியைப் பார்த்து, “ஓகேடா. நல்லா பண்ணு. நானும் கேள்விப்பட்டு இருக்கேன். இது நல்ல சான்ஸ் தான். அந்த படத்தில் டைரக்டர் கூட பாலிவுட்டை சேர்ந்தவர் தான். இது சக்சஸ் ஆச்சுன்னா, நீ பாலிவுட் வரையும் போகலாம்.” என்று சொல்லி அவளுக்கு வாழ்த்து கூறினான்.

ஆனால் அந்த பெயர் அவன் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. பின் அந்த நிறுவனத்தை கூகிள் மூலம் பார்த்தவன், அதில் சிஇஒவாக இருந்தவரின் புகைப்படத்தைப் பார்த்து, “ஓகே யாழ். இதில் எதுவும் பிரச்சனை இல்லாத மாதிரி தான் இருக்கு.” என்று தலையை ஆட்டிக்கொண்டான்.

விவிஐபிக்களுக்கெல்லாம் டிரெஸ் டிசைன் செய்தாலும், அகரயாழினியின் கனவு எல்லாம் படத்திற்கு உடை வடிவமைத்து விட வேண்டும் என்பதில் தான் இருந்தது. என்ன தான் அகிலன் பெரிய டைரக்டராக இருந்தாலும், அவன் என்றுமே தன் தங்கையை சிபாரிசு செய்தது இல்லை. அகரயாழினியும் அதை விரும்பமாட்டாள்.

அண்ணன் தங்கையின் மகிழ்ச்சியை குலைக்கவே ஒருவன் வேலை செய்துகொண்டிருக்கின்றான் என்பதை அறியாத இருவரும் மகிழ்ச்சியாக இரவு உணவை உண்டனர்.

அகிலன் வீட்டில் நடந்த மேற்படி சம்பாஷணைகள் அனைத்தையும், தன் அறையில் நடுநயமாக அமர்ந்திருந்த ஒளியோன் சக்கரவர்த்தி பல்லைக்கடித்தபடி, தன் ஆந்தை கண் மூலம் கணினியில் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆம் அவன் யாழினி வீட்டில், யாருக்கும் தெரியாமல் மிகவும் சிறிய கண்காணிப்பு கேமிராவை, சுவற்றில் மாட்டி இருந்த அகரயாழினியின் புகைப்படத்தின் ஓரம் இருந்த சட்டத்தில் மாட்டி வைத்துவிட்டு வந்தானே!. அதன் வழியே அவன் கண்ட காட்சியைப் பார்த்து தான் கொதித்துப் போய் அமர்ந்து இருக்கின்றான்.

“இது எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்குறேன்.” என்று வன்மமாக சொல்லிக்கொண்டான் ஒளியோன் சக்கரவர்த்தி.

இதில், ஒளியோன் சக்கரவர்த்தியின் தலையில் சூடு ஏற, அதை தனிக்க, தன் மேல்சட்டையைக் கழட்டி கீழே எறிந்தவன், டால்பினைப் போல, நீச்சல் குளத்தில் பாய்ந்தான். சிறிது நேரம் நீச்சல் அடித்த பின், அவனது சூடு சிறிது இறங்கி இருந்தது.

அவன் இதழில் சிறியதாக இருந்த புன்னகை கீற்று, அவன் அடுத்ததாக நிகழ்த்தப்போகும், சேதத்தைப் பறைசாற்றியது.

பின் மேலே வந்து பூந்துவளையால் தன் வெற்று மார்பை துடைக்க, அப்போது சத்தமிட்டது அவனது அலைபேசி. அதில், “மை மூன்.” என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒளியின் முகம் ஒரு கணம் இறுகி பின் சகஜமானது. அதை எடுத்து அவன் காதில் வைக்க, அந்தப்பக்கம் அமைதி.

அந்த அமைதியைக் கலைத்தவன், “என் நம்பர் கூட வச்சிருக்கியா?. அவன் கூட போனதில் இருந்து என்னை மறந்துப்பன்னு நினைச்சேன்.” என்று அவன் அழுத்தமாக கேட்க.

இப்போதும் அந்தப்பக்கம் அமைதி தான். அதில் எரிச்சல் அடைந்தவன், “நிலா.... பேசு.” என்றான் பல்லைக்கடித்தபடி.

ஆம் அகிலனை தன் உலகமாக எண்ணும் அதே நிலா தான். இப்போது தான் மெல்ல தன் வாயைத் திறந்து, “எதுக்காக அகரயாழினியிடம் பிரச்சனை பண்ற?.” என்று அவள் கேட்க.

அதற்கு பெருங்குரல் எடுத்து சிரித்தவன், “இதுக்குத் தான் போன் பண்ணியா?.” என்றான்.

“ஆமா. வேற எதுக்காக அதுக்குத் தான்.” என்றவள் குரலில் இப்போது திமிர் இருந்தது.

“இங்க நான் உன்னை மறக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா நீ...” என்ற ஒளியோனுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.

“நான் தான் என்னை மறந்துடுன்னு உன்கிட்ட சொன்னேனே!.” என்று அவள் எதிர் கேள்வி கேட்க.

“நீ போன் பண்ணதும், முதலில் என் நலனைக் கேட்கணும்னு கூட உனக்கு தோணலைல.” என்று விரக்தியாக அவன் வேறு கேள்வி கேட்க.

“உன்னை நான் மறந்து பல வருஷம் ஆச்சு. இப்ப கூட உன் படத்துல நடிச்சேங்குற காரணத்துக்காக தான் பேசிக்கிட்டு இருக்கேன். உனக்கு என்ன தான் வேணும்?. எதுக்காக அகிலன் குடும்பத்தோட விளையாடுற?.” என்று அவள் எரிச்சலாக கேட்க.

“எனக்கு நீ தான் வேணும்.” என்று கத்தியவன் குரல், இடியின் ஓசை போல, அவள் காதில் வந்து பலத்த சத்தத்துடன் விழுந்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 10

“உடைஞ்சு போனதை எதுக்காக ஒட்ட வைக்க நினைக்குற ஒளி.” என்று இப்போது நிலாவின் பேச்சு மிகவும் மெல்லியதாக ஒலித்தது.

ஆனால் அவள் பேச்சைக் கண்டுகொள்ளாத ஒளியோன், “எனக்கு நீ தான் வேணும். என்னோட அக்கா எனக்கு வேணும்.” என்று வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டிக் கூற.

ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்தவள், “மச்... யாருக்கு யாருடா அக்கா?. அதெல்லாம் எதுவும் கிடையாது. உன் படத்துல வேலை செஞ்ச நடிகை மட்டும் தான் நான். நீ யாழினியின் வாழ்கையில் குறுக்க வருவது எனக்கு பிடிக்கல. நீ என்ன நினைச்சு இப்படி பண்றன்னு புரியல. ஆனா அதுக்கான காரணம் நானா இருக்கும் பட்சத்தில் எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.” என்று அவள் வார்த்தைகள் என்னும் சொல் அம்புகளால் அவனைத் தாக்கினாள்.

யார் செய்த பிழை என்று தெரியவில்லை. உண்மையான அன்பை பாவம் பெண்ணவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

ஒளியோன் முகத்தில் எந்தவித பாவனையும் இல்லை மிகவும் சாதாரணமாக, “சரி. அப்படியே நானும் பேசுறேன். என் படத்தில் வேலை செஞ்ச ஒரு சாதாரண நடிகை நீ. உனக்கு நான் எதுக்காக பதில் சொல்லணும்?. இங்கப்பாரு உன் வழியில் நான் குறுக்க வரல. அதே மாதிரி என் வழியில் நீ குறுக்க வராத. என்னை உன் உறவா நினைச்சு பேச நினைச்சா மட்டும் பேசு.” என்று அடிக்குரலில் சீறினான்.

திரும்பவும் அவள் குரலில் தடுமாற்றம், “நீ எனக்காக....” என்று அவள் அடுத்துப் பேச தடுமாற.

“நிறுத்துறியா. உன் கதையை கேட்க, நான் ஒன்னும் ஆள் இல்ல. என்கிட்ட கைக்கட்டி சம்பளம் வாங்குற உனக்கு, நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல.” என்று கத்திவிட்டு வைத்தவன் முகம் பாறை போல் இறுகி இருந்தது.

சட்டையை அணிந்தவன், தன் கார் கீயை எடுத்துக் கொண்டு அதிவேகமாக பப்பை நோக்கிப் பறந்தான்.

இந்தப்பக்கம் தன் அலைபேசியையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. அப்போது, “நிலா...” என்று ஆதவனின் குரல் கேட்க, வேகமாக தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தவள், சிரித்த முகத்துடன், அவன் முன்பு சென்று நின்றாள்.

இங்கே ஆட்டமும் பாட்டமுமாய் அந்த இடமே அல்லோல்பட்டுக் கிடந்தது. அந்த பப்பில் ஆண் பெண் பேதம் இல்லாமல், அனைவரும் ஒன்றாக ஆட, சிலர், கையில் மது கோப்பையுடன் அதை வேடிக்கைப் பார்க்க, இன்னும் சிலர், எதையும் கண்டுக்கொள்ளாமல், குடுப்பதற்கென்றே பிறந்தவர்கள் போல இருந்தனர்.

அங்கே தன் நண்பிகளுடன் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள் அகரயாழினி, அவளது கையிலும் ஒரு மது கோப்பை இருந்தது.

அதில் ஒருத்தி, “என்ன யாழு பேபி, இவ்வளவு நடந்த பிறகும் நீ வெளியே வரமாட்டன்னு நாங்க நினைச்சா, நீ என்னடான்னா, வெளிய வந்ததும் இல்லாம, எங்களுக்கு பார்ட்டி வேற குடுக்குற.” என்று சொல்ல, அந்த கூட்டத்தில், “கொள்” என்று சிரிப்பலை.

அகரயாழினி, மிகவும் ஸ்டைலாக தன் முன்பக்கம் இருந்த முடியை, ஒற்றை கையால், தோளுக்குப் பின் போட்டவள், “இப்ப என்ன நடந்துருச்சு?. நடந்ததுல என் மேல என்ன தப்பு?. ஆம்பளைங்க பண்ற தப்புக்கு, பெண்கள் எதுக்கு முக்காடு போட்டு அலையணும்?.” என்று படபடப்பாக கேட்க.

இன்னொரு தோழியோ, “ஹேய் யாழு, சில். பொதுவா அப்படி தானே நடக்குது.” என்று சொல்லி சமாளித்தாள். அதற்கும் தோழிகள் அனைவரும் எதற்கு சிரிக்கின்றோம் என்று தெரியாமலையே சிரித்து வைத்தனர்.

பல்லைக் கடித்த அகரயாழினி அங்கிருந்து தள்ளிப் போய், ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். இரவு நேர பார்ட்டி உடையில் இருந்தவளை, பல கண்கள் தொட்டுவிட்டு சென்றன. ஆனால் ஒரு ஜோடி கண்கள் மட்டும் அவளை மீறி வேறு எங்கும் பார்க்கவில்லை.

அவனே கருப்பு உடையில் இருந்த ஒளியோன். அவன் கண்களில் குளுமை இல்லை. மாறாக பெண்ணவளை தன் கண்களாலே எரித்துவிடும் அனல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

அவளும், அகிலனும் பேசியது, இன்னும் ஒளியோன் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

அகரயாழினி முன்பு வந்த வெய்டர், “வோட்கா ஆர் ஜின் மேடம்?.” என்று தன் கைகளில் மது கோப்பைகளை தாங்கியபடி கேட்க.

அவளோ, “நோ தேங்க்ஸ்.’ என்று சொல்லி அவனை அனுப்பினாள். தன் கையில் ஒயின் க்ளாசை வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தவள், அதை குடிக்க மனமின்றி அதை அப்படியே மேஜையில் வைத்துவிட்டாள்.

அன்று காலை, மிகவும் சந்தோஷமாக இருந்தவள் மனநிலை, இப்போது உடைந்த பனிக்கட்டியாக உருகியது. அவளது நினைப்பு எல்லாம் வசீகரனை சுற்றியே இருந்தது.

அவனை இழந்ததை நினைத்து கவலை இல்லை மாறாக, ‘அவன் என் வாழ்க்கையில் இல்லாதது வருத்தமாகவே இல்லையே!. காதல் கைகூடவில்லை என்றால், வருத்தம் தானே இருக்க வேண்டும்!.’ என்று தீவிர சிந்தனையில் இருந்தவள், ஒளியோன் தன் முன் வந்து நின்றதை அவள் கவனிக்கவில்லை.

சில கணங்கள் கடந்தே தன் முன் சூ காலுடன் நின்றிருந்த ஆடவனை நிமிர்ந்து பார்த்தாள். யாரை இனி சிந்திக்கக்கூடாது என்று நினைத்தாளோ அவனே தன் முன் வந்து நின்றதைப் பார்த்து, ‘ஐயோ! இனி இவன் வேறையா!.’ என்று அலறியது அவள் மனது.

அவள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், சில நேரத்திற்கு முன்பு இருந்த, எந்த ஒரு கனலையும் தன் கண்களில் தேக்கி வைக்காமல், மிகவும் சிரித்த முகத்துடன், “ஹாய் அகரயாழினி எப்படி இருக்கீங்க?.” என்று துள்ளல் குரலில் கேட்டான்.

“உங்களுக்கு என்ன வேணும்?. எதுக்காக நான் போற இடத்துக்கு எல்லாம் வரீங்க.” என்று எடுத்ததும், படபடப்பாக பேசினாள்.

‘இவனை வைத்து தானே தனக்கும் தன் அண்ணனுக்கும் முதன்முதலாக பிரச்சனை வந்தது.’ என்ற யோசனைக்குத் தாவினாள். அவள் யோசனையைக் கலைப்பது போல், “நான் உனக்கு ரொம்ப மன உளைச்சல் கொடுத்துட்டேன்.” என்று வருந்தினான்.

அதில் அதிர்ந்தவள், “நீங்க என்ன சொல்றீங்க?.” என்று புரியாமல் கேட்க.

“ஆமாம் மிஸ். அகரயாழினி. நான் என் வேலையை செஞ்சிருந்தாலும், அது தப்பு தானே!.” என்று இறங்கிவந்தான்.

“இன்னைக்கு எதுக்காக எங்க வீட்டுக்கு வந்தீங்க?. இதனால் எனக்கும் என் அண்ணனுக்கும் பிரச்சனை தெரியுமா!.” என்று சிறுபிள்ளை போல் வினாவினாள்.

“நான் உங்க வீட்டுக்கு வந்ததே, உங்க அண்ணனை பார்த்து சாரி கேட்க தான். ஆனால் அவர் அந்த நேரம் அங்கே இல்லை. தனியா இருக்குற உன்கிட்டப் பேச எனக்கு கொஞ்சம் தயக்கம்.” என்று நடிப்பை முற்றும் முழுவதுமாக கரைத்து குடித்தவன் போல் அட்டகாசமாக நடித்தான் ஒளியோன்.

அதை அப்படியே உண்மை என்று நம்பிய அகரயாழினி, “இப்ப இப்படி பேசுற நீங்க, எதுக்காக நேத்து என் கழுத்தை கடிச்சி வச்சீங்க?.” என்று தன் கழுத்தை தடவியபடி கேட்க.

அவள் தடவிய இடத்தில் தன் கையை கொண்டு சென்றவன், “ரொம்ப வலிச்சதா யாழ்.” என்றான் மென்மையான குரலில். ஆனால் அவள் கேள்விக்கு ஏனோ பதில் சொல்லவில்லை. மாறாக அந்த கேள்வியை அவள் நினைவில் இருந்து மறக்கடிக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தான்.

அவன் கைப்பட்டதும் தன் கையை விலக்கியவள், அவன் கை ஸ்பரிசத்தில் அப்படியே சிலையானாள். அவன் கையை விலக்க வேண்டும் என்று அவள் அறிவு சொல்லவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அவள் இடது கன்னத்தில் தன் கையை வைத்தவன், “இங்க என்ன பண்ற?. உன் அண்ணன் எப்படி இந்த நேரத்தில் உன்னை வெளியே அனுப்பினான்.” என்று தெரிந்து கொண்டே கேட்டான்.

அதில் சுயம் பெற்றவள், கண்களில் அதிர்ச்சியைத் தேக்கி அவனைப் பார்க்க, அவள் கன்னத்தில் இருந்து தன் கையை இறக்கியவன், “உன் அண்ணன் வந்துருக்காரா?.” என்று கேட்டுவைத்தான்.

“இல்ல. அண்ணா வரல. நான் மட்டும் தான் என் பிரண்ட்ஸ்சோட வந்தேன்.” என்றாள் விடையாக.

அவள் மொழி கேட்டு அதிர்ந்தவன் போல் பாவனை செய்தவன், “அகிலன் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு கேள்வி பட்டுருக்கேன். ஆனா, அவர் எப்படி உன்னை தனியா அனுப்பினாரு.” என்று கேட்க.

தன் அண்ணன் இன்றும் நிலாவின் வீட்டிற்கு சென்றது தான், அவள் நியாபகத்திற்கு வந்தது. இரவு உணவை முடித்துவிட்டு, வழக்கம் போல் வெளியே சென்றவனை நிப்பாட்டி, “அண்ணா, எங்க போற?.” என்று அவள் கேட்க.

அவளுக்குப் பதில் சொல்லாமல் தன் நெற்றியை நீவிவிட்ட அகிலன், “எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு யாழி. நீ போய் தூங்கு.” என்று சொன்னவன், நிற்காமல் அங்கிருந்து சென்றான்.

தன் தலையை ஆட்டிக்கொண்டவள், “இவர் வரட்டும், அந்த நிலா முக்கியமா நான் முக்கியமான்னு கேட்குறேன்.” என்று சொல்லியவள், புதிய டைஅப்பை கொண்டாட தன் நண்பிகளை அழைத்துக் கொண்டு, இங்கு வந்திருந்தாள்.

ஒளியோன் அவள் முன்னால் சுடக்கிட, நிகழ்காலத்திற்கு வந்தவள், அவனைப் பார்த்து முழித்தாள்.

“உங்க அண்ணன் எங்க இருக்காரு?. வீட்டிலையா?.” என்று அவன் திரும்பவும் கேட்க.

“இல்ல. அவருக்கு இன்னைக்கு நைட் ஷூட் இருக்கு.” என்று சொல்லி சமாளித்தாள். அவனது இதழ்களோ இகழ்ச்சியாக சிரித்துக்கொண்டது.

அகரயாழினியின் கண்களோ, ஒளியோனை அளவெடுத்துக் கொண்டிருந்தது. டாம் போர்ட் பிராண்ட் முழுக்கை சட்டை அணிந்திருந்தவன், வலது கையில் பட்டெக் பிலிப்பி பிராண்டட் கைக்கடிகாரம் மின்னிக்கொண்டு இருந்தது. இன்னொரு கையில் பூனை முகத்தில் வைரம் பதித்த ப்ரேஸ்லட் மின்னிக்கொண்டு இருந்தது.

அவனை முழுவதுமாக ஆரய்ந்த பெண்ணின் பார்வை, அவன் கையில் புதியதாக வைத்திருந்த புதிய மாடல் ஐபோனில் வந்து நின்றது.

அதைக் கண்டுகொண்டவன், “உனக்கு என் போன் பார்க்கணுமா?.” என்று கேட்க.

“இல்லை. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.” என்று அவள் வாய் சொன்னாலும், அவள் கண்ணில் ஆசை தேங்கி இருந்தது.

அவளிடம் தன் அலைபேசியை நீட்டியவன், “சும்மா பாரு.” என்றான்.

இப்போது பிகுபண்ணாமல் உடனே தன் கையில் வாங்கியவள், “இந்த மாடல் இன்னும் இந்தியாவில் வரலையே! நீங்க எங்க வாங்குனீங்க?.” என்று கேட்டாள்.

‘மான் வலையில் சிக்கிவிட்டது.’ என்று மனதிற்குள் பேசியவன், அவளுக்கு பதில் கூற ஆரம்பித்தான்.

அவள் கண்கள் முழுவதும் அவள் அலைபேசியில் இருக்க, அவன் கண்கள் முழுவதும் அவள் மேல் தான். அவன் நினைத்த சந்தர்ப்பம் அவனுக்கு எதிர்பாராத விதமாக கிடைத்தது.

பேசிக் கொண்டே இருந்த அகரயாழினியின் கண்கள் சொருக ஆரம்பித்தது. ஒளியோன் கண்களோ தீயின் ஜுவாலையாக மின்னியது.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 11

புதியதாக வந்த அலைபேசி சாதனங்கள் மீது, எப்போதும் அகரயாழினிக்கு அலாதி பிரியம். புதியதாக சந்தையில் அறிமுகப்படுத்தும் அனைத்தும் அவள் கைகளில் இருக்கும். இப்போது ஒளியோன் வைத்திருந்தது, அவள் வைத்திருக்கும் மாடலை விட மிகவும், முன்னேறிய மாடல். அது இந்தியாவில் இன்னும் கிடைக்கவில்லை.

அதைப் பார்த்தே ஒளியோனிடம் மொத்தமாக வீழ்ந்தாள் அகரயாழினி. அவள் அவனிடம் பேசிக்கொண்டே ஒயினை ஒரு மிடறு விழுங்க, அவளுக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது.

ஒளியோன் கண்கள் கேலியாக சிரித்தபடி, “என்னாச்சி மிஸ். அகரயாழினி.” என்று கேட்டான்.

தன் தலையைப் பிடித்தவள், “ஒன்னும் இல்ல.” என்று சொல்லி தன் தலையைக் குலுக்கினாள்.

“ஏன் ரொம்ப குடிச்சிட்டியா?.” என்று அவன் அவளை ஆராய்ந்தபடி கேட்க.

“இல்ல. நான் குடிக்க மாட்டேன். ப்ரிண்ட்ஸ் கூட வந்ததுனால, சும்மா ஒயின் மட்டும் ஒரு க்ளாஸ் எடுத்துப்பேன். இப்ப... இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல, என் தலை எல்லாம் சுத்துது.” என்றாள் உளறிய குரலில்.

அவளை தோளோடு பிடித்து, தன் தோளில் அவள் தலையை சாய்க்க செய்தவன், “நாம வீட்டுக்குப் போகலாம் பேபி.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் தன் சுய நினைவை இழந்தாள். அவளைத் தாங்கியபடி அங்கிருந்து அழைத்துச் சென்றான் ஒளியோன்.

அவளுடன் வந்த தோழிகளும், தன் அரட்டையில் இருந்ததனால், இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. பப்பில், இது எப்போதும் நடக்கும் சம்பவம் தான், என்று மற்றவர்களும் இதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒளியோனின் கண்கள் மானை வேட்டையாட துடிக்கும் புலியைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. மயங்கிய நிலையில் இருந்த அகரயாழினியை தன் காரில் அமரவைத்துவிட்டு, தன் பக்கக் கதவைத் திறந்து ஏறியவன், மிகவும் அசுர வேகத்தில் மகிழுந்தை இயக்க ஆரம்பித்தான்.

நேராக அவன் பண்ணை வீட்டில் சென்று நின்றது அவனது மகிழுந்து, காரில் இருந்து அகரயாழினியை தூக்கிக்கொண்டு வீட்டினுள் சென்றான் ஒளியோன்.

எவனோ ஒருவன் தீ மூட்ட, அதில் எவனோ ஒருவன் குளிர்காய, அதில் தீக்கிரையாபவர் யாரோ!

மறுநாள் காலை விடிந்ததும் கண்விழித்த அகிலன், தன் அருகே படுத்திருந்த நிலாவை சில கணங்கள் பார்த்துவிட்டு, வேகவேகாமாக குளியல் அறைக்குள் நுழைந்தான்.

அவன் குளித்து வெளியே வரும் போது, நிலா எழுந்திருந்தாள். அவனைப் பார்த்தவள், “என்னை எழுப்பி இருக்க வேண்டியது தானே அகி.” என்று கேட்டுக் கொண்டே அவள் எழ.

அவள் இதழில் பட்டும் படாமலும் முத்தம் வைத்துவிட்டு நிமிர்ந்தவன், “எனக்கு ஷூட்டிங் போகணும். பாய் நிலா.” என்று சொல்லி வேகமாக வெளியேறிவிட்டான். எப்போதும் போல் அவன் முத்தம் இன்று ஏனோ இனிக்கவில்லை. இருந்தும் ஒரு முறுவல் அவள் இதழில் தோன்றியது.

அவன் சென்றதும், அந்த இடமே வெற்றிடமாக இருப்பதை உணர்ந்தவள் மனதில் சொல்ல முடியாத வலி உண்டானது. அதுவும் நேற்று இரவு ஒளியோன் பேசிய வார்தைகளிலையே அவள் எண்ணம் சுற்றி வந்தது.

அவனுடன் சேர்ந்து சில வேண்டாத நபர்களின் நினைப்பும் வர, அதை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, தன் ஷூட்டிங் நடக்கும் இடம் நோக்கிச் சென்றாள் நிலா.

இங்கே தன் ஷூட்டிங் நடக்கும் ஸ்டுடியோவிற்கு வந்தான் அகிலன். அவன் வருவதற்கு முன்பே அவன் அசிஸ்டெண்ட் அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்க, இவன் சென்றதும் ஷூட்டிங் ஆரம்பமானது.

நாயகியின் இன்ட்ரோ சீனை தான் அவன் படம் பிடித்துக் கொண்டிருந்தான். நாயகியைச் சுற்றி அவளது நான்கு தோழிகள் சிரித்தபடி நடந்து வர வேண்டும்.

அதில் தோழியாக நடித்தப் பெண் சொதப்ப, அகிலனின் கோபம் எல்லையை கடக்க ஆரம்பித்தது.

எழுந்து அவள் அருகே வேகமாக சென்றவன், “ஒரு சின்ன சீன். இதை கூட நடிக்கதெரியாம, என் உயிரை எதுக்கு வாங்குற.” என்று கத்தினான்.

உடனே அங்கே ஓடோடி வந்த அசிஸ்டெண்ட், “நான் பார்த்துக்குறேன் சார்.” என்று வர.

அவனை முறைத்துப் பார்த்த அகிலன், “இவளை எல்லாம் யார் நடிக்கக் கூப்பிட்டது.” என்று வார்த்தைகளால் வறுத்துவிட்டு, “இந்த பெண் வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு திரும்பவும் டேக் எடுக்க ஆரம்பித்தான்.

அவன் திட்டியதால் கண்கலங்கிய பெண்ணோ ஓரமாக நின்றுகொண்டாள். அந்த டேக்கை எடுத்து முடித்ததும், அடுத்த டேக்கிற்கு தயாரானான் அகிலன். அந்த இடைவெளியில் தான் அழுது கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான்.

அவளின் அருகே, நாயகிக்கு தோழியாக நடிக்க வந்த இன்னொரு பெண்ணோ, அழும் பெண்ணை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

தன் நெற்றியை நீவிவிட்டவன், தன் அசிஸ்டெண்ட்டிடம் எதையோ சொல்லி அனுப்பி தன் கேராவன் நோக்கிப் போனான்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம், அவன் கேராவன் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் அந்தப்பெண்.

பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். படத்தில் நடிக்க ஆசைப்பட்டு, வாய்ப்பு தேடி சென்னை வந்தவள், இப்போது கிடைக்கும் சிறுசிறு கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்கின்றாள்.

அவள் பயந்து கொண்டே அகிலன் முன்பு வந்து நிற்க, அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், “இந்த துறைக்கு நீ வந்து எத்தனை நாளாச்சு?.” என்று கேட்டுக் கொண்டே, சிகரட்டை பத்தவைத்தான்.

அவன் பார்வையின் வீரியத்தில் பயந்தவள், மிரட்சியுடன், “ஆறு மாசமாக இருக்கேன் சார்.” என்றாள் பயந்த குரலில்.

“குட். உனக்கு நடிக்குறதுல ஆர்வம் இருக்கு. பட் அதை உனக்கு பிரசன்டேசன் பண்ண தெரியல. அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. நான் சொல்லித்தருகிறேன்.” என்று சொல்லிக் கொண்டே, அவள் கண்களைக் கண்டவன் அதில் மொத்தமாக விழுந்து தான் போனான்.

நேற்று ஷூட்டிங் வரும் போதே அவள் மீது ஒரு கண் வைத்திருந்தான். அவளும் அவனையே தான் போதை ஏறிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆறடி உயரம் அழகிய உருவமாக பார்க்க கதாநாயகன் போல் இருக்கும் அகிலனை யாருக்குத் தன பிடிக்காது?. அதுவும் புகழின் உச்சியில் இருப்பவன். அவன் கண்கள் தன் மீது பட்டுவிடாத என்று சினி துறையில் பல பெண்கள் காத்துக் கிடக்கின்றனர்.

பலபேருக்கு அவன் ப்ளே பாய் தோற்றம் தெரியாது. காரணம் தன்னை நாடும் அனைத்து பெண்களையும் அவன் அடைய நினைக்க மாட்டான். அவன் மனதைக் கவரும் பெண்களை, அதுவும் அவர்களும் விரும்பும் பட்சத்தில் தான், அவன் தன் வேலையைத் துவங்குவான். இன்றும் அதே போல் தான் நடந்து கொண்டிருந்தது.

அவளிடம் இருக்கும் ஏதோ ஒன்று, அவனை அவள் நோக்கி இழுத்தது. சிகரட்டை மேஜையின் மேல் வைத்துவிட்டு, அவள் முன்னே சென்று நின்றவன், “உனக்கு ஓகே தானே.” என்றான்.

அவன் என்ன சொல்லவருகின்றான் என்பதை புரிந்து கொண்ட பெண்ணவளோ, சிறிய வெட்கத்துடன், “எனக்கு ஓகே சார்.” என்றாள் ஒற்றை வரியில்.

உடனே அவள் இடையை பிடித்து வளைத்தவன், அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு, கேராவன் கதவை இழுத்து சாற்றிவிட்டு, உள்ளே வந்தான்.

குனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தவன், திரும்பவும் தான் விட்ட வேலையை செய்ய ஆரம்பித்தான்.

இங்கே தனது ஷூட்டிங் ஸ்பாட் வந்த நிலாவால் சரியாக நடிக்கவே முடியவில்லை. அவள் நினைப்பு எல்லாம் ஒளியோன், யாழினி என்ற வட்டத்தை சுற்றியே வந்தது.

அந்த டைரக்டரும், “இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சி மேடம். உடம்பு சரியில்லையா?” என்று பல தடவை கேட்டுவிட்டார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் நிலா, எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் அதை ஒரே டேக்கில் முடித்துவிடுவாள்.

அதற்கெல்லாம், “ஒன்றும் இல்லை சார். டேக் போகலாம்.” என்று சொல்லி நடிக்க ஆரம்பித்தவள், ஒருவழியாக அந்த காட்சியை நடித்தும் முடித்தாள்.

பின் அடுத்த காட்சிக்குத் தயாராக, உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு, வெளியேறினாள்.

தான் காரில் இருந்த ஓட்டுனரிடம், “நீங்க உங்க வீட்டுக்குப் போங்க. நான் தனியா வரப்போறேன்.” என்று சொல்லி அவரிடம் கார் சாவியை வாங்கியவள், தானே மகிழுந்தை இயக்க ஆரம்பித்தாள்.

தன் மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் சூழ்ந்து இருந்தாலும், அவள் கண்களில் கூர்மையோடும், கையில் லாவகமாகவும் மகிழுந்தை செலுத்திக்கொண்டிருந்தாள்.

அப்போது அகிலனின் நினைப்பு வர, தன் அலைபேசியில் இருந்த அகிலனின் எண்ணை அழுத்தினாள். ஆனால் அகிலன் அலைபேசி எடுக்கப்படாமல் போகவே, “அவர் ஷூட்டிங்ல பிசியா இருப்பார். இப்ப என்ன பண்றது.” என்று வாய்விட்டுப் பேசியவள், வண்டியை அகிலன் ஷூட்டிங் நடைபெறும், ஸ்டுடியோ நோக்கித் திருப்பினாள்.

நிலாவின் நினைப்பு எல்லாம் அகிலனே, அவளது ஒவ்வொரு அணுவிலும் அகிலன் தான் நிறைந்திருந்தான். ஆனால் அகிலனோ, இங்கு தன் கேராவேனில் வேறு ஒரு பெண்ணுடன் கூடி கழித்துக் கொண்டிருந்தான். அடுத்த காட்சியை எடுக்க, உதவி இயக்குனர் ஸ்பாட் கரெக்ட் பார்த்துக் கொண்டிருக்க, நாயகி அடுத்த காட்சிக்குத் தாயாராக, அந்த இடைப்பட்ட நேரம் அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

இங்கு நிலாவின் மகிழுந்து அகிலன் இருக்கும் ஸ்டுடியோவில் நுழைந்து இருந்தது. அவளைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் அவளை நோக்கிப் புன்னகை புரிய, பதிலுக்குப் புன்னகை புரிந்தவள், அதை எல்லாம் கடந்து காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து நின்றாள்.

அப்போது அவளை அங்கு எதிர்பார்க்காத இளம் வயது உதவி இயக்குனர் ஒருவன், அவளைப் பார்ப்பதும், பின் அகிலனின் கேராவேனைப் பார்பதுமாக இருந்தான். உள்ளே என்ன நடக்கின்றது என்று அவனுக்கும் தெரிந்து தானே இருந்தது. அந்தப்பெண்ணை உள்ளே அனுப்பியதே அவன் தானே!.

நிலா அவனை நோக்கி வர, அவனது கைகளோ பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. ‘அகிலன் சார் என்ன பண்றாருன்னு இந்த மேடம் கிட்ட சொன்னா, அவரு என் தோலை உரிச்சிருவாறு, இவங்கக்கிட்ட என்ன சொல்லி சமாளிக்குறது.’ என்று பயம் கொண்டவன், மிகவும் பணிவாக நிலாவை வரவேற்றான்.

அவனைப் பார்த்து சிநேகிதமாக சிரித்தவள், “ஷூட் எல்லாம் எப்படி போகுது.” என்று பொதுவாய் விசாரித்தாள்.

அவனும் தன் பயத்தை வெளிக்காட்டாமல், அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொன்னவன், கண்கள் என்னவோ, அகிலனின் பூட்டிய கேராவன் கதவில் தான் இருந்தது.

அவன் கண்கள் செல்லும் திசையைப் பார்த்தவள், “உங்க அகிலன் சாரைப் பார்க்க தான் வந்தேன்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, கேராவேனை நோக்கி நடந்தாள்.

நிலா இதுபோல் எல்லாம் ஒருநாளும், அகிலன் ஷூட்டிங் எடுக்கும் இடத்திற்கு வந்ததில்லை. அவள் இங்கே வந்தது அனைவருக்கும் ஆச்சரியம் என்றாலும், ஏதேனும் வேலையாக வந்திருப்பாள் என்றே அனைவரும் நினைத்தனர்.

அவள் சரியாக கேராவன் கதவில் கைவைக்கப் போக, அது சரியாக உள்ளிருந்து திறந்து கொண்டது. நிலாவோ அதிர்ச்சியுடன் தன் வாயில் கைவைத்துக் கொண்டாள்.


 

NNO7

Moderator
(தாமதத்திற்கு மன்னிக்கவும் டியர்ஸ். எனக்கு கிளைமேடிக் பிவர். சோ அதனால் எழுத முடியல. இனி தினமும் யூடியுடன் உங்களை சந்திக்கின்றேன். வழக்கம் போல் கதையைப் படித்து உங்களது கருத்துக்களைக் கூறுங்கள் டியர்ஸ்.)

அத்தியாயம் – 12

தன் சட்டைப் பொத்தானைப் போட்ட படி, கேராவன் கதவைத் திறந்த அகிலன், அங்கே நிலாவை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் அதற்கெல்லாம் அதிர்ந்துவிடவில்லை.

மாறாக, “இங்க என்ன பண்ற?.” என்று திமிருடன் கேள்வி எழுப்பினான். உள்ளே ஒரு பெண் இருக்க, வெளியே தன்னை உயிராக நேசிக்கும் ஒருத்தி, என்று அவன் எதற்கும் கிணுங்கவில்லை.

அதிர்ச்சியுடன் தன் வாயில் கைவைத்த நிலா, தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்து, “இன்னைக்கு ரொம்ப ஹேண்ட்சமா இருக்கீங்க அகி.” என்றாள் பாராட்டுதலாக.

வெள்ளை ஷர்ட் அணிந்திருந்தவன், முதல் இரண்டு பொத்தான்களைப் போடவில்லை. உடனே தன் கைகளால் அதை போட்டுவிட்டவள், “உங்களுக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இந்த பொத்தானை போடுங்கன்னு.” என்றாள் சிணுங்கலாக.

அவள் குனிந்து பொத்தானைப் போடும் போது, லேசாக தன் தலையை சாய்த்து, கேராவன் உள்ளே தன் பார்வை செலுத்தியவன், நிலாவிடம், “இங்க எதுக்காக வந்த?.” என்றான் அழுத்தமான குரலில்.

அவன் வேலை நேரத்தில் எப்போதும் இப்படி தான் கடுகடுவென்று இருப்பான். அதனால் நிலா அதைப் பற்றி பெரியதாக யோசிக்கவில்லை.

“மச்... ஏன் இவ்வளவு கோபம். தள்ளுங்க நான் உள்ளே போறேன்.” என்று சொல்லிக் கொண்டே, கேராவன் உள்ளே நுழையப் பார்த்தாள்.

அவள் கையைப் பிடித்து தடுத்தவன், “எங்க போற?.” என்று கேட்டுக் கொண்டே கேராவன் கதவை தாழிட்டு, நிலாவின் கையைப் பிடித்தபடி ஒதுக்குப்புறமான இடம் நோக்கிச் சென்றான்.

“என்ன திடீருன்னு இங்க வந்துருக்க?. உனக்கு ஷூட் இல்லையா?.” என்று அடுக்கடுக்காக அவளிடம் கேள்வி எழுப்பினான்.

“கொஞ்சம் மனசு சரியில்லை அகி.” என்றவள் கண்களில் அதிக சோர்வு தெரிந்தது.

அதைக் கண்டவன், “உடம்பு சரியில்லையா நிலா.” என்று கேட்டுக் கொண்டே, அவள் நெற்றியில் தன் கையை வைத்தான்.

அதில் அவள் மனது இனிமையானது, “எனக்கு மனசு சரியில்லைன்னு சொன்னேன் அகி.” என்றவள் குரலில் எந்தவித உள் அர்த்தமும் இல்லை.

தன் நெற்றியை நீவி விட்டவன், “நான் உன்கிட்ட பேசுனதையே நீ நினைச்சுக்கிட்டு இருக்கியா?. நான் ஏதோ யாழி மேல உள்ள அக்கறையில் கொஞ்சம் உன்கிட்ட முரணா பேசிட்டேன்.” அதை எல்லாமா நீ நினைவில் வைத்துக் கொண்டு இருப்பாய் என்பது போல் இருந்தது அவனது பேச்சு.

அவ்வளவு பெரிய வார்த்தைகளை பேசிவிட்டு, சின்ன முரண்பாடு என்ற அவன் பேச்சில் சுயநலம் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் இதெல்லாம் நிலாவிற்கு தெரிந்தால் தானே!.

அவளது காதல் மனமோ, ‘அதில் தான் நான் வருத்தத்தில் இருப்பேன்னு, அவர் என் மேல் எவ்வளவு அக்கறை எடுத்து பேசுறார்.’ என்று முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டது.

“அதெல்லாம் இல்லை அகி. இது வேற வோர்க் டென்ஷன்.” என்று சொல்லிக் கொண்டே, அகிலனின் மார்பில் தன் தலையை வைத்து சாய்ந்து கொண்டாள்.

‘இப்ப உங்ககிட்ட என் வருத்ததிற்கான காரணத்தை சொல்ல முடியல. ஆனா உங்களிடம் கூடிய சீக்கிரம் அந்த உண்மையை சொல்லத்தான் போறேன் அகி. ஆனா என்னோட கவலையே, அதைக் கேட்டு நீங்க, நான் கடந்து வந்த பாதையை நினைச்சு வருத்தப்படுவீங்க. உங்க கோபமும் அதற்கு சம்பந்தமான நபர்கள் மீது போகும். ஆனா உங்க கோபம் மட்டும் கண்டிப்பா ஒளியோன் மீது போகக்கூடாது.’ என்று நினைத்தாள்.

ஆனால் அவள் சொல்லும் உண்மைகளைக் கேட்டு, அகிலன் அவள் நினைத்ததற்கு மாறாக முற்றிலும் வேறு அகிலனாக நடந்து கொள்ளப்போகின்றான் என்பது பாவம் பெண்ணவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அவள் முதுகை நீவிவிட்டவன், “நீ எப்பவும் இப்படி பாதி ஷூட்டிங்ல வரமாட்டியே!.” என்று கேட்க.

“உங்கள பார்கணும் போல இருந்தது அகி.” என்று அவனை அணைத்தபடியே கூறினாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவன், “சரி நீ பத்திரமா வீட்டுக்குப் போ.” என்று அவளை அங்கிருந்து அனுப்பப் பார்க்க.

அதைப் புரிந்து கொள்ளாத நிலாவோ, “நீங்க பொறுமையா ஷூட்டிங் முடிச்சிட்டு வாங்க. நான் அதுவரை கேராவன்ல இருக்கேன்.” என்று அவள் சொன்னதும், அப்போது தான் கேராவன் கதவை தாழ்போட்டது அவன் நியாபகத்திற்கு வந்தது.

“ஐயோ!.” என்று தன் தலையில் கைவைத்தவன், நிலா தன்னையே கேள்வியோடு பார்பதைக் கண்டு, அவசரமாக அவள் இதழில் பட்டும் படாமல் முத்தம் வைத்து விலகியவன், “பேபி, நீ இங்க இருந்தா என் வேலையை சரியா பார்க்க முடியாது. இன்னைக்குள்ள நான் 5 ஷாட்ஸ் எடுத்து முடிக்கணும்.” என்று பாவம் போல் சொன்னான் அகிலன்.

அவன் பார்ப்பது என்னவோ டைரக்டர் வேலை தான். ஆனால் நாயகன் நாயகிக்கு, தானும் சேர்ந்து நடித்துக் காட்டி, அவர்களுக்கு புரியவைப்பவன், அப்படி பட்டவனுக்கு நடிக்க சொல்லியா தரவேண்டும்.

எதோ அவள் மேல் அதிக காதல் இருப்பதைப் போல் அவன் பேச்சு இருக்க, நிலாவோ, அதில் வெட்கப்பட்டு, “ம்... சரி அகி.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றாள்.

பின் கேராவனின் கதவை திறந்துவிட்டவன், அங்கே அந்த பெண் நின்றிருப்பதைப் பார்த்து, “நீ வெளிய போ.” என்றான் அழுத்தமாக.

இதுவரை தன்னிடம் குலைந்து கரைந்தவன் பேச்சு அழுத்தமாக வருவதைப் பார்த்த அந்தப் பெண், மயக்கும் குரலில், “அதுக்குள்ளவா?.” என்றாள்.

அவளைப் பார்த்து முறைத்தவன், “அவுட்.” என்று கதவைக் கை காண்பித்தான்.

ஆனால் வெளிய செல்வதற்கு மனமில்லாமல் இருந்த அந்த பெண்ணோ, “அப்ப நைட் ஓகேவா சார்.” என்று வழிந்து கொண்டே, அவன் கையைப் பற்ற.

அதில் தானும் அவள் கையைப் பிடித்தவன், “இன்னைக்கு நைட் வேண்டாமே!.” என்றான். இரவு தான் அவனுக்கு நிலா இருக்காளே!. அதுவும் இல்லாமல், இதுபோல் வரும் பெண்களை எல்லாம், அவன் அதிகம் தன் பக்கம் சேர்த்து கொள்ளமாட்டான்.

தானாகவே தன் மீது வந்து விழும் பெண்களிடம் கண்ணியம் காட்டமல் நடப்பவன், அவர்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் போது, சத்தம் இல்லாமல், அவர்களை விலக்கி வைத்துவிடுவான். அதுபோல் அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட பல பெண்கள் அவன் நினைவுகளில் இருக்கவே மாட்டார்கள். ஆனால் இதில் இருந்து முற்றுமாக, அவன் மனதில் வேறுபட்டவள் தான் நிலா. அவனால் நிலா இல்லாமல் ஒரு நாள் கூட சரியாக தூங்க முடியாது. அந்த அளவு அவள் மேல் ஈடுபாடு அவனுக்கு.

அதற்காக அவள் மீது காதல் இருக்கின்றதா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு பெண்ணின் மீது காதலில் இருப்பவன், செய்யும் செயலை அவன் செய்யவில்லையே!.

தன் தங்கையிடம் பேசும் போது கூட, நிலாவைத் திருமணம் செய்யும் எண்ணத்தில் அவன் பேசவில்லை. அவன் மனதில் என்ன இருக்கின்றது என்பது அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை.

அவன் மறுப்பை பெரியதாக எடுத்துக் கொள்ளாத பெண்ணோ, அவனைப் பற்றி சரியாக தெரியாமல், “அந்த நிலா கூப்பிட்டா உடனே போறீங்க.” என்று கேட்டதும் தான் தாமதம், வெடுக்கென்று அவள் கையை உதறியவன், அவள் கழுத்தைப் பிடித்து, “இப்படி பேசுறதுக்கு, நான் உனக்கு எந்த இடத்தையும் கொடுக்கல.” என்று சீற்றமாக பேசியவன், அவளை கழுத்தோடு சேர்த்து கீழே தள்ளி, “உனக்கு இனி இங்கே இடம் இல்லை. வெளிய போ.” என்று கத்தினான்.

அதில் பயந்த பெண், “மன்னிச்சுடுங்க சார்.” என்று சொல்லி அழுக ஆரம்பித்துவிட்டாள்.

ஆனால் மன்னிப்பு கொடுத்து பாவம் பார்க்க, அவன் ஒன்றும் இளகிய மனம் படைத்தவன் இல்லையே!.

இப்போது அவன் எதுவும் பேசாமல், அவன் பார்த்த பார்வையில், குளிர் எடுக்க, அந்த பெண்ணே, பயந்து போய், வெளியே ஓடிவிட்டாள்.

“ச்சு...” என்று பெருமூச்சு விட்டபடி, வெளியே வந்தவன், “ஷூட் ரெடியா?.” என்று கேட்டுக் கொண்டே ஷூட் நடக்கும் இடத்திற்கு வந்து, தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

தூக்கத்தில் இருந்து கண்விழித்த அகரயாழினி சாதரணமாக படுக்கையில் இருந்து எழுந்தவள், நெட்டி முறித்தபடி, கொட்டாவிவிட்டாள். சில கணங்கள் கழித்து தான், அவளுக்கு உணர்வே வந்தது.

“இது என்ன இடம்?. நான் எங்க வந்துருக்கேன்.” என்று சுற்றும் முற்றும், பார்த்தபடி பதற்றம் அடைந்தாள். அதற்கு மேலும் தாமதிக்காதவள், வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தாள்.

ஆனால் மயக்க மருந்தின் வீரியத்தால், அவளின் தலை சுற்றத் துவங்கியது. தன் தலையைப் பிடித்துக் கொண்டே, அங்கிருந்த கதவு வழியாக வெளியேறினாள். அங்கிருந்து வீட்டில் இருந்து வெளியே செல்லும் வழியைத் தேடியவள், மூளையோ, ‘நான் எப்படி இங்க வந்தேன்.’ என்று பலமாக யோசிக்கத் துவங்கியது.

அதில் ஒளியோனிடம் பேசியது, அப்போது தான் அவளுக்கு நியாபகம் வர, வேகமாக தன் உடையை சரி பார்த்துக் கொண்டாள். அவள் நேற்று இரவு போட்டு இருந்த அதே உடை தான் என்று தெரிந்ததும் தான் நிம்மதி அடைந்தாள்.

வெளியே போகும் வழி அவளுக்குத் தெரியவில்லை. அந்த வீடே ஒருவித புதிர் போல தான் கட்டப்பட்டு இருந்தது.

சுற்றி சுற்றி வந்தவள் இறுதியாக சென்று நின்றது என்னவோ, அடுப்படிக்குத் தான். ‘வெளியே செல்லும் வழியை முதலில் கண்டுபிடி.’ என்று அவள் மூளை சொல்ல, அவளின் மனமோ, “இல்லை. உனக்கு பசிக்கின்றது. முதலில் அந்த பிரிட்ஜை திறந்து பார்.’ என்று கட்டளையிட்டது.

இரண்டுக்கும் நடுவே ஜெயித்தது என்னவோ, அவள் மனது தான். அதனால் தன் வயிற்றின் நலன் கருதி பிரிட்ஜை திறந்தாள். அதில் உள்ளவற்றை ஆராய, அதில் பழச்சாறு அவள் கண்களில் பட்டது. உடனே அதை எடுத்து வேகமாக பருகியவள், “இப்போ எப்படி இருக்கு மிஸ். யாழினி.” என்று திடீரென்று கேட்ட ஆடவனின் குரலில் புரை ஏறி இரும்ப ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அருகே வந்து அவள் தலையை தட்டியவன், “ஹேய், பார்த்து மெதுவா குடி.” என்று அன்போடு கூற, அவனை இமைக்க மறந்து, கண்களில் தேங்கிய அதிர்ச்சியோடு பார்த்தாள்.

அதைப் பார்த்தவன், “நேத்து என்ன ஆச்சுன்னு தெரியல, திடீருன்னு நீ மயக்கம் போட்டு விழுந்துட்ட, எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல. உன் அண்ணன் வேறு வீட்டில் இல்லைன்னு சொன்னியா, அதான் இங்க கூட்டிட்டு வந்தேன். இப்ப உனக்கு பரவாயில்லை தானே!.” என்று அவன் அக்கறையோடு கேட்க.

அதில் அவன் கண்ணியம் பெண்ணைக் கவர, தன்னைப் போல, அவனுக்குப் பதில் கொடுக்க ஆரம்பித்தாள், “ம்... நான் வீட்டுக்குப் போகணும்.” என்று அவள் கூற.

“போகலாம் உன் அண்ணன் நம்பர் கொடு.” என்று அவன் கேட்க.

இப்போது பதற ஆரம்பித்த பெண்ணவள், “இல்லை. நான் நல்லா தான் இருக்கேன் மிஸ்டர் ஒளியோன். நானே பார்த்து போய்க்குவேன்.” என்று மறுமொழி கூற.

அதைக் காதில் வாங்காதவன், “என்ன பேசுற. உன்ன பார்த்தா உனக்கு ஏதோ பிரச்சனை இருப்பது போல் தோணுது. அகிலன் சார்கிட்ட நான் பேசுறேன்.” என்று அவள் முன்பே தன் மேனேஜரிடம் கேட்டு அகிலனின் நம்பரை வாங்கியவன், அவனுக்கு அழைக்கும் முன்பே, “ஒ... அவர் என்மேல கோபமா இருக்குறதுனால என் அழைப்பை எடுக்கமாட்டாரு.” என்று சொல்லிக் கொண்டே, இப்போது அகரயாழினியின் அருகே வந்தவன், அவள் தோள் மீது தன் கையைப் போட்டு செல்பி எடுத்து, அதை அப்படியே அகிலனுக்கு அனுப்பியும் வைத்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 13

இரவு, தான் எப்படி இங்கு வந்தோம் என்பதை அறியாமல் மனதினுள் புலம்பியபடி இருந்த அகரயாழினியின் முன்னால் திடீரென்று தோன்றிய ஒளியோன், அவளின் நலனில் அக்கறை இருப்பது போல் பேச, பெண்ணவளோ அமைதியாக இருந்தாள்.

ஆனால் அவள் மனதில் குழப்பம் அரித்துக் கொண்டே தான் இருந்தது. “நான் எப்படி மயக்கமானேன்னு எனக்கே தெரியல. நான் ஆல்ஹகால் அதிகம் எடுத்துக்க மாட்டேன்” என்று அவள் கூற.

“எனக்கும் தெரியல. நீ என் அலைபேசியை வாங்கி நல்லாத் தான் பேசிக்கிட்டு இருந்த, திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்ட. சரின்னு உன் தோழிகள் பக்கம் போய் பார்த்தா, அவங்களை கூட்டிட்டுப் போகவே ஒரு ஆள் வேணும் போல. அந்த அளவு போதையில் இருந்தாங்க” என்று அவன் கூற, தன் தோழிகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவள், அவன் சொன்னதை அப்படியே நம்பினாள். ஆனால் அவள் மயக்கமடைந்தது மட்டும் அவளுள் உறுத்திக் கொண்டே தான் இருந்தது. ஆனால் அதை அவனிடம் வாய்விட்டு அவள் கேட்கவில்லை.

அவளுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்பது போல் பேசியவன், அவளின் அண்ணன் அகிலனின் அலைபேசி எண்ணைக் கேட்க, அதற்கு அவள் மறுப்பு தெரிவிக்க, தன் மேனேஜர் மூலம் அகிலனின் எண்ணை வாங்க.

“வேண்டாம் சார். எங்க அண்ணனுக்கு அதிகம் வேலை இருக்கும். அவரை எதுக்காக தொந்தரவு செய்யுறீங்க. நான் தான் சொல்றேனே! நானே போய்ப்பேன்” என்று அவள் திரும்பவும் கூற, “அகிலன் என் மேல் கோபமாக இருப்பார்” என்று கூறிக் கொண்டே, அவள் அருகே வந்து நின்றான் ஒளியோன்.

அவள் குடித்த ஜூஸ் அவள் வயிற்றுக்கு போதுமானதாக இல்லை. அதனால் ஏற்கனவே பசியால் மயக்கம் வருவது போல் இருக்க, பத்தாதற்கு ஒளியோன் வேறு அவளை ஒட்டி நின்று, அவளின் தோள்களைச் சுற்றி தன் கையைப் போட்டு, அவளை நிலைகுலையச் செய்தான்.

“என்ன பண்றீங்க?” என்று சொற்கள், அவளில் தொண்டை குழிக்குள் சிக்கித்தவித்து, வெளியே வராமல் சதி செய்தது. இருந்தும், “என்ன.. பண்றீங்க” என்று திக்கித்திணறி கேட்டுவிட்டாள்.

சரியாக அவள் ஒளியோனை நோக்கிக் கேட்கும் போது, அவள் முகத்திற்கும், அவன் முகத்திற்கும் சிறு இடைவெளி மட்டுமே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சரியாக தன் அலைபேசியில் செல்பி எடுத்தான் ஒளியோன்.

எடுத்து முடித்ததும், அவள் மேல் இருந்த தன் கையை கீழே இறக்கிவிட்டு, அதை அப்படியே அகிலனுக்கு அனுப்பி வைத்துவிட்டு நிமிர்ந்தான்.

முதலில் ஒருவித அதிர்ச்சியில் இருந்தவள், பின் அவன் அதை அகிலனுக்கு அனுப்புவதைப் பார்த்து கோப மூச்சு வாங்க நின்றாள். “என் அனுமதி இல்லாம, எப்படி நீங்க என்னை படம் எடுப்பீங்க?” என்று கேட்டு சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

“ஹெலோ மேடம். உங்க நல்லதுக்குத் தானே பண்றேன். உங்க அண்ணன் உங்களை நினைச்சு கவலையில் இருப்பாரு. நான் வேற இந்த வசீகரன் பிரச்சனையில் உங்க அண்ணனிடம் ரொம்ப பேசிட்டேன். அவரும் அப்படித்தான். அதுக்கு பிராயச்சித்தமா அவர் தங்கையை நான் காப்பாத்தினேன்னு அவருக்கு தெரிய வேண்டாமா?. நீங்க பாட்டுக்கு நானே போறேன்னு சொல்றீங்க” என்றவன் பிடியில் உறுதியாக இருந்தான்.

தன் தலையில் கைவைத்துக் கொண்டவள், “ஐயோ நீங்க ரெண்டு பேரும் பேட்ச் அப் ஆக, நான் தான் கிடைச்சேனா?. அதுவும் இல்லாமல் அண்ணன் உங்க மேல ரொம்ப கோபமா இருக்காரு. இதில் நான் உங்க வீட்டில் இருக்கேன்னு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்றாள் படபடப்பாக.

புலம்பிக் கொண்டே அந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவள், ‘அவன் வந்து என்ன ஆட்டம் ஆடப்போறானோ’ என்று மனதில் கலக்கம் கொண்டாள்.

ஆனால் அவளின் வயிரோ, ‘முதலில் எனக்கு ஏதாவது போடு’ என்று கூப்பாடு போட்டது.

திரும்பவும் தன் வயிறு சொன்னதைக் கேட்டவள், ஒளியோனைத் தாண்டி சென்று, குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த ஆப்பிளை வேகமாக கடித்தாள்.

இவள் எங்கே இவ்வளவு வேகமாக செல்கின்றாள் என்று பார்த்த ஒளியோன், அவள் செயலில் சிறியதாக புன்முறுவல் பூத்தவன், தானே பிரட் ஆம்ப்லேட் செய்து அவளின் முன்னால் நீட்டினான்.

அவனையும் அவன் கையில் இருந்த தட்டையும் மாறிமாறி பார்த்தவள், பின் என்ன நினைத்தாளோ, எதுவும் பேசாமல் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

அந்த பிரட் பாதி அவளுள் சென்ற பிறகு தான் அவளுக்கு தெம்பு வந்தது, ஒளியோனைப் பார்த்தவள், “இந்த வீடு புதிர் மாதிரி இருக்கு. உங்க வீடா?” என்று கேட்க.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டியவன், “உனக்கு இந்த வீடு பிடிச்சி இருக்கா?” என்று அவளை ஆர்வத்துடன் பார்க்க.

“ம்.. நல்லா இருக்கு” என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டாள்.

இங்கே ஒளியோன் அனுப்பிய செய்தி அகிலனை வந்து சேர்ந்தது. ஆனால் அதை அவன் இன்னும் பார்த்திருக்கவில்லை. அப்போது தான் அவன் கேராவனில் அந்த பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான்.

அடுத்ததாக அங்கே நிலா வந்திருக்க, அவளை அனுப்பிவிட்டு, ஷூட் சென்றவனின் அலைபேசி கேராவேனில் தான் இருந்தது.

இங்கே அகரயாழினியை போக விடாமல் சண்டித்தனம் செய்த ஒளியோன், “அகிலன் வந்ததும் நீ போகலாம் யாழினி. அதுவரை நீ இங்க தான் இருக்கணும்” என்று அழுத்தமாக கூற.

“எனக்கு வேலை இருக்கு சார். உங்களை மாதிரி நான் வேலைவெட்டி இல்லாமல்” என்று அவள் சொல்லும் போதே ஒளியோன் பார்த்த பார்வையில் கப்சிப்பென்று தன் வாயை முடிக்கொண்டாள்.

அதில் அவன் உதட்டை வளைத்து சிரித்தவன், “என்ன அவசரம்? அகிலன் வரட்டும். அதுவரை உனக்கு போரடிக்காம இருக்க நாம ஏதாவது கேம் விளையாடலாம் சரியா” என்று அவன் ஒரு மாதியான குரலில் கூற.

வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தவள், “இந்த வீட்டில் அடுப்படியைத் தவிர வேற எதுவும் இருப்பது போல் தெரியலையே!. நாம எந்த கேம் விளையாடப் போறோம் சார்” என்று கேட்டுக் கொண்டே, இப்போது ஆர்வமாக ஒளியோனைப் பார்த்தாள்.

தன்னை ஒருவன் கடத்திவைத்துக்கொண்டு நாடகம் ஆடுகின்றான், தானும் தன்னைக் கடத்தியதைப் பற்றி அறியாமல் அவன் பேச்சை எல்லாம் கேட்கின்றோம் என்பதை அறியாத அப்பாவி பெண்ணவள், அவனுடன் விளையாட தயாரானாள்.

“இன்டோர் கேம் தான். நீ ரெடியா?” என்று கேட்க.

அதில் பயந்தவள், “அதில் செஸ் கிடையாது தானே!” என்றாள்.

“இல்லை” என்று தன் தலையை ஆட்டியவன், “இது ஒரு புதுவிதமான கேம். இதை நீ உன் வாழ்க்கையில் விளையாண்டு இருக்கவே மாட்ட” என்று சொல்லி அவள் ஆர்வத்தை அதிகரித்தான்.

“அப்படி என்ன கேம். சீக்கிரம் சொல்லுங்க” என்று தான் எதுக்காக இதை எல்லாம் அவனிடம் கேட்கின்றோம் என்று அறியாமலையே கேட்க ஆரம்பித்தாள்.

“இது பெயர் ஜார் ஆப் ஹார்ட்ஸ்” என்று அஸ்கி குரலில் பேசினான்.

அவன் குரலில் இருந்த எதோ ஒன்று பெண்ணவளை தடுமாற வைத்தது. “அப்படினா என்ன?. நான் இது மாதிரி ஒரு கேம் பெயரை கேட்டதே இல்லையே!” என்று ஆவலாக அவன் முகம் பார்க்க.

“நான் தான் சொன்னேனே!. இதைப் பத்தி நீ கேள்வி பட்டிருக்கவே மாட்ட. கேம் விளையாட ஆரம்பிக்கலாமா?” என்றான் மெல்லிய குரலில்.

அகரயாழினிக்கு ஆர்வம் மேலிட, மெதுவாக தன் தலையை ஆட்டினாள்.

“அப்ப உள்ள வா” என்று சொல்லியடி அறையின் உள்ளே சென்றவனை, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் பின்தொடர்ந்தாள் அகரயாழினி.

அங்கே இருந்த அலைமாரியில் கண்ணாடி ஜாரை எடுத்தவன், அதை கட்டிலின் நடுவே வைத்தான், அதன் மறுபக்கம் சென்று அமர்ந்து கொண்டு, தனக்கு எதிர் திசையில் வந்து அமரும் படி, யாழினிக்கு கண்காமித்தான். அவளும் வேறு எதுவும் யோசிக்காமல், அவன் கைகாட்டிய திசையில் வந்து அமர்ந்தாள்.

அவளிடம் ஒரு நோட்பேடைத் தந்தவன், ஒரு பேனாவையும் தந்து, “இதில் உனக்கு கிடைச்ச கிஸ் பத்தி எழுது” என்று மிகவும் சாதரணமாக கூற, ‘தனக்கு தான், ஒளியோன் கூறியது சரியாக காதில் விழவில்லை போல’ என்று நினைத்த அகரயாழினி, திரும்பவும் அவனைப் பார்த்தவள், “என்ன சொன்னீங்க” என்று கேட்க.

தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி பார்த்தவன், “உனக்கு சரியாத் தான் கேட்டு இருக்கு” என்க.

யாழினிக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக்கொண்டது. மின்னல் வேகத்தில், ‘இங்கே நீ என்ன செய்துகொண்டு இருக்கின்றாய்!. எதுக்காக அவன் சொன்னதை எல்லாம் கேட்கிறாய்?. உன் அலைபேசி எங்கே?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவள் மனது கேட்க.

வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவள், “நான் வீட்டுக்குப் போகணும். என் அலைபேசி எங்க?” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்து.

“போகலாம் யாழினி. உன் அண்ணன் வந்துவிடட்டும்” என்று அவன் சொன்னதும் தான் தாமதம், “நான் போகணும் சொல்றேன். உங்கள மாதிரி எனக்கு அம்மா அப்பாவெல்லாம் கிடையாது. என் அண்ணனுக்கு என் மேல் அக்கறையும் கிடையாது. நீங்க கூப்பிட்டா அவன் வரவும் மாட்டான்” என்று திடீரென்று பெருங்குரல் எடுத்துக் கத்தியவள், அந்த இடத்திலையே வெடித்து அழுதாள்.

அவளால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒளியோனின் பார்வை தவறாக இல்லை என்றாலும், அவனது பேச்செல்லாம் ஒரு தினுசாக இருப்பதை, இப்போது தான் உணர்ந்தாள் பெண். ‘அவன் தன் அண்ணனை பழி வாங்க இதுபோல் செய்றானோ!’ என்று வேறு தன்னுள் கேள்வி எழுந்ததை உணர்ந்தவள், ‘இதுக்கு மேலும் இங்க இருக்கக் கூடாது’ என்ற நிலைக்கு வந்ததும் தான், ஒளியோனிடம் அப்படி பேசியது.

அவளையே தீர்க்கமாக பார்த்த ஒளியோன், இப்போது முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு, “உன்னை அப்படி எல்லாம் அனுப்பமுடியாது” என்றான் குரோதம் ததும்பிய குரலில்.

அப்போது தான், தாம் கடத்தப்பட்டு இருக்கின்றோம் என்பதையே உணர்ந்தாள் பெண். தன் கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்தவள், எழுந்து நின்று மரியாதையைக் கைவிட்டவளாக, “உனக்கு என்ன தான் வேணும்?. நானும் என் அண்ணனும் உன்கிட்ட பணம் எதுவும் வாங்கலையே!. பின்ன ஏன் திரும்பத் திரும்ப எங்க வாழ்க்கையில் தலையிடுற?” என்று கத்தினாள்.

அதற்கு அந்த அடங்காதவனிடம் பதில் இல்லை. மாறாக, “இப்ப நீ இந்த கேமை விளையாண்டு தான் ஆகணும்” என்றவன் கண்கள், மானை வேட்டையாடும் புலியின் கண்கள் போல் தெரிந்தது.

அந்த நேரம், ‘ப்ளீஸ் அண்ணா. சீக்கிரம் வந்துடு.’ என்று அவள் மனதினுள் அகிலனை நினைத்துக்கொள்ள, இங்கு அகிலனோ ஒளியோன் அனுப்பியதைப் பார்க்கவே இல்லை. மாறாக ஒளியோன், அகிலனுக்கு அனுப்பிய செல்பியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 14

தன் ஷூட்டிங்கை பாதியிலையே முடித்துக் கொண்டு, நிலாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் அகிலன். அவன் இங்கு வந்து சென்றதில் இருந்து, அவன் மனது என்னவோ அவளையே தான் தேடியது. ஆனால் கண்டிப்பாக உடல் சுகத்திற்காக அல்ல.

அவன் மனதில் நிலாவின் சோர்ந்த முகம் எதையோ சொல்ல, ‘கண்டிப்பா அவளுக்கு ஏதோ பிரச்சனை தான்.’ என்று முடிவு எடுத்தவன், பின் எடுக்க வேண்டிய காட்சிகளை, தலைவலிப்பதாக கூறி, ரத்து செய்துவிட்டு அவளைக் காண ஓடோடி அவளின் வீட்டிற்க்கு வந்துவிட்டான்.

அவன் மனது அவளைத் தான் தேடுதா என்று கேட்டால், சத்தியமாக அவனுக்கே இதன் விடை தெரியாது. ஆனால் அவனால் நிலாவை விடவும் முடியாது. அதே நேரத்தில், தான் நிலாவிற்கு உண்மையாக இல்லை என்ற குற்ற உணர்ச்சியும் அறவே இல்லை.

இது எந்த மாதிரியான உறவு என்பது அவனுக்கே வெளிச்சம். ஆனால் நிலாவிற்கு இவனே உலகம். கண்மூடித்தனமாக அவனை நம்பினாள் பெண். அவன் கட்டிவைத்திருக்கும் பிம்பம் உடையும் நேரமும் வெகு தொலைவில் இல்லை.

குன்றில் தோன்றி வெகு தூரம் பயணம் செய்யும் ஆறுக்கே முடிவு என்ற ஒன்று இருக்கும் போது, அதில் அகிலன் எம்மாத்திரம்.

பலவித குழப்பங்கள் நிலாவை சூழ்ந்து இருக்க, அவள் முன்னே தோன்றியவனைக் கண்டு, பௌர்ணமி இரவில் பூரண சந்திரன் போல் பிரகாசமாக பெண்ணவளின் முகம் மாறியது.

அடுத்த நிமிடமே வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல, பாய்ந்து சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஷூட்டிங் போகலையா?” என்று அவன் மார்பில், தன் கன்னத்தை வைத்து தேய்த்தபடி அவள் கேட்க.

அவள் தலையில் முத்தம் வைத்தவன், “உன் முகத்தைப் பார்த்ததும், எனக்கு இனி அங்க என்ன வேலை?” என்று சொல்லிக் கொண்டே விலகியவன், “இரு நான் குளிச்சிட்டு வந்துடுறேன்.” என்று சொல்லிக்கொண்டே, தன் மகிழுந்தின் சாவி, வால்லட் மற்றும் அலைபேசியை அங்கே இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு, நிலாவின் அறையை நோக்கிச் சென்றான்.

செல்லும் அகிலனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் மனதிற்குள் சாரல் அடித்த உணர்வு ஏற்பட்டது. ஏனென்றால் அகரயாழினியை மையப்படுத்தி, நிலாவின் மீது நெருப்பை அள்ளி கொட்டியவன், இப்போது தான் சகஜநிலைக்கு மாறிக்கொண்டிருந்தான்.

தனக்காக ஷூட்டிங்கை விட்டு வந்தவனை நினைத்துப் பார்த்து அவளது கன்னங்கள் சிவந்து போனது. அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே, டீப்பாயின் அருகே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அப்போது தான் அகிலனின் அலைபேசியில் செய்தி வந்ததற்கு அடையாளமாய், அது ஒளி எழுப்பியது. அது சைலென்ட் மோடில் இருந்தததால், சத்தம் எழுப்பவில்லை.

ஏற்கனவே ஷூட்டிங்கில் இருந்து பாதியில் வந்ததனால், தயாரிப்பாளர் ஏதும் செய்தி அனுப்புகின்றாரோ! என்ற நினைப்போடு, அதைத் திறந்தாள் நிலா.

அகிலனுக்கு திரைமறைவில் இன்னொரு முகம் இருந்தாலும், அதை என்றுமே அவனைப் பின்தொடரவிட்டது இல்லை. அதனால் தான் என்னவோ அவனது அலைபேசியில், நிலாவிற்குத் தெரியாமல் எந்த ஒரு ரகசியமும் இருந்தது இல்லை.

அதனால் அவளுக்கு அவனின் அலைபேசியைத் திறக்கும் ரகசிய குறியீடு தெரிந்திருந்தது.

அதில் வந்த சமீபத்திய செய்தியைப் பார்த்தவள், அது தேவையில்லாத விளம்பர செய்தி தான் என்பதை பார்த்துவிட்டு, அப்படியே கீழே வந்திருந்த இன்னொரு செய்தி தாங்கி வந்த எண்களைப் பார்த்து அவளின் புருவம் இடுங்கியது.

‘இது... இது... கடவுளே!’ என்று அவள் மனது அடித்துக்கொண்டது. நடுங்கும் கைகளோடு அவள் ஒளியோன் அனுப்பிய செய்தியைப் பார்க்க, அவள் நெஞ்சம் எல்லாம் அடித்துக் கொண்டது.

அவள் கண்கள் அலைபேசியிலையே நிலைகுத்தி இருக்க, அகிலன் வரும் அரவம் கேட்டு சுயத்திற்கு வந்தவள், அவன் பார்பதற்குள் வேகவேகமாக அந்த செய்தியை டெலீட் செய்துவிட்டு, அகிலனைப் பார்த்ததும், முகத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொண்டாள்.

நடிகை அல்லவா! அதனால் அவள் வதனத்தில் இருந்து எதுவும் தெரியவில்லை. ஆனால் அவள் மனது எரிமலைக் குழம்பாக வெடித்துக் கொண்டு இருந்தது.

அகிலனைப் பழிவாங்கவே ஒளியோன் இது போல் செய்கின்றான் என்று ஆணித்தரமாக நம்பியவள், ‘யாழினி வேற அவன் கூட இருக்கா. இது அகிலனுக்கு தெரிஞ்சா மிகப்பெரிய பிரச்சனை வரும்’ என்று அவள் நினைக்க, அவளின் இன்னொரு மனமோ, ‘ பிரச்சனை வரவேண்டும் என்று தானே ஒளியோன் இவ்வாறு செய்கின்றான்.’ என்று எடுத்துக் கூறியது. ‘இப்போது என்னசெய்வது’ என்று குழப்பம் அடைந்தாள். ஆனால் அவள் முகம் மட்டும் எந்த ஒரு உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அவள் அருகே வந்தமர்ந்த அகிலன், அவள் தோள்களைச் சுற்றி தன் கைகளைப் போட்டு, “உன் மனசுல என்ன இருக்கோ அதை இப்பவே என்கிட்ட கொட்டு.” என்றான்.

அவளோ, அவன் முகத்தை ஏறிட்டவள், “ஏதோ சொல்லமுடியாத கஷ்டம் அகி. எனக்குன்னு நண்பர்கள் கூட கிடையாது. யாழியை பார்க்கும் போதெல்லாம், அவளைப் போலவே எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்.” என்று அவள் சொல்லும் போதே, மின்சாரம் பாய்ந்தது போல் விழித்தவன், “இப்போ தான் எனக்கு நியாபகமே வருது. காலையில் இருந்து அவளுக்கு நான் கால் பண்ணவே இல்லை. இரு நான் அவள்கிட்ட பேசிட்டு வரேன்.” என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்த டீப்பாயில் தன் அலைபேசியை எடுத்தான்.

இங்கே நிலவிற்கோ, திக் திக் என்ற உணர்வு. அப்போது அகிலன் அலைபேசியில், அவள் பார்த்த அகரயாழினியின் முகம் தான் அவள் கண்கள் முன் வந்து நின்றது.

அதில் ஒளியோனும், யாழினியும் நெருக்கமாக நின்று இருந்தாலும், யாழினியின் முகத்தில், பயமுடன் கலந்த பரிதவிப்பு இருப்பதையும் புத்திசாலியாக இருக்கும் நிலா கண்டுகொண்டாள்.

ஆம் புத்திசாலி தான். அவள் முட்டாளாக இருப்பது அகிலனின் விஷயத்தில் மட்டுமே. ஒளியோன் தான் யாழினியை திரும்பவும் தன் பிடியில் வைத்திருக்கின்றான் என்பதை ஸ்த்திரமாக நம்பியவள், ‘யாழினியை அகிலனுக்குத் தெரியாமல் எப்படி ஒளியோன் பிடியில் இருந்து விடுவிப்பது!’ என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள்.

இங்கு அகிலன் யாழினிக்கு அழைத்துக் கொண்டே இருந்தானே தவிர, அவள் அழைப்பை ஏற்கவில்லை. அவள் அலைபேசி தான் ஒளியோனிடம் இருந்ததே!

“என் அழைப்பை எடுக்காமல் இந்த பொண்ணு என்ன தான் பண்றா?” என்று சொல்லிக் கொண்டே, அவளின் பொட்டிக்கிற்கு அழைத்தான்.

அங்கே அவனது அழைப்பை எடுத்த பணிப்பெண் ஒருவளிடம் அகரயாழினியிடம் அழைப்பை கொடுக்கச் சொல்ல, ஆனால் அந்த பெண்ணோ, “மேடம் இங்க இல்லை சார்” என்றாள் பணிவான குரலில்.

அதில் அவன் புருவம் முடிச்சிட, “ஏன்? இன்னைக்கு வேகமாக வீட்டுக்குப் போயிட்டாங்களா?” என்று கேள்வி எழுப்பினான்.

“இல்லை. மேடம் இங்க வரவே இல்லை சார்.” என்றதும் அகிலனின் முகத்தில் குழப்பம் உண்டானது. உடனே அவன் தன் வீட்டிற்கு அழைக்க, அங்கே, அவன் காதுகளில் விழுந்த செய்தி அவ்வளவு உவர்ப்பானதாக இல்லை.

அதனைப் பார்த்த நிலாவோ, வேகமாக வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டவள், “என்னாச்சி அகி.” என்றாள் பதற்றமான குரலில்.

“யாழினி எங்க போயிருப்பா. என் மேல கோபமா இருந்தா. ஆனா அதன் பிறகு அவள் சரியாகிட்டா. என்கூட நல்லா பேசுனா நிலா. ஆனா...” என்றவன் தன் தலையை அழுத்தமாக பிடித்துக்கொண்டான்.

நிலாவிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. அகிலனிடம் அவள் அறிந்ததை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அவள் மனதினுள், ஆயிரம் வீரர்கள் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் யுத்தம் செய்வதைப் போல பயங்கரமாக சத்தம் எழுப்பி துடிக்க ஆரம்பித்தது.

“இன்னொரு தடவை முயற்சி செஞ்சி பாருங்க அகி” என்ற நிலா அவன் கையில் அழுத்தம் கொடுத்தாள்.

அகிலன் மனதிலோ, நேற்று இரவு யாழினி நிலாவை வைத்து சண்டை போட்டதை சுற்றி வந்தது. ‘ஒருவேளை தோழிகள் கூட எங்கையாவது போயிருப்பா’ என்று எண்ணினானே தவிர மறந்தும் அவள் கடத்தப்பட்டு இருப்பாள் என்று அவன் சிறிதும் யோசித்துப் பார்க்கவில்லை.

பின் நிலாவின் கை அழுத்தத்தில், அவளைப் பார்த்து, “நேத்து ராத்திரி வெளிய போன யாழினி, இன்னும் வீட்டுக்கு வரலையாம்” என்றான் பரிதவிப்பாக.

அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு, நிலாவின் நெஞ்சில் அழுத்தம் கூடிக் கொண்டே சென்றது. அவள் முகத்தைப் பார்த்தவன், “ஹேய் நிலா, நீ எதுக்கும் டென்ஷன் ஆகாத. அவள் தோழிகள் கூட தான் போயிருப்பா. நேத்து அவளுக்கும் எனக்கும் சிறிது வாக்குவாதம். அதை நினைச்சு தான் நான் கொஞ்சம் அப்செட்.” என்றவன், திரும்பவும் யாழினிக்கு தன் அலைபேசியில் முயற்சி செய்தான். ஆனால் இந்த தடவையும், ரிங் முழுவதும் சென்று ரத்தானது.

பின் இதையே அவன் விடாமல், ஒரு பத்து தடவை முயற்சி செய்து பார்த்தான். இறுதியாக நிலா உண்மையைக் கூற வர, “அகி...” என்று வாயை திறப்பதற்குள், அகிலனின் அழைப்பும் எடுக்கப்பட்டு, அவன் வாயில் இருந்து மெல்லிய குரலில், “யாழி” என்ற சொல் வெளியே வந்தது.

அதைக் கேட்ட நிலா, தன் வாயை முடிக்கொண்டாள்.

“இப்ப எதுக்கு திரும்பத் திரும்ப எனக்கு போன் பண்ணி இம்சை பண்ற?. நான் தான் எடுக்கலைன்னு தெரியுதுல. எடுக்க விருப்பம் இல்லாமல் தான் எடுக்காம இருக்கேன்.” என்று அந்தப்பக்கம் சுள்ளென்று எரிந்து விழுந்தாள் அகரயாழினி.

பொதுவாக யாழினி இப்படி எல்லாம் பேசுபவள் இல்லை. இப்போது வார்த்தைகளை கூர்மையான கத்தியாக்கி அதை அப்படியே அகிலனிடம் இறக்கி இருந்தாள்.

அரைமணி நேரமாக பித்து நிலையில் இருந்த அகிலனின் முகமோ, சிவந்து போய், எரிமலைக் குழம்பாய் வெடிக்க, “எங்க இருக்க யாழினி?. போன் பண்ணா எடுக்கமாட்டியா?” என்று மூச்சு வாங்க, கத்தாமல் அதே நேரத்தில் அழுத்தமாகவும் கேட்டான்.

“அதான் எடுக்க விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேனே!” என்று கம்பீரமாக கேட்ட தன் தங்கையின் குரலில் விக்கித்து எழுந்து நின்றுவிட்டான் அகிலன்.

அகிலன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நிலாவோ, அகிலனின் அரண்ட முகத்தைப் பார்த்து, “என்னாச்சி அகி. யாழி எங்க இருக்கா?” என்று கேட்க.

அவளை கண்டுகொள்ளாமல் தன் தங்கையிடம், “உன்கிட்ட பேசணும்.” என்று இரண்டே வார்த்தைகளில் கத்தினான்.

“சும்மா கத்தாத அண்ணா. நான் இப்ப நம்ம வீட்டில் தான் இருக்கேன். உனக்கு பேசணும்னா இப்பவே வீட்டுக்கு வா.” என்று கூறி அவன் இணைப்பை துண்டித்தவள், அடுத்து அழைத்தது என்னவோ ஒளியோனுக்குத் தான்.

அவன் இணைப்பை எடுத்ததும், “நான் பத்திரமா வீட்டுக்கு வந்துட்டேன் ஒளி.” என்க.

அவனோ, “ம்..” என்று மட்டும் சொன்னான்.

இணைப்பை வைக்காதவள், ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு, “நன்றி ஒளி” என்றதும், ஒளியோன் சக்கரவர்த்தியின் கண்களில் கோபாக்கினியின் பொறி பறந்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 15

அகிலனின் கோபமான முகத்தைக் கண்ட நிலா, பதற்றத்துடன் அவன் முன்பு வந்து நின்றவள், “என்னாச்சி அகி. யாழி.. நல்லா தானே இருக்கா!” என்று கேட்க.

“நல்லா தான் இருக்கா” என்றதும் நிலாவின் மனதில் இப்போது சிந்தனை ரேகைகள். சிறிது நேரத்திற்கு முன்பு ஒளியோன் அனுப்பிய புகைப்படத்தை நினைத்து குழம்பியவள், “யாழி இப்ப எங்க இருக்கா அகி” என்று நிலா கேட்க.

மேஜை மீதிருந்த தனது மகிழுந்தின் சாவியை, குனிந்து எடுத்தவன், “நான் இப்போவே வீட்டுக்குப் போகணும் நிலா. யாழினி வீட்டில் தான் இருக்கா” என்றதும், நிலாவின் மனதில் இருந்து எதோ மிகப்பெரிய பாரம் ஒன்று இறங்கியதைப் போல் இருந்தது.

நிம்மதி பெருமூச்சி விட்டவள், “நானும் உங்களுடன் வரேன் அகி” என்று சொல்லும் நிலாவை வித்தியாசமாக பார்த்தவன், “திடீருன்னு என்ன?” என்று கேட்டவன், தொடர்ந்து, “அதெல்லாம் வேண்டாம் நிலா. இது குடும்ப விஷயம்” என்று சொன்னதோடு முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

இங்கே நிலாவிற்கு, அவன் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டு நிலைகொள்ளவே முடியவில்லை. ‘இது குடும்ப விஷயம்னா... நான் அந்த குடும்பத்தில் இல்லையா!’ என்று மனதில் புழுங்க ஆரம்பித்தாள்.

‘தான் அகிலனின் மனதில் என்ன இடத்தில் இருக்கின்றோம்?’ என்று முதல் முறையாக யோசித்த நிலாவுக்கு பயம் அவளின் மனதை கவ்வ ஆரம்பித்தது. இதுவரை அவன் பேசியதை எல்லாம் தன் காதலுக்காக பொறுத்துக் கொண்ட நிலாவால், அவனின் இந்த பேச்சை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நினைவுகளை, நினைப்பதற்கும், மறப்பதற்கும் உண்டான தொகுப்பே வாழ்க்கை. ஆனால் தன் காதலுக்காக எதை மறக்க வேண்டும் எதை நினைக்க வேண்டும் என்று தெரியாமல் குழம்பிய நிலாவின் மனது தீவிர சிந்தனை செய்ய, முடிவில் அவன், ‘இது குடும்ப விஷயம்’ என்று சொன்ன வார்த்தைகளே மாறிமாறி அவள் முன்பு வந்து நின்றது.

ஆடவன், பெண்ணவளின் மனம் உணரும் நாள் தான் எப்போது?. அன்றைய நாளில் பெண்ணவளின் காதல் இதே போல் வானளவு பரவி நிற்குமா?.

வெறித்தனமாக தன் மகிழுந்தை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் அகிலன். உள்ளே நேராக வந்தவன், அங்கே வரவேற்பு அறையில், தன் கால் மெல் கால் போட்டு ஒய்யலாக அமர்ந்திருந்த தன் தங்கை அகரயாழினியைப் பார்த்து, கோபத்தில் அவள் முன்னே இருந்த கண்ணாடி டீப்பாயில், தன் மகிழுந்தின் சாவியை விசிறியடித்தான்.

ஆனால் அதற்கெல்லாம் யாழினி பயந்துவிடவில்லை. சோபாவில் இன்னும் வசதியாக சாய்ந்து கொண்டு, அகிலனை கேலிப் பார்வை சிந்தினாள்.

முதல்முறையாக தன் அண்ணனின் சினம் கொண்டு சிறிதும் கிணுங்காமல் தெனாவட்டாக அமர்ந்திருந்த யாழினியைப் பார்த்து, கோபத்துடன் அவன் மனதினுள் யோசனை எழுந்தது.

அதற்குள் தன் அண்ணனைப் பார்த்தவள், “வா அண்ணா. ஏதோ பேசணும்னு சொன்ன” என்றாள் சாதாரண குரலில்.

உணர்ச்சி பிழம்புகளை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவள் முன்னே வந்து நின்று, “நேத்து ராத்திரி எங்க இருந்த?” என்று குரலில் அழுத்தத்தைக் கூட்டி அவன் கேட்க.

பெரும் சிக்கலில் இருந்து வெளிவந்ததைப் போல் அவள் தன்னை காட்டிக்கொள்ளாமல், மிகவும் மென்மையான குரலில், “பப்புக்கு போய் இருந்தேன் அண்ணா” என்றாள்.

அவள் குரலில், இப்போது கேலி இல்லை. ஆனால் அகிலனுக்கு அது கேலி போல் தெரிய, “மணி இப்போ நாலு. நேத்து இரவில் இருந்து இன்று மதியம் வரைக்கும் பப்பிலா இருந்த” என்றான் கண்களில் கனலை தேக்கி வைத்தபடி.

அவனைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் எதிர் பார்வை பார்த்த யாழினி, சோபாவில் இருந்து எழுந்தவள், “நானும் அதே கேள்வியை உன்கிட்ட கேட்குறேன். நேத்து ராத்திரி வெளிய போன நீ, இப்ப தான் வீட்டுக்கு வர்ற” என்றவள் அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், தன் கையைக் நீட்டி, “ஷூட்டிங் இருந்ததுன்னு மட்டும் பொய் சொல்லாத அண்ணா” என்று அவள் கத்த.

சுற்றும் முற்றும் பார்த்தவன், “பொன்னம்மா..” என்று தன் வீட்டில் வேலைக்கு இருப்பவரை அழைத்தான்.

இவன் குரல் கேட்டு பொன்னம்மா அடித்துப் பிடித்து அங்கே வர. அவரிடம், “வீட்ல வேலை பார்க்குற எல்லாத்தையும் கூட்டிட்டு வெளிய போங்க” என்றான் உத்தரவாக.

உடனே அவர் அனைவரையும் அழைத்து வெளியே சென்றுவிட, இப்போது நிதானமாக அகரயாழினியைப் பார்த்தவன், அவள் என்னவென்று உணர்வதற்குள், தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி, தன் வலது கையில் இருந்த ஐந்து விரல்களையும் அப்படியே யாழினியின் கன்னத்தில் இறக்கினான்.

அவனது இரும்பை ஒத்த விரல்கள் ஒவ்வொன்றும் அவள் கன்னத்தில் அச்சாக பதிய, “அம்மா..” என்ற கேவலோடு, தன் கன்னத்தைப் பிடித்தவாறு கீழே விழுந்தாள் அகரயாழினி.

இருந்தும் தன்னை சமாளித்தபடி, கன்னத்தில் கைவைத்து, கோபத்தோடு எழுந்தவள், தன் அஞ்சன விழிகளால் அவனைப் பார்த்து முறைக்க, “என்ன யாழி! எல்லாம் புதுசா இருக்கு. என்னையவே கேள்வி கேட்குற?” என்று அகிலனின் குரல் சாதரணமாக வந்தாலும், அவன் முகத்தில் இருந்த அளவுக்கு அதிகமான மூர்க்கத்தனம், அகரயாழினியை பயம் கொள்ள வைத்தது.

அகிலனிடம் பாசத்துடன் கலந்த கண்டிப்பு இருக்குமே அன்றி, அவன் ஒரு போதும், கோபத்தோடு அகரயாழினியை பேசியதில்லை. இப்போது அவளை அடித்தேவிட்டதால், அகரயாழினிக்கு தாங்கவே முடியவில்லை.

‘அம்மா, அப்பா, உயிரோடு இருந்திருந்தால், இதுபோல் எல்லாம் நடந்து இருக்குமா!’ என்று அவள் உள்ளம் கொதிக்க, அவள் பார்வை என்னவோ இன்னும் அகிலனை முறைத்தபடி தான் இருந்தது.

“நேத்து ராத்திரியில் இருந்து இப்ப வரை எங்க போய் இருந்தன்னு, நான் கேட்டதுக்கு இன்னும் உன்னிடம் பதில் இல்லை யாழினி” என்று அவன் தன் பிடியில் நிற்க.

அப்போதும் பெண்ணிடம் மௌனம். தன் மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தவன், “உனக்கு சொல்ல பிடிக்கலையா? இல்ல சொல்லக்கூடாத இடத்துக்குப் போய் இருந்தியா?” என்று அகிலன் கேட்க.

இப்போது தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் வெளியே கொட்ட ஆரம்பித்தாள் யாழினி, “நானும் அதே கேள்வியை உன்னை நோக்கி கேட்டா என்ன பண்ணுவ?. பெண்களுக்கு மட்டும் தான் ஒழுக்கம் இருக்கா ஏன் உன்ன மாதிரி ஆண்களுக்கு இல்லையா?” என்று அவள் வார்த்தைகள் என்னும் ஆயுதத்தைக் கொண்டு அவனை தாக்க.

இப்போது மிகவும் பொறுமையாக, “நேத்து நான் நிலா வீட்டில் இருந்தேன். காலைல ஷூட்டிங் போயிட்டு, இப்ப இங்க வந்துருக்கேன்” என்றவன், இப்போது நீ சொல் என்பது போல் யாழினியைப் பார்த்தான்.

அவளும், “நேத்து நான் பப்புக்கு போய் இருந்தேன். அங்க இருந்து அப்படியே, என் வெல் விஸ்ஷர்(well wisher) வீட்டுக்குப் போயிட்டு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்” என்ற பதிலைத் தந்தாள் யாழினி.

அவள் தோழி வீட்டுக்குப் போய் இருந்தேன், என்று சொல்லி இருந்தால் கூட, அதன் பின் அவன் ஒன்றும் கண்டு கொண்டிருக்க மாட்டானோ என்னவவோ, ஆனால் அவள் சொன்ன வெல் விஸ்ஷர் என்ற ஆங்கில சொல்லிலையே அவன் உள்ளம் யோசனைக்குத் தாவியது.

“அது யாரு? எனக்குத் தெரியாம” என்று அவன் புருவம் சுருக்க.

“அந்த நிலாவும் யாரு அண்ணா. தினமும் அவளுக்காக ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போற” என்று இப்போது சத்தமாக கேட்டாள் யாழினி.

அகிலனுக்கு ஒரு கணம் மூச்சே அடைத்துவிட்டது. ‘தன் இச்சையை பெரியதாக நினைத்து, தன் தங்கையைத் தான் கண்டுகொள்ளவில்லையோ’ என்று நினைத்தவனுக்கு பெரிய பாரம் கூடியது.

“என்ன அண்ணா பேசமாட்டேங்குற?. நான் கேட்ட கேள்விகள் எல்லாம் உனக்குப் பிடிக்கலைல” என்று கேலியாக கேட்க.

இப்போது கோபத்தை எல்லாம் கைவிட்டவனாக, அகரயாழினியின் கைப்பிடித்து, சோபாவில் அமரவைத்தான். யாழினியும் வேண்டா வெறுப்பாக அவனுடன் அமர்ந்தாள்.

“நமக்குள்ள பிரச்சனை வேண்டாம் யாழி. உனக்கு என் மேல் ஏதாவது கோபம் இருந்தா, அதை நீ நேரடியா என்கிட்டவே சொல்லு’ என்றான் அவள் தலையைத் தடவியபடி.

அகிலனுக்கு அவள் வீட்டுக்கு வராததற்கான காரணம் தெரிந்து போனது. ‘இப்போது நிலாவை மையப்படுத்தி தான் பிரச்சனை’ என்று உறுதியாக் நம்பியவன், யாழினியின் வாயிலாகவே அதை கேட்டு அதை சரி செய்யலாம் என்ற நிலைக்கு வந்திருந்தான்.

இதுவரை இருந்த கோபத்தை எல்லாம் கைவிட்டவளாக, “நீ... நீ... என்னை அடிச்சிட்ட..” என்று திக்கித் திணறிய குரலில், சிறுபிள்ளை போல் அவள் அழ ஆரம்பிக்க, அதில் உயிரோடு மரணித்தவன், அவள் கன்னத்தை தடவி ரொம்ப வலிக்குதாடா.” என்று வருத்ததோடு வினாவ.

பட்டென்று அவன் கையை தட்டி விட்டவள், “உன் கையில் இருக்கிற ரேகையை எல்லாம் என் முகத்தில் பதிய வச்சிட்டு, கேள்வியா கேட்குற” என்று முகத்தை சுழித்தாள்.

அதில் இறங்கி வந்தவன், “இங்கபாருடா தங்கம், நீ நேத்து இரவில் இருந்து வீட்டுக்கு வரலைன்னு தெரிஞ்சதும் ரொம்ப டென்ஷன் ஆகிட்டேன். அதனால் தான் இப்படி..” என்றவன் ஒரு பக்கம் திரும்பியபடி, தன் கன்னத்தை அவளிடம் காட்ட.

யாழினி மனதில் இருந்த கோபம் எல்லாம் கரைவது போல் இருக்க, அப்போது பார்த்து தான், அவளுக்கு வேறு ஒரு நினைப்பும் வர, திரும்பவும் அவள் முகம் கோபத்தை தத்து எடுத்தது.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஆனா அந்த நிலாவ எனக்கு சுத்தமா பிடிக்கல” என்று கோபமாக கூற.

அதற்கு மெல்லியதாக சிரித்தவன், “அவளை எதுக்கு உனக்குப் பிடிக்கணும்?. அதுவும் இதைப் பத்தி நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் யாழி. நிலா ஜஸ்ட் என்னோட தோழி மட்டும் தான்” என்றவனுக்கு சிறிதும் குற்ற உணர்வு எழவில்லை.

“அப்ப ராத்திரி எதுக்காக நிலா விட்டுக்குப் போற?” என்று சிறிதும் யோசிக்காமல் யாழினி கேட்க.

அவனிடம் மௌனம். தொடர்ந்து பேசிய யாழினி, “அம்மா அப்பாவும் என்கூட இல்ல. இப்ப நீயும் இதுபோல் பண்ணா... எனக்கு யாரு அண்ணா இருக்கா?” என்று கூறி அழுதாள்.

யாழினி கேள்வி கேட்பதற்கு முன்னால் சாதாரணமாக தெரிந்த விஷயம் எல்லாம் இப்போது அகிலனுக்கு அபத்தமாக தெரிந்தது. ‘வயதுப் பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு, நமக்கென்ன சந்தோசம். நான் அவ்வளவு சுயநலவாதியா!’ என்று அவன் மனம் அவனையே காறி உமிழ, யாழினியின் தலையைத் தடவியவன், “எனக்கு நீ மட்டும் தான் முக்கியம் யாழி. இனி உன்னை தனியாவிட்டுட்டு எங்கையும் போகமாட்டேன்” என்று கூற, யாழினியின் முகத்தில் புன்னகை பரவியது. அதே நேரத்தில் இந்த கட்சியை தன் வீட்டில் இருந்தே பார்த்த ஒளியோனின் இதழ்கள் கேலியாக வளைந்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 16

அகிலனும், அகரயாழினியும் இப்போது ராசியாகிவிட்டாலும், யாழினி சொன்ன, “வெல் விஸ்சர்” என்ற வார்த்தையிலையே அவனது மனம் வந்து நின்றது.

அதை அவளிடம் அகிலன் கேட்க, சிறிதும் தடுமாற்றம் இல்லாமல், “என் பிரண்ட் தான் அண்ணா. ரொம்ப நல்லவங்க” என்று அவள் சொல்லும் போதே நிலாவிடம் இருந்து அகிலனுக்கு அழைப்பு வந்துவிட்டது.

அதை தற்சமயம் கிடப்பில் போட்டவன், “நீ உன் அறைக்குப் போ யாழி. எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கதவை இழுத்து சாதியவன், “சொல்லு நிலா” என்றான் தீர்க்கமான குரலில்.

“யாழினி எப்படி இருக்கா?. அவளுக்கு ஒன்னும் இல்லையே!” என்று நிலா அக்கறையாக வினாவ.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை நிலா. அவள் நல்லா தான் இருக்கா. அவள் தோழி வீட்டுக்குப் போய் இருப்பா போல” என்றான்.

“நான் வீட்டுக்கு வந்து யாழியை பார்க்கட்டா அகி” என்று நிலா கேட்க, அதற்கு பதற்றத்துடன், “இல்ல வேண்டாம்” என்று கத்தியவன், பின் மூச்சை இழுத்துவிட்டவனாக, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நிலா. யாழி நார்மல் தான்” என்றான்.

“இருந்தும் நான் யாழிகிட்ட பேசணும் அகி. நான் உங்க குடும்பத்தில் வந்து இணையப் போறேன். யாழியை பார்த்துகுற பொறுப்பு எனக்கும் இருக்கு” என்றவள் அவன் பேசுவதற்கு முன் இணைப்பை துண்டித்திருந்தாள்.

தன் கண்ணை மூடி திறந்தவன், “ஏற்கனவே ஷூட்டிங்கில் ஆயிரத்தெட்டு பிரச்சனை இதில் நிலா வேறு இங்க வந்து யாழினிகிட்ட பேசி, ஐயோ... என்று தன் தலையில் கையைவைத்துவிட்டான் அகிலன்.

சிறிது நேரம் கடந்த பின் அகிலன் தன் அறையில் இருந்து வெளியே வர, அப்போது வெளியே செல்வதற்கு தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அகரயாழினி.

அவளைப் பார்த்தவன், “இப்ப தானே வந்த அதுக்குள்ள வெளிய கிளம்பிட்டியா யாழி” என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்து நின்றான் அகிலன்.

“ஆமாம் அண்ணா. நான் சொன்னேனே பெரிய கம்பெனியான மாடர்ன் பேஷன் கூட நம்ம பொட்டிக் டை அப் வச்சிக்கப் போகுது. என்னோட மிகப்பெரிய கனவு நிஜமாகப் போகுது அண்ணா” என்றாள் மகிழ்ச்சியான குரலில்.

அகரயாழினி, அகிலனுடன் ஏற்பட்ட பிணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு, மிகவும் ஆனந்தமாக பேசினாள். தன் தங்கையின் மாற்றத்தால் உள்ளம் மகிழ்ந்த அகிலன், “நானும் உன்னுடன் வரேன் யாழி. தனியா போகாத. கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று சொல்லியபடி தன் அறைக்குள் நுழைந்து தயாராகி வெளியே வந்தவன், தன் அலைபேசியை வேண்டும் என்றே தன் அறையிலையே வைத்துவிட்டான்.

அகிலனுக்கு அந்த மாடர்ன் பேஷன் என்ற நிறுவனத்தின் பெயர் ஏனோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. தங்கையின் நலனை கருத்தில் கொண்டு, தானும் அந்த நிறுவனத்தைப் பார்க்க வேண்டும் என்ற நினைப்போடு தான் அவளுடன் செல்லத் தயாரானான்.

மாடர்ன் பேஷன் என்று பொன் எழுத்துக்களால் மின்னிய, அந்த பெரிய கட்டிடத்தினுள் அகிலனின் மகிழுந்து நுழைந்தது.

மகிழுந்தில் இருந்து இறங்கிய அகரயாழினி, “நீயும் உள்ளே வா அண்ணா” என்று அழைக்க, “இப்போ வேண்டாம் யாழி. நீ வேலைய முடிச்சிட்டு வா. நான் சரியா ஒரு மணிநேரத்தில் இங்க வந்துடுறேன். உள்ளே வந்து பார்த்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தானே தன் மகிழுந்தை ஓட்டி சென்றான்.

அகிலனே தன்னை அழைத்து வந்தது, அகரயாழினியின் முகத்தில் மகிழ்ச்சியைத் தந்திருந்தது. அதே முகப்பொலிவுடன் அவள் உள்ளே சென்றாள்.

அகரயாழினியின் கையில் இருந்த, உள்ளே செல்வதற்கான கடிதத்தை அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டு அவளை உள்ளே அனுப்பிவைத்தாள் ரிசப்ஷனில் இருந்த பெண்.

மாடர்ன் பேஷனின் சிஇஓ அறைக்குள் அவள் நுழைய, அவளுக்கு அதிர்ச்சி அளிப்பது போல் அங்கே அமர்ந்திருந்தான் ஒளியோன் சக்கரவர்த்தி.

அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியானவன் போல் தன்னைக் காட்டிக் கொண்டவன், “மிஸ் அகரயாழினி? இங்க எப்படி?” என்று புரியாமல் கேட்டான்.

முதலில் அதிர்ந்து விழித்த யாழினி. பின் தன்னை சமாளித்துக் கொண்டு, அவனைப் பார்த்து சிரித்தாள்.

அதற்குள் ஒளியோனின் உதவிக்கு வந்திருந்தார், சிஇஓ இருக்கையில் அமர்ந்திருந்த மத்திய வயது பெண் ஒருவர்.

“இவங்க பொட்டிக் கூடத்தான் நம்ம நிறுவனம் டை அப் பண்ணப் போகுது சார்” என்று பவ்யமாக சொன்ன அந்த பெண்மணி, அகரயாழினியைப் பார்த்து, “உள்ள வாங்க மேடம். வந்து உட்காருங்க” என்றார்.

அவளும் சிறிது புன்னகை சிந்திவிட்டு, உள்ளே வந்தவள் ஒளியோனைப் பார்த்து, “நீங்க...” என்று புரியாமல் விழிக்க.

அதற்குள் அந்த பெண்மணி, “இவர் தான் மேடம் எங்க பாஸ். இந்த நிறுவனம் இவருடையது தான்” என்று சொல்லி முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

அதற்குள் தன் இருக்கையில் இருந்து எழுந்த ஒளியோன், “ஓகே யாழினி. நாம கொஞ்சம் பேசணும். நீங்க மேடம் கூட பேசிட்டு, என்னோட அறைக்கு வாங்க” என்று மரியாதை நிமித்தமாக கூறியவன், பின் அந்த பெண்மணியைப் பார்த்து, தலை அசைப்புடன் அங்கிருந்து சென்றான்.

அவருடன் முக்கியமான விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, அங்கிருந்து ஒளியோன் அறையை விசாரித்து அறிந்து, அங்கே கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் அகரயாழினி.

யாழினியின் வருகைக்காகவே காத்திருந்த ஒளியோன், அவளைப் பார்த்ததும், “இப்ப உன் உடம்பு எப்படி இருக்கு யாழி” என்று மாந்தக புன்னகையுடன் வினாவினான்.

அதில் மெல்லியதாக சிரித்தவள், “நான் நல்லா இருக்கேன் சார்” என்றவள், அவன் கைகாட்ட, அவனுக்கு முன்னே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

“யாழ் பொட்டிக் கூட டை அப் வச்சிருக்குறதா சொன்னாங்க. ஆனா சத்தியமா அது நீயா இருப்பன்னு நான் எதிர்பார்க்கல யாழி. எனக்கு இருக்கும் பல நிறுவனத்தில் இதுவும் ஒன்னு” என்றவன் குரலில், இனிமையாக உணர்ந்தவள், “நானும் இது உங்க நிறுவனமா இருக்கும்னு எதிர்பார்க்கல சார்” என்றாள் யாழினி.

“ஹேய் யாழினி, நேத்து சொன்னது மறந்துருச்சா?. என்னை பெயர் சொல்லி கூப்பிடு” என்றான் ஆணையாக.

“அதில்லை, நேத்து உங்களை தோழனா பார்க்க சொன்னீங்க. ஆனா இன்னைக்கு நீங்க என்னோட பாஸ்” என்று சொல்லி மெல்லியதாக சிரிக்க.

“அதனால் என்ன?. இது கார்பரேட் நிறுவனம். என் பெயர் சொல்லியே கூப்பிடு. நாம சேர்ந்து பாலிவூட் படத்துக்கு காஸ்ட்யூம் பண்ணப்போறோம். இது உனக்கு மிகப்பெரிய வாய்ப்பு” என்று சொல்லிக் கொண்டே சில கோப்புகளை எடுத்து அவள் முன்பு நீட்டினான்.

அதை வாங்கிக் கொண்டவள், “ரொம்ப நன்றி ஒளி. இது என்னோட நீண்ட நாள் கனவு” என்றபடி கோப்பை தடவினாள்.

“ஹேய் யாழி, இது உன் திறமைக்கு கிடைச்ச பரிசு” என்று சொல்லிக் கொண்டே அவள் முன்பு ஜூஸ் இருந்த கண்ணாடி க்ளாசை நீட்டினான்.

“இல்லை ஒளி வேண்டாம்” என்று அவள் மறுப்பு கூற.

“சும்மா குடி யாழி, நேத்து மாதிரி, நான் இதில் ஒன்னும் கலக்கல” என்றான் கேலியாக.

இப்போது அவனை தீர்க்கமாக பார்த்தவள், “நீங்க ஆயிரம் காரணம் சொன்னாலும், நேத்து நீங்க பண்ணது தப்பு தான் ஒளி” என்று அவள் தீர்க்கமான குரலில் மொழிந்தாள்.

“ம்...” என்று மட்டும் சொன்னவன், ஜூஸ்சை அவள் முன் வைத்துவிட்டு, “இதில் ஒன்னும் கலக்கல. ஆனா இதை குடிக்குறதும், குடிக்காததும் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு, இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

சில கணங்கள் அவர்களுக்குள் அமைதி. அந்த அமைதியை முதலில் உடைத்த யாழினி, “நேத்து உங்கக்கூட இருந்ததைப் பத்தி அண்ணா ஒன்னும் கேட்கல” என்று சொல்ல.

அதற்கு தன் உதட்டை வளைத்து சிரித்தவன், “நான் தான் சொன்னேனே உங்க அண்ணன் கேட்கமாட்டார். அதற்கான காரணத்தை நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்” என்க.

“இல்லை ஒளி. அண்ணன் இப்ப மாறிட்டார்”

“யார் சொன்னது?”

“அவரே சொன்னார் ஒளி” என்றதும், ஒளியோனால் தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இருந்தும் அரும்பாடுபட்டு, அதைக் கட்டுப் படுத்தியவன், “யாழி, நீ என்னோட தோழி. நீ சந்தோஷமா இருந்தா எனக்கு ஓகே தான்” என்றவன், அவளிடம் தொழில் சம்பந்தமாக பேச ஆரம்பித்தான்.

அகரயாழினியை மாடர்ன் பேஷன் நிறுவனத்தில் இறக்கிவிட்டு, அதன் அருகிலையே இருக்கும் ஆர்எம் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான் அகிலன். அவனைப் பார்த்ததும், வேகமாக ஓடி வந்து அவனுக்கு வணக்கம் வைத்தார் அந்த ஸ்டுடியோவின் மேனேஜர்.

அவரிடம் தொழில் சம்பந்தமாக பேசிய அகிலன், சரியாக ஒரு மணி நேரம் கழித்து யாழினியைக் கூப்பிட மாடர்ன் பேஷன் வந்தான்.

மகிழுந்தை நிறுத்திவிட்டு, அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தான் அகிலன். பிரபலமான டைரக்டர் என்பதனால், அவனைப் பார்த்தும், அங்கே வேலையில் இருந்த பெண்கள் ஆனந்த அதிர்ச்சி அடைத்தனர்.

அங்கே ரிசெப்சனில் இருந்த பெண்ணிடம் வந்தவன், “மிஸ் அகரயாழினி எங்க இருக்காங்க” என்று அவன் கேட்க.

கடவுளே தன் அருகில் வந்து பேசுவதைப் போல் இருந்தது அந்த பெண்ணுக்கு. அவளோ அவன் சொல்வதைக் காதில் வாங்காமல், “சார் நான் உங்களோட மிகப்பெரிய பேன் சார்” என்று பிதற்ற ஆரம்பித்தாள்.

அதில் அவளைப் பார்த்து கூர்மையாக முறைத்தவன், “யாழ் பொட்டிக் அகரயாழினி எங்கன்னு கேட்டேன்” என்று அவன் அழுத்தம் திருத்தமாக கேட்க.

அந்த பெண்ணின் உதவிக்கு வந்த இன்னொரு பெண்ணோ, “சாரி சார். கோபப்படாதீங்க. இவள் வேலைக்கு புதுசா, அதான் ஆர்வமிகுதியில் இப்படி நடந்துக்கிட்டா” என்று மன்னிப்பை வேண்டினாள்.

அந்த நிறுவனத்திற்கு வரும் நபர்கள் அனைவரும் திரைதுறையுடன் தொடர்பில் இருக்கும் பெரிய தலைகள் தான். அதனால் தான் அனைவரும் அகிலனை ஆர்வமாக பார்த்துவிட்டு, திரும்பவும் தங்களது வேலைகளைத் தொடர ஆரம்பித்தனர்.

இங்கே வரவேற்பில் இருந்த பெண்ணுடன் அகிலன் பேசிக்கொண்டு இருக்க, சரியாக அவனுக்கு இடப்புறத்தில் இருந்து, ஒளியோனுடன் சிரித்துப் பேசியபடி வெளியே வந்தாள் அவன் தங்கை அகரயாழினி.

இங்கே, வெயிலில் காயும் ஒற்றைப் பனைமரம் போல் அகிலனின் வீட்டில் அமர்ந்திருந்தாள் நிலா. அகரயாழினியிடம் பேசவே அவள் அங்கு வந்திருந்தாள். முதலில் யாழினியின் பொட்டிக் சென்றவள், அவள் அங்கு இல்லாததைக் கண்டு நேராக கிளம்பி வீட்டிற்க்கு வந்திருந்தாள்.

ஆனால் அந்தோ பரிதாபம் வீட்டில் இருவரும் இல்லை. அவள் அலைபேசியில் அழைக்கக்கூடும் என்று கருதியே நேக்காக தன் அலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு சென்றான் அகிலன்.

நிலா அகிலனுக்கு முயற்சி செய்து பார்த்து தோற்றவள், அங்கு தன்னையே மேலும் கீழுமாக பார்த்து அளவு எடுத்துக் கொண்டிருந்த பொன்னம்மாவைப் பார்த்து, “யாழினி நம்பர் தாங்க. நான் அவளைப் பார்க்க தான் வந்தேன்” என்று கேட்டு வாங்கிக்கொண்டாள்.

சரியாக அவள் யாழினிக்கு அழைக்கப் போகும் போது, அவளுக்கு ஒளியோன் சக்கரவர்த்தியிடம் இருந்து அழைப்பு வந்தது.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 17

ஒளியோனும், அகரயாழினியும் சேர்ந்து சிரித்தபடி நடந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு சிறிது தள்ளி தான், அகிலன் தன் தங்கையை விசாரித்துக்கொண்டிருந்தான்.

அகிலன் இவர்களைப் பார்க்கவில்லை என்றாலும், ஒளியோனின் கழுகு கண்களுக்கு, அகிலன் தென்பட்டான். அகிலனைப் பார்த்ததும், ஒளியோன் கண்களில் ஏதோ பழிவெறி கணநேரத்தில் மின்னி மறைந்தது.

இப்போது, தான் அகிலனை நேரடியாக எதிர்கொள்வது, தன் திட்டத்திற்கு சரியல்ல என்பதனை உணர்ந்தவனாக, “ஹான் யாழினி, உங்க அண்ணன் வந்துருக்கார் போல. நீ என்னன்னு பாரு” என்று சொல்லிவிட்டு, திரும்பினான்.

“கொஞ்சம் நில்லுங்க ஒளி” என்று அவனை தடுத்து நிறுத்திய யாழினி, “அண்ணனை பார்க்கணும்னு ரொம்ப ஆசைபட்டீங்க. இப்ப என்ன அவரைப் பார்த்து பயந்து ஓடுறீங்க” என்று விளையாட்டாக தான் கேட்டாள்.

ஆனால் அது, ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் தன் வெப்பத்தை ஒளியோன் நெஞ்சில் திணிப்பதைப் போல், அவனுக்குக் காந்தியது. கண்களில் கோபமின்னால் நொடிக்கு நொடி அதிகமாக, அவனது மூளையே, அவனைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தது.

‘வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்துவிடக்கூடாது’ என்று உணர்ந்தவனாக, முகத்தில் கடினப்பட்டு புன்னகையை மலரவைத்தவன், “அதுக்கு சில நேரங்காலம் வரணும் யாழினி. இப்ப வேண்டாமே!” என்றவன், ‘நீயும் உன் அண்ணனிடம் சொல்லாதே!’ என்று அவளுக்கு மறைமுகமாக உணர்த்தினான்.

யாழினியும் என்ன நினைத்தாளோ, அவன் சொன்னவுடன், வேகமாக தன் தலையை ஆட்டிக்கொண்டாள். சரியாக ஒளியோன் திரும்பி செல்லும் போது தான் அகிலன் இவர்கள் நிற்கும் இடத்தைப் பார்த்தான்.

அப்போது அகரயாழினி மட்டும் தான் அங்கே நின்றுகொண்டிருந்தாள். உடனே வரவேற்பில் இருந்த பெண்ணோ, “இதோ மேடம் வந்துட்டாங்க சார்” என்றாள் பணிவாக.

தன் வேக எட்டுக்களை வைத்து யாழினியின் அருகே வந்த அகிலன், “எல்லாம் ஓகே தானே யாழி” என்றான் அக்கறையாக.

“எல்லாம் ஓகே தான் அண்ணா” என்றவள் முகம் இன்று அதிகமாகவே ஒளிர்ந்தது.

அதில் அகிலனின் மனம் மகிழ, “இந்த நிறுவனத்தை யார் ரன் பண்றாங்க?” என்றான் கேள்வியாக.

“அவங்க பெயர் அகல் அண்ணா. வாங்களேன் அவங்களை நான் உங்களுக்கு ஒரு இன்ட்ரோ கொடுக்குறேன்” என்று சொல்லி சிஇஓ அறைக்கு அழைத்து சென்றாள்.

உள்ளே சென்று அனைத்தையும் விசாரித்த அகிலனுக்கு அனைத்தும் திருப்திகரமாகவே இருந்தது. அதனால் அவனிடம் இருந்த சிறு உறுத்தலும் மறைந்து போனது.

இங்கே அதே நேரத்தில், தன் அலைபேசிக்கு ஒளியோன் அழைப்பதைப் பார்த்த நிலாவின் யோசனைகள் அதிகமானது, இப்போது அகரயாழினியிடம் பேசுவதை விட, ஒளியோனிடம் பேசுவது தான் சிறந்தது என்று முடிவு எடுத்தவளாக, அகிலனின் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலா, ஒளியோனின் அழைப்பை எடுத்து, “நான் உன்னை பார்க்கணும்” என்றாள் தெளிவான குரலில்.

அதில் ஒளியோனின் இதழ்கள் விரிய, “நானும் தான்” என்றான் இரண்டு வார்த்தைகளில்.

ஏன் எதற்கு என்ற கேள்விகளை எல்லாம் கேட்காமல், “எங்க பார்க்கலாம்?” என்று நிலா கேள்வி எழுப்ப, “நாளைக்கு காலைல நம்ம பீச் ஹவுஸ் வந்துரு” என்றதும், நிலாவின் முகத்தில் கசந்த புன்னகை தோன்றியது.

ஏதேதோ பழைய நினைவுகள் அவளின் மனதில் எழ, “அது உன்னோட பீச் ஹவுஸ் ஒளியோன் சக்கரவர்த்தி” என்று அவனைத் திருத்தினாள்.

“ஹோ... அது நம்மளோடதுன்னு சொன்னா, உனக்கும் சொந்தமானதுன்னு நீயா அர்த்தம் கண்டுபிடிப்பியா?. யூஸ்லெஸ். நாளைக்கு ஒழுங்கா வந்து சேரு. நாளைக்கு நமக்குள்ள நடக்குற மீட்டிங் தொழில் சம்பந்தமானது மட்டும் தான். தேவை இல்லாம பேச வேண்டாம்” என்றான் எச்சரிக்கை தொனியில்.

‘நீ என்னவேணாலும் சொல்லு, நான் பேசுறத பேசாம விடமாட்டேன்’ என்று மனதினுள் நினைத்த நிலா, வெளியே, “சரி ஒளியோன்” என்று சொல்லி இணைப்பை அணைத்தாள்.

தன் மகிழுந்தில் ஏறி அமர்ந்த நிலாவுக்கு யோசனையாக இருந்தது. ‘இதை நான் அகிலன்கிட்ட கண்டிப்பா சொல்லியே ஆகணும்.’ என்று நினைக்க, அவளின் மனமோ, ‘அவர் உன்னை தன் குடும்பமாக நினைக்கவில்லையே!’ என்று ஏளனம் செய்தது.

அதில் அவளது மனம் வலிக்க, திரும்பவும் அகிலனின் அலைபேசிக்கு அழைத்தாள். அது தான் அவன் கையிலையே இல்லையே! பின் எப்படி அவன் எடுக்க?. உடனே அவன் உதவியாளருக்கு அழைத்தாள்.

அவர் அந்தப்பக்கம் எடுத்ததும், “அகிலன் சார் எங்க இருக்கார்?” என்றாள் கேள்வியாக.

“சார் மதியமே வீட்டுக்கு போயிட்டார் மேடம்” என்றான் பவ்யமாக.

“சரி” என்று சொல்லிவிட்டு வைத்தவள், ‘இன்னைக்கு இரவு எப்படியும் வீட்டுக்கு வருவார். அப்ப கண்டிப்பா என்னோட ரகசியங்களை எல்லாம் அவருக்கு சொல்லணும்’ என்று மனதினுள் குறித்து வைத்துக்கொண்டாள்.

ஆனால் அன்று மட்டும் அல்ல. இனி அவன் எப்போதும் வரப்போவது இல்லை என்பது பாவம் பெண்ணவளுக்கு அப்போது தெரிந்து இருக்கவில்லை.

காதல் நிலாவின் கண்ணை மறைக்கவில்லை என்றால், அவள் எப்போதோ அகிலனைப் பற்றி அறிந்திருப்பளோ என்னவோ!

அகிலனின் உண்மையான ரூபம் கண்டு, துடிதுடிப்பாளோ! துடித்தே துயர் கண்டு மீள்வாளோ! வெடித்தழும் நேரங்களில் உடையாமல் வீர நடைபோட்டு எழுவாளோ! அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும்.

எதுவென்றாலும் தன் வாழ்வில் அகிலன் ஒருவனையே நம்புகின்றாள். ஆம், நிலாவைப் பொறுத்தவரை இந்த உலகில், அவளுக்காக இருக்கும் ஒரே ஜீவன் அகிலன் மட்டுமே!. அவன் இல்லையே இவளுள் ஒரு அணுவும் அசையாது.

தன் தங்கையை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய ஏழு நட்சத்திர உணவு விடுதிக்கு வந்திருந்தான் அகிலன்.

“அண்ணா, சொல்லப்போனா நான் தான் உனக்கு ட்ரீட் கொடுக்கணும். ஆனா பாரேன் நீ கொடுக்குற” என்று சொல்லி யாழினி சிரிக்க, “அதனால் என்ன யாழி, இப்ப ஒன்னும் கெட்டுப்போகல நீயே பே பண்ணிடு” என்று கண்களில் சிரிப்பை தேக்கி முகத்தை சாதரணமாக வைத்துக் கூற, அதில் பதறியவளாக, “இல்ல இல்ல இன்னைக்கு என்னோட நாள் நீ தான் பே பண்ணணும்” என்று கூறி அகிலனுடன் செல்ல சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

அகிலனும் அவளுடன் செல்ல சண்டையில் ஈடுபட ஆரம்பித்தான். பின் உணவு வர இருவரும் அந்த உணவை உண்ண ஆரம்பித்தனர்.

அப்போது தான் அகிலனுக்கு நியாபகம் வந்தது. “யாழி, உன் பிறந்தநாளை விட, அப்படி என்ன ஸ்பெஷல் டே இன்னைக்கு. எனக்கு புரியுது உன்னோட நீண்ட நாள் கனவு இது. இருந்தாலும் உன் முகத்தில் ஏதோ ஒரு ஒளி தெரியுதே!” என்று அவன் கேட்க.

சற்றும் யோசிக்காமல், “எல்லாம் ஒளி தான் காரணம் அண்ணா” என்று சொல்லி, நாக்கை கடித்துக்கொண்டவள், அகிலனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ சிக்கன் பீசை கபளீகரம் செய்துகொண்டிருந்தவன், அவள் சொல்லியதை சரியாக காதில் வாங்காதவனாக, “என்னது? என்ன காரணம்னு சொன்ன?” என்று திரும்பவும் கேட்க.

“அது... அது தான் அண்ணா, என் முகம் ஒளிமயமா இருக்குன்னு சொன்னியே அதை சொன்னேன்” என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிலை சொல்லிவிட்டு மூச்சை இழுத்து வெளியேவிட்டவள், மனது இன்று காலை ஒளியோனுடன் இருந்ததை நினைத்துப் பார்த்தது.

அதை நினைத்துப் பார்த்து முகம் சிவந்தவள், இன்று காலை அவனுடன் பேசியதை நினைத்துப் பார்த்தாள்.

ஒளியோனின் மிரட்டலுக்குப் பயந்து அவனுடன் கேம் விளையாடத் தயாரானாள் யாழினி.

“நான் சொன்னது நியாபகம் இருக்குல. உனக்குக் கிடைச்ச கிஸ் பத்தி எழுது” என்று அவன் சாதாரண குரலில் கூற.

‘சீக்கிரம் வா அண்ணா’ என்று தன் மனதில் நூறாவது முறையாக நினைத்தவள், “அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்” என்று சொல்லி தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஏன்? அந்த வசீகரனுடன் கல்யாணம் வரைக்கும் போனியே!” என்று அவன் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி கேட்க, யாழினியிடம் மௌனம்.

அவள் ஏதோ நினைவுகளுக்குள் செல்ல, “சொல்லு யாழினி” என்று அவளுக்கு மிகவும் அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு ஒளியோனைத் திரும்பி பார்த்தாள்.

இவ்வளவு நேரம் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்தவன், எப்போது தன் அருகில் வந்து அமர்ந்தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

இதுவரை அவளிடம் பேசிய கேலிக்களை கைவிட்டவனாக, அவளையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் ஒளியோன்.

அவன் கண்களில் இருந்து பெண்ணவளுக்கு என்ன தெரிந்ததோ, “எனக்கு இதில் எல்லாம் உடன்பாடு கிடையாது. காதலிச்சு கல்யாணம் முடிச்ச பிறகு தான் எல்லாம்ன்னு உறுதியா இருந்தேன்..” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவன் கண்களில் கேலித்தனம் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

“காதலிச்சியா? அதுவும் அந்த வசிகரனையா?” என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

அதில் அவனை வெறித்துப் பார்த்தவள், “நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்குறீங்க?” என்று முகத்தை சிறியதாக வைத்துக் கொண்டு வினாவினாள்.

ஆனால் அவள் பேச்சைக் கண்டுகொள்ளதவன் போல் அவன் தன் சிரிப்பைத் தொடர, ‘லூசா நீ’ என்பது போல் பார்த்துவைத்தாள் யாழினி.

தன் சிரிப்பை நிறுத்திவிட்டு, பெண்ணவளின் முகத்தை கூர்மையாக பார்த்தவன், “அவனை நீ காதலிக்கவே இல்லை. நான் சொல்றது உண்மைன்னு உனக்கே தெரியும்” என்றதும் யாழியின் நெற்றியில் யோசனை முடிச்சுக்கள்.

‘ஒளியோன் சொல்வதும் உண்மை தானே!. நீ வசியை நிஜமாகவே நேசிக்கவில்லையே!’ என்று அவள் மனது எடுத்துக்கொடுக்க, அவளின் இன்னொரு மனமோ, ‘அதைப் பத்தி தெரிஞ்சி இவர் என்ன செய்யப்போறார்’ என்று அவனை ஏச, கணங்கள் சென்றது.

“உண்மை தானே யாழினி” என்று சொல்லி நிறுத்தியவன், அவளை அடிப்பார்வை பார்த்தபடி, “அகழி...” என்று அழுத்தமாய் ஒரு பெயரினை குறிப்பிட்டு அழைத்தான்.

அகழி என்ற பெயரைக் கேட்டதும் அகரயாழினியின் முகத்தில், அதிர்ச்சி, ஆச்சரியம், பயம், என பலவித பாவங்கள் ஒரே நேரத்தில் வந்து போனது. யாருக்கும் தெரியாத ரகசியத்தை ஒளியோன் கண்டுகொண்டான் என்பதே அவள் பலவித முக பாவங்களுக்குக் காரணம்.

அவள் முகத்தில் வந்து போன உணர்ச்சிகளைக் கண்டு, திருப்தி அடைந்தவனாய், தன் கம்பீரமான குரலில், “எனக்கு எல்லாமே தெரியும் அகழி. ஏன்னா நீ காதலிச்சது என்னை மட்டும் தான். இப்ப காதலிக்குறதும் என்னை மட்டும் தான்” என்றபடி தன் கைகளை இரண்டையும் விரித்து அழுத்தமான குரலில், “இந்த ஒளியோன் சக்கரவர்த்தியை மட்டும் தான். ” என்றான்.

அகரயாழினியிடம் பேசுவதற்கு வார்த்தைகள் எழவில்லை. அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலைத் தரமுடியாமல் அதிர்ச்சியில் அவள் நாக்கு மேல் அன்னத்துடன் ஒட்டிக்கொண்டது.

அவள் மனமோ, ‘கண்டுவிட்டானோ!’ என்று ஊமையாய் அழுதது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 18

“அகழி” என்ற பெயர் ஒளியோன் வாயிலாக கேட்ட யாழினிக்கு, பயம் பிடித்துக்கொண்டது. தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து, படக்கென்று எழுந்துகொண்டாள்

அவள் முன்னே வந்து நின்று சுடக்கிட்டவன், “என்னாச்சி? அமைதியாகிட்ட?” என்று கேட்டுக்கொண்டே, அகரயாழினியை சுற்றி வந்தான்.

“பாரு, கேம் விளையாட வந்துட்டு, ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கேன். டெய்லி எனக்கு கிஸ் தருவியே! இந்த மூணு நாளா நீ ஏன் எதுவுமே எனக்குத் தரல” என்றான் பொய் கோபத்துடன்.

முழுவதுமாய் நனைந்துவிட்டு, இனி முக்காடு எதற்கு என்று நினைத்தவளாக, “உங்களுக்கு எப்படி... இதெல்லாம் தெரிஞ்சது?” என்று திக்கித் திணறிய குரலில் ஒரு வழியாக கேட்டுவிட்டாள் அகரயாழினி.

அதற்கு சிரித்த ஒளியோன், “நான் ரெண்டு வருஷமா இந்த அகழிங்குற பெண்ணைத் தேடுறேன்” என்றதும் யாழினியின் முகத்தில் இனிமையான படபடப்பு. வெட்கம் வேறு எட்டிப் பார்க்க, அதை ஒளியோனிடம் இருந்து மறைக்க படாத பாடுபட்டாள்.

சமுகவலைதளமான இன்ஸ்டாகிராமில், ஒளியோனை பல லட்சம் பேர் பின் தொடர, அதுபோக, அவனுக்கென்று தனியாக பேன் பேஜ் இருக்க, அதில் குறிப்பிட்ட பெயரான அகழி என்ற பெயரில் உள்ள பெண்ணை அவன் தேடிக்கொண்டு இருப்பது அகரயாழினிக்கு வியப்பாக இருந்தது.

அந்த ஆச்சரியத்தை அவனிடம் அப்படியே கேட்டாள். அதற்கு அவனோ கண்களில் குறும்பு கூத்தாட, “முதல் நாள் உன்னை நான் பார்க்கும் போது, என்னை யாருன்னே தெரியாதுன்னு சொன்ன?” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

உன்னிடம் நடித்தேன் என்று சொல்லவா முடியும். அதனால் எதுவும் பேசாமல் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“சரி அதை விடு. உன்னோட பேக் ஐடி என்னை மிகவும் கவர்ந்துச்சு. தினமும் நான் போடுற போஸ்ட்க்குக் கீழ நீ அனுப்புற கிஸ் ஸ்மைலியும் என்னை ரொம்ப கவர்ந்துச்சு” என்றதும் அவள் முகம் செம்மை பூசிக்கொண்டது.

“அது... அது எனக்கு... உங்கள ரொம்ப பிடிக்கும். சினிமாத்துறையில் இருக்கும் அழகான தயாரிப்பாளர் நீங்க. இந்த சின்ன வயசுலையே கோலிவுட் முதல் பாலிவூட் வரை படம் எடுத்து, திறமையா இருக்கீங்க. ஒரு ஆர்வத்துல உங்களை பின் தொடர்ந்தேன். ஆனா சத்தியமா இது லவ் கிடையாது சார்” முதலில் திக்கித் திணறி பேச்சை ஆரம்பித்தவள், ஒளியோன், அவன் மற்ற பெண் ரசிகைகளைப் போல் தன்னை தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற நினைப்பில் தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.

மற்ற ரசிகைகளைப் போல், அவன் தன்னை பத்தோடு பதினொன்னாக நினைத்து விடக்கூடாது என்று அவளின் மனது படபடக்க ஆரம்பித்தது.

“என்ன? இது லவ் இல்லையா?. பின் எதுக்கு தினமும் எனக்கு ஐ லவ் யூன்னு இன்ஸ்டால டைரக்ட் மெசேஜ் பண்ற?” என்றதும் அதிர்ந்துவிட்டாள் பெண்.

“நீங்க தான், நான் அனுப்பின மெசேஜை பார்க்கவே இல்லையே!” என்று குழம்பிய குரலில் கேட்டாள். அவள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் அவன் பார்க்கவே இல்லை என்பது போல் தான் யாழினிக்குக் காட்டியது. பின் இதெப்படி சாத்தியம் என்று குழப்பத்தில் இருந்தாள்.

“அதுக்குன்னு சில வழிகள் இருக்கு யாழினி. இல்லைனா நான் உங்க மெசேஜை பார்த்துட்டேன்னு, அதுக்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதையும் ட்ரேன்ட் பண்ணிருவாங்க. எனக்குன்னு ஐடிவிங் இருக்கு. அதனால் அகழிங்குற ஐடியைக் கண்டிபிடிக்குறது பெரிய கம்பு சுத்துற வேலை எல்லாம் கிடையாது.” என்று தன் கையைக் கட்டிக்கொண்டபடி அவன் கூற, அதில் அசட்டு வழிந்தவள், “உங்களை லவ் எல்லாம் பண்ணல. ஆனா புடிக்கும்” என்று சொல்லி சமாளித்தாள்.

அவள் முகத்தில் உள்ள கன்னங்கள் இரண்டும் ஸ்ட்ராபெர்ரி பழத்தின் நிறத்திற்கு சிவந்து போய் இருந்தது.

“சரி விடு, அது தான் பூனைக்குட்டி வெளிய வந்துருச்சே!. இனி இதுபோல் பாதுகாப்பு இல்லாமல் பப்புக்கு எல்லாம் வராத. என்ன தான் நாகரீகம் வளர்ந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது” என்றான் எச்சரிக்கையாக. சாத்தான் வேதம் ஓதுகின்றது என்று பெரியவர்கள் இதைத் தான் சொல்லி வைத்தார்கள் போல.

தொடர்ந்து பேசிய ஒளியோன், “உன்கூட கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்னு நினைச்சேன் வேற ஒன்னும் இல்லை. நீ என்னை பார்த்து பயப்படத் தேவை இல்லை. நீ குடிச்ச ஒயினில் நான் எதையும் கலக்கல. இது போன்ற இடத்தில் எல்லாம் இது மாதிரி நடக்குறது சகஜம் தான். நாம் தான் எச்சரிக்கையாக இருக்கணும்” என்று அவன் கூறியதும், அவள் மனதில் குற்றால சாரல் மழை அடித்து, அவளது அகத்தையும் சேர்ந்தே குளிர்வித்தது.

உண்மையிலையே அவன் மேனரிசத்தால் கவர்ந்து போய் தான், அவனுக்கு அது போல் எல்லாம் செய்தி அனுப்பினாள். ஒளியோன் சக்கரவர்த்தியின் தீவிர ரசிகை அவள். ஆனால் திருமணம் என்று வரும் போது, தன் அண்ணனுக்கு இணக்கமாக இருக்கும் ஒருவனையே கரம் பிடிக்க ஆசைகொண்டாள். அந்த நேரம் தான் வசீகரன் இவளிடம் தன் காதலைச் சொன்னது.

வசீகரனை மறுக்க வேறு காரணம் இல்லை என்றாலும், அவன் தன் அண்ணனின் நண்பன் என்ற ஒரே காரணமே, வசீகரன் தன் மேல் கொண்ட காதலுக்கு பச்சைக் கொடி காட்டவைத்தது.

“சரி சார். நான் வீட்டுக்குப் போறேன்” என்று அவள் திரும்பவும் முன்பு சொல்லிய அதே பல்லவியைப் பாட, ஒளியோனும், “உன் அண்ணன் வரட்டும். அவருக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்ல. வயசுப்பொண்ணு எங்க போயிருக்கான்னு கூட தெரியாம என்ன பண்றார்” என்று காட்டமான குரலில் கேட்டான்.

அப்போது தான் யாழினிக்கு நிலாவின் மேல் ஆத்திரம் பொங்கியது. இதில் தன் அண்ணனின் பங்கு தான் அதிகம் உள்ளது என்பதனை யோசிக்கத் தவறினாள் பெண்.

‘தான் ஒளியோனுடன் இருப்பதை அறிந்தும் எதற்காக, தன் அண்ணன் இன்னும் வரவில்லை’ என்று குழம்பிப் போனாள் பெண்.

அவள் முகத்தில் இருந்த அசதியைக் கண்டவனாக, “உன் அண்ணனுக்கு நிஜமாகவே உன் மேல் அக்கறை இருந்ததுன்னா இப்போ வந்துருக்கணும். என்ன தான் அவர் வேலையில் பிஸியாக இருந்தாலும், இன்னும்மா நான் அனுப்பிய செய்தியை பார்க்காம இருக்கார்” என்று ஒளியோன் கேட்க, ‘ஒருவேளை அந்த நிலாவுடன் இருப்பானோ!’ என்று அவள் உள்ளம் கதறியது.

தொடர்ந்து பேசிய ஒளியோன், “உன் அண்ணன் அலைபேசியை வேறு யாரவது எடுத்து, நான் அனுப்பிய செய்தியை அழிச்சிருக்கணும். நீ உன் அண்ணனை தப்பா நினைக்காத. அவர் ரொம்ப நல்லவர்” என்றவன் குரலில் ஏதோ சொல்லமுடியாத உணர்ச்சிகள் குவிந்து கிடந்தன.

ஆனால் அதெல்லாம் அகரயாழினியின் கண்களுக்குப் படவில்லை. அவள் தான் யோசனையில் இருந்தாளே!

“சரி யாழினி. பப்பில் தானே உன் கார் இருக்கு!. நான் உன்னை அங்கையே டிராப் பண்ணிடுறேன்” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.

அவள் விடைபெறும் போது, “ரொம்ப நன்றி சார்” என்க.

அதற்கு ஒளியோனோ, “ப்ளீஸ் கால் மை நேம் யாழி. நீ என்னை சார்ன்னு கூப்பிடுறது, ஏதோ எனக்கு வயசான போல பீலிங் ஆகுது” என்று நகைச்சுவையாக கூற,

அதற்கு, “சரி ஒளி’ என்று முதன்முதலாக அவன் பெயரை ஆசை கொண்டு அழைத்தாள்.

“தாட்ஸ் குட். வீட்டுக்குப் போனதும், மறக்காம எனக்கு போன் பண்ணு” என்று சொல்லி விடைபெற்றான்.

அதை எல்லாம் நினைத்துப் பார்த்து,அவளது முகம் செம்மையைப் பூசிக்கொண்டது. அது மட்டும் இல்லாமல், இன்று மாடர்ன் பேஷனில் அவனை சந்திப்போம் என்று அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை. ஒளியோனுடன் சேர்ந்து வேலை பார்க்கப் போகின்றோம் என்ற நினைப்பே அவளுள் தித்திப்பைத் தந்தது.

ஒளியோனைப் பற்றி எண்ணியபோதெல்லாம் அவளுடைய இருதயம் மேலெழும்பி வந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. அவன் மேல் ஆர்வமும், ஒரு வித கவர்ச்சியும் பெருகியது என்றால், நிலாவை நினைக்கும் போதெல்லாம் யாழினிக்கு ஆத்திரமும், ஆங்காரமும் ஒரு பக்கத்தில் பொங்கின.

காடு சூழ்ந்த தனி வீட்டில் எதற்காக மயக்கத்தில் இருக்கும் தன்னை ஒளியோன் அழைத்துச் செல்லவேண்டும்? என்ற நினைப்பு சிறிதும் அவளுக்கு வரவில்லை. ஆனால், அவன் தன்னிடம், “உன்னிடம் விளையாண்டு பார்க்கவே, பயப்படுத்தினேன்” என்று சொன்னதை வைத்து, “நீங்க என்ன காரணம் சொன்னாலும், நீங்க பண்ணது தப்பு தான் ஒளி” என்று அவனை இன்று மாடர்ன் பேஷனில், தனியாக சந்திக்கும் போது, சொல்லவும் தயங்கவில்லை அவள்.

அவன் அவளிடம் மொழிந்த சொற்களை எல்லாம் நியாபகப்படுத்தி பித்து பிடிக்கும் நிலைக்கு சென்றுவிட்டாள்.

“யாழி... யாழி...” என்று அகிலன் கத்தி அழைக்கவே, அப்போது தான் சுயதிற்குத் திரும்பினாள் யாழினி.

தான் எங்கே அமர்ந்திருக்கின்றோம் என்று சில கணங்கள் கழித்தே பெண்ணவள் உணர்ந்தாள்.

தன் அண்ணன் தன்னையே உற்று நோக்குவதைப் பார்த்து, அசட்டாக சிரித்துவைத்தாள். அவளின் அந்தப் புன்னகை அவளுடைய முகத்திற்கு எல்லையற்ற வனப்பைத் தந்தது.

ஏனெனில் அவள் திருமணம் நின்றதில் இருந்து, மீடியாவிலும், யூடியூப்பிலும் வந்த செய்திகளைப் பார்த்து, அவளின் மனது பலவீனமாக இருந்தது.

ஆனால் இதையெல்லாம் பார்த்த அகிலனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை. மாறாக அவன் உள்ளம் யோசனையில் ஆழ்ந்தது. அளவுக்கு அதிகமாக, யாழினியின் முகத்தில் தெரிந்த பிரகாசம், ‘இது தொழில் சம்பந்தமான மகிழ்ச்சி மட்டும் இல்லை’ என்று அகிலனுக்கு அப்பட்டமாக காட்டியது.

அதை அப்படியே தன் தங்கையிடமும் கேட்டான். “உன் மகிழ்ச்சிக்கு வேற ஏதாவது காரணம் இருக்கா யாழி?” என்று கேட்க, பெண்ணவளுக்கோ, திக்கென்ற உணர்வு ஏற்பட்டது.

தன் பதற்றத்தை சமாளித்தவளாக, “வேற எதுவும் இல்லையே அண்ணா” என்றவள் அவன் பேச்சை மற்ற நினைத்து, “கொஞ்சம் மையோனீஸ் போட்டுக்கோ அண்ணா” என்றாள்.

அவனோ அவளைக் கூர்மையாக பார்த்தபடி, “உன் மகிழ்ச்சிக்கு எது காரணமாக இருந்தாலும், அது எனக்கு சந்தோசம் தான்டா. உன் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சியும்” என்று சொல்லிவிட்டு, திரும்பவும் உண்ண ஆரம்பித்தான்.

அகிலனின் பேச்சு மகிழ்ச்சியைத் தர, “எனக்கும் அதே தான் அண்ணா. உன் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சியும். சரி, இப்ப எனக்கு நீ கிப்ட் தரனும்” என்று தன் கையை அவன் முன்னால் நீட்ட, “ஹேய் யாழி... நானும் உன்கூட தானே இருக்கேன். என்கிட்ட கிப்ட் எப்படி?” என்று அவன் கேட்க.

“இது பொருள் கிடையாது அண்ணா. இது வாக்கு. எனக்கு கிப்ட்டா அண்ணி வேணும்” என்று அவள் கண்களில் குறும்பு மின்னக்கேட்க, அதற்கு அகிலன் சற்றும் யோசிக்காமல், “தந்துட்டா போச்சு” என்று சொல்லி சிரித்தான்.

அதில் அகம் மகிழ்ந்தவள், “என்னோட அண்ணி யாருன்னா?” என்று ஆர்வமிகுதியில் கேட்க.

“நீ நேத்து சொன்னதையே யோசித்துப் பார்த்தேன் யாழி. எனக்கு மனைவியா வரப்போற பொண்ணு, உன்னையும் நல்லா பாத்துக்கணும் அதுமட்டும் இல்லாம நம்ம குடும்ப பாரம்பரியத்தையும், பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்கும் பொண்ணா இருக்கணும். அதுக்கு தீபா கரெக்ட் சாய்ஸ்ன்னு நான் நினைக்குறேன்” என்று அவன் சொன்னது தான் தாமதம், யாழினியோ, மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க ஆரம்பித்தாள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top