அதுவோ திறக்க மாட்டேன் என அடம்பிடித்தது. 'சென்ட்ரல் லாக் போட்ருக்கான் வெட் ஆனியன்' பல்லை நறநறத்தவள் கதவில் சாய்ந்து அப்படியே நிற்க, சில நிமிடங்கள் காத்திருந்த அவனோ விருட்டென காரைக் கிளப்பினான்.
அதில் தடுமாறி கீழே விழப்பார்த்தவள் நல்லவேளை அத்தனை பேரின் முன்பும் விழுந்து வாரி அசிங்கப்படாமல் தன்னை ஒருவாறு நிலைப்படுத்தி கொண்டே, சில அடிகள் தூரம் சென்று ஹாரனை அலற விட்டவனை நெருப்புக் கங்குகளை விழுங்கியதாட்டம் உறுத்து விழிக்க, ஹாரன் சத்தம் அதிகரித்தது.
வேறுவழியின்றி வேகமாக காரை நெருங்க, அவள் பக்கம் திறந்திருக்கும் கண்ணாடியூடு உள்ளே ஏறும்படி சைகை செய்தவனை மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டே காரில் அவனருகில் ஏறியவளுக்கு நடப்பதெல்லாம் கனவோ என்றே தான் இருந்தது.
இதுநாள்வரை இருந்த இடைவெளிக்கு மாறாக இன்றைய நாள் நெருக்கத்தை அதுவாக ஏற்படுத்தி தந்திருந்ததை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் இயலாமல் பௌர்ணமி உள்ளம் தடுமாற்றம் கண்டது.
அவள் அமைதியாக வர,
காரை கிளப்பிய ஷேஷாதித்யனோ "கையை பிடிச்சு தரதரன்னு இழுத்து வந்து உள்ளே தள்ளி விட்டுருப்பேன். நாலு பேருக்கு ஃப்ரீ ஷோ காட்டாமல் நீயே ஏறிட்ட, குட்" என்க
'எவ்வளவு திமிர் இவனுக்கு?' கண்களை விரித்து அவனை முறைத்தவளோ அவன் பார்வை தன்னைத் தொடவும் சட்டென மறுபக்கம் திரும்பிக்கொள்ள, அவன் இதழிலோ அவளறியாத குறுநகை மீசைக்குள் ஒளிந்திருந்து கண்ணாம்பூச்சி ஆடியது புதிராய்!
"என்ன பாட்டு? நான் கூப்பிட கூப்பிட காதிலே விழாமல் ரசிச்சு கேட்டிருந்த" அவனாக மௌனத்தை கலைத்து இலகுவான குரலில் அவளிடம் கேட்ட முதல் கேள்வி.
'பார்ரா, இப்பிடிலாம் சாஃப்டா கூட பேசுவானா இவன்? அதுவும் என்கிட்டே. அதிசயம்தான் போ... கடவுளே இன்னைக்கு என்னதான் ஆச்சு இன்னைய நாளே ஒருமாதிரி வித்தியாசமா இருக்கே' வழக்கம் போல் அவள் தனக்குள் உழன்று அவன் சொடக்கொலியில் தான் கலைந்தாள்.
"அ..அது எஸ்பிபி பாட்டு உங்களுக்கு சொன்னா புரியாது" என்றாள்.
'நீ தான் 2.0 வெர்சன் ரோபோவாச்சே' என்னும் தன்னைப்பற்றிய அவள் கணிப்பீடு அறியாது
அவளை ஒரு மாதிரியாக பார்த்தவனோ "எனக்கு புரியாதா..." கேட்க, தோளை குலுக்கினவள் காருக்கு வெளியே வேடிக்கை பார்த்தவாறு வர "சொக்கலிங்கம், உனக்கும் தாத்தா தானே. சீரியஸா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிருக்காரேன்னு கொஞ்சங்கூட நீ ஃபீல் பண்ணல?" அவன் குரலில் மறுபடியும் இளக்கம் குறைந்து இறுக்கம் பரவியிருக்க,
'இப்போ நல்லாத்தானே பேசினான் அதுக்குள்ள மாறிட்டான்' சந்தேகமாக அவனை பார்த்த பௌர்ணமிக்கு அப்படியே கல்லைத் தூக்கி அவன் மண்டையில் போடலாம் போலிருந்தது. "அப்பிடிலாம் ஒன்னுயில்லை" என்றவள் குரலில் தானாகவே சுருதி குறைந்திருக்க,
"என்ன ஒன்னுயில்ல... நம்ம குடும்பத்தில் மூத்தவர்ங்கற கேட்டர்சிக்காகவாச்சும் ஃபீல் பண்ண மாதிரி தெரியலையே" என்றவன் தொனியிலோ அவளை இகழும் நக்கல் தூக்கலாக இருக்கவும் சுர்ரென்று ஏற "அதெல்லாம் அதுவா வரணும். வா வான்னு நாம வரிஞ்சு கட்டி இழுக்க முடியாது. இதுவரை அவரு பாசமா ஒரு வார்த்தை கூட பேசியதில்லை தெரியுமா... அப்பிடி பேசிருந்தாலாவது ஃபீல் பண்ணிருப்பேனோ என்னவோ" என்றவளின் ஆதங்கத்தில் கோபத்தின் சூடு அவன் முகமெங்கும் விஸ்வரூபம் எடுத்து வியாபித்தது.
"கம் அகெய்ன்" அவளிடம் சீறியவன் "எது பாசம்ங்கற? நல்லா சிரிச்சி பேசி நீ கேக்குறதா வாங்கிக்குடுத்து, உனக்கொன்னுன்னா துடிச்சு உன் காலடியில் உக்கார்ந்து, தினமும் நாலு முத்தம் ரெண்டு தலை கோதல், பசிச்சா சாப்பாடு ஊட்டிவிடணும். நெஞ்சில் போட்டு தட்டிக் குடுத்து தூங்க வைக்கணும். உன்கூட செல்ஃபிக்கு ரெண்டு போஸ் குடுத்து உன் செல்போன் கேலரியில் இருந்தா அது தான் பாசமா... ஏன் வெளியே முறைப்பா விறைப்பா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள கொட்டிக்கிடக்கும் பாசத்தை உன்னை பார்க்கிற ஒத்தை பார்வையில் கொட்டி உனக்கொன்னுன்னதும் இங்கே... இங்கே உயிரே இல்லேங்கற மாதிரி வெளிக்காமிக்காம மனசுக்குள்ளேயே மறுகிறது எல்லாம் உன்னைப் பொருத்தவரை பாசமில்லையோ" இடதுபக்க மார்பை தொட்டுக் காட்டி அழுத்தமாக கேட்டவனுக்கோ அடங்காத ஆத்திரம்.
அவை அணுவெங்கும் கோலோச்சியதில் ஸ்டியரிங்கை பற்றியிருந்த கரங்களில் நடுக்கம் பரவியது. அதைத் தடுக்க இறுக்கமாக பற்றியவன் ஆடியை பறக்க விட்டான் கோபத்தின் வடிகாலாக!
அவன் வேகத்துக்கு திகைத்து அமர்ந்திருக்கும் பௌர்ணமியின் நிலையோ வார்த்தைக்கும் அப்பாற்பட்டது.
சட்டென கலங்க துவங்கிவிட்ட கண்களோ வழியத் தயாராக "ஏ..ஏன் இப்பிடில்லாம் பேசுறீங்க" என்றவளுக்கு பதிலில்லா அவன் அமைதியே விடையாக கிடைத்தது.
இதுவரை பேசிக்கொண்டதே இல்லை. இன்றைய முதல் பேச்சும் சண்டையில் முடிந்திருக்கிறது. எப்போதும் அவனை நக்கலடித்து அவன் பேசாமல் விலகிச் செல்லும் வருத்தத்தை திட்டித் தீர்ப்பதன் மூலம் கடந்து விடுபவளால் அன்று அதுவும் முடியாமல் போக தன்னையே நிந்தித்தாள்.
'அவன் பேசுறதில்லைன்னு வருத்தம் உள்ளுக்குள்ள இருக்குல்ல. அதென்ன என்னை மட்டும் தள்ளி தள்ளி நிறுத்துறான்னு மனசுக்குள்ள புலம்புறேல்ல... இப்போ அவனே பேசினா பக்கி மாதிரி பேசி அவனை கோபமாக்கிட்டியேடி' படுமோசமாக தன்னைத் தானே திட்டிக்கொண்டு அவன் முகத்தை அடிக்கொரு தரம் பார்த்திருப்பாள் அவன் தன்னை ஒரு முறையாவது பார்க்கிறானா என்றறிய.
காரோட்டுவதில் கவனமாக இருக்கும் ஷேஷாதித்யனின் ரோபோட் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை. நகத்தைக் கடிக்க, பட்டென திரும்பி அவளை முறைத்தவனோ "ப்ச், பேட் கேர்ள்" வாயிலிருந்து கையை பிடுங்கி தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு வண்டியோட்டுவதில் கவனம் செலுத்த 'கோபம் போயிடிச்சா' என கேட்க எண்ணிய பௌர்ணமியோ அங்கு இன்னம் மிச்சமிருந்த கோபச்சூட்டில் வாயை கப்பென இறுக மூடிக்கொண்டாள்.
இருவருக்கும் இடையே மீண்டும் இங்கு அசாதாரண மௌனம் நிலவ அங்கு மருத்துவமனையில் இவர்களுக்குள் முடிச்சிட மகனை அழுத்தமாக பார்த்த சொக்கலிங்கம் பிடிவாதமாக இருந்தார் நான் நினைப்பது நடந்தே ஆகவேண்டும் என்று.
"அப்பா எதுக்கு அவசரம்? எல்லாம் மெதுவா பார்த்துக்கலாம். நீங்க முதல்ல குணமாகி வீட்டுங்க வாங்க. இது இங்க வச்சு பேசுற விஷயமில்லீங்களேப்பா" ஆத்ரேயன் சொக்கலிங்கத்தின் அருகில் அமர்ந்திருந்தவன் மார்பை நீவிக்கொடுத்துக் கொண்டே மெதுவாகக் கூற
"நான் உனக்கு அப்பனா இல்ல நீ எனக்கு அப்பனாடா..." எகிறிய சொக்கலிங்கம் உன் பேச்சை இதில் கேட்பதாக இல்லை நான் என்ற பிடிவாதத்துடன் கண்களை மூடிக் கொண்டார் தூங்கும் பாவனையில்.
ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி
ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
ஓம் காக்க எங்களை உன்கழிலிணை போற்றி
காலை ஆறு முப்பது மணிக்கெல்லாம் பூஜையறையில் மணியடிக்க, காதைப் பொத்திக்கொண்டு குப்புறப்படுத்த பௌர்ணமிக்கு மேல் காலைத் தூக்கிப் போட்டு ஜோ விட்ட குறட்டை சத்தத்தில் அவளை எத்தி தள்ளிவிட்டு சோம்பலாக எழுந்தமர்ந்தவளோ போனில் நேரத்தையும் நாளையும் சரி பார்த்து கொண்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி தினம்!
மணி ஆறரையை தொட்டிருக்க 'மணி சத்தம் கேக்குதே' நினைத்துக்கொண்டே அவள் குளியலறைக்குள் தான் ஓடினாள்.
மற்ற நாட்களில் மகள்களின் காலைத் தூக்கத்தையோ அவர்களின் அன்றாட கூத்தையோ கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் ஜனனி வருடத்தில் பௌர்ணமியோடு சேர்ந்து வரும் ஞாயிறில் மட்டும் கடுப்பாகி விடுவதுண்டு. அன்றைக்கு மட்டும் அவள் நோன்போடு மௌன விரதமும் இருப்பதால் மற்ற நாட்களை விட உக்கிரமாக இருப்பாள்.
ஜோ பௌர்ணமி கூட அடக்கி தான் வாசிப்பார்கள்.
காலையில் நேரத்துக்கு பூஜையறையில் இருக்க வேண்டும் என்பதும் அன்றைய நாளின் எழுதப்படாத சட்டம். அதற்கும் யாரும் விதிவிலக்கல்ல.
கடகடவென இவள் தயாராகிய தடபுடலில் எழுந்த ஜோ நேரம் பார்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டே "சொல்றதுக்கென்னடி" சீறினாள்.
"உன்கிட்ட சொல்லனும்லாம் எனக்கென்ன அவசியம்" டச்சப் செய்து கொண்டிருந்தவளோ அலட்சியமாக இதழை சுழிக்க,
தமக்கையை நக்கலாக பார்வையிட்ட ஜோ 'நீ ரெடியானதும் கீழே போய் நல்ல பேர் எடுக்கலாம்னு பார்க்கிற... அது இந்த ஜோ இருக்கிறது வரை நடக்காதுடியோய். நான் மனசு வச்சாத்தான் இன்னைக்கு நீ கீழேயே போக முடியும் கண்ணு' அவள் கவனம் தன்னில் இல்லை என உறுதி செய்ததும் ஒரே ஓட்டமாக அறைக்குள் அவளை வைத்து பூட்டி சாவியுடன் பக்கத்து அறை தன்னுடையதில் நுழைந்து காக்காய் குளியல் போட்டு நிமிடத்தில் தயாராகியவளோ ஓடிவந்து கதவைத் திறந்து விட்டு் அவளை முந்திக்கொண்டு படிகளில் விரைந்தாள்.
"பக்கி பன்னாடை பரதேசி" வரிசையாக வசைபாடிக் கொண்டே பின்னோடு இறங்கியவளை நமுட்டுச் சிரிப்புடன் ஏறிட்டு,
"என் காது கேட்காது" என்றவளுக்கோ பொங்கிய சிரிப்பை அடக்க பெரும்பாடாக கண்களை மூடி பூஜையறையில் சென்று சாமி கும்பிட்டவள் உடல் மௌனச் சிரிப்பில் குலுங்க
இருக்கும் கோபத்தையெல்லாம் சேர்த்து ஓங்கி அவள் காலில் மிதித்தாள் பௌர்ணமி. "ஆஆஆ" என அலறியவளை சட்டை செய்யவில்லை. இப்போது கண்ணை மூடிக்கொண்டு சிரிப்பது தன் முறையானதில் 'யாருக்கிட்ட பௌர்ணமிடி' அவளே அவளை மெச்சிக்கொண்டாள.
வலியில் ஒரு காலை தூக்கி ஒற்றைக் காலில் நின்ற ஜோ ஆத்ரேயன் ஜனனி நாயகி என அனைவரின் பார்வையும் தன் புறம் திரும்பியதில் "ஆஆ... ஓஓம் செல்வம் அருள்க தேவா போற்றி போற்றி" கன்னத்தில் போட்டுக் கொண்டு "இங்க என்ன பார்வை சாமிய கவனிங்க லேட்டானா கோச்சுக்க போறார்" சமாளித்தவள் பக்தியே மயமாக கண்ணை மூடிக்கொள்ள
மகளின் செய்கை சிரிப்பு மூட்டியதில் ஆத்ரேயன் நமட்டுச் சிரிப்புடனும் ஜனனியும் நாயகியும் முறைப்புடனும் தாங்களும் திரும்பிக் கொள்ள,
ஜோவும் பௌர்ணமியும் ஒருவரை முறைத்துக் கொண்டனர்.
பூஜை முடிந்து ஆரத்தித் தட்டை காட்ட கண்களில் ஒற்றிக் கொண்டு அனைவரும் கலைந்ததும் பரபரப்புடன் சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டிருக்கும் ஜனனியை தோள்பட்டையில் கைவைத்து அழுத்தி ஓரிடத்தில் நிறுத்திய ஆத்ரேயன் "இன்னைக்கு கூட லீவு போட மாட்டியா உன் ஓட்டத்துக்கு?" சலிப்பாக கேட்டான்.
"ப்ச், வெட்டியா பேச நேரமில்லை அத்தான். மாமா இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர்றார். அவருக்கு ஏத்த மாதிரி பத்திய சாப்பாட்டை நர்ஸ்கிட்ட கேட்டு டயட் சார்ட் வாங்கி வச்சிருந்தேன். என்ன தான் ராதா பார்த்துப்பாள்ன்னாலும் கூட நான் நிக்கிறப்போ எனக்கொரு திருப்தி" தன் விழியோடு அவள் கண் கலந்து ஏறிட்டவளின் மௌனத்தை மொழிபெயர்த்தவன் அவள் நெற்றி முட்டி "சரி போ..." என்றான் அவளுக்கான தன் பிரத்தியேக சிரிப்போடு.
அவள் இதழ்களையும் அவை தொற்றிக் கொண்டது. இளஞ்சிரிப்பு உதட்டில் மினுங்க தன் வேலையை தொடர்ந்தவளை பார்த்தவாறே தங்கள் அறைக்குள் நுழைந்தான்.
விஜய்கோபால்சாமி சொன்ன ஒரு வாரத்துக்கு மேலாக கூடுதல் ஒரு வாரம் சொக்கலிங்கத்தின் மருத்துவமனைவாசம் நீடித்து இன்று தான் டிஸ்சார்ஜ் ஆகுறார்.
கடந்த இரு வாரங்களாக வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக ஓய்வில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் மனைவியின் மீது சற்று சுணக்கம் ஆத்ரேயனுக்கு. வேலையாட்கள் பார்ப்பார்கள் என்று அவன் சொல்லியும் துளியும் கேட்கவில்லை ஜனனி.
சிறு பெருமூச்சுடன் அவன் தயாராகி வரவும் ஷேஷாவின் குடும்பமும் வர மாமனும் மருமகனுமே தாங்கள் பார்த்துக்கொள்வதாக கூறி சொக்கலிங்கத்தை அழைத்து வர மருத்துவமனை புறப்பட்டனர்.
மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த சொக்கலிங்கத்துக்கு மீண்டும் தனக்கான கூட்டுக்குள் வந்து சேர்ந்த நிம்மதி முகத்தில் பரவியது.
பழைய கம்பீரம் அதுவாகவே வந்து அவர் முகத்தில் அணிகலனாக அமர்ந்துகொள்ள, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவரை பார்த்து செல்ல அவர்கள் பக்க உறவுக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து கலைந்து சென்று இறுதியில் குடும்பத்தினர் மட்டுமே கூடியிருந்த அறைக்குள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து தொண்டையை செருமியவர் "என்ன முடிவெடுத்திருக்க ஆத்ரேயா" என்றார் தன் கணீர் குரலில்.