நிழலின் நிஜம் 8
சினிமா கிசுகிசு
1938ல் ராஜதுரோகி என்னும் திரைப்படத்தில் முதல் முறையாக ட்ரூகலர் என்று சொல்லபடக்கூடிய (Sepia வண்ணம் என்றும் இதைச் சொல்வார்கள்) வண்ணத்தில் வெளியானது. இயற்கை வர்ணக் காட்சிகள் அடங்கிய முதல் திரைப்படம் என்று பட விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டது.
அதாவது அதுவரை வெள்ளை திரையில் கருப்பு வண்ண ஒளிபாய்ச்சப்பட்டே திரையில் படம் தெரியும். இந்த படத்தில் கருப்புக்கு பதிலாக பிரவுன் நிறம் பயன்ப்படுத்தப்பட்டது.
புராணம் மற்றும் சரித்திர படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் இப்படம் சமூகக்கதையாக எடுக்கப்பட்டது.
*******************
வீரா தன் நண்பர்களுடன் சேர்ந்து நாடக ஒத்திகை பார்ப்பது. வசனத்தில் திருத்தம் என்று பொழுதை கழித்தாலும் குழலி என்ன பாடுபடிகிறாளோ? என்ற எண்ணம் மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.
செவ்வந்தி சிறுபிள்ளை தனமாக ஏதேனும் செய்து, குழலி மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. வீரா வத்சனிடம் குழலி என்ற குமரின் நாடக அபிலாஷைப் பற்றி கூறினான். அவர் மௌனமாக இருந்தார். அவர் சிந்தித்து முடிவெடுக்கட்டும் என வீரா நகர்ந்தான்.
குமரனாக உருவெடுத்த குழலி செவ்வந்தியின் வீட்டைக் கண்டு அதிசயித்தாள். அழகாக அடுக்கிய அளவான பொருட்கள் இருந்தன. ஊர் ஊராக அவ்வப்பொழுது நகர வேண்டும் என்பதால் மிகவும் அவசியமான பொருட்களை மட்டுமே வைத்திருந்தனர்.
செவ்வந்தியின் குறும்புதனம் குழலியை மிகவும் கவர்ந்தது. அவள் கவலையின்றி பேசி சிரித்து மகிழ்ந்தாள். செவ்வந்தி பாசமாக வளர்க்கும் பூனையை பாதுகாப்பதுதான் குழலிக்கான தண்டனையாக கொடுக்கப்பட்டது.
சற்று தள்ளி கிண்ணத்தில் பால் வைத்துவிடுவாள். குழலி பாலை பூனையிடமிருந்து காப்பாற்ற வேண்டும். இப்படி குழந்தைதனமாக தான் அவள் தண்டனைகள் இருந்தன.
செவ்வந்தியின் தாய் குமுதினி. தன் மகள் மீது அதீத பாசம் கொண்டவர். அவரது பாசம் சற்று கடுமையாக இருக்கும்.
முதல் முறையாக செவ்வந்தியின் தாய் குமரனை கண்டதும் சந்தேகம் கொண்டார். ஏனெனில் தன் மகளிடம் பல ஆண்கள் பல்லை காட்டி நிற்பதை கண்டு உள்ளவர். அவர்களுக்கு தன் மகள் பாடம் புகட்டுவதைக் கண்டு பெருமையடைவார். தன் மகள் மீது மிகவும் நம்பிக்கை உண்டு.
“யாரப்பா நீ?” குமரனை கண்டதும் கேட்டார்.
“வீராவின் … நண்பன்” என செவ்வந்தி பதில் அளித்தாள்.
அவர் தாய் “ஏன் நீ பதில் சொல்ல மாட்டாயா?” என கேட்டபடி குமரனை ஊடுறுவிப் பார்த்தார்.
“வீராவின் நண்பன்” குழலி ஆண்குரலில் கம்பீரமாய் பேச முயற்ச்சித்தாள்.
செவ்வந்தியின் தாயின் ஊடுருவும் பார்வை தன் உண்மை தன்மையை காட்டிவிடுமோ என அச்சமாக இருந்தது.
“உன் பேர் என்ன? எந்த ஊர்?” அவர் குரலில் கடுமையை உணர முடிந்தது.
“பெயர் குமரன் .. கும்பகோணம்”
“இங்க ஏன் வந்த?” அவர் விடுவதாய் இல்லை
தான் ஜமீன்தார் பரம்பரை எனவும் நடிப்பில் ஆர்வம் உள்ளதால் இங்கு வந்துவிட்டதாக பொய்யும் மெய்யும் கலந்து குமரனாகிய குழலி சொன்னாள்.
இதை கேட்ட செவ்வந்தி அதிர்ந்தாள். ஜமீன்தார் பரம்பரையை சார்ந்தவனை தான் வேலையாள் போல நடத்தினோம் என எண்ணி அஞ்சினாள்.
அடுத்த வந்த நாட்கள் நத்தையாய் நகர்ந்தது.
நீண்ட காலத்திற்குப் பிறகு குழலி நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தாள். புன்னகை என்னும் ஆபரணம் பூண்டாள். மகிழ்ச்சியாக வளம் வருவது போன்றவையும் அவள் வாழ்க்கையிலும் அரங்கேறியது. செவ்வந்தியை உற்ற தோழியாக குழலி பாவித்தாள்.
குழலி ஆற்றங்கரையில் வீராவை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
செவ்வந்தியைவிட்டு சற்று விலகியே இருக்குமாறு வீரா கூறினான். இதை கேட்டு குழலி பெரியதாக நகைத்தாள்.
“உனக்கு அவள் பிரியம் தானே?” என தன் வண்டுகளை யொத்த கண்களால் படபடக்க வினவியவளை முறைத்தான் வீரா.
அவள் வினாவிற்கு அவனிடம் தெளிவான பதில் இல்லை. ஆம் இல்லை என இரண்டு பதில்களும் முட்டி மோதின.
தன் குருவின் மகளை தவறான எண்ணத்தில் மனதிலும் நினைக்க கூடாது என நினைத்தான்.
செவ்வந்தி குமரனிடம் தன் மனதை முழுமையாக பறிக் கொடுத்தாள். எனினும் வெளி காட்டிக் கொள்ளவில்லை. குமரனை மனதார காதலித்தாள். குமரனின் விகல்பமில்லாத பேச்சு செயல் என ஒவ்வொன்றும் அவளை கவர்ந்து இழுத்தது.
செவ்வந்தி தாய்க்கும் குமரன் மேல் மதிப்பும் மரியாதையும் உண்டாயிற்று. இருந்தாலும் தன் மகள் வாழ்க்கையின் நலன் மீது அக்கறை கொண்டவராக இருந்தார்.
இருவருக்கும் இடையே எப்போதும் தன்னை இருத்திக் கொண்டார். குமரனை விரைவில் வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
தன் கணவன் வத்சனிடம் பேசி அவனுக்கு வாய்ப்பு கேட்டார்.
“குமுதா நடிப்பு ஒரு கலை .. போற வரவங்களை நடிக்க வைக்க முடியாது.”காட்டமாக பதில் வந்தது.
“பரீட்சை வைக்காம முடிவு சொன்னா எப்படி?” என அவர் பிடிவாதமாக வினவவும் ..
மனைவி சொல்லை தட்ட இயலாமல் “சரி முதல்ல கோயில்ல நாட்டியம் ஆடட்டும் .. பிறகு பார்க்கலாம்” என பேச்சை வளர்க்க விரும்பாமல் சென்றுவிட்டார்.
செவ்வந்தி தாய்க்கு தான் எதிர்பார்த்த பதில் முழுவதுமாய் கிடைக்கவில்லை எனினும் இதுவே சற்று ஆறுதல் அளித்தது.
குழலியை அழைத்து வத்சன் பேசினார் “ கிருஷ்ணர் கோயிலில் நீயும் வீராவும் நடனம் ஆடுங்க .. ” என்று கட்டளை பிறப்பித்தார்.
வத்சனுக்கு குமரனை பிடிக்கவில்லை. சுகமாய் வளர்ந்த ஜமீன்தார் மகன். ஆர்வகோளாரில் வந்துவிட்டான். இவன் எங்கே ஆடப் போகிறான் என்று நினைத்தார்.
குழலி கண்ணனாகவும் வீரா ராதையாகவும் ஆட வேண்டும் என வத்சன் சொல்லிவிட்டார். நாட்டியமும் நாடகமும் இருசேர கலந்து அமைத்துக் கொடுத்தார் கோபு.
குழலியின் பதட்டத்தை வீராவால் நன்கு உணர முடிந்தது. தன் முதல் அனுபவத்தைக் கூறி தேற்றினான்.
ஒத்திகை பார்த்தனர். அதில் இருவருக்குமே தடுமாற்றம் இருந்தது. வீரா தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணின் கையை பிடித்து நடனம் ஆடுகிறான்.
பெண்ணின் முதல் ஸ்பரிசம் அவனை நிலைதடுமாறச் செய்தது. குழலிக்கும் இதே நிலை. கணவன் அல்லாது ஒருவன் கைப் பிடித்து நடனமாட வேண்டும்.
ஒத்திகையில் குழலியின் தடுமாற்றத்தை கண்ட வத்சனுக்கு இதுவே இவளின் இறுதி நடனம் என்ற முடிவுக்கு வந்தார்.
கோகுலாஷ்டமி இரவு கோயிலில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். குழலி தன் வாழ்க்கையின் மற்றொரு அத்தியாயத்தை அங்கு தொடங்கினாள்.
இரவு நிகழ்ச்சித் தொடங்கியது. குழலி மற்றும் வீரா நடனம் தொடங்கியது. இருவரும் அலங்காரத்தில் ஒருவர் மற்றொருவருக்கு சளைத்தவர் அல்லர் என்று நிரூபிப்பது போல மிக அழகாக இருந்தனர்.
கண்ணனும் ராதையும் பூலோகத்தில் தாங்களே சுயமாக வந்து நடனமாடுவதுப் போல காட்சியளித்தது. மக்கள் மெய்மறந்து ரசித்தனர்.
குழலியின் ஆட்டத்தை கண்ட வத்சன் தனக்குள் அபாரம் என சொல்லிக் கொண்டார். அவளின் அபிநயம் முக பாவம் அனைத்துமே நேர்த்தியாக இருந்தது. அவளுள் சிறந்த கலைநயம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை எனத் தெரிந்தது. அந்த அழகு சிலையை இன்னமும் செதுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
ஒரு கட்டத்தில் வீராவும் குழலியும் தட்டாமாலை என்று சொல்லப்படும் ஆட்டத்தை நடன அசைவாக ஆடும் இடம் வந்தது. அதாவது இருவர் எதிர்எதிரே நின்றபடி ஒருவர் கைகளை மற்றவர் நீட்டிச் சேர்த்து கெட்டியாகப் பிடித்தபடி வேகமாக சுற்ற வேண்டும்.
அப்படி வேகமாக சுற்றுகையில் குழலியின் கை சற்றே நழுவ வீரா அதை உணர்ந்த நொடி அவள் விழாமல் இருக்க அவளை வேகமாக தன் பக்கம் இழுத்தான். அவள் அவன் மேல் சாய்ந்தாள். இருவரின் மூச்சு காற்றும் கலந்தது. இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தது.
அனைத்தும் ஒருசில நொடிகளில் நிகழ்ந்துவிட்டது. பார்வையாளர்கள் இதுவும் ஒரு நடன அசைவு என எண்ணினார்கள். கோபு மற்றும் வீரா நண்பர்கள் என யவரும் இதை கூர்மையாக கவனிக்கவில்லை.
நடனம் முடிந்தது. கோயில் தர்மகர்த்தா இருவரையும் பாராட்டி பரிசு வழங்கினார். மக்கள் ஆரவாரம் நண்பர்கள் பாராட்டு என அடுத்தடுத்து நடந்த எந்த செயலும் இருவர் கருத்திலும் பதியவில்லை.
தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதைப் போல வீரா நடுங்கினான். அவள் மேடையில் விழுந்துவிடக் கூடாது என்கிற நல் எண்ணத்தில் தான் இவ்வாறு செய்தான். இருப்பினும் நெருக்கமான அந்த நொடிகளில் அவள் காந்த கண் வீச்சு அவன் சித்தத்தை கலக்கியது.
குழலியும் இப்படியான ஒரு நிலையில்தான் இருந்தாள். கணவனை இழந்த தான் இவ்வாறு நடப்பது தவறு என அவள் மனசாட்சி குற்றவாளி கூண்டில் ஏற்றியது.
செவ்வந்தி குழலியாகிய குமரனின் நடனத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனாள். தன்னையே ராதையாக எண்ணி மனகண்ணில் அவனுடன் நடனமாடினாள். பேதையவள் காதல் போதையில் தன்னை மறந்தாள்.
மறுநாளே குழலியை அழைத்த வத்சன் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உத்தரவிட்டார். அதனோடு கோபுவை அழைத்து குழலிக்கு(குமரன்) பயிற்சியளிக்கவும் செய்தார்.
குழலிக்கு தன்னை குமரனாக அனைவரும் பாவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும் இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே இருப்பது என்றும் தெரியவில்லை.
கோபுவின் பயிற்சிக்கு மற்றவர்கள் வசிக்கும் ஜாகையில்தான் குழலியும் இருக்க நேரிட்டது. ஒரு பெண்ணாக அவளுக்கு இவற்றை சமாளிப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை.
குளிப்பது ஆடை உலர்த்துவதிலிருந்து மாதாந்திர பிரச்சனைவரை அனைத்தும் பாடாய்படுத்தியது. வீரா அவளுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உதவினான்.
இரவில் ஆண்கள் மேலங்கி இன்றி படுப்பது சகஜமான விஷயம் அங்கே அவர்களுடன் குழலி படுக்க திணறிப் போனாள். அவள் தனியே ஜன்னலருகே படுக்க வீரா ஏற்பாடு செய்தான்.
அவனை அனைவரும் கேள்வியோடு நோக்க “ என்ன இருந்தாலும் ஜமீன்தார் வீட்டு பிள்ளை இல்லையா?” என சமாளித்தான்.
இருவரும் மனதிலும் தற்பொதைய பிரச்சனை விஸ்வரூபமாக காட்சியளித்தால். நடனத்தில் ஏற்பட்ட சங்கடம் தற்காலிகமாக விடைப் பெற்றது. தற்செயலாக நடந்த நிகழ்வு என இருவரும் அதை ஒதுக்கிவிட்டனர்.
அன்று நாடக ஒத்திகை முடித்த குழலி உணவு உண்ணும் இடத்திற்குச் செல்லுகையில் இருவர் பேசியது தற்செயலாக காதில் விழுந்தது.
“ அநியாயம் .. அநியாயம்” என ஒருவன் செய்திதாளை வாசித்து புலம்பினான்.
“என்ன நடந்தது? மற்றொருவன் வினவ
“அருவி பக்கத்துல காவல்துறை ஒரு ஆண் சடலம் கண்டெடுத்திருக்காங்க”
“சடலமா?”
“ஆமா .. யாரோ கொலை செய்திருக்காங்க .. பாவி நல்லா இருப்பானா?”
இதைக் கேட்ட குழலி நடுங்கிப் போனாள். அன்று அவனை தான் கொலை செய்தோம் என்று மனதில் நினைக்கக் கூட இயலவில்லை.
திரை விலகும் …