அன்று தீபாவளி காலையில் இருந்தே விஹான் பரபரப்பாக இருந்தான் காரணம் இன்று தன் மனம் கவர்ந்தவள் இங்கு வரப் போகிறாள். தன்னை கண்டு பயந்து ஓடினாலும் இன்று முழுவதும் அவளைக் கண்ணால் பார்த்துக்கொண்டாவது இருக்கலாமெனப் பரபரப்பாக இருந்தான்.
அன்று அவன் முத்தமிட்டதற்கு அவள் பயந்து ஓடியது இன்னமும் கண்ணுக்குள்ளே நிற்க, இன்று அவளைப் பயமுறுத்தக் கூடாது என்பதை மட்டும் மனதில் வைத்திருந்தான். இனியாவது அவளிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். தன் காதலை அவளுக்குப் புரிய வைக்க வேண்டுமென நினைத்தான்.
சிறு வயதிலிருந்து சுட்டியாகச் சுத்தும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குச் சுவாரசியமாக இருக்கும். அவள் அவன் வீட்டுக்கு வந்தால் ஒவ்வொரு நிமிடமும் அவள் என்ன செய்வாளெனப் பார்த்துக்கொண்டே இருப்பான் ஆனால் அவளுக்கோ அவன் தன்னை திட்டுவதற்கு நோட்டமிடுவதாகவே தெரியும்.
அவளிடம் யார் கேலியாகப் பேசினாலும் அவர்களை அடுத்து வாயைத் திறக்க முடியாத அளவுக்கு இவள் அவர்களைக் கலாய்த்து தள்ளிவிடுவாள். இயல்பாகவே உள்முக சிந்தனையாளனாக (இண்ட்ரோவெர்ட்டாக) இருக்கும் அவனுக்கு அவளது பதில்கள் ஆச்சிரியமளிக்கும். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளமாட்டான்.
நாட்கள் செல்லச் செல்லக் குழந்தைபருவத்திலிருந்த பிடித்தம் எப்போது அவனுக்குக் காதலாக மாறியதென்றே அவனுக்குத் தெரியவில்லை.. ஆனால் அவளைப் பார்த்துவிட்டால் அன்றைய நாள் அவனுக்கு அத்தனை சந்தோஷத்தைக் கொடுக்க, அவளுக்குத் தெரியாமல் அவளைத் தினமும் பார்க்க ஆரம்பித்தான்.
மனதுக்குள் அவளை வைத்துக் கொண்டு அதை அவளிடம் கூறமுடியாமல், ஏன் அவளிடம் பேசக்கூட முடியாமல் சுகமான வலியை நித்தமும் அனுபவிக்க, தன் தம்பியோ அவளிடம் அதீத நெருக்கமாகப் பழக முதலில் தம்பிமேல் கோபம் தான் வந்தது. ஆனால் அது நட்பு தான் என்று விளங்கவும் தான் அவன் தவிப்பு அடங்கியது.
அவளைப் பார்த்தே தன் நாளைத் துவங்க ஆரம்பித்தான். அவளை நினைத்தே வாழ ஆரம்பித்தான். அவளை இரசிக்க ஆரம்பித்தான். அவளின் மீது பித்தானான். ஆனால் இது எதுவுமே அவளுக்குத் தெரியாது என்பது தான் மிகவும் வேதனையான விஷயம். அதையும் விட அவளுக்குப் பிடிக்காத இயல்பில் அவன் இருப்பது அதையும் விடக் கொடுமை.
அவளுக்கு அவளைப் போலக் கலகலவென இருக்கும் ஆட்களைத் தான் பிடிக்கும். அளந்து அளந்து பேசி இறுக்கமாக இருக்கும் இவனைக் கண்டாளே அவளுக்குப் பயம் தான். அதை அவள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறாள் தனக்கு நெருக்கமானவர்களிடம்.
சிறுவயதிலிருந்து அவள்மீதான பிடித்தம், காதலாகி, பித்தாகியிருக்க அவளுக்கு இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அவள் குடும்பத்திற்கே அவன் செய்கைமூலம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தான். அது அவளுக்கும் தெரியும் ஆனால் அவள் அதைக் கருத்தில் எடுக்கவில்லை என்பது தான் விதி.
அவள் அந்தக் கல்லூரியில் படிக்கிறாள் என்பதற்காகவே அந்தக் கல்லூரியை வாங்கி, அதை நிர்வகிக்கிறான் அவளைக் காண்பதற்காகவே. இப்போது இளமையில் அழகில் அவனை இன்னமும் சோதிக்க, தன்னை கட்டுப்படுத்த முடியாமல் முத்தமிட்டு விட்டான்.
அதிலிருந்து தான் அவனுக்கான சோதனை காலம் ஆரம்பமானது. எட்ட நின்று பார்க்கும்போது இதமாக இருந்த வலி இப்போது அவளை நெருங்கி முத்தமிட்டபின்பு அவன் உணர்வுகள் எல்லாம் அவள் வேண்டுமெனப் பேயாட்டம் ஆட அவன் தான் அவளைக் காணும் போதெல்லாம் தவித்துப் போகிறான்.
இனியும் அவளை விட்டுத் தள்ளி இருக்க ஆகாது என்னும் முடிவுக்கு வந்தவன் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தி, தன்னவளாக மாற்றும் முயற்சியில் இன்றிலிருந்து இறங்க நினைக்க, அவன் நினைப்பை எல்லாம் ஒருவன் அழிக்க நினைத்துக் காத்திருக்கிறான்.
அவன் சூர்யான்ஷ். அன்று வீடியோவில் விஹானுக்கு பிரணவிகா மேல் உள்ள விருப்பத்தைக் கண்டுகொண்டவன், மாலில் பிரணவிகாவையும், அவள் கண்களின் தனக்கான மயக்கத்தையும் பார்த்தவனுக்கு, அவள் தனக்கு தான் வேண்டுமென முடிவே செய்துவிட்டான். அதன் மூலம் விஹானை நோகடிப்பதே அவன் திட்டம்.
ஆதலால் பிரணவிகாவிற்கு அவளுக்கே தெரியாமல் அவளைக் கண்காணிக்க இரண்டு ஆட்களை நியமித்திருந்தான். அதில் ஒரு ஆள் பிரணவிகா வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி. அவள் மூலமாக அவர்கள் இன்று விஹான் வீட்டுக்குச் செல்ல இருப்பதை தெரிந்து கொண்டவன், விஹானின் பார்வை கூட அவள்மீது விழக் கூடாது என நினைத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த எண்ணினான்.
அதன் விளைவு சந்தோஷமாக ஆரம்பித்த விஹானின் தீபாவளியைக் கெடுக்க, அவனது அழகுசாதன தொலிற்சாலையின் கண்காணிப்பு காமெராவை அடையாளம் தெரியாத நபர்கள் சேதபடுத்தியிருக்க, அவர்களின் அடுத்த நோக்கம் என்னவெனத் தெரியாமல், விஹான் அன்று தொழிற்சாலைக்குக் கிளம்பிவிட்டான்.
அங்குச் சென்று பார்க்க ஒன்னிரண்டு கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் உடைக்கப்பட்டிருக்க, அசம்பாவிதமாக வேற ஒன்னும் நடக்கவில்லை. வேறு எதுவும் செய்திருக்கிறார்களா என அவனும் சுத்தி சுத்தி பார்க்க, அவர்களது கட்டுமான பணி நடக்கும் இடத்தில் மாடியிலிருந்து யாரோ ஒருவன் கீழே விழுந்துவிட்டான் என்ற தகவல் வந்தது.
அங்குச் சென்று பார்க்க, அங்க வேலை எல்லாம் இன்று நடக்கவில்லை ஆனால் அவன் அந்த ஏரியாவில் இருக்கும் குடிகாரன். கட்டிட வேலை நடக்கும் இடத்தில் இரவு குடித்துவிட்டு படுத்தவன் காலையில் எழும்பும்போது தடுமாற்றத்தால் கீழே விழுந்துவிட்டானென அவனை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
போலீஸிடம் இதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லையெனத் தெரிவித்துவர, கல்லூரி காவலாளி தலையில் யாரோ கல்லை விட்டு எறிந்திருந்தனர். அவனுக்கு அப்போது தான் சந்தேகமே வர ஆரம்பித்தது. என்னை வேண்டுமென்றே சுத்த வைக்கின்றனரோ என. அவன் சந்தேகம் சூர்யான்ஷ் மேல் தான் ஆனால் அதற்குக் காரணம் பிரணவிகா என்பதை அறியாமல் போனான்.
அதன் பின் எங்கும் அவன் செல்லவில்லை. காவலாளியை வேலையாளி ஒருவர் மூலம் மருத்துவமனை அனுப்பி வைத்துவிட்டு, தன் அனைத்து நிறுவனங்களிலும் இருக்கும் காவலாளி மற்றும் அன்று வேலையிலிருக்கும் தொழிலார்களிடம் கவனமாக இருக்கும்படி எச்சரித்துவிட்டு, தன் மேனேஜரை அழைத்து அனைத்தும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியவனுக்கு தலைவலி அதிகமானது.
காரை ரோட்டின் ஓரம் நிறுத்தியவன் ஸ்டேரிங்கிலேயே படுத்துவிட்டான். அவன் படுத்திருப்பதை பார்த்துக்கொண்டே கடந்து சென்ற ஒரு வண்டி, மீண்டும் திரும்பி அவனருகில் வந்து நின்றது.
அந்தக் காரின் கண்ணாடியைக் கீழே இறக்க, அதிலிருந்து ஒரு அழகிய முகம் வெளிவந்து அவன் காரின் கண்ணாடியைத் தட்ட, நிமிர்ந்து அவன் கண்ணாடியை இறக்க, அங்குக் காரில் அமர்ந்திருந்ததோ, அவனது அழகு சாதனப் பொருட்களின் பிராண்ட் அம்பாஷிட்டரான பிரபல நடிகை, மாடல் நேகா சௌத்திரி.
“ஹாய் நேகா மேடம்”
“ஹாய் விஹான். என்னாச்சு கார்லயே படுத்திருக்கீங்க”
“ஒன்னுமில்ல சின்ன டென்சன்.. தலைவலி அதான்”
“காஃபி சாப்பிடலாமா?” எனக் கேட்டாள் நேகா. அவனுக்கும் அது தேவையாக இருக்க,
“வொய் நாட்” எனக்கூற,
“பக்கத்துல ஒரு வி.ஐ.பி காஃபி ஷாப் இருக்கு போலாமா?” எனக் கேட்க,
“ஓஹ். சூயர்” என் கூறினான். அவளோ அவள் டிரைவரைப் பார்த்து,
“நான் சார் கூட போறேன் நீங்க ஃபாலோ பண்ணுங்க” எனக்கூறி, தன் காரிலிருந்து இறங்கியவள், அவன் காருக்கு வர, தவிர்க்கமுடியாமல் தன் கார் கதவை அவளுக்காகத் திறந்து விட்டான்.
அவன் நினைத்தது அவள் அவளின் காரில் காஃபி ஷாப் வருவாளென, ஆனால் அவளோ அதிரடியாக இவன் வண்டிக்கு வந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை தான், ஆனாலும் மரியாதை கருதி தன் காரின் கதவைத் திறந்து விட அதில் ஏறிக் கொண்டாள் நேகா.
நேகா. அழகிய யுவதி. மாடலிங் உலகில் கொடிக்கட்டி பறப்பவள். மிஸ் மும்பை, மிஸ் இந்தியா பட்டம் பெற்றவள். வேறொரு விளம்பரத்திற்கு நடித்துக் கொண்டிருந்தவள், விஹானின் உதவியால் தமிழ் திரைப்பட உலகில் காலூன்றி நடிக்க ஆரம்பித்துவிட்டாள். இப்போது ஷரா காஸ்மெட்டிக்ஸ் பிராண்ட் அம்பாஸிட்டராகவும் இருக்கிறாள்.
அவளுக்கு விஹானின் மீது மயக்கம். அவனின் ஆளுமை, திறமை, அழகு, அஸ்தஸ்த்து, புகழ் என அனைத்தின் மீதும் மயக்கம். எப்படியாவது அவனை மணந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையில் அவனையே சுத்தி சுத்தி வருகிறாள். ஆனால் அவனோ அவளுக்குப் பிடி கொடுக்காமல் வருகிறான்.
இன்று அதிரடியாக அவன் காரிலே ஏறிக்கொள்ள, ஏற்கனவே இருக்கும் தலைவலி இப்போது அதிகமானது தான் மிச்சம். இருவரும் அவள் கூறிய அந்த வி.ஐ.பி காஃபி ஷாப்புக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கான காஃபியை ஆடர் கொடுத்துவிட்டு காத்திருந்தனர்.
“விஹான்.. நான் சொன்னத யோசித்து பார்த்திங்களா?” எனப் பேச்சை ஆரம்பித்தாள் நேகா.
“சாரி. எத கேட்குறீங்க நேகா மேடம்?” என அவன் பதில் கேட்க அவளுக்கு முகமே வாடிவிட்டது.
அவளின் அழகில் மயங்கிப் பல பெரிய புள்ளிகள் அவளின் கையெழுத்துக்கும், அவளுடனான புகைப்படத்துக்கும் அவள் பின்னாடியே திரிய, சில தொழிலதிபர்களின் வாரிகள் அவளை மணந்து கொள்ள வரிசையில் நிற்க, அவளாக வந்து தன் விருப்பதை விஹானிடம் கூறியிருந்தாள். ஆனால் அவனோ அதைச் சுத்தமாக மறந்தது அவளைக் காயப்படுத்தியது.
“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டேனே?”
“ஓஹ். நான் தான் அன்னைக்கே சொன்னேனே நேகா மேடம்”
“முதல்ல மேடம் மேடம்னு சொல்றத நிறுத்துங்க விஹான்”
“அது மரியாதைக்காக மேடம்”
“அது தான் வேணாம். அது தான் நம்மள தூர நிறுத்துது”
“நம்ம பக்கத்துல வர முடியாது மேடம். நீங்க உங்க கெரியர்ல ஃபோகஸ் பண்ணுங்க. கண்டிப்பா என்னை விட பெட்டரான ஆள் உங்களுக்குக் கிடைப்பாங்க..”
“எனக்கு உங்கள தான் பிடிச்சிருக்கு”
இடையில் வந்திருந்த காஃபியையும் அருந்திக் கொண்டே “இது இன்ஃபேஷூவேஷன். நான் உங்க கெரியர்க்கு ஹெல்ப் பண்ணினேனு என் மேல உங்களுக்கு உங்களுக்கு ஈர்ப்பு அவ்ளோ தான். நீங்கக் குழப்பிக்காதீங்க” என்றான்.
“இல்ல விஹான் என்னால முடியல, சரியா தூங்க முடியல.. சாப்பிட முடியல.. உங்க நினைப்பாவே இருக்கு”
“சாரி மேடம். எனக்கு அந்த ஐடியாவே இல்ல. உங்க மனசுல அப்படி எண்ணம் வர நான் காரணமா இருந்தா மன்னிச்சிடுங்க” என்றவன் அங்கு வேலைசெய்பவனை அழைத்துப் பணத்தைச் செலுத்தியவன்,
“மனசை குழப்பிக்காதீங்க. ஃபோகஸ் பண்ணுங்க.. கெரியர பாருங்க.. சாரி ஃபார் தட்” எனக்கூறியவன் அங்கிருந்து கிளம்ப,
‘எங்க போயிட போறீங்க விஹான். அவ்வளவு சீக்கிரம் உங்கள விடமாட்டேன். சீக்கிரம் நீங்களே என்னைத் தேடி வருவீங்க.. என் அன்பு உங்கள வரவழைக்கும். அதுவரைக்கும் உங்களுக்குக் காதல் அம்பை வீசிக்கிட்டே தான் இருப்பேன்’ என மனதில் நினைத்துச் சிரித்துக் கொண்டே அவளும் கிளம்பிவிட்டாள்.
இவர்கள் இருவரும் கவனிக்க தவறியது, அவர்கள் பேசுவதை வன்மமாகப் பார்த்துக் கொண்டு, இவர்களைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்த சூர்யான்ஷை. விஹான், நேகா இருவரும் செல்லவும் அவன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் வன்மமாகப் பார்த்தவன், அதை ஒருவனுக்கு அனுப்பி உடனடியாக “முதல்வர் வீட்டு வாரிசு நடிகையுடன் சல்லாபம்” என்ற தலைப்பில் இந்தப் புகைப்படங்களைச் சோசியல் மீடியாவில் பதிவேற்றக்கூறினான்.
இதை எதையும் அறியாமல் இருவரும் அவரவர் வீட்டை நோக்கிப் பயணித்தனர். விஹான் அத்தனை தலைவலியுடன் வீட்டிற்குள் நுழைய, அவன் கண்டதோ, அவனவள் தன் அண்ணன் மகளுக்கு ஊர்ந்துசெல்ல பழக்கிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கவும் அவன் முகம் பூவாய் மலர்ந்து, அதுவரை இருந்த தலைவலி மாயமானது.
குப்புக விழுந்து கிடந்த அஃஷரா குட்டிக்கு முன்னே அவளுக்குப் பிடித்தமான ஒரு விளையாட்டுப் பொருளைக் கொஞ்சம் வைத்து அதை எப்படி எடுக்க வேண்டுமென இவள் ஊர்ந்து சென்று காட்டிக்குடுக்க, அதைப் பார்த்த அந்தக் குட்டி வாண்டும் தன் வயிற்றை கொஞ்சம் கொஞ்சமாக எக்கி, அதை எடுக்கப் போராடிக் கொண்டிருந்தது.
ஷிம்ரித் “போதும் வாண்டு.. என் குட்டிமா பாவம்..” என்றான்.
“மாம்ஸ்.. சிக்ஸ் மன்ந்த் ஆச்சு. பாப்பா கிராலிங் பண்ணனும்.. அங்க இருந்தா இன்னேரம் பழக்கிருப்பேன்.. இங்க வந்து பாப்பாவ கீழயே விடாம.. எல்லாரும் கையிலயே வச்சிருந்தா அவ எப்போ பழகுவா? நீங்கப் போங்க இன்னைக்கு குட்டி எடுத்துருவா..” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே அஃஷராவை கையில் தூக்கியிருந்தான் விஹான்.
அவளோ கீழே குப்புக படுத்துக்கொண்டே ஜீன்ஸ் பேண்டை மட்டும் பார்த்துவிட்டு விராஜ் என நினைத்து,
“டேய் முண்டம், விடுடா பாப்பாவ.. எப்ப பாரு தூக்கிட்டு” எனப் பேசிக்கொண்டே நிமிர, அங்கு ஆறடிக்கு அம்சமாக நின்றது என்னவோ விஹான்.
‘அய்யய்யோ! அருவா இல்லாத ஐயனராட்டம் நிக்கிறானே! இவன் எப்போ வீட்டுக்கு வந்தான்?’ என நினைத்தவள் பாவமாக எழுந்து நிற்க,
“எஞ்சாய்” எனச் சிரித்துக் கொண்டே சென்றான் ஷிம்ரித்.
“படுபாவி மாம்ஸ்.. என்னை விட்டுட்டு போயிடாதீங்க” எனப் பல்லிடுக்கில் கூற, அதைக் கேட்கத் தான் ஷிம்ரித் இல்லை. அவன் எப்போதோ கிளம்பிவிட்டான்.
“அ.. அது விராஜ்னு நினைச்சேன். சாரி”
“யார் என்னனு பார்த்துப் பேசமாட்டியா? நான் இல்லாம அப்பாவோ, பெரியப்பாவோ வந்திருந்தா?”
“அவங்க இல்லனு எனக்குத் தெரியும். அவங்க எல்லாம் ஜீன்ஸ் போடமாட்டாங்க” எனக்கூறவும், அவன் கண்ணில் ஒரு மெச்சிதல் இருந்தது.
“அது சரி. இப்போ எதுக்கு என் குட்டிம்மாவ கஷ்டப்படுத்துற?”
“இல்ல சும்மா அவளுக்குத் தவக்க பழக்கப் படுத்தினேன். நான் வரேன்” என ஓடப் பார்க்க,
“இந்தா பாப்பாவ கொண்டு போ” எனக் குடுக்க, பாப்பாவை வாங்க அவன் பக்கத்தில் செல்ல வேண்டுமே அதுவே பயம் தான். ஆனால் அவன் திட்டாமல், முறைக்காமல் இவ்வளவு நேரம் பேசினதே அதிசயம் தான். அதில் கொஞ்சம் திடப்படுத்திக் கொண்டு அவனருகில் சென்று குழந்தை வாங்க போக, அவளை நெருக்கத்தில் பார்த்தவனுக்கு தான் மூளை தடுமாறிவிட்டது.
அவளோ தன் கையை நீட்டி அவனிடமிருந்து குழந்தையை வாங்க, அவனோ குனிந்து அவள் கையிலிருந்த அஃஷரா கன்னத்தில் முத்தம் வைக்க, அவனது நெருக்கம் அவளுக்குப் படபடப்பைக் குடுக்க, அவனுக்கோ அவளது நெருக்கம் தன்னிலை மறக்கச்செய்ய, அவள் பதட்டத்திலிருக்கும் போதே அவள் கன்னத்திலும் பட்டும் படாமல் முத்தம் வைத்துவிட்டான். அவள் மூச்சடைத்துச் சிலையாக நிற்க, அவனோ சிரித்துக் கொண்டே அவனறைக்கு சென்றுவிட்டாள்.
சிலையாக நின்றவளை குழந்தையின் சிணுங்கல் தான் நிகழ்வுக்குக் கொண்டுவந்தது. அவளுக்கு அவன் செய்த காரியம் கோபத்தை குடுத்தது தான் ஆனால் அருவருப்பைக் கொடுக்கவில்லை. அவளுக்கே அது அதிர்வு தான். சில சந்தர்ப்பங்களில் அந்நிய ஆடவர் தன்னை உரசினாலே அருவருத்து அவனை உண்டு இல்லைனு ஆக்கியவள், இவன் முத்தத்தை ஒன்றுக்கு இரு தடவை வாங்கியும் அருவருக்கவில்லை என்பதே அதிர்வு தான்.
அதே அதிர்வுடன், மனநிறைய குழப்பத்தோடு மீண்டும் தன் வீட்டுக்கு வந்தவளுக்கு தூக்கம் தூர நின்று எட்டிப் பார்த்தது.