அத்தியாயம் 2
"ஏம்மா! அந்தக் கல்யாண சட்ட எல்லாம் தைத்து வந்தாச்சான்னு பாத்தீங்களா?"
"பொட்டிய எடுத்துக் குடுங்க, நான் எல்லாத்தையும் சரியா அடுக்கி வைக்கிறேன், அப்பதான் ஞாபகத்தில் இருக்கும், இல்லை எதையாவது மறந்து விட்டுட்டு போயிடுவோம்"
"எம்மா சின்னவளே! பெரியவ, கிட்ட கேட்டு நகை எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு தடவை பார்த்திடு, வேற எதுவும் வாங்கணுமானு பாரு, அப்படி வாங்கணும்டா சின்னவன் கூடப் போய் நீயே பார்த்து வாங்கிட்டு வா"
இந்த நிவிதா புள்ளைய எங்க? இன்னும் காணல"
"எத்தா, வினிகா, இந்த மூஞ்சி கழுத்து கைக்கால் எல்லாம் ஏதோ செய்யறாங்களே, பாலரா, போலரா ஏதோ, வாய்க்கு வர மாட்டேங்குது, அங்க எல்லாம் போகலையா? அந்த முடியெல்லாம் கொஞ்சம் சரி பண்ணுத்தா"
"ஏட்டி, அகி, அக்காள கூட்டிக்கிட்டு போவேன், தனக்கு மட்டும் எல்லாம் செஞ்சுக்குவா"
என தொடர்ந்து ஏவல்களை கூறிக்கொண்டு நொடித்த பாட்டியிடம்,
"ஐயோ பாட்டி! சட்டை இல்ல, பிளவுஸ், அப்புறம், பாலாரோ! போலாரோ! இல்ல பார்லர், அப்படி அழகா சொல்லணும்"
"எங்க சொல்லுங்க பாப்போம்?"
என்று பாட்டியிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்த பேத்தி அகிலாவிடம்,
" அடி போடி! அழகா வேற சொல்றாங்க, இப்போதான் பாடம் எடுக்க வந்திருக்கா எனக்கு"
என நொடித்தவாறு எழுந்து சென்றவரைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த வீட்டின் பெண்கள்.
இப்படி, சிவகாமி பாட்டியின் குரல் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது அந்தப் பெரிய வீட்டில்.
மதுரையில், மூன்று தலைமுறைகளாகச் செல்வ நிலையில் இருக்கும் பெரிய வீட்டில் தான் இந்தச் சம்பவம், அந்த வீட்டுக்கும் ஒரு பெயர் உண்டு. பூங்காவனம்.
பூக்களைப் போல அங்கு வாழ்பவர்களும் மலர்ந்து மணம் வீச வேண்டும், என்பதற்காகவே அந்த வீட்டிற்கு இப்படியொரு பெயர்.
தற்போது தாத்தா செல்லத்துறையின் தலைமையில் தான் அந்த வீடு இயங்குகிறது.
அரிசி மில், சர்க்கரை ஆலை, வயல் வரப்பு காய்கறி தோட்டம், பழத்தோட்டம் என நல்ல செல்வ நிலை தான் இவர்களுக்கு, அரிசி மில்லையும் சக்கரை ஆலையையும் இவர்கள் பார்த்துக் கொண்டு நிலங்களைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள் அதில் கணிசமாகவே பணவரவு இருக்கிறது.
செல்லத்துரை சிவகாமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் மருதுபாண்டி, முத்துப்பாண்டி ஒரு செல்ல மகள் நிவிதா.
மருது பாண்டி அவரின் மனைவி சுசீலா இவர்களுக்கு ஒரே ஒரு மகள் வினிகா (இந்தக் கதையின் நாயகி)
அடுத்து முத்துப்பாண்டி இவர் மனைவி பார்கவி இவர்களுக்கும் ஒரு மகள் தான் அகிலா.
அடுத்து நிவிதா இவள் கணவன் துரை, மகன் நிகிலன்.
துரை சொந்தமாகத் துணிக்கடை வைத்திருக்கிறான், நிவிதாவும் கணவனோடு சென்று கடையைப் பார்த்துக் கொள்கிறாள், மூன்று மாடி கட்டிடத்துடன் சற்று பெரிய கடை தான், பரம்பரை பணக்காரர்கள் இல்லை ஆனாலும் தன் உழைப்பால் முன்னேறி இருக்கிறார் துரை. மகன் நிகிலன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
நம் நாயகி வினிக்காவிற்கு தான் இன்னும் பத்து நாளில் திருமணம் நடக்கவிருக்கிறது.
மணமகன் அவளின் சித்தி பார்கவியின் அண்ணன் மகன், மோகன்.
பார்கவி யின் அண்ணன் அண்ணாமலை அவரின் மனைவி ரஞ்சிதம் இவர்களுக்கு மோகன் யாழினியென இரண்டு பிள்ளைகள்.
நாத்தனாரை பார்க்க வேண்டி அவர்கள் வீட்டிற்கு வரும் ரஞ்சிதத்திற்கு அவர்களின் செல்வ நிலையைக் கண்டு சிறிது பொறாமையும் ஆசையும், எப்படியாவது அவர்கள் வீட்டுப் பெண்ணைத் தன் மகனுக்கு மனம் முடித்துத் தானும் இந்தக் குடும்பத்தில் இணைந்து நாத்தனாரை ஓவர் டெக் செய்து விட வேண்டும் என்பது அவரின் பல நாள் ஆசை.
இவர்களும் ஒன்றும் அப்படி வறுமை நிலையில் இல்லை, சிறிதளவில் நிலம் வைத்து அதில் விவசாயம் செய்கிறார்கள், மோகனுக்கு ஏனோ விவசாயத்தில் பெரிதாக நாட்டம் இல்லாமல், மதுரை நகரத்திற்குள் சிறிதாக மொபைல் ஷாப் ஒன்றை வைத்து நடத்தி வருகிறான்.
ஏனோ இவனுக்கு அவ்வளவாக வசதி படைத்தவர்களைப் பிடிப்பதில்லை, தன் உழைப்பால் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும் இளைஞன் தான், வினிக்காவை பல குடும்ப நிகழ்வுகளில் பார்த்திருக்கிறான் அவளைப் பார்த்ததும் காதல் ஊற்றெடுக்கவில்லை, அம்மாவின் கட்டாயத்தின் பேரிலேயே சம்மதித்திருக்கிறான் திருமணத்திற்கு, தன் மனம் குறித்தே பெரும் கவலை இவனுக்கு ஆனால் போகப் போகச் சரியாகிவிடும் திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாகத் தன் மனைவியின் மீது காதல் வரும் என்ற நம்பிக்கை இருந்தது.
அதேநேரம் திருமணத்திற்கான ஆசையோ கனவுகளோ அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் என்ற துடிப்போ இல்லை.
திருமணம் நிச்சயித்த இரண்டு மாதத்தில், அந்தப் பெண்ணே இரு முறை பேச முயற்சி செய்த போதும் இவன் பெரிதாகப் பதில் கொடுக்கவும் இல்லை ஆசையோடு பேசவும் இல்லை, அது ஒரு மாதிரியான குற்ற உணர்வை இவனுக்குக் கொடுத்தது, தன் மனம் என்ன நினைக்கிறது என்பதே புரியாத நிலை.
அவள் கேட்பதற்கு மட்டும் பதில் கொடுத்தவன் பின்பு பேசுவதாகக் கூறி வைத்து விட்டான் அவளுமே ஆசையோடும் காதலோடும் பேசுவதாகத் தெரியவில்லை இவனுக்கு.
திருமணம் முடிந்தால் தன் மனம் சமணப்பட்டுவிடும் என்ற எண்ணம் தான்.
பாட்டி கூறியதைப் போலத் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பிளவுஸ்கள் அனைத்தையும் மறுபடி ஒரு முறை போட்டுப் பார்த்து அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு சித்தியிடமும் அபிப்பிராயம் கேட்டுக்கொண்டு, அவருடன் சேர்ந்து அனைத்தையும் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தாள் வினிகா.
"ஹேய் கல்யாண பொண்ணு!"
என ஆரவாரமாக அழைத்துக் கொண்டு உள்ளே வந்த குரலில் முகம் முழுவதும் மகிழ்வுடன் திரும்பிவள், எழுந்து சென்று அணைத்துக் கொண்டாள் தன் அத்தையை.
"இங்க பக்கத்துல இருந்துகிட்டே வரதுக்கு, உனக்கு இவ்ளோ நேரமா த்த?"
எனக் கோபித்துக் கொண்டவளின் நாடிப்பிடித்து ஆட்டியவள்,
"ஹேய், நான் என்னடி பண்றது? உன் தம்பியை ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்க மாமாவைக் கடைக்கு அனுப்பனும், உனக்காகவே உன் கல்யாணம் முடிகிற வரைக்கும் நான் கடைக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டேன் மாமா கிட்ட தெரியுமா? ஆனால் நீ என்கிட்ட கோச்சுக்கிற?"
என முறுக்கிக் கொள்வது இப்போது இவளின் முறை ஆயிற்று.
அவளின் கன்னத்தில் முத்தமிட்டவள்,
"சரி, சரி கோச்சிக்காத! இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்து இருக்கலாமேன்னு தானே சொன்னேன், உடனே அதுக்கு மூஞ்ச தூக்கி வெச்சிக்காத"
என்றாள் இவளும், அவரின் நாடியைப் பிடித்த ஆட்டி,
"இங்க வா! நான் எடுத்து வச்சிருக்கதெல்லாம் சரியா இருக்கான்னு வந்து பாரு, ஒரு தடவை நீயும்"
என்று அவளின் கைகளை இழுத்துக் கொண்டு பெட்டியின் அருகே வர,
சம்மனமிட்டு மெத்தையில் அமர்ந்து, தட்டில் இருந்த முறுக்கை கொறித்துக்கொண்டே, அம்மாவும் அக்காவும் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அகிலா, அத்தையை பார்த்துச் சிரித்தபடி,
"உங்கள தான் அத்தை, பாட்டி தேடிட்டு இருந்தாங்க"
என்றாள் அறிவிப்பாக.
"ஆமா உங்க பாட்டி எப்ப தான் மகளைத் தேடாமல் இருந்தாங்க?"
எனச் சடைத்துக்கொண்ட பார்கவி,
"சரிடி மா, உங்க அத்தை வந்துட்டா! நீ அவள் கூடச் சேர்ந்து எல்லாத்தையும் எடுத்து வை, நான் எல்லாம் அடுக்கி இருக்கேன், ஒரு முறை அவளும் பாக்கட்டும், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு நான் போய்ச் சமையல் அறையில் என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வரேன்? அக்கா மட்டும் தனியா இருந்தாங்க"
என்ற படியே எழ முயன்றவரை,
"இரு, இரு பாரு! நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன், அப்படியே உட்காரு காபி கொண்டு வந்திருக்கேன் குடிப்போம்"
என்றபடி நாத்தனரையும் பார்த்து,
"வா நிவிதா!"
என்று வரவேற்று,
அவருக்கான காபியை கொடுக்க,
தினம் வரும் நாத்தனாராக இருந்தாலும் அவருக்கான மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என்பது அவ்வீட்டின் முறை.
அதில் தவறு ஏதுமில்லை, திருமணம் முடிந்த பெண்ணுக்கு அவருக்கான மரியாதையை எப்போதும் தாய் வீட்டில் கொடுக்கத்தான் வேண்டும் என்ற உண்மை புரிந்த இவர்களுக்கும் அது தவறாகத் தெரியவில்லை.
இவர்கள் மூவருக்கும் எப்போதும் சுமூக நிலை தான்.
சுசீலா மருதுபாண்டியை திருமணம் முடித்து வரும்போது நிவிதாவிற்கு பத்து வயது தான், சிறு பெண் குழந்தையாக இருந்த அவளின் மீது எப்போதுமே பாசம் தான் சுசீலாவிற்கு,
பின் அவளின் 13 வது வயதில் சின்ன அண்ணன் முத்துப்பாண்டிக்கு திருமணம் முடித்துப் பார்க்கவியும் வந்து சேர்ந்தாள்.
பெரிய அண்ணியை போல அவ்வளவு ஒட்டுதல் இல்லை பார்க்கவியுடன் அதற்காக அவளைப் பிடிக்காது என்றும் இல்லை நன்றாகவே பேசிச் சிரிப்பாள் ஆனால் பெரிய அண்ணியிடம் இருக்கும் உரிமையும் பாசமும் சின்ன அண்ணியிடம் கொஞ்சம் குறைவுதான்.
அது பார்கவிக்கும் புரியும், தானும் அவளிடம் மிகவும் ஒட்டுதலாக இல்லை என்பதை புரிந்தவராக அதை அவர் தவறாக நினைத்ததில்லை இதுவரை.
ஆனால் நிவிதா, வினிகாவிடம் அதிக பாசத்தோடும் உரிமையோடும் இருப்பதை கண்டு சில நேரம் வருந்தத்தான் செய்வார் அது அவரின் பேச்சிலும் வெளிப்படும்.
தன் மகள் அகிலாவுடன் நல்ல முறையில் பழகினாலும் அவளைப் பார்த்துக் கொண்டாலும் ஏனோ வினிக்காவுக்கும் இவளுக்கும் இருக்கும் அன்னியோன்யம் தன் மகளிடம் சிறிது குறைவு தான் என்ற எண்ணம் இவருக்கு, அது சில நேரங்களில் சரியாகவும் இருக்கும்.
அகிலாவிற்கு எப்போதுமே தன் அத்தை நிவிதா மீதும் அக்கா வினிகா மீதும் பாசம் அதிகம் தான் அதைவிட தன் தம்பி நிகிலன் மீது அளவு கடந்த பிரியம்.
அத்தையும் அக்காவும் கூட்டு சேர்ந்தால் இவளும் தம்பியுடன் கூட்டு சேர்ந்து கலாட்டா செய்வதில் அந்த வீடே அதிரும்.
அத்தைக்கும் அக்காவிற்கும் பேசுவதற்கு நிறைய இருக்கும் சில நேரம் வேடிக்கை பார்ப்பவளுக்கு பின் அது போரடித்து விடும், தம்பியோடு விளையாடுவதே இவளின் பொழுதுபோக்கும் சந்தோஷமும்.
அவனுக்கும் அப்படித்தான் பெரிய அக்காவைவிட சின்ன அக்காவே அவனின் விருப்பம். அவனோடு அனைத்து கள்ளத்தனங்களிலும் கூட்டு சேரும் சின்ன அக்காவே அவனின் பெஸ்ட் ஃப்ரெண்ட்.
.அகிலா கல்லூரியில் முதல் வருட இளங்கலை ஆங்கிலம் படிக்கிறாள்.
சூட்டிகையானவள், அதே நேரம் எல்லோரிடமும் அதிக பாசம் கொண்டவள். அக்கா, தாத்தாவின் செல்லம் என்றால் இவள் பாட்டியின் செல்லம் ஆனாலும் வம்பு வளர்த்துக் கொண்டே இருப்பார்கள் இருவரும்.
காபி மாநாடு முடிந்து அனைவரும் வினிகாவின் அறையிலிருந்து எழுந்து செல்ல,
"அத்தை, எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டியா?"
எனக் கேட்ட மகளை, முறைத்தபடியே அருகில் வந்தவர்,
"உன்கிட்ட எத்தன தடவ சொல்லி இருக்கேன் அத்தையை வாப்போன்னு கூப்பிடாதன்னு"
என்றார் கோபமாக.
"ம்மா அத்தைக்கும் எனக்கும் 11 வயசு தான் வித்தியாசம், அவ எனக்குப் பிரண்டு"
என்றாள் அத்தையின் தோல்களில் கைகளைப் போட்டு அணைத்து பிடித்தபடி
"அடிங்க, வா, போன்னே கூப்பிடாதன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ அவ இவன்னு சொல்றியா"
என்றபடி அவளை அடிக்கக் கை ஓங்கியவரிடம்
"அண்ணி, அண்ணி விடுங்க, அவ அப்படி கூப்பிடறதுல எனக்கே பிரச்சனை இல்லை, அப்புறம் என்ன?"
"உனக்குப் பிரச்சனை இல்லம்மா! அத்தை, மாமா கேட்டா என்ன நினைப்பாங்க, ஏற்கனவே வாப்போன்னு கூப்பிட்டதுக்கு பாட்டி திட்டினாங்க தானே"
என நாத்தனாரிடம் ஆரம்பித்து மகளிடம் கேள்வியாகக் கேட்க,
இதுவரை திட்ட மட்டும் செய்த அம்மா முதல் முறையாகக் கை நீட்ட உதட்டைப் பிதுக்கியபடி நின்றிருந்தவள் ஆம் என்பதாகத் தலையாட்ட,
"உனக்கும் கல்யாணம் ஆகப்போகுது, வர மருமகன் என்ன நினைப்பாரு? உங்க மாமியார் என்ன நினைப்பாங்க? இந்தப் பொண்ணு யாருக்கும் மரியாதை கொடுக்காது போலன்னு நினைப்பாங்களா, இல்லையா?"
எனக் கேட்டவரிடம் ஆமோதிப்பாகத் தலையசைத்தவள்,
"சரி இனி யார் முன்னாடியும் அப்படி கூப்பிட மாட்டேன்!"
என்றவளை ஆயாசமாகப் பார்த்தவர்,
"அப்பத் தனியா இருக்கும்போது கூப்பிடுவே "
என்றவரிடம்
"ஆம்"
என்பதாக மீண்டும் தலையசைக்க,
"எப்பவுமே கூப்பிடக் கூடாது அந்தப் பழக்கம் தான் எல்லாரும் இருக்கும்போது வரும், அதனால எப்பவுமே வாங்க போங்கன்னு கூப்பிட்டு பழகு"
என்றார் கோபத்தை அடக்கியபடி,
இது இப்போது முடியாது என்பதை உணர்ந்த நிவிதா,
"அண்ணி விடுங்க நான் பாத்துக்குறேன்"
என்றவளை பார்த்த சுசீலா இதற்கு மேல் தான் சொல்வதற்கு ஒன்றுமில்லையென நினைத்தவராக, அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
இவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே பார்கவியும் மகளை அழைத்துக் கொண்டு சென்று இருந்தார்.
அண்ணியும் சென்றபின் கதவு அடைந்து மருமகளின் அருகில் வந்த நிவிதா,
"அப்புறம் சொல்லுடி, மாப்பிள்ளை கிட்ட பேசினியா? என்ன சொல்றாரு?"
எனக் கேட்டுக்கொண்டே அவளை இடித்துக் கொண்டு அவள் பக்கத்தில் அமர,
" அட போ த்த! நிக்க போற கல்யாணத்துக்கு, இவ்ளோ ஏற்பாடும் செலவும்"
என்றவளின் பதிலில்,
நெஞ்சில் கை வைத்து
"என்னடி சொல்ற? நிக்கப் போற கல்யாணமா?"
என்றாள் அதிர்வாக