எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 17

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 17


ஒருவாரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கடந்தது. பல இன்னல்கள், சிக்கல்களுடன் ஒவ்வொருக்கும் நாட்கள் கழிய, அவரவர் வழியை பார்க்கவே அவரவருக்கு நேரமில்லை ஆதனால் அடுத்தவர்களின் நிலையை ஒருவரும் அறியவில்லை. இதில் சந்தோஷமாக இருந்த ஒரே ஆளென்றால் அது சூர்யான்ஷ் மட்டும் தான்.


இந்த ஒரு வாரமும் பிரணவிகா சூர்யான்ஷை தனியாக சந்திக்கவில்லை என்றாலும் அவனுடன் யாருமறியாமல் தனிமையில் அலைபேசியில் பேசிக்கொண்டு இரகசியமாக காதலை வளர்த்தாள். ஆனால் அது காதல் தானா? அவள் அதை காதல் என பதியவைக்கத் தான் முயன்று கொண்டிருக்கிறாள். ஆனால் எவ்வளவு தான் அவனுடன் தொலைபேசியில் பேசினாலும் கூட அவளால் அவனிடம் ஒன்ற முடியவில்லை என்பதே நிஜம்.


அவன் சினிமாத்தனமாக அவள் விரும்பியபடியெல்லாம் செய்யவும் கடாவெட்டுக்கு தலையாட்டும் ஆடு போல தன் தலையை ஆட்டிவைத்தவள், அதன் பின்னால் அவனிடம் பேசும் போது அவனிடமிருந்து உண்மையான நம்பிக்கையான ஒர் உணர்வை அவளால் உணரமுடியாமல், புறத்தோற்றத்திலும், கண்கட்டு வித்தையிலும் தன்னை மறந்து வீழ்ந்ன்விட்டு தற்பொழுது என்ன செய்வதென தெரியாமல் தவிக்கவும் ஆரம்பித்தாள்.


அவள் நிலைமையே இப்படியென்றால் விஹானின் நிலைமை? அவளை மறக்கவும் முடியாமல், அடுத்தவர்கள் முன் இயல்பாக இருக்கவும் முடியாமல், தான் செல்ல அவசியமே இல்லாத ஒரு வியாபார சந்திப்புக்காக மலேசியா பறந்தான்.


எதற்காக ஓடுகிறான்? எதை விட்டுவிட்டு ஓடுகிறான்? ஓடினால் தான் அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா? இல்லை இவன் ஓடுவதால் நடந்தது தான் இல்லையென ஆகிவிடுமா? எதுவும் மாறப் போவது கிடையாது ஆனால் நிலைமையை எதிர்கொள்ள முடியாமல், தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தனிமையை தேடி அவன் செல்ல, அவனையே நிழலாக பற்றிக்கொண்டு சென்றாள் ஒருத்தி. ஆனால் அவள் காதலுக்கு அவனிடம் துளியளவும் மதிப்பு இருக்கபோவதில்லை புரியாமல்.


கவிதா விராஜ் தேர்தலில் நிற்பதற்கு தன்னால் ஆனமட்டும் மறுத்து போராடிப் பார்த்தார் ஆனால் அவர் மகனுக்கும் சரி, சந்தோஷூக்கும் சரி வேறு வழியில்லை என்பதே நிஜம். அந்த நிஜத்தை புரிந்த வீட்டினர் அனைவரும் சந்தோஷூக்கும், விராஜ்ஜூக்கும் பக்க பலமாய் நிற்க, அவனுக்கு நெறுக்கமான அவனுக்கு உயிரைக் கொடுத்த தாயும், அவன் உயிராய் நினைக்கும் அவனவளும் அவனுக்கு எதிராய் நிற்பது அவனுக்கு பரிதவிப்பாக இருந்தாலும் கூட, தனக்கு பிடித்த பாதையில் தனக்கான முன்னேற்றத்தை நோக்கி உறுதியுடன் அடியெடுத்து வைத்தான் விராஜ்.


தன்னவனிடம் சிறிது காலமாக தோன்றிய மாறுதலால் அவன் எப்படியும் அரசியலை விட்டுவிட்டு, தனக்காக விட்ட படிப்பையும் முடித்து விடுவான் என நம்பிக்கையாக காத்திருந்த சாத்விகாவுக்கு இது பெரிய மரண அடி தான். அதில் அடியோடு அவள் சரிந்து விட்டாள்.


அவனிடம் தன் வாழ்க்கைக்காக அவள் போராடியும் கூட, அவன் அவனது அரசியல் பிரவேஷத்தில் உறுதியாக நிற்க, மனதில் வாங்கிய அடியுடன் அவனை முற்றும் முழுதாக விலகிவிடநினைத்தாள். அவன் அவளை சமாதானம் செய்வதற்காக எடுத்த எந்த முயற்சியும் அவளிடம் வேலை செய்யவில்லை. இனி அவள் வாழ்வில் அவனில்லை என்னும் முடிவை எடுத்தாலும் கூட, தன்னவனாக தன் வாழ்க்கை துணையாக சிறுவயதிலிருந்து நினைத்திருந்த நினைப்பை மனதிலிருந்து அகற்றுவது அவளுக்கும் எளிதான விஷயமல்லவே!


மனம் முழுவதும் இரண வேதனையில் இருந்தவளுக்கு தன்னருகில் ஒருத்தி தன்னுடன் ஒட்டியே பிறந்து வளர்பவள் தன்னிலை மறந்து வழி தடுமாறி செல்வதைக் கவனிக்கவும் நேரமின்றி போனது. கல்லூரிக்கு செல்வதும், மருத்துவமனைக்கு செல்வதுமாக இருந்தாள் அவர்களின் நேரமோ என்னமோ இருவருக்கும் ஷிஃப்ட் வேறு வேறு நேரமாக இருக்க, பிரணவிகாவின் நடவடிக்கைகள் சாத்விகா கண்ணிலும் படவில்லை.


சூர்யான்ஷூம் அவளை பலமுறை வெளியில் சந்திக்க அழைத்துவிட்டான். ஆனால் அவளால் தான் செல்ல முடியவில்லை. ஏதோ வீட்டுக்கு தெரியாமல் இப்படி காதல் என்று சுற்றுவதால் கார்த்திகாவிடம் மாட்டினால் என்ன செய்வது? என்ற எண்ணம். கார்த்திகாவைக் கூட சமாளித்து விடுவாள் ஆனால் கவின்.


அவளின் செல்ல தகப்பனல்லவா! அவளொன்று கேட்டால் கார்த்திகாவை சமாளித்து மகளுக்காக எப்படியும் அதை செய்து முடிப்பவரல்லவா! அவரை ஏமாற்றுவது போல குற்ற உணர்வு மனதில் எழ, அவனை தனியாக சந்திக்கும் சூழலை முயன்று தவிர்த்து வந்தவள் எப்படியாவது கவினிடம் இதைக் கூறி சம்மதம் வாங்கிவிட வேண்டுமென நினைத்தாள்.


குடும்பத்திடம் மறைப்பதால் தான் தனக்கு குற்ற உணர்ச்சியில் அவனிடம் பழகுவதில் தயக்கம் என நினைத்தாளே ஒழிய, அவள் மனம் அவளிடம் ஒரு பெண்ணிற்கே உரிய எச்சரிக்கை குணத்தால் அவளை எச்சரிக்கிறது என புரியவில்லை. கூடவே விஹானை காயப்படுத்துகிறோம் என்ற குற்ற உணர்ச்சியும் அடக்கம்.


என்ன தான் விஹானை அவளுக்கு புடிக்கவில்லை என்றாலும்.. இல்லை இல்ல புடிக்கும் ஆனால் கணவனாக ஏற்றுக் கொள்ள மனமில்லை என்றாலும் அவனது காதல் அவளுக்கு புரிந்து தான் இருந்தது. சிறுவயதிலேயே கவிதா மீதான கசப்பு அவரின் பிள்ளைகளை மட்டும் என்றுமே மணமுடிக்க கூடாது என்ற தீர்க்கமான எண்ணம் மனதில் அடியாழத்தில் பசுமரத்தாணி போல பதிந்து இருப்பதால் விஹானின் காதலை அவள் புரிந்தும் புரியாதது போல நிராகரித்தாள்.


இங்கு விஹானோ மலேசியாவிலுள்ள ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் ஆளை முழுதாய் உள்ளே விழுங்கிக்கொள்ளும் சொகுசு மெத்தையில் படுத்திருந்தாலும் அவனுக்கு தூக்கம் கண்ணை அண்டவில்லை. அவன் நித்திரையைத் தான் அந்த பிரணதேவி மொத்தமாக பறித்து விட்டாளே பிறகு எவ்வாறு நித்திரை கொள்வது? பசி மறந்து, தூக்கம் மறந்து ஏன் அவன் இங்கு வந்த காரணத்தையும் மறந்து அவ்வறையிலேயே தனிமையில் கிடந்தான்.


அப்போது தான் அவனது அறைக் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று திறக்க மனமும் இல்லை. அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென அவன் பி.ஏ வெங்கட்டிடம் கூறி, மீட்டிங்குக்கு கூட வெங்கட்டையே அனுப்பியிருந்தான்.


அவன் கதவின் வெளியே “டோண்ட் டிஸ்டர்ப்” என்ற பதாகை இருக்கும் போது ரூம் சர்வீஸ் ஆட்களும் வரபோவதில்லை.. மேலும் இந்த ஊரில் அவனைக் காண யாரும் வர போவதில்லை அப்படியிருக்கும் போது யார் கதவைத் தட்டுவது? என்ற எரிச்சலுடன் கலைந்த தலையுடன், இடையில் ஒரு ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தவன் அப்படியே வந்து கதவைத் திறக்க, அவன் அறை வாசலில் ஒயிலாய் நின்றாள் மாடல் அழகி, அவன் ஷரா காஸ்மெஸ்டிக்ஸ்ஸின் பிராண்ட் அம்பாஸிடர் நடிகை நேஹா.


“நேஹா மேடம்!” என்றான் வியப்பாக. அவனுக்கு அவன் இருக்கும் நிலை உணரவே இல்லை. ஆனால் அவளுக்கோ அவனை இந்த நிலையில் பார்க்கவும் மனம் தடுமாறியது. அவனை கண்களாலே பருகினாள். அவளின் பார்வை மாற்றத்தை வைத்தே தன்னை கவனித்தவன்,


“எக்ஸ் கியூஸ் மீ” எனக்கூறி அறையிலிருக்கும் உடை மாற்றும் அறைக்கு சென்று ஒரு டிசர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்து வந்தான். அதற்குள் அவன் அறைக்குள் வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு அவன் உடை மாற்றிவிட்டு வர அவளின் ஏமாற்றம் அவள் கண்களிலேயே தெரிந்தது.


இது வரை அவனை எப்போதும் ஃபார்மல் உடையிலேயே பார்த்தவள், முதன் முதலாக இப்படி கோலத்தில் பார்த்ததும் அவள் கற்பனைக்கு ரெக்கை முளைத்து எங்கெங்கோ உலா வந்துவிட்டது. அவனது கட்டுக்கோப்பான உடல் வனப்பு, மார்பின் முடி, இரண்டு நாள் சவரம் செய்யாத தாடி, தூக்கமின்மையால் சிவந்த கண்கள், எல்லாவற்றையும் விட இறுக்கமான அந்த உதடு எல்லாம் அணு அணுவாக இரசித்தாள். இப்போதும் அவனை இரசிக்க, அவளை அதிலிருந்து கலைத்தான் விஹான்.


“நேஹா மேடம் இங்க எப்படி நீங்க?” எனக் கேட்டுக்கொண்டே அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.


“ஒரு வேலையா மலேஷியா வந்தேன்.. காலையில வெங்கட் பார்த்தேன்.. அவர் தான் சொன்னார் நீங்களும் வந்து இருக்கீங்கனு.. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”


“ஒஹ்ஹ்” என்றவனுக்கும் அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை. அவளை தொழில் ரீதியாக சந்தித்திருந்தால் அதைப் பற்றி பேசியிருப்பான். ஆனால் இன்று இந்த தீடீர் சந்திப்பு அவனுக்கு உவப்பானதாகவும் இருக்கவில்லை. அவளுக்கு தன் மீதான ஈர்ப்பும் அவனுக்கும் தெரியும், அதனால் அங்கு தமிழ்நாட்டில் விளைந்த பிரச்சனைகளும் தெரியும்..


அப்படியிருக்கும் போது இங்கு தனிமையில் அவளுடன் செலவிடும் ஒவ்வொரு நொடியும் கூட அவனுக்குத் தான் பாதகமாக அமையுமென அவனுக்கு நிச்சியமாக தெரியும். அதனாலே அவனுக்கு பேச்சு வரவில்லை. அவளிடம் கடுமையாக பேசவும் வரவில்லை அவனுக்கு. அவனைப் பொறுத்தவரையில் அவள் காதலைத் தவிற மற்ற எல்லா விதத்திலும் அவள் மீது அவனுக்கு நல்ல எண்ணமும், மதிப்பும் இருந்தது.


“காஃபி சாப்பிட போலாமா விஹான்” என்றாள். அவளுடன் சென்று நேரம் செலவழிக்க துளியும் விருப்பமில்லை அதே சமயம் இப்படி ஒரே அறையில் தனிமையில் அவளுடன் அமர்ந்திருக்கவும் அவனுக்கு விருப்பமில்லை. எப்படியாவது அவளை தன்னிடமிருந்து அப்புறப்படுத்த நினைத்தவன்,


“யா ஷ்யூர்.. இதோ டிரெஸ் மாத்திட்டு வரேன்”


“இதே நல்லா தானே இருக்கு. அழகா ஸ்டெயிலா.. எப்பவும் ஃபார்மலா பார்த்து போர் அடிக்குது.. இந்த ஸ்டெயில் நல்லா இருக்கு விஹான்.. இப்படியே போகலாமே!” என்றாள்.


அவனுக்கோ எரிச்சலில் தலைவலியே வரும்போல இருந்தது அவளின் செய்கைகளால்.


“இல்ல எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு.. உங்களோட காஃபி சாப்பிட்டு நான் மீட்டிங் கிளம்பனும். அதான் கிளம்பி வந்துருறேன்” என வாயில் வந்ததை அவளிடம் கூறிவிட்டு சென்று உடை மாற்றி வந்தான். இருவரும் சிற்றுண்டி உணவகத்திற்கு சென்று அமர்ந்தனர்.


“விஹான் திரும்பவும் கேட்க்குறேன் என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” என்றாள். அவனுக்கு அவள் என்ன கேட்க வருகிறாள் என தெளிவாகவே புரிந்தது தான் ஆனாலும்,


“எதைப் பத்தி மேடம்?” என்றான் கராராக.


“விஹான்.. நம்மள பத்தி.. நம்ம கல்யாணம் பண்றத பத்தி”


“வாட்.. ஆர் யூ ஜோக்கிங்? கல்யாணமா?”


“விஹான் ப்ளீஸ். என்னால உங்கள விட்டுக்கொடுக்க முடியாது. நீங்க இல்லாம இருக்கவும் முடியாது. புரிஞ்சுக்கோங்க” என கிட்டத்தட்ட அழுகும் நிலைக்கே அவள் சென்றுவிட்டாள்.


“இங்க பாருங்க நேஹா மேடம்.. நான் திரும்பவும் சொல்றேன் எனக்கு உங்க மேல அப்படி ஒரு எண்ணமே வரல”


“பரவாயில்ல இப்போ வராட்டா என்ன? கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா வரும் நான் வர வச்சிடுவேன். என்னை கன்ஸிடர் பண்ணுங்க”


“நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா? நானும் உங்கள ஹர்ட் பண்ணிடக் கூடாதுனு ரொம்ப முயற்சி பண்ணி பொறுமையா பேசுறேன். இப்படி நான் யார் கிட்டயுமே பொறுமையா பேசுனதே கிடையாது. உங்க கிட்ட மட்டும் இவ்ளோ பொறுமையா பேச காரணமே உங்க மேல வச்சிருக்க மரியாதை தான். ப்ளீஸ் அத கெடுத்துக்காதீங்க”


“எனக்கு மரியாதை எல்லாம் வேணாம் விஹான்.. எனக்கு நீங்க தான் வேணும்.. என்ன என்ன வேணா திட்டுங்க ஆனா எனக்கு நீங்க வேணும்.. நீங்க இல்லாம என்னால முடியாது..”


“டாமிட்..” என அந்த மேஜையில் கைகளால் ஓங்கி அடித்தான். அதில் மிரண்டுதான் விட்டாள் அந்த பெண். அவளது மிரட்சியான கண்களைப் பார்த்தவன் மீண்டும் தன்னை நிதானம் செய்து கொண்டு,


“நேஹா!” என்றான் பொறுமையாக. அவனது மேடம் என்ற அழைப்பு இல்லாமல் ஒருமையில் அவளை பேர் சொல்லி அழைக்கவும், அவளுள் ஏதோ செய்ய, மீண்டும் எதிர்பார்ப்புடன் அவனை நோக்கியவள்,


“ஃபஸ்ட் டைம்” என்றாள்.


“என்ன?”


“என்னை பேர் சொல்லி கூப்பிட்டது” எனக்கூறவும் விரலால் நெற்றியை தடவியவன்.


“ஒ.கே. நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க. உங்க மேல எனக்கு எப்பவும் காதல் வராது” என கூறிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு,


“ஏன்?” என கேள்வி கேட்டாள்.


“ஏன்னா என் மனசுல ஒருத்தி இருக்கா..”


“இல்ல பொய் சொல்றீங்க”


“நான் ஏன் பொய் சொல்லனும்?”


“என்ன அவாய்ட் பண்ண.. அதுக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க விஹான்”


“உங்கள அவாய்ட் பண்றதுக்காக பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இல்ல. நான் நேராவே எதையும் சொல்லிடுவேன். உண்மையாவே என் மனசுல ஒருத்தி இருக்கா”


“யாரு?” எனக்கேட்க, தடுமாற்றம் அவனுள். எப்படிக் கூறுவான்? அவன் மனதிலிருப்பவளின் மனதில் வேறொருவன் இருக்கும் போது.. தான் காதலிக்கும் பெண் இவள் தானென எப்படி அவனால் கூறமுடியும்? தயங்கினான். அவன் தயக்கத்தை பார்த்தவள்,


“பார்த்தீங்களா.. பொய் கூட உங்களுக்கு ஒழுங்கா சொல்ல வரல.. பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க விஹான்”


“ஓஹ் காட்.. நான் பொய் சொல்லல. என் மனசுல வேற ஒருத்தி இருக்கா.. நம்புனா நம்புங்க இல்லாட்டி உங்க இஷ்டம். ஆனா இது போல இன்னொரு தடவை என்கிட்ட காதல் கல்யாணம்னு வராதீங்க” என்றவன், தன் பர்ஸிலிருந்து சில மலேஷியா ரிங்கிட்டை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு கிளம்பினான்.


தான் குடித்த காஃபிக்கு கூட பணத்தை வைத்துவிட்டு செல்பவனை வலி நிறைந்த கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.


இங்கு சூர்யான்ஷ்ஷோ மனம் முழுவதும் விஹான் மேல் வன்மத்தோடு தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். ஏற்கனவே வன்மத்தோடு அவன் உயிரையே உருவி எடுக்கும் செயலை செய்து முடித்த பின்னும் அடங்காமல் மேலும் மேலும் வன்மத்தோடு என்ன செய்ய காத்திருக்கானோ! அதற்கு காரணம் தான் என்னவோ! பொறுத்திருந்து பார்க்கலாம்.
 
Top