ருத்ரன் சென்ற பின்னும் அவனை வாய்க்குள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள் உமையாள். அவள் முனங்கி கொண்டு இருப்பதை கண்ட பார்வதிக்கோ சிரிப்பு வந்து விட்டது.
சற்று நேரம் அவளையே பார்த்தவர் உமையாளிடம்
"உமையாம உனக்கும் என் மகனுக்கும் என்னதான் டா பிரச்சனை? உன் பார்வை அவன் மீது நெருப்பாய் பாய்கிறது. என்ன இருந்தாலும் என்னிடம் சொல், என்னால் எதுவும் செய்ய முடியாதுதான், ஆனாலும் எனக்கு தெரிந்த வற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்வேன்." என கேட்டு கொண்டிருந்தார்.
அப்போது நீலனோ "அது இருக்கட்டும் டார்லிங் நான் ஒன்று உங்களிடம் கேட்பேன் என்னை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். நான் மூன்று நான்கு தடவை ருத்ரனை வெளியே பார்த்திருக்கிறேன், அப்போது அவர் என்னிடம் நடந்து கொள்ளும் முறையே வித்தியாசமாக இருக்கும்.
ஆனால் இன்று அதற்கு நேர் எதிராக இருக்கின்றாரே. எனக்கு ஒன்னும் விளங்க வில்லை. ஏதுதான் உண்மையான ருத்ரன்?" என கேட்டான்.
அதற்கு பார்வதி பதில் கூறும் முன்னே உமையாள் "இதில் என்ன சந்தேகம் இவ்வளவு திமிராய், முரடனாய், தாயை மதிக்காத பிள்ளையாய் இருக்கிறாரே இதுதான் அவரின் உண்மையான குணம்.
கைதேர்ந்த தொழிலதிபர் அல்லவா மற்றவர்களிடம் இப்படித்தான் பேச்சில் வித்தை காட்டுவார். உனக்கு நினைவுள்ளதா நீல அன்று ஒருநாள் ஒருவன் வந்து என்னிடமும் காயலிடமும் கடையில் வம்பு வளர்த்தான் என்று சொன்னோமே அது வேறு யாரும் இல்லை இவனேதான்" என்று கூறினாள்.
நீலன் கயலை பார்க்க அவளும் “ஆம்” என தலை ஆட்டினாள்.
இதனை எல்லாம் கேட்ட பார்வதியோ முகம் மாற ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு "என் பிள்ளை இவன் இல்லையம்மா.. அவன் மிகவும் வித்தியாசமானவன். எத்தனையோ முறை இவனுக்கு ருத்ரன் என்று தவறுதலாய் பெயர் வைத்து விட்டோமோ என்று இவன் அப்பாவிடம் புலம்பி உள்ளேன்.
துடுக்குத்தனமும், விளையாட்டு தனமும் அதிகம் இருக்கும் கோபமே வராது. ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசிப்பவன். இந்த குணம் அவன் தந்தை மற்றும் தங்கையின் இறப்பிற்கு பின் மாறிவிட்டது." என நிறுத்தினார்.
அங்கு உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.
உமையாள் "என்னமா சொல்ரீங்க உங்களுக்கு பெண் பிள்ளை இருந்ததா?” என கேட்டாள்.
அதற்கு பார்வதி தன் இரு கண்களையும் மூடி திறந்து “ஆம்” என கூறினார்.
பின் அவரே "எனக்கு இரண்டு குழந்தைகள். நான், ருத்ரன், அவன் தங்கை வைணவி , என் கணவர் மஹாலிங்கம் என நாங்கள் ஒரு குட்டி குடும்பமாக வாழ்ந்து வந்தோம்." என ஆரம்பித்து அவர்கள் இருவரின் இறப்பு வரை கூறி முடித்தார்.
எல்லோருக்கும் கண்கள் கலங்கி விட்டன.
பின் அவரே "அவர்களின் இறப்பிற்கு பிறகு எனக்காகவே நிறைய மாறினான். என்னை குணப்படுத்த, என்னுடன் இருக்க அவனுடைய பல கனவுகளை முடக்கிக்கொண்டான்.
அவனுக்கு பெரிய விளையாட்டு வீரனாக வேண்டும் என ஆசை இருந்தது. எங்கே என்னை விட்டு சென்றால் என் உடல் நிலை இன்னும் மோசம் ஆகிவிடுமோ என்று அவன் கனவுகளை புதைத்து கொண்டான்.
துரு துரு வென இருந்தவன் அமைதியாகி போனான். நானும், படிப்பும் மட்டுமே அவன் உலகமானோம். இப்படியே வளர்த்தவன் தான்.
அவன் கவனிப்பில் நானும் தேறி வந்தேன். நிதர்சனத்தை புரிந்து கொண்டேன். அவனும் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்துக்கு சென்றான்.
யாரையும் எதிர்த்து பேச மாட்டான். சண்டை என்றால் அமைதியாக சென்று விடுவான். கல்யாணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தான். வயதாகிக்கொண்டே போகிறதே இந்த பையனை இப்படியே விட்ட என் காலத்துக்கு பிறகு இவனை யார் பார்த்துக்கொள்வார் என வம்படியாக பேசி, வற்புறுத்தி, சண்டையிட்டு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தேன்.
அவனும் எப்படியோ சம்மதித்து விட்டான். விட்டால் இந்த பையன் திரும்பவும் முருங்கை மரம் ஏறுவான் என்று அவசர அவசரமாக அவனுக்கு பெண் பார்த்தேன்.
அப்போது தரகர் மூலம் வந்த பெண் தான் சுபா. ருத்ரனின் முன்னாள் மனைவி. அவளை அவன் மனைவி என்று கூற கூட எனக்கு விருப்பமில்லை. நல்ல குடும்பம் நல்ல பெண், என நம்பினேன் அவர்கள் இருக்கும் இடத்தில கூட சிலரிடம் அந்த குடும்பத்தை பற்றி விசாரித்தேன். மனதுக்கு நிறைவாகவே பதில்கள் வந்தன சரிதான் என நான் அந்த பெண்ணுக்கும் என் மகனுக்கும் சம்மந்தம் பேசி கல்யாணத்தை முடித்து வைத்தேன்.
அதன் பின்தான் பிரச்சனைகள் ஆரம்பமானது." என்று அவனது வாழ்க்கையில் நடந்த அடுத்த பாகத்தை கூற ஆரம்பித்தார்.
கடைசியில் அவள் வீட்டை விட்டு சென்ற வரை கூறிவிட்டார். அந்த கதையை கேட்ட கயலின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
"இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்ன? ச்சை... அருவெறுப்பாக உள்ளது." என உண்மையிலேயே அருவருத்து தான் கூறினாள்.
உமையாளுமே ‘இப்படியும் பெண்களா’ என தான் எண்ணி இருந்தாள்.
ஒரு ஆணுக்கு இது எவ்ளோ பெரிய அவமானமாக இருந்திருக்கும் என நீலனால் புரிந்து கொள்ள முடிந்தது.
பார்வதி மீண்டும் தொடர்ந்தார், “மணவிலக்கு கோரி இருவரும் நீதிமன்றத்தில் நின்றனர் நஷ்ட ஈடாக பெரும் தொகையை வாங்கி கொண்டு என் மகனின் வாழ்க்கையில் இருந்து அந்த சுபா சென்று விட்டாள்.
ஆனால் பட்ட அவமானத்தை இவனால் மறக்க முடிய வில்லை. இவனுக்கு ஆண்மை இல்லை என்ற பேசிச்சு எல்லா இடமும் பரவ ஆரம்பிச்சது. செய்து கொண்டிருந்த வேலையை விட்டான்.
வீட்டிலேயே முடங்கி போனான். என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான். என்னை எதற்கும் அழைப்பதில்லை. அவனுக்கான தேவைகளை அதன் பின் அவனே செய்யலானான். என்னை அம்மா என்று அழைப்பதையே திருத்தி விட்டான்...
ரொம்ப நாள் கழித்து ஒருநாள் எங்கோ வெளியே சென்றான். எந்த சாமி வரம் கொடுத்ததோ தெரியவில்லை, வீட்டிற்கு வந்தவரிடம் அப்படி ஒரு மாற்றம். எப்படியோ ஒரு தொழிலை ஆரம்பித்தான்.
முகத்தை எப்போதுமே கடினமாக வைத்து கொண்டான். எல்லோரிடமும் எறிந்துவில தொடங்கினான். அவனின் தொழிலும் வளர்த்தது அதே சமயம் அவனின் மூர்க்க தனமும் வளர்த்தது. எனக்கும் அவன் விஷயத்தில் குற்ற உணர்வாக தான் இருந்தது.
என்னால் தான் அவன் வாழ்க்கை பாழாய் போனது என்று ஆனால் போக போக அவனின் போக்கு எனக்குமே சுத்தமாக பிடிக்காமல் போனது. நானும் அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன். இந்த வீட்டிற்கு குடி வருவதற்கு கூட என்னை வலுக்கட்டாயமாக தான் அழைத்து வந்தான்.
நாளடைவில் எனக்கு அவனை நினைத்து பயம் வந்து விட்டது ஏன் என்றால் வீட்டிற்கு வருவதில்லை. நான்கு இல்லை ஐந்து நாள் வெளியே தங்கி கொள்கிறான்.
எங்கே போகிறான் எங்கிருந்து வருகிறான் இப்படி ஒன்றுமே தெரிவதில்லை. அவனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், தொடர்பை ஏற்று பேசமாட்டான்.
இப்படி போய்க்கொண்டிருந்த போதுதான் நீலன் எனக்கு தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு விபத்து நடத்து விட்டதாக கூறினான். நான் மிகவும் பயந்து விட்டேன். பதறி அடித்து கொண்டு வந்தேன்.
மிச்சம் தான் உங்களுக்கே தெரியுமே. ஆனால் அந்த விபத்து நடந்தது கூட நன்மைக்குத்தான்." என்று கூறி அனைவரையும் பார்த்தார். மீண்டும் தொடர்ந்து
“ஆம் அந்த விபத்தின் மூலம்தான் எனக்கு நீங்கலெல்லாம் சொந்தமாக கிடைத்துளீர். ருத்ரன் கூட நிறைய மாறிவிட்டான். முன்பு போல் என்னிடம் பாராமுகமாய் இருப்பதில்லை.
அம்மா என்ற அழைப்பை தவிர என்னிடம் பேசுகிறான். வீட்டில் இருக்கிறான். கடுமையாக பேசுவதோ, நடந்து கொள்வதோ இல்லை.” என கூறினார்.
சந்தேகமாக பார்த்த உமையாளை பார்த்து "புரிகிறது.. இன்று நடந்த விஷயத்தை வைத்து தானே என்னை அப்படி பார்க்கிறாய் . அவன் அந்த பிரச்சனைக்கு பின் இனிப்பு சாப்பிடுவதே இல்லை மா.
அதனால்தான் நான் கொடுத்த பாயாசத்தை வேண்டாம் என்று கூறினான். இன்று எப்படியாவது அவனை இனிப்பு சாப்பிட வைத்தே ஆகவேண்டும் என நான் தான் அவன் சொல்லையும் பொருட்படுத்தாமல் பாயசத்தை ஊற்ற போனேன்.
அதனால்தான் அவன் அப்படி நடந்து கொண்டான். அவன் செய்ததை சரி என சொல்லவில்லை, ஆனால் அவனை தப்ப நினைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன் என்று கூறி முடித்தார்.
ருத்ரனின் கதை ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவருக்கு தாக்குதலாக இருந்தது. எல்லோரும் அமைதியாகவே இருந்தனர். சூழ்நிலையை மாற்ற பார்வதியே ருத்ரன் சின்ன வயதில் அவன் தங்கையுடன் செய்யும் சேட்டைகள் என கூற ஆரம்பித்து உமையாளிடமும் நீலனிடமும் மகிழை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார்.
அவர்களின் உரையாடலும் அதன் பின் தடையின்றி சென்றது. மகிழை அழைத்து சென்றவன் அவளுக்கு பிடித்த சாக்லேட் பனிக்கூழ் வாங்கி கொடுத்து பக்கத்தில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றான்.
அவனுள் ஒரே நெருடல் ‘உமையாள் திருமணம் ஆனவளா? அவள் கணவன் இப்போது எங்கே?’ என்று.. மகிழிடம் கேட்கலாம் என்றால் அவள் இன்னுமே சிறுமி… பின்பு எப்படி தெரிந்து கொள்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் அவன் மனசே ‘அவளுக்கு கணவன் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன? அவள் வாழ்க்கையில் என்ன நடந்திருந்தால் உனக்கு என்ன?’ என்று கேள்வி எழுப்பியது. உடனே தன்னை கட்டு படுத்திக்கொண்டு மகிழுடன் சாதாரணமாக உரையாட தொடங்கி விட்டான்.
சிறிது நேரம் அவளை ஊஞ்சலில் அமர வைத்து விளையாட்டு காட்டியவன் நேரமாவதை உணர்ந்து வீட்டிற்கு அழைத்து சென்றான். அவன் மகிழை அழைத்து வந்தவுடன் உமையாள் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
பார்வதியோ இனி அடிக்கடி இங்கு வரவேண்டும் என கூறி அவர்களுக்கு விடையளித்தார். செல்லும் அவர்கள் ருத்ரனிடமும் கூறிவிட்டே சென்றனர். உமையாள் அமைதியாக இருந்தாலும் இப்போது அவள் கண்கள் அவனிடம் வெறுப்பை உமிழவில்லை. அது அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
தென்றல் நெருப்பை அனைத்து விடுமோ? வாங்களேன் நாமும் இன்னும் கொஞ்ச தூரம் பயணித்து தெரிந்து கொள்வோம்.