எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

டீசர்

NNK-20

Moderator
டீசர்-1



அழுதழுது கண்மடல்கள் வீங்கிப் போயிருக்க நகர்த்தவே முடியாது உடல் வலியோடு கட்டிலில் படுத்துக்கிடந்தாள் பிருந்தவி.

மாதம் மாதமாய் வரும் மாதவிடாய் பெண்களுக்கு வரமா சாபமா என்று கேட்டாள் இவளுக்கு சாபத்திலும் சாபம் என்பால் அந்த நேரத்து வலியில்.
திருமணத்திற்கு முன்பு வரை தாய் தந்தை அரவணைப்பில் இதே வலியை அனுபவித்தாலுமே அன்னையின் அக்கறையான கவனிப்பிலும் தந்தையின் ஆறுதலான தலைகோதலிலும் வலியையும் தாண்டி ஒரு மகிழ்ச்சியை அனுபவித்தவள் இன்றோ கட்டிய கணவனின் அக்கறையல்ல ஒரு வார்த்தை கூட இன்றி தன்னந் தனிமையில் அனுபவிக்கும் மனவலியின் ரணத்தில் அவளுடளோ மேலும் வலியில் சுருண்டு போனது.

எத்தனை நேரம் அப்படியே வலியில் சுருண்டு படுத்திருந்தாளோ வீட்டின் மணியோசையிலே தட்டுத் தடுமாறி எழுந்து சோர்வுடனே நடந்து சென்று கதவைத் திறந்தாள்.
கைநிறைய பொதிகளை சுமந்து நின்றிருந்தான் அவளவன்.
நிற்க முடியாத சோர்வோடு தன் முன்னே நின்றிருந்தவள் முகத்தை கூட நிமிர்ந்து பாராது வீட்டினுள் நுழைந்தவன் அனைத்தையும் வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்திட, அமைதியாய் அவனைப் பார்த்திருந்தவள் அவன் சென்றதுமே வேகமாய் அவன் வாங்கி வந்த பொருட்களை பிரித்து ஆராய்ந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவள் பொருட்களை ஆர்வமாய் பிரிக்கும் போதே பைகளோடு வைத்துவிட்டு வந்த தன் ஆபிஸ் பேக்கை எடுக்க வந்தவன் அவள் செயலைக் கண்டு கொண்டு இதழ்களை இளக்காரமாய் வளைத்தபடி மீண்டும் அறைக்குள் நுழைந்திருந்ததை அறியாதவளோ அவள் தேடிய சானிட்டரி நப்கின் இல்லாதது கண்டு அவள் முகமோ வேதனையோடு சுருள மனமோ "நான் கொடுத்த லிஸ்ட்ல எழுதித் தானே கொடுத்தேன். ஏன் வாங்கிட்டு வரல" என தனக்குள் யோசித்தவளுக்கு அதனை அவனிடம் வாய்விட்டு கேட்கவும் முடியாது போக வெடித்து கிளம்பிய அழுகையை முயன்று அடக்கிக் கொண்டவளுக்கு உடல் வலியோடு மன வலியும் சேர்ந்து கொள்ள அனைத்துப் பொருட்களையும் அமைதியாய் ஒழுங்கு செய்தாள்.

அன்றிரவு அமைதியாய் தன் இரவுணவை முடித்துக் கொண்டு ஆரியனோ அறைக்குள் நுழைந்திட, உடல் சோர்வுடனே
அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் பிருந்தவி.

மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியறை புகுந்து ஆடை களைந்து குளிக்கத் தயாராகியவள் மாதவிடாய்க்கென அவள் வைத்திருந்த துணியை அலசிட எடுக்க அதுவோ அதீத இரத்தப் போக்கில் முற்றாய் நாசமிகியிருந்தது கண்டு ஓங்காரத்துடன் வாந்தி எடுத்தாள்.

தன் அலைபேசியில் மூழ்கியிருந்தவனுக்கோ குளியறையிலிருந்து கேட்ட சத்தத்தில் ஒரு முகச்சுளிப்புடன் "வாங்கிட்டு வர்றது எல்லாத்தையும் எருமமாடு போல எந்நேரமும் சாப்பிட்டா இப்படித்தான் கண்ட நேரத்துல வாந்தி எடுக்கனும்" மனிதாபிமானமே இல்லாது கூறியவன் எரிச்சலோடு கண்மூடித் தூங்கிப் போனான்.

அங்கோ குளியறையில் உண்ட கொஞ்ச உணவையும் ஓங்கரித்து வெளியேற்றியதில் உடல் மேலும் சோர்ந்து போக ஈரத்தரையில் அமர்ந்தவளுக்கு அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீரோ அணையின்றி வடிந்தோட கண்ணீர் கரையோடு தலையில் கரம் பதிந்திருந்தாள் பிருந்தவி.

எத்தனை நேரம் கடந்ததோ ஊசியாய் துளைத்த உடலின் குளிரில் தட்டுத்தடுமாறி எழுந்தவள் நீண்ட நேரம் மடக்கியிருந்த கால் விறைத்து போயிருக்க ஓரடி எடுத்து வைத்தவள் ஈரத்தரை வலுக்கிவிட உடல் சமநிலையற்று தரையில் மோதி அடிபட அடிவயிற்றோடு சேர்த்து நெற்றியும் அடிபட்டு வலி உயிர் போனது.

"அம்மா" என்ற அவள் அலறல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவனுக்கு கேட்டதோ பட்டென்று கண்முழித்தவன் தன் பின்னே திரும்பி பார்க்க அவளிடமோ வெறுமையாய் இருக்கக் கண்டு சுவர்க் கடிகாரத்தை பார்த்தவன் விழிகள் விரிந்து போனது.

"எங்க போனா இவ.. மூனு மணிநேரமா பாத்ரூம்லயே இருக்காளா?" என எண்ணியவனுக்கு அப்போதும் கூட மனிதநேயம் எட்டிப் பார்க்கவில்லை போலும் ஒரு பத்து நிமிடம் வரை குளியறை கதவைப் பார்த்திருந்தவன் பின் ஓர் கொட்டாவியோடு மீண்டும் தூங்கிப் போனான்.

மயக்கமா தூக்கமா என்றே பிரித்தறிய முடியாத நிலையில் உயிரை பிழிந்தெடுக்கும் உடல் வலியோடு எழுந்தவள் அந்த நடுநிசிக் குளிரிலும் தலைக்குளித்து தன்னை சுத்தப்படுத்தி தான் எடுத்து வந்த மற்றுமொரு புது காட்டன் புடவையை கிழித்து அதை துணியாய் பயன்படுத்தியவள் குளியறைக் கதவைத் திறந்து வெளிவர அங்கோ கட்டிலில் எவ்வித கவலையுமின்றி ஆழ்ந்த துயில் கொண்டிருந்தவனைக் கண்டு இதழ்களோ மீண்டும் அழுகையில் துடிக்க கண்களோ கண்ணீரைச் சிந்த தன்னை அடக்கிக் கொண்டவள் அறைவிட்டு வெளியேறி ஹால் சோபாவில் உடலைக் குறுக்கிக் கண்களை மூடிக் கொண்டவள் மனதில் இத்தனை காலமும் கற்பனையில் உருவாகிக் காகிதத்தில் வடித்த பல காதல் வாழ்க்கையை படித்து எண்ணற்ற கனவோடு கல்யாண வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்த காரிகையின் ஆசைகள் அனைத்தும் அவள் கன்னம் தாண்டி காதைத் தீண்டிச் சென்ற கண்ணீர்ச் சுவடுகளோடு கரைந்து போனதோ?
 

Advi

Well-known member
அச்சோ என்ன இவன் இப்படி இருக்கான் பக்கி😤😤😤😤😤😤

பாவம் பிரு
 

NNK-20

Moderator
அச்சோ என்ன இவன் இப்படி இருக்கான் பக்கி😤😤😤😤😤😤

பாவம் பிரு
நன்றிசகி 😊😍
அவனுக்கு பின்னாடி இருக்கு செமையா 😉
 
Top