எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 81 (இறுதி அத்தியாயம்) (பாகம் 1)

மோஹித்தை எதுவும் செய்யாமல் பகீரதன் விட்டு விட்டாலும் கூட அவனுக்கான தண்டனை கிடைத்து விட்டது.

ஆம்! கார் விபத்தில் அவனுக்கு அளவுக்கதிகமான காயங்கள் ஏற்பட்டு அவனை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்கிறார்கள் அல்லவா?

அவ்வறைக்கு வெளியே இருந்து கொண்டுத் தன் மகனின் நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஜெகதாவிடம் அவரது மகனுக்குத் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமையை எப்படி சொல்வது என்று தயக்கம் கொண்டார் அவனுக்குச் சிகிச்சைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்.

ஏனெனில், மோஹித்தின் விதத்தைப் பற்றிய செய்தியையே இவரால் தாங்க முடியவில்லை என்ற போது அவனின் இப்போதைய நிலைமையைப் பற்றிக் கேட்டால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இவரது உடல்நலத்தில் இன்னும் மோசமான பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்று எண்ணியவரோ,

“மேம்! சந்திரபாபு சாருக்கு ஃபோன் செஞ்சி வரச் சொல்றீங்களா? அவர்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”என்று ஜெகதாவிடம் கூறினார் மருத்துவர் தாமோதரன்.

அதைக் கேட்டதும்,”எதுக்கு சார்? என்ன விஷயமாகப் பேசப் போறீங்க? எங்கப் பையன் மோஹித்துக்கு எதுவும் ஆகலை தானே?”என அவரிடம் படபடப்புடன் வினவ,

“அவருக்கு எதுவும் ஆகலை மேம். நீங்க சாரை வரச் சொல்லுங்க ப்ளீஸ்”என்று அவருக்கு அறிவுறுத்த,

உடனே தனது செல்பேசியை எடுத்துக் கணவருக்கு அழைத்து,”ஏங்க! உங்க கிட்ட டாக்டர் ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாம். உடனே கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வாங்க”என்று கூறி வைத்து விட்டு மனச் சஞ்சலத்துடன் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார் ஜெகதா.

அவரது அழைப்பை அவதானித்த சந்திரபாபுவோ தூக்கத்தை மறந்து, தன்னுடைய மகனைப் பற்றின கலக்கத்துடன் அடித்துப், பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து,

“ஜெகாம்மா! என்னாச்சு? மோஹித்துக்கு ஒன்னும் ஆகலை தானே?”என்று தன்னைப் போலவே பரிதவித்துப் போய்த் தன்னிடம் கேட்ட தனது கணவரிடம்,

“அது எனக்கும் தெரியலைங்க. டாக்டர் உங்க கிட்ட தான் பேசுவாராம். என்னன்னுப் போய்க் கேட்டுட்டு வாங்க”என்று கூறி அவரை மருத்துவரிடம் அனுப்பி வைத்தார் ஜெகதா.

உடனே தாமோதரனிடம் விரைந்து சென்று,”டாக்டர்! நீங்க என்னை வரச் சொன்னதாக என் வொய்ஃப் சொன்னாங்க”என்றதும்,

“ஆமாம் சார். நீங்க முதல்ல உட்காருங்க”என அவரை அமரச் சொல்லி விட்டு,

“உங்கப் பதட்டத்தைக் குறைங்க. தண்ணீர் குடிங்க”என்றவர் சொன்னதைச் செய்து விட்டு அவரையே பரபரப்புடன் ஏறிட்டார் சந்திரபாபு.

“நான் சொல்றதைக் கேட்டு நீங்க உடைஞ்சிடக் கூடாது சார். அதே மாதிரி அதை உங்க மனைவிக் கிட்டேயும் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லனும்”என்றவரை அலைபாயும் விழிகளுடன் நோக்க,

“உங்கப் பையன் மோஹித் சாருக்கு அந்தக் கார் ஆக்ஸிடன்ட்டில் ரொம்ப பலமாக அடிபட்டதால் அவர் ரொம்ப சீரியஸ் கண்டிஷனில் தான் இருந்தார். ப்ளட் லாஸ் ஆகி இருந்தாலும் கூட எப்படியோ இரத்தத்தை ஏத்தி அவரைக் குணமாக்க டிரை பண்ணோம். ஆனால் நாங்க அவருக்கு கொடுத்த ட்ரீட்மென்ட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படலை. அவர் கொஞ்சம், கொஞ்சமாகத் தன்னோட சுய நினைவை இழந்துட்டு இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் கோமா ஸ்டேஜூக்குப் போயிடுவார்”எனத் திக்கித் திணறி அவரிடம் விஷயத்தை உரைத்து விட்டார் தாமோதரன்.

அதைக் கேட்டவுடனேயே சந்திரபாபுவிற்கு நிலைத் தடுமாறி விட்டது.

அவரது கைகள் நடுங்குவதைக் கண்டதும்,”சார் ப்ளீஸ்! காம் டவுன்”என்று அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவரின் கரங்களைப் பற்றி,

“இங்கே பாருங்க சார். இப்போ தான் நீங்களும், உங்க வொய்ஃபும் ரொம்பவே மன உறுதியோட இருக்கனும். எப்போ வேணும்னாலும், என்ன அற்புதம் வேணும்னாலும் நிகழலாம். அதனால் நீங்க ரெண்டு பேரும் நம்பிக்கையைக் கை விட்றாதீங்க! உங்கப் பையன் வாழ்க்கை முழுசும் கோமாவிலேயே இருப்பாருன்னு இல்லை. அவர் எப்போ வேணும்னாலும் அதிலிருந்து மீண்டு வரலாம். நீங்க ரெண்டு பேரும் அவரை நல்லா பார்த்துக்கிட்டு, அவர்கிட்டே பேச்சுக் கொடுத்துட்டே இருங்க. அது மூலமாக கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்! மனசைத் தளர விடாதீங்க!”என்று கூறிச் சந்திரபாபுவிற்கு நம்பிக்கை கொடுத்தார் தாமோதரன்.

ஆனால் அவரது வார்த்தைகள் யாவும் வீண் போயிற்று.

அடுத்த நிமிடத்தில் அவர் மயங்கிப் போய் விட,

“சார்!”என்று அவரைப் பரிசோதித்து சிகிச்சையும் அளித்து விட்டு அவரது மனைவியை அழைத்து,

“ஜெகதா மேம். உங்க ஹஸ்பண்ட் மயக்கம் போட்டுட்டார். அவருக்கு ட்ரீட்மென்ட் தந்து ரூமில் படுக்க வச்சிருக்கோம்”என்றவுடன்,

“அச்சோ! அவருக்கு என்னாச்சு டாக்டர்? மோஹித்துக்கு ஏதோ ஆயிடுச்சு! அதை நீங்க அவர்கிட்டே சொல்லப் போய்த் தான் அவருக்கு இந்த நிலைமை வந்துருக்கு. அப்படித் தானே?”என்று அவரிடம் அழுகையுடன் கேட்க,

“ஆமாம் மேம். ஆனால் நான் உங்ககிட்ட உண்மையைச் சொல்லித் தானே ஆகனும்? உங்கப் பையனுக்கு என்ன ஆகுதுன்னு சொல்லனும்ல? அது தானே என்னோட கடமை? நான் வேற என்னப் பண்ண முடியும் மேம்?”என்ற தாமோதரனிடம்,

உடனே தனது கண்களைத் துடைத்து விட்டுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,”எங்கப் பையனுக்கு என்னாச்சு சார்? அவன் இனிமேல் கண்ணு முழிக்கவே மாட்டானா?”என்று வெற்றுப் பார்வையுடன் வினவினார் ஜெகதா.

உடனே நீண்ட பெருமூச்சை வெளியிட்டு,”ஆமாம் மேம்”என்றுரைத்து விட்டு, அவரது கணவர் சந்திரபாபுவிடம் சொன்னதை அப்படியே அவருக்கு விவரித்து முடித்தார் மருத்துவர் தாமோதரன்.

அதைக் கேட்ட ஜெகதாவிற்கு இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்றான பிறகு ஒரு வெறுமை உணர்வு ஏற்படுமே? அது அவருக்குள் தோன்றி விட்டது போலும்!

அதனாலேயே இப்போது மருத்துவர் தன்னிடம் கூறியதைக் கேட்டும் கூட ஆடாமல், அசையாமல், மயக்கம் போட்டு விழுகாமல் கல் மாதிரி அமர்ந்திருந்தார்.

அதைக் கண்டு,”மேம்”என்று தன்னை அழைத்த தாமோதரனிடம்,

“எனக்கு ஒன்னும் ஆகலை டாக்டர். நான் தானே இனிமேல் என் புருஷனையும், பையனையும் நல்லா பார்த்துக்கனும்! நாங்க செஞ்சப் பாவத்துக்கு அனுபவிச்சுத் தானே ஆகனும்? வேற என்னப் பண்ண முடியும்? இப்போ அவர் எங்கே இருக்கார்?”என்று தனது கணவரைப் பற்றி விசாரித்தார் ஜெகதா.

“இருங்க”என்றவரோ,

செவிலியரை அழைத்து,”இவங்களைச் சந்திரபாபு சார் இருக்கிற ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்க”என்றுரைத்து இருவரையும் அனுப்பி வைத்து விட,

உடனே அந்தச் செவிலியர் காட்டிய அறைக்குள் நுழைந்து தனது கணவரிடம்,”என்னங்க! டாக்டர் எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டார். இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?”எனக் கேட்டார் ஜெகதா.

அப்போது தான், இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தவரோ,”எனக்கு இப்போ பரவாயில்லைம்மா. உண்மையிலேயே டாக்டர் உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரா?”என்று அவரிடம் பரிதவிப்புடன் வினவினார் சந்திரபாபு.

“ஆமாங்க”என்றவரிடம்,

“அதைக் கேட்டு நீ…”என்ற கணவரை இடைமறித்து,

“அதைக் கேட்டும் நான் இப்படிக் கல்லு மாதிரி இருக்கிறேன்னுப் பார்க்கிறீங்களா?”என்றதும்,

“ம்ஹ்ம்”என்றார் சந்திரபாபு.

“இப்போ வரைக்கும் நிறையப் பார்த்துட்டோம். இனிமேல் பார்க்க எண்ண இருக்குங்க? இதையெல்லாம் நம்மப் பையன் தானே நமக்குத் தேடிக் கொடுத்து இருக்கான்? நாம செஞ்சப் புண்ணியம் கூட அவனைக் காப்பாத்தலை! அப்படின்னா என்ன அர்த்தம்? அவ செஞ்சதுக்கு அவன் கண்டிப்பாக அனுபவிச்சுத் தான் ஆகனும்! அதே மாதிரி அவனைப் பெத்தக் காரணத்தால் நாமளும் அவன் கூடச் சேர்ந்து அந்தப் பாவத்தைச் சுமந்து தான் ஆகனும்! இனிமேல் அழுகிறதால் எந்தப் பிரயோஜனமும் இல்லங்க! நம்ம மோஹித், அந்தப் பகீரதனோட வழியில் போகாத வரைக்கும் அவனும் அமைதியாகத் தானே இருந்தான்? இவன் தானே அவனை உசுப்பேத்தி விட்டது! அதனால் தானே இதெல்லாம் நடந்துச்சு? அப்போ தப்பு நம்ம மேல் தான்! அதுக்கான தண்டனையையும் நாம அனுபவிக்கனும்! அது தான் உலக நியதி!”என்றுரைத்த மனைவியை மலைத்துப் போய்ப் பார்த்து,

“அப்போ நம்மப் பையனுக்காக நாம அந்தப் பகீரதனைப் பழி வாங்க வேண்டாமா?”என்றவரிடம்,

“ம்ஹூம். அவனைப் பழி வாங்குனா மட்டும் நம்ம மோஹித் எழுந்து நடமாடிடுவானா என்ன? அதெல்லாம் வேண்டாம்ங்க. நமக்கு யாருமே வேண்டாம். நாம மூனு பேரும் மட்டும் ஒன்னா இருப்போம்! நம்மப் பையன் கோமாவில் இருந்து மீண்டு வர்ற வரைக்கும் அவனை நாமப் பொத்திப் பாதுகாக்கனும். அதில் மட்டும் கவனத்தைச் செலுத்துவோம்”என்று தீர்க்கமாக கூறினார் ஜெகதா.

அவரது வார்த்தைகள் இருந்த உண்மைத் தன்னைச் சுட்டு விடவும்,

“நீ சொல்ற படியே நடப்போம்மா. நமக்கு மோஹித் தான் முக்கியம்!”என்று அவருக்கு உறுதி அளித்தார் சந்திரபாபு.

அதற்குப் பிறகுத் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு மருத்துவரிடம் போய் மேற்படி விவரங்களைக் கேட்டுக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியவற்றைச் செய்யத் தொடங்கினார்கள் இருவரும்.

அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறி முதல் வேலையாகத் தனது மகனைப் பற்றிய செய்தி ஒன்றை அனைத்து மீடியாக்கள் முன்னிலையிலும் அறிவிக்கப் போவதாக அவர்களை நேரலைக்கு அழைத்தார் சந்திரபாபு.

அவரது அழைப்பின் பேரில் உடனே அனைத்து மீடியா நிருபர்களும் ஒரு பொது இடத்தில் கூடி விட்டனர்.

தனது குரலைச் செருமிக் கொண்டு,”என் பையன் மோஹித் ஒரு படத்துக்காகத் தன்னோட உடலையும், முகத்தையும் மாத்திக்கிட்டு இருக்கார்! அதனால் அவர் கொஞ்ச மாசத்துக்கு வெளியே வர மாட்டார்! மக்கள் நிறைய பேர் கூடுற இடத்திலும் அவரை நீங்கப் பார்க்க முடியாது அப்படின்றதை உங்களுக்கும், அவரது மேலான ரசிகர்களுக்கும் தெரிவிச்சிக்கிறேன். அவரோட சினிமாப் பயணம் இன்னும் தொடர உங்களோட ஆசி வேணும்னு அவர் கேட்டுக்கிட்டார்! நன்றி!”என்று அறிவித்து விட்டுத் தன்னிடம் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு மேலோட்டமாகப் பதிலளித்து விட்டு அங்கேயிருந்து அகன்று விட்டார் சந்திரபாபு.

அதற்குப் பிறகு அனைத்து நேரலைகளிலும் இவரது அறிவிப்பு தான் காணக் கிடைத்தது.

அதைப் பார்த்த நடாஷாவும், அவரது பெற்றோரும் கூடச் சந்திரபாபுவிற்கு அழைத்து விவரம் கேட்டார்கள்.

“நான் லைவில் சொன்ன விஷயம் உண்மை தான்ங்க! அவன் அந்தப் படத்துக்காக ரொம்ப தீவிரமாகத் தன்னை மெருகேற்றிட்டு இருக்கான்! அதான்!”என்றுரைக்க,

“அப்போ ஓகே சார். அந்தப் படம் முடியிற வரைக்கும் நாங்க வெயிட் பண்றோம்”என்று கூறி விட்டனர் நவீன் மற்றும் ஹேமா.

அதற்குப் பிறகு, நடாஷாவும் தனது மாடலிங் தொழிலில் கவனம் செலுத்த முடிவெடுத்து விட்டாள்.

- தொடரும்
 
Status
Not open for further replies.
Top