எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

2 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator
அத்தியாயம் 2

சித்ரா பௌர்ணமி, முப்பத்தியாறு வயது அழகி. பளிச்சென்ற முகம், ஒல்லியான நியூட்ரிசியன் தேகம், 'ஷார்ட் பாப்' வகையில் வெட்டப்பட்ட முடி அலங்காரம், காதில் சின்ன டைமண்ட் தோடு, கழுத்தில் குட்டி செயின் அதில் குஹநேத்திரன் கட்டிய தாலி, இடது கையில் 'அன்னி க்ளைன் மாடல்' கடிகாரம், பல வடிவங்களில் சட்டையும், வெவ்வேறு நிறங்களில் சந்தேரி காட்டன் புடவையிலும் தான் அவள்.

அவளின் ஆஸ்தான உடை அலங்காரம் இதுதான், எப்போது எங்கு பார்த்தாலும் இப்படி தான் வருவாள். ஆனால் அதில் அவள் தனித்து தெரிவது தான் அவள் தொழிலின் வெற்றி. அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் அவளுக்கு அவளே தேர்ந்தெடுக்கும் சேலையின் வண்ணங்களும் அதை அவள் உடுத்தி வரும் பாங்கும்.

பெண்களே வெளிப்படையாக ரசித்து அவளிடம் அவர்களாகவே சென்று ஒத்துக் கொண்டே ஆகவேண்டும் என்றளவில் இருக்கும் அவளின் அந்த எளிமையான அலங்காரம். அவளை மற்ற உடைகளில் எல்லாம் ரசித்தவனும் அவளை ஆண்டவனும் அவளின் முழுமையானவன் மட்டுமே. உடை வடிவமைப்பாளர் தான் ஆனால் விதவிதமான உடைகளை மற்றவர்களுக்கு பொருத்தியே அழகு பார்ப்பவள்.

அவளின் வேலை பெண்களின் உடல் அமைப்பிற்கும் கேமராவின் பார்வைக்கும் சரிசமமாக பொருந்தக் கூடிய வகையில் ஆடைகளை வடிவமைத்து தருவது தான். அதை பத்து வருடங்களாக கட்சிதமாக செய்து கொடுத்துக் கொண்டும் இருக்கிறாள். இயக்குனர்களின் விருப்பங்கள் வெவ்வேறாக இருப்பினும் அதை உள்வாங்கி அவளால் முடிந்தளவு அவள் திறமையையும் அதில் கோடிட்டுக் காண்பித்துவிடுவாள்.

இன்று கிட்டத்தட்ட தென்னிந்திய அளவில் முன்னிலையில் தான் இருக்கிறாள். "காஸ்ட்யூம்க்கு சிமிய கேட்ருங்க முதல்ல" என்னும் அளவில் தான் இருக்கிறது அவள் வளர்ச்சி. திரைப்பட உலகில் சித்ரா பௌர்ணமி சுருக்கமாக சிமி, அதுவும் அவளவன் அவளுக்கென்று உருவகித்த தனிப்பெயர். முதலில் சினி உலகில் நுழைந்தவன் அவன் தான். அவன் மனைவி சிமியாக தான் அவளின் அறிமுகம் இருந்தது. ஆனால் அதன் பின் அவள் அங்கு நிலைத்து நின்றதும் இன்றைய வளர்ச்சியும் அவளுக்கானதும் அவளின் திறமைக்கானதும் தான்.

அவ்வளவு எளிதில் அவளை அணுகிவிட முடியாத உயரம். அப்படி இருப்பவளைத் தான், உடனே வந்தாக வேண்டும் என மற்றவர்களிடம் கூறிச் சென்றிருந்தான் குஹநேத்திரன்.

தயாரிப்பாளர் குழுவிலிருந்து ஓரிருவர் சித்ராபௌர்ணமியின் அசிஸ்டன்ட்டுகளுக்கு அழைக்க, ஒருவர் ஜெயராமனுக்கு முயன்றார்.

"சொல்லு" என ஜெயராமன் எடுத்ததும், இவன் கடகடவென்று விஷயத்தைச் சொல்ல,

"ம்ச் அவங்களுக்குள்ள பிரச்சினைய இப்படி தீர்த்துக்கப் பாப்பாங்களா?" என எரிச்சலாகக் கேட்டார்.

"டைரக்டர் வேணும்னு பண்ற மாதிரி தான் இருக்கு சார். காஸ்ட்யூம் எல்லாம் ஃபர்ஸ்ட்டே டிசைன் பண்ணி பேக் பண்ணது தான். ஷுட்டிங் கிளம்புறதுக்கு முந்தின நைட் வர கூட இருந்து சிமி மேடமே எல்லாம் எடுத்து குடுத்தாங்க. ஆனா அசிஸ்டென்ட்ஸ் அவர்கிட்ட அத சொல்ல பயந்து முழிச்சுட்டு நிக்றாங்க"

"ஆமா பண்ண தான செய்வாரு. இது புருஷன் பொண்டாட்டி ஈகோ பிரச்சினைடா. அவரு பொண்டாட்டி இங்க இருந்துட்டு டிவோர்ஸ் பண்ண போறேன்னு அறிக்கை விட்டா அங்க இருந்துட்டு அவரால என்ன பண்ண முடியும்னு அவரும் காட்ட பாப்பாருல்ல? இந்நேரத்துல இவங்கட்ட மாட்டுனது நம்ம தலையெழுத்து தான் வேற என்ன சொல்ல? இதுல நம்ம தலை தான் உருளப் போவுது. இப்ப அந்தப் பொண்ண அங்க வரவைக்குறதும் ஈசி இல்ல. காசு செலவழிச்சாலும் உடனே கிளம்புன்னு சொல்ல முடியாது. எப்பவும் கூட வர்ற ஆளு இந்த தடவ வரலையேன்னு அப்பவே யோசிச்சுருக்கணும் நானு. சரி வையி, வேறெதுவும் பெரிய ப்ராஜெக்ட்ல கமிட்டாகாம இருக்கணும்னு வேண்டிகிட்டு பேசிப் பாக்றேன்" என அவர் அவராகவே யோசனையில் பேச,

"இப்ப என்ன சார் செய்ய?"

"நீ அந்த பொண்ணோட மேனேஜர்ட்ட பேசுடா. நா அந்த பொண்ணுட்ட நேரா பேச முடியுதான்னு பாக்குறேன்" என எரிச்சலாக வைத்துவிட்டு, சித்ரா பௌர்ணமியின் எண்ணிற்கே முயன்றார். அது அணைத்து வைக்கப் பட்டுள்ளதாகவே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தது.

காலையில், 'ட்வீட்!' செய்தவள் அடுத்த நொடி வேலைக்காக வைத்திருக்கும் எண்ணை நிறுத்தி வைத்து விட்டிருந்தாள். பெர்சனல் எண் மட்டுமே உபயோகத்தில் இருந்தது. அதுவும் அவன் ஒருவனின் அழைப்பை எதிர்பார்த்தே! அவன் திமிரின் அளவு தெரிந்தும் எதிர்பார்த்து இந்நொடி வரை அணைத்து வைக்காமல் இருக்கிறாள்.

அவள் மகளுக்கு அழைத்து விசாரித்த போதும், "அப்பாவும் நானும் மார்னிங் ஜாகிங் போனோம், சப்பாத்தி ரோல் சாப்பிட்டோம், டென்னிஸ் விளையாண்டோம், ரூம் போய் குளிச்சுட்டுத் தூங்கிட்டோம், அப்பா நோட் மார்க் பண்ணிட்டு ஷுட் போயிட்டாங்க. எனக்கு ஈவ்னிங் நூடுல்ஸ் வந்தது சாப்பிட்டேன். அப்றம் நம்பி அங்கிள் இன்ஷ்ட்ரெக்ட் பண்ணாரு ஆர்ட் கேலரி வந்துருக்கேன். வாவ் பெயிண்ட்டிங்க்மா. நீங்க வந்தா ஷாக் ஆகிடுவீங்க உங்கள விட அதிகமா அவ்வளவு கலர்ஸ் யூஸ் பண்ணிருக்காங்க. நானும் நெக்ஸ்ட் இயர் இங்க பெயிண்ட் வைக்கலாமான்னு கேட்டேன். எஸ்னு சொன்னாங்க" அவள் அழகாக நடந்ததை அப்படியே சொல்லிக் கொண்டிருக்க,

"நைன் ஷார்ப் அப்பாகிட்ட போயிடணும். ந்யூ ப்ளேஸ் அதிக நேரம் தனியா இருக்க கூடாது பாப்பா"

"ஸ்யர்மா நம்பி அங்கிள் ட்ராக் பண்ணிகிறதா சொன்னாரு"

"ஹரிணி!"

"கிளம்பிடுவேன்மா. கிருத்தி என்ன செய்றான்?" என்றதும் ஃபோன் கைமாறிவிட, அவர்கள் இருவரும் பேசி முடிக்கவும் தான் அஞ்சாநம்பிக்கு அழைத்து ஹரிணியை அவன் அழைத்துக் கொள்ளக் கூறி வைத்ததும்.

அஞ்சாநம்பியிடம் கூறியது போல் சேலத்திற்கு அவள் அம்மாவின் வீட்டை நோக்கி தான் சென்று கொண்டிருந்தாள். மூத்தவள் ஐந்தாவது கிரேட் முடித்து ஆறாம் கிரேட் செல்லவிருக்கிறாள், இரண்டாவது கிருத்திக் ஒன்று முடித்து இரண்டாம் கிரேட் செல்லவிருக்கிறான். இருவருக்கும் இது கோடை விடுமுறை என்பதால் அப்பா பிள்ளையான ஹரிணி குஹநேத்திரனுடன் ஸ்காட்லேண்டிற்கு சென்றுவிட, அம்மா பிள்ளையான கிருத்திக் அம்மாவோடான பயணத்தில் இருக்கிறான். அவள் வேலை விஷயமாகவும் சொந்த விஷயமாகவும் என செல்லும் இடங்கள் எல்லாம் அவள் கைப்பிடித்து அவனும்.

அவள் அம்மா, தம்பி, தம்பி மனைவி, மாமனார், கொழுந்தனார், நாத்தனார், என அவளின் எண்ணிற்கு வந்த எந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை. எடுத்துப் பார்க்க கூட இல்லை. கிருத்திக் அருகில் இருந்த டாஷ்போர்டில் தான் கைப்பேசி இருந்தது. அதில் சத்தம் வந்தாலே வரும் அழைப்பு யாரிடமிருந்து என அவன் பெயரை கூறிவிடுவான்.

"சர்ப்ரைஸா போயிட்ருக்கோம். யாருக்கும் சொல்ல வேணாம் கிருத்தி!" என அவள் சொல்லியிருக்க, அதை அவன் அதிக சிரமப்பட்டுக் காப்பாற்றி கொண்டு வந்தான். ஆனால் அவன் அப்பா எண்ணிலிருந்து வந்தால் நிச்சயம் எடுத்து விடுவான் என அவளுக்கு தெரியும் அதற்காகவே அவள் காத்திருக்க அந்த விடாகண்டன் அழைக்க மறுத்து அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தான்.

அவனோடான பிரிவை வெளி உலகிற்கு தைரியமாக பறைசாற்றிவிட்டு, எதற்காக அவன் அழைப்பை எதிர்பார்த்து ஏங்குகிறாள் என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம். அவன் வேண்டாம் தான் ஆனால் அப்படி முழுமையாக ஒதுக்கி விட முடியாமல் வேண்டும் போலவும் இருந்தது என்ற நிலை தான் இப்போதும் அவளுக்கு.

அதை ஒருவகையில் வெளிகாட்டிவிட்டாகிற்று அதற்கான அவன் எதிர்வினையை அறியாமல் இருப்பதும் மூச்சு முட்டுவது போல் இப்போது இருந்தது.

அவன் அமைதி, அழுத்தம், திமிர் எல்லாம் அவளைக் காட்டிலும் அறிந்தவர் இருக்கப் போவதில்லை. தற்போது அவள் செய்து வைத்திருக்கும் விஷயத்திற்கு அவன் இவ்வளவு அமைதியாக இருப்பதே அவளை சீண்டிப் பார்க்கத்தான் என்பது கூட தெளிவாக புரிந்தது. ஆனாலும் மனம், 'ஏன் இப்படிப் பண்ண?' என்றாவது அவன் கேட்க வேண்டும் என எதிர்பார்த்து தொலைத்தது.

அப்போதைக்கு, "கல்லூளிமங்கன்!" என பல்லைக் கடித்து ஸ்டியரிங்கில் ஓங்கி அடிக்க மட்டுமே முடிந்தது.

அங்கு, கேரவனுக்குள் நுழைந்தவன் அங்கிருந்த நீள்விருக்கையில் சில நிமிடங்கள் அப்படியே கண் மூடி கழுத்தை சாய்த்து அமர்ந்து விட்டான். பின்னங்கழுத்து அதிகமாக தான் வலித்தது. ஆனால் வலியையும் மீறி மூடிய இமைக்குள் அவன் மனைவியின் முகம் வந்து நின்று அவனை மயக்கியது. இதழ் பிரியாது மெல்ல சிரித்தான்.

"நேர்ல பாக்றப்ப இருக்குடி உனக்கு! ட்வீட்டா போடுற?" வெளிப்படையாக வாய்விட்டு கண் முன் இல்லாதவளை மிரட்டி, முகத்தை அழுந்தத் துடைத்து எழுந்து கொண்டான். கழிப்பறையுடன் கூடிய குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி வெளி வந்தவன், உபயோகிக்காமல் இருந்த ஒரு துண்டை எடுத்து கண்ணாடி முன் வந்து நின்று முகத்தை அழுந்த துடைத்தான்.

கருப்புச் சட்டையும், வெள்ளைப் பேண்ட்டும், கண்ணாடி முன்னிருந்த மஞ்சள் விளக்கொளியில் அவனை பேரழகனாக காட்ட, முடியைக் கோதிக் கொடுத்து சீர்படுத்திக் கொண்டவன், அப்படியே நின்றவாறே ஒரு செல்ஃபி எடுத்து அவன் பக்கத்தில் ட்வீட் செய்துவிட்டு விறுவிறுவென வெளியே வந்தான்.

"கார் ரெடியா நம்பி?" என வண்டியை விட்டு இறங்க, ஜர்கினைக் கொண்டு வந்து நீட்டியபடி, "எஸ் ஸார்!" என தலையை அசைத்தான் அஞ்சாநம்பி.

ஹரிணிக்கு அழைப்புக் கொடுத்தவாறு அவன் நடந்துவிட, "நம்பி! மேடம் ஃபோன் எடுக்கல, அவங்க அசிஸ்டன்ட்ஸ் சங்கரி, நந்தினி ரெண்டு பேரும் மேடம் கால் பண்ண‌க் கூடாதுன்னு சொல்லிட்டு தான் போயிருக்காங்கன்னு சொல்றாங்க. சார்ட்ட சொல்லுங்க ப்ளீஸ்" என அவசரமாக வந்து முன்னால் சென்று கொண்டிருந்த நேத்திரன் அறியாமல் அஞ்சாநம்பி காதில் ஓதி சென்றிருந்தான் தயாரிப்பாளர் குழுவைச் சார்ந்த ஒருவன்.

"வெகு சிறப்பு. ரெண்டு பேரும் ஐஸ்பாய் விளையாடப் போறாங்க நாம வேடிக்கைப் பார்க்கப் போறோம். அதான் நடக்கப் போகுது. படம் தீபாவளிக்கு என்ன பொங்கலுக்கு கூட ரிலீஸ் பண்ண முடியாது போல" என முனங்கிக் கொண்டே இவனும் குஹநேத்திரன் பின்னால் சென்றான்.

இப்போது ஹரிணிக்காக காரின் முன் இருக்கையில் நம்பி ஏறிக் கொள்ள, அவனைப் பார்த்தவாறே பின்னால் இருந்தவன், "ஸ்டே தேர் ஹரிணி. அப்பா உள்ள வந்து ஒன்ஸ் சுத்திப் பார்த்துட்டு அப்றம் நாம கிளம்பலாம். பாப்பாக்கு எதுவும் பிடிச்சுருந்தா வாங்கிட்டும் போலாம்" என்க, நம்பியும் அதனை கேட்டுக் கொண்டான்.

"வேணாம் அம்மா அடிபிச்சு சொல்லுவாங்க!" என்றாள் மகள்.

"அம்மா அடிக்காத மாதிரி இருக்க பெயிண்ட்டிங் வாங்கிட்டு போலாம்டா"

"வாவ்! அப்ப ஓகே!" என்றவள் அங்கு குதூகலமாகிவிட, அடுத்த பத்து நிமிடங்களில் இவர்கள் இருவரும் சென்று இறங்கினர்.

"நீ ரெஸ்ட் எடுக்குறதுனா கிளம்பு நம்பி" என்றுவிட்டு அவன் மகளைத் தேடி உள்ளே செல்ல, அப்பாவும் மகளும் தனியே கொண்டாடட்டும் என நம்பி அறைக்குக் கிளம்பி விட்டான்.

அப்பாவும் மகளும் பெயிண்ட்டிங்கைச் சுற்றிப் பார்க்க, மகள் அனைத்தையும் கை நீட்டி கதை சொல்லிக் கொண்டு வந்தாள். அவள் அம்மா வரைவதைப் பார்த்து ஆர்வம் வந்து கடந்த மூன்று வருடங்களாக ட்ராயிங், பெயிண்டிங்க் வகுப்பு செல்வதன் விளைவு அந்த விளக்கங்கள்.

அதில் ஒரு பெயிண்ட்டிங்க், ஒரு பெண் காலை நீட்டி அமர்ந்திருக்க அவள் காலில் படுத்து வயிற்றோடு அணைத்து படுத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் ஒரு ஆண், இருவரின் முகம் மட்டும் முழுமை பெறாமல் வரிவடிவமாக வெறுமனே விடப்பட்டிருந்தது.

குஹன், கையை கட்டியபடி அதன்முன் நின்றுவிட்டான். அருகில் மகள் ஏதேதோ கதை அளந்து கொண்டிருக்க, அவளுக்கு, 'ம்ம்' கொட்டினாலும் பார்வை மொத்தமும் அந்த வரைபடத்தில் தான். கடைசியாக எப்போது அவன் அவனவள் மடியில் அடைக்கலம் புகுந்தான் என எவ்வளவு யோசித்தும் நினைவிற்கு வரவில்லை. ஆனால் இந்நொடி அந்த மடியின் கதகதப்பு அதீதமாக தேவைப்பட்டது.

வேலை என்று வந்துவிட்டால் மொத்தமாக அவன் கவனம் அதில் மட்டுமே இருக்கும், இன்று அவன் மனைவி அவனை சிதற விட்டுக் கொண்டிருந்தாள். அது எந்த வகையிலும் வெடித்து வெளிவந்து விடாமல் இறுக்கிப் பிடித்து வைத்திருந்தான் நேத்திரன்.

அவன் அதன் முன்னரே நிற்கவும் அந்த இடத்தின் நிர்வாகி, "டூ யூ வான்ட் திஸ் சார்?" என அவன் அதை வாங்க விரும்பிகிறானா என அறிய வேகமாக வந்து நின்றார்.

"இதோட ப்ரைஸ் என்ன? இதுல ப்ளாங்கா இருக்க ஃபேஸ நா தர்ற பிக்ஷர் வச்சு ஃபுல்ஃபில் பண்ணி தரமுடியுமா?" என கேட்க,

அவரும், "இதோட ஆர்டிஸ்ட் இப்ப இங்க அவாய்லபிள்னா உடனே பண்ணித் தர சொல்றேன் சார். இல்லனா ஆர்டர் குடுத்துட்டுப் போங்க மார்னிங் உங்க ப்ளேஸ்க்கு டெலிவரி குடுத்துடுவாங்க. நா அவங்க அவயலபில்லான்னு செக் பண்ணிட்டு வர்றேன்" என சொல்லிச் சென்றவர், சென்ற வேகத்தில் வந்து, "நீங்க மாடல் குடுங்க அவங்க வரைஞ்சு தந்துடுவாங்க" என்றதும், அவர்களின் மெயில் ஐடியைப் பெற்று அவனும் அவன் மனைவியும் இருக்கும் படத்தை தேடி எடுக்க, அதுவும் நான்கு வருடத்திற்கு முன் எடுத்தது என பளிச்சென்று தேதியை முன் நின்று காட்டியது. அமைதியாக
அந்த ஐடிக்கு அனுப்பி வைத்தான்.

கையில் வைத்திருக்கும் அந்த ஊரின் பணத்தின் அளவில் தான் அதன் விலை என்பதால், "முடிச்சு பேக் பண்ணிடுங்க. நாங்க பக்கத்துல டின்னர் முடிச்சு வர்றோம்" என தனது அட்டையைக் கொடுத்துவிட்டான்.

அவனோடு வெளியே நடந்த மகள், "இதைவிட அந்த ஃப்ளவர் தான் நல்லாருக்குப்பா" என நின்று காட்ட, அவள் விருப்பத்திற்கு அதன் விலையையும் கேட்க, அவர் சொன்ன விலையில் புருவம் உயர்த்தியவன், "அதை வாங்கிட்டுப் போனா கண்டிப்பா அம்மா பிச்சு பிச்சு தான்டா" என்றான் பாவமாக.

"இதுக்கும் பிச்சு பிச்சு தான். அதுல பேடா ஹக் பண்ணிருக்காங்க. அம்மா நோ டச் சொல்லுவாங்க. சோ இதுக்கும் அடிபிச்சு தான்பா"

"பரவால்ல அம்மாட்ட அடி அப்பா வாங்கிக்கிறேன். பட் நீ அந்த பிக்ஷர் நல்லா பாத்தியா?"

"ஆமாப்பா"

"குட். அதுல என்ன தப்பா தெரிஞ்சது உனக்கு?"

"தே ஹக் ஈச் அதர். அம்மா சொல்லிருக்காங்க யாரும் ஹக் பண்ண அலௌவ் பண்ணக் கூடாது. நீயும் ஹக் பண்ணக் கூடாதுன்னு"

"அது ஸ்டேரஞ்சர்ஸ்கு தான்டா ஹரிணி. நீ அம்மாவ அப்பாவ ஹக் பண்ணலாம். கிருத்திக் நம்ம மூணு பேர ஹக் பண்ணலாம்"

"ஓ! அப்ப அந்த ட்ராயிங்க்ல இருக்க ரெண்டு பேரும் ஒரே ஃபேமிலியா?"

"ம்ம் அம்மாவும் நானும் மாதிரி"

"ஓகே ஓகே அம்மா அடிக்காத மாதிரி பெயிண்ட்டிங்.‌ ரைட்பா?"

"அப்சலொயூட்லிடா", பேசியவாறு மேலும் நடந்தே உணவகத்தைத் தேடிச் சென்றனர். அம்மாவிடம் பேசியது அனைத்தையும் இப்போது தகப்பனிடம் ஒப்பித்து வந்தாள் மகள். உணவை முடித்து பனிரெண்டு மணிவரை பொழுதைப் போக்கி விட்டே அறைக்கு உறங்கச்‌ சென்றனர். அலைந்ததில் தகப்பன் கழுத்தைக் கட்டிக்கொண்டு படுத்த நிமிடம் உறங்கியிருந்தாள் ஹரிணி.

ஹரிணி கைப்பேசி, அவசரத்திற்கு அழைப்புகள் வரவும் மேற்கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தப்படும் கைப்பேசி, அதை எடுத்துப் பார்த்தான். மூன்று தவறிய அழைப்புகள் அவன் மனைவி எண்ணில் இருந்து வந்திருந்தது. ஓரமாக வைத்து விட்டு அவனதை எடுத்துப் பார்த்தான், அவளைத் தவிர மற்ற எல்லோரும் அழைத்திருந்தனர். அவள் தம்பி எண்ணில் இருந்து கூட வந்திருந்தது.

இவன் ஆன்லைன் வந்திருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் நண்பர்கள் குழுவில் ஒருவனான பாலாஜி அழைப்பில் வர, மகளைத் திரும்பி நேராக படுக்க வைத்து விட்டு பால்கனி வந்து அந்த அழைப்பை ஏற்றான்.

"டேய் என்னடா எந்த பக்கம் திரும்புனாலும் நீதான் ஹாட் ந்யூஸா இருக்க? எங்க இருக்க நீ?"

"ஸ்காட்லான்ட்!"

"சிமிட்ட சண்டையா? நீ வேற ஏதோ அஃபெர்ல இருக்க அதான் சிமி இப்படி பண்ணாலாம் சொல்றாங்கடா. முக்கியமா உன்னோட லாஸ்ட் மூவி ஹீரோயின் பல்லவி கூட"

"பேசட்டும் படத்துக்கு ப்ரோமோஷனா வச்சுக்கலாம்"

"அப்ப சிமி ட்வீட்?"

"தெரியலையே. சிமி ஃபோன் எதுவும் ஹேக் ஆகிருக்கா என்னன்னு பாக்கணும்" என இவன் சாதாரணமாக கூற,

"உன்ட்ட கேட்டேன்ல என்ன சாத்திக்கணும்டா"

"சாத்திக்கோடா அப்படியே வாயவும்"

"உண்மையா பொய்யான்னாவது சொல்லுடா. நீ ட்வீட் குடுத்துருந்தா கூட நம்பிருக்க மாட்டேன். சிமியே குடுத்துருக்குன்னா என்னவோன்னு இருந்துச்சு அதான் காலைல இருந்து உன்ன பிடிக்க ட்ரைப் பண்றேன்"

"வெகேஷனுக்கு எங்கேயும் போலயா நீ?"

"உன்ட்ட மனுஷன் பேசுவானா. வைடா" என இவனை சொல்லிவிட்டு அவனே வைத்துச் சென்று விட்டான் பாலாஜி. குஹன் ஃபோனை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு, அவன் நின்ற நான்காம் மாடியின் பால்கனியில் இருந்து தெரிந்த ஸ்காட்லாந்தை அங்கு செடிகள் படர்ந்திருந்த கம்பியோடு சாய்ந்து நின்றுப் பார்த்திருந்தான்.

அங்கு காரில் சேலம் சென்றிறங்கியவள், தூங்கிய மகனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு சென்று அழைப்பு மணியை அழுத்த, இன்னுமே தூங்காமல் தலையைத் தாங்கி அமர்ந்திருந்த அவள் அம்மா திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

"எதுக்கும்மா இவ்வளவு பயப்படுறீங்க?" என அதட்டினான் சித்ராவின் தம்பி நிலன்.

"இல்லடா இந்நேரம் யாரோன்னு?" என்றார் முகமெல்லாம் பதற்றம் கொண்டு.

"செக்யூரிட்டிய தாண்டி வந்து தான் காலிங் பெல் அடிக்கிறாங்க அதனால தெரிஞ்சவங்க யாரோ தான். போய் படுங்கன்னாலும் கேட்க மாட்டேங்குறீங்க" என்றவன் அதட்டிக் கொண்டிருக்கையிலேயே மறுபடியும் அழைப்பு மணி அடித்தது.

இருவரும் பேசிக் கொண்டிருப்பதால், தானே சென்று திறக்கச் சென்றாள் கௌதமி, நிலனின் மனைவி.

"நீ இரும்மா. இவன் போய் திறக்கட்டும்" என அவளைத் தடுத்து, மகனை தள்ளிவிட்டு, "போய் யாருன்னு பாரு" என்றார்.

தலையை அசைத்து முறைத்தவாறு, "நீயும் ஏன் முழிச்சு கிடக்க. போய் தூங்கலாம்ல? மதிலா தனியா தூங்குறா தான?" என அவளையும் அதட்டிவிட்டு தான் கதவை நோக்கிச் சென்றான்.

கதவைத் திறக்க, வெளியே நின்றதோ அவன் அக்கா. ஒரு பெருமூச்சுடன், "என்ன தான்கா பண்ணுவ? ஒரு ஃபோனெடுத்து இங்க தான் வரேன்னு சொல்றதுக்கென்ன?" என்றான் ஆதங்கமாக.

"சித்துவாடா?" என அவன் அம்மா வேகமாக எழுந்து வர, அவள்‌ கையிலிருந்த கிருத்தியை வாங்க முயன்றான் நிலன்.

"வேணாம். அவன் தூங்கிட்டான் அப்படியே கொண்டு படுக்க வச்சுப்பேன். முழிச்சுட்டா தூங்க லேட்டாக்கிடுவான்" என்றவள் அவனைக் கடந்து உள்ளே செல்ல,

"ஏன்டி ஃபோனடிச்சா எடுக்க மாட்டியா? என்னத்தையோ டிவோர்ஸ்னு போட்டு விட்ருக்கியாம்? காலைல இருந்து வர்ற ஃபோனெல்லாம் நாங்க எடுத்து மாளல. நீ செய்றத கூட சொல்லிட்டு செய்ய மாட்ட. உனக்கு பதில் நாங்க பதில் சொல்லித் திட்டு வாங்கிட்டு இருக்கணுமா?" என அவர் போக்கில் திட்ட,
 

priya pandees

Moderator
"எனக்கு காலைல இருந்து வேலைம்மா. முடிச்சுக் கிளம்ப ஈவ்னிங் ஆகிடுச்சு கார்ல வரும் போது பேச வேணாம்னு தான் பேசல. நாளைக்கு இங்க தான் இருப்பேன். திட்றத தூங்கி எந்துச்சு வந்து தெம்பா திட்டு. நானும் தெம்பா அப்ப கேட்டுக்குறேன்"

"ம்ச் அக்கா. இதென்ன இப்படி பேசுற? நீ எதுக்கு அப்படி ஒரு ட்வீட் போட்ட? ப்ராங்க் எதும் பண்ணப் போறியா? அப்படினாலும் இதெல்லாம் என்ன ப்ராங்க் சோசியல் மீடியால? உங்க ரெண்டு பேர் இமேஜ் என்ன ஆகும்னு யோசிச்சியா?"

"ப்ராங்க் பண்ற மாதிரி தெரியுதா உனக்கு?"

"அப்ப சோசியல் மீடியா ஃபுல்லா நாறுதே? அதான் உண்மையா? மாமாக்கு வேற அஃபேர் இருக்கா? அதான் டிவோர்ஸ்னு போட்டியா? எங்ககிட்டலாம் சொல்லணும், கேட்கணும்னு நினைக்க மாட்டியா?"

"படபடன்னு நிக்காதடா. இப்ப என்ன? டிவோர்ஸ் பண்ணிட்டு வந்தா இங்கேயே இருந்துடுவேன்னு பயந்து இவ்வளவு பேசுறியா? அப்டிலாம் இருந்துட மாட்டேன். ஒன் வீக் தான் கிளம்பிடுவேன்"

"இப்படி பேசுனா இவன் மேக்கொண்டு பேசமாட்டான்னு பேசுறல்ல நீ? நானும் கேட்கவா அப்போ? இந்த வீட்டோட பங்குல உன்னோடது தான் அதிகம். உன்ன கேள்விக் கேட்டா நா இங்க இருக்க கூடாதுன்னு நீ சொல்லாம சொல்றியா? அதான் எனக்குலாம் எதுக்கு சொல்லணும்னு ஊரோட ஊரா தெரிஞ்சுக்கட்டும்னு விட்டியா?" என கையைக் கட்டிக்கொண்டு அமர்தலாக அவன் கேட்டதில், கண்ணே கலங்கி விட்டது அவளுக்கு.

அவ்வளவு தொலைவும் அடக்கி வைத்து வந்து சேர்ந்திருந்தாள். இப்போது லேசாக வெளியேறி விட்டிருந்தது.

அவளை மருமகன் மீது கை வைத்தவாறு தோளோடு அணைத்துப் பிடித்தவன், "மாமாக்கிட்ட பேசுனியா?" என்றான்.

கண்ணீரை உள்ளே இழுத்தவள், 'இல்ல!' என தலையை மட்டும் அசைத்தாள்.

"சித்து!" என அவள் அம்மாவும் அவள் கையைப் பிடிக்க,

"எனக்கு டயர்டா இருக்கு. தூங்கணும்மா" என்றாள் குரல் கமற.

"அக்கா!" என்றான் நிலன்.

"ப்ளீஸ்டா"

"சாப்பிட்டியா? கிருத்தி சாப்பிட்டானா? பால் எதுவும் வேணுமா?" என்றான், இன்னுமே அவன் கை வளைவில் தான் நின்றாள்.

"இப்பதான் பைபாஸ்ல சாப்டோம்"

"சரி போய் தூங்கு" என விட, விறுவிறுவென நடந்து அவளறை புகுந்து கொண்டாள்.

"டேய் நிலா என்னடா உடைஞ்சு பேசுறா. இப்படி சட்டுன்னு உடைய மாட்டாளேடா? அப்ப அவங்க சொல்றதெல்லாம் உண்மையா தான் இருக்குமா?" என அவர் மீண்டும் பதற.

"மாமா அப்படி இல்லம்மா. ஒன்னு அக்கா தப்பா புரிஞ்சுருக்கணும். இல்ல வேறெதுக்கோ அக்கா இப்படி பண்ணிருக்கணும். மாமாட்டயே சொல்லாம தான் செஞ்சுருக்கா. நம்பிகிட்டே கேட்டேன். ஹரிணி பாப்பாட்டையும் பேசுனேன். அங்க எதுமே வித்தியாசமா தெரியல. மாமா அவர்பாட்டுல இத பெருசாவே எடுக்காம தான் இருக்காரு. ஒரே விஷயம் தான் அவங்களுக்குள்ள என்னவோ அத அவங்களே பேசி சரி பண்ணாம ஏன் பப்ளிக் முன்ன விட்டாங்கன்னு தான் எனக்கு குழப்பமா இருக்கு. பாப்போம் அவங்களே அதுக்கு பதில் சொல்லுவாங்க" என நிறுத்தியவன், திரும்பி அம்மாவிடம், "இப்ப போய் படுங்க" என்றான் ஆறுதலாக.

"இனி எங்க இருந்து நிம்மதியா தூங்க நானு?"

"ம்ச் இவ்வளவு நேரமு அக்கா எங்கன்னு தெரியலையே. இப்படி போட்டு விட்டுட்டு காணாம போயிட்டாளேன்னு என்னென்னவோ சொல்லிப் புலம்பிட்ருந்தீங்க. இப்ப இங்க நம்மட்ட தான வந்து நிக்கான்னு இல்லாம. நிம்மதியா எப்படி தூங்கன்னு கேக்கீங்க? போய் படுங்கம்மா" என அதட்டவும், சோகமாக உள்ளே சென்றுவிட்டார்.

"உனக்கென்ன? விடிய விடிய நின்னு வேடிக்கைப் பாருன்னாலும் பாத்துட்டு நிப்பியா? வா" என்கவும் அமைதியாக வந்து விட்டாள் கௌதமி. பேசவே மாட்டாள், அவளுக்கும் சேர்த்து அவன் தான் பேசுவான், அப்படி ஒரு சுபாவம் அவளுக்கு.

அறைக்குள் நுழைந்தவள் கிருத்தியைக் கட்டிலில் கிடத்தி விட்டு, வேகமாக சென்று முகம் கைகால் கழுவி உடைமாற்றி வந்து அவசரமாக சமூக வலைதளம் தான் சென்றாள். அவ்வளவு 'நோட்டிஃபிகேஷன்' வந்து குவிந்து கிடந்தது.

பல கருத்துக்கள் சரமாரியாக இவர்கள் இருவரின் படமும் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டிருந்தது. அதில் அதிகம் அவனைத் தான் காரணமாக்கி இருந்தனர். பல்லவியோடு தான் அவனுக்கு சிறந்த பொருத்தம் என பேசியவர்களும் அதிகமே. அவளே தன்னை மறந்து ஒரு நொடி அந்த படத்தில் அவர்கள் பொருத்தத்தை ரசித்திருந்தாளே! கண்ணை இறுக மூடி அதை ஒதுக்க முயன்றாள்.

அப்படியே வந்ததில் சற்று முன் அவன் பகிர்ந்திருந்த படமும் வந்து நிற்க, எப்போது பதிவிட்டிருக்கிறான் என நேரத்தையும் பார்த்துப் பல்லைக் கடித்தாள்.

"கொஞ்சமும் நம்மள மதிக்குறதே இல்ல. என்னைய எப்பதான் முக்கியமா நினைப்பாங்க இவங்க? நா எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்கேன். ஊரே இத பேசுது வீட்ல கூட எல்லாரும் டென்ஷனா இருக்காங்க. ஆனா இவங்க? எப்படி ஸ்டைலா நின்னு போஸ் கொடுத்து அத வேணும்னே போஸ்ட்டும் பண்ண முடியுது? அவ்வளவு தானா நானு?" என நினைக்க நினைக்க ஆத்திரம் அடங்க மறுத்தது அவளுக்கு.

சற்று முன் கூட, ட்வீட் செய்தது தவறோ என ஒரு நொடி நினைத்திருந்தாள். ஆனால் அந்த ஃபோட்டோவைப் பார்த்தபின், அந்த எண்ணம் பின் சென்று விட்டிருந்தது.

அவளும் வெகுநேரம் ஆன்லைனில் இருக்க, அவனும் இருந்தான். இருவரும் இருவரின் வலைப்பக்கத்தையும் பார்த்தனர்.

குஹன், சில நிமிடங்கள் நின்று பார்த்தவன், வாட்ஸ்அப் வந்து அவள் பக்கத்தைத் திறந்து, "நாளைக்கு இங்க இருக்கிற நீ!" என மனைவிக்கு ஒரு மெசேஜை அனுப்பி விட்டு உள்ளே வந்து படுத்துவிட்டான். அங்கு அதை வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள் அவன் மனைவி.
 

Mathykarthy

Well-known member
புருஷனும் பொண்டாட்டியும் எல்லாரோட bp யையும் ஏத்தி விட்டுட்டு கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க... 😂😂😂

யார் இந்த பல்லவி அவ கூட நடிச்சது தான் பிரிவுக்கு காரணமா 🤔

இவனும் வேலை வேலைன்னு சிமியை கண்டுக்காம விட்டுட்டானோ 🙄
 
Top