அந்த இரவு நேரத்தில் பேய் மழை என்பார்களே, அதுபோல மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் ஒரு பெண்ணின் கதறல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த மழை இரவு நேரத்தில் ஒரு மருத்துவரும், செவிலியரும் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.
“ஷெர்லின், நான் சொன்ன மாதிரி ரெட்டை குழந்தை போல தான் தெரியுது. முதல்லயே ஹெட் குவாட்டர்ஸ் ஹாஸ்பிடலுக்கு அனுப்பியிருக்கணும்” என்று புலம்பினார் மருத்துவர் அம்பிகா.
“ஆமா டாக்டர், இந்த மழையில லேண்ட்லைன் வேலை செய்யல. போன் பண்ணுனா தானே ஆம்புலன்ஸ் வரவழைச்சு இவளை ஷிஃப்ட் பண்ண முடியும்” என்று கண்ணில் நீர் துளிர்க்க கூறினார் செவிலியர் ஷெர்லின்.
“ஆனா டாக்டர், எப்படியாவது இவளை காப்பாத்த முயற்சி செய்யுங்க. ப்ளீஸ். இவ என்னோட உயிர் தோழி. ஏற்கனவே வீட்டுல வச்சி பிரசவம் பார்க்குறேன்னு சொல்லி, போன தடவை இவளுக்கு பிறந்த குழந்தை, பிறந்து ரெண்டு நாளுல இறந்துடுச்சி. இந்த முறை இந்த குழந்தையையும், இவளையும் எப்படியாவது காப்பாத்துங்க” என்று மருத்துவரை நோக்கி கை எடுத்து கும்பிட்டார் அவர்.
“நிச்சயம் நம்மாலான முயற்சியை நாம செய்யலாம். நீ கவலைப் படாதே. ஆனா பிரசவத்துக்கு சேர்த்துட்டு எப்படி தான் மனசாட்சி இல்லாம இவளோட புருஷன் இவளை இப்படி விட்டுட்டு போனானோ? இப்படிப்பட்ட அரக்கனோட உன்னோட தோழி வாழ்ந்து தான் ஆகணுமா?” என்றார் அம்பிகா.
“அவளுக்கு வேற வழியில்லை டாக்டர். அம்மா அப்பா இல்லை அவளுக்கு. நான் என்னோட வான்னு சொன்னாலும், அதை ஏத்துக்கிற அளவுக்கு அவளுக்கு இன்னும் பக்குவம் வரல. கல்யாணம், புருஷன், குழந்தை இது தான் தன்னோட உலகம்ன்னு நினைச்சிட்டு இருக்கா. இப்படி பொம்பளைங்க இருக்குற வரை, இவ புருஷன் மாதிரி ஆம்பளைங்க திருந்த மாட்டாங்க” என்றார் ஷெர்லின் வருத்தமாக.
அதற்குள் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கதறல் அதிகமாகவே, இருவரின் கவனமும் அவளிடம் திரும்பியது. இருவரும் சேர்ந்து அவளுக்கு தைரியம் கொடுத்து, அதட்டி, மிரட்டி குழந்தைகளை பிரசவிக்க உதவினார்கள். ஒரு வழியாக இரண்டு தேவதைகளை பெற்றெடுத்தார் அவர், கண்ணகி.
குழந்தைகளை பெற்றெடுத்து கண்களும், உடலும் மயக்கத்திற்கு செல்ல கெஞ்சியது கண்ணகியை. ஆனால் இது அவர் ஓய்வெடுப்பதற்கான நேரம் அல்லவே. சக்தி எல்லாம் திரட்டி, அங்கே குழந்தைகளை சுத்தம் செய்து கொண்டு வந்து தொட்டிலில் கிடத்திய ஷெர்லினை, கையசைத்து தன் அருகில் அழைத்தார்.
“ஷெர்லி, எனக்கு ஒரு உதவி செய்வியா? இல்ல, உதவி இல்ல. எனக்கு ஒரு வரம் குடுப்பியா?” என்றார் கண்ணகி.
“உனக்காக நான் என்ன வேணும்னா செய்வேன். உனக்கு தெரியாதா கண்ணு?” என்றார் ஷெர்லின், கண்ணகியின் தலையை வருடியபடி.
ஆம், ஷெர்லின், கண்ணகி இருவரும் உயிர் தோழிகள். இருவருக்கும் தாய் தகப்பன் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. இருவரும் ஒன்றாக வளர்ந்தது ஒரு அனாதை ஆசிரமத்தில் தான். ஷெர்லினுக்கு படிப்பு நன்றாக வரவே, அவர் தன் முயற்சியில் மிகுந்த சிரமத்திற்கிடையே செவிலியர் பயிற்சியை நிறைவு செய்து விட்டார். கண்ணகி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவே சிரமப்பட, ஆசிரம நிர்வாகி அவரை தையல், கூடை பின்னுதல், சமையல் முதலியவற்றில் பழக்கினார்.
ஷெர்லினை விட கண்ணகி ஒரு வயது சிறியவர். ஷெர்லின் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு செவிலியர் பயிற்சிக்காக மூன்று வருடங்கள் வெளியூரில் தங்கியிருந்தார். அவ்வப்போது ஆசிரமத்தில் இருக்கும் போனில் பேசினாலும் பிரிவுத்துயர் இருவரையும் வாட்டியிருந்தது.
குண்டளப்பட்டியை சேர்ந்த பண்ணையார் ஒருவர், ஆசிரமத்திற்கு மாதம் ஒரு முறை உணவுப் பொருட்கள், அவர் விவசாயத்தில் விளைந்த காய்கறிகள் எல்லாம் அனுப்பி வைப்பது வழக்கம். அந்த பண்ணையாரின் மகன் பழனிவேல் தான் உணவுப் பொருட்களை கொண்டு வருவார். அப்படி வரும்போது கண்ணகியை கண்ட பழனிவேல் அவர் மீது ஆசை கொண்டார்.
பழனிவேலுக்கு அப்போது முப்பது வயது ஆகியிருந்தது. ஆனால் பழனிவேல், அவருடைய தாயார் காளியம்மாள் இருவரின் குணத்தை அறிந்த, அந்த ஊரார் யாரும் அவருக்கு பெண் தர முன்வரவில்லை. இப்போது கண்ணகியை கண்டதும் அவருக்கு மூளை வேகமாக வேலை செய்தது.
காளியம்மாளிடம் அவருக்கு தோன்றிய யோசனையை கூறினார் பழனிவேல். அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை. அவர் உறவிலோ அவர்களின் இனத்திலோ யாரும் பழனிவேலுக்கு பெண் தர போவதில்லை. எனவே இப்படி ஒரு அனாதை பெண்ணை மணந்தால் அவருக்கு எத்தனையோ வகையில் நன்மை தான்.
ஆசிரம நிர்வாகியிடம், மகனின் விருப்பத்தை மதித்து பெருந்தன்மையாக பெண் கேட்பது போல் காட்டிக் கொண்டனர், தாயும் மகனும். கண்ணகிக்கும் பழனிவேலை பிடித்து தான் இருந்தது. கம்பீரமும், அழகும் நிறைந்த அழகான இளைஞனாக பழனிவேல் அவரை கவர்ந்து தான் இருந்தார்.
வேகவேகமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கண்ணகியை திருமணம் செய்து கொண்டார் பழனிவேல்.
அந்த நேரத்தில் ஷெர்லின் மருத்துவ முகாம் ஒன்றிற்காக மலைப்பாங்கான இடம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து ஆசிரமத்திற்கு போன் செய்த போது கண்ணகி திருமணம் முடித்து சென்று விட்டிருந்தார்.
அதன் பிறகு ஷெர்லினால் கண்ணகியை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் ஆசிரமத்தில் கொடுத்து சென்றிருந்த எண்ணிற்கு முயன்றால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. கண்ணகி கொடுத்து விட்டு சென்ற முகவரிக்கு நேரில் சென்றால், அந்த அரண்மனை போன்ற வீட்டின் கேட் அருகில் கூட ஷெர்லினை விட மறுத்தனர். இப்படியே இரண்டு வருடங்கள் கடக்க, ஷெர்லின் இந்த மருத்துவமனைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.
கண்ணகி கூறிய செய்திகள் ஷெர்லினின் இதயத்தை நடுங்க செய்தது. கண்ணகியின் புகுந்த வீடு ஒரு நரகக் கூடாரமாக தான் தோன்றியது ஷெர்லினுக்கு.
அந்த வீட்டில் ஆண்கள் மட்டுமே தெய்வப் பிறவிகள், பெண்கள் எல்லாம் புழுக்களை விடவும் கீழானவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர் காளியம்மாளும், பழனிவேலும். பழனிவேலின் தந்தை வேலப்பன் ஒரு அமைதிப் பேர்வழி. நியாயம் தெரிந்தவர். ஆனால் தாயையும் மகனையும் எதிர்க்கும் அளவு தைரியம் கொண்டவர் அல்ல. எனவே மருமகள் வீட்டில் அனுபவிக்கும் கஷ்டங்களை பார்த்தாலும் அவரால் வருந்த மட்டுமே முடிந்தது.
கண்ணகி அங்கே ஒரு அடிமை போல நடத்தப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவர் முதன் முதலாக கருவுற்றார். அந்த குக்கிராமத்தில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் அப்போது நடைமுறையில் இல்லை. அதனால் கண்ணகியின் முதல் பெண் குழந்தை வீட்டிலேயே பிறந்தது.
அதுவரை அவரிடம் சிறு கரிசனையோடு நடந்து கொண்டிருந்த பழனிவேல், பெண் குழந்தை என்று கேள்விப்பட்டதும் மீண்டும் முகம் திருப்பிக் கொண்டார். குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் சரியாக பால் குடிக்கவே இல்லை. அடுத்த நாள் காய்ச்சலில் விழுந்த அந்தப் பிஞ்சு, உலகத்தை விட்டு சென்று விட்டது.
கண்ணகி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் காளியம்மாளோ, பழனிவேலோ ஒரு பெண் சிசுவுக்காக, சிறுதுரும்பை கூட அசைக்க மறுத்து விட்டிருந்தனர். அந்த அளவு ஆண் வாரிசு மோகம் அவர்களை மிருகமாக மாற்றி விட்டிருந்தது.
சில மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானார் கண்ணகி. இந்த முறை அவர் மருத்துவமனையில் தான் குழந்தை பெற்றுக் கொள்வேன், இல்லாவிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
பிரசவவலி வந்த போது தன் பிடிவாதத்தை கைவிடாமல் மருத்துவமனை வந்து விட்டார். ஆனால் பழனிவேல் அவருடன் மருத்துவமனையில் இருக்க மறுத்து விட்டார். மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார்.
இரவு நேர பணி என்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் மருத்துவமனைக்கு வந்த ஷெர்லின், எதிர்பாராமல் கண்ணகியை கண்டார். அதன்பிறகே தோழிகள் இத்தனை நாள் தங்கள் வாழ்வில் நடந்ததை பகிர்ந்து கொண்டனர். ஷெர்லின் இனி தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை, ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க போவதாக தெரிவித்தார்.
கண்ணகி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர் திருமண வாழ்வில் தனக்கு நாட்டமில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். முதலில் கண்ணகிக்கு வலி இடைவெளி விட்டு வந்ததில் தோழிகளால் இடையூறின்றி பேச முடிந்தது.
இப்போது குழந்தைகள் பிறந்து, மீண்டும் இரண்டும் பெண் குழந்தைகள் என்றதில் கண்ணகி மிகவும் பயந்து விட்டிருந்தார். இந்தக் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்.
“ஷெர்லி, ஒரு குழந்தையை நீ எடுத்துக்கோ. ப்ளீஸ்” என்று கண்ணீருடன் கெஞ்சினார் கண்ணகி.
“நானா? நான் எதுக்கு? நீ என்ன சொல்லுற கண்ணு?” என்றார் ஷெர்லின் குரல் நடுங்க.
“எனக்கு ரெட்டை குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியாதுடி. நீ எப்படியும் கல்யாணம் செஞ்சிக்க போறதில்ல. யாரோ ஒரு குழந்தையை தத்தெடுத்து தானே வளர்க்க போற? அது என் குழந்தையா இருக்கட்டும். இந்த ரெண்டு குழந்தைல ஒண்ணாவது அந்த நரகத்துல இருந்து தப்பிச்சி, நிம்மதியா வாழனும். ப்ளீஸ். மாட்டேன்னு சொல்லாத”
ரெட்டை குழந்தைகள் என்பதில் இரண்டு குழந்தைகளும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தது. கண்ணகியின் பால் நிறத்தை கொண்டு பிறந்திருந்த அந்த பூஞ்சிட்டுக்களை பார்த்துக் கொண்டே இருந்தார் ஷெர்லின்.
“நான் கண்டிப்பா நல்லா பாத்துப்பேன் கண்ணு. ஆனா ஒரு விஷயம் சொல்றேன். நீ என் பேச்சை ஒரு தடவை கேளேன். உன் புருஷன் வர்றதுக்குள்ள வா. உன்னையும் உன்னோட ரெண்டு குழந்தைகளையும் நான் பார்த்துக்கிறேன். நீ ஏன் அந்த நரகத்துல இருந்து கஷ்டப் படணும்? என்கூட வாடி. நாம யார் கண்ணுலையும் படாம நிம்மதியா வாழலாம்” என்றார் ஷெர்லின்.
“அது நடக்காது. நான் இங்க இருந்தா ஒரு குழந்தை வாழ்க்கையாவது நல்லா இருக்கும். இதுவே நான் உன்கூட வந்துட்டா அந்த அரக்க கூட்டம் என்னையும் குழந்தைகளையும் சும்மா விடாது. நான் சொல்லுறதை மட்டும் கேளு” என்றார் கண்ணகி.
ஷெர்லின் ஒத்துக் கொண்டார். இரு பெண்களின் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர் அம்பிகாவும், அவர்களுக்கு உதவி செய்யவே ஒரு குழந்தையை ஷெர்லின் அவரின் வாழ்வுக்கான அர்த்தமாக ஏற்றுக் கொண்டார்.
மறுநாள் மருத்துவமனைக்கு வந்த பழனிவேல் இந்த முறையும் பெண் குழந்தை என்ற கோபத்தில், மருத்துவமனை என்றும் பாராமல் கண்ணகியை அடிக்கப் பாய்ந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்துவதற்குள் ஒரு வழியாகி விட்டனர்.
ஆனால் அன்றே கண்ணகியை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார் பழனிவேல். ஷெர்லின் அடுத்த சில நாட்களில் தன் வளர்ப்பு மகளுடன் அந்த ஊரை விட்டே சென்று விட்டிருந்தார்.
தொடரும்….
இது நான் முதன் முதலில் நேரடியாக சைட்டில் எழுதும் கதை நண்பர்களே. தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்தின் தலை நகரமான லண்டன் மாநகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதி அது. பின் மதிய வேளையில் அந்த சாலை வெறிச்சோடிக் கிடந்தது. அதில் அந்த சூழலின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு பைக் வந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் ஒரு சிக்னலில் ஒரு கார் மட்டும் நின்று கொண்டிருந்தது.
திடீரென்று பிரேக் பிடிக்காமல் போகவே அந்த காரின் பின் பகுதியில் இடித்து விட்டு, அதன் பிறகே சற்று தடுமாறி நின்றது அந்த பைக். அடுத்த நொடி காரில் இருந்து இறங்கினான் ஒரு இளைஞன். அவனுடைய தோற்றமும், உயரமும் ராஜகுமாரனை ஒத்திருந்தது. அந்த அளவு அழகும், கம்பீரமும், தேஜஸும் நிறைந்திருந்தது அவனிடம். இங்கிலாந்து பிரஜையைப் போன்று சிவந்த நிறத்துடன் இருந்தான் அவன்.
கீழே இறங்கியவன் ஆங்கிலத்தில் சரமாரியாக திட்டத் தொடங்கி இருந்தான். டிரைவர் சீட்டிலிருந்து இறங்கியவன் தன் காரின் கதவை திறந்து வைத்துக் கொண்டு கதவுக்கு முன் நின்று தான் திட்டிக் கொண்டிருந்தான். ஆனால் நின்று கொண்டிருந்த அந்த பைக் மீண்டும் உறுமிக் கொண்டு அவன் இரண்டு கால்களுக்கு இடையில் வந்து இடித்து விட்டது. அடுத்த நொடி பைக் சரிந்து அதன் மீது அந்த பைக் காரனும் விழுந்திருந்தான்.
கார் காரனால் சில நொடிகள் மூச்சு கூட எடுக்க முடியவில்லை. ஆணின் உயிர் நாடியில் பட்ட அடியாகிற்றே! அவன் தன்னை மறந்து கைகள் இரண்டையும் அந்த இடத்தின் மீது வைத்துக் கொண்டு வலியில் துடித்தான்.
பைக்கோடு கீழே விழுந்ததில், கைமூட்டில் சிராய்த்த காயத்தை தடவிக் கொண்டே தன் ஹெல்மெட்டை கழற்றினாள் ஹரிப்ரியா. சிரமத்துடன் எழுந்தவள் தன் பைக்கையும் தூக்கி நிறுத்தி விட்டு கார் காரனிடம் வந்தாள்.
ஹரிப்ரியா பதினெட்டு வயது நிரம்பிய பெண். அழகுக்கு இலக்கணமாக அடையாளம் காட்டும் அளவு தோற்றப் பொழிவு கொண்டவள். மெல்லிய உடல் வாகும், பால் வண்ண நிறமும் கொண்டவள். பார்த்த உடனே தென் ஆசியப் பெண் என்பதை உணர்த்தக் கூடிய முக அமைப்பை கொண்டிருந்தாள்.
“சாரி சார்” என்றாள் வலியில் துடித்துக் கொண்டிருந்த அவனிடம்.
அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் இன்னும் சினம் கூடிப் போனது. ஒரு பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்குவதா என்ற அவனின் கர்வம் சிலிர்த்தெழுந்தது. இருந்தும் வலியை மீறி அவனால் வாயை திறந்து அவளை திட்டக் கூட முடியவில்லை.
அவன் பதில் சொல்ல முடியாமல் முறைப்பதிலேயே அவன் நிலையை புரிந்து கொண்டாள் ஹரிப்ரியா. அவனிடம் ஆங்கிலத்திலேயே பேசத் தொடங்கினாள்.
“சார் என் மேல கோபப்படுறத விட்டுட்டு முதல்ல குரோவ்(தோப்புக்கரணம்) பண்ணுங்க சார். உங்க பால்ஸ் பெயின் சரி ஆகிரும்” என்றாள் கரிசனையாக.
அவன் விழிகள் தெறித்து விடும் போல் ஆனது அவள் பேச்சில். ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக பேசுவதா? கடவுளே! அவன் எப்படிப் பட்டவன்? அவனுடைய பரம்பரையும், பாரம்பரியமும் எத்தகையது? அவள் பைக்கின் பின்புறம் இருந்த பெரிய அளவிலான பையே, அவள் ஒரு டெலிவெரி வேலை செய்யும் பெண் என்பதை அவனுக்கு புரிய வைத்திருந்தது. ஒரு சாதாரணப் பெண் தன்னிடம் இவ்வளவு அந்தரங்கமாக பேசுவதா? அவனால் அந்த நேரத்திலும் தன்னுடைய செருக்கை விட முடியவில்லை.
இருந்தும் முதலில் மூளையையும், பார்வையையும் மங்க செய்யும் இந்த வலியிலிருந்து விடுதலை வேண்டும் அவனுக்கு. எனவே வேறு வழியின்றி அவள் சொன்னது போல் தோப்புக்கரணம் போடுவது போல் நான்கைந்து முறை உட்கார்ந்து எழுந்தான். என்ன அதிசயம் நொடியில் அவன் வலி மாயமாகி விட்டது.
அடுத்த நொடி அவன் உடல் மொழியே மாறிவிட்டது. நிமிர்ந்து தீவிழி விழித்தான் அவளை.
“உனக்கு எவ்வளவு தைரியம்? ஒரு பிரேக் இல்லாத பைக்கை எடுத்துட்டு ரோட்டுக்கு வர்றதுக்கு? எடு உன்னோட லைசென்ஸ், அப்புறம் பைக்கோட டாகுமெண்ட் எல்லாம் காண்பி. நான் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ண போறேன்” என்று கொதித்தான் அவன்.
அவ்வளவு நேரம் அவன் மீது பரிதாபத்தில் இருந்தவளுக்கு இப்போது பயம் பிடித்துக் கொண்டது. அவளிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும், போலீஸ் புகார் என்றால் அவளுடைய படிப்பு என்ன ஆகும் என்று பயந்து விட்டாள் அவள்.
“சார் டாகுமெண்ட் எல்லாம் சரியா தான் சார் இருக்கு. அதோட நான் பைக் எல்லாம் பிராப்பரா தான் மெயின்டைன் பண்ணுறேன். இது ஒரு ஆக்சிடென்ட் சார். என்னை மீறி நடந்த விசயம், இங்க பாருங்க என்னோட பைக் லைசென்ஸ்” என்றவள் தன் மொபைலில் இருந்த லைசென்ஸ், பைக் சம்பந்தப் பட்ட ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தாள்.
அவள் காண்பித்த ஆவணங்களை விட, அவளுடைய கண்கள் அவனிடம் கெஞ்சும் போது காட்டிய அபிநயங்களே அவனை ஈர்த்தது. அவளை இன்னும் கொஞ்சம் அப்படி கெஞ்ச வைக்க எண்ணம் கொண்டவன், சற்று முறுக்கிக் கொள்வது போல் நடித்தான்.
அவள் மேலும் மேலும் கெஞ்சவும், அதன்பிறகு சற்று இளக்கம் ஏற்பட்டது போல் பாவனை காட்டியவன் “சரி, கம்பளைண்ட் கொடுக்கல. ஆனா என்னோட காருக்கு என்ன டேமேஜ் ஆகியிருக்கோ அதுக்கான நஷ்ட ஈடு கொடுக்கணும்” என்றான் கறாராக.
“ஹலோ என்ன ஈஸியா கொடுக்கிறேன்னு சொல்லுற. என்னோட கார் விலை என்ன தெரியுமா ஐம்பதாயிரம் பவுண்ட். அதோட சர்வீஸ் சார்ஜ் மட்டும் எத்தனை பவுண்ட் கட்டுறேன்னு தெரியுமா? அதெல்லாம் உன்னோட கவலை. நான் சர்வீஸ் பண்ண குடுத்துட்டு உனக்கு பில் அனுப்புறேன், கார் ரிட்டர்ன் எடுக்குற அன்னைக்கு நீ எனக்கு புல் அமவுண்ட் பே பண்ணி தான் ஆகணும்” என்றான் கட்டளையாக.
அவன் பேசப் பேச அவளுக்கு திகிலாக இருந்தது. அவள் இங்கே படிப்பதே இந்த டெலிவரி மற்றும் இன்னும் சில பார்ட் டைம் வேலைகள் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான். இதில் ஆயிரக் கணக்கான பவுண்ட் கட்டணத் தொகை என்றால் அவளால் என்ன செய்ய முடியும்? அவளுடைய திகைத்த தோற்றம் அவனுக்கு அத்தனை திருப்தியை அளித்தது.
“ஹலோ மேடம், பதில் சொல்லுங்க” என்றான் நக்கலாக.
அவளுக்கும் வேறு வழியில்லையே. சோர்வுடன் ‘சரி’ என்று ஒத்துக் கொண்டாள்.
“நீ சொல்லுறத நான் எப்படி நம்புறது? முதல்ல உன்னை நான் எங்க போய் தேடுறது?” என்றான் அவன்.
அவள் ஒரு பெருமூச்சுடன் தன் அடையாள அட்டை, தான் படிக்கும் கல்லூரியின் ஐடி கார்ட் ஆகியவற்றை அவனின் மெயிலுக்கு அனுப்பினாள். அவளுடைய மொபைல் எண்ணையும் அவனுக்கு கொடுத்து, அவனுடைய எண்ணையும் பெற்றுக் கொண்டாள்.
அவனும் அவள் அனுப்பியிருந்த சான்றுகளை எல்லாம் ஒரு முறை ஆராய்ந்து விட்டு, அதன் பிறகே அவளை கிளம்ப விட்டான். அவளும் அவளுக்கு இருந்த அவசரத்தில், அவனுடைய பெயரைக் கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
அவள் டெலிவரி செய்ய வேண்டிய நேரம் கடந்து சென்றதில், அந்த வாடிக்கையாளர் அவளுக்கு ரேட்டிங்ஸ் குறைத்து கொடுத்ததோடு, அவளுடைய சர்வீஸ் சரியில்லை என்று புகாரும் கொடுத்து விட்டிருந்தார்.
அந்த நாள் அவளுக்கு இப்படியே சோதனையாகவே கழிந்தது.
டெலிவரி வேலை முடிந்த பிறகு மாலை ஆறு மணிக்கு அவள் வேலை செய்யும் பாருக்கு சென்றாள் ஹரி. ஆம், அங்கே அவள் பார்டெண்டராக வேலை செய்கிறாள். அவளுடைய மது கலவையின் சுவை மற்றும் அவள் வேலை செய்யும் நயத்தை பார்ப்பதற்கு என்றே, அந்த பாருக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகம். இங்கே அவளுக்கு கணிசமான வருமானம் வருகிறது.
அவள் உடன் பணிபுரியும் ஜேக்கப் ஜான்சன் அவளுக்கு முன்பே அங்கு வந்திருந்தான்.
இவளைக் கண்டதும் “ஹாய் ஹேரி” என்றான் ஜேக்கப்.
“ஹரி” என்றாள் இவள் முறைப்பாக. ஆனால் அவனால் மாற்றிக் கொள்ள முடியாது என்று அவளுக்கும் தெரியும்.
இந்த ஊரில் அவள் பெயரை இதுவரை சரியாக உச்சரித்ததே இல்லை எனலாம். ஒன்று ஹேரி அல்லது ஹாரி என்பார்கள். இதில் அவள் இங்கே வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தாலும், ஜேக்கப்பால் அவள் பெயரை சரியாக உச்சரிக்க முடியவில்லை.
“ஓகே ஹேரி, ஒலிவர் நீ மேக் பண்ணுற விஸ்கி சோர் தான் வேணும்ன்னு உனக்காக காத்திட்டு இருக்கார்” என்று வேலை பக்கம் அவளை திசை திருப்பினான்.
அவளும் அங்கே பார்க்க அவளுடைய வழக்கமான வாடிக்கையாளர் ஒலிவர், நடனம் ஆடிக் கொண்டே இவளை நோக்கி கை அசைத்தான். இவளும் அவனுக்கு சிறு புன்னகையை கொடுத்து விட்டு, அவன் வழக்கமாக குடிக்கும் விஸ்கி சோர் தயாரிக்க ஆரம்பித்தாள்.
விஸ்கி சோர் என்பது விஸ்கி, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சை சாறு, கொம்மி சிரப், ஐஸ் கட்டிகள் சேர்த்து தயாரிக்கப் படுவது. அதை அவள் தயாரிக்க தொடங்கும் போதே அவளுக்குள் இருக்கும் கலைநயம் வெளிப்பட்டது. அவளுடைய விரல்கள் அந்த கண்ணாடி தம்ளரை சுழற்றும் அழகை பார்க்கவே அத்தனை பிரமிப்பாக இருக்கும். அவள் தயாரித்து முடிக்கும் நேரம் அங்கே வந்தான் ஒலிவர்.
“தேங்க் யூ பியூட்டி” என்று கூறியபடி பானத்தை வாங்கியவன், அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அவளை பார்த்த படியே அமர்ந்து விட்டான்.
அவள் அவனை சலிப்பாக பார்த்தாலும், அடுத்தடுத்த வாடிக்கையாளர்கள் வருகையில் இவனை சற்று மறந்து விட்டாள்.
வழக்கம் போல் இரவு பதினோரு மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பி தான் தங்கி இருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தாள் ஹரிப்ரியா.
கையேடு வாங்கி வந்திருந்த உணவை விழுங்கி விட்டு, உடை மாற்றி, ஸ்கின் கேர் ரொட்டின் செய்து முடித்து விட்டு படுக்கையில் விழுந்தாள். உடனே அந்த கார்க்காரன் நினைவு வந்தது அவளுக்கு.
அவனைப் பற்றி யோசித்தவளுக்கு, அப்போது தான் அவன் பெயரை கூட தான் கேட்காதது நினைவுக்கு வந்தது. சரி, அவனுக்கு தானே அவளிடம் பணம் தேவை? அவனாக கூப்பிட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள், ஒரு குறும்பு புன்னகையுடன் அவன் பெயரை குரோவ்(தோப்புக்கரணம்) என்று தன் போனில் பதிவு செய்து கொண்டாள்.
அன்று கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்ததால், நேரத்திற்கே எழுந்து விட்டாள் ஹரிப்ரியா. வேகமாக எழுந்தவள் உடைகளை துவைக்க வாஷிங் மெஷினில் போட்டு விட்டு, சமைத்து, தானும் கிளம்பி கல்லூரிக்கு சென்றாள்.
அவள் படிப்பது டேட்டா என்ஜினீரியங் பட்டப்படிப்பு. அங்கே கல்லூரி வேலை நேரம் வாரத்தில் ஐந்து நாட்கள் தான். அதிலும் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்கள் தான் வகுப்புகள் நடக்கும். எனவே ஹரிப்ரியா கல்லூரி நேரம், அவள் படிக்கும் நேரம் தவிர மீதி இருக்கும் ஓய்வு நேரங்களில், இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டு செய்து வருமானம் ஈட்டக் கற்றுக் கொண்டிருந்தாள். அதிலும் அவள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி என்பதில், உதவித் தொகையும் தாராளமாகவே அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த காரணங்களால் அவளிடம் செலவுக்கு போக ஓரளவு கணிசமான தொகை கையிருப்பாகவும் இருந்தது.
அவள் கல்லூரி முடிந்து வெளியில் வந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, குரோவ் என்ற எண்ணிலிருந்து இரண்டு தவறிய அழைப்புகள் இருந்தது. உடனே ஒரு பதட்டம் சூழ்ந்து கொண்டது அவளை. திரும்ப அழைக்காவிட்டால் அவனை ஏமாற்ற முயல்வதாக எடுத்துக் கொள்வானோ என்று தோன்றவே தயக்கத்துடன் அழைத்தாள்.
அழைப்பு முழுதாக சென்று முடியும் நேரத்தில் எடுத்தவன், எடுத்த உடனே பொரியத் தொடங்கி விட்டிருந்தான்.
“என்ன? கூப்பிட்டா உடனே எடுக்க முடியாதா உன்னால? என்னை ஏமாத்த பார்க்குறியா?” என்றான் கோபமாக.
“சார், நான் காலேஜ் ஸ்டூடெண்ட் சார். இன்னைக்கு காலேஜ் வந்திருக்கேன். இப்ப தான் கிளாஸ் முடிஞ்சி போன் பார்த்தேன்” என்று மிகவும் தன்மையாக பேசினாள் ஹரி.
லண்டன் அவள் படிப்பதற்காக வந்து தங்கியிருக்கும் இடம். அவள் இங்கிலாந்து பிரஜை இல்லை. இங்கே அவளுக்கு யாரையும் தெரியாது. தன் முயற்சியில் படிப்பு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட நினைக்கும் துணிச்சல் மிகுந்த பெண் அவள். ஆனால் தெரியாத இடத்தில் வம்பு செய்து, எதிலும் மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லை அவளுக்கு. எனவே மனதில் அந்த ‘குரோவ்’ மீது மிகுந்த கோபம் இருந்தாலும், தவறு அவள் மீது என்பதில் தணிந்து போனாள் அவள். ஆனால் அவள் உண்மையான குணத்தை ‘அந்த அவன்’ அறிய நேரிட்டால்?
அவள் பேசியதில் அவன் கோபமும் சற்று தணிந்தது.
எனவே “சரி, உன்னோட நம்பருக்கு கார் டேமேஜூக்கான பில் அனுப்பி வச்சிருக்கேன். பார்த்துட்டு எப்ப அமவுண்ட் செட்டில் பண்ணுறன்னு சொல்லு” என்று சற்று தணிந்த குரலில் கூறி விட்டு போனை வைத்து விட்டான்.
ஹரி மொபைலை எடுத்து பில்லை பார்த்தவள், சற்று அதிர்ந்து தான் போனாள். அந்த தொகை அவள் ஆறு மாதங்கள் சம்பாதிக்கும் மொத்த சம்பளத்தை சேர்த்து வரக் கூடிய தொகையாக இருந்தது. ஒரு கணம் தலை சுற்றுவது போலானது அவளுக்கு. அவள் இருப்பு வைத்திருக்கும் தொகைக்கும் இதற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆனால் இப்போது அவள் பதில் கூறி தானே ஆக வேண்டும்?
தன்னை திடப்படுத்திக் கொண்டு அவனுக்கு அழைக்க நினைத்தவள், அந்த பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்றாள். ஒரு கோல்டு எஸ்ப்ரெஸ்ஸோ வாங்கி நிதானமாக குடித்து முடித்தாள். அதன் பின் ஒரு வழியாக அவனுக்கு அழைத்தாள்.
“மேடம், அக்கவுண்ட் டீடைல்ஸ் எல்லாம் அனுப்பிட்டேன். ஆனா இன்னும் பணம் வரலையே?” என்றான் அவன், எடுத்ததுமே நக்கலாக.
“சார், இது என்னோட தகுதிக்கு மீறின பணம், என்னால உடனே அதை குடுக்க முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க சார், நான் இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ரா வேலை பார்த்து கூட உங்க பணத்தை கண்டிப்பா கொடுத்துருவேன்” என்றாள் கம்மிய குரலில்.
இதைக் கூறுவதற்குள் அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
“நான் என்ன உனக்கு கடனா கொடுத்திருக்கேன்? இன்ஸ்டால்மென்ட்ல திருப்பி குடுக்க? நீ பண்ணுனது ஒரு ஆக்சிடென்ட். அதுக்கு இழப்பீடு கொடுக்க போற. இதுக்கெல்லாம் யாரும் டைம் குடுக்க மாட்டாங்க” என்றான் கடினக் குரலில்.
“சார், நான் இந்த நாட்டு சிட்டிசன் கிடையாது. நான் இங்க படிக்க தான் வந்திருக்கேன். அதுவும் பார்ட் டைம் வேலை பார்த்து தான் அதுக்கான பணமே சம்பாதிக்கிறேன்…” என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவன் இடைமறித்தான்.
“ஏன்? உன்னோட பேரன்ட்ஸ் எல்லாம் என்ன செய்யுறாங்க? அவங்க ஏன் உனக்கு படிப்புக்கு உதவி செய்யல?” என்றான்.
அவனை மீறி இந்தக் கேள்வியை அவன் கேட்டிருந்தான். கேட்ட பிறகு தான் இது தனக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி என்று அவனுக்கு உரைத்தது.
அவளுக்கும் இது அவனுக்கு தேவை இல்லாத கேள்வி என்று தோன்ற தான் செய்தது. ஆனால் அவள் பதில் சொல்லாவிட்டால், அவன் காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டால் என்ன செய்வது, என்ற எண்ணம் தோன்றி அவளை பதில் சொல்ல வைத்தது.
“அம்மா துபாய்ல இருக்காங்க சார். அவங்க பேச்சை மீறி தான் இங்க படிக்க வந்திருக்கேன். சோ என்னோட செலவை நானே பார்த்துக்கிறதா அவங்ககிட்ட சொல்லிட்டேன். இப்ப நான் பணம் கேட்டா கூட அவங்க கொடுப்பாங்க. ஆனா இந்த பிரச்சினையை சொன்னா பயப்படுவாங்க. அதுக்கு தான் கேக்குறேன். எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க, நான் நிச்சயம் உங்க பணத்தை திருப்பி கொடுத்துருவேன்” என்றாள் ஹரிப்ரியா.
அந்தப் பக்கம் சில நொடிகள் அமைதி மட்டுமே.
அதன்பின் “நீ சொல்லுறத நான் ஏத்துக்கிறேன். ஆனா நீ வெளிய வேலை பார்த்து என்னோட கடனை கழிக்கிறதை விட என்கிட்ட ஒரு சுலபமான வழி இருக்கு” என்றான் அவன்.
“சொல்லுங்க சார், நான் என்ன செய்யணும்?”
“நீ நிறைய இடத்துல பாக்குற பார்ட் டைம் வேலையை விட்டுட்டு, என்னோட கம்பெனில நீ செய்யலாம். அதுக்கு உனக்கு குடுக்குற சேலரில நான் என்னோட கடனை கொஞ்சம் கொஞ்சமா கழிச்சிக்கிறேன்” என்று வலையை விரித்தான் வேடனவன்.
அது புரியாத புறாவோ, அவன் தனக்கு உண்ண இரை கொடுப்பதாக நினைத்து அவன் தோளில் தொற்றிக் கொண்டது.
ஆம், அவன் கூறிய யோசனையை அவள் ஏற்றுக் கொண்டாள். அவன் கொடுத்த முகவரியில் மறுநாள் அவனை சந்திப்பதாக கூறிவிட்டு புன்னகையுடன் போனை வைத்தாள்.
அந்த பழமை மிகுந்த, பெரிய தொட்டிக்கட்டு வீட்டின் நடு முற்றத்தில் இருந்த பெரிய அண்டாவில் நிறைந்திருந்த தண்ணீரில், முகம் கை கால் கழுவிக் கொண்டான் மூக்கேஸ்வரன்.
கழுவி முடித்து நிமிர்ந்த போது அவனுக்கு துண்டு நீட்டப்பட்டது. அதை யார் கொடுத்தார்கள் என்பதை கூட கவனிக்காமல் வாங்கி முகத்தை துடைத்து, துண்டை வீசி விட்டு வீட்டிற்குள் சென்றான்.
நேராக அவன் சென்றது அன்னையின் அறைக்கு தான். அவன் சென்று பார்த்த போது அவன் தாய் மீனாட்சி கட்டிலில் படுத்திருந்தார். இவனைக் கண்டதும் அவர் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தார்.
மூக்கனின் கழுகுக் கண்களிலிருந்து இந்தக் காட்சி தப்பவில்லை.
“ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடல?” என்றான் கூர்மையாக.
“பசிக்கலப்பா, கொஞ்சம் அசதியா இருந்துச்சி. அது தான் செத்த தலை சாஞ்சேன்” என்றார் அவர் சமாளிப்பாக.
“இங்க பாருங்கம்மா, நீங்க என்ன தான் அழுதாலும், அடம் பிடிச்சாலும் அந்த ராங்கியை நான் கட்டிக்க மாட்டேன். அதுக்காக இப்படி அழுது, சாப்பிடாம உங்களுக்கு உடம்புக்கு எதுவும் வந்தா, அப்புறம் அவளை என்கிட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாது. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றான் கோபமாக.
“அப்பு, நீ பேசுறது சரியில்ல. இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க நானும், சின்னம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு. அவங்க வீட்டுல அவங்க பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. ஆனா இங்க அப்படியா? என்னோட பேச்சு சபை ஏறுமா?” என்று மீண்டும் கண்ணீர் வடித்தார் மீனாட்சி.
நீங்கள் அழுதாலும் பரவாயில்லை என்று அன்னையிடம் சொன்ன மூக்கனுக்கோ, அன்னையை அழவைத்துப் பார்க்கும் தெம்பு சுத்தமாக இல்லை. அவர் கண்ணீர் அவனை வெறி பிடிக்க வைத்தது எனலாம்.
“அழாதீங்கம்மா” என்று அந்த அறையே அதிர கத்தினான்.
ஆனால் அவர் அவனுக்கே தாயாகிற்றே! சற்றும் அதிராமல் நிதானமாக கண்ணை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தார்.
“நான் சொன்னதுக்கு நீ தான் முடியாதுன்னு சொல்லிட்டியேப்பு. நீ உன் இஷ்டம் போல இரு. நான் உன்னை எதுவும் கேக்க மாட்டேன்” என்றார்.
அவனுக்குப் புரிந்தது, அன்னை இதை விடப் போவதில்லை என்பது. ஆனால் அவளை நினைத்தாலே அவனுக்கு கசந்து வழிந்தது. அவனுக்கு பெண் என்றால் அடங்கி இருக்க வேண்டும். ஆனால் அன்னை சொல்லும் அவளோ சரியான ராங்கி, திமிர் பிடித்தவள், பொய் சொல்லி, திருடி இன்னுமே சொல்லிக் கொண்டே போகலாம் அவளைப் பற்றி.
அதற்காக அன்னையின் உடல் நலனை அலட்சியப் படுத்தவும் அவனால் முடியாது. மீனாட்சிக்கு கடுமையான அல்சர் ஏற்பட்டு சென்ற வருடம் மிகுந்த சிரமப்பட்டார். அதன்பின் அவர் உடல்நிலையை தேற்றுவதற்குள் அவன் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. இப்போதும் ஒருவேளை உணவை அவர் தாமதமாக உண்டு விட்டால், அவருக்கு கடுமையான வலி ஏற்படும்.
இப்படிப்பட்ட உடலை வைத்துக் கொண்டு சாப்பிட அடம்பிடிப்பவரை அவனால் சமாளிக்க முடியவில்லை. சரி, அன்னைக்காக சம்மதிக்கலாம். அதன்பிறகு அவனுக்கு அவள் அடங்கி நடக்காவிட்டால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு தான் வீட்டுக்கு வந்தான் அவன்.
“அம்மா, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றான் மூக்கன்.
சுவிட்ச் போட்டது போல் மீனாட்சியின் முகம் ஒளிர்ந்தது.
“அப்பு, நீ நிஜமா தானே சொல்லுற? அம்முவை கல்யாணம் செஞ்சிக்கிறியா?” என்றார் ஆர்வமாக.
அவர் முகபாவனையில் அவனுக்கு சிரிப்பும் வந்தது. அதே லேசான புன்னகையுடன் ஆமாம் என்பது போல் தலை அசைத்தான்.
“சரி, அதுதான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் நடக்க போகுதே. வாங்க சாப்பிடலாம்”
“சரிப்பு, சரிப்பு. ஒத்த போனை போட்டு சின்னம்மா கிட்ட பேசிட்டு வரட்டா?”
“ஒண்ணும் வேணாம். உங்க சின்னம்மாவும் நீங்களும் பேச ஆரம்பிச்சா உச்சிப் பொழுது சாப்பாட்டை, ரவைக்கு தான் சாப்பிடணும். வாங்க, ஒத்த உருண்டையை வயித்துக்குள்ள போட்டுட்டு வந்து அப்புறம் எம்புட்டு வேணா பேசுங்க. அதுதான் இனிமே பேச விசயமா இல்ல?” என்றான் ஒரு மாதிரி குரலில்.
“அது சரிதான்ப்பு. வா சாப்பிடலாம்” என்றவாறு மகனை அழைத்துக் கொண்டு உணவு கூடத்திற்கு சென்றார் மீனாட்சி.
குளோபல் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமையகத்தின் வரவேற்பு பகுதியில், தனக்கென அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஹரிப்ரியா. அவள் அன்று அடர் நீல நிறத்தில் ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்திருந்தாள். அந்த கவுன் அவளுடைய முட்டி வரை இருந்தது. கழுத்தில் ஒரு மெல்லிய சில்வர் செயின், காதில் பொட்டு போல அதே நிறத்தில் ஒரு கம்மல், ஒரு கையில் சில்வர் நிற வாட்ச் அணிந்திருந்தாள். முகத்தில் லேசான ஒப்பனை, லிப் கிளாஸ் மட்டும் அணிந்து பேரழகியாக அமர்ந்திருந்தாள்.
அவளை ஒருமுறை பார்த்தவர்கள், மீண்டும் சில நொடிகள் தங்களை மீறி அவளை கவனித்து விட்டே சென்றனர். முதல் நாள் குரோவ் அனுப்பியிருந்த முகவரியைக் கொண்டு, அவன் மெயில் செய்திருந்த லெட்டரையும் எடுத்துக் கொண்டு இங்கே வந்து காத்திருக்கிறாள் அவள்.
சற்று நேரத்தில் ஒரு பெண் வந்து அவளை அழைத்து சென்றாள். அந்த இருபது மாடி கட்டிடத்தின் இருபதாவது தளத்தை அடைந்தனர் இருவரும். ஒரு பெரிய அறைக்குள் அழைத்து சென்றவள், அங்கே மேசைக்கு எதிரில் கிடந்த இருக்கையில் அமர்ந்து காத்திருக்கும் படி கூறிவிட்டு சென்று விட்டாள்.
அறையை சுற்றிப் பார்த்தாள் ஹரிப்ரியா. மிகவும் பெரிய அறை அது. ஒருபுறச் சுவரின் அருகில் சில சோபாக்கள் கிடந்தது. ஆங்காங்கு அலமாரிகள், அவற்றில் சில கோப்புகள் இருந்தன. கண்ணாடி மாளிகை என்று கூறும் அளவில் அனைத்து பொருட்களும் கண்ணாடியால் அல்லது கண்ணாடி போன்ற பளபளப்பான கற்கள், மரங்களை கொண்டு செய்யப் பட்டிருந்தது.
“இப்படியே நாள் முழுக்க கூட பார்த்துட்டே இருப்பியோ?” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் ஹரி.
அங்கே குரோவ் நின்றிருந்தான். அவன் கண்களில் ஒரு உணர்ச்சியற்ற பாவம் இருந்தது. அவன் அத்தனை கவர்ச்சியாக கோர்ட் சூட் அணிந்து மிகவும் கம்பீரமும், அழகும் கொண்டிருந்தான். இருந்தும் அது எதுவும் ஹரியை கவரவில்லை. அவள் கவனம் முழுவதும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே இருந்தது.
ஆனால் குரோவின் கண்கள் அவளை அப்படி ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தது. இருந்தும் அதை அவளுக்கு தெரிய விடாமல் பார்த்துக் கொண்டான் அவன்.
“இல்ல சார், சும்மா தான் பார்த்தேன். என்னோட ஸ்கூல் சர்டிபிகேட், அப்புறம் நான் படிச்ச சில கம்ப்யூட்டர் கோர்ஸ் சர்டிபிகேட்” என்று கையில் இருந்த பைலை அவனிடம் கொடுத்தாள்.
அவனும் அவன் இருக்கையில் வந்து அமர்ந்து, அவள் கையிலிருந்த பைலை வாங்கிப் பார்வையிட ஆரம்பித்தான். அப்போது தான் ஹரி கவனித்தாள். அவன் மேசையின் மீது ஒரு பெயர் பலகை இருந்தது. அதில் ரகுவீர் தோஷி எம்டி என்று குறிப்பிட்டிருந்தது.
அவன் இந்த நிறுவனத்தில் ஏதோ ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறான் என்று நினைத்திருந்தாள் அவள். ஆனால் இத்தனை பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் இவனா? அப்படி என்றால் இந்த குளோபல் எம்என்சி கம்பெனி இவனுடையதா? அவளுக்குத் தெரியும், குளோபல் நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டது. குறிப்பிட்ட ஒரு பொருள் தயாரிக்கும் நிறுவனம் இல்லை அது. அவர்கள் நுழையாத தொழில்களே இல்லை என்ற அளவில் தான், அவர்களின் தொழிலின் எல்லைகள் விரிவடைந்து இருக்கிறது. சாதாரண உப்பிலிருந்து விமான சேவை வரை எல்லா இடத்திலும் குளோபல் என்ற பெயர் உலக மக்களுக்கிடையே பிரசித்தி பெற்றது.
இவ்வளவு உயரத்தில் இருப்பவனிடமா அன்று அவள் அப்படி நடந்து கொண்டாள்? ஆனால் இவன் சிறிய வயதாக தெரிகிறானே? ஒருவேளை பரம்பரை சொத்தாக இருக்கலாம். சற்று கலக்கத்துடன் அவன் என்ன கூறப் போகிறான் என்று காத்திருந்தாள்.
அவன் சில நொடிகளில் பைலை அவளிடமே திருப்பி கொடுத்து விட்டான்.
“நான் கூட காலேஜ் படிக்கிறதா சொல்லவும், உனக்கு பத்தொன்பது அல்லது இருபது வயசு இருக்கும், இதுக்குள்ள கொஞ்சம் டேட்டா நாலெட்ஜ் இருக்கும்னு நினைச்சேன். ஆனா நீ ஒரு பதினேழு வயசு பொண்ணு, காலேஜ் சேர்ந்து கூட ஆறு மாசம் தான் ஆகுது போல?” என்றான் கேள்வியாக.
“சார் வயசை வச்சி ஒன்னும் முடிவு பண்ணாதீங்க. நான் நல்ல ஹார்ட் ஒர்க்கர். இப்பவே எத்தனை வேலை பார்க்குறேன் தெரியுமா? காலேஜ் மதியம் முடிஞ்சிரும் எனக்கு. ஈவினிங் வரை டெலிவரி பண்ணுவேன், அதுக்கு அப்புறம் பார்ல வேலை செய்யுறேன். வீக் எண்ட்ல பிளவர் ஷாப்ல வேலை பார்க்குறேன். இது போக அப்பப்போ டைம் கிடைச்சா, பேபி சிட்டிங் கூட போவேன்” என்றாள் வேகமாக.
இந்த இரண்டு நாட்களில் அவளைப் பற்றி ஏற்கனவே விசாரித்து விட்டிருந்தான் ரகுவீர். இப்போது அவள் கூறியதெல்லாம் ஏற்கனவே அவனுக்கு தெரிந்த விஷயங்கள் தான். அவளுக்கான வேலையையும் அவன் இதற்குள் முடிவு செய்து விட்டிருந்தான். இருந்தும் அவளை பேச வைப்பதற்காகவே அவன் அந்த கேள்வியை கேட்டிருந்தான்.
“இதெல்லாம் ஒரு தகுதியா? பார், பிளவர் ஷாப், பேபி சிட்டிங் எல்லாம் இந்த கம்பெனில வேலை செய்ய எந்த விதத்துல உதவும்?” என்றான் நக்கலாக.
அவள் முகம் கன்றி விட்டது. என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியானாள் அவள்.
சில நொடிகள் அவளை கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“ஓகே, உன்னோட குவாலிஃபிகேஷனுக்கு இந்த கம்பெனில அசிஸ்டன்ட் வேலை கூட கொடுக்க முடியாது. கிளீனிங் ஸ்டாஃப், பியூன், ஆஃபீஸ் பாய் மாதிரி தான் ஏதாவது வேலை கொடுக்க முடியும். ஆனா அந்த வேலை பார்த்து நீ எந்த வருசம் என்னோட கடனை அடைக்க முடியும்?”
“எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை சார், நான் கவுரவம் பார்க்க மாட்டேன். நீங்க என்ன வேலை கொடுத்தாலும், நல்லா செய்வேன்” என்றாள் அவள் வேகமாக.
“சரி, உனக்கு இங்க கம்பெனில பொருத்தமான வேலை எதுவும் இல்ல. உனக்கு வேலை என்னோட வீட்டுல தான். அதோட நீ என் வீட்டுல தான் தங்கணும். உன்னோட படிப்புக்கு தேவையான பணத்தை நானே கொடுப்பேன், நீ படிக்கிற நேரம் போக மத்த நேரம் வேலை பார்த்தா போதும்” என்றான் நிதானமாக.
ஹரி இப்படி ஒன்றை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அவள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள்.
“உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. யோசிச்சி நாளைக்கு கூட சொல்லு. வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேட்டுக்கோ” என்றான் ரகுவீர்.
சில நொடிகள் யோசித்தாள் ஹரி.
பின் “உங்க வீட்டுல வேலை கொடுத்தா என்ன வேலை கொடுப்பீங்க? உங்க வீட்டுல எத்தனை பேர் இருக்கீங்க?” என்றாள்.
மனதில் அவளை மெச்சிக் கொண்டான் ரகுவீர். அதை முகத்தில் காண்பிக்கவில்லை அவன்.
“என்னோட வீட்டுல நிறைய ஒர்க்கர்ஸ் இருக்குறாங்க. குக்கிங், க்ளீனிங், மெயின்டெனன்ஸ் எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. எனக்கு பெர்சனல் அசிஸ்டன்ட் மட்டும் தான் இப்ப தேவை. அதாவது என்னோட புட், ஹெல்த், டெய்லி ரொட்டீன் இதெல்லாம் கவனிச்சிக்க தான் ஒரு ஆள் தேவை. இந்த வேலை தான் நீ பார்க்கணும். உனக்கு சேலரி …” என்று ஒரு பெரிய தொகையை கூறினான் ரகுவீர்.
அந்த சம்பளத் தொகையிலேயே ஹரிப்ரியா விழுந்து விட்டாள். ஆனாலும் அவள் கேட்ட இரண்டாவது கேள்வி?
“உங்க வீட்டுல….” என்று தயங்கி நிறுத்தினாள்.
“இங்க பாரு ஹரிப்ரியா, என் வீட்டுல எத்தனை பேர் இருந்தாலும், யார் இருந்தாலும் அது உனக்கு தேவை கிடையாது. என்னோட வீட்டுல இருக்குற பதினோரு செர்வன்ட்ஸ் கூட நீயும் பன்னிரண்டாவது ஆளா சேரப் போற, அவ்வளவு தான். உனக்கு இந்த ஆஃபர் பிடிச்சிருக்கா? இல்லையா? அதை மட்டும் நீ சொன்னா போதும்” என்று முடித்துக் கொண்டான் அவன்.
அவனுடைய ஹரிப்ரியா என்ற தெளிவான உச்சரிப்பில் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவன் இந்தியாவை சேர்ந்தவன், அவளுக்கு அதை கேட்கவும் தயக்கமாக இருந்தது. நீ இந்தியனா என்று கேட்டால், அது உனக்கு தேவை இல்லாத விசயம் என்று மூக்கை உடைப்பான் என்று புரிந்து, பேசாமல் இருந்து விட்டாள் அவள்.
“நான் நாளைக்கு சொல்லட்டுமா சார்?” என்றாள்.
அவன் கண்கள் அத்தனை நேரம் அவளுடைய ஸ்லீவ்லெஸ் கவுனின், தோளில் இருந்த ஒற்றை கயிறு போன்ற ஸ்ட்ராப் மறைத்த இடம் போக, மிகுதி வெளியில் தெரிந்த பால் வண்ண நிற சருமத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அதிலும் அவள் கழுத்து எழும்புகள், அதில் அவளுடைய செயின் வளைந்து ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருப்பது போல் அவனுக்கு தோன்றியது. எச்சில் விழுங்கிக் கொண்டு, உணர்வுகளையும் சேர்த்து மறைத்தான் அவன்.
“சரி, நாளைக்கே சொல்லு” என்று அமைதியாகக் கூறி அவளை வழியனுப்பி வைத்தான்.
அவள் சென்றதும் வேகமாக ஜன்னல் அருகில் சென்று, திரைச்சீலையை விலக்கி வெளிக்காற்றை வேகமாக சுவாசித்தான். கழுத்தை இறுக்கி இருந்த டையை தளர்த்தி விட்டான். அவளுடைய அழகு அவனை அந்த அளவுக்கு மூச்சடைக்க செய்திருந்தது.
இத்தனைக்கும் அவன் இங்கே பார்க்காத பழகாத அழகிகளே இல்லை எனலாம். பழக்கத்துடன் மட்டுமின்றி படுக்கை வரை வந்த, வர தயாராக இருக்கும் பெண்களும் அதில் அடக்கம். ஆனால் ஒரு பதினேழு வயது சிறுமி அவனை இந்த அளவு பாதிக்கிறாள். அவன் நினைத்தால் அந்த பணம் அவனுக்கு ஒன்றுமே இல்லை. அவளை தன் அருகில் வைத்துக் கொள்ளும் ஆசையில் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான்.
ஆனால் இதற்கு எதிர்காலம் இல்லை என்பதும் அவனுக்கு தெரியும். இருந்தும் அவளை நெருங்க நினைக்கும் மனதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
குண்டளப்பட்டி கிராமத்தில்…
காலை உணவு நேரத்தில் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. சமையலறையில் சமைத்த உணவு வகைகளை எல்லாம் பரிமாறுவதற்கு ஏதுவாக சிறிய பாத்திரங்களில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் கண்ணகி. அவர் எடுத்து வைப்பதை எல்லாம் கவனமாக எடுத்துக் கொண்டு உணவு மேசையில் வைத்துக் கொண்டிருந்தாள் அமுதசுரபி.
வேலையாள் ஒருத்தி உணவு மேசை, அங்கிருந்த நாற்காலியை எல்லாம் வேகமாக துடைத்துக் கொண்டிருந்தாள்.
காளியம்மாள் ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்து வேலையாட்கள், மற்றும் வீட்டுப் பெண்களை விரட்டிக் கொண்டிருந்தார். அவர் முகம் கடுகடுவென்று இருந்தது.
அவருக்குப் பயந்தே சமயலறையில் இருக்கும் கண்ணகியும், அமுதசுரபியும் வேகமாக வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
வேலப்பன், காளியம்மாள் தம்பதிகளுக்கு ஒரே மகன் பழனிவேல். இவர் மனைவி கண்ணகி. பழனிவேல், கண்ணகிக்கு இரண்டு பிள்ளைகள் அமுதசுரபி, குமரவேல். அமுதா பன்னிரண்டாம் வகுப்பும், குமரன் ஒன்பதாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
அந்த வீட்டில் பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்பது எழுதப்படாத சட்டம். இதனால் அமுதா பெண் என்பதாலேயே ஒரு வேலைக்காரி போல தான் நடத்தப்பட்டாள். அதிகாலையில் எழுந்து வீட்டு வேலை, சமையல் வேலையில் உதவி செய்துவிட்டு ஆண்கள் சாப்பிட்ட பின்பு தான், அவள் பள்ளிக்கு கிளம்பி செல்ல முடியும்.
மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் அவளுக்கு இதில் இருந்து ஓய்வு கிடைக்கும். அந்த நாட்களில் தட்டுமுட்டு சாமான்கள் கிடக்கும் அறையில் தான் அவள் தங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் அங்கு அவளுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் பழனிவேல். மாடியில் ஒரு அறையில் பழனிவேல், கண்ணகியும், மற்றொரு அறையில் குமரவேலும் இருந்தனர். மாடியில் இருக்கும் பல அறைகள் பூட்டி தான் கிடந்தது. விருந்தினர் யாராவது வந்தால் கூட கீழே இருக்கும் விருந்தினர் அறைகளில் தான் தங்கிக் கொள்வார்கள்.
வேலப்பன், காளியம்மாள் வயது மூப்பின் காரணமாக கீழே இருக்கும் அறைகளில் ஒன்றில் தங்கியிருந்தனர். அமுதாவுக்கு காளியம்மாள் அறைக்கு அருகில் இருக்கும் ஒரு அறை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் குமரவேலின் அறைக்கும் அமுதாவின் அறைக்கும் இருக்கும் வேறுபாடுகள் அதிகம்.
குமரவேலின் அறையில் நவீன வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. அமுதாவின் அறையிலோ அடிப்படை வசதிகள் கூட கிடையாது. இருந்தும் அதைப் பற்றிக் கூட அவள் கவலைப் படுவது இல்லை. ஆனால் காரணமே இல்லாமல் கூட காளியம்மாள் அவளை அடிப்பார், மோசமான வார்த்தைகளால் மனதை காயப் படுத்துவார். அதை அவள் அன்னையோ, தந்தையோ கூட தடுக்க மாட்டார்கள். அது தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.
எப்போது இந்த நரகத்தில் இருந்து செல்வோம் என்பது தான் அமுதாவின் தினசரி வேண்டுதலாகவே இருக்கிறது. இதில் அவள் வருங்காலக் கணவனும் ஆணாதிக்க சிந்தனை உள்ளவன் என்பதை அவள் அறிந்தால்?
பழனிவேல் வந்து உணவு மேசையில் அமரவும், அமுதா சமையலறைக்கு சென்று கண்ணகியிடம் தெரிவித்தாள். கண்ணகி கணவருக்கு பரிமாற சென்றார்.
அமுதா ஹாலில் அமர்ந்திருக்கும் பாட்டியிடமும், அறையில் இருக்கும் தாத்தாவிடமும் சென்று கூறி சாப்பிட அழைத்து வந்தாள். குமரன் இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருப்பான்.
உணவு பாதி சாப்பிட்டு முடித்த நேரம் காளியம்மாள் தொடங்கினார்.
“நேத்து மீனாட்சி போன் போட்டா பழனி” என்றார்.
பழனிவேல் “மூக்கன் என்ன சொன்னான்?” என்றார்.
கண்ணகிக்கு இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. வேலப்பனுக்கு புரிந்தாலும் இவர்களின் பேச்சு அவருக்கு பிடிக்கவில்லை. அவர் பழமைவாதியாக இருந்தாலும், பள்ளிப்படிப்பை முடிக்காத பேத்திக்கு திருமணம் என்பது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே மனைவி,மகன் பேச்சை கண்டு கொள்ளாமல் இருந்தார்.
“அவன் சரின்னு சொல்லிட்டானாம். இனி நாம சொல்லுறது தான். பொட்டைக் கழுதை குத்த வச்சி அஞ்சு வருசம் ஆச்சு. இதுக்கு மேல அவளை வீட்டுல வச்சிருந்தா நம்மள வக்கத்தவங்கன்னு இந்த ஊரே பேசும். அதனால வெரசா அவளை கல்யாணம் முடிச்சி அனுப்பி வச்சிரணும்” என்று குருட்டு நியாயம் பேசினார் அவர்.
கண்ணகி இது என்ன புது பூகம்பம் என்று திகைத்தார்.
அமுதசுரபி அப்போது தான் உணவு மேசைக்கு தண்ணீர் கொண்டு வந்தவள், தந்தை மற்றும் பாட்டியின் பேச்சை கேட்டவள், அதிர்ச்சியில் கையிலிருந்த சொம்பை கைதவறி விட்டு விட்டாள். தண்ணீர் சிதறி அந்த தரை முழுக்க ஈரமானது.
அந்த சத்தத்தில் கோபத்துடன் இவள் புறம் திரும்பினார் காளியம்மாள்.
தண்ணீர் சொம்பு கீழே விழுந்த சத்தத்தில் அங்கிருந்த நால்வருமே அமுதசுரபியை திரும்பிப் பார்த்தனர். வேலப்பனும், கண்ணகியும் அவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர். பழனிவேல், காளியம்மாள் இருவரும் கொலை வெறியுடன் பார்த்தனர்.
காளியம்மாள் “நல்ல காரியத்தைப் பத்தி பேசும் போது, நிறைஞ்ச சொம்பை கீழே போடுவியா அறிவு கெட்டவளே” என்றவர் அடுத்த நொடி எழுந்த வேகத்தில், சாப்பிட்ட கையாலேயே அவள் கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருந்தார்.
வேலப்பன் “காளி, பிள்ளை தெரியாம பண்ணியிருப்பா. முதல்ல உன்னோட கோபத்தை குறை” என்றார்.
கண்ணகி அழுதாரே தவிர, மகளின் அருகில் கூட செல்லவில்லை. அவர் சென்று தடுத்தால், அதற்காகவே காளியம்மாள் மேலும் மேலும் அடிக்கவும் பேசவும் செய்வார்.
பழனிவேல் இன்னும் இரண்டு அறை கொடுத்தால் நல்லது என்பது போல் பார்த்துவிட்டு, சாப்பாட்டில் கவனம் போல் இருந்து கொண்டார்.
“இன்னைக்கு முழுக்க உன்னை நான் பாக்கவே கூடாது. இவளுக்கு இன்னைக்கு அன்னம், ஆகாரம் எதுவும் கொடுக்க கூடாது” என்று பேத்தியிடம் தொடங்கி, மருமகளிடம் முடித்தார்.
அமுதா அதற்கு மேல் அங்கே நிற்காமல் தன் அறைக்கு சென்று விட்டாள். அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இருந்தும் பள்ளிக்கு கிளம்பினாள் அவள். அவளுடைய ஒரே நம்பிக்கையே கல்வி தான். அதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தான் அவள் உயிர் வாழ்வதே.
நன்றாகப் படித்து பெரிய வேலைக்கு சென்று விட வேண்டும். அப்போது யாரும் தன்னை அடிமை போல நடத்த முடியாது என்பது அவள் எண்ணம்.
இங்கே பழனிவேல், காளியம்மாள் இருவரும் அமுதாவின் திருமணத்தை விரைவாக நடத்துவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கண்ணகி என்ன செய்வது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். வேலப்பன் கண்களால் மருமகளுக்கு ஆறுதல் அளித்தவர் வயலுக்கு சென்று விட்டார்.
அமுதாவின் பள்ளி இவர்களின் ஊருக்கு அடுத்த ஊரில் தான் இருந்தது. பதினோராம் வகுப்பில் அரசாங்கம் கொடுத்த மிதிவண்டியில் தான் அவள் இப்போது பள்ளிக்கு செல்கிறாள். சைக்கிளில் செல்லும் வழியெல்லாம் அவளுக்கு யோசனை தான்.
அவன் எப்படி சம்மதம் சொன்னான்? முதலில் திருமணம் என்பதே அவளுக்கு பிடிக்கவில்லை. அதிலும் மூக்கேஸ்வரன் அவளுக்கு ஜென்ம எதிரியாகிற்றே. போயும் போயும் அவனா அவளுக்கு கணவன்?
யோசித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தவள் முன் சட்டென்று யாரோ வந்து நிற்கவும், அனிச்சையாக கைகள் பிரேக்கை அழுத்த, தடுமாறி கீழே விழுந்தாள் அமுதா.
அவள் முன் எள்ளல் பார்வையுடன் நின்று கொண்டிருந்தான் மூக்கேஸ்வரன். சுள்ளென்று கோபம் வந்தது அவளுக்கு. தானும் எழுந்து, கீழே கிடந்த சைக்கிளையும் தூக்கி நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டு அவனை முறைத்தாள்.
“என்னடா திமிரா?” என்றாள் கோபமாக.
“எனக்கு திமிர் இருக்குன்னு தான் உனக்கு எப்பவோ தெரியுமே. ஆனா உனக்கு தான் இப்ப எல்லாம் கண்ணு சரியா தெரிய மாட்டிக்குது போல? இவ்வளவு பெரிய உருவமா உன் எதிர்ல நான் நிக்கிறேன். நீ பாட்டுக்கு நிக்காம வர்ற?” என்று சிரித்தான்.
“ரோட்டு ஓரமா நிக்கிறவன் திடீர்ன்னு குறுக்கால வருவேன்னு நான் என்ன ஜோசியமா பார்த்தேன்? ரோட்டுல ஒழுங்கா நடக்க தெரியாத உனக்கு எல்லாம், இந்த வாய் ரொம்ப அதிகம்டா” என்று அவளும் சிரித்தாள்.
“ஏய், மரியாதையா பேசு. ‘டா’ போட்டு பேசுன, அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது” என்று மிரட்டினான்.
அவளுக்கும் உள்ளுக்குள் சற்று நடுக்கம் தான். அவர்கள் நின்றது வயல்களுக்கு இடையில் இருந்த சாலை. அந்த நேரத்தில் வயலிலோ, சாலையிலோ ஆட்களே இல்லை. அதிலும் இப்போது திருமணம் என்ற சொல்லே அவளுடைய தைரியத்தை சிறிது ஆட்டம் காண வைத்திருந்தது. அதிலும் அவனுடன் தனிமையில் இருக்கும் போது, மனம் பலவீனப் பட்டிருந்த அந்த சூழ்நிலையில் அவளுக்கு அவனிடம் சரிக்கு சரி பேச முடியவில்லை.
“எனக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுது. இப்ப எதுக்கு என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க? என்ன பிரச்சினை உனக்கு?” என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு.
அவனும் திருமணம் என்றதில் இருந்து குழப்பத்தில் தான் இருந்தான். எனவே அவளுடைய பயத்தை அவன் கவனிக்கவில்லை.
“கல்யாணமா? பெரியவங்கன்னு இருந்தா ஆகாத போகாத யோசனை எல்லாம் பண்ண தான் செய்வாங்க. அதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத. இந்த கல்யாணம் நடக்காது” என்றாள் அவள், அவனுக்கு தைரியம் அளிப்பது போல.
“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுற?”
“நான் மேஜர் கூட இன்னும் ஆகல. அப்புறம் எப்படி மேரேஜ் செய்ய முடியும்? அதோட மேஜர் ஆனாலும் சட்டப்படி விருப்பம் இல்லாம கல்யாணம் செய்ய முடியாது”
அவன் தாடையைத் தடவியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குமே அவளை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை தான். ஆனால் அவன் அன்னை அரைநாள் சாப்பிடாமல் இருந்ததும், திருமணத்திற்கு சம்மதம் என்று விட்டான். ஒரு ஆணான அவனே அப்படி இருக்கையில், அவள் ஒரு பெண், அவள் இப்படி உறுதியாக மறுப்பது அவனுடைய அகங்காரத்தை கிளறி விட்டுக் கொண்டிருந்தது.
அவள் அந்த நக்கலை கவனிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இருக்காது என்று உறுதியாக நம்பினாள் அவள். எனவே அவனும் தன்னைப் போல் திருமணத்தை நிறுத்த உதவி செய்வான் என்று நம்பியே அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“அப்படி உறுதியா சொல்ல முடியாது. என்னோட கிளாஸ்லயே சில பேருக்கு அதுக்குள்ள கல்யாணம் ஆகியிருக்கு. ஆனா அது போலிஸுக்கு தெரியாம நடந்த கல்யாணமா இருக்கும். போலீஸ்ல சொல்லிட்டா அவங்களே நிப்பட்டிருவாங்க” என்று உற்சாகமாக கூறினாள்.
“அப்படின்னா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” என்றான் மூக்கன்.
“என்ன ஈசு இப்படி கேக்குற? எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல. உனக்கும் தானே விருப்பம் இல்ல? என்னை மட்டும் ஏன் கேக்குற?” என்றாள் அமுதா.
ஊரார் அனைவரும் அவனை மூக்கன் என்று அழைத்தாலும், அவளுக்கு அவன் ஈஸ்வர் தான். அதை சுருக்கி ஈசு என்று தான் அழைப்பாள். சிறு வயதில் ஓரளவு நன்றாக தான் இருவரும் பழகினார்கள். மூக்கன் அவளை விட ஏழு வயது பெரியவன்.
விவரம் புரிய ஆரம்பித்த போது நடந்த ஒரு சம்பவத்தில் இருவரும் எதிரிகளாக மாறிப் போனார்கள். அப்போதும் தன் அழைப்பை அவள் மாற்றிக் கொள்ளவில்லை.
“எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான் அம்மு” என்றான் அவன் நக்கலாக.
“என்ன?” என்று திகைத்தாள் அவள்.
“ஆமா, என் அம்மாகிட்ட நான் சம்மதம் சொல்லிட்டேன். சொன்ன வார்த்தையை மாத்திக்கிற பழக்கம் எனக்கு இல்ல. உனக்கு வேணும்னா நீ நிப்பாட்டிக்கோ. அதுவும் என்னை மீறி, உன்னால முடிஞ்சா நிறுத்திக்கோ” என்றான் நிமிர்ந்து நின்று, மீசையை முறுக்கிக் கொண்டு.
“டேய்” என்று கத்தினாள் அவள். “இத்தனை நாள் நாம போட்ட சண்டையை மனசுல வச்சி இதுல என்னை பழி வாங்க நினைக்கிறியோ? அது நிச்சயம் நடக்காது. நான் நிச்சயம் நல்லா படிச்சி, வேலைக்கு போவேன். அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணுவேன். அதுவும் பொண்ணை பொண்ணா மதிக்கிறவனை தான் பண்ணுவேன். அது நிச்சயமா நீ இல்ல” என்றவள் சைக்கிளில் ஏறி மிதிக்க தொடங்கினாள்.
அவனை தாண்டி சென்ற சைக்கிளின் ஹேன்பரை பிடித்து நிறுத்தினான் அவன். அவள் அசையாமல் பயமின்றி அவனை முறைத்தாள்.
“நான் பொண்ணை, பொண்ணா மதிக்க மாட்டேன் தான். அதுவும் உன்னை மனுஷியா கூட மதிக்க மாட்டேன். ஆனா உன்னை தான் கல்யாணம் செஞ்சிப்பேன். உன்னால முடிஞ்சதை பண்ணுடி. போ” என்றவன் சைக்கிளை விட்டு விட்டு திரும்பிப் பாராமல் நடந்து விட்டான்.
அவளுக்கு ஆத்திரமும், அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. அந்த ஆத்திரம் தந்த வேகத்துடன் சைக்கிளை மிதித்தாள். பள்ளிக்கு சென்று முதல் பாடவேளை முழுவதுமே இந்த யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தாள் அமுதா.
அடுத்த பாடவேளை விளையாட்டு பாடவேளை. எனவே தோழிகளுடன் ஓடி ஆடி விளையாடியதில் அவள் மனம் சற்று சமன்பட்டது. எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியமும் வந்தது.
அமுதா மனதளவில் தைரியம் மிகுந்த பெண் தான். ஆனால் வீட்டில் அவளை அடிமையாக நடத்தி, அவளுடைய இயல்பையே வெளிப்படுத்த விடாமல் வைத்திருந்தனர். ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவள் பேச்சு, தோரணை, உடல்மொழி அனைத்தும் வேறாக தான் இருக்கும்.
பள்ளியில் கூட முதல் மதிப்பெண் எடுப்பது அவள் தான். பேச்சு, விளையாட்டு, நடனம் அனைத்திலும் அவள் சிறந்து விளங்கினாள். என்ன ஒன்று இது அனைத்தும் அன்னையை தவிர, வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வாள்.
ஹரிப்ரியா அன்று மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அவளுக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. ரகுவீர் சொன்ன யோசனை அவளைப் பொறுத்தவரை நன்மை தான். ஆனால் அதில் ஏதும் உள்குத்து இருந்தால்?
இந்த நாடே அவளுக்கு முற்றிலும் புதிய இடம். எப்படி அவனை நம்பி அவனிடம் வேலை செய்வது? அதுவும் அவன் வீட்டில் தங்கி?
துபாய் தான் அவளுடைய சொந்த நகரம். அங்கே தான் அவள் இத்தனை வருடங்கள் அன்னையுடன் வசித்து வந்திருக்கிறாள். அவள் தாய் ஷெர்லின் அங்கே ஒரு மருத்துவமனையில் தலைமை செவிலியராக இருக்கிறார். அவளை அவர் நன்றாகவே ஒரு குறை இல்லாமல் வளர்த்திருக்கிறார்.
அவளுடைய எதிர் காலத்திற்கு என்று அவர் சேர்த்து வைத்திருக்கும் பணமே, அவளைப் பொறுத்தவரை அதிகம் தான். ஷெர்லின் ஒரு சிறந்த உழைப்பாளி, சிறந்த தாய். அவள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் அவர்.
அவருக்கு அவளை இங்கிலாந்து அனுப்பவே விருப்பமில்லை. ஹரி தான் தன்னுடைய பிடிவாதத்தால் இங்கே வந்திருக்கிறாள். அவர் பிடிவாதமாக மறுக்கவும், ஒரு கட்டத்தில், தன் செலவை தானே பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டாள் ஹரி.
சொன்னது போல், முதலில் கல்லூரி சேர்க்கையில் கட்ட வேண்டிய முதல் தொகை மற்றும் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, அன்னையிடம் பணத்தை வாங்கினாள். அதன்பின் இந்த ஆறு மாதங்களும் அவளே பகுதி நேர வேலையில் பணம் ஈட்டி, தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.
ஷெர்லின் பணம் அனுப்பி விடவா என்று கேட்டாலும் மறுத்து விட்டிருந்தாள் ஹரி. ஆனால் இப்போது அன்னையிடம் பணம் கேட்டால், அவர் மகளுக்கு என்னவோ என்று நிச்சயம் பயப்படுவார். அடுத்தது இங்கே அவளுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவளை திரும்ப கூப்பிடுவார்.
இதை எல்லாம் தவிர்க்க நினைத்தவள், ரகுவீருடன் அவளுக்கு ஏற்பட்ட பிரச்சினையை மறைத்து விட்டிருந்தாள். யோசிக்க யோசிக்க அவன் யோசனையை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டாள் ஹரி.
அப்படி அவளுக்கு அவன் வீட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், காவல் துறை உதவியை நாடலாம் என்று முடிவு செய்து கொண்டாள். அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவே. எனவே ஒரு முடிவுடன் ரகுவீருக்கு போன் செய்தவள், அவன் வீட்டிற்கு வேலைக்கு வர சம்மதம் என்று கூறி விட்டாள்.
ரகுவீர் தோஷி அனுப்பியிருந்த முகவரிக்கு எளிதாகவே வந்து சேர்ந்து விட்டாள் ஹரிப்ரியா. நுழைவாயிலில் இருந்த காவலாளியிடம் அவளுடைய மொபைலுக்கு அவன் அனுப்பியிருந்த அனுமதி கடிதத்தை காண்பித்தாள். அவர் அவளை உள்ளே அனுமதித்தார்.
பல ஏக்கர் பரப்பளவில் அமைத்திருந்தது அந்த பங்களா. அதன் தோற்றம் இங்கிலாந்தின் பாரம்பரிய கட்டிடக்கலையை பறைசாற்றுவது போல் இருந்தது. முழுக்க வெள்ளை நிறத்தில் இருந்தது அந்த கட்டிடம். நுழைவாயிலுக்கும் கட்டிடத்திற்கும் அரை கிலோமீட்டர் தூரம் இருந்தது. அந்த இடம் முழுமையுமே மலர்களாலும், செடிகள், மரங்களாலும் சூழப்பட்டிருந்தது.
பார்க்க இரு கண்கள் போதவில்லை ஹரிக்கு. பக்கவாட்டிலும், பின்னாலும் நிறைய இடங்களும், ஆங்காங்கு சில கட்டிடங்களும் தென்பட்டது. ஒரு வழியாக கட்டிடத்தை அடைந்தவள் உள்ளே சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் மிகப் பெரிய வரவேற்பறை ஒன்று இருந்தது. அங்கே மனிதர்கள் யாரும் இல்லை. அதைத் தாண்டி ஹாலுக்குள் பிரவேசித்தாள். ஆங்காங்கு சில வேலையாட்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவளைக் கண்டதும் ஒரு மத்திம வயது பெண்மணி இவளிடம் வந்தார். அவர் இங்கிலாந்து பெண் என்பது பார்த்த உடன் புரிந்தது.
“யார் நீ? எதற்காக வந்திருக்கிறாய்?” என்று விசாரித்தார்.
ஹரி தான் வந்த விசயத்தை கூறினாள். அவர் அவளை காத்திருக்குமாறு கூறி ஒரு அறைக்குள் அனுப்பி வைத்தார். அவள் காத்திருக்க ஆரம்பித்து அரைமணி நேரம் கழிந்த பின்பே ரகுவீர் அங்கு வந்தான்.
“ஹாய் பிரியா” என்றான் இயல்பாக.
“ஹாய் சார், எல்லாரும் என்னை ஹரின்னு தான் கூப்பிடுவாங்க” என்றாள். மறைமுகமாக நீயும் அப்படியே கூப்பிடு என்பது போல் கூறினாள்.
“நோ, பிரியா இஸ் கம்பர்டபிள் பார் மீ”
ஹரி மனதுக்குள் கடுத்தவள் வெளியில் லேசாக இளித்து வைத்தாள். அவள் முகத்தைக் கண்டு அவள் மனதில் நினைப்பது புரிந்து அவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஓகே, உன்னோட லக்கேஜ் எல்லாம் எங்க?” என்று விசாரித்தான்.
“அது இன்னும் எதுவும் பேக் பண்ணல. ரெண்டு நாள் வேலைக்கு வந்துட்டு, திரும்ப ஹாஸ்டல் போறேன். அதுக்கு அப்புறம் எடுத்துட்டு வர்றேன்”
“ஒன்னும் பிரச்சினை இல்ல. பேக்கர்ஸுக்கு நானே அரேன்ஜ் பண்ணுறேன். இன்னைக்கே ஷிஃப்ட் பண்ணிரலாம்”
“அதெல்லாம் வேண்டாம் சார்” என்றாள் அவள் அவசரமாக.
“ஏன்?” என்றான் அவன் கூர்மையாக.
அவள் பதில் சொல்ல தடுமாறினாள்.
ஆனால் அவனுக்கு அவள் எண்ணம் புரிந்து விட்டது. இரண்டு நாள் வேலை பார்த்து, இங்கே அவளுக்கு பிடிக்காவிட்டால் வேலைக்கு வர மாட்டேன் என்று விடலாம் என்று, அவள் நினைப்பது புரிந்து விட்டது அவனுக்கு. அவன் முகம் கடுத்தது.
அங்கே இருந்த ஒரு அலமாரியை திறந்து, அதில் இருந்து ஒரு சில காகிதங்களை எடுத்து அவள் முன் போட்டான்.
“டேக் இட்” என்றான் அழுத்தமாக.
அவ்வளவு நேரம் இலகுவாக இருந்தவன் திடீரென கோபம் கொண்டது ஹரிக்கு வருத்தமாக இருந்தது. இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல் அந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தாள்.
அது ஒரு வேலைக்கான ஒப்பந்தம். ஹரி அதை நிதானமாக வாசித்தாள். அவன் அவள் வாசித்து முடிக்கும் வரை, அமைதியாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டே எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்.
அதில் இருந்தது இது தான். அடுத்த ஒரு வருடத்திற்கு அவள் அந்த வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும். அவள் படிக்கும் நேரம், கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்கள் அவளுக்கான வேலை நேரம். அவன் கூறும் அனைத்து விதமான வீட்டு வேலைகளை செய்யவும் அவள் கடமைப்பட்டவள். வாரத்திற்கு அரைநாள் மட்டும் அவளுக்கு விடுப்பு வழங்கப்படும். அதற்கு மேல் அவள் எடுக்கும் விடுமுறைகளுக்கு இரண்டு மடங்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். அவள் இடையில் வேலையை விட்டு செல்ல நினைக்கும் பட்சத்தில், அவளுக்கு அவன் கொடுக்கும் சம்பளத் தொகையில், மூன்று மாத சம்பளம் அபராதமாக செலுத்த வேண்டும்.
அவன் எந்த நேரம் எந்த வேலை சொன்னாலும் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. மற்ற எல்லாம் கூட ஒத்துக் கொண்டவளால், அந்த ஒரு வாக்கியத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“சார், இது என்ன சார் வார்த்தை? எந்த நேரம் என்ன வேலை சொன்னாலும் செய்யணும்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கிங்க. அதுதான் படிக்கும் நேரம், காலேஜ் நேரம் தவிர வேலை செய்யணும்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கீங்களே?” என்றாள் ஹரி சற்று கோபத்துடன்.
“எதையும் தெளிவா சொல்லுறது நல்லது தானே?” என்றான் அவன் இடக்காக.
ஆனால் அவளுக்கு தான் வேறு வழியும் இல்லையே. அதில் தவறான அர்த்தம் கொள்ளுமாறு ஒரு வார்த்தையும் இல்லாததில் தன்னையே தேற்றிக் கொண்டு, கையெழுத்து போட்டு விட்டாள் ஹரி. அவன் இதழோரம் ஒரு மர்மப் புன்னகை ஒன்று உதயமானது.
அந்த ஒப்பந்தத்தை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான் அவன்.
“என்னோட வா” என்றவாறு வெளியில் சென்றான்.
அவளும் பின்னேயே செல்ல, அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். முதலில் அவளை வரவேற்ற பெண்மணியை அழைத்தான்.
“இவங்க பெயர் டெய்சி. இந்த வீட்டோட சீஃப் சூப்பர்வைசர். இன்னைக்கு முழுக்க இவங்களோடவே இரு. ஈவினிங் உன்னோட ஹாஸ்டலுக்கு போய் லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வந்துரு. பேக்கர்ஸுக்கு அரேன்ஜ் பண்ண சொல்லுறேன்” என்று ஹரியிடம் கூறினான்.
பின் டெய்சியிடம் “இவள் பெயர் ஹரி. என்னோட பெர்சனல் அசிஸ்டன்ட்” என்று அறிமுகம் செய்தான்.
டெய்சி திகைப்புடன் ஏதோ கூற வரவும், பார்வையால் அவரை அடக்கி விட்டான் அவன். அவரும் அதன்பின் ஒன்றும் கூற முயலவில்லை.
“இன்னைக்கு ஒரு நாள் இந்த வீட்டுல எந்த இடத்துல என்ன இருக்கு, இந்த வீட்டோட பழக்கவழக்கம், என்னோட டெய்லி ரொட்டீன் எல்லாம் சொல்லி கொடுங்க. நாளைக்கு என்னோட வேலை எல்லாம் இவங்க தான் பார்க்கணும்” என்று அவரிடம் கூறிவிட்டு சென்று விட்டான்.
ரகுவீரின் பெர்சனல் அசிஸ்டன்ட் என்ற பதவியில், இதற்கு முன் இருந்தவன் ஒரு இந்தியன். அவன் பெயர் அஜய் கிருஷ்ணா. சென்ற வாரத்தில் அவன் ஒரு அவசர வேலையாக விடுமுறையில் இந்தியா சென்றிருக்கிறான். ஆனால் அடுத்த வாரம் அவன் வருவதற்குள், புதிய பணியாளை நியமிக்கும் முதலாளியின் செயல், டெய்சிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இருந்தும் ரகுவீரின் கண்களின் அசைவில் அவர் அமைதியாகி விட்டார்.
அன்றைய நாள் முழுக்க ஹரிப்ரியா அவருடனே இருந்தாள். அந்த வீடு என்பது அந்த ஒரு கட்டிடம் மட்டும் இல்லை. அந்த காம்பவுண்ட் சுவர் பல ஏக்கர் இடத்தை வளைத்து கட்டப்பட்டிருந்தது. அங்கே இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக இருந்தது.
பணியாளர்களுக்கான தனி வீடுகளும் அந்த வளாகத்திற்குள் இருந்தது. பல தொழிலாளர்கள் அங்கே தான் தங்கள் குடும்பத்துடன் தங்கி இருந்தார்கள். அங்கே இருந்த பணியாளர்களில் பல நாட்டவர்களும் இருந்தனர். ஆனல் இந்தியர்கள் இல்லை.
அதைப்போல் அந்த வீட்டில் ரகுவீரின் பெற்றோர்கள், மற்ற உறவுகள் என்று யாரும் இல்லை. அவன் மட்டுமே அவ்வளவு பெரிய இடத்தில தங்கி இருந்தான். அவன் ஒருவனுக்கு இத்தனை பெரிய இடமும், இத்தனை பணியாளர்களும் தேவையா என்றும் அவளுக்கு குழப்பமாக இருந்தது. இப்படி பல விசித்திரங்களை உள்ளடக்கி இருந்தது ரகுவீரின் வீடு.
அமுதா அன்று பள்ளி முடிந்து சோர்வுடன் வீட்டுக்கு வந்தாள். காளியம்மாள் கூறியதால், கண்ணகி அன்று அவளுக்கு உணவு கொடுத்துவிடவில்லை. இருந்தும் அவள் தோழிகள் தங்கள் உணவில் பங்கு கொடுத்து, அவளை சாப்பிட வைத்திருந்தனர்.
இது தெரியாத காளியம்மாள், அவள் சோர்வை கண்டு தனக்குள் மகிழ்ந்தார். அமுதா அவரை பார்த்து விட்டு, தலையை குனிந்து கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள். ஹாலில் இருந்து முதல் அறை அவளுடையது தான். எனவே ஹாலில் இருந்து என்ன பேசினாலும் அவளுக்கு கேட்கும்.
அப்போது பழனிவேல் அன்னையிடம் வந்து அமர்ந்தார்.
காளியம்மாள் “என்ன பழனி, என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று விசாரித்தார்.
பழனிவேல் “உங்க முடிவு தான்மா என்னோட முடிவு. நீங்க என்ன சொன்னாலும் சரி தான்” என்றார்.
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே உடையை மாற்றத் தொடங்கினாள் அமுதா. அவள் பள்ளிக்கு மட்டுமே சீருடையாக சுடிதார் அணிய அனுமதிக்கப் பட்டிருந்தாள். மற்ற நேரங்களில் தாவணி தான் அணிய வேண்டும் என்பது அங்கே விதி. வெளியில் அவர்களின் குரல் மீண்டும் கேட்டது.
“என்னைக் கேட்டா, இந்த வார கடைசில பூ வச்சிட்டு, மாசம் பிறக்க கல்யாணத்தை முடிச்சிரணும். நாள் கணக்கு பார்த்தா இன்னும் சரியா இருபது நாள்ல வச்சிரலாம்” என்றார் காளியம்மாள்.
கையில் எடுத்த தாவணியை நழுவ விட்டு அசையாமல் நின்றாள் அமுதா. ஐயோ ஐயோ என்று அவள் மனம் அலறியது. வேறு ஒன்றுமே தோன்றவில்லை அவளுக்கு.
“அவ்வளவு வெரசா வச்சா என்ன வேலை பார்க்க முடியும்?” என்றார் பழனிவேல் சலிப்பாக.
“அட, பொட்டைக் கழுதை கல்யாணத்தை என்ன சீமை சிறக்கவா செய்ய முடியும்? நம்ம வாரிசு யாரு? என் சாமி குமரன் தானே. அவன் கல்யாணத்தை தான் ஊர் மெச்ச செய்யணும்”
“அது சரி தான்மா. அப்படி பார்த்தா மூக்கன் அவனோட வீட்டுக்கு ஒரே பையன். மீனாட்சி அக்காவுக்கு அவங்க பையன் கல்யாணத்தை ஊர் மெச்ச செய்யணும்ன்னு ஆசை இருக்காதா?” என்றார் பழனிவேல் யோசனையாக.
“அதெல்லாம் மூக்கன் நினைச்சா, ஒரு வாரத்துல கூட உலகத்தையே கூட்டி கல்யாணத்தை முடிப்பான். அவன்கிட்ட தான் நம்மள விட கொட்டிக் கிடக்குதே, சொத்தும் செல்வாக்கும்” என்றார் சட்டென்று தோன்றி விட்ட பொறாமையுடன்.
பழனிவேலுக்கும் மூக்கனின் மீது பொறாமை தான். இருந்தும் இருவரும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள்.
“அதெல்லாம் செய்வான். சரிம்மா. நீ அக்காகிட்ட பேசிட்டு சொல்லு. அதுக்கு சரின்னா நமக்கும் பிரச்சினை இல்ல. அது தான் நகை எல்லாம் ஏற்கனவே வாங்கி வச்சது இருக்கே. அதோட சீர் எல்லாம் வாங்கணும், கல்யாண ஏற்பாடு பார்க்கணும், அவ்வளவு தான். நமக்கு சொந்தம் எல்லாம், சுத்தி இருக்குற நாலு ஊரு சனம் மட்டும் தான். அதனால சீக்கிரம் கல்யாணம் வச்சி அவளை அனுப்பி விட்டா கூட நமக்கு நிம்மதி தான்” என்றார் பழனிவேல்.
“சீக்கிரம் அனுப்பி வச்சிட்டு பேசாம இருக்கணும்டா. ஆனா பாரேன், உன் பொண்டாட்டி பிடிவாதத்தால நம்ம வீட்டு பணம், காசு எல்லாம் அடுத்த வீட்டுக்கு போக போகுது. பொட்டை பிள்ளை பிறந்ததும் கொல்ல விடாம வளர்த்து விட்டுட்டு, அது இப்ப நம்ம வீட்டு சொத்தை அடுத்தவன் வீட்டுக்கு எடுத்துட்டு போக போகுது” என்று கருவினார் காளியம்மாள்.
அப்போது குமரவேல் வீட்டுக்கு வந்தான். அவனை அந்த பகுதியில் இருக்கும் சிபிஎஸ்சி பள்ளியில் சேர்த்திருந்தனர். அவன் பள்ளிக்கு தினமும் பள்ளிப் பேருந்தில் தான் சென்று வருவான். அவன் பேருந்து ஊருக்கு வந்தாலும், குமரன் நேராக வீட்டுக்கு வர மாட்டான். நண்பர்களுடன் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாடி விட்டு, அதன்பிறகு தான் வருவான். பின் மாலை சிற்றுண்டியை முடித்து விட்டு, மீண்டும் வெளியில் சென்று விடுவான்.
அதன்பின் இரவு உணவுக்கு தான் அவனை பார்க்க முடியும். அவனை எங்கே போனாய் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
அவனைக் கண்டதும் காளியம்மாள் “குமரா, என் சாமி” என்று வாயெல்லாம் பல்லாக அழைத்தார்.
தந்தையும், பாட்டியும் கொடுக்கும் செல்லத்தால் குமரன் இப்போதே திமிரும், அகம்பாவமும் நிறைந்தவனாக இருந்தான். யாரையும் மதிக்க மாட்டான் அவன். அதிலும் தாயும், தமக்கையும் அவனுக்கு வேலைக்காரர்கள் போல தான்.
“என்ன அப்பத்தா” என்றான் குமரன் சலிப்பாக.
“டீ கொண்டு வர சொல்லவா? இங்க உட்காருயா” என்று தான் அமர்ந்திருக்கும் சோபாவை காட்டினார் அவர்.
“நோ அப்பத்தா, ஐ பீல் டயர்டு. ஐ வில் கோ டு மை ரூம் அண்ட் பிரெஷன் அப்” என்றவன் அவன் அறைக்கு சென்று விட்டான்.
அவன் பேசியது புரியாவிட்டாலும் காளியம்மாளும், பழனிவேலும் அவனின் ஆங்கில புலமையை புகழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களின் பேச்சால், உள்ளே ஒரு ஜீவன் துடித்துக் கொண்டிருப்பதை பற்றி இருவரும் கவலைப் படவில்லை. இத்தனைக்கும் அவர்களின் பேச்சு அமுதாவுக்கு கேட்கும் என்றும் அவர்களுக்கு தெரியும். ஆனால் அவளால் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியமே அவர்களை அப்படி பேச வைத்தது.
அறைக்குள் அமுதா மனதளவில் மிகவுமே உடைந்து போய் இருந்தாள். அவளுக்கு, அவர்கள் பிறந்த போதே தன்னை கொல்ல நினைத்தது தெரியாது. அப்படி என்றால் அவள் மீது தந்தைக்கும், பாட்டிக்கும் பாசமே இல்லையா? ஏன் மனிதப்பிறவி என்ற இரக்கம் கூட இல்லையா?
போயும் போயும் அவளை பாரமாக நினைக்கும் இவர்களுக்காக அவள் திருமணம் செய்து கொள்வதா? நிச்சயம் முடியாது. அதிலும் அந்த ஈஸ்வரன், அவனும் இவர்களைப் போல் தானே? அவனுக்கும் பெண் என்றால் இளக்காரம் தானே?
இருக்கட்டும், என்னை மீறி எப்படி எனக்கு திருமணம் செய்கிறார்கள் என்று நானும் பார்க்கிறேன் என்று, வைராக்கியமாக நினைத்துக் கொண்டாள் அமுதசுரபி.
ரோஸ் காட்டேஜ் பங்களாவில் காலை நேர பரபரப்புடன் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஹரிப்ரியா ரகுவீரின் உடைகள் இருக்கும் அறையில், அன்று அவன் அணிவதற்கான உடையை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தாள். டெய்சி அவளுக்கு உதவிக் கொண்டிருந்தார். முதல் நாளே அவளுடைய வேலை என்ன? எந்த நேரத்தில் ரகுவீர் எப்படி நடந்து கொள்வான் என்பது வரை, அவருக்கு தெரிந்த வரை சொல்லியிருந்தார். அவளும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் உடையை எடுத்துக் கொண்டு, அவன் அறைக்கு செல்லவும், டெய்சி கீழே சென்று விட்டார். அவள் ரகுவீரின் அறை முன்பு நின்று, கதவை ஒரு விரலால் லேசாக தட்டி விட்டு காத்திருந்தாள்.
அவன் குரல் வரலாம் என்று அனுமதி அளித்ததும், கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அவன் அங்கே இடையில் ஒரு டவல் மட்டுமே அணிந்து கொண்டு நின்றிருந்தான். ஒரு கணம் அவள் பார்வை தன்னை மீறி அவனுடைய வெற்று மார்பிலும், அவனுடைய சிக்ஸ் பேக் வயிற்றிலும் பதிந்தது. அவள் அதிர்ச்சியுடன் திரும்பி நின்று கொண்டாள். அவனுக்கு அவள் திரும்பியதற்கான காரணம் புரியவில்லை.
“ஏன் நீங்க இப்படி டிரஸ் இல்லாம நிக்குறீங்க?” என்றாள் அவள் கோபமாக.
“ஏன்? நின்னா என்ன?” என்றவனுக்கு அப்போது தான் அவள் செயலுக்கான கரணம் புரிந்தது.
அவள் கூச்சப் படுகிறாள் என்று புரிந்து அவனுக்கு சிரிப்பு வந்தது.
“குளிச்சிட்டு நான் போட வேண்டிய டிரஸ் உன்கிட்ட இருக்கு. இதுக்காக நான் இன்னொரு டிரஸ் போட்டுட்டு, அதுக்கு பிறகு நீ குடுக்கிற ட்ரெஸ்ஸை மாத்தணுமா? கிரேசி” என்றவன் அவள் கையிலிருந்த உடையை பிடுங்கிக் கொண்டான்.
அவளும் ஒன்றும் பேசாமல், அவன் உடைக்கு ஏற்றார் போல் கைக்கடிகாரம் தேர்ந்தெடுக்க தொடங்கினாள். அதன்பின் பள்ளிக்கு பிள்ளையை கிளப்புவது போல், அவனுக்கு அவள் உதவி செய்தாள். முதல் நாள் அவன் கொடுத்திருந்த, அட்டவணையில் இருந்த பொருட்கள் அனைத்தும், அவன் அலுவலக பையில் இருக்கிறதா என்று செக் செய்தாள். அவன் கிளம்பி முன்னே செல்ல, அவள் அவனுடைய அலுவலக பையை எடுத்துக் கொண்டு அவன் பின்னேயே சென்றாள்.
அட்டவணைப்படி அவனிடம் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறினாள். அவன் உண்ண ஆரம்பித்ததும், அவள் அங்கே ஹாலில் அலங்காரத்திற்காக இருந்த பெரிய கடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்க்கத் தொடங்கினாள். ஆம், அவளுக்கு கல்லூரிக்கு கிளம்ப நேரம் ஆகி விட்டதே.
அவனும் அவளை கவனித்தவன் “நீயும் சேர்ந்து சாப்பிடு பிரியா” என்றான்.
அவள் பிகுவெல்லாம் செய்யவில்லை. அவனுடனே அமர்ந்து உண்ணத் தொடங்கி விட்டாள். அங்கே இருந்த பணியாளர்கள் இரண்டு பேரின் விழிகள் தெறித்து விடும் போலானது. இந்த வீட்டில் இதுவரை எந்த ஒரு பணியாளும் அந்த மேசையில் அமர்ந்து உணவு அருந்தியது கிடையாது. பணியாளர்களுக்கான உணவுக் கூடம் தனியாக இருந்தது. அங்கே தான் அவர்கள் உண்ண வேண்டும். இது ரகுவீரின் குடும்பத்தினருக்கான பிரத்தியேகமான உணவறை.
இதை அறியாத ஹரி உணவில் கவனமாக இருந்தாள். இடையில் அவனுக்கும் வேண்டியதை கேட்டுக் கேட்டு பரிமாறினாள். ஆனால் ரகுவீருக்கு மற்றவர்களின் பார்வையும், அவர்களின் ஸ்தம்பித்த நிலையும் புரிந்தது. டெய்சியிடம் திரும்பி மற்றவர்களை சுட்டிக் காட்டினான். அதன் பின் மற்றவர்கள் யாரும் இந்தப் பக்கம் வராமல் அவர் பார்த்துக் கொண்டார்.
ரகுவீருக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. அவனுக்கு இப்போதைக்கு பிரியாவுடன் நேரம் செலவு செய்ய பிடிக்கிறது. அதற்கு மேல் அவன் எதையும் யோசிக்கவில்லை.
உணவு முடிந்து ரகுவீர் அவன் வேலைக்கும், ஹரி அவளின் கல்லூரிக்கும் கிளம்பினார்கள். ரகுவீரின் அலுவலகம் செல்லும் வழியில் தான் பிரியாவின் கல்லூரி இருப்பதால், அவளை இறக்கி விட்டுவிட்டு அவன் செல்வதாகக் கூறியிருந்தான். எனவே இருவரும் ஒன்றாகவே சென்றனர். காரில் டிரைவருக்கு அருகில் பிரியா அமர்ந்து கொண்டாள். பின் இருக்கையில் ரகுவீரும், அவன் அலுவலக உதவியாளரும் அமர்ந்து வந்தனர். அவர்கள் அலுவல் சம்பந்தமாக பேசிக் கொண்டே வந்ததால், ஹரி அமைதியாக புத்தகத்தை விரித்து வைத்து, அதில் ஆழ்ந்து போனாள்.
அன்று காலை அமுதசுரபி எழுந்த போதே, நேரம் ஆறை தாண்டி இருந்தது. அமுதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐந்து மணிக்கே அவளை எழுப்பி விட்டு விடுவார் கண்ணகி. இன்று எப்படி இவ்வளவு நேரம் தூங்க விட்டார்கள்?
யோசித்துக் கொண்டே வேகமாக பின் கட்டிற்கு சென்று, காலை வேலைகளை முடித்து விட்டு, சமையலறைக்கு சென்றாள். அங்கே கண்ணகி வேலையாள் ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு சமையலில் ஈடுபட்டிருந்தார்.
அமுதா வரும் அரவத்தில் திரும்பிய கண்ணகிக்கு, அவளை கண்டதும் கண்களில் நீர் முட்டியது. வேகமாக அங்கே ஒரு சட்டியில் வைத்திருந்த காபியை எடுத்து ஒரு சிறிய சொம்பில் ஊற்றி அவளிடம் கொடுத்தார்.
“இத குடி” என்று கொடுத்தவர், அங்கே இருந்த பலகாரங்கள் அடங்கிய ஒரு பெரிய சம்படத்தை திறந்து, சில முறுக்கு வகைகளையும் ஒரு தட்டில் வைத்து அவளுக்கு கொடுத்தார். முதல் நாள் முழுவதும் மகள் சாப்பிடாததால், காலையிலேயே மகளின் வயிற்றை நிறைக்க நினைத்தார் கண்ணகி.
அமுதாவும் அன்னையின் மனநிலையை புரிந்து கொண்டவள், அவர் கொடுத்த காபியையும், பலகாரத்தையும் வாங்கிக் கொண்டு, சமையலறையின் பின் வாயிலில் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.
கண்ணகி வேலையாளை வேறு வேலை சொல்லி அனுப்பியவர், மகளின் அருகில் அமர்ந்து அவள் தலையை கோதினார்.
“என்னம்மா?” என்றாள் அமுதா.
“அம்மாவை மன்னிச்சிரு கண்ணம்மா” என்றார் கண்ணகி கண்ணீருடன்.
“அம்மா, ஏன் இப்படி எல்லாம் பேசுற? இந்த வீட்டுலயே என்மேல பாசமா இருக்கிறதே, நீ மட்டும் தான். நீயும் ஏன் இப்படி பேசி என்னை கஷ்டப் படுத்துற?” என்றாள் சோகமாக.
“இல்ல கண்ணு. உங்க அப்பாகிட்ட இந்த கல்யாணம் வேணாம்னு பேசி பார்த்தேன். ஆனா அவர் கேக்கல. அம்மாவால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியல. ஆனா ஒரு விசயத்துல நான் உனக்காக கண்டிப்பா பேசுவேன் அம்மு. மீனாட்சி மதினி தங்கமானவங்க. அவங்க கிட்ட சொல்லி, நீ ஆசைப்படுற வரை உன்னை படிக்க வைக்க சொல்லுறேன். அவங்க நிச்சயம் சரின்னு சொல்லுவாங்க”
“அம்மா, அந்த வீட்டுல என்ன மீனாட்சி அத்தை மட்டுமா இருக்காங்க? அந்த ஈசுவும் அங்க தானே இருக்கான்? அவன் வேண்டாம்ன்னு சொன்னா அத்தையால என்ன செய்ய முடியும்? இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி, நீ அத்தைகிட்ட பேசு”
“அடி ஆத்தே, காரியத்தையே கெடுத்துட்ட போ. அவங்ககிட்ட இதை நான் சொன்னா, அப்படியே வந்து உங்க அப்பத்தாகிட்ட சொல்லிருவாங்க. அதுக்கு அப்புறம் நீயும் நானும் உயிரோட இந்த வீட்டுல நடமாட முடியுமா?”
“சரி விடு, நீ ஒன்னும் பேச வேணாம். நான் பார்த்துக்கிறேன்”
கண்ணகிக்கு பயம் பிடித்துக் கொண்டது.
“என்னடி பாக்க போற? நான் நேத்திக்கு உங்க அப்பாகிட்ட பேசி, எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்தேன். ஆனா அந்த ஆளு அவரோட அம்மா சொல்லுறத தவிர, எதையும் காதுல ஏத்திக்க மாட்டிக்காரு. நான் பேசிப் பேசி ரெண்டு அடி வாங்குனது தான் மிச்சம். நீயும் எக்கு தப்பா ஏதும் பண்ணிடாத அம்மு. நீ இந்த வீட்டுல இருக்குற ராட்சசங்ககிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுறத அம்மாவால பாக்க முடியாது”
“நீ கவலைப்படாதம்மா. எனக்கோ, உனக்கோ எந்த பிரச்சினையும் வராது. சரி, நேரம் ஆச்சு. நானும் ஸ்கூலுக்கு கிளம்பனும். வா சீக்கிரம் வேலையை முடிப்போம்” என்று எழ முயன்றாள் அமுதா.
கண்ணகி அவள் கையைப் பிடித்து மீண்டும் அமர வைத்தார்.
“அம்மு, அம்மா சொல்லுறத முழுசா கேளு. நாளன்னிக்கு உனக்கு பூ வைக்க போறாங்க. அதனால இன்னைக்கே உங்க அப்பத்தாவோட அக்கா, தங்கச்சி எல்லாம் வர போறாங்க. நீ இன்னும் கல்யாணம் முடியுற வரை ஸ்கூலுக்கு போக முடியாதுடி” என்று கூறி அமுதாவின் தலையில் பெரிய குண்டை தூக்கிப் போட்டார் அவர்.
அமுதாவின் திட்டமே அவள் பள்ளிக்குப் போனால் தான் நடக்கும். அவளுடைய வகுப்பில் மூன்று பெண்களுக்கு இதற்குள் திருமணம் முடிந்திருந்தது. ஆனால் அவர்களின் ஆசிரியை ஒருவர், யாருக்கு மைனர் திருமணம் முடிந்தாலும், முடிந்த அளவு தடுக்க முயல்வார். அந்தப் பெண்களின் மனதை மாற்ற வெகுவாக முயல்வார். இரண்டு பெண்கள் அவர்களே ஆசைப்பட்டு, வீட்டிலும் கூறியதால் சொந்தத்தில் திருமணம் முடித்துக் கொண்டனர். ஒரு பெண்ணுக்கு மட்டும் அது கட்டாய திருமணம். அந்த மாணவி ஆசிரியையிடம் கூறவும், அவர் நேராக காவல் துறை உதவியுடன் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று பேசிப் பார்த்தார்.
பள்ளியில் ஆசிரியையிடம் பிடிக்கவில்லை, கட்டாய திருமணம் என்று கூறிய மாணவி, வீட்டினர் அருகில் இருக்கும் பயத்தில், அவளுக்கு பிடித்து தான் திருமணம் என்று கூறி விட்டாள். அதுவும் பதினெட்டு வயது ஆன பிறகு தான் திருமணம் என்றும் கூறிவிட்டாள். காவல் துறையினருடன், அந்த ஆசிரியரும், அந்த மாணவி சொல்வது பொய் என்று தெரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பி வந்து விட்டனர். திருமணம் முடிந்து பள்ளிக்கு வந்த பெண்ணிடம், அந்த ஆசிரியை எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
மற்ற மாணவிகளிடம் மட்டும் நடந்ததை கூறி, போலீஸ் முன் அந்தப் பெண் உண்மையை கூறியிருந்தால், அந்தப் பெண்ணை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கும். அவள் நினைக்கும் வரை தானே படிக்க வைத்திருப்பேன் என்றும் மனவருத்தத்துடன் கூறினார். இதற்கு பிறகு யாருக்கும் விருப்பம் இல்லாமலோ, பதினெட்டு வயதுக்கு முன்போ திருமணம் என்று வீட்டில் கட்டாயப் படுத்தினால், தன்னிடம் கூறும்படி கூறியிருந்தார்.
இதை எல்லாம் நினைத்து தான், அமுதா முதல் நாள் அத்தனை தைரியமாக இருந்தாள். அவள் ஒரு நாள் பள்ளிக்கு சென்றாலும், ஆசிரியர் மூலம் காவல் துறை உதவியுடன் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் பள்ளிக்கே போகாவிட்டால், போலீசுக்கு எப்படி தன் நிலையை தெரிவிப்பது? அதிலும் அவள் வீட்டுக்கு, அவளுடைய தோழிகள் என்று யாரும் இதுவரை வந்தது கிடையாது. அப்படியே வந்தாலும் உள்ளே விட மாட்டார்கள். இப்போது யார் மூலம் ஆசிரியருக்கு தன் நிலையை தெரிவிப்பது?
கண்ணகியின் குரல் எங்கோ கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தது. பேசிக் கொண்டிருந்த கண்ணகி, அமுதாவின் அசையாத தன்மையில் லேசாக அவள் தோளை தொட்டு உலுக்கினார்.
“என்னம்மா?” என்றாள் அவள் திகைப்புடன்.
“நீ ஏன்டி இப்படி இருக்க? உன்னை பார்த்தாலே பயமா இருக்கு அம்மு. எல்லாம் நல்லதா நடக்கும். நீ எழுந்து இந்த காயை அரிஞ்சி கொடு” என்று அவளை நடப்புக்கு இழுத்தார் கண்ணகி.
அமுதா அதற்கு மேல் அன்னையிடம் எதுவும் கூறவில்லை. அவர் சொன்ன வேலைகளை இயந்திரம் போல் செய்யத் தொடங்கினாள். ஆனால் மனம் மட்டும் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும், என்ன செய்யலாம் என்ற சிந்தனையிலேயே இருந்தது.
காலை உணவு நேரத்தில் காளியம்மாள் “என்னடி இனி கல்யாணம் முடிஞ்சி தான், அதுவும் மூக்கன் சொன்னா தான் இஸ்கோலுக்கு போகணும். உன் ஆத்தா சொன்னாளா?” என்று அவளிடம் விசாரித்தார்.
அதுவும் அவன் சொன்னால் தானா? சலிப்புடன் நினைத்தவள் முகத்தில் எதையும் காட்டவில்லை.
“சொன்னாங்க அப்பத்தா” என்றாள் அமுதா.
பழனிவேலும், காளியம்மாளும் உண்டு முடித்து சென்ற பிறகு குமரவேல் கீழே வந்தான். அவன் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, கண்ணகி அவனுக்கு உணவு ஊட்டினார். அமுதா தம்பிக்கு சுட சுட சப்பாத்தி சுட்டு எடுத்து வந்தாள். காளியம்மாள் பேரனுக்கு நடக்கும் உபசரணைகளை கண்டு பூரித்த படி இருந்தார்.
அவன் பள்ளிக்கு சென்றதும், மீண்டும் வீட்டு வேலைகளில் மூழ்கினார்கள் அமுதாவும், கண்ணகியும். பழனிவேலும், வேலப்பனும் வெளி வேலைகளுக்கு சென்று விட்டனர். காளியம்மாள் மீனாட்சியை நேரில் பார்த்து பேசப் போவதாகக் கூறிவிட்டு சென்றிருந்தார்.
அமுதா “அது தான் மீனாட்சி அத்தையும், அப்பத்தாவும் தினமும் போன்ல பேசுறாங்க தானே? பிறகு நேர்ல பாத்து அப்படி என்னத்த பேசப் போறாங்க?” என்றாள் நக்கலாக.
கண்ணகி “சும்மா இரு அம்மு. தேவை இல்லாம எதுவும் பேசாத. நம்ம வீட்டுல வேலை செய்யுறவங்க கூட, நாம பேசுறத உன் அப்பத்தாகிட்ட சொல்லி கொடுத்துருவாங்க. பாத்து பேசு” என்றார் எச்சரிக்கையாக.
“சரிம்மா, ஆனாலும் நீ ரொம்ப பயப்படுற. என்னையும் அவங்களுக்கு பயப்படுற மாதிரியே வளர்த்து விட்டிருக்க” என்று சலித்தாள்.
“அம்மு, நீ கல்யாணம் முடிஞ்சி போன பிறகு நல்லா இருப்ப பாரேன். மூக்கன் கோபக்காரனா இருந்தாலும், உங்க அப்பா மாதிரி இல்லம்மா. அவன் நல்லவன் தான்”
“அதை கல்யாணம் முடிஞ்ச பிறகு பார்க்கலாம்மா” என்றாள் அவள் விட்டேற்றியாக.
“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கன்னு தெரியலடி. எதுவா இருந்தாலும் அந்த மாரியாத்தா தான் உனக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்” என்றவர் “சரி, நீ போய் இந்த கீரையை ஆஞ்சிட்டு வா. நான் கோழியை வாட்டி சுத்தம் பண்ணனும். கோழி அடிக்க சொல்லி, அப்பத்தா சொன்னாங்க” என்ற கண்ணகி வீட்டின் பின்புறம் சென்று விட்டார்.
அமுதா கீரைக்கட்டு, முறம், கீரை ஆய்ந்து போடுவதற்கு ஒரு சட்டியோடு திண்ணையில் சென்று அமர்ந்தாள். அவள் பாதி வேலையை முடித்த போது புல்லட் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். அந்த வீட்டின் கேட் எப்போதும் உள்புறமாக பூட்டப்பட்டு தான் இருக்கும். யார் என்ன விசயமாக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் தான், கதவை திறப்பான் வாயில் காவலன்.
தப்பித்தவறி கூட வீட்டினர் உள்ளே விட வேண்டாம் என்று கூறிய நபரை உள்ளே அனுமதிக்க மாட்டான். ஆனால் பைக் சத்தம் கேட்டதும் அவன் வேகமாக ஓடிச் சென்று கதவை திறக்கவும் அமுதா அதிசயமாக பார்த்தாள்.
புல்லட்டில் வந்தது மூக்கேஸ்வரன். அவனைக் கண்டதும் அவள் முகத்தில் தானாகவே ஒரு இறுக்கம் வந்தது.
புல்லட்டில் வந்தவனை தன்னையும் மீறி வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா. அவனோ அவள் பார்வையில், இமயமலை குளிரை அனுபவிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, அவளை நோக்கி நடந்து வந்தான்.
“என்னடி வருங்கால பொண்டாட்டி, மாமனுக்கு கோழி அடிக்கிறதா கேள்விப் பட்டேன்” என்று வம்பிழுத்தான் மூக்கன்.
“இங்க பாரு ஈசு பொண்டாட்டி, போண்டா டீன்னு பேசுறது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். இந்த கல்யாணத்தை நீயா நிறுத்தப்பாரு. இல்லை நான் நிறுத்துவேன்” என்றாள் அவள் உறுதியாக.
“உனக்கு என்ன பிரச்சினை அம்மு? ஏன் கல்யாணம் வேண்டாங்குற? ஆனா உன்னோட காரணம் என்னவா இருந்தாலும், இந்த கல்யாணம் நடந்தே தீரும்” என்றான் அவன் எரிச்சலாக.
“நான் படிக்கணும். நிறைய படிக்கணும், பெரிய வேலைக்கு போகணும். உன்னை கட்டிக்கிட்டா இந்த ஊரை விட்டு வெளிய எங்கயும் என்னால போக முடியாது. கடைசி வர எங்க அம்மா மாதிரி நானும் ஒரு அடிமையா வாழணும். அது என்னால முடியாது. எனக்கு படிச்சி, நல்ல வேலைக்கு சேர்ந்து, என் சொந்த சம்பாத்தியத்துல என்னோட வாழ்க்கையை வாழணும்” என்றாள் முடிந்தவரை அமைதியாக.
“உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நீ என்ன தான் பக்கம் பக்கமா வசனம் பேசுனாலும், நம்ம கல்யாணம் நடக்க தான் போகுது. பார்த்துட்டே இரு” என்று வன்மமாக உரைத்தவன், “அத்தை” என்று சத்தம் கொடுத்தவாறு உள்ளே சென்று விட்டான்.
‘இவன்கிட்ட என்னால முடிஞ்சவரை அமைதியா சொல்லிப் பார்த்துட்டேன். இதுக்கு மேல முழு முயற்சி செஞ்சி இந்த கல்யாணத்தை நிறுத்துறது, என்னோட திறமையை பொறுத்தது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, விட்ட வேலையை தொடர்ந்தாள் அமுதா.
வீட்டுக்குள் சென்ற மூக்கேஸ்வரனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. ஏற்கனவே அந்த வீட்டில் அவனுக்கு மரியாதைக்கு குறைவிருக்காது. இதில் வருங்கால மருமகனும் என்றால் கேட்கவும் வேண்டுமா? கண்ணகி மிகுந்த மரியாதையுடன் அவனிடம் பேசி, உபசரித்தார்.
“இந்த மோரை குடிங்க மாப்பிள்ளை” என்று அவனை உபசரித்தார் கண்ணகி.
“என்ன அத்தை வாங்க, போங்கன்னு புதுசா பேசுறீங்க? எப்பவும் போலவே பேசுங்க” என்று பொய்யாக மறுத்தான் மூக்கன்.
“அது முறை இல்லைங்களே மாப்பிள்ளை. இருக்கட்டும், இனி இதை எல்லாம் பழகிக்கோங்க” என்று சிரித்தார் அவர்.
“சரிங்கத்தை. பூ வைக்குறதுக்கு பதிலா நிச்சயம் மாதிரி வச்சிரலாம்ன்னு அம்மாவும், அம்மாச்சியும் பேசிட்டு இருந்தாங்க. அதுதான் அம்மா அம்முவோட அளவு பிளவுசை வாங்கிட்டு வர சொல்லி அனுப்பி விட்டுச்சி”
கண்ணகிக்கு சுருக்கென்று இருந்தது. பெற்றவளிடம் ஒரு வார்த்தை கூட கலந்து கொள்ளாமல், ஏன் சொல்லக் கூட செய்யாமல், நிச்சயம், கல்யாணம் எல்லாம் ஏற்பாடு செய்கிறார்கள். என்ன தான் வருத்தமாக இருந்தாலும், ஒரு விசயம் அவருக்கு ஆறுதலாக இருந்தது. அவர் கேள்விப்பட்டவரை, மூக்கனின் குணத்தை பற்றி ஊருக்குள் இதுவரை யாரும் தவறாக பேசி, அவர் கேட்டதில்லை. எந்த தீய பழக்க வழக்கங்களும் இல்லாதவன். கொஞ்சம் கோபக்காரன் தான், ஆனால் கெட்டவன் இல்லை. ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்று அமுதாவின் பிளவுசை கொண்டு வந்து, அவனிடம் கொடுத்தார்.
அவனும் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான். இவன் வாசலுக்கு சென்ற போது, அமுதா மும்முரமாக வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். குனிந்திருந்தவளின் பின் தலையை லேசாக தட்டி விட்டு, ஒன்றும் தெரியாதவன் போல் நடந்து விட்டான் அவன்.
அமுதா ஒரு கணம் மடியில் இருந்த முறத்தின் மீது விழுந்து விட்டாள். ஒன்றும் புரியாமல் ஒரு கணம் விழித்தவள், அடுத்த நொடி ஈஸ்வரன் அடித்ததில் தான், அவள் கீழே விழுந்து விட்டாள் என்று புரிந்து கொண்டாள்.
(நாமும் இனி அமுதாவை போல் மூக்கேஸ்வரனை, ஈஸ்வரன் என்றே அழைக்கலாம்).
“டேய், இப்படியே என்னைக்கும் இருக்க மாட்டடா. என்னை துரும்பா நினைச்சி தானே இப்படி பண்ணுற. இந்த துரும்பு ஒரு நாள், உன்னோட கண்ணை உறுத்தப் போகுது. பார்த்துட்டே இரு” என்று நடந்து கொண்டிருந்தவனை நோக்கி குரல் கொடுத்தாள்.
அவன் திரும்பாமலே ‘போடி’ என்பது போல கையசைத்து விட்டு சென்று விட்டான். அவள் கோபத்துடன் இருந்தாலும், அந்த கோபத்தை கூட தனக்குள் தான் விழுங்கிக் கொண்டாள்.
அன்று மாலையே வீட்டிற்கு விருந்தினர்கள் வரத் தொடங்கி விட்டனர். அதற்கு மேல் அமுதாவுக்கு அறையை விட்டு வெளியே வருவதற்கு கூட, அனுமதி இல்லாமல் போய் விட்டது. வேளாவேளைக்கு உணவும், நீரும் அறைக்கே வந்தது அவளுக்கு. இதற்கான காரணம் அவளுக்கு புரிந்து தான் இருந்தது.
திருமணம் என்று பேசிய அன்று, இரவில் கண்ணகி பழனிவேலிடம், அமுதாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தார். அதனால் திருமணத்தை நிறுத்த, அமுதா எந்த முயற்சியும் செய்யக் கூடாது என்ற எச்சரிக்கை தான் இதற்கு காரணம்.
மறுநாள் பகல் நேரம் அமுதா தன் அறையில், விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள். அப்போது அறைக்குள் வந்தார் ஈஸ்வரனின் தாய் மீனாட்சி. அறைக்குள் வந்தவரை கண்டதும், முகம் மலர எழுந்து அமர்ந்தாள் அமுதா.
“வாங்க அத்தை” என்று சிறு புன்னகையுடன் வரவேற்றாள்.
அவரும் வந்து அவளுக்கு அருகில், தரையில் அமர்ந்தார்.
ஆம், அவள் அறையில் ஒரு கட்டில் கூட கிடையாது. ஏன் ஜன்னல், ஓய்வறை வசதி கூட கிடையாது. ஒரு பாய், தலையணை, போர்வை மட்டுமே இருந்தது. அவள் துணிகளை வைப்பதற்கு கூட இரண்டு கட்டைப்பைகள் தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஊருக்கு முன் உடுத்திக் கொண்டு நிற்பதற்கு, அவளுக்கு புது உடைகள் எடுத்தாலும், அவற்றை எல்லாம் கண்ணகி மாடியில் இருக்கும் ஒரு பழைய பீரோவில் தான் வைத்துக் கொள்வார். அந்த வீட்டின் தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத தோற்றம் கொண்டது, அமுதாவின் அறை.
காமாட்சி இந்த வீட்டுக்கு இதற்கு முன் நிறைய முறை வந்திருக்கிறார். ஆனால் அமுதாவின் அறைக்கு அவர் வருவது இது தான் முதல் முறை. அறையை சுற்றிப் பார்த்தவருக்கு மனதுக்கு வருத்தமாக இருந்தது. தன் வீட்டுக்கு மருமகளாக வந்ததும், இவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தார்.
“நீ நாள் முழுக்க இதுல தானே இருக்க? நான் கொஞ்ச நேரம் உன்கூட இருக்க மாட்டேனா?” என்றார் பரிவாக.
அன்னையை தவிர அவளிடம் அன்பு காட்டும் ஒரே ஜீவன் என்று நினைத்ததும், அவள் கண்களில் நீர் நிறைந்தது.
“ஸ்கூலுக்கு அதுக்குள்ள லீவ் போட்டுட்டன்னு சின்னம்மா சொன்னாங்களே?” என்றார் பேச்சை மற்றும் பொருட்டு.
“உங்க சின்னம்மா தான் கல்யாணம் முடியுற வரை லீவ் போட சொல்லிட்டாங்க” என்றாள் குறையாக.
“நீ தான் புத்திசாலி பொண்ணாச்சே. அதெல்லாம் லீவ் போட்டதுக்கும் சேர்த்து படிச்சிருவ. கவலைப்படாத அம்மு”
“அதெல்லாம் படிச்சிருவேன், உங்களுக்கு குடிக்க ஒன்னும் குடுக்கலையா இந்த அம்மா?”
“குடுத்தாங்க, நான் வந்து அரைமணி நேரம் ஆகிடுச்சு. உன் அம்மாகிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிட்டு வர்றேன். உன்னோட அப்பத்தா வெளி முத்தத்துல இருந்து பேசிட்டு இருக்காங்க, அது தான் ஹால் அமைதியா இருக்கு. உங்கிட்ட அத்தை ஒண்ணு கேப்பேன், உண்மையா பதில் சொல்லணும் அம்மு” என்றார் மீனாட்சி.
“சொல்லுறேன் அத்தை, கேளுங்க”
“உனக்கு இந்த கல்யாண…” அவர் பேசி முடிப்பதற்குள் அந்த அறைக்கு காளியம்மாளின் சகோதரி, பேச்சி வந்து விட்டார்.
“என்ன மீனாட்சி, என்னை பாக்க வரவே இல்ல?”
“வாங்க சின்னம்மா, நீங்க மாத்திரை போட்டுட்டு ஓய்வெடுக்குறதா கண்ணகி சொன்னா. அது தான் நீங்க எழட்டும்ன்னு இங்கயே உக்காந்துட்டேன்” என்றார் மீனாட்சி.
அதன்பிறகு மீனாட்சியால், தான் பேச நினைத்ததை, அமுதாவிடம் பேச முடியாமலே போய் விட்டது. அமுதாவுக்கு தான் மனம் அடித்துக் கொண்டது. ஒருவேளை மீனாட்சி அத்தை திருமணத்திற்கு சம்மதமா என்று கேட்க வந்திருப்பாரோ? அவரிடம் தன் விருப்பத்தை சொல்ல முடிந்திருந்தால் திருமணம் நின்றிருக்குமோ? என்ன செய்வது?
ஆனால் அவள் விருப்பம் நிறைவேறவில்லை. மீனாட்சி சற்று நேரத்தில் கிளம்பி சென்று விட்டார். அவளும் அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தாள்.
வேலப்பன், பழனிவேல், அவர்களின் பங்காளிகள் ஒரு புறம் அமர்ந்திருக்க, மூக்கேஸ்வரன், அவனுடைய உறவினர் ஆண்கள் ஒரு புறமும் அமர்ந்திருந்தனர். ஆம், மூக்கேஸ்வரன், அமுதசுரபியின் நிச்சயதார்த்தம் தான் நடந்து கொண்டிருந்தது. உப்பு தாம்பூலம் மாற்றிக் கொண்டு, திருமண தேதியை அனைவர் முன்னிலையிலும் பேசி முடிவு செய்தனர்.
அவர்கள் வழக்கத்தில் திருமணத்திற்கு முன் பெண், மாப்பிள்ளையை ஒன்றாக நிற்க வைக்கும் வழக்கம் கிடையாது. எனவே அமுதசுரபி புடவை, நகைகள் அணிந்து, பூச்சூடி இருந்தாலும், அறைக்குள் தான் அமர்ந்திருந்தாள். ஆண்கள் பேசி முடித்து எழுந்ததும், அந்த இடத்தில் நடுநாயகமாக ஒரு இருக்கை போடப்பட்டு, அதில் அமுதாவை அமர வைத்தனர்.
பெரியவர்கள் அனைவரும் அவளுக்கு திருநீறு, சந்தனம் பூசி, ஆசீர்வாதம் செய்தனர். ஒவ்வொருவர் காலிலும் அவளை விழ சொல்லி, கொடுமை படுத்தினார்கள். அமுதா வேறு வழியின்றி பல்லைக் கடித்துக் கொண்டு, இவர்களின் அட்டகாசத்தினை பொறுத்துக் கொண்டாள்.
ஈஸ்வரன் கூடத்திற்கு அடுத்து இருந்த அறையில் தான் அமர்ந்திருந்தான். அமுதாவை பார்ப்பதற்கு ஏதுவாக அமர்ந்து கொண்டான் அவன். பெண்கள் அவளைப் படுத்துவதையும், அவள் முகம் கோபத்தை மறைக்க முயல்வதையும், சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ராங்கி, எங்கிட்ட மட்டும் இதுக்குள்ள எகிறிட்டு வந்துருப்பா’ என்று நினைத்து, மனதுக்குள் சிரித்துக் கொண்டான். சிலர் ஈஸ்வரன் அமுதாவை பார்வையிடுவதை கண்டாலும், பார்க்காதது போல் இருந்து கொண்டார்கள். அவனிடம் எதைப் பற்றியும் இலகுவில் கிண்டல் செய்து விட முடியாது. பட்டென்று மூக்கறுப்பது போல் பதில் சொல்லி விடுவான். அதனால் மற்றவர்கள் அவனை கவனித்தாலும், தங்களுக்குள் கிசுகிசுப்பதோடு நிறுத்திக் கொண்டனர்.
சம்பிரதாயங்கள் முடிந்து பின் கட்டில் பெரிய பந்தல் போடப்பட்டு, அங்கே தான் விருந்து பரிமாறப்பட்டது. முதலில் பெரியவர்கள், ஆண்கள் சாப்பிட, அதன் பிறகே பெண்கள் சாப்பிட சென்றார்கள். அமுதா கடைசி பந்தியில் தான் சாப்பிட்டாள். அவளுக்கு உணவு இறங்கவே இல்லை. எனவே அவளுடன் இருந்தவர்கள், சாப்பிட்டு முடித்து சென்ற பிறகு, மிக மெதுவாகவே எழுந்து கை கழுவ சென்றாள்.
அவர்கள் வீட்டின் பின் கட்டில் பெரிய கிணறு ஒன்று இருந்தது. அதில் எந்த கோடையிலும் தண்ணீர் வற்றியதே இல்லை. மோட்டார் மூலம் தேவையான தண்ணீரை இறைத்துக் கொள்வார்கள். இப்போது கிணற்றடியில் தான், கை கழுவ பெரிய அண்டாவில் நீர் நிரப்பப் பட்டிருந்தது.
அமுதா கைகழுவி விட்டு நிமிர, அவளை ஒரு கை இழுத்துக் கொண்டு, கிணற்றுக்கு அருகில் இருந்த மாமர இருளில் நிறுத்தியது. அவள் அலறுவதற்கு முன், அவள் வாயைப் பொத்தியிருந்தான் அவன்.
“நான் தான் அம்மு, கத்தி மானத்தை வாங்கிறத” என்று கூறி, அவள் அதை அவதானிக்க நேரம் கொடுத்த பிறகே, அவள் வாயிலிருந்து கையை எடுத்தான் ஈஸ்வரன்.
“டேய், உனக்கு எவ்வளவு தைரியம்? ஏற்கனவே இந்த வீட்டு கிழவி என்னை வச்சி செய்யுது. இதுல நீ வேற?” என்று கோபமாக சலித்தாள் அவள்.
“அடியேய், இன்னைக்கு தான்டி உன்னை புடவைல பாக்குறேன். பக்கத்துல வச்சி ஒரு தடவை பாத்துட்டு போகலாம்னு தான் கூப்பிட்டேன்”
அவன் மென்மையான குரலில் அவளுக்குள்ளும், சிறு ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டது என்றே கூற வேண்டும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை. ஆனால் அவள் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட சில நொடி தாமதமே, அவள் மனதில் இருக்கும் சிறு சலனத்தை அவனுக்கு எடுத்துக் காட்டி விட்டது. அதன்பின் பேசிய அவன் குரலில் துள்ளல் இருந்தது.
“இந்த சந்தன வாசம், பூ வாசம் எல்லாம் கலந்து, இந்த சேலைக்கட்டோட சேர்த்து உன்னை பார்த்தா, சும்மா கும்முன்னு இருக்குடி”
அமுதாவுக்கு அப்போது தான் இருவரும் நெருங்கி நின்று கொண்டிருப்பதே உறைத்தது. சட்டென அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.
“இங்க பாரு ஈசு, நீ என்ன தான் ஸ்டண்ட் பண்ணுனாலும், என்னால உன்னை இப்ப மேரேஜ் பண்ணிக்க முடியாது…”
“அதையே சொல்லாத அம்மு, எனக்கு கோவம் வருது. இன்னைக்கு நான் நல்ல மூடுல இருக்கேன். அதை கெடுத்துறாத. சும்மா தேஞ்ச ரெக்கார்டு மாதிரி மேஜர் ஆனா தான் மேரேஜ்ன்னு பேசிட்டு இருக்காத. இன்னும் மூணு மாசத்துல உனக்கு பதினெட்டு ஆகப் போகுது. என்னமோ நான் குழந்தை திருமணம் செய்யப் போற மாதிரி சீன் போடுற. போய் உன்னை கண்ணாடில பாருடி, நீ சின்ன பொண்ணா, பெரிய பொண்ணான்னு தெரியும்” என்றான் கடுப்பாக.
“உனக்கு நான் சொல்லுறது புரியல, எனக்கும் இதுக்கு மேல உனக்கு எப்படி சொல்லி புரியவைக்கன்னு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் தெளிவா சொல்லுறேன். இதையாவது புரிஞ்சிக்கோ. இந்த கல்யாணத்தை நிறுத்த நான் என்ன வேணும்ன்னா பண்ணுவேன். அப்படி கடைசி வரை என்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியலைன்னா, இந்த கிணத்துல கூட விழுவேன்….”
அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள், ஈஸ்வரன் அவளை இழுத்து அணைத்து, அவள் இதழில் தன் இதழ்களை பதித்திருந்தான். அமுதா போராடிப் பார்த்தும், அவன் விடவில்லை. இன்னும் இன்னும் அவள் இதழ்களுக்குள் புதைய தொடங்கினான்.
அப்போது காளியம்மாளின் குரல் உச்சஸ்தாயியில் கேட்டது.
ஹரிப்ரியா, ரகுவீரின் வீட்டுக்கு வேலைக்காக வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. இதற்குள் அவளுக்கு வேலை, படிப்பு எல்லாம் ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது. அன்னையிடம் ஒரு வயதானவருக்கு கம்பானியனாக தங்கியிருப்பதாக பொய் கூறியிருந்தாள். ஷெர்லினுக்கு இவள் மீது இதுவரை சந்தேகம் வரவில்லை. அதனால் மகள் நல்ல வேலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டார் அவர்.
ஹரி காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள். அப்போதே கல்லூரிக்கு தயாராவதற்கு தேவையான எல்லாம் எடுத்து வைத்து விட்டு, தானும் கிளம்பி காலை ஆறு மணிக்கே, ரகுவீரின் இல்லத்திற்கு சென்று விடுவாள்.
அவன் அப்போது தான் எழுந்து அறையை விட்டு வெளியே வருவான். நேராக அவன் ஜிம்முக்கு செல்ல, இவளும் அவன் பின்னாலேயே போவாள். ஜிம்மின் ஒரு ஓரத்தில் இருக்கும், எலக்ட்ரிக் ஸ்டவ்வில் அவனுக்கு புரோட்டீன் ஷேக் தயாரித்து ஒரு பாட்டிலில் அடைத்து, அவன் கேட்கும் போதெல்லாம் கொடுப்பாள். அதன் பிறகு அவன் அறையில் இளைப்பாற, இவள் சென்று அவனுடைய காலை உணவுக்கான பட்டியலை சமையலறையில் கொடுத்து விட்டு, அவனுடைய உடையை தேர்ந்தெடுப்பாள். அதன்பின் அவனுடைய அலுவலக பையை எடுத்து வைப்பாள். அவனுடைய அன்றைய ஷெட்டியூலை பார்வையிட்டு, அதில் முக்கியமான மீட்டிங் இருந்தால், அதற்கு தனியாக உடைகளை எடுத்து வைப்பாள். அதை அவனுடைய அலுவலக உதவியாளர் வந்ததும் அவனிடம் கொடுத்து விடுவாள்.
அதன்பின் உணவு நேரம் அவனுக்கு வேண்டியதை கேட்டு பரிமாறி முடித்து, அவனுடனே கிளம்பி கல்லூரிக்கு சென்று விடுவாள். மதிய உணவை கல்லூரி உணவகத்தில் முடித்துக் கொள்வாள். இவளுக்கு மதியம் கல்லூரி முடிந்து விடும். மாலை அவன் வீட்டுக்கு வர இரவு ஏழு மணி ஆகி விடும். அதுவரை படிப்பது தான் அவள் வேலை.
மாலை அவன் வந்ததும் மீண்டும் அவனுடைய உணவை கவனிப்பாள். இரவு அவனுடன் சேர்ந்து உண்ண அவள் மறுத்து விட்டாள். இரவு உணவு தனியாக, பணியாட்கள் பகுதியில் சாப்பிட்டுக் கொள்வாள். அவனும் அதை கண்டு கொள்ளவில்லை. உணவு முடிந்ததும் அவன் சில அலுவலக வேலைகளை அவளுக்கு கொடுப்பான். பெரிதாக ஒன்றும் இருக்காது. சில ஈமெயில்கள், கடிதங்கள் போன்றவற்றை டைப் செய்து கொடுப்பாள். இப்படியே ஒன்பது மணியானதும், அவனே அவளை அனுப்பி விட்டு விடுவான். அதன்பின் தன் அறைக்கு வந்து விடுவாள் ஹரி.
இந்த ஒரு வாரத்தில் ஹரிக்கு ரகுவீரின் மீது தானாகவே ஒரு நட்புணர்வு உருவாகி இருந்தது. ஆனால் அவனுக்கு அவள் மீது இருப்பதோ நட்பையும் தாண்டிய ஒரு ஈர்ப்பு. இருவரும் இரவு வேலைக்கு நடுவே சில பொதுவான பேச்சுகளும் பேச தொடங்கி இருந்தனர்.
அன்றும் ஹரி அப்படி வேலை செய்யும் போது, ரகுவீர் அவளை அழைத்தான்.
“பிரியா, இந்த வீக் எண்ட் ஏதாச்சும் மூவி பாக்கலாமா?” என்றான் ரகுவீர்.
ஹரி அன்று ஏனோ சோர்வாக உணர்ந்தவள், லேப்டாப்பை பார்த்த படியே, உட்கார்ந்து கொண்டே உறங்கியிருந்தாள். அவன் தன் போனை பார்த்துக் கொண்டே பேசியவன், இவளிடமிருந்து சத்தம் வராததால் திரும்பிப் பார்க்க, அவளோ உறங்கியிருந்தாள். ஹரி அவள் அமர்ந்த நிலையிலேயே, இருக்கையில் பின்னால் சாய்ந்து நன்றாக தூங்கி விட்டாள்.
அவன் எழுந்து வந்து அவளைப் பார்க்க, அவனுக்குள் அவள் மீது தாய்மை உணர்வு பெருகியது. அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது, அவனுக்கு. இதற்கு எதிர்காலம் இல்லை ரகு என்று தனக்குள் கூறிக் கொண்டவன், ஒரு பெருமூச்சுடன் ஒரு கையால் பின் கழுத்தை அழுந்த தேய்த்து உணர்வுகளை அடக்கினான். பின் லேசாக அவள் தோளை தொட்டு உலுக்கினான்.
அவள் அதிர்ந்து விழித்து “என்ன? என்ன?” என்றாள் படபடப்பாக.
“ரிலாக்ஸ் பிரியா. நீ உக்காந்துட்டே தூங்கிட்ட, வேற ஒன்னும் இல்ல. வேலை பார்த்தது போதும், போய் தூங்கு” என்றான் மென்மையாக.
“சாரி சார், என்னவோ இன்னைக்கு கொஞ்சம் டயர்டா இருந்துச்சி. அதுதான் எப்படி தூங்குனேன்னு தெரியல”
“நோ ப்ராப்ளம். நாளைக்கு உனக்கு அரைநாள் லீவ் தானே? நாளைக்கு ஈவினிங், நீ எனக்கு ஆபீஸ் ஒர்க்குக்கு ஹெல்ப் பண்ண வர வேண்டாம். இப்ப போய் நல்லா தூங்கு. குட் நைட்” என்றான் புன்னகையுடன்.
அவளும் அவனிடம் சரியென்று தலையசைத்து விட்டு, எழுந்து சென்று விட்டாள்.
அடுத்த நாள் அவளுக்கு கல்லூரியும் இல்லை. அதனால் நாள் முழுக்க சும்மா இருந்து பொழுதை கழிக்க அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. எனவே தற்காலிகமாக அவள் செய்து கொண்டிருந்த டெலிவரி வேலையை, அன்று ஒரு நாள் மட்டும் செய்ய முடிவு செய்தாள். ரகுவீர் வெளியில் செல்லும் வரை அவனுக்கு வேலை செய்தாள். அதன்பிறகு அவள் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்து முடித்துவிட்டு, டெய்சியிடம் மட்டும் கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.
காலை பத்து மணி அளவில் வெளியில் சென்று டெலிவரி வேலையை ஆரம்பித்தவள், நேரம் செல்ல செல்ல, அதில் அவள் செய்த வேலைக்கான ஊதியத்தை பார்த்ததும் உற்சாகமடைந்தாள். மாலை ஐந்து மணி ஆனதும் கூட அவளுடைய மனம் போதும் என்று சொல்லவில்லை. இன்று அவளுக்கு விடுமுறை தானே, நாளை காலையில் தான் ரகுவீரின் முன்பு அவள் இருக்க வேண்டும். இப்போதே வீட்டுக்கு போய் என்ன செய்வது? இன்னும் இரண்டு டெலிவரி பார்க்கலாம் என்று தோன்ற மீண்டும் வேலையை தொடர்ந்தாள்.
கடைசியாக ஆறு மணிக்கு மேல் அவள் செய்த டெலிவரியில் சிக்கல் வந்து விட்டது. அந்த வாடிக்கையாளர் ஆப்பில் குறிப்பிட்டிருந்த இடத்தை விட்டு, அரை கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்தார். அவ்வளவு தூரம் செல்வதில் அவளுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அந்த வாடிக்கையாளர் தன் இருப்பிடத்தை தெளிவாக கூற மறுத்தார். இவளும் கேட்டுப் பார்த்ததில், அவர் இந்த ஊருக்கு புதியவர் என்றும், சரியாக முகவரி கூற தெரியவில்லை என்றும் கூறினார். இதை எல்லாம் பேச முயலும் போது, அவருடைய தொலைபேசி இணைப்பும் அடிக்கடி தொடர்பு அறுந்து, அவளுடைய நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. முகவரி தவறு என்று கூறி ஆர்டரை திருப்பி அனுப்பலாமா என்றும் யோசித்தாள்.
ஆனால் அந்த வாடிக்கையாளரின் குரல், அவர் ஒரு முதியவர் என்று உணர்த்தியது. இளகிய மனம் கொண்ட ஹரிக்கு, அவருடைய பார்சலை திருப்பி அனுப்பவும் மனம் இல்லை. ஒரு வழியாக அவருக்கு பாடம் எடுத்து, லொகேஷன் ஷேர் செய்ய வைத்து, அவரிடம் பார்சலை கொடுத்தாள்.
“மிகவும் நன்றி மகளே, என்னோட மனைவிக்கான மருந்து, மாத்திரைகள் தான் இந்த பார்சல்ல இருக்கு. இது இல்லைனா இன்னைக்கு நைட் தூங்க கூட, அவ ரொம்ப சிரமப் பட்டிருப்பா” என்றார் அந்த முதியவர்.
“இருக்கட்டும் அங்கிள், இனிமேல் இந்த லொகேஷன் அதுல மென்ஷன் பண்ணிருங்க” என்றாள் ஹரி.
அவரும் சரி என்றவர், அவளை தங்களுடன் ஒரு காபியாவது குடிக்க வேண்டும் என்று வற்புத்தி, வீட்டுக்குள் அழைத்து சென்றார். வீட்டுக்குள் இருந்த அவரின் மனைவியும் ஹரியிடம் நன்றி தெரிவித்தவர், அவளுக்கு காபி தயாரித்து கொடுத்தார். அந்த முதிய தம்பதிகளுடன் நேரம் செலவு செய்து விட்டு மகிழ்ச்சியாக கிளம்பினாள் ஹரி.
ஒரு வழியாக வேலையை முடித்து விட்டு, அவள் ரோஸ் காட்டேஜுக்கு சென்ற போது, இரவு எட்டு மணியாகி இருந்தது. அப்போது தான் அந்த வாடிக்கையாளர் வீட்டில், காபியுடன் இரண்டு சாண்ட்விச்சுகளையும் சாப்பிட்டு விட்டு வந்தவளுக்கு பசி இல்லை. எனவே பணியாளர் சாப்பிடும் பகுதிக்கு செல்லாமல், நேராக தன் அறை இருக்கும் குடியிருப்பை நோக்கி நடக்க தொடங்கினாள்.
அவள் பணியாளர் குடியிருப்பை நெருங்கும் சமயம், அவள் மொபைல் இசைத்தது. அழைத்தது ரகுவீர். யோசனையுடன் அவள் போனை எடுத்தாள்.
“சார்?” என்றாள் ஹரி கேள்வியாக.
“கம் டு மை ரூம்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன், போனை வைத்து விட்டான்.
ஹரிக்கு அவன் மிகுந்த கோபத்தில் இருப்பது, அவன் குரலை வைத்தே புரிந்து விட்டது. ஆனால் எதனால் கோபம் என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவள் கால்கள் தன்னிச்சையாக ரகுவீரின் அறையை நோக்கி நடந்தது.
அமுதா இப்போதெல்லாம் மிகவும் சோர்வாக இருந்தாள். அவள் மனதின் சோர்வு, உடலையும் சேர்த்து பாதிக்க தொடங்கி இருந்தது. அவள் குண்டாக இல்லாவிட்டாலும், ஒல்லி என்று சொல்ல முடியாத அளவில், சரியான எடையுடன் தான் இருப்பாள். ஆனால் இந்த ஒரு வாரத்தில் பாதியாக மெலிந்திருந்தாள். அந்த அளவுக்கு மனதை மிகவும் உளப்பிக் கொண்டிருந்தாள்.
வீட்டு வேலைகளை நாள் முழுவதும் கூட, சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் இயந்திரம் போல் செய்து கொண்டிருந்தாள். எப்போதும் அவள் செய்யும் வேலைகள் தான் என்றாலும், அன்னையிடம் மட்டுமாவது புலம்பிக் கொண்டே வேலை பார்ப்பவள், இப்போதெல்லாம் அவரிடம் கூட சரியாக பேசுவதில்லை. கண்ணகியும் அவளிடம் தன்னால் முடிந்த வரை பேசிப் பார்த்தார். ஆனால் பலன் தான் பூச்சியமாக இருந்தது. அமுதாவின் மௌனத்தை அவரால் கலைக்க முடியவில்லை.
வீட்டில் திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தது. அதை தடுக்க முடியாத தன் கையாலாகாத நிலையை நினைத்துக் கொண்டே, பின் கட்டில் இருந்த மாமர நிழலில் தனிமையில் அமர்ந்திருந்தாள் அமுதசுரபி. அன்று இதே மாமரத்தின் அடியில் ஈஸ்வரன் அவளை முத்தமிட்ட சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.
அன்று காளியம்மாளின் குரல் கேட்டதும், முழு வீச்சுடன் ஈஸ்வரனை தள்ளிவிட்டு விட்டு வீட்டுக்குள் ஓடியிருந்தாள் அமுதா.
ஈஸ்வரனுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்ல கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்தது போல் உணர்ந்தவன், சுயத்துக்கு வரவே சில நொடிகள் பிடித்தது. அதன்பின் தனக்குள் சிரித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சியில், அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
உள்ளே சென்ற அமுதாவை காளியம்மாள், கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார்.
“இல்ல அப்பத்தா, அது…” என்று அவள் கூற வருவதற்குள், அவர் கை அவளின் கன்னத்தில் பதிந்திருந்தது.
அங்கிருந்த உறவினர்கள் மற்றும் ஈஸ்வரனின் வீட்டினர் அனைவரும் அதிர்ந்து போனார்கள். விருந்தினர்கள் முக்கால்வாசி பேர் சென்றிருந்தாலும், இருபக்க நெருங்கிய சொந்தங்கள் அங்கே தான் இருந்தார்கள். ஆனால் யாருக்கும் காளியம்மாளின் முன் சென்று பேச துணிவு இருக்கவில்லை.
ஈஸ்வரன் வீட்டுக்குள் சென்ற போது கண்டது, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கும் அமுதாவையும், அவளை கோபம் தீராமல் திட்டிக் கொண்டிருக்கும் காளியம்மாளையும் தான்.
“பொட்டை சிறுக்கி, கைகழுவ போனா ஒரேடியா போயிடுவியா? உன்னோட ஆட்டம் போடுற காலை ஒடச்சிட்டா, எல்லாம் சரியா போயிடும். இருடி, இன்னிக்கு ஆளுக இருக்காங்க. நாளைக்கு எல்லாரும் போகட்டும், உனக்கு சூட்டுக்கோலால இழுக்குறேன். அப்ப தான் பயம் விட்டுப் போகாம இருக்கும்” என்று பேசிக் கொண்டிருந்தார்.
மீனாட்சி, வெளி முற்றத்தில் நின்று விருந்தினர்களை வழியனுப்பிக் கொண்டிருந்ததில், அவருக்கு இங்கே நடப்பது தெரியவில்லை. மற்ற உறவினர்களோ, அமுதாவின் பெற்றோரோ கேட்காவிட்டாலும், ஈஸ்வரன் அப்படி இருக்க மாட்டானே.
ஈஸ்வரன் “அம்மாச்சி, என்ன இதெல்லாம்?” என்றான் கோபத்துடன்.
காளியம்மாளின் உடல்மொழி சிறிது மாறியது. “வா ராசா, இந்த சிறுக்கி நடந்து கிட்டதை பாத்தியா? இப்படி தான் அடங்காம திரிவா. அப்பப்போ சூட்டுக்கோலால இழுக்கலைன்னா, நாளைக்கு உன் தலையில கூட மிளகா அரைச்சிருவா. அப்படியே அவ ஆத்தாளை மாதிரி கடைஞ்செடுத்த வினயம் பிடிச்சவ…” நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தவரை ஈஸ்வரனின் குரல் தடுத்து நிறுத்தியது.
“அம்மாச்சி, கல்யாணத்துக்கு அப்புறம் அவளை எப்படி அடக்கி வைக்கணும்ன்னு நான் பார்த்துக்கிறேன். இப்ப ஊருக்கு முன்னால, இவ தான் எனக்கு பொண்டாட்டின்னு உறுதி கொடுத்திட்டிங்க. அதுக்கு அப்புறம் இவளை இத்தனை பேர் பார்க்க அடிச்சா, எனக்கு என்ன மரியாதை இருக்கு? இன்னைக்கு தான் எங்க பரிசம் முடிஞ்சிருக்கு. பரிசம் முடிஞ்சாலே இவளை என்னோட பொண்டாட்டின்னு தான் ஊர் பயலுக பேசுவானுக. இதுக்கு அப்புறம் இவளை அடிக்கிறதோ, உதைக்கிறதோ அதை நான் மட்டும் தான் செய்யணும். ஈஸ்வரன் பொண்டாட்டியை யாரோ அடிச்சிட்டாங்கன்னு பேசுறது எனக்கு தானே அசிங்கம்?” என்றான் அவன் ஆத்திரத்துடன்.
அவன் பேசுவது சரி தான் என்பது போல, ஈஸ்வரனின் பங்காளி ஒருவனும் அவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தான். அதன்பிறகு அங்கே ஈஸ்வருக்கு ஆதரவாக சலசலப்பு எழுந்தது.
இதுவரை அந்த வீட்டில், நடு வீட்டில் வைத்து காளியம்மாளின் செயலை யாரும் விமர்சித்ததோ, எதிர்த்ததோ கிடையாது. காளியம்மாளின் செருக்குக்கு முதல் அடியாக அமைந்தது அந்த நிகழ்வு.
பழனிவேல் அன்னைக்கு ஆதரவாக பேச நினைத்தாலும், அந்த இடத்தில் அவரால் பேச முடியாது. மீறி அவர் பேசி பிரச்சினை வந்து விட்டால், அமுதாவின் திருமணம் நின்று விடும். அவள் திருமணம் நிற்பதை பற்றி அவருக்கு கவலை இருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் இந்த வீட்டிலேயே இருப்பாள். அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இன்னும் எத்தனை நாள் இருக்க முடியும்? அவரைப் பொறுத்தவரை அமுதா அவருக்கு பெரிய பாரம், அந்த பாரத்தை சீக்கிரம் தொலைத்து கட்ட வேண்டும். இது தான் அவர் எண்ணம்.
வேலப்பன் பேத்திக்காக அந்த இடத்தில் பேச வந்தார்.
“மூக்கா, நீ சொல்லுறது சரி தான்ப்பா. ஆனா காளி வேணும்ன்னு பண்ணியிருக்க மாட்டா. இருட்டு நேரம் பின்கட்டுல நின்னு, பூச்சி பொட்டு எதுவும் அம்முவை கடிச்சிர கூடாதுல? அது தான் கோபப் பட்டுட்டா. இனி உன் வருங்கால பொண்டாட்டியை, இந்த வீட்டுல யாரும் எதுவும் பேச மாட்டோம். போதுமா?” என்று இலகுவாக கூறி சூழ்நிலையை சமாளிக்க முயன்றார்.
இதற்குள் கண்ணகி மகள் அருகில் வந்து அவளை அழுகையை நிறுத்தும் படி கூறியிருக்க, அமுதாவும் முயன்று அழுகையை அடக்கியிருந்தாள். தாயும் மகளும் அங்கேயே ஒரு ஓரமாக நின்று கொண்டார்கள். ஆனால் காளியம்மாள் இன்னும் தாயையும், மகளையும் தான் முறைத்துக் கொண்டிருந்தார். இதற்குள் மீனாட்சிக்கு விஷயம் தெரிந்து அங்கே வந்திருந்தார்.
அவரும் மகன் பேசியதில் தவறில்லை, அமுதா இனி தங்கள் வீட்டு மருமகள் என்று கூறினார்.
காளியம்மாள் “மீனாட்சி, உனக்கும் உன் மகனுக்கும் இவளை பத்தி சரியா தெரியல. நாளைக்கு உங்க ரெண்டு பேரோட நல்லதுக்கு தான் நான் சொன்னேன். அது புரியாம என்னையே பேசுறீங்க. நாளைக்கு உங்க வீட்டு பொண்ணு இப்படி பண்ணுறா, அப்படி பண்ணுறான்னு அத்து விட நினைச்சா, இவளை இந்த வீட்டுல யாரும் சேர்த்துக்க மாட்டோம்” என்றார்.
மீனாட்சி “சின்னம்மா, என்ன பேச்சு இதெல்லாம்? வாழ ஆரம்பிக்கிறதுக்குள்ள அத்துவிடுறதை பத்தி பேசுற. இப்ப சொல்லுறேன், இங்க இருக்குற எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. அமுதா என்னோட மருமக மட்டும் இல்ல, மகளும் தான். காலம் முழுக்க எங்க வீட்டுல தான் இருப்பா” என்றார்.
அதன்பிறகு அங்கே வேறு யாரும் பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போய் விட்டது.
நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, மீனாட்சியை தவிர இந்த திருமண விசயத்தில், தனக்கு உதவி செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை என்றே தோன்றியது. யாரிடமாவது போனை வாங்கி மீனாட்சியிடம் பேச வேண்டும். ஆனால் அவளிடம் அவரின் எண் இல்லை.
வெகுநேர யோசனைக்கு பிறகு அவள் தம்பியிடம் கேட்கலாமா என்று யோசித்தாள். ஆனால் குமரன் அவளுக்காக இதுவரை ஒரு துரும்பை கூட அசைத்தது இல்லை. ஏன் காளியம்மாள் அவளை திட்டினாலும், அடித்தாலும் ஒரு இரக்க பார்வை கூட பார்த்தது இல்லை. ஏன், அன்று நிச்சயத்தன்று கூட, முன்னின்று அவன் எதுவும் செய்யவில்லை. யாருடனும் கலந்து பழகவும் இல்லை. விருந்து நடக்க முதல் பந்தியில் சாப்பிட்டு விட்டு, அவன் அறைக்கு சென்று விட்டான். கீழே அவள் அடி வாங்கியது கூட அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெண்ணை இப்படி தான் வளர்க்க வேண்டும் என்று காளியம்மாள் அவனுக்கு போதித்திருந்தார். அவனும் அதன்படி அவளை கண்டு கொள்ள மாட்டான். எதுவும் வேலை ஏவுவதற்கு மட்டுமே அவளிடம் பேசுவான். அதுவும் அக்கா என்று அழைக்க கூட மாட்டான்.
“என்னோட அறையை சுத்தம் பண்ணு” என்று மொட்டையாக கூறிவிட்டு தான் செல்வான் குமரன்.
இப்படிப்பட்ட அவனுடைய உதவியை நாடலாமா? செய்வானா? அல்லது அப்பத்தாவிடம் சொல்லி விடுவானா?
தன் அறையில் கூண்டுப் புலி போல் கோபத்துடன் நடந்து கொண்டிருந்தான் ரகுவீர். இப்போதெல்லாம் மாலை தன் மாளிகைக்கு வருவதற்கு, அவனுக்கு மிகவுமே பிடித்திருந்தது. அதற்கு காரணம் ஹரிப்ரியா தான். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் முகமன் கூறி வரவேற்று, அவனுக்கு குடிக்க உண்ண எதுவும் வேண்டுமா என்று கேட்டு, அவன் பின்னாலேயே அவளும் வருவாள்.
மாலை அவளை நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அவள் அங்கு இல்லை. ஏன் என்று யோசித்தவனுக்கு, அப்போது தான் அன்று அவளுக்கு விடுமுறை என்பது நினைவு வந்தது. சோர்வுடன் அறைக்கு செல்ல திரும்பியவனை டெய்சி அழைத்தார்.
“சார், உங்களுக்கு குடிக்க எதுவும் அனுப்பவா?” என்று விசாரித்தார்.
“வேண்டாம், பிரியா லஞ்ச் சாப்பிட வந்தாளா?” என்று தன்னையும் மீறி கேட்டு விட்டான்.
“நோ சார், அவ காலைலயே கிளம்பி, ஒன் டே டெலிவரி வேலை பார்க்க போறதா சொல்லி, வெளிய போனா. ஆனா திரும்ப வந்துட்டாளான்னு தெரியல, லன்ச்சுக்கும் வரல” என்று குழப்பத்துடன் கூறினார். இத்தனை வேலையாட்கள் இருக்கும் போது, அவளை மட்டும் விசாரித்தால் அவருக்கு குழப்பம் வரும் தானே?
டெய்சியின் பதிலை கேட்டதும், அவன் முகம் இறுகியது.
“எனக்கு அவ வந்துட்டாளா, எப்ப வந்தான்னு கேட்டு கன்பார்மா சொல்லுங்க. அப்படி அவ அவளோட ரூம்ல இருந்தா, என்னோட ரூமுக்கு வர சொல்லுங்க” என்று கோபத்துடன் கூறி விட்டு சென்று விட்டான் அவன்.
அவன் அறைக்கு சென்றதும், இண்டர்காமில் அழைத்த டெய்சி, பிரியா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். அதன்பின் அவனுடைய கோபம் எல்லையை கடந்தது. அவளுக்கு அவன் கொடுக்கும் வருமானமே மிக அதிகம். அவளுக்கு இங்கே என்ன குறை? கிடைக்கும் சிறு ஓய்விலும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படியே இருந்தாலும் அதை ஏன் அவள் தன்னிடம் கூறவில்லை? ஆனால் அவன் ஒன்றை மறந்து விட்டான். அவன் யாரோ, அவள் யாரோ. அவள் அவனிடம் பணிபுரியும் ஒரு சாதாரண பெண், அவ்வளவு தான். அவள் எதற்காக அவனிடம் கூறிவிட்டு எதையும் செய்ய வேண்டும்?
யோசனையுடன் இருந்தவனின் அறைக்கதவு தட்டப்பட்டது. வந்தது ஹரிப்ரியா தான்.
“சார், கூப்பிட்டிருந்திங்க. என்ன விசயம்?” என்று இயல்பாக கேட்டாள் ஹரி.
அவன் கோப முகம் அவளை சிறிதும் பாதிக்கவில்லை. முதலில் அவன் கோபம் தன் மீது என்று, புரிந்தால் தானே அவளுக்கு பயம் வரும்?
“எங்க போயிருந்த?” என்றான் ரகுவீர் சினத்துடன்.
“ஏன் சார்? இன்னைக்கு லீவ் குடுத்தீங்க தானே?”
“நான் உன்கிட்ட எங்க போயிருந்தன்னு கேட்டேன்”
“சும்மா இருக்க போர் அடிச்சது, அது தான் டெலிவரி செய்ய …” அவள் பேசி முடிப்பதற்குள் அவன் இடைமறித்தான்.
“ஸ்டாப் இட். உனக்கு இங்க வாங்குற சேலரி பத்தலையா? ஒரு நாள் லீவ்ல அப்படி ஓடி ஓடி சம்பாதிக்க என்ன அவசியம் வந்தது?” என்று இரைந்தான் அவன்.
அவன் உயரத்திற்கும், சிவந்த கண்கள் மற்றும் கர்ஜனைக் குரலுக்கும் அவள் மிகவும் பயந்து விட்டாள். இதுவரை இப்படி ஒரு கோபத்தை, யாரிடமும் அவள் எதிர் கொண்டதில்லை.
“சார்?” என்றாள் அச்சத்துடன், அவள் கண்களில் கேள்வி இருந்தது.
“ஓஹ் பிரியா, நீ என்னை டென்ஷன் பண்ணாத. பதில் சொல்லு, அப்படி எதுக்காக உனக்கு பணம் தேவைப்படுது? நீ மாசம் முழுக்க இதுவரை சம்பாதிச்சதை விட, ரெண்டு மடங்கு சம்பளம் தானே நான் கொடுக்குறேன்?”
அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தாள்.
“அதுக்கு பிறகும் ஏன் இன்னைக்கு அந்த டெலிவரி வேலைக்கு போன?” என்றான் முடிந்த வரை அமைதியாக.
“சார், எனக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க. எங்க ரெண்டு பேருக்கும் சொந்தம்ன்னு வேற யாரும் இல்ல. அம்மா என்னை தனியா வளர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. என்னோட அம்மா ஒரு நாள் கூட சும்மா இருந்து நான் பார்த்ததே இல்ல. அவங்க லீவ்ன்னு ஒன்னு எடுத்தா, அப்ப ஒன்னு எங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம இருக்கும். இல்லைனா எனக்கு உடம்பு முடியாம இருக்கும். அப்படி பணம் சேர்த்து வச்சி, துபாய்ல இப்ப நாங்க இருக்குற வீட்டை, ரெண்டு வருஷம் முன்னாடி தான் வாங்குனாங்க. வீட்டுல சோம்பி இருக்க கூடாது, ஒரு ரெண்டு மணி நேரம் கிடைச்சா, அதுல கூட ஆன்லைன்ல தேடி ஹோம் நர்சிங்குன்னு அந்த நேரம் போயிட்டு வருவாங்க. அப்படி தான் எனக்கும் சொல்லி கொடுத்து வளர்த்தாங்க, நானும் என்னோட பதினஞ்சு வயசுல இருந்து, வாலன்டியரா சின்ன சின்ன வேலைக்கு போக ஆரம்பிச்சேன். லீவுன்னு ஒன்னு வேணும்னு, நானோ என் அம்மாவோ யோசிச்சது இல்ல. இன்னைக்கு லீவ் கிடைக்குது, அப்ப அந்த நாள்ல வேற என்ன வேலை பார்த்து சம்பாதிக்கலாம்னு தான், என்னோட மைண்ட் தானாவே யோசிக்க ஆரம்பிக்கும். நீங்க எனக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், என்னால ஒரு நாள் கூட வெட்டியா பொழுதை கழிக்க முடியாது” என்று முடித்தாள் ஹரி.
அவன் அயர்ந்து போனான். எத்தனை உயர்ந்த குணம் இது? இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கு இவள் ஒரு விதிவிலக்கு. ஆனாலும் அவளை அப்படி ஓய்வின்றி உழைக்க விட, இனி அவனால் முடியாது.
“ஐ அம் சாரி பிரியா. உன்மேல கோபப்பட்டது தப்பு தான். ஆனா இப்படி வேலை பார்க்குறது உன்னோட உடம்பை சீக்கிரமே பாதிக்கும். என்னதான் நீ ஆரோக்கியமா இருந்தாலும், உன்னோட உடம்புக்கும், மனசுக்கும் அப்பப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை”
“யோசிக்கிறேன் சார்” என்று லேசாக புன்னகைத்தாள் ஹரி.
அவனும் மென் புன்னகையுடன் அவளுக்கு விடை கொடுத்தான். அவள் சென்றதும் படுக்கையில் விழுந்தவனுக்கு, அவளுடைய புன்னகை முகமே மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. பிரியாவின் புன்னகையை வாட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று நினைத்தவாறு கண்ணயர்ந்தான் ரகுவீர்.
ஆனால் அவன் குடும்பம் அதற்கு விட வேண்டுமே! அதற்கு முகந்திரமாக அவன் குடும்பத்தில் இருந்து முதல் நபர், மறுநாள் ரோஸ் காட்டேஜுக்கு வந்தான். அவன் நீரவ் தோஷி, ரகுவீரின் தம்பி.
மறுநாள் திருமணம் என்ற நிலையில் நாட்கள் விரைந்திருக்க, அமுதசுரபி அவள் அறையில், தலையில் இடி விழுந்தது போல் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கும் ஈஸ்வரனுக்குமான திருமணத்தை நிறுத்த, தன்னால் இயன்றவரை முயன்று பார்த்து விட்டாள் அவள். ஆனால் அவள் செய்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியை தான் தழுவியது.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மீனாட்சி, அவள் வீட்டுக்கு இரண்டு முறை வந்து சென்று விட்டார். ஆனால் அவளால் அவரிடம் தனியாக இரண்டு வார்த்தைகள் கூட பேச முடியவில்லை. அதற்கு காரணம் ஈஸ்வரன் தான். தாயை கையோடு கூட்டி வந்து, அவனோடே அழைத்து சென்றும் விடுவான். அவனுக்கு அன்னையைப் பற்றியும், அமுதாவை பற்றியும் தெரியும் என்பதாலேயே, இருவரையும் தனியாக பேச விடாமல் பார்த்துக் கொண்டான். அமுதா, குமரவேலிடமும் பேச முயன்றாள். ஆனால் அவன் முதலில் இவள் பேசுவதை நின்று கேட்க வேண்டுமே!
ஒரு நாள் அவன் ஹாலில் தனியாக அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, அமுதா அவனிடம் வந்தாள்.
“குமரா” என்று அவனை அழைத்தாள் அமுதா.
அவன் ‘என்ன?’ என்பது போல் பார்த்தானே தவிர, பேசவில்லை.
“எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?” என்றாள் தயக்கமாக.
“நான் எதுக்காக உனக்கு உதவி செய்யணும்? என்கிட்ட தேவை இல்லாம பேசுற வேலை வச்சிக்காத” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.
அமுதா அயர்ந்து போனாள். அவளும் அவனும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தானே? இருவரும் ஒன்றாக தானே வளர்ந்தார்கள்? ஏன் அவள் மீது இத்தனை வெறுப்பு? ஒரு பெருமூச்சுடன் வேறு வழி என்ன என்று யோசிக்கத் தொடங்கினாள். ஆனால் வழி ஒன்றும் புலப்படவில்லை அவளுக்கு.
ஒரு வாரத்திற்கு முன்பே விருந்தினர்கள் வந்து விட, அதன்பிறகு அவளுக்கு தனிமை என்பது மருந்துக்கும் கிடைக்கவில்லை. காலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டு, மாலையில் நலங்கு வைபவமும் முடிந்திருந்தது. அனைத்திற்கும் ஒரு இயந்திரத் தனத்துடன் உடன் பட்டவள், யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அதை அங்கிருந்த யாரும் உணர்ந்தாற் போல் கூட தெரியவில்லை. கண்ணகி மட்டுமே மகளின் முகத்தை கவனித்து உள்ளுக்குள் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
மூக்கேஸ்வரனின் வீட்டிலும் முகூர்த்தக்கால் நடுவது, நலங்கு போன்ற சம்பிரதாயங்கள் நடக்க, மீனாட்சியும் இன்று இங்கே வரவில்லை. திருமணம் அந்த ஊரில் இருக்கும் மண்டபத்தில் தான் நடப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் உறவினர்கள் பலர் மண்டபத்திற்கு உறங்குவதற்காக சென்று விட்டிருந்தனர். காளியம்மாள் கூட தன் சகோதரிகளுடன் மண்டபத்திற்கு சென்று விட்டார். வீட்டில் கண்ணகி, பழனிவேல், இன்னும் சில உறவுப் பெண்கள் மட்டும் இருந்தனர்.
பெண்கள் உறங்கத் தொடங்க, கண்ணகியை பழனிவேல் தங்கள் அறைக்கு அழைத்து சென்று விட்டார். அமுதாவுக்கு மனம் விட்டுப் போய் இருந்தது. இந்த திருமணம் நடப்பதை அவளால் தடுக்க முடியாது என்று புரிந்தது. அப்படி நடந்து விட்டால், அதன் பிறகு அவள் வாழ்க்கை என்ன ஆகும்? அவளும் அவள் அன்னையைப் போல் பள்ளிப் படிப்பை முடிக்காமல், ஒரு வார்த்தை பதில் கூறாமல், ஆசைகளை அடக்கிக் கொண்டு ஒரு வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு தேவையே இல்லை. உயிரை விட்டு விட்டால், இனி வரப் போகும் நரக வாழ்விலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது அவளுக்கு. தன் அருகில் பார்த்தாள்.
அவளை விட மூன்று வயது மூத்த பெண் ஒருத்தி, அவள் அறையில் துணைக்கு படுத்திருந்தாள். அந்தப் பெண் அமுதாவின் ஒன்று விட்ட அத்தை மகள். இதற்குள் அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒரு குழந்தை மூன்று வயதிலும், அடுத்த குழந்தை ஒரு வயதிலும் தாயின் இருபுறமும் படுத்துக் கொண்டிருந்தது. தானும் இன்னும் மூன்று வருடம் கழித்து, இப்படி பிள்ளை பெற்று மட்டும் வளர்த்துக் கொண்டு இருப்போம் என்று தோன்ற, அவள் முடிவு இன்னும் உறுதியானது.
படுத்திருந்தவர்களின் உறக்கத்தை கலைக்காமல் மெதுவாக எழுந்து அமர்ந்தாள். தன் காலில் இருந்த கொலுசை கழற்றி வைத்தாள். பிறகு அந்த அரை இருளில் நடந்து வீட்டின் பின்கட்டுக்கு சென்றாள். வீட்டின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும் அலங்காரத்திற்காக மாட்டப்பட்டிருந்த சீரியல் விளக்குகளின் மெல்லிய ஒளி, கிணற்றுக்கு அருகில் கூட மெலிதாக ஒளிர்ந்தது.
அமுதா அதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவள், கிணற்றின் திண்டின் மீது ஒரு காலை வைத்து விட்டு, மறுகாலை தூக்கிய போது அவளை ஒரு கை கீழே பற்றி இழுத்தது. இழுத்த வேகத்தில் அமுதாவின் கன்னத்தில் ஒரு அறையும் கொடுத்திருந்தான், ஈஸ்வரன்.
அவன் அடித்த அறையின் வேகத்தில், தன்னை மீறி அவளுக்கு கண்ணில் நீர் வடியத் தொடங்கியது.
“நெனச்சேன்டி, நேத்து நான் வந்தது கூட தெரியாம, நீ மோட்டு வளையை பார்த்துட்டு இருந்தப்பவே, நீ இப்படி எல்லாம் கிறுக்கு தனம் பண்ணுவேன்னு நெனச்சேன். அது சரியா போச்சு. அப்படி என்னடி நீ பெரிய அழகி? என்னை கட்டிக்க உனக்கு அப்படி கசக்குதோ?”
அவளுக்கும் கோபம் வந்தது. கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை முறைத்தாள்.
“நான் தான் எனக்கு ஏன் உன்னை கட்டிக்க கசக்குதுன்னு காரணத்தை சொல்லிட்டேனே. இன்னும் புரியாத மாதிரி நடிச்சா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. இப்ப நீ என்னை காப்பாத்தி இருக்கலாம். ஆனா கல்யாணம் முடிஞ்சாலும் எனக்கு கிடைக்கிற முதல் வாய்ப்புல, இந்த உயிரை நான் விட தான் போறேன்” என்றாள் அவள் தீர்க்கமாக.
ஈஸ்வரன் ஒரு கணம் அதிர்ந்தாலும், அடுத்த நொடி தன்னை சுதாரித்துக் கொண்டான்.
“அம்மு, இங்க பாருடி. என்னை பாரு. என்னை உனக்கு பிடிக்கலையா?” என்றான் மென் குரலில்.
அந்தக் குரல் அவளுக்குள் மாயம் புரிய முயன்றது. ஆனால் மனதை இறுக்கிக் கொண்டாள் அமுதா.
“பிடிக்கும், பிடிக்காதுங்குற யோசனைக்கே நான் போகல ஈசு. எனக்கு படிக்கணும், பெரிய வேலைக்கு போகணும். புருஷன் காசுல சாப்பிட்டு உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்ல. நானும் உழைச்சி சாப்பிடணும்…” என்று பேசியவளை அவன் இடைமறித்தான்.
“சரி, உனக்காக நான் இதுக்கு சம்மதிக்கிறேன். நீ ஆசைப்படுற வரைக்கும் நான் உன்னை படிக்க வைக்கிறேன். வேலைக்கு போறது இந்த ஊருல இருந்து போற மாதிரி இருந்தா போ. இல்லையா சொந்தமா தொழில் ஏதாவது தொடங்கு. ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுறேன், நாளைக்கு உன்னோட கழுத்துல நான் தாலி கட்டப் போறது உறுதி”
அமுதா யோசித்தாள். ஈஸ்வரன் பொய் சொல்ல மாட்டான். படிப்பு தானே அவள் எதிர்பார்ப்பது? ஆனால் திருமணம் முடிந்து அவள் படித்து முடிக்கும் வரை, குடும்ப வாழ்வுக்காக அவன் காத்திருப்பானா? ஆனால் அத்தனை நல்லவன் இவன் இல்லையே. யோசனையுடன் அவனையே பார்த்தாள் அவள்.
“என்னடி குறுகுறுன்னு பார்த்துட்டே இருக்க? பதில் சொல்லு”
“படிச்சி முடிக்கிற வரை பொண்டாட்டிங்குற நினைப்போட என் பக்கத்துல வர கூடாது” என்றாள் அமுதா பட்டென.
அமுதசுரபி கூறிய நிபந்தனையில் ஒரு கணம் திகைத்தான் மூக்கேஸ்வரன். அடுத்த நொடி இடி இடியென சிரித்தான்.
அமுதா பதட்டத்துடன் அவன் வாயை தன் விரல்களைக் கொண்டு பொத்தினாள். “சத்தம் போட்டு சிரிக்காத ஈசு” என்றாள் கெஞ்சலாக.
ஈஸ்வரன் சட்டென அவள் விரல்களில் முத்தமிட்டு விட்டான். அவள் திகைப்புடன் விரல்களை அகற்றிக் கொண்டு, அவனை முறைத்தாள்.
“என்னடி முறைப்பு? நான் என்ன உன்னை வச்சி ஊறுகா போடவா கல்யாணம் பண்ணுறேன்? என் அம்மா ஊறுகா போட்டா கூட அதிகபட்சம் மூணு மாசம் தான் ஊற வைப்பாங்க. அதுக்கு மேல தாளிச்சி கொட்டி, சாப்பிட கொடுத்துருவாங்க. அதே மூணு மாசம் உனக்கு டைம் தர்றேன். அதுக்கு மேல என்னால காத்திருக்க முடியாது. நானும் ஆம்பளை தான். எனக்கும் ஆசை இருக்கு”
“நான் என்ன ஊறுகாயா?” என்றாள் அமுதா கோபமாக.
அவள் பேச்சில் அவன் சிரித்தான். ஆனால் இந்த முறை மெதுவாகவே சிரித்தான். “நீ ஊறுகா இல்லடி, ரசகுல்லா. ஜீரால ஊறுன வெள்ளை வெளேர்னு இருக்குற என்னோட ரசகுல்லா” என்றான் மயக்கும் குரலில்.
அமுதாவுக்கு அவன் பேச்சில் முகமே சிவந்து விட்டது. தற்கொலை செய்ய வந்தவளை, இப்படி பேசிப் பேசி வெட்கம் வர வைத்து விட்டானே?
“பேசிப் பேசி ஏமாத்தாதே. இன்னும் மூணு மாசத்துல ஸ்கூல் தான் முடியும். அடுத்த வருஷம் காலேஜ் போகணும். காலேஜுக்கு போனதும் முதல் வருஷத்துலயே வயித்தை தள்ளிக்கிட்டு காலேஜுக்கு போக முடியுமா?” என்றாள் அவள் கோபமாக.
“இங்க பாரு அம்மு. உன்னை படிக்க வைக்கிறேன், வேற எதுவும் ஆசை இருந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் நிறைவேத்துறேன். அதுக்காக வாழ்க்கையை வாழாம காத்திருக்க என்னால முடியாது. குழந்தை பிறந்தா என்ன இப்போ? பெத்து குடுத்துட்டு நீ படிக்க போ, நானும் என் அம்மாவும் வளர்த்துக்கிறோம். அவ்வளவு தான் என்னால முடியும். உன்னோட முடிவை சொல்லு, நீ இதுக்கு ஒத்துக்கலேன்னா இப்ப நமக்குள்ள நடந்த பேச்சு வார்த்தை, நீ தற்கொலை செய்யப் போனது எல்லாத்தையும், ஊர் பஞ்சாயத்தை கூட்டி சொல்லி, நியாயம் கேட்பேன்”
மனதுக்குள் அவனை வசை பாடியவள், வெளியில் “நான் சம்மதிக்கிறேன். ஆனா நான் ஆசைப்பட்ட வரை படிப்பேன்” என்றாள் அமைதியாக.
“சரிடி ஆத்தா. உன்னை படிக்க வைக்கிறது என் பொறுப்பு. போய் கழுத்தை ரெடியா வச்சிட்டு தூங்கு, என் கையால தாலி வாங்கணும்ல?” என்று சிரித்தான்.
“ம்க்கும்” என்று நொடித்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாலும், அமுதாவின் இதழ்களிலும் புன்னகையே இருந்தது.
அடுத்த நாள் காலையில், குண்டளப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஒரு சமுதாயக் கூட மண்டபத்தில், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் மூக்கேஸ்வரன், அமுதசுரபியின் திருமணம் சிறப்பாக முடிந்தது. பெண் வீட்டில் பாலும், பழமும் கொடுக்கும் சம்பிரதாயம் முடித்த பிறகு, ஈஸ்வரனின் வீட்டுக்கு மணமக்கள் சென்றனர்.
உறவினர் பெண் ஆரத்தி எடுக்க ஈஸ்வரனின் மனைவியாக, முழு உரிமையோடு அவன் இல்லத்திற்குள் பிரவேசித்தாள் அமுதசுரபி. மீனாட்சிக்கு மகனையும், அமுதாவையும் மணக்கோலத்தில் கண்டதும் கையும் காலும் ஓடவில்லை. மகிழ்ச்சியுடன் மருமகளை உள்ளே அழைத்து சென்றவர், முதலில் பூஜை அறைக்கு இருவரையும் அழைத்து சென்றார்.
அங்கே அமுதா விளக்கேற்றி வணங்கிவிட்டு, மீனாட்சியின் காலில் ஈஸ்வரனோடு சேர்ந்து பணிந்து எழுந்தாள். மீனாட்சி ஆனந்தக் கண்ணீரோடு இருவரையும் ஆசீர்வதித்தார்.
கண்ணகி முதல் நாள் மகள் முகத்தில் இருந்த சோகம், திருமணத்தின் போது இல்லாததை கண்ட பிறகே, அவர் மனம் நிம்மதியானது. இருந்தும் மகளிடம் பேச முடியுமா என்பது போல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணகி. கண்ணகியின் முகத்தைப் பார்த்தே மீனாட்சிக்கு அவரின் ஏக்கம் புரிந்தது.
“அமுதா, என்னோட வா” என்று அவளை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் சென்றவர், கண்ணகியை வர சொல்லி இருவரையும் பேச சொல்லி விட்டு வெளியில் சென்றார்.
“ரொம்ப நன்றிங்க மதினி” என்றார் கண்ணகி மீனாட்சியிடம்.
“இருக்கட்டும்மா. பேச வேண்டியதை சீக்கிரம் பேசிட்டு, உன் மகளை அழைச்சிட்டு கூடத்துக்கு வந்துரு. சொந்த பந்தம் கூடி இருக்கும் போது, ரூமுக்குள்ள ரொம்ப நேரம் இருந்தா அதுவே பேச்சாகிரும். அதுவும் என்னோட சின்னம்மா சொல்லவே வேண்டாம்” என்று எச்சரித்து விட்டு, தாய்க்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து விட்டு சென்று விட்டார்.
“என்னம்மா?” என்றாள் அமுதா.
“நேத்து வரை, ஒரு வாரத்தை கூட பேசாம என்னை ரொம்ப பயமுறுத்திட்டு, இப்ப என்னம்மான்னு சாதாரணமா கேக்குற?” என்றார் கண்ணகி ஆதங்கமாக.
“அது ரகசியம்மா. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன், ஈஸ்வரன் ரொம்ப நல்லவங்கம்மா” என்று கண்களை சிமிட்டினாள் அவள்.
“இத தானே நான் ஆரம்பத்துல இருந்து உன்கிட்ட சொன்னேன். அப்ப எல்லாம் காதுல வாங்காம இருந்துட்டு, இப்ப புதுசா பேசுற? எது எப்படியோ இனி இந்த வீட்டுல நீ சந்தோசமா இருப்ப, அது எனக்கு போதும்” என்றவர் மனதில், பிறந்த அன்றே தன்னை பிரிந்து சென்ற பெண் குழந்தையின் நினைவு வந்தது. அவளுக்கும் ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்குமா? ஷெர்லின் அவளை எப்படி வளர்த்திருப்பார்? அவள் பெயர் கூட தெரியாதே?
“என்னம்மா ஏன் சோகமாகிட்டிங்க?”
மகளின் குரலில் கலைந்தவர், மனதை மறைத்து அவளிடம் பேசத் தொடங்கினார். இன்று ஏனோ தன்னிடம் வளராத மகளின் நினைவு, அவருக்கு மிக அதிகமாக தொல்லை செய்தது. இதைதான் தொப்புள் கொடி சொந்தம் என்பதோ? அங்கே மகளின் வாழ்க்கையில் ஏற்படப் போகும் இன்னல்களை கண்ணகியின் உள்ளுணர்வு அவருக்கு தெரிவித்ததோ?
நேரம் செல்ல சீர்வரிசை பொருட்களை இறக்கிவிட்டு, மாப்பிள்ளை வீட்டு உபசாரங்களை ஏற்றுக் கொண்டு, பெண் வீட்டினர் அங்கிருந்து கிளம்பினார்கள். மறுநாள் மணமக்களை மறுவீட்டுக்கு அழைத்து விட்டு தான் சென்றனர். அமுதாவுக்கு பிறந்த வீட்டினர் கிளம்பும் போது, தானாகவே கண்ணீர் சுரந்தது. ஆனால் அது அவள் அன்னையை நினைத்து மட்டுமே. அந்த வீட்டில் கண்ணகி மனம் விட்டுப் பேசுவது, அவளிடம் மட்டும் தான். இனி அவளும் இல்லாமல், அவர் தனிமைப்பட்டு விடுவார் என்ற எண்ணமே அவளை அழ வைத்தது.
காளியம்மாளுக்கு பேத்தி அழுதது கொஞ்சம் கர்வமாக இருந்தது. ஈஸ்வரனின் வீடு, காளியம்மாளின் பெரிய வீட்டைப் போல் இரண்டு மடங்கு பெரியது. வசதி வாய்ப்பிலும் அவர்களால், ஈஸ்வரனை தொடக் கூட முடியாது. இருந்தும் பணத்தை பார்த்து மயங்காமல் பேத்தி நன்றியுடன் இருப்பதாக நினைத்தே அவர் மகிழ்ந்தார். அப்போதும் அவர் நினைத்தது, அத்தனை வருடம் அவளை வளர்த்ததற்கு நன்றியாக இருக்க வேண்டும் என்று தான். அவளுடைய பாசம் அவருக்கு தேவையில்லை. அது தான் அவர் மீது பாசம் காட்ட அவர் மகனும், பேரனும் இருக்கிறார்களே?
கண்ணகி மகளின் அழுகைக்கான காரணத்தை புரிந்து கொண்டவர் “அழாத அம்மு. அம்மா, யார் கிட்டயாவது போன் வாங்கி, அப்பப்போ உன்கிட்ட பேசுறேன். அதோட நீயும் நாளைக்கு அங்க வர தானே போற? அழாதே” என்று அவள் கண்ணை துடைத்து விட்டார்.
வேலப்பன், பேத்தி இனி நிம்மதியாக இருப்பாள் என்று நினைத்து, அவளிடம் சிரித்த முகமாக விடை பெற்று சென்றார். பழனிவேல், குமரவேல் இருவரும் அமுதாவிடம் சொல்லாமல் கூட சென்று விட்டனர். அமுதாவும் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை.
காளியம்மாள் “நல்ல புருசனை பார்த்து கையில பிடிச்சி கொடுத்துட்டேன். இதுக்கு பிறகு புத்தியா பொழைக்க வேண்டியது உன் சமத்து. புருஷன்கிட்ட சண்டை, மாமியார்கிட்ட சண்டைன்னு எப்பவும் என் வீட்டு வாசல் படியை மிதிச்சிறாத” என்று வாழ்த்தினார்.
ஈஸ்வரன் “அம்மாச்சி, புருஷன்கிட்ட மாமியார்கிட்ட சண்டையாவே இருந்தாலும், என் பொண்டாட்டியை அடுத்த வீட்டு வாசலுக்கு அனுப்பி வைக்க மாட்டேன்” என்று சிரித்துக் கொண்டே பதில் கொடுத்தான்.
காளியம்மாள் தலையை வெட்டிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். மற்றவர்கள் அவரின் நடவடிக்கையில் சிரித்துக் கொண்டே கலைந்து சென்றனர். அமுதாவும் சிரிப்புடன் மீனாட்சியிடம் பேசிய படி வீட்டுக்குள் சென்று விட்டாள்.
ஹரிப்ரியா இந்த ஒரு வாரத்தில் மிகுந்த எரிச்சலை அடைந்திருந்தாள். அதற்கு காரணம் இந்தியாவில் இருந்து வந்திருந்த இரண்டு வானரங்கள் தான். ஒருவன் பெயர் அஜய் கிருஷ்ணா, அடுத்தவன் நீரவ் தோஷி. இதில் நீரவ் ரகுவீரின் தம்பி, அதாவது சித்தப்பா பையன். அவனுடைய உதவியாளர் தான் அஜய் கிருஷ்ணா. வந்த நாளிலிருந்து இருவரும் அவளை வம்பிழுத்துக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் அதற்கான காரணம் தான் அவளுக்கு தெரியவில்லை.
சென்ற வாரத்தில் ஒரு நாள் அவள் கல்லூரி முடிந்து வந்த போது, ரகுவீரின் பங்களா வாசலில் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். இவள் தன்னுடைய குடியிருப்பை நோக்கி நடக்கவும், இருவரும் அவளை அழைத்தார்கள். அவள் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பதை எல்லாம் விசாரித்தார்கள்.
“நான் இங்க வேலை பாக்குறேன், ரகுவீர் சாரோட அசிஸ்டன்டா இருக்கேன்” என்றாள் ஹரி.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். ஹரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அடுத்த நாள் காலையில் அவள் சாப்பிட அமரும் போது பிரச்சினை செய்ய ஆரம்பித்தான் நீரவ்.
“பிரியா உனக்கு தெரியாதா? இந்த டேபிள் எங்க பேமிலிக்கான தனிப்பட்ட இடம். இங்க வேலை பாக்குறவங்க சாப்பிட கூடாது” என்றான் ரகுவீரை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டு.
ரகுவீரின் முகம் இறுக்கத்தை காண்பித்தாலும், அவன் நீரவ்வை எதிர்த்து ஒன்றும் கூறவில்லை. ஹரி முகம் கன்ற எழுந்து நின்று, ரகுவீருக்கு பரிமாறி விட்டு அவன் சாப்பிட்டதும், வெளியில் சென்று விட்டாள். எதற்கும் அழுவது அவள் இயல்பு அல்ல. ஏன் தன்னை இப்படி அவமானப் படுத்துவது போல் பேசுகிறான் என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.
உள்ளே ரகுவீர் “நீரவ், நீ பண்ணுறது எதுவும் சரி இல்ல” என்றான் கோபமாக.
நீரவ் “அண்ணா, நீ பண்ணுறது கூட எதுவுமே சரியா தான் இல்ல” என்றான்.
இருவரும் குஜராத்தி மொழியில் தான் பேசிக் கொண்டார்கள். இவர்கள் குஜராத்தின் பாரம்பரியமான தோஷி வம்சத்தை சேர்ந்தவர்கள்.
“இதுல உனக்கு என்ன பிரச்சினை?”
“எனக்கு பிரச்சினை இல்ல. பிரியாவுக்கு தான் பிரச்சினை. நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்னு, புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. காரணம் இல்லாமலா அஜயை வேலையை விட்டு தூக்கிட்டு, அவளை அசிஸ்டன்டா போட்டுருக்க? உங்கிட்ட அஜய் சொன்னானா வேலையை விட்டு நிக்க போறேன்னு? அதோட அஜய்னு இனி என்னோட அசிஸ்டன்ட்னு சொல்ற. உன்கிட்ட நான் அசிஸ்டன்ட் கேட்டேனா? ஏன் தேவை இல்லாம இந்த பொண்ணை, அவனோட இடத்துல வேலைக்கு சேர்த்திருக்க? ஏன் அவளை நம்ம பழக்கத்தை மறந்து, இந்த டேபிள்ல வச்சி சாப்பிட சொன்ன? ஏன் காலேஜுக்கு கூட டிராப் பண்ணுற? முதல்ல இவ்வளவு பண்ணுறியே? நம்ம தாத்தாவை பத்தி நினைச்சி பார்த்தியா?” என்றான் அவன் படபடப்பாக.
அவன் சொன்ன எதற்கும் பதில் சொல்லவில்லை ரகுவீர். “அவளை பிரியான்னு சொல்லாத. ஹரின்னு கூப்பிடு” என்று மட்டும் சொன்னான் அவன்.
தான் பக்கம் பக்கமாக வசனம் பேசியது அத்தனையும் வீண் என்று புரிந்து கொண்டான் நீரவ்.
“ஏன்?” என்றான் எரிச்சலாக.
“அவளை நான் மட்டும் தான் அப்படி கூப்பிடுவேன்”
“சரியா போச்சு, தோஷி குடும்பத்துல குண்டு போடுறதா முடிவு பண்ணிட்ட. அப்படி தானே? ஆனா ஒன்னு, இந்த விசயம் நம்ம குடும்பத்துக்கு தெரியுறதுக்குள்ள, நான் வந்த வேலையை முடிச்சிட்டு இந்தியாவுக்கு போகணும். அதுவரை கொஞ்சம் அடக்கி வாசி”
“அவ சின்ன பொண்ணு நீரவ். அவ படிப்பு முடிஞ்ச பிறகு தான் எதுனாலும் பண்ணுவேன்” என்றான் ரகுவீர் சிரிப்புடன்.
அதன்பின் அண்ணனும், தம்பியும் வெளியே செல்ல, கிளம்புவதற்கு தயாராக இரண்டு கார்கள் நின்றது. முதல் காரில் ரகுவீர் ஏறிக் கொள்ள, அவனுடன் அவனுடைய அலுவலக உதவியாளர் டேவிட் ஏற முயன்றான்.
நீரவ் “டேவிட், நீ முன்னாடி ஏறிக்கோ. நான் அண்ணன் கூட பேசணும்” என்றவன் சட்டென, ரகுவீரின் அருகில் அமர்ந்து விட்டான்.
காருக்கு அருகில் நின்ற ஹரிக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூட தெரியவில்லை. ஏற்கனவே நீரவ் அவளின் காலை சாப்பாட்டை உண்ண விடாமல் செய்து விட்டான். இப்போது இவனால் கல்லூரிக்கும் தாமதமாக செல்வது போல் ஆகி விடுமோ, என்று நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள் ஹரி.
காருக்குள் ரகுவீர் “நீரவ், நீ ரொம்ப ஓவரா போற. கம்பெனிக்கு போனதும் என்கிட்ட நீ வாங்க போற” என்று பல்லைக் கடித்தான்.
“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். டிரைவர் வண்டியை எடுங்க” என்றான் நீரவ்.
அதற்குள் அஜய் “என் கூட வா ஹரி, நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்ணுறேன்” என்று அடுத்து நின்ற காருக்கு அழைத்தான். அவளும் வேறு வழியின்றி அதில் சென்று அமர்ந்தாள். ஆனால் கல்லூரியில் இறங்குவதற்குள் அவளுக்கு தலைவலியே வந்திருந்தது. அந்த அளவுக்கு அஜய் அவளிடம், நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தான். அவளுடைய பூர்வீகம், குடும்பம் என்று கேட்டவன் அவளின் ஒரு வரி பதிலில், அவனுடைய வரலாற்றை நிறுத்தாமல் கூறத் தொடங்கி விட்டான்.
இது அன்று மட்டும் இல்லை, அந்த வாரம் முழுவதும் தொடர, ஹரி தன் நிம்மதியை இழக்கத் தொடங்கியிருந்தாள். எப்போதடா ரகுவீரின் கடனை அடைத்து விட்டு, இங்கிருந்து வெளியில் சென்று தங்கலாம் என்று ஏங்கும் அவளுக்கு, அஜயும், நீரவ்வும் அவளிடம் நடந்து கொண்டனர்.