எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெல்லினமல்ல வல்லினமே - கதைத்திரி

Selvi_Saran

Moderator

மெல்லினமல்ல வல்லினமே 1​

பதினேழு வருடங்களுக்கு முன்பு​

அந்த இரவு நேரத்தில் பேய் மழை என்பார்களே, அதுபோல மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் ஒரு பெண்ணின் கதறல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த மழை இரவு நேரத்தில் ஒரு மருத்துவரும், செவிலியரும் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.​

“ஷெர்லின், நான் சொன்ன மாதிரி ரெட்டை குழந்தை போல தான் தெரியுது. முதல்லயே ஹெட் குவாட்டர்ஸ் ஹாஸ்பிடலுக்கு அனுப்பியிருக்கணும்” என்று புலம்பினார் மருத்துவர் அம்பிகா.​

“ஆமா டாக்டர், இந்த மழையில லேண்ட்லைன் வேலை செய்யல. போன் பண்ணுனா தானே ஆம்புலன்ஸ் வரவழைச்சு இவளை ஷிஃப்ட் பண்ண முடியும்” என்று கண்ணில் நீர் துளிர்க்க கூறினார் செவிலியர் ஷெர்லின்.​

“ஆனா டாக்டர், எப்படியாவது இவளை காப்பாத்த முயற்சி செய்யுங்க. ப்ளீஸ். இவ என்னோட உயிர் தோழி. ஏற்கனவே வீட்டுல வச்சி பிரசவம் பார்க்குறேன்னு சொல்லி, போன தடவை இவளுக்கு பிறந்த குழந்தை, பிறந்து ரெண்டு நாளுல இறந்துடுச்சி. இந்த முறை இந்த குழந்தையையும், இவளையும் எப்படியாவது காப்பாத்துங்க” என்று மருத்துவரை நோக்கி கை எடுத்து கும்பிட்டார் அவர்.​

“நிச்சயம் நம்மாலான முயற்சியை நாம செய்யலாம். நீ கவலைப் படாதே. ஆனா பிரசவத்துக்கு சேர்த்துட்டு எப்படி தான் மனசாட்சி இல்லாம இவளோட புருஷன் இவளை இப்படி விட்டுட்டு போனானோ? இப்படிப்பட்ட அரக்கனோட உன்னோட தோழி வாழ்ந்து தான் ஆகணுமா?” என்றார் அம்பிகா.​

“அவளுக்கு வேற வழியில்லை டாக்டர். அம்மா அப்பா இல்லை அவளுக்கு. நான் என்னோட வான்னு சொன்னாலும், அதை ஏத்துக்கிற அளவுக்கு அவளுக்கு இன்னும் பக்குவம் வரல. கல்யாணம், புருஷன், குழந்தை இது தான் தன்னோட உலகம்ன்னு நினைச்சிட்டு இருக்கா. இப்படி பொம்பளைங்க இருக்குற வரை, இவ புருஷன் மாதிரி ஆம்பளைங்க திருந்த மாட்டாங்க” என்றார் ஷெர்லின் வருத்தமாக.​

அதற்குள் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கதறல் அதிகமாகவே, இருவரின் கவனமும் அவளிடம் திரும்பியது. இருவரும் சேர்ந்து அவளுக்கு தைரியம் கொடுத்து, அதட்டி, மிரட்டி குழந்தைகளை பிரசவிக்க உதவினார்கள். ஒரு வழியாக இரண்டு தேவதைகளை பெற்றெடுத்தார் அவர், கண்ணகி.​

குழந்தைகளை பெற்றெடுத்து கண்களும், உடலும் மயக்கத்திற்கு செல்ல கெஞ்சியது கண்ணகியை. ஆனால் இது அவர் ஓய்வெடுப்பதற்கான நேரம் அல்லவே. சக்தி எல்லாம் திரட்டி, அங்கே குழந்தைகளை சுத்தம் செய்து கொண்டு வந்து தொட்டிலில் கிடத்திய ஷெர்லினை, கையசைத்து தன் அருகில் அழைத்தார்.​

“ஷெர்லி, எனக்கு ஒரு உதவி செய்வியா? இல்ல, உதவி இல்ல. எனக்கு ஒரு வரம் குடுப்பியா?” என்றார் கண்ணகி.​

“உனக்காக நான் என்ன வேணும்னா செய்வேன். உனக்கு தெரியாதா கண்ணு?” என்றார் ஷெர்லின், கண்ணகியின் தலையை வருடியபடி.​

ஆம், ஷெர்லின், கண்ணகி இருவரும் உயிர் தோழிகள். இருவருக்கும் தாய் தகப்பன் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. இருவரும் ஒன்றாக வளர்ந்தது ஒரு அனாதை ஆசிரமத்தில் தான். ஷெர்லினுக்கு படிப்பு நன்றாக வரவே, அவர் தன் முயற்சியில் மிகுந்த சிரமத்திற்கிடையே செவிலியர் பயிற்சியை நிறைவு செய்து விட்டார். கண்ணகி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவே சிரமப்பட, ஆசிரம நிர்வாகி அவரை தையல், கூடை பின்னுதல், சமையல் முதலியவற்றில் பழக்கினார்.​

ஷெர்லினை விட கண்ணகி ஒரு வயது சிறியவர். ஷெர்லின் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு செவிலியர் பயிற்சிக்காக மூன்று வருடங்கள் வெளியூரில் தங்கியிருந்தார். அவ்வப்போது ஆசிரமத்தில் இருக்கும் போனில் பேசினாலும் பிரிவுத்துயர் இருவரையும் வாட்டியிருந்தது.​

குண்டளப்பட்டியை சேர்ந்த பண்ணையார் ஒருவர், ஆசிரமத்திற்கு மாதம் ஒரு முறை உணவுப் பொருட்கள், அவர் விவசாயத்தில் விளைந்த காய்கறிகள் எல்லாம் அனுப்பி வைப்பது வழக்கம். அந்த பண்ணையாரின் மகன் பழனிவேல் தான் உணவுப் பொருட்களை கொண்டு வருவார். அப்படி வரும்போது கண்ணகியை கண்ட பழனிவேல் அவர் மீது ஆசை கொண்டார்.​

பழனிவேலுக்கு அப்போது முப்பது வயது ஆகியிருந்தது. ஆனால் பழனிவேல், அவருடைய தாயார் காளியம்மாள் இருவரின் குணத்தை அறிந்த, அந்த ஊரார் யாரும் அவருக்கு பெண் தர முன்வரவில்லை. இப்போது கண்ணகியை கண்டதும் அவருக்கு மூளை வேகமாக வேலை செய்தது.​

காளியம்மாளிடம் அவருக்கு தோன்றிய யோசனையை கூறினார் பழனிவேல். அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை. அவர் உறவிலோ அவர்களின் இனத்திலோ யாரும் பழனிவேலுக்கு பெண் தர போவதில்லை. எனவே இப்படி ஒரு அனாதை பெண்ணை மணந்தால் அவருக்கு எத்தனையோ வகையில் நன்மை தான்.​

ஆசிரம நிர்வாகியிடம், மகனின் விருப்பத்தை மதித்து பெருந்தன்மையாக பெண் கேட்பது போல் காட்டிக் கொண்டனர், தாயும் மகனும். கண்ணகிக்கும் பழனிவேலை பிடித்து தான் இருந்தது. கம்பீரமும், அழகும் நிறைந்த அழகான இளைஞனாக பழனிவேல் அவரை கவர்ந்து தான் இருந்தார்.​

வேகவேகமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கண்ணகியை திருமணம் செய்து கொண்டார் பழனிவேல்.​

அந்த நேரத்தில் ஷெர்லின் மருத்துவ முகாம் ஒன்றிற்காக மலைப்பாங்கான இடம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து ஆசிரமத்திற்கு போன் செய்த போது கண்ணகி திருமணம் முடித்து சென்று விட்டிருந்தார்.​

அதன் பிறகு ஷெர்லினால் கண்ணகியை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் ஆசிரமத்தில் கொடுத்து சென்றிருந்த எண்ணிற்கு முயன்றால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. கண்ணகி கொடுத்து விட்டு சென்ற முகவரிக்கு நேரில் சென்றால், அந்த அரண்மனை போன்ற வீட்டின் கேட் அருகில் கூட ஷெர்லினை விட மறுத்தனர். இப்படியே இரண்டு வருடங்கள் கடக்க, ஷெர்லின் இந்த மருத்துவமனைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.​

கண்ணகி கூறிய செய்திகள் ஷெர்லினின் இதயத்தை நடுங்க செய்தது. கண்ணகியின் புகுந்த வீடு ஒரு நரகக் கூடாரமாக தான் தோன்றியது ஷெர்லினுக்கு.​

அந்த வீட்டில் ஆண்கள் மட்டுமே தெய்வப் பிறவிகள், பெண்கள் எல்லாம் புழுக்களை விடவும் கீழானவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர் காளியம்மாளும், பழனிவேலும். பழனிவேலின் தந்தை வேலப்பன் ஒரு அமைதிப் பேர்வழி. நியாயம் தெரிந்தவர். ஆனால் தாயையும் மகனையும் எதிர்க்கும் அளவு தைரியம் கொண்டவர் அல்ல. எனவே மருமகள் வீட்டில் அனுபவிக்கும் கஷ்டங்களை பார்த்தாலும் அவரால் வருந்த மட்டுமே முடிந்தது.​

கண்ணகி அங்கே ஒரு அடிமை போல நடத்தப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவர் முதன் முதலாக கருவுற்றார். அந்த குக்கிராமத்தில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் அப்போது நடைமுறையில் இல்லை. அதனால் கண்ணகியின் முதல் பெண் குழந்தை வீட்டிலேயே பிறந்தது.​

அதுவரை அவரிடம் சிறு கரிசனையோடு நடந்து கொண்டிருந்த பழனிவேல், பெண் குழந்தை என்று கேள்விப்பட்டதும் மீண்டும் முகம் திருப்பிக் கொண்டார். குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் சரியாக பால் குடிக்கவே இல்லை. அடுத்த நாள் காய்ச்சலில் விழுந்த அந்தப் பிஞ்சு, உலகத்தை விட்டு சென்று விட்டது.​

கண்ணகி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் காளியம்மாளோ, பழனிவேலோ ஒரு பெண் சிசுவுக்காக, சிறுதுரும்பை கூட அசைக்க மறுத்து விட்டிருந்தனர். அந்த அளவு ஆண் வாரிசு மோகம் அவர்களை மிருகமாக மாற்றி விட்டிருந்தது.​

சில மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானார் கண்ணகி. இந்த முறை அவர் மருத்துவமனையில் தான் குழந்தை பெற்றுக் கொள்வேன், இல்லாவிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.​

பிரசவவலி வந்த போது தன் பிடிவாதத்தை கைவிடாமல் மருத்துவமனை வந்து விட்டார். ஆனால் பழனிவேல் அவருடன் மருத்துவமனையில் இருக்க மறுத்து விட்டார். மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார்.​

இரவு நேர பணி என்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் மருத்துவமனைக்கு வந்த ஷெர்லின், எதிர்பாராமல் கண்ணகியை கண்டார். அதன்பிறகே தோழிகள் இத்தனை நாள் தங்கள் வாழ்வில் நடந்ததை பகிர்ந்து கொண்டனர். ஷெர்லின் இனி தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை, ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க போவதாக தெரிவித்தார்.​

கண்ணகி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர் திருமண வாழ்வில் தனக்கு நாட்டமில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். முதலில் கண்ணகிக்கு வலி இடைவெளி விட்டு வந்ததில் தோழிகளால் இடையூறின்றி பேச முடிந்தது.​

இப்போது குழந்தைகள் பிறந்து, மீண்டும் இரண்டும் பெண் குழந்தைகள் என்றதில் கண்ணகி மிகவும் பயந்து விட்டிருந்தார். இந்தக் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்.​

“ஷெர்லி, ஒரு குழந்தையை நீ எடுத்துக்கோ. ப்ளீஸ்” என்று கண்ணீருடன் கெஞ்சினார் கண்ணகி.​

“நானா? நான் எதுக்கு? நீ என்ன சொல்லுற கண்ணு?” என்றார் ஷெர்லின் குரல் நடுங்க.​

“எனக்கு ரெட்டை குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியாதுடி. நீ எப்படியும் கல்யாணம் செஞ்சிக்க போறதில்ல. யாரோ ஒரு குழந்தையை தத்தெடுத்து தானே வளர்க்க போற? அது என் குழந்தையா இருக்கட்டும். இந்த ரெண்டு குழந்தைல ஒண்ணாவது அந்த நரகத்துல இருந்து தப்பிச்சி, நிம்மதியா வாழனும். ப்ளீஸ். மாட்டேன்னு சொல்லாத”​

ரெட்டை குழந்தைகள் என்பதில் இரண்டு குழந்தைகளும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தது. கண்ணகியின் பால் நிறத்தை கொண்டு பிறந்திருந்த அந்த பூஞ்சிட்டுக்களை பார்த்துக் கொண்டே இருந்தார் ஷெர்லின்.​

“நான் கண்டிப்பா நல்லா பாத்துப்பேன் கண்ணு. ஆனா ஒரு விஷயம் சொல்றேன். நீ என் பேச்சை ஒரு தடவை கேளேன். உன் புருஷன் வர்றதுக்குள்ள வா. உன்னையும் உன்னோட ரெண்டு குழந்தைகளையும் நான் பார்த்துக்கிறேன். நீ ஏன் அந்த நரகத்துல இருந்து கஷ்டப் படணும்? என்கூட வாடி. நாம யார் கண்ணுலையும் படாம நிம்மதியா வாழலாம்” என்றார் ஷெர்லின்.​

“அது நடக்காது. நான் இங்க இருந்தா ஒரு குழந்தை வாழ்க்கையாவது நல்லா இருக்கும். இதுவே நான் உன்கூட வந்துட்டா அந்த அரக்க கூட்டம் என்னையும் குழந்தைகளையும் சும்மா விடாது. நான் சொல்லுறதை மட்டும் கேளு” என்றார் கண்ணகி.​

ஷெர்லின் ஒத்துக் கொண்டார். இரு பெண்களின் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர் அம்பிகாவும், அவர்களுக்கு உதவி செய்யவே ஒரு குழந்தையை ஷெர்லின் அவரின் வாழ்வுக்கான அர்த்தமாக ஏற்றுக் கொண்டார்.​

மறுநாள் மருத்துவமனைக்கு வந்த பழனிவேல் இந்த முறையும் பெண் குழந்தை என்ற கோபத்தில், மருத்துவமனை என்றும் பாராமல் கண்ணகியை அடிக்கப் பாய்ந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்துவதற்குள் ஒரு வழியாகி விட்டனர்.​

ஆனால் அன்றே கண்ணகியை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார் பழனிவேல். ஷெர்லின் அடுத்த சில நாட்களில் தன் வளர்ப்பு மகளுடன் அந்த ஊரை விட்டே சென்று விட்டிருந்தார்.​

  • தொடரும்….​

இது நான் முதன் முதலில் நேரடியாக சைட்டில் எழுதும் கதை நண்பர்களே. தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.​

 
Top