“சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..” என்ற கந்தசஷ்டி பாடல் நன்றாக புலர்ந்திருந்த காலை வேளையில் அந்த வீட்டினில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அதனுடன் சேர்ந்து கோமதியும் பாடிக்கொண்டிருந்தார். வாய் பாடினாலும் கை அதன் போக்கில் அவரது பேத்தி சாருமதிக்கு தேவையான உணவுகளை கட்டிவைத்துக் கொண்டிருந்தது.
நரைத்த தலையும் சுருங்கிய தோலும் என எழுபத்தி எட்டு வயது நிரம்பிய கோமதி தான் அந்த வீட்டின் ஆணிவேர்!
பத்து வருடங்களுக்கு முன் கணவனை இழந்தவர் அவரின் ஒரே மகனான குமரேசன் வீட்டில் இருக்கிறார். குமரேசனின் மனைவி ஜெயந்தி. அவர்களுக்கு அரவிந்தன் என ஒரு பையனும் சாருமதி என்ற ஒரு பெண்ணும் இருக்கிறார்கள்.
அரவிந்தனிற்கு ஒருமாதம் முன்பு தான் வந்தனா என்ற பெண்ணுடன் நிச்சயம் முடிந்திருக்க, இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
கோமதி தயாராக கட்டிவைத்திருந்த உணவுகளை எடுத்துக்கொண்ட சாருமதி, “பை கோம்ஸ்!” என அவரின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவளது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்தாள்.
__________
“தேவா! என்னப்பா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட?” என்று செல்வராணி தன் புதல்வன் தேவாவிடம் வினவ,
“அம்மா! ஒரு கிளையன்ட் எட்டு மணிக்கு மீட் பண்ண சொன்னாங்க ம்மா. அதான் அவரை பார்த்துட்டு அப்படியே ஆபிஸ் போய்டுவேன்” என்றபடி, ‘பையில் அனைத்தும் சரியாக இருக்கிறதா?’ என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரிப்பா. நைட்டே உன்கிட்ட பேசனும்னு சொன்னனே?” என்ற செல்வராணியின் கேள்வியில், புருவம் சுருங்கியவாறே, “கல்யாணத்தை பற்றியா ம்மா?” என தன் தங்கை வந்தனாவின் கல்யாணத்தை குறித்து கேட்டான்.
ஆனால் செல்வராணியோ அவனின் கல்யாணத்தை பற்றி பேச முடிவெடுத்தவர். “ஆமா தேவா. கல்யாணத்தை பற்றி தான்!” என்றார் பொதுவாக.
“சரிம்மா. இன்னைக்கு ஈவ்னிங் வந்து பேசுறேனே.. இப்ப எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு” என அவர்களின் வீட்டை விட்டு வெளியேறினான் தேவா என்று அழைக்கப்பட்ட தேவேந்திரன்!
பதின் பருவத்தில் தந்தையை இழந்த தேவேந்திரன் தான் அவனது குடும்பத்தை பார்த்துக்கொள்கிறான். அன்னை செல்வராணி மற்றும் தங்கை வந்தனா என இருவருக்கும் அரண்போல் இருக்கிறான். தேவாவின் தங்கை வந்தனாவை தான் சாருமதியின் அண்ணன் அரவிந்தன் திருமணம் புரியப்போகிறான்.
அவனது காரினை எடுத்துக்கொண்டு அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்ட கஃபேவில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் அவர் வர, அவருடன் தனது கலந்துரையாடலை தொடங்கினான்.
வியாபாரத்தில் சரிவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அந்த வாடிக்கையாளரின் நிறுவனத்தில் உள்ள நிதி நிறுவாகத்தை ஒருவாரமாக அக்குவேறு ஆணிவேராக பிரித்து பார்த்திருந்தான் தேவா. இறுதியில், அவர்களுக்கு சாதகமான ஆலோசனைகளை வழங்கினான் அந்த நிதி ஆலோசகன்.
தேவா கூறுவதை கூர்ந்து கேட்டுக்கொண்ட வாடிக்கையாளர், “நீங்க சொல்லுற மாதிரி பண்ணா? எங்களோட கம்பெனியை சரிவில் இருந்து கண்டிப்பா மீட்டுடலாமா?” யோசனையுடனே கேட்டார்.
அவரின் சந்தேகம் அவனுக்கு சிறு சலிப்பை கொடுத்தாலும், “இந்த முறையை நீங்க முயற்சி செய்தீங்கன்னா? கண்டிப்பா முடியும்” என நம்பிக்கை அளித்தான்.
“ஓகே மிஸ்டர் தேவேந்திரன். இந்த பிளானோட டாக்யூமெண்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு சனிக்கிழமை எங்க ஆபிஸ் வந்துருங்க. நாம அக்ரீமெண்ட் போட்டுடலாம்” என்று சொல்லி கைகுலுக்கி விடைபெற்றார்.
அந்த ஒப்பந்தம் முடிந்ததில் ஏக மகிழ்ச்சியில் திளைத்த தேவேந்திரன் சரியாக ஒன்பது மணி முப்பது நிமிடமாகும் முன்னே அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கு விரைந்தான்.
தேவேந்திரன், பி.காம் முடித்த கையோடு வேலை பார்த்துக்கொண்டே சி.ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தான். இப்பொழுது ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் நிதி ஆலோசகனாக பணிபுரிகின்றான்.
தனக்கென ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளவன், அலுவலக நேரத்தை தவிர்த்து தனக்கான வாடிக்கையாளரின் வட்டத்தையும் பெருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
__________
“ஒன், டூ, த்ரீ, ஃபோர், ஃபைவ், சிக்ஸ், செவேன், எயிட்” என்று சுற்றியுள்ள சுவர் முழுக்க கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் இருந்த பதினைந்து நபருக்கு உடலை வளைத்து ஏரோபிக் நடனம்(aerobic dance) பயிற்றுவித்துக் கொண்டிருந்தாள் சாருமதி!
ஏரோபிக்(aerobic) உடற்பயிற்சி என்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இதயம் மற்றும் மூச்சுத் துடிப்பை உயர்த்த பெரிய தசைகளைப் பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு செய்யப்படும் உடற்பயிற்சியாகும்.
அதில் ஏரோபிக் நடனம், தாள இசைக்கு ஏற்ப உடற்பயிற்சியை வேடிக்கையாகச் செய்யும் முறை. அந்த நடனத்தை தான் சாருமதி அங்கிருந்தவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்தாள்.
அவ்வளவு நேரம் தானும் ஆடிக்கொண்டு அங்கிருந்தவர்களுக்கும் பயிற்சியளித்த சாருமதி, அவர்களை சற்று நேரம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
தினமும் தவறாமல் ஏரோபிக் நடனம் ஆடுவதால் உடம்பை மிக கட்டுக்கோப்பாகவே வைத்திருந்தாள் சாருமதி. தோள்வரை உள்ள முடியை ஹை போனிடைல் போட்டு நடனத்திற்கு ஏதுவாக இடுப்புவரை உள்ள டீஷர்ட் மற்றும் ட்ராக் பாண்ட் அணிந்திருந்தாள்.
மூச்சு வாங்கிய படியே பூந்துவாலையை எடுத்து முத்துமுத்தாக பூத்த வேர்வையை ஒற்றியெடுத்தவள்,
பக்கத்தில் இருந்த ஃபோனை எடுத்துப்பார்த்தாள். அதில் அவள் தவற விட்ட அன்னை மற்றும் அவளின் செல்ல பாட்டியின் அழைப்புகள் வரிசையாய் படையெடுத்தன.
தன் பாட்டிக்கு அழைத்தவள், “என்ன பாட்டி? என்ன விஷயம்? நீயும் அம்மாவும் மாத்தி மாத்தி கால் பண்ணிருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லா தான இருக்கீங்க?” என்றாள் தன் குரலில் இருந்த படபடப்பை காட்டிக்கொள்ளாமல்.
இதுப்போல் ஒருமுறை வரிசையாக அழைப்பு வந்த பொழுது அவளின் பாட்டியை மருத்துவமனையில் சேர்த்தது நினைவு வந்தது.
“வீட்ல எல்லாரும் நல்லாருக்கோம் சாரு. நீ எப்ப டா வீட்டுக்கு வருவ?”
“என்னமோ பக்கத்து ஊர்ல இருக்குற மாதிரி கேட்குறீங்க? நான் கிளாஸ்க்கு தான வந்திருக்கேன். ஈவ்னிங் வந்துடுவேன் பாட்டி”
“சரி டா. பார்த்து வா” என அழைப்பினை துண்டித்தவரிடம்,
“சாரு இதுக்கு சம்மதிப்பாளா அத்தை?” என கையை பிசைந்துகொண்டே கேட்டார் ஜெயந்தி.
“என்னமா சொல்லணும்? அவங்க பேசினாங்கன்னா உடனே சரின்னு சொல்லிடனுமா?” குரலில் சற்று கோபம் தெறித்தது.
அவ்வளவு நேரம் அவர்களின் பேச்சில் தலையிடாமல் இருந்த வந்தனா, “எனக்கும் அம்மாவுக்கும் ஓகே அண்ணா. நீ தான் உன்னோட முடிவை சொல்லணும்” என்றாள் தாயையும் சேர்த்துக்கொண்டு.
‘தங்கையின் திருமணம் நடக்கவுள்ள நிலையில் தன் திருமணத்தை பற்றி பேச வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு கல்யாணம் என்பது அவ்வளவு சாதாரணமா போய்விட்டதா?’ என சாருமதியின் குடும்பத்தை பற்றி யோசித்த தேவா, “என்னால உடனே முடிவெல்லாம் சொல்ல முடியாது. எனக்கு டைம் வேணும்” என அவர்களிடம் சொல்லிவிட்டு அறைக்கு சென்றான்.
அவனும் சாருமதியை இருமுறை பார்த்திருக்கிறான். ஏன்? அரவிந்தன்-வந்தனா நிச்சயத்தில் அவளிடம் பேச கூட செய்திருக்கிறான். ஆனால் திருமணம் என்றதும் அவனுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது.
தன்னை நம்பி பணத்தை முதலீடு செய்யும் வாடிக்கையாளருக்காகவே அவ்வளவு யோசிப்பான். இன்று அவன் திருமணம் குறித்த முடிவு, அதுவும் அவனுக்கு பார்த்திருப்பது தங்கையின் வருங்கால நாத்தனார் என்று யோசிக்க தொடங்கியவனை குழப்பமேகங்கள் சூழ்ந்துக்கொண்டது.
‘எதற்கு இப்பொழுது இந்த திருமண பேச்சை எடுத்தனர்? ஒருவேளை நான் முடியாதென்று சொன்னால்..? வந்தனாவின் திருமணம்..?’ என எதிர்மறையாக யோசிக்க தொடங்கியவன், ‘இல்லை இல்லை அப்படியெதுவும் நடக்காது. நாளைக்கே அவங்கள பார்த்து பேசிடனும்’ என்று ஒரு முடிவிற்கு வந்தான்.
__________
“யாரை கேட்டு எனக்கு கல்யாணம் முடிவு செய்தீங்க? கோம்ஸ் நீயும் இதுக்கு உடந்தையா?” சாருமதி காட்டமாகவே அங்கிருந்த அனைவரையும் பார்த்துக் கேட்டாள்.
அப்பொழுது தான் சாருமதியிடம் தேவாவை அவளுக்கு மாப்பிள்ளையாக பார்த்திருப்பதை பற்றிக் கூறியிருந்தனர்.
“உனக்கென்னமோ இது புதுசு மாதிரி கத்துற? உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கிறது தெரியும் தான?” என்ற பாட்டியின் கேள்வியில் சாருமதியால் அவரை முறைக்க மட்டுமே முடிந்தது.
“தேவா தம்பியை பற்றி நல்லா விசாரிச்சிட்டோம் சாரு. எல்லாமே நமக்கு செட் ஆகுது. அதனால..” என்ற குமரேசனை தடுத்தவள்,
“அப்பா! முதல்ல அண்ணாவோட கல்யாணம் நடக்கட்டும். அடுத்து என்னோடதை பார்த்துக்கலாமே..” என அமைதியாக சாரு எடுத்து கூறினாள்.
“சாரு! என்னோட நிச்சயத்துலேயே தேவாவை நாங்க பார்த்தோம். எவ்வளவு பொறுப்பா இருக்காங்க. விசாரிச்ச வரைக்கும் நல்லவிதமா தான் சொல்லுறாங்க” என்ற அரவிந்தனை உருத்து பார்த்தவள்,
“ஓஹ்.. அப்ப எனக்கு பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை அப்படி தான? நீங்களா பார்த்து முடிவு பண்ணிட்டா போதுமா?” என்று கத்தினாள்.
பின் தன் குரலை தழைத்து, “என்னை இந்த வீட்டைவிட்டு துரத்தினா போதும்னு இருக்கீங்க போல..” என்றாள்.
ஜெயந்தி, “ரொம்ப பேசாத டி. எல்லாமே விசாரிச்சி, பொருத்தம்லாம் பார்த்துட்டு தான சொல்ல முடியும். முதல்லயே உன்கிட்ட சொன்னதும் நீ ஆசைய வளர்த்துகிட்டு, அதுக்கப்புறம் நமக்கு செட் ஆகலைனா என்ன பண்ணுறது?” என மகளை கேட்டார்.
“அம்மா..” என்ற சாருவிடம்,
“நீ அந்த தம்பிக்கிட்ட பேசிப்பாரு சாரு. உனக்கு பிடிச்சாதான் எல்லாமே நடக்கும். இப்போதைக்கு ரெண்டு வீட்லயும் தான் பேசிருக்கோம். நீயும் அந்த தம்பியும் பேசிட்டு உங்க முடிவை சொல்லுங்க” என குமரேசன் சொல்லிவிட்டு அகல, ஜெயந்தி அவரை பின்தொடர்ந்தார்.
“நல்லா யோசி சாரு” என தங்கையிடம் சொல்லிய அரவிந்தன் அவனது அறைக்கு சென்று வந்தனாவுடன் ஃபோனில் மூழ்கிவிட்டான்.
“முதலிலேயே அபசகுணமா பேசாத சாரு! தேவாக்கிட்ட பேசி பார்த்துட்டு சொல்லு” என அழுத்தமாக கூறிவிட்டு சென்றார்.
ஏனோ சாருமதியால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளுக்கு திருமணத்திற்கு பார்ப்பதை அவளும் அறிவாள்.
ஏற்கனவே இரண்டு வரன்கள் முடியும் அளவிற்கு வந்து நின்றுபோனது.
அவளுடைய படிப்பில் இருந்து இப்பொழுது ஏரோபிக் இன்ஸ்ட்ரக்டராக(Aerobic Instructor) இருப்பது வரை அனைத்தும் அவளின் விருப்பமே!
இவ்வளவு ஏன்? அவள் ஆசைப்பட்டாள் என ஒரு யூடியூப் சேனல் கூட துவங்கி இருக்கிறார்கள்.
அப்படியிருக்கையில் தன்னிடம் அனைத்தையும் முடிவு செய்துவிட்டு கூறுவதாகவே அவளின் மனம் முரண்டியது. இந்த திருமண விஷயத்தில் அவளை கட்டாயப்படுத்துவதை போல் தான் உணர்ந்தாள்.
வேறொருவனாக இருந்திருந்தால் இவ்வளவு யோசித்திருக்க மாட்டாளோ? என்னவோ? அவள் வருங்கால அண்ணியின் அண்ணன் என்பதால் மிகவும் குழம்பி போனாள்.
திடீரென்று அவர்களுக்கு முடிவான திருமணத்தை பற்றியே சிந்தித்து, குழம்பி இரவு முழுவதும் தேவாவும் சாருவும் தூக்கத்தை தொலைத்தனர்.
மறுநாள் காலையில் தன் முகத்தையே பார்த்த அன்னையிடம், “என்னமா?” என்றான் தேவா.
“இன்னைக்கு நம்மள சம்பந்தி அவங்க வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க தேவா. இப்ப தான் ஃபோன் பண்ணாங்க”
“சரிம்மா. ஈவ்னிங் நான் வந்ததும் நம்ம ரெண்டு பேரும் போகலாம். நானும் அவங்ககிட்ட பேசனும்னு தான் இருக்கேன்” என அலுவலகம் கிளம்பினான்.
மாலையில் தேவாவும் செல்வராணியும் சாருமதியின் வீட்டிற்கு வந்திருந்தனர். வீட்டில் சாருமதியை தவிர அனைவரும் இருந்தனர்.
வந்தனாவின் நிச்சயத்தை பற்றி பேசுவதற்கு தேவா ஏற்கனவே பலமுறை அங்கு வந்திருந்தாலும் இம்முறை அவனுக்கு வரவேற்பு பலமாக இருப்பதாகவே உணர்ந்தான்.
தொண்டையை செருமிய குமரேசன் பேச்சினை தொடங்க முயன்றார். அவரை தடுத்த கோமதி தானே பேசுவதாக கூறினார்.