எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இனியவளே! என் இணையிவளே! - கதை திரி

Krishna Tulsi

Moderator
இனியவளே - 1
ஓர் இருண்ட நள்ளிரவு. மேகக்கூட்டங்கள் திரண்டு, செவ்வானமாக காட்சியளித்து மழை வரும் அறிகுறியை உணர்த்தின. சற்று நேரத்தில் ஆயிரம் ஊசிகள் வின்னிலிருந்து தரையிறங்குவதுபோல் கனத்த மழை பெய்யத் துவங்கியது. புயல் மழையிலும் அந்த நீண்ட சாலையில் ஒரு டாக்ஸி வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அன்று தன்னுடைய கடைசி சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர் மழையையும் பொருட்படுத்தாமல் மின்னலென வாகனத்தை ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வாகனத்தை நிறுத்துமாறு தன் கையை நீட்டி சைகை செய்தாள். அவளைக் கண்டதும் அந்த ஓட்டுனருக்கு குழப்பமும், பயமும் உண்டாயிற்று. எனினும் அவளுடைய நிலையைக் கண்டு அவளருகே நிறுத்தினார்.

அவள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அந்த வண்டியினுள் ஏறினாள். வாகனம் மீண்டும் பயணிக்க அந்த ஓட்டுனர், "நீங்க எங்க போகணும் மேடம்?" என்று கேட்க அவள் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்றிற்கு செல்லவேண்டும் என்று சுருக்கமாக பதிலளித்தாள். அவளுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அவர் முன்கண்ணாடியின் மூலமாக கவனித்துக்கொண்டே இருந்தார்.

அவளுடைய கைகால்கள் பதற்றத்தால் நடுங்கின. அந்த டாக்சியின் இரு பக்கங்களிலும் உள்ள கதவுக் கண்ணாடிகளை வேகமாக ஏற்றினாள். அவள் கண்ணாடியின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது தற்செயலாக அவளுடைய பார்வை முன்கண்ணாடியின் பக்கம் சென்றது. அந்த ஓட்டுனர் தன்னை கவனிக்கிறார் என்பதை அறிந்து பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு இயல்பாக அமர்ந்தாள். பின் தன்னுடைய கைபேசியில் எதையோ செய்துகொண்டிருந்தாள்.

நட்சத்திர விடுதி வந்ததும் அவசர அவசரமாக டாக்சியிலிருந்து இறங்கினாள். தன் கைக்கு வந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த ஹோட்டலினுள் நுழைந்தவள் தன் அறைக்குச் செல்ல அந்த லிஃடினுள் புகுந்தாள். அறை இருக்கும் தளத்தின் எண் பொறிக்கப்பட்ட அந்த பொன்னிற பொத்தானை பலமுறை வேகமாக அழுத்தினாள். அடிக்கடி அவளுடைய கண்கள் அந்த லிஃடின் வெளியே பதற்றத்துடன் நோக்கியது. சிறிதுநேரத்தில் அந்த லிஃடின் உலோக கதவுகள் தாமாக மூடிக்கொண்டன.

அவள் தன் தளத்தை அடைந்ததும் விரைந்து வெளியேறி தன்னுடைய அறையை நோக்கிச் சென்று கதவை தாழிட்டாள். உள்ளே வந்தவள் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அந்த குளிர்ந்த அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

ஏதோ தோன்ற விரைந்து லக்கேஜை எடுத்து தன்னுடைய துணிமணிகளை அதனுள் அவசர அவசரமாக நிரப்பத் துவங்கினாள். அப்போது அந்த அறையின் அழைப்புமணி ஒலித்தது. அதைக் கேட்டவுடன் அவளுடைய நெஞ்சத்தில் குளிர் பரவியது, இதயம் இயல்பைவிட பலமடங்கு வேகமாக துடித்தது.

அந்த கதவையே வெறித்தவண்ணம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அழைப்புமணி மூன்றுமுறை ஒலித்துவிட்டு பின் நின்றது. அப்போது அவள் பயத்துடன் மெதுவாக கதவை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கைப்பிடியை மெல்ல திருகி கதவைத் திறந்தபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.

ஒரு வாரம் கழிந்தது. அன்று காலைப் பொழுதில் அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் வரவேற்புப் பகுதிக்குச் சென்று மானேஜரை அழைக்குமாறு கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தனர். வரவேற்பில் இருந்த பெண், மானேஜரை அழைக்கவும் அங்கு விரைந்து வந்தவர், "எக்ஸ்கியூஸ்மீ லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்...ஐ ஆம் தி மேனேஜர் ஃப் திஸ் ஹோட்டல். எனி பிராப்லம்" என்று அங்கு இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், "உங்க சர்வீசஸ் இவ்வளவு மட்டமா இருக்கும்னு நான் நினைச்சி பாக்கல. இது தான் நீங்க உங்க கஸ்டமர்ஸ பாத்துக்குற லட்சணமா? இப்படிப்பட்ட மோசமான சர்வீஸ நான் எந்த ஹோட்டல்லயும் பார்த்ததில்ல..." என்று சரமாரியாக மானேஜரை திட்டினார். அவருடைய வசைகளை வாங்கியபோதும் அந்த மானேஜர் தன் முகத்தில் எந்தஒரு சலனமும் காட்டாமல், "ஐ அம் ரியல்லி சாரி ஃர் தி இன்கன்வீணியன்ஸ் சார். என்ன பிரச்சனன்னு சொன்னீங்கன்னா அத உடனே நாங்க சரி செஞ்சிடுவோம்" என்று பதிலுரைத்தார்.

உடனே, "இன்னைக்கு காலைல நான் ஃஸ் வாஷ் பண்ணும்போது தண்ணி ரொம்பவே பேட் ஸ்மெல் அடிச்சது. அத சீக்கிரமா பாத்து சரிபண்ணுங்க" என்று எரிச்சலுடன் கூறவும், "டோன்ட் வொரி சார். நீங்க உங்க ரூம்க்கு போங்க, அத நாங்க இப்பவே பாத்துடறோம்" என்று கூறவும் அங்கிருந்த அனைவரும் கலைந்து தங்களுடைய அறைக்குச் சென்றனர்.

அந்த மானேஜர் தனக்கு கீழ் பணிபுரியும் இருவரை என்னவென்று பார்ப்பதற்காக தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது, "ராஜு, இந்த பிரச்சனை எப்பயிருந்து இருக்கு?" என்று அதிகாரக் குரலில் கேட்டவுடன் அவன், "எங்களுக்கே, இப்ப தான் சார் தெரியும்.." என்று தயங்கியவாறே கூறவும் அவனை ஓரக்கண்ணால் முறைத்தார். மூவரும் அந்த ஹோட்டலின் மேற்கூரையை அடைந்தனர்.

அந்த பறந்து விரிந்த மொட்டை மாடியின் ஒரு பகுதியில் பத்திற்கு பத்து அடி உருளை வடிவத்தில் நான்கு தொட்டிகள் இருந்தன. அதிலிருந்து சில அறைகளின் பயன்பாட்டிற்கு நீர் சேகரிக்கப்பட்டிருந்தது. மானேஜர் சைகை செய்ய ராஜு ஒவ்வொரு தொட்டியாக ஏறிப்பார்த்தான். அப்போது ஒரு தொட்டியை திறந்தபோது அவன், 'ஆ' என அலறினான். ஏனென்றால் அதில் பாதி அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. அது வேறுயாருமல்ல அன்று பதற்றத்துடன் டாக்சியில் ஏறிய அதே பெண்.

வருடங்கள் சில உருண்டோடின. அழகிய காலை பொழுது. கீழ்வானில் ஆதவன் தன்னுடைய கிரணங்களை மெல்ல படரவிட்டுக்கொண்டிருந்தான்.

'கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்...'


என்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய வெங்கடேச சுப்ரபாதம் ஹாலிலுள்ள தொலைக்காட்சியில் ஒலித்துக்கொண்டிப்பது அவளுடைய செவியில் விழுந்தது. கண்கள் மூடியவண்ணம் தன் வலதுகையை நெஞ்சில் வைத்து, 'இறைவா! என்னை எப்போதும் நல்ல வழியில் நடத்திச் செல்வாயாக' என்று வணங்கி உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் ஒற்றிக்கொண்டு தாமரை மலர்போன்ற தன் நயனங்களை மெல்லத் திறந்தாள் சங்கமித்ரா.

பின் தன்னுடைய படுக்கையிலிருந்தவாறே பூமாதேவியை கைகளால் தொட்டுவணங்கி செந்நிறப் பாதங்களை தரையில் பதித்தாள். பல்துலக்கி முகம் கழுவிவிட்டு தன்னுடைய காலை காப்பிக்காக சமையலறைக்குச் சென்றாள். அவள் வருவது தெரிந்ததும் அதுவரையில் கேட்டுக்கொண்டிருந்த பேச்சுச்சத்தம் அப்படியே நின்றது.

அங்கு நின்றுகொண்டிருந்த தன்னுடைய தந்தை தங்கராஜிற்கும் தாய் வனஜாவிற்கும் காலைவணக்கத்தை தெரிவித்தவள் காப்பி கோப்பையை தாயிடமிருந்து வாங்கிக்கொண்டு ஹாலிலுள்ள சோஃவில் அமர்ந்து மிடறுகளாக அருந்தத்துவங்கினாள். அப்போது சமையலறையில் மீண்டும் பேச்சுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது.

"அஞ்சு வருஷத்துக்கு முன்னால இன்னைக்கு நம்ம மித்ராவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கும்" என்று அவளுடைய அன்னை வனஜா சோகத்துடன் கூறவும் மித்ராவின் கண்கள் தாமாகவே எதிரே உள்ள கண்ணன் புகைப்படம் உள்ள நாட்காட்டியின் பக்கம் சென்றது. அதில் ஜூன் ஏழு என்று இருப்பதைக் கண்டதும் அவளுடைய மனம் ஐந்து வருடங்களுக்கு முன் பயணித்தது.

மணமேடையில் கழுத்தில் மாலையும் கண்களில் கண்ணீருமாக நின்றது நினைவிற்கு வந்தது. நிகழ்காலத்திற்கு வந்தவள் தன் கையால் கன்னத்தை தொட்டபோதுதான் அவள் கண்களிலிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்திருப்பதை உணர்ந்தாள்.

சமையலறையில் தாயின் பேச்சுச்சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் தன் கவனத்தை அங்கு செலுத்தினாள். "என் பிள்ள வாழ்க்கை இப்படியா ஆகணும்?" என்று அவளுடைய தாய் ஆற்றாமையால் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்டாள். ஐந்து ஆண்டுகள் கடந்தும் தாயின் வேதனை சிறிதும் குறையவில்லை என்பதை உணர்ந்தவள் தன் சோகத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் சமயலறைக்குச் சென்றாள்.

தன் பெற்றோரை அழைத்து ஹாலிலுள்ள சோஃவில் அமரச்செய்தாள். அவர்களின் முன் மண்டியிட்டு இருவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, "நீங்க ரெண்டுபேரும் இன்னும் அத மறக்கலையா? முடிஞ்ச விஷயத்தப்பத்தி பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. அத யாராலும் மாத்த முடியாது; வேதனையும், வலியும் மட்டும் தான் மிஞ்சும். இப்படி உங்கள பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால இனிமேல் பழச மறந்துட்டு நாம எல்லாரும் சந்தோஷமா இருப்போம். சரியா?" என்று கேட்பதைப் பார்த்ததும் அவள் தாய் கண்களிலிருந்து நீர் பெருகியது.

"ஆனாலும் உன் வாழ்க்கைல இப்படி நடந்திருக்க கூடாது மித்ரா" என்று தன் வருத்தத்தை மீண்டும் வெளிப்படுத்த அவளோ, "அம்மா யார் வாழ்க்கைல எப்போ என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. ஆனா நடக்குறது எல்லாமே நல்லதுக்குதான்…வருத்தப்படாதீங்க" என்று கூறி தாயைத் தேற்றினாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த மித்ராவின் தந்தை தங்கராஜன் தன் மனைவி வனஜாவின் கண்ணீரை துடைத்துவிட்டு, "இனிமேல் யாரும் பழச நினைக்கவும் கூடாது, அழவும் கூடாது. சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்" என்று கட்டளையிடுவதுபோல் நகைச்சுவையாகக் கூறவும் பெண்கள் இருவரும் புன்னகையுடன் ஒப்புக்கொண்டனர். சமையல் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வனஜா சென்றுவிட மித்ராவிடம் அவளுடைய தந்தை, “மித்து இன்னைக்கு ரெண்டு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னியே. எங்க?" என்று விசாரித்தவாறே தன்னுடைய மகளுடன் சோஃவில் சேர்ந்து அமர்ந்தார்.

அவள் இரண்டு பள்ளிகளின் பெயர்களைக் கூறினாள். சிறு அமைதிக்குப் பின், "மதுரைல அந்த ஸ்கூல்ல வேல பார்த்தமாதிரியே இருந்திருக்கலாம். ஒரு மாசமா இங்க சென்னைல வேல தேடி அலையுற, ஆனா ஒரு வேலகூட கிடைக்கல. ஏன் அந்த வேலைய விட்டுட்ட?" என்று தந்தை மகளைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு, "அப்பா, எனக்கு நீங்க ரெண்டுபேரும்தான் உலகம். லோ-சுகர்னால மயக்கமாகி கீழவிழுந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டதும் நான் எப்படி பதரீட்டேன் தெரியுமா? அதனால உங்கள பத்திரமா பாத்துக்க இங்க வந்திருக்கேன். கவல படாதீங்கப்பா, நான் கோல்ட் மெடலிஸ்ட். எனக்காக ஒரு வேல கண்டிப்பா காத்திருக்கும். சோ பீ ஸ்ட்ராங், பீ பாசிடிவ்" என்று நம்பிக்கையுடன் கூற தங்கராஜன் புன்னகை புரிந்தார்.

நேர்காணலுக்காக தயாராகியவள் தன்னுடைய தந்தையிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றாள். பின் தாயைப் பார்ப்பதற்காக சென்றபோது, “இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னீல. ஆல் தி பெஸ்ட்" என்று வனஜா தன் மகளை வாழ்த்த, மித்ரா தன் தாயை கட்டியணைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

மாலை ஐந்துமணிக்கு சோர்வு படிந்த முகத்துடன் மித்ரா வீட்டினுள் நுழைந்தாள். தன் அறைக்குச் சென்று முகம் கைகால்களை அலம்பிவிட்டு மீண்டும் ஹாலிலுள்ள சோபாவில் அமர்ந்தாள். அதே சமயம் அவளுடைய தந்தை தங்கராஜனும் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பினார். மகள் சோர்வுடன் அமர்ந்திருப்பதைக் காணவும், "என்னடா ரொம்ப அலைச்சலா?" என்று வினவ மித்ராவோ 'ஆம்' என்று மேலும் கீழுமாக தன் தலையை அசைத்தாள்.

அப்போது தன் கையில் மூன்று காப்பி கோப்பைகளைக் கொண்ட ட்ரேயை ஏந்தியவாறு வனஜாவும் அங்கு வந்தார். ஒவ்வொருவருக்குமான அந்த கோப்பைகளை கொடுத்துவிட்டு தானும் அந்த பேச்சை கவனிக்கத்துவங்கினார். "இன்டர்வியூ என்ன ஆச்சு?" என்று தந்தை வினவ அதற்கு, "இங்க பணத்துக்கும் சிபாரிசுக்கும் இருக்குற மதிப்பு படிப்புக்கும், திறமைக்கும் இல்லவே இல்லப்பா" என்று சிறிது கோபாம்கலந்த வருத்தத்துடன் கூறினாள்.

அவளுடைய மனநிலையை நன்கு உணர்ந்த தங்கராஜன் ஒரு புன்முறுவலுடன், "மித்ரா, உன் திறமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் நல்ல வேல கண்டிப்பா கிடைக்கும்" என்று பெருமிதத்துடன் கூறவும் மகள் சாந்தமடைந்தாள்.

இரவு உணவுமுடிந்ததும் மித்ரா இணையதளத்தில் வேலை தேடும் வேட்டையில் ஈடுபட்டாள். பலமணி நேரத்திற்குப்பிறகு ஒரு விளம்பரம் அவளுடைய கருத்தை ஈர்த்தது. 'வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பள்ளியிலிருந்து 'திறமையான ஆசிரியர்கள் தேவை' என்றும் நாளை மறுநாள் நேர்காணல் நடக்கவிருப்பதாகவும் பெரிதாக விளம்பரம் செய்திருந்தனர். 'திறமையான ஆசிரியர்கள்' என்ற வார்த்தைகளைக் கண்டதும் அங்கு செல்ல தீர்மானித்தாள்.

அப்போது அவளுடைய கைபேசிக்கு அழைப்பு வர யாரென்று பாராமலேயே அதை எடுத்து காதில் வைத்தாள். "மேடம் எங்களை எல்லாம் மறந்துட்டீங்க போல?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. யாரென தெரிந்ததும் மித்ரா ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில், "பானுமதி!" என்று அவளுடைய பெயரைக் அழைக்க மற்றவளோ, "ஓ! என் பெயர்லாம் நியாபகம் இருக்கா?" என்று பொய்கோபத்துடன் கேட்டாள்.

அதற்கு, "நான் சென்னைக்கு வந்தத சொல்லணும்னுதான் இருந்தேன் ஆனா.." என்று பேசியவளை இடைமறித்து, "சரி அதெல்லாம் விடு. நாளைக்கு பார்க் ஹோட்டல் வந்துரு. உன்ன பாத்தே ரொம்ப நாளாச்சி. உன்கூட நிறைய பேசவேண்டியதிருக்கு. ஒழுங்கா வந்துரு" என்று கூறவும் மித்ரா சம்மதித்தாள்.

திட்டமிட்டபடியே தோழியர்கள் இருவரும் பார்க் ஹோட்டலில் சந்தித்தனர். அவள் இளம் மஞ்சள் நிறத்தில் முக்கால் கை சுடிதார் அணிந்திருக்க ஒரு தோள்பட்டையிலிருந்து நீலநிற துப்பட்டா மிதந்தது. இடைவரை இருந்த கார்மேகக் கூந்தல் அவளுடைய நடைக்கேற்றாற்போல் இடமும் வலமுமாக அசைந்தது. காதருகே இருந்த சுருள் கேசங்கள் மாம்பழநிறக் கன்னங்களை அவ்வப்போது வருடின.

பிறை நெற்றியில் வில்லாக வளைந்திருக்கும் இரு புருவங்களுக்கு மத்தியில் வெண்ணிற சாந்துப் பொட்டு வைத்திருந்தாள். அளவாக மைதீட்டப்பட்ட கண்களும், புன்னகை புரிந்தவாறே இதழ்களும் இருந்தது. தான் அணிந்திருந்த உடைக்கு ஏற்றாற்போல் காதுகளில் அழகான ஜிமிக்கியை அணிந்திருந்தாள். தன்னுடைய கைப்பையை ஒரு தோள் சுமக்க நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடன் அந்த ஹோட்டலினுள் நுழைந்தாள்.

உணவு உண்ணும் பகுதிக்கு வந்தவளின் கண்கள் பானுவைத் தேடின. வெகுநாட்கள் கழித்து தன் தோழியை கண்டதால் பானு வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து வந்து மித்ராவை அணைத்துக்கொண்டாள். பின் தங்களுடைய இருக்கையில் அமர்ந்து ஐந்து வருட நிகழ்வுகளை பேச ஆரம்பித்தனர்.

தோழிகள் இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த உணவை உண்டவாறே பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக பானுவின்மீது அவள் வைத்திருந்த பனிக்கூழ் சிந்தியது. அதை சுத்தம் செய்வதற்காக கைகழுவும் இடத்தை நோக்கிச் சென்றாள். வெகு நேரம் ஆகியும் பானு வராத காரணத்தினால் மித்ரா அவளைத் தேடிச் சென்றாள்.

அது மிகப்பெரிய ஹோட்டல் என்பதால் பானுவைத் தேட சற்று நேரம் பிடித்தது. இறுதியில் பானுவைக் கண்டதும் மித்ரா அவளை நோக்கி விரைந்தாள். "இவ்வளவு நேரமாடி உனக்காக வெயிட் பண்றது? நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாம எங்கயோ பாக்குற?" என்று தானும் அவ்விடத்தை நோக்கியபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.


இனியவளே வருவாள்...


வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்...
https://www.narumugainovels.com/threads/35498/
 
Last edited:
இனியவளே - 2
மறுகணமே மித்ராவின் கண்கள் கோபத்தால் சிவக்க கை முஷ்டியாக இறுகியது. ஏனென்றால் அந்த ஹோட்டலிலுள்ள பெரிய ஹாலில் பானுமதியின் காதலனான லோகேஷுக்கு ஒரு பணக்காரப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக பெரிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்த பானுவின் கையைப் பற்றி அந்த ஹாலிற்குள் அழைத்துச்சென்றாள். உள்ளே நுழைந்தவள் அந்த ஹாலிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தன் பார்வையைச் சுழலவிட்டாள்.

அப்போது மணமகன் அறை என்று எழுதப்பட்ட பலகை அவள் கண்களில் பட விரைந்து பானுவை அந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். மணமகனான் லோகேஷ் தன் தோழர்களுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவனுடைய கண்கள் அந்த அறையின் நுழைவாயிலை நோக்கின.

அங்கு நின்றுகொண்டிருந்த பானுவைப் பார்த்ததும் அவனுடைய புன்னகை மறைய மெல்ல தன் இருக்கையிலிருந்து எழுந்தான். அவனுடைய செய்கையின் அர்த்தத்தை உணர்ந்த அவன் நண்பர்கள் திகைத்தனர். ஆனால் மறுகணமே அவர்களுள் ஒருவன், "நீ ஏன் இங்க.." என்று பானுவை நோக்கி ஓங்கியவனின் குரல் அருகிலிருந்த மித்ராவின் கனல்கண்களைக் கண்டதும் அப்படியே அடங்கின. லோகேஷ் அங்கிருந்த தன் நண்பர்களை அந்த அறையைவிட்டு வெளியேறுமாறு கூற அவர்கள் வெளியேறினர்.

உடனே பானு, "ஏன்டா இப்படி பண்ண? நான் உன்ன ரொம்ப நம்புனேன், இப்படி ஏமாத்திட்டியே. நீயெல்லாம் மனுஷனா?" என்று அவனுடைய சட்டை காலரைப் பிடித்து கண்களில் கண்ணீருடன் கோபத்தில் உலுக்கினாள். உடனே லோகேஷ் அவளுடைய கையைப் பற்றி தள்ளிவிட்டு, "நான் யாரையும் ஏமாத்தல" என்று கூறவும், "அப்போ என்ன லவ் பண்றேன், கல்யாணம் பண்றேன்னு சொன்னியே. இப்போ, வேற யாரையோ கல்யாணம் பண்ணப்போற?" என்று கேட்கும்போதே அவளுடைய குரல் தழுதழுத்தது.

அவன், "லவ்வா? நான் டைம்பாஸுக்காகத்தான் உன்கூட பழகுன்னேனே தவிர வேற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. வேணும்னா ஒண்ணு பண்ணுவோம், எனக்கு கல்யாணமானா என்ன, எப்பவும்போல நம்ம ரிலேஷன்ஷிப் தொடரட்டும். நான் உன்ன நல்லா பாத்துக்கு.." என்று கூறுவதற்கு முன்பே அவனுடைய கன்னத்தில் 'பளார்' என்று ஒரு அரை இடியாக விழுந்தது. அதுவரையில் அவன் கூறியதை பொறுமையை இழுத்துப்பிடித்துக் கேட்டுக்கொண்டிருந்த மித்ரா அவன் இறுதியாக கூறியதில் கோபம் தலைக்கேற அவ்வாறு செய்தாள்.

"உன்ன காதலிச்சாங்குறதுக்காக அவள இவ்வளவு தரைகுறைவா பேசுறது ரொம்ப தப்பு. ஏன்டா பணத்திமிரால பொண்ணுங்கள இவ்வளவு கேவலமா நினைக்கறீங்க? உன்னலாம் ஜெயில்ல தள்ளனும்" என்று கோபத்துடன் கூறவும் லோகேஷுக்கு ஆவேசம் தலைக்கேறியது.

அவன் மித்ராவை நோக்கி அடிப்பதற்காக கையை உயர்த்தியபோது, "ஸ்டாப் இட்!" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதும் லோகேஷ் அதிர்ச்சியால் உறைந்தான். அதைச் செய்தது அவனை மணக்கவிருந்த பெண்ணான சிந்துஜா. உடனே அவன், "நீ எப்ப வந்த?" என்று அதிர்ச்சியுடன் கேட்க அவளோ, "நீ பேசுன எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான்டா இருந்தேன்...ராஸ்கல் இவ்வளவு கேவலமானவனா நீ? என்ன லவ் பண்றமாதிரி என்னமா நடிச்சிருக்க. ஃராடு.." என்று அவள் கோபத்தால் லோகேஷை பொரிந்து கொட்டினாள்.

அப்போது மித்ரா பானுமதி அங்கு இல்லை என்றதும் அவ்விடத்தைவிட்டு மின்னலென வெளியேறினாள். அங்கு இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன் புன்னகைத்தபடி மித்ரா சென்ற வழியே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பெரிய ஹோட்டலின் பல இடத்தில் தேடியும் பானுமதி கிடைக்கவில்லை என்றதும் மித்ரா சற்றுப் பதறினாள். இறுதியாக அங்குள்ள சிறுவர் பூங்காவில் பானுமதியைக் கண்டதும் நிம்மதியடைந்து அவளருகே சென்று பார்த்தபோது எந்தஒரு உணர்ச்சியும் இல்லாமல் ஒரு கற்சிலையாக அவள் அமர்ந்திருந்தாள். மித்ரா பேசுவதற்கு முன்பே, "எனக்கு வீட்டுக்குப் போகணும்" என்று மட்டும் இறுக்கமான குரலில் பானு கூறவும் வேறெதுவும் பேசாமல் மித்ரா அவளை தன் இருசக்கர வாகனத்தில் அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

வீடு வந்ததும் எதுவும் பேசாமல் வேகமாக உள்ளே செல்லவிருந்தவளின் கையைப் பற்றி இழுத்து, "பானு இதுமட்டுமே வாழ்க்கை இல்ல. இதைத்தாண்டி நிறைய விஷயம் இருக்கு. நடந்தது எல்லாம் நல்லதுக்குதான். இதுவும் கடந்து போகும். சோ பீ ஸ்ட்ராங், பீ பாசிட்டிவ்" என்று கூறி அவளை ஆதரவாக அணைத்துக்கொள்ள பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதை துடைத்துவிட்டு பானு வீட்டினுள் விரைந்தாள். வீடு திரும்பிய மித்ராவிற்கு இரவு முழுவதும் பானுவைப் பற்றிய நினைப்புதான். பானு எந்தஒரு தவறான முடிவிற்கும் வந்துவிடக்கூடாது என்று கடவுளை பிரார்த்தித்தாள்.

மறுநாள் காலையில் விரைந்து மித்ரா நேர்காணலுக்காக வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலை வந்தடைந்தாள். வசுந்தரா இன்டர்நேஷனலில், பிளே ஸ்கூல் முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ளன. மெட்ரிக், சிபிஸ்சி, இங்கிலிஷ் மீடியம் என பல பிரிவுகளில் பள்ளி நடத்தப்பட்டு வருகின்றது. அங்கிருந்து படித்து வெளியேறும் மாணவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கி நிற்கக்கூடிய தூண்களாகவே இருப்பார்கள். அதற்குக் காரணம் அங்கு பணிபுரியும் திறமையான மற்றும் மதிநுட்பம் மிகுந்த ஆசிரியர்கள்.

சங்கமித்ரா நேர்காணல் நடக்கவிருந்த இடத்தை அடைந்தபோது நூற்றிற்கும் மேற்பட்டோர் இன்டர்வியூவிற்காக காத்துக்கொண்டிருந்தனர். தன்னுடைய முறைவந்ததும் உள்ளே சென்றவள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்கபதிலளித்து தன் திறமையை வெளிப்படுத்தினாள். அதன் முடிவு மின் அஞ்சல் மூலமாக தெரிவிக்கப் படும் என்றதும் தன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

அதே சமயம் மற்றொரு இடத்தில் ஒரு பெரிய பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தபோது ஒரு ஃபெராரி கார் வேகமாக வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. அந்த காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர் வேகமாக கார்கதவை திறந்துவிட அதிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கீழே இறங்கினாள்.

அவளை வரவேற்பதற்காக நின்றுகொண்டிருந்த அனைவரும் மாலை மற்றும் பூச்செண்டுகளைக் கொடுத்தனர். கண்களில் ஆணவம் சிறிதும் குறையாமல் உதட்டளவில் மட்டும் லேசான முறுவல் செய்தாள். அனைவரும் இருக்கையில் அமர்ந்தவுடன் விழா துவங்கியது. மேடையில் நின்றுகொண்டிருந்த பெண், "நம் மகளிர் சங்கத் தலைவி அகிலாண்டேஸ்வரி அவர்களின் பாராட்டுவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன். மிஸ்ஸஸ் அகிலாண்டேஸ்வரி.." என ஆரம்பித்தவள் இந்த உலகத்திலுள்ள நற்காரியங்கள் அனைத்தையும் அவளைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பதுபோல் புகழாரம் பாடினாள்.

பின் சால்வையைப் போர்த்தி கெளரவித்து ஒரு விருதும் வழங்கினர். வந்திருந்த அனைவரும் உணவு உண்பதற்காக சென்றுவிட அகிலாண்டேஸ்வரியின் நெருங்கிய சிநேகிதியான காமினி அவளருகில் வந்தாள். அவளைப் பார்த்ததும், "ஈவனிங் நான் சொன்னமாதிரி செஞ்சிரு" எனக் கூறவும் மற்றவள், "எந்த பிரச்னையும் வராதுல?" என ஐயம் கலந்த குரலில் கேட்டாள். உடனே அவளோ, "அவன் என் பையன். எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்கு தெரியும். நான் சொன்னதமட்டும் செய்" என அதிகாரக் குரலில் கூறவும் காமினி நிம்மதியடைந்தாள்.

மேலும் தங்கமுலாம் பூசிய கார்டு ஒன்றை காமினியிடம் நீட்டி, "கேட்கீப்பர்ஸ்ட்ட இத காட்டு. இது இருந்தா தான் உள்ள விடுவாங்க" என்று கூற மற்றவளும் ஒப்புதலாக தலையாட்டினாள். அதில் ஆர்.வி. என அழகாக ஆங்கில எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது . அதை முன்னும் பின்னும் திருப்பிப்பார்த்த காமினியின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை ஏனென்றால் அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது.

வீட்டிற்கு விரைந்து சென்ற காமினி தன் மகளை அழைத்து, "அவந்திகா இன்னைக்கு ஈவினிங் எங்கப்போறோம்னு தெரியும்ல? சோ அதுக்கேத்தாப்ல ட்ரெஸ், நெக்லெஸ்ன்னு எல்லாத்தையும் செட்டா எடுத்து வச்சிக்கோ. யூ ஆர் கோயிங் டு பி ய குயின்" என கூறும்போதே மகள் மற்றும் தாயின் மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.

அப்போது, "நீ நினைக்குறது நடக்குமா? இந்த பிசினஸ் உலகத்தையே தன்னோட சாம்ராஜ்யமா மாத்தி அதுல கிங்கா இருக்குற ஆர்.விக்கு மனைவியாகுறது லேசான காரியம்கிடையாது, ஆர்.வி நினைக்கனும். அதோட அவர் கண்டிஷன்ஸ் நியாபகம் இருக்குல?" என கேட்க இருவரும் ஏழனமாகச் சிரித்தனர்.

"கல்யாணத்துக்கு அப்பறம் பாருங்க, 'கண்டிஷனா? போட்டேனா?'ன்னு ஆர்.வியே கேக்குற அளவுக்கு செஞ்சிருவா நம்ம அவந்தி" என்று பெருமையாகக் கூறவும் மகளோ ஸ்டைலாக தன் தோளைக் குலுக்கினாள். பின், "இவரு எப்பவுமே இப்படிதான். சொல்லவேண்டிய ஆளே சொல்லியாச்சு. வா அவந்தி" என்று கூறி இருவரும் அங்கிருந்து சென்றனர். 'மண்குதிரைய நம்பி இந்த ரெண்டும் ஆத்துல இறங்குது. அவரபத்தி முழுசா தெரியல. கடவுளே! இனி என்ன நடக்க போகுதோ?' என்று மனதிற்குள் நினைத்தவர் பெருமூச்சுவிட்டார்.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்

https://www.narumugainovels.com/threads/35498/
 
இனியவளே 3

அன்று மாலை தனசேகரன் குடும்பத்தார் அகிலாண்டேஸ்வரி கூறியவாறு 'வீர்'ஸ்' மேன்ஷனுக்கு வந்தனர். அங்குள்ள காவலாளியிடம் கார்டை காட்டவும் அவன் அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்றான். அவன் சென்ற சில வினாடிகளில் அந்த மேன்ஷனின் நீண்ட உயரமான கதவு தாமாக திறக்க தனசேகரன் குடும்பத்தாரின் கார் உள்ளே சென்றது.

நீண்ட நெடிய தார்ச்சாலை அமைக்கப்பட்டிருக்க அதன் இரு புறங்களிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள் வரிசையாக நின்றன. அவைகள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி அந்த சாலைக்கு நிழற்குடைகள் போல் இருந்தன. அந்த மரங்களுக்குப் பின்னும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரையில் அழகிய மரங்கள் சீராக அணிவகுத்து நின்று அடர்ந்த காடுபோல் காட்சியளித்தன.

அந்த சாலையின் இரு பகுதிகளிலும் ஒவ்வொரு அரை கிலோமீட்டருக்கு செக்யூரிட்டி கார்ட்ஸ் கையில் பெரிய துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருக்க கூடுதல் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமெராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை அவர்களது கவனத்திற்கு வந்தது.

அதில் அந்த இடத்தின் அமைப்பும், எந்தெந்த இடத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்ற வழியும் இருந்தது. அதைக் கண்டவுடன் தனசேகரன் குடும்பத்தார் பிரம்மித்துப் போயினர். ஏனென்றால் ரகுவீரின் பங்களா பெரிய மாளிகையாக நடுவே நிற்க அதைச் சுற்றிலும் பெரிய தோட்டம், நூலகம், நீச்சல்குளம், பூங்கா, விருந்தினர் விடுதி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் அந்த அடர்ந்த காடுபோன்ற இடத்தில அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மாளிகை வீட்டிலிருந்து மட்டுமே அந்த அனைத்து இடத்திற்கும் செல்ல இயலும். இதைக் கண்ட காமினி மற்றும் அவந்திகாவின் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடியது. சுமார் ஒருமணிநேர பயணித்திற்குப் பின் அவர்கள் ரகுவீரின் மாளிகையை அடைந்தனர். உள்ளே சென்றவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை ஏனென்றால் அங்கு இல்லாதது என்று ஒன்றுமே இல்லை.

அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் கூட இத்தனை வசதிகளுடனும், ஆடம்பரத்துடனும் வாழ்ந்திருப்பார்களோ என்னவோ! அந்த மாளிகையின் அழகில் பிரமித்திருந்த தனசேகரன் குடும்பத்தாரை அகிலாண்டேஸ்வரி வரவேற்றாள்.

பின் அவர்களை மேகத்தினும் மிருதுவான பஞ்சுஇருக்கையில் அமரச்செய்து அங்கிருந்த பணியாளிடம் அவர்கள் அருந்துவதற்கு பழச்சாற்றை கொண்டுவருமாறு பணித்தாள். அவள் தனசேகரன் குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருந்தபோது 'டக் டக்' என சப்தம் கேட்க அனைவரின் கவனமும் அங்கு சென்றது. கைத்தடியை ஊன்றியவாறு நின்றுகொண்டிருந்த அறுபத்தி ஐந்து மதிக்கத்தக்க நபரைக் கண்டதும் அனைவரும் எழுந்து புன்முறுவலுடன் வணங்கினர்.

அவர் வேறுயாருமல்ல ரகுவீரின் தந்தையும், அகிலாண்டேஸ்வரியின் கணவருமான சுந்தரேஸ்வரன். பக்கவாதத்தினால் அவருடைய இடதுகால் லேசாக செயலிழந்து போகவே அவர் கைத்தடியைப் பயன்படுத்தும் நிலை உண்டாகியது. அங்கிருந்த அனைவருக்கும் புன்னகையை பதிலாக தெரிவித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

தனசேகரன் குடும்பத்தார் அங்கு வந்த காரணத்தைப் புரியாமல் தன் மனைவியின் பக்கம் நோக்க அகிலாண்டேஸ்வரி, "நம்ம ரகுவ மாப்பிள்ளை பார்க்க வந்திருக்காங்க" என புன்னகையுடன் பதிலளித்தாள். அதைக் கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை மறைவதை அறிந்த அகிலா, "அவங்க எல்லா கண்டிஷன்ஸ்க்கும் ஒத்துக்கிட்டுதான் வந்திருக்காங்க" என கூறவும் அவருடைய மனதில் பதற்றம் குடிகொண்டது. தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி அங்கிருந்து அகன்றார்.

அதேநேரத்தில் மாலை வீடுதிரும்பிய சங்கமித்ரா அவசரமாக கிளம்பி தன் தோழியின் வீட்டிற்குச் சென்றபோது பானுவின் தாய் விமலா கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். மித்ராவைக் கண்டதும், “என்னமா நடந்துச்சு? ஏன் இவா இப்படி இருக்கா?" என்று கூறிமுடிக்கும் முன்பே அவருடைய கண்களில் கண்ணீர் பெருகியது.

உடனே, "அம்மா கவலைப்படாதீங்க, அவா லேசா அப்செட்டா இருக்கா. சீக்கிரம் சரியாயிடுவா. நீங்க அழாதீங்க, நான் பாத்துக்குறேன்" என்று அவருடைய கண்ணீரைத் துடைத்தாள். பானுவை சமாதானம் செய்து அருகேயுள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்று மரத்தடியிலுள்ள பெஞ்சில் இருவரும் அமர்ந்தவுடன் பானு மீண்டும் விசும்பினாள்.

அவள், "என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சி. எனக்கு வாழவே பிடிக்கல. அவன்.." என்று தன் மனக்குமுறலை மித்ராவிடம் புலம்பித்தள்ளினாள். தன் தோழியின் ஆற்றாமையை பொறுமையாகக் கேட்டவள் பின் பேசத்துவங்கினாள். "உன் வருத்தம் எனக்கு புரியுது. நம்ம ரொம்ப நம்புனவங்க ஏமாத்துனா கஷ்டமாதான் இருக்கும். இந்த உண்மை உனக்கு இப்பவே தெரிஞ்சத நினைச்சி சந்தோஷப்படு. இதவிட ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு அமையும். உன்ன பத்தி கொஞ்சம்கூட நினைக்காத ஒருத்தன நம்பி, நீயே உலகம்னு இருக்குற உன் அம்மாவ மறந்துறாத" என்று கூறும்போதே பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் வெளிவரத் துவங்கியது.

மேலும், "'யார் வாழக்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது'. இனிமேல் அதப்பத்தி நினைக்காத. நடக்குறது எல்லாமே நல்லதுக்குதான்" என்று கூறி பானுமதியின் கைகளை ஆறுதலாக பற்றினாள். மித்ரா கூறிய அறிவுரைகள் கலங்கிய குட்டையாக இருந்த பானுவின் மனதில் தெளிவை ஏற்படுத்தியது. அப்போது பானுவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்து பேசிக்கொண்டிருந்தாள்.

அதேசமயம் மித்ரா தன் கைபேசியில் நேர்காணலுக்கான முடிவுகள் வந்திருக்கிறதா என்று தன் மின்னஞ்சலை திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனென்றால் வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலிலிருந்து வந்த மின்னஞ்சலில் மித்ரா நேர்காணலில் தேர்ச்சி பெற்றதாகவும். வரும் திங்கட்கிழமையிலிருந்து ஆசிரியராக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தவளுக்கு பானு மேலும் ஓர் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாள். பானு அவள் வேலை செய்யுமிடத்தில் தான் நினைத்த பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைத்திருப்பதாகக் கூற மித்ரா ஆனந்தமடைந்தாள். இந்த சந்தோஷமான செய்தியை இருவரும் தங்கள் குடும்பத்தினருக்குக் தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். தோழிகள் இருவரும் தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாட ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றனர் .

அதே சமயம் சென்னையிலுள்ள மற்றொரு தனியார் விமான நிலயத்தில் பிரைவேட் ஜெட் வரிசையாக அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் ஓடுபாதையில் நட்சத்திரங்களை வரிசையாக அதன் இருபுறங்களிலும் பதிந்துவைத்திருப்பதுபோல் மின் விளக்குகள் மின்னின. அந்த மொத்த இடத்திற்கும் உரிமையாளன் வேறுயாருமில்லை ‘ஆர்.வீ.’ என்ற ரகுவீர்தான்.

அந்த தனியார் விமானநிலையத்தின் வெளியே பிரபல பத்திரிகைகளாகிய பி.பி.சி, டைம்ஸ் நவ் என பலர் அவனுடன் ஒரு நிமிட நேர்காணலுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது வேகவேகமாக ஒரு பிரைவேட் ஜெட் அந்த ஓடுபாதையில் தரையிறங்கியது. அந்த ஜெட் தானாக திறந்துகொள்ள அதிலிருந்து இறங்குவதற்காக அவன்...அந்த ரகுவீர் நின்றுகொண்டிருந்தான்.

ஆணழகன். திமிர் மற்றும் கர்வத்தின் மொத்த உருவம். எவருக்கும் அடிபணியாத துணிவு. எந்த பெண்ணின் காதல் வலையிலும் சிக்காத திமிங்கலம். தன் சாதுர்யத்தால் பாலைவனத்தையும் பூஞ்சோலையாக மாற்றக்கூடிய திறமைபடைத்தவன். மொத்த இந்தியாவின் நாற்பது சதவிகித வளர்ச்சியின் பெருமை இவனையும், இவன் நிறுவனத்தையுமே சாரும். விதையென சிறிதாக ஆரம்பித்த நிறுவனத்தை ஆலமரமாக மாற்றி இந்த வர்த்தக உலகையே ஆட்டிப்படைக்கும் முடிசூடா மன்னன்.

அவன் கருப்பு நிற பாண்ட் மற்றும் ஷர்ட் அணிந்து அதன் மீது வெல்வெட்டினாலான நீளமான கருப்பு கோர்ட்டும் அணிந்திருந்தான். அழகான சுருள் கேசமும், நீண்ட நெற்றியும், ஆழமான கண்களும், கூர்மையான நாசியும், அளவான தாடியும் வைத்திருந்தான்.

இந்த வர்த்தக உலகத்தை தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் ஆர்.வி. என்ற ரகுவீர் கண்களில் கூலர்ஸ் அணிந்து ஒரு கையை பாக்கெட்டினுள் ஸ்டைலாக வைத்தவாறு நின்றுகொண்டிருந்தான். எப்படி ஒரு அரசன் தன் பரிவாரங்கள் சூழ கம்பீரமாக நடந்து வருவானோ பிரைவேட் ஜெட்டிலிருந்து இறங்கி ஸ்டைலாக நடக்க செக்ரெட்டரியான அபிஷேக்கும், சில மெய் காப்பாளர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

அந்தப் பெரிய விமானநிலையத்திலிருந்து வெளியேறியவன் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களைக் கண்டுகொள்ளாமல் தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பணியாட்கள் கதவைத் திறந்துவிட அதில் ஏறிக்கொண்டான். இரண்டுவார பிசினெஸ் ட்ரிப்பில் இரவும் பகலுமாக உறங்காமல் அயராது வேலைசெய்ததால் கண்மூடி அந்த மெதுவான சீட்டில் சாய்ந்தான். அப்போது அவனுடைய கைபேசி ஒலிக்க அதை எடுத்து, "சொல்லுங்கப்பா" என்று மட்டும் கூறினான். அவனை அழைத்தது அவனுடைய தந்தையான சுந்தரேஸ்வரர்.

முதலில் அவனைப் பற்றியும் அவன் பிசினெஸ் ட்ரிப்பைப் பற்றியும் விசாரித்து மெல்ல விஷயத்திற்கு வந்தார். "ரகு நம்ம வீட்டுக்கு மிஸ்டர் தனசேகரன் ப்ரோபோசலோட வந்திருக்காரு" என்று கூறவும் அவன், "நாளைக்கு ஆஃபீஸ்க்கு தான வரச்சொன்னேன். எதுக்கு பிசினஸ் ப்ரோபோசலோட இன்னைக்கே வீட்டுக்கு வந்தாரு?" என்று சந்தேகத்துடன் கேட்டான்.

உடனே அவர், "பிசினெஸ் ப்ரோபோசல் இல்லப்பா மேரேஜ் ப்ரோபோசல்" என்று அவர் பதிலளிக்கவும் இதைச் செய்தது யார் என்று ரகுவீருக்கு நன்றகவே தெரிந்தது. சிறிது மெளனத்திற்குப் பின், "டோன்ட் வொரிபா. நான் பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு தன் கைபேசியை வைத்தான்.

தன் பணியை செவ்வனே செய்துவிட்ட திருப்தியில் ஒரு பெருமூச்சுடன் கைப்பேசியைப் பார்த்து நின்றுகொண்டிருந்தபோது, "உங்க உளவாளி வேல முடிஞ்சிருச்சா?" என்ற கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினார். "உங்களோட எந்த திட்டமும் பலிக்காது. என்னா இவங்க நம்ம ரகுவோட கண்டிஷன்ஸ் தெரிஞ்சிதான் வந்திருக்காங்க. அதனால ரகுவுக்கும் அவந்திகாவுக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்" என்று உறுதியுடன் கூறி அங்கிருந்து சென்றாள். சுந்தரேஸ்வரர்க்கு தன் மனைவியின் எண்ணம் பலிக்காது என்பதில் சர்வ நிச்சயம். ஆனால் தன் மகன் என்ன செய்யப்போகிறான் என்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

அங்கு தங்களுடைய சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு தோழிகள் இருவரும் வந்தனர். அங்குள்ள வேலைப்பாடுகளும், வண்ண விளக்கு அலங்காரங்களும் அவர்களது கண்களைப் பறித்தன. அவற்றைக்கண்டு இருவரும் ரசித்தனர். அவர்கள் சேட்டின் துணியால் மூடப்பட்டிருந்த டேபிளுக்கு அருகேயுள்ள அழகான வேலைப்பாடுகள் அமைந்த தேக்கு இருக்கையில் அமர்ந்தனர். தங்களுக்குப் பிடித்த உணவை மெனுகார்டில் பார்த்தவாறு ஆர்டர் செய்தனர்.

ஆர்டர் செய்த உணவிற்காக காத்துக்கொண்டிருந்தபோது, "மித்து நீ சொன்னதுதான் சரி. நான் அந்த ஃராட நினைச்சு என் வாழ்க்கையை பாழாக்க விரும்பல. இனிமேல் என் அம்மாவையும், கெரியரையும் கான்சன்ட்ரேட் பண்ணப்போறேன். இப்பதான் என் மனசே தெளிவா இருக்கு. தேங்க யூ சோ மச். நான் ரொம்ப லக்கி, உன்னமாதிரி ஃரெண்ட் கிடைக்க" என்று கூற மித்ராவோ புன்முறுவல் பூத்தாள்.

இருபெண்களும் பேசிக்கொண்டிருந்தபோது மித்ராவின் கால் டேபிளின் அடியிலுள்ள ஏதோஒன்றின்மீது தட்டுப்பட்டது. 'அது என்ன?' என்று பார்ப்பதற்காக அந்த நீண்ட சேட்டின் துணியை விலக்கியபோது, 'ஷ்' என்ற சப்தம் கேட்டது. அதைக் கண்டு அவளுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்

https://www.narumugainovels.com/threads/35498/

 
இனியவளே - 4
அங்கு முழங்கால்களை கைகளால் கட்டியவாறு மருண்ட விழிகளுடன் ஒரு நான்குவயது சிறுவன் அமர்ந்திருந்தான். தன் சட்டைக்கு ஏற்றாற்போல், கால்சட்டையும், வெய்ஸ்டகோர்ட் மற்றும் டையை அணிந்திருந்தான். அதில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அழகான தாமரை புரோச் ஒன்றை அணிந்திருந்தான். அந்த மங்கிய இருளிலும் மிக அழகாக பிரகாசித்தது.

அச்சிறுவனின் எழில் வாய்ந்த முகத்தை ஒருகணம் பார்த்துவிட்டு, "செல்லம் யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க?" என்று கனிவான குரலில் விசாரித்தாள். அதற்கு அச்சிறுவன், "அவங்க என்ன பார்த்திடுவாங்க" என்று கூறி அந்த டேபிள் கிளாத்தால் மீண்டும் மூடிக்கொண்டான்.

அந்த திரையை விலக்கி, "நீ பயப்படாத, நான் இருக்கேன். யாரு பார்த்திருவா?" என்று மித்ரா கேட்டதற்கு அந்தச் சிறுவன் கையை நீட்டி ஒரு இடத்தை நோக்கி காட்டினான். அந்த இடத்தில் கட்டுமஸ்தான உடலுடன் பார்ப்பதற்கு அடியாட்களைப் போல் தோன்றிய ஐவர் நின்றுகொண்டிருந்தனர். மித்ராவின் மனதில் பல எண்ணங்கள் தோன்ற தன் தோழியைப் பார்த்து, "பானு இவன் பாக்க பணக்கார வீட்டுப் பையன் மாதிரி இருக்கான். அதனாலதான் இந்த ஆட்கள் இவன கடத்தீட்டுப் போக வந்திருக்காங்களோ? அதான் இங்க பயந்து ஒளிஞ்சிருக்கானோ? என்ன பண்றது?" என்று கேட்டாள். அதற்கு மற்றவளோ, "நமக்கு எதுக்கு வம்பு. வா வேற டேபிளுக்குப் போகலாம்" என எழ முயன்றாள்.

ஆனால் மித்ராவோ, "எதுக்கெடுத்தாலும் பயப்படாத. இந்த பையன பார்க்கவே பாவமா இருக்கு. இவனுக்கு கண்டிப்பா உதவி செஞ்சே ஆகணும். உட்காரு" என்றதும் பானு இருக்கையில் அமர்ந்தாள். மீண்டும் அந்தச் சிறுவனிடம் திரும்பி, "நீ இங்கயே இரு" என்று அச்சிறுவனை பானுவின் கண்காணிப்பில் விட்டுச் சென்றாள்.

அந்தச் சிறுவனைப் பற்றிய விவரம் தெரிவிக்க ஹோட்டலின் வரவேர்புப்பகுதிக்கு வேகமாக விரைந்தாள். அங்கு நின்றுகொண்டிருந்த ஐந்து வரவேற்பாளர்களும் ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஐவருள் ஒருவன் தன் பதற்றத்தை மறைத்துக்கொண்டு புன்முறுவலுடன் "ஹவ் கேன் ஐ ஹெல்ப் யு மேம்?" என வினவினான். அவள், "அது...ஒரு சின்ன பையன்" என்று தயங்கியவாறு கூறியபோதே அங்குள்ள அனைவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது.

உடனே, "உங்க டேபிள் எது மேடம்?" என்று கேட்க அவள் அவர்களை அழைத்துச் சென்றாள். அங்கு பானு மட்டும் தலையில் கைவைத்தவாறு அமர்ந்திருந்தாள். "ஏய்! பானு, அந்த பையன எங்க?" என்று வினவ மற்றவளோ, “அவன் அப்பவே சிட்டா பறந்துட்டான்” என்றாள்.

அவள் செய்வதறியாது அவனை திரும்பிப்பார்த்தபோது, "இட்ஸ் ஓகே மேடம்" என்று கூறி அங்கிருந்து சென்றான். "வா நாம கிளம்பலாம்" என்று பானு கூற இரு தோழியர்களும் அங்கிருந்து சென்றனர்.

அதே நேரத்தில் இங்கு தன்னுடைய இரண்டுவார வெளிநாட்டு வணிகப் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரகுவீருக்கு என்றும் இல்லாத பலத்த வரவேற்பு நடந்துகொண்டிருந்தது. அதன் காரணம் தெரிந்தும் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்தான். அவனுடைய நடவடிக்கை அகிலாண்டேஸ்வரியின் மனதில் லேசான நெருடலைக் கொடுத்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ரகுவீர் வருவதைக் கண்டதும் தனசேகரன் குடும்பத்தார் இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு தங்களது வணக்கத்தை தெரிவிக்க ஒற்றைக்கையசைவால் அவர்களை அமருமாறு கூறினான். பின் தானும் எதிரே இருந்த நீள்விருக்கையில் ஸ்டைலாக கால்மீது கால்போட்டு, கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டியவாறு லாவகமாக அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் சுந்தரேஸ்வரரும் அவனருகே வந்து அமர்ந்தார்.

அங்கிருந்த தனசேகரன் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறவும், "என்னோட மேரேஜ் கண்டிஷன்ஸ் உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன். அது என்னங்குறத மிஸ் அவந்திகா எல்லார் முன்னாடியும் சொன்னா நல்லாயிருக்கும்" என்று ரகுவீர் கூற அவந்திகா தன் தாய் காமினியைப் பார்த்தாள். 'இதில் என்ன இருக்கிறது' என்று நினைத்த காமினி தன் மகள் அவந்திகாவைப் பார்த்து கூறுமாறு சைகை செய்தாள்.

உடனே மற்றவளோ, "கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தையே வேண்டாம்னு.." என்று அவள் கூறிமுடிப்பதற்குள், "எக்ஸாக்ட்லி, கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு குழந்தைக்குற கமிட்மெண்ட்டே வேண்டாம். அதோட என் கண்டிஷன்ஸ்ல இப்போ புதுசா ஒன்ன சேர்த்திருக்கேன்" என்று தன் எண்ணத்தை அனைவருக்கும் தெரிவித்தான்.

'அது என்னவாக இருக்கும்?' என்ற கேள்வி அனைவர் மனத்திலும் ஓடிக்கொண்டிருக்க, சுந்தரேஸ்வரர் மட்டும், 'ரகு என்ன செய்யப்போகிறான்?' என்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவன் தன்னுடைய இரண்டாவது நிபந்தனையைக் கூறினான்.

மேலும், "என்னோட இந்த ரெண்டு கண்டிஷன்ஸையும் ஓத்துக்கிட்டு இப்பவே இந்த பேப்பர்ஸ்ல சைன் போடுறதா இருந்தா நாளைக்கே எனக்கும் மிஸ் அவந்திகாவுக்கும் கல்யாணம் நடக்கும். இல்லைனா நீங்க இப்பவே இங்கிருந்து போகலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்" என்று தன் முடிவைக்கூற சுந்தரேஸ்வரர் உட்பட அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைந்தனர். தன் செக்ரட்டரி அபிஷேக்கிடமிருந்து ஒரு கோப்பை வாங்கி தன் முன்னே இருந்த கண்ணாடி டேபிளில் வீசினான்.
WhatsApp Image 2026-01-13 at 7.53.35 PM.jpeg
மேலும், "இப்போதைக்கு ஒத்துக்கிட்டு என் அக்ரிமெண்ட்ல இருந்து பின்வாங்கினா என்ன ஆகும்னு மிஸ்டர் தனசேகரனுக்கு நல்லாவே தெரியும்" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவாறு எச்சரிக்கும் தோணியில் அவன் கூறவும் தனசேகரன் குடும்பத்தார் அதிர்ந்தனர். ஆம், அவனுடன் ஒப்பந்தத்தில் நுழைந்து அதிலிருந்து பின்வாங்கிய குருமூர்த்தி குரூப் ஆஃ கம்பெனிஸ் இன்று பிசினஸ் உலகத்திலேயே இல்லை என்பது பிசினஸ் உலகத்திலுள்ள அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி ஒரு திருப்பத்தை தன் மகன் இந்த விஷயத்தில் வைப்பான் என்று சற்றும் எதிர்பாராத அகிலாண்டேஸ்வரி திகைத்து நின்றாள். ரகுவீருடன் வணிகரீதியாக நல்ல நட்புறவில் இருந்த தனசேகரன் மனைவி மற்றும் மகளின் ஆசைக்காக தன் கம்பெனி சீர்குலைந்து போவதை விரும்பவில்லை. அதனால், "இதப்பத்தி யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் மிஸ்டர் ஆர்.வி. நாங்க இப்போ கிளம்புறோம்" என்று தனசேகரன் படபடத்த குரலில் கூறினார்.


உடனே ஆர்.வி. 'நீங்கள் செல்லலாம்' என்பதுபோல் ஸ்டைலாக கையசைக்க தனசேகரன் குடும்பத்தார் அங்கிருந்து கிளம்பினர். தான் நினைத்த காரியம் செவ்வனே முடிந்துவிட்ட திருப்தியில் நெட்டி முறித்துவிட்டு தன் அறைக்குச் செல்வதற்காக தன் வீட்டில் அமைக்கப் பட்டிருந்த மின்தூக்கியை நோக்கி நடந்தான்.

அப்போது "நில் ரகு" என்ற அகிலாண்டேஸ்வரியின் கோபமான வார்த்தைகள் அவனை நிறுத்தின. "நான் உனக்கு ஒவ்வொரு தடவையும் பொண்ணு பார்த்தா இப்படி ஏதாவது ஒரு அக்ரீமெண்ட் போட்டு அவங்கள விரட்டிவிட்டுற. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? ஏன் இப்படி பண்ற?" என்று தன் கண்களில் இருந்து வரவிருந்த கண்ணீரை அடக்கியவாறு தழு தழுத்தக் குரலில் கேட்டாள்.

ஆனால் அவனோ, “இந்த டிராமாவ நிறைய தடவை பாத்துட்டேன் பா. இது தான் கடைசி தடவை, மறுபடியும் மிஸ்ஸஸ் அகிலாண்டேஸ்வரி இப்படி ஏதாவது செஞ்சா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று எரிச்சல் கலந்த கோபத்துடன் கத்திவிட்டு லிப்டில் ஏறி தன் அறைக்குச் சென்றான். தன் மகன் சென்ற இடத்தையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“பத்து மாசம் சுமந்து பெத்த பையன் அம்மான்னு கூப்பிடாம மூணாவது மனுஷி மாதிரி கூப்பிடுறான். இதை கேட்கும் போது மனசு வலிக்குதுங்க. ஒரு அம்மாவா என் மகனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறது தப்பா?” என்று தன் மன வேதனையை கணவனிடம் புலம்பினாள். உடனே அவர் தன் மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டு, “உன் வேதனை எனக்கு நல்லாவே புரியுது அகிலா. அவன் ஏன் அப்படி செய்யுறான்னு உனக்கு நல்லாவே தெரியும். பின்னே ஏன் இப்படி செஞ்சு நீயே உன்ன காயப்படுத்திகிற? சரியான நேரம் வரும்போது அவனே கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு” என்று தேற்றினார்.

ஆனால் அகிலாண்டேஸ்வரியோ, “நான் சொல்றத யாருதான் கேக்குறா? அப்பாவும் மகனும் சேர்ந்து என்னவாவது பண்ணுங்க?” என்று கோபத்துடன் கத்திவிட்டு அங்கிருந்து சென்ற தன் மனைவியை பெருமூச்சுடன் சுந்தரேஸ்வரர் பார்த்தார்.

இங்கு சங்கமித்ரா மூன்ணூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இந்தியா முழுவதும் கொண்டுள்ள வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலில் ஆசிரியையாக பணிபுரியப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள். புது இடம், புது வேலை செல்வதால் வழக்கத்தை விட வேகமாக கிளம்பினாள். மித்ரா அலுவலக அறையை நோக்கி சென்று தன் வருகையை பதிவு செய்துவிட்டு தான் செல்ல வேண்டிய இடத்தை கேட்டு அறிந்து கொண்டாள்.

பின் மழலையர் பிரிவு ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்திற்குச் சென்றபோது அங்கு மட்டுமே இருபதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். தலைமை ஆசிரியர் அங்குள்ள அனைவருக்கும் அவரவர் செய்யவேண்டிய காரியங்களையும் செல்லவேண்டிய வகுப்புகளையும் அறிவித்தார்.

பள்ளிக்குத் தாமதமாக வரும் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு மித்ராவிடம் வழங்கப்பட்டது. தாமதமாக வந்த சிறுவர்கள் அனைவரும் அவளருகில் நின்றுகொண்டிருக்க ஒரு சிறுவன் மட்டும் சாவகாசமாக தன்னுடைய கையை வீசியவாறு நடந்து உள்ளே சென்றுகொண்டிருந்தான். அச்சிறுவனை உள்ளே விடாமல் நிறுத்திய மித்ரா அவனைக் கண்டதும் திகைத்தாள். ஏனென்றால் அவன் வேறுயாருமல்ல, அன்று அவள் நட்சத்திர விடுதியில் கண்ட அதே சிறுவன்.

உடனே அவனுடைய கையைப்பற்றி ஓரமாக இழுத்துவந்து, "நீ அன்னைக்கு டேபிளுக்கு அடில ஒளிஞ்சிருந்தவன் தான?" என்று வினவ, "ஆமா" என்று விட்டேற்றியாக பதிலளித்தான். "நான் வர்றதுக்குள்ள எங்கடா போன? அந்த அஞ்சு தடியனுங்க கையில மாட்டியிருந்தா என்ன ஆகியிருக்கும்? உன் அம்மாவும் அப்பாவும் உன்ன நினைச்சி எவ்வளவு கவலைப்பட்டிருப்பாங்க?" என்று அக்கறையுடன் கேட்டாள்.

அதற்கு அவன், "நான் ஆதித்தியா! எனக்கு எதுவும் நடக்காது, ஏன்னா அது எங்க ஹோட்டல். அந்த அஞ்சு தடியனுங்களும் என் பாடிகார்ட்ஸ்" என்று கூறவும் அவள் ஆச்சரியமடைந்தாள். அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "இந்த பாடிக்கு பாடிகாட்ஸா?" என்று கிண்டலாகச் சிரிக்க அச்சிறுவன் அவளை பார்த்து முறைத்தான்.

பின், "நாளைக்கு ஸ்கூலுக்கு வரும்போது உன் பேரண்ட்ஸ கூட்டிட்டு வா" என கூறவும் அங்கிருந்த காரினருகே கைபேசியில் பேசிக்கொண்டிருந்த நபரை ஆதித்யா பார்த்தான். "அவர்தான் உன் அப்பாவா?" என அந்த நபரை மித்ரா சுட்டிக்காட்ட, சிறு யோசனைக்குப் பின் 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தான்.

ஒல்லியான தேகமும், மாநிறமும், ஸ்டைலாக வெட்டப்பட்ட கேசமும் உடைய அந்த நபர் கைபேசியை வைத்தவுடன் மித்ரா அவனருகே சென்று, "எக்ஸ்கியூஸ்மீ சார்" என அழைத்தாள். திரும்பியவன் மித்ராவைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியடைந்தான். அவள் அன்று நட்சத்திர விடுதியில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறிக்கொண்டிருக்க அவனோ ஒரு புன்முறுவலுடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவள் பேசி முடித்ததும், "உங்களுக்கு என்ன நியாபகம் இருக்கா?" என ஆவலுடன் கேட்டன்.

உடனே அவள், 'நான் ஒண்ணு கேட்டா இவன் ஏதோ சொல்றான்' என நினைத்தவள் மீண்டும் அச்சிறுவனை பற்றி பேசத்துவங்கினாள். ஆனால் அவனோ, "அதெல்லாம் விடுங்க. உங்களுக்கு என்ன நியாபகம் இருக்கா?" என்று மீண்டும் கேட்க மித்ரா எரிச்சலடைந்தாள்.

‘யார்ரா இவன்? மென்டல் மாதிரி பேசுறான். சரியான ஃளேர்ட் டைப்பா இருப்பானோ?' என நினைத்தவள் வேறுஎதுவும் பேசாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், “மீண்டும் சந்திப்போம்” என்று அவள் காதில் விழும்படி கத்திக் கூறவே அவள் ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். அதைப் பார்த்து சிரித்தவன் தன் காரில் எரிச் சென்றான்.

அன்று மாலை ரகுவீர் தன்னுடைய ஆர்.வி. மேன்ஷனின் மூன்றாவது தளமான அலுவலக தளத்தில் சில கோப்புகளை தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
WhatsApp Image 2026-01-13 at 8.01.43 PM.jpeg
மாலை சூரியனின் கதிர்கள் அவ்விடத்திலுள்ள அனைத்து இடங்களிலும் பரவி நின்று தங்கநிறமாக காட்சியளித்தது. அப்போது அந்த அறையின் கதவு சட்டென திறந்தது. தன் முழு கவனத்தையும் அந்த கோப்புகளில் செலுத்தியிருந்தவன் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து வாயிலைப் பார்த்தான். வேலை பளுவினால் தீவிரமாக இருந்தபோதிலும் அவன் முகம் வாயிலில் நின்ற அந்த நபரைக்கண்டதும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்தது.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

 
இனியவளே - 5

ஏனென்றால் அங்கு அச்சிறுவன் ஆதித்யா அன்று மலர்ந்த மலர்போல சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான். உடனே ரகுவீர் தன் இருக்கையிலிருந்து வேகமாக எழ ஆதித்யா, “டாடா!” என அழைத்தவாறு ஓடி அவனை கட்டித் தழுவினான். ஆம், ஆதித்யா வேறு யாரும் அல்ல தி கிரேட் ஆர்.வி.யின் ஒரே செல்ல மகன்.

தன் திருமணத்திற்கு ரகுவீர் வினோதமான ஒப்பந்தங்களை போடுவதற்கு ஒரே காரணம் ஆதித்யா மீது கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தின் வெளிப்பாடே ஆகும். ரகுவீர் ஆதித்யாவை எப்போதும் பிரியாமல் தன் கண் பார்வையிலே வைத்திருப்பான். ஆனால் இந்த இரண்டு வார பிசினஸ் ட்ரிப்பின் பிரிவு அவனை வெகுவாக பாதித்தது. ஓரிரண்டு நாட்களில் முடிய வேண்டிய வேலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் தவித்துப் போனான்.

அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்ளும் ரகுவீர் ஆதித்யாவிடம் அன்பு மற்றும் பாச மழையைப் பொழிந்தான். அதே நிலைதான் ஆதித்யாவிற்கும், யாருடைய சொல்லுக்கும் அடங்காதவன் ரகுவீரின் ஒற்றை பார்வைக்கு அடங்கி விடுவான். அவன் எது கூறினாலும் மறுப்பு தெரிவிக்காமல் அதை அப்படியே செய்வான்.

ரகுவீர் ஆதித்யாவுக்கு தாயும், தந்தையுமாக இருந்தான். அவர்கள் ஈருடல் ஓருயிராக வாழ்ந்தனர். தன் உயிருக்கும் மேலான மகனை கட்டி அணைத்தவன் அவனை தூக்கிக்கொண்டு அந்த பெரிய அறையில் போடப்பட்டிருந்த அழகான வேலைப்பாடுகள் கொண்ட சோபாவில் அமர்ந்தான்.

தன் மகனை மடிமீது அமர்த்தி, “ஹவ் வாஸ் யுவர் ஃபர்ஸ்ட் டே இன் ஸ்கூல் ஆதி?” என ஸ்டைலாக ஆங்கிலத்தில் கேட்க மகனும், “வித்தவுட் யூ ரொம்ப போரிங் டாடா” என்று சோகத்துடன் தன் அழகான செவ்விதழ்களை பிதுக்கினான். ஒரு சிறு புன்னகையுடன், “யூ நாட்டி பாய்” என்று தன் மகனின் கன்னத்தை செல்லமாகத் தட்டினான்.

அப்போது “அட! அட! என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. பாச மழைல நான் நனைஞ்சிட்டேன்” என்று பொய்யான மழையில் நனைந்தார் போல் பாவலா காட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ருத்ரா. “அந்த பிசினஸ் டீல பைனல் பண்ணீட்டீங்க போல கில்லாடிணா நீங்க” என்று கூறியவாறு எதிரே உள்ள சோபாவில் சாவகாசமாக அமர்ந்தான். ரகுவீரின் பார்வைக்கு அர்த்தம் புரிந்திருந்தால் சிங்கத்தின் பிடியில் சிக்காமல் ருத்ரா அப்போதே தப்பியோடியிருப்பான்.

அவன் பேசிக் கொண்டே இருக்க ரகுவீர் ஆதித்யாவை வெளியே செல்லுமாறு சைகைசெய்தான். அவன் சென்ற மறுநொடியே ரகுவீரின் முகம் கோபக்கனலில் சிவக்க அதைக் கண்ட ருத்ராவுக்கு பயம் தொற்றிக் கொண்டது. “ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என்று கறாரான குரலில் கேட்க முதலில் மலங்க விழித்த ருத்ரா பின் ஹோட்டலில் ஆதியை தவறவிட்டது பற்றிக் கேட்கிறான் என்று தெரிந்ததும் அவன் மனதில் குளிர் பரவியது.

“அது...அது வந்து அண்ணா...ஆதி என்கூடத்தான்…பட் எப்போ எப்படி போனான்னு தெரியல” என்று கூறுவதற்கு முன்பே, “ஆதி சின்ன பையன். அப்படித்தான் செய்வான். நீ தான் அவன பாத்துக்கணும். உன்னை நம்பி ஒப்படைச்சா இப்படித்தான் பொறுப்பே இல்லாம பதில் சொல்லுவியா? இது முதல் தடவ இல்ல ருத்ரா. ஒரு சின்ன பையன சமாளிக்க தெரியல நீயெல்லாம் எப்படி பெரிய பிசினஸ் ஹேண்டில் பண்ணுவ” என சரமாரியாக திட்ட ஆரம்பித்தான்.

அவனுடைய வசை மொழியை வாங்கிக் கொண்டிருந்த ருத்ராவின் மனதில் ‘இத யார் சொல்லியிருப்பா? அவனா இருக்குமோ’ என்று எண்ணியபோதே, "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்று ரகுவீரின் செக்ரட்டரியான அபிஷேக் உள்ளே நுழைந்ததும், ‘இவனே தான்’ என்று உறுதிபப்டுத்தினான். “போ” என்று ரகு கூறவும் ருத்ரா அங்கிருந்து வெளியேறினான்.

வெளியே வந்தவனிடம், "நல்லா டோஸ் வாங்குனியா?" என்ற ஆதியின் குரல் தடுத்து நிறுத்தியது. ஓரக்கண்ணால் ஆதியை முறைத்து பார்த்தவன், "உன்னால தாண்டா எல்லாம்" என்றதும் மற்றவனோ விஷமமாகச் சிரித்தான். மித்ராவின் கேலிப் பேச்சு நினைவுக்கு வர, "என் பின்னால பாடி கார்ட்ஸ் வர்ரது எனக்கு பிடிக்கல. எல்லாரும் கிண்டலடிக்கிறாங்க" என்று ஆதித்யா சோகமான முகபாவனையுடன் கூறினான். அதைக் கேட்ட ருத்ரா அவன் அருகே வந்து, "யாருடா அது?" என்று ஆர்வமாக கேட்க, "டாடாட்ட சொல்லட்டா" என ஆதி பயமுறுத்தவும் ருத்ரா அங்கிருந்து கீழ்தளத்திற்கு வேகமாக சென்றான்.

ருத்ராவைக் கண்டதும், “என்ன ரொம்ப திட்டீட்டானா?” என்று சுந்தரேஸ்வரர் வினவினார். அதற்கு அவனோ, "அண்ணா திட்டினதுகூட கவலையில்லை மாமா. இந்த வாண்ட தான் சமாளிக்க முடியல” என்றான். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அங்கு வந்த அகிலாண்டேஸ்வரி, “என் அருமை அண்ணன் மகனே ரகு உனக்கு அண்ணன் இல்லடா, மச்சான்” என்று உறவு முறையை திருத்தினாள்.

ருத்ரா அகிலாண்டேஸ்வரியின் சொந்த சகோதரனான தயானந்தனின் மூத்த புதல்வன். அத்தை தன்னை குறை கூறுகிறாள் என்றதும், “எனக்கு அவர் ரகு அண்ணன் தான். மச்சான்னு கூப்பிடமாட்டேன்…அதோட ரகு அண்ணாவ பார்த்து எனக்கு பயமில்ல” என்று கூறினான். அப்போது “ருத்ரா!” என ரகுவின் குரல் ஓங்காரமாக ஒலிக்க, “வந்துட்டேண்ணா” என்று வேகமாக அவன் எழுந்து சென்றதை கண்டதும் பெரியவர்கள் இருவரும் நகைத்தனர்.

ரகுவீர் மற்றும் ருத்ரா அண்ணன் தம்பியாகவே பழகினர். அவ்வப்போது ருத்ராவின் கவனக்குறைவினால் ஏற்படும் தவறுகளுக்காக ரகுவீர் திட்டுவது வழக்கம். ஆனால் மறுபடியும் அதை மறந்து இருவரும் இயல்பாகவே பேசுவர்.

மாதங்கள் சில கடந்தன. மித்ரா தன் ஆசிரியைப் பணியை செவ்வனே செய்து வந்தாள். அங்குள்ள அனைவரிடமும் அன்பாகவும், கனிவாகவும் நடந்துகொள்வதால் எல்லோருக்கும் பிடித்தமானவளானாள். அங்கு மாதவி என்ற சக ஆசிரியை அவளுக்கு நெருங்கிய தோழியானாள். ஒற்றை வயதை உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு இடையே கருத்தொற்றுமை நிறையவே இருந்தது.

இவ்வாறாக மித்ராவின் வாழ்க்கை, பள்ளி மற்றும் வீடு என எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அன்று பள்ளி விடுமுறை என்பதால் மித்ரா சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றாள். தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிவிட்டு ஸ்கூட்டியில் வெளியே வந்தாள். எப்போதும் மாஸ்க் அணியும் பழக்கத்தை கொண்ட மித்ரா, அன்று தாமரை மலர் எம்ராய்டரி செய்திருந்த மாஸ்க்கை அணிந்திருந்தாள்.

அவள் சாலையைக் கடக்கும்போது, ‘ஆ’ என யாரோ வலியால் கத்தும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தவளுக்கு வயதான பெண்மணியின் மீது கார் ஒன்று லேசாக மோதியிருப்பது தெரிந்தவுடன் அவ்விடம் விரைந்தாள். பலத்த காயங்கள் இல்லை என்றாலும் ஆங்காங்கே சிராய்த்து லேசான காயங்கள் அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்டிருந்தது.

அச்சமயம் கார் ஓட்டுனர் வேகமாக இறங்கி அந்தப் பெண்மணியின் அருகே வந்த போது, “பார்த்து ஓட்ட மாட்டீங்களா?” என்று கோபத்துடன் கத்தினாள் மித்ரா. உடனே அவன், “தெரியாம இப்படி ஆயிருச்சு மேடம்” என்று பதற்றத்துடன் பதில் அளித்தான். “தெரியாமையா! என்ன இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொல்றீங்க நல்லவேள இவங்களுக்கு ஒண்ணும் ஆகல. முதல்ல ஹாஸ்பிடலுக்கு கூட்டீட்டு போங்க” என்று சொன்னாள். அப்போது காரின் உள்ளே இருந்து, “சரவணா!” என்று ஒரு குரல் கேட்க அந்த ஓட்டுநர் தன் முதலாளியான ஆர்.வி.யிடம் விரைந்தார்.

ரகுவீருக்கு அன்று காலை ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால் ஓட்டுநரை வேகமாக செல்லுமாறு ஆணையிட்டான். அதன் விளைவு தான் இந்த விபத்து. தன் கார்க் கண்ணாடியை லேசாக இறக்கியவன் “என்ன ஆச்சு?” என்று வினவ மற்றவனோ, “சார் ஒரு சின்ன ஆக்சிடென்ட்” என்று பதற்றத்துடன் கூறினான். உடனே, “ஒழுங்கா ஓட்டமாட்ட” என்று எரிச்சலுடன் கூறியவன் சிறிது பணத்தை அவன் கையில் கொடுத்து, “இத கொடுத்துட்டு வா” என்று கூறி மீண்டும் கண்ணாடியை ஏற்றிவிட்டான்.

உடனே அந்த ஓட்டுனர் அவர்களின் அருகே வந்து, “இந்தாங்கமா இத வைத்து ஆஸ்பத்திரிக்கு போங்க” என்று கூறவும் மித்ராவுக்கு ‘சுளீரென’ கோபம் வந்தது. அதை வாங்கிக் கொண்டு காரை நோக்கி வேகமாக நடந்தாள். ஏற்றி இருந்த கண்ணாடிக் கதவை தட்ட அது மெல்ல கீழே இறக்கிறது.

உள்ளே அமர்ந்திருந்த ரகுவீருக்கு முதலில் தெரிந்தது அவளுடைய பிறை போன்ற நெற்றி. பின் கண்ணாடி மேலும் கீழே இறங்க கருப்பு வானவில்லாக அவளுடைய இரண்டு புருவங்கள் தெரிந்தன. அதற்கு கீழே பாண்டிய நாட்டுச் சின்னமான மீன் போன்ற கண்கள் தென்பட்டன. மித்ராவின்மாஸ்க் அவளுடைய அழகான முகத்தை மேலும் காணவிடாமல் அவனது பார்வைக்கு தடை விதித்தது.
WhatsApp Image 2026-01-14 at 7.30.34 PM.jpeg

ஒரு நிமிடம் அப்படியே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன் மறுகணமே நிதானத்திற்கு வந்தான். அப்போது மித்ரா தன் கையில் இருந்த பணத்தை ரகுவீரின் முகத்தில் வீசி எறிந்தாள். மேலும் அவள், “தப்பு செஞ்சா மன்னிப்பு கேட்கணும். உங்க பணத்தையும் அதிகாரத்தையும் வச்சி எல்லாரையும் விலைக்கு வாங்க முடியாது” என்று கோபத்துடன் அவனைப் பார்த்து கத்திவிட்டு அந்த பெண்மணியைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். அவள் செய்த செயலால் அதிர்ச்சியில் உறைந்த ரகுவீர் அப்படியே அமர்ந்திருந்தான்.

இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர் ஒரு நிமிடம் அப்படியே திகைத்து நின்றான். ஏனென்றால் இதுவரை ஆர்.வி.யை யாரும் நேருக்கு நேர் எதிர்த்து துணிச்சலாக இப்படி நடந்தது கிடையாது. ஆர். வி.க்கு கோபம் தலைக்கேற அவன் கை முஷ்டியாக இறுகியது. தன்னை அவமானப்படுத்தியவளை கண்டுபிடித்து பதிலடி கொடுக்கவேண்டும் என்று மனதில் நினைத்தான்.

மறுநாள் காலை பள்ளிக்குச் சென்ற மித்ரா தன்னுடைய தோழியான மாதவியிடம் முந்தைய தினம் நடந்த நிகழ்வை கோபத்துடன் கூறினாள். உடனே மாதவி, “பாரதி கண்ட புதுமைப் பெண் நீதான் மித்ரா" என்று தன் தோழியை வாழ்த்தினாள். பின் ஏதோ நினைவுக்கு வர, “மித்து உன்னிடம் சொல்ல மறந்துட்டேன், நம்ம ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்டேக்கு எல்லாரோட ஐடியாவையும் விட உன்னோடது நல்லா இருந்ததால கரஸ்பாண்டன்டே உன்ன பாக்கணும்னு சொன்னாரு” என்று கூறினாள். உடனே, “கரஸ்பாண்டன் சாரையா!” என்று ஆச்சரியத்துடன் கேட்ட மித்ராவிடம், “கவலைப்படாத அவர் ரொம்ப நல்ல டைப்” என்று தைரியம் கொடுத்தாள்.

கரஸ்பாண்ட்டை பார்ப்பதற்காக அறையின் வெளியே நின்று கொண்டிருந்த போது, “பேபி வாக் ஸ்லோலி. இல்லாட்டி உன் கால் வலிக்கும்” என்று ஒரு கொஞ்சம் குரலில் ஆண் பேசுவதை கேட்க அவ்விடம் திரும்பி பார்த்தாள். அங்கு முழங்கால் வரை மட்டுமே ஷார்ட்ஸ்கர்ட் போட்டுக் கொண்டு காலில் ஹை ஹீல்ஸும், முகத்துக்கு பொங்கல் பானைக்கு வெள்ளை அடித்தால் போல் மேக்கப்பும், ரத்த சிவப்பில் உதட்டுச் சாயமும் போட்டு ஸ்டைலாக ஒருத்தி நடந்து வந்தாள்.

அவளருகே நாகரீகம் என்ற பெயரில் ஜீன்ஸ்பாண்டில் ஒரு பெருச்சாளையே போகும் அளவிற்கு ஓட்டையும், சட்டையில் ஆங்காங்கே சில கிளிசல்களும், பரட்டை தலையுடன் கையில் கூஜாவை தூக்குவது போல் அவளுடைய கைப்பையை தூக்கியவாறு ஒருவன் பின் தொடர்ந்தான். அவளைக் கண்டதும் அங்கிருந்த சில ஆசிரியர்கள் வணக்கம் தெரிவித்தனர்.

ஆனால் அவளோ திமிரான பார்வையுடன் யாருக்கும் மரியாதை செலுத்தாமல் நடந்து வந்தாள். கரஸ்பாண்டன்டின் அறையினுள் நுழையவிருந்தவளை அங்கு நின்ற செக்ரட்டரி, “இப்போதைக்கு சார் யாரையும் உள்ள விட வேண்டாம்னு சொன்னாங்க மேடம்” என்று அவளை தடுத்து நிறுத்தினான். அவனை முறைத்து விட்டு அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தாள். அவர் கோபத்தால் பெருமூச்சு விட அங்கிருந்தவன், “பேபி காம் டவுன்” என்று அவளை சமாதானம் செய்யும் சாக்கில் அவளருகே நெருக்கமாக அமர்ந்தான்.

அங்கிருந்த இரண்டு மாணவர்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் நெருக்கம் எல்லை மீற மித்ராவின் பொறுமை முற்றிலுமாக கலைந்தது. அவள், “எக்ஸ்கியூஸ் மீ இது ஸ்கூல். பார்க் இல்ல இது எல்லாத்தையும் ஸ்கூலுக்கு வெளியில வச்சுக்கங்க” என்று மித்ரா கூறவும் மற்றவளுக்கு கோபம் தலைக்கேறியது. உடனே, “ஹொவ் டேர் யு டாக் டு மீ லைக் தாட்? நான் யார் தெரியுமா?” என்று கோபம் கலந்த அதிகார தோணியில் அவள் கேட்க மித்ராவோ, “நீ யாருன்னு உனக்கே தெரியாதா? பரவால்ல, ஐ டோன்ட் கேர். இது ஸ்கூல். உங்க கொஞ்சல்ஸ வேறஎங்கயாவது வச்சிக்கோங்க” என்று அவளுக்கு சற்றும் சளைக்காதவளாகவே மித்ரா பதில் அளித்தால்.

உடனே, “யூ!” என்று கோபத்துடன் அரைவதற்காக கையை ஓங்க, மித்ரா லாவகமாக அங்கிருந்து நகர்ந்தாள். அவளுடைய ஹை ஹீல்ஸ் காலை இடற கீழே விழுந்தாள். அதை கண்டதும் அங்கிருந்து இரண்டு மாணவர்களும் சிரிக்க அந்தப் பெண்ணிற்கு அவமானமாக இருந்தது. மித்ராவோ ‘ஷ்’ என்று கூற அவ்விரண்டு மாணவர்களும் தங்கள் சிரிப்பை நிறுத்தினர். உடனே பெண்ணுடன் வந்தவன் அவளை மெதுவாக அங்கிருந்து அழைத்துச் சென்றான். அவள் ‘ஒரு நாள் என்கிட்ட வசமா மாட்டுவடி’ என்று எண்ணியவாறு மித்ராவை பார்த்து கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்.

அங்கு வந்த செக்கரட்டரி, “மேடம் சார் உங்கள உள்ள வரச் சொன்னாரு” என்று கூற மித்ரா அனுமதி பெற்றுக்கொண்டு அந்த அறையினுள் நுழைந்தாள். “குட் மார்னிங் சார்” என்று தன் காலை வணக்கத்தை தெரிவிக்க அந்த கரஸ்பாண்டன்ட் சுழற் நாற்காலி அவள் இருந்த திசையை நோக்கி திரும்பியது. அதில் அமர்ந்திருந்த நபரைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்தாள்.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

 
இனியவளே - 6
அது வேறுயாருமல்ல ருத்ரா தான். அவன் ஸ்டைலாக அமர்ந்திருந்தான். அவளைக் கண்டதும் ஒரு புன்முறுவலுடன், "குட் மார்னிங் மிஸ் ஜான்சிராணி" என பதிலுக்கு வணக்கம் சொன்னான். இவை அனைத்தும் நடக்கும் என முன்பே அறிந்திருந்தான் போலும். ஏனென்றால் அவன் முகத்தில்அதிர்ச்சிக்குப் பதிலாக புன்முறுவல் மட்டுமே இருத்தது.

உடனே மித்ரா, "நீங்களா!” என ஆச்சரியத்துடன் கேட்டதற்கு "நானேதான்" என்று சிரித்தவாறு பதிலளித்தான். உடனே அவளுக்கு ஏதோ தோன்ற, "நான் ஜான்சிராணி இல்லயே. என் பெயர் சங்கமித்ரா" என்று புரியாமல் விழிக்க அவன் மேலும் நகைத்தான். அவனுடைய கேலிகளில் சற்று எரிச்சலடைந்த மித்ரா அவனை அப்படியே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்.

"நான் உங்க பேர சொல்லல, தைரியமான பொண்ணுங்கிறதுக்காக சொன்னேன்" என்றதும் அவள் மேலும் குழம்பினாள். புரியாமல் அவனைப் பார்க்கவும், "அன்னைக்கு அந்த ஃராடு லோகேஷ்க்கு ஒண்ணு விட்டீங்களே, அதுல நான் உங்களோட ஃன் ஆகிட்டேன்" என்று தன் வலது கையை நெஞ்சில் வைத்து கூறவும் மித்ராவிற்கு ஆச்சரியம் கலந்த சிரிப்பு வந்தது.

அவள், "உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று வியப்புடன் கேட்க அவனோ, "அந்த ஃராடு கல்யாணம் செய்யப்போன பொண்ணோட குலோஸ் ஃரெண்டு நான். அவன் நல்லவன் கிடையாதுன்னு ஃரொண்ஸ் எல்லாரும் எத்தனதடவ சொல்லியும் அவா கேட்கவே இல்ல. அன்னைக்குதான் அவனோட சுயருபத்த சிந்து முதல்ல பார்த்தா. உங்க ஃரெண்ட அவன் கேட்டதுக்கு நானே ஒண்ணு விடனும்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க”

“அதோட அன்னைக்கு இருந்த டென்ஷன்ல நீங்க என்ன பார்க்கல, அதான் உங்களுக்கு என்ன தெரியல" என்று பதிலளித்தான். மித்ரா, ‘அப்ப ஆதித்யாவோட அப்பாவும் அன்னைக்கு அங்கதான் இருந்தாரா!' என்று தன் மனதில் நினைக்கும் போதே, "ஐ அம் ருத்ரா. கரஸ்பான்டன்ட் ஆஃ வசுந்தரா இண்டர்நேஷனல் ஸ்கல்ஸ் ப்ளிஸ் டேக் யுவர் சீட்" என்று அவன் கூற மித்ரா அங்குள்ள நார்க்காலியில் அமாந்துகொண்டாள்.

ஸ்போர்ட்ஸ்டேவுக்குத் தேவையானவற்றை இருவரும் ஆலோசிக்கும்போது பல இடங்களில் ருத்ரா மித்ராவின் யோசனைகளை வியந்து பாராட்டினான். பின் "உங்க ஐடியாஸ் எல்லாமே ஃன்டாஸ்டிக்! அதனால இந்த ஸ்போர்ட்ஸ்டே குறிய ஃயுல் ரெஸ்பான்சிபிலிடி உங்களோடது. எந்த ஹெல்ப் வேணுமனாலும் பிரின்சிபல் மேம் பண்ணுவாங்க ஆல் தி பெஸ்ட்" என்று கூறி கை குலுக்குவதற்காக தன் கையை நீட்டினான். மித்ராவும் தன் கையை நீட்டினாள். உடனே மித்ராவும் ஒரு புன்னகையுடன் "தேங்கியூ சார்" என்று பதிலுக்கு கூறிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்றாள்.

அதே சமயம் மித்ராவால் அவமானமடைந்த அந்தப் பெண் பப் ஒன்றில் கோபமாக அமர்ந்திருந்தாள். அவள், "ஹவ் டேர் ஷீ கேன் டாக் லைக் தாட்? ஒரு
சாதாரண டீச்சர் என்ன எல்லார்முன்னாடியும் அவமானப் படுத்திட்டா. அவளுக்கு கண்டிப்பா நான் பாடம் காத்துக்கொடுப்பேன்" என்று அருகிலிருந்த கூஜாவிடம் பொருமிக்கொண்டிருந்த போது, "யாருக்கு ரித்திகா?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. வந்திருப்பது யாரென்று தெரிந்தும் திரும்பிப் பார்க்காமல் கோபத்தில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

புன்முறுவலுடன் வந்த அந்தப் பெண் ரித்திகாவின் பக்கம் அமர்ந்து அவளருகிலிருந்தவனை ஒரு பார்வை பார்த்ததும் அவன் அங்கிருந்து சென்றான். "என்ன ஆச்சு?" என்று விசாரிக்க மற்றவளோ, சிறு மௌனத்திற்குப் பின், "ஒரு சாதாரணை டீச்சர் என்னைய எதிர்த்து பேசுறா" என்று கோபத்தால் பற்களை நறநறவென கடித்தாள்.

உடனே அருகிலிருந்தவள், "நம்ம ஸ்டேட்டஸ்ஸ பத்தி யோசிக்கக்கூட தகுதியில்லா ஒருத்திய நினைச்சி நீ ஏன் ஒரி பண்ற? ஜஸ்ட் ரிலாகஸ்" என்று உதட்டளவில் அவளை தேற்றிய போதும் மனதில், ‘இவளயே ஒருத்தி ஒரு கை பார்த்திருக்கானா அவா எப்பேர் பட்டவளா இருக்கனும். கண்டிப்பா அவள பார்த்தே ஆகணும்' என்று மனதில் சந்தோஷமடைந்தாள்.

அப்போது, "ஸ்டேட்ஸ்ல இருந்து எப்ப வந்த கியடி?" என்று ரித்திகா கேட்க மற்றவளோ, "நேத்தே வந்துட்டேன் பட் நான் கொஞ்சம் டயாடா இருந்ததால உன்ன பாக்க வர முடியல. அதோட இன்னைக்கு ஆர்.வி.ய டின்னருக்கு இன்வைட் பண்ணலாம்னு இருக்கேன். பார்த்தே ரொம்பநாள் ஆச்சு. அதான்" என்று கூறினாள் .

அவள் கூரியதைக் கேட்டதும் மற்றவள் உதட்டளவில் புன்னகை செய்தாலும் மனதில், 'நீ எண்ணதான் டிரை பண்ணாலும் ஆர்.வி. உன் வலையில சிக்கவே மாட்டான் கியடி' என்று நகைத்துக்கொண்டாள். "சரி நான் கிளம்புறேன். பை" என்று கூறி விடைபெற்றவளை ஒரு ஏளனப் புன்னகையுடன் அவள் செல்லும்வரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் தன் செல்ல மகனான ஆதித்யாவுடன் நேரம் செலவிட தன் அலுவலகப் பணிகளை வீட்டு ஆலுவகத்திலிருந்தே பார்த்துக்கொள்ளும் வழக்கத்தை ரகுவீர் கொண்டிருந்தான். ஏதாவது முக்கியமான வேலையாக இருந்தால் மட்டுமே ஆதியை பார்த்துவிட்டு சட்டென கிளம்பிவிடுவான். ஆதியுடன் நேரம் செலவளிப்பதை எந்த ஒரு காரணத்திற்காகவும் அவன் விட்டுக்கொடுப்பதே இல்லை.

அன்றும் அதேபோல ரகுவீர் ஆதியுடன் சிரித்து விளயாடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவனுடைய பார்வை ருத்ராவின் பக்கம் திரும்பியது. தனக்குத்தானே சிரித்துக்கொண்டிருந்த ருத்ராவை பார்த்து, "இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்க. என்ன விஷயம்?" என்று புன்னகையுடன் வினவினான்.

உடனே, "அண்ணா நான் ஒரு பொண்ண பார்த்தேன். சான்ஸே இல்ல. செம்ம கேரக்டர். ரொம்ப தைரியசாலி. அந்தமாதிரி, பொண்ண மீட் பண்ணதே இல்ல, ஜஸ்ட் வாவ். அதோட அவங்க நம்ம ஸ்கூல்லதான் வேலபாக்குறாங்க. அவங்கள உங்களுக்கு அறிமுகப் படுத்துறேன்" என்று தன் முகத்தில் புன்னகை மாறாமல் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட ரகுவீருக்கு தனக்கு நடந்த சம்பவம் நினைவிற்கு வர, "நானும் ஒரு பொண்ண பார்த்தேன். அவா அரகண்ட், அடமன்ட, ஆட்டிடியூடு, ஈகோ எல்லாம் மொத்தமா சேர்ந்தவ" என்று கூறும் போதே ரகுவீரின் மூகம் கோபத்தால் சிவந்தது. சட்டென தன் தமையனின் பக்கம் ஆவலாகத் திரும்பி, "யாருண்ணா அது? இந்த கேட்டகரில உங்களையே பீட் பண்ணது?" என்று குறும்புடன் கேட்க ஓரப்பார்வையால் ரகுவீர் அவனை முறைத்தான்.

அப்போது, "நானும் ஒரு பொண்ண பாத்தேன்" என்று மழலைக்குரல் கேட்க சகோதரர்கள் இருவரும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினர். பெரியவர்களின் கவனம் தன்மீது திரும்பியதும், "அவங்க என்ன கிண்டல் பண்ணாங்க. சோகமான விஷயம் என்னன்னா அவங்கதான் என் கிளாஸ் டீச்சர்" என்று கூறவும் ருத்ரா சிரிந்தான்.

இந்த முவர் கூறும் நபர் 'ஒருத்தியே' என்று கூட அறியாமல் ஒவருக்கொருவர் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தபோது, "ஹாய் ஆர்.வி" என்று பெண்ணின் குரல் கேட்டது. அதைக் கேட்டதும், 'இவளா!' என ருத்ராவும், ஆதியும் மனதில் நினைத்துக்கொண்டிருக்க ரகுவீரோ முகத்தில் எந்த பாவனையுமின்றி தன் கோப்புகளை பார்த்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான்.

நுழைந்தவள் ரகுவீரின் அருகே வந்து, "லாங் டைம். நோ சீ. எப்படி இருக்க ஆர்.வி" என தேன்சிந்தும் குரலில் கேட்டாள். அதற்கு அவன், "குட்" என்று தன் பார்வையை கோப்புகளில் பதித்தவாறே பதிலளித்தான். தற்செயலாக அவளுடைய பார்வை அங்கு அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஆதியின் பக்கம் செல்ல, "ஹவ் ஆர் யூ ஆதி டார்லிங்?" என விசாரித்துவிட்டு கன்னத்தை செல்லமாகக் கிள்ளினாள்.

ஆதித்யாவும், "குட்" என்று தன் தந்தையைப் போலவே ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான். கியடி மீண்டும் ரகுவீரின் பக்கம் திரும்பி, “நான் ஸ்டேட்ஸ்ல இருந்து வந்ததால ஒரு பெரிய கெட்டு பார்ட்டிய அப்பா அரேஞ் பண்ணியிருக்காரு. அதனால கண்டிப்பா அந்த பார்ட்டிக்கு வந்துரு ஆர்.வி” என்று ரகுவீரை அழைத்தாள்.

அவனோ, “பார்ப்போம் மிஸ் காதம்பரி” என்று சுருக்கமாக பதிலளிக்க அவளோ, "ப்ளீஸ் ஆர்.வி. கண்டிப்பா வரணும். அண்ட் ஜஸ்ட் கால் மீ கியடி" என்று கொஞ்சும் குரலில் கூறினாள்.

அவள் அங்கிருந்து கிளம்பியதும், மீண்டும் கோப்புகளில் கவனம் செலுத்திய தன் உடன்பிறவா சகோதரனை நோக்கி, “ஏன் அண்ணா இவளலாம் உள்ள விடுறீங்க? எனக்கு இவள கண்டாலே பிடிக்கல" என்று ருத்ரா தான் நினைத்தத்தைக் கூறினான்.

ஒரு சிறு புன்னகையுடன் ருத்ராவை தன் அருகில் அழைத்து, “ருத்ரா, மிஸ் காதம்பரி, சந்திரசேகர் அங்கிளோட பொண்ணு. அவர் நம்மளோட பிஸினஸ் பார்ட்னர். சோ காம்பிரமைஸ் பண்ணிதான் ஆகணும். ஒகே, நான் மீட்டிங்கு கிளம்புறேன்” என்று கூறி ஆதியின் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து சென்றான்.

தன் தந்தை சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த ருத்ராவிடம், “இந்த ஆன்டிய எனக்கு புடிக்கவே இல்ல. இவங்க டாடா பக்கத்துல வராம இருக்க ஏதாவது வழி சொல்லு ருத்ரா” என்றான். “கவலைப்படாத ஆதி. என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” என்று ருத்ரா கூறவும் ஆதித்யாவின் முகம் மலர்ந்தது. அவன், “உன் டாடாவுக்கு ஒரு ‘ஜோடிகார்டு’ வந்துட்டா இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்” என்று கூறவும் ஆதி விழித்தான்.

“பாடிகார்ட் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன ஜோடிகார்டு?” என்று புரியாமல் கேட்கவும், “உன் டாடாவுக்கு மேரேஜ் பண்ணி வச்சிருவோம்னு சொல்றேன். அப்படி நடந்தா உனக்கு அம்மாவும் கிடைப்பாங்க, உன் டாடா பக்கம் யாரையும் அவங்க வரவிடமாட்டாங்க. சோ ஒன் ஸ்டோன் டூ பேர்ட்ஸ்” என்று தான் நினைத்ததை கூறினான்.

அவனுடைய யோசனையால் மகிழ்ந்த ஆதி, “எனக்கு அம்மாவா இல்லைனா கூட பரவாயில்லை, என் டாடாவ நல்லா பாத்துக்கிட்டா மட்டும் போதும்” என்று தந்தையின் மீது அக்கறை கொண்டுள்ள மகனாக ஆதி கூறவும் அவனை ருத்ரா வாரி அணைத்து கொண்டான். ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட அளவு கடந்த அன்பை அவர்கள் வைத்திருப்பதைக் கண்ட ருத்ராவின் கண்கள் நனைந்தன.

வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலில் விளையாட்டு தினத்திற்கான பணிகள் மித்ராவின் பொறுப்பில் செம்மையாக நடந்து கொண்டிருந்தது. விளையாட்டுதினமும் வந்தது. போட்டியில் பங்கு பெறும் அனைத்து குழந்தைகளும் ஸ்டேடியமில் நின்று கொண்டு மைதானத்திற்கு செல்வதற்காக அனைவரையும் வரிசையாக நிற்குமாறு மித்ரா கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளுடைய தோழியான மாதவி வேகமாக அவள் அருகே வந்து, “மித்ரா நம்ம சீப் கெஸ்டான கோஃவுண்டர் வந்துட்டாரு. சீக்கிரம் வா” என்று கூற இருவரும் அங்கிருந்து மற்ற ஆசிரியர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது அவளுடைய பார்வை தற்செயலாக மேடையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் மீது பட்டது. 'பரிட்சயமான முகமாதிரி தெரியுதே' என்று அவள் யோசிக்கும்போதே அந்த ரோட்டில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. உடனே அவளுடைய முகம் வெளுத்தது. ஏனென்றால் அந்த மேடையில் கோஃபவுண்டராக ரகுவீர் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.

பயத்தில் நின்றுகொண்டிருந்தவழுக்கு ரகுவீர், ருத்ரா மற்றும் ஆதித்யாவின் உறவைப் பற்றி மாதவியிடம் கேட்டு தெரிந்தபோது அதிர்ச்சி அடைந்தாள். ரகுவீரையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தவளிடம், “என்ன ஆச்சு மித்ரா? ஏன் ஏதோ பேயை பார்த்த மாதிரி நிக்கிற?” என்று கேட்டபோதுதான் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

உடனே மித்ரா, “பேயா அதைவிட பயங்கரமா இங்க ஒண்ணு இருக்கு. போச்சு அவ்வளவுதான், ‘என்னை யாரும் தேட வேண்டாம்னு’ எழுதி வச்சிட்டு ஓடீறலாம்னு தோணுது…எல்லாம் போச்சு” என்று புலம்பினாள். உடனே அவளுடைய தோழியான மாதவி, “ஏன் இப்படி புலம்புற? என்ன ஆச்சுன்னு சொல்லு” என்று கேட்க அன்று தன்னிடம் அவ்வாறு நடந்த நபர் ரகுவீர்தான் என்று போட்டுடைத்தாள்.

ஆச்சரியத்தால் மாதவியின் கண்கள் விரிய, “வம்ப விலைகொடுத்து வாங்கியிருக்க” என்று கூறியவள் சிறு மௌனத்திற்கு பின், “நம்ம ரகுவீர் சார் ஸ்கூலுக்கு ஏதாவது முக்கியமான விஷயம்னாதான் வருவாரு. அதனால அவர் உன்ன பார்க்கிறதுக்கு வாய்ப்பு ரொம்ப இருக்காது. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தலை மறைவாய் இரு” என்று மாதவி யோசனை கூறினாள். தன் தோழி கூறியதைப் போலவே மித்ரா ரகுவீரின் கண்களில் படாமல் இருந்தாள்.

ஆனால் அனைத்து பொறுப்புகளும் அவள் கையில் இருப்பதால் அவ்வப்போது அவன் முன்பு வருவதை அவளால் தடுக்க இயலவில்லை. தன்னை பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக தன் கைப்பையில் இருந்து மாஸ்கை எடுத்து அணிந்தாள்.

ஆனால் அவளை அடையாளம் காட்டிக் கொடுக்கப் போவது அந்த ‘மாஸ்க்’தான் என்பது அவளுக்கு அப்போது தெரியாது. மித்ரா சுதந்திரமாக எந்த பயமும் இன்றி நடமாட ஆரம்பித்தாள். மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி, பள்ளி மைதானத்தில் நடந்து கொண்டிருக்க அதை பார்த்தவாரு மேடையில் ரகுவீர் அமர்ந்திருந்தான். அவன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வர மேடையை விட்டு கீழே இறங்கியவனை பின்தொடர்ந்தான் ருத்ரா.

தன் தந்தையைக் காணும் பொருட்டு ஆதித்யாவும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். தான் விளையாட்டுப்போட்டியில் வென்றதை ஆதி பெருமிதமாக கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தபோது, “அண்ணா நான் சொன்னேன்ல அந்த தைரியமான டீச்சர் அவங்கதான்” என்று ஒரு திசையை நோக்கி காட்ட ஆதியும், “டாடா என்ன கிண்டல் செஞ்சதும் அவங்க தான்” என்று அதே திசையை நோக்கி கைகாட்டினான்.

இருவரும் ஒரே திசையை காட்டியதில் சற்று வியப்புற்ற ரகுவீர் அந்த ‘நபர் யார்?’ என்று பார்த்தபோது அவன் முகம் மாறியது. ஏனென்றால் அது அன்று அவனுடன் வாக்குவாதம் செய்த அதே பெண் என்பதால். மித்ராவின் மாஸ்க் அவளை ரகுவீருக்கு அடையாளம் காட்டியது.

ஆனால் வேலையின் முழு ஈடுபாட்டில் இருந்த மித்ராவிற்கு ஒரு கோபக்கனல் கொண்ட பார்வை தன்னை தாக்கிக் கொண்டிருப்பதை அறியவில்லை. அதன் பின் ரகுவீரின் பார்வை மித்ராவை விட்டு அகலவே இல்லை.

விழா இறுதி கட்டத்தை நெருங்க போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. தான் ரகுவீரிடம் மாட்டிக்கொள்ளாததை நினைத்து திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்த மித்ராவிற்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஸ்போர்ட்ஸ்டேவை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டது.

இறுதியில், இந்த அனைத்து பொறுப்பையும் ஏற்று செம்மையாக பணிபுரிந்த மித்ராவை பாராட்டி அவளுக்கு பரிசை ரகுவீர் கொடுக்குமாறு ருத்ரா கூறவும் மித்ராவிற்கு தூக்கிவாரிப் போட்டது. செய்வதறியாது விழித்த மித்ராவை, காண்பதற்காக ரகுவீர் மேடையில் காத்துக் கொண்டிருந்தான். மாஸ்க் அணிந்த மித்ரா பயத்துடன் மெல்ல மேடை ஏறி ரகுவீரிடமிருந்து பரிசை பெற்றபோது புகைப்படம் எடுப்பவர் அவளுடைய மாஸ்கை அகற்றுமாறு சைகை செய்யவும் அவளுக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது.

WhatsApp Image 2026-01-16 at 4.34.48 PM.jpeg

தப்பிச்செல்ல வழி இல்லாமல் தன்னுடைய மாஸ்கை அகற்றினாள். இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்த ரகுவீர் அவளை வெறித்து நோக்கினான். ஆனால் அவளுடைய முகத்தை கண்டதும் அவனுடைய கடினப்பார்வை மாறி அதிர்ச்சியில் ஆழ்ந்தான்.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடலாம்...


 
இனியவளே - 7

புகைப்படம் எடுத்துவிட்டு மித்ரா மேடையைவிட்டு வேகமாக கீழே இறங்கினாள். ரகுவீரின் பார்வை அப்போதும் மித்ராவை விட்டு அகலவே இல்லை. அருகில் வந்த ருத்ரா, “அண்ணா நான் சொன்னேன்ல, இவங்க தான் சங்கமித்ரா. நம்ம ஆதியோட கிளாஸ் டீச்சர்” என்றதும் ரகுவீர் மேலும் அதிர்ந்தான். விழா முடிந்த மறுகணமே ரகுவீர் ஆதியை தன்னுடன் அழைத்துச் சென்றான். அண்ணனின் இச்செயல் ருத்ராவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

அன்றிரவு ரகுவீர் தன்னுடைய அறையில் புகைப்படம் ஒன்றை பார்த்தவாறு சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2026-01-18 at 8.48.10 PM.jpeg
கண்களில் வலியும் வேதனையும் மட்டுமே இருந்தது. “ஏன் எனக்குமட்டும் இப்படி நடக்குது? பழச மறந்தாலும் அத நினைவு படுத்துற மாதிரியே நடக்குதே”

“என்னை ஏன் விட்டுட்டு போன? இன்னுமும் நினச்சா என்னால அத ஏத்துக்கவே முடியல” என்று தன் மனதில் வருந்தினான். ஒரு பெருமூச்சுக்குப் பின் சாய்வு நாற்காலியில் அப்படியே சாய்ந்தான். இறுக மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

அதே சமயம் இங்கு சங்கமித்ரா தன் அறையில் உள்ள படுக்கையில் கைகளால் முழங்கால்களை கட்டியவாறு அமர்ந்திருந்தவள் யோசனையில் ஆழ்ந்தாள். அவள், ‘அவர் அமைதியா போனத பார்த்தா...என்ன நியாபகம் இல்லையோ? ஒருவேள நியாபகம் இருந்தா? நாளைக்கு என்ன நடக்கப்போகுதோ. கண்ணா நீதான் என்ன காப்பாத்தணும்’ நினைத்தவள் கடவுளை வேண்டிக்கொண்டு அப்படியே உறங்கினாள். ஆனால் தன் வாழ்வில் இனி வரப்போகும் பிரச்சனைகளுக்கான துவக்கம் இது தான் என்பதை அவள் அப்போது உணரவில்லை.

சில நாட்கள் கடந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல சுந்தரேஸ்வரர் தன்னுடைய மனைவி அகிலாண்டேஸ்வரியுடன் காலை உணவை உண்டு கொண்டிருந்தபோது, “கரெக்டான டைமுக்கு தான் வந்திருக்கோம் போல” என்று ருத்ராவின் குரல் கேட்டது. “உனக்கு இல்லாமையா” என்று கூறி திரும்பி பார்த்த அகிலாண்டேஸ்வரி ஆச்சரியமடைய மனம் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தது. கையில் வைத்திருந்த இட்லியை அப்படியே தட்டில் போட்டுவிட்டு ருத்ராவின் அருகில் நின்றவரிடம், “அண்ணா உன்ன பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்க?” என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் அகிலா விசாரித்தாள்.

அகிலாண்டேஸ்வரியின் அண்ணனும் ருத்ராவின் தந்தையுமான தயானந்தன் தன் மனைவி புவனேஸ்வரியுடன் அங்கு நின்று கொண்டிருந்தார். தயா குரூப் ஆஃப் கம்பெனயின் எம்.டி. பிஸ்னசில் அவ்வப்போது ரகுவீருக்கு உதவி செய்வார்.

ருத்ராவிற்கென்று நிறைய ரெஸ்டாரன்ட் மற்றும் ரிசார்ட்கள் இருந்தபோதிலும், ரகுவீர் மற்றும் ஆதித்யா மீது கொண்ட அன்பின் காரணமாக வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலில் மேற்பார்வை பார்க்கிறான். அவனுடைய தந்தை தயானந்தனும் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கும் தன் தங்கை குடும்பத்தார் மீது அளவுகடந்த பாசம் இருந்தது.

தன் தங்கையை கண்டவுடன், “நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க? மாப்பிள்ளை எப்படி இருக்காரு?” என்று கேட்ட கேள்விக்கு அகிலாவிடம் இருந்து பதில் வருவதற்குள், “டேய் இவ்வளவு வருஷம் ஆகியும் இன்னும் என்ன மாப்பிள்ளைனும் தான் கூப்பிடுவியா?”

“உங்க வீட்டு மாப்பிள்ளை ஆகுறதுக்கு முன்னால நான் உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுங்கறத மறந்துட்டியா?” என்று சுந்தரேஸ்வரர் கேட்க தயானந்தன் அசட்டுத்தனமாக சிரித்தார். தயானந்தன் சுந்தரேஸ்வரர் ஆகிய இருவரும் பாலிய சிநேகிதர்கள். அதனால்தான் இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக தாயானந்தனின் தங்கையான அகிலாவை தன் நண்பனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

பெரியவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, “என் செல்ல மருமகள் ரித்திகா எங்கண்ணா?” என்று அகிலா விசாரித்தாள். அப்போது, “ஐ அம் ஹியர் அத்தை” என்ற குரல் கேட்டதிசையில் அனைவரும் திரும்பினர். பள்ளியில் மித்ராவிடம் செம்ம டோஸ் வாங்கி அவமானம் அடைந்த அதே பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

அன்று நவநாகரீக யுவதியாக காட்சியளித்தவள் இன்று பாரம்பரிய உடையான சேலையை அணிந்து அமைதியின் திருவுருவமாக நின்றுகொண்டிருந்தாள். அகிலா வேகமாக அவளை தன் அருகில் அமரச் செய்து நலம் விசாரித்தாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ரித்தி எப்போ ரகு, ஆதி பொறுப்பை உன்கிட்ட ஒப்படைக்கிறேனோ அப்பதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கும்”

“நீ தான் எப்படியாவது அவனுடைய மனசமாத்தி உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும” என்று அகிலா ரிதிக்காவின் கையை பற்றியவாறு வேண்டிக்கொண்டாள். அப்போது, “அகிலா யாரோட மனசையும் யாராலயும் மாத்த முடியாது. ரகு எப்பவுமே தெளிவான முடிவுதான் எடுப்பான். அதனால இந்த விஷயத்துல அவன கட்டாயப் படுத்தாத” என்று ரித்திகாவின் தந்தையான தயானந்தன் சொன்னதும் அவள் எரிச்சலுடன் தன் தலையை திருப்பிக் கொண்டாள்.

அப்போது, “அத்தை அவளுக்கு அவளையே பாத்துக்க தெரியாது, இதுல அண்ணனையும், ஆதித்யாவையும் இவளா பாத்துக்க போறா?” என்று கூறி நக்கலாக சிரிக்க தமையனை ரித்திகா கோபத்துடன் முறைத்தாள். ஆனால் அவனோ எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பிடுவதிலே கவனமாய் இருந்தான் ருத்ரா. அகிலா ரித்திகாவை தன் மகன் ரகுவிற்கு எப்படியாவது திருமணம் செய்துவிடவேண்டும் என்ற முடிவில் இருந்ததால், “இவங்க சொல்றதெல்லாம் கேட்காத. ரகு ஆதிக்கு ஸ்விம்மிங் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கான். போய் பார்த்து பேசு” என்று மெல்ல ரித்திகாவிற்கு மட்டும் கேட்குமாறு கூற மற்றவளும் மகிழ்ச்சியுடன் நீச்சல் குளம் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

நீச்சல் குளத்திற்கு சென்றவளை அங்கு நின்ற வாயிற் காவலர்கள் உள்ளே செல்ல தடைவிதித்தனர். அவள் யார் என்று தெரிந்தபின் அனுமதித்தனர். அவள் உள்ளே சென்றபோது ரகுவீர் ஆதிக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தான். வெற்று மார்பில் நீர் துளிகள் வழிய வலிமையான உடற்கட்டுடன் ஆணழகனான ரகுவீரை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

மெய்மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை அருகே இருந்த ஆதித்யாவை கண்டதும் கடினமுற்றது. அவள் ‘ரகு கூட தனியா டைம் ஸ்பெண்டு பண்ணலான்னு வந்தா, இந்த குட்டி பிசாசு எப்ப பார்த்தாலும் அவர் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கு. ரகுவோட லைஃப்ல இருந்து இத பிரிக்குறதுக்கு எத்தனை முயற்சி எடுத்தாலும் நடக்கவே மாட்டேங்குதே. என்ன பண்ணலாம்?’ என்று மனதில் யோசித்தபோது ஒன்று தோன்ற கொடூர புன்னகை புரிந்தாள்.

அப்போது, “ஹே ரித்திகா நீ எப்ப வந்த?” என்று ஸ்விம் ரோபை அணிந்தவாறு ரகுவீர் வர மற்றவளோ சட்டென முக பாவத்தை மாற்றி ஒரு மெல்லிய புன்னகை புரிந்தாள். “இப்போ தான் வந்தோம். அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அதான் எல்லாரும் வந்திருக்கோம்” என்று தேன் சிந்தும் குரலில் சொன்னதும், “தயா மாமாவும் வந்திருக்காரா?” என்ற அவன் கேட்டான். அதற்கு அவள் ‘ஆம்’ என்று தலையசைக்க, “அவர் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று கூறினான்.

பின் தன் மகனிடம் திரும்பி, “ஆதி டாடாக்கு ஒரு இம்பார்டன்ட் ஒர்க் இருக்குது. அதனால நான் முதல்ல போறேன் நீ மெதுவா வா” என்று கூறி அருகில் இருந்தவனைப் பணித்தான். உடனே ரித்திகாவோ, “நான் பார்த்துக்கிறேன் ரகு நீங்க போங்க” என்று பரிவுடன் கூறவும் அவன், அறையில் உடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

ரித்திகா அவ்வப்போது வீட்டிற்கு வந்தபோதிலும் ஆதித்யாவுக்கும் அவளுக்கும் இடையே நல்ல இணக்கம் இருந்ததில்லை. அதோடு அவளுடைய ஸ்டைல், திமிர், தற்பெருமை பேச்சுகள் அவனுக்கு பிடிக்கவில்லை. அவள் வந்தாலே ஆதி அங்கிருந்து ஓடிவிடுவான். அன்றும் அதேபோல அங்கிருந்து செல்ல இருந்தவனை தடுத்து நீச்சல் குளத்தின் அருகே உள்ள லான்ச் சேரில் அமர வைத்து பேசத்துவங்கினாள்.

ஆனால் அவனோ அவள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தான் அதனால் சற்று எரிச்சல் அடைந்த ரித்திகா பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசலானாள்.

இறுதியாக, “ஆதி உனக்கு அம்மானா பிடிக்குமா? அவங்க வேணுங்கிற ஆசை இல்லயா?” என்று தான் வந்த நோக்கத்தை மெல்ல வெளிப்படுத்தினாள். ‘அம்மா’ என்ற வார்த்தையை கேட்டதும் எந்த ஒரு அசைவுமின்றி ஆதித்யா சிலையாக அமர்ந்திருந்தான்.

எந்த ஒரு குழந்தையாக இருந்தாலும் தாய் அன்பும் தந்தையின் அரவணைப்பும் மிக முக்கியமானது. அதேபோலத்தான் ஆதித்யாவும் தன்னுடன் பயிலும் சகமாணவர்களின் பெற்றோரைப் பார்த்து தனக்கும் அம்மா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சில நாட்கள் வருந்தியதுண்டு. ஆனால் ரகுவீரின் அன்பானது ஆதியின் அந்த ஏக்கத்தை அடியோடு போக்கிவிடும்.

ஆதியின் மனநிலையை நன்கு அறிந்த ரகுவீர் இந்த விஷயத்தை பற்றி அவன் முன்பு யாரும் பேசக்கூடாது என்று தன் குடும்பத்தாருக்கு உத்தரவிட்டிருந்தான். ஆனால் அதை மீறி ரித்திகா அந்த பேச்சை எடுத்தாள்.

“உன்ன பாத்துக்க உன் டாடா இருக்காரு. ஆனா உன் டாடாவை பார்த்துக்க யாருமே இல்ல. அதனால உங்க டாடாவுக்கு கல்யாணமாகி ஒரு அம்மா வந்தா உனக்கு நல்லா இருக்கும்ல. ஆனா அவர் கல்யாணம் பண்ணாததுக்கு நீதான் காரணம்" என்றதைக் கேட்டவுடன் அவளை அப்படியே நோக்கினான்.

“இது எல்லாம் உன் நல்லதுக்காகவும் உன் டாடா நல்லதற்காகவும் தான் சொல்றேன்” என்று அக்கறை உள்ளவள்போல் கூறினாள். அடுத்த வார்த்தை அவள் பேசுவதற்கு முன்பு வேகமாக எழுந்தவன், “நான் போறேன்” என்று கூறி அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

அவளோ, ‘இந்த குட்டி பிசாசுக்கு எவ்வளவு திமிரு இருந்தா நான் பேசிகிட்டு இருக்கும்போதே அதுவாட்டுக்கு போகும். இருடா நான் ரகுவை கல்யாணம் பண்ணி வருவேன், அப்ப உன்னை பார்த்துக்கிறேன்’ என்று மனதிற்குள் கோபத்தில் பொறுமியவள் அவ்விடம்விட்டு தானும் சென்றாள்.

அன்றிரவு ஆதி தன் படுக்கைக்கு சென்றபோது ரித்திகா கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்து அவனை தூங்கவிடவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தவனுக்கு ரகுவீரன் முகம் மன திரைக்குள் வந்து சென்றதும் ஒரு முடிவுக்கு வந்தான்.

மறுநாள் காலை உணவுக்காக அனைவரும் அமர்ந்திருந்தபோது தன்னுடைய இரண்டு நாள் பள்ளி விடுமுறையை ருத்ராவின் வீட்டில் செலவிடப் போவதாக ஆதி கூறவும் அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ருத்ராவுக்கு அதைக் கேட்டதும் சட்டென புரையேறியது. “என்னடா புதுசா எங்க வீட்டுக்கு வரேன்னு சொல்ற? உன் டாடா ஓகே சொல்லுவாரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்க, “எனக்கு ஓகே” என்று ரகுவீரன் குரல் கேட்க அனைவரும் மேலும் திகைத்தனர்.

டைனிங் டேபிளை நோக்கி நடந்தவாரே, “ஆதி நேத்தே என்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டான். மாமா வீட்டுக்கு தானே போறான், போயிட்டு வரட்டும்” என்று கூறியதும் ஓடி சென்று தன் தந்தையை அணைத்துக் கொண்டான். காலை உணவு முடிந்ததும் அனைவரிடத்திலும் விடைபெற்றுக்கொண்டு, தன் தந்தையின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு, “ஐ லவ் யூ டாடா” என்று கூறி ருத்ரவுடன் கிளம்பினான். இதற்கு முன்பும் வேலை விஷயமாக ரகுவீர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோதுகூட ஆதி இவ்வாறு செய்ததில்லை. ஆனால் இன்று தன் மகனின் செய்கை அவன் மனதை நெருடியது.

ருத்ரா தன் காரிலேயே ஆதியை அழைத்துச் சென்றான். கார் சிறிது தூரம் சென்றதும், “நான் ஷாப்பிங் போகணும்” என்று ஆதியின் குரல் கேட்டது. “எதுக்கு?” என்ற ருத்ராவின் கேள்விக்கு, “ஒரு வீட்டுக்கு போனா ஏதாவது வாங்கிட்டு போகணுங்குற மேனர்ஸ் கூடவா உனக்கு தெரியாது?” என்று ஆதி கேட்கவும் ஆச்சரியமடைந்து அவனைப் பார்த்தான்.

‘திடீர்னு பெரிய மனுஷன் மாதிரி பேசுறானே!’ என்று நினைத்தவன், “சரி சார். வாங்க சார்" என்று கூறி காரை தங்களுடைய மால் ஒன்றிற்கு விடச் சொன்னான். ஆனால் ஆதித்யாவோ, “நம்ம மால் ரொம்ப போர். வேற மாலுக்கு போவோம்” என்று கூறவும் அங்கு சென்றனர். ருத்ரா பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருக்க மாலின் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிய ஆதி தனக்கு பிடித்த தின்பண்டங்களை பேக்-பேக்கில் நிரப்பினான்.

ஒரு கடையில் அவன் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, “வாட் அ ஸ்ர்ப்ரைஸ். என் மாலுக்கு வந்திருக்கீங்க” என்று ஒரு ஆணின் குரல் கேட்க ருத்ரா திரும்பிப் பார்த்தான். அங்கு அந்த மாலின் உரிமையாளரான அசோக் சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான். வெகு நாட்கள் கழித்து தன் நண்பனை கண்டதும் ருத்ரா பேசத் துவங்கினான் அவர்களின் பேச்சினூடே ருத்ராவின் பார்வை அவ்வப்போது ஆதித்யாவின் பக்கம் சென்று கொண்டேதான் இருந்தது.

அப்படி ஒரு முறை அவனுடைய பார்வை ஆதித்யாவிடம் சென்றபோது அங்கு அவனை காணவில்லை. உடனே ருத்ராவின் இதயம் பதற்றத்திலும் பயத்திலும் பல மடங்கு வேகமாக துடித்தது. அவன் அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் சென்று ஆதியை பற்றி விசாரித்த போது தான் தேர்ந்தெடுத்த உடையை அணிந்து பார்ப்பதற்காக ட்ரையல் ரூமிற்கு ஆதித்யா சென்றதாக அவன் கூறவும் நிம்மதி அடைந்தான்.

உடனே அந்த ரூம் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கும் ஆதித்யா இல்லாததை உணர்ந்த ருத்ரா மீண்டும் பதறினாலன். ‘இந்த ஆதி மாறவே இல்லை. மறுபடியும் ஏமாத்திட்டு ஓடிட்டான்’ என்று மனதில் நினைத்தவன் தன் நண்பன் அசோக்கின் உதவியால் அங்கிருந்து சிசிடிவி பதிவை பார்த்தான் அப்போது அதில் யாரும் அறியா வண்ணம் ஆதித்யா அந்த கடையை விட்டு சென்றது தெளிவாக பதிந்திருந்தது.

அதே சமயம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டு வேலைகளில் தன் தாய்க்கு மித்ரா உதவி கொண்டிருந்தாள் அப்போது அவளுடைய உயிருக்குயிரான தோழியான பானுமதியை காபி ஷாப்பில் சந்திக்குமாறு கைபேசிக்கு அழைப்பு வர உடனே கிளம்பினாள்.

அவள் அந்த காபி ஷாப்பிற்கு வந்தபோது தீவிரமான சிந்தனையில் பானுமதி அமர்ந்திருந்தாள் தன் தோழி மித்ரா வந்ததை தற்செயலாக பார்த்தவள் ஒரு புன்னகையுடன் அவளை வரவேற்றாள். பானுவின் அருகே அமர்ந்தவள் அவளைப் பார்த்து, “என்ன விஷயம் பானு? திடீர்னு வர சொல்லி இருக்க” என்று விசாரிக்க மற்றவளோ தன் கைபேசியில் ஒருவனுடைய படத்தை காட்டினாள்.

மித்ரா புரியாமல் அவளை பார்க்கவும், “எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு” என்று பானு கூறவும் மித்ரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். தன் தோழியை கட்டி அணைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தாள் பெண் இருவரும் சிறிது நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மித்ராவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை கண்டதும் அதுவரையில் அவளுடைய வதனங்களில் இருந்து சிரிப்பு அப்படியே மறைந்தது. முக்கியமான அழைப்பு என்று பானுமதியிடம் கூறி அவளை விட்டு சற்று தொலைவில் வந்து அந்த அழைப்பை எடுத்தாள். “ஏதாவது தெரிஞ்சதா?” என்று ஆவலுடன் கேட்க மறுமுனையில் இருந்து என்ன பதில் வந்ததோ, அடுத்த நொடியே மித்ராவின் முகம் நிராசையால் வாடியது.

சில கணங்கள் அந்த நபருடன் பேசியவள் இறுதியாக, “நான் உங்கள தான் நம்பி இருக்கேன்” என்று கூறி கைபேசி வைத்துவிட்டு திரும்பி பார்த்தபோது பானுமதி அங்கு நின்று கொண்டிருந்தாள். தன்னை கண்டதும் அதிர்ச்சியுற நின்ற மித்ராவை பார்த்து, “நீ யார நம்பி இருக்க மித்ரா? ஒரு வேலை லவ் பண்றியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

உடனே மற்றவளோ, “போடி லூசு. உன்கிட்ட சொல்லாம நான் யாரையாவது லவ் பண்ணுவேனா? நான் என் கலீக்கிட்ட வேலை விஷயமா பேசிகிட்டு இருந்தேன். அவ்வளவுதான் ஆமா எப்ப பத்திரிக்கை அடிக்க போற?” என்று அப்படியே மித்ரா பேச்சை திசை திருப்பினாள். பெண்கள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

இங்கு மாலில் இருந்து வெளிவந்த ஆதித்யா தன் பேக்-பேக்கில் இருந்து ஹூடட் ஷர்ட்டை அணிந்து யாரும் அறியா வண்ணம் தொலைதூரம் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்படி வந்தவன் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சென்று அமர்ந்தான். தன்னை யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்று கைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தான்.

பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான் அவனுடைய எண்ணங்கள் அனைத்தும் அவன் தந்தையான ரகுவிரை சுற்றியே இருந்தது. ‘டாடா நீங்க என்ன நல்லா பாத்துக்கிட்டீங்க. ஆனா நான் இருந்தா நீங்க மேரேஜ் பண்ணிக்க மாட்டீங்க. அதனாலதான் இந்த டெசிஷன் எடுத்தேன். சாரி டாடா குட் பை’ என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அப்போது அவனுடைய பார்வை அங்கிருந்த ஒருவனிடம் சென்றது தன்னையே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த ஆதி அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று அமர்ந்தான் ஆனால் அந்த நபர் அவனை அங்கும் பின் தொடர்ந்தார்

ஆதித்யா ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை என்பதை யூகித்தவன் எப்படியாவது அவனை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருந்தான். அவனை தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் அவன் அருகே அமர்ந்து அவனுக்கு ஆசை ஊட்டும் வார்த்தைகளை கூறினான். ஆனால் அவன் கூறும் எந்த ஆசை மொழிக்கும் ஆதி மயங்கவில்லை.

அவனை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்த அந்த நபர் தன்னுடைய பலத்தை பிரயோகித்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது, “செல்லம் நீ இங்கே இருக்க உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என்று ஒரு குரல் கேட்டது.

இங்கு ஆதித்யாவை தேடும் பணியில் இருந்த ருத்ரா தன் தந்தையை கைபேசியில் அழைத்து நடந்த அனைத்தைத்தையும் விளக்கினான். அதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த தயானந்தன், "ஏன்டா ஒரு வேலையகூட உருப்படியா செய்ய மாட்டியா? ரகு நம்மள நம்பி தானே ஆதிய அனுப்பி வச்சான்” என்று அடுக்கடுக்காக வசைமொழி பொழியத் துவங்கினார்.

உடனே ருத்ராவும், “அப்பா! இப்போ என்ன செய்யலாம்னு மட்டும் சொல்லுங்க. அண்ணா வேற நிறைய தடவை கால் பண்ணிட்டான்” என்று கூறினான். “சரி, நானும் தேடுறேன். நீயும் தேடு” என்றவர் அப்படியே மௌனமானார். “என்ன ஆச்சுப்பா? ஏன் சைலன்ட் ஆயிட்டீங்க?” என்ற ருத்ராவின் கேள்விக்கு, “நீ வீட்டுக்கு சீக்கிரம் வா” என்று மட்டுமே தயானந்தன் கூறினார்.

உடனே அவன், “ஆதி வந்துட்டானா?” என்ற அவனுடைய கேள்விக்கு மீண்டும், “நீ வா” என்று மட்டும் கூறி இணைப்பை துண்டித்தார். வேகமாக வீட்டிற்கு வந்தவன் சோபாவில் அமர்ந்திருந்தவனை கண்டதும் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான்.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

https://www.narumugainovels.com/threads/35498/
 
இனியவளே - 8

மித்ரா வீடு திரும்பியதும் வேகமாக உள்ளே நுழைந்தாள். ஹாலில் அன்னையின் அருகே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் பேரதிர்ச்சி அடைந்தாள். “நீயா!” என்று அவளும், “நீங்களா!” என்று ஆதித்யாவும் ஒரே சமயத்தில் ஆச்சரியமடைந்தனர். “இங்க என்னடா பண்ற?” என்று விசாரிக்க அவனோ, “அது...அது..” என்று இழுத்துக்கொண்டிருந்தான்.

அப்போது, “இந்த பையன் பெத்தவங்க கூட வரும்போது தொலஞ்சிட்டானாம். பஸ் ஸ்டாப்ல தனியா இருந்தப்போ ஒருத்தன் இவன ஏமாத்தி கூட்டிட்டுப் போகப்பாத்தான். என் பேரன்னு சொன்னதும் அவன் பயந்து ஓடிட்டான். என்ன செய்யிறதுன்னு தெரியாம இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என்று நடந்ததை வனஜா விளக்கினார்.

“என்னமா இப்படி வம்ப விலை கொடுத்து வாங்கிட்டீங்க. இவன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? நான் வேல பார்க்குற ஸ்கூல் கோ ஃவுண்டரோட பையன்” என்று மித்ரா கூறவும் வனஜா திகைத்தாள். மித்ரா ஆதியை பார்த்து, “எப்பவுமே நாலு பேர் படை சூழதான இருப்ப. அப்புறம் எப்படி? மறுபடியும் யாருக்கும் தெரியாம வந்துட்டியா?” என்று விசாரித்தாள்.

சில நேர தயக்கத்திற்குப் பின், “ஆமா, நான் வீட்ட விட்டு வெளிய வந்துட்டேன்” என்றதும், "என்ன?" என்று அதிர்ச்சியடைந்தாள். “நான் இல்லைனா தானே டாடா கல்யாணம் பண்ணுவாரு” என்று ஆதித்யா கூறவும், “இதுக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று புரியாமல் கேட்டாள். உடனே, “நான் இருந்தா அவரு மேரேஜ் பண்ணமாட்டாரு. நான் போய்ட்டா அவரு அவங்க கூட ஹேப்பியா இருப்பாருல. அதான் இப்படி செஞ்சேன்” என்று ஆதி கூறவும் இரண்டு பெண்களும் அதிர்ந்தனர்.

ஆதித்யாவிற்கு ‘அம்மா’ கிடையாது என்பது மித்ராவிற்கு அப்போதுதான் தெரிந்தது. உடனே அவளுக்கு அவன் மீது இரக்கம் பிறந்தது. மெல்ல தன் அருகில் அழைத்து, “யாருடா உன்கிட்ட இப்படி சொன்னது?” என்று கேட்டாள்.

மேலும் அவன் மௌனமாக இருக்க அவள் பேசத் துவங்கினாள். “நீ வெளிய வந்துட்டா உன் டாடா ஹேப்பியா இருப்பாரா? கண்டிப்பா இல்ல. இன்னும் ரொம்ப வருத்தப்படுவாரு” என்று அவள் கூறவும் அவன் வாயைத் திறந்தவண்ணம் அவளையே பார்த்தான். “அப்ப டாடா ஹேப்பியா இருக்கமாட்டாரா?” என்று நிராசையுடன் அந்த குழந்தை தன் கண்களை உருட்டியவாறு கேட்டபோது மித்ராவிற்கு அந்த பிஞ்சு முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.

“இல்ல ஆதி, அவரோட சந்தோஷமே நீதான். உனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு உன் பக்கத்துலயே பாடிகார்ட்ஸ்ஸ வச்சிருக்காரு. நீயே அவரவிட்டு போனா எப்படி சந்தோஷமாக இருப்பாரு?”

“உன் மனசுல என்ன நினைக்குரியோ அத அப்படியே உன் டாடாகிட்ட சொல்லு ஆதி. உன் சந்தோஷம் தான் அவர் சந்தோஷமும். அதனால நீ என்ன சொன்னாலும் அவரு கேப்பாரு" என்று தேற்றினாள்.

உடனே, “தேங்க்யூ மித்து மிஸ். நான் பெரிய மிஸ்டேக் பண்ணீட்டேன். இனி என் டாடாவ விட்டு எங்கயும் போகவே மாட்டேன். வீட்டுக்கு போன உடனே சாரி கேப்பேன்” என்று ஆதித்யா உறுதியுடன் கூறவும் மித்ரா மகிழ்ந்தாள்.

புன்னகையுடன் இருந்தவள் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது. “உன் டாடாவுக்கு நீ வீட்டை விட்டு வெளியே வந்தது தெரிஞ்சிருக்குமே. அவர் உன்னை சல்லட போட்டு தேடிகிட்டு இருப்பாரு. இப்ப என்ன பண்றது?” என்று பதற்றத்தோடு யோசித்தாள். ஆதியோ, “கவலப்படாதீங்க மிஸ். நான் ருத்ரா வீட்டுக்கு போறேன்னு தான் சொல்லிட்டு வந்தேன். இப்ப என்ன ருத்ரா தான் தேடிகிட்டு இருப்பான். ருத்ரா டாடா கிட்ட சொல்ல மாட்டான்” என்று கூறினான். “பெரியவங்கள மரியாதையோட பேசணும்” என்று அறிவுறுத்தியவள் ருத்ராவை தன் கைபேசியில் அழைத்தாள்.

இங்கு ருத்ராவுடன் ஆதித்யா இல்லாததை அறிந்த ரகுவீர் கோபத்தின் உச்சிக்கே சென்றான். “ருத்ரா உன்ன நம்பி ஆதிய அனுப்பிவச்சா ஒவ்வொரு தடவயும் இப்படித்தான் பண்ணுவியா? ஏன் அவன மாலுக்கு கூட்டிட்டு போன?” என்று சரமாரியாக வசை மொழிகளை பொழிய ருத்ரா எதுவும் பேசாமல் குற்ற உணர்ச்சியால் தலை குனிந்தவாரு நின்றான். நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா, “வாவ்! நான் சொன்னத அந்த குட்டி பிசாசு அப்படியே செஞ்சிருச்சே. இனி நான் ரகுவை கல்யாணம் பண்ண எந்த தடையும் இல்லை” என்று மகிழ்ந்தாள்.

அப்போது தயானந்தன், “கவலைப்படாத ரகு, ஆதி சீக்கிரம் கிடைச்சிருவான். அவன தேடச் சொல்லி என் ஆட்கள அனுப்பி இருக்கேன்” என்று ரகுவீரை சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ருத்ராவின் கைபேசிக்கு மித்ராவிடமிருந்து அழைப்புவந்தது. அதை எடுத்தபோது, "சார் ஆதி..." என்றதும், "ஆதியா!" என்று திகைத்து கேட்டான். 'ஆதி' என்ற பெயரைக் கேட்டதும் ரகுவீர் சட்டென அவனுடைய கைபேசியை பிடுங்கி தன் செவியில் வைத்தான். "ஆதி எங்க வீட்டுலதான் இருக்கான். அவன்.." என்று பேசிக்கொண்டிருக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டது.
WhatsApp Image 2026-01-21 at 5.25.42 PM (1).jpeg
'என்ன பேசிகிட்டு இருக்கும்போதே கட்பண்ணீடாரு' என்று குழம்பினாள். சில நிமிடத்திற்குள் அவளுடைய வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
WhatsApp Image 2026-01-21 at 5.25.42 PM.jpegWhatsApp Image 2026-01-21 at 5.25.42 PM (2).jpeg
ருத்ராவை எதிர்கொள்ளப் போவதாக நினைத்தவள் மிகுந்த கோபத்துடன் நின்று கொண்டிருந்த ரகுவீரைக் கண்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

வாயிற் கதவருகே நின்றவளை பொருட்படுத்தாமல், “ஆதி…ஆதி” என்று கர்ஜித்தவாறு உள்ளே சென்றான். அவளும் அவனைப் பின்தொடர்ந்தவாறு ஹாலுக்கு வந்தபோது, அங்கு ஆதியும் வனஜாவும் இருந்தனர். கோபத்துடன் நின்று கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்ததும் ஆதித்யா பயந்து நடுங்கினான். அன்பு, பாசம், சிரிப்பு என தன் தந்தையின் மென்மையான பக்கத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த ஆதித்யாவுக்கு ரகுவீரின் கோபமான முகம் அவனை அச்சுறுத்தியது. உடனே அவன் வேகமாக மித்ராவின் பின் சென்று ஒளிந்து கொண்டான்.

ஆதித்யாவின் அச்செயல் ரகுவீரை மேலும் கோபமூட்ட அவன், “கம் ஆதி லெட்ஸ் கோ” என்று அதிகார குரலில் உரைத்ததும் ஆதி மேலும் பயந்து வர மறுத்தான். அவனுடைய அச்சத்தை உணர்ந்த மித்ரா, “சார் ஆதித்யா பயப்படறான். அதனால கொஞ்சம் கோபப்படாம..” என்று கூறும் போதே, “என் பையன் கிட்ட எப்படி பேசணும்னு எனக்கு தெரியும். நீ ஒன்னும் என்னக்கு சொல்லத்தேவையில்ல” என்ற ரகுவீரின் ஆணவக் குரலால் மித்ரா மௌனமானாள்.

மித்ராவின் பின் நின்று கொண்டிருந்த தன் மகனின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க ஆதியோ மித்ராவின் கையை கெட்டியாக பற்றிக்கொண்டான். கோபத்தின் உச்சிக்கு சென்ற ரகுவீர் அவனுடைய கையை மித்ராவிடமிருந்து உதறிவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றான். நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மித்ராவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அதில் தலையிடுவதற்கு அவளுக்கு உரிமை இல்லை என்பதால் மௌனமாகவே இருந்தாள். ரகுவீர் ஆதியுடன் காரில் ஏறிக்கொள்ள அது நகரத் துவங்கியது. அங்கு ஒரு இறுக்கமான சூழல் நிலவியது.

வீட்டிற்கு வந்தவுடன் வேகமாக தன் அறைக்குச் சென்றவன் ‘பளார்’ என்று கதவைச் சாத்தினான். அந்த சப்தத்தால் வீடே அதிர அனைவரும் ஹாலிற்கு வந்தனர். அப்போது அங்குவந்த ருத்ராவிடம் சுந்தரேஸ்வரர், “என்ன நடந்தது?” என்று வினவினார்.

நடந்த அனைத்தையும் ருத்ரா விவரித்துக் கூறினான். ருத்ரா ஆதி அருகில் சென்று, "உன் டாடாகிட்ட போய் சாரி சொல்லுடா" என்று ரகுவீரின் அறைக்கு அனுப்பிவைத்தான். முதலில் ரகுவீரை பார்க்க தயங்கிய ஆதி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் தந்தையை சமாதானம் செய்வதற்கு அவனுடைய அறையை நோக்கிச் சென்றான். அதே சமயம் தயானந்தனும் தன் குடும்பத்தாரோடு அங்கு வந்தார். ஆதித்யாவைக் கண்டதும் ரித்திகாவிற்கு தூக்கி வாரி போட்டது. ‘தொல்ல ஒழிஞ்சதுன்னு நினச்சா திரும்பிவந்திருச்சே! இதுக்கெல்லாம் நான்தான் காரணம்னு தெரிஞ்சா என் கத முடிஞ்சது’ என்று நினைத்தவள் மனதில் அச்சம் குடியேற கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

தன் தந்தையை காணச் சென்ற ஆதித்யா அவன் இருக்கும் தளத்திற்கு வந்ததும் அறை கதவின் குமிழை மெல்லத் திருகி உள்ளே நுழைந்தான். அரை முழுவதும் அந்தகாரம் பரவி இருக்க அங்கு போடப்பட்டிருந்த திரைச்சலைகள் வழியாக சூரிய ஒளி ஊடுருவி லேசான வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தது. அந்த அறையின் ஒரு ஓரத்தில் நவீன சாய்வு நாற்காலியில் கண்களை மூடியவாறு தன் தந்தை அமர்ந்திருப்பது தெரிந்தது.

அச்சிறுவன் அவனருகே மெல்ல சென்று, “டாடா” என்று அழைத்தான். ரகுவீரிடமிருந்து எந்த பதிலும் வராத காரணத்தினால் மேலும் அவன் அருகே சென்றான். “டாடா ஐ அம் சாரி” என்றவனை வேகமாக இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, “ஏன் ஆதி இப்படியே பண்ற? டாடா உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு தெரியுமா? அத ஏன் புரிஞ்சிக்கமாட்டேங்கிற? உன் நல்லதுக்கு தான சொல்றேன்” என்று கூறி முடிக்கும்போது அவனுடைய குரலில் கனிவு தெரிந்தது.

சற்று தயங்கியவன், “நான் உங்கள விட்டு போனா நீங்க கல்யாணம் பண்ணுவீங்கன்னு நினைச்சேன். அதான் அப்படி செஞ்சேன். ஆனா மித்ரா மெஸ் சொன்னதுக்கு அப்புறம் தான் நான் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது. சாரி டாடா” என்று தன் பார்வையை தாழ்த்தியவாறு ஆதி கூறினான்.

எப்பவும் செய்வதுபோல் விளையாட்டாக செய்திருக்கிறான் என்று நினைத்த ரகுவீருக்கு, தன்னை நிரந்தரமாக பிரிய இவ்வாறு செய்திருக்கிறான் என்று தெரிந்ததும் அதிர்ந்தான். அந்த அதிர்ச்சி கோபமாக மாற, “இதெல்லாம் யார் சொன்னா?” என்று கேட்டவுடன் ஆதி தன் தந்தையை பார்த்தான்.

கீழ்தளத்தில் பதற்றத்துடன் ரித்திகா நின்று கொண்டிருக்க, ‘ரித்திகா’ என்று ரகுவீரின் கோபம் நிறைந்த குரல் அந்த இடத்தை அதிர வைத்தது. அங்குவந்த ரகுவீர், “ஒரு சின்ன பையன் கிட்ட என்ன சொல்லனுங்குறது கூடவா உனக்கு தெரியாது? அறிவில்ல உனக்கு” என்று ஆவேசமாக கத்தினான்.

உடனே, “ரகு! இப்ப என்ன நடந்துச்சு? அவள ஏன் திட்டுற?” என்று அவனுடைய தந்தை வினவினார். அவள் தன் மகனிடம் சொன்னதை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்தான். அப்போது ரித்திகாவின் கன்னத்தில் ‘சுளீரென’ ஒரு அறை இடியாக இறங்கியது. அறைந்தது யாருமல்ல அவளுடைய தந்தையான தயானந்தன்.

இதுவரை தன்னிடம் அதிர்ந்து கூட பேசாத தந்தை இன்று தன்னை அறைந்ததைக் கண்டு ரித்திகாவால் நம்ப இயலவில்லை. ஆச்சரியத்துடன் அவளுடைய தந்தையை நோக்க அவரோ ரகுவீரிடம், “நான் கண்டிக்காம வளர்த்ததுனால இப்படி ஒரு காரியத்த பண்ணீருக்கா. அவ செஞ்ச தப்புக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன் ரகு” என்று கைகளை கூப்பினார். உடனே அவன், “விடுங்க மாமா. நீங்க போய்” என்று அவர் கைகளை பற்றி தடுத்தான் கோபத்துடன் இருந்த ரித்திகா அங்கிருந்து விரைந்து வெளியேற தயானந்தன் குடும்பமும் விடை பெற்றுச் சென்றது.

இரவு உணவிற்காக தன் மகன் வராததை அறிந்த சுந்தரேஸ்வரர் ரகுவீரைக் காண அவன் அறைக்குச் சென்றார். அதுவரையில் தீவிர யோசனையில் இருந்த ரகுவீர் தன் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அங்கு நோக்கினான். தன் தந்தையை கண்டதும் அவரை அழைத்து சோபாவில் அமர வைத்து தானும் அவர் அருகே அமர்ந்தான்.

சற்று நேரம் அங்கு நிலவிய அமைதியை சுந்தரேஸ்வரர் கலைத்தார். “கடவுளோட கருணையாலதான் நமக்கு ஆதி திரும்ப கிடைச்சிட்டான்” என்று பெருமூச்சு விட்டார். மேலும், “ஆதி இவ்வளவு தூரம் போனதுக்கு காரணமே நீ தான். அவன் மனசுக்குள்ள அம்மாவ பத்தின ஏக்கம் இருந்துக்கிட்டே தான் இருக்கு”

“இது ஏன் உனக்கு புரியல? பெரிய பிசினஸ்மேனா இருந்தா மட்டும் போதாது, பிள்ளையோட மனசையும் புரிஞ்சிக்க தெரியணும். இன்னைக்கு நடந்தமாதிரி திரும்பவும் நடக்கக்கூடாதுன்னா நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணிதான் ஆகணும். நான் சொன்னது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்” என்று கூறியவர் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

இரவு முழுவதும் ரகுவீருக்கு தூக்கம் தழுவ மறுத்தது. பல மணி நேரம் மனப்போராட்டத்திற்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான்.

மறுநாள் அனைவரும் காலை உணவிற்காக அமர்ந்த போது ரகுவீர் திருமணம் செய்து கொள்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கவும் அங்கிருந்த அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். “ஆனா ஒரு கண்டிஷன்” என்று கூறவும் 'மறுபடியுமா!' என்று அவர்களுடைய மனம் சோர்வடைந்தது.

“என்ன கல்யாணம் பண்ணிக்கப் போன்றவள என்னவிடவும் ஆதிக்கு ரொம்ப பிடிச்சிருக்கணும்” என்று அவன் கூறியபோது அனைவரும் நிம்மதியடைந்தனர். தன் மகன் திருமணத்திற்கு மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டான் என்பதை அறிந்த அகிலாண்டேஸ்வரியின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது.

இனியவள் மீண்டும் வருவாள்...

****************************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்

 
இனியவளே - 9

நாட்கள் சில கடந்தன. அந்த நிகழ்விற்கு பிறகு ஆதி மற்றும் மித்ராவிற்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரித்தது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவளைக்கேட்டு தான் செய்வான். அவனுடைய பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றம் இருப்பதை கண்டு குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருநாள் மித்ராவின் ஆசிரியைத் தோழியான மாதவிக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவளைக் காண மித்ரா சென்றாள்.

தன்னை கண்டதும் சிரித்த மாதவியைப் படுக்கையில் மெல்ல அமர வைத்து, தானும் அவளருகே அமர்ந்தாள். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த அறையில் ஓர் ஆடவன் நுழைந்தான்.

அவனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த மித்ரா, அவன் மாதவியின் கணவன் என்று தெரிந்ததும் பேரதிர்ச்சி அடைந்தாள். ஏனென்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பு தன்னை மணக்கோலத்தில், மணமேடையில் கண்ணீருடன் தவிக்க விட்டுச் சென்ற அதே அசோக் கையில் மருந்து மாத்திரையுடன் நின்றுகொண்டிருந்தான். அவளிடத்தில் இருந்த அதே ஆச்சரியம் அவன் முகத்திலும் காணப்பட்டது. மித்ரா கணப்பொழுதில் நிதானித்துக் கொண்டு தோழியிடமிருந்து விடைபெற்றாள்.

அவள் சற்று தூரம் சென்ற பிறகு ‘மித்ரா!’ என்று அழைப்பது கேட்டது. அவள் சிலையாக அப்படியே நிற்க அசோக் வேகமாக அவளருகே வந்தான். “எப்படி இருக்க?” என்று நலம் விசாரித்தான். அவள் பதில் ஏதும் கூறாமல் அப்படியே நிற்க, “நீ என் மேல கோவமா இருக்கன்னு எனக்கு தெரியும். ஆனா அன்னைக்கு இருந்த சூழ்நிலையில எனக்கு வேற வழி தெரியல” என்று வருத்தம் தெரிவித்தான்.

அதற்கு, “மனுஷங்க செய்யிறதப்ப சூழ்நிலைய காரணம் காட்டி தப்பிக்க நினைக்குறாங்க. நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா? யார் மேலயும் எனக்கு கோபம் இல்லை. உங்க மனைவி மாதிவியயாவது பத்திரமா பாத்துக்கோங்க” என்றவள் சட்டென அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

அன்று நடந்ததை மித்ரா முதலில் எண்ணி வருந்தி இருந்தாலும் காலப்போக்கில் தனக்குத்தானே தைரியம் வரவழைத்துக்கொண்டு அதில் இருந்து மீண்டாள். ஏதோ தெரிந்த நபரின் பேச்சு சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது அங்கு ரகுவீர் மருத்துவருடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவளுடைய தாயிடமிருந்து கைபேசிக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்தபோது, “மித்ரா உன் அப்பாவ…உன் அப்பாவ..” என்று அழுது கொண்டே சொல்லவும், “அப்பாவுக்கு என்னமா ஆச்சு?” என்று பதற்றத்துடன் கேட்டாள். உடனே அவள், “நீ சீக்கிரம் வா” என்று தழுதழுத்து குரலில் கூறவும் வேகமாக அங்கிருந்து சென்றாள்.

இங்கு ரகுவீர் மருத்துவர்களுடன் ஆலோசித்தவாறு அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றான்.
WhatsApp Image 2026-01-23 at 4.16.18 PM.jpeg
அந்த நிசப்தமான அறையில் இதயத் துடிப்பை காட்டும் கருவியில் சீரான அலைவரிசையாக சென்று கொண்டிருக்க, சுவாசிப்பதற்காக முகத்தில் ஆக்சிஜன் மாஸ்குடன் படுக்கையில் ஒருவன் கிடந்தான்.
WhatsApp Image 2026-01-23 at 4.16.17 PM (1).jpegWhatsApp Image 2026-01-23 at 4.16.17 PM.jpeg
'இவன் எப்பதான் கோமால இருந்து எந்திரிப்பானோ' என்று தன் மனதில் நினைத்தவன் அங்கிருந்து சென்றான்.

மித்ரா வீட்டிற்கு வந்தபோது அவளுடைய தாய் வனஜா பிரம்மை பிடித்தவள்போல் அந்த ஹாலில் அமர்ந்திருந்தாள். வேகமாக தன் தாய் அருகே சென்று, “ஏன் இப்படி இருக்கீங்க? அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு?” என்று பதற்றத்துடன் வினவினாள். “அப்பாவ போலீஸ் கூட்டிட்டு போய்ட்டாங்க மித்ரா. என்ன காரணம்னே தெரியல” என்று அழுதவாரே அவள் மீது சாய்ந்தார்.

சில நிமிடம் சிலையாக நின்றவள், தன்னை சுதாரித்துக் கொண்டு, “நான் போய் பாக்குறேன்” என்று வேகமாக காவல் நிலையத்திற்குச் சென்றாள்.

அங்கு உள்ளே நுழைந்தவளை, “யாருமா நீ? யார பாக்கணும்?” என்று காவலர் ஒருவர் கேட்டபோது, “சார், தங்கராஜன்னு..” என்று கூறும்போதே, “ஓ! அந்த பிராடு கேஸா முதல்ல இன்ஸ்பெக்டர போய் பாருமா” என்றதும் அவள் அங்கு சென்றாள். அந்த காவலர் ‘ஃபிராடு’ என்று தன் தந்தையை குறிப்பிடுவதை கேட்டு மித்ராவிற்கு மனம் வலித்தது.

இன்ஸ்பெக்டரிடம் சென்று, "எங்கப்பா தங்கராஜன ஏன் சார் அரஸ்ட் பண்ணீங்க?" என்று வினவினாள். அதற்கு அவர் “வேலை பார்க்கிற இடத்துல ஏதோ முக்கியமான தகவல திருடி வித்ததா பிராடு கேஸ் பைல் பண்ணி இருக்காங்க” என்று விவரம் தெரிவித்தார். “நான் என் அப்பாவை பாக்கணும் சார்” என்று தழுதழுத்த குரலில் கேட்க, “இப்ப முடியாது, எதுனாலும் கோர்ட்லபோய் பாத்துக்கோங்க” என்றதும் செய்வதறியாது விழித்தாள். ஒரு யோசனை வந்தவளாக தன் தந்தை வேலை செய்யும் அலுவலகத்திற்கு விரைந்தாள். வாயிற்காவலர் தடுத்தும் பொருட்படுத்தாமல் சி.இ.ஓ.வின் அறைக்குள் புயலென நுழைந்தாள்.

“எங்க அப்பாவ பத்தி நல்லாவே தெரிஞ்சிருந்தும் ஏன் சார் இப்படி ஒரு கம்பிளைன்ட் கொடுத்தீங்க?” என்று வினவினாள். சுழலும் நாற்காலியில் முதுகை காட்டியவாறு அமர்ந்திருந்த அந்த சி.இ.ஓ. மெல்ல திரும்பியவாறு, "உங்கப்பான்னு தெருஞ்சனாலதான் அப்படி செஞ்சேன்" என்று வில்லத்தனமாகச் சிரித்தான்.
மீண்டும் இனியவள் வருவாள்...


*********************************************************************************************************************************************************

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கும் தெரிவிக்கலாம்


சென்ற அத்தியத்திற்கு கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
 
இனியவளே - 10

அவனைப் பார்த்து, “நீயா!” என்று அதிர்ச்சியில் கேட்க மற்றவனோ, “என்ன ஷாக் ஆயிட்டியா? நானேதான். என் பிளான்படி எல்லாம் சரியா போய்கிட்டிருந்தது. குருக்கவந்து மொத்ததையும் ஃலாப் பண்ணிட்டியேடி” என்று கோபத்துடன் கூறினான். அது வேறுயாருமல்ல பானுவை காதல் எனும் பெயரில் ஏமாற்றிய லோகேஷ் என்ற கயவன்.

அவனைப்பார்த்த அதிர்ச்சியில் மித்ராவுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவனே மீண்டும் பேசத் தொடங்கினான். “நீ அரஞ்ச அறைய நான் இன்னும் மறக்கல” என்று தன் கன்னத்தை தொட்டுப் பார்த்தான். மேலும் "உன்ன பழிவாங்கணும்னு நினச்சி ஒரு நல்ல சந்தர்பத்துக்காக காத்துக்கிட்டு இருந்தேன். இப்ப நான்போட்ட வலைல மீனு தானா வந்து மட்டிருட்சி. ஐயோ பாவம்" என்று நக்கலாக சிரித்தான்.

மின்சாரத்தால் தாக்குண்டவள் போல் இருந்தவள் மெல்ல தன்னை நிதானித்துக் கொண்டு, “நீ இங்க..” என்று அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் கேட்டாள். “இது என் கம்பெனி. அப்போ நான் தான் இங்க இருப்பேன்…ஓ! நீ அந்த தாஸ் கிழவன பத்தி கேக்குறியா? அவன ஏமாத்தி இந்த கம்பெனிய நான் வாங்கிட்டேன்…உன்னால ஒன்னும் செய்ய முடியாது. காலத்துக்கும் உன் அப்பா ஜெயில்ல களிதிங்க போறான்” என்று கூறி அந்த இடம் முழுவதும் அதிரும் அளவிற்கு சிரித்தான்.

அவனுடைய அந்த பேச்சினால் சற்று பயந்தவள் தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “என்ன பழிவாங்குறதா நினச்சி ஏன் என் அப்பாவ இதுல மாட்டிவிடுற?” என்று அவள் கேட்கும் போது பற்களுக்கிடையே சொற்கள் நசுங்கின. அதற்கு அவனும், “எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று கூறி கொடூரமாக சிரித்தான். தன் கடைசி தைரியத்தை சேகரித்துக் கொண்டு, “என் அப்பாவ தயவுசெஞ்சி விட்டுடு” என்று அவனிடம் கெஞ்சினாள்.

உடனே அவனும், “இதுல இருந்து தப்பிக்க நான் ஒரு வழி சொல்லவா?” என்று வினவியவன் பார்வையை அவள் உச்சி முதல் பாதம் வரை ஓட விட்டான். அவனுடைய அந்த செய்கையால் அருவருப்பை உணர்ந்தவள் தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். பின் அவன், “உனக்கு திமிரு மட்டும் இல்ல அழகும் கொஞ்சம் அதிகமாவே இருக்கு, அதனால ஒரு நைட்…ஒரே ஒரு நைட் ஸ்டே பண்ணா மட்டும் போதும். அதுக்கு அப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் செய்யுறேன்" என்று கபடமாகச் சிரித்தான்.

அதுவரையில் அடிபட்ட பாம்பாக இருந்த மித்ரா அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கோபத்தில் சீறினாள். ஆவேசத்துடன் கண்கள் சிவக்க அவனை அரைவதற்காக தன் கையை ஓங்கியவளை லோகேஷின் கரம் தடுத்து நிறுத்தியது. மேலும், “இப்போ நீ கையை ஓங்குற நிலைமையில இல்ல, ஏந்துர நிலைமையில் இருக்கங்குறத மறந்துடாத” என்று கோபத்துடன் கூறியவன் வெடுக்கென அவள் கையை உதறினான். “ஹியரிங்க்கு ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. அதுக்குள்ள முடிவ சொல்லலைன்னா விளைவு மோசமா இருக்கும்” என்று கூறும்போதே அவள் அங்கிருந்து வெளியேறினாள்.

தன் கால் போன போக்கில் நடந்தவாறு சென்றவள் ஒரு பூங்காவை வந்தடைந்தாள். 'இந்த விஷயத்த யாருகிட்ட சொல்லி உதவி கேக்குறது?' என்று நினைத்தவளின் மனதில் பல எண்ணங்கள் ஓடத்துவங்கின. 'பானுகிட்ட கேட்கலாம்னா, இப்போ தான் அவளுக்கு கல்யாணம் ஃக்ஸ் ஆகியிருக்கு. மறுபடியும் அவள அந்த அரக்கன்கிட்ட மாட்டிவிடவேண்டாம். அம்மாகிட்ட சொல்லலாம்னா அவங்க ரொம்ப வருத்தப் பாடுவாங்க. வேற யாரு?' என்று உதவிக்காக தவித்துக்கொண்டிருந்தவளின் மனக்கண் முன் விடிவெள்ளியாக ருத்ரா தோன்றினான். அதனால் வேகமாக ருத்ரவிடம் உதவி கேட்பதற்காகச் சென்றாள்.

ஆனால் விதி அங்கும் அவளுடன் விளையாடியது. விசாரித்த போது ருத்ரா தன் சொந்த வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்று இருப்பதாகவும், தற்சமயம் அவனை தொடர்பு கொள்ள முடியாது என்றும் தெரியவந்தது. அவளுடைய இறுதி வாய்ப்பும் வந்த இடம் தெரியாமல் கரைந்து போனதை நினைத்து மிகவும் வேதனையுற்றாள். அப்போது ‘பணத்தை பணத்தால் தான் அடிக்க முடியும்’ என்று நினைத்தவளுக்கு ஆபத்பாந்தவனாக ரகுவீர் தோன்றினான்.

ரகுவீர் செல்வாக்கு உடையவன் என்றாலும் தனக்கும் அவனுக்கும் இடையே நடந்த சில கசப்பான நிகழ்வுகளை வைத்து அவன் ‘தனக்கு உதவி செய்வானா?’ என்று ஐயம் கொண்டாள். ஆனால் இனியும் தாமதிக்காமல் உதவியை நாடி அவன் கம்பெனிக்கு சென்றாள்.

அந்த பெரிய கம்பெனியின் வரவேற்பு பகுதியில் நின்றளின் இதயம் வேகமாகத் துடித்தது. “ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ மேம்?” என்று வரவேற்பில் நின்று கொண்டிருந்த பெண் கேட்டாள். சற்று தயங்கியவள், “மிஸ்டர் ரகுவீர மீட் பண்ணனும்” என்று மித்ரா கூற, அதற்கு “அப்பாயிண்ட்மெண்ட் வச்சிருக்கீங்களா?” என்று அந்த பெண் கேட்டதற்கு, ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள். உடனே, “சாரி மேம் அப்படினா சார பார்க்க முடியாது. அவர் ரொம்ப பிசி” என்று கூறிவிட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்றாள்.

ரகுவீரை எளிதில் சந்திக்க இயலாது என்று தெரிந்தும் நப்பாசையால் தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து தன்னையே கடிந்து கொண்டாள். நிராசையுடன் திரும்பியவளை, “மேம், மேம்” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். ஒரு இளம் வயது பெண் அவளிடம் வேகமாக ஓடி வந்து, “நான் ஆர்.வி. சாரோட செகரட்டரி ரீட்டா. சார் உங்களை வரச்சொன்னார் மேம்” என்று கூறி அழைத்துச் சென்றாள்.

அங்குள்ள மின்தூக்கியில் ஏறியவர்கள் அந்த முப்பது மாடி கட்டடத்தின் மேல் தளத்திற்கு வந்தனர். ரகுவீரின் அறையைக்காட்டி உள்ளே செல்லுமாறு கூறினாள். அந்த அறையின் கதவை மெல்ல தட்டிவிட்டு உள்ளே நுழைந்தபோது தன் கைபேசியில் ரகுவீர் யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான். அவளை கண்டதும் அதை வைத்துவிட்டு மித்ராவை இருக்கையில் அமருமாறு சைகை செய்து தானும் அமர்ந்தான்.

WhatsApp Image 2026-01-26 at 2.26.24 PM.jpeg
பின், “என்ன விஷயம்?” என்று அவன் கேட்கவும் சற்று தயங்கி தந்தைக்கு நடந்த அநியாயத்தைப் பற்றி கூறலானாள். மேலும், “என் அப்பா ரொம்ப நல்லவர். இந்த மாதிரியான காரியத்த செய்யவே மாட்டார். அந்த சி.இ.ஓ. வேணும்னே அவர மாட்டி விட்டிருக்கான். நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணா வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டவளா இருப்பேன் சார்” என்று மன்றாடும் குரலில் கேட்டாள்.
WhatsApp Image 2026-01-26 at 2.26.23 PM.jpeg
சற்று நேரம் யோசித்தவன், “சரி நான் ஹெல்ப் பண்றேன் ஆனா என் உதவி உனக்கு வேணும்னா நான் போடுற கண்டிஷனுக்கு நீ ஒத்துக்கணும்” என்று கூறி ஒரு கோப்பை நீட்டினான். புரியாமல் வாங்கியவள் அதை திறந்து பார்த்தபோது திகைத்து அவனை நோக்கினாள்.
WhatsApp Image 2026-01-26 at 2.26.23 PM (1).jpeg
“உனக்கு ஓகேனா அதுல சைன் பண்ணு. நாளைக்கு இந்த பைல் உன் முடிவ சொல்லட்டும்” என்றான். மேலும் அங்கிருந்து வெளியே செல்ல இருந்தவளை, “நமக்குள்ள இருக்கிற இந்த டீலிங் வேற யாருக்கும் தெரியக்கூடாது” என்று கட்டளையிடுவது போல் கூறினான்.

கோப்பை கையில் ஏந்தியவாறு வீட்டிற்கு வந்தவள், இரவு முழுவதும் உறங்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளுள் எழுந்த பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் விடை கிடைக்காமல் சோர்ந்து உறங்கினாள். மறுநாள் ரகுவீரை சந்தித்து அந்த கோப்பை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கித் திறந்து பார்த்தபோது ‘கிரேட்’ என்று கூற இதழ் ஓரத்தில் வெற்றிப் புன்னகை புரிந்தான்.

“இது இனிமேல் என்னோட கேஸ். இந்த ஆர். வி. எந்த கேஸ்லயும் தோத்ததா சரித்திரமே கிடையாது. பதிலுக்கு நமக்குள்ள இருக்குற டீல் ஞாபகம் இருக்குல?” என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி கேட்க அவளோ ‘ஆம்’ என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தாள்.

அன்றுதான் தங்கராஜனின் கேஸ் நீதிமன்றத்திற்கு வந்தது. மித்ரா தன் தாயுடன் அந்த நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்க ஒரு கார் வேகமாக அவர்கள் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய லோகேஷை கண்டதும் மித்ராவின் கோபம் தலைக்கேறியது. ஆனால் அவளோ எதையும் வெளிக்காட்டாமல் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளருகே வந்து, “பூனை எப்பவுமே எலியோட தான் மோதனுமே தவிர யானையோட மோதக்கூடாது. அது பெரிய சேதாரத்தை தான் உண்டாக்கும். பாவம்! இந்த பூனை என்ன செய்ய போகுதோ?” என்று கூறியவன் நக்கலாக மித்ராவை பார்த்து சிரித்துக்கொண்டே நீதிமன்றத்திற்குள் நுழைந்தான்.

லோகேஷ் தன்னுடைய ஆட்களுடன் ஒரு புறம் அமர்ந்திருக்க மற்றொருபுறத்தில் மித்ராவின் தரப்பினர் அமர்ந்தனர். நீதிபதி வருவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க, தன் சார்பில் வாதாட எந்த வக்கீலும் வரவில்லை என்றதும் மித்ராவின் மனம் பதைபதைக்கத் துவங்கியது.

அதே நேரத்தில் இங்கு லோகேஷின் வக்கீலான நடராஜன் வேகமாக அவன் அருகே வந்து சார் நமக்கு எதிரா வாதாட போறது யார் தெரியுமா? அட்வகேட் வைத்தியநாதன். அவர எதிர்த்து வாதாடின யாரும் ஜெயிச்சதே இல்லை. அவர் ஏன் இந்த தங்கராஜனுக்காக வர்றாரு? என்னன்னே புரியல” என்று பதற்றத்துடன் கூறினார். உடனே, “தங்கராஜனுக்கு எதிரா எல்லா சாட்சியும் பக்காவா ரெடி பண்ணியாச்சில. போங்க” என்று லோகேஷ் கூறவும் அவர் அங்கிருந்து அகன்றார்.

ஹியரிங் துவங்கியதும் தங்கராஜன்சார்பாக வாதாடும் வக்கீல் வராததைப் பற்றி நீதிபதி விசாரித்தபோது, "எக்ஸ்கியூஸ்மீ மை லாட்" என்று ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டது. அவள் வெள்ளை குர்தியும் அதன் மீது வழக்கறிஞர்களுக்குரிய கருப்பு அங்கியும் அணிந்திருந்தாள். தன்னுடைய மூத்த வழக்கறிஞரான வைத்யனாதனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் வந்ததாகக் கூறினாள். தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு தன் வாதத்தைத் துவங்கினாள்.

அவள் தங்கராஜன் நிரபராதி என்பதை ஆதாரத்தோடு நிரூபித்தது மட்டுமில்லாமல் லோகேஷ் செய்த அனைத்து தில்லு முல்லு வேலைகளையும் தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்து அவனுடைய சாம்ராஜ்யத்தை தரைமட்டமாக்கினாள். ரகுவீரை எதிர்த்தவர்கள் இருந்த இடம்தெரியாமல் ஆகிடுவர் என்பதற்கு லோகேஷும் எடுத்துக்காட்டாக விளங்கினான்.

வழக்கில் கிட்டத்தட்ட வெற்றி தங்கள் தரப்பில் இருந்த நிலையைக் கண்ட மித்ரா மகிழ்ந்தபோதும் அவள் மனதில் ஒருவிதமான கலக்கம் இருந்தது. சொன்னபடி நீதிமன்றத்தின் வெளியே வந்தபோது அவளுக்காக ஒரு கார் காத்துக்கொண்டிருந்தது. அந்த கார்கதவை ஒருவன் திறக்க அதனுள் சங்கமித்ரா ஏறிக்கொண்டாள்.

தங்கராஜன் நிரபராதி என்றும் லோகேஷ் குற்றவாளி என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த மித்ராவின் பெற்றோர் அந்தப் பெண் வழக்கறிஞரை பார்த்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். பின், இருவரும் மித்ராவை தேட, அவள் அங்கு இல்லை என்றதும் அவர்களுக்கு பயம் எழுந்தது.

இங்கு ரகுவீரின் வீட்டிற்கு சுந்தரேஸ்வரரின் பிசினெஸ் பாட்னரான சந்திரசேகரன் தன் குடும்பத்தாரோடு வந்திருந்தார். அவர் தன் மகள் காதம்பரியை ரகுவீருக்கு திருமணம் செய்ய விரும்பி சம்பந்தம் பேச அங்கு வந்தார். அதைக் கேட்ட சுந்தரேஸ்வரர், "ரகுவோட சம்மதம் தான் முக்கியம்" என்று கூற அங்கிருந்த அனைவரும் அவன் வருகைக்காக காத்திருந்தனர்.

அப்போது ரகுவீரின் கார் சத்தம் கேட்க காதம்பரியின் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. பின் ஆவலுடன் நுழைவாயிலை பார்க்க அதிர்ச்சியில் தன் கையிலிருந்த கண்ணாடிக் கோப்பையை கீழே போட்டுடைத்தாள். உடைந்தது அந்த கோப்பை மட்டும் அல்ல அவளுடைய மனக்கோட்டையும்தான்.

மீண்டும் இனியவள் வருவாள்...
****************************************************************************************

அப்படி எதைக் கண்டு காதம்பரி அதிர்ந்து நின்றாள்? மித்ரா ஏன் இடையில் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினாள்? அவளை யார் அழைத்துச் சென்றது? மித்ராவுக்கும் ரகுவீருக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் என்ன? தெரிந்துகொள்ளவேண்டுமா? என்னுடன் பயணியுங்கள் 'இனியவளே! என் இணையவளே!'

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடலாம்...

https://www.narumugainovels.com/threads/35498/

 
Top