எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கட்டியமுதே! என் கண்ணம்மா! - கதைத் திரி

Shambhavi

Moderator
அத்தியாயம் - 35


இரவு கவிழ்ந்து நிலவு மகள் தன் காதலனிடமிருந்து பெற்ற ஒளியை ஒரு பாதி அண்டத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தாள்.

அரவிந்த் வீட்டின் பால்கனியில் அதிர்ச்சி மறையாது அமர்ந்திருந்தார் ராகினி.

அரவிந்த் அங்கு வாசுவின் வீட்டில் நடந்ததைச் சொல்ல, மயக்கம் ஒன்று மட்டும் தான் ராகினிக்கு வரவில்லை.

எத்தனை நடந்திருக்கிறது அதைவிட அவரின் மகள் மருமகனை திட்டியும் விட்டுப் பிரிந்து, படிப்பிற்காக செல்ல இருப்பது அத்தனை கோபத்தை கொடுத்தது அவருக்கு.

"இன்னும் கொஞ்ச நேரத்தில வாசு வேதாவ இங்க கொண்டு வந்து விட்டுடுவான் ம்மா. ஜெர்மன் போற வர வேதா இங்க தான் இருப்பா" என்று சொன்ன மகனை அதிர்ச்சி மறையாது பார்த்தவர்,

"என்ன அரவிந்த், அவ தான் புத்தியில்லாம பேசினா உனக்கு எங்கடா போச்சு? அவ பேசும் போது நாலு அரைய விட்டு அங்கையே ராகவ் கூடத் தான் இருக்கனும்னு சொல்ல ஒனக்கு என்ன வந்துச்சாம்? இப்போ இவ அங்க போய் தான் படிக்கனுமா? ஏன் இங்க எத்தன காலேஜ் இருக்கு? சொன்னா நீயோ இல்லை ராகவோ படிக்க வைக்க மாட்டீங்களா? எனக்கு வர ஆத்திரத்துக்கு" என்று அவர் இன்னும் ஆத்திரப்பட்டு பேசிக்கொண்டிருக்க, அரவிந்திற்கு அழைத்திருந்தார், சொக்கநாதன்.

சொக்கநாதன், அரவிந்த் காவ்யாவின் தகப்பன். இதுவரை வெளியில் அதிகம் எங்கும் வந்திராது தொழிலை மட்டும் மூச்சாய் நினைக்கும் மனிதர்.

அவரின் 'வேதா சர்க்யூட்ஸ்' தற்சமயம் தமிழகம் கேளரத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு செய்வதிலும் பெரும் நிறுவனங்களின் உபகரணங்கள் விநியோகம் செய்வதிலும் கொடிக்கட்டி பறக்கிறது.

தன்னை எங்கும் முதன்மை படுத்த நினைக்காத கடும் உழைப்பாளி. தொழில், அது ஒன்று மட்டும் தான் அவருக்கு பிரதானம். அதற்கென்று குடும்பத்தை நட்டாற்றில் விடும் நபரும் அல்ல. அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கும் அளவிற்கு இடம் கொடுக்காது தொழிலில் ஈடுபடும் நபர்.

அரவிந்த் காவ்யா என்று இருவரும் அவரின் செல்லங்களாக இருந்தாலும் சில வருடங்களாக அரவிந்திடம் ஒரு ஒதுக்கம். அதுவும் அவன் சொக்கநாதனை சார்ந்திராமல் அவனே படித்து இப்போ ஒரு வழக்கறிஞராக இருக்கவும் தந்தையாய் அவரின் இறுமாப்பு அடிவாங்கியிருந்தது.

கிட்டத்தட்ட பல வருடங்களாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அப்படியிருக்க இப்போது அவரின் அழைப்பு அவனை யோசிக்க வைத்தது.

இப்போது தொல்லை போல் ஒலித்த தொலைப்பேசியை எடுக்காது தாமதித்தவனை பார்த்த ராகினி, "யாருடா? வேதாவா" என்று அவரே கேட்டு அதை பிடிங்கிக்கொள்ள, அதில் தெரிந்த பெயர் அவருக்கு அத்தனை பயத்தைக் கொடுத்தது.

காவ்யாவின் திருமணமும் சொக்கநாதனிடம் முதலில் சொல்லப்படவில்லை, அதற்கே அத்தனை வருந்தி, நொந்து போனவர் இப்போது மகளின் முடிவில் என்ன முடிவெடுப்பார் என்று தெரியாது பயந்தார் ராகினி.

"அப்பாடா, இவருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். என்னைய நம்பி தானே உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இந்த மனுஷே தொழிலக் கட்டி அழுகறார், இப்போ எல்லாம் மண்ணா போச்சு" என்று தன் போக்கில் சொல்லி அழுதவரை சமாதானம் உரைக்கும் நிலையில் அவன் இல்லை.

மனதில் அத்தனை யோசனை. சாதாரணமாக கூப்பிடாத மனிதர் இத்தனை வருடங்களுக்கு பின்னர் அதுவும் இன்று இப்போது அழைத்திருப்பது அவனை ஏதோ சிந்திக்க செய்ய, சட்டென்று அவருக்கு அழைத்திருந்தான்.

இரண்டாம் ரிங்கிலேயே அழைப்பு ஏற்றப்பட்டாலும் பெரும் மௌனம் இருபக்கமும்.

பின் சொக்கநாதனே, "தம்பி, ராணிகிட்ட சொல்லாம கொஞ்சம் செங்கல்பட்டு கவர்மென்ட் காலேஜ் ஹாஸ்டலில் வாரீங்களா?" என்றார் மிகுந்த தயக்கமான மெல்லிய குரலில்.

உடனே பரபரப்பு தொற்றிக் கொண்டது அவனிடம்.

"உங்களுக்கு?" என்று அடுத்து சொல்ல வந்ததை நிறுத்தியவன்,

"வந்தறேன்" என்றுவிட்டு ராகினியிடம் ஏதேதோ காரணத்தை சொல்லி தன் ஜூனியர்ஸ் இருவரை அழைத்தக்கொண்டு அங்கு விரைந்தான்.

கிட்டத்தட்ட இரண்டே கால் மணிநேரம் ஆகியிருந்தது. அரக்கப் பறக்க அவன் மருத்துவமனை வளாகத்தினுள் நுழையும் முன்பே அவன் இதயத்தின் லப் - டப் லயம் பெரியதாய் அதிர்ந்தது‌.

சொக்கநாதனுக்கு ஒன்றும் இருக்காது என்று அவன் மூளை சொன்னாலும் மகனாய் அவருக்காய் அவனின் இதயம் துவண்டு துடிக்காமல் இல்லை.

நிடத்திற்கு நிமிடம் அவர் இருந்த அறைக்குள் செல்லும் வரை, அவன் உடல் அதிர்வு அதிர்ந்து அவனை நிலைக்கொள்ளாது வைத்திருந்தது.

"எல்லாம் எக்ஸ்டர்ணல் இஞ்சுரிஸ் தான். ப்ளட் அவ்வளவு போகல ஆனா வயசாகறனால கொஞ்சம் நாள் ஆகும் காயம் எல்லாம் ஆற" என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டு, அதிர்ந்து அறை வாயிலேயே நின்றுவிட்டான் அரவிந்த்.

அத்தனை வருடம் இருந்த வீம்பு முற்றும் அறுந்து, "ப்பா" என்று கூவலுடன் அறைக்குள் பிரவேசித்தவனை வரவேற்றது என்னமோ அவர் தான்.

அவர், புவனா திருமழிசை!





அம்ருதாவின் வீட்டில் இரவு உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர்.

எளிதான உணவுகளைத் தான் அன்று சமைத்திருந்தார் நீலாம்பரி. வழக்கம் போல், இரண்டு மூன்று வகைகள் இல்லாது வெறும் இட்லி மட்டும் காட்சி தரவும் ஆதவனுக்கு முகம் கூம்பியது.

"ம்மா, தோசை சுட்டு கொடேன்" என்று மெல்ல அவன் மீனாட்சியை நச்சரிக்க ஆரம்பித்தான்.

வீட்டில் சுந்தரேஸ்வரர் இருந்தால் அங்கிருக்கும் அனைவரும் பூனை பேச்சு தான் பேசுவர். இதில் இன்று சரவணன் வேறு அவருக்கு சரிக்கு சரியாய் பேசியிருக்க, ஒருவருக்கும் சப்தம் வரவில்லை.

வாசு வந்து சென்று பின்னர் அவரின் அறைக்குச் சென்ற சரவணன் இன்னும் வெளியே வரவில்லை. உண்ண கூப்பிட்டாலும் பின்னர் என்றுவிட மற்றவர் வந்துவிட்டனர்.

அவருக்கான தனிமையும் சிந்திக்கும் நேரத்தையும் வழங்கிவிட்டு அனுவும் வந்துவிட்டார்.

"என்ன ஆது வேணும்" என்று மெல்ல அனு அவனிடம் கேட்க,

"அனும்மா, தோச" என்றான் இட்லியை பார்த்தவாறு.

ஆரூரன், "அப்போ எனக்கு பொடி தோச வேணும்"

ஆதவன், "மூடு, இப்போ தானே வயிறு சரியாகியிருக்கு. நீ இட்லி மட்டும் சாப்பிடு"

"உன்னையெல்லாம் யார்டா டாக்டருக்கு படிக்க சொன்னா? எப்ப பார் அத சாப்பிடாத இத சாப்பிடுனு.. இம்ச"

"ஆரவா, வயிறு புண்ணுனா காரமில்லாம சாப்பிடத் தெரியாத உனக்கு. ஆதவா சொல்லுறத கேளு முதல்ல" என்று சுந்தரேஸ்வரர் சொல்லிவிட, புரையேறியிருந்தது அவனுக்கு.

அத்தனை மெல்ல பேசியும் அவர் காதை அடைந்ததன் விளைவு.

சாரங்கன், "என் பையனுக்கு ஊசி காதுன்னு தெரியாம பேசினா இப்படி தான்டா பேராண்டி"

ஆரூரன், "எல்லாம் நீங்க பண்ண வேல. மனுஃபேக்டுரிங் டிபெக்ட்டோட யாரு பெத்துக்க சொன்னா உங்கள?"

"இத நீ உன் நீல்ஸ் கிட்டத்தான் கேட்கனும்"

"வெக்கமே இல்ல தாத்தா உனக்கு" என்று சிரிப்போடு அபூர்வன் கேட்டிட,

"இதில என்னடா இருக்கு வெக்கப்பட? உலகத்துக்குத் தெரியாததையா நான் சொல்லிட்டேன்?"

"அப்பா, போதும். சாப்பிடுங்க, இவனுங்க கூட பேசிட்டு நேரத்தத் தான் போக்குறீங்க"

"சரி தம்பி" என்று அப்படியே பம்மிவிட்டார் சாரங்கன்.

"பாரு.. ஆளுக்கும் பேச்சுக்கும் பண்ணுற வேலைக்கும் சம்மந்தம் இருக்கானு" என்றான் ஆரூரன்.

கிட்டத்தட்ட அனைவரும் உண்டிருந்த நிலையில் வெளியே வந்தார் சரவணன்.

டைனிங்கில் சாரங்கன், சுந்தரேஸ்வரர் இருப்பதை பார்த்துவிட்டு, "அப்பா, முரளி ஸார்கிட்ட நாமளே ஒரு நல்ல நாள் பார்த்து பேசீட்டு வந்துடலாம். சீக்கிரம் கல்யாணத்தையும் முடிச்சிட்டா பெட்டர்" என்று அவர் சொல்லிய நொடி, விசில் சப்தம் பறந்தது.

"சரோப்பா, சூப்பரு போங்க"

"தேங்க்ஸ் ப்பா"

சரவணனின் சம்மதம் அத்தனை ஆசுவாசத்தைக் கொடுத்தது மீனாட்சிக்கு. அதை எல்லாம் ஒரு சிறு சிரிப்புடன் பார்த்துவிட்டு சென்றார் சுந்தரேஸ்வரர்.

சாரங்கன், "அய்யா, நாள கடத்தமா பண்ணீட்டலாம். முரளி கொஞ்சம் கொணமாகட்டும், முறையா எல்லாம் பண்ணீடலாம்"

"ம்ம்.. அண்ணனும் நீங்களும் பாருங்க. நானும் ஒருதடவ முரளி ஸார்கிட்ட பேசீடுறேன்" என்றுவிட்டு அவர் உண்ண அமரவும், இன்று அதிசயத்திலும் அதிசயமாம் அவர் தட்டில் வீற்றிருந்தது ஒரு மைசூர் பாக்!



"கால் பண்ணுங்க, கால் பண்ணுங்க" என்று நச்சரித்த அபூர்வனை தலையில் தட்டி அமர வைத்திருந்தான் ஆரூரன்.

ஒருவித விரிந்த சிரிப்போடு அதை பார்த்திருந்த ஆதவனுக்கு அப்போது தான் தோன்றியது தன் இரட்டையின் அட்டைப் போலான வாசுவிடம் இருந்த ஒட்டுதல்.

"டேய் இரு. உனக்கு எப்படி அவர் கூட இப்படி ஒரு கனெக்ட்? ஐ மீன், அம்ரூவ லவ் பண்ண உன்கிட்ட ஐடியா எல்லாம் அவர் கேட்டதா இவன் சொன்னான்? எனக்குத் தெரியாம எப்படிடா ரெண்டு பேரும் க்ளோஸ் ஆனீங்க?"

"அத்தான்னு சொல்லுங்க ஆதுண்ணா. அவர், இவர், சுவர் எல்லாம் வேண்டாம்"

"ம்ம்ப்ச், அதுதான் எனக்கு வரமாட்டேங்கிதே! அவரும் இதான் சொன்னார் பட் இந்த முறை பெயர் எல்லாம் தானா வரட்டும்"

"நீ தான் ஜீகிட்ட கடுவான் பூனையாச்சே! எப்போ பேசின?"

"நேத்து தான். அம்ரூவ பார்க்க வந்தார். அப்போ தான் கொஞ்சம் பேசினோம்"

"நேத்தா?" என்று ஆரூரனும் அபூர்வனும் கோரசாக கேட்க,

"ஆமாடா. ஏன்?"

இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்தபடி இருக்க, ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதுவரை நடந்த நிகழ்வுகளும் அவனுக்குத் தெரியாததால் சற்று தயங்கியவாறே ஆரூரன் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதை மொத்தமும் கேட்டவனின் முகம் சற்று வாடிக் கூம்பிப் போயிற்று.

"எனக்கு அவர பிடிக்காததால தான இத்தன நடந்தும், உங்க ப்ளான் உட்பட என்கிட்ட எதையும் சொல்லாம இருக்கீங்க?" என்று வருந்திபோனக் குரலில் கேட்டவனை என்ன செய்து தேற்ற என்று தெரியாது விழித்திருந்தனர் இருவரும்.

"அவர பிடிக்காதுன்னு இல்லடா, லவ்னு சொல்லிட்டு அம்ரூவ ஹர்ட் பண்ணிட்டாங்கனா? அந்த பயம் தான். அதுவும் அப்பா, சரோப்பா எல்லாம் அந்த லேடி பத்தி சொல்லவும் எனக்கு சுத்தமா பிடிக்காம தான் இருந்துச்சு. பட் பூர்வா இன்சிடெண்ட், அம்ரூவோட பிடித்தம்.. கொஞ்சம் என்ன யோசிக்க வெச்சாலும் அப்பா கூட அவரைப் பத்தி விசாரிக்க போனப்போ அவர் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு" என்றவன் மென்மையாக, "சச் எ ஜெம்" என்றான் சிரித்தவாறு.

"ஓட் ரைட், எங்க தேவா'த்தானா கொக்கா" என்றான் அபூர்பன் ஆர்ப்பாட்டமாக.

"நரம்பா இப்படியே சிரி! ஆனா மூஞ்ச மட்டும் கொஞ்ச நேரம் முன்ன வச்ச மாதிரி வைக்காத, குழில இருந்து புடுங்கிட்டு வந்த மாதிரியே இருக்கு"

"டேய்"

"என்ன டோய், நீ திங்கறது எல்லாம் எங்கத் தான் போகுதோ" என்றான் ஆதவனை இயப்பாக்க.

"அதவிடு, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"

"விடமாட்டியே, தாத்தா கோவா போனாரே அப்போவே இவங்க ரெண்டு பேர் மீட்டிங் ஏர் போர்ட்லையே படுபயங்கரமா இருந்துச்சு. அப்போ வெச்சு பார்த்தேன். தென் ஒரு நாள் எனக்கு கால் பண்ணியிருந்தார், தனியா அம்ரூ பத்தி பேசனும்னு. அப்போவே தெரிஞ்சிடுச்சு லவ்வ சொல்லத் தான் கால் பண்ணுறார்னு.. பேசினோம், ஆனா நான் தான் பிடிக்கொடுக்கல. அப்புறம் என்னமோ தோனுச்சு இவர் அம்ரூவுக்கு செட் ஆவார்னு.. அப்படியே பேசி பேசி, ப்ரண்ட் ஆகிட்டோம். அவ்வளவு தான்" என்று அவன் சொல்லி முடித்திருக்க,

அபூர்வன், "எனக்கு வந்தன்னைக்கே அம்ரூக்கா சொல்லிட்டா, தேவா'த்தான் தான் அவளோட ஃபயான்ஸேன்னு" என்றவன் சிரிக்க,

ஆரூரன், "பாரு, ஒன்னும் நடக்கறதுக்கு முன்னவே இந்த லட்சணம்"

ஆதவன், "அவளுக்கு பிடிச்சா ஓகே தான்."

"டூட் நமக்கு அத்தானா வரப்போறவர். நமக்கும் கம்பனி கொடுக்கனும்ல, சோ நமக்கும் பிடிக்கனும். அதுவும் முக்கியம்"

அபூர்வன், "விடுங்க விடுங்க.. முத அரவிந்த் அண்ணாக்கு கால் பண்ணுங்க"

ஆதவன், "என்னடா சொல்லப் போறீங்க?"

அபூர்வன், "அதான் அப்பா ஓகே சொல்லிட்டார்ல அதான்"

ஆதவன், "அத அவருக்கு சொல்லாம ஏன் அரவிந்த் கிட்ட?"

ஆரூரன், "ஏன்னா இன்னிக்கு எங்க ப்ளான் ஃப்ளாப்! அதான் விஷயம் சொன்னா ப்ளான் போட்டவர் கொஞ்சம் ஹாப்பி ஆவாரே"

அரவிந்திற்கு அழைப்பு விடுக்க, அது சென்று கொண்டே இருந்தது. அவன் தான் எடுத்தபாடில்லை.

"சரி விடுங்கடா.. நாளைக்கு சொல்லுங்கோங்க. தூங்கலாம் வா, செம்ம டையர்ட் வேற" என்று அவர்கள் கூட்டம் களைந்தாலும், அங்கு அரவிந்தின் குடும்பமும் களைய காத்திருந்தது.





இருண்டு போய் இருந்த அறைக்குள் செல்ல ஒரு சிறு தயக்கம் அவளுக்கு.

இரண்டு வாரமாக பங்குப் போட்ட அறை தான். ஆனால் இன்று முற்றும் அந்நியமாய் போயிருந்தது.

விளக்கை தட்டிவிட்டு அவனை அறையில் தேடினால். சாரளத்தின் அருகே இருந்த ஒற்றை சாய்விருக்கையில் பின்னோக்கி தலை சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் அவளின் ரகு.

"இது என்ன இவ்வளவு பெரிய பேரு, ராகவ் முரளி கிருஷ்ணன். சொல்லுறதுக்கே கஷ்டமா இருக்கு. நான் உங்கள சுருக்கி ரகுன்னு கூப்பிடுறேன்" ராகவிடமே பளீர் என்று சொன்ன போது காவ்யாவின் வயது பதினாறு.

அப்போது அவனோ மருத்துவம் நான்காம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தான். அவளின் பேச்சு ஒரு சிறு பிள்ளை தனமாகத் தோன்றினாலும், அவள் அப்போதே அவன் மனதில் நிறைந்திருந்தால்.

அவனும் சொல்லவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் காதலானது மெல்ல மெல்ல அவர்கள் இதயத்தை தட்டித் திறந்திருந்தது.

வாசுவின் கூற்றுப்படி அது அவளின் வயதில் வரும் ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே என்று நினைப்பு அவளிடம். ஆனால் காலப்போக்கில் உரிமை எடுத்து பழகி, அப்பழக்கம் காதலாகி இப்போது அவனின் மனைவியான பதவிக்கு அவளை அழைத்து வந்திருந்தது‌.

நொடியில் எல்லாம் அவள் மனதில் வந்து போக, அவன் தொண்டை குழி ஏறி இறங்கியதைப் பார்த்தவள் எதுவும் யோசிக்காது அவள் ரகுவிடம் சரணடைந்திருந்தால் பெண்ணவள்.

காயமும் அவனே; அவளின் அழுத்தமும் அவனே; அவளின் முழுதாகிய மருந்தும் அவனே!

தொப்'பென்று அவன் மீதே விழுந்தவளை அணைவாகப் பிடித்து தன்மேலே போட்டுக்கொண்டவனை நினைத்து அத்தனை கண்ணீர் வந்தது அவளுக்கு.

இருந்தும் இருவரும் ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை.
காதலில் வைராக்கியமும் வலி கலந்த அழகு தான் போல.

இறுக்கமான அணைப்பாக இல்லை என்றாலும் அதில் தெரிந்த வழு காவ்யாவை இன்னும் அவனை நெருங்க வைத்திருந்தது.

அவன் கண்ணின் ஓரம் கொடாக வழிந்த கண்ணீர் அவன் தவிப்பையும் அன்பையும் மௌனமாய் சொல்ல, அவளின் கதறலும் கட்டுக்காடங்கா கண்ணீரும் தப்பித் தாளமிடும் இதயமும் அவளின் போராட்டத்தைப் புடம் போட்டு காட்டியது.

அவளின் அழுகை எல்லாம் மெல்ல கறைந்து நீண்ட மூச்சுக்களாக குறைந்திருந்தாலும் அவளின் முதுகை ஆதூரமாய் தடவும் அவரின் வருடல் மட்டும் நின்றபாடில்லை.

இவனின் முகத்தை கூட இனி வரும் வருடங்களில் பார்க்க முடியாதே என்று நினைத்தவள் மறந்தும் அவளெடுத்த முடிவில் மாற்றம் கொண்டு வந்துவிடவில்லை.

அவனோ, அவனின் மூச்சாகிப் போனவளை இன்னுமின்னும் தன் தொடுகையின் மூலம் உணரப் பார்த்தான், இனி அது எப்போது வாய்க்கும் என்று தெரியாது.

ஒரு கழித்த அவனின் மார்பில் தலை வைத்து படுத்திருந்தவளின் பார்வை அவனை துளியும் சீண்டாது பக்கவாட்டில் பெரிய சட்டத்தில் மாட்டியிருந்த அவர்களின் திருமண புகைப்படத்திலேயே நிலைத்திருந்தது.

சிரிப்பு இல்லை என்றாலும் அவள் முகத்தை அலங்கரித்த நிறைவும் அவளை காயப்படுத்திவிட்ட குற்றவுணர்வோடு அவளை கரம் பற்றிய ஆசுவாசமுமாக நின்ற ராகவும் அத்தனை அழகோவியமாய் இருந்தனர் அதில்.

வாயில் மணி அழைப்பு திடும் என்று கேட்டிட வாசு வந்ததை அறிவுருத்தியது அது.

சென்று அழுகை மீண்டது போல் இருந்தது அவளுக்கு. இத்தனை பாடுபடுத்துமா இந்த காதல்? தன்னை இத்தனை பலவீனம் செய்துவிட்டதா இவனின் அன்பு? என்றவள் நினைத்தாலும் அவனே அவளின் உயிராகிப் போனப் பின்பு இதுவெல்லாம் சாதாரணம் என்று புரியவில்லை அவளுக்கு.

அவளை பின்னியிருந்த அவனின் கைகள் நகரும் என்று தோன்றாது அவளே எழுந்தால்.

கிஞ்சித்தும் விலகாத அவனின் கைகளில் இருந்து விலகிய போது உணர்வு பிழம்பாக, அத்தனை துக்கத்தையும் அழுகையும் கட்டுப்படுத்தியவள் நிமிர்ந்து அவன் முகமும் பார்க்கவில்லை, பேசவும் இல்லை.

ஓர் எட்டு வைத்தவளின் புடவை முந்தானை இழுபட, சட்டென்று திரும்பியவள் முகம் அந்த ஒரு விநாடி அந்த ஒற்றை விநாடியில் தெரிந்த சந்தோஷமும் எதிர்பார்ப்பும் அப்பட்டமாகவே காட்டிக்கொடுக்க, ஏறியிரங்கும் நெஞ்சோடு அவனைப் பார்த்திருந்தாள் பேதையவள்.

நேற்றைய தினம் போல் இன்றும் சிவப்பேறி இருந்த அவன் விழிகள் அவள் முகத்தைப் ஆழ்ந்து பார்த்தது. பார்த்துக்கொண்டே இருந்தது.

பதில் மொழியற்று அவள் நின்றிருக்க, அவள் புடவையின் முந்தி அவன் கைகளில்.

கண்கள் கூட இத்தனை தவிப்பை தருமா? என்று இருந்து நொடிகள்.

'ஏதாவது பேசேன்' என்று அவள் மனதில் கத்தினாள், அதை அவள் முகமும் காட்டியது.

அவனும் படித்தான், ஆனால் அந்த பேச்சு அவளின் பிடிவாதத்தை இன்னும் பிடித்து வைத்தது.

"பத்தரம்"

அதற்கு அவள் கண்கள் வடித்த அபிநயம், இதுவரை அவன் பார்த்திராத ஒன்று.

ஒரு சின்ன தலையசைப்பு, அத்தொடு அவள் அந்த அறையை விட்டு, அவளின் ராகவ்வை விட்டு சென்றுவிட்டாள்.

அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 36

கிச்சனில் காலை சமையலை செய்துகொண்டிருந்த ராகினியின் முகத்தில் அத்தனை கலக்கமும் அழுகையும்.

வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியை தந்தால் அதை ஆழ்ந்து அனுபவிக்கும் முன்பே அதைவிட இரட்டிப்பான அதிர்வையும் தருவது அவருக்கு புதியது இல்லை என்றாலும் இந்தமுறை மனது விட்டுவிட்டது போன்ற உணர்வு.

நேற்று மகள் பொட்டியோடு வந்து நிற்கும் போது பெற்றவறாக ஆத்திரம் வந்தாலும் அதே அளவிற்கு அழுகையும் வெடித்தது.

அவளாகத் தேடிக்கொண்டது என்று சொல்லவும் முடியாது. அவள் காதல் எப்போதோ தெரிந்து சம்மதித்த ஒன்று என்றாலும் இப்படி வாழாது அவள் வந்து நிற்கும் போது உள்ளம் பதறத்தானே செய்யும்.

அதிலும் அவளே தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டால் என்ற எண்ணம் வந்தால், கேட்கவா வேண்டும்.

மகன் இரவில் வராதது, சொக்கநாதன் திடீர் என்று மகனுக்கு அழைத்தது என்று அதுவேறு மனதை பிசைய, இம்மித் தூக்கம் இரவில் இல்லை.

நிச்சயமாக ஏதோ கணவனுக்கு நேர்ந்திருக்கிறது என்பதில் மட்டும் அவர் மனது ஆணியடித்தால் போல் நின்றிருக்க, அதை ஊர்ஜிதம் செய்யும்படி அதிகாலையில் சொக்கநாதனைத் தாங்கியபடி வீட்டிற்கு வந்தான் அரவிந்த்.

"முருகா" என்று நெஞ்சை பிடித்து நின்றவர் தான் ராகினி.

பெரும் அதிர்ச்சி, அந்த அதிர்ச்சி அவரை எதிர்வினைக் கூட செய்ய முடியாது முடக்கியிருந்தது.

சொக்கநாதனை ராகினியின் அறையில் படுக்க வைத்து, மருத்துவர் உரைத்த விஷயத்தை காவ்யாவிடம் சொல்லிவிட்டு, மாத்திரைகளை சரி பார்த்து அவர் உறங்கிய பின்னர் வெளிவந்த இருவரும் ராகினியைப் பார்க்க, அவர் அப்போதும் எதுவும் பேசாது அமர்ந்திருந்தார்.

ஓர் அளவிற்கு எதிர்பார்த்த ஒன்று என்றாலும் கணவனை இப்படி அடிபட்டு பார்த்தும் இதயத் துடிப்பு வேகமாய் துடித்தும், அவரிடம் ராகினியால் செல்ல முடியவில்லை.

அதுவேறு ஒருபக்கம் போட்டு படுத்த, 'இனி வருவதை தாங்கும் தெம்பைக் கொடு கடவுளே' என்று நினைப்பதை தவிர்த்து வேற என்ன வேண்டிக்கெள்ள என்று தெரியவில்லை அவருக்கு.

இனிமையான திருமண வாழ்க்கை என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அத்தனை வருடத்தில் நிம்மதி இருந்தது. ஆனால் எப்போது அவர் 'வேதா சர்க்யூட்'ஸ் ஆரம்பித்தாரோ அப்போதே சொக்கநாதனிடமிருந்து ஒரு மெல்லிய விலகலை அவர் உணர ஆரம்பித்திருந்தார்.

அந்த விலகலை இருவரும் உணர்ந்தாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் சொக்கநாதனை மேலும் ராகினியிடமிருந்து பிரித்தது. அதை அப்படி அவர் காட்டிக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்‌.

பேச்சுக்கள் குறைந்தாலும், அவர்கள் இருவர் கொண்ட அன்பு எனும் சக்கரம் திருமண வாழ்க்கையை இன்றும் ஓட்டிக்கொண்டிருந்து.

அரவிந்த், "அம்மா எழுந்து போய் அப்பாவ பாரு. ஒரு வார்த்தக் கூட இப்படி பேசாம இருந்தா எப்படி? அவர் தூங்கி எழுத பின்னயாவது பேசு"

காவ்யா, "இப்போ என்ன தான்'ம்மா உன் பிரச்சனை? இப்படியே உட்காந்திருக்க. ஆர்வி'கிட்ட அவர் பேசாதனால அவர விட்டு விலக ஆரம்பிச்சு இப்போ சுத்தமா பேசவே மாட்டேங்கிற. பிரச்சனை வந்தவுடனே ஆர்விய தான கூப்பிட்டார், என்னையோ ஒன்னையோ இல்லையே. பாசமில்லாமையா இருக்கும். அவரா இப்போ இங்க வந்துட்டார்ல இன்னும் என்ன'ம்மா"

"விடு வேதா. அவங்களா போவாங்க. எனக்கு பசிக்குது ம்மா. ஏதாவது செஞ்சையா? இருக்கா?" என்றபடி அரவிந்த் சமயல் அறைக்குச் செல்ல,

"இரு ஆர்வி, காப்பி போட்டுத் தரறேன். முதல் குடி அப்புறம் சாப்பிடலாம்" என்றவர் மெல்ல தயங்கியபடி, "அடிபட்டு வந்த மனுஷே கொஞ்சம் காரம் எல்லாம் கம்மியா போட்டுத் தான் சமைப்பேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்றுவிட்டு சென்றவரின் முகத்தில் தான் அத்தனை கலக்கம்.

"இப்போ காரமா முக்கியம்" என்று காவ்யா பல்லைக் கடித்தாள்.

"வேதா போ, என்ன பண்ணுறாங்கனு பாரு. இத்தன அமைதி அவங்களுக்கு சூட் ஆகல.. பேச்சும் கடமையா தான் வருது பார்." என்றுவிட்டு அவன் அறைக்குள் சென்றதும் அத்தனை யோசனை அவனுக்கு.

நேற்று அந்த இரவு நேரத்தில் புவனாவை மருத்துவமனையில் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை தான்.

ஆனால் அதன்பின்னர் அவன் தெரிந்துகொண்ட செய்தி, உண்மையில் தலைவலியைத் தான் கொடுத்தது.

புவனா, சொக்கநாதனுக்கு ஆஸ்தான வழக்கறிஞர். அதைவிட அவர் மேல் அதிகமான மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர். சுருங்க சொன்னால், புவனா ஒரு விஷயத்தை மறுத்தால் அதன் பின்னர் சொக்கநாதன் அதனை செய்யவே மாட்டார்.

முரளியைத் தொட்டு ஒருவகை மெல்லிய நட்புறவு கூட இருவருக்கும். சொக்கநாதனுக்கு ஒரு நல்ல நலம் விரும்பியும் என்றே சொல்லலாம்.

"இவ்வளவு தூரம் வந்த பின்னையும் எப்படி அந்த தில்லைய விட்டு வைக்க சொல்லுறீங்க நாதன்?" என்று அரவிந்த் இருப்பதையும் பொருட்படுத்தாது கத்தினார் புவனா.

நீதி மன்றத்தில் இருக்கும் பெண் சிங்கமாய் அவர் கர்ஜனை இருக்க, முகத்தில் கோபம் அப்பட்ட கோலம் போட்டிருந்தது.

அவர் தில்லை நாதன் என்றவுடனே அரவிந்திற்கு நினைவு வந்தது என்னவோ,
முன்னாள் உணவுத்துறை அமைச்சர். தில்லைநாதனே.

அவனைப் சட்ட ரீதியாகப் பிடிப்பதற்கு புவனா கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக முயன்று வருகிறார் என்பது அரவிந்திற்கு செவி வழி செய்தி.

ஆனால், ராகவை தில்லைநாதனின் பெண்ணிற்கு மணமுடிக்க அவர் காத்திருக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு வந்த செய்தி, அவன் புருவத்தை உயர்த்தியிருந்தது.

ராகவை பகடையாக வைத்து அவர் காரியத்தை சாதிக்கப் பார்க்கிறார் என்பது தெரிந்தாலும், மகனின் வாழ்க்கையில் போய் விளையாடுவதா என்று கோபமும் மூண்டது அவனுக்கு.

ஆனால் சொக்கநாதன் 'அவனை ஒன்றும் செய்ய வேண்டாம்' என்பது தான் அரவிந்திற்கு இடித்தது. எதனால்? என்ற கேள்வி எழுந்தவுடன் அதற்கான விடையும் சற்று நேரத்திலேயே கிடைத்தது அவனுக்கு.

மருத்துவ பரிசோதனை முடிவடைந்து அதிகாலையில் அவர்கள் கிளம்ப முற்படும் சமயம், "புவனா ம்மா நீங்க கிளம்புங்க. நேத்து வந்தவுங்க இத்தன நேரம் இருந்ததே பெரிசு" என்று சொக்கநாதன் புவனாவிடம் சொல்ல,

"நான் இருந்தனால ஆச்சு. இல்லேனா என்ன ஆகியிருக்கறது. தனியா இனி இப்படி வண்டியோட்டு வராதீங்க நாதன்." என்றவர் அரவிந்திடம் ஒரு பார்வை வைத்துவிட்டு,

"கவனமா போங்க" என்றுவிட்டு கிளம்பியவர் முகத்தில் அத்தனை ஆத்திரம்.

காவ்யாவை பற்றி செய்தி அப்போது தான் அவருக்கு வந்திருந்தது. இதில் ராகவ் திரும்பவும் முரளியுடன் சென்றிருப்பது துவங்கி எல்லாம் செய்தியாகவும் புகைப்படமாகவும் வந்துவிட கொதித்துப் போய் கிளம்பியிருந்தார் முரளியின் வீட்டிற்கு.

காரில் செங்கல்பட்டை தாண்டி வந்து கொண்டிருக்கும் போது,"தில்லைநாதன் உங்கள என்ன பண்ணான்?" என்று சுற்றி வளைக்காது சொக்கநாதனிடம் கேட்டுவிட்டான் அரவிந்த்.

சொக்கநாதன் எப்படியும் மகன் கேட்பான் என்று நினைத்து வந்தார் தான். சிறிது நேரம் மௌனமாய் இருந்தவர் பின் அவனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்து சொல்லிவிட்டார்.

சரண், தில்லைநாதனின் மகன்.
அவனும் மருத்துவ உபகரணங்கள் தொழில் தான் செய்து வந்தான். முதலில் தொழில் ரீதியாக சொக்கநாதனை அறிந்தவன் பின் அது போட்டி வெறியாக மாறியிருக்க, பிரச்சனை மேல் பிரச்சனைகளை அடுக்க ஆரம்பித்திருந்தான்.

அதை சட்டப்படி முறையாக சொக்கநாதன் கையால நினைக்கும் போது முரளியின் மூலம் அறிமுகமானவரே புவனா.

ஒன்று தொட்டு ஒன்று என்று வழக்கிற்காக விசாரிக்க போகும் போதுதான் தில்லைநாதனை பற்றியும் சரண் பற்றியும் பல முறைகேடான விஷயங்கள் வெளியே வந்தனர்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இது சாதாரணம் என்று நினைத்தாலும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் புவனாவால் அதை சட்டென்று விட்டுவிட முடியவில்லை.

காத்துதிருந்து கண்ணி வைத்து பிடிக்க அவர் நினைத்திருக்க, அப்போது அபிநயாவிடம் சீக்கிய அபூர்வன் தவிர்த்து அனைத்தும் அவர் கண்ணில் பட்டது. ஆனால் பட்ட அனைத்திற்கும் ஆதாரமில்லை!

சட்டத்திற்கு சாட்சியும் ஆதாரமும் தானே முக்கியம். இதனிடையில் வரிசையாக நான்கு வழக்குகள் சரணின் நிறுவனத்தின் மீது சொக்கநாதன் பதிவு செய்ய, அவரை தொடர்ந்து அத்தொழிலில் இருப்போர் இரண்டு பேரும் புகார் கொடுத்தனர்.

அது அப்போது இருந்த ஒரு புகைச்சலை கொடுத்திருந்தது தில்லைநாதனிற்கு. இடையில் முரளி வேறு அபூர்வனுக்காய் மேலிடத்தில் பேசி வைக்க, விஷயம் விபரீதம் ஆகியிருந்தது.

எங்கு தில்லையின் பார்வை தன் குடும்பத்தார் மேல் சென்றுவிடுமோ என்று நினைத்து சொக்கநாதன் அரவிந்த், காவ்யா, ராகினியிடம் சற்று விலக ஆரம்பித்திருக்க, குடும்பத்தில் அதில் வேறாக பிரதிபலித்தது.

அதிலும் புவனா முரளியை வெளிப்படையாகவே சாடியிருந்தார்.

இப்படி ஒன்றிற்கு ஒன்று என்று சங்கிலி தொடர் போல் சென்ற நிகழ்வு வந்து நின்ற இடம், ராகவ்வை தில்லையின் மகள் விரும்புகிறாள் என்பதிலேயே.

அதை கோபத்துடன் புவனா கேட்டாலும் அதிலும் ஒரு ஆதாயத்தை எதிர்ப்பார்த்தார் என்பதே உண்மை. எப்படியும் ராகவ் இதற்கு சம்மதிக்க மாட்டான் என்று தெரிந்தே தில்லையிடம் உறுதி கூறி பின் அதை வைத்தே தன் காரியத்தை சாதிக்க அவர் நினைத்திற்க, அத்தனையும் வீணானது தான் மிச்சம்.

ஆனால் இப்போது ராகவ் திருமணம் செய்திருப்பதே சொக்கநாதனின் மகள் காவ்யா என்று தெரிந்த பின்னர் ஆறு வருட வஞ்சம் அவரை நோக்கி படு உக்கிரமாக திரும்பியிருந்தது.

மதுரா அவர் கைவிட்டு போனது ஒரு தனிக்கதை.

ஏன் இத்தனை நாட்கள் அவரையோ இல்லை அவர் சார்ந்தவர்களையோ தில்லை ஏதும் செய்யாது இருந்ததற்கு காரணம் புவனா திருமழிசை!!

எப்படியும் அந்த பெண் தன்னை நாராக கிழித்து விடுவார் என்று தெரிந்து அமைதிகாத்தவர் இப்போது அவர்கள் இருவரின் பால் கொண்ட கோபத்தின் விளைவுகள் தான் சொக்கநாதனின் விபத்து.

எப்படியும் யாரும் ஓய்ந்துவிடப் போவதில்லை. தில்லைக்கான தண்டனை கிடைக்கும் வரை புவனாவும் விட்டுவிட மாட்டார் தான். ஆனால் அவரிடம் இருக்கும் ஆதரமும் சாட்சியும் போதாது. இன்னும் தேடிக்கெண்டே தான் இருக்கிறார். நிச்சயமாக ஒரு வழி கிடைக்கும் என்று.

அதுவரை தில்லையின் தொல்லையை சமாளித்தாக வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

செய்தியை சொக்கநாதன் வழி கேட்ட அரவிந்திற்கு ஆற்றமை தான் வந்தது.

எவனோ ஒருவனுக்காக பயந்து தன் குடும்பத்திடமிருந்து அவர் விலகியிருந்தது அத்தனை வருந்த செய்தது அவனை.

தன்னை பிள்ளையாய் அவர் நினைத்திருந்தால் இத்தனை தூரம் இதனை வளர விட்டிருப்பானா? என்ற கோபமும் மூண்டது.

இத்தனை வருடங்களாக இருக்கும் அவனின் ஏக்கம், ராகினியின் மகிழ்வு, காவ்யாவின் சந்தோஷம் என்று அவர்களின் சிறு சிறு உணர்வுகள் கூட மறிந்திருந்தது சொக்கநாதனின் செயலால்.

இனி பேசி என்ன பயன். காவ்யாவின் வாழ்க்கையும் இதில் அடங்கியிருக்க, புவனாவிடம் பேச வேண்டும் என்பதை மட்டும் அவன் மனம் ஆழ சொன்னது.

பதவியில் இருக்கும் போதும் சரி இல்லாத போதும் சரி, ஒரு அரசியல்வாதியிடம் மோதுவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

அதிலும் தொழிலும் குடும்பமும் இணைந்தாற் போல் நடக்கும் பிரச்சனைக்கு எத்தனை கவனமான அடிகளை அவர்கள் எடுத்து வைக்க வேண்டும்.

"ஆல் இஸ் வெல், தட் எண்ட்ஸ் வெல்டா ஆர்வி. போராடி பார்க்கலாம்" என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

"என்னடா தனியா பேசீட்டு இருக்க" என்று அவனுக்கான குழம்பியுடன் வந்தாள் காவ்யா.

அவளை ஏறயிறங்கப் பார்த்தவன், "நார்மலா இருக்க மாதிரி நடிக்காத வேதா. இன்னும் உங்களுக்கு டைம் இருக்கு. ராகவ்கிட்ட பேசு" என்றவன் திரும்பவும் சொல்ல,

"ம்ம்ப்ச்.. என்ன பேசறது? அதெல்லாம் பேசி, சண்ட போட்டு எல்லாம் ஆச்சு‌. எங்களுக்கு கொஞ்சம் தனிமை வேண்டும், அதுவும் தனியா தான் வேணும்!"

"நல்லா பேசு"

"பேசலேனா வாழ்க்கையே போயிடும் ஆர்வி. என் ரகுவ விட்டு நான் எங்கையும் போகமாட்டேன். இது ஒரு தற்காலிக பிரிவுனு நினைச்சுக்கோ" என்று அவனுக்கு சொல்வது போல் தனக்கும் சொல்லிக்கொண்டாள் அவள்.

தங்கையிடம் இருந்த தெளிவு அவனை சமாதானம் செய்தது. இனி நண்பனை தான் பார்க்க வேண்டும். நிச்சயம் உடைந்திருப்பான் தான், அவனை தேற்றி தவறிய இடத்தை சரி செய்ய அவனை ஆயத்தபடுத்த வேண்டும் என்ற நினைப்புடன் இருந்தான் அவன்.

"அம்மா எப்படி? நார்மலா?"

"அழுகை தான், சரியாகிடும். எங்க எல்லாம் அடிபட்டிருக்குனு கேட்டாங்க, சொன்னதும் அப்பாவ பார்க்க போயாச்சு" என்று சொல்லியவளிடம் விபத்து நடந்ததைப் பற்றி பகிர்ந்தான்.

"வயசாகுதில்ல அவருக்கும். கவனமிருந்திருக்காது. இத்தோட முடிஞ்சதுனு நினச்சுக்க வேண்டியது தான்" என்றவள் சிறிது தயக்கத்திற்கு பின்,

"ஆர்வி, பிஜி என்ட்ரன்ஸ் படிக்கனும்.. அங்க காலேஜ் சேரனும் டிராவல் ஃபீஸ்னு நிறையா வரும்.. எனக்காக" என்றவளை இடைமறித்தவன்,

"ஒத்த பைசா தரமாட்டேன்" என்றான் அழுத்தமாய்.

அவள் விக்கித்து அவனைப் பார்க்க, "என்ன லுக், நீ ராகவோட புரோபர்டி. அதுக்கு அவன் தான் செலவு செய்யனும், நானில்லை. போய் அவனையே கேளு" என்று சொன்னவனைக் கடுப்பாய் பார்த்திருந்தாள் அவள்.


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 37


அதிகாலையிலேயே சூரிய ஒளி மெல்ல மெல்ல புவியில் பரவ ஆரம்பித்திருந்தாலும் ஏனோ முரளியின் இல்லம் மட்டும் இருளில்.

நேற்றைய இரவே தன் அத்தியாவசிய பொருட்களுடன் அரவிந்தின் வீட்டிற்கு சென்றுவிட்டாள், காவ்யா.

அவளை விட்டுவிட்டு திரும்பவும் வாசு தன் அப்பார்ட்மெண்ட் வரும் அந்த இடைப்பட்ட நேரத்தில் ராகவின் உலகம் சூன்யமானது போல் இருந்தது.

படித்தவன்; மருத்துவன் என்பதை எல்லாம் மீறி காதலன்; கணவன் என்பது மட்டும் அவனின் உயிர்பாக இருந்தது. அதை உயிரோடு வைத்திருந்தவளே அவனை விட்டு சென்றிருக்க, இனி அவளாக வந்தாள் தான் அந்த உயிர்ப்பு உயிருட்டப்படும்.

அவன் அமர்ந்திருந்த கோலமும் அத்தனை மனதை உலுக்க, வம்படியாக முரளியின் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தான் வாசு.

"பறிகொடுத்த மாதிரி உக்காந்திருக்கான் ப்பா. என்னாலையே முடியலை, ஏந்தான் இப்படி இருக்காங்களோ ரெண்டு பேரும்" என்று வாசு தன் ஆதங்கத்தைக் கொட்டினான்.

ஆனால் அதே நிலைமையில் இரண்டு பிள்ளைகளோடு அத்தனை பெரும் மருத்துவமனை நிர்வாகத்தையும் கையில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தவர் தான் முரளி கிருஷ்ணனும்.

தன் நிலையில் பாதி கூட மகனுக்கு வரவில்லை என்று மகிழ்வதா இல்லை வேதனைப்படுவதா என்று தெரியாது ராகவையே பார்த்தபடி இருந்தார் அவர்.

காதல், அது செய்யும் மாற்றம் தான் எத்தனை விந்தையானது. மனதளவில் ஒரு மனிதனை அன்பால் உணர்வால் அசைக்கும் வித்தையை பரிபூரணமாய் செய்து விடுகிறது.

அக்காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுவது ஒரு சடங்காக இருந்தது. அதில் சிலரை தவிர்த்து மற்றவர் மனமுவந்து தானே தன் உயிரை கணவனுக்காய் துறக்கவும் செய்தனர்.

அவனில்லா உலகில் நமக்கென்ன இனி வேலை என்பது போன்ற எண்ணங்கள் இருந்திருக்கலாம்; அதை தாண்டி வேறும் இருக்கக் கூடும். அதை ஆராயாது அவர்களின் அன்பை மட்டும் பார்ப்போம்.

ஆனால் இன்று, தொட்டதுக்கொள்ளாம் விவாகரத்து. நீ சரியா; நான் சரியா என்பதை பார்க்க மட்டுமே நம்மவர்களுக்கு நேரமிருக்க, குற்றத்தை பார்க்காது துணையிடத்தில் காதலை எத்தனை பேர் இப்போது பார்க்கின்றனர்?

இருவரும் உயர்ந்தோராக இல்லது சமமாய் இருந்தாலே போதும், பிரச்சனைகளை பெரியதாய் தவிர்ப்பதற்கு.

ஆனால் அடிப்படை புரிதலும் காதலும் விட்டுக்கொடுத்து செல்லவது இல்லாமல் ஒரு சிறு விவாதமோ வாக்குவாதமோ ஏன் சண்டை என்று வந்தால் விட்டுச் செல்லவது தான் இப்போதைய தம்பதியரின் நிலை.

இதில் காதல் என்று எங்கே சென்று பார்க்க. அப்படியே காதலைப் பார்த்தாலும் அதுதான் முன்பு போல் அவர்(கள்) மனதில் அஸ்திவாரமிட்டு இருக்குமா? சற்று ஆட்டம் கண்டிருக்கத் தான் செய்யும்.

ஏன் விட்டுக்கொடுத்தால் கெட்டா போய் விடுவோம்? அதுவும் ஒரு அடிப்படை பண்பு தான். வாழ்க்கையில் சிற்சில கஷ்டங்கள் வந்தாலும் அந்த விட்டுக்கொடுத்தலில் இருக்கும் சூட்சுமம் புரிந்தால், வாழ்க்கை அழகு தான்.

காதலின் அடிப்படையில் இவை இருந்தாலும் எல்லாவற்றிக்கும் இருக்கும் அளவீதம் கூட இதற்கு பொருந்தும்.

அமிர்தமே ஆயினும் அளவோடு இருக்க வேண்டும்.

அளவை மீறிய காதல் அழிவை தரும் தான். ஆனால் அதற்குன்டான ஒரு புரிதலும் துணையை உணர்ந்தலும் இருந்தால் அளவை மீறினாலும் அது கட்டுப்பாட்டில் இருக்கும்.

அத்தகு கட்டுப்பாடு ராகவின் காதலில் இருந்தது. ஆனால் முரளியின் காதல் அங்கு தான் தோற்று நிற்கிறது.

"டேய் வா தூங்கலாம்" என்று இரவே அவனை முரளியின் அறைக்கு இழுத்துச் சென்றான் வாசு.

"ம்ம்ப்ச்" என்று சலித்து கொண்டவனை, பேசிப் பேசியே தூக்க வைக்க முயல, ராகவ் தூங்காது வாசு தான் தூங்கியிருந்தான்.

முன்பு இருந்தே அவர்களுக்கு தனித் தனி அறை இருந்தாலும் முரளியுடன் தூங்குவதென்பது சகோதரர்கள் இருவருக்கும் அத்தனை அலாதி ப்ரியம்.

வளர்ந்த பின்னர் வாசு தனக்கான ஒரு இடமும் அங்கீகாரமும் தேவை என்று கருதி தனியே அப்பார்ட்மெண்ட் வாங்கிச் சென்றிருந்தாலும் வாரத்தில் இரண்டு நாட்களாவது முரளியுடன் இருக்கும் படி பார்த்துக்கொள்வான்.

இப்போது அவையெல்லாவற்றையும் விட, ராகவின் மனநிலைக்காகவே ஒன்றாக இருப்பது சிறந்தது என்று எண்ணி அதை செயல் படுத்தவும் செய்தான்.

இதோ காலை சூரியன் புலர்ந்த பின்பும் பொட்டு தூங்கும் இருந்திருக்கவில்லை முரளியிடமும் ராகவிடமும்.

எத்தனையோ யோசனைகள் மனதில் வலம் வர, அதுவெல்லாம் அத்தனை பூதாகரமாக இருந்தது அவனுக்கு.

போதும் இதற்கு மேலும் முடியாது என்று நினைத்தானோ என்னவோ அவன் மனது முரளியை தேடியது.

சாய்விருக்கையில் அமர்ந்தவாறு சற்று கண்மூடியிருந்த முரளிடம், "அப்பா, மடியில படுத்துக்கவா?"

பதில் பேசாது அவர் தன் தொடையை தட்டிக் காட்ட, உடலை சுருக்கி அவரிடம் அடங்கிவிட்டான்.

நேற்று வரை சிறியதாய் கசிந்த கண்ணீர் இன்று முரளியிடம் வந்த பின்னர், மடைத்திறந்திருந்தது.

"ஸாரி ப்பா! உங்கள எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்தீட்டு இருக்கேன்ல நான்?"

".."

"ஏன் இப்படி எமோஷனலா இருக்கேன்னு எனக்குத் தெரியல ப்பா. ரொம்ப ஹர்டிங்கா வேற இருக்கு"

".."

"என்னமோ ஒரு ப்ரஷர் மனசுக்குள்ள. மைண்ட் அதில இருந்து வெளிய வராம அப்படி ஒழண்டுட்டு இருக்கு"

".."

"பயமா வேற இருக்கு'ப்பா. நான் ஒரு நிலையிலேயே இல்ல. அவ என்னவிட்ட போகல படிக்கத் தான் போறா ஆனா மனசு நொந்து போய், என் காதல கேள்விக்குறியாக்கிட்டு" என்று அவன் உடைந்து அழ, அவன் தலைக் கோதுவதை மட்டும் முரளி நிறுத்தவில்லை.

இதுவும் ஒரு வகை சிகிச்சை தான். மனது லேசாகும் வரை அழுதால், மன அழுத்தம் குறையும். நம் உணர்வுகளை எண்ணங்களை மனது விட்டு பகிர்த்தால், மன அழுத்தம் குறையும். நாம் எண்ணுவதை பயமில்லாத செய்தால் கூட ஒருவகையில் அதுவும் நம் மன அழுத்ததைக் குறைக்கும்.

இதையெல்லாம் ராகவாகவே முன்வந்து செய்ய வேண்டும் என்பதற்காகவே தான் முரளி பேசாது இருந்தது.

அவன் எப்போது தூக்கத்திற்காக மாத்திரை உட்கொள்கிறான் என்று தெரிந்ததோ, நேற்றே முடிவெடுத்திருந்தார் அவனை அவன் போக்கில் சென்று தான் சரி செய்ய வேண்டும் என்று.

எல்லாரிடமும் மனோதத்துவ முறையில் சென்று தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்றில்லை. ஒருவரின் இயல்பு புரிந்தால் கூட பேசிப் பேசியே மனதை மாற்றவும் முடிவும். மருத்துவ மனோதத்துவம் படித்த முரளிக்கு இதுவெல்லாம் தெரியாமலா போகும்.

அதுவும் அவர் பெற்ற மகன். மலையை புரட்டியாவது அவன் துக்கத்தை, அழுத்ததைப் போக்கிவிட மாட்டாரா என்ன?

"ப்பா" என்று விசும்பலுடன் முரளியின் முகத்தை அவன் பார்க்க,

"அழுதா நல்லது ராகவ். அதுவும் ஆண்பிள்ளைகள் அழுதா இன்னுமே நல்லது. உனக்கு சொல்லியிருக்கேன் தானே. இந்த சமூகம் ஆணா பிறந்தா அழுகக் கூடாதுனு ஒரு ரூல் போட்டு வெச்சிருக்கு, யார் போட்டானு தெரியலை ஆனா ஒரு முட்டாளா கோழையாத் தான் நிச்சயம் இருக்கும். இன்னும் உனக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுதுடு, பட் அப்புறம் நோ க்ரையிங்"

அது அவனை ஏதோ செய்ய, தாவி அணைத்துக்கொண்டான் அவரை.

"ரொம்ப தூரம் போயிட்டேன் ப்பா உங்கள விட்டு. அதான் இத்தன நாளா இந்த பாடு."

"நான் இனி விடரதா இல்லடா. என் பசங்க என் கண் பார்வையிலேயே இனி இருக்கட்டும்.. நீங்க வளர்ந்துட்டதா நினைச்சு விட்டா, இன்னும் அதே குழந்த பிள்ளைங்கத் தான்" என்றவர் அவனின் முதுகை வருடியபடி,

"என்ன பிரச்சனை வந்தாலும் முதல்ல நிதானம் வேணும் ராகவா. கோபம் தான் நமக்கு முதல் சத்ரு. அதோட இம்பாக்ட் நம்ம வார்த்தைகள்ல காட்டிடறோம். அதோட ரிசால்ட், நம்ம வாழ்க்கையே சம்டைம்ஸ் போயிடும்‌. உன் பிரச்சனை என்னென்னு நான் கேட்கல, ஆனா அதுக்கான சொல்யூஷன் உனக்கு கிடைக்கலேனா கண்டிப்பா என்கிட்ட வா. இல்லையா நானே உன்ன தேவைப்பட்டா ஒரு ரெலாஷேஷன்காக சைக்காலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போறேன், ஓகே. ச்சியர் ஆப் மை பாய்! எது வந்தாலும் பேஸ் பண்ணணும்."

முரளி சொல்லிய வார்த்தை ராகவிற்கு மட்டுமல்ல வாசுவையும் சென்று சேர்ந்திருந்தது. இருவருக்கும் ஒரு தந்தையாய் அவர் கூறிய அறிவுரை, வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு அனுபவ வார்த்தை.

"அவன் அதெல்லாம் சமாளிச்சிடுவான் டேட். நீயோ காவ்ஸ்ஸோ எங்க தப்பு விட்டீங்கனு பாரு, இருக்கற கொஞ்ச ஸ்பேஸ் கூட இனி வராத அளவுக்கு பண்ண தப்ப ரிப்பீட் பண்ணாம இருங்க. போதும்."

"கண்ணா டிஃபன் லைட்டா என்னாவது செய்யேன். பசிக்குது" என்றவர் அயர்வாகத் தெரிய,

"தூங்கலையா டேட் நீங்க?"

"ம்ஹூம். என் வெள்ளெலி இப்படி இருக்க, எனக்கு எப்படிடா தூக்கம் வரும். இப்போ கொஞ்சம் தெளிவு வந்திருக்கும் அவனுக்கு, அது போதும். இனி அவனே பார்த்துப்பான்ற நம்பிக்கை வந்த பின்ன தான் தூக்கமே வருது எனக்கு"

"உனக்கு எப்படிடா, பில்ஸ் தரவா என்ன?" என்று வாசு நக்கலாக கேட்டிட,

"அத விட மாட்டியா நீ? தூங்க தான் போட்டேன்டா. வேற எதுக்காவும் இல்லை"

"இனி அத கன்ஸ்யூம் பண்ணாத ராகவ். நான் சொல்ல வேண்டியதில்லை உனக்கு, இருந்தாலும் அஸ் எ டாக்டரா உன்னோட அப்பாவ சொல்லுறேன்.. ட்ராப் தட்"

"ஓகே ப்பா"

"சரி போய் ரெண்டு பேரும் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. வில் ஹவ் சம் ஹாட் சாக்லேட்" என்று அவன் எதார்த்தமாய் சொல்லவும் அவன் மனதில் வந்து நின்றாள் அன்று அவன் இதழ் கொய்ந்த அவனின் பப்ளிமாஸ்.

அதை நினைத்த நொடி இதழ் விரிய அவன் சிரித்தாலும், தலையில் தட்டி நடப்பிற்கு வந்துவிட்டான்.

ஆனால் என்ன முயன்றும் அவன் காதோரம் 'மாஷ்மெலோ' என்று கிசுகிசுப்பாய் அவள் அழைப்பது போன்று தோன்றிட, பலிக்கு மஞ்சள் நீர் தொளித்த ஆடாய் தலையை உலுக்கிக்கொண்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

அதே சிரிப்போடு அல்மொண்ட் மில்க் தயாரித்தவன் அதை மிதமான தீயில் சூட வைத்து கொண்டான். பின்னர் மில்க் சாக்லெட் சிறிதும், டார்க் சாக்லெட்ஸை சற்று தாராளமாகவும் பாலில் சேர்ந்து கறைய வைத்தவன் கடைசியாக டம்ளரில் மாற்றிக்கொண்டு இருக்கும் நேரம் புவனாவின் பேச்சு அவனை நிறுத்தியிருந்தது.

"என்ன நடக்குது இங்க? அவன் இஷ்டத்துக்கு ஆடி இப்போ எங்க வந்து நின்றுருக்கு பாருங்க?" என்று முரளியிடம் சண்டைக்கு நின்றிருந்தார் புவனா.

அவரை அழுத்தமாய் பார்த்தபடி நின்றிருந்த ராகவின் மனதில் இன்னுமின்னும் அவர் கீழிறங்கி சென்றிருந்தார் அவரின் பேச்சாலும் செயலாலும்.

"எங்க வந்து நின்னு இருக்கு?" என்றபடி வாசு வர,

"வாசு, நீயும் சேர்ந்து தான இவங்களுக்கு ஒத்து ஊதின, பாரு இப்போ‌. அதுசரி நீயும் என் பேச்ச கேட்காம எவளையோ கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்ட போல?" என்று நக்கலாக கேட்டார் புவனா.

"மைண்ட் யூவர் வேர்ட் மிஸ். புவனா, எவளோ இல்லை மை லவ். எனக்கு மரியாத கொடுக்கலேனாலும் பரவாயில்லை அவங்களுக்கு நிச்சயம் இருக்கனும்" என்றவனையே பார்த்திருந்தான் ராகவ்.

அவன் மனதில் அதை கேட்டபின் ஆயிரம் கேள்விகள் சூழ்ந்திருந்தது. ஆனால் புவனாவோ முற்றிலும் அதிர்ந்திருந்தார்.

'மிஸ். புவனா' என்று ராகவ் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவருக்கு ரணமாய் இருந்தாலும் இப்போது வாசுவும் சேர்ந்து அதையோ சொல்ல, உள்ளுக்குள் ஏதோ உடையும் வலி.

ஒரு தாய்க்கு தன் மக்கள் வாய் நிறைய ஆசையாய் 'அம்மா' என்றழைக்கும் போது நெஞ்சில் பிறக்கும் உணர்வுகள் வார்த்தையால் சொல்லிவிட முடியாது.

அதேதான் இப்போதும், அவர் ஈன்ற இரு மக்களும் தன்னை அந்நியமாய் கருதி, தள்ளி வைத்து பார்ப்பது நெஞ்சில் சொல்லில் வடிக்கா ஒரு உணர்வை தந்தது.

அவர்கள் இருவரும் வளர்ந்து நிற்கும் வரை எதுவும் பெரியதாய் புவனா கண்டுக்கொண்டது போல் தெரியவில்லை. ஆனால் இப்போது அவருக்கும் முதுமை ஆரம்பித்திருக்க அவர் இழந்த தாய்மையில் சாரல் இப்போது லேசாய் தூர ஆரம்பிக்கவும் மகன்களின் உதாசீனம் வலித்தது.

வலியை புடம் போட்டு காட்டிவிட்டால் அவர் புவனாவே இல்லையே!

"என்கிட்டவே அதிகாரமா பேச ஆரம்பிச்சுட்டியா வாசு நீ? பார்க்கறேன் பெத்தவள ஒதுக்கி அப்படி என்ன சாதிக்கபோறீங்கனு.. நான் சொன்னத கேட்டிருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்குமா ராகவ்?" என்று கத்தியவர் பேச்சு அம்மூவருக்கும் சகிக்கவில்லை.

"இப்போ நீ இங்க வந்து கத்தறனால எதுவும் சரியாகப் போறதில்ல இசை" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பேசினார் முரளி.

"என்ன ஆகப்போறதில்லை. என்னைய மீறி கல்யாணம் பண்ணிட்டாங்க, சரி. ஆனா ராகவ் கூட வாழாம எப்படி அவ போனா? அவ போனா இவன் ஏன் இப்படி உங்காந்திருக்கான்? ரெஜிஸ்டர் இன்னும் பண்ணாத கல்யாணம் தானே, அவள அப்படியே எங்கையாவது போக சொல்லிட்டு, வேற பொண்ண பார்க்க வேண்டியது தான்" என்று சொன்ன புவனாவின் பேச்சில் அத்தனை ஏளனம்.

தன்னை மீறி நடந்த ஒரு நிகழ்வு, அறுந்துவிட்ட நினைப்பு மட்டும் அவருக்கு. ஆனால் மகனின் நிலையை பார்க்க தவறியிருந்தார்.

"டேட், முதல்ல அவங்கள கிளம்பச் சொல்லுங்க.. அவங்கள மாதிரி யாரும் இங்க இருக்கப் போறதில்லைன்றதும் தெரிவா சொல்லிடுங்க"

"வாசு என்ன நான் இப்போ தப்பா சொல்லிட்டேன். ராகவ்வ பாரு, என் பையன நான் இப்படி பார்த்ததுக் கூட இல்லை. இந்த நிலமையில உட்கார வெச்சுட்டு போயிருக்கா அவ. இனி அவ தேவையா என்ன?"

"திரும்பத் திரும்ப அதையே சொல்லாத இசை. ஒரு சின்ன பிரிவு ஒன்னு அவங்க வாழ்க்கைய மொத்தமும் கெடுத்துடாது"

"சின்ன பிரிவு.. அப்படிதான் எல்லாம் ஆரம்பிக்கும். நானும் அப்படி நினைச்சு நினைச்சே வருஷத்த ஓட்டினவதான். வந்தீங்களா நீங்க, இல்லையே. அதே நிலம என் பையனுக்கு வேண்டாம். என்ன பெரிசா ரெண்டு வார்த்தை சேர்த்து சொல்லிட்டா ஒடனே விட்டுட்டு போயிடுவாளா? அப்படியே அவ அம்மா மாதிரி"

அதுவரை மௌனமாய் இருந்த ராகவோ, "உங்க தொழில இங்க வந்து காட்டாதீங்க மிஸ்‌. புவனா. என் வைஃப் படிக்க தான் போறா, என்விட்டு இல்லை. தேவையில்லாம ராகினி'ம்மா பத்தி பேசாதீங்க. என்ன தெரியும் உங்களுக்கு அவங்கள பத்தி? மகன்கிட்ட பேசலன்னு அவங்க புருஷன்கிட்ட கூட பேசாம இருந்தவங்க அவங்க, ஆனா நீங்க? சொல்ல விரும்பல, உங்களுக்கே உங்க லட்சணம் தெரியும்" என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

"உங்க சம்மதம் இல்லாம எனக்கு கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு இருந்தவன் தான் நான். ஏன் டேட் கூட உங்க சம்மதம் வேணும் தான் அமைதியாக இருந்தார். ஆனா நீங்க எல்லாத்தையும் தப்பு தப்பா தான் பார்ப்பீங்க இல்ல. எத்தனை நாள் மாம், மாம்னு பின்னாடி வந்து இருக்கேன். திரும்பி பாத்தீங்களா? இப்பவும் எனக்கு வலிக்குது என்னைவிட ராகவ் மேல உங்களுக்கு அப்படி என்ன பாசம்னு.

நான் உங்களோட இருந்த ஒரு நாளாவது என் கிட்ட பேசி இருக்கீங்களா? 'உங்க அப்பா என்ன சொன்னார் என்ன பத்தி?' இத தாண்டி சாப்டியா, தூங்கினியான்னு கேட்டீங்களா? கேட்டாலும் அதுல வெறும் கடமை தான் இருக்கும், அன்பு இருக்காது.

எனக்கு என்ன பிடிக்கும், நான் என்ன செய்வேன் எதையும் பார்க்காமல் உங்க இஷ்டத்துக்கு என்ன ஆட்டி வச்சீங்க. அந்த கட்டுல இருந்து நான் வெளிய வந்தா என்னையும் இப்போ உங்க எதிரி மாதிரி பாக்குறீங்க. நல்லா இருக்கு மாம்.

எல்லாம் உங்களுக்கு பிடிச்சது தான் என்னை பண்ண வச்சீங்க பட் அப்படியும் உங்களுக்கு நான் பண்ண எதுவும் பிடிக்கல. ம்ஹும் இப்ப மட்டும் என்னை பிடிக்குதா என்ன?" என்று அவன் குரல் கம்மி வந்தது.

"கண்ணா"

"இருங்க டேட், என் வாழ்க்கையில எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதுல எங்க அப்பாவோட பங்கு தான் மிகையா இருக்கும். தேடுனா கூட ஒரு இம்மி அளவு கூட நீங்க இருக்க மாட்டீங்க. நான் மட்டும் உங்களை எல்லாத்துக்கும் கேட்கனும், ரைட்? ம்ம்ம்.. போதும் நினைக்கிறேன் என்ன பெத்தவங்களா உங்களுக்கு எப்பவும் என்கிட்ட மரியாதை இருக்கும். அதை தாண்டி வேற எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க" என்றவன் சென்றுவிட, முற்றிலும் உடைந்து போனார் புவனா திருமழிசை.

அங்கு நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார் முரளி. அவர் மனதோ 'இதையெல்லாம் இவள் கேட்க வேண்டுமா' என்று கூப்பாடு போட்டது. ஆனால் மகன்கள் இன்று வரை அனுபவித்ததை வாய்விட்டு சொல்லிவிட மூளை வேறு செய்தி சொன்னது.

அவரின் புவனாவின் மனநிலை இப்போது அவருக்கு புரிந்தது. எப்போது மருத்துவமனையில் இருந்து தன்னை அவள் பார்த்தாள் என்ற செய்தி கிடைத்ததோ அப்போது அவர் மனது இலக ஆரம்பித்திருக்கிறது என்று உணர்ந்தார் முரளி.

யாராக இருந்தாலும் சரி, புவனாவை அவரால் விட்டுக்கொடுக்க முடியாது. ஏன் ராகவ், வாசுவாக இருந்தாலும். அதை அன்றே சுந்தரேஸ்வரரிடம் தெளிவாக சொல்லியும் விட்டார்.

வயதானாலும், அனுபவம் இருந்தாலும் அவர் புவனா என்றுமே அவருக்கு கைகுள் அடங்கும் சிறு பெண் தான். அதை சரியாக தான் தான் வழிநடத்தவில்லை என்ற எண்ணம் இன்னமும் அவருக்கு இருக்கிறது தான்.

இப்போது கூட அவரின் புரியாத பேச்சு அவரை கோபம் கொள்ள வைத்ததே தவிர, அவரைத் துளி விலக்கி வைக்கும் எண்ணமில்லை. இனி எண்ணவும் மாட்டார்.

அன்று அம்ருதா சொன்ன செய்தியும் இதுவே. "அவங்க உங்க வைஃப், தேவா அம்மா. எப்பவும் அவங்களுக்கான மரியாதை, இன்பாட்டன்ஸ் என்கிட்ட இருக்கும். பட் அவங்க பேசினா, பொறுத்துக்க முடியலேனா நான் பேச தான் செய்வேன் அங்கிள்" என்று சொல்லியிருந்தாள்.

காவ்யா, அவர் பார்த்து வளர்ந்த பெண். தன்னிடம் உள்ள கோபத்தைக் கூட சொல்லிக்காட்டிவிட்டவள் நிச்சயம் அப்படி வெளிப்படையாகவே தான் இருப்பால் என்று தெரியும். மருமகள் வழியில் புவனாவின் பிரச்சனை இல்லை.

ஆனால் மகன்களுக்கு அவர் செய்ததை நினைத்தால் தான், நெஞ்சில் வலி நிறைந்தது.

போகட்டும். இத்தனை பார்த்தாயிற்று என்று நினைத்தவர் மனதை சற்று திடப்படுத்தி, "இசை" என்றார்.

பார்வை மட்டும் பார்த்தவர் வேறேதும் இல்லை. அதுவே முரளிக்குப் போதுமாக இருந்தது.

"பசங்க வாழ்க்கையில நீ குறுக்க வந்தா நான் நிச்சயம் கேட்பேன்னு அன்னிக்கே சொன்னேன். ஞாபகம் இருக்கா? ராகவ் வாழ்க்கை அவன் பொறுப்பு. நீ தேவையில்லாம அவங்களப் பிரிக்க பார்க்காத. அதேதான் வாசுவுக்கும். ஒரு அப்பாவா என் பசங்களோட லவ்வ நான் ஏத்துக்கிட்டாலும், உன் சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண போறது குற்றவுணர்வு இருக்கத் தான் செய்யுது‌. ஆனா நீ சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாம இருக்கறப்போ நான் என்ன பண்ண?

ராகவ்வ மட்டும் தான் நீ பார்த்தேன்னு நான் சொல்ல மாட்டேன். ரெண்டு பேரும் உனக்கு முக்கியம் தான் ஆனா வாசு பேசினத கேட்ட தான? அவங்க மனசுல உன்மேல வைச்சிருந்த சின்ன பாசத்தையும் அடியோட கெடுத்துட்ட. அவங்க வாழ்க்கையில நடக்கறதுக்கு எல்லாதுக்கும் உனக்கும் பங்கு இருந்துச்சு இப்போ இல்லை, கொஞ்ச நாள் முன்னாடி வரை. அதையும் உன் பேச்சுனாலையே கெடுத்துட்ட. இனியும் அத தொடற வேண்டாம். வளர்ந்த பசங்க, அவங்க வாழ்க்கையாவது நல்லபடியா இருக்கட்டும். குறுக்க நிக்காத" என்று இத்தனை வருடம் அவர் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டு சென்றார் முரளி.

என்ன பதில் பேச வேண்டும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் தெரியாது சமைந்து நின்றுவிட்டார் புவனா.

சிங்கமாய் இருந்த பெண், 'தான்' என்ற எண்ணத்தால் சீண்டக் கூட ஆளில்லாது ஆனாது தான் விதி!



எப்போதும் இருக்கும் காலை நேர பரபரப்பு இல்லாத அமைதியாகவே இருந்தது அம்ருதாவின் வீடு‌.

ஹாலில் அமர்ந்து தினசரியை வாசித்துக் கொண்டிருந்த சுந்தரேஸ்வரரின் அலைப்பேசியில் அழைப்பு சப்தமாக அவ்வீடு முழுவதிலும் எதிரொலித்தது.

"அப்பா, முரளி தான் கூப்பிடுறார்" என்று அருகே இருந்த சாரங்கனிடம் சொன்னார் சுந்தரேஸ்வரர்.

"என்னனு கேளு ஈஸ்வரா. நல்ல விஷயமா இருந்தா உடனே சரின்னு சொல்லிட்டு, ஆரம்பிச்சுடலாம்" என்றவருக்கு புரிந்தது என்னும் விதமாய் தலையசைத்து அழைப்பை ஏற்றார்.

"சொல்லுங்க முரளி ஸார்"

"ஹான் குட் மார்னிங் மிஸ்டர். சுந்தரேஸ்வரர். ப்ரீ தானே நீங்க? பேசலாமா?"

"சொல்லுங்க ஸார், ப்ரீ தான்"

"இன்னிக்கு ஈவ்னிங் நாங்க உங்க வீட்டுக்கு வரோம் மிஸ்டர். ஈஸ்வர். வாசு - அம்ருதா கல்யாண விஷயத்தை பத்தி மேற்கொண்டு பேசிடலாம், ரொம்ப நாள் தள்ளிப்போயிட்டே இருக்கு" என்றார் சுற்றி வளைக்காமல்.

எதிர்பார்த்த ஒன்று என்றாலும் சட்டென்று மறுமொழி சொல்லிவிட முடியவில்லை. மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அவரின் 'அம்ரூடா' கண்முன்னே வந்து கண் சிமிட்டி சிரித்தாள்.

"சரி ஸார், வாங்க. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்" என்று சொன்னவர் குரல் கரகரத்தது.


***

உடன்கட்டை ஏறுதல் - இங்கு நான் அன்பின் அடிப்படையில் கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறுதல் பற்றி சொல்லியுள்ளேன். அதற்காகன குறிப்புகள் நம் தமிழ் இலக்கியத்தில் உள்ளதாம்.

ஆனால் உடன்கட்டை ஏறுதல் அதன்பின் ஒரு திணிக்கப்பட்ட, தன்னை இச்சமூகத்தில் இருந்து காத்துக்கொள்ள, கௌவரத்திற்காக பெண்கள் அதனை ஏற்றனர் என்பது தான் உண்மை.



கணவன் இறந்த பின்பு மனைவியும் இணைந்து கணவனுடன் சிதையில் ஏறி, அத்தீயில் தன்னைத் தானே அழித்துக்கொள்வது சதி முறைமை எனப்பட்டது. இந்த சதி முறைமையானது இந்துமத புராணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. தக்ஷனின் மகளான சதி தேவி தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. மேலும் சமஸ்கிருத சொல்லான सती (sati) எனும் சொல்லின் பொருள் நல்ல மனைவி என்பதாகும். எனவே நல்லதொரு மனைவியின் அடையாளமாக இந்த உடன்கட்டை ஏறும் வழமை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் இலக்கிய குறிப்புகளின் பிரகாரம், பாண்டியன் மாதேவியால் பாடப்பட்ட புறநானூறு பாடல் ஒன்றில் அரசனுடன், அரசியும் உடன்கட்டை ஏறிய குறிப்பு உள்ளது. அதன் படி பூதப்பாண்டியன் தேவி நாட்டின் அமைச்சர்கள் அனைவரினதும் ஆலோசனையையும் தவிர்த்து அரசனுடன் உடன்கட்டை ஏறியுள்ளாள். இங்ஙனமே மஹாபாரதத்தில் மஹாராஜா பாண்டுவின் இறப்புக்கு பின்னர், இளைய அரசி மாத்ரி உடன்கட்டை ஏறினாள், ஆனால் முதல் அரசி குந்தி அவ்வாறு செய்யவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய அரசரான ராஜராஜரின் தாயான வானவன்மாதேவியும், ராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவியும் தங்கள் கணவர்களின் இறப்பினால் முழுமனதுடன் உடன்கட்டை ஏறினார்கள். இதன் மூலம் ஆரம்பகாலத்தில் சதி முறைமையானது முழுக்க முழுக்க பெண்களின் தன்னிச்சையான முடிவாகவே அமைந்தது தெளிவுற தெரிகிறது. பெண்கள் தம் கணவனின் மீது கொண்ட அதீத அன்பின் விளைவால் இத்தகைய பழக்கத்தை கைக்கொண்டனர். எனினும் பின்பு இம்முறைமையானது கௌரவத்தின் சின்னமாக மாற்றப்பட்டு, கணவனை இழக்கும் அத்தனை பெண்கள் மீதும் திணிக்கப்பட்டது.

Source : Roar Media

கணவன் இறந்துவிட்டால், குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை குடும்ப "கர்த்தா " பொறுப்பை ஏற்கின்றான். அவளுக்கு, தனது மகன் குழந்தையாக இருப்பின், அவளே உடனடியாக ( உடன்) கட்டை ஏற்கின்றாள் (ஏற்கின்றாள்). அவளின் உறவுநிலையில், பெற்றோர்கள் இருப்பின் அவளின் தந்தை கர்தாவாகின்றார். தந்தை இல்லாநிலையில் , மூத்த சகோதரன் கர்த்தா ஆகின்றார். இவர்கள் இல்லாநிலையில் , அந்த பெண்ணே, "கர்தா" பொறுப்பை, உடன் (உடனடியாக) கட்டை ( உடல்) ஏறுகின்றாள் ( ஏற்கின்றாள்).

அன்னியர்கள், குறிப்பாக முகலாயர்கள், பெண்ணின் கணவர்களை கொன்று, அவளின் கற்பை சூரையாட முனையும் போது அவள் தனது கற்பைக்காக்க , இந்த உடல் அன்னியர்களிக்கு போவதைவிட அக்கினிக்கு போவதே மேல் என அக்கினியில் விழுந்து உயிரைவிட்டனர்.

குறிப்பாக, சித்தூர் ராணி பத்மினி (ஹிந்தி திரைப்படம் பத்மாவதில் காட்டப்படும் கடைசி காட்சி) ஒரு உதாரணம். இதை அன்னியர்கள், குடும்ப கலாச்
சார பெண்களை அழிக்கவும், இந்துமத்த்தில், மூடநம்பிக்கை இருப்பதுபோல் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். இதை, இந்துக்களையும் நம்பவைத்து, மூடநம்பிக்கையாக சிதையில் விழ கட்டாயப்படுத்தினர். இதைத்தான், இராஜாராம் மோகன்ராய் எதிர்த்தார்.

Source : Google
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 38

புவனாவின் இல்லம்

வீடு முழுவதிலும் பூக்களின் மணம் அள்ளித் தூக்க, நுழைவு வாயிலில் மாயிலை தோரணம், வாழை மரம் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது.

வாசலில் கார்களின் எண்ணிக்கை போக்குவரத்தை தடை செய்யும் அளவிற்கு அணிவகுத்து நின்றிருந்தது.

கேட்டில் இருந்து உள்ளே முன்புற வாசல் வரை க்ரீன் கார்பெட் விரிக்கப்பட்டிருக்க, தோட்டத்தில் இருந்த குறுஞ்செடி முதல் மரங்கள் வரை அனைத்திலும் வண்ண விளக்கொளி கண்ணைப் பறித்தது.

கலவையான மனிதர்களின் சப்தங்களுக்கு இடையே மங்கல வாத்தியங்களின் முழக்கம் காதை இடிக்க, புகைப்பட கருவியின் 'பளிச் பளிச்' ஒளி கண்களைக் கூச, பின்புறம் ஏற்பாடு செய்திருந்த உணவு வகைகளின் மணம் வேறு நாசியை தீண்ட என்று முழுக்க கலைக் கட்டியிருந்தது அவரின் இல்லம்.

சற்று நேரத்திற்கு முன்பு தான் வாசு - அம்ருதாவின் நிச்சய தாம்பூலம் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்று முடிந்திருந்தது.

அவர்களின் இத்தனை நாள் காத்திருப்பு கைக்கூடிவிட, அம்ருதாவைக் காட்டிலும் வாசுவே மிகவும் மகிழ்ந்திருந்தான்.

அவனின் நான்கரை வருட காதல், இன்று அடுத்த படியில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

அவளுக்காவது இரண்டு மாதம் என்று சொன்னாலும் அவனின் காத்திருப்பு, அவன் காதல் கடந்து வந்த பாதை என்று எல்லாவற்றையும் தாண்டி இப்போது முக்கால் கிணறு தாண்டி, அம்ருதாவை பாதி அளவிற்கு தனக்கு சொந்தமும் ஆக்கியிருந்தான்.

புவனாவின் பிடிவாத வேண்டுகோளுக்கு இணங்க, தான் வளர்ந்த இல்லத்தில் அவனுடைய நிச்சயத்தை நடத்த சம்மதித்திருந்தான், வாசுதேவ கிருஷ்ணன்.

அன்னையாய் அவனை ஈன்றவரை முற்றும் ஒதுக்காது அவனால் முடிந்தளவு அவரை காயப்படுத்தாது பார்த்துக்கொண்டதின் விளைவுகளில் அதுவும் ஒன்று.

சுந்தரேஸ்வரரின் குடும்பத்தாருக்கு இது ஒருவித நிம்மதியை கொடுத்தது என்றால் அது மிகாது. காரணம், அனைவரும் வேண்டும் என்று அனுசரித்து சொல்லும் குடும்பத்தார் எப்படி தங்கள் மாப்பிள்ளையின் அம்மாவை மட்டும் விளக்கி வைப்பர்?

ஒட்ட வைத்த சிரிப்புடன் ராகவும் காவ்யாவும் வலம் வர, அதை உள்ளூர வலியோடு பார்த்திருந்தார் முரளியும் சொக்கநாதனும்.

என்னதான் பிள்ளைகள் அவர்கள் வழியைப் பார்த்துக்கொள்கிறேன் என்று பட்டென்று சொன்னாலும், பெத்த மனம் தவித்து, பாடுபடும் தானே.

இடையே அவர்களை சேர்த்து வைக்கவும் அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட ரிசப்ஷன் கூட ராகவின் கலாட்டாவால் நிறுத்தப்பட்டது.

அதை முரளி ரசிக்கவும் இல்லை, சொக்கநாதனும் அதன் பின் அவனிடம் 'மாப்பிள்ளை' என்று முகம் கொடுத்து பேசவில்லை.

இதோ இப்போது வாசுவின் நிச்சயத்திற்கு முன்பு அனைவருக்கும் ராகவின் திருமணத்தை அறிவித்து ராகவை கோபத்தில் ஆழ்த்தியிருந்தார், முரளி கிருஷ்ணன்.

"இது அவன் ஃபங்ஷன், இதில எதுக்கு என்னைய இழுக்கறீங்க நீங்க?" என்று முரளியிடம் சீரியவனை அரவிந்த் தான் சமாதானம் செய்திருந்தான்.

ஆனால் அம்ருதா வீட்டு பெரியவர்கள் ஒருவர் முகத்திலும் ஜீவனே இல்லை.

காரணம் அத்தனை எதிர்பார்ப்போடு அவர்கள் குறித்த தேதியை அம்ருதா ஐந்து மாதங்களுக்கு பின்னர் தான் நல்ல நாள் பார்த்து, திருமண தேதியை குறிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வாசு உட்பட அனைவருக்கும் கோபமும் ஆற்றாமையும்.

அதன் காரணத்தை உணர்ந்த ராகவோ, ஒரு இகழ்ச்சியான சிரிப்புடன் கடந்திருந்தான்.

வாசு, "எதுக்குடீ இப்போ இவ்வளவு தள்ளி டேட் ஃபிக்ஸ் பண்ண சொன்ன?"

"லவ் பண்ணத் தான் தேவா" என்றால் அலட்டாது.

"கொமட்டுலையே ஒன்னு விட்டேனா பார், அத கல்யாணம் பண்ணிட்டு கூட பண்ணலாம்" என்றான் கடுப்பாய்.

அதற்கு மௌனமாய் அவள் சிரித்து நிற்க, "வேதாகாகவா தங்கச்சி!" என்றான் அரவிந்த் அவளைப் பார்த்தபடி.

மறுப்பாய் தலையசைத்தவள், ராகவைக் கைக்காட்டினால்.

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, ராகவை தவிர்த்து.

"தப்பு அம்ருதா. எங்களுக்காக எதுக்கு உங்க கல்யாணத்த இவ்வளவு தள்ளி வைக்கனும்? அவ வருவா, என்கிட்ட வராம எங்க போகப் போறா"

"அதுக்கு எதுக்கு ப்ரோ இப்போ இருந்தே தள்ளியிருக்கீங்க. சரி, உங்க பர்சனல் வேண்டாம். ஆனா எங்க கல்யாணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் சிரிச்ச முகத்தோட, உங்க பழய லவ்வோட இருக்கனும். அதான் இப்படி பண்ணேன். இந்த டைம் ரெண்டு பேரும் யூஸ் பண்ணிக்கோங்க, மூனு வருஷ பிரிவு எல்லாம் ரொம்ப அதிகம். சொல்லிட்டேன்" என்றபடி வாசுவுடன் சாப்பிட சென்றுவிட்டாள் அவள்.

"கொஞ்சமா சாப்பிடு குண்டு பல்ப்! கல்யாணத்துக்கு வேற அஞ்சு மாசம் இருக்கு. அதுக்குள்ள குண்டு போய் கண்டெய்னர் ஆகிடப் போகுது" என்று ஆரூரன் அவள் காதைக் கடிக்க,

"நான் கண்டெய்னர் ஆனாலும் என் தேவாவுக்கு என்னைய பிடிக்கும். போடா.. போடா.." என்று எளிதாக பதில் சொன்னவளைப் பார்த்து அத்தனை மகிழ்ந்து போனான் அவன்.



"மாமா" என்றழைத்தபடி முரளியிடம் வந்தாள் காவ்யா.

அங்கு அவரோ ராகவ், வாசு, சுந்தரேஸ்வரர், சாரங்கன், சரவணன் உடன் இருக்க அவளை வரவேற்பாய் பார்த்து தலையசைத்தார்.

"சாப்பிட்டையா காவ்ஸ்?" என்று ராகவைப் பார்த்தபடி காவ்யாவிடம் வாசு கேட்க, மறுப்பாய் தலையசைத்தவள் அவள்.

"ஏன்?" என்றான் கண்கள் இடுக்க.

"ஏன்'ம்மா? எடம் இல்லையா?" என்று சுந்தரேஸ்வரரும் கேட்க

"பசியில்லை அங்கிள்" என்றாள் சன்னப் புன்னகையுடன்.

அங்கிருக்கும் அனைவருக்கும் அவள் மறுக்கும் காரணம் தெரிந்தாலும் பொதுவாய் பேச முடியவில்லை.

கணத்த மௌனம் மட்டும் அங்கிருங்க முயன்று பேச முயற்சித்தால் அவள்

"மாமா நான்.." அதற்கு மேல் சுத்தமாய் முடியவில்லை.

ராகவின் இருப்பு அவளை தடுமாற செய்திருந்தது. அதை அவனும் உணர்ந்து கொண்டே தான் இருந்தான்.

சண்டையும் இல்லை மனக் கஷ்டமும் இல்லை. அன்பு என்ற ஒன்றே அவர்கள் இருவரையும் தள்ளி நிறுத்தியிருந்தது. இதில் அந்த வீண் பிடிவாதம் அதை இன்னும் நெருக்கி வைத்திருந்தது.

கண்ணை மூடி ஒரு வினாடி ராகவன் முகத்தை கொண்டு வந்தவள் ஒரு நீண்ட மூச்சை எடுத்து விட்டு பேச ஆரம்பித்தார்

"என்ட்ரன்ஸ் ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு மாமா. எப்படியும் செலக்ட் ஆகிடுவேன். சோ, நான் இப்பவே ஜெர்மன் போனா தான் அங்க எனக்கு செட் ஆகும். அபூர்வன் கூட தான் ஸ்டே பண்ண போறேன் மாமா" என்றாள் காவ்யா.

சாரங்கன், "பூர்வா சொன்னா’ம்மா அங்க என் சிநேகிதேன் ஒருத்தன் இருக்கான். பூர்வாக்குக் கூட நல்லா தெரியும். ஏதாவது அவசரம்னா அவன கேளு ஏன்னா இன்னும் ஒரு வருஷம் தானே இருக்கு பூர்வா படிப்பு முடிய. இப்பவே அவன் இருக்கும் போதே எல்லாம் பழகி வச்சுட்டேனா சிரமம் இருக்காது பாரு உனக்கு."

"சரிங்க தாத்தா" என்றவள் முரளியைப் பார்த்து நிற்க,

"பத்தரம் காவ்யா. ஏதாவது இருந்தா உடனே கால் பண்ணு நானும் முடிஞ்சா வந்து பார்க்கிறேன். கவனம்" என்றார் அவர்.

அதையெல்லாம் கேட்டுக்கொண்டு தான் ராகவும் நின்றிருந்தான். ஒரு வார்த்தை எதிர் மொழியவோ இல்லை அவளை பார்க்கவோ இல்லை அவன்.

அவன் செய்கையில் கடுப்பானது என்னவோ வாசுவும் சரவணனும் தான்.

"ஓகே மாமா, கிளம்பும்போது வீட்டுக்கு வந்துட்டு போறேன். வரேன் மாமா, வரேன் சார், பை தாத்தா" என்று கிளம்பியவளின் முகமே சொல்லியது அவளின் ஏக்கத்தை.

கன்னச் சதையைக் கடித்து அவள் தன் உணர்வுகளை அடக்குவது புரிந்தது வாசுவிற்கு.

'தேவையா இதுவெல்லாம்' என்று பார்வையால் அவளை சுட்டவன், "விட்டுட்டு வரேன் பா" என்றவன் கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு நகர்ந்தான்.

"முடிவே பண்ணிட்ட ரைட்? அவனப் பத்தி தெரிஞ்சே நீயும் இப்படி பண்ணுறியே காவ்ஸ்? நீ போனா ஒடிஞ்சிடுவான்டீ அவன்." என்றான் அவளை மாற்றும் விதமாக.

"ம்ம்.. ஒடையத்தான் செய்வார். ஆனா அவர் பேச்சுலையும் சரி, அவர்கிட்டையும் ஒரு மாற்றம் வந்து தான் ஆகனும் வாசு'ண்ணா. இல்லேனா நாங்க வாழப்போற இந்த இருபதோ முப்பதோ வருஷ வாழ்க்க, எனக்கு காதலா இருக்காது, நரகமாயிடும்" என்றாள் அவன் கண்களைப் பார்த்தபடி.

அதற்குள் அவ்விடத்தில் ஒரு சிறு சலசலப்பு.

'எக்ஸ் மினிஸ்டர். தில்லை நாதன் வரார்' என்ற செய்தி வாசுவின் செவியை எட்டிய நொடி, அவன் கண்முன் வந்தது என்னவோ அபூர்வனே.

இந்த ஐந்து வருடத்தை அவன் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறேன் என்று அவன் வாயால் கேட்ட பின்னர், இன்னமும் அவனுக்கான சிறு சிறு கவுன்சலிங் போன்ற பேச்சு அவனை பாதிக்காது கொடுக்கிறான் வாசு.

ஆனால் அதுவெல்லாம் அவனுக்கு புரிந்தாலும் இன்னும் முழு முதிர்ச்சியடையாத பருவத்தில் தானே அபூர்வனும் இருக்கிறான். எங்கே அவனுக்கு இது மேலும் வேதனையை தந்துவிடுமோ என்று அவனிடம் விரைந்தான், வாசுதேவ கிருஷ்ணன் ‌

அழையா விருந்தாளியாக வந்திருந்த தில்லையை கடுப்புடன் வரவேற்றார் புவனா. என்னதான் இருந்தாலும் காரியம் ஆகும் வரை அடங்கித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.

ஆனால் அதுவெல்லாம் சுந்தரேஸ்வரரிடம் இல்லை. வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்.

இதில் தேவையில்லா சொருகல் போல் தில்லையின் மகள் அபிநயா வேறு!

"அப்புறம் புவனா ம்மா, பிள்ளை நிச்சயத்துக்கு என்ன கூப்பிட மறந்துட்டீங்க போல? ஆனாலும் நம்ம பழக்கத்துக்கு நீங்க கூப்பிடுவீங்கனு நான் எதிர்பார்க்காம வந்துட்டேன் பாருங்க" என்று ஒரு கேவலச் சிரிப்பை உதிர்த்தவர் வேண்டும் என்றே செய்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தரேஸ்வரர் கிளம்பியே விட்டார்.

"சரவணா அப்பாவ கூப்பிடு நாம கிளம்பலாம். அம்ரூ, பசங்க எங்க?" என்று எழுந்துகொண்டு அவர் சப்தமாக கேட்க,

"மிஸ்டர். ஈஸ்வர்" என்று வந்து நின்றார் முரளி.

அவரால் என்ன செய்ய முடியும். புவனாவின் வீட்டில் விஷேசம் வைக்கலாம் என்பதை அவர்கள் ஒற்றுக்கொண்டே பெரியது என்ற போது புவனாவின் விருந்தினனாக வந்திருக்கும் தில்லையை சுந்தரேஸ்வரரால் என்ன சொல்ல முடியும்.

விரைந்து விடைபெறவே அவர் பார்த்து நிற்க, "முரளி ஸார், விஷேசம் நல்லபடியா முடிஞ்சது, அது போதும். மேற்கொண்டு இனி கல்யாண வேலை பொறுமையா பார்க்கலாம். இப்போ நாங்க கிளம்பறோம்"

மெல்ல ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு கிளம்பும் சமயத்தில் தான் அபிநயாவின் பார்வை ராகவின் மேல் விழுந்தது. அவனுக்காகத் தானே அவள் இங்கு வந்ததும்!

இன்னும் அவன் அவள் கைவிட்டு போகவில்லை என்ற நினைப்பிலேயே அவள் நின்றிருக்க, அரவிந்திற்கு கோபம் கொழுந்துவிட்டது.

மெல்ல காவ்யாவிடம் விஷயத்தைப் பற்ற வைக்க, நெருப்பு பற்றியது என்னமோ ராகவிடம். அபிநயாவின் பார்வை அவனை ஏதோ செய்ய, அதுவரை இருந்த அவன் கோப முகமூடி கழன்று காவ்யாவை நோக்கி செல்ல உந்தியது.

'பார் உன் நண்பனின் சுயக்கட்டுப்பாட்டை' என்பது போல் பார்த்து வைத்தாள் காவ்யா.

ராகவும் அதற்கு தக்க பேசாது வந்து காவ்யாவின் அருகே நின்றவன் தான். தில்லைநாதன் செல்லும் வரை அவளை விட்டு இம்மியும் நகரவில்லை.

அரவிந்திற்கு அவனின் நடவடிக்கை புரியாது இருந்தாலும், எப்படியும் பிடிவாதத்தை விடுத்து இருவரும் சேர்ந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டான்.

ஆனால், அங்கு யாரும் எதிர்பாராத ஒரு நிகழ் நடந்தது என்றால் அது அபூர்வனுடையது தான்.

வந்தது முதல் அபிநயாவைத் தான் அவன் வைத்த கண் எடுக்காது பார்த்தபடி நின்றிருந்தான்.

அனுவிற்கும் சரி சரவணனிற்கும் சரி இந்த விஷயத்தில் அவர்கள் அபூர்வனிடம் செல்லக் கூட இல்லை. உள்ளூர ஒரு நடுக்கம்.

மகனின் நிலை, அவனின் எண்ணம் என்று எதுவும் அவர்களால் யூகிக்கக் கூட முடியாது அப்படியே நின்றுவிட்டனர்.

ஆரூரன் ஆதவன் இருவரும் கூட அவனை நெருங்க முடியாது தள்ளியே நின்றிருந்தனர்.

இப்படி யாரையும் அநாகரிகமாக பார்க்கும் ரகம் இல்லாத பையன் தான் அவன். ஆனால் இன்று?!

"கண்ணு பூர்வா" என்று அன்று போல் இன்றும் சாரங்கனே அவனிடம் சென்றார்.

அவனின் அசைவற்ற பார்வையைக் கூட உணராது ராகவைத் தான் பார்த்துக்கொண்டே இருந்தாள், அபிநயா.

ஒரு கட்டத்தில் அவள் அபூர்வனையும் பார்க்க தான் செய்தால் ஆனால் அவன் யாரென்று அவளுக்கு நினைவில் இல்லை!

ஒரு சிறுவனின் மனநிலையை, வாழ்க்கையை புரட்டிப்போட்டவளுக்கு என்ன தெரியப் போகிறது அவனின் வாழ்க்கையில் அவள் செய்து வைத்திருந்த காரியத்தால் பின்னால் நடக்க இருக்கும் நிகழ்வுகளைப் பற்றி?

"தாத்தா, நீங்க போங்க. நான் அவங்க கிட்ட பேசீட்டு வரேன்" என்று சொன்னவன் நிற்காது அபிநயாவை நோக்கிச் சென்றான்.

அவனின் செயல் அங்கிருந்தொருக்கு மிரட்சியுடன் கோபத்தையுமே கொடுத்தது.

"ஜீ அவன விடாதீங்க. நாங்க சொன்னாதான் கேட்க மாட்டான். நீங்க சொல்லுங்க" என்று ஆரூரன் வாசுவிடம் சொல்ல,

"இல்ல ஆரூரன். இது அவன் வாழ்க்கையோட முக்கிய கட்டம். லெட் ஹிம் பேஸ் திஸ்." என்று கைகட்டி நின்றுவிட்டான்.

அபிநயாவிடம் அவன் நெருங்க நெருங்க அவள் இவனையே தான் பார்த்திருந்தாள். நினைவில் இருப்பது போல் இருக்கும் அவன் முகம் தான் சட்டென்று யார் என்று தெரியாமல் போனது.

அதற்குள் அவளின் அருகே சென்றவன், "டொன்ட் எவர் டோர் டூ டச் எனி மென்" என்று சொன்னவன் விட்டான் ஒரு அறை!

என்ன முயன்றும் ராகவாலும் அரவிந்தாலும் கைத் தட்டாமல் இருக்க முடியவில்லை.

ராகவின் முகத்தில் வந்த அந்நேர சிரிப்பையும் நிறைவையும் பார்த்தபடியே இருந்தாள் காவ்யா.


அமுதம் தொடரும்...

 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 39

நான்கு மாதங்களுக்கு பின்னர்…

முனிச், ஜெர்மனி.

"பூர்வா, என் ரெட் கலர் ஸ்கார்ப் எங்கனு பார்த்தியா? இன்னிக்குனு பார்த்து எங்க போச்சுனே தெரியலை"

"லான்ரிக்கு போட்டியா அக்கா? அந்த பாஸ்கெட்ல பாரு இல்லேனா டேபிள்ள பாருக்கா" என்று அவன் அறையில் இருந்து கத்தினான் அபூர்வன்.

அம்ருதாவின் நிச்சயத்தில் அபிநயாவைப் பார்த்தவன் நடவடிக்கையில் மாற்றம் என்று ஒன்னும் இல்லை என்றாலும் அவளின் முகம் அவனை சற்று தாக்கியிருந்தது.

அதிலும் அவளின் பார்வை, ஆயிரம் ஊசிகளை அவன் உடலில் துளைத்தாற் போன்று உணர்ந்தவன் முயன்று அதை புறம் ஒதுக்கியிருந்தான்.

அவளை இப்போது ஒரு பொருட்டாகக் கூட அவன் மதிக்கவில்லை தான். இருந்தும் மனதில் தோன்றிய சிறு சஞ்சலத்தையும் மறைக்காது வாசுவிடம் ஜெர்மன் வந்த பின்னர் பகிரவும் செய்தான்.

அந்த சின்னஞ்சிறு சஞ்சலத்தையும் அவன் மனதில் இருந்து மொத்தமாய் களை எடுத்திருந்தாள், காவ்யா.

வாசுவின் அறிவுரையின் படி அபூர்வனுக்கான கவுன்சிலிங் போன்று பேச்சுக்களை வீட்டில் இருக்கும் போது அவள் தினமும் ஏதாவது ஒரு வகையில் சொல்லிக்கொண்டே இருக்க, அது அவனை மாற்றியிருந்தது.

ஆனால் அவளின் வாழ்க்கை தான் மாறாமல் அப்படியே குட்டையாய் தேங்கியிருக்கிறது.

வாசுவின் நிச்சயத்தின் போது கண் நிறைத்துப் பார்த்த ராகவன் தான் அவ்வப்போது அவளின் தூக்கத்தை மொத்தமாய் கொள்ளையிடுகிறான்.

உடல் இழைத்து, பார்வையில் ஜீவன் குறைந்து போன ராகவை பார்க்கப் பார்க்க அவள் உள்ளம் நடுங்கினாலும், அவள் பிடிவாதம் அவனை நோக்கி அவளைச் செல்ல விட்டுவிடவில்லை.

அவனாவது வருவான் என்று பார்த்தால் பார்வையால் அவளை விழுங்கினானே தவிர ஒரு அடி அவளை நோக்கி எடுத்தான் இல்லை.

காதலில் முளைத்த வீம்புக்கு கூட சற்று சக்தி அதிகம் போல. ஈகோவை விட வீம்பிற்கு வலிமையும் சற்று கூட போலத்தான்.

"இருக்குடா. பிரஸ் (Press) பண்ணி வெச்சியா?" என்று சிரித்தபடி அவள் பேச,

"ஆமா அக்கா. பிரேக் பாஸ்ட் பண்ணி வெச்சிருக்கேன் சாப்பிட்டு போங்க. இன்னிக்கு எனக்கு நூன் கிளாஸ் தான், நீங்க கிளம்புங்க"

"ரைட்! அம்மாகிட்ட பேசீட்டு கிளம்புறேன்டா" என்றவள் அவகேடோவுடன் இரு டோஸ்டெட் பிரட்களை உண்டுவிட்டு, சில மணித்துளிகள் ராகினி பேசினாரோ இல்லையோ அவள் தினசரிகளை ஒப்பித்துவிட்டு கல்லூரி நோக்கி புறப்பட்டிருந்தாள்.

ஜெர்மனில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் மகப்பேறு மருத்துவத் துறைக்கான படிப்பில் இணைந்திருந்தாள் அவள்.

அதை அவள் நினைத்திருந்தால் தமிழகத்தில் கூட படித்திருக்கலாம். ஆனால் ஒரு சபதம், வெளிநாட்டுல் தான் படிக்க வேண்டும் என்று.

ராகவ் அவனின் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்பை தமிழகத்தில் தான் படித்தான். 'வெளியே சென்று ஏன் படிக்க வேண்டும்? என் ஊரிலேயே இதற்கெல்லாம் வசதியிருக்கே' என்ற எண்ணம் கொண்டவன் அவன்.‌ ஆனால் காவ்யாவோ வேண்டும் என்றே அவனை‌ உசுப்ப செய்த ஒரு நிகழ்வு, அவர்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்று அப்போது அவள் கணிக்காது தான் போனால்.

கல்லூரியில் படிப்பு முடிந்தவுடன் பகுதி நேர பயிற்சி (ட்ரைனிங்) கூட அவள் எடுத்தபடி இருக்க, நாட்கள் விரைந்து சென்றிருந்தன.

அபூர்வன் உடன் இருப்பதால் பயமில்லாது அவள் இருந்தாலும், அவ்வூர் பாஷை தான் அவளை படுத்தியது. இருந்தும் ஆங்கிலம் கைக்கொடுத்தாலும் அவ்வூர் மொழியை விடாப்படியாக அபூர்வனிடம் கற்றுக்கொள்கிறாள்.

சக இந்திய மாணவர்கள் உடன் இருந்தாலும் ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி என்று பல‌து கலந்து கட்டி கேட்டாலும் இன்பத் தமிழிலை அபூர்வன் தவிர்த்து இன்னும் அவள் ஜெர்மனில் கேட்டப்பாடில்லை.

வந்த நான்கு மாதமும் அவள் பார்க்கும் ஒவ்வொரு இடத்திலும் அவளின் மனதில் நீங்கமற இருக்கும் ராகவனுடன் அந்த ஊர் முழுவதும் சுற்றித் திரிய ஆசை அப்படி நிறைந்திருக்கிறது.

ஆனால் அந்த பாவிப் பையல் தான் அவளை தவிர்க்கிறானே. அவளே அதற்கு காரணம் என்று தெரிந்தும், மனது அடிக்கத் தான் செய்கிறது.

படிப்பு, வகுப்பு, பிராக்டிகல், வேலை என்று இறக்கை இல்லாது அந்த நாள் ஓடி முடிவடைய, அவள் இல்லம் வர இரவு எட்டானது.

அது அபூர்வனுக்காக சுந்தரேஸ்வரர் ஏற்பாடு செய்திருந்த மேன்சன். ஆகையால் எப்போது வேண்டுமானாலும் பயமில்லாது அவள் வந்து கொள்ள ஏதுவாக இருந்தது. தவிர அங்கு அபூர்வனும் அவனுடன் பயிலும் மற்றொரு இந்திய மாணவன் மட்டும் தங்கியிருந்தனர்.

அழுத்து சலித்து அவள் பொத்தென்று சாய்விருக்கையில் அமர, அவளை இடித்தாற் போல் அருகே வந்து அமர்ந்தவனை கண்டு அதிர்ந்து சற்று வாய் திறந்தபடி உறைந்திருந்தாள் பெண்ணவள்.

அவளிடம் "வாயை மூடவும்" என்று சொல்லியவன், கருத்தாய் சிக்கன் பர்கரை புசிக்க, அவளால் இன்னனும் நம்ப முடியாது வியப்பில் ஆழ்ந்திருந்தாள்.

பேச்சு வர மறுத்து, சுற்றம் மறந்த நிலையில் அவள் இருக்க, சற்று அவளை தெளிவிக்கும் நோக்குடன், "அக்கா.. அக்கா.." என்று அவளைப் போட்டு உழுக்கினான், அபூர்வன்.

"விடு சேம்ப், மேடம் பிரீஸ் மேடில் இருக்காங்க. கொஞ்சம் தெளியட்டும்" என்று வாசுவும் ஒரு அறையில் இருந்து வர,

"வாசு'ண்ணா" என்றாள் காவ்யா அத்தனை அன்போடு கண்ணகளில் கசிந்த நீரோடும்.

"பாரு உன்னைய எல்லாம் கூப்பிடுறா என்னைய கண்ணுத் தெரியுதா?" என்று அரவிந்த் சொல்லவும், "ஆர்வி" என்றவாறே அவனை அணைத்திருந்தாள் காவ்யா.

நீண்ட நான்கு மாத பிரிவு! இதுபோல் எல்லாம் அவர்கள் பிரிந்திருந்ததே இல்லை எனலாம். சட்டென்று அவர்களைப் பார்க்கவும் உள்ளூர எழுந்த மகிழ்வான அதிர்ச்சியுடன் சேர்ந்து அவளும் அதிர்ந்து அமர்ந்துவிட்டாள்.

"பாப்புக்குட்டி" என்று அவளின் நெற்றியில் சிறு முத்தமொன்றை வைத்த அரவிந்த், கலங்கிய கண்களைத் துடைத்துகொண்டான்‌.

வாசு, "அது ராகவ் கொடுக்க வேண்டியது அமைச்சரே"

அரவிந்த், "அண்ணேன் தான் முதல்ல. அப்புறம் தான் புருஷேன்"

"அஹான்.. ஆமாவா காவ்யா அக்கா" என்று அபூர்வன் கேட்க, அவளோ திருதிருத்தாள்.

"எனக்கு அப்புறம் தான் அந்த தடிப்பையலுன்னு சொல்லு வேதா" என்றான் அரவிந்த்.

ஆனால் அவளோ, அவர்களை எதிர்பாராது அதிர்ந்தவாறே இன்னுமிருந்தாள்.

"இன்னும் தெளியல போல அத்தான்" என்றான் சிரிப்புடன் அபூர்வன்.

"தெளியலேனே உங்க அக்கா என்னைய இந்த ஜென்மத்துக்கு கட்டிக்க மாட்டாடா.. கையக்கால கட்டி அவன் முன்ன போட்டா தான் இதுக்கு ஒரு வழி பிறக்கும்" என்று வாசு அலற,

"அது என்ன எப்ப பார் வேதா தான் அவன் முன்ன போகனுமா, ஏன் அந்த வெள்ளப் பன்னி வராதாமா?"

அவனைத் தடுக்கும் பொருட்டு "ஆர்வி" என்றாள் காவ்யா, சற்று அழுத்தமான குரலில்.

"எஸ், தட்ஸ் மீ"

"அவர் வெள்ளப் பன்னி இல்லை, வெள்ளெலி" என்றாள் அவள் சிரியாமல். அதை கேட்டு வாசுவிற்கு தான் சிரிப்பு பீறிட்டது.

"அவ்வளவு பெரிய டாக்டரை போய் பன்னி எலின்னு சொல்லிட்டு இருக்கீங்க.. " என்று அபூர்வன் கேட்க,

"அவரு, சுவரு எங்களுக்கு முதல்ல ராகவ். டாக்டரு காண்ட்ராக்டரு எல்லாம் அப்புறம் தான்" - ஆர்வி

"அவன் எங்க நேசமணியாக்கும்" என்றான் வாசுவும் சிரித்துக்கொண்டே.

"ஆனாலும் ப்ரோவ இப்படி டேமேஜ் பண்ணக் கூடாது அத்தான்"

"ஆளே டேமேஜ் ஆகி உட்காந்திருக்கும் போது, இதுவெல்லாம் சாதாரணம்டா தம்புடு" என்று அலட்சியமாக அரவிந்த் சொல்ல, காவ்யா திடுக்கிட்டு விட்டாள்.

மனதில் ஒரு பரபரப்பு உடனே தொற்ற, அவளை அவளாலேயே கட்டுக்குள் வைக்க முடியவில்லை.
வெளிப்படையாய் ராகவ்வை பற்றியும் கேட்க ஒரு முள் மனதிலும் தொண்டையில் சிக்கிக்கொண்டது போல் அவளால் ஒன்றும் முடியாது அமர்ந்திருந்தாள் அவன் நினைப்பில்.

"அவனா இழுத்து வெச்சா நாம என்ன செய்ய முடியும்?" என்ற வாசுவின் அலட்சியப் பேச்சு அவளை இன்னும் சுட்டது.

"ம்ம்ப்ச் விடுடா எல்லாம் நாம சொல்லுறத கேட்டா நடக்கறாங்க? அவங்க பிரச்சனையை அவங்க பார்த்துப்பாங்கனு விட்டா, அவங்களையே அவங்கனால பார்த்துக்க முடியலை" என்று அரவிந்த் ஏகத்திற்கு கோபமாய் பேசினான்.

''ப்ரோ, வை டென்ஷன்? நமக்கு நம்ம உடம்பு தான் முக்கியம்" என்று அபூர்வன் சொல்ல, காவ்யாவிற்கு அதற்கு மேல் முடியவில்லை.

"ஆமா பெரிய உடம்பு..‌ போய் பார் அந்த பரதேசிய, டாக்டர் டாக்டர்னு எட்டு வருசம் படிச்சிட்டு உடம்ப உடம்பாவா வெச்சிருக்கான்? நாலு மாசத்துல உடம்பு மொத்தமும் போயிடுச்சு அது வந்து. இரு.. அந்த பரதேசிக்கு வந்த 'அது' பேரு என்னடா?" என்று வாசுவைக் கேட்க, காவ்யாவிற்கு பயத்தில் மூச்சே நின்றுவிட்டது.

விழி விரித்தபடி அவள் வாசுவைப் பார்க்க, அவனோ அவளை தீர்க்கமாய் பார்த்து நின்றான்.

அவ்விழிகளின் மொழியானது அதன் உயிர்ப்பின் நிலையறிய பரிதவிப்புடன் அசையாது அவனை பார்த்திருக்க, அதை சிதறாமல் படித்தவனின் மனதில் அத்தனை கோபம்.

'ஏன், எதற்கு இத்தனை வேதனை இருவரும் அனுபவிக்க வேண்டும்?' என்றவன் நினைத்தாலும் காவ்யாவின் எதிர்பார்ப்பும் ராகவின் மாற்றமும் அவர்களின் உறவிற்கு மிக முக்கிய தேவையாகவே பட்டது அவனிற்கு.

ஆனால் அண்ணனானவனுக்கும், குட்டி தங்கையாகப் பார்த்து இப்போது அண்ணியாய் வரவிருப்பவளின் மனநிலைக்கும் பார்த்துப் பார்த்து அவனின் மனதும் கூட ஒரு கட்டத்தில் அவளின் காதல் போராட்டத்திற்கு கொடி பிடிக்கத் துவங்கி இதோ இங்கு வரை அவனை வந்து நிற்க வைத்திருக்கிறது.

"என்னாச்சு த்தான் ப்ரோக்கு?" என்று அபூர்வன் தெரிந்து கொண்டே கேட்க, காவ்யாவிற்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது.

"சொல்லு வாசு'ண்ணா, ரகுக்கு என்ன?" என்று கேட்டவள் குரலில் கலக்கம் டன் கணக்கில் இருந்தது.

"சொல்லி என்ன ஆகுப்போகுது வேதா? உடனே 'என் ராசான்னு' போய் அவன ஹக் பண்ணிட்டு அவன கவனிக்கப் போறியா?" என்று வேண்டும் என்றே அவளை வெறியேற்றக் கூறினான், அரவிந்த்.

"வாய மூடிட்டு ஆர்வி! ரகுவுக்கு உடம்பு முடியலைன்னு என்கிட்ட நீங்க சொல்லாததுக்கே உங்க மேல கேஸ் போடனும். மூடிட்டு இப்போ என்னாச்சுனு சொல்லுங்க?" என்று ஆத்திரத்தில் அவள் கத்த, வாசு மிக நிதானமாக சாய்விருக்கையில் அமர்ந்துபடி ஹாட் சாக்லேட் பருகினான், காவ்யாவை கவனியாது.

"வாசு'ண்ணா" என்று அதிருப்தி நிறைந்த குரலில் காவ்யா அழைக்க,

"உன்ன பார்க்க தான் வந்தோம் காவ்ஸ்.. அவன இழுக்காத! அவன விட்டு தூரம் போகனும்னு தானே இங்க படிக்க வந்த? உங்க வாழ்க்கை சரியாகனும்னு தானே இதுவெல்லாம்! அப்புறம் என்ன? அவனுக்கு இப்போ டிரீட்மெண்ட் டேட் தான் பார்க்கறார் சோ நீ கேஸ் ஃபைல் பண்ண வேண்டிய அவசியமும் இருக்காது." என்றான் வாசு மிக நிதானமாக.

இம்மாதிரியான பேச்சை அவள் ரசிக்கவில்லை என்பது அவள் முகமே காட்டியது.

"விளையாடாத வாசு'ண்ணா. அவருக்கு என்ன? அத மட்டும் சொல்லு.. பயமா இருக்கு ப்ளீஸ்.. ரகு.. ரகு இப்.. இப்போ.. " என்றவள் பேச்சு திக்கி அழுகையில் முடிக்க முடியாது போனது.

"ம்ம்ப்ச் என்ன வேதா? அதான் அவன விட்டு தள்ளியிருக்கேல பின்ன எதுக்கு இப்போ அவனப் பத்தி?"

"உன் ரகுவ பத்தி நீ என்ன கேட்டாலும் சொல்லக் கூடாதுன்னு எங்களுக்கு ஆர்டர் காவ்ஸ்" என்றான் வாசு அவளை பார்த்தவண்ணம்.

வெடித்து வந்த அழுகையை அடக்கியவள், "என்ன நீங்க சொல்லலேனா என.. எனக்குத் தெரியாமையே போயிடுமா என்ன? ஹான்.. யாரும் சொல்லலேனா என் ரகுகிட்டையே நா.. நான் போறேன்" என்றவள் வேக வேகமாகத் தன் அறை நோக்கி நகர்ந்தால்.

கையில் கிடைத்த துணிகளை பெட்டியில் தாறுமாறாக திணித்தவள் பெட்டியை மட்டும் உருட்டிக்கொண்டு வெளியே வர, அவளை சிரிப்பு மாறாது பார்த்து நின்றிருந்தனர் ஆடவர்கள் மூவரும்.

"அக்கா நீங்க அப்போ அப்போ ஜெர்மன்ல இருக்கீங்கன்றத மறந்துறீங்க போல" என்று அபூர்வன் சிரிக்க,

"ம்ம்.. இன்னும் அவ மெண்டலி திருவான்மியூர் தாண்டலடா" என்றான் அரவிந்த்.

அப்போது தான் தன் மடத்தனத்தை நினைத்து தன்னையே நொந்தவள் மனது தன் இயலாமையிலும் ஒருங்கே கோபமும் கொண்டு அவளை ஆட்டி வைத்தது.

எல்லாம் அவளை போட்டு படுத்தி அழுத்த, ராகவைப் பற்றியே அவளின் எண்ணமும் நிறைந்திருக்க அவனின் நிலையறியாது தவித்தவள் தலையில் கை வைத்தபடி "கடவுளே, ரகு" என்று சப்தமிட்டு சட்டென்று சாய்விருக்கையில் சரிந்திருந்தாள்.

"ஏய் காவ்ஸ்.."

"அக்கா.."

"வேதா!"

என்று அவள் அருகே ஆடவர்கள் வந்துவிட, "ப்ளீஸ்.. ரகுக்கு என்னாச்சுனு சொல்லுங்களேன்" என்றாள் அழுது கத்தியபடி.

அரவிந்த் வாசுவைப் பார்க்க அவனோ, "என்னாச்சுனா? அவனையே போய் கேளு"

"டேய்" என்று அவனை அரவிந்த் பார்க்க,

"இரு, இத்தன லவ்வ வெச்சிட்டு ரெண்டும் அடிக்கற கூத்த நாமும் பார்த்தோம் தான! இனி எல்லாம் இவளே போய் கேட்டுக்கட்டும், நாம என்ன மீடியேட்டரா?"

"வாசு'த்தான்.. அக்கா ரொம்ப அழறாங்க. போதுமே" என்று அபூர்வனும் கெஞ்ச, "சேம்ப்" என்ற ஒற்றை வார்த்தையில் அவனை அடக்கிவிட்டான், வாசு.

"லிஷன் காவ்யா, தள்ளித் தள்ளி இருந்தாலோ இல்லை பார்க்காம பேசாம இருந்தா மட்டும் அவன் குணம் மாற போகுதா சொல்லு? அப்படியே மாறினாலும் எத்தன நாளைக்கு? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை! அவன் சுயமே போயிடும் காவ்ஸ்.. உன்னோடு காதல் அத விரும்புமா?

சில மாற்றம் வந்து தான் ஆகனும், ஒத்துக்கறேன். ஆனா அவன் முழுசும் மாறுவது கஷ்டம்டா. எங்களுக்குப் புரியுது உன்னோட எண்ணம் எல்லாம் ஆனா தள்ளியிருந்தா எல்லாம் சரி ஆகீடுமா? அத சொல்லு நீ"

அரவிந்த், "எல்லாத்துக்கும் இப்படி தனிமை, பிரிவு மட்டுமே மருந்தாகாது வேதா. அதெல்லாம் இருந்தும் சிலது சரியாகாம இருக்கும். கோர்ட்ல வந்து பார் எத்தன பேர் லைன்ல நிக்கறான் டிவார்ஸ் வாங்க.. காரணம் ஆயிரம் சொல்லலாம் ஆனா காதல் நடுவுல ஈகோ வந்துடுச்சுனா எல்லாம் போயிடும்டா.. நீங்க இப்படியே தள்ளி இருந்தா காதல் கூடும்னு நினைச்சா, சோ ஸாரி அதுக்கு எதிர்மறையா கூட நடக்கலாம்! 'லைஃப் இஸ் அன் - ப்ரிடிக்டபிள்' நீதான சொல்லுவ, அதே மாதிரி நம்ம ப்ரிடிக்க்ஷன் கூட மாறலாம். அவன் கூட இருந்து சண்ட போடு, அடி, கொல்லு; நீ அந்த நாய என்ன பண்ணாலும் நாங்க கேட்க மாட்டோம்"

வாசு, "இப்பவும் பாரு யார் முதல்ல பேசுறதுன்னு தெரியாம தான இருக்கீங்க? உங்க சோ கால்ட் காதல் உன்ன முதல்ல பேச வெச்சுதா? எங்களை தான கேள்வி கேட்டுட்டு இருக்க? அவனுக்கே கால் பண்ணி பேச முடிஞ்சதா உன்னால?"

அவர்களின் பேச்சு காவ்யாவை மொத்தமாக சாய்ந்திருந்தது. அவள் எடுத்த முடிவில் அத்தனை எதிர்மறைகள் இருக்கின்றனவா? என்ற எண்ணமே இப்போதுதான் அவளுக்கு உரைத்தது. இருந்தும் மனது ராகவ்வை பற்றியே தான் நினைத்துக்கொண்டது.

"நான்.. ரகு.." என்றவள் பேச முயலவும்,

"அந்த வெட்கங்கெட்ட வெள்ளெலிக்கு உன்னப் பத்தி தெரிஞ்சுதான் உடம்பு முடியாம 'அந்த நோய்' வந்ததும் உன்கிட்ட ஓடி வந்திருக்கு" என்று அரவிந்த் சொல்லவும், அவனை புரியாது பார்த்தாள் அவள்.

"அக்கா, ராகவ் ப்ரோ கீழ உங்களுக்காக வெயிட்டிங்" என்று சட்டென்று சொல்லிவிட்டான் அபூர்வன் அவளை பார்க்க சகியாது.

"கீழயா? என்ன அபூ, எனக்குப் புரியல?"

"ம்ம்ப்ச்.. ஏன்டா" என்று அபூர்வனை பார்த்த வாசு,
"நோயிக்குண்டான மருந்தத் தேடி உன்னோட ரகு வந்திருக்கார், இங்க!"

"ஆமாவா ஆர்வி! இங்க மட்டும் தான் அந்த மெடிஷன் கிடைக்குமா? அவ்வளவு சீரியஸா?" என்று அப்போதும் அவள் புரியாது கேட்டு வைக்க,

"அக்கா உண்மையா நீங்க எல்லாம் எதுக்கு டாக்டர் படிக்கறீங்க? ராகவ் ப்ரோ கீழ உங்களுக்காக வெயிட் பண்ணுறார். இதவிட தெளிவா எங்கனால சொல்ல முடியாது. இப்போ நீங்க இங்கயிருந்து ஓடிப் போய் அவர ஹக் பண்ணி காதல் வசனம் பேசனும். அவ்வளவு தான், போங்க இப்போ" என்று கடுப்பாகி இடுப்பில் கை வைத்தபடி அபூர்வன் கத்திவிட்டான் காவ்யாவின் பேச்சால்.

"போ வேதா" என்று அரவிந்த் சொல்லவும் விரைந்து கீழே சென்றாள் அவள்.

வீட்டின் முன்புறம் அமைந்திருந்த சிறிய வகை லின்டர் (Linder Tree) மரத்திற்கு கீழே அமைந்திருந்த மர பெஞ்சின் நுனியில் அமர்ந்து வாசலையே எதிர்பார்த்து காத்திருந்த ராகவின் கண்கள் காவ்யாவைப் பார்த்ததும் ஒளிர்ந்தது.

ஆனால் அவனைப் பார்த்தவளோ அதிர்ந்து நின்றுவிட்டாள் அவள் காணும் அவனின் பின்பத்தை பார்த்து.

ஆறடியில் வெள்ளை வெளேர் என்று உயரத்திற்கு தோதான எடையுடன் முகமும் கண்களும் எப்போதும் ஒரு சிறு சிரிப்புடன் இருப்பவன் இன்று நிறம் மங்கி, எடை மிகவும் இளைத்து ஏதோபோல் தோற்றத்தில் இருக்கவும் அவனுக்கு நோய் தாக்குதல் மிகுதியாக இருக்கும் போல என்று நினைப்பில் நின்ற இடத்திலேயே அவனைப் பார்த்தவண்ணம் மடங்கி அழ ஆரம்பித்திருந்தாள், ராகவின் கன்னுக்குட்டி.

குளிர் ஊசியாய் அப்போதே இறங்க ஆரம்பித்திருக்க, தான் போட்டிருந்த ஜர்க்கினைக் கழற்றியவாறே "டேய் கன்னுக்குட்டி" என்று அவளிடம் விரைந்தான் ராகவ்.

அப்படி ஒரு வெடித்த அழுகை அவளிடம். தன்னின் எண்ணத்தால் விளைந்த பிழையாகவே தங்களின் நிலைமையை நினைத்து வருந்தினால் அவள்.

தன் ஜர்க்கினை அவளுக்கு போர்த்தியபடி அவளருகே அமர்ந்தவன் விடாது அவளிடம் பேசியபடி இருக்க, அவன் இளைத்துப் போன முகத்தை கண்கொண்டு பார்க்க முடியாது தவித்து இன்னும் அழுதாள் பெண்ணவள்.

"ஓகே.. ஓகே! போதும்டா" என்றவளை அமர்ந்த வண்ணம் அணைத்தவனிடம் முழுதாய் ஒன்றக் கூட அவளால் முடியவில்லை. அத்தனை குற்ற குறுகுறுப்பு மனதில் வாட்டியது.

"ரகு.. ரகும்மா.. ஆம் ஸாரி.. ஸாரிம்மா" என்று அவனை விளக்கியவாறு அவள் சொல்லிக்கொண்டே விசும்ப,

"ஒன்னுமே இல்லை" என்று அவளிடம் சற்று அழுத்தம் கொடுத்து அணைத்தவன் மனதில் அவள் மேல் இருந்த காதல் மட்டும் நிறைந்திருந்தது.

மெல்ல குளிர் வலுக்க, "ப்ரோ மேல வாங்க" என்று வந்து நின்றான் அபூர்வன்.

"நீ போ.. கொஞ்சம் நேரம் ஆகட்டும்"

"இல்ல.."

"நீ போடா. சூடா எதாவது குடிக்க போட்டு வை, வரோம்" என்றுவிட்டு காவ்யாவை வீட்டின் பக்கவாட்டை நோக்கி அழைத்துச் சென்றான்.

கேரேஜ் (Garage) பக்கம் அவளை அணைத்தவாறு கூட்டிச் சென்றவன் உடல் குளிலில் நடுங்கியது. அதை அவளும் உணர்ந்தார் போல் கால்களை விரைந்து எட்டு வைத்து நடந்தாள்.

அங்கு ஒளிர்ந்த பளீர் விளக்கொளியில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகம் இன்னுமே கசங்கியது. கண்களை சுற்றி மெல்லிய கருவளையமும் சற்றே அவனின் கன்னம் ஒட்டியது போல் தோன்ற கண்ணீர் கசிய அவன் கன்னங்களை மென்மையாய் தடவினால் பெண்ணவள்.

"என்னடா" என்று தன் தோளணைப்பில் இருந்தவளை நோக்கி அத்தனை காதலாய் கேட்டவனிடம் என்ன கூற முடியும் அவளால்.

"ஒன்னுமே.. ஒன்னுமே இல்ல ரகு உங்களுக்கு.. என்.. என்ன இருந்தா..லும் நாம சரி பண்.. பண்ணிக்..க..லாம். மனச விட்டுடாதீங்க" என்று மூச்சை இழுத்து அவள் ஒரு கேவலுடன் அழுத நொடி அவனுக்கு சுத்தமாய் ஒன்னும் புரியவில்லை.

"என்ன கன்னுக்குட்டி?" கண்களை இடுக்கி அவன் கேட்க,

"நீங்க.. இப்.. இப்படி" என்று அதற்கு மேல் சொல்லாது அவன் நெஞ்சில் மெல்ல வருடியபடி தொட்டுக் காட்ட,

"வெயிட் லூஸ் ஆனத சொல்லுறியா?" என்றான் சரியாக.

'ஆமாம்' என்ற தலையாட்டலுடன் அவள் அவனை நிமிராது இருக்க, அவன் யோசனை இன்னும் பலமானது.

"என்னடி?" என்று அவளிடம் திரும்பவும் கேட்க, அவள் சொன்னால் இல்லை.

பின் சற்று நேரம் சென்று, "என்ன பிரச்சனை உங்களுக்கு இருந்தாலும்.. சரி ஆகிடும் ரகு. நான் சரி பண்ணிடுவேன்" என்று மென்மையாய் சொல்லி அவனை அவளை அணைத்து கொள்ள,

"எனக்கு என்ன?" என்றான் அவளிடமே.

அதில் அவனை தலைத் தூக்கிப் பார்த்தவள், "ஏதோ நோ.." என்று இழுத்தவள் கண்கள் விரிய அவனை பார்த்தபடி நிற்க,

"பசலை நோய்" என்று கோரசாக பின்னிருந்து வாசுவும் அரவிந்தும் சொல்லிய நொடி, அதுவரை இருந்த அழுத்தமும் தவிப்பும் எங்கேயோ சென்று அவர்கள் இருவரையும் கொல்லும் வெறி பிறந்தது காவ்யாவிற்கு.

"எதேய்?!" என்று ராகவ் கேட்ட தோனியில், அபூர்வன் சிரித்துவிட்டான்.

"அறிவு இருக்காடா உங்களுக்கு? கொஞ்ச நேரத்துல உயிரே பதறிடுச்சு எருமைங்களா" என்று அங்கிருந்த ஒரு சிறு பலகையைக் கொண்டு அவ்விருவரையும் இன்ஸ்டன்ட் ருத்ரமாதேவியாக மாறி அவள் அடிக்க, அபூர்வன் அவர்கள் சொன்ன செய்தியை ராகவிடம் ஒளிபரப்பினான்.

"நோய் வந்தவன் மாதிரியா இருக்கேன்" என்று பரிதாபமாக கேட்டு நின்றான் ராகவ்.

"பின்ன? சீக்கு வந்த வெள்ளெலி மாதிரி இருக்கடா" என்று ஓடிக்கொண்டே சொன்னான் அரவிந்த்.

"வாசு" என்று ராகவ் வாசுவைப் பார்க்க,

"மொத இவள கூட்டிட்டு போய் பேசுடா வெண்ண. என்ன அடி அடிக்கரா" என்றவன் கத்த,

"ப்ரோ, மேல ஃபஸ்ட் ரூம் அக்காவோடது" என்று சொல்லி சென்றுவிட்டான் அபூர்வன்.
 

Shambhavi

Moderator
குளிருக்கு இதமாய் அந்த ரூம் முழுவதும் வெப்பத்தை சம நிலையில் வைத்திருக்க ஹீட்டர் போடப்பட்டிருந்தது.‌ லாவெண்டர் ரூம் ஸ்ப்ரே அவ்வறை முழுவதும் நிறைத்திருக்க, மருத்துவ புத்தகங்களும் காவ்யாவின் குளிருக்கு இதமான ஆடைகளும் பார்வைக்கு ஏதுவாக இருந்தது.

பெரிய டேபிள் அதனை ஒட்டியபடி ஃப்ரெஞ்ச் விண்டோ. அதற்கு பக்கவாட்டில் ராகவும் காவ்யாவும் இணைந்து எடுத்த புகைப்படங்களின் அணி வகுப்பு!

அவளுக்கு மிகப் பிடித்தது துவங்கி, ராகவ் வேண்டாம் என்று ஒதுக்கிய சிலதும் அந்த அழகிய புகைப்பட அணிவகுப்பில் மணியாய் அமைந்திருந்தது.

குறும் முறுவலுடன் அவற்றைப் பார்த்திருந்தவன் மனது சற்று முன்பு நடந்த நிகழ்வு வந்து சென்றது.

'எத்தனை ஏங்கி, தவித்துவிட்டது அவன் கன்னுக்குட்டி' என்று நினைக்கையில் மனதில் ஒரு மென்மை தன்னைப் போல் வந்துகொள்ள, அவன் வந்ததின் காரணமும் வந்தமர்ந்தது அங்கு.

மூக்கை உறிஞ்சியபடி உள்ளே வந்த காவ்யா, "ரகு, ஜிஞ்சர் டீ" என்றாள் அங்கிருந்த டேபிள் மீது வைத்து படி.

"இன்னும் அழுக நிறுத்தலையா நீ? விளையாட்டா சொன்னதுக்கே இப்படியா?" என்று அவன் மென்மையாய் கடிந்தபடி சொன்னாலும், அவள் மனம் அதை சட்டென்று ஏற்க முடியாது போனது.

அவள் ரகு!

அவளுக்கே அவளுக்காய் அந்த இறைவன் அனுப்பிய தேவன், உயிரானவன் என்று இன்னும் எண்ணற்ற வார்த்தைகளை கோர்த்து அவள் மனதில் அவனுக்காகவே வாழ்பவளிடம் அந்த உயிருக்கே உயிர் ஆபத்து என்றால், தாங்குமா?

"ம்ம்ப்ச்.. இப்படி அழுறவ, எதுக்கு என்ன விட்டுட்டு வந்த? என்னைய மாத்துறது முக்கியமா இருந்திருந்தா, கூட இருந்து மாத்தியிருக்கனும் இல்லையா இந்தியாலையே படிச்சிருக்கனும்" என்று என்ன முயன்றும் பொறுமையின்றி கத்திவிட்டான் அவன்.

"தப்பில்ல" என்று விக்கியபடி அவள் கேட்க,

"இல்லையா? அத்தன தடவ சொன்னேன், கேட்டீயா? கோபம் வந்து நானும் பேசினா சட்டைய பிடிக்கறத விட்டுட்டு வந்துடுவியா நீ?" என்று சொன்னவன் கண்களும் கலங்கிவிட்டது.

"நீ போறேன் போறேன்னு சொன்னனால தான நானும் உன்ன போகச் சொன்னே? அதுதான் சாக்குனு பேசாம இங்க வந்து உட்காந்துட்ட!''

"என்ன வந்து உட்காந்தேன்? உங்கள பயமுறுத்த அப்படி சொன்னது கடைசில நிஜமாகிடுச்சு! எனக்கு மட்டும் என்ன ஆசையா?"

"இங்க வந்து படிக்கற ஆசை இல்லையா உனக்கு?" என்றவன் அவளை முறைக்க,

"இருந்துச்சு தான். நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா உங்கள விட்டுட்டு இப்படி ஹர்ட் பண்ணிட்டு வரனும்னு எல்லாம் என் எண்ணமில்லையே" என்றாள் அவளும் இப்போது தெளிவாக.

"இப்போ வந்து நல்லா பேசு" என்று சொன்னவன் மனதில் அத்தனை கலக்கமும் இயலாமையுடன் சேர்ந்த கோபமும்.

அடுத்த யார் பேச என்று தெரியாது இருவரும் பேசாது மௌனம் காத்திருந்தனர். ஆனால் மனதில் முன்பிருந்த அந்த வெற்றிடம் இப்போதும் சுத்தமாய் இல்லாது போனது. தன் துணையிடம் வந்துவிட்ட நிம்மதியா அல்ல இணையைப் பார்த்துவிட்ட நிறைவா? அவர்களுக்கே வெளிச்சம்!

அவன் ஜன்னல் அருகே அமர்ந்து டீயை பருகினான் என்றால் இவளோ அமைதியே உருவாய் ராகவ்வையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

இவர்களின் இன்னிலையைப் பார்த்தபடி வந்த அரவிந்தோ, "ஏன்டா உங்கள என்ன அங்குசம் வெச்சா குத்தனும்? ஸ்டார்டிங் டிரபில் வந்த கார் மாதிரி யாராவது வந்து எடுத்துக் கொடுத்தாதான் பேசுவீங்களோ?" என்றவன் சற்று பொறுத்துப் பார்த்து,

"டேய், உங்ககிட்ட தான்டா பேசுறேன்?"

வாசு, "நீ வா இங்க, அதுங்க அதுங்களோட பிரச்சினையை பேசிக்கும். பூர்வா மட்டர் மசாலாவும் சப்பாத்தியும் பண்ணியிருக்கான் பாரு" என்றதும் விழுந்தடித்துக் கொண்டு டைனிங் நோக்கி ஓடியிருந்தான், அரவிந்த்.

"சோத்து மூட்ட" என்று தலையில் அடித்தபடி காவ்யாவின் அறைக் கதவை சாற்றிவிட்டு சென்றான் வாசு.

"ஓகே, இன்னும் உனக்கு என் மேல கோபம் போகல போல?"

"..."

"ஸாரிடா" என்று ராகவ் இறங்கி வந்தும் பதிலில்லை.

"போடி" என்று விட்டு அவன் அறையை விட்டு செல்ல முயல,

"நானும் ஸாரி சொன்னாதான் என்ன திரும்ப ஹக் பண்ணுவீங்களா ரகு?" என்றாள் தலையைக் குனிந்தபடி.

அதில் சட்டென்று தோன்றிய மென் முறுவலுடன் அவளை திரும்பிப் பார்த்தவன், "இப்ப நான் ஸாரி கேட்ட பின்ன தான நீயும் பேசின?" என்றவுடன் தலை நிமிர்ந்தவள், "உங்க ஸாரி வேற, என்னோட ஸாரி வேற"

"பட் வீ பேத் ஆர் ஸ்சேம், ரைட்?" என்றதில் முகம் மலர்ந்தவளிடம்,

"இன்னும் நீ என்ன ஹக் பண்ணல" என்றான் இதழ் விரிந்து சிரித்தபடி.

அதில் அவன் மேல் கொண்ட காதல் இன்னுமின்னும் பெருகிவிட, தன் உற்றானை தாவி அணைத்துக்கொண்டாள் மானினியவள்.

அணைப்பில் மேலும் தன் வலிமையைக் கூட்டியவன், அவள் சேவிதனில், "கோபம் போச்சா?" என்றான்.

"பச்சி பறந்துடுத்து" என்றாள் அவளும் அவனுக்கு ஈடுகொடுத்து.

அதில் அவளை சற்று விளக்கியவன், அவளின் இரு கைகளையும் பற்றியபடி, "ஐ ப்ராமிஸ், இனி என்னோட பெஹாவியர மாத்திக்க ட்ரை பண்ணுறேன். கண்டிப்பா டைம் எடுக்கும், ஆனா மாத்திப்பேன்" என்றான் உறுதியாக.

அவனையே பார்த்திருந்தவள், "ஒரே மொட்டா மாத்த வேண்டாம். அப்புறம் என் ரகுவோட ஸ்மேல் போயிடும்"

"ஆஹான், இப்போ மட்டும் என் ஸ்மேல் பிடிச்சுருக்கு பாரு" என்றவளின் நிலையறிந்து அழுத்துக்கொண்டவன் அதன் பின் அவளிடம் படித்ததது எல்லாம் காதல் மொழியும் கூடல் கவிதைகள் மட்டுமே.


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 40


முழுதாய் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் முகத்தில் சிரிப்புடன் உடல் எடை சிறிது ஏற்றத்துடன் சென்னை வந்த இறங்கினான், ராகவ் கிருஷ்ணன்.

அவன் அணிந்திருந்த ரிம்லெஸ் கண்ணாடியின் மீது பட்டுத் தெறித்த சூரிய ஒளிக்கு நிகரான பிரகாசம் அவன் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

"நல்ல தகதகன்னு ஒரு மாசமும் ராஜ உபச்சாரத்துடன் வந்திருக்கான் பாருங்க. என்னைய பாரு கல்யாண மாப்பிள்ளைன்னு பெயர் மட்டும். தீஞ்சுப் போன காக்கா மாதிரி இருக்கேன்" என்று பொறுமினான் வாசு.

அதற்குள், "அப்பா" என்று அழைக்க வந்திருந்த முரளியை அத்தனை வேகமாய் அணைத்துக் கொண்டவன் என்னவோ அன்று தான் பள்ளி முதல் நாள் சென்று திரும்பி வந்த நான்கு வயது ராகவாக தான் தெரிந்தான் அவருக்கு.

"இப்போ தான்டா கொஞ்சம் பார்க்கற மாதிரி இருக்க" என்று அப்படியே பிளேட்டை திருப்பிய வாசு அவனின் பயணப் பைகளை வாங்கிக்கொண்டான்.

ராகவ், "ப்பா ஒன்னுமே பேசாம இருக்கீங்க?"

முரளி, "காவ்யா எப்போ வரா ராகவா?"

"கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்ன வந்துருவா ப்பா. இப்போ கொஞ்சம் லீவ் எடுத்துட்டா அதான் முன்னாடியே வர முடியல" என்று சொன்னவன் முகம் மென்மையாய் சிறிது வெட்கத்தையும் காட்டியது.

அதைப் பார்த்தபடி இருந்த முரளியின் முகமும் சிரிப்பில் விரிய வாசுவோ, "டாக்டர். ராகவ் இப்போ நீங்க வெட்கமா படறீங்க?'' என்று கேட்டு வைக்க,

"வெயில்ல முகம் சிவந்துடுச்சு கண்ணா" என்று முரளி வேறு கிண்டல் செய்யவும், ஒருவித அசட்டு சிரிப்புடன் தலைகொதியபடி திரும்பிக்கொண்டான் அவன்.

"டேய் டேய் அநியாயம் பண்ணாதடா! இன்னும் என் கல்யாணத்துக்கு இருபது நாள் கூட இல்லை. அண்ணனா கூட இருந்து வேலை பார்க்காம ஹனிமூன் கொண்டாடிட்டு வந்துருக்க நீ" என்று கத்திய வாசுவின் வாயை அடைத்தபடி அவனைத் தள்ளிக்கொண்டு ஓடினான் அந்த டாக்டர் காதலன்!



முரளியின் வீட்டில் அமைந்திருந்த சமையல் அறையின் பக்கவாட்டில் மேற்புறமும் சுற்றமும் கண்ணாடியால் எழுப்பி தோட்டத்தில் ஒரு புறத்தை தன்னகத்தே அழகுக்காக ஈர்த்து, கலைநயமும் இயற்கையோடு ஒன்றியபடி அமைந்த உணவுறையில் அமர்ந்திருந்தனர் தகப்பனும் பிள்ளைகளும்.

"டேட், ஈவினிங் நான் குரூமிங் போகலாம்னு இருக்கேன்" என்று ஆரஞ்சை சாப்பிட்டபடி வாசு சீரியஸ்ஸாக சொல்ல, அதில் பட்டென்று சிரித்துவிட்டான், ராகவ்.

"ஏன்டா இப்படி? அம்ருதா போனாலும் சரி, நீயேன்?"

"நீ வந்து இறங்கின போதே நான் முடிவு பண்ணிட்டேன், எனக்கு கொஞ்சமாவது கலர் வரனும்னு" என்று மூஞ்சூறாய் முகத்தை வைத்தபடி சொன்னான் அவன்.

"கண்ணா" என்ற அழுத்தமான முரளியின் அழைப்பிற்கு அவன் திரும்பினான் இல்லை.

"எப்போ இருந்து நீ கலர்க்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்ச?"

ராகவ் அவரை இடையிட்டவனாக, "ப்பா அவன் கல்யாண மாப்பிள்ளை, கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருக்கனும்னு நினைப்பான்ல? இத்தன நாள் வேலையோட சேர்ந்து கல்யாண அரேஞ்மெண்ட்ஸ் பார்த்திருக்கான். நாமளே சொல்ல வேண்டியத இவனா சொல்ல வேண்டிய நிலமைக்கு கொண்டு வந்தாச்சு"

ராகவ் சொல்வதை முரளி கேட்டாரே தவிர ஏதும் பதிலளிக்கவில்லை. மொத்த பார்வையும் வாசுவிடமே நிலைத்து நின்றிருந்தது.

"கண்ணா" என்றார் இம்முறை சற்று மென்மையான குரலில்.

"டேட், நான் சும்மா விளையாட்டுக்கு தான்" என்று சொன்னாலும் அவன் மனதில் இருந்த அழுத்தம் சற்று வார்த்தையிலும் வெளிப்பட்டது.

வாசு, புவனாவைக் கொண்டு பிறந்தவன் என்றாலும் அவரின் சாக்லேட் நிறத்தை விட சற்று மங்கிய நிறத்தில் தான் பிறந்தான். ஆனால் ராகவோ முரளியின் பால் வண்ண நிறத்தைவிட சற்று மெருகூட்டப்பட்ட நிறத்தில் இருப்பவன்.

வளரும் போது இதுவே வாசுவின் மனதில் ஒரு தாழ்வுமனப்பான்மையை கொடுத்தாலும் அதை வெளிப்படையாய் மொழிந்தான் இல்லை.

ஆனால் தந்தை மகன்கள் வெளியே செல்ல நேரும் சமயம் அது பிறரின் கவனத்தை அப்பட்டமாக கவர்ந்து அந்த அவர்கள் நிற வித்தியாசம் பூதாகரமாகப் பேசப்பட்டது.

அதை கலைந்து அவன் மனோ திடத்தை மீட்கவே பெரும்பாடு பட்டார் முரளி. நாள் போக்கில் அதை வாசு புறம் தள்ளியிருந்தாலும் வெளியே ராகவோடு இருக்கும் நேரங்களில் 'இவர் தான் உங்க அண்ணாவா' என்று அழுத்தி யாரேனும் கேட்கும் போது, உருவமில்லாத ஒன்று அவனை உள்ளூர அழுத்தும்!

ஆனால் அம்ருதாவின் 'ஹாட் சாக்லேட்' அதை தற்காலிகமாக இப்போது தடை செய்திருந்தாலும், சிறு வயதில் மனதில் உருவான அழுத்தம், ஆழமானது தானே!

"உண்மையா நான் விளையாண்டேன் டேட். ஆம் ஓகே!" என்றாலும் அவன் மனதில் ஏதோ இருந்தது.

"உண்மையா?" என்று ராகவ் கேட்டும் அதையே அவன் மொழிந்தான்.

"நிறத்தப்பார்த்து தான் ஒருத்தரோட குணத்த நீ முடிவு பண்ணனும்னா இங்க முக்கால்வாசி தப்பா தான் போகும். நீ என் இசை மாதிரிடா கண்ணா, ப்யூட்டி & போல்ட்! அவ்வளவு ஏன் என் க்ருஷ்ணரே எனக்கு மகனா பிறந்திருக்கார்னு எனக்கு அவ்வளவு சந்தோஷத்த கொடுத்தவன் நீ. குரூமிங் பண்ணி தான் என் பையன் அழகாகனும்னு இல்ல, மனசால எங்க எல்லாரையும் விட பேரழகன் தான் என் வசுதேவன்" என்று எழுந்து வாசுவை பின்னிருந்து அணைத்துக்கொண்டார், முரளி கிருஷ்ணன்.

"யாரோ என்னமோ சொல்லியிருக்காங்க. அதான் நீ இப்படி சப்மெரின் (submarine) மாதிரி மூழ்கற, சரியா?" என்று சரியாய் ராகவ் கணித்துவிட்டான்.

"அதெல்லாம் இல்லை. எனக்கே ஒரு மாதிரி டேன் (Tan) ஆன ஃபீல், அதான்"

"சமாளிக்காதடா வெண்ணெ" என்றவன்,

"பொய் சொன்ன பொருந்தற மாதிரி சொல்லி பழகு! இவருக்கு டேன் ஆகுதாம். எங்களைச் சொன்னாலும் சரி" என்றவன் முரளியைப் பார்த்து சிரிக்க,

"அமைதி இரு ராகவா" என்றவரை பொருட்படுத்தாது,

"இருங்கப்பா, எவனோ என்னமோ சொன்னா இந்த பேயும் கேட்டுட்டு சோகப் பாட்டுல ஃபீலான டாக் மாதிரி குரூமிங் போகுதாம்! மனசாட்சியே இல்லையாடா உனக்கெல்லாம்" என்றதில் வாசு சிரித்துவிட்டான்.

"நம்ம அம்ருதா பாப்பாவுக்கு இப்படியா மாப்பிள்ள பார்ப்பாங்க? என்ன தான் டாக்டரா இருந்தாலும் பொருத்தமே இல்லை. கலரும் கட்டக் கரேல்ன்னு வேற" என்று வாசுவின் காதுபட ஹோட்டலில் இரண்டெருவர் பேசியது அவனை வெகுவாய் தாக்கியிருந்தது.

அதிலும் இன்று காலை முரளியும் ராகவும் சேர்ந்தாற் போல் நின்றிருந்த போது அவ்விருவரின் பின்பமும் அவனை மனதளவில் மண்டியிருந்த நினைப்பை தூசு தட்டிவிட்டது போல் தான் ஆகியிருந்தது.

ராகவ், "ஹான் இப்போ நல்ல அழகா இருக்க பாரு. நல்லா தூங்கி எழுந்திரி, கொஞ்சம் வேலை குறைச்சு செஞ்சா கல்யாணத்துக்கு பெங்களூர் தக்காளி மாதிரி இருப்ப"

"டேய்.. ச்சீ போ" என்று அவன் தலையில் தட்டி சென்ற வாசுவின் மனது தற்சமயம் சமன்பட்ட உணர்வு. ஆனால் அவன் மனதில் இருப்பதை களைய அம்ருதாவால் மட்டுமே முடியும் என்பதை முரளி அறிந்துகொண்டார்.

மெல்ல அவர் பார்வை ராகவை நோக்க, அவனோ புரியாது அவரைப் பார்த்தான்.

"நான் அவன நார்மல் பண்ண தான் ப்பா அப்படி பேசுனேன்" என்றான் உடனே.

"அதுயில்ல ராகவா. சொக்கநாதன் கிட்ட எப்போ பேசப் போற? அதுக்கு தான காவ்யா உன்ன முன்னாடியே அனுப்பிவிட்டிருக்கா?" என்றார் சரியாக.

"ப்பா, கல்யாண வேலைக்குத் தான் ப்பா அனுப்பினா. பேசுறதுக்கெல்லாம் இல்லை" என்று அவன் சொன்னாலும் அவனும் அதை உணர்ந்து தான் இருந்தான்.

"அதுவும் இதில் சேர்த்தி தான. எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம் தான், இல்லைன்னு சொல்ல மாட்டேன். முதல்ல நீ உன் வேலைய முடிஞ்சிட்டு பொறுமையா கல்யாண வேலையப் பாரு. அதுக்கு முன்ன ஒரு சின்ன பங்ஷன் வேற இருக்கு"

"என்ன ப்பா?" என்றான் புரியாது.

"நீ பேசீட்டு வா, நான் சொல்லுறேன். வாசுவும் அதுக்காகத் தான் இத்தன கஷ்டப்படுறான், ரெண்டு வேலையும் சேர்ந்ததுனால தான் இப்படி கலச்சுப்போயிட்டான்." என்றவர் அங்கிருந்து அகன்றார்.

மாலை இளம் வெயில் சூட்டில் மெல்ல காய்ந்தபடி புறநகர் பகுதியில் அமைந்திருந்த சொக்கநாதனின் தொழிற்சாலைக்கு சென்றுக்கொண்டிருந்தான் ராகவ்.

மனதில் அவன் பேச வேண்டயதை மட்டும் நிலைபடுத்தியபடி அவன் அங்கு சென்று அலுவலக அறையில் காத்திருந்தான்.

ஆரம்பத்தில் சொக்கநாதனிடம் பேச சற்று தயக்கம் இருந்தாலும் அவன் வாழ்க்கையின் பிடிப்பைப் பற்றிய எண்ணம் முகிழ்த்ததும் மனதில் சற்று திடத்தை வரவழைத்து கொண்டு சொக்கநாதனிடம் பேசவாரம்பித்தான் ராகவ்.

மேலோட்ட கருத்துக்கள் இல்லாது அவன் காதலை அவன் சொல்லிய விதமும் பேசிய பாங்கும் சொக்கநாதனுக்கு ஒரு பிடிப்பை கொடுத்தது தான். இருந்தும் முழுதாய் அவர் மனது அதை ஏற்கவில்லை. ஆனால்
அவன் பேசியதாலோ என்னவோ சொக்கநாதனும் மனமிறங்கியிருந்தார்.

வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து காட்டும் விதத்தை வைத்தே இனி நடப்பவையை கணிக்க முடியும் என்ற எண்ணத்தில் முழு மனதாய் அல்லது தலையசைத்தார்.

இனி, காவ்யா மற்றும் ராகவின் கைகளில் தான் அவர்களின் (காதல்) வாழ்க்கை அழகோவியமாக அமைவது இருக்கிறது!



சொக்கநாதர் - ராகினியின் வாழ்க்கை பயணம் முற்றும் எல்லாம் சரியானது என்று சொல்வதற்கில்லை ஆனால் ராகினியின் முகம் பார்த்து பேச ஆரம்பித்திருந்தார் சொக்கநாதன்.

எல்லாவற்றிற்கும் காலமும் நேரமும் தேவை. மனதில் புரையோடி இருக்கும் புண் ஆற நேரம் ஆகும் தானே!

அதன் பின்னர் வேலைகளை தீவிரமாக நடக்க ஆரம்பித்திருந்தது. அரவிந்த் மொத்த பொறுப்பையும் ஏற்றிருந்தான் பெண் வீட்டாரின் சார்பாக.

தந்தை மகனுக்கான அந்த பந்தம் அரவிந்த் - சொக்கநாதனிடம் இருந்தாலும் வேண்டியதற்கு பேசினர். அவ்வளவே. அதற்காக சொக்கநாதனிடம் பாசம் இல்லை என்று சொல்லுவதற்கும் இல்லை.

சொல்லப்படாத பாசத்தில் அவர்கள் பாசப் பிணைப்பும் ஒன்று, கூட ராகினியுடன் வாழ்ந்த வாழ்க்கையும்!

நுங்கம்பாக்கம் பாரிஸ் ஹோட்டலில் 'ராகவ் - காவ்யா'வின் வரவேற்று நிகழ்வு முக்கிய மற்றும் வேண்டியவர்கள் புடைசூழ நடக்க வேண்டிய ஏற்பாடுகள் ஜரூராக நடந்த வண்ணம் இருந்தது.

'ரிசப்ஷன் வித் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற பெரிய பேனர் அங்கு வந்திருந்த அனைவரையுமே கவர்ந்தது.

மேடை அலங்காரத்தில் பயன்படுத்திய பூ துவங்கி உண்ணும் இடத்தில் வழங்கப்பட்ட காஃபி கப்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படும் விதமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அலங்காரத்திற்கு பயன்படுத்திய பூக்கள் ஊதுபத்திகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், மீதமான உணவுகள் ஆதரவற்ற இல்லங்களுக்கும், கப்கள் பிளேட், டெசர்ட் பவுல் அனைத்தும் மூங்கிலால் தயார் செய்யப்பட்டு மக்கும் விதமாகவே இருந்தனர்.

மூங்கிலால் செய்யப்பட்டவை என்றாலும் அதன் தரத்திலும் புறத் தோற்றத்திலும் எவ்வித சமாதானமும் செய்யாது 'எ கிளாசிக் மேட்' என்று சொல்லும் வகையில் இருந்தன.

மொத்தத்தில் அந்நிகழ்வு, 'எ பட்ஜெட் ஃப்ரெண்ட்லி ஹை கிளாஸ் கேதரிங்' என்ற வகையில் அந்த விழா மொத்தத்தையும் ஏற்பாடு செய்திருந்தார், பாரிஸ் ஹோட்டலின் ஈவேண்ட் மேனேஜ்மென்ட் ஹேட் அனுரேகா சரவணன்.

விழாவை முரளி - புவனா முன்னின்று நடத்த முற்பட்டாலும் பதினெட்டு கால இடைவெளி அவர்களை சட்டென்று இணைக்க முற்படவில்லை.

தள்ளித் தள்ளி இருந்தாலும் மகனது விழாவை கண்ணாற மனதாற கண்டும் சிறப்பாக முடிந்திருந்தினர்.

நிறைவாய் வந்திருந்தோரின் ஆசியியுடன் மனநிறைவை அள்ளித் தெளித்தபடி இனிதாய் நிறைவுற்றது ராகவ் கிருஷ்ணன் - காவ்யா வேதவள்ளியின் வரவேற்பு வைபோகம்!

"ஹாப்பி?" என்று அங்கு மேடையைப் பார்த்தவாறு சிரித்து நின்றவளை தோளோடு அணைத்த வண்ணம் அவன் வினவ,

"ஃப்ரம் மை ஹார்ட்!" என்று முகம் முழுக்க சிவந்து சிரித்தவளை நிறைவான கனிந்த முகத்துடன் பார்த்து நின்றிருந்தான், வாசுதேவ கிருஷ்ணன்.





"மனுஷ பிறவியாடா நீ? நாளைக்கு காத்தால கல்யாணத்த வெச்சிட்டு இப்போ மும்பைல இருக்கேன்னு சொல்லுற. பைத்தியமே, சீக்கரம் வந்துத்தொல" என்று ராகவ் போனில் கத்த, அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள், காவ்யா.

"வந்துருவான்.. விடு" என்றவன் சொன்னாலும் உள்ளுக்குள் சிறிது பயம் தான்.

"காலேல ஷார்ப்பா நாலு மணிக்கு மண்டபத்துக்கு வரல, ப்ரேக் அப் தான் தேவா" என்று அம்ருதாவும் கத்தியபடி இருக்க, வாசு தான் நொந்தே போனான்.

இதோ நாளை இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அத்தனை பூரிப்பு இருந்தாலும் கடமை அழைக்க அவன் பறந்துவிட்டான்.

வாசுவின் பேச்சிற்கு பின்பு தன்னின் உருவத்தைப் பற்றி கவலைகள் எல்லாம் அம்ருதாவிற்கு குறைந்திருந்தது. முற்றும் அகலவில்லை தான் ஆனால் கம்மியாக இருந்தது வருத்தம்.

ஊரையே கூட்டி அழைக்காமல், முக்கிய நபர்களை மட்டும் அழைத்து அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம் என்று முடிவாகி இருக்க, அத்தனை பேரும் பரபரப்பாக இருந்தனர்.

முரளியின் முகத்தில் அத்தனை நிறைவு. ராகவின் திருமணம் ஒருவிதமாக நடைபெற்றாலும் அவரின் கடைக்குட்டியின் திருமணம் வெகு ஜோராக அமைந்திருந்தது.

பார்வை அடிக்கடி புவனாவை பார்த்தாலும் அவரோ சலனமே இல்லாது இருந்தார். என்ன முயன்றும் அவரால் ஒட்டவே முடியாது போனது. முரளியின் மீதிருந்த காதல் மெல்ல வெளிவந்தாலும் அவரின் ஈகோ முற்றும் அவரை விட்டுவிடவில்லை. இனி காலம் தான் அவரை மாற்றும் என்று நம்புவோம்!

மகனின் திருமணம் என்று எல்லாம் எடுத்துப்போட்டு செய்யாமல் பகட்டாக விருந்தாளியைப் போல் அமர்ந்திருந்தவரை பார்க்க ராகவிற்குத் தான் கோபம் மூண்டது.

முன்போல் அவரை ஒதுக்க அவன் நினைக்கவில்லை. அவன் எண்ணமும் முற்றாக மாறியிருந்தது காவ்யாவால். வாழ்க்கையில் காதலை மட்டுமே திகட்டத் திகட்ட அணுதினமும் அனுபவிக்கும் பாக்கியசாலியாக இருக்கிறான் ராகவ் கிருஷ்ணன்.

அந்த காதல் செய்த மாயம் தான் அவனின் மனதும் எண்ணமும் நல்ல மாற்றம் பெற்று இருக்கிறது.

காவ்யா ஜெர்மனில் மேற்படிப்பை படித்தாலும் தினமும் பேஸ்டைமிலும் சேட்டிங்கில் தான் பாதி நாள் அவர்களுக்கு கழியும்.

ஐந்து மணிக்கு வியர்த்து வழிந்து அரக்க பறக்க மண்டபத்திற்கு ஓடிவந்தான், வாசுதேவ க்ருஷ்ணன்.

இன்னும் அரைமணிநேரத்தில் மூகூர்த்தம். குளித்து, உடையணிந்து வந்து ஹோமத்தில் அவன் அமர, "அம்ரூ கல்யாணத்த நிறுத்த சொல்லிட்டா வாசு'த்தான்" என்று வந்து நின்றான் அபூர்வன்.

"எதேய்" என்று அனைவரும் திகைக்க, "கெட்டது குடி" என்று மனையில் இருந்து எழுந்தே விட்டான் வாசு.

"தம்பி அப்படியே அந்த புது டிரஸ்ஸ மாத்திட்டு வந்திடுங்கோ" என்ற ஐயரிடம், "கொஞ்சம் விட்டா அவ என்னையவே மாத்திடுவா சாமி" என்றவன் அம்ருதாவின் அறைக்கு ஓடினான்.

"என்ன பிள்ளையோ இவ" என்று பெண்கள் கடுகடுக்க, அப்பாக்கள் அனைவரும் முறைத்துக் கொண்டு பதறி நிற்க, அங்கு அம்ருதாவோ வாசுவை மிக இறுக்கமாக அணைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

"இதுக்குத் தான் இந்த டிராமாவோ பப்ளிமாஸ்"

"பின்ன கல்யாணத்து முன்ன நாமளும் இப்படி ஹக், கிஸ் எல்லாம் பண்ணோம்னு நம்ம பசங்களுக்குச் சொல்ல வேண்டாம்" என்றவள் கள்ளமில்லாது சிரித்து நிற்க, அந்த சிரிப்பை சிதறாமல் மனதில் புதைத்துக்கொண்டான் வாசுதேவ க்ருஷ்ணன்.

ஆழ்ந்த மெரூன் வண்ண காஞ்சிப் பட்டில் அதுவும் 'தேவவர்ஷினி' என்ற பெயர் முந்தியில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டு, அந்த புடவை முழுக்கவும் 'ஹெவி வொர்க்'காக டிசைன்கள் அம்ருதாவால் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

தங்கத்தை தவிர்த்து டயமெண்ட் மற்றும் பிளாட்டினம் பிரைடல் நகைகள் அணிந்து மேடைக்கு வந்தவள், பெண்ணோவியம் தான்!

நெற்றியில் பட்டையும், பட்டு வேட்டி சட்டையில் அவனின் ஆஸ்தான ரோலக்ஸ் சகிதம், மாப்பிள்ளை முறுக்குடன் சற்று முன்பு அம்ருதா தந்த முத்தத்தினால் சிவந்து வெட்கிய முகத்துடன் அமர்ந்திருந்தான், வாசுதேவ க்ருஷ்ணன்.

மணமேடையை சூழ்ந்திருந்த உறவுகளின் முகத்தில் அத்தனை நிறைவும் மகிழ்வும்.

தன்னையறியாது மீனாட்சியின் விரல்கள் கணவரின் கைகளை இறுக்கிப் பிடித்திருந்தது மகிழ்ச்சி பெருக்கில்.

ஆரூரன், ஆதவன், அபூர்வன் வாசுவை சூழ்ந்தவாறு அமர்ந்திருக்க, அவர்கள் முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்து வாசு சிரித்து விட்டான்.

"டேய் இப்படி மூஞ்ச வெச்சுட்டு என் பக்கத்தில உக்காராதீங்கடா. தாலி கட்டறத மறந்து உங்க அடுத்த எக்ஸ்பிரசன் என்னனு பார்க்கத் தான் தோனும்"

"வாசு'த்தான் காமெடி போதும். அவர் சொல்லுறத திருப்பி சொல்லுங்க முத" என்று அபூர்வன் அதட்ட, அவன் தலையில் கொட்டினார் நீலாம்பரி.

என்ன தான் பார்வையாளர் போல் இருந்தாலும் மணமகனின் பெற்றோரை மேடைக்கு அழைத்த போது புவனாவிடம் ஒரு தயக்கம்.

"மாப்பிள்ள பையன பெத்தவா வாங்கோ" என்று மூன்று முறைக்கு மேல் அழைத்ததும் தான் மெல்ல தயங்கியபடி மேடைக்கு வந்தார், புவனா.

முரளியுடன் சேர்ந்து அவர் சடங்குகளை செய்ய, உள்ளுக்குள் அந்த வயதிலும் ஒரு சிலிர்ப்பு ஏற்படத் தான் செய்தது அவருக்கு.

மங்கள வாத்தியங்கள் முழங்க, அனைவரின் பிராத்தனைக்கு நடுவில் அச்சதை சூழ, அம்ருதவர்ஷினியை கரம்பிடித்தான் வாசுதேவ க்ருஷ்ணன்!

திருமாங்கல்யத்தை அவன் அணிவித்த நொடி, இருவர் மனநிலையும் அத்தனை மகிழ்வாய் நெகிழ்ச்சியாய் இருந்தாலும் கண்கள் கலங்கியது என்னமோ உண்மையே‌.

திருமதி. வாசுதேவனாக, முகம் சிவந்து, அகமும் மனமும் பூரிக்க நின்றிருந்த அம்ருதவர்ஷினியை விழியெடுக்காது பார்த்திருந்தார், சாரங்கன்.

"என் பேபீ ரொம்ப வளந்துட்டாடி பாரி" என்றவர் கண்கலங்க, நீலாம்பரிக்குமே அந்த நிலை தான்.

அவள் இயல்பாய் வாசுவுடன் ஒன்றி நின்றிருந்தது என்னவோ சரவணனுக்கு தன் பொம்மையை, அவரின் ப்ரின்சஸ்ஸை வாசு பிடிங்கியது போலவே தோன்ற, முறைப்புடன் அவனைப் பார்த்திருந்தார் அவர்.

திருமண விளையாட்டுக்கள் முடிந்து, மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று சடங்குகள் முடிந்து, பெண் வீட்டிற்கு வந்து சம்பரதாயங்கள் முடிந்து வாசுவின் அப்பார்ட்மெண்ட்டிற்கு சென்றனர் அனைவரும்.

பிரியாவிடை கொடுத்து அவள் வாசுவின் இல்லம் வந்தாலும் அனுவின் பேச்சே வாசுவை நிறைத்திருந்தது.

"மீனா அக்காவுக்கு கல்யாணம் ஆக முன்னாடியே அவர நான் கல்யாணம் பண்ணிட்டேன் தம்பி‌. அப்புறம் ஒரு வருஷம் பிந்திதான் அக்கா கல்யாணம் முடிச்சு வந்தாங்க. அதுவரை எங்களுக்கு குழந்தையில்லேனு தோனல.. ஆனா நாளாக ஒரு வலி. எங்களுக்கு பிள்ளையே இருக்காதோனு. அக்காவும் இரண்டு வருஷம் பின்ன தான் அம்ரூ பொறந்தா, என் சாமி மீனா அக்காவக் கூட அம்மான்னு முதல்ல கூப்பிடாம என்னைய தான் கூப்பிட்டா" என்றவர் அழுதுவிட, அவரின் வலி அவனுக்குப் புரிந்தது.

"அவருக்கு அம்ரூ தான் அப்போ எல்லாம். அடுத்த பிள்ளை மீனா அக்கா உண்டானதும் அம்ரூவ பார்த்துக்க முடியல. நானும் அம்மாவும் தான் பார்த்துப்போம். அப்போ ஊரே பேசுச்சு என்கிட்ட பிள்ளைய கொடுக்க வேண்டாம்னு.. இருந்தும் நான் ஊட்டுனாதான் சாப்பிடுவா.. என் மடியில தான் தூங்குவா.‌ அவங்க சரோப்பா இருந்தா போதும், அவர் நெஞ்சுல படுத்துட்டு என்னென்னமோ பேசுவா.. அம்ரூவுக்கு ரெண்டு வயசு இருக்கும், இனி எங்களுக்கு பிள்ளையே இல்லனு நினச்சுட்டு இருக்கும் போது தான் ஏதோ ஒருநாள் புள்ளைய மடியில் வெச்சுட்டு சாப்பாடு கொடுத்துட்டு இருந்தேன்.. சட்டுனு என் வயித்த தொட்டு 'தம்பீப்பா'னு சொன்னா பாருங்க, உடம்பே சிலுத்துடுச்சு.. பார்த்தா என் வயித்த நிறைச்ச என் அபூ.. எத்தனை ஆசையா பெத்து எடுத்தேன். எல்லாம் எங்க அம்ரூனால.. நல்லா பார்த்துக்கோங்க தம்பி" என்று கை கூப்பி அவர் கேட்க, கலங்கிப்போய் பார்த்திருந்தான் வாசு.

"பப்ளிமாஸ்" என்று அதே நினைப்பில் இருந்தவன் அம்ருதாவை அணைக்க, "பறக்காவெட்டி.. நைட் வர பொறுக்க மாட்ட" என்று திட்டுடன் வந்தாள் காவ்யா.

"ஏன் டாக்டர் அம்மாவுக்கு என்னவாம்" என்று சண்டைக்கு அம்ருதா நிற்க, "அது இல்ல.. எல்லாரும் இருக்காங்க அதான்" என்று அவள் பம்ம, வாய்விட்டு சிரித்தான் வாசு.

"நீ போ காவ்ஸ்.. நா பார்த்துக்கறேன்" என்றவனை முறைத்துக்கொண்டே அவள் செல்ல, "ஆனாலும் உங்க காவ்ஸ் ரொம்பத்தான்" என்று முகத்தைச் சுழித்தாள் அம்ருதா‌.

"என்ன பொறாமையா"

"ச்சீ அதுலாம் இல்ல.. உங்ககிட்ட நல்லா பேசுவாங்கலாம்.. என்னையக் கண்டா மட்டும் பம்மிங்" என்றவள் சொல்ல, "பின்ன சொர்ணாக்காகிட்ட பம்மினா தானே வேலையாகும்" என்றவனுக்கு பூசைகள் பல கிடைத்தது‌.

"சரி எப்போ என் கேள்விக்கான பதில் சொல்லுவீங்க தேவா?" என்று அயர்ந்து சாய்விருக்கையில் அமர்ந்திருந்தவனிடம் அவள் கேள்வி எழுப்ப , அவன் புரியாது விழித்தான்.

"என்ன வர்ஷி?"

"மறந்தாச்சா?" என்றாள் சன்ன சிரிப்புடன்.

"என்னடா? என்ன கேட்ட கல்யாண பிசில மறந்திருப்பேன். இப்போ கேளு, சொல்லுறேன்" என்றான் அவனும் சாந்தமாய்.

"நான் இப்போ எல்லாம் ஒன்னும் கேட்கலையே. அது கேட்டு சரியா ஏழு மாசமாச்சு"

"வர்ஷ்..?"

"டிரிங் பண்ணுவீங்களா தேவா" என்றாள் சப்தமே எழும்பாத குரலில்.
 

Shambhavi

Moderator
அதில் பட்டென்று நிமிர்ந்து அமர்ந்தவன் முகத்தில் அத்தனை விஷமம்.

"ம்ம்.. இதுக்கு என்ன பதில் சொல்லனும்னு நினைக்கற நீ?" என்றவன் பதிலால் முறைக்கலானால் அவள்.

"டிரிங் பண்ணுவியா, மாட்டியா. அத சொல்லு மொதல்ல?"

"ம்ம்.. வெல்.." என்றவன் இழுக்க, அவள் பொறுமை கடந்தது.

"ஆமா இல்லேனு சொல்ல இத்தன நேரமாடா உனக்கு? இத்தன நாள் வெறும் டெம்பரன்ஸ் டிரிங் (Temperance Drink) மட்டும் குடிச்சேனே நமக்கு வரவன் கூட சேர்ந்து நல்லா மஜா பண்ணலாம்னா, எங்க நீ பதில் சொல்லவே இத்தன யோசிக்கற! இதில நாளைக்கு நான் எங்கையாவது புல்லா குடிச்சு மட்டையானா எப்படி வீட்டுல சமாளிப்ப தேவா?" என்றவள் சவுதானமாக சொல்ல அரண்டு விட்டான் வாசுதேவ கிருஷ்ணன்.

"பாவி குடிகாரியாடி நீ!! நான் ஸ்மெல் கூட பண்ணாத விஷயத்த, என்னையும் கூட சேர்ந்து.." என்றவன் மூச்சு வாங்க,

"இத மொதல்லையே சொல்ல என்னவாம்? அன்னிக்கு சாரு கிட்ட என்ன சொன்னீங்க 'இப்போதான் பெக் போட்டேன் தாத்தா' எத்தன பொய்"

"அது.. சும்மா தாத்தாவ வெறுப்பேத்த சொன்னது"

"ம்ம்.. சரிதான். அதுக்கு இப்போ தான் பதில் வந்திருக்கு ஸார்கிட்ட இருந்து" என்றவன் தலையசைத்தபடி எழுந்துகொள்ள,

"வர்ஷ்!" என்றான் அவள் கைகளைப் பற்றியபடி.

'என்ன' என்று திரும்பிப் பார்த்தவள் முகத்தில் சிரிப்பு பீரிட்டிருந்தது.

"உண்மையா உனக்கு அந்த எண்ணமிருந்துச்சா என்ன?" என்று கேட்டவன் முகம் கூம்பியிருக்க,

ஒரு விரிந்த சிரிப்புடன், "உண்மையா இருக்கு தேவா. உன் கூட உட்கார்ந்து ராவா பல சரக்க டேஸ்ட் பண்ணணும் தெரியுமா.. என் பக்கெட் லிஸ்ட் 'ல இதுவும் ஒன்னு" என்றவள் சிரிக்க, அவள் சிரிப்பின் சாராம்சத்தைக் கண்டுகொண்டான் அவளின் கள்வன்.

"டேய் வாசு" என்றழைத்தபடி வந்தான் ராகவ்.

"என்னடா?"

"எப்போ கிளம்பறோம்?" என்று அவன் வாயெல்லாம் பல்லாக கேட்டு நிற்க, பக்கென்று சிரித்துவிட்டான் வாசு.

"ஏன்டா சிரிக்கற?" என்றவனிடம் காவ்யாவைக் காட்டினான் அவன்.

"நீயேன்டீ முறைக்கிற?"

"பின்ன என்ன பறக்காவட்டின்னு சொன்னவ, இப்போ நீயே அலையும் போது என்னத்த சொல்லுவா?" என்றான் சிரித்துக்கொண்டே.

"தேவா, அது நமக்குத் தான் ஹனிமூன். ப்ரோக்கு அது தனி மூன்!" என்று அம்ருதா வேறு கிண்டலில் இறங்க,

"அம்மா தாயே! கல்யாணம் ஆகி ஆறு மாசமா சாமியாரா இருந்து இப்போ தான் மிங்கிள் ஆகியிருக்கேன். நீ வேற தனிமூன், சிங்கிள் மூன் எல்லாம் சொல்லாத, 90'ஸ் கிட் மனசு தாங்காது" என்று பாவம் போல் சொன்னவனை பார்த்து காவ்யாவிற்கே சிரிப்பு பீரிட்டது.

"கிரீஸ் (Greece) போறோம்லையா ப்ரோ, எல்லாம் அந்த இடமே பார்த்துக்கும்"

"என்னமோ போ!"

"நாங்க மட்டும் போறதா ரகு?

"வேண்டாம்டீ, அழுதுடுவேன்"

"அப்பறமா அழு, இப்போ போய் பேக் பண்ணு. நாளைக்கு நூன் பிளைட்" என்றான் வாசு.

"எனக்கும் சேர்ந்தே புக் பண்ணியிருக்க பாரு, நீ தான்டா என் தம்பி. ஆனாலும் நாளைக்கு வரை வெயிட் பண்ணணுமேடா"

"க்கும்.. உங்களுக்கு அது கூடத் தெரியாதுனு தான் வாசு'ண்ணாவே ஹனிமூன் பேக்கேஜ் எல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கார். பேசாம வந்து படுங்க, சும்மா காமெடி பண்ணிகிட்டு" என்று சடைந்தபடி காவ்யா அங்கிருந்து செல்ல, அவள் பின்னூடே வால் பிடித்துச் சென்றான் அவள் மணாளன்.

அவர்கள் இருவரையும் விரித்த புன்னகையுடன் பார்த்திருந்த அம்ருதாவிற்கு அத்தனை நிறைவாக இருந்தது.

காதல், அந்த காதல் அவர்களை படுத்திய பாட்டை பார்த்தவள் திரும்ப அவர்கள் இவ்வாறு இருப்பார்களா என்று நினைத்த நாட்கள் பல.

அது இப்போது பழைய படி கீறல் விழாது சேர்ந்திருக்கிறதா என்றால் அவளுக்குத் தெரியாது. ஆனால் சேர்ந்திருக்கிறது.

அந்த நிறைவு தற்போது அவளுக்குப் போதுமானதே!

செல்லும் அவர்களையே பார்த்திருந்த அம்ருதாவை அத்தனை காதலோடு பார்த்திருந்தான் அவளின் திரு.

சன்ன சிரிப்பினூடே, "தேங்க்ஸ் வர்ஷ்" என்றான் அவளை பின்னிருந்த மென்மையாய் அணைத்தபடி.

"எதுக்காம் ஃபைலட் ஸார்"

"என் பயத்த போக்கியதற்கு, என் வாழ்க்கைக்கு வந்ததற்கு. தென் ஒரு பெரிய ஹக்ஸ் அண்ட் மெனி கிஸ்ஸஸ் டூ மை லவ் மிஸ்ஸஸ். வாசுதேவ க்ருஷ்ணன்"

"எதுக்கு தேவா இப்படி ஐஸ் வைக்கறீங்க? எப்படி இருந்தாலும் இன்னிக்கு ஒன்னுமில்ல தான்" என்று அவள் சிரிக்க, அவனும் உடன் சிரித்தான்.

"உடல் சார்ந்ததை கடந்தது தான் காதலடி என் கண்ணம்மா" என்றவளை திரும்பி நெற்றியில் முட்டினான் அவன்.

"அதுசரி, அதுவும் காதல் கேட்டகிரி தான் பாஸ்"

"இருக்கட்டும். ஆனா அது ஒரு பார்ட் தானே தவிர மொத்த வாழ்க்கைக்கும் சேர்த்தி ஆகாது."

அவனை புருவம் உயர்த்தி பார்த்தவள், "நல்லா பேசறீங்க தேவா" என்றாள் சிரிப்புடன்.

"யூ வில் கேட் டூ நோ தட் மை ஸ்வீட் ஹார்ட்" என்றான் வசீகர புன்னகையுடன்.

அவன் காதல் கண்ணம்மாவின் சிரிப்பு அப்படியே அவன் மனப் பெட்டகத்தில் சேமிப்பானாது, ஆயுளுக்கும்!


நிறைந்தது!!


Title reserved .. Yet yo write


பாகம் இரண்டு : தெவிட்டா தெள்ளமுதே! என் கண்ணம்மா!


பாகம் மூன்று : வானமழை நீயெனக்கு!



 
Top